Search This Blog

29.12.17

சொர்க்க வாசல் திறப்பு ஏமாற்றவா? ஏமாறவா?




சிவனை வழிபடுபவர்கள் வைகுந்த பதவியை விரும்ப மாட்டார்கள். சிவலோக பதவியையே நாடு வார்கள். அதற்காக சிவராத்திரி விரதம் இருப்பார்களாம். அதேபோல், விஷ்ணுவை வழிபடுபவர்கள் சிவலோக பதவியை விரும்பாமல், வைகுந்த பதவிக்காக வைகுந்த ஏகாதசி விரதம் இருப்பார்களாம்.
பார்ப்பனர்களின் ஆதிக்கக் கோட்டையாக இருப் பது மதம், கோயில்கள், அதன்பெயரால் நடத்தப் பட்டுவருகின்ற விழாக்கள், சடங்குகள் இத்தியாதி இத்தியாதிகள்.
அந்த ஆதிக்கக் கோட்டை சரியாமல் பாதுகாப் பதற்காகவே, பாழாய்ப்போன பக்தியை பாமர மக்க ளிடம் (படித்தவர்களிலும் பக்தியால் பாமரர்கள் உள்ள னர்) பரப்புவதற்காகவே விழாக்கள், பண்டிகைகள்.
சைவம், வைணவம் என்று இரு பிரிவுகள். சிவனை ஆராதிப்பவர்கள் சைவர்கள். விஷ்ணுவை ஆராதிப்பவர்கள் வைணவர்கள். சிவனுக்கு சிவராத் திரி என்றால், விஷ்ணுவுக்கு வைகுந்த ஏகாதசி விழாவாம்.
தமிழில் பாடினால் பெருமாளுக்கு மகிழ்ச்சியாம்
திருமங்கைமன்னன், நம்மாழ்வார் பாடிய திருவாய் மொழிப் பாடல்களை கார்த்திகை தினத்தன்று கடவுள் பெருமாளின் முன்பாக பாடினானாம். அதனால் பெரிதாக மகிழ்ச்சியடைந்த கடவுள் பெருமாள், திருமங்கை மன்னனிடம் என்ன வேண்டும் என்று கேட்டானாம். அதற்கு அவன் வேதங்களை கேட்டு மகிழ்வது போல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப்பாடல்களை வைகுண்ட ஏகாதசி விழாவில் கேட்டருள வேண்டும் என்று கேட்க, அதற்கு கடவுள் பெருமாளும் சம்மதித்தானாம். வைகுண்ட ஏகாதசியையட்டி, அனைத்து பெருமாள் ஆலயங் களிலும் சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறதாம்.
எல்லா நாள்களிலும் தமிழில் பாடினால் கடவுளுக்கு மகிழ்ச்சி இருக்காதா?
வைகுண்ட ஏகாதசி விழாவின் பெயரால் பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாள்களை வீணாகக் கழிக்கின்றனர். பகல் பத்து விழா எனப்படும் 10 நாள்களில் அரையர்கள் நாலாயிரம் திவ்ய பிரபந் தத்தில் உள்ள திரு மொழி பாசுரங்களையும், ராப்பத்து விழா எனப்படும் 10 நாள்களில் திருவாய் மொழி பாசு ரங்களையும் பாடுவதன்மூலமாக கடவுள் பெருமாள் பரவசப்படுகிறாராம்.
திருச்சி சிறீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் 108 திவ்யதேசங்களில் முதன்மையானது என்றும், Ôபூலோக வைகுண்டம்Õ என்றும் கூறப்படுகிறது.
சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியில் முக்கிய நிகழ்வான Ôசொர்க்கவாசல் திறப்புÕ எனப்படும் Ôபரமபதவாசல் திறப்புÕ நடைபெறுகிறதாம்.
சொர்க்க வாசலுக்காக ஏங்கித்தவிக்கும் பக்தர் களுக்கு நல்ல வாய்ப்புதான். சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், முண்டியடித்துக்கொண்டு சென்று விடவேண்டியதுதானே? எந்த பக்தரும் அப்படி சென்றதாக தகவல் இல்லையே? 

பக்தர்கள் ஏமாறுகிறார்களா? அல்லது மோட்சம் வேண்டி காலத்தைப் பொழுதைக் கழிப்பவர்கள் ஏமாற்றுகிறார்களா?
விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. இந்த விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனைக் கொடுக்கும் என்கின்றன புராணங்கள். ‘காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’ என்று இந்த விரதத்தின் மகிமைப் பற்றி அக்னி புராணத்தில் கூறப்பட்டுள்ளதாம்.
மாதம் இரு ஏகாதசி என்று 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசி யான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதற்கு காரணம் இந்த வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பதுதானாம்.
முரன் எனும் அசுரன்
முரன்என்றஅசுரன்இருந்தானாம்.அவன் தேவர்களையும், முனிவர்களையும் துன்பப்படுத்தி னானாம். 

சிவன் நிராகரிப்பு
அவன் செய்த கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவனிடம் முறை யிட்டார்களாம்.

சிவனோ, அவர்களை திருமாலிடம் சென்று முறையிடும்படி கூறிவிட்டதால், தேவர்களும், முனிவர்களும், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் (எப்போதும் தூங்கு மூஞ்சி கடவுள்போலும்) திரு மாலை சந்தித்தனராம்.

தூங்குமூஞ்சி கடவுளை ஏகாதசி எனும் பெண்தான் காப்பாற்றினாளாம்
கருணையே வடிவமான கடவுளானவன் தேவர் களோடு சேர்ந்து முரனை எதிர்த்து போரிட்டானாம். களைப்பும் அடைந்தானாம். போரால் களைப்படைந்த திருமால், பத்ரிகாசிரமம் என்ற இடத்தில் உள்ள ஒரு குகையில் பள்ளிகொண்டானாம் (சரியான தூங்கு மூஞ்சிதான்). அந்த இடத்திற்கு, திருமாலைத் தேடிவந்த முரன், தூங்கிக் கொண்டிருந்த திருமாலைக் கொல்ல நினைத்து உடைவாளை உருவினான். அப்போது திருமாலின் உடலில் இருந்து ஒரு பெண் தோன்றி, முரனை அழித்தாளாம்.
இதன்பின்னர், கண் விழித்த திருமால், அந்தப் பெண்ணைப் பாராட்டி, அவளுக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டானாம்.

ஏகாதசி என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண், திருமாலிடம் வரம் ஒன்றைக் கேட்டாளாம்.
‘ஏகாதசி அன்று தங்களை (திருமால்) நினைத்து நல்ல மனதுடன் யார் விரதம் இருக்கிறார்களோ, அவர்களைக் காத்தருள வேண்டும்’ என்று வேண்டி னாள். அன்று முதல் இந்த விரதம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாம்.
சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 18.12.2017 அன்று தொடங்கியது.
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி  அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. அதனை முன்னிட்டு அதிகாலை 3.45 மணிக்கு கடவுள் பெருமாளுக்கு (சிலைக்கு நகைகள் எதற்கு?) ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு ஆபரணங்களை அணிவித்துப் புறப்பட்டு,  தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரம பதவாசலுக்கு கொண்டு சென்றனராம்.
பலத்த பாதுகாப்பாம்!
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்சி சிறீரங்கம் கோவிலிலுக்கு மூன்றடுக்கு பாது காப்பு போடப்பட்டது. 42 இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 11 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் சுமார் 4000 பேர் ஈடுபட்டனர்.
இதேபோன்று வைணவக் கோயில்கள் அனைத் திலும் அதிகாலை நேரத்தில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறதாம்.
வைகுந்த பதவிக்கு விண்ணப்பம் போட்டு காத்தி ருப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. பரமபதம் (சொர்க்க வாசல்) திறக்கப்படும்போது, வைகுந்தத்துக்கு நேரடியாகச் சென்று வைகுந்த பதவியைப் பெறலா மாம்.
வைணவ கோயில்களில் சொர்க்க வாசல் திறக் கப்படும்பொழுது செல்லும் பக்தர்கள் அனைவரும் சொர்க்க வாசலை எட்டிப்பார்த்துவிட்டு, திரும்பி வந்து விடுகிறார்கள்.
ஆக, சொர்க்க வாசல்வரை சென்று பார்ப்பவர்கள் யாரும் சொர்க்கத்துக்குச் செல்ல  தயாராக இல்லை என்றே கூறலாம்.
பக்தியின் பெயரால் 

ஏமாறுகிறார்களா? ஏமாற்றுகிறார்களா? 

சிந்திப்பவர்களுக்கே வெளிச்சம்!

   ------------------------“விடுதலை” 29-12-2017                             -------- http://viduthalai.in/page-2/155057.html