Search This Blog

30.9.13

விருத்தாசலத்தில் என்மீது திட்டமிட்ட தாக்குதல் காவல்துறையின் செயலற்ற போக்கு! - கி.வீரமணி


  • விருத்தாசலத்தில் என்மீது திட்டமிட்ட தாக்குதல் 
  • காவல்துறையின் செயலற்ற போக்கு!
  • அக்டோபர் 7 ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயற்குழு
  • தக்கதோர் முடிவினை எடுத்து அறிவிக்கும்!
தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த தலைவர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி!
தோழர்களே, உணர்ச்சிவயப்பட வேண்டாம்!
விருத்தாசலத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைத் தாக்கும் வண்ணம் செயல்பட்ட வன்முறைக் கும்பல்மீதும், அதற்குத் துணைபோகும் விருத்தாசலம் காவல்துறை அதிகாரிகள்மீதும் மேலதி காரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அக்டோபர் 7 ஆம் தேதி சென்னையில் கழகத் தலைமைச் செயற்குழு கூடி உரிய முடிவெடுக்கும் என்றும் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

விருத்தாசலத்தில் மிகவும் சிறப்பான முறையில், திராவிடர் கழக மாணவரணி மாநாட்டையும், அதனை யொட்டி கருத்தரங்கம், மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி முதலியவை 28.9.2013 அன்று மிகவும் வெற்றியுடன் நடைபெற்றன.

உள்ளூர் காவல்துறையின் போக்கு!

உள்ளூர் காவல்துறை அதிகாரிகளில் முக்கிய பொறுப்பாளரான ஒரு அதிகாரி திராவிடர் கழக நிகழ்ச்சி கள் நடைபெறுவதற்கு சட்டப்படி தரவேண்டிய அனுமதியை மறுத்தும், ஒரு இந்து முன்னணி - ஆர்.எஸ்.எஸ். அதிகாரிபோல் நடந்துகொண்டார் - நேற்றுவரை என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும், கண்டனத்திற்கும் உரிய ஒன்றாகும்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை கோரும் திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற கட்சிகளுடன் இணைந்து நடத்திட வேண்டிய அறப்போர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க தேவையில்லாமல் இழுத்தடித்ததோடு, கடைசி நேரம் வரை அனுமதி வழங்காமலேயே இருந்ததைப் பொருட்படுத்தாது கழகத் தோழர்கள் விருத்தாசலத்தில் வெற்றிகரமாக நடத்தினர்.

ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு

அதுபோலவே, இம்மாநாட்டின் ஊர்வலத்திற்கும் அனுமதி மறுத்த நிலையில், இது பல ஊர்களிலும் நடை பெறும் வழக்கமான பேரணிதான், எவ்வித இடைஞ்சலும் யாருக்கும் ஏற்படாத வண்ணம் நடத்திடுவோம் என்று மேலதிகாரிகளிடம் விளக்கி, அனுமதி பெற்றுவிட்டனர்.

முதல்நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் அனுமதி இல்லை என்று கூறினார் அந்த விருத்தாசலம் அதிகாரி.

அவரை மீறி, ஊர்வலம் -  பேரணி சிறப்பாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்கள், தாய்மார்கள், தோழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். ஒரு சிறு அசம்பாவிதமும் கிடையாது.
இதற்குமுன் உள்ளூரில் ஒருவரின் ஆட்சேப மனு, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். ஒரு ஜாதிய அமைப்பின் சிறு கோஷ்டியைச் சார்ந்த மனுவை வாங்கிக்கொண்டே, இதைக் காட்டி ஒரு பெரும் இயக்கத்தின் ஊர்வலத்தைத் தடை செய்வதாகக் கூறிய உள்ளூர் காவல்துறை அதி காரிகள், அனுமதியை மேல் அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி வழங்கிய பிறகு, நமது நடவடிக்கைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கியிருக்கவேண்டாமா?

மேடைக்கு வரும்போது தாக்குதல்

அதுமட்டுமா? நான் மேடைக்குப் புறப்பட்டு வரும்போது, இந்த காவிக்கொடிக் காலிகள் 20, 30 பேர் திரண்டு வந்தபோது, செய்தியாளர், தொலைக்காட்சி, பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் உள்பட வந்திருந்து படம் பிடித்த நிலையில், அந்தப் பாலத்தில் கூடியதை எப்படி காவல்துறை அதிகாரிகள் பார்க்காமல் இருந்தார்கள்? வேண்டுமென்றே மறைமுகமாக அவர்களுக்கு உதவு வதுபோல (They Winked at it) ஜாடை காட்டியதுபோல, ஒரு காவல்துறையினர்கூட அங்கே இல்லை என்றால், இது வெறும் அலட்சியம் அல்ல; என்னைத் தாக்கிக் கொல்ல முயன்ற காவிக் கொடிக் காலிகளுக்குத் துணை போனவர்களுக்கு உடந்தையாகவே நடந்துகொண்டுள் ளனர்.

காவல்துறை மேலதிகாரிகள் கவனத்திற்கு...!

இதை இன்று வந்துள்ள கடலூர் பதிப்பு தினத்தந்தி நாளேட்டுப் பெட்டிச் செய்தியே தெளிவாக வெளியிட் டிருக்கிறது. இதற்கான உரிய நடவடிக்கையை காவல்துறை மேல் அதிகாரிகள் அந்தக் கடமை தவறிய, காக்கி உடை காவி அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்கவேண்டும்.

சென்னையில் 7 ஆம் தேதி தலைமைச் செயற்குழு!

குறிப்பிட்ட காலத்தில் - இதை எடுக்கத் தவறினால், அடுத்து மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் குறித்து வரும் 7.10.2013 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

இச்செய்தியை அறிந்தவுடன் எனக்கு நூற்றுக்கணக் கான தொலைப்பேசி அழைப்புகளும், நேரில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை மண்டல தோழர்களும் கொதித்தெழுந்து ஆவேசப்பட்ட நிலையில், வெளி மாவட்டத் தோழர்களும், பல்வேறு ஆதரவாளர்களும், இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களும் விசாரித்தனர்; சிலர் எனது பாதுகாப்புப் பற்றியும் கவலை தெரிவித்தனர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் முன்னணியினர் கண்டனம்
நேற்றிரவு கோவையில் உள்ள எனக்கு மானமிகு தலைவர் கலைஞர் அவர்களது சம்பவக் கண்டன அறிக்கையும் கிடைத்தது.

நேற்றே விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் மானமிகு பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் மானமிகு ஆ.இராசா ஆகியோர் தொலைப்பேசியில் விசாரித்தனர்.

இன்று (30.9.2013) காலை கன்னியாகுமரியிலிருந்து தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆழ்ந்த கவலை, பரிவுடன் பேசினார்.

இடையறாமல் தொலைப்பேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
பொதுவாழ்க்கையில் உள்ள பெரியார் தொண்டர் களாகிய - சுயமரியாதைக்காரர்களாகிய நமக்கு இப்படி உயிருக்குக் குறி வைக்கப்படுவது புதிதல்ல; எதிர்பார்க்கப் படவேண்டியதேயாகும்.

தாக்கப்படுதல் நமக்குப் புதிதல்ல!

என்னைப் பொறுத்தவரை இதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் (மம்சாபுரம்), சென்னை வண்ணாரப்பேட்டை, சேலம் (ஆத்தூர் தம்மம்பட்டி) ஆகிய ஊர்களில் கொலை முயற்சிகள் நடந்தன.

இப்போது விருத்தாசலத்தில் நடைபெற்றது; உயிர் வெல்லமல்ல; 
லட்சியத்திற்காகக் கிடைக்கும் சாவைவிட சிறந்த பொதுவாழ்க்கைக்கான பரிசு வேறு என்ன?

அதிலும் இன எதிரிகளால் தூண்டிவிடப்பட்ட இனத் துரோக கூலிப்படைகளால் நடைபெற்றதை, தமிழக அரசு - காவல்துறையும் வேடிக்கைப் பார்த்தால், இந்த நிலை எல்லாத் தலைவர்களுக்கும் ஏற்படுமே! ஏற்பட்டே வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டாமா? என்ற கேள்வியை அனைத்துத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள்முன் வைக்க விரும்புகிறோம்.

தோழர்களே, உணர்ச்சிவயப்படாதீர்!

மற்றபடி கழகத் தோழர்கள் உணர்ச்சிவயப்படாமல், ஆத்திரப்படாமல், அம்புகளைப்பற்றிக் கவலைப்படாமல், மேலும் மேலும் தீவிரமான கொள்கைப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதுதான் இதனை முறியடிக்க ஒரே வழி என்று கூறி அமைதி காக்கவேண்டிக் கொள்கிறேன்.

கண்டனம் தெரிவித்து விசாரித்த அத்துணைத் தலைவர்களுக்கும், எனது உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்குரிய பரிகாரத்திற்கான வழிமுறைகளை கழகத் தலைமைச் செயற்குழு காணும்; எனவே, அமைதி காத்திடுங்கள்!

என்றும் உங்கள் பணியாளன், தோழன், தொண்டன்,

கி.வீரமணி தலைவர்,திராவிடர் கழகம்.

முகாம்: கோவை  
30.9.2013 

 *********************************************************************************

தமிழர் தலைவர் மீது தாக்குதல் பல்வேறு செய்திதாளின் படபிடிப்பு
 
 ***************************************************************************


பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துவோரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை வன்முறைக்குத் துணைபோவது இது முதல் முறையல்ல!

தந்தை பெரியாரின் இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர்கள் - தொண்டர்கள்மீது தாக்குதல் நடத்துவதா?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிமீது தாக்குதல்
தி.மு.க. தலைவர் கலைஞர் கடும் கண்டனம்!
சென்னை, செப். 30- விருத்தாச்சலத்தில் 28.9.2013 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாணவர் அணி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது  காலிக் கும்பல் ஒன்று வன் முறைத் தாக்குதல் நடத்த எத்தனித்தது. அந்த நிகழ் வினை முன்கூட்டியே அறிந்திருந்தும், அதைத் தடுக் காமல் அந்த ரவுடிக் கும்பலுக்கு அ.தி.மு.க. அரசின் காவல் துறை துணை போயுள்ளது. இந்த அக்கிரமத்தைக் கடு மையாகக் கண்டித்து தி.மு.க.   தலைவர் கலைஞர் அவர் கள் நேற்று (29.9.2013) அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கை வருமாறு :-

28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய வாகனத்தை வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கி இருப்பதோடு;  திராவிடர் கழகக் கொடிகளைச் சாய்த்தும், சுவரொட்டிகளைக் கிழித்தும் வெறியாட்டம் நடத்தியிருக்கிறது. அச்செயல்களைத் தடுத்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய காவல்துறையும் காலிகளுக்கு துணை போய் திராவிடர் கழகத்தினர்மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
கல்லடிகளுக்கும் சொல் லடிகளுக்கும் மத்தியில் தாம் கொண்ட கொள் கையை கடைசி மூச்சுவரை, வன்முறை சிறிதும் கலக்காமல் பரப்பி வந்த தந்தை பெரியார் வாழ்ந்த மண் ணில், அவர் கண்ட இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர்கள்மீதும், தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துவோரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இப்படிப்பட்ட வன்முறைகளுக்குத் துணை போவது இது முதல் முறை இல்லை என்றாலும், ஜனநாயகத்திலும் - கருத்துச் சுதந்திரத்திலும் நம்பிக்கை உள்ளோர் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தச் செயலைக் கண்டிக்க வேண்டியது அவர்களது கடமையாகும். -இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அவ்வறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

ஆண் - பெண் வேறுபாடற்ற உடை தேவை


* சமஸ்கிருத மயமாக்கப்பட்ட ஊர்களின் பெயர்களை மாற்றிடுக!


* ஆண் - பெண் வேறுபாடற்ற உடை தேவை - அழகு சாதனங்கள், நிலையங்களைப் புறக்கணித்திடுக!

மதவாத சக்திகளை முடியடிக்கும் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்து வெற்றி பெற வேண்டும் 

விருத்தாசலம் திராவிடர் கழக மாணவரணி கடலூர் மண்டல மாநாட்டின் தீர்மானங்கள்
விருத்தாசலம், செப்.29- ஆண் - பெண் சமத்து வத்தை வலியுறுத்தியும், மதவாதசக்திகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
28.9.2013 சனி அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாணவரணி கடலூர் மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானங்கள்


1.    தமிழ்நாட்டில் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட ஊர்களின் பெயர்களை மீண்டும் அதன் உண்மையான தமிழ்ப் பெயர்களாக மாற்றிட ஆவன செய்ய வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. குறிப்பாக விருத்தாசலம் என்று சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்ட பெயரை அதன் உண்மைப் பெயரான திருமுதுகுன்றம் என்று மாற்றிட ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2.    தந்தை பெரியார் தமது தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றிய திருச்சிராப்பள்ளியில்  உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாடு அரசும் இந்த வகையில் மத்திய அரசை வலியுறுத்துமாறு இம்மாநாடு தமிழக முதல் அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

3.    தந்தை பெரியார் இறுதியாக அறிவித்துப் போராடிய தீண்டாமை - ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை விரைந்து முடித்து, தந்தை பெரியார் அவர்களின் இறுதி விருப்பத்தினை நிறைவேற்றித் தருமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4.    (அ)    இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டணி வெற்றி பெற்றதற்கு இம்மாநாடு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. 13ஆவது திருத்தத்தைச் செயல்படுத்தி, மாநிலத்திற்கு அனைத்து உரிமைகளும் கிட்டும் வண்ணம் இலங்கை அரசு நடந்துகொள்ள போதுமான அழுத் தத்தை அளிக்குமாறு இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(ஆ) அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் தலைமை இயக்குநர் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கைத் தீவுக்குச் சென்று, தமிழர்கள் வாழும் பகுதிகளையும் பல நாட்கள் சுற்றுப் பயணம் செய்த நிலையில் நேரிடையாக உண்மை நிலைமைகளைக் கண்டறிந்து அங்கே நிலவும் சூழலைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை என்றும், இராணுவ கெடுபிடிகள் இன்னும் நீடிக்கிறது என்பது உட்பட பல்வேறு பிரச்சினைகளையும் சுட்டிக் காட்டி யுள்ளார். மனித உரிமை ஆணையரின் அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில், சட்ட ரீதியாக நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்ளுமாறு அய்.நா.வை இம்மாநாடு வலியுறுத்து கிறது.

5.    தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல், சிறைப்பிடித்தல் என்பது தொடர்ந்து இலங்கை அரசால் தொடரப்படுகிறது. வழக்கம்போல இதில் கவனம் செலுத்தப்படுகிறது. கவலை தெரிவித்துக் கொள்ளப்படு கிறது என்ற மத்திய அரசின் வாக்குறுதிகள் வெற்றுச் சொற்களாகிவிட்டன. பல மாதங்கள் தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் அவதிப்படும் கொடுமை தொடர் கிறது. தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடைமை ஆக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் ஆணையிடும் அளவுக்கு இந்தப் பிரச்சினை விபரீதமான ஒரு கட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.


கச்சத் தீவை மீட்பதுதான் இதற்கு நிரந்தரப் பரிகாரமாக இருக்க முடியும். ஆதலால், அதற்கான முயற்சியில் ஈடுபடுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6.    காவிரி நீர்ப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம், நடுவர் நீதிமன்றம் ஆகியவை தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், அவற்றின் அடிப்படையில் கருநாடக அரசைச் செயல்பட வைப்பது மத்திய அரசின் கடமை என்பதை இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

மேலும் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல முற்றிலும் சட்ட விரோதமாக, கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டப் போவதாக கருநாடக அரசு அறிவித்துள்ளது, தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கியே தீருவது என்ற முடிவில் கருநாடக அரசு இருப்பதாகத் தெரிகிறது.

மத்திய அரசு இதனை அரசியல் கண்கொண்டு பார்க்காமல் சட்டரீதியாக கருநாடக மாநில அரசை நீதிமன்றத் தீர்ப்புகளின்படி செயல்பட வைக்க ஆவன செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

7.    சேது சமுத்திரத் திட்டத்தை நீரி நிறுவனம் வகுத்துக் கொடுத்த 6ஆவது தடத்தில் நிறைவேற்றிட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை விரைவுபடுத்தி, இறுதித் தீர்ப்பைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று இம்மாநாடும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

8.    ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் தகுதி - திறமை என்பதில் சமரசத்துக்கே இடமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கும் விதம் - சமூகநீதிக்கு எதிராக செயல்படுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து விட்டதாகவே கருத இடம் இருக்கிறது.

திராவிடர் இயக்கம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முதலிய தலைவர்கள் அரும்பாடுபட்டுக் கட்டிக்காத்து வரும் தமிழ் மண்ணுக்கே உரித்தான சமூக நீதியைப் புறந்தள்ள முயன்றால் கடுமையான போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

9.    தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைகள் நாளும் அதிகரித்து, சட்டம் ஒழுங்குக்குப் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதை இம்மாநாடு சுட்டிக்காட்டி    , இந்தப் பிரச்சினையில் போதுமான கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல் அமைச்சர் அவர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

10.    மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் பல்வேறு போதைகளுக்கான எதிர்ப்புப் பிரச்சாரத்தை - விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று இம்மாணவர் மாநாடு முடிவு செய்கிறது. தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இவ்வாண்டு பெரியார் பிறந்தநாளில் அறிவித்தபடி மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் மேற்கொள்வது என்றும் குறிப்பாக ஜாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

11.    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களும் திடீரென அதிகரிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.  பின்னர் மாணவர் களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாக உயர்கல்வி மன்றம் அறிவித்துள்ளது. எனினும் இது குறித்து இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் கூடுதலாகத் தெரிவித்திருப்பது, மாணவர்களின் நம்பிக்கையைக் குலைத்துள்ளது. தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம் என்ற அறிவிப்பு போதாது; தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களின் உயர்வு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

12.    நாடெங்கும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து, பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அடிப்படைக் காரணங்கள், குழந்தை வளர்ப்பு முதல் இருபால் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிகமான பாலின வேறுபாடுகளை உருவாக் குவது ஒன்று; பாலியல் குறித்த புரிதலை உருவாக்காதது மற்றொன்று. எனவே பாலின வேறுபாடுகளைக் கடந்து இருபால் இளைஞர்களும் நட்புறவுடன் பழகும் பாங்கை உருவாக்குவது, பாலியல் கல்வியைக் கற்பிப்பது உள்ளிட்ட முற்போக்குச் சிந்தனைகளும், செயல்பாடுகளும் தேவை என்பதால் இவற்றை முதன்மைப்படுத்திக் கல்விமுறை அமைக்கப்பட வேண்டும் என இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. இதற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்வதெனவும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

13.    மாணவர்கள், இளைஞர்களுக்கு உடைக் கட்டுப்பாடு, கண்ணியம் குறித்து பரவலாக இப்போது பேசப்படுகிறது; அரசும் அது குறித்து ஆணைகளையும் வகுக்கிறது. உடைக் கட்டுப்பாடு என்பது பிற்போக்குத் தனமானதாக ஆகிவிடக்கூடாது. ஆண், பெண் இருபாலரும் வேறு பாடற்ற உடைகளை அணிய வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கருத்தே இந்த விசயத்தில் சரியான தீர்வாகும். அதே நேரத்தில், இருபால் இளைஞர்கள் மத்தியிலும் அலங்கரித்துக் கொள்ளுதல், சிவப்பு நிறத் தோல் வேண்டும் என்று களிம்புகளைப் பூசிக் கொள்ளுதல், அழகு நிலையம் என்பனவற்றில் பணத்தையும், நேரத் தையும் விரயமாக்குதல் போன்றவை அதிகரித்துள்ளதை இம் மாநாடு கவலையுடன் நோக்குகிறது. உடை, நகை யலங்காரமும், சிவப்புத் தோலுமே நாகரிகம் என்ற சிந்தனையைப் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளித்துவ நிறுவனங்களும், ஊடகங்களும் தொடர்ந்து பரப்பு கின்றன. இத்தகைய அடிமைப் போக்கைக் கைவிட்டு, மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்ற தந்தை பெரியாரின் கருத்தை ஏற்று, போலி அழகுச் சிந்தனை களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் மாணவர் களையும், இளைஞர்களையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

14.    மதச்சார்பின்மைக்கு விரோதமான, இந்துத் துவா என்கிற நிகழ்ச்சி நிரலை (AGENDA)
கையில் எடுத்துக் கொண்டு, குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை யினருக்கு எதிராகப் பெரும் வன்முறைகள் தூண்டப் பட்டதற்குக் காரணமாக இருந்த ஒருவர் பிரதமருக்கான வேட்பாளர் என்கிற முறையில் திக்விஜயம் போல் புறப்பட்டு இருப்பதும், அதற்கு இந்த நாட்டில் உள்ள பார்ப்பன ஊடகங்களும், இந்துத்துவா சக்திகளும், பெரு முதலாளிகளும் பின்புலத்தில் பலமாக இருந்து வருவதையும் எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டி, இந்த ஆபத்திலிருந்து நாட்டினைக் காத்திட மதச்சார்பின்மைக் கொள்கை உடையோர் மற்றும் சமூகநீதி கொள்கை யாளர்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து ஒன்று சேரவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

15.    திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொள்ளும் எந்த அரசும், எந்த கட்சியும் பி.ஜே.பி.க்குத் துணை போகு மானால், அது திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஊட்டிய உணர்வுகளுக்கும், கொள்கைகளுக் கும் முற்றிலும் முரணானது என்பதோடு, அத்தகைய வர்கள் வரலாற்றுக் குற்றத்தைச் செய்த பழிக்கு ஆளா வார்கள் என்பதையும் இம்மாநாடு தொலைநோக்கோடு வெளிப் படுத்துகிறது.


முன்மொழிந்தவர்:- விருத்தாசலம் ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி தலைவர் பெரியார் செல்வம்.
பலத்த கரஒலிக்கிடையே தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

29.9.13

வீரமணி ஒழிக! வீரமணி எப்பொழுது ஒழிவான் தெரியுமா?

கடைசி ஆதிக்கவாதியையும், கடைசி சுரண்டல்காரனையும், கடைசி மூடநம்பிக்கைவாதியையும் ஒழித்து விட்டுத்தான் ஒழிவான்!
விருத்தாசலம் மாநாட்டில் தமிழர் தலைவர் போர்ப்பறை!

விருத்தாசலம், செப்.29- கடைசி ஆதிக்கவாதியையும், கடைசி சுரண்டல்காரனையும், கடைசி மூடநம்பிக்கைவாதி யையும் ஒழித்துவிட்டுத் தான் இந்த வீரமணி ஒழிவான் என் றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
விருத்தாசலம் வானொலித் திடலில் நேற்று (28.9.2013) மாலை நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் கழக மாணவரணி மாநாட்டில் நிறைவுரை  வழங்கிய போது அவர் குறிப்பிட்டதாவது:

விருத்தாசத்தில், திராவிடர் கழக மாநாடு நடைபெறக் கூடாது; ஊர்வலம் நடக்கக் கூடாது. அப்படி நடந்தாலும் நான் இங்கு வரக் கூடாது என்பது சிலரின் ஆசை; அதற்காக வன்முறையில் இறங்கியுள்ளனர். (தலைவர் வந்த வாகனத்தை சில காலிகள் தாக்கினர், தலைவரையும் தாக்க முயன்றனர்).

இந்த இயக்கத்தைப்பற்றி அறியாதவர்கள் இவர்கள். எதிர்க்க எதிர்க்கத்தான் இந்த இயக்கம் வளரும் - அப்படித்தான் வளர்ந்தும் வந்திருக்கிறது.

யாரோ சிலர் போதிய தெளிவு இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்; அவர்களின் பின்னணியில் பார்ப் பனர்களின் தூண்டுகோல் இருக்கிறது  - நமது காவல்துறையும் இதனைச் சரியாகக் கையாளவில்லை.

காலை முதல் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், விபூதி பூசிய தமிழர்கள், நாமம் தரித்த தமிழர்கள்கூட எங்களை வர வேற்று மகிழ்ச்சியைத் தெரிவித் துக் கொண்டனர். சால்வைகளை அணிவித்த வண்ணமாகவும் இருந்தனர்.

நான் வரும் வழியில் சிலர் கூடி வீரமணி ஒழிக என்று கூச்சல் போட்டனர். வீரமணி எப்பொழுது ஒழிவான் தெரியுமா? கடைசிப் பார்ப்பானின் ஆதிக்கம் இருக்கும் வரை, கடைசி மூட நம்பிக்கைக்காரன் இருக்கும் வரை, கடைசி சுரண் டல்காரன் இருக்கும் வரை, அவற்றை ஒழித்து விட்டுத்தான், வீரமணி ஒழிவான் (பலத்த கரவொலி!)

என் உயிருக்கு மூன்று முறை குறி வைத்தனர். மம்சாபுரத்திலும், சென்னை புதுவண்ணையிலும், ஆத்தூர் தம்மம்பட்டியிலும் என் உயிருக்குக் குறி வைத்துத் தாக் கினார்கள்.

மூன்று முறை எனக்கு இருதய சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. நான் இயற்கையாய் மரணம் அடைவதைவிட இது போன்று பொதுப் பணியில் நான் ஈடுபடும் போது நான் உயிரிழக்க நேரிட் டால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி ஏது?

பத்து வயதில் விருத்தாசலத்தில் இதே வானொலித் திடலில் பேச ஆரம்பித்தவன் நான். தோழர் முனுசாமி, நமது மாவட்டத் தலைவர் இளங்கோ அவர்களின் மாமனார் சபாபதி அவர்கள், முருகன்குடி ராஜவேலு போன் றோர் இந்தப் பகுதியில் இயக்கப் பணிகள் ஆற்றினர்.

இன்றைக்கோ ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் இயக்கத்திற்கு வந்துள்ளனர். இந்த மாநாட்டிற்குப் பிறகு  ஏராளமான இளைஞர்கள் இயக்கத்திற்கு வரு வார்கள்.

நாங்கள் வன்முறையை வன் முறையால் சந்திக்கக் கூடியவர்கள் அல்லர்; எங்களின் அறிவார்ந்த பிரச்சாரத்தால் அவர்களையும் திருத்தவே ஆசைப்படுகிறோம்.

என்னைத் தாக்க வந்தவர் களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் பாடுபடுகிறோம். இன்றைக்குப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசில் 27 சதவீத இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கிடைக்கிறது என் றால் யார் காரணம்?

மண்டல் குழுப் பரிந்துரை களைச் செயல்படுத்த திராவிடர் கழகம் தானே பாடுபட்டது.

மண்டல் அவர்களே பெரியார் திடலுக்கு வந்து உரையாற்றினாரே! நாங்கள் அறிக்கையைத் தான் கொடுக்க முடியும். அதனைச் செயலாக்கும் சக்தி பெரியார் பிறந்த மண்ணுக்குத்தான் உண்டு. திராவிடர் கழகத்திற்குத் தான் உண்டு என்று பேசினாரே!


விருத்தாசலம் கழக மண்டல மாணவரணி மாநாடு (28.9.2013)
தீச்சட்டி இங்கே? மாரியாத்தா எங்கே? எனக் கேட்கும் தமிழர் தலைவர்
கடவுள் இல்லை; கடவுள் இல்லை எனக் கூறி அலகு குத்தி கார் இழுக்கும் தோழர்கள் சக்திவேல், முருகன், ரமேஷ்
கடலூர் மண்டல மாணவரணி மாநாட்டில் திரண்டிருந்த மக்கள் கடல்

நான் கிருஷ்ணன் பற்றி அறிக்கை வெளியிட்டதாகக் கோபப்படுகிறார்கள். அதற்காக வழக்குத் தொடுக்கப் போவதாகவும் கூறி னார்கள். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். வீதியில் சொல்லுவதை, நீதிமன்றத்திலும் ஆதாரத்துடன் கூற நல்ல வாய்ப் புக் கிட்டும்.

அந்தக் கிருஷ்ணன் தானே கீதையை உண்டாக்கி சதுர்வர் ணம் மயா சிருஷ்டம் என்றான். நான்கு வருணத்தையும் நானே உண்டாக்கினேன் என்றான்.

அந்த நான்கு வருணத்தில் நீங்கள் யார் - நாம் யார்? சூத்தி ரர்கள் தானே! சூத்திரன் என்றால் யார்? இதோ அசல் மனுதர்மம். அதன் 8ஆவது அத்தியாயம் 415ஆவது சுலோகம் என்ன சொல்லுகிறது?

யுத்தத்தில் புறங்காட்டி ஓடு பவன், பக்தியால் ஊழியம் செய்கிறவன், தனது தேவடியாள் மகன் என்று சொல்லவில்லையா?

இந்த இழிவிலிருந்து நீங்களும் சரி, நாங்களும் சரி விடுபட வேண் டாமா!

சூத்திரனுக்குப் படிப்பு கிடை யாது, சொத்துரிமை கிடையாது; இவ்வளவும் இன்று கிடைத்துள் ளன என்றால் அதற்கும் காரணம் நாங்கள் தானே!
நாங்கள் இல்லையென்றால்  மீண்டும் ராஜாஜியின் குலக் கல்வி திட்டம் தானே வரும்!

இங்கு மோடி வந்து விட்டுச் செல்லுகிறாரே - அவர் ஆட்சியில் மனுதர்மம் பாடமாக வைக்கப் பட்டுள்ளதே. இந்தியா முழுமை யும் இந்த மனுதர்மக் கொடியைப் பறக்க விடத்தானே முயற்சி நடக் கிறது? அதனைத் தடுத்து நிறுத் தும் ஆற்றல் இந்த இயக்கத்திற்குத் தான் உண்டு என்று குறிப்பிட் டார்.

                         -------------------------"விடுதலை” 29-9-2013 
**********************************************************************************


தமிழர் தலைவர் சென்ற வாகனம்மீது வன்முறை வெறியாட்டம்!
எதிர்ப்பு தெரிவித்த தோழர்கள் மீதும் தாக்குதல்!!
 

விருத்தாச்சலத்தில் நேற்று (28.9.2013) நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாணவரணி மாநாடும், பேரணியும் மிகுந்த எழுச்சியோடும், மக்கள் பங்கேற்போடும் நடந்து கொண்டிருந்ததை கண்டு பொறுக்காத கூலிப்படைக் கும்பல் ஒன்று திறந்தவெளி மாநாட்டில் உரையாற்ற வந்து கொண்டிருந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு எதிப்புத் தெரிவிக்கிறோம் என்று கொடி கட்டப்பட்ட கழி, கம்புகளுடன் விருத்தாசலம் பாலக்கரையில்  கூடி நின்றுள்ளனர். தங்களிடம் அனுமதி பெறாமல் தலைவர் வரும் பாதையில் சாலையை மறித்து நின்றவர்களை கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள் போலும் காவல்துறையினர்!

தமிழர் தலைவரைத் தாக்க முயன்ற காவிக்கும்பல், அது முடியாததால் தலைவர் பயணித்த வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்தியது. தமிழர் தலைவர் வந்த வேன், பாதுகாப்பிற்கு வந்த பொலீரோ ஜீப் ஆகியவற்றை அடித்தும், கம்பு கட்டைகளால் தாக்குதல் நடத்தியும், வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

தேசிய யாதவ மகாசபை என்ற பெயர் தாங்கிய கொடியைப் பிடித்திருந் தவர்களும் காவிக் கொடித்துணிகளைப் பிடித்து வந்த பாரதிய ஜனதா உள்ளிட்ட காவிக்கூலிப்படையின் தாக்கு தலையும் தாண்டி, தமிழர் தலைவரின் வாகனம் மேடையை அடைந்தது. தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து முழக்கம் எழுப்பிய தோழர்களை கூலிப்படையினரும், காவல்துறையினரும் தாக்கியது மேலும் அதிர்ச்சியடைய வைத்தது. காலை முதல் அமைதியான முறையில் எழுச்சியாக நடந்த கொண்டிருந்த மாநாடு, பேரணியை ஆர்வமுடன் பார்த்து, தொடர்ந்து மாலை மாநாட்டில் பங்கெடுத்த விருத்தாச்சலம் நகர பொதுமக்களும், கழகத்தோழர்களும், கழகத் தலைவரின் வாகனம் தாக்கப்பட்டதையும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தோழர்கள் தாக்கப்பட்டதையும் கண்டு கடும் எதிர்ப்பையும், காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டு கடும் அதிருப்தியையும் தெரிவித்தனர்.


கழகத் தலைவரைத் தாக்க ஆயுதங்களுடன் வந்த  யாதவ மகா சபை மற்றும் பாரதிய ஜனதா கூலிப் படைக் காவிகள் (28.9.2013, விருத்தாசலம்)
கைக்கட்டி நின்ற காவல்துறையினர் (28.9.2013, விருத்தாசலம்)
*********************************************************************************
விருத்தாசலத்தில் நேற்று 28.9.2013 சனியன்று காலை சுயமரியாதைச் சுடரொளி தர்மலிங்கம் அரங்கம் மக்கள் மன்றத்தில் திராவிடர் கழக மாணவரணி கடலூர் மண்டல மாநாட்டையொட்டிய கருத்தரங்கம் நடைபெற்றது. மூடநம்பிக்கைகளைத் தகர்ப்போம் என்பது கருத்தரங்கத்தின் பொதுத் தலைப்பு!

கருத்தரங்கில் நிறைவுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பல்வேறு மூடநம்பிக்கைகளைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.
குறிப்பாக கைகளில் கலர் கலராகக் கயிறு கட்டும் மூடத்தனம் பற்றிப் பேசினார். நாம் நாள்தோறும் குளிக்கிறோம். உடைகளை மாற்றிக் கொள்கிறோம். ஆனால் கையில் கட்டிய கயிறு மட்டும் அப்படியே இருக்கிறது. அழுக்கும் சேர்ந்து கொண்டே இருக் கிறது ஏன் இந்தக் கயிறு என்றால் பேய் பிசாசுகள் அண்டாது என்று சமாதானம் சொல்லுகிறார்கள்.

நாங்கள் எல்லாம் கயிறுகள் கட்டிக் கொள்ள வில்லை. எங்கள் சட்டைப் பை ஒவ்வொன்றிலும் பத்து, பதினைந்து பேய்களா இருக்கின்றன?

நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை வல்லத்தில், பெரியார் பிஞ்சு குழந்தைகள் முகாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். சில குழந்தைகள் கைகளில் கயிறு கட்டியிருந்தனர். நாங்கள் என்ன செய்தோம். ஒரு குழந்தையின் கயிற்றை எடுத்து, எங்கள் மருந்தியல் கல்லூரி சோதனைச் சாலையில் வைத்து ஆய்வு செய்தபோது, பல்வேறு நோய்க் கிருமிகள் குடி கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் திரையில் போட்டுக் காட்டியபோது கயிறு கட்டியிருந்த குழந்தைகள் அனைவரும்  தாமாகவே அவற்றை அறுத்து எறிந்தனர் என்று திராவிடர் கழகத் தலைவர் கூறியது தான் தாமதம் - உடனே தி.மு.க. தோழர் இராசேந்திரன் என்பவர் மேடைக்கு வந்து, தான் கட்டியிருந்த கயிற்றினை அறுத்து எறிந்தார்.

கருத்தரங்கிற்கு வந்திருந்த மாணவர்கள், மாணவிகள் பலரும் வரிசையாக நின்று மேடைக்கு வந்து கழகத் தலைவர் முன்னிலையில் கயிறுகளை அறுத்து எறிந்தனர்.

தொடர்ந்து பேசிய கழகத் தலைவர் என்னிடம் சிலர் கழகப் புத்தகங்களை வாங்கிக் கையொப்பம் பெற வருவார்கள். அவர்கள் கைகளில் கயிறு கட்டியிருப்பதும் உண்டு. இது என்ன கயிறு என்றும் கேட்டால் சாமிக் கயிறு என்றனர். சரி.. ஒரு சோதனை செய்து பார்ப்போம்.

கத்தியால் அந்தக் கயிற்றை அறுப்போம். கத்தி உடைந்தால் சாமிக்குச் சக்தியிருக்கிறது. கயிறு அறுந்தால் கத்திக்குத் தான் சக்தி - சாமிக்குச் சக்தியில்லை என்று ஒப்புக் கொள்வீர்களா என்று கேட்பதுண்டு என்று கழகத் தலைவர் சொன்னபோது மேலும் சிலர் முன்வந்து தாங்கள் கட்டியிருந்த கயிறு களை அறுந்தெறிந்தனர். குறிப்பாக பன்னீர்செல்வம் அவர்கள் தாளாளராக இருந்த பள்ளி மாணவ மாணவியர் முந்தி வந்து அறுத்தனர்.
கைமேல் பலன் என்பார்களே - அது இதுதானோ!
                -------------------------”விடுதலை” 29-9-2013

இன்றும் பார்ப்பனர்கள் அப்படித்தான்!


இந்தக் காலத்திலும் பார்ப்பனர்களைப் பழிக்க வேண்டுமா? காலம் மாறிப் போச்சே -_ அவர்களும் பஞ்ச கச்சம் கட்டுவதை விட்டுத் தொலைத்து விட்டார்களே -_ இப்பொழுதெல்லாம் அவிட்டுத் திரியை எங்கே பார்க்க முடிகிறது? முனியாண்டி ஓட்டலிலும் சாப்பிடுகிறார்களே _- இந்தக் காலத்திலும் அவாளைப் பழிக்க வேண்டுமா என்று அவாளுக்கு வக்காலத்துப் போட்டு எகிறிக் குதித்து விளையாடும் விபீஷண தமிழர்களின் செவிட்டுச் சிந்தனைக்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.

தினமணி (8.9.2013) தமிழ் மணி பகுதியில் கலாரசிகன் எனும் பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் தினமணி ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யர் வாள் எழுதியுள்ளதைப் படியுங்கள் - படியுங்கள்.

தமிழுக்காகவும், இந்திய சுதந்திரத் திற்காகவும் தமது வாழ்நாளை அர்ப் பணித்த அற்புதமான தியாகிகளில் ஒருவர் மறக்கடிக்கப்பட்டிருந்தால் கூடத் தவறில்லை, தவறாக சித்திரிக்கப் பட்டிருப்பதுதான் வேதனை. அவர் நடத்திவந்த சேரன்மாதேவி குரு குலத்தில் இரண்டு பிராமணச் சிறுவர்களுக்கு அவர் தனியாக உணவளிக்க ஏற்பாடு செய்தார் என்பதைப் பெரிதுபடுத்தி, வ.வே.சு. ஐயர் என்கிற தியாகியின், தமிழ்ப் பற்றாளரின் பங்களிப்பையே மறந்து விடுவது நியாயமே அல்ல.

"எங்கள் குழந்தைகளுக்குத் தனியாக உணவளித்தால்தான் உங்கள் குருகுலத்தில் அவர்களைப் படிக்க அனுப்புவோம்' என்று இரண்டு பெற்றோர் பிடிவாதம் பிடித்ததால், அதற்கு இணங்கியதுதான் அவர் செய்த தவறு. அன்றைய சமூகச் சூழலை முன்னிறுத்திப் பார்க்கும்போது வ.வே.சு. ஐயர் பாரதியைப் போன்ற சீர்திருத்தவாதியாக இருக்கவில்லை என்று கூறமுடியுமே தவிர, அவர் பழிக்கப்பட வேண்டியவர் என்று தள்ளிவிட முடியுமா? அவரது ஏனைய பங்களிப்புகளை நாம் தவிர்த்துவிடுவது நியாயமா?

""சேரன்மாதேவி குருகுலத்தில் நடந்த சம்பவத்தை மட்டும் வைத்து, வ.வே.சு. ஐயரின் தமிழ் மொழி, பண்பாடு, இன நாட்டுப்பற்றுகளைக் கருத்தில் கொள்ள மறுத்ததுதான் வரலாற்றுச் சோகம்'' என்று தமது "விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு' நூலில் "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. பதிவு செய்திருப்பார்.
"வீர விளக்கு', "இலக்கியச் செம்மல்', "ஒப்பிலக்கியத் திறனாய்வாளர்', "நவீன படைப்பிலக்கிய முன்னோடி', "கட்டுரை இலக்கியச் செம்மல்' எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட வர் வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர் எனும் வ.வே.சு. ஐயர்.

""கம்பீரமான தோற்றம். மார்பை எட்டிப் பார்க்கும் அழகான கறுப்புத் தாடி. அன்பு ஒழுகும் கண்கள். மூலை செருகிக் கட்டப்பட்ட முரட்டுக் கதர். மேலே உடம்பு முழுவதும் போர்த்தப் பட்ட ஓர் ஆடை. நெற்றியில் பிறைச் சந்தனக் குறி. உண்மை முனிவரின் தோற்றம். நிமிர்ந்த நடை. அவர் நடக்கும் நடை ஒரு தனி அழகு கொண்டது. நடப்பதற்கும் நடை என்று பெயர். ஒழுக்கத்திற்கும் தமிழில் நடை என்றுதான் பெயர். இரண்டிலும் சாலச்சிறந்தவர் வ.வே.சு. ஐயர்'' - இது "தமிழ்க் கடல்' இராய.சொ.வின் பதிவு.

""மேல்நாட்டு இலக்கியங்களை ஆழ்ந்து பயின்று கரைகண்ட ஐயர், அவற்றின் புதுமையையும், வன்மையை யும் தமிழ் மொழியில் ஏற்ற விரும் பினார். அந்த நோக்கம் நிறைவேறும் முன்னரே அவர் மறைந்து விட்டார். தமிழ் நாட்டின் வாழ்வே அவரது பெருங்கனவாயிருந்தது. அவரைப் பற்றி நினைக்கும்போது, உலகத்தில் உயர்ந்த இமயமலையும், உலகத்தில் பெரிய கங்கை நதியும், எண்ணுதற்கரிய எல்லையற்ற வானமுமே எனது சிந்தையில் தோன்றுகின்றன. ஐயருக்கு நிகராகச் சொல்லக்கூடிய பெருந் தமிழர் தமிழ்நாட்டில் இனிதான் தோன்ற வேண்டும்'' என்பார் பாரதி புகழ் பரப்பிய பரலி. சு.நெல்லையப்பர்.

1907 முதல் 1919 வரையில் உள்ள வ.வே.சு. ஐயரின் நாட்குறிப்புகளில் அணியிலக்கணம் பற்றிய பல்வேறு குறிப்புகள் படிப்பவரை வியப்படையச் செய்யும். ""தேச பக்தன்' பத்திரிகை ஆசிரியராக இருந்த வ.வே.சு. ஐயர் எழுதிய கட்டுரைக்காக அவர் மீது ராஜதுரோகக் குற்றம் சுமத்தப்பட்டு, ஒன்பது மாதக் கடுங்காவல் தண் டனை விதிக்கப்பட்டது. அவர் பெல்லாரி சிறைச்சாலைக்குக் கைதி யாக அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னால் திருவல்லிக்கேணியில் மரணப் படுக்கையில் இருந்த தனது நண்பர் பாரதியாரைச் சந்தித்து விட்டுச் சென்றார். பாரதியை சந்தித்த கடைசி நண்பர் வ.வே.சு. ஐயர்தான்.

தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாக உரைநடை இலக்கியத்திற்கும், ஒப்பிலக்கியத்திற்கும் வ.வே.சு. ஐயரின் பங்களிப்பு மகத்தானது. பெ.சு.மணி தொகுத்து வெளியிட்டிருக்கும் "வ.வே.சு. ஐயரின் கட்டுரைக் களஞ்சியம்' என்கிற புத்தகம் அந்த மாமனிதரின் நிஜங்களைப் பதிவு செய்திருக்கிறது. வ.வே.சு. ஐயர் பற்றிய விரிவான ஆய்வுகளை நடத்தியிருக்கும் பெ.சு.மணியை எத்தனை பாராட்டி னாலும் தகும்.

இதுதான் தினமணியாரின் திருப்புகழ்!

குரு குலத்தில் இரண்டு பிராமணச் சிறுவர்களுக்கு அவர் தனியாக உண வளிக்க ஏற்பாடு செய்தார் என்பதைப் பெரிதுபடுத்தி,  வ.வே.சு. அய்யர் என்ற தியாகியின் _ தமிழ்ப் பற்றாளரின் பங்க ளிப்பையே மறைத்து விடுவது நியாய மல்ல என்று எவ்வளவுப் பெரிய ஜாதி வெறியை வருணாசிரமக் கண்ணோட் டத்தைச் சிறிய குமியில் அடைத்து வித்தை காட்டுவதைக் கவனித்தீர்களா?

குருகுலம் ஒன்றும் வ.வே.சு. அய்யரின் அப்பன் வீட்டுச் சொத்தல்ல; காங்கிரஸ் நிதியில் பொது மக்களின் உதவியில் நடத்தப் பெற்ற குருகுலமாகும்.

பாரத கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. தேசிய உணர்வை ஊட்ட வேண்டும் என்ற உணர்வும் இருந்தது. அதன் அடிப்படையில்தான் தொடக்கத்தில் கல்லிடைக் குறிச்சியில் தமிழ்க் குரு வித்தியாலயா எனும் பெயரில் கல்விக் கூடம் தொடங்கப்பட்டது. (1923 டிசம்பர்) வரகனேரி வேங்கட சுப்பிரமணிய அய்யர் (வ.வே.சு. அய்யர்) அதன் பொறுப்பாளராக அமர்த்தப்பட்டார்.

ஆனால் அங்கு நடந்ததென்ன?  நாரா. நாச்சியப்பன் தீட்டிய குருகுலப் போராட்டம்   _ என்ன கூறுகிறது.

ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் ஒரு நல்ல தலைவர். பழுத்த காந்தியவாதி. கடைசி வரை காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர். எளிமையான தோற்றமுடைய வர். எப்பொழுதும் தூய வெள்ளைக் கதராடையே அணிவார். ஆடையைப் போலவே தூய வெள்ளை மனம் படைத்தவர். 1948ஆம் ஆண்டு வாக்கில் தமிழக முதலமைச்சராக இருந்தார். அவருடைய ஆட்சிக் காலம் தமிழக காங்கிரஸ் ஆட்சியின் பொற்காலம் என்று கூற வேண்டும். ஏனெனில் அவருடைய ஆட்சியில்தான் எவ்வித ஊழலுமற்ற ஒரு செம்மையான அரசு நடந்தது.

அப்படிப்பட்ட சிறப்பு மிக்க இராம சாமி ரெட்டியார் பல ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் செயற்குழுவில் உறுப்பினராக இருந்தார். இராமசாமிப் பெரியாருக்கும், வரதராசலு நாயுடுவுக்கும், திரு.வி.க.வுக்கும் எல்லாவிதத்திலும் உதவியாக இருந்தார். இந்த முப்பெருந் தலைவர்களுக்கும், ஒத்துழைக்கும் சிறந்த தொண்டராக விளங்கினார்.
நம் பண்டைய பெருமையைக் காப்பாற்றுவதற்கென ஏற்பட்ட குருகுலத்தில், வெள்ளையர் கலாச்சாரம் நுழைய முடியாத குருகுலத்தில், தன் பிள்ளையும் சேர்ந்து படிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

ஆங்கிலக் கல்வியின் தீமையை மேடையில் பேசிக் கொண்டே தங்கள் வீட்டுக் குழந்தைகளைக் கான்வென்டுக்கு அனுப்பும் இக்காலத் தமிழர் தலைவர்கள் போலில்லாமல் தன் பிள்ளையை பாரதக் கலாச்சார முறைக் கல்வி பயில குருகுலத்தில் சேர்த்து விட்டார்.

பையன் பள்ளியில் பயின்றான். ஆறு மாதங்கள் ஓடின. அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறைக்காகப் பள்ளி மூடப்பட்டது. பிள்ளைகள் தத்தம் பெற்றோரைப் பார்க்கச் சொந்த ஊருக்குப் போய் வர அனுமதிக்கப்பட்டார்கள்.
ஓமாந்தூரார் பையனும் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

கட்சி வேலைகள், தொண்டு, மாநாடு என்று பல நாள் வெளியூர்களிலே சுழன்று கொண்டிருந்த இராமசாமி ரெட்டியார் வீட்டில் ஓய்வாக இருந்த ஒரு நாளில் தன் மகனோடு பேசத் தொடங்கினார்.

பையனின் படிப்பு எப்படியிருக்கிற தென்று விசாரிக்கத் தொடங்கினார்.
அவன் மூலம் குருகுலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அறிந்து கொண்டார்.

குருகுலத்தின் தினசரி வாழ்க்கை முறையைத் தெரிந்து கொண்டார்.
அவருடைய கேள்விகளுக்கு மகன் அளித்த பதில் மூலம் அவர் தெரிந்து கொண்ட செய்திகள் பல.

காலையில் 4 மணிக்கு எழுப்பி விடு வார்கள். கை கால் முகம் கழுவி பல் விளக்கிக் கொள்ள வேண்டும். பிறகு உடற்பயிற்சி நடக்கும்.
உடற்பயிற்சி முடிந்ததும் மலங்கழிக்கச் செல்ல வேண்டும். செல்லும் போது மண் வெட்டியுடன் போய் ஒரு குழி வெட்டி, அதில் மலங்கழித்த பின் மண்ணைப் போட்டு மூடி விட வேண்டும்.

குளித்து முடித்த பின் காலை 7.30 மணிக்கு ஒரு பெரிய கூடத்தில் எல்லா வகுப்பு மாணவர்களும், கூட வேண்டும். பார்ப்பன மாணவர்கள் ஒரு பக்கத்திலும், மற்ற மாணவர்கள் இன்னொரு பக்கத்திலும் நிற்பார்கள். தெய்வ வழிபாடு நடக்கும். ஐயர் பல பெரியோர்களின் வரலாறுகளைக் கூறுவார். புராணச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார். ஒரு மணி நேரம் கழிந்த பின் மாணவர்களுக்கு காலை உணவாக கஞ்சி வழங்கப்படும்.

உழவு வேலை, தோட்ட வேலை, சமை யல் வேலை ஆகியவற்றில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பிரித்துவிடப்படு வார்கள். நெல் பயிரிடப்பட்டிருந்தது. காய்கறிகள், பழ மரங்கள் வளர்க்கப் பட்டன. இவற்றில் எல்லாம் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

பள்ளிக்கூடத்திற்கு புதிய கட்டடங்கள் கட்டும் வேலை நடக்கும். இதில் மாணவர்கள் கொத்தனார்களுக்கு செங்கல் எடுத்துப் போதல், சாந்து குழைத்தல் போன்ற வேலைகள் செய்வார்கள்.

மற்ற ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் போலவே, வரலாறு, சமூகநலம், பூகோளம், விஞ்ஞானம் எல்லாப் பாடங்களும் சொல்லித் தரப்பட்டன. தமிழும், சமஸ் கிருதமும், இந்தியும் கற்றுத்தரப்பட்டன. பயிற்சி மொழியாக ஆங்கிலமே இருந்தது.

இந்த விவரங்களை யெல்லாம் கேட்டபோது ரெட்டியாருக்கு மகிழ்ச்சி யாகவே இருந்தது. பிள்ளைகள் வேற்றுமையின்றி எல்லா வேலையும் செய்வது எளிமையான வாழ்வுக்கு வழி வகுப்பதாகும் என்று மகிழ்ச்சியடைந்தார்.

ஆங்கிலம்தான் பயிற்சி மொழி என்று மகன் சொன்னபோது தேசிய உணர்வுள்ள ரெட்டியார் துடித்துப் போனார். ஆனால், கால நிலையை யொட்டி, வேறு அரசு பள்ளி மாணவர் களோடு போட்டி வரும் போது சரி சமமாக நிற்க உதவியாயிருக்கும் என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டார். இந்தி தேசிய மொழி அதைக் கற்றுக் கொள்வது நல்லது என்று எண்ணினார். 

சமஸ்கிருதம் இலக்கிய மொழி அதுவும் தேவைதான் என்று எண்ணினார். இந்தப் படிப்புகளில் பாரதக் கலாச்சாரம் எங்கேயிருக்கிறது, மற்ற பள்ளிக்கூடங்கள் போலத்தானே இருக்கிறது என்று எண்ணமிட்டார்.
சாப்பாடு நன்றாய் இருக்கிறதா? என்று தந்தையார் கேட்க, மகன், பழகிக் கொண்டு விட்டேன் என்று சொன்னான்.

பள்ளிக்கூடம் எப்போது திறக் கிறார்கள்? என்று தந்தையார் கேட்ட போது, நயினா, நான் அங்கே போக வில்லை; வேறு பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன் என்றான்.

எல்லாம் நன்றாகத் தானே சொன்னான். ஏன் போக மாட்டேன் என்கிறான். தாய்ப் பாசமா? வீட்டு நினைப்பா? என்று எண்ணினார் ரெட்டியார்.
என்னடா செப்புறே? என்று கேட்டார்.

எங்களையெல்லாம் கேவலமா நடத்துறாங்க நயினா! என்றான் பையன்.
உழவு வேலை செய்கிறது கேவலமா? கட்டட வேலை செய்வது கேவலமா? எல்லாத் தொழிலும் கற்றுக் கொள்ள வேண்டும்! தொழிலில் வேற்றுமை பார்க்கக் கூடாது என்றார் ரெட்டியார்.

அதைச் சொல்லவில்லை நயினா? நாங்கள் எல்லாம் சூத்திரப் பசங்களாம். பிராமணப் பசங்களுக்குத் தனியா சாப்பாடு போடுறாங்க. அவங்களுக்குச் சோமவாரம் சுக்கிரவாரம் கார்த்திகை இப்படி நாள்கள்ளே வடை பாயாசத்தோடு சாப்பாடு, எங்களுக்கெல்லாம் எப்பொழு தும் ஒரே மாதிரி சோறும் சாம்பாரும்தான்.

ஒரு நாள் தண்ணீர் தாகமெடுத்தது. வழியில் இருந்த பானையில் மொண்டு குடித்தேன். அது பிராமணப் பசங்க பானையாம். நான் தொட்டதும் தீட்டாகிப் போச்சாம். அந்த வழியாக வந்த பிரமச்சாரி வாத்தியார்,   பாதித் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போதே என் கன்னத்தில் ஓங்கி அடித்து விட்டார். சூத்திரப்பய உனக்கு என்ன கொழுப்பு என்று பொரிந்து தள்ளினார். தீட்டுன்னா என்ன நயினா? என்று கேட்டான் பையன்.

பிராமணப் பசங்கன்னா ஒசத்தியா நயினா? எங்களோட தோட்ட வேலைக்கெல்லாம் அவங்க வர்றதில்லை. சமையல் வேலையிலே மட்டும் தான் சேர்ந்துக்குவாங்க. அதிலேயும் பாத்திரம் கழுவுறது மட்டும் எங்க வேலை. ஒரு நாள் நானும் சமையல் கத்துக்கட்டுமா என்று கேட்டேன். சூத்திரப் பசங்க சமைச்சா பிராமணப் பசங்க சாப்பிட மாட்டாங்களாம். அந்த சமையல் ஐயர் என்னை முறைத்துப் பார்த்தார். இதெல் லாம் எனக்குப் பிடிக்கலை நயினா.

அடிபட்ட அன்னிக்கே வீட்டுக்கு வந்துவிடத் துடித்தேன். ரயிலுக்குப் பணமில்லே. அதனாலே பொறுத்துக் கொண்டேன்.

கேட்கக் கேட்க ரெட்டியாரின் உதடுகள் துடித்தன. கண்கள் சிவப்பேறின. நெஞ்சு குமுறியது. தான் ஏதோ பாவம் செய்துவிட்டது போன்ற உணர்வு அவரை வாட்டியது. காந்தியடிகளின் அஹிம்சை இயக்கத்திலே பெற்ற பயிற்சியைக் கொண்டு அவர் தம் மனத்தை அடக்கிக் கொண்டார்.

இரவு முழுவதும் தூக்கமில்லை.

மறுநாள் காலையில் மகனை அழைத்தார்.

நீ ஈரோட்டுக்குப் போ. பள்ளிக் கூடத்தில் நடந்த அட்டூழியங்களை ராமசாமி நாயக்கர் நயினாவிடம் செப்பு என்று அனுப்பி வைத்தார்.

புதிதாக ஒரு சிறுவன் தன்னைப் பார்க்க வந்திருப்பதைக் கண்டு, பெரியார், அவனை நீ யார்? என்ன வேண்டும்? என்று கேட்டார்.

நான் ஒமாந்தூர் ரெட்டியாரின் கொடுக்கு என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் பையன்.

என்ன செய்தி? என்று கேட்டார் பெரியார்.

முதல் நாள் தன் தந்தையாரிடம் சொன்ன செய்திகளையெல்லாம் பையன் ஆதியோடந்தமாக மிகத் தெளிவாக விளக்கிச் சொன்னான்.

தனித்தனிச் சாப்பாடு, - தனித்தனி தண்ணீர்ப் பானை - சாதி வேற்றுமை - உயர்வு தாழ்வு - பெரியாருக்குச் சின்னம் பொங்கியது.
அந்தப் பார்ப்பனரை மிக உயர்ந்தவ ரென்று நம்பினோமே, நல்ல தேசபக்தர் என்று மதிப்புக் கொடுத்தோமே தமிழர்கள் பணத்தை யள்ளி யள்ளிக் கொடுத்தோமே!

இதைச் சும்மாவிடக் கூடாது என்று கொதித்துப் பேசினார் பெரியார்.
ஓமாந்தூரார் செல்வாக்குப் பெற்ற தலைவர். அவர் இப்பிரச்சினையை உடனடியாக காங்கிரஸ் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
மற்ற தமிழ்ப் பிள்ளைகளின் பெற்றோர் இது பற்றி அறிந்தும் பேசாமல் இருந்துவிட்டனர். ஒவ்வொருவராக விசாரிக்கப்பட்ட போது, அவர்களும் மனம் நொந்து குருகுலத்தில் நடந்த கொடுமைகளை எடுத்துக் கூறினர்.
அவரச் செயற்குழுக் கூட்டம் ஒன்று கூடுமாறு அறிக்கை விட்டார், ஈரோட்டுப் பெரியார்.

--------------------------(குருகுலப் போராட்டம் நாரா. நாச்சியப்பன் பக்கம் 40-_45).


உண்மைகள் இவ்வாறு இருக்க தினமணி ஆசிரியர் ஏதோ ஒரு சின்னஞ்சிறு சமாச்சாரம் அதனைப் பெரிது படுத்தி விட்டார்கள் என்று எழுதுவது அறிவு நாணயம்தானா?

எது சின்ன விஷயம்? பெரிய விஷயம்? என்பது அவரவர்களின் மனப்பான்மையைப் பொறுத்தது.

ஒரு பெண்ணைக் கெடுத்தவன்கூட சில நிமிடச் சமாச்சாரம்; - இதனைப் பெரிதுபடுத்தலாமா என்று கூடக் கேட்கலாம் - அப்படித் தானிருக்கிறது வைத்திய நாதய்யர்வாளின் சமாதானம்!

அது சின்ன சமாச்சாரம் என்றால் காந்தியார் வரைக்கும் சென்று இருக்குமா?

டாக்டர் வரதராசலு நாயுடும், திரு.வி.க.வும், தந்தை பெரியார் போன்ற பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புக்காரர்கள் என்று கதை கட்டிவிட முடியுமா?

1925 சனவரி 17ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு இந்தப் பிரச் சினையை முன்வைத்துத் தீப்பற்றி எரிய வில்லையா?

ஆரியர்களின் வேத கால கலாச் சாரம்தான் நம்முடைய கலாச்சாரமா? அதற்கு முந்தைய திராவிடக் கலாச்சாரத் தில் ஜாதிப் பிரிவினைக்கே இடம் இல் லையே! அந்த உயர்ந்த கலாச்சாரத்தைத் தான் நாம் பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழுவில் குமுறி எழுந்தவர் தந்தை பெரியார் அல்லர் - டாக்டர் வரதராசலு நாயுடு.

ஜாதிப் பாகுபாட்டுக்கும் உயர்வு தாழ்வுக்கும் வேதமும் சாஸ்திரமும் விதி வகுத்திருந்தால் அந்த வேதத்தையும், சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்! என்று தீப்பிழம்பாகக் கிளர்ந்தெழுந்தார் தந்தை பெரியார்.

சின்ன விஷயம் என்று திருவாளர் சிணுங்குகிறாரே - ஏதோ நடந்து விட்டது; இனிமேல் குருகுலத்தில் இவ்வாறு நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லக் கூடிய பெரிய உள்ளம் வ.வே.சு. அய்யருக்கு இல்லாமல் போனது ஏன்?

சின்ன விஷயமாக அதனை அவர் எடுத்துக் கொண்டிருந்தால் அவ்வாறுதான் நடந்து கொண்டிருப்பார் அவாளுக்கு வருணாசிரமக் காப்பு தானே பெரிய விஷயம்? ஜாதித் துவேஷம் தானே குருதி ஓட்டம்? அதனால் தான் பிடிவாதமாக இருந்தார். அந்தப் பூணூல் கோத்திரத் தடித் தனம்தான் அவரை அம்பலப்படுத்தியது. இந்தக் குற்றம் செய்த மெத்தப் படித்த (இலண்டன் வரை சென்று படித்தவர்) மேதாவியிடம் குடி கொண்டிருந்த சின்னப் புத்திக்கு வக்காலத்துப் போட்டு அந்தப் பெருங் குற்றத்தைச் செய்த - அதிகாரத்தைத் துஷ் பிரசாரம் செய்த வ.வே.சு. அய்யரைத் தூக்கி நிலை நிறுத்தப் பார்க்கும் இந்தப் பார்ப்பனர்களை அடையாளம் காண வேண்டாமா? 

2013லும் இந்த நிலைப்பாட்டைக் கொண்டுதான் இருக்கிறார்கள் -அவர் ஏடு நடத்தும் அளவுக்கு விளம்பரம் பெற்ற வர்களின் புத்தி வேத காலத்திலிருந்து வெளியே வர மறுக்கிறது என்பதைத் தமி ழர்கள் நினைவு கொள்ள வேண்டாமா?

தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாக உரை நடை இலக்கியத்திற்கும் ஒப்பிலக்கணத் திற்கும் வ.வே.சு. அய்யரின் பங்கு மகத் தானது என்று மார்புப் புடைக்க எழுதி யுள்ளார். திருவாளர் வைத்தி அய்யர்.

வ.வே.சு. அய்யருடைய் தமிழ் இலக்கிய தொண்டுக்கு எடுத்துக்காட்டு ஒன்றே ஒன்று போதும். அது இதோ:

வ.வே.சு அய்யர் The Kural or the Maxims of Thiruvalluvar (1916) என்று ஆங்கிலத்தில் திருக்குறளை மொழி பெயர்த்திருக்கிறார். அதன் முன்னுரையில்,
.. Tradition declares that he was the child of a Brahmin father named Bhaghavan and a Pariah Mother Adi who had been brought up by another Brahmin and given in marriage to Bhaghavan. Six other children are named as the issue of this union, all of whom have dabbled in poetry.
திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனராவார். இவர் தாயார் ஆதி என்கிற பறைச்சி. ஆதியை இன் னொரு பார்ப்பனர் வளர்த்துவந்து பகவ னுக்கு மணம் முடித்து வைத்தார். ஆதி பகவன் கூட்டுறவால் திருவள்ளுவரன்றி ஆறு குழந்தைகள் பிறந்தனர். அக்குழந்தைகளுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டன என்று மரபுவழிச் செய்தியாகச் சொல்லப்படுவதோடன்றி இதனைக் கவிதையாகவும் எழுதி வைத்துள்ளனர் என்று எழுதியுள்ளார். இக்கருத்தைக் கபிலனே சொல்லுவதாக ஒரு பாடல் அமைந்து இருக்கிறது. அதில் கூட அந்தணர் வளர்க்க யானும் வளர்ந் தேன் என்று கடைசி வரி முடிக்கப்பட் டுள்ளது. மேலும் அதே முன்னுரையில்,

“Thiruvalluvar does not treat of the fourth objective separately and Hindus say that he has submitted himself to the orthodox rule that none but a Brahmin should be a teacher of Spritual truth to mankind”

என்று வ.வே.சு. அய்யர் கூறுகிறார்.

அதாவது, திருவள்ளுவர் நான்காவ தான வீடுப் பேற்றைப் பற்றித் தனியாக ஏதும் கூறவில்லை. மனித குலத்திற்கு ஆன்மிக உண்மைகளைப் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் போதிக்கக் கூடாது என்ற பழங்கால வைதிக (வேத) விதி களுக்குத் திருவள்ளுவர் தம்மை உட் படுத்திக் கொண்டார் என்று இந்துக்கள் கூறுகிறார்கள் என்று எழுதினார் வ.வே.சு. அய்யர்.
இக்கதைகளுக்கெல்லாம் காரணம் அறிவு என்பது ஒரு சாதிக்குரியது; வரு ணத்திற்குரியது என்பதை அடையாளப் படுத்துவது ஆகும் என்பதுதான்! 

இதனை தந்தை பெரியார் அவருக்கே உரிய பாணியில் திருக்குறளும் பெரியாரும் என்ற நூலில் பக்கம் 14-இல் குறிப்பிட் டுள்ளார். தந்தை பெரியார் கூறுகிறார்:

நம்மவன் ஒருவன் புத்திசாலியாக இருந்தால்கூட அதைப் பற்றி அந்தக் கூட்டத்தில் பேச சந்தர்ப்பம் எழுந்தால் அவர்கள் என்ன கூறிக் கொள்வார்கள் தெரியுமா?

அவன் ஒரு மகா புத்திசாலி என்ப தென்னவோ உண்மைதான். ஆனால், அவனுடைய பிறவியில்தான் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. பிராமண விந்து சம்பந்தம் எதாவது இருக்க வேண்டும்; இன்றேல் இவ்வளவு புத்திசாலியாக இருக்க முடியாது என்றுதான் பேசிக் கொள்வார்கள்
இப்படிப் பெரியார் கூறுவதற்கு என்ன காரணம்? அறிவு ஒரு வருணத்தார்க் குரியது என்ற கருத்தினை உறுதிப்படுத்து வதற்காக எழுந்ததுதான் வருணாசிரமம் என்பதைச் சுட்டிக்காட்டத்தான் பெரியார் அவ்வாறு கூறினார்.

திருக்குறளை எழுதியவரின் பிறப்பை இவ்வாறு உயர் வருண நிலைக்கு ஏற்றி வைத்ததற்குப் பிறகு திருக்குறளின் கருத் துகளுக்குள் நுழைந்தனர். 
அக்கருத்துகள் நால்வருண சநாதன தர்மத்தைக் கட்டிக் காக்கவே எழுதப்பட்டன. இத்தகைய கருத்துகளை, உரைகளைப் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என இரு தரப்பு அறிவாளர்களும் எழுதினர்.

இப்போது டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.

வேத வழக்கொடு இயைந்த பல செய் திகள் திருக்குறளில் உள்ளன. நித்திய நைமித்திக பூசைகள், நான்கு ஆச்சிரமம், ஐவகைக் கடன்கள், அந்தணர் முதலி யோர் ஒழுக்கம், வேதம் முதலியவற்றைப் பற்றிய செய்திகள் பல வகைகளில் இணைக்கப்பட்டு இருக்கின்றன.

திருமால் உலகளந்த செய்தியும் தாமரைக்கண்ணான் ஆதலும் உணர்த்தப்படுகின்றன. திருமகளும் அவள் தவ்வையும் இணைத்துச் சிலவிடங்களில் கூறப்படுகின்றன. தாமரையாள் என்று ஓர் இடத்தில் திரு மகளைக் குறிக்கின்றார். பிரமதேவனை, உலகியற்றியான் என்கிறார். இந்திரனைப் பற்றி இரண்டு இடங்களிற் கூறுகின்றார்.

இம்மை, மறுமை, வீடு என்னும் இம் மூன்றும் திருவள்ளுவருக்கு உடம்பாடு. அவர் கருத்தைப் புத்தேளுலகம் என்றும், மேலுலகம் என்றும், வானமென்றும் கூறுவர்; தேவரை அவியுணவின் ஆன்றோரென்பர்

(திருக்குறளும், திருவள்ளுவரும் என்ற தலைப்பில் 4.6.1936-இல் டாக்டர் உ.வே.சா. பச்சையப்பன் கல்லூரியில் பேசியது).
(திருக்குறளும் திராவிடர் இயக்கமும் பக்.45_-47- க. திருநாவுக்கரசு)

உ.வே.சா.விலிருந்து வ.வே.சு. அய்யர், சங்கராச்சாரியார்கள் உட்பட பார்ப்பனர் தமிழையும், உலக மறை தந்த திருவள் ளுவரை உட்படவும் எந்த கண் கொண்டு பார்க்கிறார்கள் பார்ப்பனர்கள் என்பதற்கு இன்னுமா எடுத்துக் காட்டுத் தேவை?

தினமணி ஆசிரியர் வ.வே.சு. அய்ய ரைத் தூக்கிச் சுமப்பதன் இரகசியம் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே! சும்மா ஆடுமா வைத்திகளின் பூணூல் கள்!

பார்ப்பனர்களைப் பரந்த மனப் பான்மையில் பார்த்து வழுக்கி விழும் தமிழர்கள் ஈரோட்டுக் கண்ணாடி போட் டுப் பார்த்தால் தான் உண்மையை உணர முடியும்.
 ******************************************************************************

திருக்குறள் பற்றி காஞ்சி ஜெயேந்திரர்

2.4.1982 அன்று ஈரோட்டில் திருக்குறள் முனுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

திருக்குறளில் உள்ள அறத்துப்பாலை, அதிலும் முதலில் பத்து குறட்பாக்களை மட்டும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து விட்டு, பொருட்பால் காமத்துப் பாலைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று காஞ்சி மடத் தலைவரான தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி துறவியார் திருக்குறளைப் பற்றித் திரிபான முறையில் தம் கருத்தைக் கூறியிருப்பது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது. காஞ்சி மடத்தார் அடுத்தடுத்து திருக்குறளைப்பற்றிப் புறங்கூறி வருவதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், அக்கருத்துக்களை திரும்பப் பெற வேண்டுமென காஞ்சி மடத்தை ஈரோடு திருக்குறள் பேரவை கேட்டுக் கொள்கிறது _ என்பதுதான் அத்தீர்மானம்.
ஆண்டாளின் திருப்பாவையில் குறிப்பிடப்படும் தீக்குறளைச் சென் றோதோம் என்ற பாடலுக்குத் தீய திருக்குறளை ஓத மாட்டோம் என்று பொருள் சொன்னவர்தானே இவரின் குருநாதர் காஞ்சி மூத்த சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி? குறளை - என்றால் கோள் சொல்லுதல் என்ற பொருளில் கூறப்பட்டதை திரித்துத் திருக்குறளை இழிவுப்படுத் தியதைக் கவனிக்கத் தவறக் கூடாது. இவர்கள்தான் ஜெகத் குருக்களாம்
 *****************************************************************************
 --------------- மின்சாரம்  அவர்கள் 28-9-2013 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

28.9.13

பெரியார் கடவுள் கற்பனை என்றது உண்மையா? இல்லையா?


கடவுள் கல்லு என்னோடு வா - கோயிலுக்குள் சென்று தட்டிக் காட்டுகிறேன் என்று பார்ப்பனர் ஒருவரின் கேள்விக்குத் தந்தை பெரியார் அளித்த பதில், புகழ் பெற்ற ஒன்று.
இப்பொழுது ஒரு தகவலை தினமணி - வெள்ளி மணி (13.9.2013) படக்காட்சிகளுடன் சாங்கோ பாங்கமாக வெளியிட் டுள்ளது.
சிவாலயங்களின் மண்டபத் தூண்களில் கலை புகழுக்காகப் பெரிய அளவில் தெய்வத் திருவுருவங்கள் அமைக்கப் பட்டன. காலப் போக்கில் இந்தத் திருவுருவங்கள் தனித் தன்மை பெற்று வழிபாட்டுக்கு உரியதாகி விட்டன. இவற்றில் சிலவற்றைக் காணலாம்.
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக் கம்பத்தடி மண்டபத் தூணில் நெடும் சிலைகளாக அமைந்துள்ள அகோர வீரபத் திரர், அகோர காளி, அக்னி வீரபத்திரர், அக்னி காளி ஆகிய உருவங்கள் இப்பொழுது வழி பாட்டுக்குரியதாக உள்ளன. மஞ்சள் வெண்ணெய் உருண் டைகளை இவற்றின்மீது வீசி பிரார்த்தனைகளை நிறைவேற் றுகின்றனர்.
தொண்டை மண்டலத்தில் ஆலயத் தூண்களில் விளங்கும் சரபேசுவரருக்கு சிறப்பு வழி பாடுகள் செய்து பிரார்த்தனைகளைச் செலுத்துகின்றனர். கோயம்பேடு குசலவிபுரீசுவரர் ஆலயத்தின் முன்னேயுள்ள 16 கால் மண்டபத்தில் அமைந் துள்ள சரபேசுவரர் தனிச் சிறப்புடன் வழிபடப்படுகின்றார். ஞாயிற்றுக் கிழமைகளிலும் பிரதோஷ வேளையிலும் ஏராள மான மக்கள் இங்கு வழிபடு கின்றனர்.
சிதம்பரம் நடராசர் ஆலயத் தில் தூண்களில் எழுந்தருளி யுள்ள சோமாஸ்கந்தர், தண்ட பாணி ஆகிய திருமேனி களுக்கு சிறப்பு அபிஷேகங் களும், வழிபாடுகளும் நடத் தப்படுகின்றன  இதுபோல திருவாரூர், திருவண்ணாமலை, திருப்புகலூர், ஆவுடையார் கோயில் முதலிய கோயில்களில் தூண்களில் உள்ளவைகளும் வழிபாடு செய்யப்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளது தினமணி வெள்ளிமணி
இதற்குப் பெரிய விளக் கங்கள் தேவைப்படாது. சிற்பி களால் வடிக்கப்பட்ட வெறும் சிலைகள்தான் இவை என் பதைத் தெரிந்து கொண்டால் அதற்குமேல் சக்தி எங்கே இருந்து குதித்தது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
கல்கியில் தொ.மு. பாஸ் கரத் தொண்டைமான் எழுதி இருந்ததுதான் நினைவிற்கு வருகிறது.
இறைவனுக்குப் பல்வேறு உருவங்களையும் அந்தந்த உருவங்களுக்கேற்ற முறையில் கதைகளையும் கற்பனையில் பின்னியிருக்கிறார்கள் - அன்றைய தமிழர்கள். ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்று மில்லாத இறைவன், இப்படித் தான் ஆயிரம் திருநாமங் களுடனும் இன்னும் எண்ணற்ற உருவங்களுடனும் உருவாகி இருக்கிறான் - மனிதன் கற் பனையிலே. கற்பனை செய் ததையெல்லாம் கல்லிலும் வடித்தெடுத்திருக்கிறார்கள்.
கல்லிலும், செம்பிலும் வடித் தெடுத்திருக்கிறார்கள் - நம் நாட்டுச் சிற்பிகள்.
அப்படி அவர்கள் உருவாக்கிய சிற்ப வடிவங்களே, இன்று நமது தமிழ்நாட்டுக் கோயில்களில் எல்லாம் நிறைந்திருக்கின்றன என்கிறார் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்.

 இப்பொழுது சொல்லுங்கள் பெரியார் கடவுள் கற்பனை என்றது உண்மையா? இல்லையா?
--------------------- மயிலாடன்  அவர்கள் “விடுதலை” 27-9-2013 இல் எழுதிய கட்டுரை

27.9.13

பார்ப்பனர்கள் மோடியைப் பாதுகாக்கும் பாங்கு



கேள்வி: ஹிந்து, முஸ்லீம் கலவரத்திற்கும், அதில் முஸ்லீம்கள் அதிகம் கொல்லப்பட்டதற்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் நரேந்திர மோடி என்பதால்தானே, அமெரிக்காகூட, அவருக்கு விஸா வழங்க மறுத்தது. அப்படிப்பட்டவரை இந்தியப் பிரதமராக்கினால் இந்த நாடு நிச்சயம் நாசமாகி விடும் என்பது தெரிந்தும், எப்படி அவரை ஆதரிக்கிறீர்கள்? உங்களுக்கு மனசாட்சி இல்லையா?

பதில்: பிரிவினை நடந்தபோது, நிகழ்ந்த மதக் கலவரங்களைத் தவிர்த்து, 1950-லிருந்து 1995 வரை 1194 மதக் கலவரங்கள் நிகழ்ந்தன. இவற்றில் 72 சதவிகிதக் கலவரங்கள் நேரு, இந்திரா, ராஜீவ்காந்தி ஆட்சிகளில் நடந்தன என்று ஒரு கணக்கு (அமெரிக்கப் பல்கலைக் கழகங்களைச் சார்ந்த இருவர் நடத்திய ஆராய்ச்சி) கூறுகிறது. குஜராத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், 1950-லிருந்து 1995 வரை 245 மதக் கலவரங்கள். அவற்றில் 1969-ல் நடந்த கலவரம் 6 மாதங்கள் நடந்தது. 15,000 பேர் வரை பலி என்றும் அதே ஆராய்ச்சி கூறுகிறது. இப்படிப் பல கலவரங்கள்; இவற்றில் பல்லாயிரக் கணக்கானோர் பலி. எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில். அந்தப் பிரதமர்களுக்கோ, முதல்வர்களுக்கோ அமெரிக்க விஸா மறுப்பு கிடையாது.
2002 குஜராத் கலவரத்தில் உயிர் இழந்தது 1048 பேர் என்பது மத்திய அரசின் கணக்கு. விவரங்கள் இப்படி இருக்கையில் நரேந்திர மோடியை கொலை களுக்குக் காரணகர்த்தாவாகப் பார்ப்பது என்றால், காங்கிரஸ் கட்சியையே கொலைகாரக் கட்சியாகப் பார்க்க வேண்டியிருக்கும். அமெரிக்கா விஸா மறுப்பு, ஒரு நீதிமன்றத் தீர்ப்பு அல்ல. அதை வைத்து மோடியை நிராகரிப்பதில், எந்த அர்த்தமும் கிடையாது.

               ------------------------------------- (துக்ளக் 2.10.2013 பக்கம் 3)


மோடி ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினர் இவ்வளவுப் பேர் படுகொலை செய்யப்பட்டனரே என்று கேள்வி கேட்டால் அதற்குத் திருவாளர் சோ ராமசாமி அளிக்கும் பதில் வினோதமானது. ஒருதவறு  இன்னொரு தவறுக்கு நியாயம் ஆகாது, என்பது அடிப்படை நியாயவாதமாகும். மோடி ஆட்சியில் நடைபெற்ற படுகொலைகளும், மற்ற மத மோதல்களும் ஒன்றல்ல. 

மோடி முதல் அமைச்சராக இருந்த நிலையில், அவரின் நேரடி ஆணையின் கீழ் சிறுபான்மையினருக்கு எதிரான படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன என்ப தற்கு, ஏராள சான்றுகள் நின்று, பேசிக் கொண்டி ருக்கின்றன.

அன்றைய பிரதமரான வாஜ்பேயியே எந்த முகத்துடன் வெளிநாடு செல்லுவேன்? என்று தலையில் அடித்துக் கொண்டாரே!

தெகல்கா சாட்சியங்களோடு தகவல்களைத் திரட்டி, முக்காடுகளைக் கிழித்து மோடிக்குள் ஒளிந்து கொண்டிருந்த, மோசமான மூர்க்கத்தனத்தை வெளி வீதியில் விட்டெறிந்து விட்டது. பி.ஜே.பி. சட்டப் பேரவை உறுப்பினர்களே உண்மையை வெளிப்படுத்தினர். மூன்று நாட்கள் ஒதுக்கித் தரப்படும் அதற்குள் வேலையை முடியுங்கள் - காவல்துறை தலையிடாது என்று முதல் அமைச்சர் மோடி சொன்னார் என்பதும் வெளியாகி விட்டது.

கோத்ரா நிகழ்வைத் தொடர்ந்து முதல் அமைச்சர் மோடி கூட்டிய அவசரக் கூட்டத்தில், முதல் அமைச்சர் பிறப்பித்த ஆணைகளுக்குக் காவல்துறையில் மிகப் பெரிய பொறுப்பில் இருந்த அதிகாரிகளே சாட்சியம். அப்படி உண்மையைச் சொன்ன அதிகாரிகள் பழி வாங்கப்பட்டனர்!

பொடா சட்டத்தின் கீழ் 287 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றால் அதில் 286 பேர் முஸ்லீம்கள், ஒருவர் சீக்கியர், இந்து ஒருவரும் இல்லை. இவ்வளவுக்கும் சிறுபான்மையினர்க்கு எதிராகத்தான் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் பட்டன. பாதிப்புக்கு ஆளானவர்களே குற்றவாளிகள் என்பது மோடி ஆட்சியினரின் முதன்மையான நியாயம்!

குஜராத் மாநிலத்தில் வழக்கு நடந்தால் நியாயம் கிடைக்காது என்று கூறி குஜராத் மாநிலத்துக்கு வெளியே வழக்கை நடத்த உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட நிலை. ஒரு கட்டத்தில் உச்சநீதிமன்றம் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறவில்லையா? அமெரிக்க விசா மறுப்பு நீதிமன்றத் தீர்ப்பு அல்ல - என்று வக்காலத்து வாங்கும் திருவாளர் சோ இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதியின் கணிப்புக்கு வைத் திருக்கும் விதண்டாவாதம் என்ன?

குஜராத் கலவரத்தின்போது, பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 4252. பிறகு 2000-க்கும் மேற்பட்ட வழக்குகளை, மோடி அரசு விலக்கிக் கொண்டு விட்டது. மறுபடியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லையா?

அடுக்கடுக்காக எடுத்துக்கூற ஆயிரம் ஆயிரம் ஆதாரங்கள் உள்ளன.
இறுதியாக ஒன்று. சோ எடுத்துக்காட்டியுள்ள கலவரங்கள் - மரணங்கள் ஒரு முதலமைச்சரால் தூண்டி விட்டு நடத்தப்பட்டதல்ல. சோ தனக்கே உரித்தான தன்மையில் மொட்டை தலைக்கும் விளக்கெண்ணெய் தடவிய முழங்காலுக்கும் முடிச்சுப் போடப் பார்க்கிறார்.

இந்திய பார்ப்பனப் பம்மாத்துத் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது எடுபடவே எடுபடாது!
                         ---------------------------"விடுதலை” தலையங்கம் 27-9-2013

தினமலரில் என் பெயர் வராது,என்னுடைய படமும் வராது-கி.வீரமணி

வணிக நோக்கில் பத்திரிகைகள் முதலாளிகளின் குரலாக இருக்கின்றன பத்திரிகையாளர்கள் பாராட்டு விழாவில் விடுதலை ஆசிரியர் கருத்துரை
சென்னை, செப். 26- இன்றைய தினம் பத்திரி கையில் பணிபுரிவோர் முதலாளிகளின் குரலை ஒலிக்கக் கூடிய அளவுக்கு பத்திரிகைத் துறை வணிக மயமாகி விட்டது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (ஆருது) பொன் விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்ச்சி 22.9.2013 அன்று காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சங்க கட்டடத் தில் நடை பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந் தினராக பங்கேற்று பேசிய விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றியதாவது:-

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலே தமிழில் இதழியல் தொடங்கி அதிலே நல்ல பயிற்சி யாளர்களை, இளைஞர்களை உருவாக்கவேண்டும் என்பதற்கு முன்னோடியாக, இதழியலிலே மிகச் சிறப்பாகப் பணியாற்றக்கூடிய, பாராட்டத்தகுந்த பத்திரிகையாளர் - அவர்களுடைய கருத்துகள், எழுத்துகளிலேயே கூட எங்களைப் போன்றவர்கள் பற்பல நேரங்களில் மாறுபட்டிருக்கலாம்; அது வேறு செய்தி. ஆனால், நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள்; பத்திரிகைக் குடும் பத்தைச் சார்ந்தவர்கள்.

நட்டத்தில் பத்திரிகை நடத்துபவர்கள் நாங்கள்

என்னையும், அருமைத் தோழர் அய்யா ஆர்.என். கே. அவர்களையும் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம் என்று அழைப்பிதழில் போட்டிருக்கிறார்கள். இரண்டு இயக்கங்களுக்கும் பத்திரிகைகள் உண்டு. அவருக்கு ஜனசக்தி, எனக்கு விடுதலை. இரண்டு பத்திரிகைகளும் லாபத்தில் நடக்காமல், நஷ்டத்தில் நடைபெறக்கூடிய பத்திரிகைகள்தான். இந்த விழா விற்கு வந்திருக்கக்கூடிய அருமைத் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களே, இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய சென்னை பத்திரி கையாளர் சங்கத்தின் தலைவர் அருமைத் தோழர் இரா.மோகன் அவர்களே, வரவேற்புரையாற்றிய பொருளாளர் ரகுநாதன் அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கின்ற அருமைத் தோழர் நூருல்லா அவர்களே, வாழ்த்துரை வழங்க இருக்கக் கூடிய பாபு ஜெயக்குமார் அவர்களே,

நாத்திகம் பாலு

இந்த விழாவில் பெருமைப்படுத்தப்படவிருக் கின்ற செய்தியாளர்களாக, பல ஆண்டுகாலம் மூத்த பத்திரிகையாளர்களாக மற்றவர்களுக்கு வழிகாட்டி யாக இருக்கக்கூடியவர்களாக  நாத்திகம் பாலு என்று அழைக்கப்பட்ட, விடுதலையின்மீது உரிமையுள்ள ஒரு செய்தியாளராக என்றென்றைக்கும் அவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பார்கள். இன்றைக்கும் விடுதலையின் சிறப்புச் செய்தியாளராக என்றைக் கும் தொடர்ந்துகொண்டிருக்கக் கூடியவர்.
அதுபோலவே, நண்பர் தினமணி வி.என்.சாமி என்று அழைக்கப்பட்டாலும், நான் சொல்கின்ற தகவல் இங்கே இருக்கின்ற ஒரு சிலருக்குத் தெரியும்; பல பேருக்குத் தெரியாது. விடுதலை நாளிதழில் இருந்துதான் அவர் தினமணிக்கே சென்றார். பல பேருக்கு நாற்றங்கால் விடுதலை நாளிதழ்தான். அய்யா பெரியாரின் உரையினை குறிப்பெடுத்து, விடுதலையில் வெளியிட்டு, அய்யா அவர்களே பாராட்டக் கூடிய அளவிலே திறமை படைத்தவர் தோழர் சாமி அவர்கள். அன்றைக்குப் பார்த்த சாமி போலவே, இன்றைக்கும் இருக்கிறார். மற்ற சாமிகளை நாங்கள் பாராட்டுகிறோமோ இல்லையோ, இந்த சாமியை மறக்கவே முடியாது. அதுதான் மிக முக்கிய மானது. அந்த வகையிலே அருமைத் தோழர் வி.என். சாமி அவர்களே,

அதுபோலவே, தினமலர் விஸ்வநாதன், அழைப் பிதழில் தினமலர் விஸ்வநாதனைப் பாராட்டுகிறார் கள் என்று போட்டிருப்பதைப் பார்த்து, என்னிடம் ஒரு நண்பர் கேட்டார், என்னங்க, தினமலர் பத் திரிகையில் பணியாற்றியவரைப் பாராட்டப் போகிறார்களா? என்று.

தினமலரில் என் பெயர் வராது

தினமலரில் என்னுடைய பெயர் வராது; என்னு டைய படமும் வராது, அது வேறு செய்தி. வரக் கூடாதவர்கள் பட்டியல் என்று ஆசிரியர் பகுதியில் வைத்திருப்பார்கள், அதில் என்னுடைய பெயரும் அடக்கம். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. பத்திரிகையாளர் சங்கத்தில் என்னை அழைத்தார்கள்; யாரையும் பாராட்டுவதற்கு எங்களுக்கு வேறுபாடு கிடையாது. கருத்துகள்தான் எங்களுக்கு எதிரியே தவிர, நபர்கள் எதிரிகள் கிடையாது. அவர்கள் பத் திரிகைகளில் பணியாற்று கின்ற பத்திரிகையாளர் களே தவிர, முதலாளிகள் கிடையாது.

முதலாளிகள் பல விஷயங்களை நிர்ணயிக் கிறார்கள்; செய்தியாளர்கள் அவர்களுடைய கட மையைச் செய்துவிடுகிறார்கள்; பல நேரங்களில் அவர்கள் சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள்.

கட்சி, அமைப்பு, தலைமை இவைகளிலெல்லாம் பார்த்தீர்களேயானால், தொண்டர்கள் சில நேரங் களில் பலிகடாக்களாக ஆக்கப்படுவார்கள். தலை வர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பார்கள். அது போல், பத்திரிகை உலகத்திலும் உண்டு. ஆகவே, பாராட்டுவதற்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்று அந்த நண்பருக்குக் கூறினேன்.

அதேபோல், தினத்தந்தி ராமஜெயம் அவர்கள், தினத்தந்தி எங்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரர். அய்யா ஆதித்தனார் காலத்திலிருந்தே, தந்தை பெரி யார் அவர்கள் காலத்திலிருந்தே உறவு இருக்கிறது. என்றைக்கும் மிகப்பெரிய தோன்றாத் துணையாக இருக்கக் கூடியவர்கள். அந்த வகையில் இவர்கள் எல்லோரையும் பாராட் டுவது சிறப்பானதாகும்.

அதைவிட பல நண்பர்கள், மூத்த பத்திரிகை யாளர்கள் பாபு ஜெயக்குமார், பகவான் சிங், மணி போன்றவர்கள் எல்லோரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் எல்லோரும் எங்களைத் தாக்கி எழுதியிருப்பார்கள், விமர்சித்திருப் பார்கள். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஏனென்றால், கருத்துச் சுதந்திரம் உண்டு.

பெரியார் கூறும் கருத்து

பெரியார் அவர்கள் ஒரு கருத்தினை சொல் வார்கள்; என்னுடைய தலைவர் அவர்கள், வழி காட்டியாக இருக்கக் கூடிய அறிவாசான் அவர்கள்.
என்னுடைய கருத்தை மறுக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. அதனால், என் கருத்தை வலியுறுத்திச் சொல்ல எனக்கு உரிமையுண்டு என்று.  அதைத்தான் நாங்கள் கடைபிடிக்கின்ற சூழ்நிலை யாகும்.

இங்கே பழைய கட்டடத்தில் நடைபெறுகின்ற சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் பொன் விழாவில், சந்திக்க வாய்ப்பில்லாத பலரை இங்கே சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அவர்களுக்கு எல்லோருக்கும், வணக்கத்தினையும், வாழ்த்துகளை யும் தெரிவிக்கின்ற இந்த நேரத்தில், இதுபோன்ற நிகழ்ச்சிகள், மூத்த பத்திரிகையாளர்களைச் சந்திக் கின்ற வாய்ப்புகள் என்பது அடிக்கடி நடைபெற வேண்டும்.

தமிழ்நாட்டில் மாறுபட்ட கருத்து என்று சொன் னால், அவர்களை எதிரிகள்போல் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள எவ்வளவுக்கெவ்வளவு பக்குவம் இருக் கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு ஜனநாயகத்தைப் புரிந்தவர்கள் என்று அர்த்தம். மந்தைத்தனம் என்பது ஆடு மாடுகளுக்குத்தான். ஆனால், மனிதர்களுக்கு மந்தைத்தனம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு பக்கம் சாய்ந்தால், அப்படியே அந்தப் பக்கமே சாய வேண்டிய அவசியம் இல்லை.

பத்திரிகை சுதந்திரம்

சில நேரங்களில், பத்திரிகை சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் என்று நாம் பேசுகின்றோம். பத்திரிகை சுதந்திரம் படுகின்ற பாடு என்னவென்பது மிகத் தெளிவாகத் தெரியும். அதைப்பற்றி விரிவாகப் பேசி, உங்களையெல்லாம் சங்கடத்திற்கு ஆளாக்க விரும்ப வில்லை. அதைப்பற்றி பேசுவதற்கு எங்களுக்குப் பல மேடைகள் இருக்கின்றன.

பொதுவாக, ஜனநாயகத்தில் நாம் பெருமைப்படக் கூடிய ஒரு செய்தி என்னவென்றால், ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகைகள். அந்த நாலாவது தூண் அவ்வளவு வேகமாக செயல்பட முடிய வில்லை; இது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய சூழல். நம் நாட்டில் இன்னும் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் பார்த்தீர்களேயானால், ஆழமாக வும், தெளிவாகவும், துணிந்தும் எழுதக்கூடியவர்கள்; ஆழமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். ஆற்றல் உள்ள வர்கள்; ஆற்றலில் குறைந்தவர்கள் நம்மவர்களில்  யாரும் கிடையாது. காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரையிலும் எல்லாரும் இங்கிருந்து சென்றவர்கள் தான்.
ஆனால், ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், நாளேடுகளாக இருந்தாலும், வார ஏடுகளாக இருந் தாலும், மாத ஏடுகளாக இருந்தாலும் அதில் பணி யாற்றக்கூடிய பத்திரிகையாளர்கள் தமது கருத்து களை சுதந்திரமாகப் பதிவு செய்வதற்கு வாய்ப்பே கிடையாது.

தொண்டா? தொழிலா?

ஏனென்றால், பத்திரிகை தொண்டா? தொழிலா? என்று கேட்டால், தொண்டில்தான் பத்திரிகைகளு டைய கருத்து ஆரம்பமாகிறது. ஆனால், இன்றைக்கு அது தொழிலாக மாறிவிட்ட காலகட்டத்தில், சுதந்திரத்தை அவர்கள் வலியுறுத்த முடியாது.

நம்முடைய எழுத்தாளர்களாக இருக்கின்ற பெருமக்கள் இருக்கின்றார்கள் பாருங்கள், அவர்கள் எல்லாம் மற்றவர்களிடம் பணியாற்றுகின்ற நேரத் தில், அவர்களுக்கு எந்தளவுக்கு சுதந்திரம் உண்டு என்பதைத் தெளிவாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

எங்களைப் போன்றவர்களானாலும் சரி, அய்யா நல்லகண்ணு போன்றவர்களானாலும் சரி, நாங்க ளெல்லாம் இயக்கப் பத்திரிகைகளை நடத்து கிறவர்கள். எங்களுக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன. அதனால் லாபம் வராது; நட்டம்தான் வரும். ஆனால், கொள்கைகளைப் பரப்பி இருக் கின்றோம்; அதைப் பொதுமக்களிடம் கொண்டு செல்கிறோம் என்ற ஒரு மனநிறைவு.

வணிக நோக்கில் ஏடுகள்

ஆனால், இப்பொழுது வணிக நோக்கத்தோடு பத்திரிகைகள் நடைபெறுகின்ற நேரத்தில், கார்ப்ப ரேட் குரூப் என்று சொல்லக்கூடிய பன்னாட்டு நிதியங்கள், பன்னாட்டு அமைப்புகளின் கருத்துக் கேற்ப, அவர்களின் மனம் கோணாதபடி இருக்க வேண்டும். விமர்சனங்களே வந்தாலும்கூட, பாம் புக்கும் நோகாமல், பாம்படித்த கோலுக்கும் நோகாமல் விமர்சனங்கள் இருக்கவேண்டும் என்று சொல்வார்கள்.

நம்முடைய செய்தியாளர்களுக்கும், பத்திரிகை யாளர்களுக்கும் இருக்கின்ற சிக்கல் என்னவென்றால், மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்று சொல்வதுபோல, என்னய்யா, நான் அளித்த பேட்டி யில் சொன்னதைவிட்டுவிட்டு மாற்றி போட்டிருக் கிறீர்களே, பிறகு எப்படி இப்பொழுது என்னிடம் பேட்டிக்கு வந்திருக்கிறீர்கள் என்று தலைவர் மிகவும் சீரியசாகக் கேட்பார்.

இல்லீங்க, என்னுடைய முதலாளிதான் போட வேண்டாம் என்று சொன்னார் என்று முதலாளி யையும் காட்டிக்கொடுக்க முடியாது.

அதேநேரத்தில், போடவில்லை என்பதற்குரிய அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நமக்கே புரியும். சில பேர் மவுனமாக ஒரு சிரிப்பை சிரித்து அப்படியே மழுப்பி விடுவார்கள்.

ஆகவேதான், இரண்டு பக்கமும் அடி வாங்கக் கூடிய ஒரு தொழில்தான், பத்திரிகை, பத்திரிகையாள ராக இருக்கக்கூடியவர்களின் நிலை.

தொலைக்காட்சிகள்

இப்பொழுது ஊடகங்கள் என்று சொல்லக்கூடிய தொலைக்காட்சிகள் நிறைய போட்டிக்கு வந்து விட்டன. அதில் உரையாற்றுவதற்கு ஆட்கள் அதிக மில்லை என்பதால், மீண்டும் மீண்டும் அவர்களே வரக்கூடிய நிலை இருக்கிறது; ஒரு பிரச்சினையைப் பற்றி முழுவதும் தெரிந்தவர்களோ, தெரியாதவர் களோ அவர்களை வைத்துதான் தொலைக்காட்சிகள் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றன.

ஆகவே, இந்த வகையில் நெருக்கடியான ஒரு காலகட்டம் இது. ஒரு பக்கத்தில் பார்த்தீர்களே யானால், கருத்துச் சுதந்திரம், உரிமை, அடிப்படை சுதந்திரம் இவை அத்தனையும் இருக்கிறது.

ஆனால், அதேநேரத்தில் இன்னொரு பக்கம் பார்த்தீர்களேயானால், சுதந்திரம் இல்லை என்பது மிகவும் முக்கியமாகச் சொல்லப்படவேண்டும்.
ஒவ்வொரு நாளும் பொதுநல வழக்குகள்; நீதி மன்றங்கள் நாட்டை ஆளுகின்றனவா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டை ஆளு கின்றார்களா? என்பதற்கு சுலபத்தில் பதிலளிக்க முடியாத ஒரு கேள்வி.

நீதி போக்கு!

ஜூடிசியல் ஆக்டிவிசம் என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு. ஏனென்றால், தயிர் சாதம் சாப்பிடு வதா? சாம்பார் சாதம் சாப்பிடுவதா? என்பதை நீதிபதி முடிவு செய்து சொல்கிறார். இதுதான் மிக முக்கியம்.

இன்னும் சில இடங்களில் நீதி போக்கு எப்படி இருக்கிறது என்றால், யார் நீதிபதி? யார் வழக் குரைஞராக இருக்கவேண்டும்? என்பதையெல்லாம் நான்தான் முடிவு செய்யவேண்டும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இன்றையக்கு நீதியின் போக்கு சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், எல்லோரும் பார்வையாளராக இருக்க முடியுமே தவிர, அதைப்பற்றி எழுதுகின்றவர்களா கவோ, துணிச்சலோடு பதிவு செய்யக்கூடியவர்களா கவோ, கருத்துரிமை உள்ளவர்களாக இருக்க முடியாது.

எனவேதான், ஒரு 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த பத்திரிகையாளர்களுக்கு இருந்த சுதந்திரம், அவர்களுக்கு இருந்த துணிவு, நெஞ்சுரம் எல்லாம் இன்றைய பத்திரிகைகளுக்கு இருந்தாலும், அதனை வெளியே காட்டிக் கொள்ள முடியாத அளவிற்கு அவர்கள் இருக்கின்றனர். எனவே, இந்த சூழ்நிலை யில், இங்கே பாராட்டப்பட்ட இவர்கள் எல்லோரும் ரோல் மாடல் ஏன் நாம் அவர்களைப் பாராட்டு கிறோம் என்று சொன்னால், இவர்கள் 40, 50, 60 ஆண்டுகள் பணியாற்றி, அவர்கள் தங்களது கடமை களையும் செய்திருக்கிறார்கள்; அதேநேரத்தில், மனசாட்சிக்கு விரோதமில்லாத, தங்களுடைய சுதந்திரமான கருத்துகளை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் செய்திகளை வெளியிட்டிருக்கிறார் கள்.

நம்முடைய பாலு அவர்களேகூட, எந்தப் பாராட்டு விழாவிற்கும் வரமாட்டார்; அதிசயமாக வும், மிகவும் பொறுமையாகவும் இங்கே அமர்ந் திருக்கிறார். நான் சொல்வது அவர் காதில் விழுந்ததா என்பதும் நமக்குத் தெரியாது; அது ஒரு வகையில் நல்லதுதான். மிகவும் முரட்டுத்தனமான கருத்தைச் சொல்லக்கூடியவர். நாத்திகம் பாலு சுயமரியாதைக் காரர். செய்திகளை உற்சாகத்தோடு கொடுப்பார்; மிகவும் பெரிதாகப் போடவேண்டும் என்று சொல் வார். எல்லோரையும் வழி நடத்திச் செல்லக்கூடியவர். குடும்பத்தில் மூத்த அண்ணன் எப்படியோ அது போன்றவர் பாலு அவர்கள்.

சாமி அவர்கள் பாலுவிற்கு நேர் எதிரானவர். மிகவும் அடக்கமானவர், அமைதியானவர்; அன் றைக்கு எப்படி இருந்தாரோ, இன்றைக்கும் அப் படியே இருக்கிறார்.  அவரைப் பார்த்தபொழுது, எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இங்கேயுள்ள மீரான்சாகிப் தெருவில் அன்றைய காலகட்டத்தில், தந்தை பெரியாரிடம் பணியாற்றி, பிறகு தின மணிக்குச் சென்றவர்கள்.
மற்றவர்களைப் பற்றி அவ்வளவாக எனக்குத் தெரியாது. இருந்தாலும், அவர்கள் பத்திரிகையில் பணியாற்றிய வகையில் பெருமைப்படுத்தப்படக் கூடிய நிலையில் உள்ளனர்.

கருத்துச் சுதந்திரம்

எனவே, நம்முடைய பத்திரிகையாளர்களுக்கு உரிய கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு பாதுகாப்பு நிச் சயமாகத் தேவை. பத்திரிகையாளர்கள் சங்கடத்திற்கு ஆளாகும்பொழுது, நம்மைப் போல் உள்ளவர்கள் வேடிக்கைப் பார்ப்பவர்களாக இருக்கக்கூடாது. எனக்கு எதிராக எழுதியவர்தானே; அவர் எப்படி யாவது மாட்டிக்கொள்ளட்டும் என்று யாரும் நினைக்கக்கூடாது. அதுதான் மிகவும் முக்கியமானது. அரசுகளை மாற்றக்கூடிய சக்தி பத்திரிகைகளுக்கு உண்டு. நவமணி பத்திரிகையைப் பார்த்தீர்களே யானால், மாறுபட்ட கருத்துகளை வெளியிடுவார் கள். மறைந்த பத்திரிகையாளர் சோலை போன்ற வர்களாகட்டும், கல்யாணம் போன்றவர்களாகட்டும் துணிந்து கருத்துகளை சொல்லக்கூடியவர்கள்.

காமராசர் என்ன கூறுவார்!

நம்முடைய மூத்த தலைவர்கள் பெரியார், காமராசர், அண்ணா போன்றவர்களிடம் உரிமை எடுத்துக்கொண்டு பேசக்கூடியவர்கள்.
பத்திரிகையாளர்களிடம் காமராசர் உரையாற் றும்பொழுது, எல்லாவற்றையும்பற்றி பேசுவார்; ரகசியம் என்று ஒன்றும் இல்லை. ஆனால், பத்திரி கையில் எதைப் போடவேண்டும் என்பதையும் சொல்லிவிடுவார் - ஆஃப் தி ரெக்கார்டு என்று.

இப்பொழுது ஆஃப் தி ரெக்கார்டு என்பதற்கே என்ன பொருள் என்று யாருக்குமே தெரியாத அளவிற்கு,  எல்லாமே ஆஃபான ரெக்கார்டாகவே இருக்கிறது. ஆஃப் தி ரெக்கார்டு இல்லை. இப்பொழுது ஆஃப் தி ரெக்கார்டு ஆக எல்லாவற்றையும் பேசிவிட்டு, அதையே செய்தியாக்கி விடுவது. செய்தியாக்க வேண்டியவை எல்லாவற் றையும் ஆஃப் தி ரெக்கார்டு ஆக ஆக்கிவிடுவது. இதுபோன்ற வேடிக்கையான சூழல் நிலவுகிறது. ஏனென்றால், நானும் பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். நான் செய்தியாளர்களைச் சந்திக்கும்பொழுது, முக்கியமான செய்திகளுக்காக நான் உரையாற்றும் பொழுது, உதாரணமாக, மத்திய அரசு திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரை வைக்கவேண்டும் என்று சொன்னால்,

ஒரு செய்தியாளர் என்ன கேட்பார் என்றால், இன்று தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கிடையே இப்படி இருக்கிறதே, அதைப்பற்றி என்ன நினைக் கிறீர்கள் என்று.

நான் உடனே, இந்தக் கேள்விக்கு இப்பொழுது நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், நான் உங்களை எந்த நோக்கத்திற்காக அழைத் தேனோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போகும். நீங்கள் கேட்ட கேள்விக்கு இன்னொரு சூழலில் பதில் அளிக்கிறேன் என்று சொன்னேன்.

ஆகவே, மிகச் சிறப்பான வகையில் தொண் டாற்றிய பத்திரிகையாளர்களான இவர்களுக்கு, எல்லா வகையிலும், என்னென்ன முறையில் ஒத்துழைப்புக் கொடுக்க முடியுமோ, அத்தனையும் நாம் செய்யவேண்டும்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வாருங்கள்

இந்தப் பாராட்டு விழாவிற்கு நம்முடைய மோகன் அவர்கள் என்னை பங்கேற்க அழைக்கும்பொழுது, நான் ஒப்புக்கொண்டதற்கு இன்னொரு சுயநல காரணம் உண்டு. அது என்னவென்றால், மூத்த தமிழியல் பத்திரிகையாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள், எங்களுடைய பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் அடிக்கடி நடைபெறும், தமிழ் இதழியல் பயிற்சிப் பட்டறைக்கு நீங்கள், உங்களை யெல்லாம் வருகைப் பேராசிரியர்களைப் போல ஆக்கிக் கொள்ளுங்கள்; அதற்காக எங்களுடைய கதவுகள் திறந்து இருக்கின்றன. 

நாங்கள் உங்களை அன்போடு வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.
மூத்தப் பத்திரிகையாளர்கள், நல்ல அனுபவம் உள்ளவர்கள் நிறைய இளைஞர்களைத் தயாரிக்க வேண்டும். உதாரணமாக, தமிழ் தேசியக் கூட்ட மைப்பு இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு வடக்கு மாகாணத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தச் செய்தியை இரண்டே வரிகளில் போடக் கூடிய அளவில் இருக்கக்கூடாது. இதனுடைய வரலாறு என்ன? ஈழப் பிரச்சினை என்ன? இதற்காக நடைபெற்ற போராட்டம் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்திருக்கவேண்டும்.

நம்முடைய மூத்த பத்திரிகையாளர்களின் சிறப்பு என்னவென்றால், அவர்கள் ஒரு கேள்வி கேட்டார் கள் என்றால், ஆத்திரமூட்டக்கூடிய அளவில் இல்லா மல், அதேநேரத்தில், தலைவர்களாக இருக்கட்டும், சிந்தனையாளர்களாக இருக்கட்டும், அவர்களிட மிருந்து கருத்துகளைப் பெறக்கூடிய அளவிலே அது இருக்கும். அதுமாதிரியான அளவிற்கு, செய்திகளைக் கொண்டு செல்லக்கூடிய அளவிற்கு, செய்திகளைக் கொடுக்கக்கூடிய அந்தப் பக்குவங்களைச் சொல்லிக் கொடுங்கள்.  ஏற்கெனவே நீங்கள் அனுபவத்தின் மூலம் அந்தப் பக்குவங்களைப் பெற்றவர்கள்.

சிறந்த பாடம் அனுபவம்!

அனுபவம் என்பதைவிட சிறந்த பாடம் வேறு கிடையாது. ஏனென்றால், உங்களுடைய அனுபவம் இளைய தலைமுறையினருக்குப் பயன்படவேண்டும்.

இல்லை, இல்லை நாங்கள் தஞ்சாவூருக்கு - அவ்வளவு தூரம் பயணம் செய்து வர முடியாது என்று நினைத்தால், நாங்கள் சென்னையில் அந்தப் பட்டறையை ஏற்பாடு செய்து, உங்கள் வசதிக்காக மாணவர்களை தயாரிக்க தயாராக இருக்கிறோம்.

அதைப்பற்றி கலந்தாலோசித்து எங்களிடம் சொன்னால், சென்னைப் பத்திரிகையாளர்கள் சங்கத்தை முழுமையாக எங்களுடைய பணிக்கு உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம். உங்களுக்கு எந்த வகையில் உதவிகரமாக, பாதுகாப்பாக இருக்கவேண்டுமோ, அந்த அளவிற்கு இருப்போம்.
பிபிசி பற்றி நீண்ட நாள்களுக்கு முன்பாக ஒரு செய்தியைப் படித்தேன்.

செய்தியில் கருத்தை திணிக்கக் கூடாது!

பிபிசி செய்தியில், செய்தியாளர்கள் செய்தியைச் சொல்லும்பொழுது, பிபிசி நிர்வாகம் அந்த செய்தி ஆசிரியரை அழைத்து ஒரு விளக்கம் கேட்டு, அவரை பணியில் இருந்து சில நாள் நீக்கி வைத்திருக் கிறார்கள். எதற்காக என்றால், ஒரு துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது; போலீஸ் பயரிங்; அதைப்பற்றி பிபிசி வானொலியில் இவர் செய்தி அளிக்கிறார்; போலீஸ் கேடு டு ஓபன் பயர் என்று.
உடனே, அந்த நிறுவனத்தின் மேலாளராக இருக்கக்கூடியவர் அந்தச் செய்தியாசிரியரை அழைத்து, பிபிசிக்கு கிரிடிபிலிடி என்பதை செய்தி யைத்தான் சொல்லவேண்டும். போலீஸ் ஓபன் தி பயர் என்று சொன்னால், அது செய்தி.

போலீஸ் கேடு டு  ஓபன் தி பயர் என்றால், துப்பாக்கி சுடவேண்டிய சூழல் வந்தது என்று சொன்னால், அது செய்தியல்ல; அதற்கு நீங்கள் பொறுப்பேற்கவேண்டும் என்று சொன்னார்.

ஆனால், இன்றைக்கு அந்தச் சூழல் மறைந்து விட்ட நிலை இருக்கிறது. மீண்டும் அந்தச் சூழலை நாம் உருவாக்கவேண்டும்.

தலையங்கத்தில் கருத்துச் சொல்லலாம்

பத்திரிகையில் எழுதுகின்ற தலையங்கத்தில் கருத்துகளைச் சொல்லலாம்; கட்டுரைகளில் கருத்து களைச் சொல்லாம். ஆனால், செய்திகளைத் திரித்து போடவேண்டிய நிலை இருப்பது விரும்பத்தக்க தல்ல. இதுபோன்ற பல செய்திகளை, நம் பத்திரி கையாளர் சங்கத்தில், நல்ல விவாதங்கள், ஆரோக் கியமான விவாதங்களை உருவாக்கவேண்டும். அதற்கு என்றென்றைக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்; பெரியார் திடல் உறுதுணையாக இருக்கும்; விடுதலை உறுதுணையாக இருக்கும்.

நாம் எல்லாம் முற்போக்குச் சிந்தனையாளர்களாக இருந்தாலும், இடதுசாரி சிந்தனையாளர்களாக இருந்தாலும், பெரும்பாலான கருத்துகளில் நாங்கள் உடன்பாடுள்ளவர்கள். அரசியலில் மாறுபாடு கருத்துள்ளவர்கள், அது வேறு.

வேண்டாம் ஓய்வு!

மற்ற பொதுவான நோக்கு என்று பார்க்கும் பொழுது, முற்போக்கு சிந்தனை என்று வரும் பொழுது மாறுபட்ட சிந்தனை இருக்காது. ஆகவே, உங்களை அன்போடு நான் கேட்டுக்கொள்வ தெல்லாம், இந்த மூத்தப் பத்திரிகையாளர்களை - ஓய்வு பெற்றவர்களாகக் கருதாமல் - ஓய்வு என்பது இருக்கிறதே, அதுவே, உடல்நலத்தைக் குறைக்கும்; அதுவே முதுமையைத் திணிக்கும்.

அவர்களை இங்கே பாராட்டியதினால், ஒரு பெரிய பலன் என்னவென்று கேட்டால், அவர்களு டைய வயதில் ஒரு பத்து வயதைக் குறைத்திருக்கும்.
ஆகவே, எல்லோரையும் பாராட்டக்கூடிய பழக்கம் வரவேண்டும்.

வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
                  --------------------------"விடுதலை” 26-9-2013