Search This Blog

31.8.08

பார்ப்பனர்கள் என்னை ஏன் கொல்லவில்லை? - பெரியார்



நான் சொன்னதைப் போல் பலர் சொல்லி இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் எல்லாம் கொல்லப் பட்டிருக்கிறார்கள். காந்தியார் கோயில் என்பது குச்சுக்காரிகள் வீடு; இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. மதத்திற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது; காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும் என்று சொன்ன 56 - ஆம் நாள், பார்ப்பானால் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னையும் காந்தியைப் போல் சுட்டுக் கொன்றிருப்பார்கள். காந்தியை மகாத்மாவாக்கி விளம்பரம் செய்து மகானாக்கியது பார்ப்பனர்கள்; அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களே அவரைக் கொன்றதால் கேட்க நாதியற்றுப் போயிற்று.

நான் பார்ப்பான் தயவில் இல்லை. என்னைப் பின்பற்றக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். என் ஒருவனைக் கொன்றால் காந்தியைப் போன்று நாதியற்றுப் போகாது. பலர் கொல்லப்படுவார்கள். கலகம் ஏற்படும். பார்ப்பனர்கள் தப்ப முடியாது என்பதால்தான் என்னை விட்டு வைத்திருக்கிறார்களே ஒழிய, அவர்களுக்கு என்னைக் கொல்வது சிரமம் என்பதால் அல்ல! என்னைப் போல் கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் அத்தனைபேரும் கொல்லப்பட்டிருப்பதாகப் புராணங்கள் சரித்திரம் வரையில் இருக்கிறது. நாம் கெட்டதற்குக் காரணம் நாம் இந்து என்று சொல்லிக் கொண்டதாலேயே ஆகும். இந்து என்பது பார்ப்பானால் உண்டாக்கப்பட்டதே தவிர, எந்தப் புராண இலக்கியத்திலும் இந்து என்பதற்கு ஆதாரமில்லை.

பார்ப்பானைப் பிராமணன் என்று அழைக்கக்கூடாது, மதக் குறியான சாம்பல் மண் பூசக் கூடாது, கோயிலுக்குப் போகக் கூடாது, எதற்காக நீங்கள் கோயிலுக்குப் போக வேண்டும்? அதனால் எவனோ பார்ப்பான் தின்ன வேண்டும் என்பதோடு நாமெல்லாம் முட்டாளாகிறோம். இதைத் தவிர வேறு பயன் பலன் என்ன? என்பதைச் சிந்திக்க வேண்டும். நாமெல்லாம் பகுத்தறிவாளர்களாக வேண்டும்.

-------------------- தந்தை பெரியார் அவர்கள் 13.04.1971 இல் திண்டுக்கல்லில் ஆற்றிய சொற்பொழிவு

30.8.08

கலைவாணர்




இன்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் (1957). கலை உலகில் என்றும் நிலை பெற்ற புகழுக்குச் சொந்தக்காரர் இவர்.

நாடகத் துறையில் அடியெடுத்து வைத்து, அதன்பின் திரைப்படத் துறையில் நுழைந்து, அந்தத் துறையின் போக்கிலே மகத்தான மாற்றத்தைக் கொண்டு வந்தவர் கலைவாணர்.

1936 ஆம் ஆண்டில் வெளிவந்த "சதிலீலா" திரைப்படத்தில் தன் முகத்தைக் காட்டிய கலைவாணர் - தான்யார் என்பதையும் அடையாளம் காட்டினார்.

ஆதிப்பார்ப்பனர் வேடம். அவர் அருந்தியதோ முட்டை, சாராயம்!


அதை எப்படி சொல்கிறார்? கந்தர்வ பான உணவு என்று கூறி அருந்துவார்.

ஆதிகாலப் பார்ப்பனர்கள் மதுவிலும், மாமிசத்திலும் மயங்கிக் கிடந்தவர்களே என்பதை நகைச்சுவைப் பாணியில் சொல்லுவது என்பது கலைவாணரின் யுக்தி.

டாக்டர் சாவித்திரி படத்தில் நவீன விஞ்ஞானத்தின் மேன்மையை பாடலின் மூலம் (உடுமலை நாராயணகவி -இவருக்குக் கிடைத்த கொள்கைக்கவிஞர் - திரைப்படப் பாடலாசிரியர்) வெளிப்படுத்தினார்.

காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற

காலம் மாறிப் போச்சு - இப்ப

ஊசியைப் போட்டா உண்டா குமென்ற

உண்மை தெரிஞ்சு போச்சு!


விஞ்ஞானத்தின் மேன் மையை வெளிப்படுத்தும் அதே நேரத்தில், காசிக்குப் போனால் பிள்ளை வரம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையையும் செதிர் காயாக உடைத்துக் காட்டும் பான்மையை இதில் பார்க்கக் கூடும்.

1947 ஆகஸ்ட் 15- முதல் சுதந்திர நாளன்று வானொலியில் பேச கலைவாணர் அழைக்கப் பட்டார். முன்கூட்டியே தான் பேச விருப்பதை எழுதிக் கொடுத்து விட்டார்.

நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வரி சையில் தந்தைபெரியார் பெயரையும் இணைந்திருந்தார். அந்தப் பெயரை மட்டும் வானொலி நிலையத்தார் நீக்கிவிட்டனர்.

வானொலி நிலைய சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்த கலைவாணர், பெரியார் பெயர் நீக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் - ஏன், பெரியார் நாட்டு விடுதலைக்காகப் பாடுபடவில்லையா? அவர் பெயர் இல்லை என்றால், நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று கறாராகக் கூறிவிட்டார்.

வேறு வழியில்லை. பெரியார் பெயரைச் சேர்த்த பின்பே நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த அளவுக்கு தந்தை பெரியார் மீது மரியாதை கொண்டிருந்தார். தந்தை பெரியார் கலைவாணர் மீது அன்பும் பாசமும் பொழிந்தார்.

தந்தை பெரியாரின் "குடிஅரசு" இதழே எனது ஆசான், குரு என்று சொன்ன கலைவாணர் அவர்தம் நினைவு நாளில் அவர் விதைத்த சிந்தனைகளை மலர்விப்போம்!

----------------- மயிலாடன் அவர்கள் 30-8-2008 "விடுதலை" இதழில் எழுதியது

எந்த மதம் மேலானது? எந்த மதக் கொள்கை மேலானது?



கடவுள் ஏற்பட்ட வெகு காலத்துக்குப் பிறகுதான் மதம் ஏற்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய, கடவுளும் மதமும் இரட்டைப் பிள்ளைகள்போல் பிறந்தவை அல்ல. எப்படி இருந்தாலும், மதங்களானவை இன்று சடங்காகவும், வேஷமாகவும் இருக்கின்றனவே ஒழிய, கொள்கையாகக் கூட எந்த மதமும் அனுபவத்தில் இருக்கவில்லை; புத்தகங்களில் பல கொள்கைகள் இந்திருக்கலாம்; இன்னும் இருந்து கொண்டிருக்கலாம். காரியத்தில் அக் கொள்கைகள் பெரிதும் அமலில் இல்லை.

ஆகவே, அமலில் இல்லாத கொள்கைகளைக் கொண்ட மதங்களில் எந்த மதம் மேலானது என்றோ, எந்த மதக் கொள்கை மேலானது என்றோ வாதிப்பதானது, ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் கோட்டைகளில் எது பலமான கட்டடம் என்றும், எது வசிப்பதற்குச் சவுகரியமானது என்றும் கேட்பதுபோல் தான் ஆகும்.

--------------- தந்தைபெரியார் - "பகுத்தறிவு" மார்ச் 1936

நான் இனி இந்து என்று சொல்லிக் கொள்வதில்லை!



இழிவை ஒழிக்க வழி!

நான் மனித சமூதயத் தொண்டு செய்கிறவன். சமூதாயத் தொண்டு செய்கிறவனுக்கு நாட்டுப்பற்றோ, ஜாதிப்பற்றோ, இலக்கியப்பற்றோ,எந்தப் பற்றும் கூடாது.


தோழர்களே! நமது சமூதாயம் உலகத்தில் தாழ்த்தப்பட்ட இழிவான சமூதாயம். அரசியல் பெயராலும் மதத்தின் பெயராலும் வயிறு வளர்ப்பவர்கள் பெருமையாக நாட்டையும், மொழியையும் பேசிக் கொள்ளலாம். நம்மிடம் உயர்வானது ஒன்றும் இல்லை. நம்முடைய இலக்கியங்கள் எல்லாம் 2000 வருடங்களுக்கு முந்தியவை. வள்ளுவன் காலம் காட்டுமிராண்டிக் காலம்.அதேபோல கடவுளும் மனிதன் மடையனாக இருந்தபோது உற்பத்தி செய்ய்பட்டவை. இயேசுவும் அல்லாவும் ராமனும் கந்தனும் 2000 -3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டவைகள். அந்தக் காலங்களில் 5 - வருடம் கூட மனித ஆயுள் இல்லையே. இந்தக் கடவுளும், சாத்திரங்களும் ஒழிந்து அறிவு வளர்ந்த பிறகு ஆயுள் வளர்ந்துள்ளதே. இன்றைக்கு சுயமரியாதை இயக்கம் வளர்ந்த பிறகு மனிதனின் சராசரி வயது 50 - ஆக உயர்ந்தது. கடவுள் ஒழிந்து அறிவு ஆதிக்கம் செலுத்தியதால் தான் இப்போது மனிதன் வாழ்கிறான். வளர்கிறான். 1952 –ல் சராசரி வயது 25 – 1973 – ல் சராசரி வயது 52. 27 வயது இந்த 21 –ஆண்டில் உயர்ந்திருக்கின்றோமே! அன்று கோயில் இல்லையா? கடவுள் இல்லையா? சங்கராச்சாரி இல்லையா? கிறிஸ்து பிறந்த முதல் ஆண்டில் உலக ஜனத்தொகை 20 - கோடி. இன்று 350 - கோடி. இந்தப் பாழாய்ப் போன கடவுள் இல்லாமல் இருந்தால் அன்றைக்கே மனிதன் உயர்ந்திருப்பான்.

நான் பந்தயம் கட்டுகிறேன். மேடைமீது வந்து சொல்லுங்கள். யாருக்காவது கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? சர்வசக்தி உள்ள கடவுள் இருக்கிறது என்று துணிவுடன் சொல்கிறாயா? கும்பிட்டால் கடவுள் நம்பிக்கையா? சாம்பல் அடித்துக் கொண்டால் கடவுள் நம்பிக்கையா? அவனே சம்பாதிக்கிறான், சண்டை போடுகிறான், வாழ்க்கையை வளர்க்கிறான். கடவுளை நம்பி எவன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான்? என்னுடைய 15 - வயதில் கடவுளை இல்லை என்று சொன்னவன் தானே நான். இப்பவும் சொல்கிறேன். நீங்கள் 100 - 120 வருடம் சாகாமல் இருக்கப் போகிறீர்கள். 5 லட்சம் 3 லட்சம் பேர் இருக்கும் போது அக்காலத்தில் பல ஆயிரம் பேர் சாவார்கள். இப்போது 30 - 40 லட்சம் பேர் இருக்கும் போது 4 - 5 பேர்தானே காலரா வந்து சாகிறார்கள்? மனிதன் முட்டாளாவதற்கு – உலகம் வளராமல் இருப்பதற்குக் காரணம் கடவுள் தானே!

நமக்குப் பல்லாயிரக்கணக்கான கடவுள் கோயில் - இத்தனை பேரும் இருந்து என்ன செய்தார்கள்? சாமிக்குக் கல்யாணம், கோயில், குளம், திருவிழா, ஒழுக்கக்கேடு இதைத்தானே செய்தார்கள்? இன்று மேல் நாட்டான் சந்திர மண்டலம் போகிறான். நீ பி. ஏ., எம். ஏ., படித்து சந்திரனை பாம்பு விழுங்குகிறது என்கிறாயே! நீ படித்தவன் தானா? சர்வசக்தி உள்ள சாமியை ஒருவன் இல்லை என்று சொல்லுகின்றான் என்றால் நீ உட்கார்ந்து கொண்டு அழலாமா? சர்வ சக்தி உள்ள சாமி இல்லை என்று ஏன் சொல்ல வைக்க வேண்டும்? நான் இருக்கிறேன் என்று சொல்ல வேண்டாமா? திராவிடர் கழகம் இல்லை என்றால் நீங்கள் இவ்வளவு உயர்ந்திருப்பீர்களா? சுயமரியாதை இயக்கம் தோன்றி கடவுளை செருப்பால் அடித்து நொருக்கியதால் தானே நாம் எல்லாம் மனிதன் ஆனோம்.

தோழர்களே! கடவுளை உண்டாக்கியவன் என்ன சொன்னான்? கண்ணுக்குத் தெரியாது. கைக்குச் சிக்காது, புத்திக்கு எட்டாது என்கிறான். தமிழ் மகான்களே இதைத் தானே சொன்னார்கள். அறிந்து கொள்ள முடியாதவன் ஒரு அணு அளவு கூடத் தெரிந்து கொள்ள முடியாதவன் என்று சொல்கிறான். நமது மடையர்களைத் தவிர, கடவுளுக்குப் பெண்டாட்டியும், வைப்பாட்டியும் குழந்தை இருக்கிறது என்று எவன் சொன்னான்? கருணையே வடிவான கடவுள் என்று சொல்லிக் கொண்டு கொலைக்காரனுக்கு வேண்டிய ஆயதங்கள் எல்லாம் கடவுளுக்குக் கொடுத்திருக்கிறான். அன்பே உருவானவன் என்கிறான். ராட்சகர்களையும், மற்றவர்களையும் கொன்று கசாப்புக் கடை வேலை செய்கிறான். எந்தக் கடவுள் கொலை செய்யாதவன்? தேவர்களைக் காப்பாற்ற கடவுள் வந்தான் என்கிறான். தேவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் தானே நாம் எல்லாம் அசுரர்கள் நம்மை அழிக்க – பார்ப்பானைக் காக்க கடவுள் வந்தான். கடவுள் உண்டாக்கிய காலத்தில் மனிதன் நாகரிகம் அடையவில்லை.

தோழர்களே! இன்றைய தினம் நாம் எல்லாம் யார்? சூத்திரர்கள் தானே? சூத்திரன் என்றால் பார்ப்பானின் தாசிமகன் என்று சட்டம் சொல்கிறது, சாஸ்திரம் செர்கிறது. ஒரு நாட்டிலே பெரும்பாலான மக்கள் ஏன் இழி மகனாக இருக்க வேண்டும்?இன்று நம்மை மற்றவன் சூத்திரன் என்று சொல்ல மாட்டான் சொல்ல முடியாது. ஆனால் நம்மை நாமே சூத்திரன் என்று ஒத்துக் கொள்கிறோம். நாம் சொல்கின்ற சாதிகள் எல்லாம் ஏது சாஸ்திரத்திலே? சட்டத்திலே? வைசிய சத்திரியன் கூட கோர்ட்டிலே போய்விட்டது. பிராமணன், சூத்திரன் தான் இருந்து கொண்டு வருகிறது. மற்றவர்கள் எல்லாம் பேசிக் கொள்ளலாம் ஆனால் இந்தியாவில் நாம் எல்லாம் சூத்திரர்கள் என்று தானே இருக்கிறது.இந்தியாவிலே உள்ள அத்தனை பேரும் இந்துக்கள். இந்துக்கள் என்றால் சூத்திரன், பிராமணன். நான் சொல்லுகிறேன். இந்த உலகம் உள்ளவரை நீங்கள் தாசிமக்கள் தான். இந்தியா என்றால் சூத்திரன். இந்து என்றால் சூத்திரன். சூத்திரன் என்றால் தாசிமகன். இது என்றைக்கு ஒழிவது? நாம் எல்லாம் இந்துக்கள் அல்லவென்று கெசட்டில் வெளியிட்டு விட வேண்டும். நாம் இழிவை ஒழிக்கவேண்டாமா? பணக்காரனாகி விட்டதால் போதுமா? மந்திரியாகி விட்டால் போதுமா? உத்தியோகம் வாங்கிவிட்டால் போதுமா?இதையும் தவிர, நம்மை நாமே தீண்டத் தகாதவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். கோயிலுக்குப் போகும் நீ, கர்ப்பக்கிரகம் வரை போகிறாயா? காரணம் சாமி தீட்டாகப் போய்விடும் என்று ஒத்துக் கொள்கிறாயே! நம்மை நாமே இழிவுப்படுத்திக் கொள்கிறோம். மற்றவன் இழிவை சொல்லவிடாமல் நாம் தடுத்து விட்டோம். இனி நமது இழிவை ஒழிக்க நாம் தான் மாறியாக வேண்டும்.

ஒவ்வொருவரும் சாம்பல் அடிக்க மாட்டேன், நாமம் போடமாட்டேன் என்று முன்வர வேண்டும். கோயிலுக்குப் போகிறவனைப் பார்த்துக் காரித்துப்ப வேண்டும். சுதந்திரம் வந்து 26 - ஆண்டுகள் ஆகியும் சூத்திரனாக இருக்கலாமா? நாம் வீணாயப் பதவி பெற போட்டி போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறோமே தவிர சமூதாய இழிவை ஒழிக்க வேண்டாமா?கம்யூனிஸ்ட் எவனாவது சாதி பற்றிக் கூறுகிறானா? கடவுள் பற்றிப் பேசுகிறானா? உனது இழிவை ஒழிக்க இந்தக் கம்யூனிஸ்ட் செய்த காரியம் என்ன? நாளைக்கே காங்கிரஸ் வந்தாலும் என்ன செய்வார்கள்? சூத்திரன் இல்லை என்பர்களா? சூத்திரனே கிடையாது என்று சட்டம் போடுவார்களா? பதவிக்கு வருவார்கள் வாழ்க்கையை வசதியாக்கிக் கொள்வார்கள். 1952-லே காங்கிரசுக்காரன் 2000 -பள்ளிக் கூடத்தை மூடினானே! 1938 – லும் மூடினானே!ஆகவே தோழர்களே! கடவுள் மதம் சாஸ்திரம் சம்பிரதாயம் சாதி எல்லாம் காட்டமிராண்டிக் கால அமைப்பு. இது தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறது. இது என்றைக்கு மாறுவது?

எனவே நான் இனி இந்து என்று சொல்லிக் கொள்வதில்லை. சாம்பல் அடிப்பதில்லை கோயிலுக்குப் போவதில்லை என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இழிவுக்குக் காரணம் நாம் தான். நாமே இழிவிலிருந்து நீங்க வேண்டும்.

------------------25-08-1973 அன்று சென்னை புது வண்ணாரப்பேட்டையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி –" விடுதலை" – 26-08-1973. பெரியார் களஞ்சியம் தொகுதி:2 … பக்கம்: 108 - 111

சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் "புதிய பைபிள் "



கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போப்பாண்டவரின் ஆசியோடு வெளியிடப்பட்டிருக்கும் புதிய பைபிள் ஒன்று. இந்த ஒரு புத்தகத்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மதக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக, அவர்கள் அபயக் குரல் எழுப்புவது ஒட்டுமொத்த அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது.

புதிய பைபிள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ரபேலை சந்தித்துப் பேசினோம். "இந்து, முஸ்லிம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு, நமது சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரோமாபுரியில் நடந்த இரண்டாம் வாடிகன் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது. அதையொட்டி வெளியான இந்தப் புதிய பைபிள், கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியிருக்கிறது. இதனை இந்து மதப் பெரியவர்கள் படித்தால் கொதித்துப் போவார்கள்'' என்றார் அவர்.

`மேலும் விளக்கமாகக் கூறுங்கள்' என்றோம் நாம்.

"வாடிகனில் உள்ள போப் 16-ம் பெனடிக்ட், இந்த ஆண்டை இயேசுவின் புனித சீடர்களில் ஒருவரான புனித பவுல் ஆண்டாக அறிவித்துள்ளார். இதையொட்டி, கடந்த ஜூன் மாதம் மும்பை பேராயர் ஆஸ்வால் கிரேசியஸ் என்பவர், மிகப் பெரிய பதிப்பக நிறுவனமான செயிண்ட் பால் மூலம், `தி கம்யூனிட்டி பைபிள்' என்ற தலைப்பில் 2,271 பக்கமுள்ள புதிய பைபிள் ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் முப்பதாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட இந்தப் புத்தகம் தற்போது தேவாலயங்களில் விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதன் தமிழ்ப் பதிப்பை அச்சிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது மிகவும் நொந்து போய்விட்டோம். அதேபோல, பல மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு தங்களது மனவருத்தத்தையும் தெரிவித்தனர்'' என்றார் ரபேல்.

"இந்தப் புதிய பைபிள் முழுக்க, முழுக்க இந்து மத வேத நூல்கள் மற்றும் இந்து மதக் கடவுள்களை மேற்கோள்காட்டி எழுதப்பட்டுள்ளது. இந்திய கலாசாரத்தைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளதாக இதன் ஆசிரியர் அருட்தந்தை அகஸ்தீன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்திய வேதநூல் என்ற பெயரில் இந்துக்களையும், கிறிஸ்துவர்களையும் குழப்பி இந்த கம்யூனிட்டி பைபிள் வெளிவந்துள்ளது. பைபிளில் உபநிடதம், ரிக் வேதம், மகாபாரதம், யோக சூத்ரா, பாகவத புராணம், நாரத பக்தி சூத்திரம், பகவத் கீதை ஆகியவை மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பைபிளின் தொடக்க நூல் என்ற பகுதியில் 32-வது அதிகாரத்தில் யாக்கோபு கடவுளிடம் சண்டையிடுதல் என்ற பகுதியில், அந்த சம்பவத்தை மகாபாரதத்தில் அர்ஜுனன் கடவுளிடம் சண்டையிடுவதற்கு ஒப்பிட்டுள்ளனர். இந்துக் கடவுளை கிறிஸ்துவ கடவுளுடன் ஒப்பிட்டுள்ளனர். குரானின்படி ஆபிரகாம் (இப்ராஹீம்), யாக்கோபு (யாகூப்) ஆகியோரை இறைத்தூதர்களாக கருதும் முஸ்லிம்களின் மனதை இது புண்படுத்தாதா? அதேபோல், எகிப்தில் பத்து பெருந்துன்பங்கள் என்ற பகுதியில் மன்னன் பாரவோன், அடிமைகளாக இருந்த இஸ்ரேல் மக்களை விடுதலை செய்ய மறுக்கிறான். மூர்க்க குணம் கொண்ட மனிதனாக பாரவோன் இருந்ததைத் துரியோதனனோடு ஒப்பிட்டுள்ளனர்.


பைபிளில் செங்கடல் இரண்டாகப் பிளந்து கடலின் நடுவே, பாதை ஏற்பட்டு இஸ்ரேல் மக்கள் கடந்து செல்வதை இந்து மதநூலான நாரத பக்த சூத்ராவுடன் ஒப்பிட்டு இதுதான் மறுபிறவி எடுப்பது, முக்தி அல்லது மோட்சம் என்றும் புதிய கண்டுபிடிப்பாக புதிய பைபிளில் எழுதியுள்ளனர். மறுபிறவி, அவதாரம் ஆகியவற்றில் நம்பிக்கையில்லாத கிறிஸ்துவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கிறது. இந்த பைபிளில் ஓர் இடத்தில் கடவுளுக்குரிய மனிதர்கள் உயர்ந்தவர்களாகவும், மற்றைய கடவுள் பற்றுள்ளவர்கள் சாதாரண மனிதர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது சரியானதுதானா?

சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இயேசுவின் வார்த்தைகள் என்று நியூ

கம்யூனிட்டி பைபிளில் எழுதியவர்கள் சொந்தம் கொண்டாடுவதை இந்துக்கள் எப்படி ஏற்பார்கள்? பைபிளில் திருப்பாடல்கள் ஐந்தாம் அதிகாரத்தில், `பாதுகாப்பிற்காக மன்றாடல்' என்ற தலைப்பில் உள்ள பகுதியை காயத்ரி மந்திரத்துடன் ஒப்பிட்டுள்ளனர். பைபிளில் மத்தேயு எழுதிய நற்செய்தி 13_வது அதிகாரத்தில், இயேசு உவமை வழியாகப் பேசியதை சக்தி வாய்ந்ததாகவும், இந்த உவமைகளை ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனையுடன் ஒப்பிட்டும், பரமஹம்சரின் போதனைக் கதைகள் சாதாரண கதைகள் என்றும் இயேசு குறிப்பிட்டுள்ளது சக்தி வாய்ந்தவை என்றும் எழுதியுள்ளனர். இது நியாயமா?

இதையெல்லாம்விட, கம்யூனிட்டி பைபிளின் 1645-ம் பக்கத்தில் இந்திய உடையில் மேரி மாதாவையும் அவரது கணவர் சூசையப்பரை வேட்டி கட்டிய ஓர் இந்திய விவசாயி போலவும் படம் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் மேரிமாதா குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிச் செல்வதை சித்திரிக்கும் படம். இந்தப் படத்தால் இந்தச் சம்பவம் ஏதோ இந்தியாவில் நடந்ததைப் போல் ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்கும். ஆனால், இதே பைபிளில் இதற்கு இரண்டு பக்கம் தள்ளி, இயேசு காஷ்மீரில் வாழ்ந்தார், அவருக்கு கல்லறை உண்டு என்ற வாதத்தை மறுத்துள்ளனர். இந்திய உடையில் இவர்களைப் பார்த்த மக்களுக்கு காஷ்மீர் பற்றிய தகவல் குழப்பத்தை ஏற்படுத்தாதா?

இப்படி புதிய பைபிள் முழுவதும் கிறிஸ்துவ மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையிலான கருத்துக்கள் பரவியுள்ளன. இப்படியொரு குழப்பத்தோடு இதை ஏன் வெளியிட வேண்டும்? இந்து மதக் கருத்துக்களை ஏற்று பைபிளை வெளியிட்டுள்ளதாகக் கூறும் பாதிரியார்கள், இந்து சன்னியாசிகள் போல் காவிநிற உடைகளை அணிய வேண்டியதுதானே? இந்துத் துறவிகள் போல், சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டியதுதானே?'' எனக் கொந்தளிப்போடு முடித்தார் ரபேல்.

இதே சங்கத்தின் செயலாளர் கிளமண்ட் செல்வராஜ் நம்மிடம், ``கடந்த 60 ஆண்டுகளாகவே சிறிதுசிறிதாக இந்து மதத்தோடு, கிறிஸ்துவ மதத்தைப் பொருத்தி மதத்தைப் பரப்பும் வேலையில் பாதிரியார்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தேவையில்லாதது. அவரவர் மதங்களில் உள்ள கருத்துக்களை அந்தந்த மதத்தினர் புனிதமாக வழிபட்டு வருகின்றனர். அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். கடந்த 1948-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு கத்தோலிக்க பாதிரியார் ஆஞ்சலோ பெனடிக்ட், சுவாமி சுபானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, குஜராத்தில் இந்து முறைப்படி பூஜை செய்து, இயேசுவின் வசனங்களை இந்து முறைப்படி பரப்பினார். இவருடன் இருந்த பாதிரியார் பீட்டர் ஜூலியா, சுவாமி சில்லானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, மராட்டியத்தில் சஞ்சீவன் ஆசிரமம் நடத்தி வந்தார். இவரது ஆசிரமத்தில் சிவலிங்கத்தில் சிலுவையைப் பதித்திருந்தார். இது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்.

இதுபோன்ற புதிய பைபிள், பாதிரியார்களின் விசுவாசமற்ற செயல்பாடுகள் இந்தியா முழுவதும் உள்ள பதினைந்து கோடி கத்தோலிக்க மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளன. இந்த கம்யூனிட்டி பைபிளைத் தயாரிக்க யாரிடமும், இவர்கள் கருத்துக் கேட்கவில்லை. இந்தப் புத்தகம் தேவையற்றது என்று அனைத்து ஆயர்களுக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். இன்னும் பதில் வரவில்லை. எனவே, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களின் மனதைப் புண்படுத்தும் இந்தப் புத்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விரைவில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளோம்'' என்றார் உறுதியாக.

கம்யூனிட்டி பைபிள் ஏற்படுத்தப்போகும் கலகம் என்னவென்பது போகப்போகத்தான் தெரியும்.


-------------நன்றி: "குமுதம் ரிப்போர்ட்டர்" 31-8-2008

29.8.08

ஜாதியை ஒழிக்கின்ற இயக்கம்



சமுதாயத்திலே பிரிந்திருக்கின்றவர்களை இணைக்கின்ற ஒரே பாலம் பகுத்தறிவு, மனித நேயம் தானே தவிர, கடவுள் - மனிதனை இணைக்காது, இணைத்ததில்லை வரலாற் றிலே.

மதங்கள் மனிதர்களை இணைத்ததில்லை

மதங்கள் மனிதர்களை இணைத்ததில்லை; பிரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இங்கே என்ன கூட்டம் நடக்கிறது என்று தொலை தூரத்தில் இருந்தவர்களை கேட்டால்கூட ஒரே வரியில் அதற்கு விளக்கம் சொல்லுவார் - அதுதானய்யா அந்த கருப்புச்சட்டைக்காரன் கூட்டம் நடக்கிறது.

என்னவென்று தெரியாதா? இவர்கள் கடவுள் இல்லை என்று சொல்லுகிறவர்கள் என்று சொல்வார்கள்.

இப்பொழுது அய்யப்பன் சீசனுக்காக சில பேர் கருப்புச் சட்டைப் போடுகிறார்கள் - அது வேறு. எங்களைப் பார்த்து இவர்கள் சாமி இல்லை என்று சொல்லக்கூடிய கட்சியைச் சார்ந்தவர்கள் என்று சொல்வார்கள்.

கொள்கையை வைத்துச் சொல்லக்கூடிய இயக்கங்கள்

நாங்கள் அதைக் கேட்டு சங்கடப்பட்டதே கிடையாது. அது எங்களுக்கு ஒரு பெரிய பாராட்டு. அதைவிட ஒரு நல்ல சான்றிதழ் - எங்களைப் பொறுத்தவரையிலே வேறு யாரும் வழங்க முடியாது.

மற்ற கட்சிகளை யாரும் கொள்கையை வைத்து சொன்னதில்லை. இந்த ஒரு இயக்கத்தைத்தான் கொள்கையை வைத்துச் சொல்லுகின்றார்கள். இது சாமி இல்லை என்கிற கட்சி. சாமி இல்லை என்பது எங்களுடைய கொள்கை (கைதட்டல்).

அந்தக் கொள்கையை வைத்து ஒரு வரியில் அறிமுகப்படுத்து கின்றார்கள் பாருங்கள். மற்றது தெரிந்திருக்கிறதோ, இல்லையோ. இந்த ஒரு வரியில் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.

நமக்கும், கடவுள் உண்டு என்று சொல்பவருக்கும் என்ன தகராறு? வாய்க்கால் வரப்புத் தகராறா? பெரியார் அவர்கள் சொன்னார் - உலகம் முழுவதும் நான் பார்க்கிறேன். உலக மனித சமுதாயத்தைப் பார்க்கிறேன். அங்கே எல்லாம் அண்ணன் - தம்பிகளாக வாழ்கிறார்கள்.

இந்தியாவில் ஒருவன் மேல் ஜாதி இன்னொருவன் கீழ் ஜாதி

இந்தியாவில் என்ன நிலை? பிறக்கும்பொழுதே ஒருவன் மேல் ஜாதி என்று சொல்லுகின்றான். நாங்கள் இங்கே இவ்வளவு பேர் இருக்கிறோம். நாங்கள் யார் என்ன ஜாதி என்று ஒருவருக் கொருவர் தெரியாது. கழகப் பொருளாளர் சாமிதுரை அவர்களும், நானும் மாணவப் பருவத்திலிருந்து பழகியவர்கள். அதே மாதிரி இங்கே இருக்கிறவர்கள் எல்லாம் 50 வருடம், 60 வருடம் , 30 வருடம், 40 வருடம் என்று பழகியவர்கள்.

ஜாதியை ஒழிக்கின்ற இயக்கம்

ஆனால், யாரும் ஜாதியைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாத ஒரு இயக்கம் இருக்கிறதென்றால் ஜாதியை ஒழிக்கின்ற ஒரு இயக்கம் - இருக்கிறதென்றால் அது திராவிடர் இயக்கம்தான் (கைதட்டல்)

------------------14-8-2008 அன்று சென்னை - தேனாம்பேட்டையில் நடை பெற்ற சென்னை மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து - "விடுதலை" 29-8-2008

கணபதி பிறந்த கதை




தேவாரப் பாடல்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே


(திருவலிவலம் கோயில் கொண்ட இறைவனைப்பற்றி திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. பிடி - பெண் யானை உருவுமை கொள - உருவத்தை பார்வதியார் கொள்ள, கரியது வடிகொடு - சிவன் ஆண் யானை உரு கொள்ள)

சிவன் ஆண் யானை உரு கொண்டும் பார்வதி பெண் யானை உருகொண்டும் கலவி செய்ததால் பிறந்த கணபதி என்பது இதன் பொருள்.

கடுகளவு பகுத்தறிவும் ஒழுக்கமும் உள்ளவர்கள் இதனை ஏற்பார்களா?

---------- நன்றி: "விடுதலை" 29-8-2008

பயத்தை உதறிய மாமி!

ஓரளவு அறிவு வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலத்தில்கூட பேய் பிசாசு என்று மக்களிடத்தில் பயத்தை உண்டாக்கி வருவது போல், சோதிடர்களும் அக்காலம் முதல் இக்காலம் வரை மன்னர்களிடத்திலும் மக்களிடத்திலும் ஒரு பயத்தை ஊட்டியே வந்திருக்கின்றனர். இது வரலாற்று உண்மை!

சோதிடர்கள் மக்களிடத்திலே பயத்தை ஊட்டியே அதை நம்பும்படி செய்து வருகின்றனர்!

பெண்ணின் மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது!

ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது!

கேட்டை நட்சத்திரம் கணவரின் அண்ணனுக்குக் கேடு!

விசாக நட்சத்திரம் கணவரின் தம்பிக்குக் கேடு!

உத்திர நட்சத்திரம் கணவருக்குக் கேடு!

இப்படி பயமுறுத்துகிறது சோதிடம்,


இந்தப் பயமுறுத்தலைக் கண்டு அஞ்சாமல் துணிச்சலுடன் தன் மகனுக்கு ஆயில்ய நட்சத்திரத்துப் பெண்ணை மருமகளாக்கிக் கொண்ட சம்பவத்தை 2004-ஆம் ஆண்டு பிப்ரவரி மங்கையர் மலர் இதழில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர் வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ஆனாலும், சோதிடத்தின் பயமுறுத்தலைத் தகர்த்து, தன் மகனுக்கு ஆயில்ய நட்சத்திரத்துப் பெண்ணை மணமுடித்து வைத்தார். அதனால், மாமியாருக்கு எதுவும் ஆகிவிடவில்லை! அந்தத் தம்பதிகளும் சிறப்போடு வாழ்ந்து வருகிறார்கள். இதுபற்றி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த தன் பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொண்ட மாமியாரைப்பற்றி அவர் சம்பந்தியம்மா கூறும்போது, ஆயில்யம் அவரை அண்ட முடியாது!

ஜாதகப் பொருத்தம் அமைந்தவர்களுக்குக் கஷ்டமே வந்ததில்லையா? ஜாதக தோஷம் போன்ற காரணங்களால் பெண்ணை வதைக்காதீர்கள்! என்றுகூறி இருக்கிறார். ஆயில்ய நட்சத்தித்துப் பெண்ணை மருமகளாக்கிக் கொண்ட மாமியாருக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை. நலமாகவே இருக்கிறார்.

இந்த உண்மைச் சம்பவத்தைப் படித்துப் பார்த்த பிறகாவது சோதிடம் பற்றிய பயத்தை நீக்கி பகுத்தறிவோடு வாழ முற்படும்படி மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். சோதிடத்தால் எதுவும் ஆகப் போவதில்லை என்ற துணிவு கொண்டவர்களால் சோதிடத்தை உதறித் தள்ள முடியும்.

--------------- தி. பொன்னுசாமி - நூல்: "சோதிட மறுப்பும் வானவியல் சிறப்பும்"

எம்மதமும் சம்மதமில்லை




பொதுவாக மதங்கள் யாரால் சிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும், அதனால் என்ன பயன் இருந்து வந்தாலும், நாம் அவற்றை ஆதரிக்க முடியாது. அதை உண்டாக்கினவர்கள் பெரியவர்களாய், விவேகிகளாய், பரோபகாரிகளாய் இருந் திருக்கலாம். அவர்களிடத்திலும் எனக்குச் சண்டையில்லை. அவரவர்கள், அந்தந்தக் கால நிலைமைக்கு ஏற்றபடி அவற்றை உருவாக்கியிருக்க லாம். ஆனால், இன்றைக்கு அவை ஒருவிதத்திலும் பயன்படாது. ஆகையால், நான் எந்த மதத்திற்கும் விரோதிதான்; மதங்கள் இந்த நாட்டிலிருந்து விரட்டப்பட வேண்டும்; அவை ஒழிய வேண்டும்; ஒழிக்கப்பட வேண்டும்."

-------------- தந்தை பெரியார் "குடிஅரசு" 31.5.1936

தந்தைபெரியாரும் - சேரன்மாதேவி குருகுலமும்



செத்த பாம்பாட்டம்

தமிழ்நாட்டின் தேசீய பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் தமிழ்நாட்டு தேசீய பிராமணரல்லாதார் என் போருக்கு வெளியாகும்படி செய்தது சேரன்மாதேவி குருகுலமேயாகும்.

அக்குருகுல இரகசியத்தை வெளியாக்குவதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு தமிழ்நாட்டிலுள்ள பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும் எவ்வளவோ இடைஞ்சல்கள் செய்துக் கொண்டு வந்திருந்தாலும், தமிழ்நாட்டிலுள்ள பிராமணரல்லாதார் பத்திரிகைகளும், பிராமணரல்லாதார் தலைவர்களும் எவ்வளவோ உதவி செய்ததின் பலனாய் முடிவில் வெற்றி கிடைத்ததோடு தமிழ் நாட்டிற்கே ஓர் புதிய உணர்ச்சியையும் உண்டாக்கி வைத்து சேரன்மாதேவி குருகுலமும் கலைந்து போய்விட்டது என்பது உலகமே அறியும்.

அப்படியிருக்க, செத்த பாம்பை எடுத்து ஆட்டுவது போல் குருகுலத்தால் வயிறு வளர்த்த சில பிராமணர்கள், குறிப்பாய் சிறீமான் தி.ரா. மகாதேவய்யர் கொஞ்ச காலத்திற்கு முன்பு பத்திரிகைகளுக்கு ஒரு விளம்பரம் அனுப்பியிருக்கிறார். அதில் குருகுலம் ஒழுங்காய் நடந்து வருகிற பாவனையாகவும், தானே அதில் ஆச்சாரியாராய் இருக்கிறது போலும், சுயராஜ்யக் கட்சியாரின் தேசீயத் திட்டம் போல் கல்விக்கு ஏதோ பல திட்டங்கள் வைத்திருப்பதுபோலும் பாசாங்கு செய்து பிள்ளைகளை அனுப்பும்படி பெற்றோர்களைக் கேட்கிறார். பிராமணரல்லாத பெற்றோர்கள் இம்மோச விளம்பரத்தை நம்பி தங்கள் பிள்ளைகளை அனுப்பிக்கொடுத்து ஏமாந்து போகாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

குருகுலம் அங்கு நன்றாய் நடந்து கொண்டிருப்பதாய் சிறீமான் வ.வெ.ஸூ. ஐயர் சொல்லிக்கொண்ட காலத்திலேயே நாம் அங்கு போயிருந்த சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் நடத்தப்படும் முறையையும் பார்த்தோம். சிறீமான் மகாதேவய்யர் என்று சொல்லப்படுகிறவரும், அவர் குழந்தைகளும் கூனி முறை என்பதாகப் பேர் வைத்துக்கொண்டு தாங்கள் பழங்களும், தேங்காயும், வெல்லமும், கரும்பும், மாம்பழமும், முந்திரிப் பருப்பும், பேரீச்சம் பழமும், சாரப்பருப்பும் போன்றவைகளைச் சாப்பிட்டுக்கொண்டு ஆஸ்ரமத்தில் படிக்க வந்த மற்ற பிள்ளைகளுக்கு, பிள்ளை ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.13 வரையிலும் பெற்றுக்கொண்டு மாதம் ஒன்றுக்கு 4 ரூபாய் கூடப் பெறாத மாதிரியில் கஞ்சி சாதமும் அரிசிக் களியும், உப்பு கார மில்லாத அரிசி உப்புமாவும், புளியில்லாத குழம்பும் இம்மாதிரி பதார்த்தங்கள் ஜெயிலைவிட மோசமான கவலையற்ற நிலையில் பக்குவஞ் செய்து போட்டுக்கொண்டு இருந்ததை நாமும் நம்முடன் வந்த மற்றும் சில நண்பர்களும் நேரிலேயே பார்த்தோம்.

ஆதலால், சுயராஜ்யம் என்கிற பெயரினால் ஜனங்கள் ஏமாந்துபோய் அதற்குள்ளிருக்கும் தந்திரங்களை அறியாமல் சுயராஜ்யக் கட்சிக்குள் விழுவது போல் குருகுலம், ஆஸ்ரமம் என்கிற பெயர்களினால் பெற்றோர்கள் ஏமாந்துபோய் அதன் இரகசியத்தை அறியாமல் தங்கள் பிள்ளைகளை அனுப்பி பலி கொடுக்காதிருக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.

பொது ஜனங்களின் நன்மையை உத்தேசித்து மனதார அறிந்ததையும், நேரில் பார்த்ததையும்தான் இங்கு எழுதியிருக்கிறோமே தவிர மற்றபடி வேறு எந்தக் காரணத்தையும் உத்தேசித்தல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

---------------- தந்தைபெரியார் - குடிஅரசு-10.1.26

தந்தைபெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்



சிறீமான் த. வீரய்யன் கிராமப் பஞ்சாயத்து சட்டத்திற்கு திருத்தம்

( தீண்டாதார் வகுப்புப் பிரதிநிதியாய் சர்க்காரால் நியமிக்கப் பட்ட சட்டசபை மெம்பரான சிறீமான் த.வீரய்யன் அவர்கள் சென்னை கிராமப் பஞ்சாயத்து சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப் போவதாக சட்டசபைக்கு ஒரு முன்னறிக்கை அனுப்பி யிருக்கிறார். அதாவது, அச்சட்டத்தின் ஒரு பாகத்தில் கிராமப் பஞ்சாயத்து மெம்பர்கள் ஸ்தானத்திற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பாரிலிருந்து சில பிரதிநிதிகளை சர்க்கார் நியமிக்க வேண்டும் என்கிற வாக்கியத்தைச் சேர்த்துக் கொள்ளும்படி அதில் எழுதியிருக்கிறார்.அதற்கு அவர் காரணம் சொல்லுகையில் தேர்தல்கள் மூலமாக தீண்டாதார் என்போர்கள் ஸ்தானம் பெற முடியாமலிருக்கிறபடியால் முனிசிபாலிட்டி, ஜில்லா, தாலுகா போர்டுகள் போல் கிராமப் பஞ்சாயத்து சபைக்கும் தீண்டாதாருக்கும் சர்க்கார் நியமனம் கிடைத்தால் அல்லாமல் ஸ்தானம் பெற முடியாதாதலால் சட்டத்தில் இவ்வித திருத்தம் இருக்க வேண்டியது உடன் அவசியமாகிறது என்று எழுதுகிறார்.)

நமது குறிப்பு:-

இவற்றை நாம் முழு மனதுடன் ஆதரிக்கிறோம். புருஷன் பெண்ஜாதியாய் வாழுகின்றவர்களே புருஷன் சரியானபடி பெண் ஜாதியை ஆதரிக்காவிட்டால் சர்க்காருக்கு போவதையும், தகப்பன் பிள்ளை சர்க்காருக்கு போவதையும், அண்ணன் தம்பி சர்க்காருக்கு போவதையும் நாம் தினம் அநுபவத்தில் பார்க்கிறோம்.

அதற்காக வேண்டித்தான் , மனிதர்களுக்கு சர்க்கார் என்பது கடவுளால் அளிக்கப்பட்டிருக்கிறது. நமது துர்அதிர்ஷ்ட வசமாய் தற்காலம் நமக்கு இருக்கும் சர்க்கார் நமது நன்மைகளைவிட தங்கள் நன்மையே பிரதானமாகக் கருதுகிற ஒரு வியாபாரக் கூட்டத்தாராய் போய்விட்டபடியால், தொட்டதற்கெல்லாம் இம்மாதிரி சர்க்காரிடம் போகலாமா என்கிற ஒரு ஞானம் சிற்சில சமயங்களில் தோன்றுகிறது. ஆனாலும் மகாத்மாவே இனி கொஞ்ச காலத்திற்கு தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று அலுத்துப்போன பிறகு தற்கால நிலைமையில் ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும், பிற்பட்டவர்களுக்கும், பலக் குறையுள்ளவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சர்க்கார் தவிர வேறு கதி என்ன இருக்கிறது? சிறீமான் சீனிவாசய்யங்கார் போன்றவர்களுக்கு தற்சமயம் சர்க்கார் தயவு வேண்டியதில்லை. ஏனென்றால் கொஞ்ச நாளைக்கு முன்பாக சர்க்காருக்கு அநுகூலமாய் இருந்து, மகாத்மா காந்தியைக்கூட ஜெயிலுக்கு பிடிக்கும்படி யோசனை சொல்லி, சர்க்கார் தயவு பெற்று உயர் பதவியும், உத்தியோகமும், பணமும், ஆள்களும் நிறைய சம்பாதித்துக் கொண்டாய் விட்டது. தங்கள் பதவி குறையாமல் இருப்பதற்கு அநுகூலமாய், தீண்டாதார் முன்னேற்றமடைய கேழ்க்கும் வகுப்புவாரி உரிமையை எதிர்க்க சிறீமான் ஜயவேலு போன்றவர்களையும், கிறிஸ்தவர்கள் வகுப்பு வாரி உரிமைக் கேட்பதை எதிர்க்க சிறீமான் குழந்தை போன்றவர் களையும், மகமதியர் வகுப்புவாரி உரிமைகள் கேட்பதை எதிர்க்க ஜனாப்கள் ஷாபி மகமது, ஹமீத்கான் போன்றவர்களையும், பிராமணரல்லாத இந்துக்கள் வகுப்புவாரி உரிமைக் கேட்பதை எதிர்க்க சிறீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களையும் அடைந்திருப்பதால் அவருக்குக் கவலையில்லை. ஆனாலும், இந்நான்கு வகுப்பார்கள் தங்கள் தங்கள் வகுப்புக்கென்று கூட்டும் வகுப்பு மகாநாடுகளில் தங்கள் சுதந்திரங்களைக் காக்க சர்க்கார் தயவைத்தான் நாடுகிறார்கள்.

தீண்டாதார் வகுப்பு மகாநாட்டிலும், மகமதியர்கள் மகாநாட்டிலும், மற்றும் பிராமணரல்லாதார் மகாநாட்டிலும் உரிமை தனித் தேர்தல் மூலமானாலும், ஒதுக்கி வைப்பதன் மூலமானாலும் பெறவேண்டுமென்று கேட்பதெல்லாம் சர்க்காரிடம்தானே ஒழிய வேறு ஒருவரையுமல்ல. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும், வேண்டாம் என்பதும் அந்தந்த வகுப்பு மகாநாடுகளுக்குத்தான் பாத்தியப்பட்டதே தவிர, சிறீமான் சீனிவாசய்யங்காரால் சுவாதீனப்படுத்திக்கொண்ட தனிப்பட்ட ஒரு சிலர்களுக்கு அல்ல.

ஆதலால், சிறீமான் வீரய்யன் கேட்கும் உரிமை மிகவும் நியாயமானதென்றும், அதுதான் அவ்வகுப்பாரின் அபிப்ராயமே தவிர காங்கிரஸிலிருக்கும் சிறீமான் ஜயவேலு போன்றவர்கள் அபிப்ராயம் அவ்வகுப்பார் உடையது அல்லவென்றும், ஆதலால் சட்டசபையில் இருக்கும் பிராமணரல்லாதார் யாவரும் இதை ஆதரித்து அவ் வகுப்புக்குண்டான நியாயமான உரிமையை அளிக்க தாங்கள் தயாராயிருப்பதாகவும் தெரிவிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.

இம்மாதிரி நாம் ஒவ்வொரு வகுப்பாரின் உரிமைகளையும் அவர்களுக்கு அளித்து எல்லோரும் சமம் என்கிற தத்துவத்தை முதலில் நிலை நிறுத்தி விட்டோமானால், நமது சர்க்கார் கூட தமது வியாபாரத் தந்திரத்தை விட்டு விட்டு யோக்கியமாய் நடந்து கொண்டாலொழிய இந்தியாவில் வாழ முடியாது என்று நினைக்கும் படியான நிலைமையை ஏற்படுத்தி விடலாம்.

---------------- தந்தைபெரியார் - "குடிஅரசு"-10.1.26

இந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு ......




முதலாவது,

வருணாசிரம முறை ஒழிய வேண்டும்;

இரண்டாவது,

மதசம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும்;

மூன்றாவது

கோவில், குளம், சடங்கு, சாத்தான் ‘சனி விலக்கு' ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். பிறகு அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.

பொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கடைய வேண்டுமானால், அதன் அஸ்திவாரமான காரணங்களையெல்லாம் கவனிக்காமல், மக்களுடைய மதியீனத்தையும் பகுத்தறிவற்றத் தன்மையையும் ஆதரவாய் உபயோகித்துக் கொண்டு, வெளிநாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக் கட்டுவதாலும், கள்ளுக் கடைகளை மூடி விடுவதாலும், பொருளாதாரத் துறையை சரிப்படுத்திவிடலாம் என்று சொல்லுவது ஒரு நாளும் நாணயமானதும், அறிவுடைமையானதோ, காரியத்தில் பயன் கொடுக்கக் கூடியதோ என்பதாகச் சொல்லிவிட முடியாது.

--------------- ‘குடி அரசு' இதழில் 13.9.1931 அன்று தந்தைபெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்திலிருந்து

கணபதியின் பக்தர்களுக்கும் போதுமான பக்தி கிடையாது



பார்வதிக்கும் பரமசிவனுக்கும்

பார்வதி: எனது பிராணநாதனாகிய ஓ, சிவபெருமானே! ஆகாயத்தில் பறக்கின்ற கருடன் என்கின்ற பட்சியைப் பார்த்து பலர் காலையிலும் மாலையிலும் கன்னங்கன்னமாய்ப் போட்டுக் கொள்ளுகின்றார்களே; அது எதற்காக நாதா?



பரமசிவன்: கண்மணி! இது உனக்குத் தெரியாதா? கருடன் நமது அடிமையாகிய மாகாவிஷ்ணுவுக்கு வாகனமல்லவா? அதனால் விஷ்ணு பக்தர்களில் சிலர் கருடனைக் கண்டால் கன்னத்திலடித்துக் கொள்ளுகிறார்கள்.



பார்: ஓஹோ அப்படியா சங்கதி! சரி, அப்படியானால் நமது அடிமை வாகனத்திற்கு இவ்வளவு மதிப்பு இருக்கும்போது நம்முடைய வாகனமாகிய காளை மாட்டைக் கண்டால் ஏன் யாரும் கன்னத்திலடித்துக் கொள்வதில்லை? அன்றியும் வண்டியில் கட்டி ஓட்டுகிறார்கள்; ஓட ஓட அடிக்கிறார்கள்; செக்கில் கட்டி ஆட்டுகிறார்கள்; அடித்துக்கூட தின்று விடுகிறார்களே, அது ஏன்?



பரம: நம்முடைய பக்தர்களுக்கு அவ்வளவு பக்தி இல்லை; நன்றாக சாம்பலை பூசிக் கொள்ளத்தான் தெரியும். நமது வாகனத்தினிடத்தில் பக்தி காட்டத் தெரியாது.

பார்: அதுதான் போகட்டும்; நமது குமாரனாகிய கணபதியின் வாகனமாகிய பெருச்சாளியைக் கண்டால் ஏன் கன்னங் கன்னமாய் அடித்துக் கொள்ளாமல் தடி எடுத்து அடித்துக் கொன்று விடுகிறார்கள்? அய்யோ

பாவம்!



பரம: கணபதியின் பக்தர்களுக்கும் போதுமான பக்தி கிடையாது. ஏனென்றால், கணபதிக்கு அபிஷேகம் செய்வார்கள். அதற்கும் பால், நெய், தயிர் ஊற்றி கொழுக்கட்டையை வைப்பார்கள். உயிருடன் காணும்போது ஓடி ஓடி அடிப்பார்கள். நம் பக்தர்கள் யோக்யதையே இப்படித்தானே! இந்த வெட்கக் கேட்டை யாரிடம் சொல்லுவது!

பார்: அதுதான் போகட்டும்; தங்களுடைய மற்றொரு வாகனமாகிய நாயைக் கண்டால் ஒருவரும் கன்னத்தில் அடித்துக் கொள்ளாமல் எல்லோரும் சோடு! சோடு! என்று விரட்டுகின்றார்களே, அது என்ன காரணம் நாதா?

பரம: கண்மணி, அதுவும் பக்தர்களில் அறியாத்தனம்தான்; ஆனாலும், அது மலம் சாப்பிடுகின்றதல்லவா! அதனால் அதன்மீது சிலர் அசுசியப்படுகின்றார்கள்போல் இருக்கின்றது.

பார்: என்ன நாதா, வைரவக் கடவுள் வாகனம் மலம் சாப்பிட்டால், மகாவிஷ்ணுவின் வாகனம் அதிலுள்ள பூச்சி, புழு, நத்தை, நண்டு முதலிய அசுசியமான வஸ்துகளையெல்லாம் சாப்பிடுகிறதே; அதையெல்லாம் அந்த பக்தர்கள் மன்னிக்கும்போது, மலம் சாப்பிடுவதை மாத்திரம் ஏன் நமது பக்தர்கள் மன்னிக்கக் கூடாது? அதுதான் போகட்டும். நமது குமாரன் வாகனமாகிய மயிலைக் கண்டால் ஏன் முருக பக்தர்கள் கன்னங் கன்னமாய்ப் போட்டுக் கொள்வதில்லை? அன்றியும், ஆட்டைக் கண்டால் அடித்துத் தின்று விடுகிறார்களே! அவன் கொடியாகிய சேவலைக் கண்டால் அறுத்துத் தின்றுவிடுகிறார்கள்! இது என்ன அநியாயம்!

பரம: அது அந்த பக்தர்களின் பக்திக் குறைவு. அதற்கு நாம் என்ன செய்யலாம்?

பார்: நாதா! சரி சரி, இதையெல்லாம் பார்க்கும்போது தான் எனக்கு மிகவும் வெட்கக் கேடாயிருக்கின்றது. நமக்குக் கீழ்ப்பட்ட விஷ்ணுவின் வாகனத்திற்கு மாத்திரம் உலகத்தில் இவ்வளவு கவுரவமும் அவர் பக்தர்களுக்கு மாத்திரம் இவ்வளவு பக்தியும் இருப்பதும், நமது வாகனங்களுக்கு இவ்வளவு மரியாதைக் குறைவும் நமது பக்தர்களுக்கு இவ்வளவு பக்திக் குறைவும் இருப்பதும் எனக்கு வெளியில் தலை நீட்ட முடியவில்லையே; தவிர, விஷ்ணுவின் பெண் ஜாதியான மகாலட்சுமி கூட இதனாலேயே அடிக்கடி என்னைப் பார்த்து பரிகாசம் பண்ணுகின்றாள். தவிர, நம்முடைய பக்தர்களிலும் பலர் அறிவில்லாமல் நம்ம வாகனத்தை மரியாதை செய்யாமல் இப்பதோடல்லாமல் விஷ்ணு வாகனத்திற்கு விஷ்ணு பக்தர்களைப் போலவே கன்னங் கன்னமாய்ப் போட்டுக் கொண்டு மரியாதைசெய்கிறார்களே, இது என்ன மானக்கேடு! தாங்களே யோசித்துப் பாருங்கள். பரம: என்ன செய்யலாம் சகி? நம் தலையில் பிரம்மன் இப்படி அவமானப்படும்படியாக விதித்து விட்டான். விதியாரைவிட்டது, சொல் பார்ப்போம்! என் கண்மணி, நீ இதற்காக அழ வேண்டாம்; உன்னைப் பார்த்தால் எனக்கும் அழுகை வருகிறது.

பார்: சரி, சரி, இதற்காக நான் ஒருத்தி அழுவது போதாதாக்கும். இனி நீங்கள் வேறா அழுக வேண்டும்! போனால் போகட்டும். இம்மாதிரி நம் தலையில் எழுதிய அந்த பிரம்மாவை பேசிக் கொள்ளலாம். வாருங்கள் நம்ம வேலையைப் பார்க்க நாம் போவோம்.



------------ சித்திரபுத்திரன் என்னும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது, "குடிஅரசு" 17.6.1928

விநாயகன் பிறந்தான் அழுக்கில் -ஆபாசத்தில்!



விநாயகன்


தன்னை வணங்கியவர்க்கு விக்கினத்தை(குறைகளை) நீக்குபவன் விநாயகன்.

தன்னை வணங்காதவர்க்கு விக்கினத்தை உண்டாக்குபவன் விநாயகன். சொல்கிறது புராணம்.

வேண்டியவர்க்கு நன்மையும், விலகியவர்க்குத் தீமையும் விளைவிப்பவனாம் இவன். இந்தப் பூச்சாண்டிக் கடவுளின் பிறவி வரலாற்றில் இரண்டு கதைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.

பரமசிவனுடைய மனைவி பார்வதி, ஒரு சமயம் குளிக்கப் போனாள். அப்போது தனது உடம்பிலிருந்து திரட்டிய அழுக்கைக் குவித்து , உருவமாக்கிக் காவலுக்கு வைத்தாள். அழுக்கில் உயிர்பெற்ற அந்த உருவத்தைப் பார்த்து, "யார் வந்தாலும் உள்ளே விடாதே" என்று கட்டளையிட்டுக் குளிக்கப் போய்விட்டாள். அச்சமயம் அங்கே பரமசிவன் வந்தான். அழுக்கு உருவமோ, அவனை உள்ளேவிட மறுக்கவே கோபங்கொண்ட பரமசிவன், தடுத்தவனின் தலையை வெட்டித் தள்ளிவிட்டு உள்ளே போய்விட்டான்.

குளித்துக்கொண்டிருந்த பார்வதி தன்னிடம் வந்த பரம சிவனைப் பார்த்து,"எப்படி இங்கே வந்தீர்கள் ? காவலுக்கு இருந்தவன் எங்கே?" என்றாள்!

காவல் காத்தவனை வெட்டி, ஒழித்துக் கட்டிவிட்டதாகப் பரமசிவன் சொன்னான்.

அழுக்கால் ஆக்கப்பட்ட தனது மகன் சாகடிக்கப்பட்டதை அறிந்து, அழுது புரண்டாள் பார்வதி.

பரமசிவன் பார்வதிக்கு ஆறுதல் கூறி வெளியே வருகையில், யானை ஒன்று எதிரே வந்தது, அதன் தலையை வெட்டி, அழுக் குருண்டைப் பிள்ளையின் முண்டத்தில் ஒட்டி, உயிர் தந்தான் சிவபெருமான்.

இது பிள்ளையார் பிறப்புக் கதைகளில் ஒன்று.

(ஆதாரம்: கந்த புராணம் மற்றும் சிவபுராணம்)

இன்னொன்று:

நந்தவனத்தில் உலவிவந்த சிவ- பார்வதி தம்பதிகள், ஒட்டி யிருந்த படர்ந்த காட்டில் எதற்கோ நுழைந்தனர். அங்கே யானைகள் இரண்டின் கலவிக் காட்சியைக் கண்டனர். கட்டுமீறிப்போன ஆசையில் கட்டிப்புரண்டனர் இந்தக் கடவுள் தம்பதிகள்.

தேவாரத்தில் சம்பந்தர் "பிடியதன்" என்று துவங்கும் பாட்டில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுக் குலையாத மேனிகளில் அரும்பு கட்டியது வியர்வைத் துளிகள். கலவிக் கோலங்கொண்ட யானையைப் பார்த்தே மனைவிக்கு ஆலிங்கன ஆணைகளைப் பிறப்பித்தான் சிவன்.

எனவேதான், பிறந்த பிள்ளையார் யானை மூஞ்சியாய்ப் பிறந்து மூஞ்சூறு சவாரியில் காலந்தள்ளினான். விநாயகப் பக்தர்களை வினவு கிறோம். பேதமைக்குச் சுழியடிக்கும் பிள்ளையார் சுழி ரசிகர்கள்,முகஞ்சுழியால், அகம் சலியாமல் பதிலைத் தரட்டும் பகுத்தறிவாளர்களுக்கு.

1) வேண்டியவர்க்கு நன்மையும்- இக்கொள்கையைத் தாண்டிய

வர்க்குத் தீமையும் புரிபவன் தான் கடவுளா? 'அன்பே சிவன்'

என்று வர்ணிக்கப்படும் உலக நாயகனின் உத்தமப்புத்திரன் இப்படி இருக்கலாமா?

2) குளிக்கப் போகிறாள் பார்வதி. குலவப் போகிறான் பரமசிவன்; தடுத்து நிறுத்துகிறான் 'திடீர்'ப்பிள்ளை; தலையைக்கொய்கிறான் தகப்பனாக வேண்டியவன்.

3) அழுக்கில்- அதுவும் சதை இன்பத்தில் புதையத் துடிக்கும் கடவுள் கதைகள் மக்களைப் பண்படுத்துமா?

இப்படியே கேள்விகளைப் பாய்ச்சி, தோல்விகளைச் சுமத்தி, பக்தர்களின் முகங்களில் விளக்கெண்ணெய் வடிக்க நமக்கு ஆசை இல்லை. இவ்வளவு, ஆபாசத்தைக் கும்பிடக் கோயிலுக்குச் சென்று நாம் "தாசிப்புத்திரர்" ஆகலாமா? பக்தர்களே சிந்தியுங்கள்!

உள்ளதற்குத்தான் ஒரு வரலாறு ; இல்லாததற்குக் கணக்கற்ற கதைகள். முக்கண்ணனின் முதல் மைந்தனுக்கு இன்னொரு பிறவிக் கதையும் உண்டு.

அது - இது:

கசமுக அசுரன் என்பவன் இறவா வரம் பெற்றவன். தேவர் களை வம்புக்கிழுத்து விளையாடுவதே இவனின் பொழுதுபோக்கு.

தன்னைச் சாகடிக்க யாருமில்லை என்ற தைரியம் வேறு இந்த அசுரனுக்கு! "நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்" என்று கண்ணாமூச்சி காட்டினான் தேவர்களிடம். வெறுப்பும், கொதிப்பும் கொண்ட தேவர் குலம், திணறித் திண்டாடிச் சிவனை அடைக்கலம் கொண்டது.

தம்பதி சமதராகத் தோட்டம் ஒன்றில் ஆட்டம் போட்டுக்கிடந்த உலகநாயகனும் நாயகியும், தற்காலிகமாகத் தங்கள் செயல்களை ஒத்தி வைத்து, வதைபடும் தேவர் இனத்தைப் பரிசீலித்தனர். அப்போது அவர்கள் கண்களில் - கலவி புரியும் யானைகளின் காட்சி தென்பட்டது.

அவ்வளவுதான்!

சிவனும் பார்வதியும் சும்மா இருப்பார்களா? உடனே யானையாக உருமாறி விட்டனர்!

பிறகென்ன! இரும்பும் காந்தமும்தான்!!

இதன் விளைவு-பிறந்தார் பிள்ளையார்.

பிறந்தவர் யானை முகமும், மனித உடலுமாக இருந்தார்.

(ஆதாரம்: வலிவலம் கோவில் சிவனைப் பற்றி திருஞானசம்பந்தர் "பிடியதன் உருவுமை" என்று தொடங்கிப் பாடிய தேவாரப் பாடல்)


சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பாடிய அந்தப் பாடல் வருமாறு;

"வடிகொடு தனதடி வழிபடுமவரிடர்

கடிகண பதிவர வருளினன் மிகுகொடை"

- என்பதாகும்.

தோப்புக்கரணம் போட இடுப்பில் துண்டைக்கட்டி கைகளை மாறுகை போட்டு காதுகளைப் பற்றியழும் பக்திப் பழங்களுக்குச் சில கேள்விகள்:

1) ஒரு கடவுளின் பிறவிக்கு மூன்று கதைகளா? அதுவும் இப்படி "கொக்கோக" விளக்கங்களாகவா இருப்பது?

2) "செங்கருமங் கைகூடும்" என்று பக்தர் கூட்டத்தால் புகழ்ந்து போற்றப்படும் தெய்வத்திற்கு ஜீனியர்களாக இருக்கும் தேவர்கள் அசுரனுக்குப் பயந்து ஓடுவது எந்த வகையில் ஏற்புடையது?

3) உலகத்தை ரட்சித்து, அருள்பாலிக்கும் கடவுள் தம்பதிகள் , மிருக இச்சை கொண்டது மாத்திரமல்லாமல் மிருகமாய் மாறியும் இணைந்து நனைந்த இழிவுக்கதை பக்தியைப் பரப்புமா? பக்தனைப் படுக்கை அறைக்கு விரட்டுமா?

4) இந்தக் கடவுளைப் பூஜிக்கும் சமஸ்கிருத , மந்திரங்களில் யானைத்தலையன், கொழுக்கட்டைக் கையன், முறக்காதுப் பையன், சப்பாணி இடூப்பன் , சால்வயிற்றுக் கடவுள். கருத்துப் போன உடலான், ஒத்தைப்பல்லன் என்றெல்லாம் பூஜிக்கிறார்கள். இது பரவசத்திற்குரியதா? பரிகாசத்திற்குரியதா?

5) தாயைப் போல அழகி வேண்டும் என்று அலைந்து , அலுத்த தனதுபிள்ளையைஆற்றங்கரையில் குந்தி 'சுயம்வரம்' நடத்த பார்வதி அனுமதித்ததால்தான், அரசமர நிழலில்-குளக்கரையில் பிரம்மச்சாரியாய் கிடக்கிறான் விநாயகன்.

இவனைப் போய்க் கும்பிடப்போகும் பக்தசிகாமணிகள், பார்வதிபோல் தங்களது மனைவியின் தோற்றம் இருந்துவிட்டால் எவ்வளவு அபாயம்? விநாயகக் கடவுள் வேண்டுகோளைப் புறக்கணித்தால் வாழ்வில் விக்னம் ஏற்பட்டுவிடாதா? அதற்காக மானத்தை மறந்து, இயற்கை ஆக எந்தப் பக்தராவது இந்தக் காலத்தில் தயாராக முடியுமா?
பக்தர்களே

சிந்தியுங்கள் !

------------- நூல்: சாமி அவர்கள் எழுதிய "கடவுளர் கதைகள்" பக்கம் 3-7

28.8.08

பக்தர்களே பார்ப்பனச் சூழ்ச்சியில் அவதரித்த இந்தப் பிள்ளையாரை கும்பிடப் போகிறீர்களா?



விநாயக சதுர்த்தியாம்!

பிறப்பு - இறப்பு இல்லாதவன் கடவுள் என்று சொல்லுவார்கள். இந்து மதத்திலோ கடவுளுக்குப் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு.


கடவுளுக்குப் பிறப்பை வைத்தால், அதற்கென்று ஒரு நாளை ஒதுக்கி, புரோகிதச் சுரண்டலுக்கு விரிவான ஏற்பாட்டைச் செய்துகொள்ளலாம் அல்லவா!

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கன்னி ராசியில் விருச்சிகம் லக்னத்தில் சதுர்த்தி திதியில் அவதரித்தாராம் விநாயகர். எப்படி அவதரித்தாராம்?

பார்வதி தேவியார் குளிக்கச் சென்றபோது, தன் உடலில் தேங்கிக் கிடந்த அழுக்கையெல்லாம் திரட்டி, அதை ஒரு உருவமாக்கி, காவலுக்கு வைத்தாராம். அப்பொழுது அங்கு வந்த சிவனை அந்த அழுக் குருண்டை தடுத்ததாம்; சிவனைத் தடுப்பது என்பது சாதாரணமா? சினம் கொண்ட சிவன் சூலாயுதத்தினால் அந்த அழுக்குருண்டையின் தலையைக் கொய்தானாம். முண்டமான தன் பாலகனைப் பார்த்து பார்வதி தேவியார் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறினாளாம்.

வடக்கே தலை வைத்துப் படுத்துக் கிடந்த ஒரு யானையின் தலையை வெட்டிக் கொண்டு வந்தனராம் கணநாதர்கள்.

சிவன் என்ன செய்தான்? அறுவை சிகிச்சை நிபுணர்போல அந்த முண்டத்தின் உடலோடு யானைத் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து கணங்களுக்குத் தலைவன் ஆக்கினானாம்.

பார்வதி உடலின் அழுக்கு என்று சொன்னால், அருவருப்பாக இருக்கிறது என்றவுடன், பார்ப்பனர்கள் என்ன வியாக்கியானம் சொன்னார்கள் தெரியுமா? பார்வதி தன் உடலில் உள்ள சக்தியையெல்லாம் திரட்டி ஒரு உருவமாக்கினாள் என்று கதை கூற ஆரம்பித்துவிட்டனர். காரணம், எல்லாம் தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத்திற்கும் பயந்துதான்.

இந்தப் பிள்ளையார் பிறப்புக்கு ஒரு கதையல்ல, இரு கதையல்ல, பல கதைகள் உண்டு.
கதைக்குத்தான் கண் இல்லை என்று வசதியாகச் சொல்லி வைத்துவிட்டார்களே!

பகவான் விநாயகரைக் கும்பிட்டுச் சென்றால், எல்லாக் காரியமும் ஜெயம்தானாம். விக்னம் இல்லாமல் காப்பாற்றுவாராம் - அதனால்தான் அந்த அழுக்குருண்டைக்கு விக்னேஸ்வரன் என்று பெயராம்.

இந்த விநாயகன் பிரம்மச்சாரி என்று ஒரு கதை. சித்தி, புத்தி என்று இரு மனைவிமார்கள் உண்டு என்று இன்னொரு கதை. உண்மை யிலே இப்படி ஒரு கடவுள் இருந்தது என்றால், ஏனிப்படி முரண்பாடான கதைகள் - மாறுபாடான கதைகளைச் சொல்கின்றன புராணங்கள்?

கடவுள் விஷயம் என்பதால் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற துணிவில் உளறி வைத்துவிட்டனர்.

தனக்கு அம்மாவைப்போல அழகான மனைவிவேண்டும் என்று உலகிலேயே கேட்ட கயவாளி இந்த விநாயகனாகத்தான் இருப்பான்.

விநாயகர் என்று பெயர் இந்தப் பிள்ளையாருக்கு வந்ததற்கெல்லாம் ஒரு சதி - பின்னணியில் இருக்கிறது.

புத்தருக்கு விநாயகர் என்றும், சாஸ்தா என்றும் பெயருண்டு. பிற்காலத்தில் புத்தர் கோயில்களை இந்துமதவாதிகள் தங்கள் கோயில்களாக உருமாற்றி விட்டனர். புத்தருக்கு இருந்த விநாயகர் என்ற பெயரை இந்தப் பிள்ளையாருக்குச் சூட்டி, புத்த விகாரங்களை மோசடி செய்துவிட்டனர். இந்துக் கோயில்களாக்கிவிட்டனர். அது போலவே, புத்தருக்கு சாஸ்தா என்ற பெயருண்டு, பிற்காலத்தில் அய்யப்பனுக்கு சாஸ்தா என்ற பெயர் சூட்டி புத்த விகாரங்களை அய்யனார் - அய்யப்பன் என்ற கோயில்களாக உருமாற்றம் செய்தனர்.

இதுபற்றி ஆய்வாளர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட பவுத்தமும் - தமிழும் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இந்து மதம் பவுத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், அந்த மதத்தை உண்டாக்கின புத்தரை ஒரு தெய்வமாக ஏற்றுக்கொண்டது. அஃதாவது, புத்தர் திருமாலின் அவதாரங்களில் ஒருவரென்று ஒப்புக் கொண்டு விட்டது. ஏன் ஒப்புக்கொண்டது? புத்தரின் உருவ வழிபாடு அக்காலத்து மக்களிடையே வேரூன்றியிருந்தபடியால், பவுத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்து மதத்திற்கு ஏற்பட்டதுபோலும்!

இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டதுபோலவே, மற்றொரு பிரிவாகிய சைவ சமயமும், புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டது. சாஸ்தா, அல்லது அய்யனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டு, பின்னர் முருகர் அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது. புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர்கள் உள்ளன. இப்பெயர்களை நிகண்டுகளிலும் காணலாம். தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பவுத்தக் கோயில்களைப் பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்சபாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றி விட்டனர். அதுபோலவே, விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநாயகர் (பிள்ளை யார்) கோயிலாகவும் மாற்றி விட்டார்கள். துடித லோகத்தில் எழுந்தருளியிருந்த அவலோகிதர் எனப்படும் போதிசத்துவர், புத்தராக மாயா தேவியின் திருவயிற்றில் வந்து அமர்ந்தபோது, வெள்ளையானைக் கன்று உருவமாக வந்தார் என்று பவுத்த நூல்கள் கூறுகின்றன. பவுத்த மதம் செல்வாக்குக் குறைந்த பிற்காலத்தில், விநாயகர் என்னும் பெயரு டைய புத்தக் கோயில்கள் விநாயகர் (பிள்ளையார்) ஆலயங்களாக மாற்றப்பட்டன. பழைய சைவ மதத்தில் விநாயகர் வணக்கம் கிடையாதென்றும், கி.பி. 6 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவ சமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதென்றும் சைவப் பெரியார் உயர்திரு மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் கூறுவதும் ஈண்டு கருதத்தக்கது. (“பவுத்தமும் - தமிழும்”, பக்கம் 77)


பக்தர்களே பார்ப்பனச் சூழ்ச்சியில் அவதரித்த இந்தப் பிள்ளையாரை கும்பிடப் போகிறீர்களா? இங்கு பக்தி என்பது பார்ப்பனர் நலம் என்பதைப் புரிந்துகொள்வீர்!



-----------நன்றி: "விடுதலை" 28-8-08

பண்டிகைகள்




“பண்டிகைகளுக்குச் செலவாகும் பணத்தைக் கொண்டு சுமார் 100 அல்லது 150 தொழிற்சாலைகளை உற்பத்தி செய்து பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நிரந்தரமாய்த் தொழில் கொடுக்கலாம்.”

---------------- தந்தைபெரியார் - “விடுதலை”, 16.12.1967

விநாயகனுக்கு திருமணம் ஆகிவிட்டதா?



விநாயக சதுர்த்தியாம்...

விநாயகன் பிறந்த அசிங்கம் ஒரு பக்கம் இருக்க - அவன் திருமணம் ஆகாதவன், அவனுக்கு எருக்கம் பூமாலையும், எலுமிச்சம் பழமும் என்றெல்லாம் கதை கட்டிப் பிரச்சாரம் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்.

சிவமகாபுராணம் சொல்வது என்ன? பிள்ளையாருக்கும், அதன் தம்பி முருகனுக்கும் திருமணம் நடத்துவதுபற்றி அதுகளின் பெற்றோர்களான சிவனும் பார்வதியும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது, அன்புச் சகோதரர்கள் இருவரும் அங்கே இருந்தனராம். எனக்கு முதலில் - எனக்கு முதலில் என இரண்டுமே குதித்தனவாம். அண்ணாதுரை (விநாயகன்) குதித்ததாவது சரி - தம்பிதுரை (முருகன்) எப்படிக் குதிக்கலாம்?

குதித்ததுகள் இரண்டும் - கடவுள் சகோதரர்கள் ஆயிற்றே! ஆகவே போட்டி வைத்தார்களாம். எது உலகைச் சுற்றிவிட்டு முதலில் திரும்பி வருகிறதோ அதற்கே முதலில் கல்யாணம் எனச் சொல்லி விட்டார்கள். முருகன் மயில்மீது ஏறிக் கொண்டு உலகைச் சுற்றப் போய் விட்டான். விநாயகன் அப்பாவையும் அம்மாவையும் ஒன்றாக நிற்க வைத்து ஏழு முறை சுற்றி வந்து, உலகத்தைச் சுற்றியதற்குச் சமம் எனக் கூறியதாம். அவர்களும் ஏற்றுக் கொண்டு அதற்குத் திருமணம் செய்து வைத்தார்களாம்.

விசுவரூபனின் இரண்டு மகள்களான சித்தி, புத்தி என்ற இருவரையும் கல்யாணம் கட்டிக் கொண்டதாம் கணபதி. உலகைச் சுற்றி விட்டு வேர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்த முருகன், விநாயகன் திருமணத்தைத் தெரிந்து கொண்டதும் கோபித்துக் கொண்டு மலைக்குப் போய்விட்டான் என்கிறது சிவமகாபுராணம்.

திருமணம் ஆனவன் என்றும் இல்லை என்றும் இருவிதக் கதைகள் - பித்தலாட்டக்காரர்களின் கைவேலை.

இன்னொன்று, சகோதரர்களுக்குள் போட்டியே ஒரு மாம்பழத்தைப் பங்கு போடுவது பற்றித்தான் என்று ஒரு புருடா விட்டிருக்கிறார்களே!

எதை ஏற்பது?
எல்லாமே பித்தலாட்டமாகவே இருக்கிறதே இந்து மதத்தில்!


------------------நன்றி: "விடுதலை" 27-8-2008

கொள்ளியை எடுத்து..




"எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்."

--------------------தந்தைபெரியார் - "குடிஅரசு", 18.5.1930

27.8.08

ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி ...........



இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை "எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது" என்பதுபோல், எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும், அத்தனை கடவுள்களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை பாட்டு - முதலியவை ஏற்படுத்தி இருப்பவை, அவற்றுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாகிக் கொண்டு வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமல்ல.

இக் கடவுள்களில் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனை கணபதி என்றும், விநாயகன் என்றும், விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு. நிற்க; இந்த பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக இப்போது அமலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக் கொள்ளக் கூடியதும், அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப் பற்றிச் சற்று கவனிப்போம். ஏனெனில், முதல் கடவுள் என்று சொல்லப்படுவதன் சங்கதி இன்ன மாதிரி என்பதாகத் தெரிந்தால், மற்ற கடவுள்கள் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாகயிருக்கலாம். அன்றியும், எந்தக் காரியம் ஆரம்பித்தாலும் முதலில் பிள்ளையார் காரியத்தைக் கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால், நாமும் கடவுள்களின் கதைகளைப்பற்றி விளக்கப் போவதில் முதல் கடவுளைப் பற்றி ஆரம்பிக்க வேண்டியதும் முறையாகுமன்றோ! இல்லாவிட்டால் "அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு, எடுத்த இக் காரியத்திற்கு லிக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக் கூடும்"



1. ஒரு நாள் சிவனின் பெண்சாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து - "நான் குளித்து விட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே!" என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில்காக்கும் பிள்ளையார் அந்த பரமசிவனைப் பார்த்து "பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது" என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, "காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்?" என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், "காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்" என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்ட வைத்து உயிர்கொடுக்கலாம் எனக் கருதி வெட்டுண்ட தலை காணாமல் போனதால், அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக் கதைக்கு சிவபுராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்களும் இருக்கின்றனவாம்.



2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.



3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக் கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம். 4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டி விட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பினதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்கயாகப் பரணி என்னும் புஸ்தகத்தில் இருக்கின்றதாம்.


எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும். கடவுள் கூட்டத்தில்முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பலவிதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லா விதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மற்றக் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவற்றைப் பார்க்கும்போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ளமுடியும்? ஆகவே, இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கின்றது கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் "கடவுள் ஒருவர்தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்.; தானாயுண்டானவர்" என்று சொல்லுவதும், மற்றும் "அது ஒரு சக்தி" என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு பிறகு இம்மாதிரி கடவுள்களைக் கோடிகோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம். சிதம்பரக் கோயிலில் யானை முகங்கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன், இந்தக் காட்சிக்குத் தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண் - பெண் பக்தர்கள் அதைத் தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள். சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பதுபோலவும் செதுக்கப்பட்டிருக்கின்றது. இவற்றைப் பார்த்த யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவற்றுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களையெல்லாம் அந்தக் கடவுள் கொன்றுகொண்டே வந்ததும், தன்னால் துடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரியின் பெண் குறியிலிருந்து, ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவதுபோல பல லட்சக்கணக்காய் வந்துகொண்டே இருந்ததாகவும், இதையறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரானவர், ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல் தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள் விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே, இம்மாதிரியான காட்டுமிராண்டித்தன்மையான ஆபாசங்களுக்கு, கண்டவை யெல்லாம் கடவுள் என்று சொல்லும் "ஆஸ்திகர்கள்" என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம். "எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்" என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப் படவில்லையா? அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா? இதை "எவனோ ஒருவன் செய்து விட்டான்" என்று சொல்வதானால், இவற்றுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்கவில்லையா? என்பது போன்றவற்றைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள் "அப்படி இருக்க வேண்டும்", "இப்படி இருக்க வேண்டும்" என்றும், "மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து; கடவுள்களுக்கு ஆபத்து" என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்றவாவென்று அவற்றிடம் "வக்காலத்து" பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா? என்றும் கேட்கின்றோம். இவற்றையெல்லாம்பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் குறைவில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாசங்களையெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ் வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு, இதை எடுத்துச் சொல்பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவுளையும் எந்த சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்றே சொல்லுவோம்.



------------------- சித்திரபுத்திரன் என்னும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது "குடிஅரசு" 26.8.1928.

இந்தியாவில் முதல் பாலம் எப்பொழுது கட்டப்பட்டது?





ஆரம்பத்தில் சேது திட்டத்திற்குப் பணம் இல்லை என்று தள்ளி போட்டார்கள்

ஆரம்பத்தில் சேது சமுத்திரத் திட்டத்திற்குப் பணம் இல்லை என்று சொல்லி திட்டத்தை தள்ளித் தள்ளிப் போட்டார்கள். பணம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு மனம் இல்லை. ஆனால் இங்கே கலைஞர் என்ன செய்தார்? இந்த 2450 கோடி ரூபாய் சாதாரண விசயமல்ல. இதை கலைஞர் அவர்கள் வாங்கிவிட்டார். இதே மதுரையில்தான் சேது சமுத்திரத் தொடக்கவிழா சிறப்பாக நடந்தது.

இந்தத் திட்டத்தைத் தடுக்க ஒரே ஒரு வழி ராமன்தான்

வேலைகள் வேகமாக நடந்து முடியப் போகிறது என்ற நிலைக்கு வந்தவுடனே திடீர் என்று அப்பொழுதுதான் அதற்கு ஒரு தடையைக் கிளப்ப வேண்டும் என்று வேறு எதுபற்றி சொன்னாலும் சரியாக வராது. ஏனென்றால் கொடுத்த ரிப்போர்ட் அனைத்தும் நிபுணர்கள் கொடுத்தது. அதற்கு ஒரே ஒரு வழி ராமன்தான். இப்பொழுது கைகொடுப்பான் என்று நினைத்து ஹரேராம், ஹேராம் - ரகுபதி ராகவ ராஜாராம் பதீத்த பாவன சீத்தாராம் என்று ஆரம்பித்து ராமன் பாலத்தை இடிக்காதே என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள்.

உடைத்தால் இந்துக்களின் மனம் புண்படுமாம்!

இது இராமன் கட்டிய பாலம். இதை உடைக்கக் கூடாது. இதை உடைத்தால் இந்துக்களின் மனம் புண்பட்டுப் போய்விடும் என்று நினைத்தார்கள். அப்படி சொல்லுகிறவர்கள் யாராவது ராமர் காலத்து வாழ்க்கை வாழ்ந்தால் அது நியாயம். இன்றைக்கு வாஜ்பேயிக்கும், அத்வானிக்கும் ஏ.கே. 47 துப்பாக்கிதான் பாது காப்பு (கைதட்டல்). ராமர் காலத்து அம்பையோ - வில்லையோ யாரும் வைத்திருக்கவில்லை.

அந்தப் பாணத்தைப்பற்றி சொன்னால் - யாராவது நம்புவார்களா?


இது சாதாரண அம்பல்ல. ராமர் பாணத்தை விட்டால் அது எங்கே போய் நிற்கும் என்றால், ஏழு மராமரங்களையம் துளைத்து அதற்கு அப்பாலும் சென்று, அப்புறம் எல்லோ ருடைய உடலையும் துளைத்து இரத்தக் கறை எல்லாம் படிந்து அதைப் போக்க அந்த அம்பு நதியில் குளித்து, பிறகு அந்த அம்பு அம்பறாத் தூணிக்குள் போய்விட்டது என்று சொல்லுகின்றான்.

அவ்வளவு சக்திபெற்ற பாணத்தைப் பற்றிச் சொன்னால் இன்றைக்கு யாராவது நம்புவார்களா? வேல், அம்பு இதெல்லாம் காட்சிக்குத்தான் இன்றைக்கு இருக்கிறது. இதை யாரும் தூக்குவதில்லை.

ஏ.கே. 47-அய்த்தான் நம்புகிறார்கள்

ஏ.கே. 47-னைத்தான் நம்புகிறார்கள். இன்றைக்கு இராணுவ வீரர்களுக்கு எதைக் கொடுத்திருக்கின்றோம்? ஆகவே எப் பொழுது இராமன் இருந்தார்? எப்பொழுது பாலம் கட்டினார்? என்று கேட்டால் - இல்லீங்க அது எங்களுடைய நம்பிக்கை.

பதினேழரை லட்சத்திற்கு முன்னாலே இராமன் பாலம் கட்டினான் என்று சொல்லுகின்றார்கள். அதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? நண்பர்களே, இந்தப் புத்தகத்தில் ஒரு செய்தியை எடுத்துப் போட்டிருக்கின்றோம். நீங்கள் இதைப் படிக்கவேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியின் ஆய்வுத் தகவல்

உங்களுக்குத் தெரியும். பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமாக உயர்த்தப்பட்டது, மிகச் சிறப்பாக வளர்ந்துகொண்டு வருகின்றது. பெரிய சிவில் எஞ்சினியரிங் பேராசிரியர்கள் இவர்களை எல்லாம் அழைத்து நான் ஒரு செய்தியைக் கேட்டேன்.

உலகப் புத்தகங்களில் இருந்து ஆய்வு செய்து எனக்குக் கொடுங்கள் என்று கேட்டேன். அந்தச் செய்தி என்னவென்றால் உலகத்திலேயே முதன் முதலில் பாலம் எப்பொழுது கட்டினான்?

உலகில் முதல் பாலமே கி.மு.2650 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது

மனிதர் தோன்றிய பின்னர் உலகத்தில் முதல் பாலம் எப்பொழுது கட்டப்பட்டது என்று சொன்னால் ஆவணப்படி கி.மு. 2650 எகிப்து நாட்டில் நைல் நதிக்குக் குறுக்கே கட்டப்பட்ட வளைவுப் பாலம், மெனிஸ் மன்னரால் கட்டப்பட்ட பாலம். கி.மு. 2650 +பிளஸ் இன்றைக்கு கி.பி. 2008 இவைகளை சேர்த்தால் 4658 வருடங்கள்தான் ஆகியிருக்கும் உலகில் முதல் பாலம் கட்டவே.

ஆசியாவிலேயே முதல் பாலம் கட்டப்பட்டது எப்பொழுது?

ஆசியாவிலேயே எப்பொழுது முதல் பாலம் கட்டினார்கள் என்றால், கி.பி. 600. அப்படியானால் 2000-லிருந்து 600 வரை கழித்துக் கொள்ளவேண்டும். அதாவது 1400 ஆண்டுகள் எங்கே? கி.பி. 600 ஆம் ஆண்டில் ஆசியாவில் பீஜிங்குக்குத் தெற்கே கற்களால் கட்டப்பட்ட சாவ் - சோ - பாலம் (சீனா). (நீளம் 37 மீட்டர், உயரம் 72 மீட்டர், சாலை அகலம் 9 மீட்டர்).

இந்தியாவில் முதல் பாலம் எப்பொழுது கட்டப்பட்டது?

சரி, இந்தியாவில் முதலில் எப்பொழுது பாலம் கட்டினார்கள்? கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் அய்தராபாத்தில் முசி. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புராணா புல் பாலம்தான் மிகப் பழமையான இந்தியப் பாலம். இப்பொழுது நாம் 21-ஆம் நூற் றாண்டில் இருக்கின்றோம். அதாவது அய்ந்து நூற்றாண்டு களுக்கு முன்னாலே கட்டப்பட்ட பாலம் இது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள்

இவ்வளவு ஆதாரங்கள் இருக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் சிலர் நீதிபதிகளாக உட்கார்ந்து கொண்டு எங்களை மாதிரி அறிவாளிகள் யாரும் இருக்கமாட்டார்கள். நாங்கள் யாரைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவோம், எதைப்பற்றி வேண்டு மானாலும் பேசுவோம் என்று சொல்லுகின்ற இந்த மேதைகள் இருக்கிறார்களே நீதிபதிகள். அந்த நீதிபதிகள் விஞ் ஞானத்தைப்பற்றிக் கவலைப்படாமல் மனம் புண்படாமல் - இராமன் பாலத்தை உடைக்காமல் காரியம் பாருங்கள் என்று சொன்னால், எப்படி இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது?

இராமன் காலத்தில் இருந்ததெல்லாம் இன்று இருக்கிறதா?

ராமன் காலத்தில் இருந்ததெல்லாம் இன்றைக்குப் பாது காப்பாக வைத்திருக்கின்றார்கள்? அயோத்தியிலேயே ராமர் கால அயோத்தி இருக்கிறதா? முதலில் ராமன் பிறந்தான் என்று சொல்லப்படுகின்ற அயோத்தியே கேள்விக் குறியாக இருக்கிறதே. அதனாலே எதையும் அறிவுப் பூர்வமாக சிந்தித்தால் சரியான முறையில் விடை கிடைக்கும். புராதனச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டுமாம், என்ன அது புராதனச் சின்னம்? எப்படி கடலில் அந்தப் பாலத்தைக் கட்ட முடியும்? சரி, கடலில் பாலம் கட்டினால் அனுமார் ஏன் நிலப் பகுதியை (சஞ்சீவி மலை) தாங்கிப் பிடித்துக் கொண்டு சென்றது? என்ன அது? அனுமார் வந்திருந்ததால் பாலத்தில் அல்லவா நடந்து வந்திருக்கவேண்டும்! அதுதானே மிக முக்கியம். இவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லையே.

நாரிமனிடம் கம்ப இராமாயணப் பாட்டை விளக்கி

நாங்கள்தான் கவலைப்பட்டோம், சரி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்ன கேட்கிறார்கள் என்பதற்ககாக கம்ப ராமாய ணத்தில் உள்ள பாட்டை எடுத்துச் சொன்னோம். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் நாரிமன் அவர்களிடம் அந்தப் பாட்டைப்பற்றியே விளக்கிச் சொல்லப்பட்டது. இந்த கம்பர்களைக் கொண்டு போய்விட்டால் அந்த வம்பர்களுக்கு பதில் சொல்லக் கூடியதாக இருக்கும். இராவணன் சீதையைக் கொண்டு வந்து விட்டார். இராமர் பார்த்தார் - அந்த பாலத்தையே அம்பினால் குத்தி இடித்து உடைத்துவிட்டு வந்து விட்டாராம். ஏனென்றால் திரும்பி இராவணன் வந்துவிடக் கூடாது பாருங்கள். (சிரிப்பு - கைதட்டல்) அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதனாலே ரொம்ப முன் யோசனை யோட உடைத்துவிட்டாராம் - ராமர் அந்த பாலத்தை. இந்தப் பாட்டை எடுத்துக் காட்டி வக்கீல் எடுத்துச் சொல்லுகிறார்.

நீ ஒன்று சொன்னால் அவர்கள் ஒன்று சொல்லுகின்றார்கள்

பி.ஜே.பி.காரர் எதிர்த்து வாதம் புரிகிறார். அது இடைச் செருகல் என்று சொல்லுகின்றார். இதிலே இல்லீங்க, அதிலே இல்லீங்க என்று சொல்லுகின்றார். நீதிபதி சொன்னார். இடைச் செருகல் போன்ற இவைகளை எல்லாம் பார்ப்பதா எங்களுடைய வேலை? நீ ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று சொல்லுகின் றார்கள் என்று சொன்னார். இப்படி நடந்தது விவாதம். இதையெல்லாம் விட்டு, விட்டு 2450 கோடி ரூபாய் நம்முடைய வரிப்பணம். நீங்களும், நானும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொடுக்கின்ற வரிப் பணத்தை நமது கலைஞர் கஷ்டப்பட்டு, தி.மு.க. அமைச்சர் டி.ஆர். பாலு ரொம்ப சிரமப்பட்டு, வேகப் படுத்தினார்.

தென் மாவட்ட மக்களுக்கு வளம் கொழிக்கும் திட்டம்

தென் மாவட்டங்களில் வேலையில்லாத் திண்டாட்டம், நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அதற்கு ஒரு விசாரணைக் குழுவே போட்டார்கள். இந்தப் பகுதியில் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள். அதனால் வெடிகுண்டு செய்யலாமா? என்று பார்க்கின்றார்கள்.

அதனால் அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், தொழிற்சாலை வரவேண்டும், நல்ல வேலை வாய்ப்பை உண் டாக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்தார். தொழிற் சாலைகளை உருவாக்கவேண்டும், இளைஞர்களுக்கு, தென் மாவட்ட மக்களுக்கு ஒருய அற்புதமான திட்டத்தைப் போட்டு செயல்படுத்திய திட்டம் தான் சேது சமுத்திரத் திட்டமாகும்.

தொழிற்சாலைகளை உருவாக்கவேண்டும், இளைஞர்களுக்கு, தென் மாவட்ட மக்களுக்கு ஒரு அற்புதமான திட்டத்தைப் போட்டு செயல்படுத்திய திட்டம்தான் சேது சமுத்திரத் திட்டமாகும்.

இராமனைக் காட்டி முட்டுக்கட்டை

தமிழகம் வளம் பெறுவதற்காக இப்படி ஏற்பாடு செய்தால் அதற்கு முட்டுக்கட்டைப் போட்டு ராமனைக் காரணமாகக் காட்டி, மத உணர்ச்சியைப் புண்படுத்தாதீர்கள் என்று சொல்வதா? அப்படியானால் இதற்கு என்ன அர்த்தம்? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலை ஏற்படலாமா? இங்கே இருக்கிற மீனாட்சி அம்மன் கோவில் எங்களுடைய தாத்தா சொத்துதான். எங்களுடைய தாத்தா ராத்திரி கனவில் வந்தார். நீங்கள்போய் அந்த இடத்தில் குடியேறுங்கள். வெறும் நம்பிக்கை என்று சொன்னால் போதும், நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. இப்படி ஒவ்வொருத்தரும் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்று ஆரம்பித்தால் அதற்கு மரியாதை உண்டா? எதைச் சொல்லுவதற்கும் ஒரு ஆதாரம் வேண்டாமா? அறிவியல் பேச வேண்டாமா? தொல்லியல் பேச வேண்டாமா? புவியியல் ஆதாரம் வேண்டாமா? இதையெல்லாம் நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். எப்படியாவது இந்த சேது சமுத் திரத் திட்டத்தை நிறுத்த வேண்டும். அதற்கு ராமனைப் பயன்படுத்துகின்றார்கள்.

ராமன் என்பவன் உண்மையில் இருந்தானா?

ராமன் என்பவன் ஒருவன் உண்மையிலேயே இருந்தானா? இன்றைக்கு எல்லா கடவுள்களும் பெரியார் விஷயத்தில் நூற்றுக்கு நூறு எப்படி என்பதைப் பார்த்துள்ளீர்கள்! மீனாட்சி அம்மன் உட்பட ஏ.கே. 47 பாதுகாப்போடு இருக்கிறார். எல்லா பக்தர்களும் மெட்டல் டிடெக்டர் மூலமாகத்தான் வெளியே போய்விட்டு உள்ளே வருகிறார்கள். காரணம் என்ன? கடவுள் நம்மை காப்பாற்றுகிறதா? அல்லது நாம் கடவுளைக் காப்பாற்றுகிறோமோ? என்று கேட்டால் இப்பொழுது இருக்கின்ற எல்லா கோயில் கடவுள்களையும் கலைஞர்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார் (கைதட்டல்).

கலைஞருடைய காவல்துறைதான் இந்த கடவுள் பயல்களை காப்பாற்றி கொண்டிருக்கிறது (கைதட்டல்). கலைஞருடைய அரசுதான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது. கலைஞரை கடவுள் காப்பாற்றவில்லை கடவுளை கலைஞர் காப்பாற்று கிறார். பகுத்தறிவாளர்கள் காப்பாற்றுகிறார்கள்.

மத வெறித்தனத்தினால் இன்னொருவனை கொல்லக்கூடாது

மதவெறித்தனத்தினாலே ஒருவன் - இன்னொருவனைச் சுட்டுக்கொல்லக்கூடாது. அன்பு காட்ட வேண்டும். அறநெறி யோடு வாழவேண்டும். மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வதற்கு நாங்கள் இருக்கின்றோம். இந்த இராமனைக் காட்டி எவ்வளவு பெரிய பித்தலாட்டம் செய்கிறார்கள். கடைசியாக நான் ஒன்றைச் சொல்லுகின்றேன்.

அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு


அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொண்டு, கொடியில் அண்ணா படத்தைப்போட்டுக் கொண்டு, கொள்கையிலே அத்தோடு அண்ணாவை விட்டுவிட்ட ஜெயலலிதா அம்மையார் அவர்கள் - நேற்று என்ன சொன்னார் என்பதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாமா? இந்த அம்மையார் பிஜே.பி. காரர்களைவிட மூடநம்பிக்கையின் உச்சக் கட்டத்திற்குப் போய் சொல்லுகின்றார். அந்த அம்மையார் ராமர் பாலத்தை விட்டு விட்டு வேறு வழித்தடத்திற்கு வந்து செய்தால் சரி என்று ஆரம் பித்தார்கள். ஏனென்றால் அவர்கள் நல்ல எண்ணத்தோடு சொல்ல வில்லை. ஆகவே இந்தப் பிரச்சினையை இப்படியே நீட் டிக் கொண்டு போகலாம். தேர்தலில் அவர்கள் சொல்ல முடியாது.

ஜெயலலிதா தமிழர்களுக்கு செய்த துரோகம்

தேர்தல் முடிந்து நம்மாட்சி வந்துவிட்டால் அந்தத் திட் டத்தை கிடப்பில் போட்டுவிடலாம் என்பதற்காக இடையி டையே குறுக்கு சால் விட்டார். இந்த அம்மையார் பா.ஜ.க.வோடு கூட்டுச் சேர்ந்தாலும், சேராவிட்டாலும் அது ஒரு பக்கத்திலே இருந்தாலும், மனதார அந்த அம்மையார் இந்துத்துவா உணர்ச்சிக்கு ஆளானதினுடைய விளைவாக என்ன சூழல் என்று சொன்னால், தான் ஏற்கெனவே சொன்ன, போட்டத் தீர்மானத்திற்கு விரோதமாக - அதுவும் அவர் களுடைய தேர்தல் அறிக்கைக்கு விரோதமாக அவர்கள் சொல்லுவது இந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அறவே கைவிட வேண்டும் என்று இப்பொழுது சொல்லுகிறார். கிட்டத்தட்ட எல்லா வேலையும் முடிந்து வரும்போது - இப்படி ஜெயலலிதா அவர்கள் சொன்னால் இதைவிட தமிழர் களுக்குத் துரோகம், தமிழ் நாட்டிற்குத் துரோகம் வேறு யாரும் செய்யமுடியாது.

---------மதுரையில் 17-8-2008 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையிலிருந்து --"விடுதலை" 26-8-2008

26.8.08

பெரியார் பற்றி திரு. வி.க.





கருத்து வேற்றுமைக்கு மதிப்பளிப்பவர்! - தமிழ்ப் பெரியார் திரு.வி.கல்யாண சுந்தரனாரவர்கள்


ஈரோட்டில் சென்னை மாகாணச சங்க இரண்டாம் ஆணடு மாநாடு (11,12-10-1919) இல் குழுமியது. அதன் தலைவர் திரு.லாட் கோவிந்ததாஸ் வரவேற்புத் தலைவர் திரு. ஈ.வெ.இராமசாமிப் பெரியார் நட்பை அம்மாநாட்டிலேயே யான் பெற்றேன்.

....நாயக்கர் சென்னை மாகாணச் சங்கத்தின் உதவித் தலைவருள் ஒருவர்; யான் அமைச்சருள் ஒருவன்.

டாக்டர் வரதராஜீலு நாயுடுவும் யானும் நாயக்கர் வீட்டில் தங்கினோம். நாயக்கர் தலையிலும் உடலிலும் இடுப்பிலும் பட்டணி ஒளி செய்தது. அவர் மனைவியார் தோற்றம் மணிபூத்த பொன் வண்ணமாகப் பொலிந்தது. அவர் ஜமீன்தாராகவும் இவர் ஜமீன்தாராராணியாகவும் காணப்பட்டனர்.

நாயக்கர் பேச்சில் கருத்துச் செலுத்தாத காலமுண்டு. அவர் பேச்சில் கருத்துச் செலுத்திய பின்னர் தமிழ்நாட்டுக் காளமேகமானார். நாயக்கர் பேச்சு மழையாகும். கன மழையாகும். கல் மழையாகும். மழை மூன்று மணிநேரம் - நான்கு மணிநேரம் பொழியும்.

முன்னாளில் தமிழ்நாட்டில் தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்கேனும் பரிசில் வழங்கப்புகுந்தால் முதற்பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது. அவர் காங்கிரசில் வெறி கொண்டு நானா பக்கமும் பறநது உழைத்ததை யான் நன்கு அறிவேன். நாயக்கரும் யானும் சேர்ந்து சேர்ந்து எங்கெங்கேயோ தொண்டு செய்தோம். காடு மலையேறிம் பணி புரிந்தோம்.


நாயக்கர் உத்துழையாமையில் உறுதி கொண்டு பலமுறை சிறை புகுந்தார். அவ்வுறுதிக்கு இடர் விளைவித்தது சுயராஜ்யக் கட்சியின் கிளர்ச்சிக்கு இணங்கிக் காங்கிரஸ் சட்டசபை நுழைவுக்கு ஆதரவு நல்கியதானது. நாயக்கருக்கு எரியூட்டிற்று....

....நாயக்கர் சுயராஜ்யக் கட்சி ஒத்துழையாமை உணர்வையே போக்கும், பட்டம் - பதவிக் கட்சியாகும் என்பார். தற்போது காங்கிரசில் உற்றுள்ள சோர்வை நீக்கிப் பழைய ஒததுழையாமையை உயிர்ப்பிக்கச் சுயராஜ்யக் கட்சியை ஒரு கருவியாகப் பயன்படுத்தல் வேண்டும் என்று யான் சொல்வேன். "மீண்டும் ஒத்துழையாமை எழுமா?" என்று அவர் கேட்பார். அது எழுந்தே தீரும். வேறு வழியில்லை என்று யான் உரைப்பேன். சுயராஜ்யக் கட்சியால் பிராமணர்க்கு ஏற்றமும் மற்றவர்க்கு இறக்கமும் உண்டாகும் என்று இராம சாமியார் கூறுவார். யான் அதை மறுப்பேன்.

நாயக்கர் ஜட்டிஸ் கட்சியில் சேர்ந்து சுயமரியாதை இயக்கங்கண்டு பிரசாரம செய்தார். அதனால் தென்னாட்டுக்குக் கேடு விளைதல் கண்டு யான் எதிர்ப் பிரசாரம் செய்தேன். இருவர் போரையும் தென்னாடு வேடிக்கை பார்த்தது. போரிட்டோம் பத்திரிக்கையில் போரிட்டோம். மேடையில் போரிட்டோம். என் உடல் நலம் குன்றும் வரையான் முன்னணியில் நின்று போர் புரிந்தே வந்தேன். போர் உச்சம் பெற்ற காலத்திலும் நாயக்கர் வீட்டுக்கு யான் செல்வேன். என் வீட்டிற்கு அவர் வருவார். எங்கள் நட்புக்கு குலையவ இல்லை. ஒரே மேடையில் இருவரும் பேசுவோம். அவர் கொள்கையை அவர் சொல்வார். என் கொள்கையை யான் சொல்வேன். ஒரே இடத்தில் உண்போம் உறங்குவொம் நட்பு முறையில் உறவாடுவோம்.
நாயக்கர் சுயமரியாதை எனது சன்மார்க்க இயக்கத்தினின்று பிறந்தது. அதற்கும் இதற்கும் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு ஒற்றுமை பத்துப் பங்கு வேற்றுமைப் எங்களுக்குள் போர் மூட்டியது. வேற்றுமைப் பகுதி ஆக்கம் பெறவில்லை. ஆக்கம் பெறாமையும் எங்கள் போர் நிறுத்தத்துக்கு ஒரு காரணம்.

இளமையில் யான் பொறுமை காப்பது அரிதாகவே இருந்தது.... காஞ்சி மாநாட்டிலே நாயக்கருக்கும் எனக்கம் உற்ற கருத்து வேற்றுமை காரணமாக அவர் "குடிஅரசு" எய்த சொல்லம்புகள் பொறுமையை என்பால் நிலை பெறுத்தின. சொல்லம்புகளை யான் தாங்கப் பெருந்துணை செய்தவர் நண்பர் நாயக்கரே.... சாதி வேற்றுமையை ஒழித்தவர். அதை நாட்டினின்றுங் களைந்தெறிய முயல்பவர்.

வைக்கத்தில் (1924) தீண்டாமை ஒழிப்பப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கே சென்று சத்தியாக்கிரகஞ் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது யான் வைக்கம் வீரர் என்ற தலைப்பீந்து, பெரியாரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். வைக்கம் வீரர் என்பது பெரியாருக்கொரு பட்டமாகவே வழங்கலாயிற்று.

இராமசாமியார் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் இவர் முயற்சியால் ஈரோட்டில் இந்தி பகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானும் சென்றிருந்தேன். தென்னாட்டில் இந்தி விதையிட்டவர் நாயக்கரே. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அது செடியாகி நின்றது. காங்கிரஸ் ஆட்சி அச்செடியைத் திடீரென மரமாக்கக் கட்டாயத்தில் இறங்கியது. அது இஷ்டப்படி வளரலாமே என்றார் நாயக்கர். இக்கருத்து வேற்றுமை பெருங்கிளர்ச்சித் தீயாயிற்று. நாயக்கர் கிளர்ச்சித் தலைவராக முன்னணியில் நின்றார். அவரது கெழுதகை நண்பர் இராஜகோபாலாச்சாரியார் காங்கிரஸ் ஆட்சித் தலைவராக வீற்றிருந்தார். அடக்குமுறை எழுந்தது. நாயக்கர் ஏறக்குறைய ஆயிரவருடன் சிறை புகுந்தார். அடக்குமுறையை யான் நவசக்தி வாயிலாக மறுத்து வந்தேன். அம்மறுப்பு நாயக்கர் கிளர்ச்சிக்குத் துணை போயிற்று.

வைக்கம் வீரர்க்குப் பலதிற அணிகளுண்டு. அவைகளுள் ஒன்று வைராக்கியம். மயிலை மந்தைவெளியிலே (08-03-1924) நாயக்கரால் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவிலே இராஜ நிந்தனை இயங்கியதென்று அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. நாயக்கர் இராயப்பேட்டையிலே தங்கினார். ஓர் இரவு குகானந்த நிலையத்திலே நாயக்கர் ஒரு திண்ணையில் உறங்கினார். யான் மற்றொரு திண்ணையில் உறங்கினேன். பதினொரு மணிக்கு மழை தொடங்கியது. நண்பரை எழுப்பினேன். அவர் கண் விழிக்கவில்லை. மழை பெருகியது. மீண்டும் நேயரை எழுப்பினேன். கண்கள் மூடியபடியே இருந்தன. பெரியாரைப் பலமுறை எழுப்பி எழுப்பி பார்த்தேன். பயன் விளையவில்லை. நாலு மணிக்கு மழை நின்றது. ஆறு மணிக்கு வைக்கம் வீரர் எழுந்தார். எனக்குச் சொல்லொண்ணாச் சிரிப்பு. மழை பெய்தது தெரியுமா? என்று நண்பரைக் கேட்டேன். மழையா? என்றார். நாயக்கரைத் தீண்டியுள்ள பாம்பு 124-ஏ வழக்கு நடப்புக் காலம்! அந்நிலையில் நண்பருக்குக் கவலையற்ற உறக்கம்! என் எண்ணம் நாயக்கர் மனத்தின் மீது சென்றது. அவர் மனம் பொன்னா? சஞ்சலமுடையதா? என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன்.

1942 ஆம் ஆண்டு இராமசாமிப் பெரியார் ஜெனரல் ஆஸ்பத்திரியில் படுக்கையில் கிடந்தபோது அவரைக் காணச் சர்க்கரைச் செட்டியாரும் சண்முகானந்தசாமியும் ஜானகிராம் பிள்ளையும் யானும் சென்றோம். யான் அவர் கட்டிலிலே நெருங்கி அமர்ந்தேன். நாயக்கர் என் கையைப் பற்றிக் கதறினார். என் கைக்குட்டை நனைந்தது. இருவருங் கருத்து வேற்றுமையுடையவர் போரிட்டவர் பெரியார் கண்கள் ஏன் முத்துக்களை உகுத்தன? அக்காட்சி கண்டவர் இங்கே பலர் வருகிறார் போகிறார். எவரைக் கண்டும் பெரியார் அழுதாரில்லை. இவரைக் கண்டதும் அவருக்கு அழுகை ஏன் பெருகியது? என்று ஒருவரோடொருவர் பேசியது என் காதுக்கு எட்டியது. அழுகைக்குப் காரணம் என்ன?

அஞ்சாமையும் உண்மையும் உள்ள இடத்தில் கருத்து வேற்றுமைக்கு இடந்தரல் என்ற பெருங்குணம் அமைந்திருக்கும். கருத்து வேற்றுமைக்கு இடமுள்ள நாடுதான் நாகரிக நாடாக இருக்க முடியும்.கருத்து வேற்றுமைக்க இட்ங்கொடாத ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகத்தான் மிருக ஆட்சியாகத்தான் காட்சியளிக்கும். நாங்கள் பல்லாண்டுகளாகக் கருத்து வேறுபாடுடையவராக இருந்தும் சென்னை வந்தால் அவர் இராயப்பேட்டையிலுள்ள என் வீட்டிற்கு வருவார். நானும் அவர் அழைக்கும் போதெல்லாம் ஈரோடு செல்வேன்.
இராமசாமிப் பெரியார் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். அவர் தம் புகழோ தென்னாட்டிலும் வடநாட்டிலும் பிற நாடுகளிலும் மண்டிக் கிடக்கின்றது! காரணம் என்ன? தோழர் ஈ.வெ.ரா. வின் உண்மையும் வாய்மையும் மெய்மையுஞ் செறிந்த அறத் தொண்டாகும்.


ஈ.வெ.ரா.விடம் ஒருவித இயற்கைக்கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அதென்னை? அது அகவுணர்வு வளர்ந்து செல்லும் பேறு. இப்பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை. மிகச் சிலர்க்கே வாய்க்கும்.

உரிமை வேட்கை அஞ்சாமை முதலியன ஈ.வெ.ரா.வின் தோற்றத்திலேயே பொலிதல் வெள்ளிடைமலை. பெரியார் கல்லூரி காணாதவர். பாடசாலைப் படிப்புக் குறைவு. ஆனால் எவருக்கும் எளிதில் கிடைக்காத இயற்கையறிவை ஏராளமாகப் பெற்றிருக்கிறார்.
இவர் இயற்கைப் பெரியார். நான் என் வாழ்நாளில் இதுகாறும் செய்த ஆராய்ச்சிகளுள் அகப்படாத பல பெரியார் கருத்துக்களும் அரிய யோசனைகளும் இப்பெரியாரின் இயற்கையறிவில் உதித்திடக் காண்கிறேன்.


"தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்". இது பெரியாருக்குத்தான் பொருந்தும்.



-------------- சாமி.சிதம்பரனார் - நூல்:"தமிழர் தலைவர்" பக்கம் 200-204

25.8.08

விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்கள் பதில் கூறுவார்களா?



விநாயக சதுர்த்தியாம்....

விநாயகன், விக்னேசுவரன், கணபதி, கணேசன் என்றெல்லாம் சொல்லப்படும் பிள்ளையாரின் பிறந்தநாள் விரைந்துவருகிறதாம். எப்படிப் பிறந்த நாளைக் கண்டறிந்தார்கள் என்பதே விளங்கவில்லை. ஏன் என்றால் பிள்ளையாரின் பிறப்பு, பல வகைகளில் பல கதைகளில் கூறப்பட்டுள்ளது.

அதில், ஒருவகை, சிவ மகாபுராணத்தில் கூறப்பட்ட கதைச் சுருக்கம் இது:

பார்வதியுடன் (சிவனின் மனைவி) பேசிக் கொண்டிருந்த அவள் தோழி விஜயை என்பவள் கேட்டாளாம், உங்கள் கணவருக்கு மட்டும் ஏராளமான வேலைக்காரர்கள் (கணங்கள்) இருக்கும்போது - உங்களுக்கு யாருமே இல்லையே என்று! அவள் தன் உடலில் சிறிது நீர் தெளித்து ஈரமாக்கி அழுக்கைத் திரட்டி எடுத்து மூன்று கண்களும் யானை முகமும் உடைய உருவத்தை உண்டாக்கிக் காவலுக்கு வைத்துவிட்டுக் குளிக்கப் போனாள்.
அங்கே வந்த சிவன் உள்ளே போக முயல, அழுக்குருண்ண்டைக் கணபதி தடுக்க, நான்தான் சிவன் எனக் கூறிக் கொண்டே உள்ளே போக முயல, கணபதி தன் தண்டாயுதத்தால் சிவனை அடித்துவிட்டது. இவனைக் கொஞ்சம் கவனியுங்கள் என்று சிவன் தன் பிரதம கணங்களுக்குக் கூடி, சிவ கணங்கள் கணபதியை நெருங்க, அவர்களையும் அடித்து விரட்டிவிட்டது.
சிவனுக்கு ஈகோ கிளம்பி, சண்டைபோட முடிவெடுத்து பிரம்மா, இந்திரன் முதலியோரைச் சேர்த்துக் கொண்டு போர் முஸ்தீபு செய்யும் போது விஷ்ணு , நான் மாயையால் கணபதியை வெல்கிறேன் எனச் சவடால் அடித்தார். போர் நடக்கும் போது சிவன், பின்புறம் இருந்து பிள்ளையாரைத் தாக்கியதால் அது மூர்ச்சை அடைந்தது. இது விவரத்தை நாரதர் பார்வதியிடம் போட்டுக் கொடுக்க அவளும் தன் பங்குக்குப் போராடத் தொடங்கினாள். பயந்துபோன சிவனும் மற்றவர்களும் துரோணாகலம் எனும் மருந்து மலையை வரவழைத்து சிகிச்சை செய்ததும் கணபதிக்குத் தெளிவு வந்தது.
இதன்படி பார்வதி அழுக்கைத் திரட்டிப் பிள்ளையாரை உருவாக்கும் போதே யானை முகத்தை வைத்தாள் என்றாகிறது.


ஆனால், சிவ புராணத்தில் கணபதியை மனிதத் தலையோடு உருவாக்கியதாக வருகிறது. சண்டையில் பிள்ளையாரின் தலை துண்டிக்கப்பட்டுவிட்டது. அது கண்டு பார்வதி அழுதுபுரளவே, ஒரு கொம்பு இருந்த யானைத் தலையைக் கொய்து வந்து பிள்ளையாரின் தலையில் பொருத்தி வைக்கப்பட்டது என்று உள்ளது.

எதை நம்புவது? பிள்ளையார் பக்தர்களும் பிள்ளையாரின் பிறந்த நாள் கொண்டாடுபவர்களும் பதில் கூறுவார்களா?


------------- நன்றி: "விடுதலை" 22-8-2008 பக்கம் 6

"புளுகனும் புளுகனும்" பெரியாரின் உவமை



தீபாவளி கொண்டாடலாமா?

ஒரு புளுகனைப் பார்த்து இன்னொரு புளுகன் எங்கேடா உன் பையன்? என்று கேட்டதற்கு, அவன் வானம் ஓட்டையாகப் போய்விட்டது. அதை அடைக்க எறும்பைப் பிடித்து அதன் தோலை உரித்து, வானத்தில் போய்த் தையல் போட்டு தைப்பதற்குச் சென்றிருக்கிறான் என்று சொன்னானாம்.
இதற்கும் இந்தத் தீபாவளிப் பண்டிகைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டுமென்கிறேன். சிந்தனையுள்ள பகுத்தறிவுள்ள மனிதன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடலாமா? என்று சிந்திக்க வேண்டுமென்கிறேன்...

--------------- தந்தை பெரியார் "விடுதலை", 29.12.1970

"பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள் தான்"



திராவிடர்கள்தான்

"பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள் தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்."

-------------- தந்தைபெரியார் - "விடுதலை", 24.2.1954

கடவுள் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது!



அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்


உலகத்தை எல்லாம் உண்டாக்கி, அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும் சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப்படுமானால், அவரை நடுநிலைமையுடையவனென்று சொல்லுவதைவிட பாரபட்சமுடையவரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரத்தியட்ச உதாரணங்கள் இருக்கின்றன.

அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன.

அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகிறது என்று சொல்லுவதைவிட அவரால் அதிகத் தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது.

அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜூ இருக்கின்றது. (அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன.

அவர் ஜீவன்களுக்கு நன்மையே செய்கிறாரென்பதைவிட தீமையே செய்கின்றார் என்பதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மை அடைந்தவர்களைவிட தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன.

அவர் நாகரிகமுடையவர் என்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன.


அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட, அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கையை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.


அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள், சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்துகொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப்பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லையென்று கருதித் தினம் சவரம் செய்துகொள்ளுவதைப் பார்க்கின்றோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக்கொண்டே வருவதையும் பார்க்கின்றோம். இது என்ன, கடவுளுடன் மனிதன் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?


---------------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" -6.12.1947