Search This Blog

22.4.16

இந்தியா அடிமைப்பட காரணம்?-பெரியார்


இந்தியா அடிமைப்பட காரணம்?



                                                                                        - சித்திர புத்திரன்

கேள்வி: நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும் படியான ஆகாரம்கூடக் கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறுபுடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?


பதில்: நமது மதமும் ஜாதியும்.
கேள்வி: நாம் பாடுபட்டுச் சம்பாதித்தும் நம் பிள் ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90 பேருக்கு மேலாக தற்குறிகளாயிருக்கிறோம். ஆனால்,  பாடு பட்டுச் சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர் களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன?

பதில் : மதமும் ஜாதியும்.

கேள்வி: நமது பணக்காரக் குடும்பங்கள் வரவரப் பாப்பராய்க் கொண்டே வருவதற்குக்  காரணமென்ன?
பதில்: வினையின் பயன். அதாவது நம்மவர்கள் தங்கள் சமுகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்குப் பணமும் கொடுத்து வந்த பாவமானது அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜுகளாகவும் வந்து, மேற்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்பனராக்கு கிறார்கள். அதற்கு யார் என்ன செய்யலாம்?

கேள்வி: எந்தவிதமான விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்?
பதில்: வெளியார்க்கு தெரியும்படியாகச் செய்த விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்.

கேள்வி: கிறிஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
பதில்: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
கேள்வி: மகம்மதியனாவதில் என்ன கெடுதி?
பதில்: ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடிபோடாதே.
கேள்வி: உண்மையான கற்பு எது?
பதில்: தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு.
கேள்வி: போலிக் கற்பு என்றால் எது?
பதில்: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மன திற்குப்
பிடித்தமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக்கற்பு.
கேள்வி: மதம் என்றால் என்ன?
பதில்: இயற்கையுடன் போராடுவதும், அதைக் கட்டுப்படுத்துவதும்தான் மதம்.
கேள்வி: தொழிலாளர்களுக்குப் பண்டிகை நாள் களில் ஏன் ஓய்வு(லீவு) கொடுக்கப்படுகின்றது?
பதில்: பாடுபட்டுச் சம்பாதித்து மீதி வைத்ததைப் பாழாக்குவதற்காக.
கேள்வி: பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?
பதில்: அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.
கேள்வி: மனிதனுக்குக் கவலையும், பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
பதில்: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்துபோகும்.
கேள்வி: பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டு மானால் என்ன செய்ய  வேண்டும்?
பதில்: தலைமயிரை வெட்டி விட்டால் அதிக நேரம் மீதியாகும்.
கேள்வி: பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
பதில்: அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்புச் சேலையை இழுத்து இழுத்துப் போடுவதே வேலையாகும்)
கேள்வி: எல்லோருக்கும் போதுமான அளவு ஆகா ரம் இருக்க வேண்டுமானால் என்ன  செய்ய வேண்டும்?
பதில்: ஒருவனும் தன் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டிய அளவு கிடைத்துவிடும்.
கேள்வி: பெரிய மூடன் யார்?
பதில்: தனது புத்திக்கும், பிரத்தியட்ச அனுபவத்திற் கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன், எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன்  பெரிய மூடன்.
கேள்வி: ஒழுக்கம் என்பது என்ன?
பதில்: ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும்.
கேள்வி: சமயக் கட்டுப்பாடு - ஜாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?
பதில்: மனிதனைத் தன் மனச்சாட்சிக்கும், உண் மைக்கும் நேராய் நடக்க  முடியாமல் கட்டுப்படுத்துவது தான் ஜாதி சமயக் கட்டுப்பாடாய் இருக்கின்றது.
கேள்வி: உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

பதில்: கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து, அவரைக்காக்க பிரயத்தனம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக்  காணப்படுகிறது.


கேள்வி: ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

பதில்: தடி எடுத்தவன் தண்டல்காரனென்பது தான் ஜனநாயக ஆட்சி.

கேள்வி: நம் நாட்டில் ஜனசங்கை பெருக வேண்டு மானால் என்ன செய்ய வேண்டும்?

பதில்: அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி, வித வைகளுக்கு மறுமணம்  செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜனசங்கை பெருகும்.

கேள்வி: நம் நாடு சீர்ப்பட என்ன வேண்டும்?

பதில்:  நம் நாடு சீர்ப்பட்டு நாமும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டு மானால், நாஸ்திகமும், நிபந் தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண் டியனவாகும்.

கேள்வி: இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?

பதில்: இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய்ப் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும், கடவுள்களுமேயாகும்.

கேள்வி: கிறிஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள் கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளு கிறார்கள்?

பதில்: கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும்  இருந்த போதி லும் அதைப்பற்றி  நமக்குக் கவலை இல்லை.  ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப் பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க் கைக்கோ, மன  உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட் டாள்தனமுமாகும்.

கேள்வி: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்குவர முடிந்தது?

பதில்: மத விஷயத்தில் அவர்களுக்கு கிடைத் துள்ள உயர்ந்த நிலையால்  அவர்கள் (பார்ப்பனர்கள்) எல் லோரையும்விட முன்னேறியிருக்க முடிந்தது. மத விஷ யத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பாடுபடத்  தெரியாது. ஆகவே, சோம்பேறிகளின் கதியே அடைய வேண்டியவர்களாவார்கள்.


கேள்வி: ஆண் விபசாரர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோட்சத்திற்குப்போக நேர்ந்து விட்டால், அங்குபோய் தங்கள் விபசாரத்திற்கு என்ன செய்வார்கள்?

பதில்: அதற்காக எந்த விபசாரகனும் விபூதி பூசுப வரும் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், அங்கு இந்த விபூதிப் பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார் கள். அன்றியும் சமையல் செய்யவேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால், காமதேனு, கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுத்து விடும்.

கேள்வி: பார்ப்பனர்களில் ஒருவகையாருக்கு ஏன் முகம் சூப்பையாயிருக்கின்றது.

பதில்: அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை வீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின் றார்கள். அதனால், அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.

கேள்வி: பெண் விபசாரிகள் விபூதி பூசியதன்மூலம் மோட்சத்திற்குப் போய்விட்டால் அங்கு அவர் களுக்கு வழி என்ன?

பதில்: கடவுள் இருக்கிறார், போதாக்குறைக்கு அங்குள்ள மற்ற தேவர்களைக் கொண்டு சரிப் படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

கேள்வி: கடவுள் ஏன் காண முடியாதவராயி ருக்கிறார்?

பதில்: அவர் பண்ணும் அக்கிரமத்திற்கு யார் கைக்காவது கிடைத்தால் நல்ல உதை கிடைக்கு மென்றுதான்.

கேள்வி: கடவுள் செய்த அக்கிரமம் என்ன?

பதில்: ஏன்? மூட்டைபூச்சி, கொசு இரண்டையும் அவர் உற்பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போதாதா?

                  -------------------------------- தந்தைபெரியார் அவர்கள்- சித்திர புத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதியது --  “குடிஅரசு” - கேள்வி பதில் - 15.01.1949

அன்பினால் மதத்தைப் பரப்பியதாக உலகில் எந்த மதவாதியாலும் கூறமுடியுமா?




பகுத்தறிவாளர் கழகம் துவக்குவதற்கு முன் பகுத்தறிவாளர் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவாளர் என்றால் மனிதன். மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மனிதன் ஒருவன்தான் சிந்திப் பான். வாய்ப்பு வசதி, தேவை, வளர்ச்சி இவைகளைப் பற்றி மனிதன் ஒருவன்தான் சிந்திக்கின்றான், நிலைமைக்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவன் மனிதன் ஒருவனேயாவான். மற்ற எந்த ஜீவனுக்கும் இந்த அறிவு கிடையாது.
பகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறிவினைப் பயன்படுத்திச் சிந்திக்காத காரணத்தால் சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொண்டு இராகு காலம், குளிகை, எமகண்டம் என்றும், பூனை குறுக்கிட்டால் கெட்ட சகுனம் என்றும் முட்டாள் தனமாக நம்பிக் கொண்டு முட்டாளாக இருக்கின்றான்.
மனிதன் தோன்றிப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகின்றன. அப்படிப்பட்ட மனிதர்கள் கடவுள், மதம், சாஸ்திரம், சாதி என்கின்றவைகளில் இன்னமும் நம்பிக்கை கொண்டு மடையர்களாக, முட்டாள்களாக இருக்கின்றனர். சுமார் 100, 150 ஆண்டுகளுக்குள், தோன்றிய இரயில், மோட்டார், மின்சாரம், தந்தி, டெலிபோன், ரேடியோ என்பவைகளும், இன்றைக்குத் தோன்றுகின்ற விஞ்ஞான அதிசய அற்புதங்கள் என்பவைகளும் மனிதனின் பகுத்தறிவு வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டவை களேயாகும். இவற்றையெல்லாம் தன் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டிருக்கிற நம் ஒரு நாட்டு மனிதன் மட்டும் தான் மதம் - கடவுள் - சாஸ்திரம் என்கின்ற மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக சிந்திப்பது பாவம், பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்வதுபாவம் என்று கருதிக்கொண்டு இன்னமும் காட்டுமிராண்டியாக இருக்கிறான்.
ஆடு, கோழி, பன்றிகளைத்தின்பவன் மாடு தின்பது பாவம் என்கிறான். ஆடு, மாடு, கோழிகளைத் தின்பவன் பன்றி தின்பது பாவம் என்கின்றான் எதனால் பாவமென்றால், மதத்தில் அப்படி இருக்கிறது; பெரியவர்கள் அப்படிச் சொல்லி இருக்கிறார்கள் என்று மதத்திற்கு அடிமையாக இருக்கிறான்.
அதன் காரணமாக மனிதன் அறிவு வளர வேண்டிய அளவிற்கு வளர்ச்சியடையாமல் இருக் கிறான். இங்குள்ள இந்தவிஞ்ஞான விந்தைகளைக் கண்டவர்களெல்லாம் இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம் என்பவை களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு தங்கள் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்துச் சிந்தித்தலேயாகும். உலகில் பகுதிக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் அறிவிற்கு முதன்மை கொடுத்து அறிவைக்கொண்டு சிந்திக் கின்றார்கள்.

பகுத்தறிவுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடக்கும் நாடுகள் உலகின் பல இருக்கின்றன. பல கோடிக்கணக்கான மக்கள் பகுத்தறிவாளர்களாக இருக்கிறார்கள்.

நம் ஒரு நாட்டில் மட்டும் எதற்காக இத்தனை மதம்? இதனால் மனிதன் ஒருவனுக்கு ஒருவன் பிரிந்து வேறுபட்டு சண்டையிட்டு கொண்டிருக்கிறான் என்பதைத் தவிர இவைகளால் மனிதன் பெற்ற பலனென்ன? இத்தனைக் கடவுள்களும், மதமும் இருந்து மனிதனை ஒன்றாக்க வில்லையே! இன்றைக்கு உலகம் மிகச் சுருங்கிவிட்டது. முன் மாதக் கணக்கில் பயணம் செய்து போகவேண்டிய இடத்திற்கு ஒருசில மணிநேரத்திற்குள் இன்று போகும் படியான வசதி கிடைத்து விட்டது. நினைத்தவுடன் 10 ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள மனிதனிடம் பேசும்படியான (டெலிஃபோன்) சாதனங்கள் ஏற்பட்டுவிட்டன. இரண்டு நாட்களுக்குள் உலகத்தின் எந்தப் பாகத்திற்கு வேண்டுமானாலும் போகும்படியான நிலைமை இன்று ஏற்பட்டு உள்ளது. இன்னும் மனிதனின் உறுப்புக்களை மாற்றியமைக் கவும், மனிதனின் உறுப்பில் கேடானதை நீக்கி வேறு மிருகங்களின், இறந்த மனிதனின் உறுப்பினை வைத்துச் சரி செய்யும் படியான அளவிற்கு வைத்திய வசதியும் இன்று பெருகியுள்ள தென்றால் இதற்குக் காரணம் மனிதனின் அறிவு வளர்ச்சி யினாலேயேயாகும்.

பகுத்தறிவு என்பதற்குச் சக்தி எவ்வளவு இருக் கிறது? அதற்கு எவ்வளவு பலன் இருக்கிறது? அத னால் எவ்வளவு நன்மை விளைகிறது? அதனால் எவ்வளவு கேடுகள் நீங்குகின்றன? என்பவைகளைச் சிந்தியுங்கள். இவற்றையெல்லாம் சிந்திக்காமல் கடவுள் என்கின்ற முட்டாள் தனமான நம்பிக்கை யால் மனிதன் வளர்ச்சியடையாமல் கேட்டிற்கு ஆளா கின்றான்.
மனிதனை மாற்றவேண்டும்; மனி தனைச் சிந்திக்கச் செய்யவேண்டும் பகுத்தறிவுடையவனாக்கவேண்டும். உலகில் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடையவர்கள் பலர் இருக்கின்றனர். என்றாலும், இதில் எவரும் கடவுள் சக்தியை உண்மையில் நம்புவது கிடையாது. நம்பி அதன்படி நடந்து கொள்வதும் கிடையாது. எவ்வளவு தீவிரமான கடவுள் நம்பிக்கைக்காரனாக இருந்தாலும் தனக்குச் சிறு நோய் ஏற்பட்டால் டாக்டரிடம் சென்றுதான் மருத்துவம் செய்து கொள் கின்றானே தவிர, கடவுள் அருளால் தான் இந்த நோய் நமக்கு வந்தது என்று கருதி சும்மா இருப்ப தில்லையே! கடவுள் சர்வ வல்லமை உள்ளவர் என்கின்றபோது அவர் தனது நோயினைத் தீர்ப்பார் என்று கருதி எந்தக் கடவுள் நம்பிக்கைக்காரன் வைத்தியம் செய்து கொள்ளாமல் இருக்கிறான் என்று கேட்கின்றேன்.

இன்று நாட்டிலிருக்கிற கேடெல்லாம் மதத்திற்காகக் கடவுளுக்காக - செய்யப்பட்டவைகளேயாகும். சைவன் எத்தனை பேரைக் கொன்றிருக் கின்றான்? முஸ்லிம், கிறிஸ்தவன் எத்தனை பேரைக்கொன்றிருக் கின்றார்கள்? மதத்தையும், கடவுளையும் பலாத்காரத்தால், கொலையால் தான் மக்களிடையே பரப்பி இருக்கின்றனரே தவிர அன்பாலல்ல. கடவுள் நம்பிக்கையற்றவர்களையெல்லாம் கொடுமைகள் செய்து அழித்து ஒழித்திருக்கின்றனர். நாம் இன்னமும் இந்த அளவிற்கு வரவில்லை.
பகுத்தறிவு என்பது அறிவைக்கொண்டு சிந்திப்பது. அனு பவத்திற்கு ஏற்றதைப் பஞ்சேந்திரியங்களால் உணர்ந்து கொள்ளக்கூடியதை ஏற்றுக்கொள்வதாகும். அதற்கு மாறானது எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளாததாகும். அதனைப் பரப்புவதே இக்கழகத்தின் கொள்கையாகும்.
------------------------------------------------15.12.1970 அன்று தருமபுரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை "விடுதலை", 30.1.1971