Search This Blog

31.3.09

திருக்குறள் பற்றி பெரியார் சொன்னது சரியான கருத்தா?




தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம்
என்று மமதை கொள்ளாமல் பெற்ற வெற்றிக்கனியை
பெரியாருக்குக் காணிக்கையாக்கியவர் அண்ணா!

தமிழர் தலைவர் தெளிவான விளக்கவுரை


தான் தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்று மமதை கொள்ளாமல் 200 மைல்களுக்கு அப்பால் சென்று வெற்றிக்கனியை தன்னுடைய தலைவரான தந்தை பெரியாருக்கு நன்றிக் காணிக்கையாக்கியவர் அண்ணா என்று திராவிடர்கழகத்தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னைப்பல்கலைக் கழகத்தில் - ஈரோடு முதல் காஞ்சி வரை என்ற தலைப்பில் அண்ணா நினைவுநாளில் 3.2.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

அதிலே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறு என்னவென்று அண்ணா சொல்லுகின்றார்.

ஈரோட்டை முதலாகக் கொண்டிருக்கின்ற காஞ்சி அண்ணா நன்றி யுணர்ச்சியோடு சொல்கின்றார்.

எவ்வளவு மரியாதையோடு - அந்த குருகுலத் தினுடைய பயனை அவர்கள் எப்படிச்சுட்டிக் காட்டுகிறார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

லட்சக்கணக்கானவர்களில் ஒருவனாக இருக் கிறேன் என்று அண்ணா அவர்கள் சொல்கின்றார்.

இப்படிச்சொல்லும் பொழுது அவர்கள் முதலமைச்சர். தமிழ்நாட்டின் தன்னிகரற்ற முதலமைச் சர். இன்னும் கேட்டால் தன்னுடைய தந்தை தன்னுடைய வழிகாட்டி அவர் தன்னை எதிர்த்த பிற்பாடு, அதையும் மீறி வெற்றி பெற்று, இரு நூறு மைல்களுக்கு அப்பாலே சென்று அவரு டைய வெற்றிச்சாதனையை - வெற்றிக்கனியை அய்யா அவர்களிடம் கொண்டு சென்று காட்டி ஒரு தனி வரலாற்றை உருவாக்கி, நன்றி உணர்ச்சியை காட்டிய ஒரு முதலமைச்சர் அண்ணா அவர்கள் ஆவார்கள்.

மற்றவர்களாக இருந்தால் என்ன நினைப்பார்கள்? தன்னுடைய தலைவரையே எதிர்த்துக் காட்டி வெற்றி பெற்று விட்டோமே என்பதை அண்ணா அறியாதவர். அண்ணா அவர்களு டைய எளிமை, அண்ணா அவர்களுடைய நன்றி அப்படிப்பட்டது என்பதை நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். இது நமக்கு. அண்ணா - பெரியார் உறவுக்காக அல்ல, வாழ்க்கையிலே தெரிந்து கொள்ளக் கூடிய வாழ்வியல் தத்து வங்களிலேயே இது தலை சிறந்த சான்றாகும்.

அண்ணா அவர்களுடைய தன்மை எப்பொழுதுமே அப்படித்தான்.

அண்ணா அவர்கள் வெற்றிபெற்ற நேரத்திலே ஒன்றைச் சொன்னார்கள். வெற்றி பெற்றவர்கள் எப்படியிருக்க வேண்டும். முற்றிய நெற்கதிர் எப்படி தலை சாய்ந்து இருக்கிறதோ அதுபோல வெற்றி பெற்றவர்கள் அடக்கத்தோடு இருக்க வேண்டுமே தவிர, ஆர்ப்பரிக்கக் கூடி யவர்களாக இருக்கக் கூடாது என்று அவர்கள் சொன்னார்கள்.

அண்ணா அவர்களுக்கு எப்பொழுதுமே அந்ந அடக்க உணர்வு உண்டு. அந்த அடக்க உணர்ச்சிக்கு யார் வழி காட்டி என்றால் - அதற்கும் முதல் தந்தை பெரியார் அவர்கள் தான்.

காரணம், தந்தை பெரியார் அவர்களே மிகுந்த அடக்கத்தோடு தான் எல்லாவற்றையும் சொல்லுவார்கள்.

அய்யா அவர்கள்- ஒரு திருமணத்திலே கலந்து கொள்கின்றார்கள். திருக்குறளைப் பற்றி, வள்ளுவரைப் பற்றி அங்கே விவாதம் வருகிறது. மனதிலே பட்டதை யாருக்காகவும் மறைக்காமல் அப்படியே சொல்லுகின்ற உணர்வு அய்யா அவர்களுக்கு உண்டு.

அந்த பிரபலமான திருமணத்திலே பிரபலமான குன்றக்குடி அடிகளார் இருக்கிறார். பல கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள்.

அதோடு திருக்குறள் முனுசாமி அவர்களும் இருக்கின்றார்கள். பெண்ணடிமையைப் பற்றி வள்ளுவர் கருத்து என்ன என்று ஒரு பிரச்சினை வந்தது.

பெரியார் அவர்கள் பேசிக் கொண்டு வருகின்ற பொழுது சொன்னார்கள் - ரொம்பவும் கோப மாகச் சொன்னார்கள்.

மற்ற இடங்களில் நான் வள்ளுவரைப் பற்றிச் சொன்னாலும் கூட, இந்த பெண்ணடிமைத் தனம் என்று வருகின்ற பொழுது வள்ளுவரை நான் மன்னிக்கத் தயாராக இல்லை என்று வேகமாகச் சொன்னார். பெண்ணடிமைத்தனத்தை வள்ளுவர் வற்புறுத்தியவர் தான் என்று சொல்லிவிட்டு தற்காத்துத் தற் ொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்

என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே என்று கேட்டார்.

இதை மாற்றி எங்கேயாவது இருக்கிறதா? வள்ளுவர் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை கொடுக்கவில்லையே.

இன்னொரு குறளையும் அய்யா அவர்கள் எடுத்துச்சொல்கின்றார்.

தெய்வந்தொழஅள் கொழுநன் தொழுதெழு வாள் பெய்யெனப் பெய்யும் மழை

என்று சொன்னால் கற்பு பெண்ணுக்குத்தான் உண்டு என்று வள்ளுவர் சொல்லியிருக்கின்றாரே என்று சொல்லுவார்.

கற்புள்ள பெண் மழை பெய்யும் என்று சொன்னால் பெய்யும் என்றால் இங்கே இருக்கின்ற தாய்மாரை கேட்கின்றேன். இங்கே மழையில்லை. மழைபெய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்னால் மழை பெய்ய வேண்டும். அப்படி மழை பெய்யவில்லை என்று சொன்னால் உங் களுடைய நிலை என்னாவது? உங்களுடைய கற்பு என்னாவது? அப்படியானால் வள்ளுவர் சொல்வது சரிஎன்று ஏற்றுக் கொள்ள முடியுமா? இது அறிவுப்பூர்வமாக இருக்க முடியுமா?

கற்பு என்றால் இரண்டு பேருக்கும் சொல்லியிருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் சொல்ல வில்லையே வள்ளுவர் கூட!

கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தான். அதுவும் ஒரு சாராருக்கு மட்டும் தான் என்று வள்ளுவர் எழுதிவைத்திருக்கின்றாரே. எனவே வள்ளுவரே தவறு இழைத்திருக்கிறாரே.

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு

என்று சொல்லி விட்டுச் சொன்னார், இவ்வளவும் நான் ஏன் பேசுகிறேன் என்றால் வள்ளுவத்தில் ஊறிப் போன அறிஞர்கள் இங்கே இருக்கின்றார்கள்.

என்னுடைய கருத்து தவறாக இருந்தால், நான் தவறு செய்தால் என்னைத் திருத்துவார்கள் என்பதற்காகத்தான் நான் இந்த அரங்கத்திலே சொல்லுகின்றேன்.

அவர்கள் என்னைத் திருத்துவார்கள் என்று கருதுகின்றேன். திருக்குறளார் என்ன சொல்லு கிறார் என்று அய்யா அவர்கள் கேட்டார். திருக்குறளார் என்னைத் திரும்பிப் பார்த்தார். அவர் ரொம்ப நகைச் சுவையாகப் பேசக்கூடியவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

என்னிடம், என்னப்பா ரொம்ப சங்கடத்தில் விட்டு விட்டாரே என்று சொன்னார். அய்யா திரும்பி என்னிடம் கேட்டார். என்ன அவர் பதில் சொல்கிறார் என்று கேட்டார். வள்ளுவரைக் காப்பாற்ற திருக்குறள் முனுசாமி இல்லையா? பிறன்மனை நோக்காப் பேராண்மை என்று ஒரு திருக்குறள் இருக்கிறது. வள்ளுவரை காப்பாற்றுவதற்காக திருக்குறள் முனுசாமியார் சொன்னார். அய்யா அவர்கள் பட்டென்று பதில் சொன்னார். கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. கம்ப்யூட்டரைத் தட்டி னால் கூட கொஞ்சம் லேட்டாகும்.

அய்யா அவர்கள் உடனே சொன்னார். சரிங்க நானும் படித்திருக்கின்றேன். அது திருட்டுங்க.

அடுத்தவன் பொருளைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கின்றான். (சிரிப்பு - கைத்தட்டல்)

விதவைக்கு சொல்லியிருக்கின்றானா? என்று கேட்டார் (சிரிப்பு - கைத்தட்டல்)

திருமணம் ஆகாத பெண்ணுக்குச் சொல்லியிருக்கின்றானா? என்று கேட்டார். அது இன் னொருவருடைய மனைவியைப் பற்றிச் சொல்லி யிருக்கின்றான்.

பிறன்மனை நோக்காப் பேராண்மை இன்னொருவருடைய பொருளைத் திருடாதே என்று சொல்லியிருக்கின்றார். திருமணம் ஆகாத பெண்ணைப் பற்றிச் சொல்லியிருக்கின்றாரா? ஆகவே திருட்டைப் பற்றிச் சொல்லியிருக்கின்றாரே - தவிர, திருமணம் ஆகாத பெண்ணைப் பற்றிச் சொல்லியிருக்கின்றாரா? அல்லது விதவையான வர்களைப் பற்றிச் சொல்லி யிருக்கின்றாரா? என்று கேட்டார். உடனே திருக்குறளார் இல்லீங்க! இல்லீங்க! அய்யா சொல்லுவது சரிதாங்க! சரிதாங்க! என்று சொன்னார்.


என் உளம்கனிந்த நன்றி! பெரியாருக்குக் காணிக்கை. மேலும் அண்ணா சொல் கின்றார். பெரியார் அவர் கள் இன்னும் பன்னெடுங் காலம் நம்மோடு வாழ்ந் திருந்து யாரும் தாழ்ந்து விடாமல் என்று சொல்லி இவ்வளவு பெரிய வாய்ப்பு எனக்கு ஒருவனாக இருந்து கிடைத்ததிலே மிகுந்த மகிழ்ச்சியடை கின்றேன்.

என்னுடைய உளம் கனிந்த நன்றியைப் பெரியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கிக் கொள்கின்றேன். அவருடைய அன்பினையும், ஆதரவினையும் பெற்றவன் என்ற முறையிலே இன்றைய தினம் (இது பல பேருக்குத் தெரிய வேண்டிய செய்திகள். அண்ணா அவர்கள் அவ் வப்பொழுது பதிவு செய்த நேரத்திலே இந்தப் பதிவுகள் முக்கியம். இந்தப் புத்தகம் சிறிய நூலாக இருக்கலாம். ஆய்வுக்குரியவை அண்ணா அவர்களுடைய நூல்களைப் பற்றி தனித்தனியே ஆய்வு செய்யுங்கள். அதில் பல பகுத்தறிவுப்பண்புகள் மட்டுமல்ல - மனிதநேயம் வளரும். எங்களைப் போன்றவர்களை அழைத்தால் நாங்கள் வந்து எப்பொழுதும் வகுப்பெடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் கட்டணம் வாங்காமலேயே. இதனால் நம்முடைய துணைவேந்தருக்குப் பொருளாதாரச்சிக்கல் கூட இருக்காது. ஆகவே அப்படிப்பட்ட ஒரு நிலையிலே இந்தக் கருத்துகள் ரொம்ப ஆழமானது. எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார்கள் பாருங்கள். அடுத்து அண்ணா சொல்கிறார்.) என்னுடைய உளம் கலந்த நன்றியை நான் பெரியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கிக் கொள்ளுகின்றேன்.

அண்ணா அவர்கள் போடுகின்ற சொல் ஒவ்வொன்றும் ஆழமானது. அய்யா அவர்களைப் போல, அண்ணா அவர்களைப் போல சொற்களைப் பயன்படுத்தியவர்கள் வேறு யாருமே கிடையாது. அய்யா அவர்களுடைய கடுமொழியைக் கேட்காதவர். அவர்களுடைய அன்பினையும், ஆதரவினையும் பெற்றவன் என்கின்ற முறையில், என்றைய தினமும் அவர் களுடைய கடுமொழியைக் கேட்காதவன் என்ற முறையிலே சொல்லுகிறேன் என்று சொல் கின்றார்.

அய்யா அவர்களிடத்திலே அண்ணா அவர்கள் சம்பளம் வாங்கிய ஊழியராக இருந்தார். ஆனால் அந்தக் காலகட்டத்திலே கூட, கடுமொழியை அய்யா அவர்களிடமிருந்து அவர்கள் பெற்றதில்லை. அய்யா அவர்களிடத்திலே பணியாற்றியவர்கள் சிலர் - அல்லது பலர் கடுமொழியைப் பெற்றிருக்கின்றார்கள். அந்த ஆராய்ச்சி இப்பொழுது தேவையில்லை. மற்றவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்லியிருக் கின்றார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் திருச்சி ஊர்வலத்தில் அய்யா அவர்களின் தனிப்பட்ட பாசத்திற்கு என்னுடைய இதயம் கலந்த கனிவு நிறைந்த முதலமைச்சராக இருக்கின்ற நிலையிலே அண்ணா அவர்கள் சொல்லியிருக்கின்றார் எவ்வளவு அற்புதமான சொல்லாட்சியைப் பயன்படுத்துகிறார்கள் பாருங்கள்.

17.09.1967 இலே திருச்சியிலே முதலமைச்சர் அண்ணா அவர்கள் - இப்படிப் பேசுகின்றார். நாங்கள் தான் அழைத்தோம். 18 ஆண்டுகளுக்குப் பின்னாலே அய்யாவும், அண்ணாவும் ஒன் றாக ஊர்வலத்தில் வருகிறார்கள்.

திருச்சி நகரத்திலேயே ஒரு கலகலப்பு. அதை எதிர்பார்க்கவே இல்லை யாருமே.

இருவரும் ஒன்றாக ஊர்வலத்திலே வருவார்கள் என்று கூட நினைக்க முடியாத ஒரு நிலை. அதிலே எனக்கு ஒரு பெரிய அனுபவமும் உண்டு. ஒரு பெரிய பங்கும் உண்டு.

அதையே உங்களுக்குச் சொன்னால் சுவையாக இருக்கும். இப்படி எவ்வளவு நேரம் வேண்டு மானாலும் சொல்லிக் கொண்டேயிருக்கலாம்.) என்னுடைய தூய்மை நிறைந்த வணக்கத்தை, மரியாதையை என்னிடமிருக்கின்ற தனிப்பட்ட பாசத்திற்கு, என்னுடைய இதயம் கலந்த, கனிவு நிறைந்த நட்பு மிகுந்த தூய்மை நிறைந்த (இப்படி எத்தனைச் சொற்கள் இருக்கிறது பாருங்கள்). வணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித் துக்கொள்கிறேன் என்று சொல்லுகின்றார். மிக அழகாக எண்ணிப் பார்க்க வேண்டிய செய்தி. அண்ணா அவர்கள் 1967 இல் முதலமைச்சரான நிலை, ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.


மக்களாட்சி ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முன்னாலே ஆட்சியில் இருந்தவர்கள் மக்களோடு தொடர்பு இல்லாத ஒரு சூழ்நிலை இருந்தது.

அண்ணா அவர்கள் முதலமைச்சராக ஆனவுடனே எங்கே பார்த்தாலும் அண்ணா அவர்களைப் பார்க்க ஒரே கூட்டம். அண்ணா ஏன் உதய சூரியனைத் தேர்ந்தெடுத்தார்? அண்ணா அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு இந்தப் பதவி வாழ்க்கை என்பது பொருந்தாத ஒன்று. அண்ணா அவர்களு டைய வாழ்க்கை முறை என்ன? இரவெல்லாம் படிப்பார். இரவெல்லாம் எழுதுவார். அண்ணா அவர்கள் விடியற்காலை 4 மணிக்குப் படுப்பார். பிறகு எழுந்து 11 மணிக்கு எழுதுவார். நாங்களெல்லாம் கூட வேடிக்கையாகச் சொல்வதுண்டு.

அண்ணா அவர்கள் ஏன் உதய சூரியன் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்று சொன்னால் அப்பொழுதுதாவது தேர்தல் சின்னமாகப் பார்க்கலாம் என்பதற்காக உதயசூரியன் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார் போலிருக்கிறது என்று நகைச்சுவையாக, வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஏனென்றால் அண்ணா அவர்கள் இரவு படிக்கப் புத்தகத்தை எடுத்தால் அதை முடிக்காமல் படுக்க மாட்டார்.


எழுதும் பொழுதுகூட சாதாரணமாக பெரியார் அவர்களுடைய சிக்கனத்தைக் கடைப்பிடிப்பார். அய்யா அவர்களுக்கு சாதாரணமாக யாராவது கடிதம் எழுதினால் - அவர்களே பொறுமை யாக இருந்து அந்தக் கடிதத்தின் கவரைக் கிழித்த உடனே போட மாட்டார். நாமாக இருந் தால் அந்தக் கவரைக் கிழித்து குப்பையிலே போட்டு விடுவோம். இது அவருடைய சிக்கனத் திற்கு ஓர் அற்புதமான உதாரணம். அய்யாவின் சிக்கனம் அந்த கவர் களைப் பிரித்து நன்றாக மடித்து ஒரு கிளிப்பை எடுத்து அதற்குள் வைப்பார்.

---------------தொடரும் .... "விடுதலை" 31-3-2009

தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணியை ஆதரிக்க வேண்டும் ஏன்?




மதச்சார்பின்மை, சமூகநீதி காக்கப்பட
தி.மு.க. தலைமையிலான அணியையே ஆதரிப்போம்!

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானம்

நடக்க விருக்கும் 15 ஆம் மக்கள வைக்கான தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பது என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

31.3.2009 செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திட லில் துரை.சக்கரவர்த்தி நினைவரங்கில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் எண் 1:

மக்களவைத் தேர்தலும் - தமிழர்களின் கடமையும்

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் குறைந்த பட்சம் மூன்று அணிகளாகப் பிரிந்து தேர்தலை சந்திக்கவிருக்கின்றன.

(1) காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியாகும்.

5 ஆண்டு காலம் நிலையான ஆட்சியைத் தந்துள்ளது. இடையில் இவ்வாட்சியைக் கலைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டு நிலைத்த தன்மையை (Stability) நிரூபித்துக் காட்டி யுள்ளது.

இந்த ஆட்சி அமைந்த தன் மூலம் மத்தியில் மதவாத சக்திகள் ஆளும் வாய்ப்பு முறியடிக்கப்பட்டது.

ஏற்கெனவேயிருந்த மதவாத சக்தியான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார்பின்மை தகர்க்கப்பட்டது. கல்வித் திட்டங்களில் மத வாதக் கருத்துகள் திணிக்கப்பட்டன. பல்கலைக் கழகங்களில் ஜோதிட மூடநம்பிக்கைகள் பாடங்களாக வைக்கப்பட்டன. வேதக்கணிதம் என்ற பார்ப்பனீயத் தன்மையுள்ள பாட முறைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டன.

வரலாறுகள் திரித்து எழுதப்பட்டன. சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று - கணினி மூலம் எருதைக் குதிரையாக்கிக் காட்டி திரிபு வேலை செய்யப்பட்டது.

மத்தியில் இத்தகு ஆட்சி வீழ்த்தப்பட்டு, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) அரசு கடந்த 5 ஆண்டுகாலம் நடைபெற்றது. கீழ்க்கண்ட நலன்கள், வளங்கள் நாட்டுக் குக் கிடைத்துள்ளன.

அ) மதச் சார்பின்மை உறுதி செய்யப்பட்டது.

ஆ) சமூக நீதிக் கண்ணோட்டத்தில் பிற்படுத்தப் பட்டோருக்கு உயர்கல்வியில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு முதன் முதலாக அளிக்கப்பட் டது. அகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவ மேற்படிப்புகான (Post Graduate) தேர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு முதன் முதலாக இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யப்பட்டது.

பயிற்சிக் காலத்திலும் (Apprenticeship) இட ஒதுக்கீடு உண்டு என்று உறுதி செய்யப்பட்டது.

மெட்ரிக் கல்வியளவிலான அகில இந்தியத் தேர்வினை (Staff selection Commission) இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் எதில் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

வேலை வாய்ப்பில் காலியிடங்களை நிரப்பும் (Back Log) என்ற முறை மேற்கொள்ளப்பட்டது.

பொருளாதார அளவு கோலை (Creamy Layer) நாம் ஏற்காதவர்கள் என்றாலும் கூட, பெரும்பாலான பிற்படுத் தப்பட்டவர்கள் ஓரளவு பயன் பெறும் வகையில் பொருளாதார அளவு என்பதில் ஆண்டு வருமானம் இரண்டரை லட்ச ரூபாய் என்பது நான்கரை லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது.

சிறுபான்மையினர் நலனுக்காக புதிய அமைச்சகம் உருவாக்கம்; 15 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பெண்களுக்கு முழு சொத்துரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. (இத்தகு சட்டம் ஒன்றைக் கொண்டு வர சட்ட அமைச்சராகயிருந்த டாக்டர் அம்பேத்கர் முயற்சி தோல்வி யடைந்த நிலையில் அமைச் சர் பதவியை உதறி வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.)

"பெண்களை வீட்டு வன் முறையிலிருந்து தடுக்கும் சட்டம்- 2005" நிறைவேற்றப் பட்டது

(இ) தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (100 நாள்களுக்கு வேலை வாய்ப்பு - நாள் ஒன்றுக்கு ரூ.100 சம்பளம்) நடைமுறைப் படுத்தப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை மத்திய அரசின் உதவிகள் பல வகைகளிலும் பாராட் டத்தக்க அளவில் இருந்து வந்திருக்கின்றன. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், கடல்சார் பல்கலைக் கழகம், மத்திய பல்கலைக் கழகம், நெடுஞ்சாலைகள் வளர்ச்சி, பிருமாண்டமான மேம்பாலங்கள், மகத்தான தகவல் தொடர்பு வசதி சாதனைகள் என்று அடுக்கடுக்கான திட்டங்கள் செயல்படுத் தப்படுகின்றன.

2004 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ் நாட்டில் மானமிகு கலைஞர் அவர்கள் மதி நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளடக்கிய 40 இடங்களிலும் பெற்ற வெற்றிதான் மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 5 ஆண்டு காலம் உறுதியாக நிலை பெற்றதற்கு முக்கிய அடிப்படையான காரணமாகும்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு அய்ந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய அம்சங்களையெல்லாம் மூன்றாண்டு காலத்திலேயே நிறைவேற்றி தமிழ்நாட்டினை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் அரிய சாதனைகளைச் செய்து வருவதோடு, மத்திய ஆட்சிக்கும் வழி காட்டும் மூத்த தலைவராக முதல் அமைச்சர் கலைஞர் பரிணமித்துக் கொண்டு இருக்கிறார்.

நடக்க இருக்கும் 15 ஆம் மக்களவைத் தேர்தலில் அதே தன்மையில் 40 இடங்களிலும் வெற்றி பெற வைப்பதன் மூலம் மேலும் பிருமாண்டமான வளர்ச்சியியை நோக்கி நாட்டை அழைத்துச் செல்லும் வாய்ப்பினை தமிழ்நாடு வாக்காளப் பெருமக்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டுமாய் திராவிடர் கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


(2) இரண்டாம் அணி என்று கருதப்படும் பா.ஜ.க. தலை மையிலான அணி மக்களிடம் எதை முன்னிறுத்துவது என் பதில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் நாக்பூரில் நடைபெற்ற பாரதிய ஜனதாவின் தலைமைக் குழுக் கூட்டத்தில் ராமன் கோயில் பிரச்சினையை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர். எந்த நிலையிலும் அது தோற்கடிக் கப்பட வேண்டியதேயாகும். தமிழ் நாட்டைப் பொறுத்த வரை அந்த அணி முகவரி யின்றி முடக்கப்படும் என்பதில் அய்யமில்லை. தமிழ் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ராமனைக் காட்டி முடக்கியது பா.ஜ.க. என்பதைத் தமிழர்கள் மறக்கவே கூடாது.


(3) இடது சாரிகளின் முயற்சியால் முன்னிறுத்தப் படும் மூன்றாம் அணி என்பது முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட கலவையாகும். தேர்தலுக்குப் பின் அந்த அணிகள் வெவ்வேறு திசை நோக்கிப் பறக்கக் கூடியவை என்பதற்கான அடையாளம் இப்பொழுதே தெளிவாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது.

தமிழ்நாட்டில் மிக முக்கிய பிரச்சினையான ஈழத் தமிழர் வாழ்வுரிமை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றில் கூட ஒருமைப்பாடு இல்லாத அ.இ.அ.தி.மு.க. வின் தலைமையிலான கட்சிகளின் கூட்டணி அது. பொடா போன்ற சட்டத்தை விருப்பு - வெறுப்பு அடிப்படையில் முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா பயன்படுத்தியதையும் எளிதில் யாரும் மறுக்க முடியாது. அந்த அநியாயத் தாக்குதலுக்கு ஆளானவர்களே அந்த அணியில் இருப்பது எந்த அடிப்படையில் என்பதையும் சிந்திக்க வேண்டும். தேர்தலுக்கு முன், தேர்தலுக்குப் பின் என்று இரு வேறு முரண்பட்ட நிலைகளை எடுக்கக் கூடிய அணியாகவே இது அமைந்துள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பதில் அவர்களுக்குள்ளாகவே கடுமையான மோதல் இருப்பதையும் வாக்காளர்கள் கவனிக்கத் தவறக்கூடாது. இந்தக் குழப் பத்தால், மீண்டும் ஒரு தேர்தலை மக்கள் மத்தியில் திணிக்கும் ஒரு நிலை ஏற்படாமல் தவிர்க்கவும் இந்த மூன்றாவது அணியைத் தோற்கடிக்க வேண்டியது வாக்காளர்களின் கடமை என்பதை இச்செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.

நடைபெறவிருப்பது மத்திய ஆட்சிக்கான நாடாளுமன்றத் தேர்தல். இதில் தனியாகப் போட்டியிடுவேன் என்று சிலர் திரைப்படத்தில் துள்ளிக் குதிப்பது போல வீர வசனம் பேசலாம். வசீகரத்துக்கோ, ரசனைக்கோ பலியாகி அவர்களுக்கு அளிக்கும் வாக்குகள் பயனற்றவையாகி விடும். இவர்களுக்கு வாக்காளர்கள் என்பவர்கள் விளையாட்டுக் கருவிகளைப் போன்றவர்கள். அப்படியே ஒரு சிலர் வெற்றி பெற்றாலும்கூட பதவி, பொருள், ஆதாயம் என்கிற கண்ணி வெடிகளில் சிக்கிக் கொள்வார்கள். இதனையும் முக்கியமாகக் கருத்தில் கொள்ளுமாறு தமிழக வாக்காளப் பெருமக்களை, குறிப்பாக இளைஞர்களை இச்செயற் குழு கேட்டுக் கொள்கிறது.


(4) தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த கவலை யோடும், பொறுப்புணர்ச்சி யோடும் அணுகப்படக் கூடியது ஈழத் தமிழர்களின் பிரச்சினையாகும்.

இரண்டாம் அணி, மூன்றாம் அணி ஆகியவற்றில் அடங்கியுள்ள கட்சிகளுக்கிடையே இது குறித்து முரண்பட்ட கருத்துக்களும், அணுகு முறைகளும் உண்டு என்பதை இச்செயற்குழு சுட்டிக் காட்ட விரும்புகிறது.

தி.மு.க.வைப் பொறுத்த வரை தொடக்க முதல் இந்தப் பிரச்சினையில் அக்கறை கொண்ட திராவிடர் இயக்க மாகும். இந்தப் பிரச்சினைக்காக இரண்டு முறை ஆட் சியைக் கூட இழந்திருக்கிறது.


தமிழ்நாடு சட்டசபை மூலமும், மக்கள் போராட்ட மூலமும், நேற்றுவரைகூட மத் திய அரசிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்து மத்திய அரசைப் பல வகைகளிலும் செயல்பட வைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகள் அளிக்கப்படவேண்டும் என்பது நமது கோரிக்கைகளில் முக் கியமானதாகும் -அது நிறை வேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் செயல்பாடுகள் காரணமாக வெளி நாடுகளும் இந்தப் பிரச்சினையில் தலையிடும் ஒரு சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இது ஒரு நல்ல திருப்பமாகும். நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணிக்கு முழு வெற்றியை ஈட்டிக் கொடுப்பதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினையில் மேலும் கடுமையான அழுத்தத்தைக் கொடுக்க வாய்ப்பு அதிகமாகும் என்பதையும் திராவிடர் கழகச் செயற்குழு தொலைநோக்குப் பார்வையோடு தெரிவித்துக் கொள்கிறது.

செய்தியாளர்கள் கூட் டத்தில் நேற்று (30.3.2009) பேசிய முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தமிழ் ஈழம் மலரு வதை முதலாவதாக வர வேற்று மகிழ்வதில் நானாக வேயிருப்பேன் என்று கூறி யுள்ளதையும் தமிழின வாக் காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்லா வகைகளிலும் சீர்தூக்கி - நாடு வளம் பெற, மக்கள் நலம் பெற, சமூக நீதி வெற்றி பெற, மதச் சார்பின்மை உறுதிப்பட, கல்வி வேலை வாய்ப்புகளுக்கு உத் தரவாதம் கிடைக்க, மக்கள் தொகையில் சம பகுதியின ரான பெண்களின் உரிமைகள் ஈட்டப்பட, விவசாயம் இலாபம் உள்ள தொழிலாக உருவாக்கப்பட, (காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது) தொழிலாளர்கள் ஏற்றம் பெற, மதவாதம் தோற்கடிக்கப்பட, வரும் 15 ஆம் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலும், இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலும் அணி வகுக்கும் கட்சிகளுக்கு வாக்குகள் அளித்துப் பிரமிக்கத்தக்க வெற்றியை ஈட்டித் தருமாறு திராவிடர் கழகச் செயற்குழு தமிழ்நாடு வாக்காளப் பெரு மக்களை ஒரு மனதாகக் கேட்டுக் கொள்கிறது.

தி.மு.க., காங்கிரஸ், விடு தலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களையே ஆதரித்து, வெற்றி பெறச் செய்ய திராவிடர் கழகம் திட்டமிட்ட வகையில் பிரச்சாரம், களப்பணிகள் ஆற்றுமாறு கழகத் தோழர் களை இச்செயற்குழு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.

(ஆ) மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழ் நாடு அரசின் சாதனைகளையும், மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளையும் விளக்கும் நூல் ஒன்றினை கழகத்தின் சார்பில் வெளியிடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

(இ) வரும் 7-4-2009 அன்று திருச்சியில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


-------------------நன்றி:-"விடுதலை" 31-3-2009

பெரியார் கூட்டத்திலே கல், மண் ,சாணியை வீசி கலவரம் செய்தவர்கள் பின்பு உணர்ந்தது என்ன?


"பெரியார் கொள்கையைப் பின்பற்றுகின்ற இலட்சக்கணக்
கானோரில் நானும் ஒருவன்: முதல்வர் அண்ணா"

அண்ணா கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் பேச்சு


தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றுகிற இலட்சக்கணக்கான பேரில் நானும் ஒருவனாக இருப்பதிலே பெருமை அடைகின்றேன் என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா என்று திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னைப்பல்கலைக் கழகத்தில் - ஈரோடு முதல் காஞ்சி வரை என்ற தலைப்பில் அண்ணா நினைவுநாளில் 3.2.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-


அதே போல அண்ணா அவர்கள் தன்னுடைய பழைய சம்பவத்தைச் சொல்லுகின்றார்கள்.

சிவகங்கையிலே ஊர் முழுக்க இருக்கின்ற பழைய செருப்புகளைக் கட்டித் தோரணமாகத் தொங்கவிட்டார்கள்.

இன்று நடந்த ஊர் வலத்தில் மாலை போட்டார்கள். கம்பீரமாகச் செல்லுகின்றோம். ஆங்காங்கே கொடிகளும் அசைந்து அசைந்து - வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றன.

ஆனால் அப்பொழுது சிவகங்கையிலே கட்டியது தோரணங்கள் அல்ல. அறுந்துபோன செருப்புகளை எடுத்துத் தோரணமாகக் கட்டிய வர்களின் பிள்ளைகளில் சிலர் இந்த மண்டலத் திற்கு வந்திருக்கிறார்கள் என்று கருதுகின்றேன்.

(அண்ணா அவர்களே இவ்வளவு அழகாகச் சொல்லுகின்றார்கள்)

அன்றைக்குப் பல பேர் தந்தை பெரியார் அவர்களிடத்திலே வந்து நாங்கள் தான் இந்தக் கூட்டத்திலே கல் வீசினோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். பெரியாரிடத்திலே சொன்னது பெருமை அல்ல. பெரியாருடைய தொண்டர்களாகிய எங்களிடத்திலேயே சொல்லி யிருக்கின்றார்கள்.

அய்யா, அந்த சாணியை எடுத்துத்தூக்கி எறிந்தது நாங்கள் தான். உங்கள் கூட்டத்திலே கல், மண் வீசி கலவரம் செய்தது நாங்கள் தான் என்று அவர்கள் சொல்லுகிற பொழுது, இந்தக் கொள்கையில் உறுதியாக நின்று பிரச்சாரம் செய்வதற்கு எப்படிப்பட்டவர்கள் வந்தார்கள் என்பதை அண்ணா அவர்கள் எவ்வளவு பெரிய வாய்ப்பாகச் சொல்லுகிறார்கள் பாருங்கள்.

ஈரோட்டிலே தொடங்கி அது காஞ்சியிலே எப்படிப்பட்ட திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை காஞ்சியிலே பிறந்த அண்ணா அவர்கள் சொல்லுகின்றார்கள்.

காஞ்சி என்று சொன்னாலே அது அண்ணா என்பது தான் பெருமை. காஞ்சிக்கு வேறு பெரு மைகள் கிடையாது. காஞ்சி என்றால் அண்ணா என்பதை மக்கள் மன்றம் இப்பொழுது தெளி வாகப் புரிந்திருக்கிறது.

வரலாற்றுப் பேராசிரியர்கள் களப்பிரர் காலத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். இந்த காஞ்சிதான் ஒரு காலத்திலே அறிவுக்கே ஆதாரமாக விளங்கிய நகரமாகும். பவுத்தம் என்று சொல்லக்கூடிய புத்தம் இருந்த மண்.

புத்தம் என்றாலே தந்தை பெரியார் மிக அழகாகச் சொன்னார்கள். புத்தர் பற்றிய கருத் தரங்கத்திலே தந்தை பெரியார் அவர்கள் பேசி விட்டுச் சொன்னார்கள். புத்தர் என்றால் அவர் தான் என்று நீங்கள் நினைக்காதீர்கள்.

புத்தியைப் பயன்படுத்துகின்ற எல்லோரும் புத்தர்தான். புத்தி என்பதிலிருந்து தான் புத்தம் என்பது வந்தது. நாகபுரியில் நடைபெற்ற பல்கலைக்கழக ஆய்வுச் சொற்பொழிவிலே இதை நான் குறிப்பிட்டேன்.

நாகபுரி பல்கலைக் கழகத்தில் நான் பேசி முடித்தவுடனே என் கையைப் பிடித்துக் கொண்டார்கள். நாங்களும் இதுவரை பாலி மொழியிலே பல முறை ஆராய்ந்திருக்கின்றோம். சித்தார்த்தன் என்று எப்படி பெயர் வந்தது? சித்தார்த்தர் புத்தராக மாறினார். புத்தராக மாறி னார் என்று வகுப்புகளிலே சொல்லிக் கொடுத்திருக்கின்றோம்.

ஆனால் இன்றைக்கு தந்தை பெரியார் சொன்ன விளக்கத்தை நீங்கள் சொன்ன பிற்பாடுதான், உள்ளபடியே எங்களுக்குத் தெளிவாயிற்று.

பாலி மொழியிலே இருந்து தான் புத்தி என்பது - புத்தன் என்று வந்திருக்கிறது என்பதை - உங்கள் உரையின் மூலமாகத் தெரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் அதைப் பாடப் புத்த கத்திலே சேர்த்து விடுவோம் என்று நாகபுரி பல்கலைக் கழகத்திலே ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்னாலே 1985, 86 என்று நினைக்கின்றேன். அப்பொழுது அவர்கள் சொன்னார்கள்.

அது ஒரு நூலாகக் கூட ஆங்கிலத்தில் வந்திருக்கிறது.
அவரை முதலிலே புரிந்து கொள்ள மறுத்தார்கள். புரிந்து கொள்ள மறுத்தவர்கள் பிறகு புரிந்து ஏற்றுக் கொண்டனர். ஏற்றுக் கொண்டவர்களும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தான் அப்பொழுது இருந்தார்கள். உண் மையை உண்மையாகச் சொல்லுகின்றார்கள் மிகைப்படுத்தாமல். அப்பொழுது அவர் பேசியது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்து விட்டது.

ஏற்றுக்கொண்டார்களா? என்பது வேறு. புரிவதற்கே தமிழனை இந்த பாடுபடுத்த வேண்டி யிருக்கிறது. அரங்கசாமி அவர்கள் இங்கே சொன்னார்கள் அல்லவா? அவருக்குக் கோபம், ஆத்திரம் இவைகள் - எல்லாம் வந்தன.

தமிழனுக்கு முதலிலே புரிய வைக்க வேண்டும். புரிந்து கொள்வதற்கே தமிழர்கள் தயாராக இல்லை. அவர்கள் காது கொடுத்துக் கேட்பதற்கே தயாராக இல்லை. அந்த அளவுக்கு இருந்த வர்களை முதலில் புரிய வைத்துவிட்டால் ஈரோட்டு மருந்து வேலை செய்யும் என்பது எங்கள் எல்லோருக்குமே தெளிவாகத் தெரியும்.

அண்ணா அவர்கள் எவ்வளவு பரிதாப உணர்ச்சியோடு அவர்களுக்கே உரிய முறையில் அந்த நளினத்தோடு சொல்லுகிறார்கள் பாருங்கள்.

அது புரிந்து விட்டது. பெரும்பாலோருக்கு அது பிடித்துவிட்டது. அதில் மிகப் பெரும்பா லோர் அவற்றைத் தங்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறார்கள். அது தான் இந்த வெற்றி யினுடைய அடையாள மாகும். இன்றைக்குக் கூட இது போன்ற அரங்கங் களின் கூட்டத்திலே அய்யா அவர்களைப் பற்றியும், அண்ணா அவர்களைப் பற்றியும் அந்தக் கொள்கையைப் பற்றி பேசுவது என்பதனுடைய நோக்கமே கூட, அண்ணாவைப் பார்த்தவர்கள் நம்மிலே பலர் இருக்கின்றோம். இந்தத் தலை முறையினர் வரையிலே தான். அண்ணா அவர்களைப் பார்க்காத தலை முறை வந்திருக்கிறது. நான்காவது தலைமுறை வந்திருப்பதிலே வியப்பில்லை. ஆனால் அண்ணா அவர்களைப் பற்றிப் படிக்காத தலைமுறை யினர் இருக்கக் கூடாது.

அண்ணாவை, அய்யாவைப் படித்தவர்களாக அவர்கள் மாறிவிட்டால் சரியாகப் படித்தால் பிடித்தவர்களாகவும் மாறிவிடுவார்கள்.

இப்படி ஒரு சமூகத்தை நாட்டு மக்களை ஆளாக்கிய பெருமை உலகத்தில் பல தலை வர்களுக்குக் கிடைத்ததில்லை.


நம்முடைய தமிழகத்திலே பெரியார் அவர்களுக்குத்தான் அந்தத் தனிப்பெருமை சேர்ந் திருக்கிறது. அந்தப் பெருமைக் குரியவர்களாக நாம் நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும். எவ்வளவு அற்புதமாகச் சொல்லுகிறார்கள் பாருங்கள்.

அவர்கள் அளித்துள்ள செல்வம் என்கிறார். செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம், அதோடு அறிவுச் செல்வம். அந்த அறிவுச் செல்வத்தைப் பற்றி எவ்வளவு அழகாகச் சொல்லு கிறார்கள் பாருங்கள்.

அவர்கள் காட்டிய இலட்சியப் பாதையிலே நடந்து செல்வதற்கு ஏற்ற ஆற்றல், நமக்கு வர வேண்டும் என்று இன்றைய தினம் நமக்கெல்லாம் அவர் சொல்லுகின்றார். அவரை வாழ்த்துவதற் காக அண்ணா அவர்கள் அழைக்கப்பட்டிருக் கின்றார்கள். திருச்சியிலே பெரியாருடைய பிறந்த நாள் விழா. அந்த விழாவிலே அண்ணா அவர்கள் பேசும் பொழுது சொல்லுகின்றார்.

தந்தை பெரியார் அவர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக நான் வந்திருக்கின்றேன் என்று அண்ணா அவர்கள் அடக்கத்தோடு சொல்லு கின்றார். இந்த அடக்கம் அண்ணா அவர்களை மிக உயர்த்திக்காட்டிய தனித்தன்மையான ஒன்று.

சுயமரியாதை இயக்கம் இந்த கொள்கைகள் என்று வருகின்ற நேரத்திலே கூட எவ்வளவு அழ காகச் சொல்லுகின்றார்கள் பாருங்கள். அந்தப் பெருமைக்குரியவர்களாக நாம் நம்மை ஆளாக்கிக் கொள்ள வேண்டும். அவர் அளித்துள்ள செல்வம், அவர் காட்டிய இலட்சியப் பாதையில் நடந்து செல்வதற்குரிய ஆற்றல் நமக்கு வரவேண்டுமென்று அவர் இன்றைய தினம் நமக்கெல்லாம் வாழ்த்துச் சொல்ல வேண்டும். அந்த வாழ்த்து நமக்குப் புதிய வல்லமையை புதிய உற்சாகத்தைத் தரும் என்பதில் அய்யமில்லை என்று அண்ணா சொல்லு கின்றார். இதற்கு எடுத் துக்காட்டாகத்தான் அய்ந்தாவது முறையாக பொற்கால ஆட்சியை தமிழகத்திலே நடத்திக் கொண்டிருக்கின்ற கலைஞர் அவர்களுடைய செயலாகும் என்பதை எடுத்துச் சொல்ல விழைகின்றோம். அவருடைய வாழ்த்துக்கு வல்லமை உண்டு. வல்லமை என்றால் இதிலே மூடநம்பிக்கை கிடையாது. ஏனென்றால் வாழ்த்துக்கு வல்லமை எப்பொழுது ஏற்படு மென்றால் யார் அந்த வாழ்த்தைக் கொடுக்கின்றார்களோ - அவர்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம், தொடர் துன்பங்கள் ஏற்படுகின்ற பொழுது - நாங்கள் வாளாக இருப்போம், கேடயமாக அதைத் தாங்குவோம் என்று சொல்லக்கூடிய பக்குவம் யாருக்கு இருக்கிறதோ அவர்களுடைய வாழ்த்து தான் பயனுள்ள வாழ்த்தாக இருக்க முடியும்.

நானும், நீங்களும் பயணம் செய்கின்றோம். அப்படி பயணம் செய்கின்ற நேரத்தில் எதிரிகள் நம்மைத் தாக்குகின்ற நேரத்தில் அவர்களை முறியடிப்பதற்கு நம்மோடு துணையாக வரக் கூடியவர்கள் இருந்தால் அவர்கள் வாழ்த்துவது பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் தான் பய னுள்ள நண்பர்கள் என்பது எப்படித் தத்துவரீதியாக மிக முக்கியமானதோ அதே அடிப் படையில் சொல்லுகின்றார்கள்.

அப்படிப்பட்ட வாழ்த்தை நமக்குக் கொடுத்து வழிகாட்டி அழைத்துச் செல்ல பெரியார் அவர்களை கேட்கும் பொழுது, அவரே பார்த்து யார் யார் எந்த வேலைக்கு என்று கருது கின்றாரோ அந்தந்த வேலைக்கு அனுப்பி, தமிழகத்தில் மொத்தத்தில் நன்மை கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்து இன்னும் பன்னெடுங் காலம், நம்மோடு வாழ்ந் திருந்து யாருக்கும் தாழ்ந்து விடாமல், யாரையும் தாக்காமல் எவராலும் சுரண்டப்படாமல், எந்தப் புரட்டுக்கும் ஆளாகாமல் எந்தப் புரட்டையும் மூட்டி விடாமல், தன்னிகரற்ற காலத்தை உருவாக்கித் தந்துவிட்டு அதை அவர் கண்டுகளிக்க வேண்டும்.

அதிலே தான் அவர் கவலை. இலட்சியத்தில் வெளிப்படையாகத் தெரிகின்ற பொன் காவி யத்தை அவர் காண முடியும். அதைக் காணுவதற்கான அறிவாற்றலோடு திறமையோடு, தகுதியோடு தமிழ்மக்கள் இன்றைய தினம் இலட்சக் கணக்கான பேர் பின் பற்றிக் கொண்டிருக் கின்றார்கள். அவர்களிலே ஒருவனாக இருப்பதற்கு வாய்ப்பு எனக்குக் கிடைத்ததிலே மிக்க மகிழ்ச்சி யடைகின்றேன் என்று முதலமைச்சர் அண்ணா அவர்கள் சொல்கின்றார். அவர்களில் ஒருவனாக - இலட்சக்கணக்கான பேர் இருக்கிறார்கள். அதிலே நானும் ஒருவன் என்று முதலமைச்சர் அண்ணா சொன்னார் என்பதுதான் மிக முக்கியம்.

------------------தொடரும்..."விடுதலை" 30-3-2009

30.3.09

பெண்கள் வன்முறைக்கு இலக்காகும் வீட்டுப் பிராணியா?


வீதிக்கு வரவேண்டும் பெண்கள்!

மருத்துவ ஆய்வேடான "லேன் சட்" என்பதில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஊட்டக் கூடியவையே! பெண்களைப்பற்றிய தகவல்கள் அவை. 1,06,000 பெண்கள் ஓராண்டில் தீ விபத்துகளில் பலியாகியுள்ளனர். விபத்தா - வேண்டுமென்றா அன்றித் திட்டமிட்டா என்பது கேள்விக்குறியே!

தேசிய குடும்ப சுகாதாரத்துறை கணக்கெடுப்பின் தகவல்படி திருமணமான பெண்களில் 37.2 சதவிகிதம் பேர் வீட்டுக்குள் வன்முறைகளுக்கு இலக்காகின்றனர்.

பாதிப்புக்கு ஆளாகும் பெண்களில் 75 விழுக் காட்டினர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

இவ்வளவுக் கொடுமைகள் பெண்களுக்கு இழைக்கப்பட்டும், அந்தக் கொடுமைகள் குறித்து காவல்துறைக்குப் புகார் கொடுப்பது என்பது அரிதினும் அரிதே! இவ்வளவுக்கும் பெண்களுக்கென்றே காவல்துறை தனி அலுவலகம்கூட இருக்கின்றது என்றாலும்கூட தன்னிச்சையாக இந்த வாய்ப்புகளைப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாத சிக்கிலில்தான் குடும்பம், சமூகமும் சுற்றுச்சூழலும் இருந்து வருகின்றன!

வீட்டு வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2005 என்ற ஒரு சிறப்பான சட்டம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கென்று இரு முக்கிய சட்டங்கள் நிறை வேற்றப்பட்டன. ஒன்று- பெண்களுக்குச் சொத்துரிமை; இரண்டாவது வீட்டு வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டம் - 2005 ஆகியவையாகும்.

ஆனாலும் இவைபற்றிய விழிப்புணர்வு சமூகத்தின் மத்தியிலே குறிப்பாக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்கள் மத்தியிலே சென்றடையவில்லை என்பதுதான் சோகம்.

பெண்கள் மத்தியிலே கல்வி வளர்ந்திருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், சிந்தனை ரீதியாக - உடல் வலிமை ரீதியாக மேலும் அவர்கள் வளர்த்து எடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.

பொதுவாக பெண்கள் மத்தியில்கூட ஒரு எண்ணம் வலிமையுடன் வளர்ந்திருக்கிறது. தமக்குத் துணை வராக வரக்கூடியவர் தன்னைவிட அதிகம் படித்திருக்க வேண்டும்; தன்னைவிட உயரமானவராக இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு தாழ்வு மனப்பான்மை என்னும் சங்கிலியால் பிணைத்துக் கொள்கிறார்கள். அதுபோலவே, தன்னைவிட வயதிலும் மூத்தவராக இருக்கவேண்டும் என்கிற எண்ணமும் வேறு.

இந்த எண்ணங்கள் எல்லாம் அடியோடு நிர்மூலம் ஆகாதவரை பெண்கள் வன்முறைக்கு இலக்காகும் ஒரு வீட்டுப் பிராணி என்னும் நிலையே தொடரும் - தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

சரி, இதற்கு என்னதான் தீர்வு? தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் பாடத் திட்டங்களில் அடிப்படையாக கட்டாயமாக வைக்கப்படவேண்டும். இது ஏதோ இந்நாட்டில் உள்ள பெண்களுக்கு மட்டுமல்ல; உலகெங்கும் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் பரப்புரை செய்யப்படவேண்டும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்த பட்சத் திட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழியிருந்தும் அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவேயில்லை.

இன்னும் சொல்லப்போனால் 1996 ஆம் ஆண்டுமுதலே இந்தச் சட்டம் இதோ வருகிறது - அதோ வருகிறது! என்று பராக்குக் காட்டப்பட்டே ஏமாற்றப்பட்டுவிட்டது.

இதற்குக் காரணம் குறிப்பிட்ட ஒரு கட்சி என்று கூறி அதன் உண்மையின் விரிவைக் குறைத்திடவோ, சிதைத்திடவோ முடியாது.

எல்லா கட்சிகளிலும் உள்ள ஆண் ஆதிக்க மனப்பான்மைதான் இதற்கு ஆணிவேராகும். ஆண்களால் பெண்களுக்கு என்றைக்கும் விடுதலை இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் கருத்துதான் இந்த இடத்தில், வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக ஒளிர்கிறது.

பெண்கள் களத்திற்கு வரவேண்டும்; போராடாமல் எந்த உரிமையும் இலவசமாகக் கிடைத்துவிடாது; அதற்குரிய விலையைக் கொடுக்கத் தயாராகவேண்டும் - இதுவும் தந்தை பெரியார் என்ற ஆணாகிய தாயின் மனிதநேயக் குரலாகும்.

----------------"விடுதலை" தலையங்கம் 30-3-2009

பெரியார் பிறர் உணர்வுகளை மதிக்கின்ற சமுதாய சீர்த்திருத்தவாதி.





முத்தையா முதலியாரும், அவருடைய துணைவியார் திருமதி இராஜம் அம்மையாரும் தங்கியிருந்தது மயிலாப்பூரில், எண் 10, வடக்கு மாடவீதி, மயிலாப்பூர் என்னும் முகவரியில். மாணவராக, அமைச்சராக, வழக்கறிஞர் தொழிலில் ஓய்வு பெற்ற காலத்திலும் அவர் அந்த வாடகை வீட்டிலேயேதான் சுமார் அய்ம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.

இந்த வீடு இருந்த இடத்தில்தான் இப்போது மயிலாப்பூர் தெப்பக்குளம். குளக்கரை எதிரே வேலூர் லட்சுமி அம்மாள் திருமண மண்டபம் உள்ளது. அவர் குடியிருந்த வேளையில் அந்த வீட்டின் முன் வாயிலிலிருந்து பார்த்தால் கொல்லைப்புறம் தெரியும்.

இங்கே ஒரு குறிப்பிடத்தக்க செய்தி, அவர் ஏறக்குறைய அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாகக் குடியிருந்த இந்த வீடு அவருடைய சொந்த வீடு அல்ல வாடகை வீடுதான். அவ்வளவு செல்வம் படைத்தவராயிருந்தும், வசதியிருந்தும் ஏனோ சென்னையில் அவர் வாழ்ந்த வரையில் அவருக்கெனச் சொந்த வீடு வாங்கவில்லை. வாடகை வீட்டில் வாழ்ந்தவராகவே மறைந்தார்.

ஆனால் அந்த வீட்டிற்குப் பெரியார், அண்ணா, பி.டி.ராஜன், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என்று பலரும் வந்து விருந்தினராகத் தங்கிச் சென்றிருக்கின்றனர்.

அரசியல் தலைவர்களில் முத்தையா முதலியார், பெரியாருடன் கொண்டிருந்த நட்பு மிகவும் ஆத்மார்த்தமான நட்பு, மிகவும் குறிப்பிடத்தக்க நட்பு. அந்நாளில் பெரியார் ஒரு தலைவரான போதிலும் முத்தையா முதலியாரை அவருடைய சீர்த்திருத்த உணர்விற்காகப் போற்றுவதுடன் இல்லத்திற்கு வருகை புரிவதுண்டு. திண்ணையில் உட்கார்ந்து அளவளாவிய நாட்களும் இருந்தன.

***

பெரியாரை மிக உயர்வாகப் போற்றியது போல் பெரியாரும் தன்மனத்தில் முத்தையா முதலியாருக்கு உயர்வான இடம் கொடுத்து இருந்தார். பெரியார் எந்த அளவிற்கு முத்தையா முதலியாருடன்அன்பும், பாசமும் கொண்டிருந்தார் என்பதை விளக்கும் நிகழ்ச்சி இது.

இதில் குறிப்பிடத்தக்கது பெரியார் பகுத்தறிவுவாதி, முரட்டுத்தனமான தோற்றம், பிடிவாதம், கொண்டவர் என்றே பலர் நினைத்தாலும் பெரியார் பிறர் உணர்வுகளை மதிக்கின்ற சமுதாய சீர்த்திருத்தவாதி.

1950 அல்லது 1951இல் முத்தையா முதலியாரின் மனைவி ராஜம் அண்ணி அவர்கள் இறந்துவிட்டார்கள். அவர் இறந்தபோது இந்துச்சமய வழக்கப்படியான இறந்தவருக்-கான சடங்குகள் நடைபெற்றன. பெரியார் இந்தச் சடங்குகள் நிறைவு அடையும்வரை திண்ணையில் உட்கார்ந்திருந்து, அம்மையாருடைய உடல் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, உடலுடன் இடுகாடு வரை பெரியார் தம் அந்த 60 வயதுக் காலத்தில் நடந்து சென்றார் என்றால் இருவரிடையே நிலவிய அந்த நட்பின் ஆழம் மட்டுமல்லாது பெரியாரின் பண்பு நலனும் வெளிப்படும்.


தம்முடைய வழக்கறிஞர் தொழிலில் நேர்மை, கட்டுப்பாடு, ஒழுங்கைக் கடைப்பிடித்-திருக்கிறார். இவரைத் தேடி வரும் கட்சிக்காரர்கள் பங்கில் நியாயம் இருந்தால் நியாயமான வழக்கு என்று தெரிந்தால், வழக்கை எடுத்துக் கொண்டு வழக்கறிஞராக, வந்தவர் பொருட்டு வாதாட ஒப்புக்கொள்வார்.

வழக்கில் நியாயமில்லை என்றால் வழக்காட முடியாது என்று வந்தவரைத் திருப்பியனுப்பி விடுவார். வருபவர் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க முன்வந்தாலும் மறுத்து விடுவார்.

***

1926 நவம்பரில் தேர்தல் நடந்தது. வியக்கும் முறையில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் சட்டசபையில் முட்டுக்கட்டை முளைக்கவில்லை. சுயேச்சைக் கட்சி மந்திரி சபை அமைத்தது. காங்கிரஸ் அதைத் தாக்கியது. காங்கிரஸ் தயவால் அதே மந்திரிசபை நிலவியது. சைமன் கமிசன் வந்தபோது சுயேட்சை மந்திரி சபை நடந்தது. அதன் முதல் அமைச்சர் டாக்டர் சுப்பராயர். பனகல் பக்கம் சார்ந்து வேறொரு மந்திரிசபை கண்டு அதிலும் தலைமை அமைச்சரானார். காங்கிரஸ் முத்தையா முதலியாரும் மந்திரி சபையில் அங்கம் பெற்றார் என்று திரு.வி.க. எழுதியுள்ளார்.

இது நிலைமையைப் புரியச்செய்யும். அதன் பின் திரு.வி.க.விடம் உறுப்பினர் கட்டணம் ஏதும் காங்கிரஸ் பெறவில்லை.

சந்தா செலுத்தாமலேயே நான் காங்கிரஸ்காரனாகக் காலம் கழித்தேன் என்று எழுதியிருக்கிறார் திரு.வி.க. பெரியாரும் 1927 வரையில் அப்படித்தானே இருந்தார்.

இதேபோன்ற மனநிலையே முத்தையா முதலியாருக்கும் இருந்தும் இவருடைய பொருத்தமான இலட்சியத்தையும் மனத்துணிவையும் பார்த்து அந்நாளைய அரசியல்வாதிகள் வியப்புற்றனர்.

சுப்பராயன் அமைச்சரவையில் சிக்கல் ஒன்று உருவாயிற்று. சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஏற்றிருந்த இருவர், டாக்டர் ரங்கநாதம், டாக்டர் ஆரோக்கியசாமி இரட்டை ஆட்சி செயல்படாது, சுயமரியாதை உள்ள அமைச்சர் யாரும் அதனைச் செயல்படுத்த இயலாது என்று கூறி, நாட்டுப்பற்று என்பதன் பேரில், பத்திரிகைகளின் பாராட்டு-களுக்கிடையில் சுப்பராயன் அமைச்சரவையிலிருந்து விலகினார்கள்.

சுப்பராயன் மட்டும் தனித்து விடப்பட்டார். கைகொடுத்து விட்டுக் காங்கிரசின் கை கழுவிவிடும் பண்பாடு, இங்கே தொடங்குகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுவர்.

இந்நாளில் இது போன்றவை பலஅமைச்சரவைகளுக்கு மய்ய அரசில் நேர்ந்திருப்பதைக் காண்கிறோம் எனவும் அரசியல் விமர்சகர்கள் விளக்குகின்றனர்.

ஜேம்ஸ் வில்லியம்ஸ் என்பவர் சிலர் மட்டுமே பதவி வகிப்பதற்கு இயல்பான திறன் உடையவர்களாக இருக்கின்றார்கள். என்று குறிப்பிட்டார். முத்தையா முதலியார் அத்தகு இயல்பான திறன் உடையவர்களில் ஒருவர் என்று கூறலாம்.

மிகவும் முதன்மை வாய்ந்த துறைகளுக்கு அவர் அமைச்சராக விளங்கினார். தம் வாழ்வில் மிகச்சிறப்பான பணிகளை ஆற்றிய-தால் இரண்டு ஆண்டுக்காலமேஅமைச்சர் பதவி வகித்தாலும் ஈராயிரம் ஆண்டுக்கால, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை மக்களின் விதிநிலை போக்கிட அவர் ஆற்றிய பணியினால் என்றும் நினைக்கப் பெறுவதுபோல இன்றும் நினைக்கப்பெறுவர்.

இரட்டையாட்சியை விமரிசித்து அவருக்கு முன்னாலே பதவி வகித்த அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், அதே இரட்டையாட்சி அமைப்பின் கீழ் பொறுப்பேற்ற முத்தையா முதலியார் தம் பொறுப்புகள் மிகுதியானவை என்று உணர்ந்து தெளிந்தார்.

குறைந்த விளைவுகளுடன் நிறைந்த பயனை இரட்டையாட்சி முறையில் பெற்றுத் தந்தவர் என்று வரலாறு முத்தையா முதலியாரைச் சிறப்பித்துக் கூறுகிறது.

ஒரு மனிதனின் உண்மையான இயல்பை வெளிப்படுத்தக்கூடிய அடிப்படை சில அதிகாரத்தைக் கொண்ட பதவியை கொண்டிருப்பது வெளிப்படுத்தும் என்று எட்மண்டு பர்க் கூறினார். அது முத்தையா முதலியாரைப் பொருத்தமட்டில் உண்மையாயிற்று.

ஏனென்றால், பதவி அவரை, அவருடைய போக்கை, எளிமையை, வாழ்க்கையின் தனிப்பட்ட இயல்புகளையும் பண்புகளையும் மாற்றிவிடவில்லை.

மயிலாப்பூரில் எந்த வாடகை வீட்டில் குடியிருந்தாரோ அதே வாடகை வீட்டில் அமைச்சரான பிறகும் குடியிருந்தார். அமைச்சராயிற்றே மாளிகை பெரியது இருக்கட்டும் என்று மாற்றிக் கொள்ளவில்லை, என்பதை இவரைப்பற்றி அறிந் அனைவரும் குறிப்பிடுகிறார்கள்.

தன் அமைச்சர் பதவியை மிகவும் பொறுப்புடன் நிருவகித்துக் கடுமையாக உழைத்தார். ஆனால், அதே நேரத்தில் அதற்கு வேண்டிய பொறுமையையும் வலிமையையும் கொண்டு செயல்பட்டார்.

தம்முடைய பதவியை அவர் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தியது இல்லை. அதுபோல அவர் ஒருபோதும் பிறரைக் காயப்படுத்தியது இல்லை. நண்பர்களிடம் தாராளமாக நடந்து கொண்டவர். தன் எதிரிகளை மன்னிக்கவும் தயங்கியது இல்லை.

***

எல்லாருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை என்ற நீதிக்கட்சிக் கோட்பாட்டை நிலைநிறுத்திய அவர் தன் ஜாதிக்காரர்களுக்கு என்று எந்தச் சலுகையும் காட்டவில்லை.

அவர் கொண்டுவந்த வகுப்புரிமை ஆணை அவர் சார்ந்த அவர் பிறந்த தொண்டை மண்டல சமுதாயத்திற்கு என எவ்விதத் தனியான பயனையும் அளிக்கவில்லை. ஏனென்றால், அச்சமூகத்திற்கு முற்பட்ட வகுப்பினராக கருதப்படுபவர்கள்.

அன்றைய நாளில் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் தொண்டை மண்டல வேளாளர் பிரிவைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கவேண்டும் என்று அவரிடம் வேண்டியபோது அவர்களுடைய கருத்தை ஏற்க மறுத்து விட்டார். இது ஒன்றே பதவியில் எந்த அளவிற்கு அவர் நேர்மையாக நடந்துக்கொண்டார் என்று காட்டும்.

அன்றைய நாள் நிலைமை அது. இன்று அச்சமூகத்தினர் பெயரளவில் முற்பட்ட வகுப்பினராக விளங்கிய போதிலும், ஒருசிலர் தவிரப் பெரும்பான்மையோர் மிகவும் பின்தங்கிய நிலையிலேதான் இருக்கின்றார்கள். பிற சமூகங்கள் முன்னேறிப் பொருளாதார வாய்ப்பும் வசதியும் பெற்றுள்ள அளவிற்கு இன்று அவருடைய சமூகத்தினர் பெற்றிருக்க-வில்லை என்பது உண்மையே.

அவர் எரிமலையின் உச்சியில் அமர்ந்து வகுப்புரிமை ஆணையை வெளியிட்டார். தொடர்ந்து அமைச்சராகப் பதவி வகிக்கவேண்டும் என்று ஆசைப்படும் எவரும் அன்று முத்தையா முதலியார் மேற்கொண்ட துணிவு மிக்க வகுப்புரிமை ஆணை வெளியிட்ட செயலைச் செய்ய முன்வருவார்களா என்பது சந்தேகமே.


இந்தத் துணிவான முயற்சியினை மேற்கொண்ட முத்தையா முதலியாருக்குத் தமிழகம் மட்டும் அல்லாமல் அன்றையச் சென்னை மாநிலம் முழுவதுமே கடமைப்பட்டுள்ள. இந்த வகுப்புரிமை என்பது ஏதோ ஒரு நிருவாகச் சீர்த்திருத்தம் என்பதாக எவரும் எண்ணி-விடக்கூடாது.

அன்றைய நாளில் முத்தையா முதலியாரின் வகுப்புரிமை ஆணையின் தனிச்சிறப்பை, அதன் முழு மதிப்பை உணர்ந்தவர் ஒருவர் இருந்தால் என்றால் அவர் தந்தை பெரியார் ஒருவர்தான்!

அதனை உணர்ந்த இயக்கம் என்று சொன்னால் அது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஒன்றுதான்!

***

முத்தையா முதலியாரின் சாதனைகளைப் பாராட்டி முத்துலட்சுமி ரெட்டி குறிப்பிட்டவை இவை

அப்போதைய அமைச்சர் திரு.முத்தையா முதலியாருக்கு பெண்டிர் பெரிதும் கடமைப் பட்டவர்கள். ஏனென்றால் அவர் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவ வசதிகள் செய்வதன் பொருட்டு, பொதுநலத்துறை பெண்கள் இயக்குநரை நியமிக்க ஏற்பாடு செய்தார். தாய்மை, சேய்நலப் பணியாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். அவர் ஒதுக்கீடு செய்த நிதியைக் கொண்டு செஞ்சிலுவைச் சங்கப்பள்ளி உருவாக்கப்பெற்றது.

---------------பேரா.முனைவர் ந.க.மங்கள முருகேசன் - நூல்: வகுப்புரிமைச் சிற்பி எஸ்.முத்தையா (முதலியார்)

29.3.09

விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கும்படிக் கூறியவர் யார் தெரியுமா?


ஜெயேந்திரரின் அரசியல்

கொலை வழக்கு ஒன்றில் முதல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் (மாஜி) ஜெயேந்திர சரஸ்வதி - ஒரு அரசியல் புரோக்கர்; தேர்தல் நேரங் களில் சன்னமாகத் தன் வேலையைக் காட்டுவார்! கொடுக்கை நீட்டுவார்! எங்கே எப்படி முள்வைப்பது என்பதில் கில்லாடி.

தொடக்கத்தில் நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கும்படிக் கூறியவரும் இவரே!

தன் கையாளாக சோ ராமசாமியை அனுப்பி ஆங்காங்கே விஷமதானங்களைச் செய்து கொண்டிருப்பவர் இவர்.

ராஜபாளையத்தில் தொழில் அதிபர்களைச் சந்தித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டவரும் இவர்தான்.

அண்மையில் தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்களைச் சந்தித்து இருக்கிறார். தே.மு.தி.க. தலைவரின் துணைவியாரையும் சந் தித்து இருக்கிறார். சமத்துவ மக்கள் கட்சித் தலை வரையும் சந்தித்து இருக்கிறார். இவ்வளவும் எதற்காகவாம்?

நடக்கவிருக்கும் தேர்தலில் இவர்கள் எல்லாம் பி.ஜே.பி.க்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என் பதற்காகத்தான் இத்தகைய முயற்சி.

பா.ஜ.க. என்றால் பாரதிய ஜனதா என்று சொல்வதைவிட பார்ப்பன ஜனதா என்று சொல்வதுதானே பொருத்தமானதும் - மிகச் சரியானதாகவும் இருக்க முடியும்.
வெளி உலகத்தில் எப் படிப்பட்ட அபிப்ராயத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர்? அவாள் பெரியவாள் - இந்த அரசியல் விவகாரம் என்கிற சிற்றின்பத்தில் எல்லாம் ஈடுபடமாட்டார். சதா அவருடைய எண்ணமெல்லாம் ஈசனைப் பற்றிய பேரின்பமே! ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையில் பாலங்கட்டுவதுதான் அவரின் வேலை என்று சமத்தாக அவரைப்பற்றி மக்கள் மத்தியிலே பிம்பம் வரைந்து வைத்துள்ளார்கள்.

ஆனாலும் உண்மை என்னவோ வேறாகத்தானிருக் கிறது. அதுவும் அவாள் ஆத்துப் பத்திரிகையான ஜூனியர் விகடனே (22.3.2009) ஜெயேந்திரரின் அரசியல் திருவிளை யாட்டை விவரிக்கும்போது நம்பாமல்தான் இருக்க முடியுமா? காரணம், விகடனுக்கும், பெரியவாளுக்கும் அவ்வளவு அன்னியோன்னியம்!

செத்துப்போன பிறகும் சிவலோக பதவியையும், வைகுந்த பதவியையும் தேடிக்கொண்டிருப்பவர்கள் இந்த அரசியல் பதவி விஷ யத்திலும் மூக்கை நுழைக் கிறார்கள் என்பதுதான் தமாஷ்!

---------------- மயிலாடன் அவர்கள் 29-3-2009 "விடுதலை" யில் எழுதியது

பெரியாரும் அண்ணாவும் பிரிந்திருந்தார்களா?


எப்பொழுதும் பெரியார் உள்ளத்திலே நானிருப்பேன் என் உள்ளத்திலே அவர் இருப்பார்
அண்ணா கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் பேச்சு


எப்பொழுதும் பெரியார் உள்ளத்திலே நான் இருப்பேன். என்னுடைய உள்ளத்திலே அவர் இருப்பார். எங்களை யாரும் பிரிக்க முடியாது என்று சொன்னவர்தான் அண்ணா என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னைப்பல்கலைக் கழகத்தில் - ஈரோடு முதல் காஞ்சி வரை என்ற தலைப்பில் அண்ணா நினைவுநாளில் 3.2.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு :-

அண்ணா அவர்களு டைய நினைவு நாள் 3.2.2009 இன்று. இந்த நாளிலே ஏதோ அண்ணா நினைவிடத்திற்கு வந்து மலர் வளையம் வைப்பதோடு நம்முடைய பணி முடிந்துவிட்டது என்று நாம் கருதக் கூடாது. மக்களைச் சிந்திக்க வைக்கக் கூடிய பணியைத் தான் அண்ணா அவர்கள் மறைகின்ற வரையிலே தன்னுடைய எழுத்தாலே, பேச்சாலே நாடக ஆற்றலாலே, திரைப் படத்துறையிலே அவர்களுடைய கருத்துகளும் முழங்கின என்கின்ற அந்த வாய்ப்பினாலே தொடர்ந்து செய்து கொண்டு வந்தார்கள்.

அப்படிப்பட்ட அண்ணா அவர்கள் மிகச் சிறப்பான வகையிலே அவர்கள் எப்படி எல்லாம் கருத்துகளைச் சொல்லி உருவாக்கினார்கள் என்பதை நினைக்கின்ற நேரத்தில் மிகப்பொருத்தமானது அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழாவை ஒட்டிய விழாத் தொடர் நிகழ்வுகள் என்று 15.09.08 இலே தொடங்கி 15.09.09 வரையிலே சிறப்புச் சொற்பொழிவுகள் ஆய்வுச்சொற்பொழிவுகள் என்று அமைக்கக்கூடிய இந்த வாய்ப்பினை சென்னைப் பல்கலைக் கழகம் - அந்தப் பல்கலைக்கழத்தினுடைய பழைய மாணவராகத் திகழ்ந்த அண்ணா அவர்களுக்குப் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் நாம் எல் லோருமே பெரும்பாலும் இந்தப்பல்கலைக் கழகத்தினுடைய மாணவராகத்தான் இருந்திருப்போம். நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகக்தினுடைய மாணவன் என்றாலும் கூட, சட்டம் பயின்ற காரணத்தாலே, இந்தப் பல்கலைக் கழகத்தினுடைய மாணவனாக இருந்தேன். அப்பொழுது தனியே சட்டப் பல்கலைக் கழகம் கிடையாது. ஆகவே இந்த சென்னைப் பல்கலைக் கழகத்தினுடைய பட்டத்தை நான் பெற்றவன் என்ற முறையிலே, பழைய மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து - நம்மிலே ஒளி பொருந்திய ஒரு வைரக்கல் என்றைக்கும் வரலாற்றிலே ஒரு சமூகப் புரட்சியை தந்தை பெரியாரைப் பின்பற்றி செய்த ஒரு அறிஞரை இன்றைக்கு ஆய்வு செய்கின்றோம். நினைவு கூர்கிறோம். வருங்காலச் சந்ததியினருக்கு அவர்களுடைய சிந்தனைகள் எப்படி எல்லாம் மலர வேண்டும் என்பதை நினைவூட்டுகின்ற நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

இதற்கு வாய்ப்புக் கொடுத்த அனைவருக்கும் குறிப்பாக நம்முடைய துணைவேந்தர் அவர்களுக்கும், நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அவர்கள் மருத்துவ மனையிலே இருந்து ஓய்வு பெற்று இந்த நிகழ்ச்சியிலே தான் முதல் நிகழ்ச்சியாக கலந்து கொண்டார்கள். அவருடைய மனிதநேயமும், அண்ணா அவர்கள் மீது கொண்ட அன்பும் எங்கள் மீது கொண்ட பாசத்திற்கும், என்றென்றைக்கும் நாங்கள் நன்றி செலுத்தக்கடமைப் பட்டிருக்கின்றோம்.
இங்கே ஏராளமானோர் வந்திருக்கின்றீர்கள். எனக்கு ஒரு அற்புதமான தலைப்பை இங்கே கொடுத்திருக்கின்றார்கள் - ஈரோடு முதல் காஞ்சிவரை என்று. அண்ணா காஞ்சி என்றால், அவருக்கு முதலே ஈரோடு தான் என்பதை முதற்கண் தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.
அண்ணா அவர்களுடைய முதல் (capital) எது? அந்த முதலே பெரியார்தான் - அதுவே ஈரோடு தான். எனவே அந்த முதலுக்கு வட்டி தான் அண்ணாவே தவிர, தொடர் வட்டிதான் அண்ணாவை தவிர, வேறு தனியாக அண்ணா என்பது கிடையாது.

அண்ணா அவர்கள் ஒரு முறை ஒரு ஊரிலே பேசும் பொழுது 18 ஆண்டு காலத்திற்குப் பிறகு நீங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்திருக்கிறீர்கள் என்று ஒரு நண்பர் பேசினார். இப்படி தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஏற்பட்ட இடைவெளியை நினைவூட்டி, அவர்கள் சொன்ன பொழுது சொன்னார்கள்.

நான் இப்படிச் சொன்ன நண்பரை ஒன்று கேட்டுக்கொள்கின்றேன். நாங்கள் ஏதோ பிரிந் திருந்தோம் என்று யாரும் நினைத்து ஏமாந்து விடாதீர்கள்.

இது அண்ணா அவர்கள் சொன்ன பதில். பெரியார் ஒரு சகாப்தம் என்ற நூலிலே தெளி வாகவே சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. அண்ணா அவர்கள் பேசும்பொழுது, அவருடைய உரையிலே, சொல்கின்றார். தர்மபுரி மாவட்டம் நாகரசம்பட்டி என்ற ஒரு சிறு ஊர், அந்த ஊரிலே ஒரு பள்ளிக்கூட நிகழ்ச்சி அண்ணா அவர்கள் முதலமைச்சரானவுடனே அவர்கள் பத விக்கு வந்த அந்த கால கட்டத்திலே அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு பேசும் பொழுது, அண்ணா அவர்களைப் பற்றி மற்ற நண்பர்கள் பேசிய பொழுது அதற்கு அண்ணா அவர்கள் பதில் அளிக்கும் பொழுது சொன்னார்கள்.
நானும், பெரியார் அவர்களும் பிரிந்திருந்ததாக சொன்னார்கள். அது தவறு. ஒரு போதும் நாங்கள் அப்படி பிரிந்திருக்கவில்லை. எப்பொழுதும் பெரியார் உள்ளத்திலே நான் இருப்பேன். என்னுடைய உள்ளத்திலே அவர் இருப்பார். ஆகவே எங்களை யாரும் பிரிக்க முடியாது என்று அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்.
அண்ணா அவர்களுக்கு எவ்வளவு ஈடுபாடு! எப்படி தந்தை பெரியாரை மூலதனமாக - முதலாகக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இதை விட நல்ல உதாரணம் வேறு கிடையாது.

அதுமட்டுமல்ல, தந்தை பெரியார் அவர் களிடத்திலே அண்ணா அவர்கள் வந்து எப்படி எல்லாம் அவர்கள் மிகப் பெரிய அளவுக்கு வந்தார்கள் என்பதை அவர்களே சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்றார்கள்.

அய்யா அவர்களுடைய பிறந்த நாள் விழா வின் பொழுது அண்ணா அவர்கள் பழைய கதையை எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றார்கள்.

அதில் என்ன சிறப்பானது என்று சொன்னால், தான் (அண்ணா) தந்தை பெரியார் அவர்களிடத் திலே சென்றுவிட்ட நிலையிலே அப்பொழுது அவர்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத் தார்கள் என்பதைச் சொல்லுகின்றார்.

இன்றைய தினம் பெரியாருடைய ஒரு பெரிய குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்து ஒவ்வொரு பிள்ளையும், ஒவ்வொரு திக்கிற்குச் சென்று தான் இந்தத் திக்கிலே போய் இதைக் கொண்டு வந்தான். அண்ணன் அந்தத் திக்கிலே போய் இதைக் கொண்டு வந்தான் என்று சொல்லு வதைப்போல அவர்களுடைய (பெரியார்) பிள்ளைகள் எல்லா கட்சியிலும் இருக்கிறார்கள். எல்லா கட்சியிலும் இருப்பார்கள்.

அண்ணா அவர்கள் மேலும் சொல்லுகிறார். எந்தக் கட்சியில் அப்படியில்லை?
எனவே, இந்த முதல் இருக்கிறதே ஈரோடு என்ற முதல். அதனுடைய வட்டி. அண்ணா அவர் களிடத்திலே மட்டுமில்லை. அது பல இடங்களிலே தொடர் வட்டியாக பல ரூபங்களிலே இருந்திருக்கிறது என் பதற்கு அடையாளமாக அண்ணா அவர்களே கூறுகிறார்கள்.
எனவே அண்ணா அவர்களையே பேச வைத்துக்கேட்போம்.

அந்த வகையிலே எந்த பிள்ளையும் ஒருவருக்கு ஒருவர் சோடைபோனவர்கள் அல்ல. அவர்கள் எதை எதைப்பெற வேண்டும் என்று கருது கின்றார்களோ - அதைப் பெற்று குடும்பத்தில் நடக்கின்ற விழாவில் அவர்கள் பெற்றவற்றைப் பெரியார் அவர்களிடத் திலேகாட்டி, இதோ பாருங்கள் நான் பெற்றது என்று ஒவ்வொருவரும் காட்டும் பொழுது தந்தை பெரியார் அவர்கள் உரிய புன்னகையோடு, (அதைத்தான் நம்முடைய போராசிரியர் அரங்கசாமி அவர்கள் உணர்ச்சி பூர்வமாக இங்கே குறிப்பிட்டார்கள்) அவற்றைப் பார்த்து நான் கேட்டது இது வல்லவே என்கிறார்கள். இவர்கள் ரொம்ப ஆசையாகக் கொண்டு வந்து அந்தப் பொருளைக் காட்டுகின்றார்கள். அய்யா நாங்கள் இதைப் பெற்றுவிட்டோம் என்று காட்டுகின்றார்கள். தந்தையிடத்திலே ரொம்ப பாசத்தோடு காட்டுகின்றார்கள்.
ஈரோடு முதல் காஞ்சி வரை என்று சொல்லுகின்ற நேரத்திலே, ஈரோட்டைப் பற்றி காஞ்சி எப்படிக் குறிப்பிடுகிறது என்பதை கொஞ்சம் ஆழமாக சிந்திக்க வேண்டும். ஏனென்றால் இது கொஞ்சம் அறிவார்ந்தது.

எனவே இந்த அவையிலே நாம் அதை சிந்திக்கக் கடமைப்பட்டிருக் கின்றோம். பெருமை யோடு கொண்டு போய் காட்டி இந்தப் பொருளை பெற்றுவிட்டோம், அடைந்துவிட்டோம் என்று சொல்லுகின்ற நேரத்திலே நான் கேட்டது இது வல்லவே என்கிறார் தந்தை பெரியார்.
அவர்கள் கேட்டதைப் பெற்றுத்தரத்தக்க ஆற்றல் யாரிடத்திலும் இல்லை. அப்படி பெற்றுத் தரும் பொறுப்பு அவர்களிடத்தில். இது தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எப்பொழுது சொல்லு கின்றார்கள்? அண்ணா அவர்கள் முதல்வராக வந்த பிற்பாடு இந்தக் கருத்தை அவர்கள் சொல்லுகின்றார்கள்.

நாங்கள் பெரும் பொறுப்பைப் பெற்று விட்டோம். நாங்கள் அதிகாரத்தை அடைந்து விட்டோம். நாங்கள் அரசியலிலே வெற்றி பெற்றுவிட்டோம் என்றெல்லாம் சொல்லிப் பெருமைப்படுகின்ற நேரத்திலே, அண்ணாவை அழைத்து மறைந்த ஜீவா அவர்களுடைய இல் லத்து மணவிழாவிலே அவர்கள் பேசுகின்றார்கள். தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேசுகிறார். அடுத்து அண்ணா அவர்கள் பேசுகின்றார். எல்லா கட்சித்தலைவர்களும் அந்த விழாவிலே கலந்து கொள்கின்றார்கள்.

அய்யா அவர்களே முன்னின்று திருச்சியிலே அந்த மணவிழாவை நடத்துகின்றார்கள்.
அந்த மணவிழாவிலே அண்ணா அவர்கள் சொல்லுகின்றார். அவர்கள் கேட்டதைப் பெற்றுத் தருகின்ற ஆற்றல் யாரிடத்திலும் இல்லை. அப்படிப் பெற்றுத்தரும் பொறுப்பு அவர்களிடத் தில்தான் போற்றிப் பாதுகாத்துக் கொள்ள என்னாலே முடியும். அது கிடைத்தால் யாருக்கு என்ன பங்கு? என்று கேட்க சிலர் இருக்கலாம் என்று சொன்னார். இதிலே எவ்வளவு ஆழமான கருத்து இருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். ஒரு வெற்றியைப் பெற்று அதை பெற்றுக்கொடுத்தால், என்ன சொல்ல வேண்டும்?

தமிழர்களுடைய இயல்பு, இங்கே தமிழர்களைப் பற்றிச் சொன்னார்கள் அல்லவா? எதையும் பெற்று விட்டால், பெற்றுவிட்ட பிற்பாடு - அது கிடைத்தால் - யாருக்கு என்ன பங்கு என்று கேட்க சிலர் இருக்கலாம்.

இது இயல்பாகவே ஒரு கூட்டுக்குடும்பத்திலே இருக்கக் கூடிய ஒரு தன்மை.
அய்யா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அறி வுப்புரட்சி, சுலபத்தில் நிற்கப்போவதில்லை. அது போக வேண்டிய தூரத்திற்குப் போய் அடைய வேண்டிய சக்தியை - இலக்கைத் தொட்டுத்தான் நிற்கும். எப்படி வில்லை விட்டுக் கிளம்பிய கணை அடைய வேண்டிய இடத்தில் பாய்ந்தால்தான் அதன் வேகம் நிற்குமோ அது போல் பெரியார் அவர்களிடத்திலே இருந்து பிறந்த அறிவுக்கணை எந்த இலக்கை அடைய வேண்டுமோ அதை அடைந்தே தீரும். அங்கிருந்து கிளம்பியிருக்கிறது.

நாண் ஏற்றியிருக்கிறார். வில்லிலிருந்து புறப்படுகின்ற அம்பு இலக்கை அடைந்தே தீரும். அதில் அய்யம் யாருக்கும் இல்லை. இதில் கால அட்டவணையைக் கூட, நாம் கருதத் தேவையில்லை.

இதற்கு ஒரு கால அட்டவணை போட முடியாது. ஏனென்றால் இது ஒரு சமுதாயப் புரட்சி இயக்கம்.

காலம் காலமாக இருந்த மூடத்தனத்தை முடைநாற்றத்தை அடிப்படையை மாற்ற வேண் டிய, புரட்டிப்போட வேண்டிய ஒன்று.

புரட்சி என்ற சொல்லே தந்தை பெரியார் அவர்கள் அழகாக எழுதினார்கள். புரட்டு என்ற சொல்லிலே இருந்து தான் வந்தது என்று சொன்னார்கள். அப்படிப்போடு, மாற்றிப் போடு, திருப்பிப்போடு, அதைத் தலை கீழாக ஆக்கு என்று சொன்னதிலே இருந்துதான் அந்தப் புரட்சி என்ற சொல்லுக்கு ஒரு மூலம் இருக்கிறது. வேர் அங்கே இருக்கிறது என்று அய்யா அவர்கள் சொன்னார்கள்.
அதைத்தான் அண்ணா அவர்கள் பிரதியெடுத்துச் சொல்லுகின்றார்கள். அந்த அய்யம் யாருக்கு இல்லை? இதில் கால அட்ட வணையைக் கூட நாம் கருதத் தேவையில்லை.

அந்தப் பாதையிலே நாம் நடைபோட்டுக் கெண்டிருக்கின்றோம் என்று சொல்லுகின்றார்கள்.
30 ஆண்டுகளுக்கு முன்னாலே, தமிழ் நாட்டில், தமிழகத்தில் பேசுவதற்குக் கூச்சப் பட்டுக் கொண்டிருந்த செய்திகளை இன்று நம் எட்டு வயது சிறுவன் வெகு தாராளமாகப் பேசுகிறான்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னாலே நம் முடைய மனதில் பயந்து கொண்டிருந்த தத்து வங்கள் இன்றைய தினம் கேள்விக்குறியதாகும் என்று நாடே சொல் லுகிறது. இரண்டு நூற் றாண்டுகள் பாடுபட்டு உண்டாக்க வேண்டிய அறிவுப்புரட்சியை, இருபது ஆண்டுகளில் அவர் பாவித்துக் கொடுத்ததால் தான் நமக்கெல்லாம் எளிதாக இருக்கிறது.
ஆனால் இது எளிதாகும் அளவுக்கு பெரியார் அவர்கள் பட்ட கஷ்டங்கள் எத்தனையோ அவைகளெல்லாம் நன் றாக நினைவுக்கு வருகின்றன.


நானும், அவரும் (பெரியாரும் அண்ணாவும்) ஒரு முறை சிவகங்கை மாநாட்டிற்குச் சென்ற நேரத்திலே அந்த ஊர் முழுவதும் பழைய செருப்புகளை அங்கே தோரணமாகிக் கட்டித் தொங்க விட்டார்கள்.
சிவகங்கையிலே - அய்யா அவர்களையும் அண்ணா அவர்களையும் ஒரு திறந்த காரிலே வைத்து ஊர்வலமாக அழைத்துப் போகின்றார்கள்.

தோரணங்களைக் கட்டி வரவேற்பது தமிழ் நாட்டினரின் பண்பு. அதற்குப் பதிலாக அங்கே யிருந்த அரசியல் கட்சி நண்பர்கள் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளுக்கு எதிர்ப்பு காட்ட வேண்டும் என்பதற்காக, பழைய செருப்புகளை எல்லாம் தேடிப் பிடித்து அவைகளை எல்லாம் தோரணங்களாகக் கட் டித் தொங்க விட்டார்கள்.

உலகத்திலேயே இவ்வளவு மோசமான எதிர்ப்பை சந்தித்த ஒரு இயக்கம் உண்டென்றால் அது திராவிட இயக்கத் தைத் தவிர, சுயமரியாதை இயக்கத்தைத் தவிர, வேறு கிடையாது.
வெற்றியை நாட்டிய இயக்கமும், இந்த இயக்கத்தைத் தவிர, வேறு கிடையாது.

-------------------தொடரும் ..."விடுதலை"-23-3-2009

இரயில் தண்டவாளத்தில் ஓடுகிறதா - பூணூலில் ஓடுகிறதா?



பூணூலிலா ரயில் ஓடுகிறது?


சென்னையிலிருந்து தாம்பரம், செங்கற்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி மார்க்கமாக முக்கிய (மெயின் லைன்) தடத்தில் சென்று கொண்டிருந்த இரயில் ஓட்டம் பத்தாண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் போடப்பட்டு, இப்பொழுதுதான் ஆமை வேகத்தில் பணிகள் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. கடலூர் - விழுப்புரம் இடையே சோதனை ஓட்டம் நடத்தப்படுவதையொட்டி சிறப்புப் பூஜை நடைபெற்றுள்ளது. வழக்கம்போல பார்ப்பனப் புரோகிதர்கள் அழைக்கப்பட்டு யாகம் நடத்தப்பட்டுள்ளது. இரயில் தண்டவாளத்தில் ஓடுகிறதா - பூணூலில் ஓடுகிறதா? மதச்சார்பற்ற இந்திய அரசின் ஒரு துறையில் குறிப்பிட்ட மதச்சடங்காச்சாரங்களுடன் நடைபெறுவது சரியானதுதானா? 2009 இல்தான் இந்தியா இருக்கிறதா? அஞ்ஞானத்தை விஞ்ஞானமூலம் பரப்பும் கேடு கெட்டத்தனம் தானே இது!

--------------"விடுதலை" 29-3-2009

பத்திரிகைகளுக்குப் பூணூல் இருக்கிறதா, இல்லையா? வாதம் செய்யத் தயாரா?


பூணூல் பார்வை

புரட்சிக்கவிஞர் பாடலில் எழுதியதில் கல்கிக் கூட்டம் கலக்கிய சேறு இருக்கிறது. தினமணிப் பாம்பு திரட்டிய நஞ்சு இருக்கிறது.கலைமகள் தேளின் கடுக்கும் கொடுக்கு இருக்கிறது. சுதேசமித்திரன் தான் தொலைந்து போனது. அவ்விடத்தை நிரப்ப வந்துள்ளது துக்ளக்.

அது எழுதுகிறது - மதம், ஜாதி, ஆகியவற்றைப் பேசாமல் அவரால் (கலைஞரால்) எந்தப் பிரச்சினையையும் பார்க்க முடியாது என்பதுதான் தெரிந்த விஷயமாயிற்றே! பத்திரிகைகளுக்குப் பூணூல் போடுகிற புரோகிதரான அவரிடமிருந்து இதைவிட உயர்வான அணுகுமுறையை எதிர்பார்க்க முடியாது - என்று எழுதியுள்ளது.

கலைஞரைப் பற்றி எழுதும் போது கூட, எவ்வளவு திமிர்? பத்திரிகைகளுக்குப் பூணூல் இருக்கிறதா, இல்லையா? வாதம் செய்யத் தயாரா?

இவர் பத்திரிகையையே எடுத்துக் கொண்டால் கூட - எல்லாப் பார்வையும் பூணூல் பார்வையாக - பூணூல் போட்ட பார்ப்பனப் பார்வையாகவே இருக்கிறது என்பது உண்டா, இல்லையா? அதைச் சுட்டிக் காட்டுவது தவறா?

பருத்திச் செடிக்கு நன்றி சொல்லி ரிக்வேதப் பாடல் இருக்கிறதே அதைப் பற்றிப் பேச துக்ளக் தயாரா? பருத்திச் செடி, பருத்திப் பஞ்சு, பருத்தி நூல், பருத்தித் துணி என்று வரிசையாக மனித குலத்திற்கு உதவிடும் பருத்திச் செடிக்கு நன்றி - என்றா ரிக்வேதப் பாடல் எழுதியவன் கூறி இருக்கிறான். இல்லையே? மாறாக - பூணூலுக்குத் தேவைப்படும் பஞ்சைத் தருவதற்காகப் பருத்திச் செடிக்கு நன்றி - என்றுதானே இருக்கிறது.

பருத்தியின் பயன்பாடே பூணூலுக்கு எனக் கூறிய புளகாங்கிதம் அடையும் பூசுரக் கும்பலைச் சேர்ந்த சோ ஏன் அதைச் சுட்டிக்காட்டும்போது கலைஞரிடம் கோபம் அடைகிறார்.

சோ விடம் இருப்பது - கலைஞரிடம் இல்லை - கலைஞருக்குப் பூணூல் இல்லை என்பதால்தானே, கோபம்?

-------------28-3-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் செங்கோ எழுதியது.

ஈழத் தமிழர்ப் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையா?

சீனா, ருசியாவின் சறுக்கல்!

ஈழத் தமிழர் பிரச்சினையில் சரியான அணுகுமுறை இல்லாத கட்சிகள் உண்டு; ஏன் நாடுகளும் உண்டு என்பதற்கு அடையாளம்தான் அய்.நா.வில் ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி விவாதம் நடந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் நாடுகள் என்று பொதுவாகக் கருதப்படும் சீனாவும், ருசியாவும் பிற்போக்குத்தனமான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளன.

ஈழத் தமிழர்ப் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையாம். அந்தப் பிரச்சினையால் உலக நாடுகளுக்கு எந்தவித நெருக்கடியும், பாதிப்பும் இல்லை என்று அவ்விரு நாட்டின் பிரதிநிதிகள் கருத்துக் கூறியுள்ளனர் என்கிற செய்தி திடுக்கிட வைக்கக் கூடியதாகும். தேசிய இன உரிமை பற்றியெல்லாம் புரட்சியாளர் லெனின் எவ்வளவு பேசியிருக்கிறார் - எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில், ஈழத் தமிழர்கள் பிரச்சினையின் ஆணி வேருக்குச் சென்று உலக மக்களின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டிய கடமை உடையோர், தலைகீழாகப் பிறழ்ந்து பேசுகின்றனர் என்றால் இந்தக் கொடுமையை என்ன சொல்ல!

ஒரு இன மக்கள் பேரினவாத அரசால் திட்ட மிட்ட வகையில் படுகொலை செய்யப்படுகின்றனர் (Genocide) என்று உலகத்திற்கே தெரிந்திருக்கிறது. இலங்கை இன வாத அரசு எந்தெந்த வகைகளில் எல்லாம் உலகத்தின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவியிருந்தாலும், காலதாமதமானாலும் உண்மை என்பது வெளிச்சத்திற்கு வரத்தான் செய்திருக்கிறது.

உள்நாட்டுப் பிரச்சினை என்று மற்றவர்கள் சொல்லலாம். சர்வ தேசியம் பேசுகின்ற காம்ரேடுகள் அப்படிச் சொல்லலாமா?

அப்படிப் பார்க்கப் போனால் பங்களாதேஷ் பிரச்சினைகூட பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை தான். அதனை எந்த வகையில் இந்தியா தீர்த்து வைத்தது? அந்த நேரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக காயை நகர்த்த முற்பட்டபோது ருசியா ஏன் இந்தியாவுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தது!

பாகிஸ்தான் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியாவே தலையிடாதே என்று ருசியா குரல் கொடுத்திருக்கவேண்டுமே! கொடுத்தது உண்டா?

ருசியா என்ற அமைப்பிலிருந்து ஜார்ஜியா பிரிந்து சென்ற நிலையில், அதன் உள்நாட்டுப் பிரச்சினையில் ருசியா ஏன் தலையிடவேண்டும்?

இதில் மிகவும் வருத்தப்படவேண்டிய ஒரு பிரச்சினை என்னவென்றால், அய்.நா.வில் ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலையைப்பற்றி விவாதிக்க சுவிட்சர்லாந்து, பிரான்சு, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஹாலந்து, பெல்ஜியம், ஜெர்மனி முதலிய நாடுகள் முயற்சித்தபோது, விவாதத்துக்கே அதனை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கம்யூனிசம் பேசும் இந்த இரு நாடுகளும் முட்டுக்கட்டை போட்டன என்கிற செய்தி - உலக மக்கள் மத்தியில் கம்யூனிஸ சித்தாந்தத்தை வேறு வகையான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடிய ஒரு அவல நிலையையல்லவா ஏற்படுத்தக்கூடும்?

சோவியத் யூனியன் என்பது பல மொழி, பல இனங்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட பல மாநிலங் களை இணைத்த ஒன்றியம்தானே! அதில் முரண்பாடு வந்தபோது பல மாநிலங்கள் பிரிந்து செல்லவில்லையா?

அதனை சோவியத் ஒன்றிய அரசமைப்புச் சட்டம் அனுமதித்ததே - அந்தக் கண்ணோட்டம் ருசியாவுக்கு இல்லாமல் போனது ஏன்?

சீனா வேண்டுமானால் திபேத் விஷயத்தில் வேறு மாதிரியாக நடந்துகொள்ளலாம் - அதன்மூலம் முற்போக்குச் சிந்தனையாளர்களின் பார்வையில் சீனாவின் மதிப்பும் குன்றிப் போனதும் உண்மைதான்.

சித்தாந்தங்கள் எல்லாம் சீக்குப் பிடித்து, ஆதிக்க மனோபாவங்கள் குடியேறுமானால் ருசியாவும், சீனாவும் நடந்துகொள்வது போன்ற சறுக்கலில்தான் போய் முடியும்! இது ஒரு எச்சரிக்கையாகும்.

--------------------"விடுதலை" தலையங்கம் 28-3-2009

28.3.09

வரலாறு தெரியாத விஜயனும் - வம்பை வளர்க்கும் தினமணியும்!






கடந்த பிப்.24-ஆம் தேதி தினமணி நாளேட்டில் மூத்த வழக்கறிஞர் விஜயன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவர் திராவிட இயக்கத்திற்கு எதிரான சிந்தனையை உடையவர் என்பது ஊரறிந்த செய்தி. எதிரானவர் என்பதாலேயே தனது மேதைமை யைக் காட்டிக் கொள்வதற் காக எதையாவது எழுதினால் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?

அவர் எழுதிய "சத்தியமேவ ஜெயதே" கட்டுரையில் மூன்று செய்திகளைக் கூறுகிறார். தலைப்பே அவர் யார் என்று நமக்கு அடையாளம் காட்டுகிறது அல்லவா? உண்மையான தமிழன் எழுதியிருந்தால் வாய்மையே வெல்லும் என்று எழுதியிருப்பான். அவர் எழுதியுள்ள கட்டுரையின் உள்ளடக்கத்தில்,

(1) விஜயன் தமிழ் உணர்வாளர்கள் பற்றி எழுதுகிறபோது, திமுக தமிழ் உணர்வைத் தூண்டியதால் ஆட்சியைப் பிடித்தது. தமிழின உணர்வை அரசியலாக்கி அனுகூலம் அடைந்தார்கள் என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.

(2) இதுவன்றி இலங்கைப் பிரச்சினை

3) உயர்நீதி மன்றத்தில் நடந்த வழக்கறிஞர் காவல்துறை மோதல் நிகழ்வு பற்றி எல்லாம் எழுதியிருக்கிறார்.

இம்மூன்றில் இப்போதைக்கு நாம் முதலாவது பிரச்சினையை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

தமிழனுக்குப் பிறந்தவனுக்குத் தமிழ் உணர்வு கட்டாயம் இருக்கும்; இருக்கிறது. மற்ற தமிழர்களுக்கு இல்லையென்றும் நாம் சொல்ல வரவில்லை. ஆனால் திராவிட இயக்கத்தவர் எவரைவிடவும் தமிழர் நலனில் முன்னணியில் இருப்பர்; போர்க்குணம் உடையவர்கள். அவர்கள் விஜயனைப்போல ஆள்காட்டிகளாக இருக்க முடியாது அல்லவா? வரலாற்றை முறையாகப் பார்க்காமல் திரித்து அல்லது விடுபட்டு மக்கள் முன் வைக்கும் விஜயனின் அரைவேக்காட்டுத் தனத்தையே நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். தாய்மொழிப் பற்று எப்படி வருகிறது? பிறப்பால்தான். ஆகவேதான் அந்த உணர்வு திராவிட இயக்கத்தார்க்கு இருக்கிறது; திமுக வினர்க்கு இருக்கிறது. தமிழ் இன உணர்வு இருப்பதற்கு இயற்கையான அடிப்படைக் காரணம் இதுவே. ஆகவே பிறப்பால் தமிழனாகவும், திராவிடச் சிந்தனை நெறியை ஏற்றுக் கொண்ட எவரும் தமிழ் இன உணர்வாளராகவே இருப்பர். திமுகவில் இருப்பவர்களுக்கு திராவிட இயக்கத்தில் இருப்பவர்களுக்கு இன உணர்வு என்பது, தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற நிலையில் எப்போதும் இருப்பவர்கள்.

மூவேந்தர் காலத்தில் - சங்க காலத்தில் இல்லாத தமிழ் இன உணர்வு இப்போது ஒன்றுபட்டு உருவானதற்கு என்ன காரணம்? அதற்கு 500 ஆண்டு கால வரலாறு இருக்கிறது. திராவிடத் தமிழ்த் தேசிய உணர்வு விஜயன் வீட்டுக் கொல்லையில் காய்த்த வெள்ளரிப் பிஞ்சு அல்ல.

15,16-ஆம் நூற்றாண்டுகளில் கலை, இலக்கிய மறுமலர்ச்சி அய்ரோப்பால் தோன்றியது. அதேபோல 17, 18-ஆம் நூற் றாண்டுகளில் மொழி வழித் தேசிய உணர்வுகள் உருவாயின. 18,19-ஆம் நூற்றாண்டுகளில் தொழிற்புரட்சி தோன்றிற்று. இதனால் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் மாபெரும் மாற்றம் நிகழத் தொடங்கியது. இந்தியாவிலும் அதன் பாதிப்புகள் தெரிந்தன. கிறித்துவ சமயப் பரப்புரையும் அச்சு இயந்திர வருகையும் இந்திய மொழிகள் வளரத் துணை நின்றன.

பிரிட்டிஷார் இங்கே வருகிற போது சமஸ்கிருதத்தை மரபு வழியாகப் பார்ப்பனர்கள் மட்டுமே படித்து வந்தனர். உருது, அரபி, பார்சி போன்ற மொழிகள் மதரஸாக்களில் கற்பிக்கப்பட்டு வந்தன. தாய் மொழிக் கல்வி முறைப்படுத்தப்படவில்லை. தாய்மொழி உணர்வும் அது சார்ந்த தேசியமும் அறியப்படவில்ல. இந்தியா முழுமையும் சிற்றரசர்கள், ஜமீன்தாரர்கள், நிலக் கிழார்களையே நம்பி ஆங்காங்கே இருந்த தாய்மொழிகளின் வளர்ச்சி இருந்தது. தாய்மொழியைப் பேசுகிற மக்கள் இருந்தனர். அதனால் மொழி உயிரோடு இருந்தது.

தமிழ்மொழிக்கு நீண்ட பழம்பெருமை தனது நூல்களைக் கொண்டே ஆதாரமாக விளங்கின. 1830-க்குப் பிறகு பண்டைய இலக்கியங்கள் ஒவ்வொன்றாக அச்சேறின. அதன் பழமை பேசப்பட்டது. அதோடு சென்னை மாநகரத் தில் அந்நாள்களில் சிறுசிறு அமைப்புகள் மக்கள் தம் உரிமையைக் கோருவதற்காகத் தோன்றின.

1816-இல் எல்லீஸ் என்பவர் திராவிடமொழிகளின் உறவைக் கண்டறிந்தார். 1856-இல் வெளிவந்த கால்டுவெலின் ஒப்பிலக்கணம் தமிழ்மொழி தனித்தியங்கும் தன்மையை வெளிப்படுத்தியது. தமிழர் களே தமது மொழியின் ஆற்றலை அப்போதுதான் உணர்ந்தார்கள். 1798-க்கும் 1802-க்கும் இடையில் தமிழ் பேசுகிற பகுதிகள் அனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் வந்தன. தென்னிந்திய மொழிகள் பேசுகிற பகுதி சென்னை மாகாணம் ஆயிற்று; அதாவது, மெட்ராஸ் பிரசிடென்சி உருவாயிற்று.

எல்லீஸ் தென்னிந்திய மொழிகளின் உறவைக் கண்டறிந்து நூறு ஆண்டு களுக்குப் பிறகு 1916-இல் நீதிக்கட்சி தோன்றியது. இந் நிகழ்வுதான் அமைப்பு முறையிலான திராவிட இயக்கம் தோன்றுவதற்குக் காரணமா யிற்று. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளிலும் அனைத்துத் துறை அறிஞர்களாலும் தமிழ் மொழி வளர்த்தெடுக்கப்பட் டது. இருபதாம் நூற்றாண் டின் தொடக்கத்திலேயே இந்திய விடுதலை இயக்கமாக இருந்த காங்கிரஸ் தாய் மொழியில் விடுதலை உணர்வையும் அரசியல் நடவடிக் கைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் விதத்தில் அமைப்புப் பணி இருக்க வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றியது.

பாரதி புத்தெழுச்சி ஊட்டும் அரசியல் கட்டுரைகளை எழுதிக்குவித்தார். மேடைகளில் அவர்களாகவே முன் வந்து தமிழில் பேசினர்; பாடினர்; ஆடினர். ஆனால் அவை பார்ப்பனத் தமிழாக இருந்தது. தமிழின் பொதுமை அதில் இல்லை. பருவ ஏடுகள் நிரம்ப வெளிவந்தன. அதிலும் பார்ப்பனத் தமிழ் கோலோச்சியது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் நடத்திய ஏடு களை நூலகம் சென்று பார்த்தால் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். மொழி நடையின் வேறுபாட்டாலேயே அது தமிழ் என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த நிலைமைகள் எல்லாம் மொழி வளர்ச்சியின் அடிப்படையில் மாறி வந்தன. காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சி, திராவிட இயக்கம் ஆகிய கட்சிகள் தமிழை வளர்த் தெடுத்தன. ஒவ்வொரு அரசியல் இயக்கத்திற்கும் அதன் பாணியே அடையாளம் ஆயிற்று. திராவிட இயக்கத்தினரின் பாணி மக்களை மிக அதிகமாகக் கவர்ந்தது. விஜயன் சொல்வது போல இதரக் கட்சியினரை தமிழ் இனக் காவலர்கள் அல்ல என்ற பிரமையை நாங்கள் ஏற்படுத்த வில்லை. தமிழை அவர்கள் கையாண்டவிதமே அவர்களை வேறுபடுத்திக் காட்டியது. அதற்குத் திராவிட இயக்கம் என்ன செய்ய முடியும்?

இது மட்டுமில்லை. தமிழ் மொழிமீது - இனத்தின்மீது உள்ளார்ந்த பற்று இருக்க வேண்டும். அந்த உள்ளார்ந்த பற்று இல்லாதபோதுதான் அவர்களுக்கு ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் ஒரு கட்டம் வளர தேவைப்பட்டது. திராவிட இயக்கப் பாணியிலான அரசியலை எதிர்நிலையில் அவர் கையாண்டார். ஆனால் அது எடுபடவில்லை. விடுதலைப் போராட்டக் காலத்திலேயே மொழிவழி மாநிலம் என்பது கூட காங்கிரசின் வெளிப்பாடே. அதற்குக் காரணம் மக்கள் அரசியலை அறிந்து கொள்ள தாய்மொழி தேவை என வற்புறுத்தப்பட்டது. மொழிவழி மாநிலம் தேவையில்லை என்று சுதந்திரத்திற்குப் பிறகு கூறினர். ஆனால் தட்சிணப்பிரதேசத்தை அறிவித்தனர். அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தவே கை விட்டனர். பின்னர் மொழி வழி மாநிலங்கள் அமைந்தன.

திமுக மட்டுமே தன்னைத் தமிழ் உணர்வாளர்கள் என்று கூறிக் கொண்டு மற்றையோரைப் பின் தங்கியவர்கள் என்று எப்போதும் கூறியதில்லை. திராவிடச் சிந்தனை நெறிகளுக்கு எதிரான தமிழ் அறிஞர்களுக்குக்கூட திமுக மதிப்பளித்து இருக்கிறது என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் காட்ட முடியும்.

கலைஞர்க்கு எதிராக இயங்குபவர்கள் 1990-க்குப் பின்னால் அவரை விடவும் மேலானவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இயங்குகிறார்கள் என்கிறார் விஜயன். தமிழ், தமிழர், தமிழ் நாடு என்பதற்காகத் திமுக குரல் கொடுத்தாலும் தவறு - இதரக் கட்சிக்காரர்கள் குரல் கொடுத் தாலும் தவறு என்று சொல்லும் விஜயன் என்னதான் சொல்ல வருகிறார் என்று நமக்குப் புரியவில்லை.

நமது மொழிப் பற்று, இனப்பற்று, விஜயன் போன்றவர்களுக்கு வெறியாகத் தோன்றலாம். இதையே திராவிடச் சிந்தனைநெறியின் எதிரிகள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் விஜயன் எழுதுகிறார்.

பாரதியின் கவிதைகளில், கட்டுரைகளில் தமிழ்த் தேசியத்தின் கூறு இருப்பதைப் போலவே திருவிகவின் எழுத்துகளிலும் இருக்கின்றன. தமிழ் நேஷன் என்பதை தமிழ்நாடு, என்றே மொழி பெயர்ப்பேன் என அவர் தேச பக்தனில் எழுதினார். திரு. வி.க. - திமுக அல்ல; திக அல்ல! தனித்தமிழ் இயக்கத்தினர் தமிழை வளர்த்தெடுத்தனர். க.திரவியம் தேசியம் வளர்த்த தமிழ் என்றே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இவர்களெல்லாம் திமுகவினர் இல்லை; திராவிட இயக்கத்தவர் இல்லை. இவர்கள் தமிழர்கள்; விஜயனும் தமிழர் (?)

ஜனநாயகத்தின் வளர்ச்சி ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்த எண்ணுகிறபோது தாய் மொழி உணர்வும் மொழி சார்ந்த தேசியமும் இயல்பாக உருவாகி மக்களிடையே நாட்டுப் பற்றை உருவாக்கும். இது இயற்கை. இந்த இயல்பை உள்ளடக்கித்தான், கிளிக்குப் பச்சைப் பூசுவதா? என்று அறிஞர் அண்ணா கேட்டார்.

தமிழ்மொழியின் இயல்பைத் திராவிட இயக்கத்தார் நன்கறிந்து பயன்படுத்தினர். மக்களைத் திரட்டினர். இன எழுச்சினால் உருவாக்கினர். இந்த அனுகூலம் விஜயனுக்கு ஏன் எரிச்சலை உண்டாக்குகிறது? பிறர் பேசிய தமிழை நாங்கள் பேசுகிறபோது இனிமை கூடுகிறது. அதோடு எங்களின் நியாயத்தைத் தமிழ் மக்கள் புரிந்துகொண்டு எங்கள் பக்கம் இருக்கிறார்கள். இதனால் உங்களுக்கோ எல்லா இடத்திலும் எரிகிறது. இன்னும் சொல்வதானால் பக்தி இயக்கம் தமிழை வைத்துக் கொண்டுதான் சமணத்தையும் பவுத்தத்தையும் அழித்தது. ஆனால் நாங்களோ எல்லோருடையேயும் அறி வையும் சமத்துவத்தையும் வளர்க்கின்றோம்.

ஆகவே, எத்தனை விஜயன்கள் எழுதினாலும் மொழியைச் சார்ந்த தேசிய உணர்ச்சி என் பதை யாரும் தடை செய்து விட முடியாது. எனவேதான், அது ஒரு கட்டத்தில் வெடித்துக் கிளம்பியது. தமிழுணர்ச்சி இயற்கையாய் அமைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றுபட்டு ஈடுபட்டாலும் அவ்வப்போது வேறுபாடுகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. மொழி வழி தேசிய உணர்வு என்பது தமிழர் களுக்கு மட்டுமல்ல அனைத்து மொழியினர் இடையேயும் இருப்பது! திமுக மட்டுமே அதற்கு உரிமை கொண்டாடும் சிறுமை அதனிடம் எப்படி இருக்க முடியும்?

மூவேந்தர் காலத்தில் இல்லாத தமிழ்த் தேசிய உணர்வு - அய்ரோப்பாவில் நிகழ்ந்த கலை, இலக்கிய மறுமலர்ச்சியின் தாக்கம் உரு வானதற்கும் பிறகு தோன்றிய கருத்தியல் என்று வரலாறு கூறுவது விஜயனுக்குத் தெரியா மல் இருக்கலாம். ஆனால் திமுகவுக்குத் தெரியும். திமுக ஒரு சுதேசிய அரசியல் இயக்கம். அது தன்னையும் காத்துக் கொள்ளும். துணை நிற்ப வரையும் காப்பாற்றும். தமிழ் உணர்வில் திமுக எல்லாரையும் விட வலிமை வாய்ந்ததாக இருக்கிறது; எனவே வாழ்கிறது. திமுக மீது விஜயன் குற்றம் சாட்டுவதாக நினைத் துக் கொண்டு குழவிக் கல்லை எடுத்து இடித்துக் கொள்கிறார். அவருக்குத்தான் நட்டம்; திமுகவுக்கு அல்ல.

திமுகவுக்கு எதிராக இன்று குரல் கொடுப்பவர்கள் பற்றி விஜயன் எழுதுகிறார். அவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல. எங்கள் பாதிப்பால் உருவானவர்கள். நாங்கள் விவேகம் காட்டுகிறோம். அவர்கள் சற்று வேகம் காட்டுகிறார்கள். அவ்வளவே!

மேதைமைமிக்க விஜயனுக்கும் தினமணிக்கும் சொல்லிக் கொள்கிறோம். பிரிட்டனின் Union Jack கொடியைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் மூன்று சிலுவைகள் தெரியும்.Jack - என்றால் கொடி; Union என்றால் ஒன்றியம்; ஒருங்கிணைப்பு தானே! பிரிட்டனில் என்ன ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.

அக்கொடியில் (1) இங்கிலிஷ் காரர்களின் புனித ஜார்ஜ் ஆலயத்தின் சிலுவை வெள்ளைப் பின்புலத்தில் சிவப்பாய் இருக்கும் 2) அடுத்தது ஸ்காட்லாந்தின் புனித ஆன்ரூ (St. Andrew) தேவாலயத்தின் சிலுவை நீலப் பின்புலத்தில் வெள்ளை நிறமாய் இருக்கும். 3) அயர்லாந்தின் புனித பாட்ரிக் சிலுவை வெள்ளைப் பின் புலத்தில் நீல நிறமாய் இருக்கும். மூன்று தேசிய இனங்களை ஒரே கொடியில் இணைத்து ஒரே நாடாக பிரிட்டன் இன்றளவும் திகழ்ந்து வருகிறது.


இன்றும் இங்கிலிஷ்காரர்கள், ஸ்காட்லாந்துகாரர்கள், அய்ரிஷ்காரர்கள் சந்திக்கிற போது தேசிய இனத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதைப் போல திமுக தனது தேசிய இனத்தைச் செருக்கோடு சொல்லிக் கொள்கிறது. அதை நிலைநாட்டப் பணியாற்றியும் வருகிறது. ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்க முயற்சியும் செய்கிறது.

தமிழ் உணர்வு என்பது இயற்கையில் இருப்பது. அதை திமுக கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்ததாக விஜயன் கவலைப்படுவது ஏன்? திமுககாரனுக்கு தமிழ் உணர்வு என்பது - இன உணர்வு என்பது இயற்கையில் இயல்பாக அமைந்தது. திமுக என்றால் - திராவிட இயக்கத்தவன் என்றால் தமிழ் இன உணர்வாளன் என்று சொல்லாமலே பெறப்படும். மொழிவழி தேசிய உணர்வை கலை, இலக்கியப் புரட்சி ஊட்டுவித்தது. அதை திமுக அதன் கொள்கை, குறிக்கோள், நோக்கம் என்பதன் உள்ளடக்கமாக வரித்துக் கொண்டது. அதனால் தான் தமிழகத்தில் அது முதல் இடத்தை இன்னமும் வகிக்கிறது. அதே நேரத்தில் கடுமை யான தாக்குதலுக்கும் உட்படுகிறது. இதை விஜயன்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1971-ஆம் ஆண்டு தேர்தலின் போது தினமணி ஆடிய ஆட்டத்தை இப்போது மீண்டும் ஆட முயற்சிக்கிறது. அதற்கு விஜயன்களைப் பொறுக்கி எடுத்து வைக்கிறது. வரலாறு தெரியாத விஜயனும் வம்பை வளர்க்கும் தினமணியும் திமுகவை வெற்றி கொள்ள முடியுமா? திராவிட இயக்கத்தைத் தான் வீழ்த்த முடியுமா?

--------------- க.திருநாவுக்கரசு -"விடுதலை" ஞாயிறுமலர் 28-3-2009

பார்ப்பனர்களுக்கு ( பிரேமானந்தா =ஜெயேந்திரர்) வக்காலத்து வாங்குபவர்களின் சிந்தனைக்கு........



குருவருளும்-திருவருளும்?



இந்தச் செய்தியைப் படிக்கின்ற நாணயமான மனிதனின் எண்ணத்தில் எது சுரக்கவேண்டும்? எது நினைவிற்கு வரவேண்டும்? எத்தகைய அலைகள் நெஞ்சில் புரளவேண்டும்?

அடடே, இந்த மனிதர்... அவர் தானே? ஒரு அய்ந்தாண்டுகளுக்கு முன் - ஒரு தீபாவளி நாளன்று (11.11.2004) ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப் பட்டாரே - ஓ, அந்த மனுசர்தானே இவர்?

காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான ஆசாமி இவர்தானே... ஆம், ஆமாம் - சாட்சாத் அவரேதான் இவர்!

எத்தனைப் பிரிவுகளில் இவர்மீது குற்றப் பத்திரிகை? குற்றப் பிரிவு 302, 120-பி, 34, 200 கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை உள்ளிட்ட குற்றப் பிரிவுகளில் வழக்கு.

இவையெல்லாம் இவர் படித்த பட்டங்களா? விருதுகளா?

மிகவும் மோசமான குற்றச்சாற்றுகள்! - இவற்றின் காரணமாக வேலூர் - மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஆம், அவர்கள் போற்றித் துதிபாடும் ஜெகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி 61 நாள்கள் கம்பி எண்ணினார் (11.11.2004 முதல் 11.1.2005).

அதன்பின், உச்சநீதிமன்றத்தால் பிணை (ஜாமீன்)யில் வெளிவந்தார்.

சங்கராச்சாரியாரைப் பொறுத்த வரை அவருக்கென்று தனியே கடவுள் கிடையாது - இன்னும் சொல்லப் போனால், நானேதான் கடவுள்! என்று சொல்லக்கூடிய அகந்தை உடையவர்!

நியூயார்க்கில் இருக்கக் கூடிய ஒரு பார்ப்பன வீட்டில், கல்யாணம் நடந்தாலும், காஞ்சி ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் திருவருளை முன்னிட்டு என்று எடுத்த எடுப்பிலேயே புகழாரம் சூட்டிதான் அச்சிடுவார்கள்.

அவர்மீது அப்படி ஒரு மரியாதை - பக்தி! அவர்மீது ஒரு தூசு விழுந்தாலும் பார்ப்பனர்கள் பதறிப் போய்விடு வார்கள்.

தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்த திரு. டி.என். சேஷன் என்ற பார்ப்பனர் - அவர் வகிக்கும் பதவியின் தகுதியையும் ஒருபுறத்தில் இறக்கி வைத்துவிட்டு, மேலாடையின்றி, அரை நிர்வாணத்துடன் காஞ்சி மடம்முன் கையில் ஒரு கைத்தடியோடு நின்று சேவகம் புரிந்தார் என்றால், அந்த மடத்தின்மீது, அந்த மடத்துத் தம்பி ரானாகிய சங்கராச்சாரிமீது அக்கிரகாரத்தார் வைத்திருக்கும் அளவு கடந்த பக்தியைப் புரிந்துகொள்ளலாமே!

காஞ்சி சங்கராச்சாரியார் எந்த இடத்திலும் உயரமான பீடத்திலே - ஆசனத்திலே தான் அமர்ந்திருப்பார். ஜனாதிபதியானாலும், அந்தச் சந்நிதானத்தின் முன் கூனிக் குறுகித்தான் தரையில் அமரவேண்டும்.

பெரியவாள் என்று சொன்னால் உலகத்திலேயே அவரை மட்டும்தான் குறிக்குமாம்.

அத்தகைய பெரிய மனுசரான ஜெயேந்திரர்மீதுதான் கொலைக் குற்றச்சாற்று - 61 நாள்கள் சிறைவாசம்.

பெண்கள் விஷயத்திலும் படு மோசம்! காமகோடி என்று எந்த அடிப்படையில் அழைக்கிறார்களோ - அந்த விஷயத்தில் காமம் தலைக்கேறி புரையோடிப் போனவர்.

அவரோடு தொடர்புபடுத்திப் பேசப்பட்ட பெண்கள் அனேகம். மணிக்கணக்கில் ஸ்ரீரங்கத்து மாமி யிடம் ஜொள்ளு வழியப் பேசிக் கொண்டே இருப்பாராம்.

அனுராதா ரமணன் என்ற அக்கிரகாரத்து அம்மையார். தமிழகம் அறிந்த எழுத்தாளர். இவரது கைப்பிடியில் சிக்கிக்கொள்ளாமல் அறுத்துக் கொண்டு வெளியே ஓடிவந்த அவலத்தை அந்த அம்மையாரே தொலைக் காட்சி ஒன்றில் கூறிக் கண்ணீர் விட்டுக் கதறியழுததை நாட்டு மக்கள் பார்த்தவர்கள்தான்.

இவ்வளவுக் கேடு கெட்ட பிறகும், கதை நாறிய பிறகும், அவர் காஞ்சி காமகோடி பீடாதிபதியாம்! மஹா சுவாமிகளாம். அவர் கோடி அர்ச்சனை செய்கிறாராம். யாருக்கு? தீண் டாமை க்ஷேமகரமானது என்று கூறிய அவரின் குருநாதரான சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்கு - ஒரு குற்றவாளிக்கு இன்னொரு குற்றவாளி துணை! சாங்கோ பாங்கமாக செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றால், பார்ப்பனர்களின் அந்தக் கட்டுப்பாடான சாமர்த்தியத்தைப் பார்ப்பனர் அல்லாதார் எண்ணிப் பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை எழுத்துகளும் - வரிகளும்.


இந்தப் பீடாதிபதியின் கோடி அர்ச்சனை யில் பங்குகொண்டு குருவருளும், திருவருளும் அடையும்படி பக்தர்களைக் கேட்டுக் கொள்கிறார்களாம்.

சூத்திரப் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - (அதற்குத் தகுதி உடை யவர்தான்) அவரைப்பற்றி பேசும்போது முகத்தைச் சுழித்துக்கொள்கிறார்கள். அதில் எந்தவிதத்திலும் தரக்குறைவில் குறைந்து விடாத ஜெயேந்திரர் சரஸ்வதி மட்டும், இவ்வளவுக் கழிசடைத்தனத்துக்குப் பிறகும் ஜெகத்குருவாம், பீடாதிபதியாம்! திருவரு ளுக்குச் சொந்தக்காரராம்!

மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் கரைத்துப் பஞ்ச கவ்யம் என்று தட்சணை வாங்கிக்கொண்டு குடிக்கச் சொல்லும் பரம்பரையல்லவா!

மாட்டுமூத்திரத்தைக் குடிப்பதற்குப் பார்ப்பானுக்குத் தட்சணை கொடுக்கும் தரம்தானே நம் மக்களுடையது!

தமிழனின் முட்டாள்தனம் எத்தனை டிகிரியில் இருக்கிறது என்று அளந்து பார்க்கும் தர்மா மீட்டர்தான் இந்தப் பஞ்சகவ்யத்தைக் குடிக்கச் செய்வது என்பார் தந்தை பெரியார்.

இந்த ஆபாசமான பக்தி வட்டத்திலிருந்து பார்ப்பனர் அல்லாதார் விடுதலை பெற்று சிந்திக்கும்பொழுதுதான். பார்ப்பனர்களின் படுமோசமான வஞ்சகத்தின் முழுப் பரிமாணமும் புரியும்.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு கடவுள் மோட்சம் கொடுத் தான் என்று கூச்சநாச்சமில்லாமல் எழுதி வைத்துள்ள கூட்டம் - எதையும் செய்யும் - எந்த எல்லைக்கும் சென்று பித்தலாட்டத்தின் கொடியை ஏற்றும்.

ஜெயேந்திரர் என்ற பெயரை கேட்ட மாத்திரத்திலேயே ஒரு அருவருப்பு- பண்பாடு உள்ளவர்களின் மனதில் ஏற்படும் - ஏற்படவும் வேண்டும்.

ஒழுக்கத்துக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் அப்படித்தான் கணிப்பார்கள்.

பக்தியிலே புரண்டால் பத்தியைப் பறி கொடுக்க நேரிடும்; புத்தியைப் பறிகொடுத்தால் மலம் கூட மலர் வாடையாகத்தானிருக்கும்.


கொலைவழக்கில் முதல் குற்றவாளி, காமக்குரூரர் எப்படி குருவருள் - திருவருள் பெற்றவராக பார்ப்பனர்களால் போற்றப்படுகிறார்?

இன்றைக்கு தம் குருநாதருக்குக் கோடி அபிஷேகம் செய்கிறாரே - அந்தக் குருநாதருக்கும், இந்தச் சீடருக்கும் இடையில் நடந்த தெருச்சண்டை ஊருக்கும், உலகுக்கும் தெரியாதா, என்ன? குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமய்யரே தலையிட வேண்டிய அளவுக்குச் சந்தி சிரித்ததே!

இதற்குள் அடங்கியிருப்பது நேர்மையோ - அறிவு நாணயமோ அல்ல! கண் மண் தெரியாத பார்ப்பன இன உணர்வு - புரிந்து கொள்வீர்!

------------ மின்சாரம் அவர்கள் 28-3-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

பெரியார் எரிமலைக்கு ஒப்பானவர்கள்


10. பெரியாரின் வரலாறு தமிழகத்தின் வரலாறு!




‘பெரியார் வரலாறு’ என்னும் அரிய நூலைக் கவிஞர் கருணானந்தம் எழுதி முடிந்திருந்தார். தமிழ்நாட்டிலே வரலாற்று நூல்கள் பஞ்சம். நூல்கள் இருக்கின்றன- உங்களுக்கெல்லாம் ‘நியூவேவ்’ எழுத்தாளர்கள் எழுதித் தள்ளுகிறார்கள். சாதாரண உணர்ச்சிகளை, மட்டரகமான உணர்ச்சிகளைக் கிண்டிக்கிளறி, வாசிப்பவர்களுக்குப் புத்தக ரூபமாகக் கொடுக்கிறார்கள்.

அதைப் படிப்பவர்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை; அதை எழுதுகிறவர்களுக்கு வேண்டுமானால் பணம் வரலாம்; சமூகத்திற்கோ, அதைப் படித்தவர்களுக்கோ எந்தவிதமான பயனும் ஏற்படவும் இல்லை; ஏற்படப் போவதும் இல்லை.

ஆனால், கெட்ட வாய்ப்பாக அந்த மாதிரி நூல்கள்தான் ஏராளம் வந்து கொண்டு இருக்கின்றன.

மகிழ்ச்சி அடைகிறேன்!

இந்த நிலையில், கவிஞர் கருணானந்தம் அவர்கள் பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி இருக்கிறார் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனக்கு முன் திரு. வீரமணி உரையாற்றினார். தமிழ் நாட்டிலே தமிழன் இன்னொரு தமிழன் பெருமையைச சுலபமாக ஒப்புக் கொள்ளமாட்டான். தமிழ்நாட்டிலே இதை ஒரு நோய் என்றுதான் கூற வேண்டும்.

இந்த மாதிரிச் சூழ்நிலையிலே, தமிழ்நாட்டிலே, தமிழன் முன்னேற்றத்றிகாக அரும்பாடுபட்டபெரியார் அவர்கள் வழைக்கை வரலாற்றைக்கவிஞர் கருணானந்தம் எழுதி முடித்திருக்கிறார் என்றால், இந்தசண் சாதனையை மகிழ்ச்சியுடன் பாராட்டத்தான் வேண்டும்.

தமிழ் நாட்டின் வரலாறு

வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்கள்: “பெரியார் வரலாறு என்பது தமிழ்நாட்டின் வரலாறு; தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு; தமிழ் மக்களின் வரலாறு; தமிழ்ச் சமுதாயத்திலே ஏற்பட்ட மறுமலர்ச்சியின் வரலாறுதான் பெரியாரின் வரலாறு.”

கிட்டத்தட்ட 95 ஆண்டுக் காலம் இந்த நாட்டிலே வாழ்ந்தவர் பெரியார்-அவரைப்பற்றி எழுதுவது என்றால் அவர்களின் வரலாற்றைக் குறிப்பிட்ட பக்கங்களில் அடக்குவது என்றால் மிகச் சிரம்மான காரியமாகும்.

பெரியார் தமிழ்ச் சமுதாயத்துக்காக உழைத்தார். பெண்களின் மேம்பாட்டுக்காக உழைத்தார். சமுதாயத்திலே நாலாவது மட்டம் அடிமட்டத்திலே உள்ள மக்களின் வாழ்க்கை மேம்படவேண்டும் என்று உழைத்தார். அவர் தோன்றிய காலத்திலே நமது சமுதாயம் எப்படி இருந்தது என்பதை நினைக்கும்போது நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது, சமுதாயத்திலே ஏற்பட்டு இருக்கின்ற மாற்றங்களைப் பார்க்கும்பொழுது!

உனக்குப் படிப்பு வருமா?

நாங்கள் எலாம் மாணவர்களாக அந்தக் காலத்திலே இருக்கும்பொழுது சொல்லுவார்கள். நான் படித்த பள்ளிக்கூடம் ஒரு சின்னப்பள்ளிக்கூடம்தான். “படிப்பு உங்களுக்கெல்லாம் எங்கடா வரும்” என்பார்கள். படிப்பு, தகுதி,திறமை என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கத்தான் இருக்கும்என்று நம்மவர்களே நம்பி வந்த காலமது.

படிப்பிற்கென்றே ஒரு சாதி என்று அந்தக் காலத்திலே நம்பினார்கள். இடுப்பிலே துண்டைக் கட்டிக்கொண்டு ‘ஆண்டே’ என்று சொல்லி, சமுதாயத்திலே அடிமட்டத்திலே கிடந்த அந்த மக்களைச் சமுதாயத்திலே உயர்ந்த நிலையிலே அதிகாரிகளாக ஆக்கியிருக்கிறார் பெரியார் அவர்கள்.

படிபிற்கு தகுதியே இல்லை என்றிருந்த மக்களுக்குப் போதிய சந்தர்ப்பம் வாய்ப்புக்களை உண்டாக்கி அவர்களுக்கெல்லாம் கல்வியை தந்தவர் பெரியார்.

அரசியல் சட்டம் திருத்தப்படக் காரணம்

கல்வி, உத்தியோகங்களிலே சமுதாயத்திலே தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற நிலை இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் நடைமுறையில் இருந்து வந்தது.

இந்தியாவுக்கு அரசியல் சட்டம் வந்த பிறகு 1950 - இல் இது மாதிரி தமிழ்நாட்டிலே இட ஒதுக்கீடு முறைகள் இருப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்றம், “தமிழ்நாட்டிலே அமுலில் இருந்து வரும் வகுப்புவாரி உரிமை, அரசியல் சட்டத்துக்கு முரணானது” என்று தீர்ப்புக் கூறியது. மேல்முறையீட்டிலும் டில்லி சுப்ரீம் கோர்ட்டும் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பச் சரியானதுதான் என்று தீர்ப்புக்கூறியது.

ஆனால், இந்த சமுதாயத்திற்கு ஏற்பட்ட இந்தப் பெரும் அபாயத்தை உணர்ந்து முதலில் குரல் கொடுத்தவர் பெரியார் ஒருவர்தான். இந்திய அரசியல் சட்டத்திலே முதன்முதலாக திருத்தத்தைக் கொணரச்செய்த குரல் பெரியார் அவர்களின்குரல்!

வரலாறு எழுதத் தகுதிகள்

அவருடைய தொண்டுகள் சமுதாயத்தின் பல்வேறு துறைகளுக்கும் பயன்பட்டுள்ளன; அத்தகையவருடைய வரலாற்றை ஒருவர் எழுத வேண்டுமானால் அவருக்கு இரண்டுவித்த் தகுதிகள் இருக்க வேண்டும். முதல்தகுதி என்னவென்றால், பெரியார் அவர்கள் தோற்றுவித்த இயக்கத்தின் பின்னணியை உணரவேண்டும். ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று இருந்ததைத் திராவிடர்கழகமென மக்கள் இயக்கமாக மாற்றினார். அவர்கள் நடத்திய போராட்டங்கள் பலப்பல! அவர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் பலப்பல! இந்தப் பின்னணியைச் சரிவரப் புரிந்ததவர்களால்தான் அவரது வரலாற்றை எழுத வேண்டுமானால் நீண்டகாலம் அவருடன் இருந்து பழகி, நேரிடையாகத்தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி எழுதினால்தான் அது உண்மையான வரலாறாக இருக்க முடியும்

இந்த இரண்டு தகுதியையும் பெற்றிருப்பவர் நமது கவிஞர் கருணானந்தம்.

கண்டனங்கள் வரும்

இந்த வரலாற்றைப்படிக்கின்றபொழுது, நமக்கு நேரிடையாகத் தொடர்புகொண்டு சம்பவங்கள் நம் நினைவுக்குவரும். இந்த நிகழ்ச்சியை, நூல் எழுதுகின்றவர் எப்படிக்கையாண்டு இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ள நமக்கு ஆவல் தோன்றும்.

அத்தகைய சம்பவத்தை குறையாகவோ, மிகையாகவோ எழுதியிருந்தால் அந்தச் சம்பவத்தை நேரில் அறிந்தர்கள்மிகச் சுலபமாச் சொல்லிவிடுவார்கள். ‘என்ன புத்தகம் எழுதியிருக்கிறார்’ எறு கண்டனம் தெரிவிப்பார்கள்.

சில சம்பவங்கள்


உதாரணமாக, திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.கழகம் பிரிந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம்; இந்தச் சம்பவத்தை அறிந்தவர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள்; இந்த நிகழ்ச்சியை, வரலாறு எழுதியுள்ளவர் எப்படி எழுதியிருக்கின்றார் என்று அறிய ஆவல் கொள்ளுவார்கள்.

அடுத்தாற்போல, 1967- ஆம் ஆண்டிலே அண்ணா அவர்கள் பதவி ஏற்றார்கள்.

18 ஆண்டுக்காலம் பெரியாரைப் பிரிந்திருந்தவர், பதவி ஏற்றதும் திருச்சிக்குச்சென்று பெரியாரைப்போய்ப்பார்த்தார். இந்த நிகழ்ச்சியை எப்படிக்கையாண்டு இருக்கிறார் என்று அறிந்து கொள்ள நமக்கு ஆவல்-இருக்கும்; அதைச் சுவைபடவே எழுதி இருக்கிறார்.

ஈரோட்டில் ஒரு மாநாடு. அண்ணா தலைமையிலே நடைபெற்றது. அந்த மாநாட்டைப்பற்றி எப்படி எழுதியிருக்கிறார் என்று ஆவலோடு பார்த்தேன், மிகவும் சுவைபட எழுதியிருக்கின்றார். அந்த மாநாட்டிலே, “பெட்டிச்சாவியை அண்ணாவிடம் கொடுக்கப்போகிறேன்” என்று பெரியார் அவர்கள் பேசினார்கள். அதற்கு மேலாக, அண்ணா அவர்களை ஊர்வலத்தில் அமரச் செய்து, ஊர் வலத்திலே தொண்டர்போல கருஞ்சட்டை அணிந்து வீதிகளிலே நடந்தே சென்றார் பெரியார்.

படிப்பும் சுய சிந்தனையும்

சுயமாக, கூர்மையாக ஒரு விஷத்தைச் சிந்திப்பது என்பது கடினமான காரியம். அதுவும் படித்தவர்களால் அப்படிச் சிந்திப்பது மிகவும் கடினம். காரணம், படித்தவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கும் பொழுது அவர்கள் ஏற்கனவே படித பல சங்கதிகள், அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார்; இவர இப்படிச் சொல்லியிருக்கிறார் என்ற நினைவுகள் வந்து விடும். அதனாலே, படித்தவர் பெரும்பாலோரால் சுயமாகச் சிந்திப்பது மிகவும் கடினமான காரியமாகும்

ஆனால், பெரியார் அவர்கள் எந்தப் புதகத்தையும் ஆதாரம் காட்டாமல் எதையும் சுயமாகச்சிந்தித்துத் தீர்க்கமாகச் சொல்லக் கூடியவர்.

நோபல்பரிசு

நல்ல வேளையாக பெரியார் ஆங்கிலம் படிக்கவில்லை; படித்திருந்தால் அவர் ஆங்கிலத்தைப் படித்துவிட்டு, அத்ன் மூலம் சொல்லுகிறார் என்று சொல்லுகின்றவர் இருக்கின்றார்கள்.

பெரியார் அவர்கள்மட்டும் தமிழ்நாட்டிலே பிறவாமல் இருந்து, மற்ற நாடுகளிலே பிறந்து, இத்தகைய கருத்துக்களைச்சொல்லியிருப்பாரேயானால், அவருக்குக் கண்டிப்பாக ‘நோபல் பரிசு’ கிடைத்திருக்கும் அவ்வளவு சிந்தனை மிக்க கருத்துக்களைச சொல்லி இருக்கிறார்; எழுதியிருக்கிறார்.

அப்படிப்பட்ட சுயசிந்தனையாளரின் வரலாற்றை நல்ல சுவையுடன் விறுவிறுப்புடன் , அனுபவித்துப் படிக்கும் வகையிலே, நமது கருணானந்தம் அவர்கள் இந்த நூலை எழுதி முடித்திருக்கின்றார் என்றல், அது ஒரு சிறந்த சாதனை; அவரை நாம்பாராட்ட வேண்டும்-எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அவர் இந்த நூல் மட்டுமல்ல; சிறந்த ஆராய்சிக்கட்டுரைகளை எழுத வேண்டும்; கவிதைகள் எழுத வேண்டும் என்று கூறி, அவரைப் பாராட்டுகின்றேன்! வாழ்த்துகின்றேன்!

இரண்டாவதாக, ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்த்த நன்னன் அவர்கள் வந்திருக்கிறார்கள்.

அதைப்பற்றி இரண்டொரு கருத்துக்களைச்சொல்ல வேண்டுமென்பது எனது விருப்பம்.

பெரியார் ஒரு எரிமலை!


எரிமலையை நீங்கள் பார்த்திருக்கலாம்; நேரில் பார்க்கவிட்டாலும், புத்தகங்கள் வாயிலாகப்படிதிருக்கலாம். எரிமலை எப்படி என்றால், குமுறி அனலைக்கக்கும். அந்த அனலைக்கக்கினால் யாரும் தாங்க முடியாது. அனல் குழம்புச் சிதறி, காலக்கிரமத்திலே ஆறி, அந்தப் பிழம்பைப் பின் கிளறிப் பார்த்தால் அதில் கனிப்பொருட்கள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.

பெரியார் அவர்கள் இந்த மாதிரியான எரிமலைக்கு ஒப்பானவர்கள்.

மிகச்சிறப்பாக வாழ்ந்து வந்த ஒரு இனத்தை மதத்தின் பெயராலும் சாத்திரத்தின் பெயராலும் சாய்த்துவிட்டார்களே என்ற் ஆத்திரந்தான் பெரியாரை ஒரு எரிமலைக்கு ஒப்பானவராக ஆக்கிற்று.

வாழ்ந்தவர்கள் வாழவேண்டியவர்கள் கல்விக்கூடம் இல்லாமல் சூத்திர்ர்களாக நாலாஞ்சாதி மக்களாக ஆக்கப்பட்டு விட்டார்களே, என்ற ஏக்கம்தான், அந்த ஏக்கத்தினால் ஏற்பட்ட வேகம்தான் அவருடைய கருத்துக்கள்.

அந்தக்கருத்துப் பிழம்புகளை ஏற்க இந்த நாட்டினரால் முடியவில்லை; கருத்து பேதம் அவ்வளவு வேகமாக இருக்கிறது!

அந்தக் கருத்துக்கள் வந்து அவை ஆறி கொஞ்சநாட்கள் ஆனபிறகு அதைக் கிளறிப் பார்த்தால், அதில் அருமையான விஷயங்கள் கிடைக்கும்.

ஆய்வாளர்களால்தான்முடியும்!


அப்படிக் கிண்டிப் பார்க்கும் பொறுப்பை ஏற்று, அதில் கிடைக்கும் விஷயங்களை நாட்டு மக்களுக்கு ஏற்ற முறையில் எடுத்துச் சொல்வது என்பது புலவர் நன்னன் போன்ற ஆராய்ச்சியாளர்களால்தான்முடியும்.

அந்தக் கருத்துக்களை ஆய்ந்து துருவித் துருவி பார்த்தால்தான் அந்தக் கருத்துக்களுடைய ஆழமும் வேகமும் புரியும், இது ஆய்வாளர்களால்தான்முடியும்; பேராசிரியர் நன்னன் போன்றவர்களால்தான் முடியும் என்பது எனது மனப்பூர்வமான கருத்து.

அவர்கள் இங்கே ஆய்வுச் சொற்பொழிவு ஆற்றவந்துள்ளார்கள். “பெரியார் பண்பாட்டிற்கு ஒருதனி உவமையாளர்” என்ற தலைப்பிலே உரையாற்ற வந்திருக்கிறார்கள்.

பேராசிரியர் நன்னன் அவர்கள் எந்தக் கோணத்தில் பேச இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. பண்பாடு என்று வருகின்றபொழுது எனக்குத் தெரிந்த இர்ண்டொரு கருத்துக்களை எடுத்துச்சொல்லி, ஆய்வாளர் அவர்களுக்கு இடம் விடலாம் என்று கருதுகிறேன்.

பண்பாடு என்று சொல்லுகிறபொழுது நீங்கள் பார்க்கலாம்; வாழ்க்கையிலே நல்ல நிலையிலே இருந்திருப்பார்கள்; ஏதோ காரணத்தாலே கீழ்மட்டத்திற்கு வந்திருப்பார்கள்.அவர்களைப்பார்த்து அனுதாப்பபடுவபவர்கள் மிக்க் குறைவாக இருப்பார்கள். ஆஸ்திகவாதியாக இருந்தால் அவருடைய தலைவிதி என்பார்கள்.சாதாரணமானவர்கள் என்றால் “அய்யோ பாவம்!” என்பார்கள்.

பிறருடைய கஷ்டங்களை உணர்வதற்கே மனது பண்பட்டு இருக்க வேண்டும். இப்பொழுது சாலையிலே பார்க்கிறோம், ஏதோ ஒரு விபத்து நடக்கிறது; அய்யோ பாவம் என்கிற உணர்வு நூற்றுக்கு 98 பேருக்கு வருவதில்லை.

ஏதோ நமக்குச் சம்பந்தம் இல்லாததுபோல் போவோம். நூற்றில் ஒரு மனிதனுக்குதுதான் இரக்க உணர்வு ஏற்படுகிறது.

பெரியாரின் பண்பாடு!


சமூகத்திலே ஏற்பட்டு இருக்கிற நிலையை உணர்ந்து பரிதாப உணர்ச்சிவசப்பட்டு, அதற்காகப் பரிகாரம் காண வேண்டும் என்று கருதுகிறவர்கள் மிகவும் அரிது.

ஆனால், ஒரு சமூகமே நசிந்து போய்விட்டதே என்று பாடுபட முன்வந்தவர் பெரியாராவார்.

சமூகத்தில் ஏற்பட்டுவிட்ட தாழ்ந்த நிலையைப்போக்கிட பாடுபட வேண்டும்; தக்க பரிகாரம் காணவேண்டும் என்பது, அதற்கு ஏற்ற நல்ல பக்குவம், பண்பாடு உடையவர்களால்தான் முடியும்.

பெரியார் அவர்களிடம் அத்தகைய பண்பாடு இருந்த காரணத்தால்தான், சமூத்த்திற்கா உழைத்தார். அதுவும் எப்படிப்பட்ட சமூகம்? எந்த சமூகத்திற்கா உழைத்தாரோ அந்த சமுகமே அவருடைய உழைப்பைப் புரிந்து கொள்ளாத நிலை- அத்தகைய சமூகத்திற்காகப் பெரியார் உழைத்தார்.

பெரியார் உழைத்த மக்கள் நிலை!

நமக்காகத்தான் உழைக்கிறார் என்பதைக்கூட புரிந்து கொள்ளாத, நன்றி உணர்ச்சி காட்டாத மக்களிடம் அவர்களின் உணர்வுகளையும் மீறி, அவர்களுக்கே உழைத்தே தான் தீருவது என் கடன் பணி செய்து கிடப்பதே என்பார்களே, அதுபோல பெரியார் பிடிவாதத்துடன் உறுதி குலையாது உழைத்தார் என்றால், அவர் மனம் எவ்வளவு பண்பட்டதாக இருந்திருக்க வேண்டும்!

இன்றைக்கு அரசியலில் எல்லாம் பார்க்கிறோம்; அரசியல் மாறுபாடு உடையவர்கள் ஒருவருக்கொருவர் எப்படி எப்படியெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் என்பதையெல்லாம் பார்க்கிறோம்.

ஆனால், பெரியார் அவர்கள் எவ்வளவு கடுமையான கருத்து மாறுபாடு கொண்டவர்களையும் தனிப்பட்ட முறையில் தாழ்த்தி பேசமாட்டார்கள். ஆனால், கருத்துக்குக் கருத்துக் கடுமையாக மோதக்கூடியவர். எவ்வளவு கடுமையான கருத்துக்களை மயமாக வைத்தும் விமர்சிக்கலாம் ஆனால், தனிப்பட முறையில் தரக்குறைவாகப் பேசுவது என்பது பெரியார் அவர்களின் வரலாற்றிலே காண முடியாத ஒன்று.

அவரால் அப்படி எப்படி இருக்கமுடிந்தது என்றால் அதற்குக் காரணம் அவர் சிறந்த பாண்பாளர்-அவர் உள்ளம் சிறந்த பண்பட்ட உள்ளம்!

நன்றி எதிர்பாராச் செம்மல்

பெரியார் அவர்களால்பலன்பெற்றவர்கள் பலர்; அத்தகையவர்கள் எல்லாம் பிற்காலத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்? பெரியார் அவர்களிடம் பத்தாண்டுக் காலம் நெருக்கமாக இருந்தவன் நான்; அப்பொழுஎல்லாம் எங்களுக்கெல்லாம் மிகவும் ஆத்திரம் வரும். ஆனால் பெரியார் ஆத்திரப்படமாட்டார்.

பெரியாரால் ஆளாக்கப்பட்டவன்; நாட்டு மக்களுக்கு அறிவமுகமானவன்; இப்படியெல்லாம் பொதுமேடையிலே பேசுகின்றானே என்ற ஆத்திரம் நமக்கெல்லாம் வந்தாலும் பெரியாருக்கு வராது; காரணம் அவர் உள்ளம் அவ்வளவு பண்பட்டது!

தாய்மார்களை அவர் எவ்வளவு பெருமையாகப்பேசுவார்; சின்ன வயதினர்க்கும் மரியாதை காட்டுவார்!

அந்த அளவு தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு சிறந்த இலக்கணமாக வாழ்ந்த காட்டியவர் பெரியார்; அப்படிப்பட பெரியார் அவர்களைப் பற்றி ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்த்தப் புலவர் நன்னன் அவர்கள் வந்திருக்கிறார்கள்.

பெரியார் அவர்களின் பண்பாட்டைப்பற்றி அவர்கள் எப்படி விளக்குக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வத்ற்கு நீங்கள் எவ்வளவு ஆர்வத்துடன் வந்திருக்கிறீர்களோ, நானும் அந்த அளவு ஆர்வத்துடன் இங்கே வந்திருக்கிறேன். அவர்கள் ஆய்வுச்சொற்பொழிவை ஆற்றுமாறு உங்கள் சார்பாகக் கேட்டுக்கொண்டு, எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-----------------------கடந்த 24-12-79 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற “பெரியார் வாழ்க்கை வரலாற்று நூல்” வெளியீட்டு விழா மற்றும் அருப்புக்கோட்டை கைலாசம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஆய்வுச் சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு வேணுகோபால் அவர்கள் ஆற்றிய உரை.-நூல்:-"நீதிபதிகள் கண்ணோட்டத்தில் பெரியார்" பக்கம்:-60 - 70