தாலி கட்டுவது தேவையற்ற சடங்கு
- அறிஞர் அண்ணாவின் தெளிவுரை -
- அறிஞர் அண்ணாவின் தெளிவுரை -
மக்கள் சடங்குகளைத் தள்ளி விடுவதைக் கண்டு சந்தேகப்படுவதும், பழைய பழக்கவழக்கங்களை விட்டு விட்டோமே என்பதற்காக பதைபதைப்பதும் அர்த்தமற்ற தாகும்!
திருமணத்தின்போது தாலிகட் டும் பழக்கம் மக்களிடையே இருந்துவருகிறது. தாலிக் கயிற்றில் புலியின் நகத்தைப் போலும் பல்லினைப் போலும் பொன்னால் சேர்த்துக் கட்டுகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?
நம்முடைய பெரியவர்களும் இதற்கு ஒருவிதமான
விளக்கம் கூறு கிறார்கள்.
அதாவது பழங்காலத்திலே காடுகள் அதிகம், நாடுகள்
குறைவு. காட்டிலே புலிகளும் அதிகம். ஆதலால் ஒரு மங்கையை மணக்க விரும்பிடும் வாலிபன், காட்டிற்குச் சென்று புலியை வேட்டையாடிக் கொன்று அதனுடைய
பல்லையும், நகத்தையும் கொண்டுவந்து, தான் காதலிக்கும் பெண்ணிடம்
காட்டுவானாம்! இதோ பார்! நான் வேட்டையாடிக் கொன்ற புலியின் நகம். இதுதான்
அதனுடைய பல் என்று அந்த மங்கை நல்லாளிடம் தன் வீரத்தை அறிவிப்பான். இதைக்
கண்ட மங்கையும் இப்படிப்பட்ட வீரனைத்தான் நான் மணப்பேன் என்று கூறி அந்த
வீரனையே மணந்து கொள்வாள். தனது காதலனின் வீரத்தின் சின்னமாக அந்த புலி
நகத்தையும், பல்லையும் தன் கழுத்தில் அணிந்து கொள்வாள். இதுதான்
தாலிகட்டுவதன் பொருள் என்று கூறுகின்றனர். அன்று காடுகள் அதிகம், நாடுகள்
குறைவு. எனவே காட்டிலிருந்து நாட்டுக்குள் புகுந்து மனிதனை தாக்கிடும்.
புலியையும் எதிர்க்கும் உடல் வலிமையும் உள்ள உரமும் படைத்தவனைத்தான்
பெண்கள் மணக்க வேண்டும் என்ற ஏற்பாடு - தீர்மானம் இருந்தது பொருத்தமாக
இருந்திருக்கலாம்.
இதே ஏற்பாடு இன்றைக்கும் இருக்க வேண்டுமா?
உண்மையில் எத்தனையோ பேர் திருமணம் செய்து கொள்வதற்காக, இத்தகைய
புலிவேட்டைக்குப் போய்வரத் தயாராக இருப்பர், இந்த நாளில் ஒருவரும் இருக்க
மாட்டார்கள்!
இன்று அத்தகைய ஏற்பாடும் பழக்கமும் ஒரு
சிறிதும் இல்லையென்றாலும், தாலிக் கயிற்றில் மட்டும் பொன்னால் புலிநகமும்
பல்லும் செய்து கோர்த்திட நாம் தவறுவதில்லை, இது தேவைதானா?
இன்றைக்கு நாடுகள் அதிகமாகவும் காடுகள்
குறைவாகவும் இருக்கின்றன. இருக்கின்ற காடுகளிலும் புலிகள் காணப்படுவது
குறைவு. அந்த நாட்களைப்போல இன்றும் நான் போய் காட்டில் புலி வேட்டையாடி,
புலியைக் கொன்று அதன் பல்லையும், நகத்தையும் எடுத்துச் சென்று என்
காதலியிடம் என் வீரத்தைக் காட்டி அவள் கழுத்தில் இவைகளைத் தாலியாகக்
கட்டுவேன் என்று எந்த இளைஞனாவது இன்றைக்குக் கிளம்ப முடியுமா? அப்படிக்
கிளம்பினால் காடுகள் அனைத்தும் சர்க்காரின் காட்டு ரிசர்வ் இலாகாவைச்
சேர்ந்திருப்பதால் புலிவேட்டையாட விடமாட்டார்கள்!
பழைய காலத்தைப்போலவே இன்றும் புலி
வேட்டையாடி காதலிக்குத் தன் னுடைய வீரத்தை வெளிப்படுத்திய பிறகே
மணமுடிப்பேன் என்று எவனாவது ஒரு வாலிப வீரன், எப்படியோ ஒரு புலியைக்
கண்டுபிடித்து அதனைக் கொன்று விடுகிறான் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.
தான் வேட்டையாடிக் கொன்ற புலியின்
நகத்தையும் பல்லையும் காதலி யிடம் காட்டி, பெண்ணே இதோ பார்! நானே
வேட்டையாடிய புலியின் நகம்! இதுதான் அதனுடைய பல்! என் வீரத்தைக் கண்டாயா!
இவைகளை என் வெற்றிச் சின்னமாக உனக்குத் தருகிறேன். இவைகளைக் கயிற்றில்
கோர்த்துக் கழுத்தில் தாலியாக கட்டுகிறேன் என்று கூறுவதனால் எத்தனை பெண்கள்
சரி என்று ஏற்பர்! ஏற்கும் சூழ்நிலை இன்று இருக்கிறதா? இல்லையே!
புலியைக் கொன்றேன். இதோ அதன் பல்! அதன்
அளவைப்பார்! நகத்தின் கூர்மையைக் கண்டாயா! என்று கேட்கும் காதலனின்
வீரத்தையா இந்தக் காலத்துப் பெண் எண்ணிப் பெருமைப்பட முடியும்?
காதலனிடம் சிக்கிய காட்டுப்புலிக்கே
இந்தக் கதி ஏற்பட்டுவிட்டதே! இப்படிப் பட்டவனிடம் நாம் சிக்கிவிட்டால் என்ன
பாடுபட வேண்டியிருக்குமோ என்று தானே அஞ்சி நடுநடுங்குவாள்.
இந்தக் காலத்துப் பெண்கள் தங்கள்
கணவன்மாரிடம் புலிவேட்டையாடும் அளவுக்கு வீரத்தை எதிர்பார்க்கவில்லை.
எந்தக் கணவனும் புலி என்றவுடன் கிலி கொண்டிடும் நிலையில்தானே இருக்
கிறார்கள். பெண்கள் இன்று தங்கள் கணவன்மார்களின் கட்டற்ற வீரத்தை மட்டுமே
பெரியதாகக் கருதவில்லை.
அவர்கள் தங்களுக்கு வரப்போகும் கணவன்
அழகாக இருக்க வேண்டும். அதோடு அன்புடையவனாக நடந்து கொள்ள வேண்டும. நல்ல
குணவானாக பண்புள்ளம் படைத்தவனாக இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது
தங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். நல்ல நாகரிகமுடையவனாக விளங்க
வேண்டும். குடும்பத்தில் அக் கறையுடையவனாகத் திகழ வேண்டும் என்றுதான்
விரும்புகிறார்கள்.
எதிர்ப்பவர்களைத் தாக்கித் தகர்த் திடும்
கட்டான உடலும், உள்ள உரமும், உருட்டு விழியும் உள்ளவனாக ஊரார் கண்டு
நடுங்கிடும் மனிதனாகத் தங்கள் கணவன்மார் இருக்க வேண்டும் என்பதைப் பெண்கள்
விரும்பிய காலம் போய்விட்டது.
எனவே தாலி கட்டுவதிலும் நாம் செய்யும் அர்த்தமுள்ளதா? அறிவுக்குப் பொருத்தமானதுதானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
அய்யரை அழைத்து மந்திரம் ஓதாமல், அம்மி
மிதித்து அருந்ததி காட்டுவது போன்ற சடங்குகளைச் செய்யாமல் நடைபெற்று வரும்
திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று மக்களிடையே ஒரு பயம் முன்பெல்லாம்
நிலவி வந்தது. சந்தேகம் உதித்து வந்தது.
நான் கேட்கிறேன், யாருக்கு சட்டத்தின்
பாதுகாப்பு தேவையென்று? நாமெல்லாம் பெரும்பாலும் ஏழைகள் தானே! நமக்குப்
பிறக்கும் பிள்ளை களுக்கு நமது சொத்து பற்றிய உரிமை ஏற்பட வேண்டும்
என்பதற்குத்தானே சட்டம் தேவைப்படுகிறது.
---------------------------------------------ஆதாரம்: சுயமரியாதைத் திருமணம் - ஏன்?
- அண்ணா பேரவை வெளியீடு


