Search This Blog

12.8.09

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோர் சிந்தனைக்கு.....


கையாலாகாத கண்ணபிரான்

ஒருத்திக்குப் பிறந்து இன்னொருத்தியிடம் வளர்ந்தவன் ஆயர் பாடிக் கண்ணன், விஷ்ணுவின் தசாவதாரங்களில் கிருஷ்ணாவதாரமும் ஒன்று.

வசுதேவனை அப்பனாக வரித்து, தேவகி வயிற்றில் அவதாரம் எடுத்த இந்தக் குறும்புக்காரக் கடவுளுக்குக் கோபிகைகள் குலவுவதற்கு வாய்த்த குலக்கொழுந்துகள். தாலாட்டிப் பாலூட்டிய பாவைகளிடமே மடியிலும், அதற்கடியிலும் கைவைத்தக் கில்லாடிக் கள்ளன் கிருஷ்ணன். பிறந்து விழுந்ததுமே, பிறப்பித்தவர்களை மிரளவைத்த தனித்துவம் இந்தப் பெருமானுக்கே உரியது. தொப்புழ் கொடியாட பிறப்பித்தவர்களைப் பார்த்துப் பிறந்ததும். கிருஷ்ணன் சொன்னானாம்.

"உங்கள் முற்பிறப்பு இப்படி இப்படி ! இனியும் நான் இங்கிருக்க முடியாது; என்னைக் கொண்டுபோய் நந்தகோபரிடம் விட்டு விடுங்கள்"என்று பயமுறுத்தினான் கிருஷ்ணன். பிரசவித்தக் களைப்போடு தேவகியும் அதற்குச் சம்மதித்தாள். விருப்பப்படி அவனை அனுப்பிவைத்தாள்.

கண்ணனை வளர்த்தவள் நந்தகோபரின் யசோதை. கோகுலத்தை ஆண்டுவந்த மன்னன் நந்தகோபரின் வீட்டில் சீரோடும் பேரோடும் வளர்ந்தான் கண்ணன். சின்னஞ்சிறு வயதிலேயே பூதன், சகடாசுரன், திருணாவர்த்தன் முதலிய பெரும் பெரும் புள்ளிகளை உயிர்"பொலி"போட்டவன் இந்தக் கோகுலப்பாலன்.

ருக்மணி, சாம்பவதி, கானிந்தி, மித்திரவிந்தை சத்தியவதி, பத்திரயை, லட்சுமனை, நப்பின்னை, சத்தியபாமா முதலான பத்தாயிரத்து நூற்று எட்டுப் பெண்டாட்டிகள் இவனுக்கு.
தனக்குப் புத்திரபாக்கியம் இல்லையென்று ருக்மணியுடன் தவஞ்செய்திருக்கிறான் கிருஷ்ண பரமாத்மா. கோகுலத்தில் ஒரு முறை கண்ணன் ராதையுடன் கூடிக் குலவிக் களித்துக் கவிழ்ந்து கிடந்தபோது, விரஜை, கங்கை ஆகியவர்கள் அங்கு வந்தனர்.

வைத்த கண் வாங்காமல் இவர்களின் சேஷ்டைகளை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மோகம் துளிர்விட்டது! கிருஷ்ணனின் தழுவலுக்காக ஏங்கினர் இருவரும். இதை எப்படியோ உணர்ந்து கொண்டாள் ராதை. உடனே அவள் கண்ணனை உதறிவிட்டு, அந்தப் பெண்களைப் பார்த்துப் பேசத் தொடங்கி ஏசி முடித்தாள். விரஜையைக் காட்டிலும் கங்கை ரோஷக்காரி ! விடுவிடென அங்கிருந்து மறைந்தாள். அவளின் மறைவோடு ஊர் உலகில் நீரோட்டம் அற்றுப்போனது. எங்கெங்கோ உள்ள உயிரினங்கள் எல்லாம் வறட்சி நிலையில் மிரட்சியுற்றுத் தவித்தன.

பிரம்மன் படை ஒன்றைத் திரட்டி, கண்ணபெருமானிடம் போனான், கங்கையின் மறைவால் காடு மேடெல்லாம் காய்ந்து போனதையும், மாடு மனிதர்கள் ஓய்ந்து போனதையும் எடுத்துக்கூறி விளக்கினான். இந்த வேண்டுகோள்களையெல்லாம் செவிமடுத்து. தன்னால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கையை விரித்தான் கண்ணன். கங்கை வெளிவந்தால் அவளை உறிஞ்சித் துப்பிவிட ராதை துடித்துக் கிடக்கிறாள். எனவே ராதையைப் போய்நீங்களே சமாதானம் செய்யுங்கள்; என்னால் எதுவும் நடக்காது என்று போய்விட்டான் பரமாத்மா.

பிரம்மனும் அவனின் பின்னோடிகளும் போயும்போயும் இவனை நம்பி இவ்வளவு நேரத்தைப் பாழடித்தோமே என்று குறை கூறியவாறு ராதையிடம் போய் சமாதானம் பேசினர். அவளும் கோபந் தணிந்தாள். பின்னர், கிருஷ்ணனது கட்டை விரலிலிருந்து கங்கை வெளிவந்தாள்!


---------------ஆதாரம் - அபிதான சிந்தாமணி பக்கம் 447-450

எங்கெங்கும் ஈரக்கோலம் ! மகிழ்ச்சி ஓலம் ! கங்கையின் பிரவாகத்தில் வறட்சி வற்றி, செழிப்பு சிதறியதாம்.

கிருஷ்ணனுக்கு ஆராரோ பாடி அமுதூட்டி வளர்த்த கோபிகையர்களை, ஆற்று ஈரத்தில் அவிழ்த்த கோலத்தில் அடித்துப் பதற வைத்த கதை பிரசித்தமான ஒன்று. இப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மாவின் கோடானு கோடி கும்மாளக் கூத்தை மெய்யுருகப் பரவலடித்து வரும் கண்ணதாசர்களுக்கு ஒரு சில கேள்விகள்:

கேள்விகள் :

1. பிறந்த குழந்தை பேசுகிறது; பெற்றவர்களை விட்டு மற்றவர்களை நாடத் துடிக்கிறது. பெற்றுப் போட்டவர்களும் , உறவுஅற்றுப்போகட்டும் என்று விட்டுவிடுவது அறிவிற்குப்
பொருந்துகிறதா? அறியாமைக்கு விருந்திடுகிறதா? கடவுளைப்பெற்றால் , அவ்வளவுக்கா மனம் இறுகிப்போகும்?

2. வளர்த்த தாதிகளான "கோபிகை"க் கூட்டத்தை கணிகைக் கூட்டமாக்கி லீலைகள் புரிய தேர்ந்தெடுப்பதும், புடவைகள் திருடிகலங்க அடிப்பதுதான் கடவுள் தன்மை என்றால், பஸ்ஸ்டாண்டிலும், ரயில்வே ஸ்டேஷனிலும் காலரைத் தூக்கிச்சீட்டி அடித்து அலைந்து திரியும் ரோடு ரோமியோக்களுக்குக்கோவில் கட்டிக் கும்பிட நீங்கள் தயார் தானா?
கிருஷ்ணனுக்கும், இந்த இளசுகளுக்கும் பேதமேது?

3. பால்குடி மறக்காத வேளையிலேயே "ஆள்-அடி" வீரங்காட்டி,கண்ட கண்டவனையெல்லாம் கண்ட துண்டமாக்கிய கண்ணபிரான், "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி" என்று ஒரு டூயட் பாடி தனது பதிவிரதையைப் பக்குவப்படுத்தாமல் விட்டுவிட்டு
பிரம்மனையே பிடரியைப் பிடித்துத் தள்ளிவிட்டானே! எப்படி?

கூழுக்கு அழுத குசேலனை "குபேர" குசேலனாக்கியவனின் திறமையும், தெம்பும் இங்கு பட்டுப் போனதுக்கும் கெட்டு மாண்டதற்கும் என்ன காரணம் ?

4. பத்தாயிரத்தெட்டு பாவைகளிடம் "முத்தே பூங்கொத்தே" என்று பித்தாகித் திரிந்தவனின் பக்தர்களே! உங்கள் பக்தியின் லட்சணத்தில் காமநெடி அடிப்பதற்குச் சப்பைக் கட்டு எது? ஏது?

5. சொந்தத்திற்குப் பிள்ளை இல்லையே என்று "தபசு" பண்ணிய பரம ஆத்மாவிடம் "பிள்ளைவரம்" கேட்கும் "மலட்டுப் பூச்சிகளே" கையாலாகாத கடவுளா கருக்குடத்தில் பயிர்
விளைவிப்பான்?


----------------நூல்:- "கடவுளர் கதைகள்"

2 comments:

Anonymous said...

paithiyakkaran ethayiume purinchikkamudiyathu kadavulai pattri eppadi purinchikkamudiyum.

நம்பி said...

//Blogger suresh said...

paithiyakkaran ethayiume purinchikkamudiyathu kadavulai pattri eppadi purinchikkamudiyum.

April 21, 2010 7:52 PM//

உனக்கு இந்த பதிவு புரிஞ்சு போச்சா? அது போதும்....