Search This Blog

31.5.12

தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு நல்லதா?




உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போது மானது. மேலும் குழம்பு, ரசம், மோர் போன்ற திரவ உணவுகள் மூலமும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்து விடுகிறது.

எனக்குத் தாகமே எடுப்பதில்லை; அதனால் நான் தண்ணீரே பெரும்பாலும் குடிப்பதில்லை என ஆரோக்கியமாக உள்ள சிலர் பெருமிதமாகக் கூறிக் கொள்வது உண்டு. ஒரு சிலர் 6 மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். இது தவறு.

ஏனெனில் ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கிய மாக உள்ளவர்களுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால் இயல்பு நிலை என்று அர்த்தம். இதய நோய் - சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி, குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீர் வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.

காலையில் எழுந்தவுடன்...: காலையில் எழுந்த வுடன் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை. உடலுக்கு நல்லது. நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் உடலுக்கு குடிநீர் தேவை இல்லை.

சிறுநீர் கழிக்கும் இடைவெளி...: ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்துக்கு ஒரு முறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையோ சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அதை அடிக்கடி எனக் கொள்ளலாம். சிறுநீரகத்தில் காச நோய், மது நிறைய குடித்தல், புகைப் பழக்கம், சிறுநீர்த் தொற்று, முதுமை என அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு.

முதுமையில் புராஸ்டேட் சுரப்பி (விந்துச் சுரப்பி) வீக்கம் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படலாம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முறையான சிகிச்சை தேவை.

கெடுதல் இல்லை: குளுகுளு அறையில் (ஏ.சி.) இருக்கும்போது, தேர்வு எழுதக் கிளம்பும்போது நேர்காணலுக்குக் காத்திருக்கும்போது, பெண் பார்க் கக் கிளம்பும்போது, அவசர அவசரமாக பஸ்ஸுக்கோ அல்லது ரயிலுக்கோ கிளம்பும்போது சிறுநீர் கழிக் கும் உணர்வு ஏற்படுவது இயல்பானது. இது கெடுதல் இல்லை. இதற்கு சிகிச்சையும் தேவை இல்லை.

--------------நன்றி:-"விடுதலை" 9-2-2009

ஆதாம் ஏவாள் கதை - பெரியார்



உலகம் எப்படிப் பிறந்தது? உயிர் எப்படி த் தோன்றியது? என்ற கேள்விகள் பகுத்தறிவு வாதத்துக்கு எப்படி அடிப்படையான வையோ அதே போன்று மதம் மூடநம்பிக்கைக்கும் அடிப்படையானது. ஒவ்வொரு மதமும் தனக்கென்று கற்பித்துக்கொண்ட வினோதக் கற்பனைக் கதைகள் உலக மதங்கள் அனைத்திலும் உண்டு என்றாலும் கிறிஸ்தவ மதத்தின் கதையே உலகின் பெரும் பகுதியில் உள்ள பக்தர்களால் தீவிரமாக நம்பப்படுகிறது.

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தான் என்று தொடங்கி ஆறுநாட்களில் உலகத்தைப் பூரணமாக சிருஷ்டி செய்து முடித்தான் ஆண்டவன் என்று பைபிளின் ஆதியாகமம் கூறுகிறது. அந்த சிருஷ்டியின் கடைசிப்படிக்கட்டில் உள்ள ஆதாம், அவன் விலாஎலும்பிலிருந்து ஏவாள் சிருஷ்டி!

உண்மையில் இக்கதையின் பிறப்பிடம் கிறிஸ்தவ மதத்தின் பிறப்பிடமான அய்ரோப்பாக்கண்டம் கூட அல்ல; கடவுள் களி மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கியதாகக் கதை கூறும் பழக்கம் சிறியசிறிய மாறுதல்களுடன் உலகின் பல பாகங்களில் பூர்வகுடியினரிடம் நிலவியது. குழந்தைத் தனமான இக்கற்பனை பற்றி சர் ஜே. ஜி. பிரேசர் என்பவர் எழுதிய நூல் ஒன்றில் () ஏராளமான தகவல்களைத் தருகிறார்.

பாலினேசியா; தெற்கு ஆசியா, வடக்கு அமெரிக்கா பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம் ஆகிய நாடுகளில் இந்தக்கதை நிலவியது. பாலினேசியர்களில் தகித்தியர்களும் மவோரியர்களும் கூறிய கதைகளில் கடவுள் முதல் மனிதனை மண்ணினால் உருவாக்கியதாகவும், அவன் உறங்கியபோது அவனது எலும்பு ஒன்றை உருவி முதல் பெண்ணைச் சிருஷ்டி செய்ததாகவும் காணப்படுகிறது. இதை அப்படியே ஈயடிச்சான் காப்பி செய்துவிட்டது பைபிள்.

பைபிளை எழுதியவர்கள் செய்த ஒரே ஒரு வேலை இவர்கள் இருவருக்கும் பெயர் கொடுத்ததுதான். ஆணின் பெயர் ஆதாம்; பெண்ணின் பெயர் ஏவாள். முதலில் பைபிள் எழுதப்பட்ட எபிரேயமொழியில் ஆதாம் என்றால் மனிதன் என்றுதான் பொருள். அதையே -அந்தப் பொதுப்-பெயர்ச் சொல்லையே, முதல் மனிதனின் பெயராகப் பின்னர் ஆக்கிக்கொண்டார்கள். இச்சொல் பொதுப்பெயர்ச் சொல்லா அல்லது ஒரு மனிதனின் பெயரா என்று திடமாக உணரமுடியாமல் கிரேக்க மொழியில் பைபிளை மொழி பெயர்த்தவர்கள் திண்டாடியிருக்கிறார்கள்

இதேபோல், ஏவாள் என்பதும் குழப்பமான சொல். ஏவாள் என்றால் எபிரேய மொழியில் ஜீவன் என்றும், பாம்பு என்றும் பொருள்படும் ஒரு சொல். ஏதேன் தோட்டத்தில் பாம்பு உருவில் சாத்தான் வந்ததாகக் கதை பண்ணிய கோளாறு ஒருபுறம்; ஜீவவிருட்சத்தின் நன்மை தீமை அறியக் கூடிய கனியை உண்டதாகக் கற்பனை செய்தது மற்றொருபுறம்; ஆக, ஏவாள் என்ற குழப்பமான பொதுச்சொல் முதல் பெண்ணின் பெயரைக் குறிப்பதாயிற்று.

பகுத்தறிவுக் கண் கொண்டு பார்க்கும்போது எல்லாம் விஞ்ஞானத்துக்குப் பொருத்தமில்லாத அஞ்ஞானக் குப்பைகள்; கற்பனையால் கடவுளை மக்களின் மனதில் நிலைநாட்ட முயன்றவர்களின் சரடுகள் என்று தெளிவாகும்.

ஆண்டவன் மீது ஆணை

சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பதவி ஏற்கும்போது தெய்வ சாட்சியாக என்று ஆண்டவன் மீது ஆணை-யிட்டுப் பிரமாணம் எடுப்பதுதான் பழைய பழக்கம்.

பகுத்தறிவாளர் கட்சியான திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இப் பழக்கம் கொஞ்சம் கொஞ்ச-மாக தமிழகத்தில் ஒழிந்து வருகிறது. கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், உறுப்பினர்களும் இப்பழக்கத்தைக் கடைப்-பிடிப்பதில்லை.

இவர்கள் எல்லாம் மனசாட்சியின் படி என்று கூறி பதவிப்பிரமாணம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. இவ்வாறு சட்ட சம்மதம் எப்படிக் கிடைத்தது?

மதநம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்கள் பாராளுமன்றத்திலும், நீதி மன்றங்களிலும் பதவிப்பிரமாணம் எடுக்க புது வழி ஒன்றைக் காணவேண்டும் என்று இயக்கம் ஒன்றை இங்கிலாந்தில் நடத்தினார் சார்லஸ் பிராட்லா. இதன் விளைவாக 1888 ஆம் ஆண்டு காமன்ஸ் சபையில் மசோதா ஒன்று நிறைவேற்றப்-பட்டது. இந்த மசோதாவை 1009 ஆம் ஆண்டு பிரமாணச் சட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

சட்டமியற்றியதும் பிரச்னை தீர்ந்ததா? இல்லை. இதிலே ஒரு வேடிக்கையும் உண்டு. பல நீதிமன்றங்களில் பிரமாணம் எடுக்கும்-போது கடவுளைக் கைவிடத் தயாராக இருந்-தவர்களைக் கூட அவ்விதம் செய்ய விடுவ-தில்லை, புதுச்சட்ட விதிமுறை அடங்கிய புத்தகம் காணவில்லை என்று மேலதிகாரிகள் பொய் சொல்லிக் கடவுளையே திணித்து விடுவார்கள்.

இப்படிப்பட்டவர்களை வழிக்குக்கொண்டு-வர பகுத்தறிவு வாதிகள் ஒரு புதிய தந்திரத்தைக் கடைப்பிடித்தனர். இவர்களே தங்களுடன் ஒரு சட்டவிதிப் புத்தகத்தைக் கையோடு கொண்டு வந்துவிடுவார்கள். பழமையான மேலதிகாரிகள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறுவார்கள்.

சீப்பை மறைத்துவைத்துக்கொண்டால் கல்யாணமே நின்று போகும் என்று கனவு காணும் பழக்கம் இன்று இங்குள்ள பழமை-யாளர்களிடம் மட்டும் தான் இருக்கிறதென்-பதில்லை; அது உலகின் மிகப் பழங்காலத்திலேயே பிற்போக்கு வாதிகளின் கை வந்த கலை-போலும்!

இதையும் மீறி எந்த மேலதிகாரியாவது நீதிமன்றத்தில் பிரமாணம் எடுப்பது பற்றி சர்ச்சைகளைக் கிளப்பினால் அது நீதிமன்றத்தையே அவமதித்த குற்றமாகும் என்று மிரட்டிய பிறகு தான் பழமையாளர்கள் பணிந்தார்கள்

அன்று இங்கிலாந்தில் ஏற்பட்ட இந்தச் சீர்திருத்தம் அப்படியே இந்தியாவிலும் பின்னர் ஏற்கப்பட்டது.

------------------தந்தை பெரியார்- "உண்மை” ஜனவரி 01-15_2010 இதழிலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது (மறுபிரசுரம்)


30.5.12

பெரியாரின் சொந்த அனுபவம்




காங்கிரசில் நான் இருக்கும்போது, காங்கிரசில் ஜாதி வித்தியாசம் பாராட்டக் கூடாது என்று ஒரு தீர்மானம், காங்கிரஸ் கமிட்டியில் நானும் திரு.எஸ்.ராமநாதனும் சேர்ந்து எங்கள் சொந்த செல்வாக்கில் நிறைவேற்றி வைத்தோம். ஆனால், உடனே திருவாளர்கள் சி.இராஜ கோபாலாச்சாரி, டாக்டர் இராஜன், டிவிஎஸ்.சாஸ்திரி, என்.எஸ்.வரதாச்சாரி, கே.சந்தானம் முதலாகிய காங்கிரஸ் தலைவர்கள் என்கின்ற பார்ப்பனர்கள் இராஜினாமா செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்கின்றேன். காங்கிரஸ் பணத்தில் - காங்கிரஸ் பக்தரால் நடத்திய குருகுலத்தில்தானே எல்லோரையும் சமமாய் வைத்துச் சாப்பாடு போடவேண்டும் என்று நாங்கள் சொன்னதற்கு, மேல்கண்ட தலைவர்களேதான் _ அது அவரவர்கள் இஷ்டமேயொழிய யாரையும் கட்டாயப்படுத்தி, யாருடைய மனதையும் புண்படுத்தி, யாருடைய உரிமையையும் பறிக்கக்கூடாது என்று பதில் சொன்னதோடு, அதற்காக அந்த குருகுலமே கலைக்கப்பட்டு, இப்போது அதை ஒரு பார்ப்பனர் தனது சொந்த சொத்தாக அனுபவிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்கின்றேன். இந்த விஷயத்தை திரு.காந்தியும் ஒப்புக் கொண்டு, அது அவர் தனி அபிப் பிராயம் என்று செட்டிமார் நாட்டு சுற்றுப் பிரயாணத் தில் சமாதானம் சொல்லவில்லையா? என்று கேட்கின்றேன்.

இந்த மகாத்மாக்களும், தியாகிகளும், தலைவர்களும் இதற்குள்ளாக இப்போது புடம் போட்ட தங்கமாய் விட்டார்களா? அல்லது சலவை செய்த மக்களாய் விட்டார்களா? என்று கேட்கின்றேன். அல்லது இந்த விஷயங்கள் பொய்யா? என்று கேட்கின்றேன். அல்லது இன்றைய சுயராஜ்யத் திட்டத்தில் பார்ப்பனருக்குள்ள இந்த உரிமை பறிக்கப்பட்டு விட்டதா? அல்லது இந்த யாருடைய மனமும் புண்படக்கூடாது என்கின்ற தர்மநீதி எடுத்தெறியப்பட்டு விட்டதா? என்று கேட்கின்றேன்.

காங்கிரஸ் அங்கத்தினரில் ஜாதி வித்தியாசம் பாராட்டப் பட்டதில்லை என்று ஒரு நண்பர் சொன்னார். என்னுடைய சொந்த அனுபோகத்தை இங்கு எடுத்துச் சொல்லுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதாவது, நானும் உயர்திரு எஸ்.சீனிவாச அய்யங்காரும் காங்கிரஸ் பிரசார விஷயமாய்த் திண்டுக்கல்லுக்குப் போன போது ஒரு பார்ப்பனர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தக் காலத்தில் நான் வேறாக வைத்தே சாப்பாடு போடப் பட்டேன். ஆனாலும், பகலில் சாப்பிட்ட எச்சில் இலை அப்படியே இருக்க, அதன் பக்கத்தில்தான் இரவும் இலை போடப்பட்டு சாப்பிட்டேன்.


இது இப்படியிருக்க, மற்றொரு சமயம் நானும் தஞ்சை திரு.வெங்கட கிருஷ்ண பிள்ளையும் காங்கிரஸ் பிரசாரமாக பெரியகுளத்திற்குப் போன போது, ஒரு வக்கீல் பார்ப்பனர் வீட்டில் இறக்கப்பட்டோம். அப்போது காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்தில் பகல் சாப்பாடும், பகல் சாப்பாடு சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்திலும் இராத்திரி சாப்பாட்டுக்கும் இலை போடப்பட்டு, எறும்புகளும், பூச்சிகளும், ஈக்களும் ஊர்ந்து கொண்டிருக்கவே சாப்பிட்டு வந்தோம். இவற்றையெல்லாம் இலட்சியம் செய்யாமல்தான் காங்கிரசில் உழைத்தேனா னாலும், காங்கிரசில் ஜாதி வித்தியாசம் பாராட்டப்படுவ தில்லை என்பதை நான் ஒப்ப முடியாது என்பதற்காக இதை சொல்லிக் கொள்ளுகின்றேன்.

------------------ தந்தை பெரியார், "குடிஅரசு" 12.7.1931

என்றும் போற்றுவோம் அஞ்சாநெஞ்சனை!

அஞ்சா நெஞ்சன்

தந்தை பெரியார் இயக்கத்தின் தளகர்த்தராய் - அரிமா குரலுக்குச் சொந் தக்காரராய் - 1938 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திருச்சியிலிருந்து புறப்பட்ட தமிழர் பெரும்படையை நடத்திய தளபதியாய், பெரும் பணக்காரர்கள், பெரும் பதவிக்காரர்கள் மத்தியில் கூட வளைந்து குனியாத வாகை நோக்குடையவராய், நிமிர்ந்த பார்வையுடையவராய், இராணுவத்தில் பணியாற்றிய அந்த மிடுக்குக் குறையாதவராய் 49 ஆண்டுகளே வாழ்ந்தாலும் (பிறப்பு 20.3.1900; மறைவு 28.3.1949) குறுகிய காலத்தில் கொள்கைக் குன்றாக வாழ்ந்து, திராவிடர் கழகத் தோழர்கள் மத்தியில் மட்டு மல்ல; தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் அழகிரி பேச்சா? அனல் புயல் ஆயிற்றே - சுழல் காற்றாயிற்றே! பொங்குமாங்கட லாயிற்றே! இளைஞர்களை ஈட்டி முனையாய் வார்த் தெடுக்கும் போர்ப் பட்டறை யாயிற்றே! - தந்தை பெரியார் அவர்களின் தத்துவத்தைத் தனக்கே உரித் தான தன்மையில் தனிப் பாணியில் தருபவராயிற்றே- நுட்பமான புத்தியினாலே கூர்மையான கத்தியைக் கொண்டு முகத்திலே உள்ள உரோமங்களை உருவத்திற்கும் ஒன்றும் ஆகாமல், உரோமங்களும் முகத்தில் தங்காமல் மழிக்கிறானே - அந்தத் தொழிலாளி அம்பட்டனா? இழிவானவனா? அழகுபடுத்தும் நம் சினேகிதன் அன்றோ! என்ற வினாவின் மூலம் ஜாதிக் கட்டுத் திமிர் என்னும் யானையை அடக்கும் அங்குசமாய்- அழகிரி பேசிய பொதுக் கூட்டத்திற்குள் பார்ப்பனக் கைக்கூலிகள் கழுதையை விரட்டிவிட்ட நேரத்தில், அந்தக் கழுதையைப் பிடித்து வரச்சொல்லி, மேடையின் ஒருபக்கம் கட்டச் சொல்லி, அந்த உரை முழுவதும் பார்ப்பனியத்தின் நச்சுப் பல்லை உடைத்துக் காட்டி, ஒவ் வொரு கருத்தையும் சொல்லி முடிக்கும் பொழுது, கேளு கழுதையே கேள்! என்ற சொல் கட்டோடு பேசிய அந்த யுக்தியைப் பழம்பெரும் சுயமரியாதை இயக்கத் தொண் டர்கள் கூறுவார்களே-

பெருங்கூட்டத்தில் ஒற்றை ஆளாக இருந் தாலும் நெஞ்சு நிமிர்த்தி, ஆனை மிடுக்காய், சிங்கக் கர்ச்சனையாய், எதிரிகள் குலை நடுங்கும் எரிமலை யாய் வாழ்ந்து காட்டிய அந்த அஞ்சாநெஞ்சன், கருஞ்சட்டைத் தோழர்களுக்கு உறுதியின் ஒளிவிளக்கு! என்றும் போற்றுவோம் அந்த அஞ்சாநெஞ்சனை!

---------------- மயிலாடன் அவர்கள் 28-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

29.5.12

கடவுள் கதை - தந்தை பெரியார்


கதை சொல்லுகிறவன்:- ஒரே ஒரு கடவுள் இருந்தார்.

கதை கேட்கிறவன்:- ஊம், அவர் எங்கே இருந்தார்?

கதை சொல்லுகிறவன்:- ஆரம்பத்திலேயே அதிகப் பிரசங்கமாய்க் கேட்கிறாயே, நான் சொல்லுவதை ஊம் என்று கேட்டால் தான் இந்தக் கதை சொல்ல முடியும்.

கதை கேட்கிறவன்:- சரி, சரி, சொல்லு - ஒரே ஒரு கடவுள். அப்புறம்?

கதை சொல்லுகிறவன்:- ஒரு நாள் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார்.

கதை கேட்கிறவன்:- சரி, எப்போ?

கதை சொல்லுகிறவன்:- பாரு, மறுபடியும் இரட்டை அதிகப் பிரசங்கமாய்க் கேட்கிறாயே.

கதை கேட்கிறவன்:- சரி, சரி. தப்பு; சொல்லப்பா சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- உலகத்தை சிருஷ்டிக்கலாம் என்று முடிவு கொண்டார்.

கதை கேட்கிறவன்:- அதற்கு முன் உலகம் இல்லை போல் இருக்கிறது. உலகம் இல்லாமலே ஒருநாள் உட்கார்ந்து கொண்டு யோசிக்கிறார் போல் இருக்கிறது. அந்தரத்தில் உட்கார்ந்திருப்பார், பாவம்! என்று நினைத்துக் கொண்டு (கொஞ்ச நேரம் பொறுத்து) சரி அப்புறம்? (என்று சொன்னான்.)

கதை சொல்லுகிறவன்:- என்ன இந்த மாதிரி? நான் சொல்லுவதைக் கவனமாய்க் கேட்காமல் எங்கெங்கேயோ யோசனையாய் இருக்கிறாயே.

கதை கேட்கிறவன்:- இல்லை. நீ சொல்லுகிற போதே சில சந்தேகம் தோன்றின. அதைக் கேட்டால் கோபித்துக் கொள்ளுகிறாய், அதிகப் பிரசங்கி என்று சொல்லி விடுகின்றாய். ஆதலால், மனதிலேயே நினைத்து சமாதானம் செய்து கொண்டேன்.
கதை சொல்லுகிறவன்:- அப்படியெல்லாம் சந்தேகம் கூடத் தோன்றக் கூடாது. கதை பாட்டி கதையல்ல, கடவுள் கதையாக்கும். இதை வெகு பக்தி சிரத்தையுடன் கேட்க வேண்டும். தெரியுமா? கதை கேட்கிறவன்:- சரி, அப்படியே ஆகட்டும் சொல்லு பார்ப்போம்.

கதை சொல்லுகிறவன்:- எதிலே விட்டேன்? அதுகூட ஞாபகமில்லை, உன் தொந்தரவினால்.

கதை கேட்கிறவன்:- சரி, கோபித்துக் கொள்ளாதே. நீ விட்டது எதிலே என்றா கேட்கிறாய்? இரு, யோசனை பண்ணிச் சொல்லுகிறேன்.

ஒரே ஒரு கடவுள். அவர் ஒருநாள் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார். உலகத்தைச் சிருஷ்டிக்கலாம் என்று எண்ணினார் என்பதில் விட்டாய். அதில் தொட்டுக் கொள். என்னை அதிகப் பிரசங்கி என்கிறாய். எனக்காவது ஞாபகமிருக்கிறது; மகா பக்தனாகிய உனக்கு மறந்து போகிறது, பாவம். அப்புறம் சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- பாவம் என்ன எழவு, உன்னுடைய தொல்லையில் எதுதான் ஞாபகமிருக்கிறது. அப்புறம் என்ன பண்ணினார் என்பதுகூட மறந்து போய் விட்டது. யோசனை பண்ணிச் சொல்லுகிறேன். பொறு. (சற்று பொறுத்து) முதலில் வெளிச்சம் உண்டாக்கக் கடவது என்று சொன்னார்.

கதை கேட்கிறவன்:- உட்கார்ந்து கொண்டா இவ்வளவும் நினைத்தார்! பாவம் கடவுளுக்கு எவ்வளவு பிரயாசை நம்மால்? அவர் கருணாநிதி என்பதற்கு இதைவிட என்ன ருசுவு வேண்டும்!

கதை சொல்லுகிறவன்:- அதையெல்லாம் நீ தெரிந்து கொள்ளுவதற்குத் தானே இந்தக் கதை சொல்லுகிறேன். இந்த மாதிரி கவனமாய்க் கேள்.

கதை கேட்கிறவன்:- சரி, சரி சொல்லு. உடனே வெளிச்சம் உண்டாய் விட்டதாக்கும். கடவுளுக்கு ஏதோ போட்டி இருக்கும் போல் இருக்கிறது.

கதை சொல்லுகிறவன்:- என்ன போட்டி?

கதை கேட்கிறவன்:- இல்லையப்பா, வெளிச்சத்தைத் தான் கடவுள் சிருஷ்டித்தார். அதற்கு முன் இருந்த இருட்டை எவனோ அயோக்கியப் பயல் கடவுளுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டுமென்று போட்டிக்காக சிருஷ்டித்து விட்டு ஓடிப் போய் விட்டான் போலிருக்கிறது. நான் அவனைக் கண்டால் என்ன செய்வேன் தெரியுமா?

கதை சொல்லுகிறவன்:- தொலைந்து போகுது, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே; சொல்வதைக் கேளு.

கதை கேட்கிறவன்:- சரி சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- அப்புறம் மேடு பள்ளம் எல்லாம் சமன் ஆக வேண்டும் என்று கருதினார்; அதுபோலவே ஆயிற்று.

கதை கேட்கிறவன்:- கடவுளுக்கு முன்னால் இருந்த மேடு பள்ளங்களையெல்லாம் சமன் ஆக வேண்டும் என்று சொன்னாராக்கும், அதெல்லாம் சமனாய் விட்டதாக்கும். கடவுள், நல்ல கடவுள்! எவ்வளவு ஞானமும், கருணையும் உடைய கடவுள்! மேடு பள்ளம் இருந்தால் நம்ம கதி என்னாவது? இன்று போல் சமுத்திரமும், மலையும், குழியும், குன்றுமாகவல்லவா ஆகி இருக்கும். ஆதலால் கடவுள் நல்ல வேலை செய்தார்!

ஆனால், அப்புறம் எவனோ புறப்பட்டு மறுபடியும் பழையபடி இருட்டும், மேடும், பள்ளமும், குழியும், குன்றும் ஏற்படும்படி செய்து விட்டான் போலிருக்கிறது! இருக்கட்டும், அதைப் பற்றிக் கவலை இல்லை. கடவுள் செய்த நன்மைகளை நினைத்து மகிழ்ந்து அவருக்கு நன்றி செலுத்துவோம்! அப்புறம் என்ன செய்தார்?

கதை சொல்லுகிறவன்:- அப்புறம் அதாவது வெளிச்சம் உண்டாகி மேடு பள்ளம் நிரவப்பட்ட பிறகு மறுபடியும் யோசித்தார்.

கதை கேட்கிறவன்:- சரி, யோசித்தார்.

கதை சொல்லுகிறவன்:- அதற்குள் ஒரு நாள் முடிந்து போய்விட்டது. அடுத்த நாள் அதாவது இரண்டாவது நாள் காற்று உண்டாகக் கடவது என்று சொன்னார், உடனே காற்று உண்டாய் விட்டது.

கதை கேட்கிறவன்:- பிறகு என்ன செய்தார்?

கதை சொல்லுகிறவன்:- அதற்கும் ஒருநாள் ஆகிவிட்டது. பிறகு மூன்றாம் நாள் பூமி உண்டாகக் கடவது என்று நினைத்தார். பூமி உண்டாயிற்று. அன்றே சமுத்திரம், செடிகள் உண்டாகக் கடவது என்று நினைத்தார். உடனே சமுத்திரம், செடிகள் உண்டாயின.

கதை கேட்கிறவன்:- பிறகு?

கதை சொல்லுகிறவன்:- இதற்குள் மூன்று நாள் முடிந்து விட்டது. நான்காம் நாள் உட்கார்ந்து கொண்டு யோசித்தார், யோசித்தார், ரொம்ப கஷ்டப்பட்டு, என்ன செய்வது என்று யோசித்தார்!

கதை கேட்கிறவன்:- அய்யோ பாவம்; கடவுள் நமக்காக எவ்வளவு பாடுபட்டார், மனிதர்களுக்கு நன்றி விசுவாசம் இருக்கிறதா? போனால் போகட்டும். அப்புறம் என்ன செய்தார்? சொல்லு, சீக்கிரம்.

கதை சொல்லுகிறவன்:- அப்புறம் நான்காம் நாள் ஒரு முடிவுக்கு வந்தார். என்ன முடிவுக்குத் தெரியுமா? சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை உண்டாக்க வேண்டும் என்று கருதி ஒரே அடியாய் இவ்வளவும் உண்டாகக் கடவது என்று சொன்னார். உடனே உண்டாகி விட்டன.

கதை கேட்கிறவன்:- சரி, சரி, இப்போது புரிந்தது, அந்தக் கடவுளின் பெருமை. நான் முன்பு சந்தேகப்பட்டதும், குறுக்குக் கேள்வி போட்டதும் அதிகப் பிரசங்கித்தனம் என்பதும் வெளியாயிற்று!

கதை சொல்லுகிறவன்:- பார்த்தாயா, நான் அப்பொழுதே சொல்லவில்லையா? கடைசி வரை பொறுமையாய்க் கேட்டால், எல்லாச் சந்தேகமும் விளங்கி விடும் என்று. எப்படி விளங்கிற்று? சொல்லு பார்ப்போம்.

கதை கேட்கிறவன்:- அந்தக் கடவுளின் பெருமை எனக்கு எப்படி விளங்கிற்று என்றால், பூமி உண்டாவதற்கு முன்பே மேடு பள்ளத்தையெல்லாம் சமன் செய்தது ஒன்று, மற்றும் சூரியன், பூமி ஆகியவை உண்டாவதற்கு முன்பே நாள்கள் கணக்கு எண்ணவும், முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் கண்டுபிடிக்கவும் முடிந்தது பார்! இது எவ்வளவு அற்புதமான செய்கை! அப்புறம் மேலே சொல்லு; மிகவும் ருசிகரமாகவும், மகிமை பொருந்தியதாகவும் இருக்கிறது, இந்தக் கடவுள் கதை.

கதை சொல்லுகிறவன்:- அதற்குள் என்ன தெரிந்து கொண்டாய்? இன்னும் கேள். எவ்வளவு அதிசயமாயும், ருசியாயும் இருக்கும் பார்! அப்புறம் அய்ந்தாவது நாள் ஆயிற்று. மீன்களும், பட்சிகளும் உண்டாகக் கடவது என்றார், உடனே ஆகிவிட்டன.

கதை கேட்கிறவன்:- இத்தனை கோடி, கோடி, கோடி மீன்களும் ஒரே நாளில் ஆய்விட்டன என்றால் கடவுள் சக்தியும், பெருமையும் எப்படிப்பட்டது பார்! அப்புறம்?

கதை சொல்லுகிறவன்:- அப்புறம்தான் விசேஷமான வேலை செய்கிறார். அதாவது ஆறாவது நாள் உட்கார்ந்து யோசித்து யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து மிருகங்களும், மனிதர்களும் உண்டாகக் கடவது என்றார்! உடனே மிருகங்களும், மனிதர்களும் உண்டாகி விட்டார்கள்!

கதை கேட்கிறவன்:- அப்பாடா? கடவுள் வெகு பிரயாசைப்பட்டிருக்கிறாரே? ஒரு வாரம் போல் ஆறு நாள் விடாமல் கஷ்டப்பட்டு வெளிச்சம், சமம், காற்று, சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன், மீன்கள், பட்சிகள், மிருகங்கள், மனிதர்கள் ஆகிய எவ்வளவு பண்டங்களையும், ஜீவன்களையும் சிருஷ்டித்திருக்கிறார்! என்ன கஷ்டம்? இதற்கு ஆக அவருக்கு களைப்பு, இளைப்பு ஏற்படவில்லையா?

கதை சொல்லுகிறவன்:- சொல்லுகிறேன், கேள். நமக்கு இருக்கிற புத்தி கடவுளுக்கு இருக்காதா? ஏழாவது நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார். அதனால் தான் இப்போது கூட ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் ஆகக் கருதப்படுகிறது.

கதை கேட்கிறவன்:- சரி, புரிஞ்சுது. கடவுள் தயவினால், வேலை செய்யாதவன் கூட இப்பொழுது ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுத்துக் கொள்ளுகிறான். கடவுள் எவ்வளவு கருணை உடையவர்? சரி, அப்புறம்.

கதை சொல்லுகிறவன்:- மனிதரைக் கடவுள் சிருஷ்டித்தாரென்றால் எப்படி சிருஷ்டித்தார் தெரியுமா?

கதை கேட்கிறவன்:- அதைக் கேட்க வேண்டும் என்று தான் நினைத்தேன். நீ அதை அதிகப் பிரசங்கக் கேள்வியென்று சொல்லி விடுவாயே என்று விட்டு விட்டேன். ஆனாலும், நல்லவேளையாய் நீயே சொல்லப் புறப்பட்டு விட்டாய். அதுவும் அந்தக் கடவுள் செயலாகத்தான் இருக்க வேண்டும். சொல்லு, சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- முதல் முதலில் ஒரே ஒரு மனிதனை சிருஷ்டித்தார். பிறகு அவனுடைய விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து அந்த எலும்பிலிருந்து ஒரு பெண்ணை சிருஷ்டித்து இரண்டு பேரையும் ஷோக்காய் ஒரு நந்தவனத்தில் உலாவச் சொன்னார். அந்த நந்தவனத்தில் சில பழச்செடிகள் இருந்தன. அந்தப் பழச்செடிகளில் ஒரு பழச்செடியின் பழத்தைச் சாப்பிடக் கூடாது என்று கடவுள் அந்த ஆண், பெண் இருவருக்கும் சொல்லி வைத்தார். கடைசியாக அந்த ஜோடி, கடவுள் வார்த்தையைத் தட்டிவிட்டு பிசாசு வார்த்தையைக் கேட்டு அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட்டது.

கதை கேட்கிறவன்:- நில்லு, நில்லு. இங்கே எனக்கு கோபம் வருகிறது. அந்தக் கோபம் ஆறினால் தான் மேல்கொண்டு கதை கேட்க முடியும்.

கதை சொல்லுகிறவன்:- என்ன கோபம்?

கதை கேட்கிறவன்:- அதெப்படி அங்கே சாத்தான் வந்தான்? அவனை யார் சிருஷ்டித்தது? மேல்படி ஆறு நாள் வேலையிலும் கடவுள் சாத்தானைச் சிருஷ்டிக்கவே இல்லையே! அந்தப் பயலை வேறு எந்தப் பயலோ சிருஷ்டித்தல்லவா கடவுளுடன் போட்டி போட அந்த நந்தவனத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும்? அந்தப் பயலைக் கண்டுபிடித்து அவனுக்குத் தகுந்த புத்தி கற்பிக்க வேண்டாமா? ஒருசமயம் கடவுளும் தனது பெருந்தன்மையில் அந்த சாத்தானையும் அவனைச் சிருஷ்டித்த மற்றொரு சாத்தானையும் சும்மா விட்டிருப்பார்! நமக்குப் புத்தியும், ரோசமும் வேண்டாமா? அந்த சாத்தானையும் அவனைச் சிருஷ்டித்தவனையும் கண்டுபிடித்து தகுந்தபடி புத்தி கற்பிக்கா விட்டால் நமக்கும் மற்ற மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்? இதுதான் என்னுடைய ஆத்திரம்! இதற்கு ஒரு வழி சொல்லு! எனக்குக் கோபம் வந்து வந்து போகிறது.
கதை சொல்லுகிறவன்:- ஆத்திரப்படாதே, நான் சொல்வதைப் பூராவும் கேள். பிறகு அதைப் பற்றி யோசிக்கலாம்.

கதை கேட்கிறவன்:- சரி, சொல்லித் தொலை. நமக்கென்ன மானமா, வெட்கமா, அறிவா? என்ன இருக்கிறது? அவன் வந்து என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு சாமி மாடு மாதிரி தலையை ஆட்ட வேண்டியது தானே! அப்புறம்? கதை சொல்லுகிறவன்:- அந்தப் பழத்தைச் சாப்பிட்ட இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

கதை கேட்கிறவன்:- சரி, அப்புறம் என்ன ஆச்சுது?

கதை சொல்லுகிறவன்:- என்ன ஆவது? பிசாசு பேச்சைக் கேட்டதால் பிறந்த பிள்ளை யோக்கியமாக இருக்குமா? அவை ஒன்றோடொன்று சண்டை இட்டுக் கொண்டு இளையது மூத்ததைக் கொன்று விட்டது.

கதை கேட்கிறவன்:- காலம் கலிகாலமல்லவா? மூத்தது மோளை, இளையது காளை! கொல்லாமல் இருக்குமா? அப்புறம்?

கதை சொல்லுகிறவன்:- இளையவனைக் கடவுள் உன் அண்ணன் எங்கே? என்று கேட்டார். இளையவன் எனக்குத் தெரியாது என்று சொன்னான். உடனே கடவுள் கோபித்துக் கொண்டு அந்த ஆதி ஆண் பெண் ஆகியவர்களிடத்தில் மறுபடியும் ஒரு குழந்தை உண்டாகும்படிச் செய்தார்.

கதை கேட்கிறவன்:- எப்படியோ செய்தார்! அப்புறம்?

கதை சொல்லுகிறவன்:- இதற்குள்ளாக கொச கொசவென்று குழந்தைகள் பெருகிவிட்டன. இவற்றை எல்லாம் அயோக்கியர்களாக இருந்தன. இவை ஒன்று தவிர, மற்றவை எல்லாம் இறந்து போயின.

கதை கேட்கிறவன்:- அய்யய்யோ! அப்புறம் கடவுள் என்ன செய்தார்?

கதை சொல்லுகிறவன்:- என்ன செய்தார்? மிஞ்சின குழந்தையை ஒரு கப்பல் தயார் செய்யச் செய்து அதில் கடவுள் முன் உற்பத்தி செய்த பொருள்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு தண்ணீரில் மிதக்கச் சொன்னார். அந்தப்படியே மிதந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் பெரிய மழை பெய்து எங்கும் பிரளயமாக ஆகி உலகமே அழிந்துவிட்டது. இந்தக் கப்பல் மாத்திரம் மிஞ்சிற்று. மீதியான கப்பலினாலும் அதிலிருந்தவர்களாலும் இப்பொழுது காணப்படுகிற உலகமும் அதிலுள்ள சகலமும் உண்டாயின.

கதை கேட்கிறவன்:- அந்தக் கப்பலில் சந்திரன், சூரியன், நட்சத்திரம் முதலிய எல்லாம் ஏற்றப்பட்டு எல்லாம் முழுகிப் போச்சாக்கும்!

கதை சொல்லுகிறவன்:- ஆம்! எல்லாம் அடியோடு முழுகி விட்டது.

கதை கேட்கிறவன்:- போதுமப்பா, இன்னம் இதற்கு மேல் சொன்னால் என்னால் கேட்க முடியாது! நல்ல தங்கமான கதை இது!

கதை சொல்லுகிறவன்:- சரி, அப்படியானால் இப்போது நிறுத்தி விட்டு மற்றொரு நாளைக்கு இன்னொரு கடவுளுடைய கதையை நான் சொல்லுகிறேன், நீ கேளு!

------------------------- தந்தை பெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை -"விடுதலை" 27.12.1953.


ஏழைகள் துயரம் நீங்க வழி -பெரியார்





தோழர்களே, இந்த தேசத்தில் ஏற்பட்டிருக்கும் ஜன சமூக அமைப்பின் அஸ்திவாரமே சரியாய் இல்லாமல் இருக்கிறது. இந்த அஸ்திவாரத்தின் மீது கட்டக்கூடிய எந்த அமைப்பும் ஜன சமூகத்திற்கு நன்மை அளிக்கக்கூடியதல்ல. ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படி சம அந்தஸ்தும், சம உரிமையும் உண்டோ, அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர் களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் மக்கள் சுகமாக வாழ முடியும். ஏதோ தான் பிறந்த வேளையின் பலன் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியது தான்; மற்றொருவன் சுகத்தை அனுபவிக்கப் பாத்தியதையுடையவன் தான் என்னும் சோம்பேறி எண்ணமே மக்களை அழித்து வருவதற்கு முக்கிய கருவியாய் இருக்கிறது. இந்த எண்ணம் மாறுபட வேண்டியது அவசியமாகும். இதற்காக எவ்வளவு தியாகம் செய்தாலும் அது வீணாகாது. ஜனங்களின் மனோபாவமும், வாழ்க்கையை நடத்தும் முறையும் மாறினாலொழிய, வேறொரு முறையாலும் நன்மை உண்டாகாதென்பது திண்ணம். தற்போதிருக்கும் நிலைமையில் சுயராஜ்யம் வந்தால் குருட்டு நம்பிக்கையும், வைதீகமும் தான் வலுக்கும். தற்போது சுயராஜ்யம் அனுபவிக்கும் தேசங்களை எடுத்துக் கொள் ளுங்கள். ஏழைகள் நிலைமை அங்கே எப்படி இருக்கிறது? அமெரிக்கா ஜனநாயக ஆட்சியுடையதாகத்தான் இருக்கிறது. அங்கே லட்சக்கணக் கானவர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றார்கள். அமெரிக்கா உலகில் செல்வத்திற்கே இருப்பிடமாயிருந்தும் அங்கே ஏழைகள் நிற்க நிழலின்றி, உறங்க இடமின்றித் தவிக்கிறார்கள். ஜெர்மனியின் நிலைமை இன்று எவ்விதமாக இருக்கிறதென்பது அனை வருக்கும் தெரிந்த விஷயமே. சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை உடையதென்று சொல்லும் இங்கிலாந்தும் சுயராஜ்ய தேசமேயாகும். உலகத்தின் பல நாடுகள் இங்கிலாந்தின் ஆளுகைக்குட்பட்டிருக் கின்றன. ஆனால், அங்கு ஏழைகள் படும் துயரம் கொஞ்ச நஞ்சல்ல. சுயராஜ்யமுள்ள ஒவ்வொரு தேசமும் இப்படித்தான் இருக்கிறது. சுய ராஜ்யமோ, அந்நிய ராஜ்யமோ, குடி அரசோ, முடிஅரசோ எந்தவிதமான முறையிலும் மக்கள் சுகம் பெற முடியாத நிலைமையில் உலகம் இன்று இருந்து வருகிறது.

ஆகையால், ஏழைகள் துயரத்தைப் போக்க இந்திய சுயராஜ்யம் இப்போது சிலரால் கருதப்படும் முறையில் யாதொரு நன்மையும் கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயம். சமதர்மத்தையும், பொதுவுடைமையயும் அஸ்திவாரமாக கொண்ட ராஜாங்க அமைப்பொன்றே மக்கள் சுகவாழ்க்கைக்குரிய வழியாகும். இதற்காக ஏன் நாம் தியாகம் செய்யத் தயாராயிருக்கக் கூடாதென்று கேட்கிறேன். உலகத்தில் பல வகையில் ஜீவராசிகள் மரணமடைகின்றன. பல நோய்களால் இறக்கிறவர்களின் தொகை சாதாரணமல்ல. மதத்தின் பெயரால் யாதொரு விவேகமும் இல்லாமல் ஒருவருக் கொருவர் சண்டையிட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இன்னும் பல வழிகளில் மரணமடையும் போது மக்களின் உன்னத வாழ்க்கை அமைப்பை உத்தேசித்து சிலரோ, பலரோ உயிரைத் தியாகம் செய்வது கூட பெரிய காரியமாகுமோவென்று கேட்கிறேன். மனிதனுக்கு மனிதன் எதற்காக வித்தியாசங்கள் காண்பிக்கப்பட வேண்டும்? அறிவுள்ள எவரும் இனி இந் நிலைமையைச் சகித்துக் கொண்டு ஒரு க்ஷணமானது வாழ முடியாது. பலாத்காரம் கூடாது. இம்முறைகளை மாற்ற பலாத்காரம் ஒருபொழுதும் வெற்றியடைய முடியாது. பலாத்காரம், பலாத்காரத்தையே பெருக்கும். உண்மை மறந்து விடும். ஆகையால், ஜனங்களுடைய மனதை மாற்ற பாடுபட வேண்டியது தான் முறையேயொழிய, பலாத்காரத்தினால் சாதித்து விடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும். இந்த தேசத்தில் முன்னேற்றமுள்ளவர்கள் ஒன்று, பிற்போக்கானவர்கள் மற்றொன்றாக இரண்டு கட்சிகளாகவே இருக்க முடியும். இப்படி பிரிக்கப் பட்டாலொழிய மக்கள் அபிவிருத்தியடைய மார்க்கமில்லை. நமது மக்களுக்கு விஷயத்தை அறியக்கூடிய பகுத்தறிவு விருத்தியடைந்தாலொழிய மற்றெந்த ராஜ்ய முறையாலும் ஒரு நன்மையும் விளைந்து விடப் போவதில்லை.

--------------------8.7.1934ஆம் தேதி கும்பகோணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் - "விடுதலை" 26.1.1964

28.5.12

நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்?-பெரியார்





தோழர்களே!

தலைவர் அவர்கள் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் முறையில் தமிழில் மிகப் பரிச்சயமுள்ளவன் என்றும், தமிழுக்கு ஆக மிகவும் உழைக்கிறவன் என்றும், மேல்நாடு சுற்றுப்பிரயாணம் செய்தவனென்றும் கூறி, இக்கூட்டம் சர்க்கார் சம்பந்தமான பள்ளியின் மாணவர் கூட்டம் என்றும், இதற்கு ஏற்றவண்ணம் எனது உபந்நியாசம் இருக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் மற்றும் பல சொற்களோடு அறிமுகப்படுத்தினார்கள்.

முதலில் நான் அவரது பாராட்டுதலுக்கும், புகழ் வார்த்தைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

தமிழ் பாஷை

நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன். நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமே யாகும். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்தவன். என்னை என் வீட்டார் படிக்க வைக்கக் கருதியதெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்கமாட்டாமல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை நான் பெற்றோர்களிடமிருந்தே உணர்ந்தேன். காரணம் என்னவென்றால், எனக்குப் படிப்பே வராது என்று அவர்கள் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும் ஆதலால், என்னை பள்ளியில் பகலெல்லாம் பிடித்துவைத்து இருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள். அக் காலத்தில் பிள்ளைகள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாகவே பள்ளிக்குப் போய் விடுவார்கள். வீட்டிற்கு சாப்பாட்டிற்கு செல்லும்போது ஒவ் வொரு மாணவனும் எச்சில் துப்பி விட்டுப்போய், அது காய்ந்து போவதற்கு முன்பே வந்து சேர வேண்டுமென்று உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார். அம்மாதிரியாக ஒரு மாணவனின் நேரமெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே கழியும். அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்திலும் நான் படித்ததெல்லாம் நாலுவார்த்தை பிழையறக் கூட எழுத முடியாது என்பது தான். அப்படிப்பட்ட நான் காலேஜ் வகுப்பு மாணவர்களுக்கு, அதுவும் தமிழ் பாஷை என்பதைப் பற்றி, அதுவும் விவாதத்துக்கு இடமில்லாமல் பேச வேண்டும் என்றால், எனது நிலை எப்படிப்பட்ட சங்கடமானது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

பொதுவாகவே பள்ளிக் கூடங்களிலும், வெளியிலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயத்திலேயே மிக நிர்ப்பந்தமுண்டு. இன்ன இன்ன விஷயம்தான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது. அதோடு நான் அரசியல் சமுதாயத் திட்டங்களில் சம்பந்தப்பட்டவனானதால் அவற்றைப்பற்றி இங்கு பேசக்கூடாத இடமாகவும் இருக்கிறது. தவிரவும், என்னை இங்கு அழைக்கும் விஷயத்திலும் பல அபிப்பிராயபேதம் ஏற்பட்டு, ஏதோ சில நிபந்தனைகள் மீது என்னை அழைக்க அனுமதி பெற்றதாக இச்சங்கக் காரிய தரிசி சொன்னார். ஆகவே, எனக்குத் தெரியாத விஷயத்தைப் பேசவேண்டிய வனாக இருக்கிறேன் என்பதோடு, எவ்வளவோ நிர்ப்பந்தங்களுக்குள் - நிபந்தனைகளுக்குள் பேச வேண்டியவனாய் இருக்கிறேன் என்பதை எண்ணும் போது, நான் எனக்குத் தெரிந்ததைக்கூட பேச முடியாமல் போகும்படியான கஷ்டம் ஏற்பட்டு விடும்போல் இருக்கிறது. மீறி ஏதாவது பேசிவிட்டால் பள்ளி அதிகாரிகள் நாளைக்கு மேல் அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகி விடுவார்களே என்று பயப்பட வேண்டியவனாய் இருக்கிற படியால், கூடியவரை அடக்கமாகவே நான் பேசுவதைக் கொண்டு திருப்தி அடையுங்கள் என்று மாணவர்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

தாய் பாஷையும் - தமிழ்ப் பற்றும்

தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் எனக்கு அபாரபற்று என்று தலைவர் சொன்னார். அதற்காகவே பாடுபடுகிறேன் என்றும் சொன்னார்.

தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை. அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசியபாஷை என்பதற்காகவோ, அகத்தியரால் உண் டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்று கிடையாது. அது மூடப்பற்று - மூட பக்தியே ஆகும். குணத் திற்காகவும், அக் குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும் தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும். எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.

எனது நாடு எனது லட்சியத்துக்கு உதவாது என்று கருதினால் - உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அது போலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்துக்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டு பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன். மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம் வியாபாரமுறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது தனது பெரியார்களுடையது என்பதற்காக அல்ல.

அன்பு என்பது...

உதாரணமாக புருஷன், மனைவியர், மகள், தாய், தகப்பன் முதலாகிய எல்லாரிடத்திலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புக்கும், பற்றுதலுக்கும்கூட வியாபார முறையும், எதிர்பார்க்கும் பலாபலன்களும்தான் ஆதாரமே தவிர, அவற்றில் பற்றிக் கொண்டிருக்கும் இயற்கை அன்பு என்பது எதுவும் இல்லை. புருஷன் - மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். மனைவி செத்தால் புருஷனுக்கு கொஞ்ச நாளைக்குத்தான் துக்கம் இருக்கும். புருஷன் செத்தால் மனைவிக்கு சாகும்வரையும் அல்லது நீண்ட நாளைக்கு இருக்கும். மறுவிவாகம் செய்து கொள்ளும் வகுப்பாய் இருந்தால் ஒரு சமயம் பெண்ணுக்கும் சீக்கிரத்தில் துக்கம் ஆறி, மறந்துபோகும். தகப்பனுக்கும் - பிள்ளைக்கும் கூட பிறந்த உடன் பிள்ளை செத்துவிட்டால் பிள்ளையைப் பற்றி தகப்பனுக்கு அவ்வளவு துக்கம் இருக்காது. 90 வயதாகிச் சம்பாதிக்கத் திறமையற்று, மகனுக்கு இனி எந்த விதத்திலும் தகப்பனால் பயனில்லை தொல்லைதான் அதிகப்படும் என்கின்ற நிலையில் தகப்பன் இறந்துவிட்டால், பிள்ளைக்கு அவ்வளவு துக்கம் இருக் காது. தாய் தந்தையர்கூட ஆண்பிள்ளை இறந்துபோனால் படுகிற துக்கத்தின் அளவு பெண்பிள்ளைக்குப் படுவதில்லை, தாசிகளில் பெண்பிள்ளை இறந்து போனால் படுகிற துக்க அளவு ஆண் பிள்ளை இறந்து போனால் படுவதில்லை. மற்றபடி எந்த விதத்திலோ ஒருவரிடம் ஒருவர் பலன் அனுபவிக்க இருக்கும் சமயத்தில் மகிழ்ச்சியோ, இன்பமோ, புகழோ, திருப்தியோ அனுபவிக்க இருக்கும் சமயத்தில் ஒருவர் இறந்து போனால் ஒருவர் துக்கம் அனுபவிப்பதும், அது இல்லாதவிடத்தில் அவ்வளவு இல்லாதிருப்பதும் இயல்பேயாகும்.

அதுபோல்தான் நான் தமிழினிடத் தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்ட மேற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத்துகிறேன்.

அப்படியேதான் மற்றொரு பாஷை நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து சகிக்க முடியாமல் தான் எதிர்க்கிறேனே ஒழிய புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.
நாடும் - காலமும்

ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒருவித பழக்க வழக்கமும், அவைகளிடத்தில் சில விருப்பு வெறுப்பும் இருந்து வருவதுடன் விருப்பமானதைப் பெருக்கவும், வெறுப்பானதை ஒழிக்கவும் முயற்சிப்பதுமுண்டு. ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.

ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்கு பிடிக்கக்கூடியதாகவும் பின்பற்றக்கூடியதாகவும் இருக்கலாம். ஆதலால், அந்நிய நாட்டினது என்பதற்காகவும், பழையது - புதியது என்பதற்காகவும் எதனிடமும் விருப்பு வெறுப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் சமுதாய வாழ்க்கையின் பழைய நிலை இன்றைய நிலையைவிட மேலானது என்று கருதுகிற ஒருவன், உண்மையில் பாஷை சம்பந்தமாக அப் பழைய நிலை ஏற்படக் கூடும் என்று கருதினால், அந்தப் பாஷைக்காக அவன் போராடவேண்டியவனே ஆவான். மற்ற நாட்டு பாஷை எதினாலாவது நமது நிலைமேலும் உயரும் என்று கருதினால் அந்தப் பாஷையையும் வரவேற்க வேண்டியவனேயாவான்.

இன்று சில தேசியவாதிகள் அந்நிய நாட்டு பாஷையான இங்கிலீஷை நீ ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட என்னைக் கேட்கிறார்கள். இங்கிலீஷால் தீமை இல் லாததோடு நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்கான விஷயம் பல இங்கிலீஷில் இருக்கின்றன என்றுகூட சொல்வேன். இது என் அபிப்பிராய மாத்திரமல்ல. இந்திய மேதாவிகள், உலகப் புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்கள் என்பவர்கள் எல்லாம் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லி இருக் கிறார்கள். அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று அபிப்பிராயபேத மன்னியில் போற்றப்படுகிறார்கள். ஆதலால், விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பலந்தான் காரணம் என்பதை, உங்களுக்கு மறுபடியும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத் தக்க வாழ்க்கை அளிக்கக் கூடியதும் என்பது எனது அபிப்பிராயம். ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழிலேயே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம் - எல்லாம் இல்லை என்றாலும், மற்ற அநேக இந்திய பாஷையை விட அதிகமான முன்னேற்றம் தமிழ் மக்களுக்கு அளிக்கக் கூடிய கலைகள், பழக்க வழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக்கின்றன என அறிகிறேன். ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேறு எந்தப் பாஷையும் விரும்பத்தகாததேயாகும்.

பழங்காலம்

பழம் பெரியோர்கள், முன்னோர்கள் செய்தார்கள் - சொன்னார்கள் என்பதற் காகவும் நாம் பயந்து எதையும் ஏற்றுக் கொள்கிற மாதிரியில் அல்ல எனது அன்பும் பற்றுதலும். யார் என்ன சொன்ன போதிலும் வாழ்க்கைத் துறையில் நம் முன்னோர்களைவிட, பழம் பெரியோர் களைவிட, நாம் முன்னேற்றமடைந்தவர் களே ஆவோம். ஏனெனில், பழங்காலத்தில் இல்லாத சாதனங்களும், சுற்றுச்சார்பு களும் இன்று நமக்கு இருந்துவருகின்றன. இதன் மூலம் நாம் எவ்வளவோ முற் போக்கும் வாழ்க்கை சவுகரியமும், மேன்மையும் அடைந்திருக்கிறோம். இனியும் எவ்வளவோ காரியங்களில் நம் பின் சந்ததியார்கள் அடையப் போகிறார்கள்.

முற்காலத்தில் யாரோ ஒரு சிலர், ஏதோ தெய்வீக சக்தியின் பேரால் என்னமோ ஒரு ஆச்சரியமான காரியத்தை அனுபவித்ததாகச் சொல்லப்படும் அநேக காரியங்கள் எவ்வித தெய்வீக சம்பந்தமும் இல்லாமல் அநேக மக்கள் அடைந்து வருகிறார்கள். இதனாலேயே அக்கால பழைய கால மக்களை நான் மூடர்கள் என்று குறைகூறவில்லை. அக்கால மக்களுக்கு இருந்த வசதியும், சுற்றுச் சார்பும் கொண்டு அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடிந்தது. இக்கால மக்களுக்குள்ள வசதியும், சுற்றுச்சார்பும் கொண்டு இவ்வளவும், இதற்கு மேம்பட்டதும் செய்ய முடிகிறது என்கிறேன்.

இதனாலேயே பழைய காலத்தில் இந்தச் வசதிகள் இருந்ததில்லை என்று சொல்ல முடியுமா என்று சில பழமைப் பெருமையர்கள் கேட்கலாம். பழங்காலத் தில் இந்த வசதிகளும், இந்த சுற்றுச் சார்புகளும் இருந்திருக்கலாம். ஆனால், அவைகளும், அவற்றால் ஏற்பட்ட பலன் களும் உடையனவாய் இருந்த நாடும், மக்களும் கடல் கொண்டுபோய் இருக்க லாம்; பூகம்பத்தால் மறைந்தொழிந்து போயிருக்கலாம்; அல்லது வெள்ளம், புயல் அழித்திருக்கலாம். இப்போது நமக்கு ஆராய்ச்சி யோசனைக்கு - ஆதாரத் திற்கு எட்டிய பழமை அ,ஆ,வில் இருந்து தான் ஆரம்பித்து பண்டிதத் தன்மைக்குப் போய்க் கொண்டிருப்பதைக் காண் கிறோம். ஆகையால், பெரும்பான்மை யான விஷயங்கள் பழமையைவிட புதுமை மேன்மையாய் இருக்கும் என் பது எனது அபிப்பிராயம். இவற்றை யெல்லாம் மாணக்கர்களாகிய உங்களுக் குத்தான் சொல்லுகிறேனே ஒழிய, பெரியவர்களுக்கு அல்ல. நீங்கள் யாவற்றையும் யோசித்து, பிறரிடமும் கேட்டு தெரிந்து முடிவுக்கு வர வேண்டும்.

தமிழ், தாய் பாஷை என்ற உரிமைக்காகப் பாராட்ட வேண்டும் என்றும் யாரும் கருதிவிடாதீர்கள். நம் தாய் நமக்குக் கற்பித்த பாஷை நமக்கு இன்று பயன்படாது. நாம் பயன் படுத்துவதுமில்லை. உதாரணமாக, பாலுக்கு பாச்சி என்றும், சோற்றுக்கு சோச்சி என்றும், படுத்துக்கொள்வதற்கு சாச்சி என்றும் சொல்லிக் கொடுத்தார்கள். இன்று நாம் அவற்றையா பயன்படுத்துகிறோம்? அது போலவே பாஷைகள் காலத்துக்குத் தக்கபடி, பருவத்திற்குத் தக்கபடி, நிலைமைக்குத் தக்கபடி தானாகவே மாற்றமடையும். தமிழ்நாட்டில் பழமையில் - அதாவது பாஷை ஏற்படும் காலத்தில் இல்லாத பல காரியங்கள் அரசியல் காரணமாகவும், சுற்றுச்சார்பு காரண மாகவும் இப்போது ஏற்பட்டு, அவற் றிற்காக பல அந்நிய பாஷை வார்த் தைகள் இன்று பழக்கத்தில் இருக் கின்றன. இந்நிலையில் அந்நிய பாஷை வார்த்தைகளே கூடாது என்று நம்மால் சொல்லிவிட முடியுமா? அவசியமான வற்றை வைத்துக்கொள்ள வேண்டும். அவசியமில்லாவிட்டாலும் கேடில்லாததாக இருந்தால் அவைகளைப்பற்றிக் கவலை இல்லாமல் இருந்து விடலாம்.

கேடு பயப்பவைகளை வார்த்தைகளானாலும், கலைகளானாலும், இலக்கியங் களானாலும் ஒதுக்கிவிட வேண்டியதேயாகும். இந்தக் கருத்தின் மீது கண்ட உண்மையினால்தான் நான் தமிழை ஆதரிப்பதும், மற்ற பாஷையை எதிர்ப்பதும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர்களே! இவ்வளவுதான் இந்த இடத்தில் தமிழ் பாஷை என்பதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்ல முடிந்தவை என்று கருதுகிறேன். இதற்கு மேற்பட்டுச் சொல்லுவது இந்த இடத்துக்கு ஏற்றது அல்ல என்று கருதி இவ்வளவோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.

-----------21.7.1939 அன்று கோயமுத்தூர் அரசினர் கல்லூரியில் தமிழ்க் கழக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு-”குடிஅரசு” - 06.08.1939

27.5.12

பறையன் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டம் போகாது என்றவர் பெரியார்-5




21-ஆவது காங்கிரஸ் மாநாடு 1925 நவம்பர் 21, 22 நாட்களில் காஞ்சிபுரத்தில் நடக்க இருந்த நிலையில் (அம் மாநாட்டில் இருந்துதான் தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறுகிறார்) அம்மாநாட்டுக்கு வருகை தருமாறு யாருக்கு அழைப்பு கொடுக்கிறார் தந்தை பெரியார்?

தீண்டாதார்

பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை விட தீண்டாத சமூகத்தின் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் மிகவும் முக்கிய மானது என்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்வோம். ஏனெனில் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ, உத்தியோகத்திலோ, மற்றும் பல பொது வாழ்க்கையிலோ, அவர்கள் முன்னேறவேயில்லை. இதன் காரணத்தினால் தேசத்தில் 5-இல் ஒரு பாகம் ஜனங்கள் தேச நலத்தை மறந்து சர்க்காரின் தயவை நாடி அன்னிய மதத்தில் போய் விழுந்து நமக்கு எதிரிகளாய் முளைத்துக் கொண்டு வருகிறார்கள். சுயகாரியப் புலிகளுக்கு இதைப் பற்றி கவலையிராதுதான். பொறுப்புள்ள பொது மக்கள் இதைக் கவனியாமல் விடுவது தேசத் துரோகமென்றும் எவ்வளவோ பெரிய பாவிகளென்றும் தான் சொல்ல வேண்டும். சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாகவாவது இச்சமூகங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்குமே யானால், இன்றைய தினமும் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும் ஒற்றுமையின்மையும் பிரிட்டிஷ் கொடுங்கோன்மையும், பிராமணக் கொடுமையும், நமது நாட்டில் இருக்குமா? தெருவில் நடக்கக்கூடாத மனிதனும், கண்ணில் தென்படக் கூடாத மனிதனும் அவனவன் மதத்தை அறியக் கூடாத மனிதனும், அவனவன் தெய்வத்தைக் காணக் கூடாத மனிதனும் இந்தியாவில் இருக்கக் கூடுமாவென்பதை பொது நோக்குடைய ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டுமென்பதோடு ராஜீய மகாநாட்டில் இதை வலியுறுத்தி அமுலுக்குக் கொண்டு வரும்படி செய்ய வேண்டியது தேசபக்தர்களின் கடமையென்பதை வணக்கத்துடன் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
---------------------------குடிஅரசு -08.-11.-1925

பார்ப்பனரல்லாத மக்களுக்கான வகுப்பு வாரி உரிமை என்று வரும் போது, அதில் தீண்டப்படாத மக்களின் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்தான் முக்கியம் என்பதைக் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்வோம் என்றாரே - இதைவிட தந்தை பெரியாரைப் புரிந்து கொள்வதற்கு என்ன வேண்டும் சோதரரே!

15.11.1925 அன்று மற்றுமொரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார் பெரியார்.

காஞ்சிபுரம் தமிழர் மகாநாடுகள்

காஞ்சிபுரத்தில் 31 ஆவது ராஜீய மாநாடு நாளது நவம்பர் மாதம் 21, 22ஆம் தேதிகளான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை நவசக்தி ஆசிரியர் ஸ்ரீமான் திரு.வி. கலியாண சுந்தர முதலியாரவர்கள் அக்ராசனத்தின் கீழ் கூடும்.

அது சமயம் சர்வ கட்சியார்களு மடங்கிய பிராமணரல்லாதார் மகா நாடொன்றும் கூடும்.

பிராமணல்லாதார் முன்னேற்றத்தில் கரிசனமுள்ள தமிழ் நாட்டுப் பிராமணரல்லாதார் அனைவரும் வந்திருந்து, தங்களது முன்னேற்றத் திற்கான ஒரு திட்டத்தைக் காணவும், அதைச் சரிவர அமுலுக்குக் கொண்டு வரவும் ஏற்பாடு செய்ய வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

இது விஷயத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ராஜீய அபிப்பிராய பேதங் காரணமாகவாவது, சொந்த அசவு கரியம் காரணமாகவாவது அலட்சிய மாய் இருந்து விடாமல் கண்டிப்பாய் வரவேண்டுமாய் மறுபடியும் வினயத் துடன் கேட்டுக் கொள்கிறேன்.

தீண்டாமையை ஒழிக்கவேண்டியது பிராமணர் அல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார்களின் முன் னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் பிராமணரல்லாதார் கடைத்தேற முடியும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் நாடு சுய ராஜ்யமடையும். ஆதலால், தீண்டாமை விலக்கில் கவலையுள்ளவர்களும், தீண்டாதாரென்னு சொல்லப்படுபவரும் அவசியம் காஞ்சிபுரத்திற்கு வந்து அதற்கென்று ஓர் மாநாடு கூட்டி காரியத்தில் பலன் தரத்தக்க திட்டங்களைக் காண வேண்டுமாயும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

--------------------------------------ஈரோடு ஈ.வெ. ராமசாமி 15--.1.1-25

காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் அவர்கள் 1929 பிப்ரவரி 17, 18 ஆகிய நாட்களில் செங்கற்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டினைக் கூட்டினார். அம் மாநாட்டுக்காக பெரியார் விடுத்த அழைப்பில்கூட முக்கியமாக எதைக் குறிப்பிடுகிறார்?

தனிப்பட்ட ஸ்திரீகளும், தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டு இருப் பவர்களும் அவசியம் வரவேண்டு மென்று கேட்டுக் கொள்கிறோம். தவிர அரசாங்க உத்தியோகஸ்தர்களும் அதிகாரிகளும் கண்டிப்பாய் வர வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று தெரிவிப்பதோடு, இந்த மாநாடு எவ்வழியிலும் அரசியல் மாநாடு என்ப தல்ல என்றும் அவர்களுக்கு உறுதி கூறுகின்றோம். அன்றியும் அரசாங்க சட்டமெம்பர் திவான் பகதூர் கனம் கிருஷ்ண நாயர் அவர்களும் மற்றும் பல பெரிய அதிகாரிகளும் வரச் சம்மதித்து இருக்கிறார்கள்.

முக்கியமான இம்மாநாட்டில் யோசித்து தீர்மானிக்கப்படும் விஷ யங்கள் என்னவென்றால் சமத்தும், சமஉரிமை, சமசந்தர்ப்பம், சிக்கனம், அன்பு, இரக்கம், ஒழுக்கம் ஆகிய வை ஏற்படவும் குருட்டு நம்பிக்கை, மூடப் பழக்க வழக்கம், தீண்டாமை, பெண் அடிமை ஆகியவை எடுபடவும், எளியோரை வலியோர் அடக்கி ஆளாமலும், பாமரர்களைப் படித்தவர்கள் ஏமாற்றாமலும், ஏழைகளை செல்வந்தர் கொடுமைப் படுத்தாமலும் இருப்பதற்கும் பகுத்தறிவு வளர்ச்சி பெறவும் தன் முயற்சியில் நம்பிக்கை உண்டாகவுமான தன்மை கள் போன்ற விஷயங்களேதான் அங்கு நடைபெறும். ஆகையால் இவைகளை அரசியல் விஷயமென்று யாரும் சொல்ல முடியாது. அரசியல் விஷயம் என்று ஏதாவது சொல்ல வந்தால் அது மேல் கண்ட விஷ யங்கள் நிறைவேறி அமுலுக்கு வர அரசாங்கத்தின் உதவி ஏதாவது வேண்டியிருந்தால் அந்த அளவுக்கு அதுவும் அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்க்கும் அளவுக்கு ஏதாவது பேசப்படுமே ஒழிய வேறு ஒன்றும் நடைபெறாது என்று உறுதி கூறுகிறோம்.

இந்த 3, 4 வருஷத்திய மகாநாடு களில் இதுவே முக்கியமான மகாநாடாக இருக்கும். அன்றியும் இனி நமது பிரச்சாரமும் வேலைத் திட்டமும் எப்படி இருக்க வேண்டும் என்பதும் இம்மகாநாட்டில்தான் முடிவு செய்யப்படும். ஆதலால் செங்கல்பட்டு மாநாட்டிற்கு எல்லோரும், முக்கியமாய் வாலிபர்களும், பெண்களும், தாழ்த்தப் பட்டவர்களும் அவசியம் வர வேண்டுமாய் வேண்டிக் கொள் ளுகின்றோம்.
------------------------------------------குடிஅரசு -13-.01.-1929

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை மீது தந்தை பெரியார் அவர்களுக்கு இருந்த அக்கறைக்கு யார் சான்றிதழ் கொடுக்க வேண்டும்? 1929 செங்கற் பட்டு முதல் சுயமரியாதை மாநாடு தொடங்கி, இன்றுவரை திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானங்களையெல்லாம் கொஞ்சம் அசைபோட்டுப் பாருங்கள்.

செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாடு 1929 தீர்மானம்-7:

மனித நாகரிகத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து எல்லா ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலிய பொது ஸ்தாபனங் களைத் தட்டுத் தடங்கலின்றி அனுபவிக்க சகல ஜனங்களுக்கும் சம உரிமை கொடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறது.

தீர்மானம் -21:
தீண்டாதார் எனப் படுவோருக்கு சர்க்காரில் காலியாகும் உத்தியோகங்களில் முதல் உரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக் கிறது.

ஈரோடு இரண்டாவது சுயமரியாதை மாநாடு 10.5.-30இல் நடைபெற்றபோது வடித்தெடுக்கப்பட்ட தீர்மானம்:

தீர்மானம் - இ:

தீண்டாமை என்னும் கொடுமை மனித தர்மத்திற்கு விரோத மென்று இம்மகாநாடு கருதுவதுடன், ஜனசமூகத்தில் எந்த வகுப்பாருக்கும் பொது உரிமைகளை மறுக்கும் பழக்க வழக்கங்களை உடனே ஒழிக்க வேண்டுமென்றும், பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், தண்ணீர்ப் பந்தல்கள், கோயில்கள், சத்திரங்கள் முதலிய இடங்களில் சகலருக்கும் சம உரிமை வழங்கவேண்டுமென்றும் இம் மாநாடு தீர்மானிக்கிறது.

1931--இல் விருதுநகர் மாநாடு இயற்றிய தீர்மானம்:

தீர்மானம் -இ: தீண்டாமை என்பது இந்து சமூகத்திலுள்ள சகல சாதி களையும் பிடித்த நோயென்றும், தீண்டாமை ஒழிய வேண்டுமானால் பிராமணீயம் ஒழிய வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

4-.8-.1940இல் திருவாரூரில் நடைபெற்ற மாநாட்டின் தீர்மானம்:

தீர்மானம் 6: ஆதி திராவிடர் சமு தாயத்திற்கு சர்க்காரால் அளிக்கப்பட்ட தனித் தொகுதி காப்பு முறை பூனா ஒப்பந்தத்தால் அழிக்கப்பட்டு, அச் சமுதாயத்திற்குச் சரியான பிரதிநிதி வரமுடியாமல் செய்யப்பட்டு விட்டதால் இனி வரும் தேர்தல்கள் யாவற்றிற்கும் தனித் தொகுதி முறையையே ஏற்படுத்த வேண்டுமென்று சர்க்காரைக் கேட்டுக் கொள்ளுகிறது.

தீர்மானம் -9: திராவிட நாட்டு ஆதிதிராவிடர்களை அரிஜனங்கள் என்ற பெயரால் அழைப்பதை மாற்றி ஆதிதிராவிடர்கள் என்ற பெயரா லேயே அழைக்க வேண்டு மென்று சர்க்காரையும் பொது ஜனங்களையும் கேட்டுக் கொள்ளுகிறது.

தீர்மானம் -10: தற்போது உள்ள வகுப்புவாரி பிரதிநிதித்துவ எண் ணிக்கை திராவிடர்களுக்கும் ஆதி திராவிடர்களுக்கும் மிகக் குறைவாக இருப்பதால் ஜனசங்கைக்கு ஏற்படி அவ்விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும், அவ்விகிதப்படி உத்தியோகங்கள் அடையும் வரை அதிகமாகப் பிரதிநிதித்துவம் அடைந் திருக்கும் கூட்டத்தாருடைய நிய மனம் நிறுத்தி வைக்கப்பட வேண்டு மென்றும் சர்க்காரைக் கேட்டுக் கொள்ளுகிறது.

சேலத்தில் 27.-8.-44இல் நடைபெற்ற மாநாட்டில் உருவாக்கிய தீர்மானம்:

தீர்மானம் (1) : மக்கள் பிறவியினால் சாதிபேதம் கற்பிக்கப்பட்டிருப்பதையும், அவற்றுள் உயர்வு, தாழ்வு கற்பிக்கப்பட்டிருப்பதையும், இக்கழகம் மறுப்பதோடு, அவைகளை ஆதரிக் கிற, போதிக்கிற, கொண்டிருக்கிற மதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம், காவியம் என்பவை முதலாகிய எவைகளையும் பொதுமக்களும் குறிப்பாக நமது கழகத்தவர்களும் பின்பற்றக் கூடா தென்றும் தீர்மானிக்கிறது.

29-.9-1945 திருச்சியில் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானம் வருமாறு:

திராவிட நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஜாதி, வகுப்பு அவை சம்பந்தமான உயர்வு, தாழ்வு இல்லாமல் சமுதாயத்திலும் சட்டத்திலும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் பெற்று சம வாழ்வு வாழச் செய்ய வேண்டும்.

இந்தத் தீர்மானங்கள் எல்லாம் எவற்றின் அடிப்படையில்? தாழ்த்தப்பட்டவர்கள் மீது திராவிடர் கழகத் துக்கு அக்கறை இல்லை என்றால் இந்த மாநாடுகளும், முயற்சிகளும், உழைப்பும், பொருள் செலவும் எவற்றுக்காக?

இந்திய அரசியல் சட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கடுமையான முயற்சியால் வேலை வாய்ப்பில் மட்டும்தான் இட ஒதுக்கீடு 16(4) கொண்டு வர முடிந்தது. காரணம் அரசியல் சட்ட வரைவுக் குழு உறுப் பினர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்களே!

தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் கடுமையாகப் போராடியதன் விளைவாகத்தானே இந்திய அரசியல் சட்டம் முதன் முதலாகத் திருத்தப் பட்டது! கல்வி யிலும் இட ஒதுக்கீடு 15(4) என்கிற நிலைமை கொண்டு வரப்பட்டது. கல்வியில் இட ஒதுக்கீடு இல்லா விட்டால், உத்தியோக சாலைகளுக்குள் நுழைவது எப்படி?

திராவிடர் இயக்கம் இந்தத் துறையில் பொறித்துள்ள சாதனை முத்திரைகள் ஒன்றா இரண்டா?

****************************************


தாழ்த்தப்பட்டோர் - தந்தை பெரியார் சிந்தனைகள்


பறையன் பட்டம் போகாமல் சுத்திரப்பட்டம் போகாது! பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களேயானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள். மற்றும் பேசப் போனால், பறையன், சக்கிலி என்பதற்கு இன்னார்தான் உரிமை என்றும், அது கீழ்ஜாதி என்பதற்கு இன்னது ஆதாரமென்றும் சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. கைபலமே ஒழிய, தந்திரமே ஒழிய வேறில்லை. உங்கள் சூத்திரப் பட்டங்களுக்கும் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஆகிய அநேக ஆதாரங்கள் உண்டு. இத்தனையையும் நாசமாக்கி அடியோடு ஒழித்தாலல்லாமல் உங்கள் தலையில் இருக்கும் சூத்திரப் பட்டம் கீழே இறங்காது. ஆகவே, யாருக்காவது மான உணர்ச்சி இருந் திருந்தால், நீங்கள் சாதியை ஒன்றாக்குகிறீர்களே என்று நம்மைக் கேட்டிருக்க மாட்டார்கள்.

ஆகவே, ஆதித் திராவிடர் நன்மையைக் கோரிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களில் பாப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்.

------------------------தந்தை பெரியார் -குடிஅரசு 11-.10.-1931

29.-9-.35 அன்று சேலம் ராசிபுரம் ஆதிதிராவிடர் மாநாட்டில் பெரியார் தலைமையுரை:

அரசாங்கத்தால் வழங்கிய சீர்திருத்தத்தில் உங்களுக்கு சுயமரியாதை உள்ள சீர்திருத்தம் இருந்தது. அதை தேசாபிமான சீர்திருத்தம் என்னும் பூனா ஒப்பந்தம் பாழாக்கிவிட்டது.

பூனா ஒப்பந்ததை உங்களில் சிலர் ஆதரிப்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. அதற்கு அவர் கள் சொல்லும் காரணம் மிகமிக ஆச்சரியமாய் இருக்கிறது.

அதாவது நீங்கள் மேல் ஜாதிக்காரர்களைப் போய் ஓட்டுக் கேட்க வேண்டுமாம். மேல் ஜாதிக் காரர்கள் உங்களை வந்து ஓட்டு கேட்க வேண்டுமாம். இதில் பரஸ்பர நோக்கம் ஏற்படுமாம்.

இது மைனா பிடிக்கிற வித்தையே ஒழிய இதில் நாணயமோ, அறிவுடைமையோ இல்லை. பார்ப்பனர் அதிகாரியாக இருக்கின்ற கச்சேரிக்குள் நீங்கள் போகவேண்டுமானால் சர்க்கார் உத்தரவும், பொதுத் தெருவில் நீங்கள் நடக்க வேண்டுமானால் பீனல் கோட் சட்டமும் வேண்டி இருக்கிறது. நீங்கள் பார்ப்பன அக்கிரகாரத்தில் நடந்து போய் அவர்கள் வீட்டு வாசல் நடை கடந்து உள் ஆசாரத்தில் படுத்து வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கும் பார்ப்பானிடம் போய் ஓட்டுக் கேட்க முடியுமா?

------------------- 16-.6.19-29 - கள்ளக்குறிச்சி தென்னார்க்காடு மாவட்ட ஆதி திராவிட மாநாட்டில் திறப்பாளராக இருந்து பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

மேற்கண்ட மதமும், கடவுளும் வந்து குறுக்கிடுகின்றன. ஆதலால் இந்நிலைக்கு ஆதாரமானதென்று சொல்லப்படும் மதத்தையும், கடவுளையும் எதிர்த்து நின்று அவற்றை அழித்தால் ஒழிய, வேறு மார்க்கமில்லை என்று பதிலளிக்கவும் ஒழுக்கமாகவும், தைரியமாகவும், தெளிவாகவும் இருந்தாலொழிய வேறு மார்க்கத்தில் முடியவே முடியாது. அன்றியும் உங்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வேண்டும். நாம் ஏன் தாழ்த்தப் பட்டவர்கள்? நாம் ஏன் ஒருவரை சாமி என்று கூப்பிட வேண்டும்? என்கிற உணர்ச்சி வர வேண்டும். நீங்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள்தான் என்று கருதவேண்டும் என்று மனிதர்களாக வாழவேண்டிய வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தவர் தமிழகத்தில் பெரியார் தாம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

நம் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களே தாழ்த் தப்பட்டோரின் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தையும், திட்டத் தையும், என்னைப் பற்றியும் வீணாகப் பழிக் கின்றார்கள் என்றால் வடநாட்டுப் பிடிப்பிலுள்ள டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நாம் குறை கூறமுடியுமா?

என்னையோ, அல்லது திராவிடர் இயக் கத்தையோ வீணாகக் குறை கூறினாலும், இல்லா விட்டாலும் ஒன்று கூறுகிறேன். தோழர்களே! திராவிட இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்த நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழிசாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியை வழங்குகிறேன். தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை யான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள்.

திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனை அனுபவிக்கதாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு உரிமை உண்டு.

------------------------------பெரியார், விடுதலை 8-.7-.1947


---------------------- கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 26-5-2012 “ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

26.5.12

ஆராய்ச்சியே அறிவைப் பெருக்கும்!-பெரியார்


மனிதன் மற்ற உயிர் வர்க்கங்களில் இருந்து மாறுபட்ட தனி அறிவு படைத்திருப்பவன். அதாவது பகுத்தறிவைக் கொண்ட வன். நமக்கு இந்த பகுத்தறிவு இருந்தாலும் இந்த அறிவு மற்ற நாட்டுக்காரர்களையும் மேல்நிலைக்குக் கொண்டு போகப் பயன்படுகின்றது. நமக்கு இந்த அறிவு இருந்தும் மிருகப் பிராயத்துக்குப் போகத்தான் பயன்படுகின்றது.

நம் மக்களின் அறிவை வளர்க்க, நல்ல நிலைக்குத் திருப்பிவிட எவனும் தோன்றவும் இல்லை. பாடுபடவுமில்லை. எத்தனையோ மகான்கள், மகாத் மாக்கள், தெய்வீக அம்சம் பொருந்தியவர்கள், ரிஷிகள் தோன்றினார்கள். ஒருவன்கூட இந்தப் பணிக்கு உதவவில்லை. மாறாக, நம்மை மடமையில் ஆழ்த்தத்தான் பயன்பட்டார்கள்.

நாங்கள்தான் மக்களுக்கு அறிவு ஏற்படும்படி தொண்டு செய்கின்றோம். எனது அனுபவத்தையும் அரசியலில் நான் கண்ட பித்தலாட்டமும் கண்டு தான் எனது பணியை மக்களை அறிவு பெறும்படிச் செய்து சிந்திக்கச் செய்யக்கூடிய வேலையினை மேற்கொண்டு விட்டேன்.

எனக்கு மேம்பட்ட அறிவாளிகள், விஷயங்கள் தெரிந்தவர்கள் ஏராளம் இருந்தாலும் ஒருவனும் இந்த வேலைக்குத் துணியவில்லையே. இந்த நாட்டில் சோத்துக்கும், கூழுக்கும் மக்களுக்கு வகை இல்லை என்றால் எப்படி? இருக்கின்றதைப் பங்கிட்டுக் கொடுத்தால் உணவுப் பண்டம் பற்றாதா? ஏன் இல்லை? இருக்கிறதை பங்கிட்டுக் கொடுத்தால் செல்வம் போதாதா? மக்களுக்கு வீடு இல்லை, வீடு இருப்பதைப் பங்கிட்டுக் கொடுத்தால் வீடு போதாதா? இருந்தும் பின் எது இல்லை? அறிவு என்பது ஒன்றுதானே இல்லை. இந்த அறிவு ஏற்பட எங்களைத் தவிர எவன் பாடுபடுகின்றான்? உங்களுக்குச் சோறு வேண்டுமா? எனக்கு ஓட்டு கொடு. உங்களுக்கு பணம் வேண்டுமா? எங்களுக்கு ஓட்டு கொடு. உங்களுக்கு வீடு வேண்டுமா? எங்களுக்கு ஓட்டு கொடு! என்று பித்தலாட்டமாகக் கூறி ஓட்டுக் கேட்கத்தானே வருகின்றார்களே ஒழிய, எவன் உண்மையை எடுத்துச் சொல்லுகின்றான். மனிதனுடைய அறிவு கோயிலிலோ, குளத்திலோ, புராணங்களிலோ இல்லை. ஆராய்ச்சியில், சிந்தனையில் தான் உள்ளது.

தோழர்களே! இன்றைய அரசியல் என்ன? எந்தக் கட்சிக் காரன் ஆனாலும் தேர்தலில் ஜெயிக்கணும் என்பதே நோக்கமாயிருக்கிறான். இதைத் தவிர எவனாவது கொள்கையைச் சொல்லுகிறானா?

--------------ஜனவரி 19, 24, 26 ஆகிய தேதிகளில் மதுரை, திண்டுக்கல், சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய விளக்கவுரை - விடுதலை 8.2.1964

25.5.12

இனிவரும் உலகத்தில் கடவுள்கதி!


(இனிவரும் உலகம் என்ற நூல் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்டு 1944-ஆம் ஆண்டு மூன்றாவது பதிப்பு வெளியாகியுள்ளது. அதில் கடவுள் தன்மையையும், மோட்ச - நரகத்தின் புரட்டுகளையும், எதிர்கால பகுத்தறிவு உலகத்தின் சிறப்பையும் விளக்கியுள்ள பகுதியையே நேயர்கள் சிந்தனைக்காகக் கீழே தருகிறோம். -ஆர்.)

இனிவரும் உலகத்தில் கடவுள் தன்மை எப்படி இருக்கும் என்று அறிய மக்கள் கண்டிப்பாக ஆசைப் படாமல் இருக்க மாட்டார்கள். அதைச்சற்று இங்கு ஆராய்வோம்.

கடவுள் தானாக யாருக்கும் தோன்றுவதில்லை. பெரியோர்களால் சிறார்களுக்குப் போதிக்கப்பட் டும், காட்டப்பட்டுமே தோற்றமான எண்ணமும் உருவகமுமாகும். ஆனதால் இனிவரும் உலகத்தில் கடவுளைப் பற்றி போதிக்கிறவர்களும், காட்டிக் கொடுப்பவர்களும் மறைந்து விடுவார்கள். யாராவது இருந்தாலும் அவர்களுக்கும் கடவுள் மறக்கப்பட்டுப் போகும்.

ஏனெனில், கடவுளை நினைக்க மனிதனுக்கு ஏதாவது ஒரு அவசியம் இருந்தால்தானே நினைப்பான்? சகல காரண காரியங்களுக்கும் மனிதனுக்கு விவரம் தெரிந்து விடுவதாகவும் சகல தேவைகளும் மனித னுக்கு கஷ்டப்படாமல் பூர்த்தியாகவும் இருந்தால், ஒரு மனிதனுக்குக் கடவுளைக் கற்பித்துக் கொள்ளவோ நினைத்துக் கொள்ளவோ அவசியம் ஏன் ஏற்படும்?

மனிதன் உயிரோடு இருக்குமிடமே அவனுக்கு மோட்சமாய்க் காணப்படுமானால் விஞ்ஞானப் பெருக்கம் ஏற்பட்ட இடத்தில் கடவுள் சிந்தனைக்கு இடம் இருக்காது.

சாதாரணமாக மனிதனுக்கு இன்று கடவுள் நிச்சயத்திற்கு ஒரே ஒரு காரணம் தானே சொல்லப்படுகிறது? அக்காரணம் என்னவென்றால், இந்த உலகத் தோற்றத்துக்கு காரணம் என்ன? காரண பூதமாக இருப்பது எது? அதுதான் கடவுள் என்று சொல்லப்படுகின்றது.

இது விஞ்ஞானிகளுக்கு சுலபத்தில் அற்றுப் போன விஷயம் பஞ்சபூதங்களின் சேர்க்கையே உலகம் என்பர். நம்முடைய வாழ்வில் நாம் எதைக் கடவுள் செயல் என்று உண்மையாய்க் கருதுகிறோம்? நம் அனுபவத்திற்கு வந்த ஒவ்வொன்றுக்கும் நாம் சமாதானம் தெரிந்து கொள்கிறோம்; தெரியாதவற்றை தெரியாது என்று ஒப்புக் கொள்கிறோம். தெரிந்ததை தெரிந்தது என்று சொல்லுகிறோம். இதுவேதான் உலக நடப்புக்கும் கொள்ள வேண்டிய முறையாகும். ஒரு சமயம் உலக நடப்புக்குக் காரணம் தெரியாவிட்டாலும், அதற்காக ஒரு காரியத்துக்கும் ஆகாத தேவையில்லாத கடவுளை எவனும் வணங்க மாட்டான்.

புதிய உலகத்தில் மோட்ச, நரகத்துக்கு இடம் இருக்காது; நன்மை, தீமை செய்ய இடமிருந்தால்தானே மோட்சமும், நரகமும் வேண்டும்? எவருக்கும் யாருடைய நன்மையும் தேவையிருக்காது. புத்திக் கோளாறு இருந்தால் ஒழிய, ஒருவனுக்கு ஒருவன் தீமை செய்ய மாட்டான். ஒழுக்கக் கேட்டுக்கும் இடமிருக்காது. இப்படிப்பட்ட நிலையில் மோட்ச, நரகத்துக்கு வேலை ஏது? ஆள் ஏது?

எனவே, இப்படிப்பட்ட நிலை புதிய உலகத்தில் தோன்றியே தீரும். தோன்றாவிட்டாலும் இனிவரும் சங்கதிகள் அடைந்த மாறுதல்களைக் காண வேண்டுமென்றும். இவைகளால் உலகில் மக்களை இப்போது வாட்டி வரும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வாழ்க்கை என்றால் பெருஞ்சுமை என்று சலித்துக் கொண்டும் வாழ்க்கை என்றால் போராட்டம் என்று திகைத்துக் கொண்டும் இருக்கிற நிலைமை போய். வாழ்க்கை என்றால் மக்களின் இன்ப உரிமை என்ற நிலைமை உண்டாக வேண்டுமென்னும் ஆவலுடன் பணியாற்றி வருவார்கள்.

நம்மால் என்ன ஆகும்? அவனின்றி ஓரணுவும் அசையாதே! என்று வாய் வேதாந்தம் பேச மாட் டார்கள். நம் கண்முன் காணப்படும் குறைபாடுகளைப் போக்க நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பதே அவர்களின் கவலையாகவும், அவர்களின் எண்ண மாகவும் இருக்கும். எப்போதோ, யாரோ, எதற்காகவோ எழுதி வைத்த ஏட்டின் அளவோடு நிற்க மாட்டார்கள். சுயசிந்தனையோடு கூடியதாகவே அவர்களின் செயல்கள் இருக்கும் மனித அறிவீனத்தினால் விளைந்த வேதனைகளை மனித அறிவினாலேயே நீக்கிவிட முடியும் என்ற ஆசையும், நம்பிக்கையும் கொண்டு உழைப்பார்கள்.

அவர்களின் தொண்டு; மனித சமுதாயத்தை நாளுக்கு நாள் முன்னுக்குக் கொண்டு வந்தவண் ணமாகவே இருக்கும் சுய சிந்தனைக்கு இலாயக்கற்ற வர்களே இந்த மாறுதல்களைக் கண்டு மிரள்வதும், காலம் வரவரக் கெட்டுப் போச்சு என்று கதறுவதுமாக இருப்பார்கள்.

இன்றைய மக்களிலே பலருக்கு பழமையிலே இருக்கும் மோசம் அறிவையே பாழ் செய்து விடு கிறது. புதிய உலகத் தோற்ற வேகத்தைத் தடை செய்து விடுகிறது. பழைய முறைப்படி உள்ள அமைப்பு களால் இலாபமடையும் கூட்டம் புதிய அமைப்பு ஏற்படுவதைத் தடுக்க முயற்சிப்பது இயற்கை. ஆனாலும், பாமரரின் ஞானசூன்யம், அறியாமை, சுயநலக்காரரின் எதிர்ப்பு எனும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல் வேலை செய்வோரே. இனிவரும் உலக சிற்பிகளாக முடியும். அந்த சிற்பிகளின் கூட்டத்திலே நாமும் சேர்ந்து நம்மாலான காரியத்தைச் செய்ய வேண்டுமென்று வாலிபர்கள் பகுத்தறிவாளர்கள் ஆசைப்பட்டு உழைக்க முன்வர வேண்டுகிறேன்.

------------------------தந்தைபெரியார் - "விடுதலை" 7.1.1968

பூணூல்வெறித்தனத்தோடு எய்ம்ஸ்மருத்துவமனையில் ஜாதிவேறுபாடு



டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக ஜாதி ரீதியாக வேறுபாடு காட்டப்படுகிறது என்கிற பிரச்சினை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது.

மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது அய்க்கிய ஜனதாதள உறுப்பினர் மங்கானிலால் மந்தல் பேசுகையில் அதிர்ச்சி தரும் சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

1) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட் டோருக்கான பணியாளர் தேர்வு, இடஒதுக்கீட்டின்படி நடப்பதில்லை - கொல்லைப்புற வழியாக நடக்கிறது.

2) இம்மாணவர்களுக்கு உணவு வழங்குவதில்கூட வேறுபாடு காட்டப்படுகிறது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் புனியா அவர்கள் கூறுகையில், மருத்துவர்களிடையே ஜாதி ரீதியான வேறுபாடு இருப்பது - பலரை தற் கொலைக்கு தூண்டியுள்ளது. இது அவமானத் துக்குரியது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர் உத்தரப்பிரதேசம் சத்ரபதி சாகுமகராஜ் மருத்துவக் கல்லூரியிலும் இதே போன்ற நிலை நீடிக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 26 மாணவர்களில் 24 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் தாராசிங் கூறுகையில் நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேர்ந்த மாணவர்களும்கூட தற் கொலைக்குத் தூண்டப்படுகின்றனர். செய்முறைத் தேர்வில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இவையெல்லாம் தெருமுனைகளில் கூறப்பட்டவை யல்ல; நாடாளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளால் பகிரங்கமாக எடுத்துக் கூறப்பட்டவையாகும்.

சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டு 65 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இந்நாட்டில் 25 விழுக்காட்டுக்கு மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான இந்தக் கொடுமை, அநீதி, பாரபட்சம் நீடிப்பது வெட்கப்படத்தக்கது அல்லவா?

இந்தப் பிரச்சினை இப்பொழுது மட்டுமல்ல; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநராக வேணு கோபால் என்ற பார்ப்பனர் இருந்தபோது இந்தப் பாரபட்சம் ஓகோவென்று கொடி கட்டிப் பறந்ததே! தாழ்த்தப்பட்ட மாணவர்களிடத்தில் உயர் ஜாதி பேராசிரியர்கள் எப்படியெல்லாம் ஓர வஞ்சனை காட்டுகிறார்கள் என்று கூறப்படவில்லையா! அந்தப் பிரச்சினைக்கு அப்பொழுதே தீர்வு காணப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தால் இப்பொழுது அத்தகைய கொடுமைகள் நடப்பது பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காதே!

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமை எளிதாக கிடைக்கப் பெற்றதல்ல! அவை போராடி போராடி பெறப்பட்ட உரிமை வாய்ப்புகள் என்பதை மறந்து விடக் கூடாது.

அப்படிப்பட்ட உரிமைகளை அவர்கள் அனுபவிக்கும் தருணத்தில் கைக்கு எட்டியது - வாய்க்கு எட்டப்படவில்லை என்கிற தன்மையில் உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் சட்ட விரோதமாக சமூகநீதியைச் சவக் குழிக்கு அனுப்பும் வகையில் பூணூல் வெறித் தனத்தோடு பாரபட்சம் காட்டுகிறார்கள் என்றால், இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா? சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு படித்த இந்தக் குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமா?

கிராமங்களில் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை பற்றி நாம் குமுறுகிறோம். ஆனால் மருத்துவக் கல்லூரிகளிலேயேகூட நடக்கும் இந்த இரட்டை அளவுகோல்மீது என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்தட்டு இடங்களில் ஜாதிவெறியோடு நடந்து கொள்பவர்கள்மீது சட்ட ரீதியாகக் கொடுக்கப்படும் அடி, அது கிராமத்துத் தேநீர் கடை வரை எதிரொலிக்க வேண்டாமா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குற்றச்சாற்றை வைத்து இருக்கிறார்கள். இவற்றின் மீது சம்பந்தப்பட்ட துறைகள் எடுக்கும் நடவடிக்கை களை இந்த உறுப்பினர்கள் அணுக்கமாகக் கண் காணிக்க வேண்டும். உரிய நடவடிக்கை இல்லை என்றால், பிரச்சினையை வீதிக்குக் கொண்டு வருவோம்! எச்சரிக்கை!

----------------"விடுதலை” தலையங்கம் 24-5-2012

24.5.12

யாகம் செய்தால் மழை வருமா?


மழை வேண்டி நடத்தப்படும் யாகங்களுக்கு அறிவியல் பூர்வ அடிப்படை இருக்கிறதா என்று, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரைச் சேர்ந்த விர்ஸ்தி விஞ்ஞான் மண்டலைச் சேர்ந்த எச்.பி.சர்மா இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். யாகத்தில் சில வகையான மரச்சுள்ளிகளையும், பிற பொருள்களையும் ஹோமத்தில் சேர்த்து எரிப்பதால் வெளியாகும் வாயு மற்றும் சாம்பல் ஆகியவற்றின் காரணமாக ஈரத்தன்மையுடைய நீர்த் துகள்கள் விண்ணில் ஏற்படலாம் என்ற அனுமானத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட பகுதியில் மேகங்கள் 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் சேர வேண்டும்.

மேகம் திரளத் தொடங்கியதிலிருந்து மூன்று நாட்களுள் சில சென்டிமீட்டர்களாவது மழை பெய்ய வேண்டும். யாகம் முடிந்த ஓரிரு நாள்களுக்குப் பின்னர் கூட மேகம் திரளலாம். இந்த ஆராய்ச்சிக்கான இலக்கு 10 மைல் சுற்றளவாய் இருந்தது. பத்து மைல்களுக்கு அப்பாலும் மழையின் அளவைக் கணக்கிட்ட இந்திய வானியல் ஆராய்ச்சி நிலையத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சீதோஷ்ண நிலை, ஈரப்பதம், வானத்தின் நிலை போன்ற வானியல் அளவு கோல்கள் அவ்வப்போது அளவிடப்பட்டன. ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பகுதிக்கருகில் காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை, குழுமிய நீர்த்துகள்கள் போன்றவற்றின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன. எனினும் இந்த ஆராய்ச்சியின் போது அப்பகுதியில் எந்த வித மேகக் கூட்டமும் திரளவில்லை என்று செயற்கைக் கோள் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மழை பெய்வதற்கான சாதகமான ஈரப்பதத்தின் அளவு கூட அதிகரிக்கவில்லை.

----------------------------------தினமணி, 6.6.1988

23.5.12

நாம் காட்டுமிராண்டியா?காட்டுமிராண்டி நாடாக இருக்கக் காரணம் என்ன?-பெரியார்


பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே! இந்தக் கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பாக கூட்டப்பட்ட கூட்டமாகும்.

திராவிடர் கழகம் சட்டசபைக்கு நிற்பது அல்ல; கழகத்தின் பேரால் பொதுத் தொண்டால் வயிறு வளர்க்கும் ஸ்தாபனமும் அல்ல; பொதுமக்களுக்கு அறிவுப் பிரச்சாரம் செய்து வரும் இயக்கம் அறிவுறுத்த இவன் யார் என்று எண்ணலாம். நான் மக்களுக்கு அறிவுறுத்துவது எனது கடமையாகக் கொண்டவன்.

நமது மக்களுக்கு எந்தவிதமான குறையும் இல்லாத இயற்கை அமைப்பைக் கொண்ட நாடாகும், நமது நாடு. இப்படிப்பட்ட நாடு மற்ற நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது காட்டுமிராண்டி நாடாக இருக்கக் காரணம் என்ன?

நாம் காட்டுமிராண்டியா என்ற அய்யம் பலருக்குப் பிறக்கும். சந்தேகம் இல்லாமல் நாம் காட்டு மிராண்டிகள்தான். இதை மெய்ப்பிக்க வேண்டுமானால், உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஜாதி நம் நாட்டில்தானே உள்ளது? கழுதை, நாய் இவற்றிடம் கூட இல்லாத ஜாதி நம்மிடையே தான் உள்ளது.

அடுத்து நாம் காட்டுமிராண்டிகள் என்பதற்கு நமக்கு இருக்கின்ற மாதிரி கடவுள்கள் உலகில் வேறு எங்காவது உண்டா? எத்தனை கடவுள்? எவ்வளவு ஒழுக்கம், நாணயம் அற்றதுகள் எல்லாம் கடவுள்கள்? எவ்வளவு மடத்தனம்?

எனவே, இப்படிப்பட்ட ஜாதி, கடவுள் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுவது எவ்வளவு மகாமகா காட்டுமிராண்டித்தனம், நீங்கள் சிந்திக்க வேண்டும். நம் கடவுளோடு மட்டும் நிற்காதீர்கள். நமது மதம் எவ்வளவு முட்டாள்தனமான மதம்? மதம் என்றால் நாமம், சாம்பல் அடித்துக் கொள்ளத் தெரியும். இந்து மதம் என்றால் என்ன என்று எவனுக்காவது தெரியுமா?

இதுதான் நம் மதம், இதனை நாம் ஏற்றுக் கொண்டு இதன் பேரால் கீழ் ஜாதியாகவே உள்ளோம்.

அடுத்து நமது சாஸ்திரங்கள், நமக்கு இருக்கும் காட்டு மிராண்டி சாஸ்திரங்கள், புராணங்கள் உலகில் வேறு எங்காவது உண்டா?

பெண் ரொம்ப அழகுதான். 32 லட்சணத்தில் 30 இருக்கின்றது. மூக்கும், கண்ணும் இல்லாவிட்டால் என்ன பிரயோசனம்? அதுபோலத்தான் இவை ஆகும்.

இன்னும் சொல்லுகின்றேன், இந்த நாட்டில் உள்ள இத்தனைக் கோவில்கள் உலகில் எந்த நாட்டிலாவது உண்டா? இதன்பேரால் நடக்கின்ற மடத்தனம் உலகில் எங்காவது உண்டா? ஒவ்வொரு கோவிலிலும் 50 லட்சம்; 80 லட்சம்; கோடி இப்படிப் போட்டாலும் கட்ட முடியாது. இவைகளால் ஒரு காதொடிந்த ஊசி நன்மையாவது உண்டா?

தோழர்களே, நான் முன் கூறியதுபோல நமது நாடு எல்லா வளப்பமும் பொருந்திய இயற்கை அமைப்புடையது. ஆனால், அறிவு மட்டும்தான் குறைவாக உள்ளது. இதனை எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வதுதான் எங்கள் தொண்டாகும். நான் இன்று நேற்று செய்யவில்லை. காங்கிரசை விட்டு வெளிவந்த 30, 35 வருஷத்திய தொண்டு இதுதான். நம்மை மடையர்களாக காட்டுமிராண்டிகளாக ஆக்கி வைத்துள்ள இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், ஜாதி இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராடுகின்றேன். 1926-இல் குடிஅரசுவில் என்ன கொள்கைகளை வைத்து எழுதினேனோ அதே கொள்கைப்படிதான் இன்றும் பாடுபடுகின்றேன். கொஞ்சங்கூட மாற்றிக் கொள்ளவில்லை.

இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படிப்பட்ட கேடானவைகளைப் பற்றி எடுத்துச் சொல்லி மாற்றவும், அறிவுப் பிரச்சாரம் செய்யவும் எவருமே முன்வரவில்லை. 2,500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் தோன்றி அறிவுப் பிரச்சாரம் செய்தார். அவருக்குப் பிறகு அவரது மார்க்கமும், அவரைப் பின்பற்றியவர்களும் பார்ப்பனரால் ஒழிக்கப்பட்டு விட்டனர்.

அப்படி அறிவுப் பிரச்சாரம் செய்த புத்தனையும், சமணனையும் ஒழித்துக்கட்ட தலைசிறந்து விளங்கியதுதான் இந்த காஞ்சிபுரம் ஆகும். புத்தருக்குப் பிறகு எவரும் தோன்றவே இல்லை. நாங்கள்தான் துணிந்து அறிவுப் பிரச்சாரம் செய்கிறோம்.

எங்களைப் போல வேறு எவரும் இந்த கடவுள், மதம், சாஸ்திரங்கள், மூடநம்பிக்கைகள், காட்டுமிராண்டித் தன்மைகள் இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்றும், இதனால் நாம் அடைந்துள்ள காட்டு மிராண்டித் தனங்கள் ஒழிக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துப் பேச மாட்டார்கள்.
எந்த பெரிய மனிதன் அறிவாளி என்பவர்களை எடுத்துக் கொண்டாலும் முன்னோர்கள் சொன்னது, மகான் சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது, அதற்கு மாறாக நடக்கக் கூடாது என்பதில் தான் கருத்தைச் செலுத்தி எடுத்துச் சொல்வார்களே ஒழிய, இவற்றைக் கண்டிக்க மாட்டார்கள்.

இவற்றை எல்லாம் சுத்த மடத்தனம், காட்டுமிராண் டித்தனம் என்பது இப்படிப்பட்டவர்களுக்குத் தெரியாது என்பதல்ல. தெரிந்தும் எடுத்துச் சொல்ல அஞ்சு கின்றார்கள்.

இந்த 20-ஆம் நூற்றாண்டில் 1961-ஆம் ஆண்டிலும் விஞ் ஞான, அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து சந்திர மண்டலத்துக்குச் செல்லுகின்ற காலத்தில் இப்படிப்பட்ட 2,000, 3,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி காட்டுமிராண்டிக் காலத்து கடவுள், மதம், சாஸ்திரம், நடப்புகள் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுவதா?

நாங்கள் இன்று எடுத்துக் கொண்டு பாடுபடும் துறையானது, இதுவரை எவனும் ஈடுபட்டு வெற்றி பெறாத துறையாகும். எவனும் ஈடுபட அஞ்சிய துறையாகும். இன்று நாங்கள் இந்தத் துறையில் துணிந்து பாடுபட்டு வரும் எங்கள் கொள்கைகள் வீண் போகவில்லை. நல்ல பலனை அளித்துத்தான் உள்ளது என்பதை நாங்கள் நன்கு உணருகிறோம்.

தோழர்களே, நான் அடுத்த அரசியலைப் பற்றி சில வார்த்தைக் கூற வேண்டும். அரசியலைப் பற்றி எனக்காகவோ, வேறு யாருக்காகவோ பேச வரவில்லை. உங்களுக்காகப் பேசுகின்றேன்.

எந்தக் கெட்டிக்காரனாக இருந்தாலும், யாராயிருந்தாலும் உங்கள் மத்தியில் வந்து பேசுவார்களேயானால் பேசுவது எல்லாம் பேசிவிட்டு கடைசியில் தங்களுக்கோ, தங்கள் கட்சிக்கோ ஓட்டு கேட்பவர்களாகவே இருப்பார்கள்.

நான் பேசுகின்றேன் என்றால், நான் பேசிவிட்டு எனக்கோ, எங்கள் கட்சிக்கோ ஓட்டு கேட்கவில்லை. இப்படி இருக்க நீங்கள் யார் பேச்சைக் கேட்கணும்? எவன் ஒருவன் தனக்காகவோ, தங்கள் கட்சிக்காக வோ ஓட்டு கேட்காமல் ஓட்டுப் பற்றி பேசுகின்றானோ, அவனுடைய பேச்சைக் கேட்க வேண்டுமா அல்லது தனக்காக ஓட்டுக் கேட்பவர்கள் பேச்சைக் கேட்க வேண்டுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தனக்காக ஓட்டுக் கேட்காத நாங்கள் சுயநலம் இல்லாமல் நடுநிலையில் இருந்து பேசுபவர்கள். நாங்கள், இன்னாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறுவதுகூட இன்னாருக்கு ஓட்டுப் பண்ணி கெட்டு விடாதீர்கள் என்பதற்காகத்தான் ஆகும்.

நமது கையில் சரித்திர ஆதாரங்கள் எல்லாம் உள்ளன. நமது நாட்டை மூவேந்தர்கள், பல்லவர்கள், மராட்டியவர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டு இருக்கின்றனர். வெள்ளைக்காரன் போன பிறகு பார்ப்பான் ஆண்டு இருக்கின்றான். அவனுக்குப் பிறகு தமிழன் ஆள்கின்றான்.

இத்தனை பேர்கள் ஆண்டதில் மனிதனுக்கு அறிவு வளர வழி வகுத்துக் கொடுத்திருப்பார்களா? அறிவு ஏற்பட வேண்டும், மானம் ஏற்படச் செய்ய வேண்டும் என்பது மிக மிக முக்கியம். இந்த மூவேந்தர்கள் காலம் முதல் பார்ப்பான் ஆட்சி வருகின்றவரை இந்த அறிவு வளர்ச்சிப் பற்றியோ, மானத்தைப் பற்றியோ கவலைப்பட்டு ஆளப்பட்டு இருக்கின்றதா என எண்ணிப் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் இந்த நாட்டை ஆளத் தொடங்கின காலத்துக்கு முன்வரை எந்த அரசனாவது எந்த நாயக்கன், முஸ்லிம், மராட்டிய ராசாவாவது ஒரு பள்ளிக்கூடம் மக்கள் படிக்க ஏற்படுத்தினார்களா என்றால் இல்லையே! மாறாக ஏராளமான சமஸ்கிருதப்பள்ளிகள், கோவில், குட்டிச்சுவர்கள் சோம்பேறிகளுக்கு மடங்கள் கட்டினார்களே ஒழிய, எழுத்தறிவுக்கு வகை செய்யவில்லையே!

ஏதோ வெள்ளைக்காரன் ஆட்சியில்தான் கொஞ்சம் பள்ளிகள் ஏற்படலாயின. இதுவும் பார்ப்பான் படிக்கப் பயன்பட்டனவே ஒழிய, நமது மக்களுக்குப் பயன்படவில்லை. பார்ப்பானுக்கு வைத்த பள்ளியானாலும் நம்மை புகாதே என்று தடுக்க முடியவில்லை. அதற்காக நாம் படிக்காது இருப்பதற்கு என்ன என்ன வழியோ அதுகளெல்லாம் செய்யப்பட்டன. நாம் 100-க்கு 6-7 படித்தவர்களாக இருக்கும்போதே பார்ப்பான் மட்டும் 100-க்கு 100 வெள்ளைக்காரன் பள்ளிகளால் படித்து இருந்தார்கள். இந்த வெள்ளைக்காரன் 200 ஆண்டு ஆட்சி செய்து விட்டு அவன் போகும் போது நாம் 100-க்கு 12-14 பேர்கள்தான் படித்து இருந்தோம்.

வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போன பிற்பாடும் காமராஜர் பதவிக்கு வரும் வரையிலும் கூட நாம் 100-க்கு 16 பேர்களே படித்து இருந்தோம். இன்று காமராசர் ஆட்சியில்தான் 100-க்கு 32 பேர்கள் படித்து இருக்கின்றோம் என்று எடுத்துரைத்தார்.

மேலும் பேசுகையில், இன்றைய காமராசர் ஆட்சி மீண்டும் ஏற்பட நாம் காங்கிரசை ஆதரிக்க வேண்டிய அவசியம் பற்றியும், எதிர்க்கட்சிகளின் பித்தலாட்ட பிரச்சாரங்கள் பற்றியும் விளக்கும்போது மழையின் காரணமாக கூட்டம் நிறுத்த வேண்டி வந்தது.

-----------10.9.1961 அன்று காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 30.9.1961

திராவிடர் இயக்கம் சாதித்தது என்ன?

நீதிக்கட்சிக் காலத்தில் சமூக நீதி ஆணைகள்
உள்துறை அமைச்சகம் சென்னை மாகாணம்

1. 1919ஆம் ஆண்டு பீதாபுரம் மகாராஜா ஒரு தீர்மானத்தை அரசுக்கு கொடுத்தார்.

நமது சட்டமன்றக் குழு, தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சமுதாயத்தில் வஞ்சிக்கப்பட்டவர் களுக்கும் தண்ணீர் எடுக்கும் கிணறு, பொதுச் சாலைகள், நீதிமன்றங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் அல்லது அரசு உதவி பெற்று இயங்கி வரும் ஸ்தாபனங்களில் முழு உரிமைகள் கிடைக்க வேண்டி ஆளுநர் அவர்கள் சரியான நட வடிக்கைகளை உடனே மேற் கொள்ள வேண்டும்

அப்போதிருந்த உள்துறை உறுப்பினர் (அமைச்சர்) சர் சைக்ஸ் தோதுண்டர் எழுதியது, பக்கம் 4-7 அரசு உத்தரவு 23லும் (தேதி 8.1.1920) காணப்படுகிறது.

அப்போது அவர் எழுதியது வருமாறு:

ஜாதியை உடனே ஒழித்துவிட முடியாது. மக்களின் அபிப்பிராயத் துக்கு எதிராக நாம் முயற்சி செய்தால் நல்லதை விட கெடுதலே அதிகம் விளையும். சமுதாயத்தின் மொத்த நன்மைக்காக நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஜாதியில் உயர்வு, தாழ்வுகளைக் கடைப்பிடித்துவரும் கல்வி நிலை யங்களுக்கு அரசாங்கம் செய்துவரும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அபிப்பிராயம் சொல்லப்பட்டு வருவதை அரசு கடைப்பிடித்தால் எல்லாப் பள்ளிக் கூடங்களும் அதை நடத்துபவர்களால் இழுத்து மூடப்பட்டு விடும். இதனால் சமு தாயத்தில், பெரும்பான்மையானவர் களுக்கு உள்ள கல்வி வாய்ப்பும் வீணாக்கப்பட்டு விடும் என்பதால் அரசாங்கம் இதிலெல்லாம் நன்றாக சிந்தித்துதான் செயல்பட முடியும். சமுதாயத்தில் உள்ள ஒரு பிரிவின ருக்கு நன்மை செய்யப் போக, அது இன்னொரு பிரிவினருக்கு கெடுதலாக முடிந்துவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் கண்ணுங் கருத்துமாய் இருக்க வேண்டும் என்பது முக்கியம். நாம் செய்யும் நன்மைகள் பெரு வாரியான மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண் டும். தீர்மானம் நிறைவேறவில்லை.

2. சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்துத் தண்ணீர் எடுக்கும் கிணறுகளிலும், பொதுச் சத்திரங் களிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் உள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் நகராட்சி களும், பஞ்சாயத்துகளும் வலுக் கட்டாயமாக இதை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தை எம்.சி. ராஜா அவர்கள் அதே ஆண்டு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தைப்பற்றி சட்ட மன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டது என்பது சட்டமன்றக் குழுவின் நடவடிக்கைப் புத்தகத்தின் 152-_161ஆம் பக்கங்களில் இன்றைக்கும் காணப்படுகிறது. இந்த தீர்மானத்தைப் பற்றிப் பேசும்போது, சர் சார்லஸ் தோதுண்டர் குறிப்பிட்டதாவது: கிணறுகளையும், சத்திரங்களையும், பொது சாலைகளையும் உபயோக்கப் படுத்தக் கூடாது என்று சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டுள்ளவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் எதுவும் சட்டத்தால் ஏற்பட்டதல்ல. மேலும் இந்தத் தடைகளை நீக்குவது என்பது சமுதாய சீர்திருத்த வாதிகளால்தான் முடியுமேயொழிய அரசாங்கம் அதில் தலையிட்டுத் தடைகளை நீக்கச் செய்ய முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை தீர்மான விவாதம் முடிவடையும் நேரத்தில் லார்டு வெல்லிங்டன் குறிப்பிட்டதாவது:

ஜாதிகள் அதன் தீமைகள் ஒழிக் கப்பட்டாலொழிய ஒடுக்கப்பட்ட வர்களுக்கு இழைக்கப்பட்டு வரும். அநீதிகள் குறைவதற்கு வழியே இல்லை. அரசாங்கம் சமதர்ம சமுதாயம் ஏற்பட உதவி, செய்ய லாமேயொழிய மத விஷயங்களில் தலையிட முடியாது என்றார்.

3. 1921ஆம்ஆண்டு WPA சவுந்தரபாண்டியன் (நாடார்) அவர்கள் ஒரு தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். சாலைகள், சத்திரங்கள், கிணறுகள், பள்ளிக் கூடங்கள் போன்ற இவைகளில் நுழையக் கூடாது என்று தாழ்த் தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர் கள் போன்றவர்களைத் தடை செய்பவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அந்தத் தீர்மானத்தை சட்ட வடிவமாக ஆக்க வேண்டும் என்பதுதான். இந்தத் தீர்மானத்தைப்பற்றி பக்கம் 1, அரசு உத்தரவு 263, உள்ளூர் மற்றும் நகராட்சி புத்தகம் தேதி 29.1.1923 ஆம் ஆண்டு காணப்படுகிறது. சட்டக் குழுவின் நடவடிக்கைகள் என்ற புத்தகத்தின் 333 339 பக்கத்தில் தீர்மானத்தைப்பற்றி நடந்த விவாதமும் காணப்படுகிறது. அப்போதிருந்த முதலமைச்சர் சொல்லிய பதில் பககம் 339இல் காணப்படுவதைக் கீழே தருகிறோம்:

தாழ்த்தப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்கள் கிணறுகள், கல்விக் கூடங்கள், சாலைகள் போன்றவற்றை உபயோகப்படுத்தக் கூடாது என்று சட்டம் மூலம் தடுக்கவில்லை. உபயோகப்படுத்தக் கூடாது என்று அவர்களைத் தடுப்பவர்களைத் தண்டிக்க இப்போதிருக்கும் சட்டத் திலேயே இடம் இருக்கிறது. அதனால் புதிய சட்டம் எதுவும் தேவை இல்லை. உண்மையான தடைகள் சமு தாயத்தில் இருந்துவரும் ஜாதிகள் தான்.

அவைகளை உடைத்தெறிய சமுதாயச் சீர்திருத்தவாதிகள் முயல வேண்டும். சமத்துவ சமுதாயத்தை உண்டாக்கப் புதிய சட்டம் தேவை என்றால் அதைச் செய்ய உறுதி கூறுகிறேன் என்று அரசின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவ சமுதாயத்தை ஏற்படுத்த எந்த மசோதாவையும் கொண்டு வரலாம் என்று எனது உறுப்பினர்களுக்கு உறுதி கூறுகிறேன்.

மேற்கண்ட தீர்மானத்தில் குறிக் கப்பட்டுள்ள - தெருக்களிலும், சாலை களிலும், தாழ்த்தப்பட்ட, வஞ்சிக் கப்பட்ட மக்கள் போகக் கூடா தென்று சட்டமூலம் தடுக்கப்பட வில்லை. மலபார் பகுதியில் சில தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து போக அனுமதிப்பதில்லை என்பது தெரிந்ததுதான். அரசாங்கம் சட்டமியற்றுவதால் மட்டும் இதை நிறைவேற்றிவிட முடியாது. அர சாங்கம் இதில் தலையிட்டு காரி யங்கள் செய்வதால் தாழ்த்தப்பட்ட வர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் ஜாதி இந்துக்களை எதிர்த்துப் போராட்டம் நடத்த ஆரம்பித்தால் அமைதி கெட்டு விடும். அக்கிரகாரத் தெருக்கள், ஜாதி இந்துக்கள் உள்ள தெருக்கள் சில தனிப்பட்டவர்களின் சொந்தச் சொத்தாகும். இதில் அரசு தலையிட்டு ஆவன செய்யும் நிலையில் அரசாங்கம் இல்லை.

பொதுக் குளங்களை தாழ்த்தப் பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர் களும் உபயோகப்படுத்தக் கூடாது என்பதாக எந்தக் கட்டுப்பாடும் இருப்பதாக அரசின் இலாகாவுக்குத் தெரியவில்லை. ஆனால், தண்ணீர் எடுக்கும் கிணறுகளைப் பொறுத்த மட்டில் ஜாதி இந்துக்களுக்கு தனிக் கிணறுகளும், தாழ்த்தப்பட்டவர் களுக்கு தனிக் கிணறுகளும் ஏற்படுத்தலாம் என்று அரசு எண்ணுகிறது. பொதுக் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுப்பதை மற்ற ஜாதி இந்துக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

6. பொது இடங்கள் nதர்ம சத்திரங்களைத் தவிர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களான சினிமா தியேட்டர்கள், சர்க்கஸ் நடக்கும் இடங்களான சினிமா தியேட்டர்கள், சர்க்கஸ் நடக்கும் இடங்கள். இவைகளில் அடங்கும். சத்திரங்களில் குறிப்பிட்ட ஜாதி மக்களுக்கு மட்டும்தான் பயனடையுமாறு ஏற்பாடு செய்திருக்கிறார்களே யொழிய அதில் ஒடுக்கப்பட்ட மக் களுக்கு எந்த உரிமையும் இல்லாமல் தான் அவை எழுதப்பட்டிருக்கிறது. அரசாங்கம் இதில் எதுவும் செய்ய முடியவில்லை.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களான சினிமா தியேட்டர், சர்க்கஸ் போன்றவை களில் அதன் உரிமையாளர்கள் விருப்பப்படி செய்து கொள்ளலாம்.

7. வர்த்தகங்கள் நடைபெறும் இடங்களான பொதுக் கட்டடங்களி லும், அலுவலகங்களிலும் எல்லா இன மக்களும் அனுமதிக்கப்படுகையில் அதற்காக எந்த அறிவிப்பும் தேவை இல்லை.

8. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளையெல்லாம் அரசாங்கத்தின் சட்ட இலாக்கா சீர்ப்படுத்தி நல்ல நிலைமைக்கு கொண்டுவரும். ஆகையால் இந்த கோப்புகளை வி-1, நீ-2 என்ற பிரிவுக்கு அனுப்பப்படுகிறது.

9. வி--1 என்கிற இலாக்காவின் செய லாளருக்கு அனுப்பப்பட்டது. அவ ருடைய உத்தரவுகளை எதிர் பார்க்கிறோம்.

1. மேற்படி தீர்மானத்துக்கு சட்ட மன்றத்தில் அந்த இலாகா செய லாளர் பதில் சொல்லப் போகிறாரா என்பதும்,

2. அப்படி அவர் பதில் சொல்லத் தயாராய் இருந்தால் இந்த பிரச் சினைபற்றி மேற்கொண்டு ஏதேனும் தகவல்கள் சேகரிக்க வேண்டுமா என்பதும்,

3. சென்னை மாகாண அமைச் சரவையில் இந்தத் தாழ்த்தப்பட்ட வர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினை குறித்து விவாதிக்க அரசாங்கத்தின் நிலை என்ன என் பதை அவர் (செயலாளர்), தெரிந்து கொள்ள விரும்புகிறாரா அல்லது ஆளுநர், அமைச்சர்கள் கூட்டத்தில் இதை விவாதிக்க விரும்புகிறாரா என்பதும், மேலும் அவருடைய உத்தரவுகளை எதிர் பார்க்கிறோம் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

கையொப்பம்
9.8.1924
சென்னை அரசாங்கம் உள்ளூர் அரசாங்க இலாகா
(உள்ளூர் மற்றும் மாநகராட்சி)

அரசாங்க உத்தரவு நெ. 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி, 25 செப்டம்பர், 1924.

ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ள வைகள் - - சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் மாநிலத்திலுள்ள உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாக்காக்களுக்கு அனுப்பப்பட்டது.

உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி.

1924ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள் பற்றியது.

திரு. ஆர். சீனிவாசன் (இரட்டை மலை)

1 (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க் கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

(ணீ) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,

தீ) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவைகளிலெல்லாம் ஜாதி இந் துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும்,

சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அர சாங்கத்தில் உள்ள எல்லா இலாக் காக்களுக்கும் அனுப்பப்பட்டது.

(இது அரசாங்க உத்தரவு, மாநில அரசு)
றி.லி. மூர்,
அரசாங்கச் செயலாளர்.
ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு,
நகராட்சிகள்,
கார்ப்பரேஷன், சென்னை
பஞ்சாயத்து, நகராட்சி அதி காரிகள்,
தொழில் கமிஷனர்,
சென்னை தலைமைச் செய லகத்தில் உள்ள எல்லா இலாக் காக்கள்,
அரசாங்க செய்தி ஸ்தாபனம்.
இவைகளுக்கெல்லாம் மேற்கண்ட உத்தரவுகள் அனுப்பப்பட்டது.
சட்டக்குழு அலுவலகம்
25.6.24
தீர்மானம்
திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை சீனிவாசன்)
உள்துறை அரசாங்க அலுவலகம்.

9. சென்னை மாகாணத்திலுள்ள ஒவ்வொரு அக்கிரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும், தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருக்கும் சேரிகளிலும், வஞ்சிக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் கிராம தலையாரி மூலமாக மேற்கண்ட இந்த தீர்மானத்தின் விவரங்களை தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும் என்றும், மாகாண அரசின் செய்தித் தாள்களிலும், மாவட்ட செய்தித்தாள்களிலும், அந்தந்த வட்டார மொழிகளிலும் இந்தத் தீர்மானத்தின் விவரங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்றும் சட்டமன்றக் குழு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்கிறது.

ணீ) தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அக்ரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் நடந்து போய்வருவதிலும் அரசுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது என்பதையும்,

தீ) கிணறு, குளம், பொது அலுவ லகங்கள், வர்த்தகம் செய்யும் இடங்கள் போன்றவைகளிலும் மற்றும் எல்லாப் பொது இடங் களிலும், ஜாதி இந்துக்களுக்கு உள்ள உரிமைகள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உண்டு.

-------------------------"விடுதலை”ஞாயிறுமலர் 10-3-2012