Search This Blog

31.1.23

மதத்தில் இருந்து தமிழ் விலகினாலொழிய தமிழுக்கும் தமிழருக்கும் சுயமரியாதை உண்டாகாது!

 

தமிழ்த் திருநாள்


கடவுள் வணக்கம் இல்லை



 

அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர்களே! நீங்கள் இவ்வளவு பெரிய கரகோஷமும் ஆரவாரமும் செய்து என்னை இப்பொழுது வரவேற்ற மாதிரி எனது உபன்யாச முடிவில் எனக்கு மகிழ்ச்சியான வழியனுப்பு செய்ய மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் தமிழ் பாஷைக்கு வாழ்த்துக்கூறும் வேலை இலேசானதல்ல. அதிலும் என்போன்ற அதாவது தமிழ் பாஷைக்கு வல்லின இடையின எழுத்து பேதமும், பிரயோகமும் பாஷையின் இலக்கண இலக்கியமும் அறியாதவனும், தமிழ் பாஷையையே கெடுத்து கொலை செய்து வருபவன் என்கின்ற பழியைப் பெற்றவனுமான நான் தமிழ் வாழ்த்துக்கு தகுதி உடையவனாவேனா என்று பாருங்கள்.

அன்றியும் தமிழைப்பற்றி அபிப்பிராயங்களிலும் பண்டிதர்களுக்கும் எனக்கும் எவ்வளவோ துறையில் நேர்மாறான கருத்துக்கள் இருந்து வருவதும் எவரும் அறியாததல்ல.

இவைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வாழ்த்துதல் என்பதையும் நான் இவ்வளவு சாதாரணமாய்க் கருதுபவனுமல்ல. வாழ்த்துதல் என்றால் பார்ப்பனர்கள் ஏதோ மஞ்சளையும் அரிசியையும் கலந்து பொறுப்பும் பொருளும் இல்லாத ஒன்றின் பெயரைச் சொல்லி வாழ்த்தி (ஆசீர்வாதம் செய்து) விட்டு ஏதோ பெற்று வயிறு வளர்ப்பது மாதிரி வாழ்த்தை அவ்வளவு ஏமாற்றமாக நினைப்பவன் அல்ல. ஆனால் வாழ்த்துதலின் அவசியத்தையும், அதன் பெருமையையும் நான் உணர்ந்தவனேயாவேன். தகுதியும் பொறுப்பும் உடையவர்களே வாழ்த்த வேண்டும். வாழ்த்துபவர்கள் தங்களுக்கு பொருப்பு இருப்பதை உணர்ந்தவர்களாயிருக்க வேண்டும். தமிழை வாழ்த்தி விட்டு தமிழுக்கு இடுக்கண் ஏற்படும்போது கவலை அற்றவரும் எவ்வித உதவியும், ஆதரவும் அளிக்கத் தகுதி அற்றவர்களும் வாழ்த்திப் பயன் என்ன? ஆகையால் இங்கு வாழ்த்துதலுக்கு தகுதியைக் கருதாமல் மூப்பையும் நரையையும் கருதியே கட்டளை இடப்பட்டு விட்டேன் என்பதாகக் கருதுகிறேன்.

தமிழில் எந்த அளவும் பள்ளியில் பயின்றவனல்ல. தமிழைப்பற்றி தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன் மதிப்பு என்பதல்லாமல் வெறும் பாஷையைப் பற்றியே நான் எவ்வித பிடிவாதம் கொண்டவனுமல்ல. தமிழுக்கு ஆக என்று எவ்வித தொண்டு புரிந்தவனுமல்ல.

தமிழுக்கு வாழ்த்துக்கூற தலைவரும், எனது நண்பருமான தோழர் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் அவர்களும், தமிழ்ச்சங்க அமைச்சர் தோழர் கா. நமச்சிவாய முதலியாரும் மற்றும் அவர்கள் போன்ற பெரியார்களே உண்மையில் தகுதி உள்ளவர்கள்.

தலைவர் கல்யாணசுந்திர முதலியார் அவர்களின் தமிழ்த் தொண்டை நானே நன்றாய் அறிந்தவன். அவரது தமிழ்த்தொண்டுக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் நானேயாவேன். நான் தமிழ் பேசுவதும் எழுதுவதும் தமிழைக்கொலை புரியும் மாதிரியானாலும் நான் பல பத்திரிகைகள் நடத்துவதும், சுமார் 50, 60 புத்தகங்கள் வெளியிட்டதும் தலைவர் கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் தமிழ் பாஷையில் தேசபக்தன், நவசக்தி முதலிய பத்திரிகைகளின் தொண்டேயாகும். திரு.வி.க. முதலியார் அவர்களது தேசபக்தன் பத்திரிகைக்குப் பிறகே தமிழ் அரசியல் மேடைகளைக் கைப்பற்றிற்று என்று சொல்லுவேன். அரசியல் தலைவர்களையும் தமிழ் அடிமை கொண்டதற்குக் காரணமும் அவர்களது பத்திரிக்கைகளேயாகும்.

அப்பத்திரிகைகள் என்னைவிட மோசமானவர்களையும், தமிழ் பாஷையில் அரசியலை உணரவும், தமிழ்பேசவும் செய்துவிட்டதால் தமிழ் பாஷையைக் காதில் கேட்டால் தோஷம் எனக்கருதும் ஜாதியாரும் தமிழில் கலந்து கொள்ளவும், தமிழை வேஷத்துக்காவது மதிக்கவும் செய்துவிட்டது.

பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களது உழைப்பும் தமிழுக்கு மிகப்பெரியதொன்றும் தமிழர் மறக்க முடியாததுமான தொண்டாகும். பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களின் துணிந்த முயற்சி இல்லா திருக்குமானால் இன்று தமிழ்ப்பாட புத்தகங்கள் பெரிதும் ஆரியமத உபாக்கியானங்களாகவும், ஆரியமும் தமிழும் விபசாரித்தனம் செய்து பெற்ற பிள்ளைகள் போலவும் காணப்படும். ஆதலால் தான் தமிழுக்கு வாழ்த்துக்கூற, அப் பெரியார்களும் அவர்கள் போன்றார்களுமே தக்கார் என்று உரைத்தேன்.

தோழர்களே! எனக்கிட்ட கட்டளையில் ஏதேனும் ஒரு சிறு பாகமாவது நிறைவேற்றப்பட வேண்டுமானால் தமிழைப்பற்றிய எனது உள்ளக் கிடக்கையை உண்மையாய் எடுத்துரைத்தாக வேண்டும். ஆதலால் ஏதோ நான் சொல்வது பற்றி நீங்கள் தவறாகக் கருதாமல் என் கபடமற்ற தன்மையை அங்கீகரித்து உங்களுக்கு சரி என்று பட்டதை மாத்திரம் ஏற்று மற்றதை தள்ளி விடுங்கள். அதற்கு ஆக என் மீது கோபமுறாதீர்கள்.


தமிழும் மதமும்


முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்கவேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்துவிடவேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்மந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளிவைக்கவேண்டும்.

மதசம்மந்தமற்ற ஒருவனுக்கு தமிழில் இலக்கியம் காண்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம்கூட மதத்தோடு பொருத்தப் பட்டே இருக்கிறது.


மதமும் இலக்கணமும்


உதாரணமாக “மக்கள் தேவர் நரகர் உயர்திணை” என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?

இனி பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்ப ராமாயணம், பாரதம், பாகவதம், பெரிய புராணம், தேவாரம், திருவாய் மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானங்கள் தானே அதிகமாயிருக்கின்றன?


மேல்நாட்டு இலக்கியம்


மேல்நாட்டுப் புலவர்கள் மேல்நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகனே ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது?

இந்தியா வேண்டுமா? கம்ப ராமாயணம் வேண்டுமா என்றால் உண்மைத்தமிழ் மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்று தானே சொல்லுவான்.

மேல் நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ்நாட்டில் அறிவாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.

மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்மந்தமன்னியில் கடவுள் சம்மந்தமன்னியில் பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக்கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.

கீழ் நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக்கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? டாக்கூர் அவர்கள் கவிக்கு ஆக போற்றப்படலாம். ஆகவே மதம் கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப்பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம் தான் ஒரு பாஷையும் அதன் இலக்கியங்களும் மேன்மையும் முடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள்.


மலத்தில் அரிசி பொறுக்கலாமா?


கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லு கிறார்கள். இருந்து என்ன பயன். ஒருவன் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோல் தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அது தமிழ் மக்களை எவ்வளவு இழிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படி கம்ப ராமாயண இலக்கியத்தை படிப்பான். இன்று கம்ப ராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா இழிவு பரவிற்றா என்று நடு நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.


கடவுளால் பாஷை உயராது


தமிழ் பாஷையின் பெருமை பரமசிவனுடைய டமாரத்தில் இருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய பாஷை என்றோ, சொல்லி விடுவதாலும் தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலனை அழைத்ததாலும், எலும்பை பெண்ணாக்கினதாலும், மறைக் கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மையுற்றதாகி விடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும் மேன்மையையும் குறைக்கத்தான் பயன்படும்.

பரமசிவனுக்குகந்த பாஷை தமிழ் என்றால் வைணவனும் துருக்கனும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியை சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.


இந்திப் புரட்டு


இன்று, தமிழ்நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்களே இந்தி பாஷை இந்திய பாஷை ஆக வேண்டு மென்று முயற்சித்து வெற்றி பெற்று வருகிறார்கள். கோர்ட் பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்தி மயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்.

தமிழ்ப் பண்டிதர்களுக்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப்பண்டிதர்கள் இந்த அரசியல்வாதி களின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்து கொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.


செத்த பாம்பு


பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப்பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது ஜனங்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும். தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றி கவனிப்பதில்லை. தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் இரண்டு பண்டிதர்கள் தான் சத்தம் போடுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேப்னெட் மெம்பர்கள் ஐகோர்ட் ஜட்ஜிகள் முதல் எல்லா பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் செல்வமும் உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றி கவலையும் இல்லை; தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.


தமிழபிமானம் தேசத்துரோகம்


தமிழினிடத்தில் ஒருவன் அபிமானியாக இருந்தாலே அவன் தேசத் துரோகி, வகுப்புவாதி, பிராமணத்துவேஷி என்றெல்லாம் ஆய்விடுகிறான். ஆதலால் மீட்டிங்கிக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள்.

தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். தமிழ்பாஷையில், எழுத்தில் ஒரு சிறு மாற்றமோ முற்போக்கோ செய்யக்கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதரவளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும், சௌகரியமுள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்.


மாறுதல் அவசியம்


மேல்நாட்டு பாஷைகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன. எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள். ரஷ்யாவில் சில பழைய எழுத்துக்களை எடுத்து விட்டார்கள். புதிய எழுத்துக்கள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்து கூட்டுவதாகிய இஸ்பெல்லிங் முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி பாஷைக்கு உண்டான எழுத்துக்களையே அடியோடு எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துக்களை யேற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்கு ஆக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள். காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழமுடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப்போட்டிக்கு தகுதியுடையவனாவான்.

தமிழ் எழுத்துக்களில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல் ஒருவராவது அம்முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் அல்ல.

இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.

ஆனால் தகுதி உள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என் செய்வது? என்னைக் குறைகூறவோ திருத்தவோ முயற்சிப்பதின் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லக்ஷியம் செய்யவில்லை.

ஆனாலும் நான் அம்முறையிலேயே இரண்டு மூன்று பத்திரிக்கைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே 10, 20 புத்தகங்களும் வெளியிட்டிருக் கிறேன். இன்னம் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது.


பார்ப்பன ஆதிக்கம்


இவைகளையெல்லாம் பார்ப்பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப்பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு ஆதரவும் அளித்தார்கள். கடைசியில் டாக்டர் மாசிலாமணி முதலியார் போன்றவர்களே அம்முயற்சியைப் பாழாக்கி அதைக் காப்பாற்றினார்கள்.

தலைவர் திரு.வி.க. அவர்களும் சிறிது நமக்கு உதவி செய்தார்கள் என்றாலும் வெளியில் வந்து செய்திருந்தால் அதில் நாம் ஆதிக்கம்பெற்று இருக்கலாம்.


எங்கும் திருநாள்


எப்படி ஆனாலும் தமிழ் பாஷை உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது. அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு. தலைவர் திரு.வி.க. அவர்களும் அமைச்சர் கா. நமச்சிவாய முதலியார் அவர்களும், இத்திருநாளை இம்மாதிரி ஒழிந்த நேரத் திருநாளாக இல்லாமல் தமிழ் மக்களுக்கு ஒரு புது எழுச்சியையும், ஊக்கத்தையும், உண்டாக்கும் திருநாளாகச் செய்ய வேண்டும். வருஷம் ஒவ்வொரு ஊரில் தலைமைத் திருநாள் நடைபெறச் செய்ய வேண்டும். தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதைவிட இப்படி தமிழ்த் திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களை பரப்பவேண்டும். நமது பெண்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியையும், மாரி பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆதலால் தக்கது செய்ய வேண்டுகிறேன்.

கடைசியாக தோழர்களே தமிழ் முன்னேறும் என்பது பற்றி எனக்கு அறிகுறிகள் தென்பட்டுவிட்டன அதென்ன வென்றால் என்னை இங்கு உள்ளே விட உங்களுக்கு தைரியம் ஏற்பட்டுவிட்டது ஒன்றே போதுமான ஆதாரமாகும்.

அன்றியும் இந்தப்பெருமை என்னையும் ஒருபடி உயர்த்திவிட்டது. என்னவென்றால் தமிழ்ப் பண்டிதர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் படியான பெருமை ஏற்பட்டுவிட்டதல்லவா? நான் எவ்வளவு தமிழ் அறியாதவனாய் இருந்தாலும் தமிழில் எனக்கு உள்ள ஆசை உங்கள் யாரையும்விட குறைந்ததல்ல என்பதை தெரிவித்துக் கொண்டு, அந்த ஆசையின் மயக்கத்தால் நான் பேசியவற்றுள் ஏதும் குற்றம் குறைகள் இருப்பின் அவற்றை மன்னித்துக் களைந்துவிட்டு சரி என்று பட்டவையை மாத்திரம் ஏற்று அதற்காவன செய்ய வேண்டிக்கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.

                           -----------------------13-01-1936 ஆம் நாள் சென்னை பச்சையப்பன் கல்லூரி பெரிய மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த்திருநாள் விழாவில் தந்தை பெரியார் அவர்கள்  ஆற்றிய சொற்பொழிவு - "குடி அரசு" சொற்பொழிவு 26.01.1936

8.1.23

பார்ப்பனீயம் இருக்கும் வரை தீண்டாமையை ஒழிக்கவே முடியாது! - பெரியார்

 

பார்ப்பனீயம் இருக்கும் வரை தீண்டாமையை ஒழிக்கவே முடியாது!

தந்தை பெரியார்

தோழர்களே, நமக்கு நம் சமுதாய இழிவு நீங்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர,  நம்மை யார் ஆள வேண்டும்,  ஆட்சி செலுத்த வேண்டும் என்பது முக்கிய மல்ல என்பது தான் சென்னையில், சென்ற 20-4-1969 இல் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களின் முக்கிய குறிக் கோளாகும்.

அந்நிய ஆட்சியானது எவ்வளவு நல்ல ஆட்சியாக இருந்தாலும், எவ் வளவு மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய ஆட்சியாக இருந்தாலும், இந்த ஆட்சியானது ஒழிக்கப்பட்டுத் தங்கள் ஆட்சியானது வரவேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் ஆசையாகும்.

வெள்ளைக்காரன் இந்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது, வெள்ளைக்காரன் ஆட்சியானது ஒழிக்கப்பட வேண்டும், சுய ஆட்சி வரவேண்டும் என்று (காங்கிரஸ்காரர்கள்) பார்ப்பனர்கள் முயன்ற போது, சத்தியமூர்த்தி அவர்களிடம் வெள்ளைக்காரர் ஆட்சியின் சிறப்பையும், சுய ஆட்சி ஏற்படுவதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்து விளக்கிச் சொன்னபோது, சத்தியமூர்த்தி அவர்கள் சுய ஆட்சியால் எவ்வளவு கேடு ஏற்படும் என்பது எனக்கும் தெரியும்; என்றாலும் சுய ஆட்சிதான் இந்நாட்டிற்கு வேண்டும் என்று சொன்னாரே ஒழிய, அதனால் இன்ன நன்மை என்று அவரால் சொல்ல முடியவில்லை.

பல ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக இருந்து வரும் தீண்டாமை, வெள்ளையன் ஆட்சி செய்த போதும் ஒழிக்கப்படவில்லை; ஜனநாயகம், சுதந்திரம் வந்து 22 ஆண்டு காலமாகியும் இந்தத் தீண்டாமை யானது ஒழிக்கப்படவில்லை என்றால், இந்த ஆட்சியில் நாம் எதற்காகத் தீண்டப் படாத மக்களாக இருந்து கொண்டிருக்க வேண்டும்? அதற்கென்ன அவசியம் என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.

நம் ஜனநாயகம், சுதந்திர ஆட்சியின் மூலம் இந்தத் தீண்டாமையை ஒழிக்க முடியாது. இப்போதிருக்கின்ற இந்த அரசமைப்புச் சட்டத்தின் மூலமும் ஒழிக்க முடியாது என்பதால், அயல்நாட்டுக்காரன் ஆட்சி வந்தா வது இந்த இழிவை, தீண்டாமையை ஒழிக்க முன்வர மாட்டானா? அவனாலாவது நம் மக்களின் இழிவு தீண் டாமை ஒழிக்கப்படமாட்டாதா? என் பதால் அயல்நாட்டுக்காரன் அந்நியன் ஆட்சி அது எவனுடையதாக இருந்தாலும், நம் இழிவைப் போக்க முன் வருகின்றவனை ஆதரிப்பதோடு அவனை வரவேற்க வேண்டியது நம் கடமை என் கின்றோம்.

அந்நியன் ஆட்சி என்றதும் நம் மக்களுக்கு ஏதோ வேண்டாத உணவைத் தின்பது போல் இருக் கிறது.  நம் மக்கள் மீன், ஆடு, கோழி,  பன்றி இவற்றின் மாமிசங்களை உணவாக உட்கொள்ளுகின்றனர். ஆனால், மாட்டு மாமிசத்தை உட் கொள்ள மறுக் கின்றனர். மற்ற கோழி, பன்றி, மீன் ஆகிய இவற்றைப் போன்று அசிங்கமானவற்றை மாடு உண்ணவில்லை. என்றாலும், மதம் காரணமாக, மதத்திற்கு விரோதம், சாஸ்திரத்திற்கு விரோதம் என்று மாட்டு மாமிசத்தை உட்கொள்ள மறுக்கின்றார்களோ, அதுபோல இழிவு ஒழிய வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொள்கிற மக்கள்- தேசபக்தி என்கின்ற காரணத்தால், அயல் நாட்டுக்காரன் ஆட்சி என்றதும் பயப் படுகின்றனர். இத்தனை காலமாக நமக்கிருந்த தேசபக்தியால், தேசாபிமானத்தால் நம் இழிவு நீக்கப்படவில்லை; தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என்னும் போது, இந்த தேசபக்தியாலும், தேசாபிமானத்தாலும் நாமடைந்த பயன் மானமற்றவனாக, இழிமகனாக இருப்பது தானா? என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.

இந்தத் தீண்டாமையானது அறவே ஒழிய வேண்டுமானால், நமக் கிருக்கிற இந்தக் கடவுள் ஒழிக்கப்பட வேண்டும்; மதம் ஒழிக்கப்பட வேண் டும்; சாஸ்திர, சம்பிரதாயங்கள் ஒழிக் கப்பட வேண்டும்; இதிகாச, புராண தருமங்கள் ஒழிக்கப்பட வேண்டும். இவை இருக்கிற வரையிலும்,  இந்த டில்லி ஆட்சி இருக்கிற வரையிலும் தற்போதிருக்கிற இந்த அரசமைப்புச் சட்டம் இருக்கிற வரையிலும், இந்தப் பார்ப்பான் இருக்கிற வரை, பார்ப்பானின் சித்திரம் இருக்கிறவரை இந்தத் தீண்டாமையானது ஒழிக்கப் படவே முடியாது.

இன்று இங்கு இருக்கின்ற இந்த ஆட்சி நம் நாட்டு ஆட்சி; நம் தமிழர் களின் ஆட்சி. என்றாலும், இந்த ஆட்சியால் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதோடு, தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று சட்டம் கூடச் செய்ய முடியாதே! அப்படிச் சட்டம் செய்வதற்கு இந்த மந்திரிகளுக்கு உரிமை இல்லையே? மீறிச் செய்தால் அரசமைப்புச் சட்டப்படி இந்த ஆட்சியை மாற்றக்கூடிய அதிகாரம் டில்லியிடம் இருக்கிறதே! எனவே இந்த ஆட்சியால் இதனைச் செய்ய முடியாது.

இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு ஒரு மகிழ்ச் சியான வெற்றிச் செய்தியைச் சொல்ல வேண்டும். சமீ பத்தில் நடைபெற்ற 73 நகரசபைத் தேர்தல்களில் 56 நகரசபைகளில் தி.மு. கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. மீதி 9 நகர சபைகள் அப்படியும், இப்படியுமாக இருக்கின்றன. பொதுவாகப் பார்த்தால் காங்கிரஸ் மிகக் கீழ்நிலைக்கு,  இழிதன்மைக்குப் போய் விட்டது; அது மாற்றமடைய வேண்டும்.

எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக் கட்சி நகர சபையில் வருவது தான் நல்லது; ரகளை இல்லாமல் காரியம் நடக்கும்; அப்படியில்லாமல் வேறு கட்சி நகர சபையில் வந்தால், ரகளைக்குதான் நேரம் இருக்குமே தவிர, காரியம் ஒன்றும் நடைபெறாது; எனவே நடக்க வேண் டிய முறைப்படிதான் நடந்திருக் கிறது.  என்றாலும், நம் மக்கள் ஊர் தோறும் பாராட்டுக் கூட்டம் போட்டு ஓட்டுப்போட்ட மக்களைப் பாராட்டு வதோடு, தி.மு.க., ஆட்சியைப் பாராட்ட வேண்டும்.

அத்தோடு இந்த ஆட்சியிடம் நாம் எதிர்பார்ப்பது, செய்யச் சொல்ல வேண்டியது, நம் மக்களுக்குரிய ஜாதி, மத விகிதாச்சாரப்படிப் பதவிகள்,  உத்தியோ கங்கள், உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தானாகும்; இவற்றை வலியுறுத்த வேண்டும்.

இந்த மந்திரி லஞ்சம் வாங்கினான்;  அந்த மந்திரி குடித்தான்;  அவன் பொம்பளையோடு போனான் என்பதெல்லாம் சாதாரணமானது. ஜனநாய கத்தில் லஞ்சம் என்பது சாதாரணம்; இதுவரை இலஞ்சம் வாங்காமல் இருந்தவன் எவன்? பணமாக வாங்க வில்லை என்றால் ஓட்டாவது லஞ்சம் வாங்கித்தானே இருப்பான்? எனக்கு ஓட்டுப் போட்டால் இன்னது கொடுக்கின்றேன், இன்னது செய்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத் துத் தான் ஓட்டுப் பெற்றிருப்பான்.  பதவிக்கு வந்ததும் ஓட்டுப் போட்டவன் தயவு வேண்டும் என்பதால், அவனுக்கு ஏதாவது வசதி செய்து கொடுத்திருப்பான். இது ஜனநாயகத்தில் சாதாரணமாக நடக்கக் கூடியதேயாகும். இதை ஒரு பெரிய குற்றமாகவோ, குறையாகவோ கருத வேண் டிய அவசியமில்லை. இந்த ஆட்சியால் நன்மை என்ன என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இந்த அரசாங்கம் மக்களுடைய ஆதரவு இருக்கிறது என்று மேலே பார்க்காமல், எந்த மக்களுடைய ஆதரவு அதிகமிருக்கிறதோ, அந்த மக்களுடைய உரிமையைக் கொடுக்க முன்வர வேண்டும்; எந்த மக்கள் அதிகமாக ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்தார்களோ,  அவர்களு டைய பங்கு விகிதாச்சாரம் கொடுக்க முன்வர வேண்டும்; சிறுபான்மையான சைவனும், பார்ப்பானும், கிறிஸ் தவனும் தனது விகிதாச்சாரத்திற்கு மேல் அனுப விக்கவும், ஆதரவு கொடுக்கிற பெரும்பான்மையான மக்கள் தங்கள் விகிதாச்சாரத்திற்குப் பல மடங்கு குறைவாக அனுபவிக் கவுமான நிலையை மாற்ற வேண்டும். அவரவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்பப் பதவி, உத்தியோகங்கள், உரிமைகள் வழங்க முன் வரவேண்டும். இது தான் யோக்கியமான ஜனநாயகப் பண்பாகும்.

நம் நாட்டிலிருக்கிற போலீஸ் வேலை அத்தனையையும் சப்-இன்ஸ்பெக்டர் வரை, ஆதிதிராவிடர் களுக்கே கொடுக்க வேண்டும். மற்ற எவனையும் அதில் உள்ளே நுழைய விடக் கூடாது. அப்படிச் செய்தால் தீண்டாமை இழிவு தானே நீக்கப் படும். உயர் சாதிக்காரன் என்பவன் தானாகவே மரியாதை கொடுக்க ஆரம்பித்து விடுவான்.

அரசாங்கம் வெற்றி பெற்றதற்கு நீதி செலுத்த வேண்டுமானால் ஓட் டளித்த மக்களுக்கு நீதி காட்ட வேண்டும். காங்கிரஸ் ஏன் தொலைந் தது? ஏன் சாகிற மாதிரி இழுத்துக் கொண்டு கிடக்கிறது என்றால், அது பதவியில் இருக்கும்போது மிக ஆண வத்தோடு, பதவி- உத்தியோகங்களை எல்லாம் தனக்கு ஓட்டளித்த பெரும்பான்மையான மக்களுக்குக் கொடுக்காமல், சிறுபான்மையான பார்ப்பான், சைவன், கிறிஸ்தவன் என்று தேடிப்பார்த்துக் கொடுத்ததா லேயே ஆகும். அத்தோடு ஓட்டுப் போட்ட பெரும்பான்மையான மக் களை மதிக்காததாலேயே ஆகும்.

இந்த ஆட்சியும்  அதுபோல் நடந்து கொள்ள முன்வந்தால்,  அதன் கதிதான் இதற்கும் ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

மற்றொரு  மகிழ்ச்சிக்குரிய சேதி என்ன வென்றால், நம் இன்றைய ஆட்சியானது சென்னை அய்க் கோர்ட்டுக்கு இப்போது ஒரு தமிழரை சீஃப் ஜட்ஜாக- பிரதம  நீதிபதியாகப் போட்டிருக்கின்றது. இது பாராட்டக் கூடியதாகும். அவர் எப்போதோ வந்திருக்க வேண்டியவர்; முன்னி ருந்த ஆட்சியினால் இவர் வேண்டு மென்றே புறக்கணிக்கப் பட்டவர் ஆவார். தமிழ்நாட்டில் அய்க்கோர்ட் ஏற்பட்டு 107 வருடங்கள் ஆகின்றன. அதற்கு இப்போதுதான் ஒரு தமிழர் சீஃப் ஜஸ்டிஸ் ஆக வரமுடிந்தது! இதுவரை இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். இல்லாவிட்டால் மலையாளி,  கிறிஸ்தவர், முஸ்லிம் , கன்னடக்காரர்,  ஆந்திராக்காரர் என்று இருந்தார்களே ஒழிய, தமிழர் எவரும் சீஃப் ஜஸ்டிஸாக இருந்தது கிடையாது.  நம் நாட்டிற்கு ஒரு தமிழர்-  தமிழ் நாட்டினர் அய்க் கோர்ட் தலைமை நீதிபதியானது பாராட்டுக்கு உரியதாகும்.

நம் கோர்ட்டுகளின் நீதி நிலை மிகமிக மானக்கேடானதும், கொடு மையானதுமாகும். ஒரு கேஸ் முடிய 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. என்னுடைய கேஸே 4, 5, ஏழுட்டு வருஷங்களாக முடிவு பெறாமல் நடந்து கொண்டிருக்கிறது என்றால், மற்றச் சாதாரண ஏழை, எளிய,  பாமர மக்களுடைய நிலை எப்படி இருக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் நீதி கெட்டதற்கும், புரட்டு, பித்தாலட்டம் அதிகமானதற்கும் மக்களிடையே நாணயம், ஒழுக்கம் கெட்டதற்கும் காரணம் இந்தக் கோர்ட்டுகளே ஆகும்.

நம் கோர்ட்டுகள் குச்சுக்காரி வீடுகளை விட,  சூதாடும் இடங்களை விட மகாமோசமானவை ஆகும். இந்தக் கோர்ட்டு களில் யோக்கியனுக்கு நீதிக்கு இடமில்லை; அவை அயோக்கியர்களுக்கே வெறும் புகலிடமாகி விட்டன.

மற்றும் இந்த நாடு 4 கோடி மக்களைக் கொண்ட, தென்மேற்கில் சுமார் 500 மைல் நீளமுள்ள நாடாகும். இப்படிப்பட்ட இந்த நாட்டிற்கு ஒரே இடத்தில் ஒரே அய்க்கோர்ட் இருப்பது, மக்களுக்குப் பெரிய அசவு கரியமாகும்; குறைந்தது இரண்டு அய்க் கோர்ட்டுகளாவது வைக்கவேண்டும். அதாவது மற்றொரு அய்க்கோர்ட் மதுரையிலாவது, திருச்சியிலாவது, கோவையிலாவது வைக்க வேண் டும்; ஒரே ஒரு அய்க்கோர்ட் சென்னையில் மட்டும் இருப்பதால், கன்னியாகுமரியிலே இருக்கிறவன் நீதிபெற வேண்டுமானால், 450 மைல் கடந்து போக்குவரத்துக்கு 75 ரூபாய் செலவு, செய்து 2 நாள்,  4 நாள் மெனக்கெட்டுக் கொண்டு வரவேண் டியிருக்கிறது. இது ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல 5, 6 தடவையாகும். இது ஏழை, எளிய, பாமர மக்களால் எப்படி இவ்வளவு தூரம் செலவு செய்து கொண்டு வர முடியும்?

வக்கீல்கள் இடித் தொல்லை,  பீசு தொல்லை, குமாஸ்தாக்கள்- அபிட விட்கள் தொல்லை வேறு; பணக்காரனுக்குக் கவலையில்லை அவனால் எவ்வளவு தூரமானாலும், செலவானாலும் முடியும். ஏழைகளால் எப்படி முடியும்?

நமக்கு இன்னொரு கேடு என்னவென்றால், சுப்ரீம்கோர்ட் டில்லியில் இருப்பதாகும். 2000 மைல்களுக்கு அப்பால் சென்று நீதிபெற வேண்டு மானால், அது பணக்காரன் ஒருவனால் தான் முடியும். அதுவும் பெரிதும் அயோக்கியர்களுக்குத் தான் வசதி அளிப்பதாகும். ஏழைகளால் முடியாது. எனவே பணக் காரனுக்கும், அயோக்கியனுக்கும் அனுகூலமானதாகத் தான் இருக் கிறதே ஒழிய, ஏழை, எளிய, பாமர மக்களுக்கு நீதி கிடைக்க வழியில்லை. இதை உணர்ந்து இந்த அய்க்கோர்ட் தலைமை நீதிபதி ஏதாவது செய்வார் என்று நினைக்கின்றேன்.

இன்னொரு காரியம் என்ன செய்ய வேண்டும் என்றால், செய் வார்களோ- செய்யமாட்டார்களோ, ஆனால் செய்ய வேண்டியது அவ சியமாகும் என்பது எனது கருத்து. அதாவது ஒரு ஊருக்கு ஒரு கோர்ட் தான் இருக்க வேண்டும்.  ஒரு கோர்ட்டுக்கு மேல் ஒரு ஊரில் இருக்கக்கூடாது. எதற்காக ஒரே ஊரில் 2, 3 சப்-கோர்ட்டுகள், 2, 3 முனுசீஃப் கோர்ட்டுகள்,  அடிஷனல் கோர்ட்டுகள், சப்-கோர்ட்டுகள் என்று ஒரே ஊரில் பல கோர்ட்டுகள் இருக்க வேண்டும்? வெளியூரில் இருப்பவன் இதற்காகச் செலவு செய்து கொண்டும் மற்ற ஊருக்கு வரவேண்டும்? இவை அந்தந்த தாலூக்காக்களில் மத்திய இடங்களில் கோர்ட்டு இருந்தால், குறைந்த செலவில், எளிதான போக்குவரத்தில் நீதி கிடைக்கும். ஏழை, எளிய, பாமர மக்களுக்கும் வசதியாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட ஊரில் இருப்பதால் பணக்காரன் செலவு செய்து கொண்டு வந்து விடுகின்றான்; ஏழையால் அவ்வளவு செலவு செய்து கொண்டு வரமுடியாமல் போவதோடு, அவர் களுக்கு நீதியும் கிடைப்பதில்லை. மற்றும் ஒரு கேடு  என்னவென்றால் வெளி ஊர்களில் இருக்கும் வக்கீல் களுக்குப் பீசு கொடுப்பதோடு, அப்பீல் கோர்ட்டில் உள்ள வக்கீல் களுக்கும் பீசு கொடுக்க வேண்டியி ருக்கிறது. வெளியூர் வக்கீலுக்கு, கிடைக்க வேண்டிய பீசு, அப்பீல் கோர்ட்டு உள்ள ஊர் வக்கீல்கள் அடைகிறார்கள். இது மொபசல் வக் கீல்களுக்கு அநியாய நட்டமாகும்.

உடனுக்குடன் வழக்கு முடிவ டையாததற்கும் இது ஒரு காரண மாகும். வக்கீல்களின் சூழ்ச்சி தான் வெளி இடங்களில் கோர்ட்டுகள் ஏற்படாததற்குக் காரண மாகும்.

குறைந்தது மூன்று மாதத்திற்குள் கேசு பைசல் செய்யப்பட வேண்டு மென்று சட்டம் போட வேண்டும். அதற்கு ஏற்றப்படி விசாரணை முறை அமைக்கப்பட வேண்டும். அப்படி இல்லாததால் ஒருவன் கேஸ் போட்டால், அதை எடுக்க 2 மாதமாகிறது. பிறகு ஸ்டேட்மென்ட் இஷூ கொடுக்க 3 மாதம்; அதில் வாய்தா வேறு; இப்படி இழுத்துக் கொண்டே போவதால், இந்த முறைகள் சில வக்கீல்கள் பிழைப்பதற்கு உதவியாக இருக்கிறதே ஒழிய,  நீதி கிடைக்க வழி இல்லாமல் போகிறது. நீதி கிடைக்க நாளாவதால் மக்களுக்குக் கோர்ட்டுகளின் மீது பயமில்லாமல் போய்விடுகிறது. நீதி சீக்கிரம் கிடைத்தால்,  மனிதனுக்குப் பயம் இருக்கும். நாளாவ தால் எந்தக் காரி யத்தையும் துணிந்து செய்துவிட்டு, கோர்ட்டுக்கு போ, ``கோர்ட்டில் போடு பார்த்துக் கொள்ளலாம் என் கின்றான். நீதி கிடைக்க நாளாவதால் மக்களிடையே ஒழுக்கம், நாணயம், நேர்மை என்பது இல்லாமல் போய் விடுகிறது. எந்த ஒழுக்கக்கேடான, நாணயக் கேடான, நேர்மைக் கேடான காரியத்தையும் செய்ய மனிதன் பயப்படுவது கிடையாது. இதை யெல்லாம் இப்போது வந்திருக்கிற புதிய ஜட்ஜ்- பார்ப்பனரல்லாத தமிழ் ஜட்ஜ் கவனிப்பார் என்று கருதுகின்றேன்.

                 -------------------1-5-1969  அன்று சென்னை - திருவல்லிக்கேணியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு