Search This Blog

30.10.15

பஞ்சமர்களின் பரிதாப நிலை

பஞ்சமர்களின் பரிதாப நிலை

பரிதாபத்துக்குரிய பஞ்சமர்களின் வாழ்வின் சர்வ பாகத்தில்தான் கல் நெஞ்சம் படைத்த மிராசுதார்கள் மகத்தான கொடுமைகள் செய்கிறார்களென்றதில்லை. இன்னும் அவர்கள் ஒத்து வாழாதபடி பல சூழ்ச்சிகளையும் செய்திருக்கிறார்கள். பறை பதினெட்டு ஜாதி என்ற ஒரு கற்பனையை செய்து அவர்களிடம் ஒற்றுமை நிலவா வண்ணம் செய்திருக்கும் குழ்ச்சி மிக மிக பரிதாபகரமானதாகும்.


பரிதாபமே உருவாயமைக்க இந்தக் கூட்டத்துக்கும் இந்த பல ஜாதி கற்பனை அவர்களின் மனதை இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிறது. எப்படி தாங்கள் மிராசுதார் கூட்டத்துக்கே உழைத்துப்போட ஜென்ம மெடுத்திருப்பதாக கருதுகிறார் களோ அதேபோல்  தாங்கள் பல ஜாதிகள்தான் என்ற உணர்ச்சியையும் நியாயமாகவே கொண்டிருக்கிறார்கள்.

பஞ்சமன், பறையன், பள்ளன், வெட்டியான், கோலியன், தச்ச வரத்தான், அச்சு வேளாளன், தீயன், வள்ளுவன் போன்ற பெயர்களையுடைய ஜாதிகள் இந்த கற்பனையின் பாற்பட்டது தான். இக்கூட்டத்துக்கு கடவுள் வழிவந்ததாக சொல்லும் சில மகான்களால் அதாவது தோழர் காந்தி போன்ற மகான்களால் திருக்குலத்தான் என்றும் ஹரிஜனன் இருவிதமான ஜாதிகளை சமீபகாலத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஜாதி வேற்றுமையை கொடுத்திருப்பதற்கு மூலகாரணம் அக்கூட்டத்தின் ஒற்றுமையை பங்கப்படுத்துவ தோடு பிரஸ்தாப வேற்றுமையை பலப்படுத்தி மிராசு தாரன் உடல் நலுங்காமல் உட்கார்ந்து சாப்பிடவும், கொடுமைகளை செய்யவும், ஒரு பெரிய சவுகரியமாய் இருக்கிறது.

இந்த ஜாதிப் பிரிவினைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு மிராசுதாரர்கள் தங்கள் காரியத்தை சாதித்து கொள்வது, உடல் நோகாமல் உட்கார்ந்து தின்பது போன்ற வைகளை அபிவிருத்தி செய்து கொள்வது வெகு விந்தை யானது. ஒரு குறிப்பிட்ட மிராசுதாரனுக்கு சில பஞ்சமர்கள் அடிமை வேலை செய்வதாக வைத்துக் கொள்வோம்.

இவர்கள் அடிமை வேலையில் ஏதாவது தவறுதல் செய்து விட்டாலோ அல்லது தவறுதல் செய்து விட்டதாக மிராசுதார் உணர்ச்சியில் கருதி விட்டாரோ அதற்கு செய்யும் பல தண்டனைகளில் ஜாதியைக் காட்டி கண்ட படி திட்டுவது, கீழ் ஜாதிக்காரனை விட்டு மான பங்கப்படுத்தச் சொல்வது போன்ற கொடுமைகளும் ஒன்றாகும்.

ஒரு பறையன் செய்த குற்றத்திற்கு பறையனை விட கீழ் ஜாதியாக கருதும் வெட்டியானைக் கொண்டு வைவது, அதாவது வெட்டியாரப் பயலை விட்டு உதைக்கக் சொல், வெட்டியாரப்பயலை விட்டு மயிரை அறுக்கச் சொல், வெட்டியாரப் பயலை விட்டு கட்டி வைத்து உதைக்கச்சொல்,
என்பது போன்ற மிக இழிவான வார்த்தைகள் பேசி திட்டுகிறர்கள், ஜாதி பேத உணர்ச்சி மிகுந்த பஞ்சமர்களுக்கு, கீழ் ஜாதிக்கார வெட்டியானை காட்டி ஆண்டைமார்கள் பேசிவிட்டார்களே என்று மனதை ரொம்பவும் புண்படுத்திவரும்.
செய்கையில் நடந்துதுவிட்டால் மனம் நொந்துவிடும். கீழ்ஜாதியாக கருதிக்கொண்டிருக்கும் வெட்டியான்களுக்கு மேல் ஜாதிக்காரர்களை கேவலப்படுத்துவதற்கு தங்களை ஏவிய பெருமை கிடைத்ததற்கு ஆண்டைமார்களால் கிடைத்ததென்ற பெருமைக்காக ஆண்டைமார்களை போற்றுவார்கள்.
இப்படியே பறை பதினெட்டு ஜாதியிலும் நிகழுவதாகும். சோத்துக்கு தாளம் போடும் இக்கூட்டத்துக்கிருக்கும் ஜாதிப் புத்தியை பாருங்கள். இந்த மனப்பான்மையை மிராசுதார்கள் பலப்படுத்திய ஒரு பாவமே அக்கூட்டத்தின் அடிமைச்சங்கிலி என்றும் அறுபடாமலிருந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பொல்லாத ஜாதிபாகுபாட்டால் இன்னும் சில அபாயங்கள் அவர்களுக்கிருந்து கொண்டிருக்கிறது.
இக்கூட்டத்தினரை என்றும் மீளாப்படுகுழியிலாழ்த்தும்படியான புரோகிதக் கோட்பாடுகளும் தாண்டவமாடுகின்றன.
இவர்களுக்குள்ளேயே வள்ளுவர் என்ற கூட்டத்தார் மிக உயர்ந்தவர் களாகவும், குருக்கள்களாகவும் கருதிக்கொண் டிருக்கிறார்கள் இக்கூட்டத்தார் ஜோசியம், ஆரோடம், கைரேகை, புரோகிதம், முதலான தொழில்களையே பெரும்பாலும் கொண்டவர்கள். வள்ளுவக்கூட்டத்தார்.
குறளின் ஆசிரியரான திருவள்ளுவர் மரபின் வழிவந்ததாக சொல்லி கொள்கிறார்கள் என்றாலும், உயர் ஜாதியினர்கள் இக்கூட்டத்தாரையும் தீண்டத்தகாதவர்களாவே கருதிக் கொண்டிருக்கிறர்கள். தங்களை உயர் ஜாதியார் சர்வ துறையிலும் கேவலப்படுத்துகிறார்களே என்ற மான வெட்கமில்லாமல் பஞ்சம சகோதரர்களை.
இந்த ஜாதிமான்கள் (வள்ளுவர்கள்) எல்லாத்துறையிலும் விலக்கிக் கொண்டிருப்பது வெகுவிந்தையானது.
பரிதாபத்துக்குரிய பஞ்சம சகோதரர்களுக்கு இவ்வள்ளுவக் கூட்டத்தார் மோட்ச கை காட்டி மரங்களாம்! எப்படி உயர் ஜாதி இந்துக்களுக்கு பிராமணோத்தமர்கள் மோட்ச கை காட்டிகளோ அதே போல் வள்ளுவர்கள் பறை பதினெட்டு ஜாதிக்கும் மோட்ச கை காட்டிகளாகும்.
பறை பதினெட்டு ஜாதியின் நன்மை தீமைகளுக்கு பிராய சித்த பிம்பங்கள் வள்ளுவர்கள். இந்த வள்ளுவர்கள் கூட்டத்தாரை உயர்வாகக் கருதிக்கொண்டிருக்கும் அடிமை ஜாதியார்கள் தங்களுக்குக் கிடைக்கும் மிக குறைந்த வருவாயிலும் ஒரு பகுதியை வருஷ வர்த்தனை என்ற பெயரால் பொதுவாகவும்,
அவ்வப்போது ஏற்படும் அதாவது புரோகித கற்பனையால் ஏற்பட்டிருக்கும் சில்லரை சடங்குகளின் பெயரால் சில்லறையாகவும் கொடுத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
அது ஒரு பக்கமிருக்கட்டும். அப்பித்து பலப்பட்டி ருப்பதால் சில காலத்துக்கு கிடைக்கும் கொஞ்ச வருமானத்தையும் கொடுத்து விட்டு பட்டினி கிடக்கும் காட்சி மிக பரிதாபகரமானதாய் இருக்கிறது.
ஆகவே பஞ்சமர்களுக்குள்ளும் ஜாதிப்பிரிவினயை அனுஷ்டிப்பது மிராசுதார்கள் குதிரை ஏறவும், வள்ளுவ புரோகிதர்கள் இவர்களை மென்மேலும் பைத்தியக்காரர் களாக்கவும் காட்டு மிராண்டிகளாக்கவும் ஓர் பெரிய வசதியாய் இருக்கிறது.
அதோடும் இந்த பெரும் கற்பனைகளை பரிதாப ஜாதிக்கு புகட்டிய உயர் ஜாதியாருடைய அடிப்படையான நோக்கமெல்லாம் தங்கள் பெண்டாட்டி பிள்ளைகள் பல்லாண்டு பல்லாண்டு ஷேமமாய் இருந்த விடத்திலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கவும் முன் ஜாக்கிரதையாக செய்யப்பட்ட சூழ்ச்சி என்பதை பரிதாப கூட்டத்தார் பூரணமாக உணரவேண்டும். பரிதாப ஜாதியாரின் மாறுதலுக்கு பாடுபடுபவர்கள் இக்கொடுமைகளையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.
                        --------------------------------------------------(புரட்சி 1934)

29.10.15

பார்ப்பனிய ஒழிப்புத் திருநாள்-பெரியார்

பார்ப்பனிய ஒழிப்புத் திருநாள்


சுயமரியாதை இயக்கத்தின் சுமார் 10 வருஷகால வேலையின் பயனாய் பார்ப்பனியம் ஒரு அளவுக்காவது ஆட்டம் கொடுத்துவிட்ட விஷயம். நாம் எடுத்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறோம்.
ஆன போதிலும், சமுதாய விஷயங்களில் பார்ப்பனியம் எவ்வளவு பகிஷ்கரிக்கப் பட்டிருக்கின்றதோ, அதில் 8இல் ஒரு பங்கு கூட அரசியல் விஷயத்தில் பகிஷ்கரிக்கப் பட்டதாகச் சொல்ல முடியாது.

அரசியலில் ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களுக்கு விரோதமாய் வேலை செய்வது என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும் அதன் தலைவர்கள் என்பவர்களில் பலர், தனிப்பட்ட முறையில் தங்கள் சுயநலத்திற்காக எதையும் விற்றுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

தோழர் முத்தையா முதலியார் அவர்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் திட்டம் அரசாங்க உத்தரவு மூலம் போட்ட காரணத்திற்காகவே பார்ப்பனர்கள் அவரை ஒழிக்கச் செய்த சதியில் சில ஜஸ்டிஸ் கட்சிக் காரர்களும் உள்உளவாய் இருந்ததோடு, பார்ப்பனரல்லாதார் கட்சியின் பயனாய் முதல் மந்திரி தானம் பெற்ற தோழர் முனிசாமி நாயுடு அவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் இருந்து வந்ததுடன் தனது தானத்தைக் காப்பாற்ற பார்ப்பனர்களுக்கு அடிமையாக வேண்டிய நிலையையும் அடைந்தார்,  அதன் பயனையும் அடைந்தார். என்றாலும், இப்போது ஜடி கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளவும் ஏற்பாடாகி வருகிறது.


இது எப்படியோ இருக்கட்டும். தோழர் முத்தையா முதலியார் அவர்கள் ஏற்படுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவை ஜடி கட்சி அரசாங்கம் இப்போது மறுபடியும் பிரசுரித்திருப்பது போற்றத்தக்கதேயாகும்.
இன்றைய தினம் எந்த ஊரில், டவுனில் எடுத்துக் கொண்டாலும் வாசல்கூட்டி, பியூன் ஆகியவர்கள் போன்ற உத்தியோகம் போக பாக்கி உத்தியோகங்களில் பார்ப்பனர்கள் தான் 100க்கு 80பேர், 90 பேர்கள் இருந்து வருகிறார்கள்.

அதிலும் நீதி இலாகாவாகிய முன்சீப்பு, சப் ஜட்ஜு, ஜில்லா ஜட்ஜு முதலியவைகளும், நிர்வாக இலாகாவாகிய போலீ டிப்டி சூப்பிரண்டெண்ட், சர்க்கிள் இன்பெக்டர், சப் இன்பெக்டர் ஆகியவற்றிலும் பார்ப்பன ஆதிக்கமே தலைசிறந்து நிற்பதுடன் பார்ப்பனரல்லா தார் முயற்சியையும், முன்னேற்றத் தையும் ஒழிக்கவும், தடுக்கவும் அவைகளின் மூலம் எவ்வளவு காரியம் செய்ய வேண்டுமோ அவ்வளவு காரியங்கள் நெஞ்சில் ஈரமில்லாமல் வன்னெஞ்சத் துடன் ஆங் காங்கு செய்யப்பட்டும் வருகின்றதானது எவரும் அறியாததல்ல.
அரசாங்கத்தார் ஒவ்வொரு இடத்திலும் உத்தியோ கங்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் நிலைமை சரிவரக் காக்கப் படுகிறதா என்று பார்க்க வேண்டும். அதிகாரிகளைக் குறைந்த அளவாவது பார்ப்பனரல்லாதார் பிரதிநிதித்துவம் கவனிக்கப்பட இடமிருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு ஊரில் டிப்டி கலெக்டர் பார்ப்பனரா யிருந்தால் தாசில்தார் பார்ப்பனரல்லாதாராய் இருக்கும்படியும், சப்இன்பெக்டர் பார்ப்பனராயிருந்தால் சர்க்கிள் இன்பெக்டர் பார்ப்பனரல்லாதாராயும், ஜில்லா ஜட்ஜ் பார்ப்பனராயிருந்தால் சப் ஜட்ஜ் பார்ப்பனரல்லாதாராயும் மற்றும் இதுபோல் அதிகாரங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.


அப்படி இல்லாதவரை, அரசியலினாலும், தேசியத்திலினாலும், வகுப்பு உணர்ச்சி தாண்டவமாடும் இக்காலத்தில் பல வகுப்பு மக்களுக்கு பந்தோபது இருக்குமென்று கருதமுடியாது.

அரசாங்கம் சம்பந்தமில்லாத வேறு பல விஷயங்களில் கூடியவரை பார்ப்பனரல்லா தார்கள் விழித்துக் கொண்டார்கள் என்றே சொல்லலாம்.
உதாரணமாக இப்போது நடைபெற்று வரும் முனிசிபல் எலக்ஷன்களில் பார்ப்பனக் கோட்டைகளாயிருந்த சேலம், திருப்பூர் முதலிய இடங்களில் ஒரு பார்ப்பனர் கூட வரமுடியாமல் போனதைப் பார்த்தால் அங்குள்ள காங்கிர ஆதிக்கமும், பார்ப்பன ஆதிக்கமும் எவ்வளவு என்பது விளங்கும்.
பெண்களும், ஆதிதிராவிடர்களும் ஒவ்வொரு முனிசிபாலிட்டியிலும் தானம் பெற்றார்கள் என்றால், அது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் பெருமையாலேயே அல்லாமல் ஜனங்களுக்குச் சமரச உணர்ச்சி ஏற்பட்டதாலல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஈரோடு அர்பன் பாங்கி சமீபகாலம் வரை பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்தது என்றாலும் இந்த வருஷம் மேற்படி பாங்கு தேர்தலில் ஒரு பார்ப்பனருக்குக் கூட இடம் இல்லாமல் போய்விட்டது என்பதோடு ஒரு பெண் டைரக்டரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கின்றதானது மகிழ்ச்சிக்குரியதாகும்.

இவ்வளவு இருந்தாலும் சில இடங்களில் தானங்கள் பெறப் பார்ப்பனர்கள் கையில் ஆகவில்லையென்றாலும் சிலர் சில பார்ப்பனரல்லாதாரைப் பல வழிகளில் தாங்கள் வழிப்படுத்திக் கொண்டு கட்சிகள் தகராறுகள் உற்பத்தி செய்து தாங்கள் தானத்தில் இருந்தால் என்ன நடக்குமோ அதுபோல் செய்து வருவது இன்னும் குறைந்தபாடில்லை.

நாட்டில் வகுப்பு உணர்ச்சி ஏற்பட்டிருப் பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் தங்களைப் பிறவியிலேயே உயர்ந்த ஜாதி என்று கருதிக் கொண்டு மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியாக கருதிக் கொண்டிருக்கிறவர்களி டத்தில், தாழ்ந்த ஜாதிக்காரர்களாய் கருதப்படு கிறவர்கள் துவேஷமும் வெறுப்பும் இல்லாமல் இருக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பது மனித இயற்கைக்கு விரோதமானது.

உதாரணமாக ஒரு பிராமணன் என்பவனிடம் ஒரு சூத்திரன் என்பவன் துவேஷமாயிருக்கிறான் என்பது ஒரு நாளும் ஆச்சரியமான காரியம் ஆகாது. மற்றது ஆச்சரியமான காரியமென்றால் ஒரு பிராமணன் என்பவனிடம் ஒரு சூத்திரன் என்று அழைக்கப்படுகிறவன், தீண்டப்படாதவன் என்று அழைக்கப்படுகிறவன் துவேஷ மில்லாமல், வெறுப்பு இல்லாமல் இருந்து வருவதுதான் ஆச்சரியப்படத்தக்கதாகும்.

ஆதலால் ஜாதிப் பிரிவு சம்பந்தமான உயர்வு, தாழ்வு இருக்கும் வரை நாட்டில் துவேஷமும், வெறுப்பு வகுப்பு உணர்ச்சி ஆகிய காரியங்களும் ஒரு வகுப்பாரால் ஒரு வகுப்பு கஷ்டமடையும் காரியங்களும் எதிர்பார்த்துதான் இருக்க வேண்டும்.

உதாரணம்

இதற்கும் ஒரு உதாரணம் கூறிவிட்டு இதை முடிக்கின்றோம்.

தோழர் எ. குஞ்சிதம் குருசாமி அம்மாளை யாவருக்கும் தெரியும். அந்தம்மாள் பி.ஏ. எல்.டி. பாஸ் செய்தவர்கள். அதிலும் யோக்கியதா பட்சத்தோடு உயர்ந்த வகுப்பில் பாஸ் செய்தவர்கள். அவர்களின் கல்வித் திறமை, போதிக்கும் திறமை, பிள்ளைகளிடம் அன்பாயிருக்கும் திறமை சரீரப்பிரயாச விளையாட்டுகளில் உள்ள திறமை முதலிய வற்றை அந்தம்மாள் வேலை செய்த பள்ளிக்கூட தலைமை உபாத்தியாயரின் நற்சாட்சிப் பத்திரத்தில் காணலாம்.

இப்படிப்பட்ட அம்மாள் மைலாப்பூரில் ஒரு பார்ப்பன ஆதிக்கமுள்ள பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக மாதம் 70 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு வந்தார்.

அந்தம்மாள் யாதொரு தப்பிதமும் செய்துவிடவில்லை. இரண்டொரு இடங்களில் பகுத்தறிவு பிரசங்கங்கள் செய்தது தவிர யாதொரு பாவத்தையும் அறியார். அப்படிப்பட்டவர் களைத் தோழர் பி.எ. சிவசாமி அய்யர், டி.ஆர், வெங்கிட்டராம சாதிரி, சி.பி. ராமசாமி அய்யர், அல்லாடிக் கிருஷ்ணசாமி அய்யர் போன்றவர்கள் நிர்வாகக் கமிட்டியாய் இருக்கும் பள்ளிக் கூடத்தில், அந்தம்மாளுக்கு இனி வேலை இல்லை என்று நோட்டீ கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் என்றால், வகுப்பு உணர்ச்சியில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தப்படி ஒரு பார்ப்பனரல்லாதார் ஆதிக்கமுள்ள தாபனங்களில் இருந்து, தகுந்த ஒழுக்கக் குறைவுள்ள ஒரு குற்றத்துக்காக ஒரு பார்ப்பனரை நீக்கிவிட்டால் அக்கிரகாரம் முதல் கொண்டு சர்க்கார் அதிகாரிகள் - ஹைகோர்ட்டு வரை அந்த தாபனத்தின் மீது பழி வாங்க நினைக்கிறார்கள். பிராமணத் துவேஷம் பிராமணத் துவேஷமென்று கூப்பாடு போடு கிறார்கள்.

பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தில் இருக்கிற எந்த தாபனங்களிலாவது 100க்கு 10 வீதமாவது பார்ப்பனரல்லாதார் களுக்கு வேலை கொடுக்கிறார்களா எனப் பார்த்தால் வகுப்பு துவேஷம் யாரிடத்தில் இருக்கிறது என்பது விளங்கும்.


ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் இனியாகிலும் இவ்விஷயங்களை உணர்ந்து அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்ள முயற்சிப்பதுடன், காந்தி ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஹரிஜன நாள், ஏகாதிபத்திய ஒழிப்பு நாள்,
மே நாள் என்பன போன்ற நாள்களை வருஷத்துக்கு ஒரு நாள் கொண்டாடுவது போல் பார்ப்பன ஆதிக்கம் ஒழிப்பு நாள் என்பதாக வருஷத்தில் ஒரு நாள் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், அதை அடுத்து வரும் தீபாவளிக்கு அடுத்த நாளோ, அல்லது முந்திய நாளோ வைத்துக் கொள்வது நல்லது என்றும் அபிப்பிராயப்படுகிறோம்.

இத்தினங்களில் ஆங்காங்கு கூட்டம் போட்டு பார்ப்பன ஆதிக்கக் கொடுமை, சமுதாயத்திலும், அரசியலிலும் இருப்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டித் தீர்மானங்களை நிறைவேற்றி, அரசாங்கத்துக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்ப வேண்டிய வேலையை அத்திருநாள் கொண்டாட்ட வேலையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் அபிப்பிராயப்படுகின்றோம். இன்னநாள் என்பதைப் பின்னால் உறுதிபடுத்துகிறோம்.

----------------------- தந்தைபெரியார் ”பகுத்தறிவு” - துணைத்தலையங்கம் - 30.09.1934

28.10.15

மனுதர்ம ஆட்சி வேண்டாம்! மனித தரும ஆட்சியே வேண்டும்!!கம்யூனிஸ்ட் கடவுளை ஒழிப்பது என் கொள்கை என்று சொல்வானா?-பெரியார்

மனு ஆட்சிக் கொண்டு வரவே பார்ப்பனரும் எதிர்க் கட்சிகளும் முயலுகின்றனர்!

பேரன்பு மிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இதற்கு முன்பாக இந்த ஊருக்கு ( காரிப்பட்டி) வந்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு முன்பு பேசிய தோழர்கள் சொன்னது போல், சென்ற தடவை வந்து மழையினால் பேசமுடியாது போய்விட்டது. இங்கு வந்த சமயத்தில் பல ஊராட்சிமன்றங்கள் சார்பில் வாழ்த்துப் பத்திரம் எனது தொண்டினைப் புகழ்ந்து வாசித்தளித்தார்கள். அவை எல்லாம் எனது கருத்துக்கு எதிர்காலத்தில் எந்தப் பயமுமில்லை என்கிற துணிவு வருவதால் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஏன்? நான் கடவுள் பக்தனல்ல. தேச பக்தனல்ல. அரசியல்வாதியல்ல.

பெரும்பாலோர் நம்பிக்கைக்குப் பாத்திரமான கடவுள் கதைகளையெல்லாம் சொல்லி அதிலுள்ள ஆபாசங்களை விளக்கிப் போட்டு உடைக்க வேண்டும் என்பவன். ரிஷிகள், மகான்கள் என்பவர்களை எல்லாம் வெங்காயம் என்பவன். எனக்கு ஊர் ஊராகப் பாராட்டுப் பத்திரங்கள் தருகிறார்கள் என்றால் அதிசயமல்லவா? இதுவரைக் கணக்குப் பார்த்தால் ஊராட்சி மன்ற வரவேற்பு 3000- க்கு மேல் இருக்கும். வாரிப்போட்டுள்ளேன். முனிசிபாலிட்டிக்காரர்கள் (நகராட்சி) அழைத்தால் 25- ருபாய் தர வேண்டும் என்கிறேன்! தருகிறார்கள். நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் சிந்திக்க வேண்டும்.

நமக்கு இப்போது என்ன குறைவு? கடவுளுக்குக் குறைவா? முனிவர்களுக்கு மகான்களுக்குக் குறைவா? இல்லை. சந்நிதானம் (குன்றக்குடி அடிகளார்) சொன்னது போல அறிவுக்குத் தான் பஞ்சம் - குறைவு! இன்று அரசியலில் கூட இன்னும் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்கிற அளவு உரிமை கிடைத்துள்ளது. 21- வயது வந்தால் ஓட்டுரிமை கிடைத்து விடுகிறது. நீங்கள் பார்த்தால் தான் காமராசர் ஆட்சிக்கு வரமுடியும். நீங்கள் மனது வைத்தால் தான் இராஜேந்திர பிரசாத் பதவியில் இருக்க முடியும். இதைவிட என்ன வேண்டும்? நாட்டில் நஞ்சை புஞ்சைக்குக் குறைவா? எல்லாத் துறைகளிலும் குறைவில்லை.

ஆனால், அறிவுத் துறையில்தான் நாம் மிகமிகப் பிற்போக்கான நிலையில் உள்ளோம். நான் காங்கிரசில் இருந்து பாடுபட்டவன். 1919- இல் 1920- இல் ஜஸ்டிஸ் கட்சிக்குச் செல்வாக்கு இருந்தது. அவர்கள் பார்ப்பனர்களை வெளுத்து வாங்கி விட்டார்கள். பார்ப்பனர்களுக்கு மேடையில்லை. வீதியில் போக முடியாது. அப்படி இருந்த நேரத்தில் நான் ஏதோ முட்டாள்தனமாகக் காங்கிரசில் சேர்ந்தேன். போனதும் நான் தலைவன் ஆகிவிட்டேன். 'தேசபக்தி' என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள். தேசம் என்று ஒன்று இல்லை. எப்படி இல்லாத கடவுளைச் சொல்லுகிறானோ அது போலத்தான் நாங்கள் சேர்ந்து தொண்டாற்ற 2,3- ஆண்டுகள் வெளுத்து வாங்கி ஜஸ்டிஸ் கட்சியை (நீதிக்கட்சியை) ஒழித்தேவிட்டோம்.

கடைசியாக 'மக்களுக்குக் காங்கிரஸ் ஒன்றுதான் கோயில்.' அதுதான் எல்லாம் என்று நினைக்கும்படியாக ஆகிவிட்டது. அந்த நிலை உண்டாகி இப்போது நின்றால் ஓட்டு நமக்குத்தான் என்றதும், காங்கிரசு பார்ப்பனர்கள் தேர்தலுக்கு நிற்க வேண்டும் என்றார்கள். நான் "இத்தனை நாளும் சட்டசபைக்குப் போவதைக் கேலி செய்துவிட்டு இன்று நிற்கிறேன் என்கிறீர்களே!" என்று சண்டை போட்டேன். நாம் பதவிக்குப் போக வேண்டும் என்பதற்காக அல்ல; தேசத் துரோகிகள் ஆட்சிக்கு வரவிடாமல் செய்துவிட வேண்டும் என்று பித்தலாட்டம் பேசினார்கள்.

பிறகு நான் அப்படி நிற்பது என்றால் 50-சதவிகிதம் பார்ப்பனர் அல்லாதாருக்கு (கல்வியிலும், அரச அலுவல்களிலும் இடம்) ஒதுக்கித் தரவேண்டும் என்று தீர்மானம் காஞ்சீபுரம் மாநாட்டில் கொண்டு போனேன். அந்த மாநாட்டுத் தலைவராக திரு. வி.கலியாண சுதந்தரம் தான் இருந்தார். இருந்தும் அவரை மிரட்டி அந்தத் தீர்மானம் கொண்டு வராதபடிச் செய்து விட்டார்கள். அப்போது தான் நான் காங்கிரசை விட்டு வெளியேறி பார்ப்பனரல்லாதாருக்கு வகுப்புவாரி நீதி வழங்குகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

வெளியில் வந்து பிரச்சாரம் செய்தேன். ஆனால் காங்கிரசை முதலில் மக்கள் மனதில் பதிய வைத்து விட்டதால் அதை ஒழிக்க முடியவில்லை. பின் ஜஸ்டிஸ்கட்சியின் தலைவனாக ஆனேன். இந்த வகுப்புவாரி நீதியை ஜஸ்டிஸ் கட்சியைக் கொண்டு சட்டம் செய்தோம். பிறகு பல தந்திரம் செய்து ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்தார்கள். வெள்ளைக்காரரன் போகும்போது காங்கிரசிடத்தில் நாட்டை ஒப்புவித்தான். தமிழர்களுக்கு வகுப்புவாரி ஏற்பாட்டின்படி கிடைத்த கல்வி, உத்தியோகத்தில் சலுகையை ஒழித்தார்கள். அரசமைப்புச் சட்டத்தையே அதற்கானபடி பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்து கொண்டார்கள்.

இவற்றையெல்லாம் எடுத்துக் காட்டித்தான் அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்துச் சிறைக்குச் சென்றோம். தோழர்களே! நீங்கள் சிந்திக்க வேண்டும். இன்று பல கட்சிகள் உண்டு. அவர்களுக்கெல்லாம் சட்டசபைக்குப் போய்ப் பொறுக்கித் தின்னலாம் என்பது தவிர கொள்கை என்பது இல்லை.

கம்யூனிஸ்ட்டைக் கேட்டால், பணக்காரனை ஒழித்து (ஆலை) மில்லைத் தொழிலாளிக்குச் சுவாதீனம் (தனி உரிமை) செய்கிறேன் என்பான். அது முடியாது. பணக்காரன் - ஏழை என்பது சும்மா தூங்கி விழிப்பது போல்.

இன்று பணக்காரன் நாளைக்கு அன்னக்காவடி இன்று அன்னக்காவடி நாளை பணக்காரன். இதை ஒழிக்கிறது என்ன? அது கடைசி வேலை. பார்ப்பான் பிறந்தது முதல் கட்டைக்குப் போகிறவரை எவ்வளவு கேவலமாக இருந்தாலும், என்ன இழிதொழில் செய்தாலும் அவன் பார்ப்பான்தானே? அவனை ஒழிக்கிறேன், ஜாதியை ஒழிப்பதுதான் என் கொள்கை என்று சொல்ல முடியுமா?

கம்யூனிஸ்ட் என்றால் கடவுள் இல்லையென்று அர்த்தம். கடவுளை ஒழிப்பது என் கொள்கை என்று சொல்வானா? பார்ப்பான் என்று வாயில் சொல்வானா? அவனுக்கு அண்ணன் தான் கண்ணீர்துளி! (தி.மு.க) எங்களிடம் இருக்கும் போது பார்ப்பானை அயோக்கியன் என்றவன்! இப்போது கூடிக்குலவுகிறான். சோஷியலிஸ்ட் தான் என்ன? சோஷியலிச பாணி என்று சொல்கிற காங்கிரஸ்காரன் கூட நிற்க யோக்கியதை உண்டா? கம்யூனிஸ்ட்டுக்கு இப்போது பேச வாய் இல்லையே! காங்கிரஸ்காரன் இப்போது காரியத்தில் செய்துவருகிறான். அவன் காரியம் செய்யும் போது அய்யய்யோ என்னடா செய்வது என்று, ஏன் 30- ஏக்கர்? 15- போதாதா? என்று கேட்கிறானே தவிர, வேறென்ன செய்கிறான்? உள்ளபடியே காங்கிரஸ்காரன் இன்று மதரையில் - இப்போது சாதியை ஒழிப்போம் என்று கொள்கை வகுத்துள்ளான். இந்த அளவுக்குக்கூட எதிர்க்கட்டு என்பவன் யார் இருக்கிறான்?

நீங்கள் யோசிக்க வேண்டும்! அரசியல் என்பது எந்தக் காலத்திலும் இல்லை. சேர, சோழ, பாண்டியன் காலம் முதல் அரசியல் இல்லை. காந்தி என்ன சொன்னார் - "வருணாசிரம தருமத்தைக் காப்பாற்ற வேண்டும், வருணாசிரம தருமப்படி நடக்கிற அமைப்புத்தான் எனது இராமராஜ்ஜியம்" என்றார். ஆக பழைய காலம் முதல் வருணாசிரம தருமம் நிலைக்க வேண்டும், மனுநீதி ஆளவேண்டும் என்கின்ற கட்சி- மனுநீதி கூடாது என்கிற கட்சி; இதுதான் அந்தக் காலம் முதல் நேற்று வரை. இது தான் அரசியல். என்ன மனுநீதி? பார்ப்பான் தான் படிக்க வேண்டும். பார்ப்பான் தான் உத்தியோகம் பார்க்க வேண்டும். மற்றவன் அவனுக்கு அடிமையாக வேண்டும். இதுதானே?

இராஜாஜி இப்போ இந்தத் தருமந்தான் கெட்டுவிட்டது. அதற்கான போராட்டத்தில் நான் குதித்துவிட்டேன் என்கிறார். என்ன சொல்கிறார். "பழங்கால முதல் ஆசியாவிலேயே உயர்ந்த - சிறந்த நிருவாகிகள் இன்று இல்லை. மீண்டும் அதை உண்டாக்குவது தான் என் வேலை" என்கிறார். சமீபகாலத்தில் சிறந்த நிருவாகிகள் இல்லை என்பதை எதை வைத்துச் சொல்கிறார், என்ன கேடு வந்தது?

வெள்ளைக்காரன் 1901-இல் இந்த நாட்டில் படித்த மக்கள் 100- க்கு 7- பேர் படித்தவர்கள் என்று கணக்கு வெளியிட்டான். வெள்ளைக்காரன் 15- வருடம் ஆண்ட பிறகு 1911- இல் 100- க்கு 7 1/2 பேர்; 1921 - இல் 9 1/4 பேர்; 01-09-1961 பத்திரிக்கையில் (திணமணி பத்திரிக்கையில் வந்ததை வெட்டி வைத்துள்ளேன்)

1931- இல் 10 1/2 பேர், 1951- இல் 100- க்கு 16- பேர்; அதாவது ஜஸ்டிஸ் கட்சி பதவிக்கு வந்து கல்விக்கு முயற்சி செய்த பின்தான் 100- க்கு 16- பேர் ஆனது என்பதைக் கவனிக்க வேண்டும். மறுபடியும் 1952- இல் காங்கிரஸ் மாநாட்டில் பதவிக்கு வந்தபின், அந்தக் காங்கிரஸ் பதினாறை மீண்டும் 10- க்குக் கொண்டு போக முயற்சி செய்தது.

இராஜாஜி மனுதர்மத்தை மீண்டும் நிலைநாட்ட 6000- பள்ளிகளை தமிழ்நாட்டில் மூடி, இருக்கிற பள்ளியிலும் அரை நேரக் கல்வி இருந்தால் போதும் என்று சொல்லிவிட்டார். பாக்கி அரைநேரம் என்ன செய்வது? அவனவன் சாதித் தொழிலைச் செய்ய வேண்டும் என்று படம் போட்டு வெளியிட்டார்கள். மனுதருமத்தில் பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் அவன்தான் ஆளவேணடும். சூத்திரன் எவ்வளவு யோக்கியனாக இருந்தாலும் அவனை ஆளவிட்டால் சேற்றில் அழுத்திய மாடுபோல நாடு போகும் என்பது மனுதருமம்.

நான் மனுதருமப்படிதான் ஆள்கிறேன் என்பதைக் காட்ட, காங்கிரசாலேயே அயோக்கியன் என்று ஒதுக்கிவைக்கபட்ட டி.எஸ். இராஜன் என்ற அய்யங்காரை தமிழ்நாட்டு மந்திரியாக்கினார். 5- வருடம் காங்கிரசைவிட்டு விலக்கி வைக்கப்பட்ட இராஜனைக் கார் அனுப்பிக் கூப்பிட்டு மந்திரியாக்கினார். அடுத்தபடி மனுதருமப்படி ஒரு பார்ப்பான் சூத்தரனைக் கொன்றால் பாபமுமல்ல, குற்றமுமல்ல.... அதையும் நிலைநாட்டி, இது மனுதரும ஆட்சிதான் என்பதைக்காட்ட மட்டப்பாறை வெங்கட்ராமய்யர் என்கிற பார்ப்பான் மீது இருந்த கொலை வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டார். கேட்டதற்கு அரசாங்கத்துக்கு வாபஸ் வாங்க உரிமையுண்டு என்று சொல்லிவிட்டார்.

இன்னும் பென்ஷன் வாங்கிக் கொண்டு 10- வருடம் வீட்டில் இருந்தவனுக்கும் கிழடு கிண்டுக்கெல்லாம் - பார்ப்பானுக்கே (தமிழ்நாட்டில்) உத்தியோகம் போட்டார். யார் கேட்டார்கள்? கேட்க நாதியில்லை. சர்வாதிகாரமாக நடத்தினார். அந்த சர்வாதிகாரத்துவம் தான் மனுதர்மம்.

நான்தான் கூப்பாடு போட்டேன். நாங்கள் தான் ஆத்தூரில் "கத்தி வைத்துக்கொள்; சொல்கிற போது சொருகு" - என்ற தீர்மானம் போட்டோம். அதற்குப் பிறகு தான் எதற்கு ரகளை என்று வீட்டுக்குப் போய்விட்டார்.

அதற்குப் பிறகுதான் காமராசரைப் பிடித்தார்கள். அவர் முதலமைச்சர் தேர்தலிலும் நிற்கமாட்டேன் என்றார். இல்லை! இல்லை! என்று பிடிவாதம் செய்து நிற்க வைத்தார்கள். தமிழ்நாடு முதல் அமைச்சராக வந்ததும் அரை நேரக் கல்வி உத்தரவை இரத்து செய்தார். ஜாதித் தொழில் பார்க்க வேண்டியது இல்லை. தமிழ்நாட்டில் மூடின பள்ளிக்கூடங்களைத் திறந்து இன்று பள்ளிக்கூடம் முப்பதாயிரம் திறக்கப்பட்டுள்ளன. சம்பளமில்லை, ஒருவேளை சோறு, துணி தருகிறார்கள். என்ன வேண்டும் இதற்கு மேல்? சிந்திக்கணும். 2000- ஆண்டில் இல்லாத கல்வி வெள்ளைக்காரன் காலத்தில் இல்லாத கல்வி வரச்செய்து விட்டாரே!

இன்று படித்தவர்கள் 100- க்கு 35- பேர். எத்தனை ஆண்டுகளில்? 7 - ஆண்டுகளில்! நினைக்கனும். பார்ப்பனரால் - வெகு ஜாக்கிரதையாக திராவிடத்தமிழ் மக்கள் படிக்காமல் பார்த்து கொள்வது தான் ஆட்சியாக இருந்து வந்துள்ளது. காங்கிரசும் மக்களைப் படிக்காமல் செய்வதைத் தான் இராஜாஜி காலம் வரைக் கொள்கையாக தமிழ்நாட்டில் செய்து வந்துள்ளது. ஏதோ சந்தர்ப்பவசமாக காமராசர் வந்தபின்தான் தலைகீழாக மாறியது.

அய்ஸ்கூல் (உயர் நிலைப் பள்ளி) முன்பு 500- தான் இருந்தது. அதற்குமேல் தேவையில்லையென்று கூறிவிட்டார்கள். இவர் காலத்தில் 1200-அய்ஸ்கூல்கள் ஆகிவிட்டன. முன்பு 40-ஆக இருந்தவை காலேஜீகள் (கல்லூரிகள்) இப்போது 61- காலேஜீகள் இருக்கின்றன.

இப்படி தமிழ்மக்கள் கல்விக்கும், உத்தியோகத்திற்கும் மளமளவென்று காமராசர் காலத்தில் வாய்ப்புக் கிடைக்கிறது. அதோடு இன்று தமிழ்நாட்டில் நடக்கிற அரசாங்கம் பொறுப்புள்ள அரசாங்கம். ஒவ்வொரு நாட்டுக்கும் (மாநிலத்திற்கும்) டில்லியிலிருந்து இத்தனை இத்தனைக் கோடி என்று தருகிறான். மற்றவர்கள் கொடுத்ததைச் செலவு செய்ய முடியாமல் திருப்பிப் பணத்தை தருகிறார்கள். நம் தமிழ்நாடு தான் கொடுத்ததைச் செலவு செய்துவிட்டு மேற்கொண்டும் கேட்டது. தமிழ்நாட்டுக்கு 33- கோடி ருபாய் அதிகம் வாங்கியுள்ளார்கள். 33- கோடி செலவானதைச் சொல்ல வரவில்லை. அதில் உள்ள பொறுப்பு எவ்வளவு என்பதைக் கவனிக்க வேண்டும்.

மற்றும் தமிழ்நாட்டில் நிருவாகம் எப்படிச் சிறப்பாக நடக்கிறது என்கிறதைக் கவனிக்க வேண்டும். இங்கு 8- மந்திரிகள். மற்ற எல்லா மாநிலங்களிலும் 15- மந்திரி, 20- மந்திரி, 22- மந்திரி. இப்படி ஜனத்தொகையில் குறைவான இடங்களில் கூட அதிகமான மந்திரிகள். நினைக்க வேண்டும். 30- மந்திரியாயிருந்தும் சண்டை ஓயவில்லை. இங்கு 8- மந்திரிகள் ஒரு தகராறும் இல்லை. இவ்வளவு உணர்ச்சி, விழிப்பு, கிளர்ச்சி ஏற்பட்டன.

இந்த நிலையிலேயே "தர்மம் கெட்டுவிட்டது!" என்று கூப்பாடு போடுகிறார்கள் என்றால், நீங்கள் நினைக்க வேண்டும். இந்தத் தேர்தலில் நாம் நடந்து கொள்வதைப் பொறுத்துத் தான் நமது சந்ததியின் தலைமுறையின் வாழ்வு இருக்கிறது. இந்தத் தடவை ஆட்சி பார்ப்பான் கைக்குப் போகவிட்டால் தீர்ந்தது. பின் நமக்கு ஓட்டே இருக்காது. இப்போது ஒரு போலீஸ் கான்ஸ்டேபிள் மகன் அய்.ஏ.எஸ் பெண்கள் கலெக்டராக வந்துள்ளார்கள்! பறையன் கலெக்டராக இருக்கிறான்.

மனுதருமப்படி ஆண்டால் இவையெல்லாம் நடக்குமா? இந்தக் கண்ணீர்த்துளிகள் இன்று ஆச்சாரியார் காலில் விழுகிறார்களே! ஆச்சாரியார் வந்து மனு தருமப்படி தமிழ்நாட்டில் ஆட்சி நடப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அவனவன் ஜாதித் தொழில்தான் செய்ய வேண்டும்! மனுதரும ஆட்சி வந்தால் இதுதானே நடக்கும். ஆகையால் தான் மனுதர்ம ஆட்சி வேண்டாம்! மனித தரும ஆட்சியே வேண்டும் என்கிறோம்.

காங்கிரஸ், பார்ப்பானுக்கு நல்லபடியாக இருக்கும்வரை காங்கிரஸ் வாழ்க! என்றார்கள். நமது சீட்டையும் போட்டுக் குலுக்கி நமக்கும் சில பிரைஸ் (பரிசு) அடிக்கிறது என்றவுடன், பார்ப்பான் காங்கிரஸ் ஒழிக! என்கிறான். நமக்கும் இந்தப் புத்தி வரவேண்டும். ஆகவே நீங்கள் நன்கு சிந்தித்து வரும் தேர்தலில் காமராசரை ஆதரிக்க வேண்டும்?

------------------------- 19.10.1961- அன்று காரிப்பட்டியில் ஈ.வெ.ரா பெரியார் சொற்பொழிவு. ”விடுதலை”, 28.10.1961

26.10.15

இல்லாமைக்குக் காரணம் ஜாதி இழிவுதானே!-பெரியார்

இல்லாமைக்குக் காரணம் ஜாதி இழிவுதானே!

நாட்டில் நீண்ட காலமாக இருந்துவருகிற பழைமை, தெய்வீகம் என்பவைகள் நம் மக்களை அடிமைப்படுத்திவிட்டன. எந்தச் சங்கதியும் சாஸ்திர சம்பந்தமானது என்றால் தடை சொல்லக்கூடாது என்கின்ற தன்மையிலே மக்கள் ஆக்கப்பட்டுவிட்டார்கள். அந்த நிலை இப்போது சிறிதுசிறிதாக மாறிக்கொண்டு வருகிறது. இந்த நாட்டில் திராவிடர் கழகத்தின் எதிரிகளைக் கண்டு கூட, நீங்கள் சூத்திரனா? தேவடியாள் மகனா? என்றால் ஒத்துக் கொள்ள மாட்டான். எதற்காகச் சொல்லுகிறேன் என்றால் மக்களுடைய உணர்ச்சியிலே ஒரு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் இந்த சாஸ்திரப்படி வைக்கப்பட்டுள்ள நிலைமையைச் சொன்னால் ரோஷப்படும்படியான ஒரு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நம்மை அந்தப்படி கீழ்ஜாதியாக, சூத்திரனாக மதிக்கின்ற சாஸ்திரம், மதம், என்பவைகளை நாம் குறை கூறினால் அதற்கு மட்டும் கோபிக்கும்படியான நிலையில் இன்னமும் சிலர் இருக்கிறார்கள். அப்படி இருப்பதால்தான் நாம் கீழ்ஜாதி மக்களாக, பஞ்சமர்களாக இருந்து வருகிறோம். நம்மைக் கீழ்ஜாதி என்று குறிப்பிடுகிறார்களே! என்ன ஆதாரம். அடையாளம் நம்மைக் குறிப்பிடுவதற்கு இருக்கிறது? பள்ளிக்கூடத்தில் 1-ஆவது படித்தால் அதற்குண்டான திறமை இருக்கும். எஸ்.எஸ்.எல்.சி (S.S.L.C) படித்தால் அதற்குண்டான Certificate (சான்றிதழ்) இருக்கும். அதைப் போல சூத்திரன் என்பதற்கு என்ன அடையாளம் இருக்கிறது? ஆதாரமே இல்லாத காரியம் ஆயிரக்கணக்கான வருஷமாக இருக்கிறதென்றால் நம் அறியாமைதானே காரணம்?


கடவுளே அந்தப்படி சொல்லிவிட்டது. நீ சூத்திரன் தானென்றால் அதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டுமா? சாஸ்திரம் சொல்லுகிறது நீ சூத்திரன் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமா? சாஸ்திரம் சொல்கிறதென்றால் அந்த சாஸ்திரப்படி எவன் நடக்கிறான்? கடவுள் அந்தப்படி நம்மை ஆக்கி வைத்துள்ளது என்றால் கடவுள் கோட்பாடு என்று சொல்லப்படுபவைகளின்படி எவன் நடக்கிறான்? எத்தனையோ அயோக்கியத்தனம் கடவுள் எதிரிலேயே நடைபெறுகின்றனவே! கடவுள் சேலையை, அதுவும் பெண் கடவுள் சேலையை அவிழ்ப்பது என்றால் எந்த நியாயத்தின்படி சரியாகும்? அல்லது எந்தக் கடவுள் தன்மைக்கு ஒப்புக் கொள்ளக் கூடியது ஆகும்? சூத்திரன் என்று நம்மைப் பார்ப்பான் சொல்லுகிறபோது ரோஷப்படுவதில்லை; ஆனால் அதே அர்த்தங்கொண்ட, நீ அவனுக்குப் பிறந்தவன், இவனுக்குப் பிறந்தவன் இவனுக்குப் பிறந்தவன் என்றால் ரோஷம் வருவதென்றால் இதற்கெல்லாம் காரணம் நாம் பகுத்தறிவைக் கொண்டு சிந்திப்பது கிடையாது என்பதுதானே ஆகும்!


இந்த ஒரு நாட்டைத் தவிர உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் 3000  வருடமாக சூத்திரன் என்று ஒரு வகுப்பான் இழிவுப் படுத்தப்பட்டது கிடையாது. இந்த நாட்டில் தான் பார்ப்பான், சூத்திரன் என்ற வித்தியாசம் இருக்கிறது. ரஷ்யாவிலோ, சீனாவிலோ ஒரே ஜாதிதான். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஏன்? நீக்ரோக்களிலும் கூட இன்னும் மனிதனையே வெட்டித்தின்னும் காட்டுமிராண்டிக் கும்பலில் கூட பார்ப்பான், பறையன் என்ற வித்தியாசம் இருக்கிறதா? இல்லையே! மகாவிஞ்ஞானிகள், ரேடியோ, சினிமா, டெலிவிஷன் ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர் நாட்டிலும் இந்த வித்தியாசம் கிடையாது. காட்டுமிராண்டிகள் வசிக்கும் இடத்திலும் கிடையாது. இங்குதான் இருக்கிறது. அவன் நம்மை எப்படி ஏமாற்றுவது என்று சிந்தித்து அந்தப்படி நம்மை ஏமாற்றுகிறான். ஆனால் கீழ்நிலையில் இருக்கிறவர்கள் தங்கள் அறிவை உபயோகித்து முன்னடையவில்லை என்றால் என்ன அர்த்தம்?

தோழர்களே! நீங்கள் நன்றாக உணரவேண்டும். எதற்காக இவைகளையெல்லாம் சொல்லுகிறேன் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் நமக்குத்தான். பார்ப்பான் எவனுக்காவது இந்தப்படி கஷ்டமுண்டா? ஏன் அப்படிப்பட்ட நிலைமை இருக்கிறது? ஒரு நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி யென்றால் எல்லோருக்கும் இருக்க வேண்டாமா? இது என்ன நியாயம்? கஞ்சித்தொட்டி வைத்திருக்கிறார்கள் என்றால் அய்யர், சாஸ்திரியா அங்கேபோய்க் கஞ்சி குடிக்கிறார்கள்! இல்லையே! நம் மக்கள்தான் எந்தப் பார்ப்பானாவது பார்ப்பனத்தியாவது கஞ்சித் தொட்டியில் க்யூ வரிசையில் நிற்கிறார்களா? ஏன் அவன் குடிக்கவில்லை? அவன் மேல் ஜாதி. வீதியிலே பட்டினிப் பட்டாளம் போகிறது. அதில் எத்தனை பார்ப்பான் - பார்ப்பனத்தி? பட்டினிக் கொடுமையால் 5, 6-குழந்தைகளைக் கிணற்றில் தள்ளித் தாங்களும் குதித்து மாள்கிறார்கள் என்று பத்திரிகையில் அடிக்கடி பார்க்கிறோமே? இதில் எத்தனை பார்ப்பான் வேலையில்லாத் திண்டாட்டத்தில் கஷ்டப்படுகிறான்? நம் பிள்ளைகள்தான் பதறுகின்றன. பார்ப்பானில் வேலை செய்ய ஆளில்லாமல் நொண்டி, நுடம், கிழடுகளைக் கூட வலிந்து வேலையில் அமர்த்துகிறார்கள். பார்ப்பானில் வேலை செய்ய வேறு ஆள் சிக்கவில்லை; ஏன் இந்த நிலைமை; மேல் ஜாதியாயிருப்பதால் அவனுக்கு அந்த வசதியும் கீழ்ஜாதியாயிருப்பதால்; நமக்கு இந்த இழிவும்.

கம்யூனிஸ்டுகள் பேசுவார்கள், இவர் சாஸ்திரம், மதம், புராணம் பற்றியே பேசுகிறார். பட்டினி, பஞ்சம், கஞ்சிக்கில்லை என்பது பற்றி கவலைப்படுவதில்லையென்று. தோழர்களே! நீங்கள் உணரவேண்டும். யாருக்குக் கஞ்சிக்கில்லை? நமக்கு வழியில்லை? எந்தப் பார்ப்பானாவது நெய்யில்லாமல் சாப்பிடுவானா? 'பார்ப்பான் நெய் ஊத்தாது சோறு தின்னால் தோஷம்' என்று எழுதியிருக்கிறான். யாருக்குத் துணியில்லை? நமக்கு 4, 5- முழம் அதுக்கும் வழியில்லை. பார்ப்பானோ 10, 6-இடுப்புக்குப் பத்து, மேலுக்கு ஆறு, மூணு பேருக்கு ஆகும். பார்ப்பனத்திக்கோ 16-முழம். இன்னும் கொஞ்சம் வாட்ட சாட்டமாயிருந்தால் 18-முழம். பாடுபடுகிறவனுக்கு உணவில்லை. இடுப்பார, மானமார துணியில்லை. இவனுக்கு இதெல்லாம் எப்படி முடிந்தது? நமது முட்டாள்தனத்தினால்தானே? இதைப் பற்றி ஒருத்தனும் பேசுவதில்லை. நாம் இதைப்பற்றிச் சொன்னாலே வகுப்புவாதம் என்கிறான். பிற்போக்கு சக்தி, குறுகிய நோக்கம் என்கின்றான். இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சாப்பாட்டுக்கில்லை என்று கூப்பாடு போடுவதென்றால் எவனுக்கில்லை? எத்தனை பேர் அஜீர்ணத்துடன் அவஸ்த்தைப்படுகிறான்? அதைக் கவனிக்க ஆளில்லையே! கண்டிப்பாக வேலையில்லாத் திண்டாட்டம், அது இது என்று பேசுபவன் நெ.1 (ஒன்றாம் எண்) அயோக்கியன். அல்லது முட்டாளாயிருக்க வேண்டும்.

ஏனிப்படிச் சொல்லுகிறேனென்றால் உள்ளது இரண்டு ஜாதி. பார்ப்பான் ஜாதி; சூத்திர ஜாதி என்பதுதான். நாயக்கர், நாயுடு, செட்டியார் என்றால் அவையெல்லாம் ஒன்றுதான்; யார் பட்டினி கிடக்கிறார்கள்? யாருக்கு வேலையில்லை? இவர்களெல்லாரும் ஒரு ஜாதி. அதாவது சூத்திரஜாதி. மற்றவனெல்லாம் நெய் பருப்போடு சாப்பிடுகிறவனெல்லாம் பார்ப்பன ஜாதி. இவன் பாடுபட்டும் பிச்சையெடுக்கிறான்! அவன் பாடுபடாமல் உண்டு கொழுக்கிறான்! என்ன அநியாயம்? கேட்டால் நீ போன ஜென்மத்தில் செய்தவினை; அவனவன் தலைவிதி என்று சொல்லி நம்மை ஏமாற்றுகிறான்.

மற்ற நாடுகளிலும் உள்ளபடியே பட்டினி, பஞ்சமுடையவர் உண்டு. ஆனால் மற்ற நாட்டிலெல்லாம் இங்குள்ள மாதிரி ஒரு ஜாதியில் மட்டும் பட்டினி, பஞ்சமுடையோர் இருக்க மாட்டார்கள். இங்கு மட்டும் ஏன் இந்த நிலை? கம்யூனிஸ்டுகளைப் போல் வாய்ப் பேச்சில் மட்டும் இதை ஒழித்து விட முடியாது. ஏன் முடியாதென்றால் ஏழையும், பிச்சைக்காரனும் இன்றா இருக்கின்றார்கள்? மனித சமுதாயம் என்று தோன்றிற்றோ அன்று முதல் உடையவன் இல்லாதவன் இருக்கின்றான். சத்திரம் - சாவடி எப்போது வந்தது? உலகம் தோன்றிய காலம் முதல் உழைக்கிறவன், கொழுக்கிறவன் என்ற நிலை இருந்து கொண்டு தான் வந்திருக்கிறது. இன்றைக்கு மட்டுமல்ல. எப்படி இந்த முறை ஒழியும் என்றால், இந்தப் பேதத்துக்கான அடிப்படை என்ன என்று ஆராய்ந்து, அதற்குக் காரணம் கண்டு பிடித்து, அம்முறையில் முயற்சி செய்தால்தான் இந்த நிலை ஒழியும், நமக்குக் காரணம் தெரியும். இந்த இழிந்த நிலையெல்லாம் கீழ்ஜாதி காரணமாக ஏற்படுகிறது. இதுதான் அடிப்படையாகும். மேல்ஜாதி காரணமாக அவனுக்கு இதெல்லாம் இருப்பதில்லை. இதற்குப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்தால்தான் விளங்கும். பகுத்தறிவு தேவையில்லையென்று கம்யூனிஸ்டு தோழர்கள் கூறுகிறார்கள். 100, 200-வருடங்களுக்கு முன்பே நாம் ஆராய்ந்து பார்த்திருந்தால் இன்றைய தினம் அநேக சங்கதிகள் மாறிவிட்டிருக்கும். ஏன்? இன்றுகூட முயற்சியெடுத்துக் கொண்டால் ஒரு 10- வருஷத்திற்குள் மாறுதல் ஏற்படும். அதனால்தான் நான் கூறிக்கொண்டு வருகிறேன். ஜாதி ஒழிந்தால்தான் கொஞ்ச நஞ்சமாவது கஷ்டங்கள் ஒழியும் என்று. அதற்குப் பார்ப்பான் ஒழியவேண்டும் அவனுக்குள்ள சாதனங்கள் ஒழிய வேண்டும்.

வேண்டுமானால் நான் இப்படிச் சொல்லுவது இன்றைத் தினம் உள்ள சட்டத்திற்கு விரோதமான காரியமாக இருக்கலாம். சட்ட விரோதந்தான்; அந்தச் சட்டம் நமக்கு விரோதம் தான்; அந்தச் சாஸ்திரம் நமக்கு விரோதமாக இருந்தால்? மனிதவிரோதம் தான்; சாஸ்திர விரோதந்தான். அந்த மதம் நமக்கு விரோதமாக இருந்தால்? எனவே நிலைமைகளைக் கவனிக்கிற போது அவைகளை ஒழித்தாக வேண்டும்; மனுஷனுக்கு நோய் வருவது இயற்கைதான்; அந்தத் துன்பத்தை ஏற்றுக் கொள்ளுவது போல் இந்தப் பிரச்சினையில் என்ன கஷ்டம் ஏற்பட்டாலும் துணிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்னொருவன் வாழ்வு ஒழிய வேண்டுமென்பதல்ல நமது எண்ணம். நம்முடைய வாழ்வுக்கு இடையூராக இருப்பவைகளை ஒழித்துக் கட்ட ஏன் தயங்க வேண்டும்?

----------------------------- செங்கற்பட்டு மாவட்டத்தில் காஞ்சியில் மத்திய திராவிடர் கழக முதலாம் ஆண்டு விழா 28.02.1954- தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை", 06.03.1954

25.10.15

சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபகச்சின்னம் வைப்பது எல்லாம் பிரசார காரியமே!-பெரியார்

கடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்?



தந்தை பெரியாரவர்கள் நன்றியுரை ஆற்றுகையில் குறிப்பிட்டதாவது:-


இன்றைய தினம் எனக்குச் சிலை திறப்பு என்னும் பெயராலே, இந்தத் தர்மபுரியில் என்றும் காணாத அளவிற்குப் பெரும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். இங்குக் கூடி இருக்கின்ற இலட்சக்கணக் கான மக்கள் என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கூடியிருக்கின்றீர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் புகழ்ந்து மிகப் பெருமைப்படுத்தி- பாராட்டிப் பலர் இங்கு பேசினார்கள். வைதால் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்; மனதறிந்து, நமக்குப் பொருத்தமில்லாத புகழ் வார்த்தைகளைக் கேட்கும் போது மனம் சங்கடப்படுகின்றது. என்றாலும், அவர்கள் மனம் நிறையும்படி என்னால் இயன்ற அளவுக்கு நடந்து கொள்கிறேன், என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம் இயக்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்;  நம் இயக்கம்  நாச இயக்கம்- ஆக்க இயக்கமல்ல, அழிவு இயக்கமாகும். நாசமான காரியங்களை ஆக்கவேலை யாகக் கொண்டிருக்கிற இயக்கமாகும். இந்த மாதிரி நாசவேலை செய்தவர்கள் எல்லாம் புராணங்களில், சரித்திரங்களில் பார்த்தால் அவர்கள் எல்லாம் அழிக்கப் பட்டு இருக்கின்றார்கள். நம் புலவர்கள் எல்லாம் நம்மை மூடநம்பிக்கைக் காரர்கள் ஆக்கிவிட்டார்கள். அவ்வளவு பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நாம் தொண்டு செய்து நமக்கு முன்னோர்கள் அடைந்த கதியை அடையாமல் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால், நாசவேலை செய்பவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்து இருக் கின்றோம். நாச வேலை செய்பவர்கள் என்றால் பகுத்தறிவுவாதிகள் - அறிவைக் கொண்டு சிந்திப்பவர்கள் - அறிவின் படி நடப்பவர்கள் ஆவார்கள்.
மூடநம்பிக்கை மக்கள் நிறைந்த இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள் ஆட்சி என் றால் பலாத்காரத்தால் ஆட்சிக்கு வர வில்லை; மக்களை ஏமாற்றி வரவில்லை; எங்கள் கொள்கை கடவுள் இல்லை, மதம் இல்லை, சாஸ்திரம், சம்பிரதாயம் இல்லை,  சாதி இல்லை. இவை யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்களிடையே எடுத்துச் சொல்லி, அதன் மூலம் அவர்கள் ஓட்டு களைப் பெற்று அமைந்த ஆட்சியாகும்.
நமக்கு முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள்,  இராமாயணத்தைக் கொளுத்தியவர்; புராணம், இதிகாசம் ஆகியவற்றை எல்லாம் கண்டித்துப் புத்த கம் எழுதியவராவார். பத்திரிகைக்காரன் எல்லாம் நமக்கு எதிரிகள் என்பதால், நம் கொள்கைகளை - செயல்களை வெளி யிடாமல் அதற்கு மாறானவற்றை விளம் பரம் செய்கின்றார்கள். என்றாலும், அப் படிப்பட்ட அண்ணா மறைவு எய்தியதற்கு 30 லட்சம் மக்கள் வந்தார்கள் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லை- வெளியிடாமல் இருக்க முடியவில்லை.  இந்த 30 இலட்சம் மக்களும் அண்ணா யார்? என்று தெரியாமல் வந்தவர்கள் அல்லவே!  அவர் நாத்திகர் என்பதைத் தெரிந்து வந்தவர்கள் தானே?
அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட பூர்வமாக்கினார்கள் என்றால், கல்யாணத்திற்குக் கடவுள், மதம், சாதி, பழைமை, தேவையில்லை; ஓர் ஆணும், பெண்ணும் நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோம் என்று சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டாரே! இது இந்த ஆட்சிக்குக் கடவுள்-மதம்-சாஸ்தி ரங்களில், சாதி, பழமைகளில் நம்பிக்கைக் கிடையாது என்பதைக் காட்டிக் கொள்வது தானே! இது அண்ணாவின் பெருமையா அல்லது வேறு யாரின் பெருமையா என்று கேட்கின்றேன்? அதோடு மட்டுமில்லையே, அரசாங்க அலுவலகங்களிலிருந்த சாமி படங்களை எல்லாம் நீக்க வேண்டும் என்று உத்தரவுப் போட்டாரே- இதை வேறு எந்த ஆட்சியிலும் செய்ய முடியாதே!
இந்த ஊரில் எனக்குச் சிலை வைத் தார்கள் என்றால், இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லை; பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை, என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை- கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழு கிறவன் காட்டுமிராண்டி என்று சொல்ப வனுடைய சிலையாகும். கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும். இந்த ஆட்சி இன்னும் 10 வருஷம் இருந் தால் கோயில்களை எல்லாம் அவர்களாகவே இடித்து விடுவார்கள்.
நாம் இந்த ஒரு துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் மாற்றமடைந்து இருக்கின் றோம். ஆட்சி என்று உலகத்தில் எப்போது ஏற்பட்டதோ அன்று முதல், மூடநம்பிக் கைக்காரன் ஆட்சிதான்- பார்ப்பான் ஆட்சிதான் நடைபெற்றிருக்கிறது. பார்ப் பானை மந்திரியாகக் கொண்டு பார்ப்பான் சொல்கிறபடி கேட்கிற ஆட்சிதான் நடை பெற்றிருக்கிறது.

பார்ப்பானுக்கு ஆட்சியில்- இயக்கத்தில் இடமில்லை என்ற நிலை இப்போது தானே, அதுவும் நம்முயற்சியால் ஏற்பட்டிருக்கிறது! இல்லை என்றால் இன்றும் பார்ப்பான் அல்லது பார்ப்பானின் அடிமைதான் ஆட்சி யிலிருப்பார்கள். நம்முடைய தொண்டின் காரணமாக, பிரச்சாரத்தின் காரணமாகத்தான் பார்ப்பான் அரசியலை விட்டு வெளியேறும் படி ஆயிற்று. நமக்கு மேலே உயர்ந்தவன் எவனுமில்லை; அவன் மட்டும் என்ன உயர்ந்தவன்? நீ மட்டும் ஏன் தாழ்ந்தவன்? எதற்காக ஒருவன் பார்ப்பானாக இருப்பது? இன்னொருவன் பஞ்சமன், பறையன், தீண்டப்படாதவனாக இருப்பது? என்கின்ற இது மாதிரிப் பிரசாரம் செய்ததாலே தான் இன்றைக்குப் பஞ்சமனை, நாவிதனை, பள்ளன், பறையனை எல்லாம் மந்திரியாக்கி இருக்கின்றோம்.  பல பெரும் உத்தியோகங் களில் நம்மவர் இருக்கும் படியாயிற்று. இந்த நாட்டில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று உண்மையில் பாடுபட்டவர்கள்- தொண்டாற்றியவர்கள் எங்களைத் தவிர வேறு யாருமில்லை.
காங்கிரசாரும், காந்தியும் இந்தத் தீண் டாமையைக் காப்பாற்றும் வகையில்  தான் நடந்து கொண்டனரே தவிர, தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கருதியது கூடக்  கிடையாது. நம் நாட்டில் தீண்டாமை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
கடவுள், மதம், கோயில் இவற்றை எல் லாம் இன்னமும் கட்டிக்கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்? ஒருவன் தீண்டத்தகாதவனாக இருப்பது அவன் வழி படுகிற கடவுளால், பின்பற்றுகிற மதத்தால், கோயிலுக்குப் போய் வெளியே நின்று கொண்டு கும்பிடுவதால் தானே? எனக்குக் கடவுளும் வேண்டாம்; மதமும் வேண்டாம்; என்னைத் தீண்டத்தகாதவனாக மதிக்கிற கோயிலுக்கு நான் போகமாட்டேன், என் கின்ற துணிவு வருகிறவரைத் தீண்டாமை நம்மை விட்டுப் போகாது.

இன்றைக்குக் காங்கிரஸ்காரன்தான், தீண்டாமையை ஒழித்ததாகப் பேசிக் கொண்டு திரிகிறான்.

நாங்கள் மலையாளத்தில் செய்த போராட்டத்தின் காரணமாக, திருவாங்கூர் காரன் கோயிலைத் திறந்து விட்டு நாயாடி களை எல்லாம் நுழையவிட்டான்.

நாங்களும் மத மாற்ற மாநாடு கூட்டி, மக்களை எல்லாம் முஸ்லிம்களாக மாற்ற முற்பட்டபோது, பலர் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு அந்த மாநாட்டிலேயே மாறிவிட்டனர். மாறியவுடன் அதுவரை ஈழவர்கள், கீழ்சாதிக்காரர்கள் நடக்கக் கூடாது என்றிருந்த இடங்களுக்குப் போக ஆரம்பித்ததும், மேல் சாதிக்காரர்கள் அவர்களை நுழையவிடாமல் தடுத்தனர்; கலவரம் ஏற்பட்டது; அதில் முஸ்லிமாக மதம் மாறிய ஒருவன் இறந்து போய்விட் டான். உடனே கலவரம் முற்ற ஆரம்பித்தது; இந்து முஸ்லிம் கலவரமாக ஆக ஆரம் பித்து விட்டது; எங்குப் பார்த்தாலும் கலகம் ஏற்படலாயிற்று. இதைப் பார்த்துப் பயந்து, அப்போது இருந்த சி.பி.ராமசாமி அய்யர் எங்கள் ஆட்சியின் கீழுள்ள பொது  இடங்கள், கோயில், குளம், பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும், எல்லா மக்களும் செல்ல உரிமை உண்டு, என்று திறந்து விட்டார். அதன் பிறகுதான் இங்கு இவர்கள்- தீண்டப் படாதவர்கள் கோயிலுக்குள் செல்ல உரிமை வழங்கினர். அப்போது நான் காந்தி யிடம் பறையர்களைக் கோயிலுக்குள் அனுமதித்ததன் மூலம் எங்களையும் பறை யனாக்கினீர்களே தவிர, பார்ப்பான் போகிற இடம் வரை எங்களை அனுமதிக்கவில் லையே என்று கேட்டேன். உடனே காந்தி சூழ்ச்சியாக இந்துக்கள் போகிற இடம் வரை தான் பார்ப்பனர்களும் போகவேண்டும் என்று சொன்னாரே ஒழிய, பார்ப்பான் போகிற இடத்திற்கு நாம் போகலாம் என்று சொல்லவில்லை என்பதோடு, நடைமுறை யில் பார்ப்பான் முன்பு போய்க் கொண்டி ருந்த இடம்வரை போய்க் கொண்டுதான் இருக்கின்றான்; அதை ஒன்றும் அவன் மாற்றிக் கொள்ளவில்லை.

நாட்டின் சகல துறைகளிலும் பார்ப் பானின் ஆதிக்கமே இருந்து வந்தது. ஆட்சித்துறை, அரசியல் துறை, மதத்துறை, எல்லாவற்றிலும் அவனே ஆதிக்கத்தி லிருந்து வந்தான்.

எனக்குத் தெரிய முதன் முதல் அய்க் கோர்ட்டில் தமிழர் ஜட்ஜாக வந்தது ராமசாமி ரெட்டியார், முதலமைச்சராக இருந்த போதுதான் ஆகும். அதற்கு பின் ஒன்றிரண்டாக இருந்து இன்று 10 பேர்கள் தமிழர்கள் ஜட்ஜாக இருக்கிறார்கள் என் றால், அதற்குக் காரணம் இந்த ஆட்சி தான் ஆகும்.  இன்று அய்க்கோர்ட்டில் இருக் கின்ற 14 ஜட்ஜூகளில் 10 பேர்கள் தமி ழர்கள். மீதி 4 பேர்கள் தான் பார்ப்பனர்கள், இன்னும் இரண்டு மாதம் போனால் தமிழர்கள் எண்ணிக்கை  12 ஆகிவிடும். பார்ப்பானின் ஆதிக்கம் தொலைந்தது. இதனால் என்ன பயன் என்பீர்கள்? நம் வக்கீல்களுக்கும், நம் மக்களுக்கும் அத னால் நல்ல வாய்ப்புக் கிடைக்கும். இன்னும் ஒரு மாதத்தில் அய்யா அவர்கள் டில்லி ஜட்ஜாக ஆவார் என்று நினைக்கின்றேன். நீதித்துறையில் மட்டும் அல்ல, கல்வி விஷயத்திலும் காமராசரைப் போல, அவரைவிட ஒருபடி அதிகமாகவே நடந்து கொள்கின்றனர். இதுவரை எஸ்.எஸ்.எல்.சி வரை சம்பளம் இல்லாமல் இருந்தது. இப்போது கல்லூரி வகுப்பு (பி.யு.சி) வரை இலவசமாக்கி இருக் கிறார்கள்.

நம் மக்களுக்கு இருந்த மற்றும் எத்தனையோ கேடுகள் இந்த ஆட்சி வந்தபின் நீங்கி இருக்கின்றன. இந்தக் கட்சியைப் போல இனஉணர்ச்சியுள்ள, அரசியல் கட்சி வேறு எதுவும் கிடையாது. இந்தக் கட்சியைத் தவிர மற்ற கட்சிக்காரன் அனைவரும் பார்ப்பான் கையைப் பார்ப்ப வனாகத்தான் இருப்பான்; பார்ப்பான் சொல் கிறபடி நடப்பவனாகத் தான் இருப்பான்.

நம் பத்திரிகை என்பவை ஆரம்பிக்கும் போது நம் படங்களைப் போட்டு- கொள்கைகளைப் போட்டு மக்களிடையே பரவும். மக்களிடையே பரவிய பின் பார்ப்பானுக்கு வேண்டியவனாகி அவன் பிரசாரத்தை இவன் செய்ய ஆரம்பித்து விடுகின்றான்.

இன்று நம் பிள்ளைகள் அத்தனையும் படிக்கின்றன. இது மாடு மேய்க்கப் போகாது, உத்தியோகம் வேண்டும் என்று தான் கேட்கும்; நம்முடைய கடமை நம் இனத்தை ஆதரிப்பதே ஆகும். இன உணர்ச்சியோடு நம் இனத்திற்குத் தான் முதலிடம் கொடுக்க வேண்டும். மற்ற ஆட்சியிலில்லாத குறைகளோ, அவற்றில் நடக்காத எந்தக் காரியங்களோ இந்த ஆட்சியில் நடைபெறவில்லையே. நம் மக்களுக்கு இன உணர்ச்சி, அறிவுப் புத்தி இருக்க வேண்டும். இந்த ஆட்சி நம் ஆட்சி என்கின்ற எண்ணம் வேண்டும். இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பார்ப்பானுக்கு இருக்கிற இன உணர்ச்சி நமக்கு வர வேண்டும். இந்த ஆட்சியில் நாம் பல முன்னேற்றங்களை அடைந்து இருக்கின்றோம். அந்த நன்றி நமக்கு இருக்க வேண்டும்.

நாமடைந்திருக்கின்ற நிலை நிரந்தர மான நிலையில்லை. முட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  கையை விட்டால் கீழே விழுந்துவிடும் நிலையில் இருக்கின்றது. அந்த நிலை மாறி, நிரந்தரமாக நிற்கிற வரை, நாம் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

இந்தச் சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபகச்சின்னம் வைப்பது போன்ற இவை எல்லாம் பிரசார காரியமே தவிர இது பெருமையல்ல; ஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான். பெரியார் என்றால் யார் என்று கேட்பான்? உடனே அவன் பெரியாரைத் தெரியாதா? அவர் தான் கடவுள் இல்லை என்று சொன்ன வராவார் என்று சொல்லுவான். இப்படி நம் கருத்தானது பரவிக் கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புத் தான் இந்தச் சிலை யாகும். நான் இன்னும் வெகு நாளைக்கு இருக்க வேண்டுமென்று சொல் கிறார்கள். அவர்கள் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார் கள், அதனால் தான் சொல்கிறார்கள்.
வெகு நாளைக்கு இருக்கிற எனக்கு அல்லவா அதன் தொல்லை தெரியும்?
நம் கருத்து மக்களிடையே பரவ வேண்டும்; நம் கொள்கை பரவ வேண்டும் என்பது தான் இது போன்ற விழாக்களின் கருத்தாகும்.


--------------------------------24. 5. 1969 அன்று தர்மபுரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 9.6.1969

24.10.15

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் - காம்ரேடுகளின் கனிவான கவனத்துக்கு...

காம்ரேடுகளின் கனிவான கவனத்துக்கு...


இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க் ஸிஸ்ட்)யின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் (தீக்கதிர்’ 18.9.2015) அவரது இணையர் பிருந்தாகாரத் (‘தி இந்து’ 10.9.2015) தற்போதைய அகில இந்திய செயலாளர் சீதாராம் யெச்சூரி (கடலூரில் 29.9.2015)  ஆகியோர் என்ன காரணத்தினாலோ திராவிடர் இயக்கத்தைப் பற்றியும், நீதிக்கட்சி குறித்தும் சகட்டு மேனிக்குச் சேற்றை வாரி இறைத்துள்ளனர்.
ஒரு கால கட்டத்தில் வருணமா? வருக்கமா? என்ற தத்துவக் கருத்துப் போர் களில் எல்லாம் ஈடுபட்டு, இந்திய சமூக அமைப்பில் இங்கு வருணம்தான் வருக்க மாக இருக்கிறது என்று பொதுவுடைமை வாதிகள் ஏற்றுப் பணியாற்றுங் காலம் மலர்ந்து வந்தது.
கடந்த ஆண்டுகூட தீக்கதிரில் (9.9.2014) ஒரு சிறப்புக் கட்டுரை வெளியாகி இருந்தது. பிரபல திரைப்பட இயக்குநர் ஆனந்த்பட்ட வர்த்தன் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை அது.
“இந்தியர்களின் வாழ்வில் கருவிலிருந்து கல்லறை வரை சாதியே தீர்மானிக்கிறது” என்று அக்கட்டுரையில் முக்கியமாக வலியுறுத்திக் கூறப்பட்டு இருந்தது. பிராமணீயமும் முதலாளித்துவமுமே நாட்டின் இரு எதிரிகள் என்று பேராசிரியர் அருணன் அவர்கள் துல்லியமாக கருத்துத் தெரிவித்து வருகிறார்
பழைய தத்துவார்த்த சண்டைகள் எல்லாம் ஓய்ந்து மதச் சார்பற்ற தன்மை - சமூக நீதித் தளத்தில் இடதுசாரிகளும் திராவிடர் இயக்கமும் இணைந்து பணி யாற்றும் ஒரு கால கட்டத்தில் எதற்காக சி.பி.எம். இப்பொழுது - பொது எதிரியை விட்டுவிட்டு - திராவிடர் இயக்கத்தின்மீது துப்பாக்கியைத் தூக்குகிறது என்றே தெரியவில்லை.
இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கியே தீருவோம் என்று மதவாதம் தலைக்கேறி மதம் பிடித்த யானைபோல திமிறிக் கொண்டு துவம்சம் செய்து கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் தோழன் யார்? பகைவன் யார் என்பதை அறிவதில், கணிப்பதில் ஏன் இந்தத் தடுமாற்றம்?
இந்த நிலையைக் கண்டு “சபாஷ்! சபாஷ்!” என்று மதவாதம் மத்தளம்  கொட்டி மகிழ்ச்சித் தேரில் பவனி வராதா?
நீதிக்கட்சி என்றாலே உடனே மிட்டா மிராசுதாரர் கட்சிதானா? அந்தக் கால கட்டத்தில் பார்ப்பன வல்லாண்மையை எதிர்க்க யார் யார் கிடைத்தார்களோ அவர்களை எல்லாம் கணையாக்கிப் பிறவி முதலாளித்துவத்தை எதிர்த்ததில் என்ன குற்றம் கண்டு விட்டது  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி!?
அந்த மிட்டாமிராசுகளும் வருண தருமப்படி சூத்திரர்கள் தான்.
கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டு மானால் சென்னை போன்ற நகரங்களுக்கு வந்துதான் படிக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது, பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் எங்கே தங்கிப் படிப்பார்கள்? உணவு விடுதிகளில்கூட (பெரும்பாலும் பார்ப்பன விடுதிகளே) பார்ப்பனர் அல்லாதார் எடுப்புச் சாப்பாடு எடுத்து வந்துதான் சாப்பிட வேண்டும் என்ற நிலை இருந்த காலத்தில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கான விடுதியை ஏற் படுத்திய டாக்டர் சி.
நடேசனார் நீதிக்கட்சிக் காரர்தான். அந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பரிணமித்த சிவ சுப்பிரமணிய நாடார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பிற்காலத்தில் வந்த டி.எம். நாராயணசாமி பிள்ளை போன்றவர்கள் என்ற வரலாறு தெரிய வேண்டாமா?
சென்னை மவுண்ட் ரோட்டிலும் ஜார்ஜ் டவுனிலும் இருந்த  ‘பிராமணாள்’ உணவு விடுதிகளில் குஷ்டரோகிகளும், நாய்களும், பறையர்களும் உள்ளே நுழையக் கூடாது என்றிருந்த நிலை எல்லாம் உண்டே!
பெரிய வணிகராக இருந்த வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகரத் தலைவராக இருந்து ஆற்றிய அரும்பணிகள் சாதாரணமானதா? மதிய உணவுத் திட்டத்தை முதலில் அறிமுகப் படுத்தியதும் அவர்தானே.
வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்தபோது அவரை வரவேற்க சென்னை மாநகர தலைவராக இருந்த தியாகராயர், கோட்டும், சூட்டும் அணிந்துதான் வர வேற்க வேண்டும் என்று ஆளும் வர்க்கம் வற்புறுத்தியபோது, அதனை மறுத்து தாம் எப்பொழுதும் அணியும் அந்த உடை யுடன்தான் (வெள்ளுடை வேந்தர் அவர்)  வரவேற்பேன் என்று சொன்ன சுயநலமற்ற வீரர் ஆயிற்றே - அதே நேரத்தில் வேல்ஸ் இளவரசரை வாழ்த்தி வரவேற்று லாலி பாடியவர் தான் சுப்பிரமணிய பாரதியார்.
மற்றொரு நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் டி.எம். நாயர் அந்தக் காலத்திலேயே லண்டன் சென்று படித்த காது, மூக்கு, தொண்டை,  (ணிஸீt) மருத்துவ நிபுணர்; தாம் சம்பாதித்ததை எல்லாம் பொதுத் தொண் டுக்கு அர்ப்பணித்தவர். நீதிக்கட்சியின் மும்மூர்த்திகள் என்று  இவர்கள் போற்றப்பட்டனர்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காக லண்டன் வரை சென்று பாராளுமன்றத்தில் சாட்சி சொல்லச் சென்ற இடத்தில் மரணத்தைத் தழுவியவர்.
அவர் மரணம் அடைந்தபோது திருவல் லிக்கேணி பார்ப்பனர் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள பிள்ளையார் கோயிலில் ஆயிரம் தேங்காய்களை உடைத்தனர் என்பது தெரியுமா?
“தென்னாட்டு லெனின்” என்று டாக்டர் நாயரை தந்தை பெரியார் புகழ்ந்து எழுதினார் என்பதை லெனின் விரும்பிகள் அறிவார்களா?
நீதிக்கட்சி வெற்றி பெற்ற நிலையில், முதல் அமைச்சராக கட்சித் தலைவர் என்ற முறையில் வாய்ப்பு இருந்தும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து, சக தோழர் கடலூர் சுப்பராய ரெட்டி அவர்களைப் பரிந்துரைத் தாரே!
அந்த நீதிக்கட்சி ஆட்சியில்தான் பொது வீதிகளிலும், கிணறுகளிலும் தாழ்த்தப்பட் டோர் புழங்கும் உரிமை ஆணை பிறப்பிக் கப்பட்டது. (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924). தொழிலாளர் துறை என்ற ஒன்று உருவாக் கப்பட்டு முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, வீட்டுமனை, பொருளாதார வளர்ச்சி என்கிற திசையில் வேக நடைப் போட்டதே!
ஓர் ஆதி திராவிடரை முதன் முதலாக மந்திரியாக்கிய பெருமை  நீதிக்கட்சியையே சாரும். தாழ்த்தப்பட்டோரின்  ஆலயப் பிரவேசத்திற்காகத் திருச்சி மலைக்கோட் டையில் தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் சென்ற, பணக்கார உயர் ஜாதிக் குடும் பத்தைச் சேர்ந்த நீதிக்கட்சியின் முன்னணி வீரர்கள் ஜே.என். இராமநாதன், திரு. டி.வி. சுப்ரமணியன் ஆகியோர் பார்ப்பனரின் கைக் கூலிகளால்  மலைக்கோட்டைப்படி களில் உருட்டி விடப்பட்டு நையப்புடைக் கப்பட்டனர்.
காங்கிரசு மாநாடுகளில் தாழ்த் தப்பட்டோருக்குத் தனி உணவு வரிசை இருந்த கால கட்டங்களில்,  நீதிக்கட்சி மாநாடுகளில் சமபந்தி போசனங்கள் நடத் தப்பட்டன. ஆதிதிராவிடர் மாநாடுகளில் கலந்து கொண்டு நீதிக் கட்சித் தலைவர்கள் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பேருந்துகளில் தாழ்த்தப்பட் டோரை அனுமதிக்காமல் இருந்த இழி வினைச் சட்டம் போட்டு நடைமுறையில் ஒழித்துக் கட்டியவர்கள் நீதிக்கட்சியினர்.
“தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காத கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் கிடையாது’ என்று துணிச்சலாகச் சட்டம் போட்டு செயல்படுத்தியவர்கள் நீதிக்கட்சியினர்.
‘ஜஸ்டிஸ் கட்சி என்றால் மந்திரிகளும் பல பணக்காரர்களும் தான் சில மக்கள் ஞாபகத்துக்கு வருகிறதே தவிர, அதன் கொள்கைகள் அது செய்த வேலைகள் ஆகியவை அநேகருடைய ஞாபகத்துக்கு வருவதில்லை’.        -
‘குடிஅரசு’ 29.3.1936
“(நீதிக்கட்சி) இந்த முறையில்தான் சமூக சீர்திருத்தத் துறையிலும் தீண்டாமை ஒழிப்பு முதல் தேவதாசிகள் ஒழிப்பு மசோதா விபசாரிகள் ஒழிப்பு மசோதா, தேவஸ்தான பணம் பொது நலமான காரியங்களுக்குப் பயன்படுத்தும் மசோதா, லேவா தேவிக் காரர்கள் மசோதா, இனாம் குடிகள் மசோதா என்பவைகளான பலவற்றில் அடுக்கடுக் காகக் கொண்டு வந்து சட்டங்களாக ஆக்கிக் கொண்டு வரப்படுகிறது.
இந்த மசோதாக்களில் எதையாவது ஒன்றைக் காங்கிரசோ, பார்ப்பனர்களோ ஆதரித்தார்கள் என்றாவது, எதிர்க்கா மலாவது இருந்தார்கள் என்றாவது இன்று யாராவது சொல்ல முடியுமா என்பதோடு அவை எவ்வளவோ நிர்ப்பந்தங்களுக்கும் இடையில் நிறைவேற்றி சட்டமாக்கிய பிறகாவது அதை உண்டாக்கியவர்களின் உத்தேசப்படி அமல் நடத்தவாவது விட் டார்களா என்பதை யோசித்தால் பார்ப் பனர்களின் யோக்கியதையும், காங்கிரசின் யோக்கியதையும் மூடனுக்கும் நன்றாய் விளங்கி விடும்.
- ‘குடிஅரசு’ 1.3.1936
பார்ப்பனீயத்தைத் தவிர்த்து பகுத்தறிவு சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியதோடு, அதற்குச் சட்ட வடிவம் கொடுத்த சாதனை - சமூகப் புரட்சி தமிழ்நாட்டிலன்றி, 25 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சி புரிந்த சி.பி.எம். மேற்கு வங்கத் தில் சாதிக்க முடியாதது ஏன்?
தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் அதன் வழிவந்த திமுக ஆட்சியில் தானே சட்டம் இயற்றப்பட்டது.
பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் நீக்கும் தீர்மானம் 1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதோடு, அந்த மாநாட்டிலேயே ஜாதிப் பட்டத்தை துறந்த ஜாதி ஒழிப்பு வீரர்களை போல இந்தியாவில் வேறு எங்கு பார்க்க முடியும்?
கம்யூனிசம் பேசும் பெரிய தலைவர் களே தாம் பெயருக்குப் பின்னால் தொங் கும் ஜாதி வாலை வெட்டிக் கொள்ளாத பரிதாபத்தை என்ன சொல்ல!
இந்தியாவிலேயே சமூக நீதிக்கு வித் திட்டு வகுப்புவாரி உரிமை என்ற இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தது நீதிக்கட்சி யல்லவா!
இந்தியாவிலேயே பெண்களுக்கு வாக்குரிமை முதன் முதல் அளித்ததும் நீதிக்கட்சி ஆட்சிதான்!
இந்தியாவிலேயே  ஜாதி ஒழிப்பை மய்யப்படுத்தி பெரியார் நினைவு சமத்துவப் புரத்தை உருவாக்கியது திராவிடர் இயக்கமான தி.மு.க ஆட்சிதானே?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - தந்தை பெரியார் அவர்களின் கருத்துப்படி அதற்காக சட்டம் தி.மு.க.. ஆட்சியில் கொண்டு வரப்பட்டதே - இதற்கு இணையாக கம்யூனிஸ்டுகள் ஆண்ட மேற்கு வங்காளத்திலேயோ கேரளாவிலேயோ காட்ட முடியுமா?
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பொற் பதக்கம் அளிப்பு முதல் அடுக்கடுக்கான மகளிர் உரிமை முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தானே நிறைவேற்றப் பட்டன. மூவலூர் இராமாமிர்தம் திருமணம் உதவித் திட்டம், ஈ.வெ.ரா. நாகம்மையார் ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்,
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவைத் தாய்மார்களின் மகள் திருமண நிதி உதவித் திட்டம், அன்னைதெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம்  - இவை எல்லாம் திமுக ஆட்சியின் முற்போக்கு சமதர்மத் திட்டங்கள் இல்லையா!?
சமூக ஏற்றத் தாழ்வைப் போலவே பொருளாதாரத் துறையில் உள்ள ஏற்றத் தாழ்வினையும் ஒழிக்க வேண்டும் என்ற  கொள்கையைத் தி.மு.க. ஆட்சி வெறும் வாய்ஜாலமாக வைக்காமல் கை வண்ண மாகச் செயலாக்கிக் காட்டியுள்ளதே!
(1) அண்ணா சமர்ப்பித்த முதல் பட்ஜெட் அறிக்கையிலேயே போக்குவரத்துத் துறை யில் 75 மைல்களுக்கு மேற்பட்ட பஸ் ரூட்டுகளை, அவை காலாவதி ஆக ஆக அரசு நாட்டுடைமை ஆக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, அது செயலாகியது.
அதனை எதிர்த்துப் பஸ் முதலாளிகள் உயர்நீதி, உச்சநீதிமன்றங்களுக்கு சென்று முயன்றும் தோல்வியடைந்தனர்.
1969 மார்ச் வரை 380 பஸ் ரூட்டுகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. 1969-70-இல் 60 பஸ் ரூட்டுகள் அரசுடைமை ஆக்கப்பட் டன. ஆக  சுமார் 440 பஸ் ரூட்டுகள் அரசினரால் எடுத்துக் கொள்ளப்பட்டன.

பஸ் முதலாளிகளையே நம்பிப் பழைய காங்கிரஸ் தேர்தலை நடத்தியது என்ற நிலையில், அவர்களால் முடியாததை விஞ் ஞான பூர்வ சோஷலிசத்தைத் தேர்தல் பிர கடனமாகக் கொண்ட தி.மு.க. செய்து காட்டியது!
2) நில உச்ச வரம்புச் சட்டம் காங்கிரஸ் காரர்கள் காலத்தில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று வைக்கப்பட்டது. அதுவும் காங்கிரசில் அப்போது அமைச்சர்களாகவும் அதற்குத் தேர்தல் நிதி கொடுப்பவர் களாகவும் உள்ள பெரும் நிலப் பிரபுக்கள் பாதிக்கப்படாத வகையில் ஏராளமான விலக்குகள் - மேய்ச்சல்நிலம், கரும்பு நிலம், சவுக்கு நிலம் - இப்படிப் பலவற்றினை மனத்திற் கொண்டே விலக்குத் தந்ததுபோல் செய்தனர்.
தி.மு.க. ஆட்சி நில உச்ச வரம்பினைத் திடீரென 15 ஸ்டாண்டர்டு ஏக்கராவாகக் குறைத்ததோடு, விலக்குகளை நீக்க ஒரு குழுவும் அமைத்து, அதன் அறிக்கைமீது செயல்படக் காத்திருந்தது.
இதன் காரணமாக இங்கு நிலப்பறி இயக்கம் வெற்றி பெற முடியாத நிலை ஏற் பட்டது. சட்டப் பூர்வமாகவே ஆதிக் கத்தைத் தடுக்க முயலுகையில் வன்முறை வளராதல்லவா?
(3) நிலமற்ற  ஏழை எளிய மக்களுக்குத் தி.மு.க. ஆட்சி,  சுமார் 2லு லட்ச ஏக்கரா விற்கு மேல் பட்டா வழங்கியது.
தி.மு.க. அரசு 4 ஆண்டுகளில் வழங்கியது 2லு லட்சம் ஏக்கர்களுக்கான பட்டாக்கள்.

அதில் சில இடங்களைச் சட்டமன்ற உறுப்பினர்களில் யார் பெற்றிருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டு மென்றும், அந்தப்படி கொடுக்கா விட்டால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ளச் சொல்லி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடும் என்றும் முதல்வர் கலைஞர் கூறியுள்ளார்.
காட்டு நிலங்களில் விவசாயத்திற்குப் பயன்படுத்தாத நிலங்களையும், ஏழைகளுக் குப் பட்டாக்களாக வழங்க வகை செய்யும் வகையில் திருத்தப்படும் என்று முதல்வர் கலைஞர் அறிவித்தார்.
(4) தமிழ்நாடு 1969ஆம் ஆண்டு பண்ணைத் தொழிலாளர் நியாய ஊதியச் சட்டம்
பண்ணைத் தொழிலாளர்களுக்கு நியாய விகிதங்களில் ஊதியம் கொடுப்பதற்கும், அதற்குத் தொடர்பானவற்றுக்கு வகை செய்வதற்குமான சட்டமாகும் இந்தச் சட்டம்.
இச்சட்டத்தின் மூலம் அறுவடைக்கான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதுடன், நிர்ண யித்த நியாய ஊதியம், கதிரடிக்கப்படுகிற களத்துமேட்டிலேயே கொடுக்கப்பட வேண்டும் என்றும், தொடர்புள்ள பண்ணைத் தொழிலாளர்களுக்கு நியாய ஊதியம் கொடுக்கப்படாமல் களத்துமேட்டிலிருந்த விளை பொருளின் எந்தப் பகுதியையும் அப்புறப்படுத்தக் கூடாது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
உரிய காலத்தில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் விளைவாகப் பண்ணைத் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கிடைக்கவும் தஞ்சை மாவட்டத் தில் ஒழுங்காக அறுவடை நடக்கவும் ஏதுவாயிற்று.
(5) புஞ்சை நிலங்களுக்கு வரிவிலக்கு
வசதிக் குறைவான விவசாயிகட்கு வரிச்சுமையை நீக்கப் புன்செய் நிலங் களுக்கு அடிப்படைத் தீர்வை நில வரி விலக்கு.
(6) 5 ஏக்கரா உள்ள சிறு உழவர்க்கு நஞ்சைக்கும் வரி விலக்கு
கெய்க்வார் கமிட்டி பரிந்துரையை ஏற்று, 5 ஏக்கரா வரை உள்ள விவசாயிகளின் நஞ்சைகட்கு வரி விலக்கு அளிக்க அரசு முனைந்துள்ளது. இதனால், அரசுக்கு அன்று இழப்பு ரூ.6 கோடி.
ரூ.7,000 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தது தி.மு.க. ஆட்சி தானே!
மாநில சுயாட்சியைக் கை விட்டு விட்டதாக ஒரு குற்றச்சாற்று வைக்கிறது சி.பி.எம். நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் 33 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற சமூக நீதிக் குரலை திராவிடர் கழகம் போன்ற சமூக நீதியில் அக்கறை கொண்ட கட்சிகள் ஒலித்தன.
மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசு அவர்களின் கருத்தும் அதாகத்தானிருந்தது ஆனால் சி.பி.எம். மகளிர்ப் பிரிவு அதனை எதிர்த் தது என்பதுதான் வேடிக்கை. இதனைச் சுட்டிக் காட்டி அன்றே ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியது (22.7.1998).
இந்தியாவிலேயே இந்திக்கு இட மில்லை இரு மொழியே என்ற சட்டம் நடை முறையில் உள்ளது தமிழ்நாட்டில் தான். அதே நேரத்தில் சி.பி.எம். ஆண்ட மேற்கு வங்காளத்தில் மூன்று மொழிகள் - கேரளாவிலும் அதே நிலைதானே.
இந்தியஅரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம் பெற்ற 22 மொழிகளும் ஆட்சி மொழிஆக வேண் டும் என்று குரல் கொடுப்பது தமிழ்நாட்டில் தான் திராவிடர் கழகம்தான் - திமுக தான்.
தமிழ் செம்மொழி என்ற தகுதியைக் கொண்டு வந்ததும் திராவிடர் இயக்கமான திமுக ஆட்சியே!
கல்வியைப் பொதுப் பட்டியலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வரும் சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகமும், அரசியல் கட்சியான திமுகவும் தானே! இவையெல்லாம் மாநில சுயாட்சிக் கொள்கை இல்லை என்று சொல்லப் போகிறதா சி.பி.எம்.!?
தி.மு.க. முதலாளித்துவ கட்சி என்ற குற்றச்சாற்று சரியானதுதானா? அதே இடதுசாரிகள் இதே திமுகவில் கூட்டணி வைத்துக் கொண்டிருந்ததே - இப்பொழுது திடீர் என திமுக முதலாளித்துவக் கட்சி ஆகி விட்டதா?
முதலாளித்துவ கட்சியா? சோசலிசக் கட்சியா என்ற முத்திரை குத்தும் அதிகாரம் மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளதா!?
பி.ஜே.பி.யும், காங்கிரசு முதலாளித்துவக் கட்சி என்று குற்றச்சாட்டும் சி.பி.எம். காங்கிரஸ் அணியோடு ஆலிங்கனம் செய்து கொண்டு இருக்கவில்லையா? தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் (என்.டி.ஏ.) சி.பி.எம்மைச் சேர்ந்த மூத்த தலைவர் சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகராக இருந்தது எப்படி? புதிய பொருளாதாரக் கொள்கை அமலில் இருந்த கால கட்டத்தில் தானே இவை எல்லாம் நடந்தன.
மாநிலங்களவைத் தேர்தலில் தம் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்வாகும் கால கட்டங்களில் திமுக முதலாளித்துவத்துக்குத் துணை போகும் கட்சியாகக் கண்களுக்குத் தெரியாதா?
அமெரிக்காவோடு அணு ஒப்பந்தத்தை மத்திய காங்கிரஸ் ஆட்சி ஏற்படுத்திக் கொண்டதற்காகக் காங்கிரசோடு துண்டித் துக் கொண்டது தவறானது எனக் காலந் தாழ்ந்து கருத்துச் சொன்னதுதானே சி.பி.எம்.
இடதுசாரிகள் காங்கிரசோடு இணைந் திருந்தால் அது முதலாளித்துவக் கட்சி யில்லை - புதிய பொருளாதாரக் கொள் கைக்கு அப்பாற்ப்பட்டது - அப்படித்தானே
மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு ஆட்சியின் போதும் சரி அதற்குப்பின் புத்ததேவ் பட்டாச்சாரியா ஆட்சிக் கால கட்டத்திலும் சரி - மத்திய அரசு கடை பிடித்து வந்த புதிய பொருளாதாரக் கொள்கையிலிருந்து துண்டித்துக் கொண்டு தனி ஆட்சி நடத்தியதா?
டாட்டா தொழிற்சாலை தொடங்குவ தற்காக விவசாய நிலங்களை பறி முதல் செய்து கொடுத்த ஆட்சி யாருடைய ஆட்சி?
சிங்கூரில் என்ன நடந்தது?
வெகு ஜனப் போராட்டத்தின் காரண மாக ஏற்பட்ட நிலை என்ன? அதற்காகக் கொடுக்கப்பட்ட விலைதானே சிபிஎம் ஆட்சியைப் பறி கொடுத்தது?
தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பிஜேபியோடு கூட்டு சேர்ந்திருந் தனர் என்று குற்றம் சாட்டும் இதே இடதுசாரிகள் இப்பொழுது மதிமுகவையும் சேர்த்துக் கொண்டு “பஞ்ச பாண்டவர் அணி” என்ற ஒரு நிலை இருக்கிறதே - மதிமுக பிஜேபி கூட்டணியில் இருந்த தில்லையா?
ஊழல் ஒரு காரணம் என்றால் அதிமுக வோடு கூட்டணி வைத்த போது அது எங்கு சென்றது?
மற்றவர்கள் மீதெல்லாம் சகட்டு மேனிக் குக் குற்றப் பத்திரிகை படிக்கும் சி.பி.எம். மீது படிக்க வேண்டிய குற்றப் பத்திரிகை யில் இடம் பெற வேண்டியவை ஏராளம் உண்டு. மேற்கு வங்கத்தில் பொதுவுடைமைக் கொள்கையாளரும் பொருளாதார வரலாற் றுப் பேராசிரியருமான அமியா பக்சி இந்து ஏட்டுக்கு அளித்த பேட்டி (31.8.2015)க்கு சி.பி.எம். என்ன பதில் சொல்லப் போகிறது என்பது சுவையான ஒன்றே! (பெட்டி செய்தி காண்க)
திரிபுரா மாநிலத்தில் சமர் ஆச் சார்ஜி என்ற மார்க்ஸிஸ்ட் உறுப்பினர் பண மெத் தையில் புரண்ட செய்தி சாதாரணமானதா? அது பிரச்சினையானதும் அவர் சொன்னது தான் அதற்கு மேலும் ‘கிளைமேக்ஸ்!’ “சில கம்யூனிஸ்டுத் தோழர்கள் நிறைய சொத்து இருந்தாலும் இல்லாதவர்கள் போல் பாசாங்கு செய்வார்கள். நான் அப்படி அல்ல” என்று சொன்னாரே பார்க்கலாம். (‘தினத்தந்தி’ 19.10.2013 பக்கம் 11)
கேரள மாநில சி.பி.எம். செயலாளர் தோழர் பினாயி விஜயன் அவர்களின் மகன் கரனின் திருமண வைபவம் பிர்லா வீட்டுத் திருமணம் போல கோலாகலமாக நடந்ததே!
அடுத்து சித்தாந்தப் பிரச்சினைக்குள் வரலாம். மத நம்பிக்கையாளர்கள்  மார்க் ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்வ தற்குத் தடையில்லை (Does not bar persons who have religious faith from Joining the party) என்று சொன்னவர்தான் பிரகாஷ்காரத்.
இது இப்படி இருக்க கேரளத்தில் என்ன நடந்தது? சி.பி.எம். நாடாளுமன்ற உறுப் பினர் கே.எஸ். மனோஜ், மதவழிபாடுகளில் பங்கேற்றதை கட்சி எதிர்த்ததால் தனது மத நம்பிக்கையைக் கைவிட முடியாது என்று 2009இல் கட்சிக்கே முழுக்குப் போட்டார் - ஏனிந்த முரண்பாடு?
கேரள மாநில முதல் அமைச்சராக இருந்த ஈ.கே. நாயனார் வாடிகன் போப்பைச் சந்தித்தபோது கீதையைத்தானே நினைவுப் பரிசாகக் கொடுத்தார். கர்மா வினையைப் பற்றிப் பேசும் நூல்தான் கார்ல் மார்க்ஸின் சீடருக்குக் கிடைத்ததா? கொடுத் தது மட்டுமல்ல - அப்படிக் கொடுத்ததில் என்ன தவறு என்று வக்காலத்து வாங்கியது தான் கொடுமை!
மகர ஜோதி என்பது மோசடி என்பது எல்லோருக்கும் தெரியும் அதுபற்றி கேரள மாநில முதல் அமைச்சர் அச்சுதமேனன் என்ன கூறினார்?
“மகர ஜோதியின் உண்மை தன்மை குறித்து உறுதி செய்வதற்காக ஜோதிடர் களிடமோ, அல்லது வானியல் ஆராய்ச்சி யாளர்களிடமோ கேரள அரசு ஆலோ சனை நடத்தாது. சபரி மலையின் கிழக்கே உள்ள பொன்னம்பலமேடு பகுதி முழுவதும் வானில் தெரியும். “மகரஜோதியை” புனிதமான நட்சத்திரமாக லட்சக்கணக்கான பக்தர்கள் கருதுகின்றனர். மக்களின் நம்பிக் கையில் தலையிடுவது தேவையற்றது. (‘தினத்தந்தி’ 21.1.2011 பக்கம் 9)
மற்றொரு முக்கிய தகவல் இந்திய பகுத்தறிவாளர் கழகத் தலைவராக இருந்த ஜோசப் எடமருகு அவர்கள் கேரள மாநில முதல் அமைச்சர் ஈ.கே. நாயனார் அவர்களை  டெல்லியில் சந்தித்து , மகர ஜோதிபற்றி விளக்கினார்.
‘மகரஜோதி என்பது உண்மையானதல்ல - செயற்கை யாக உருவாக்கப்பட்டதுதான் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இதில் நீங்கள் தலையிடாதீர்கள்’ என்று சொன்னது எந்த வகையில் நாணயம்? (ஜோசப் எடமருகுடன் பேட்டி ‘விடுதலை’ 27.2.1993)
மேற்கு வங்கத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் சுபாஷ் சக்ரவர்த்தி (சி.பி.எம்) கொல்கத்தா காளிக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் கழித்தார் - உண்டியலில் காணிக்கையும் செலுத்தினார் (2006 செப்டம்பர்) மூத்த தலை வரும் அம்மாநில முதல் அமைச்சருமான ஜோதிபாசு அதனைக் கடுமையாக விமர்சித்த போது, அவ்வமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா?
‘நான் முதலில் ஓர் இந்து, அடுத்து பிராமணன், மரபுகளை என்னால் மீற முடியாது. அடுத்து நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று கூறினாரே
கேரளாவில் சாஸ்தம் கோட்டாவில் உள்ள சாஸ்தா கோயிலில் குரங்கு ஒன்று செத்துப் போய் விட்டதாம்; கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் என்.கே. பிரேமச்சந்திரன் (சி.பி.எம்) சட்டமன்ற உறுப்பினர் குஞ்சுமேனன் ஆகியோர் செத்துப போன குரங்குக்கு செங்கொடி போர்த்திப் புரட்சி வணக்கம் செய்தது எந்த வகை மார்க்சியம்?).
மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தன் பேரனுக்குப் பூணூல் கல்யாணம் நடத்திய வர்தானே - இந்த லட்சணத்தில் அழைப்புப் போட்டு நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கும் கொடுத்ததுதான் வேதனை!
2010 மே 18இல் ஒரு அதிர்ச்சி- ஆதி சங்கரர் பிறந்த நாளை தத்துவவாதியின் பிறந்த நாளாகக் கொண்டாடியது சி.பி.எம். அரசு. அங்கு வந்த சிருங்கேரி சங்கராச் சாரிக்கு காவல்துறையின் அணி வகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டதே - அது எந்த அடிப்படையில்?
இன்னொரு தகவல் அது சீதாராம் யெச்சூரி சம்பந்தபட்டது.
காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந் திர சரஸ்வதி கொலைக் குற்றத்தில் சம்பந் தப்பட்டார் என்பதற்காகக் கைது செய்யப் பட்டது குறித்து சி.பி.எம். பொலிட் பீரோ உறுப்பினராக அப்பொழுது இருந்த (இப்பொழுது அகில இந்திய செயலாளர்) போது என்ன சொன்னார் தெரியுமா?
The CPI (m) Leader expressed unhappiness over the way the seer was treated.
சங்கராச்சாரியாரை கைது செய்த விதம் தமக்கு வருத்தத்தை அளிப்பதாக மட்டும் சொல்லவில்லை. தனியாக ஒரு மாளிகை யில் வைத்து விசாரித்திருக்க வேண்டும் என்று சொன்னாரே - அது ஏன்? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஒரு மார்க்ஸிஸ்ட் வாதியின் கருத்தாக இல்லாமல் போனது ஏன்?

மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவரும் மலைவாழ் குடி மகனாரும், கற்றறிந்த அறிஞரும், அனுபவமிக்கவருமான ஜி.ஜி. ஸ்வெல் அவர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேசிய முன்னணியால் அறிவிக்கப்பட்டார். இந்தத் தேசிய முன்னணியுடன் அதுவரை இணைந் திருந்த சி.பி.எம். என்ன முடிவெடுத்தது தெரியுமா? காங்கிரஸ் வேட்பாளரான சங்கர்தயாள் சர்மாவை அல்லவா ஆதரித் தது! பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆறுமுறை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைச் சந்திக்க வேண்டிய நெருக்கடியில் இருந்தபோது, காங்கிரசின் வேட்பாளர் சங்கர்தயாள் சர்மாவின் வெற்றியின் மூலம் நிலை கொண்டது;
அதற்கு துணை போனதுதான் சி.பி.எம்.  யார் அந்த சங்கர்தயாள் சர்மா? பிராமணர்களிட மிருந்து இடஒதுக்கீடு அடிப்படையில் உத்தியோகங்களை எடுத்துச் செல்லலாமே தவிர, அவர்களின் மூளையை எடுத்துச் செல்ல முடியாது என்று பார்ப்பன ஆண வத்தோடு சொன்னவர் - அவருக்குத்தான் சி.பி.எம். ஆதரவு.
மாநில சுயாட்சி - தேசிய இனப் பிரச் சினையில் சி.பி.எம். நிலைப்பாடு என்ன?
1974ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை காலத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்த மிகப் பெரிய சி.பி.எம். தலைவர் பி. இராமமூர்த்தி
***
ஈழத் தமிழர் வெறுப்பு என்பதில் ஈட்டி முனையாக இருந்த இலங்கை ஜனதா விமுக்தி பெரமுனா என்ற சிங்கள வெறிக் கட்சியின் பிரதிநிதிகள் - சி.பி.எம். கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு அழைக்கப்பட் டனர். அதே போல இலங்கையில்  நடை பெற்ற அவ்வமைப்பின் மாநாட்டிலும் சி.பி.எம். பிரதிநிதிகள் கலந்து கொண்ட துண்டு.
2001இல் சிங்கள இராணுவத்தில் ஆனையிறவு முகாமைத் தகர்த்தது விடுதலைப்புலிகள் சேனை! அடுத்த குறி யாழ்ப்பாணம்தான் புலிகளுக்கு; அப் பொழுது தமிழக சி.பி.எம்.இன் மூத்த தலைவரான தோழர் ஆர். உமாநாத் வெளியிட்ட அறிக்கை என்ன? விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைத் தாக்கினால், அதனை முறியடிக்க இலங்கை அரசுக்கு இந்தியா இலவசமாக ஆயுதங்களைக் கொடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டாரே!
மாலை மலர் ஏட்டுக்கு தோழர் டி.கே. ரெங்கராஜன் அளித்த பேட்டியில் என்ன சொன்னார்? இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை இலங்கை அரசு தான் மேற்கொள்ள வேண்டும் என்றாரே!
மாலை மலரின் மற்றொரு கேள்வி; பன்னாட்டு விசாரணையை ஏன் எதிர்க் கிறீர்கள்? 
டி.கே.ஆர். பதில்: இலங்கை இறை யாண்மையுள்ள நாடு.

கேள்வி: தேசிய இனங்களில் சுயநிர் ணயப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டு மென்ற மார்க்ஸிஸ்ட் கொள்கையை சி.பி.எம். கட்சி கைவிட்டு விட்டதா?
தோழர் டி.கே.ஆர். பதில்: அதை வெளியிலிருந்து திணிக்கக் கூடாது.
(மாலை மலர் 5.3.2012).
எப்படி இருக்கிறது? வெளியிலிருந்து திணிக்கக் கூடாது என்றால், இலங்கைக்கு வெளியே அந்நாட்டைப்பற்றி எதையும் பேசக் கூடாது. எந்தக் கருத்தையும் சொல் லக் கூடாதே!
இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு. இதைப் பற்றியெல்லாம் அம்பலப் படுத்த வேண்டும் என்பது நமது ஆசையும் அல்ல நோக்கமும் அல்ல -
ஆனால் சொல்லும்படி வைத்தவர்கள் பிரகாஷ்காரத்தும், சீதாராம் யெச்சூரியும், பிருந்தாகாரத்தும்தான்.
திமுக என்ற பெயரால், திராவிட இயக் கத்தையும், நீதிக்கட்சியையும் கொச்சைப் படுத்துவதை எப்படி ஏற்க முடியும்?
காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணிகளைப் புறக்கணிப்பீர்! மாற்று அரசியல் அணியை ஆதரிப்பீர்!
டில்லியில் நடைபெற்ற தேசிய சிறப்பு மாநாட்டில் பிரகாஷ்காரத் அறைகூவல்.
(‘தீக்கதிர்’ 2.7.2013 பக்கம் 3).
இதன்படி பார்த்தால் திமுகவை வெறுப்பது குற்றமல்லவா?
மற்றுமொரு எடுத்துக்காட்டு

“லாலு பிரசாத் யாதவை எடுத்துக் கொண்டால் அவரோடு ஒருங்கிணைந்த இயக்கங்களில் இடதுசாரிக் கட்சிகள் பங் கேற்றுள்ளன. ஆனால் இதன் விளைவாக இடதுசாரிக் கட்சிகளின் வெகு ஜனபலம் குறைந்துள்து. தமிழகத்தைப் பொறுத்த வரை இரண்டு திராவிடக் கட்சிகளுமே இடதுசாரிக் கட்சிகளுடன் உறவு வைக்கத் தயாராக உள்ளன.
காரணம் தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. ஆனால் இந்தத் தேர்தலில் ஜெயலலிதா இரண்டு கம்யூனிஸ் டுக் கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் மட்டும் தர முன் வந்தார். எந்தவொரு திராவிடர் கட்சிகளும் முன்னெப்போதும் இவ்வாறு கூறியதில்லை.
எங்களுக்குப் பல்வேறு கருத்து வேறுபாடு இருந்த போதும் பா.ஜ.க.தான் உடனடிப் பேரபாயம் என் பதை உணர்த்துவோம். அந்தக் கட்சியை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க சமாஜ்வாதி மற்றும் பல்வேறு ஜனதா தளக் கட்சிகளு டன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளோம். இதுதான் எங்கள் நடைமுறை உத்தியாக  உள்ளது.
(‘பிசினஸ் லைன்’ பேட்டி - 14.5.2014  - தமிழில் தீக்கதிரில் 15.5.2014 பக்கம் 3)
லாலு மீதும் ஊழல் குற்றச்சாற்று  உண்டு. அவரோடு கூட்டு வைத்துக் கொள்ள லாமாம். ஆனால், தி.மு.க.வோடு கூட்டு வைத்துக் கொள்ளக் கூடாதாம்.
இந்தியாவிலேயே சமூக சீர்திருத்த நோக்கத்தோடு செயல்படும் அரசியல் கட்சி தி.மு.க. தானே - நியாயமாக திமுக தோளில் கை போட வேண்டிய மார்க்ஸிஸ்டுகள் மருண்டு ஓடுவது ஏன்?
என்ன அளவுகோல் காம்ரேடுகளுக்கு என்று கேட்கத் தோன்றுகிறதா இல்லையா?
கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவது புத்திசாலித்தனமல்ல - பொறுப்பானதும் அல்ல அல்லவே அல்ல.
   ---------------------கவிஞர் கலி. பூங்குன்றன்”விடுதலை” ஞாயிறுமலர் 3-10-2015
********************************************************************************


கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்
காம்ரேடுகளின் கனிவான கவனத்துக்கு... (2)

கவிஞர் கலி. பூங்குன்றன்

‘விடுதலை’ ஞாயிறுமலரில் (3.10.2015) “கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் - காம்ரேடுகளின் கனிவான கவனத்துக்கு” என்று எழுதப்பட்டுள்ள கட்டுரைக்குத் தோழர் மதுரை சொக்கன் அவர்கள் பதில் எழுதிட முயற்சி செய்துள் ளார் - வரவேற்கிறோம். (‘தீக்கதிர்’ 16.10.2015)
ஆனால், நாம் எழுப்பிய அடிப்படை யான கேள்விகளுக்கு எந்தவிதமான உருப்படியான பதிலும் இல்லை. அப்படி சொல்லப்பட்டுள்ள ஒரு சில பதில்களிலும்  பெரும்பாலும் ஆதாரக் குறிப்புகள் ஏதும் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.
திராவிடர் கழகம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ‘சமூக நீதி காத்த வீராங்கனை” என்று பட்டம் கொடுத் ததைக் கேலி செய்து எழுதி இருக்கிறது.
எதற்காக அந்தப் பட்டம் கொடுக்கப்பட் டது என்பதை அறிந்திருந்தும். இதனைக் கேலி செய்வது ஏன் என்று புரியவில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்ற நிலை ஏற்பட்டது. தமிழ் நாட் டிலோ 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறை யில் இருந்தது. இந்த நெருக்கடியிலிருந்து 69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிட சட்ட ரீதியான ஒரு வழி காட்டுதலைத் தந்ததுடன் நில்லாது, அதற்கான சட்ட முன் வடிவைத் தயாரித்தும் கொடுத்தவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
அதனை ஏற்றுச் செயல்படுத்தியவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அதன் மூலம் போராடிப் பெற்ற 69 சதவீத இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது. அந்த அடிப்படையில் முதல் அமைச்ச ருக்குச் “சமூகநீதி காத்த வீராங்கனை” என்று திராவிடர் கழகம் பட்டம் அளித்துப் பாராட்டியதில் என்ன குற்றம் கண்டது சி.பி.எம்? நல்லதைப் பாராட்டுவது  -வரவேற்பது என்பது பூர்ஷ்வாத்தனம் என்ற புதுசரத்தை மார்க்சியத்தில் இணைத்து இருப்ப தாகத் தெரிகிறது.
பாராட்ட வேண்டியதைப் பாராட்டினால்தான் எதிர்க்க வேண்டியதை எதிர்க்கும் பொழுது அதற்குரிய மரியாதை கிடைக்கும் என்பது பொதுத் தொண்டின் பால பாடம்.
பொதுவாக சமூக நீதிப் பிரச்சினையில் போதுமான அக்கறையை அக்கட்சி மேற் கொண்டதில்லை; மண்டல் குழு அறிக்கை யில்கூட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆளும் மேற்கு வங்கத்தின் நிலைப்பாடு பற்றி அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பட்டியல் இல்லாத மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று; பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று மண்டல் குழு அறிக்கையிலே அதிகாரப் பூர்வமாக எழுதப்பட்டுள்ளதே (Mandal Report Chapter IX Safeguards, Reservations, Etc 9.8)
இந்த நிலையில் உள்ளவர்கள் சமூக நீதியை அழுத்திச் சொல்பவர்களைக் கண் டால் கோபப்படத்தான் செய்வார்கள் சமூகநீதிக்காகப் பயன்பட்டவர்களைப் பாராட்டுவதை விரும்பவும் மாட்டார்களே!
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் என்ற நிலையில் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்த தகவல் மிகவும் முக்கியமானது.
பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலே இல்லாத மாநிலங்களை மண்டல் தனது அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளார். பட்டியலே இல்லை என்று சொன்னால் இடஒதுக்கீடே இல்லை என்று அர்த்தம். அந்த மாநிலப் பட்டியலில் மேற்கு வங்க மும், ஒன்று.
அரசியல் சட்டத்தில் 15(4), 16(4), 29(2) ஆகிய பிரிவுகள் இடஒதுக்கீடு பற்றிப் பேசுகின்றன. இவ்விதிகள் பற்றியும் பிற் படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பற்றியும் மேற்கு வங்க சி.பி.எம். அரசே குழு ஒன்றை நியமித்தது.
குழு நியமிக்கப்பட்ட நாள் 1.8.1980 இந்த மிக முக்கியமான ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் உயிர் நாடியான பிரச்சினைக்காக ஏற்படுத்தப் பட்ட குழு ஒரே மாதத்தில் அறிக்கையைக் கொடுத்தது என்றால் அதன் பொருள் என்ன?
அவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு அவசரமாக அறிக்கை கொடுத்த தாகப் பொருள் கொள்ள வேண்டாம். சம்பிரதாயத்துக்காக ஓர் அறிக்கை அளிக் கப்பட்டது என்றே பொருள். அந்த அறிக்கை என்ன சொன்னது தெரியுமா? அதைவிட மிகப் பெரிய அதிர்ச்சி அடிப்படையைத் தகர்க்கும் ஆபத்தான யோசனை!
இடஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் கூடாது. பொருளாதார அடிப்படையில் அளிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியது - அதனைத்தானே சி.பி.எம். அரசும் எதிர்பார்த்தது! (பிஜேபி யும், பார்ப்பனர்களும் பொருளாதார அடிப் படையைத்தானே வலியுறுத்துகின்றன).
எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்படுத்தப்பட் டோருக்கு வருமான வரம்பு கொண்டு வந்தபோதும், அதனை ஆதரித்த ஒரே கட்சி சி.பி.எம்.தான்!  சி.பி.அய் - அதிலிருந்து வேறுபட்டு பொருளாதார அளவுகோலை; திராவிடர் கழகத்துடன் இணைந்து எதிர்த் தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு அவர்கள் சென்னைப் பெரியார் திடலில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார் (26.8.1918).
“எங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் கல்லூரி அட்மிஷனில் புதிய முறை ஒன்றை உருவாக்கி அமல்படுத்தி வருகிறோம். அத னால் லஞ்சம் முறை கேடுகளை முற்றிலும் தவிர்த்து விட்டோம்; தகுதி - திறமை அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்கி றோம்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று பேசினாரே பார்க்கலாம். (இக்கட்டுரையை எழுதியவர் அந்தவுரையை நேரில் கேட் டவர்) அவ்வுரை ‘விடுதலை’  28.7.1978 முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது  எப்படி தெரியுமா?
“பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லை - மே.வங்க புரட்சி அரசின் சாதனை என்று மார் தட்டுகிறார் ஜோதிபாசு!” என்று முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் 1984 இல் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. (தமிழ்நாடு அரசு செய்தி வெளியீட்டுத் துறை வெளியீடு எண் 322 நாள் 30.5.1984) அதனை எதிர்த்து அனைத்துக் கட்சிகளை யும், சமூக அமைப்புகளையும் கூட்டி (25.3.1984) போராட்டத் திட்டத்தையும் அறி வித்தது திராவிடர் கழகம்.
தமிழ்நாடெங்கும் 23 மாவட்டத் தலைநகரங்களில் நுழைவுத் தேர்வு ஆணையை எரிக்கும் போராட்ட மும் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர். அவர்களின் அந்த நுழை வுத் தேர்வை ஆதரித்து வரவேற்ற ஒரு கட்சி உண்டு என்றால் அதுதான் மார்க் சிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி. அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் நல்ல சிவன் அவர்கள் தமிழ்நாடு மேலவையில் முழக்கமிட்டு ஆதரவுக் கரம் நீட்டினாரே!
“வானொலிப் பெட்டிகளும்; தொலைக் காட்சிப் பெட்டிகளும் கிராமப்புற மக்களி டையும் பரவலாகி வரும் இன்றைய சூழ் நிலையில், நுழைவுத் தேர்வில் கிராமப் புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படு வார்கள் என்ற பயம் தேவையற்றது” - என்று கிராமப்புற ஏழைப் பாட்டாளி மக்களின் தோழர் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே ‘அதிர்ச்சி’ அடையக் கூடிய வகையில் வரவேற்றாரே - பாட்டாளிகளின் கூட்டாளிகள் என்பதற்கு இதைவிட வேறு சாட்சியமும் உண்டு கொல்!
அதே சி.பி.எம். இதே நுழைவுத் தேர்வை பற்றி இப்பொழுது என்ன கூறுகிறது?
“கிராமப் புற மாணவர்கள் சமூகப் பொருளாதார ரீதியாக பின் தங்கிய ஏழை - எளிய மாணவர்களுக்கு எதிரானது; எனவே இந்த முயற்சியைக் கை விட்டு இப்போ துள்ள முறையே தொடர வேண்டும் என கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்து கிறது”. (சென்னையில் 7,8-10-2015 நாட்களில் கூடிய கட்சியின் மாநில செயற்குழுத் தீர் மானத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது ‘தீக்கதிர்’ (10.10.2015 பக்கம் 3)
இந்த 2015ஆம் ஆண்டிலேயே கிராமப் புற ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படு வார்கள் என்கிறது கட்சியின் மாநிலக் குழு; 1984ஆம் ஆண்டில் கிராமப் பகுதிகள் எப்படி இருந்திருக்கும்?
“நுழைவைத் தடுக்கவா நுழைவுத் தேர்வு?” எனும் தலைப்பில் தலையங்கமும் தீட்டியுள்ளது (‘தீக்கதிர்’ 7.10.2015). இப்போது மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் கிராமப் புற மாணவர்களுக்கும் எதிர் காலத்தில் வாசல் அடைக்கப்பட்டு விடும் என்றும் அத் தலையங்கம் முத்தாய்ப்பாகக் கூறுகிறது.
நுழைவுத் தேர்வால் கிராமப் பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள் இது 2015 சி.பி.எம். நிலை; கிராமப் பகுதி மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் - இது 1984 சி.பி.எம். நிலை.
ஏனிந்த முரண்பாடு? சமூக நீதிப் பிரச்சி னையில் ஆழமான புரிதல் இல்லை இக் கட்சிக்கு என்பதுதான் இதனுடைய நிகர உண்மை. வர்க்கம் பற்றிப் பேசும் இவர் களுக்கு வருணத்தைப்பற்றிய ஆழமான புரிதல் இல்லாததன் வெறுமையே இது!
சட்டப் பேரவைகளிலும் நாடாளுமன் றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற சமூகநீதிக் குரல் ஒலிக்க ஆரம்பித் தது; திராவிடர் கழகம் அதனை வற்புறுத்தி யும் வந்தது. மேற்கு வங்க முதல் அமைச்சர் ஜோதிபாசு அவர்கள் அந்தக் கருத்தை வலி யுறுத்தினார்.
ஆனால் அக்கட்சியின் மகளிர் பிரிவு அதனை எதிர்க்கிறது. இதுகுறித்து சி.பி.எம். கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடான தீக்கதிர் (16.7.1998) கருத்துப்படம் ஒன்றை வெளியிட்டு மகளிர் மசோதா எட்டாக் கனியாக உள்ளது. இதைப் பறிக்க விடா வண்ணம் லாலு பிரசாத்தும், முலாயம் சிங்கும் காலைத் தட்டிவிடுகின்றனர் என் கிறது அந்தக் கருத்துப் படம். இது குறித்து ‘விடுதலை’ அப்பொழுதே கண்டித்துத் தலையங்கம் தீட்டியது. (22.7.1998).
1967 ஆம் ஆண்டு திமுக ஆளும் கட்சி ஆனது 1972ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அதிமுக 1977ஆம் ஆண்டில் தனது முதல் தேர்தலில் வென்றது. இரண்டு கட்சிகளும் தமிழக முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வளர்ந்தனர் என்று ‘தீக்கதிர்’ குற்றப் பத்திரிகை படித்துள்ளது.
இது உண்மை எனில் இந்த இரு முத லாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளை சி.பி.எம். புறக்கணித் ததா? கூட்டுச் சேர்ந்து அரசியல் லாபம் பெற்றதா? முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த இரு கட்சிகளோடு மார்க்சியத்தை மாசற ஏற்றுக் கொண்டிருக்கும் நாங்கள் கூட்டணி சேர மாட்டோம் என்று மார் தட்டியிருந்தால்
‘சபாஷ் மார்க்ஸிஸ்டு கட்சி!’ என்று ஒரு கைலாகுக் கூடக் கொடுத்திருக்கலாம் அதற்கு மாறாக பத்து அரசியல் கட்சி களோடு பதினொன்றாவது கட்சி என்ற சராசரி நிலையில் தானே சி.பி.எம். செயல் பட்டு வந்திருக்கிறது  - மறுக்க முடியுமா?
இரு தி.மு.க. கட்சிகளோடு கூட்டணி வைத்தபோது குறைந்த பட்சம் கொள்கைத் திட்டங்களை வைத்ததுண்டா? மாறாக எத்தனை சீட்டுகள் என்ற பேரம் பேசுவதில் தானே தனது சூட்டிப்பைக் காண்பித்தது? திமுக ஆட்சியில் முதலாளித்துவத்துக்கு எதிரான வகையில் பேருந்துகள் தேசிய மயம் உள்ளிட்ட ஒரு  நீண்ட பட்டிய லையே கடந்த கட்டுரையில் பட்டியலிட் டுக் காட்டியிருந்தோமே - அதைப்பற்றி குறை கூற முடியாமல்,
இப்படிப் பொத்தாம் பொதுவில் எழுதுவது உண்மையை உண்மை என்று ஒப்புக் கொள்ளும் மனப்பாங்கு வற்றி விட்ட தன்மையையே இது காட்டுகிறது.
சுயமரியாதைத் திருமணச் சட்டம், பெண்கள் மறுமலர்ச்சிக்கான அலை அலையான திட்டங்கள், பெரியார் நினைவு சமத்துவபுரம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் - இவை எல்லாம் தந்தை பெரியாரால் பிரச்சாரம் செய்யப்பட்ட முற்போக்கான சமூகக் கருத்தடங்கியவை இல்லை என்கிறதா தீக்கதிர்? கடந்த கட்டுரையில் நாம் இவற்றை எடுத்துக்காட்டிய பிறகும் மீண்டும் இப்படி எழுதுவது எந்த வகையில் மெச்சத் தகுந்தது?
இந்திய அளவில் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சமூக சீர்திருத்த சட்டங்கள் திட்டங்கள்போல, வேறு எந்த மாநிலத்திலாவது, சி.பி.எம். ஆண்ட மேற்கு வங்கத்திலோ, கேரளாவிலோ செயல்படுத் தப்பட்டனவா என்ற கேள்வியை இந்த இடத்தில் மீண்டும் எழுப்புகிறோம்; சவாலைச் சந்திக்கத் தயார் தானா?
தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப் பட்டது சுயமரியாதைத் திருமணம் என்பது ஊர் உலகத்திற்கே தெரிந்த ஒன்று. மார்க்சிடுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் தோழர் பி. இராமமூர்த்தி அவர் களால் எழுதப்பட்ட “ஆரிய மாயையா? திராவிட மாயையா?”
“விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்!” எனும் நூலில் சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுக் கட்சி ஒரு சட்டம் கொண்டு வருமாறு காங்கிரஸ் அரசை வலியுறுத்தியதன் விளைவாக சுயமரியா தைத் திருமணச் சட்டம் என்று ஒரு தனிச் சட்டம்  நிறைவேற்றப்பட்டது என்று எழுதவில்லையா?
தி.மு.க.ஆட்சியில் செம்மொழித் தகுதி கிடைத்தது பற்றி எழுதினால் அப்பொழுது மத்திய ஆட்சியில் கம்யூனிஸ்டு இருந்தது என்று சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையில்லையா! கம்யூனிஸ்டுக் கட்சி அந்தக் கூட்டணியில் இல்லாமலிருந்தால் தமிழுக்குச் செம்மொழி தகுதி கிடைத் திருக்காதா? நீதிக்கட்சியின் மாநாட்டில் (1978 மார்ச்சு 30, 31 நெல்லூர் மாநாட்டில்) தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்ற உண்மையைச் சொன்னால், “அய்யோ நீதிக் கட்சியா?’ என்று மதுரை சொக்கன்  துள்ளினாலும் துள்ளுவார்.
இன்னொரு வயிறு வெடிக்கும் தமாஷ் உண்டு தி.மு.க ஆட்சி வந்த பிறகுதான் தமிழக அரசின் தஸ்தாவேஜுகளிலும் கடி தங்களிலும் கோபுரம் சின்னமாக வைத்துக் கொண்டது என்றும் தோழர் பி. இராம மூர்த்தி அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். எப்படி இருக்கிறது கதை?
உண்மை என்னவென்றால் தமிழக அரசுக்குக் கோயில் சின்னம் வந்தது காங் கிரஸ்காரரான ஓமாந்தூர் ராமசாமி ரெட்டி யார் முதல் அமைச்சராக இருந்தபோது 1950ஆம் ஆண்டில்...
அந்த வழியில் இன்று வரை தவறான தகவல்களை அள்ளி விடுவதில் சி.பி.எம். சலிப்பதில்லையோ!
.....
ஓர் ஆதி திராவிடரை முதன் முதலாக மந்திரியாக்கிய பெருமை நீதிக்கட்சியைச் சாரும் என்று நாம் எழுதியதற்கு தீக்கதிர் எழுதும் பதில் என்ன தெரியுமா? 1967 முதல் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருந்த போது சட்டசபை துணை சபாநாயகர், ஆதி திராவிடர் நலத்துறை ஆகியவற்றைத் தாண்டி முக்கியதுறைகளுக்குள் பெரும் பாலும் அவர்கள் நுழையவில்லை என்பதும் உண்மையல்லவா என்று கேள்வி எழுப் பப்பட்டுள்ளது.
இதனை சி.பி.எம். சொல்லுவதுதான் வேடிக்கை. 1980இல் சி.பி.எம். மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தபோது ஒரு காபினட் அமைச்சர்பதவிகூட தாழ்த்தப் பட்டவருக்கு அளிக்கப்படவில்லை என்பதை இன்று  அல்ல அன்றே விடுதலை (11.12.1980) சுட்டிக்காட்டிக் கண்டித்ததுண்டு.
1987 கேரளாவில் மார்க்சிஸ்டுக் கம்யூ னிஸ்டுக் கட்சி சார்பில் முதல் அமைச்சருக் கான வேட்பாளராக ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி கவுரி அம்மையார் முன்னிறுத்தப்பட்டவர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்பட்டதா? முதுபெரும் கம்யூனிஸ் டுக் கட்சியைச் சேர்ந்த ஈழவ மூதாட்டி வெளியேறி ஜனாதிபத்திய சம்ரக்ஷண சமிதி (மக்களாட்சிப் பாதுகாப்புப் பேரவை) என்ற ஓர் அமைப்பினை நிறுவினார் என்பது வரலாறு.
தி.மு.க.வைப் பொறுத்தவரையில் கலை ஞர் அவர்களே என்ன உயர் ஜாதி வட் டாரத்தைச் சேர்ந்தவரா? எத்தனை மிக மிக என்று போட்டும் என்னைப் பிற்படுத்தப்பட் டவர் என்று அழைக்கலாம் என்று சொன்னதில் ஆழமான அர்த்தம் உண்டே!
கலைஞர் ஆட்சியின்போது தானே  ஒரு வரதராசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்டவர் என்ற பெருமைக்கு  உரியவர் ஆனார். உச்சநீதி மன்றத்திற்குச் சென்ற முதல் தாழ்த்தப்பட் டவரும் அவர்தான் என்பது சாதாரண மானது தானா?
முதலாளித்துவக் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபியோடு திமுக கூட்டணி வைத்திருந் தது. நவீன தாராளமயக் கொள்கைகளுடன் எந்த முரண்பாடும் இல்லை திமுகவுக்கு என்பது ஒரு குற்றச்சாற்று.
சி.பி.எம். கேரளா, மேற்கு வங்க மாநிலங்களை ஆண்டபோது மத்திய அரசின் இந்த நவீன முதலாளித்துவ தாராளமயக் கொள்கையிலிருந்து வெகு தூரம் விலகி ஓடிற்றா? மத்திய அரசின் அந்தக் கொள்கை எந்த வகையிலும் அவர்களின் மாநிலத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று உறுதியாகக் கூற முடியுமா?
டாக்டர் மன்மோகன் சிங் தலைமை யிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மக்களவை சபாநாயகராக இருந்தவர் யார்? சோம்நாத் சட்டர்ஜி சி.பி.எம்.மின் முதுபெரும் தலைவர் அல்லவா! அந்தக் காலக் கட்டத்தில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை என்னவாம்? ஒரு கட்டத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்குத் தாம் கொடுத்து வந்த ஆதரவை சி.பி.எம். விலக்கிக் கொண்டாலும்,
மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து விலகாமல் நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தவர் - பேரப் பிள்ளைக்குப் பூணூல் கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்திக் காட்டிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் முக்கிய மூத்த தலைவர் அன்றோ!
இவ்வளவும் செய்துவிட்டு, அப்படி ஆதரவை விலக்கிக் கொண்டது தவறு என்று பிற்காலத்தில் புலம்புவானேன்! என்னே தீட்சண்யம்?
சிங்கூரில் நடந்தது என்ன என்ற ‘விடுதலை’யின் கேள்விக்கு தோழர் மதுரை சொக்கன் அவர்களின் பதில் என்ன தெரியுமா? நந்திக் கிராமம் பிரச்சினைகளை கையாண்டதில் தவறு ஏற்பட்டதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டது.
கட்சி என்று  போகிற போக்கில் சாதாரண நிகழ்வுபோல சமாளிக்கப் பார்க்கிறார்.
அங்கு நடந்தது சாதாரணமானதுதானா? அந்த அவலக் காட்சி இதோ:
“நந்தி கிராமத்தில் இருந்த மார்க்சிஸ்டு அரசின் காவல்துறை உடையோடு கட்சி யினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வன் முறையாளர்களும், செய்த அராஜகங்களை சகிக்க முடியாமல் மக்கள்  வேறிடங் களுக்குக் குடிபெயர்ந்து போனார்கள். போனவர்களைக் காவல் துறை மீண்டும் துப்பாக்கி முனையில் மிரட்டிக் கொண்டு வந்து அவர்களை சொந்த வீடுகளில் கட்டாயப்படுத்திக் குடியமர்த்தி இருக் கிறார்கள்.
அந்தப் பகுதியில் வேறு வெளி யாட்களோ, அவர்களின் உறவினர் களோகூட நுழைய முடியாமல் மார்க் சிஸ்ட்டுக் கட்சி வன்முறையாளர் பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளார்கள். உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகை நிருபர்கள் கூட வளையத்¬த் தாண்ட முடியவில்லை”
இப்படி ஆனந்த பஜார் இதழில் பேட்டி கொடுத்தவர் யார்? என்பதைத் தெரிந்து கொண்டால் அதிர்ச்சிக் குண்டாந்தடி தலையில் விழும்! ஆம் அவ்வாறு பேட்டி கொடுத்தவர் ஜோதிபாசு ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த அசோக் மித்ராதான்.
இதில் நூறில் ஒரு பாகம் திமுக ஆட்சியில் நடந்திருந்தால் அடேயப்பா மதுரை சொக்கன்கள் சொக்கப் பானைகள் கொளுத்தித் திருவிழா கொண்டாடிட மாட்டார்களா?
.....
“அதிமுக ஆட்சியில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது, இது தலித்துகளுக்கும், சிறு பான்மையினருக்கும் எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி உறுதியாக எதிர்த்தது. ஆனால், மதங் களையும், கடவுள்களையும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு மதமாற்றத் தடைச் சடடத்தை வரவேற் பதில் தயக்கம் இல்லை என்றது திராவிடர் கழகம்.
- இப்படியொரு குற்றச்சாட்டை திராவிடர் கழகத்தின்மீது வைத்துள்ளது மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டு கட்சி.
இவ்வளவுத் தாழ்வாகவும் போக வேண்டுமா? இந்த அளவு சறுக்கிட வேண் டுமா? இருளில் சஞ்சரிக்க வேண்டுமா? உண்மையிலேயே அனுதாபப்படுகிறோம் - வேறு என்ன தான் சொல்ல!
உள் பக்கத்தில் போட்டால் சொக்கன் போன்றவர்களின் கண்களுக்குப் புலப் படாமல் போனாலும் போகும் என்பதற்காக, மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கண்டித்துத் திராவிடர் கழகத்தின்  பொதுச் செயலாள ராக இருந்த ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் அறிக்கை தலைப்புச் செய்தி யாக அல்லவா பளிச்சென்று வெளி வந்தது?
(‘விடுதலை’ 9.10.2002) அந்தத் தலைப்பு வரிகளை மட்டும் எடுத்துக்காட்டினாலே போதுமானது அவசரமாக மத மாற்றத் தடைகள் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருவதேன்?  பி.ஜே.பி. ஆளும் மாநிலத்திலேயே கொண்டு வரப்படாத சட்டம்  - பெரியார் - அண்ணா - எம்.ஜி.ஆர். பாரம்பரியம் என்று கூறிடும் திராவிட இயக்க ஆட்சியில் கொண்டு வரப்படலாமா?
மத மாற்றம்  எதனால் நடைபெறுகிறது என்பது முக்கியமல்லவா? மதமாற்றத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தலைவர் வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டாரே! விடு முறையில் சென்று விட்டாரா பூங்குன்றன் என்று மதுரை சொக்கன் எழுதியதுபோல் எழுதிட நாம் விரும்பவில்லை.
ஆடு, கோழி, பலியிட தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதும் அதையும் ஆதரித்தது திராவிடர் கழகம்; இதில் இருக்கிற வர்ணாசிரம அரசியலை பிரித்துப் பார்க்க முடியவில்லை திராவிடர் கழகத் தால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது உண்மைதான். திராவிடர் கழகம் இதில் மாறுபடத்தான் செய்கிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலையடுத்த அம்பகரத் தூரில் காளி கோயிலில் எருமைக்கிடா வெட்டப்படுவதைக்கூட எதிர்த்து தந்தை பெரியார் கட்டளைப்படி போராடி அதனை ஒழித்துக் கட்டியது திராவிடர் கழகம் (1964 மே)
கலாச்சாரம் என்ற பெயரால் மூடநம் பிக்கைகளை வளர்ப்பதில் எப்பொழுதும் திராவிடர் கழகத்திற்கு உடன்பாடில்லை; முன்னோர்கள் வெட்டினார்கள் என்பதற் காக உப்புத் தண்ணீரைக் குடிக்க வேண்டுமா என்ன?
இதில் வேடிக்கை என்ன தெரியுமா? இன்றைக்குக்கூட எஸ்.பி.சி.ஏ. சட்டப்படி தமிழ்நாட்டில் கோயில்களில் உயிர்களை பலியிடக் கூடாது என்பதை அறியாதது தான் ஆச்சரியம்.
உள்ளாட்சி முனிசிபல் சட்டம் (Local Municipal Corporation Acts, Prevention of Cruelty to Animals Act 1960, Widelife (Protection) Act, 1972, Indian Penal Code (IPC) அதன்படி ஆந்திரப் பிரதேசம், குஜராத், கருநாடகா, கேரளா, புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கோயில் களில் உயிர்ப் பலி தடுக்கப்பட்டுள்ள தகவலை ‘தீக்கதிர்’ இதுவரை அறியா திருந்தால் இனியாவது தெரிந்து கொள்ளப் பரிந்துரைக்கின்றோம்.
.....
தி.மு.க. அதிமுக கட்சிகளுடன் தொடர்ந்து  மாறி மாறி ‘இனமான’ அடிப்படையில் நட்பு கொண்டிருந்ததால் நியாயமான விமர்சனத் தையும் ஏற்க மறுக்கிறது ‘விடுதலை’ என்கிறது தீக்கதிர்.
இன்னொரு இடத்தில் அதிமுகவுடன் அனுசரணையாக இருந்தால் அந்தக் கட்சி சமூக நீதி காத்த கட்சி, திமுகவுடன் அனுசரணையாக இருந்தால் அந்தக் கட்சி சமூகநீதி காத்த கட்சி என்று  அக்மார்க்கு முத்திரை குத்தும்  - அதிகாரம் உங்களிடம் தான் (தி.க.விடம்தான்) உள்ளதா என்ற கேள்வியைக் கேட்டுள்ளது தீக்கதிர்.
அது என்ன அனுசரணை? அதனை நாணயமான முறையில் விளக்கி இருக்க வேண்டாமா? அதிமுக ஆட்சியில் 69 சதவீதத்தைப் பாதுகாக்க திராவிடர் கழகத் தலைவர் எழுதிக் கொடுத்ததை சட்டமாக் கியதால் சமூக நீதிகாத்த வீராங்கனை தான்; மகளிர்க்கு அடுக்கடுக்கான திட்டங்களை திமுக ஆட்சி நிறைவேற்றியபோது  ‘மகளிர் ஆட்சி உரிமை மாண்பாளர்’ என்று முதல் அமைச்சர் கலைஞருக்கு திராவிடர் கழகம் பட்டம் அளித்தது.
இந்த அனுசரணையில் என்ன தவறு? திராவிடர் கழகம் ஒன்றும் கூட்டணி அரசியல் கட்சியல்ல - சந்தர்ப்ப சதிராட்டம் போடுவதற்கு! தி.மு.க.வும் சரி, அ.இ.அ.தி.மு.க.வும் சரி பிஜேபி கூட்டணியில் சேர்ந்தபோது திராவிடர் கழகம் அதனை ஏற்றுக் கொள்ள வில்லையே! மாறாக எதிர்த்துத் தானே வந்தது. கடுமையாக விமர்சித்தது என்ற உண்மை ‘தீக்கதிரு’க்குத் தெரியாதா?
அடிப்படைக் கொள்கையைத் தவிர வேறு  அனுசரணை எங்களுக்கு ஏதும் இல்லை - இல்லவே இல்லை என்பதை ஒரு முறைக்கு நூறு முறையும் கண்டிப்பாக கூறுவோம்!
(வளரும்)
குறிப்பு: சி.பி.எம். கட்சியின் தலை வர்கள் திராவிடர் இயக்கத்தைப் பற்றித் தவறான வகையில் விமர்சனம் செய்ததற்கு ‘விடுதலை’ ஞாயிறு மலரில் (3.10.2015) “கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் காம்ரேடுகளின் கனிவான கவனத்துக்கு...” என்று அடக்கமாகவும், பண்போடும் பதில் எழுதி இருந்தோம்.
அதற்கு தீக்கதிரில் வெளிவந்த (16.10.2015) கட்டுரைக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா? ‘ரசம் போன கண்ணாடி யில் முகம் பார்க்க முடியாது” என்பதாகும்.
எது ரசம் போன கண்ணாடி என்பதை இரு தரப்புக் கட்டுரைகளையும் படித்துப் பார்த்து வாசகர்கள் முடிவுக்கு வரட்டும்!


-------------------------கவிஞர் கலி. பூங்குன்றன்  அவர்கள் 24-10-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை