Search This Blog

Showing posts with label இடஒதுக்கீடு. Show all posts
Showing posts with label இடஒதுக்கீடு. Show all posts

24.6.09

மூஸ்லீம்களும் - இடஒதுக்கீடும்


சல்மான் குர்ஷித் அறிவாரா?

மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தேவையில்லாமல் வார்த்தைகளைவிட வீண்வம்பை விலைக்கு வாங்கிவிட்டார்.

இட ஒதுக்கீடு வழங்கிவிடுவதால் முசுலிம்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

முசுலிம்களின் பிரச்சினைகள் என்பது வெறும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது என்கிற அளவில்தான் அமைச்சரின் சிந்தனை தேங்கி நிற்கிறது என்று தெரிகிறது.

முதலாவதாக முசுலிம்களுக்கு தேவைப்படுவது கல்வியும், சமூகத்தில் ஒரு கவுரவத்தை அளிக்கும் அரசு வேலை வாய்ப்பும்தான் என்பது வளரவேண்டிய ஒரு சமூகத்துக்குத் தேவையானவையாகும்.

இன்னொரு வகையில் பார்த்தாலும் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வியும் அவசியம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. அதுவும் வளர்ந்துவரும் இந்த விஞ்ஞான உலகில் பொருளாதார வளர்ச்சிக்குக் கல்வி மிக அவசியமே!

முசுலிம் மக்களின் கல்வி நிலை எந்த நிலையில் இருக்கிறது என்கிற விவரம் அமைச்சருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.

தொடக்கப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் எண்ணிக்கையில் முசுலிம் மாணவர்களின் வீழ்ச்சி அதிர்ச்சிதரக் கூடியதாக உள்ளது.

இதன் காரணமாக உயர்கல்வியில் முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

4.1.2009 நாளிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில் ஒரு புள்ளி விவரம் வெளிவந்தது. இந்தியாவில் பல பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் மேல்படிப்புச் சேர்க்கையில் அவரவர் சமூகத்தில் எவ்வளவு விகிதாச்சாரம் இருக்கிறார்கள் என்கிற புள்ளி விவரம் அது. இந்தக் கணக்கீட்டுக்கு கிராஸ் என்ரோல்மென்ட் ரேசியோ (ஜி.இ.ஆர்) என்று கூறுகின்றனர்.

இதன்படி பார்க்கும்பொழுது கிறித்துவர்களின் ஜி.இ.ஆர். 19-.85 விழுக்காடாகும். சீக்கியர்கள் 17.81 விழுக்காடாகும். இந்து தாழ்த்தப்பட்டவர்கள் 7.37 விழுக்காடாகும். முசுலிம்கள் 7.7 விழுக்காடாகும். கிட்டத்தட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையில்தான் முசுலிம்கள் உள்ளனர் என்பது இந்தப் புள்ளி விவரம் மூலம் அறிய முடிகிறது. முசுலிம்களில் எழுத்தறிவு பெற்ற-வர்களின் விழுக்காடு 42 தான். தேசிய சராசரியைவிட இது மிகவும் குறைவானதாகும்.
மெத்த படித்த அமைச்சராகவும் ஆகியுள்ள சல்மான் குர்ஷித் இந்த விவரங்களையெல்லாம் அறிந்திருந்தால் வெறும் வார்த்தைகளை கொட்டியிருக்க மாட்டார்.

முசுலிம் மக்களின் சமூக நிலையைக் கணித்துதான் சச்சார் கமிஷனும், அதனைத் தொடர்ந்த ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் அமைக்கப்பட்டன. முசுலிம்களுக்கு தேசிய அளவில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் இந்த ஆணையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதுகூட அமைச்சருக்குத் தெரியவில்லை போலும்.
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் முசுலிம்களின் இட ஒதுக்கீடுக்கு வகை செய்துள்ளன. அரசுப் பணிகளைப் பொறுத்தவரை முசுலிம்கள் 5 விழுக்காட்டுக்கும் கீழே உள்ளனர் என்று சச்சார் ஆணையம் கூறுகிறது.

அர்ஜூன் சென்குப்தா அறிக்கையோ, இந்தியாவில் உள்ள முசுலிம்களில் 85 விழுக்காட்டினர் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், தனி நபர் மாத வருமானம் ரூ.60-0-_க்கும் கீழ்தான் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும். உயர்கல்வி பெறவேண்டும் என்ற நினைப்பும் செயல்பாடும் எங்கிருந்து குதிக்கும்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிறித்துவர்களுக்கும், முசுலிம்களுக்கும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு தி.மு.க. அரசு வழி செய்தது.

சில நாள்களில் கிறித்துவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறிவிட்டனர். காரணம், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்த மூன்றரை சதவிகிதத்தைவிட கிறித்துவர்கள் அதிகமாகவே பலன் பெற்று வருகின்றனர். ஆனால், முசுலிம்களோ இந்த மூன்றரை விழுக்காடு இட ஒதுக்கீடுக்கும் பச்சைக் கொடிகாட்டி விட்டனர். காரணம், இவர்களின் நிலைமை அதளபாதாளத்தில் கிடப்பதுதான். இதனையெல்லாம் புரிந்துகொண்டு இனிமேலாவது அமைச்சர் நிலையில் உள்ளவர்கள் பொறுப்புணர்ச்சியோடு எதையும் அளந்து பேசுவது நல்லது.

---------------------நன்றி:"விடுதலை" தலையங்கம் 23-6-2009

30.12.08

தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்


கிரீமிலேயரும் - அடுத்தகட்டப் போராட்டமும்!

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் நேற்றைய தினம் (29.12.2008) மத்திய அரசு அலுவலகங்கள்முன் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு, கழகத் தோழர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நடைபெற்ற மறியலுக்குத் தலைமை தாங்கிய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், அடுத்தகட்டமாக திராவிடர்கழகம் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புச் செய்தார்.

டில்லியில் இதுகுறித்து மாநாடு - போராட்டம் நடக்கும் என்ற ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தென் மாநிலம் அளவுக்கு அவ்வாறு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்சினை இது. இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த இந்த 58 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு துறைகளில், கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்பது இப்பொழுதுதான் முதன்முதலாக அமலுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த வகையில் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படையாகும். இத்தகையதோர் சூழ்நிலையில், தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்ததுபோல முதன்முதலாக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பில் மத்திய அரசுத்துறை களிலோ, கல்வியில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலோ நுழையும் முதல் கட்டத்திலேயே, பொருளாதார அளவுகோல் என்ற ஒன்றை - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றைத் திணித்து பிற்படுத்தப்பட்டோரில் இவற்றில் நுழைய ஓரளவு தகுதி வாய்ந்தவர்களை உள்ளே நுழைய விடாமல் வெளியில் தள்ளுவது அநீதி அல்லவா? நேர்மையற்ற தன்மையல்லவா? என்பதுதான் சமூகநீதியாளர்கள் எழுப்பும் அடிப்படை வினாவாகும்.

கிரீமிலேயர் என்னும் அளவுகோலை திணிப்பதால் தகுதி வாய்ந்த பிற்படுத்தப்பட்டோர் கிடைக்காமல் போகும் என்று நன்கு தெரிந்த நிலையில்தான் காலியாகும் பிற்படுத்தப்பட் டோர்களின் இடங்கள் பொதுப்பட்டியலுக்குப் போகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவிக்கிறது.

நீதிமன்றங்கள் நாட்டில் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கா? அல்லது அவர்களைப் பழிவாங்குவதற்கா? என்பதுதான் நம்முன் நிற்கும் கேள்வி.

நீதிமன்றங்களின் தற்காலப்போக்கு எந்தத் திசையில் பயணம் செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பிரச்சினையில் அது தெரிவித்திருக்கும் இத்தகு கருத்து மூலம் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பது இதன் மூலமும் உணரப்படுகிறது.

கிரீமிலேயர் என்கிற பொருளாதார அளவுகோல் தாழ்த்தப் பட்டோருக்கும் தேவை - அத்தகு காலம் வந்துவிட்டது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே கருத்தாகக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் பொதுவான எதிரியாக - முட்டுக்கட்டையாக இருக்கக் கூடிய இந்தக் கிரீமிலேயர் முறையை அகற்றிட ஒருங் கிணைந்து போராடக்கூடிய காலகட்டமாக இதனைக் கருதவேண்டும்.


நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) ஒன்றிணைந்து செயல் படுவார்களேயானால், அடுத்த நொடியே இந்தக் கிரீமிலேயர் என்கிற சமூகநீதியின் குறுக்கே படுத்துக்கிடக்கும் முட்டுக்கட்டை இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்தப்பட்டு விடும்.

மக்கள் பிரச்சினையை நேரடியாகச் சந்திக்கக் கூடியவை மாநில அரசுகளே - மத்திய அரசுக்கென்று நேரிடையாக மக்கள் கிடையாது. எனவே, இதுபோன்ற பிரச்சினைகளில் முடி வெடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே உண்டு என்று சட்டத்திருத்தம் அவசிய உடனடித் தேவையாகும்.

அதனால்தான் மறியல் போராட்டத்துக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், கிரீமிலேயரால் ஏற்படும் அநீதி குறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.

எல்லா முனைகளிலும் அழுத்தம் கொடுத்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதியைக் காக்க திராவிடர் கழகம் தொடர்ந்து பாடுபடும் - கட்சிகளை மறந்து அனைத்துத் தரப்பினரும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


--------------------நன்றி:"விடுதலை" தலையங்கம் 30-12-2008

27.12.08

இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரைப் புகுத்தக் கூடாது;ஆயத்தமாவீர்! மறியலுக்கு ஆயத்தமாவீர்!!




களம் காணுவோம்- கருஞ்சட்டை வீரர்களே!

டிசம்பர் 29 ஆம் தேதி தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் போராட்டத்தை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் சார்பில் இயங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்காக அளிக்கப்படும் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் ஒரு தடைக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது உச்சநீதிமன்றத்தால். ஆண்டுக்கு 4.5 லட்சம் ரூபாய்க்குமேல் வருமானம் பெறும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர் மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பதுதான் இன்றைய நடைமுறை.

இந்த வருமானம் உள்ளவர்கள் கல்வியிலும், சமூக ரீதியிலும் பிற்பட்டு இருக் கிறார்களா? இல்லையா? என்பதுபற்றி நீதிமன்றத்திற்குக் கவலையில்லை. பணம் அவர்களிடம் இருப்பதால், நீதிமன்றக் கண்ணோட்டப்படி அந்தப் பிற்படுத்தப்பட்டோர் உயர்ஜாதியாகி விடுகிறார்கள் என்பது மெத்த படித்த நீதிபதிகளின் கணிப்பு.

பணம் பெற்றவர்கள் எல்லாம் உயர்ஜாதி என்று அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதைகளும் கருதவில்லை; நாடாளுமன்றமும் நினைக்கவில்லை. இப்பொழுது உச்சநீதிமன்றம் மட்டுமே அவ்வாறு நினைக்கிறது - திணிக்கிறது.


இந்த அளவுகோல் தாழ்த்தப்பட்டோருக்கும் கிடையாது; (அவர்களுக்கும் பொருளாதார நிபந்தனை கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு) உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கும் கிடையாது; இடையில் விழிபிதுங்கி நிற்பது பிற்படுத்தப்பட்ட மக்கள்தான்.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் திணிக்கப்பட்ட வருமான வரம்பு என்ற முதலை- இன்று உச்சநீதிமன்றத்தின் வாயிலாக மீண்டும் வாய் பிளக்கிறது.

இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதற அடிப்பதற்கான ஒரு பாதையை உச்சநீதிமன்றம் திறந்து காட்டிவிட்டது. அடுத்தகட்டமாக இட ஒதுக்கீடே கூடாது என்று எழுதிட சிகப்புமை பேனாவைத் தயாராகவே திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

எதையும் அதன் தொடக்கத்திலேயே - அதன் மூல பலத்திலேயே கைவைத்து நிர்மூலப்படுத்துவதுதான் தந்தை பெரியாரின் போர் முறை. தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களும் அந்தக் கண்ணோட்டத்தில்தான் காய்களை நகர்த்திக் கொண்டுள்ளார்.


அந்த அடிப்படையில்தான் 29.12.2008 அன்று காலை தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில், மத்திய அரசு அலுவலகம்முன் மறியல் போராட்டத்தை தமிழர் தலைவர் அறிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரைப் புகுத்தக் கூடாது; உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து - முட்டுக்கட்டையிலிருந்து மக்கள் தொகையில் பெரும்பகுதியினரான பிற்படுத்தப்பட்ட மக்களைக் காப்பாற்றிட அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்று வலியுறுத்திடவே இந்த மறியல் போராட்டம்.

மறியல் போராட்டம் என்றாலே அதற்குக் காவல்துறை அனுமதி கிடையாது என்பது தெரிந்த ஒன்றுதான்.

தடை என்றாலும் அதனை மீறி மறியல் போராட்டம் நடத்துவோம்! ஆயிரக் கணக்கில் கைதாகக் கருஞ்சட்டைத் தோழர்கள் தயாராகட்டும்!

சென்னையிலே தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார்.

பல்வேறு மாவட்டங்களிலும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் தலைமை தாங்குவார்கள்.

அன்று - 1950-களில் இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்ட ஆபத்தை அய்யா தலையிட்டுத் தடுத்து நிறுத்தினார்.

இன்று ஏற்பட்டுள்ள பேராபத்திலிருந்தும் சமூகநீதியைக் காப்பாற்றிட தமிழர் தலைவர் தலைமையிலே அணிவகுப்போம் - ஆர்ப்பரிப்போம் - கருஞ்சட்டைச் சிங்கக் கூட்டமே மறியலுக்குத் தயாராவீர்! தயாராவீர்!

இது ஏதோ தமிழ்நாட்டிற்கு மட்டும் போராட்ட நடவடிக்கை அல்ல. இந்தியத் துணைக் கண்டத்திற்கே பயனளிக்கும் சமூகநீதிப் போராட்டமாகும்.


அன்று மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்த வைக்க எந்தக் கழகம், எந்தத் தலைவர் மற்ற அமைப்புகளுடன், தலைவர்களுடன் இணைந்து முன்நின்று போராடி, வெற்றிப் பதாகையை உயர்த்திக் காட்டியதோ அதே திராவிடர் கழகம், அதே தமிழர் தலைவர் - இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றிட அணிவகுக்கிறது என்பதை மறவாதீர்!

ஆயத்தமாவீர்! மறியலுக்கு ஆயத்தமாவீர்!!


------------------- 27-12-2008 "விடுதலை" யில் - மின்சாரம் எழுதிய கட்டுரை

23.12.08

இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடாது- பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமா கிரீமிலேயர்?


பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமா கிரீமிலேயர்?
பொருளாதாரம் எந்த ரூபத்திலும் வரக்கூடாது தடுக்க
தனி அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும்

மத்திய அரசு அலுவலகம்முன்பு ஏராளமானோர் கைதாகிறார்கள்

தஞ்சை செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி


பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிரீமிலேயர் கொண்டு வரக்கூடாது. பொருளாதார அளவுகோல் கூடாது என்று அரசியல் சட்டத்தில் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லப் பட்டுவிட்டது. கிரீமிலேயர் - பொருளாதார அளவுகோல் இட ஒதுக்கீட்டில் கொண்டுவரக் கூடாது என்று தனி அரசியல் சட்டம் கொண்டு வருவதுதான் இதைத் தடுக்க ஒரே வழி என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

தஞ்சையில் நேற்று 22.12.2008 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

29-ஆம் தேதி தலைநகரில் மறியல்

வருகின்ற இருபத்தி ஒன்பதாம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களில் அல்லது முக்கிய நகரங்களில் கிரீமிலேயர் என்று சொல்லக்கூடிய பிற்படுத்தப் பட்ட சமுதாய மக்களை பொருளாதார அடிப்படையிலே பிரிக்கக் கூடிய ஒரு கொடுமையை அரசியல் சட்டத்தில் இல்லாத ஒன்றை நீதிமன்றங்கள் வலியுறுத்தியதனுடைய விளைவாக பொருளாதார வரம்பை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் வைத்திருக்கிறார்கள். அதற்குத் தான் கிரீமிலேயர் என்று அவர்கள் பெயரிட்டார்கள்.

1992இல் இருந்து தான் கிரீமிலேயர்

இந்த வார்த்தை 1992ஆம் ஆண்டிலிருந்துதான் வெளியே வந்திருக்கிறது. அதாவது இந்திராசகானி என்ற மண்டல் கமிஷன் வழக்கிலே இதைப்பற்றி வலிய வந்து பொருளாதார வரம்பு இருக்க வேண்டுமென்று கொண்டு வந்திருக்கிறார்கள்.

உங்களுக்கெல்லாம் தெரியும். எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச் சராக இருந்த நேரத்திலே அ.தி.மு.க. ஆட்சி நடந்த பொழுது 1978-79-லே பெரியார் நூற்றாண்டு நடந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்திலே பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணுவதற்குத் தமிழ்நாட்டிலே ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பு என்று கொண்டு வந்தபொழுது அதைக் கடுமையாக எதிர்த்தது திராவிடர் கழகம். திராவிட முன்னேற்றக்கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - கட்சிபூர்வமாக இவைகள் எல்லாம் பங்கேற்றன. அதே போல காங்கிரசிலே இருந்த சில நண்பர்கள் திண்டிவனம் ராம மூர்த்தி போல சில நண்பர்கள், டி.என்.அனந்த நாயகி அவர்கள், அதேபோல ஜனதா தளத்திலே அன்றைக்கு இருந்த திருமதி ரமணி பாய் போன்றவர்கள், கலைஞர் அவர்கள், நாங்கள், தா.பாண்டியன் போன்றவர்கள் மற்ற கட்சி நண்பர்கள் மற்றும் திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக முக்கிய பேராளர் கள் எல்லாம் சேர்ந்து ஒரு போராட்டமே நடத்தினோம்.

எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவைக் கொளுத்தி

இதே தஞ்சையில்தான் ஒரு பெரிய முடிவெடுத்து அந்த ஒன்பதாயிரம் ரூபாய் ஆணையைக் கொளுத்தி சாம்பலை எம்.ஜி.ஆர். அரசின் கோட்டைக்கு அனுப்பினோம்.

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பாணையால் பல பேருக்குப் பிரச்சினை ஏற்பட்டது. ஓராண்டு அமலில் இருந்தது. எம்.ஜி.ஆர் அதில் பிடிவாதமாக இருந்தார். அதற்கு - ஆதரவு திரட்டுவதற்காக எம்.ஜி.ஆர். அவர்கள் பல ஊர்களிலே பல மாநாடுகளைக் கூட நடத்தினார்கள்.

புதுக்கோட்டையில் நண்பர் செல்லையா அவர்களை வைத்துக் கொண்டு ஒரு பெரிய மாநாட்டை நடத்தினார்கள். அதிலே அவர் பேசினார். அப்படி எல்லாம் இருந்தும்கூட அந்த 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்புக்கு ஏற்பட்ட நிலை என்ன?

எம்.ஜி.ஆர். படுதோல்வி அடைந்தார்

அதற்கடுத்து நாடாளுமன்ற தேர்தல் வந்தது 1980இல் வந்தது. அதிலே இரண்டே இரண்டு இடங்களைத் தான் எம்.ஜி.ஆர். கட்சி பெற்றது. சிவகாசி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டும் தான் எம்.ஜி.ஆர். கட்சி வெற்றி பெற்றது. மற்ற அனைத்து இடங்களிலும் எம்.ஜி.ஆர். கட்சி தோல்வி அடைந்தது.

உடனடியாக எம்.ஜி.ஆர். அமைச்சரவையைக் கூட்டி - ஏன் நாம் தோல்வியுற்றோம்? என்று அவர்கள் சிந்தித்து கேட்டார்கள்.

வெளிப்படையாக கருத்துக்களை சொல்லுங்கள் என்று சொன்னபொழுது - எஸ்.டி.எஸ். போன்றவர்கள் மற்றவர்கள் எல்லோருமே வெளிப்படையாக கருத்துக்களைச் சொன்னார்கள்.

காலம் காலமாக இருந்து வந்தது வகுப்புரிமை - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு வைத்த கார ணத்தினாலே, அந்த வரம்பாணையை எதிர்த்து தி.க., தி.மு.க., கம்யூனிஸ்ட், இந்திய தேசிய முஸ்லிம் லீக் அப்துல் சமது, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த இவர்கள் எல்லோருமே பிரச்சாரம் செய் தார்கள். அதிலும் திராவிடர் கழகத்தின் கடுமையான எதிர்ப்பு மக்களைச் சென்றடைந்தது.

எம்.ஜி.ஆர். கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்

அதனால்தான் நமக்கு தோல்வி ஏற்பட்டது என்று அ.தி.மு.க. முன்னணியினர் சொன்னவுடனே எம்.ஜி.ஆர். உடனடியாக ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அழைத்தார்கள்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பிலே நான் கலந்து கொண்டேன். என்னென்ன காரணங்ளினாலே இந்த 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு உத்தரவு இருக்கக் கூடாது.

அரசியல் சட்டத்தில் இல்லாத ஒன்று

அரசியல் சட்டத்தில் இல்லாத ஒன்றை வலிந்து புகுத்தியிருக்கின்றார்கள் என்ற விபரத்தை எல்லாம் விளக்கமாக எம்.ஜி.ஆர். அவர்களுக்கே புரியும்படியாக அவருக்குத் தெளிவாக விளக்கப் பட்டது.

நான் - எம்.ஜி.ஆர். அவர்கள் கேட்டிருந்த கேள்வி, மற்றும் 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு பற்றி வருகின்ற சந்தேகங்களுக்கெல்லாம் பதில் அளிக்கின்ற வகையிலே அச்சடித்தே காப்பிகளை கொண்டு போயிருந்தேன்.

திராவிடர் கழகம் சார்பிலே கேள்வி-பதில் வடிவத்திலே எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் மற்றும் அங்கு வந்திருந்த அனைத்துக் கட்சியினருக்கும் கொடுத்தோம்.

எம்.ஜி.ஆர். வருமான வரம்பு ஆணையை ரத்து செய்தார்

எம்.ஜி.ஆர். அவர்கள் நான் சொன்ன மற்றும் எழுதிக் கொடுத்த கருத்துக்களைப் பார்த்து விட்டு 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பை ரத்து செய்து விட்டார். திடீரென்று தனக்கு ஏற்பட்ட சங்கடத்தை மாற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காக அவர்கள் அதைச் செய்தார்கள்.

அதுவரையிலே பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீட்டை, 50 சதவிகிதமாக ஆக்கினார்கள். அப்படித்தான் மொத்தம் 68 சதவிகித இட ஒதுக்கீடு என்று ஆகியது. பிறகு பழங்குடி மக்களுக்கு ஒரு சதவிகிதம் என்று 69 சதவிகிதமாக மாறியது.

69 சதவிகிதத்தினுடைய வரலாறு

69 சதவிகிதத்தினுடைய வரலாறு இது. ஆகவே இட ஒதுக்கீடு என்று சொல்லுகிறபொழுது அரசியல் சட்டத்திலே இந்திய அரசியல் சட்டத்திலே பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளப் படுத்துகிற பொழுது பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற வார்த்தை மட்டும் தான் வேலைவாய்ப்பிலே இருக்கிறது 16(4) என்ற பிரிவிலே.

தந்தை பெரியார் நடத்திய போராட்டம்

தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தின் விளைவாக முதல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சராக இருந்தார். நேரு பிரதமராக இருந்தார். அந்த காலகட்டத்தில் 15(4) என்ற பிரிவை உள்ளடக்கினார்கள்.

15(3) வரையில் தான் அதுவரையில் இருந்தது. பிறகு தான் 15(4) என்ற பிரிவை உருவாக்கினார்கள். 15(4) என்ற பிரிவிலே சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்.Socially and Educationally என்றுதான் அரசியல் சட்டத்திலே இருந்தது.

"பொருளாதாரம்" என்ற வார்த்தையே கிடையாது

Economically - "பொருளாதாரம்" என்ற வார்த்தை அரசியல் சட்டத்திலே கிடையாது. இன்றும் அரசியல் சட்டத்திலே பொருளாதாரம் என்ற வார்த்தை கிடையாது. நேரு காலத்தில் அரசியல் நிர்ணய சபையில் விவாதங்கள் நடந்த பொழுது Socially and Educationally என்ற வார்த்தையை அரசியல் சட்டத்தில் பயன்படுத்தனார்கள்.

நேரு காலத்தில் விவாதம்

நேரு காலத்தில் இதுபற்றி விவாதம் நடந்த பொழுது Economically பொருளாதாரம் என்ற வார்த்தையைப் போட வேண்டும் என்று சிலர் சொன்னார்கள்.

அப்பொழுது பிரதமர் நேரு அவர்கள், சட்ட அமைச்சர் அம்பேத்கர் அவர்களைக் கலந்து கொண்டு பதில் சொன்னார். நேரு அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்.

மற்ற இரண்டும் (Socially and Educationally) நிலையானது. பொருளாதார ரீதியாக Economically என்று போட்டால் என்ன ஆகும்?

விவசாயிக்கு இந்த வருடம் இவ்வளவு வருமானம் வரும். அடுத்த வருடம் பார்ப்பீர்களேயானால் மழை இல்லை என்றால் வருமானம் போய்விடும். அப்பொழுது வருமானம் மாறும். நல்ல விளைச்சல் வரும்போது வருமானம் கூடுதலாக வரும் அதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன.

அதேபோல Fixed income குரூப்பைத் தவிர, மற்றவர்களுக்கு இந்த சங்கடங்கள் வரும்.

வருமானம் நிலையானதல்ல

எனவே வருமான அடிப்படை என்பது நிலையானதல்ல. அது எலாசிட்டி மாதிரி. அது ரப்பர் மாதிரி. வருமானம் என்பது கூடும், குறையும். ஆகவே பொருளாதார அளவுகோல் என்பது நிலையானதல்ல என்பதை விளக்கிச் சொன்னார்கள்.

எனவே, பொருளாதார அடிப்படையிலே பின்தங்கியவர்களுக்கு பத்து சதவிகிதம் என்று நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்த பொழுது ஏழைகளுக்கு ஒதுக்குகிறோம் என்று சொன்னபொழுது ரொம்பத் தெளிவாகவே அதை அடித்து விட்டார்கள். யார்? இந்திரா சகானி வழக்கிலே ஒன்பது பேர் கொண்ட நீதிபதிகள் அரசியல் சட்டத்தில் பொருளாதார அளவுகோலைப் புகுத்த இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அப்படி சொன்னவர்களை எதை வாசற்படிவழியாக கொண்டு வர முடியாதோ அதைக் கொல்லைப்புற வழியாகக் கொண்டு வருவதற்காக புகுத்தப்பட்டது தான் இந்த கிரீமிலேயர் என்பது.

இந்த கிரீமிலேயருக்கு வருமானம் இரண்டு லட்ச ரூபாய் என்று வைத்திருந்தார்கள். இப்பொழுது 6-வது பே-கமிஷன் வந்துவிட்ட ஒரு நிலையிலே எல்லோருக்கும் சம்பளம் எவ்வளவு என்றால் 10 ஆயிரம் ரூபாய் இருந்த பிரசிடெண்டிற்கு 10 லட்ச ரூபாய் என்று வரக்கூடிய அளவிற்கு ஆகிவிட்டது. ஒவ்வொரு தொழிலிலும் இருக்கக் கூடியவர்களுக்கு சம்பளம் அதிகம்.

27 சதவிகிதம் 3 ஆண்டுகளில் பிரித்து

உதாரணத்திற்கு 9 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு - அடுத்த ஆண்டு ஒரு 9 சதவிகிதம் - அதற்கடுத்து மூன்றாவது ஆண்டு இன்னொரு 9 சதவிகிதம் என்று 27 சதவிகிதத்தை மூன்றாகப் பிரித்தார்கள்.

அய்.அய்.டி.யில், ஏ.அய்.எம்.எஸ்சி.இல், அதே மாதிரி வரக்கூடிய மத்திய கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதற்காக அறிவித்தார்கள். அப்படி இருப்பதிலேயே அந்த 9 சதவிகிதத் திற்குக் கூட ஆள் வரவில்லை.

காரணம் என்னவென்றால், வருமான வரம்பு இரண்டரை லட்சம் என்று சொல்லி, அந்த காலி இடத்தை எல்லாம் முன்னேறிய ஜாதிக்காரர்களுக்குக் கொடுப்பதற்கு வசதியாக Open
Competition-னில் சேருங்கள் என்று ரொம்பத் தந்திரமாக செய்தார்கள்.

இந்த ஆபத்து வரும் என்று நாங்கள்தான் முதலில் சொன்னோம். அதே மாதிரி வந்தது. கிரீமிலேயரை எதிர்த்தாலும் பரவாயில்லை - வருமானம் குறைச்சலாக இருப்பதால் வருமானத்தை அதிகமாக ஆக்குங்கள் என்று சொல்லி தமிழக முதல்வருக்கு நாங்கள் விண்ணப்பித்தோம்.

தமிழக முதல்வர் கலைஞரும் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள். நேஷனல் பேக்வார்டு கமிசன் தலைவர் இரத்தினவேல் பாண்டியன் அவர்களுக்கு எழுதி அது பிறகு ஒப்புக் கொள் ளப்பட்டு வருமானம் நான்கரை லட்சமாக ஆக்கப்பட்டது.

கிரீமிலேயர் ஏன் கூடாது?

அது எத்தனை லட்சமாக இருந்தாலும் பொருளாதார வரம்பு என்பது கூடாது என்று நாம் சொல்லுகின்றோம். கிரீமிலேயர் ஏன் கூடாது என்பதற்கு முதல் காரணம் - அரசியல் சட்டத்திலே சட்டக்கர்த்தாக்கள் ஆராய்ந்து பார்த்தபின்பு பொருளாதார அளவு நிலையானதல்ல சரியானதல்ல என்று கை விட்டார்கள்.

அப்படி கை விட்டதை மீண்டும் புகுத்த வேண்டும் என்பதிருக்கிறதே - அது பெரும்பாலான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.

அய்.அய்.டி. விசயத்தில் கண்கூடாகத் தெரிகிறது. இது இரண்டாவது காரணம். மூன்றாவது காரணம், அதாவது பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து இவர்கள் புகுத் துவதினுடைய நோக்கமே எப்படியாவது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய வாய்ப்பு மாற்றப்பட்டு மேல் ஜாதிக்காரர்களுக்கு வரவேண்டும்.

இந்த வருடம் காலியாக உள்ள இடங்களுக்கு Carry forward - அடுத்த வருடம் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்கிற முறை இல்லை.

உயர்ஜாதிக்காரர்


அதைக் கொண்டு வந்து O.C.-யில் சேர்க்க வேண்டும் Open Competition திறந்த போட்டியில் உள்ளவர்களுக்கு அதைக் கொடுக்க வேண்டும் என்றால், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? வெளிநாட்டுக்காரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். முன்னேறிய ஜாதியார்கள் மூன்று சதவிகிதமாக இருந்தாலும் அவர்களுடைய சதவிகிதத்திற்கு அதிகமாக பத்து சதவிகிதத்திற்கு மேல் அதிகமான அளவுக்குக் கொடுக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதைவிட இன்னொரு கொடுமை.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் என்ன கிரீமிலேயர்?


நான்காவதாக ஒரு காரணத்தைச் சொல்கின்றேன்.Backward class என்கிற செக்சன். 3 டயரில் - மூன்று அடுக்குகளில் நடுவில் உள்ள பகுதிக்கு நடு அடுக்கில் உள்ளவர்களுக்கு மட்டும் கிரீமிலேயரைப் புகுத்தியிருக்கிறார்கள்.

முதல் அடுக்கான முன்னேறிய ஜாதிக்காரர்களுக்கு கிரீமிலேயர் கொடுக்கவில்லை. அது அப்ளை ஆகவில்லை. அவர்களுக்கு கிரீமிலேயர் கிடையாது.

செட்யூல்டு காஸ்ட், செட்யூல்டு டிரைப்புக்கு அதாவது மூன் றாவது அடுக்கில் உள்ளவர்களுக்கு கிரீமிலேயர் கிடையாது.

நடுவிலே இருக்கின்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் கிரீமிலேயர் இருக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? இப்படி சொல்வதினாலே தாழ்த்தப்பட்ட வர்களுக்கும் கிரீமிலேயர் கொண்டு வர வேண்டும் என்பது அர்த்தமாகாது. இந்தக் கருத்து அது அல்ல.

மாறாக யாருக்குமே கிரீமிலேயர் இருக்கக் கூடாது. பொருளா தார உதவி செய்வது என்பது வேறு. ரொம்ப பேர் ஏழைகளுக்கு உதவ வேண்டாமா? என்று கேட்டார்கள்.

ஏழைகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கிறார்கள். ஏழைகளுக்கு கடன் கொடுக்கிறார்கள். அது மாதிரி என்ன உதவி வேண்டுமானாலும் தாராளமாகக் கொடுக்கட்டும்.

எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அந்த இட ஒதுக்கீடு என்பது காலம் காலமாக இழைக்கப்பட்ட சமூக நீதியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக.

கடைசியாக, அய்ந்தாவது காரணம் பிற்படுத்தப்பட்ட மக்களில் - வருமான வசதி படைத்த மக்களே அடித்துக் கொண்டு போய்விடுகிறார்கள் அடித்தட்டிலே இருக்கிறவர்களுக்கு கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டுத்தான் சொல்கிறோம் என்று நீதிபதிகளும், மற்றவர்களும் சொல்லுகின்றார்கள்.

இதை எப்பொழுது சொல்ல வேண்டும். இன்னும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கே மத்திய அரசாங்கத்தில் முதல் முறையாக கதவு திறக்கவில்லை. இது இன்னும் முன்னோட்டத்திற்கே வரவில்லை.

நாங்கள் அடிக்கடி சொல்கின்ற உதாரணம் தான். விருந்தில் இன்னும் சாப்பிடவே எங்களை உள்ளே விடவில்லை. அதற்கு முன்னாலே எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். காரணம் இப்பொழுதுதான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முதன் முறையாக கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த டிரையல் 10 வருடம் நடந்து அதற்குப் பிறகு சொன்னால் கூட அர்த்தம் இருக்கிறது. அப்படியே சொன்னால் கூட - யார் சொல்ல வேண்டும்?

சொல்ல வேண்டியவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்

முன்னேறிய ஜாதிக்காரர்கள் சொல்லக்கூடாது. முன்னேறிய ஜாதிக்காரர்கள் நடத்தக்கூடிய ஊடகங்கள், பத்திரிகைகள் சொல்லக்கூடாது. அதை சொல்ல வேண்டியவர்கள் பாதிக்கப் பட்ட பிற்படுத்தப்பட்டவர்கள். இப்படி சொல்லுகிறவர்கள் பூராவும் முன்னேறிய ஜாதிக்காரர்கள் தான் - கிரீமிலேயர் வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். அப்படியானால் அது உள்நோக்கம் கொண்டது. பிற்படுத்தப்பட்டவர்களில் ஆள் கிடைக்க மாட்டான். அதில் காலி இடம் இருக்கிறது. அந்த காலி இடம் முன்னேறிய ஜாதியினரான எங்களுக்கு வருவதற்கு வசதியாகப் போய்விட்டது என்று நினைக்கிறார்கள் - சொல்லுகிறார்கள்.

கிரீமிலேயர் உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது

எதை முன்வாசல் வழியாகக் கொண்டு வரமுடியவில்லையோ அதைப் பின் வாசல் வழியாகக் கொண்டு வருகின்றார்கள். ஆகவே தான் கிரீமிலேயர் என்பதை உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டதே என்று சொல்லாமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 1950இல் கம்யூனல் ஜி.ஓ.விற்கு எப்படி ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து அந்தத் திருத்தத்தில் தெளிவாக 15(4) என்பதைப் புகுத்தினார்களோ அதே போல இப்போது நடக்கக் கூடிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கூட - இந்த நடப்புத் தொடரிலே கூட ரொம்ப சீக்கிரமாக என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால், ஒரு தனி அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

அரசியல் சட்டத்திருத்தம்தான் ஒரே வழி

பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணும் பொழுது, பொருளாதார அளவுகோலைப் புகுத்தக் கூடாது என்ற அரசியல் சட்டத்தை மீண்டும் வலியுறுத்தி ஏற்கெனவே உச்சநீதிமன்றம் இந்தத் தீர்மானத்தைக் கொடுத்திருப்பதினாலே அதைத் தாண்டிச் செல்வதற்கு அரசியல் கூட்டத் திருத்தம் தான் ஒரே வழி.

ஆகவே கிரீமிலேயர் என்ற பொருளாதார அடிப்படை இருக்கக் கூடாது. ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொன்னால் தனியே நிதி ஏற்படுத்தி வைத்து உதவி செய்யலாம்.

29-ந் தேதி மறியல்

சும்மா வாக்கு வங்கி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக வாக்கு வங்கி அரசியலுக்காக இதைப் பயன்படுத் துவதினாலே எந்தப் பயனும் ஏற்படாது. அதை வலியுறுத்தி மத்திய அரசாங்கத்தினுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக வருகின்ற 29ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் - முக்கிய நகரங்களிலே மத்திய அரசாங்க அலு வலகங்களுக்கு முன்னாலே மறியல் போராட்டம் நடைபெறும். வெறும் ஆர்ப்பாட்டம் என்றால் பல நேரங்களில் பயனில்லை.

மறியல் கைதாவார்கள்


மறியல் என்றால் கைதாவார்கள். எவ்வளவு பேர் வந்தார்கள். எவ்வளவு பேர் கைதானார்கள்? எவ்வளவு பேர் அக்கறையோடு இருந்தார்கள் என்கிற செய்தி போக வேண்டுமே தவிர, நாங்கள் எந்த அரசாங்கத்திற்கும் தொல்லை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அல்ல. இந்தக் கருத்துகளை சொல்வதற்கு மறியல் ஒரு வழி முறையாக அறப் போராட்டமாக இது நடக்கும். உங்களுக்குத் தெரியும் திராவிடர் கழகப் போராட்டத்தில் ஒரு சிறு பிரச்சினை கூட இருக்காது. ஆகவே இது ரொம்ப மிக முக்கியமான பிரச்சினை.

இவ்வாறு தமிழர் தலைவர் பேட்டி அளித்தார்.

---------------நன்றி: "விடுதலை" 23-12-2008