Search This Blog

16.5.21

 

கடவுளும், மனிதனும்!

உலக மக்களிடையேயுள்ள அறியாமைகளில் எல்லாம் தலை சிறந்த அறியாமை கடவுளைப்பற்றிக் கொண்டிருக்கும் கருத்துக்களேயாகும். உலகில் கடவுள் பெயரால் உள்ள மதங்களில் குறிப்பிடத்தக்க பெரிய மதங்கள் 3 (மூன்று) என்று சொல்லலாம். அவைகள் முறையே,

 

கிருஸ்தவ மதம்,

இஸ்லாமிய மதம்,

இந்து மதம்,

 

என்று சொல்லப்படுபவைகளாகும். இவைகளில் முதல் இரண்டு மதங்களும் சரித்திர சம்பந்தமான ஆதாரங்களைக் கொண்ட மதங்களாகும்.

 

மூன்றாவது மதமான இந்துமதம் என்பது காலப் போக்கில் கற்பனைக் கருத்துக்களால் பெருக்கி சமயத்துக்கு ஏற்றபடி மக்களுக்குள் புகுத்தி, மக்களை ஏய்க்கும் கதம்பக் கருத்து மதமாகும். இந்த மதக் கோர்வைக்கு 'இந்துமதம்' என்கின்ற பெயர், முன்னைய இரண்டு மதங்களுடைய காலத்திற்கும் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெயராகும்.

 

இது வேத மதமாயிருந்தது, ஆரிய மதம் என்றாகி, பிராமண மதம் என்று கூறப்பட்டு வந்து, கடைசியில் இந்து மதம் என்று சொல்லப்படுவதாகும்.

 

உலகில் கிருஸ்தவ மதம் தான் மிகப்பெரிய எண்ணிக்கை கொண்ட மக்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் மதமாகும்.

 

அடுத்து 'இஸ்லாம் மதம்' என்பதாகும். இது கிருஸ்தவ மத மக்களின் அளவில் சற்றேக்குறைய 3-ல் ஒரு பங்குக்குக் குறையாத மக்களைத் தன்னுள் அடக்கிக் சொண்டிருப்பதாகும்.

 

மூன்றாவதான 'இந்துமதம்' என்பது இஸ்லாம் மதத்தைவிட மிகச் சிறிய கூட்டத்தினரைக் கொண்டதாக அதாவது இஸ்லாம் மதமக்களில் சற்றேக்குறைய நான்கிலொரு பங்குகளைக் கொண்டதாக இருக்கலாம்.

 

இவை தவிர 'பவுத்த மதம்'மென்ற ஒரு மதம் இருக்கிறது. இம்மதத்திற்கு கடவுள் கிடையாது என்றாலும், கடவுள் நம்பிக்கை, மதத்துக்கு உண்டான சடங்குகள் பெரிதும் உண்டு என்பதோடு, கிருஷ்தவ மதத்துக்கு அடுத்தபடியாக பெரிய எண்ணிக்கை கொண்ட மக்களைத் தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கிறது. சீனா, ஜப்பான், சயாம், பர்மா, சிலோன் முதலிய நாடுகளுடன் மற்றும் சில நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் மதமாகும்.

 

புத்தமதம் என்று சொல்லப்படுவதற்கு மற்றொரு பெயர் சொல்ல வேண்டுமானால், 'அறிவு மதம்' என்று சொல்வது பொருத்தமாகும். புத்தி என்ற வடமொழிப் பெயரைக் கொண்ட புத்த மதம் என்பதை, தமிழில் கூறவேண்டுமானால் அறிவு மதம் என்றுதான் கூறவேண்டும்.

 

இப்படி புத்த மதத்தை அறிவு மதம் என்று கூறுவதற்குக் காரணம் என்னவென்றால், முதலில் கூறப்பட்ட மூம்மதங்களுக்கும் கடவுள் என்பதாக ஒன்று உண்டு. ஆனால், புத்த மதம் (அறிவு மதம்) என்பதற்கு கடவுள் என்பதாக ஒன்று கிடையாது. ஏனென்றால், அறிவுக்கு ஏற்ற கொள்கை என்றால், அதில் கடவுளுக்கு இடம் இல்லை. ஆதலால் புத்த மதம், அறிவு மதம் என்று சொல்ல நேர்ந்தது. அறிவுப்படி கூறும்போது புத்த மதத்தை ஒரு மதமென்று புத்தர்கள், அறிவாளிகள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

 

மதத்தின் இலக்கணமே, மதம் என்றால் கடவுள் இருந்தாக வேண்டும்; கடவுளை நம்ப வேண்டும்; மற்றும் அறிவுக்கு அடங்காத சில விஷயங்களை, கருத்துக்களை நம்பி ஆக வேண்டும்.

 

ஆதலால், புத்திக்கான கொள்கைகளை, அறிவு கருத்துக்களை மதம் என்று சொல்லுவதில்லை. கருத்து, கொள்கை, கோட்பாடு என்று பொதுவாக அறிஞர்கள் சொல்வார்கள்.

 

முற்கூறிய மூன்று மதங்களுக்கும் கடவுள் உண்டு; என்றாலும் இவைகளில் ஒரு கடவுள் மதமும் உண்டு - பல கடவுள் மதமும் உண்டு. இம்மூன்று மதக்காரர்களும் கடவுளைபல கடவுளைக் கொண்டிருந்தாலும் கடவுளையாகட்டும், மற்றும் தேவர்களையாகட்டும் ஒன்று என்றும் - பல என்றும் கொள்கையாகக் கொண்டிருந்தாலும் இவர்கள் எல்லோரும் கடவுளை ஒரே தன்மையாகத்தான் கருதுகிறார்கள். எப்படி என்றால்,

 

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் எல்லோரும் கடவுளை மனிதனைப் போல்தான் கருதுகிறார்கள். அதாவது இலக்கணத்தில் அஃறிணை, உயர்திணை என்கின்ற இரண்டு திணைகளில் ஒன்றான உயர்திணைப் பொருளாக, அதுவும் மனிதனைப் போல மனிதனுக்குண்டான எல்லா குணங்களையும் பொருத்தி, மனிதனாகவே, மனிதத்தன்மை உடையவனாகவே, மனித எண்ணமுடையவனாகவே இருந்தாலும், செய்கையில் சிறிது சக்தி அதிகமுடையவனாக கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

மனிதன் தனது எண்ணத்தை நிறைவேற்ற செய்கையில் ஏதாவது செய்தாக வேண்டும். ஆனால், மனிதன் கற்பித்துக் கொண்ட கடவுள், மனிதனைப் போன்ற எண்ணங்கள் உடையதாகவே இருந்தாலும் அந்த எண்ணங்களை நிறைவேற்ற காரியத்தில் செய்யாமல் "நினைத்த மாத்திரத்தில் ஈடேற்றக் கூடிய" மாதிரி நினைப்பிலேயே செய்துவிடுகிறான். இதுதான் மனிதனுக்கும், மனிதன் கற்பித்துக் கொண்ட கடவுளுக்கும் உள்ள பேதமே தவிர மற்றபடி தத்துவத்தில் ஒருபேதமுமில்லை. இரண்டு பேரும் (கடவுளும், மனிதனும்) மனிதர்களேதான்; இரண்டு பேரும் மனித சுபாவமுடையவர்கள் தான்; ஒன்றுக்கொன்று உயர்வு கூறவேண்டுமானால் செய்கையில் 'சக்தி' அதிகம் என்பதைத் தவிர எண்ணத்தில் உயர்வான எண்ணம் என்பதாக ஒன்றோ அல்லது தன்மையில் உயர்வான தன்மை என்பதாக ஒன்றோ இருப்பதாக எதுவும் இல்லை; எதையும் காணஅனுபவிக்கத் தக்கதாக கற்பிக்கவில்லை.

 

கிருஸ்து கற்பித்துக் கொண்ட கடவுளுக்கு "ஒரு குமாரன்" உண்டு. முகமது நபி கற்பித்துக் கொண்ட கடவுளுக்கு 'ஒரு தூதன்' உண்டு. அதுபோலவே மனிதனுக்கும், 'குமாரன்' உண்டு, 'தூதன்' உண்டு.

 

கடவுள் "இவைகளை எண்ணத்தில் உண்டாக்கிக் கொண்டான்"; அதுவும்  ஒரே தடவைதான்.

 

மனிதன் இவைகளை செயற்கையில் தினமும் உண்டாக்கிக் கொள்கிறான். இப்படியே தான் ஒவ்வொரு காரியமும்.

 

உதாரணமாக, கடவுள் நன்மை நெய்தவனுக்கு நன்மை செய்கின்றான்; தீமை செய்பவர்களுக்கு தீமை செய்கிறான். மனிதனும் அப்படியே. தனக்கு நன்மை நெய்தவர்களுக்கு நலம் செய்கிறான்; தீமை செய்தவனுக்கு தீமை செய்கிறான். அவன் கடவுள் நினைத்தவுடன் காரியம் ஆகும்படி செய்கிறான். மனிதன் அதற்கு ஆகச் செயல் செய்தவுடன் காரியம் ஆகும்படி செய்கிறான்.

 

கடவுள் எவ்வளவு தவறு செய்த மனிதனையும் தன்னை பிரார்த்தித்து, தோத்தரித்து, மன்னிப்பு கேட்டுக் கொண்டவனை மன்னிக்கிறான். மனிதனும் அதுபோலவே தன்னைப் பிரார்த்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டவனை மன்னிக்கிறான். கடவுளும் சிலரை மன்னிக்காமல் தண்டிக்கிறான். மனிதனும் அதுபோலவே தண்டிக்கிறான்.

 

கடவுளும் பழி வாங்குகிறான்.

 

மனிதனும் பழி வாங்குகிறான்.

 

இப்படியே மனிதனிடத்திலுள்ள எல்லாக் குணங்களும், கடவுளிடத்திலும் உண்டு. கடவுளிடத்தில் உள்ள எல்லாக் காரியமும், மனிதனிடத்திலும் உண்டு.

 

மனிதனுக்கும் கிரிமினல் ஆக்ட் உண்டு. கடவுளுக்கும் கிரிமினல் ஆக்ட் உண்டு. மனிதனுக்கு பிற மனிதனைத் தண்டிக்க ஜெயில் உண்டு! கடவுளுக்கும் தண்டிக்க நரகம் உண்டு! மனிதனும் தண்டனை கொடுக்கிறான்! கடவுளும் தண்டனை கொடுக்கிறான்! மனிதனும் மனித ஜீவனை ஏராளமாகக் கொல்லுகிறான். கடவுளும் ஏராளமான மனிதர்களை ஜீவன்களைக் கொல்லுகிறான். அதாவது சாகடிக்கிறான். மனிதனும் மக்கள் பட்டினிக் கிடப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறான். கடவுளும் ஏராளமான மக்கள் ஜீவன்கள் பட்டினி கிடப்பதை பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.

 

பார்ப்பான் துவக்கத்தில் கடவுள், கடவுள்தன்மை என்பதாக எதையும் கற்பித்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், அந்தக்காலத்தில் அவன் மலைவாசியாக இருந்தான்; ஆனதால் அவன் "ஆகாயத்தில் மறைவாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிற" பல தேவர்களைக் கற்பித்துக் கொண்டான்.

 

இவர்களையும் மிக்க கீழ்த்தரமான மனிதத்தன்மை கொண்டவர்களாகவே கற்பித்துக் கொண்டான். இந்தக் கற்பனைத் தேவர்களும்கூட அய்ரோப்பிய காட்டுமிராண்டி மக்களால் பல காரியங்களுக்கு, பல குணமுடையவர்களாகக் கற்பித்து பாவித்துக் கொண்ட தேவர்களையே, அவர்களது பெயர்களை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். அவைகள் பெரிதும் மக்கள் பயப்படுவதற்கு ஏற்ப, மக்களை அச்சுறுத்துத்தக்க வண்ணம் குணங்களை ஏற்றிக் கற்பித்துக் கொண்டார்கள்.

 

சைவர்களால் ருத்திரன் என்றும், துர்க்கை என்றும் போற்றப்படும் தேவர்கள் அய்ரோப்பிய காட்டுமிராண்டிகளால் 'தகப்பன் கடவுள்' என்றும் 'தாய்க் கடவுள்' என்றும் ஏற்பாடு செய்து கொண்ட தேவர்களேயாவார்கள். அதையேதான் சைவரும் இன்று 'அம்மைக் கடவுள்', 'அப்பன் கடவுள்' என்று சொல்லுகிறார்கள்.

 

ஆகவே, கடவுளைக் கற்பித்தவர்கள் எல்லோருமே உலகில் 'உள்ள' எல்லா வஸ்துக்களிலும் கடவுள் பெரியவர் என்று சொல்லிக் கற்பித்தார்களே ஒழிய, மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை, என்ன புதுமை, என்ன மேன்மை இருக்கிறது என்று எதையும் - எவரும் நிரூபித்து மெய்ப்பித்துக் காட்டவே இல்லை.

 

- (02.05.1970- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

0 comments: