Search This Blog

24.5.21

வெள்ளையனுக்கு ஆதரவாளர்களா நாங்கள்? - பெரியார்

 

வெள்ளையனுக்கு ஆதரவாளர்களா நாங்கள்?




காங்கிரசாரை நான் கேட்கிறேன்! அந்நியனாகிய வெள்ளையனுக்கு நாம் அடிமையாக இருக்க வேண்டும் என்றா அல்லது அவன் போக வேண்டாமென்றா நான் சொல்லுகின்றேன்? தேர்தலுக்குக் கூட நாங்கள் நிற்கவில்லையே! எங்களுக்கு வேண்டியதெல்லாம் நமக்கு இருக்கும் சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும். நமது நாட்டை வேறு எந்த நாட்டானும், ஆரியனும் சுரண்டப்படக்கூடாது. நாடிமுத்துவோ, வடபாதி மங்கலம் மைனரோ, காமராஜரோ மற்றும் எந்தத் திராவிடரோ சூத்திரர்களாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.

 

காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களே, ஏன் எங்களுக்கு இடையூறு செய்கின்றீர்கள்? வெள்ளையன் எங்களுக்கு வேண்டாம், அவன் எதற்கும் எங்களுக்குத் தேவையில்லை. நாட்டை ஆண்டு வந்த நாங்கள் வெள்ளையன் வந்தபிறகு பியூனாக, பட்லராக, கான்ஸ்டேபிளாக இருக்கின்றோம். ஆனால் பிச்சை எடுத்தக் கூட்டத்தார், இன்று ஹைகோர்ட் ஜட்ஜாக, அட்வகேட் ஜனரலாக, திவானாக, மந்திரியாக, சங்கராச்சாரியாக, பகவான்களாக இருக்கின்றனர்.

 

பார்ப்பனர்கள் ஜட்ஜ் முதலிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு வெள்ளையன் இருப்பதால் நஷ்டமொன்றுமில்லை. எங்களுக்குத்தான் முதலில் வெள்ளையன் வெளியே போகவேண்டுமென்ற கவலை. ஏனெனில் வெள்ளையனுக்கும் ஆரியனுக்கும் நாங்கள் தான் அடிமைகளாக இருக்கின்றோம். காங்கிரஸ் தோழர்களே! எங்களைச் சந்தேகிக்க வேண்டாம். வெள்ளையன் வெளியேறினால், பார்ப்பானுடைய உயர்வுக்கும், நமது தாழ்மைக்கும் அறிகுறியாகிய உச்சிக்குடுமி பூணூல் ஆகியவைகளைக் காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களாகிய நீங்கள் தான் கத்திரிக்கப் போகின்றீர்களென்று ஆரியனுக்கும் தெரியும். ஏன்? அதுபாடுபடாத கூட்டம். 'கடுகளாவது நாங்கள் உங்கள் விரோதிகளல்ல.' அணுகுண்டு காலத்தில், இந்த அதிசய காலத்தில் நீங்கள் இதை உணரவில்லையென்றால் பின்பு எப்போழுது நீங்கள் உணரப் போகின்றீர்கள். எச்சில் காப்பிக் கடைகளில் திராவிடன் நுழையக் கூடாது என்று இந்தக் காலத்திலா சொல்லுவது? நாம் பாடுபடுகின்றோம். மண்வெட்டி எடுத்துப்  பூமியைத் திருத்தி உழுது பயிரிட்டுப் பாடுபடுகின்றோம். அப்படியிருக்க ஏன் நமக்கு இந்த இழிவு? யாரை நாம் வஞ்சித்தோம்? இந்த மானமற்றத் தன்மை போவதாக நாம் பாடுபட்டால், நாம் துரோகிகளா?

 

அகிம்சையே தங்கள் அடிப்படைக் கொள்கை என்று பெருமை பேசிய காங்கிரஸ் பதவி ஏற்புக்குப் பிறகு எங்கள் மாநாட்டுப் பந்தல்கள் நெருப்புக்கிரையாக்கப்பட்டன. கண்போனது கால் வெட்டப்பட்டது. அகிம்சா மூர்த்திகளாகிய காங்கிரஸ்காரர்களே! இந்தக் கொடுமைகளை நீங்கள் செய்யலாமா? இது நேர்மையா? சிந்தித்துப் பார்த்து நீங்களே தீர்ப்பளியுங்கள். காங்கிரஸ்காரர்களை விட நாங்கள் பின் வாங்கியவர்களா? நாங்கள் அப்படியே செய்தால் நாடு என்ன கதியாகும்? திராவிடர்களுக்குத்தானே கஷ்டம் ஏற்படும்.

 

கம்யூனிஸ்ட் தோழர்களே! எங்களிடத்தில் உங்களுக்கு ஏன் சந்தேகம்? கம்யூனிஸ்ட் காங்கிரஸ்காரர்களால் எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு, வெள்ளையன் வாழ வேண்டுமென்றா நாங்கள் சொல்லுகின்றோம்? சுயராஜ்யம் வந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் காங்கிரசார் சுயராஜ்ய காலத்தில் இப்படிச் செய்தால் இதை மக்கள் எப்படிச் சகிப்பார்கள்? காந்தியார்கூட சொல்லிவிட்டாரே, "வெள்ளையன் மேல் சந்தேகம் வேண்டாம், அவன் நல்லவனாகி விட்டான்" என்று! இது தானா சுயராஜ்யம்?

 

கம்யூனிஸ்ட் கட்சியார், மில்லிலும், எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர்களையே தொழிலாளர்களர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும், சூத்திரப்பட்டம் தாங்கிய நாலுகோடி மக்களும் தொழிலாளர்களல்லவா? சூத்திரனைக் கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றதே, இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்றுதானே கருத்து? இதற்குத்தானே, இப்படிச் சொல்ல வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம்? ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு? பார்ப்பனன் வேண்டுமென்றால் தங்கள் சங்கத்தைச் சூத்திரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மை பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ள வேண்டும்? நமக்குச் சொந்தப் பெயரில்லையா? நாம் திராவிடர்கள் அல்லவா?

 

பிராமணன் உயர்வானவனென்று எக்ஞவல்யர், நாரதர், பராசரர் சொன்னது இன்று இந்து சட்டமாகக் காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே, சாஸ்திரத்திலே, நடத்தையிலே, பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே. "கடவுளாலே கொடுக்கப்பட்டது" என்று சொல்லப்படும் இந்தச் சூத்திரப் பட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாகிய திராவிடர்களல்லவா? நாம் எப்பொழுது இந்தச் சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது?

 

கம்யூனிஸ்ட் தோழர்களே! சூதுகள், தந்திரங்கள் ஒழியவேண்டும். நயவஞ்சகமாக இவ்வளவு நாள் நடந்த இந்த ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியா? இது பிரிட்டிஷ் நாட்டு ஆட்சி அல்ல. இந்தப் பேதங்கள் அங்கேயில்லை. பார்ப்பனர் நூற்றுக்கு நூறு வாழ வசதி செய்து கொடுத்தது இந்த ஆட்சி. சூத்திரன் படித்தால் ராஜாவுக்குக் கேடு, பட்டத்துக்குக் கேடு என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவதுபடி நடந்தது இந்த ஆட்சி பிராமணன் உடலால் உழைக்கக் கூடாது என்பதற்காகத்தான் அவனுக்கு ஜட்ஜூ (நீதிபதி) முதலிய உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளையன் பார்ப்பானுக்கு உடந்தையாக இருக்கின்றான். இது வெள்ளை ஆரியனுக்கும், மஞ்சள் ஆரியனுக்கும் உள்ள ஒப்பந்தம்தான் இனி ஏற்படப்போவது கூட அந்த ஒப்பந்தம்தான். மற்றப் பேர்களெல்லாம் தந்திரம் இதை இரண்டு வருடத்துக்கு முன்பே நான் சொல்லி விட்டேன். அம்பேத்கரும், ஜின்னாவும் இப்பொழுது சொல்லுகிறார்கள். இன்றைய சமுதாய அமைப்பைக் காப்பாற்றுவதுதான் சுயராஜ்யம் இதற்கு ஒரு உதாரணம் திருவையாற்றிலே, சாப்பாட்டில் பேதம் கூடாது என்று சொன்ன காலத்திலே, மகாகனம் சாஸ்திரியார், பி.எஸ். சிவசாமி ஐயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் முதலியோர் "நாம் செய்து கொண்ட உடன்படிக்கை மீறுகின்றாயே" என வெள்ளையனைக் கேட்டார்கள். இதைத்தான் நாம் உடைக்க வேண்டும்.

 

வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விடுகிறேன் என்று சொல்லுவது, மற்ற வல்லரசுகளிடம் அவன் செய்து கொண்ட ஒப்பந்தம். சண்டை நீங்கியவுடன் அவரவர்கள் நாட்டை அவரவர் நாட்டை அவர்களிடம் விட்டுவிட வேண்டும் என்று நிபந்தனை செய்து கொண்டார்கள். அந்தப்படி அமெரிக்கன், பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டுவிட்டான். அதைப்போலவே பிரஞ்சுக்காரனும் வியட்நாம் நாட்டை விட்டுவிட்டான். ஆனால் நமது நாட்டை நம்மிடம் விடாமல் வெள்ளையன் தந்திரம் செய்கிறான். காங்கிரஸ் ஏன் அவனிடம் பேரம் பேசுகின்றது? நாட்டை ஆள நமக்குத் தகுதி இல்லையா? நாட்டில் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக, ஒற்றுமைக்கு விரோதமாக எவன் ஜாதிப்பட்டம் வைத்திருக்கின்றானோ, எவன் பெயருக்குப் பின்னால் ஜாதியைக் குறிப்பிடும் வால் வைத்திருக்கின்றானோ அவனுக்கு 6-மாத தண்டனை விதிக்கட்டுமே!

 

பெருவாரியான ஜாதிமத பாகுபாடுள்ள நாட்டிலே ஒரே கொள்கையுடைய ஒரு இனம் அதுவும் நூற்றுக்கு 60-க்கு மேல் மெஜாரிட்டியாகவும் இடத்தைத் தங்களுக்கென முஸ்லீம்கள் தனியே பிரித்து கொள்ளுகிற தென்றால் இதில் என்ன தவறு? இது என்ன முட்டுக்கட்டை? நாடு என்ன பிளந்துபோகும்? நாடு என்ன வெடித்துப்போகும்? இதற்கு எதிர்ப்பு இருக்கின்றது என்றால் இது வெள்ளையனும் ஆரியனும் உண்டாக்குகிற கலகம். இங்கு இருக்கின்ற பிணக்கு, ஆபாசம் வெள்ளையனுக்குத் தெரியாதா? பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன் என்று ஒரு ஜாதியும் இருப்பதும், ஹோட்டலுக்குள் ஒரு ஜாதிக்காரன் போகக்கூடாது என்பதையும் பார்த்து வெள்ளைக்காரன் சிரிக்கமாட்டானா?

 

                                      ---------------------- கும்பகோணத்தில் 18.08.1946-ஆம் தேதி காங்கேயன் பார்க்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் .வெ.ரா. உரை   "குடிஅரசு" தலையங்கம், 09.10.1946

 

 

பறைகள், தப்பட்டைகள் அடிக்கும் இழிவு நீங்க வழி என்ன?

மக்களுக்கு அரசியல் சுதந்திர உணர்ச்சி ஏற்பட்டதன் காரணமாய் பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு வேண்டாம் என்று கருதத்தகுந்த அவசியம் எப்படி ஏற்பட்டதோ, அதேபோல் சமுதாய உணர்ச்சி ஏற்பட்டதன் காரணமாய் சமுதாய சுயமரியாதை ஏற்பட்டு தாழ்ந்த ஜாதித் தன்மையை வெறுத்துத் தங்களுக்கு இந்து மதமே வேண்டாம் என்று சொல்லும்படியான ஆத்திரம் வந்துவிட்டது. மானமுள்ள எவருக்கும் இந்த எண்ணம் வந்துதான் தீரும். இதற்கு யாரும் வருத்தப்பட்டுப் பயனில்லை அவனவன் தீண்டாத ஜாதியாக பஞ்சமனாக இருந்தால்தான் அவனவனுக்கு முஸ்லிமாக, கிருஸ்தவனாக ஆகிவிட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பது விளங்கும். எவனோ பறையன் - சக்கிலியாக உதைவாங்கிக் கொண்டு, கக்கூஸ் (மலம்) எடுத்துக் கொண்டு தீண்டத்தகாதவனாக இருக்கும் போது எவனோ ஒருவன் வந்து, 'நீ முஸ்லிமாகாதே, கிறிஸ்தவனாகாதே' என்று உபதேசம் செய்வது கொஞ்சம் கூட தகுதியும் யேர்ககியமுமான காரியமாகாது.

 

பறையன், சங்கிலியன், பள்ளன், புலையன், செரமன், குறவன், நாவிதன் என்று பெயர் சொல்லி இழிவாய் அழைத்து தீண்டாதவர்கள், புழங்காதவர்கள் என்று இழிவுபடுத்துவது இன்றா? நேற்றா? இராமாயண - பாரத காலம் தொட்டு, வேத சாஸ்திர புராண காலம் தொட்டு, பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருகிறதென்றால் இதற்கு பரிகாரம் யார் செய்தார்கள்? எந்த அரசாங்கம் செய்தது? எந்தக் கட்சியார் செய்கிறார்கள்?

 

நேற்று காலம் சென்ற மாபெரும் தலைவர்களான விஜயராகவாச்சாரியார், பண்டித மாளவியா இவர்கள் சங்கதி யாருக்கும் தெரியாதா? இவர்கள் வருணாசிரம தர்மப் பிரசாரகர்களாகத் தானே செத்தார்கள்? அவர்கள் பார்ப்பனர்களானதால் அவர்களைப் பெரிய தேசியவாதிகள் என்று பார்ப்பனர்கள் பிரசாரம் செய்கிறார்கள். பைத்தியக்காரர்களாகிய நம்மவர்கள் கூலிக்கோ, முட்டாள்தனத்திற்கோ, கூடவே ஒத்துபாடுகிறார்கள்.

 

காந்தியார் தானாகட்டும் இந்தக் கீழ்ஜாதி தன்மைக்குப் பரிகாரமாக என்ன செய்தார்? காங்கிரஸ் தானாகட்டும் என்ன செய்தது? தீண்டாமை விலக்கு என்னும் பித்தலாட்டப் பெயரால் ஏராளமான பணம் வசூல் செய்து கீழ்ஜாதி என்பதில் உள்ள மானமற்ற, உணர்ச்சியற்ற மக்களைக் கூலிக்கமர்த்தி, கீழ்ஜாதி நிலைக்கும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதல்லாமல் செய்யும் காரியமென்ன? என் மீது கோபிப்பதில் பயனில்லை. கீழ்ஜாதித் தன்மையைப் போக்க இன்று இஸ்லாம் - கிருஸ்து மார்க்கத்தில் சேருவதை தவிர இன்றைய நிலையில் வேறு மார்க்கம் இல்லை என்பதைப் பந்தயம் கட்டிக் கூறுவேன்.

 

காந்தியார் தீண்டாமையில்லை என்கிறாரே தவிர, கீழ்ஜாதி மேல்ஜாதி இல்லை என்று ஒரு நாளும் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக "வருண தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இராமராஜ்யத்தை ஸ்தாபிப்பேன்; ஸ்தாபிப்பதற்கே உயிர் வாழ்கிறேன்; அதற்காகவே சுயராஜ்யம்" என்கிறார். இதை எந்தக் காங்கிரஸ்காராவது மறுக்க முடியுமா?

 

காங்கிரஸ் தானாகட்டும், ஜாதி ஒழிப்புத் திட்டம் இருக்கிறதா? தீண்டாமை வேறு; ஜாதி வேறு; இதையறியாமல் காங்கிரசிலிருக்கும் பல சூத்திர - பஞ்சம தோழர்கள் என்பவர்கள் ஏமாந்து போய் நம்மீது கோபிக்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறார்கள் இந்துமதம் உள்ளவரை ஜாதி அதாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பிரிவு தன்மை போகவே போகாது. கீதை, இராமாயணம், மனுதர்மம் முதலியவை பொசுக்கப்பட்டால் ஒழிய, ஜாதிப்பாகுபாடுத்தன்மை போகவே போகாது என்பது உறுதி. அதனால் தான் ஜாக்கிரதையாக காந்தியாரும் காங்கிரசும் ஜாதியைப் பற்றிப் பேசுவது கிடையாது என்பேன்.

 

முஸ்லிமாகவோ, கிருஸ்தவனாகவோ ஆவதற்கு இஷ்டமில்லாதவன் சூத்திரனாகவோ, பஞ்சமனாகவோ இருக்க இஷ்டமுள்ளவன் பேசாமல் இருந்து தொலையட்டுமே! அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் அப்படிப்பட்டவன் மற்றவர்களை ஏன் தடுக்க வேண்டும்? ஏன் குறைகூற வேண்டும்? என்று கேட்கிறேன்.

 

காங்கிரஸ்காரர் சுயராஜ்யத்தைப் பொருத்தவரை வெள்ளையனை விரட்டுகிறவரை, வேலை பார்த்துக் கொண்டு போக வேண்டுமே தவிர, இந்து மதத்தைக் காப்பாற்றவும், சூத்திரன் பஞ்சமன் ஜாதியை, பட்டத்தைக் காப்பாற்றவும் வேறு மதத்திற்குப் போவதைத் தடுக்கவும் ஏன் வரவேண்டும்? இதிலிருந்தே தெரியவில்லையா காங்கிரஸ் ஜாதி மத ஸ்தாபனம்; இந்து மதத்தை ஜாதி வர்ணத்தைக் காப்பாற்றும் ஸ்தாபனம்" என்பது? ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கரும் காங்கிரஸ் ஓர் இந்து ஸ்தாபனம் என்று சொல்லுவதில் என்ன குற்றம் காணமுடியும்?

 

டாக்டர் அம்பேத்கார், "நான் இந்துவல்ல, என்னைத் தலைவனாக ஒப்புக் கொண்டு இருக்கும் மக்கள் இந்துவல்ல. எனக்கு எந்த மதத்தையும் தழுவ உரிமையுண்டு" என்று சொன்னால் காங்கிரஸ்காரன் ஏன் அதை மறுக்க வேண்டும்? அதுவும் அம்பேத்கரையும் அவரது சமூகத்தாரையும் பறையர், சக்கிலி, பஞ்சமன் என்று கருதிக் கொண்டு தன்னையும் சூத்திரன் என்பதைச் சம்மதித்துக் கொண்டு இருக்கும் ஒரு காங்கிரஸ்காரன் ஏன் மறுக்க வேண்டும்?

 

திராவிடர் கழகமோ, ஷெட்யூல் வகுப்பு கழகமோ ஜாதியை, வர்ணமுறையை, ஒழிப்பதைத் தங்கள் சுயராஜ்யத் திட்டமாகக் கொண்டிருப்பதால் அதைப்பற்றிப் பேசவும் போராடவும் வேண்டி இருக்கிறதே தவிர வேறு என்ன? திராவிடர் காங்கிரஸ் தோழருக்குக் கவலை இருந்தால் ஒரு அறிக்கை வெளியிடட்டுமே, பார்க்கிறேன். அதாவது:

 

'தோழர் அவினாசிலிங்கம், பக்தவச்சலம், குமாரசாமி ராஜா, காமராஜர் முதலியவர்கள் சேர்ந்து "காங்கிரஸ் பெறும் சுயராஜ்யத்தில் சூத்திரன் இருக்கமாட்டான். பஞ்சமன் இருக்க மாட்டான். இது சம்பந்தமான மதம் ஆதாரம் இருக்காது. ஒரு ஜாதி, ஒரு கடவுள் தான் இருக்கும்' என்று அறிக்கை விடட்டுமே பார்ப்போம்! அதாவது ரோஷமிருக்கிறவர்கள் ஆத்திரமிருக்கிறவர்கள் காந்தியாரை, ராஜகோபாலாச்சாரியாரைப் பிரகாசம் காருவை எழுதிக் கேட்கட்டுமே? அதை விட்டுவிட்டுக் காங்கிரஸ் திராவிடனையும், ஷெட்யூல் வகுப்பானையும், சூத்திரன் அல்ல, பஞ்சமன் அல்ல என்று செய்யப்பாடுபடுகிற எங்களையா அடிப்பது, கோபிப்பது? இதைவிட நாங்கள் வேறு என்ன வேலை பார்ப்பது? கொடி தூக்கி ஜே போடுவதா? அல்லது திராவிடனையே உதைக்கவும், அடிக்கவும், வையவும் கூலிபெறுவதா? அந்த வேலைக்கு ஒரு பகுதி போகட்டும். மானமுள்ள திராவிடர்கள் இழிவை நீக்கப் பாடுபடட்டும்.

 

காங்கிரஸ்காரர்கள் உண்மையாய் வெள்ளையனை முடுக்குவதானால் அந்த வேலைக்கு நாங்கள் சிறிதும் தடையாக இல்லை. வெள்ளையன் வேண்டாம் என்றே சொல்லிவிட்டோம். எங்கள் திட்டத்தில் அதுவே முதல் காரியமாகும்.

 

ஆகையால் அதில் அபிப்பிராய பேதம் இல்லை. ஆதலால் ஷெட்யூல் வகுப்பார் இஸ்லாத்தையோ, கிருஸ்து மதத்தையோ தழுவுவதைப் பற்றி யாரும் வருந்த வேண்டியதில்லை. அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை யாரும் காட்டவும் இல்லை; அவர்கள் ஸ்தானம் அவர்களுடைய பஞ்சமத் தன்மையை நீக்கிக் கொள்ளவே இருக்கிறதே தவிர, சட்டத்திற்கும் மந்திரி வேலைக்கும் இல்லை. அது சிலருக்குத்தான் கிடைக்கும் என்பதை உணர வேண்டுகிறேன்.

 

இந்த நாட்டில் இந்து முஸ்லீம் கலகம் ஏற்படுமேயானால் அடுத்தாற் போல் நடக்கும் காரியம் அதுதான். அதாவது மக்கள் மதம் மாற வேண்டியதுதான். அதைத் துரிதப்படுத்தத்தான் கலவரம் ஏற்படுகிறது என்று அர்த்தம். எப்படியெனில் இந்து - முஸ்லீம் கலவரத்தால் ஷெட்யூல் வகுப்பார்கள், மந்திரி, சட்டசபை மெம்பர், மக்கள் பௌத்தம், சமணம், இஸ்லாம், கிருஸ்து யாவரும் ஒரே மதம் ஆய்விடுவார்கள். இது உறுதி. ஷெட்யூல் வகுப்பு மந்திரி, காரியதரிசி, சட்டசபை மெம்பர்கள் தவிர மற்றெல்லோரும் இஸ்லாம் ஆகப்போவது உறுதி.

 

(பெரியார் பேசி உட்கார்ந்தவுடன் சில ஷெட்யூல் வகுப்புத் தோழர்கள் தப்பட்டைகள், தாசாக்கள், மத்தளங்கள் முதலிய பல திறப்பட்ட தோற்கருவிகளுடன் சுமார் 100-பேர்கள் திடீரென்று மேடை அருகில் வந்தார்கள். வந்தவுடன் கூட்டத்தில் தடபுடல் ஏற்பட்டது. பெரியார் அமைதியாயிருக்கும்படி வேண்டி அமைதி ஏற்படுத்திய பிறகு பெரியாருக்கு முன்னிலையிலேயே அவைகளைப் போட்டுக் குவித்துவிட்டு ஒருவர் மேடை மீது ஏறி நின்று,

 

"நாங்கள் பறை அடிப்பதால்தானே பறையர்கள் என்று அழைக்கப்படுகிறோம். இனிமேல் பறை அடிப்பதில்லை. சாவு வீட்டிற்கும், வாழ்வு வீட்டிற்கும், சாமி வீட்டிற்கும் கண்டிப்பாகப் பறை அடிப்பதில்லை என்று இப்போது உறுதி செய்து கொண்டோம். அதற்காக அந்தக் கருவியை இதோ கொளுத்துகிறோம்" என்று சொல்லி 4, 5-புட்டி மண்ணெண்ணெயை ஊற்றி நெருப்பு வைத்தார். நெருப்பு திகு திகு என்று எரிந்தது. யாவரும் ஆரவரித்தார்கள். "டாக்டர் அம்பேத்கர் அனுமதி வந்ததும் நாங்கள் பெண்டு பிள்ளைகளுடன் மதம் மாறுவோம்" என்று ஒலித்துக் கொண்டு கலைந்து சென்றார்கள்.

 

- (22.11.1946-ல் வாணியம்பாடியில் பெரியார் .வெ.ரா பேச்சு ('விடுதலை', 23.11.1946)

22.5.21

அம்பேத்கரும் நானும் - பார்ப்பனரல்லாதவர்கள் எதிரியா? - எதற்கும் பார்ப்பானை அழைக்காதீர்!

 

எதற்கும் பார்ப்பானை அழைக்காதீர்!



மறைந்த பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், நானும் நெடுநாள்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல. பலவிஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய இந்து மதப்புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட எங்கள் இரண்டுபேர் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அது மட்டுமல்ல, அவற்றைப் பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும், பலமாகவும் என் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றேனோ அவ்வாறுதான் அவரும் மிக உறுதியாகவும், பலமாகவும் இலட்சிங்களைக் கடைப்பிடித்தார். உதாரணமாகப் பார்ப்பனர் போற்றிப் பிரச்சாரம் செய்யும் கீதை என்பதை "முட்டாளின் உளறல்" என்று சொன்னவர்!

 

இப்படிச் சில விஷயங்களில் மாத்திரமல்ல. பல விஷயங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எந்த அபிப்பிராயத்தைக் (கருத்தைக்) கொண்டிருந்தாரோ அதே அபிப்பிராயம் (கருத்து) தான் எனக்கும் இருந்து வந்தது. பல விஷயங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளாமலேயே அந்தப்படி அபிப்பிராயம் கொண்டவர்களாக இருந்து வந்தோம். சந்தர்ப்பம் கிடைத்தபோது நானும் அவரும் எங்கள் இருவருடைய எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்ளுவதும் உண்டு.

 

உதாரணமாக பர்மாவில் (தற்போது மியான்மர் நாடு) நடந்த உலக புத்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள நாங்கள் போயிருந்தபோது அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து, "என்ன இராமசாமி! இப்படிப் பேசிக் கொண்டே இருப்பதால் நாம் என்ன பலன் ஏற்பட முடியும்? வா! நாம் இரண்டு பேரும் புத்த மார்க்கத்திலே சேர்ந்துவிடுவோம்" என்றார். நான் சொன்னேன், "மிகவும் சரி, இப்போது முதலில் நீங்கள் சேருங்கள். நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப்பற்றித் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றேன். இந்த கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமன் சிலைகளை உடைத்தும் எரித்தும் இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் இப்போது மக்களிடையே எடுத்துச் சொல்லிப் பிரச்சாரம் செய்வது போல் அப்புறம் செய்ய முடியாது. ஓர் இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக்கூடாது என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான் இன்னொரு "மதக்காரனாக" இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது. ஆகவே நான் வெளியில் இருந்துகொண்டே புத்த மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்து வருகிறேன்" என்பதாகச் சொன்னேன்.

 

என் பிரச்சாரத்தில் சாதி ஒழிய வேண்டுமென்று மாத்திரம் நான் சொல்லவில்லை. அதற்கு முக்கிய அடிப்படை சாதி, மதம், ஆதாரம் ஒழிய வேண்டும் என்றுதான் நானும் சொல்லி வருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார்.

 

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்த மார்க்கத்தில் சேரும்போது என்னென்ன பிராமணம் (உறுதிமொழி) எடுத்துப் படித்தாரோ (இராமனையும், கிருஷ்ணனையும், கடவுள்களாக வணங்கமாட்டேன் என்பன போன்றவைகள்) அவைகளைத்தான் நான் எங்கள் நாட்டில் சுமார் 20, 25-வருட காலமாகச் சொல்லிவருகிறேன். அதனால்தான் எங்கள் நாட்டில் பத்தாயிரக்கணக்கான மக்கள் இராமனையும், பிள்ளையாரையும் கொளுத்தியும் உடைத்தார்கள். இந்தப் பிராமணத்தில் உள்ள பல விஷயங்கள் எனக்குப் பல வருஷங்களுக்கு முன்பே தோன்றியவைதான். அவைகளை எங்கள் பிரச்சாரமாகவே செய்து வருகிறோம். இதைப் படித்துவிட்டு நான் சொல்லவில்லை. எப்படியோ எங்களுக்கு அப்படித்தான் அபிப்பிராயம் தோன்றியது.

 

புத்தர் கொள்கை கடவுளை ஏற்றுக்கொள்வது கிடையாது. ஆத்மா என்ற ஒன்றையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்படி நட என்று சொல்லுகிற ஒரு மார்க்கமாகும்.

 

நேற்று நான் தங்கிருந்த இடத்தில் ஒரு பார்ப்பனர் என்னை வந்து சந்தித்தார். அவர் கேட்டார், "நீ மதங்களைப் பற்றிக் கண்டித்துப் பேசுகிறாயே! புத்த மார்க்கத்தில் சேரச் சொல்லி மக்களைப் பார்த்துச் சொல்லுகிறாயே! அதுவும் ஒருமதம் தானே" என்று. அதற்கு நான் சொன்னேன், "அப்படிப் பித்தலாட்டமாக மக்களிடம் நீங்கள் (பார்ப்பனர்கள்) சொல்லி அப்படி அவர்களை ஆக்கி வைத்திருக்கிறீர்கள்" என்பதாகச் சொன்னேன்! அதற்கு அவர் சொன்னார், ஏன் அதில் 'புத்தர் சரணம் கச்சாமி; தர்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி' என்று சொல்லுகிறார்களே" என்றார். அதற்கு நான் சொன்ன பதிலை எடுத்து விளக்கினால் அது ஓரளவு பயன்படும் என்று நினைக்கிறேன்.

 

"புத்தம் சரணம் கச்சாமி" என்பது ஒன்றும் மூடநம்பிக்கைத் தத்துவம் அடங்கியதல்ல, "நீ யாரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறாயோ, அவனிடத்தில் உண்மையாக நடந்து உறுதியோடு பின்பற்று" என்பதாகும். "நீ தலைவனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நன்றாகத் துருவித் துருவிப் பார்த்து ஆராய்ந்து தேர்ந்தெடுத்து விட்ட பிறகு அவனது கட்டுப்பாட்டுக்கு அடங்கி அவனைப் பின்பற்ற வேண்டும்" என்ற நல்லொழுக்கந்தான் அது போதிக்கிறது. தலைவன் என்று நீ ஒருவனை ஏற்றுக் கொண்டால் அவனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பது தானே ஒழிய வேறில்லை. மற்றும் புத்தம் என்பது உன் புத்தியை குறிப்பதேயாகும்.

 

அதுபோலவே "தர்மம் சரணம் கச்சாமி" என்பதற்குப் பொருள் "நீ ஏற்றுக்கொண்டுள்ள கர்மங்களைக் - கொள்கைகளை (Principles) உண்மையான முறையில் பக்தி செலுத்திக் கடைபிடித்து வரவேண்டும். அந்தக் கொள்கைக்கு மாறாக நடக்கக்கூடாது உறுதியோடு அவைகளைப் பின்பற்ற வேண்டும்" என்பதுதான்.

 

மூன்றாவதாக "சங்கம் சரணம் கச்சாமி" என்பது. "நீ நல்லபடி யோசித்து சேர்ந்திருக்கிற ஸ்தாபனத்தை மரியாதைப் பண்ணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு எந்தவித இழுக்கும் வராத வண்ணம் நீ நடந்து கொள்ள வேண்டும். ஸ்தாபனத்தின் பெருமையை நீ கருத வேண்டும்" என்பதுதானேயொழிய வேறில்லை.

 

ஆகவே இந்த மூன்றுக்கும் அர்த்தம் (பொருள்)

 

நீ உன் தலைவனை மதி!

 

உன்னுடைய கொள்கைகளை உறுதியாகப் பின்பற்று!

 

உன் ஸ்தாபனத்திற்கு மரியாதை செய்து பாதுகாத்து வா! என்பதாகும்.

 

இவர்களெல்லாரும் உங்கள் புத்த நெறிக்கு மரியாதைக் கொடுத்து அது எல்லோரும் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு புத்த மார்க்கத்தைக் கடைப் பிடித்து ஒழுகுவது என்பது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றக் கொள்கைகளுக்கு நீங்கள் இடங் கொடுக்கக்கூடாது. பார்ப்பன இந்துமதக் கொள்கைகளை மறந்தும் உள்ளே புக விடக்கூடாது.

 

எல்லோரும் டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். மற்றெல்லா பிற்பட்ட மக்களும் இந்த மாதிரியான நிலைக்கு வருவதற்காக மிகவும் பாடுபட வேண்டும்.

 

நீங்கள் இந்த மாதிரி இருப்பதற்காகப் பார்ப்பானும் இந்த அரசாங்கமும் உங்களுக்கு மிகவும் தொந்தரவு - தொல்லைகள் தரக்கூடும். அவை எல்லாவற்றையும் நீங்கள் மிகவும் பொறுமையோடு சகித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்றைய அரசாங்கம் இந்து மத பார்ப்பன ஆட்சியாகும்.

 

உங்கள் வசதி ஓரளவு அரசாங்கக் கொடுமைக்குத் தியாகம் செய்தாவது இந்தக் கொள்கைகளைப் பரப்ப நாம் உறுதியோடு பாடுபட முன்வர வேண்டும்.

 

நம்மிடையே பல சாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் பல சாதிகள் கிடையாது. நாம் இரண்டே சாதிகள். ஒன்று பார்ப்பனர்கள் இன்னொன்று சூத்திரர்கள். அவ்வளவுதான் மதப்படியும், சாஸ்திரங்கள்படியும் நாம் இரண்டே பிரிவுகள் தான் அவைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் பஞ்சமர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவெல்லாம் இல்லை. இவை பார்ப்பனர் நலனுக்கு ஆக, தொழில் காரணமாக என்று பிரித்த பிரிவுகளேயாகும். இவை பிறவி சாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக உணரவேண்டும். நீங்களும் நாங்களும் சூத்திரர் என்ற ஒரே சாதிதான்.

 

இப்படிப்பட்ட நாம் இப்படி நமது இழிவைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம். நம்மில் அநேகர் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையினால் துணிவுடன் இதை எடுத்துச் சொல்லாமல் பயந்து தங்கள் சுயநலத்திற்கு எதையும் விட்டுக் கொடுத்து விடுகிறார்கள்.

 

ஆசையால் பார்ப்பனர்களுக்குப் பதவி அதிகாரத்திற்கு அடிமையாகிவிடுகிறார்கள். அப்படிப் போகிறவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் அதன் மூலம் நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு வருகிறார்களே என்பது குறித்துத்தான் எனது கவலை எல்லாம்.

 

எனக்கு இப்போது 80-வயது ஆகிறது. நான் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? ஆச்சு முதல்மணி (Firest Bell) அடித்துவிட்டது. இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்க முடியும். இனி வாழ்க்கையில் இதைவிட வேறு இலட்சியம் இருக்க முடியாது.

 

சம்பத் பேசும்போது என்னைப் பற்றி ரொம்பவும் அதிகமாகச் சொன்னார். அவர் எனக்கு அண்ணன் மகன் ஆகும். தகப்பனாரைப் பெருமைப்படுத்தும் முறையில்தான் அப்படிச் சொன்னாரே தவிர உண்மையில் நான் அவ்வளவு பெருமைக்கு உரியவன் அல்ல.

 

எங்கள் நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள் பொது வாழ்க்கையில் வெளிப்படையாக எந்தவிதச் செல்வாக்கும் பெற முடியாத அளவுக்கு நாங்கள் அங்கே ஆக்கி வைத்துவிட்டோம். இங்கே அவர்கள் தன்மை பற்றித் தக்கப் பிரச்சாரம் இல்லாததால் லக்னோவில் பார்ப்பனர் கலவரம் செய்யக் கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனால் எங்கள் பக்கத்தில் அவர்கள் எங்களைக் கண்டு நடுங்குகிற நிலையில் இருக்கிறார்கள். பல இடங்களில் பார்ப்பனர்கள் தனியாக நடக்கத் தயங்குவார்கள்.

 

பார்ப்பனர்கள் கொஞ்சம் பேர்தான் என்றாலும் கட்டுப்பாடாக நம் மீது தப்புப்பிரச்சாரம் செய்கிறார்கள். எங்கள் தமிழ் நாட்டில் எங்கள் கட்சியைப் பார்ப்பானை எதிர்க்கிற கட்சி (Anti Brahimin movement) என்றே அழைக்கிறார்கள்.

 

அந்த அளவுக்கு நாங்கள் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறோம்.

 

எங்கள் கட்சியின் முக்கியமான திட்டங்களில் ஒன்று பார்ப்பனரல்லாத மக்களாகிய நாம் யாரும் பார்ப்பான் கடைக்குச் சென்று எதுவும் வாங்கக்கூடாது என்பதாகும்.

 

எந்தவிதச் சடங்குகளுக்கும் நாங்கள் பார்ப்பானை அழைப்பதில்லை. அதனால்தான் நிறைய பார்ப்பனர்கள் எங்கள் தமிழ்நாட்டைவிட்டு இங்கு வந்துவிட்டார்கள். மேலும் வரவாய்ப்புத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லுவதும் இதுதான். நீங்கள் கூடுமானவரை எல்லா விதத்திலும் பார்ப்பனர்கள் விலக்க வேண்டும்.

 

பசி, உயிர் போகிறது என்றாலும் கூட பார்ப்பான் கடையிலிருந்து எதையும் வாங்கி சாப்பிடக் கூடாது. அதில் நமக்கு உறுதிவேண்டும். பார்ப்பன புறக்கணிப்பை (பகிஷ்காரத்தைத்) தீவிரப்படுத்துவதே எனது அடுத்த திட்டமாக இருக்கும்.

 

உங்களுக்கும் சொல்ல வேண்டியது இன்னொன்றும் உண்டு. அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் தவறாக நினைக்கிறார்கள். பார்ப்பனரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள் கூட அல்லவென்றும்! இது மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம் பார்ப்பன ஆட்சியில் பல ஆதிகாரங்களும், பண விநியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாகவும், அவனது விஷமப்பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும். நாங்கள் வேறு என்றும் நீங்கள் வேறு என்றும் எண்ணக் கூடாது. சூத்திரர்கள் ஒரு இனமாக இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று கருதி பல இனம் ஆக ஆக்கிவிட்டார்கள்.

 

ஆகவே இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானேயொழிய வேறில்லை. இப்படிப்பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டிவிடுகிறார்களே ஒழிய வேறில்லை. இதையெல்லாம் உண்மை என்று நீங்கள் நம்பவேண்டாம்.

 

பார்ப்பான் எதை எதைச் செய்கிறானோ அவற்றையெல்லாம் இவன் (பார்ப்பான் அல்லாதவன் - சூத்திரன்) அவனைப் பார்த்து அதேபோல் செய்கிறானே தவிர வேறில்லை. ஆகவே அவன் (பார்ப்பான்) அதைச் செய்யவில்லை என்றால் மற்றவர்கள் அதைச் செய்யமாட்டார்கள்.

 

ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பாரப் பெண் வந்தால் அவள் கையில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்தக் குழாய்க்கு மேல் ஊற்றி விட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்து வீட்டு (முஸ்லிம்) சாயபு பொம்பளையும் செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து குழாய்மேல் ஊற்றிக் கழுவிவிட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.

 

முதலாவது பார்ப்பாரப் பொம்பளை தண்ணீர் ஊற்றுவது மற்றச் சாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே! தீட்டுப்பட்டு விட்டதே! என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள்.

 

இதைப் பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பெண்களுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள். அதுபோலத்தான் பார்ப்பனரல்லாதாரில் சாதி வெறியும், பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர் நிலைமை அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம் அறியாமையும், பார்ப்பானைப் பார்த்துக் காப்பி அடிப்பதுமே தவிர, அகம்பாவம் (பார்ப்பனர்களைப்போல்) கிடையாது. சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால் மாணவன் தானே சரிப்பட்டு விடுவான்! ஆகவே இதற்காக நீங்கள் பெரும் அளவு உங்கள் நேரத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை.

 

பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி. பார்ப்பன மதம், பார்ப்பன புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள் இவை தான் நமக்கு எதிரிகளே யொழிய வேறில்லை. "பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள்" என்பதை ஆதிதிராவிடர் ஆகிய நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.

 

ஆகவே நீங்கள் இவற்றை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இதற்காகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் நமது இழிவு ஒழியும் என்று கூறி இந்த வரவேற்புக்காக உங்களது அன்பிற்காக எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்து முடித்துக் கொள்ளுகிறேன்.

 

               --------------------------- 15.02.1959 அன்று புதுடெல்லி அம்பேத்கர் பவனத்தில் பெரியார் .வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை", 22-02-1959