Search This Blog

16.1.16

திரு.இராம.கோபாலருக்குத் திறந்த மடல்-ஆத்திகத்தின் அநாகரிக முகம்-பேதம் வளர்க்கும் வேதமே இந்து மதம்!

திரு. இராம.கோபாலருக்குத் திறந்த மடல்

ஆத்திகத்தின் அநாகரிக முகம்

- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

ஹிந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் உயர்திரு. இராம.கோபாலன் அவர்களுக்கு, மிக்க வணக்கம்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு ‘துக்ளக்’ இதழில் (20.1.2016) தாங்கள் எழுதிய மடலைக் கண்டு ஒரு வகையில் மகிழ்ச்சி அடைகிறோம்.
அதன் மூலம் தங்களையும், தங்களைச் சார்ந்த அமைப்புகளையும் பற்றிய தகவல்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்ததே - அதற்காக மகிழ்ச்சி அடைகிறோம்.
மாட்டுக்கறிப் பிரச்சினை வந்தபோது தாங்கள் திரு வாய் மலர்ந்தீர்களே - அதிலிருந்து தொடங்கினால் நாட்டு மக்களுக்குத் தங்கள் முகவரியின் அடையாளம் என்ன என்று விளங்குமே - அதனால்.
patrikai.com இதழுக்கு (13.10.2015) தாங்கள் அளித்த பேட்டிதான் அது. 
‘மாட்டுக்கறி தின்னக் கூடாது; மனித மலத்தை வேண்டுமானால் உண்ணட்டும்’ என்று உங்கள் வாயிலிருந்து வந்ததே அதையே உங்களின் உன்னதமான அருள்வாக்காக மக்களிடம் எடுத்து வைக்கவும் விரும்புகிறோம்.
மகாவிஷ்ணு அவதாரங்களில் ஒன்றுதான் வராக அவதாரம் - அதாவது பன்றி அவதாரம் - அதற்குப் பிரீதமான உணவுப் பண்டமாக அது இருப்பதால் அப்படிச் சொன்னேன் என்று கூட தங்கள் கூற்றுக்கு ‘பாஷ்யம்’ செய்யக் கூடும்.
சரி, ‘துக்ளக்’கில் நீங்கள் எழுதிய கடிதத்திற்கு வருவோம்.
(1) திராவிடர் கழகம், நாளுக்குநாள் தேய்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுக்குச் சந்தோஷம்தானே - பிறகு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துப் பதைபதைக்கிறீர்கள்?
உங்களுக்கும் தெரியும், திராவிடர் கழகம் என்பது, வெறும் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல. அதன் கொள்கை - குறிப்பாகப் பார்ப்பனர் அல்லாதார் என்ற இனவுணர்வு, தன்மான உணர்வு, பகுத்தறிவு உணர்வு, சமூக நீதி உணர்வு, மொழி உணர்வு என்பவற்றின் வியாபகத்தைப் பொறுத்ததாகும்.
குறிப்பாக தமிழ்நாடு சட்டப் பேரவையை எடுத்துக் கொள்ளுங்கள். மொத்தம் உள்ள 234 இடங்களில், உங்கள் இனத்துக்குக் குறைந்தபட்சம் (மூன்று சதவீதம் என்று எடுத்துக் கொண்டால்) ஆறு இடங்களாவது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்திருப்பதோ வெறும் இரண்டே இடங்கள்தான். இந்தியாவிலேயே இது தமிழ்நாட்டில் மட்டும்தான் நடந்திருக்கிறது.
வித்தியாசமில்லாமல் எல்லாக் கட்சிகளுமே பார்ப்பனர்கள் என்றாலேயே, அந்நியப்படுத்திப் பார்க்கும் ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறதா இல்லையா? (அது எங்கள் துவேஷம் அல்ல, உங்கள் இனம் கடைப் பிடிக்கும் துவேஷமே காரணம்).
இந்த உணர்வு எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் திராவிடர் கழகம் தத்துவ உணர்வாகவே பீறிட்டு நிற்கிறது. காமராசரையே கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று உங்கள் இன இதழான ‘கல்கி’ கார்ட்டூன் போட வில்லையா?
தமிழ்நாட்டில் காவிகள் கால் ஊன்ற முடியாமலி ருக்கும் நிலை ஏன்? கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் (2011) அனேகமாக எல்லா இடங்களிலும் பிஜேபிக்கு டெபாசிட் காலியான பிறகாவது என்ன காரணம் என்று எண்ணிப் பார்த்தீர்களா? அதற்குக் காரணமாக இருக்கும் உணர்வு என்பது திராவிடர் கழகமே.
1971ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம் - அப்பொழுது திராவிடர் கழகம் சார்பில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட பேரணியில், தந்தை பெரியார் பவனி வந்தபோது உங் களின் மூதாதையரான ஜன சங்கத்தினர்,
பெரியாருக்கு கறுப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, பெரியார் மீது செருப்பை வீசி எறிய, அது திராவிடர் கழகத் தோழனின் கைகளில் சிக்கி ‘இராமர் படத்துக்குச் ‘சாத்துப்படி’ நடந்தது தங்களுக்குத் தெரிந்ததே.’ (அது திட்டமிட்டு நடந்ததும் அல்ல!)
அதனை வைத்து இராமனை செருப்பாலடித்த திராவிடர் கழகம் ஆதரிக்கிற திமுகவுக்கா உங்கள் ஓட்டு என்று மலைப் பிரசங்கம் செய்தீர்கள் கோயில் கதவு அளவு பெரிதாக சுவரொட் டிகளையும் ஒட்டினீர்களே. ‘துக்ளக்’ சிறப்பிதழே வெளியிட்டதே, விளைவு என்ன?
ராமனுக்குச் சாத்துப்படி நடப்பதற்கு முன்பு நடைபெற்ற 1967ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த இடங்கள் 138, இராமனுக்குப் பாதுகா பட்டாபிஷேகம் நடந்தபின் கிடைத்த இடங்கள் 184. திராவிடர் கழகம் பலகீனமாகியுள்ளதா அல்லது பலமாக உள்ளதா என்ப தற்கு இதுதான் அடையாளமும், அளவுகோலும்,
(2) மக்களிடம் பக்தி, தெய்வ நம்பிக்கை பெருகி வரு கிறது என்று எங்களைப் பார்த்து ஏகடியம் செய்கிறீர்கள்.
எவ்வளவு மருத்துவமனைகளைக் கட்டினால் என்ன? மருத்துவர்களை உருவாக்கினால் என்ன? நோய்கள் பெருகிக் கொண்டுதானே இருக்கின்றன என்று கேட்பவரை யாரும் புத்திசாலி என்று சொல்ல மாட்டார்கள்.
நோய்வாய்ப்படுவோர் எண்ணிக்கை பெருகுவதால் மருத்துவமனையும் மருத்துவர்களும் இனிமேல் தேவையா என்று சொல்லும் ‘அதி’ புத்திசாலி போல எழுதுகிறீர்கள்.
கோயிலுக்குக் கூட்டம் கூடுகிறது. பக்தி அப்படியே பொங்கி வழிகிறது என்று பூணூலை உருவி விட் டுக் கொண்டு உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொள் கிறீர்கள்.
அந்தப் பக்தி பற்றி, கோயிலில் வரும் கூட்டம் குறித்து, நீங்கள் எந்த ‘துக்ளக்’ இதழில் இப்பொழுது கடிதம் எழுதியுள்ளீர்களோ, அதே துக்ளக் பொங்கிப் பிரவாகிக்கும் பக்தியைப் பற்றி எடுத்துச் சொன்னால்,
‘இது என்னடா, பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் போய்விட்டது! நம் கையில் உள்ள ஆயுதத்தைப் பிடுங்கி,

நம்மையே தாக்குகிறார்களே’ என்று நீங்கள் வருத்தப்பட்டால் நாங்கள் என்ன செய்யக் கூடும்? (பக்திமான் லட்சணம் பற்றி ‘துக்ளக்’ இதழ் எடுத்துக் காட்டியதையும், ஆனந்த விகடன் இதழுக்கு ‘திருமுருக’ கிருபானந்தவாரியார் கொடுத்த பேட்டியையும் தனி பெட்டிச் செய்தியில் காண்க).
இது ஒரு புறம் இருக்கட்டும். நெருக்கடி நிலை பிரகடன காலத்தில் நீங்கள் தலைமறைவாக ஒளிந்து திரிந்தபோது (வீராதி வீரர் அல்லவா நீங்கள்) உங்க ளுக்குப் பல வகைகளில் உதவி செய்தாரே. (நீங்கள் எழுதிய ‘நெருக்கடி நிலைமை எதிர்த்துப் போராட்டம்’, பக்கம் 222) கொலைவழக்கில் சிறைவாசம் செய்து வந்த ‘தவச்சீலரும்’
தண்டத்தைவிட்டு இரவோடு இரவாக மடத்திலிருந்து தலைமறைவானவரும் உங்களவாளுக்கு ஜெகத் குருவுமான சாட்சாத் ஜெயேந்திர சரஸ்வதி கூட பக்தி பற்றி ஆர்ட் பேப்பரில் அச்சடித்துக் கொடுத்துள்ளார் - அதையும் கொஞ்சம் கண்ணாடியைத் துடைத்துவிட்டுப் போட்டுப் படியுங்களேன்.
“பத்துப் பதினைந்து வருடங்களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி, மக்களிடம் நிறையத் தென்படுகின்றது, ஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதி களும் நிறைய இருக்கின்றன. இவைகள் நிறைய வர வரப் பக்தியும் மேன்மேலும் வளருகிறது. இவ்விதம் பக்தி நம்மிடையே வளர்ந்தும் கூட துக்கங்களும், வியாதிகளும் அதிகமாக வளருவதற்குக் காரணங்கள் என்ன? ஓரளவு நமக்குக் கடவுள் பக்தி இருந்த போதும், பேராசையும், ஒழுக்கமின்மையும், சுயநலமும் அதிகமாக நம் கெட்ட வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டு விட்டன.”
காஞ்சியிலே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத் தில்தான் ஜெயேந்திர சரசுவதி இவ்வாறு ‘திருவாய்’ மலர்ந்தருளினார் (‘தினமணி’, 7.9.1976).
இதற்கு மேலும் பக்தியின் பரிவட்டத்தை பற்றிச் சிலாகிக்கவும் வேண்டுமா?
நாத்திகம் தோற்றுவிட்டது என்று சிலாகித்து எழுதியுள்ளீர்களே! 1971ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் (திராவிடர் கழகம் நடத்திய சேலம் மாநாட்டையொட்டி) திமுக அமோக வெற்றியை நிலை நாட்டிய நேரத்தில் உடம்பெல்லாம் மூளையுள்ள பெரிய அறிவாளி என்று அக்ரகாரத்தார் ஏற்றிப் போற்றும் திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் (சுருக்கமாக ராஜாஜி) என்ன எழுதினார் தெரியுமா?
“இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது. இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிவிட வேண்டும் என்று சில மகாபுருஷர்கள் உட்பட பலர் எண்ணத் தொடங்கி விட்டார்கள்” (‘கல்கி’, 4.4.1971) என்று கையொப்பமிட்டு அறிக்கையாகவே வெளியிட்டாரே!
இப்பொழுது சொல்லுங்கள், வென்றது நாத்திகமா? ஆத்திகமா?
ஒரே நேரத்தில் ‘அதிக டோஸ்’ மருந்தும், மாத்தி ரையும் அளித்தால் அவற்றைச் செரிமானம் செய்வதில் தங்களுக்குச் சங்கடங்கள் வந்துவிடக் கூடாதல்லவா?
இன்னும் இருக்கிறது நாளையும் தருவோம்!

                                      ---------------------------------"விடுதலை’ 13-01-2016

‘‘பேதம் வளர்க்கும் வேதமே இந்து மதம்!’’


திரு.இராம.கோபாலருக்குத் திறந்த மடல் (2)

கலி.பூங்குன்றன், 
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

திராவிடர் கழகத் தலைவருக்கு தாங்கள் எழுதிய மடலில் (‘துக்ளக்’, 20.1.2016) சில அறிவுரைகளை இலவசமாகவே தந்துள்ளீர்கள், மிக்க நன்றி!


3. தோல்வியுற்று விட்ட நாத்திகப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்குப் பதிலாக, கல்வி நிறுவனங் களையும், இதர உருப்படியான சமூகப் பணிகளையும் மேற்கொண்டால் நலமாக இருக்கும் என்று எழுதியுள்ளீர்கள்.

நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கல்விப் பணிகளைப் பெரியார் அறக்கட்டளைகள் சிறப்பாகவே செய்து வருகின்றன. பல்கலைக் கழகம் வரை அது வளர்ந்து விரிந்திருக்கின்றது.

லோகக் குரு என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, பார்ப்பனர் அல்லாதாரின் நிதிகளையும் வாங்கிக் கொண்டு, பார்ப்பனர்களுக்காக மட்டுமே நடத்தும் சங்கர மட அறக் கட்டளை போன்றதல்ல பெரியார் அறக்கட்டளை.

வேத ரக்ஷண நிதி டிரஸ்ட்
வேத மாட நிதி டிரஸ்ட்
கலவை பிருந்தாவன டிரஸ்ட்
ஷஷ்டியப்த பூர்த்தி டிரஸ்ட்
கன்னிகாதான டிரஸ்ட்

என்று பல பெயர்களில் சங்கர மடம் டிரஸ்டுகளை நடத் துகின்றதே. இவை அனைத்தும் பார்ப்பன மாணவர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுக்கவும் பார்ப்பனீயத்தைப் பரப் பவும்தானே.

கன்னிகாதானம் டிரஸ்டுபற்றி எவ்வளவு சாதுரியமாகக் கூறுகிறார்.

‘‘மற்ற ஜாதிகள் ‘‘பிராம்மணர்’’களைப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷனைக் கொடுமையோ, பெண்கள் இத்தனை பெரு வாரியாகக் காலேஜ் படிப்பு, உத்யோகம் என்று போய் ஸ்யேச் சையாகத் திரியும்படி ‘‘தண்ணித் தெளித்து’’ விட்டிருக்கிற நிலைமையோ இல்லை. ஆதலால், ஏழைப் ‘‘பிராம்மண’’ப் பெண்களை உத்தேசித்தே இந்த டிரஸ்ட் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.’’

(‘தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம்)

எவ்வளவுத் தளுக்குப் பார்த்தீர்களா?

ஏழைப் பெண்கள் பிராம்மண சமூகத்தில் மட்டும்தான் இருக்கிறார்களா? தாழ்த்தப்பட்டோரில் இல்லையா? பிற்படுத்தப்பட்டோரில் இல்லையா? பார்ப்பனர் அல்லாத முன்னேறிய ஜாதிகளில் இல்லையா?

லோகக் குருவின் ஞான கண்களுக்கு ஏழை பிராம்மணப் பெண்கள் மட்டும்தான் தெரிகிறதோ?

மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தைகளை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்குக் கொண்டு வந்து வளர்த்து, கல்வி கொடுத்துத் திருமணமும் செய்து வைக்கும் தொண்டறத்தையல்லவா பெரியார் அறக்கட்டளை செய்து வருகிறது. அந்தக் குழந்தைகளின் தலைப்பெழுத்து (மிஸீவீtவீணீறீ) என்ன தெரியுமா? ஈ.வெ.ரா.ம. (ணிக்ஷிஸிவி) ஈ.வெ.ரா. மணியம்மையைக் குறிக்கக்கூடியது.


4. நாத்திகப் பிரச்சாரத்தைக் கைவிடவேண்டுமாமே! ஏன் அவ்வளவு பதற்றம்? அந்த நாத்திகப் பிரச்சாரம்தானே பார்ப்பன ஆதிபத்தியத்தின் ஆணிவேரை அசைத்தது - அறுத்தது!

இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்துவிட்டது என்று ராஜாஜியே அலறும் நிலையை ஏற்படுத்தியது. அதற்காகத்தானே  ‘நயவஞ்சகமாக’ நாத்திகப் பிரச்சாரத்தைக் கைவிடக் கோருகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாதா?

இன்னொன்றையும் உங்களைக் கேட்கிறோம். இந்து மதத்தில் நாத்திகத்துக்கு இடம் உண்டா - இல்லையா? சார்வாகம் என்பது என்ன? தசரதனின் அமைச்சரவையில் ஜாபாலி என்ற நாத்திகன்  அமைச்சராக இருந்ததாக எழுதி வைத்துள்ளீர்களே!

‘‘தென்னாட்டு ஜாபாலி’’ என்று உங்கள் ‘கல்கி’ இதழில் தந்தை பெரியார் அவர்களின் படத்தை அட்டையில் அலங் கரிக்கச் செய்து அங்கீகரித்ததே - அது தெரியுமா உங்களுக்கு?

இந்து மதத்தில் நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு அல்ல - வேத மறுப்புதான் என்ற உண்மையையும் தாங்கள் அறிவீர்களா?


உங்களுக்குத் தெரியாவிட்டால் உங்களின் ஜெகத்குரு மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் எழுதிய ‘‘தெய்வத்தின் குரல்’’ (இரண்டாம் தொகுதி, பக்கம் 407-408) புத்தகத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாமே!

‘‘நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வரவாதம்  என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு, ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும். அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக்கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம். வைதீக வாழ்க்கையை  ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம்’’ என்று எழுதி இருக்கிறாரே உங்கள் ஸ்ரீலஸ்ரீ ஜெகத்குரு!

இதன் பொருள் புரியவில்லையா? வேத மறுப்புதான் இந்து மதத்தில் நாஸ்திகமே தவிர, கடவுள் மறுப்பல்ல!

உலகில் வேறு எந்த மதத்திலும் இல்லாத இந்த விசித்திர மான குதர்க்கம் ஏன் தெரியுமா? வேதம்தானே பார்ப்பனர்களின் உயிர் நாடி - அதுதானே நான்கு வருணங்களின் ஊற்றுக்கண்! அவ்வமைப்பில் ஆதிக்க அதிகாரச் சவுக்கு அவர்களிடத் தில்தானே! அதைக் காப்பதுதான் அவாளின் ஆஸ்திகம் - அதைத் தகர்ப்பதுதான் நமது நாஸ்திகம். கடவுளுக்கு மேலே பிராமணன் என்று ஜெயேந்திர சரஸ்வதி கூறவில்லையா?

இதைப் புரிந்துதான் எழுதினீர்களோ, இல்லையோ - உண்மை இதுதான்.
இதனைத் தெளிவாக ஆணிவேர் வரை ஊடுருவித் தெரிந்துகொண்டுதான் தந்தை பெரியார் ஆணித்தரமாக - மிக அழகாகவே சொன்னார்கள்.


‘‘நான் அரசியலிலே பல மாறுதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றாலும், பார்ப்பனீய வெறுப்புள்ளவன் நான் - அதுதான் என்னைப் பகுத்தறிவுவாதியாக (நாத்திகனாக) ஆக்கியது’’ என்றாரே தந்தை பெரியார். (‘விடுதலை’, 5.3.1969).
நாத்திகப் பிரச்சாரத்தைக் கைவிடவேண்டும் என்று நீங்கள் கூறுவது ஏன் என்பது எங்களுக்குத் தெரியாதா? எந்தளவுக்கு நாத்திகம் உங்கள் ஆதிக்கத்தைச் சுட்டு இருக்கிறது என்பதுதான் நாத்திகத்தைக் கைவிடுங்கள் என்கிற தங்களின் வேண்டுகோள்!

5. கல்வி, வேலை வாய்ப்புகளில் பொருளாதார அளவுகோல் வேண்டும், உயர் ஜாதியினரில் ஏழைகள் இருக்கிறார்களே என்று ‘கண்ணீர் வடிக்கிறீர்களே’ உங்களை நேரிடையாகவே கேட்கிறோம். இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல - சமூகத்தில் உங்களின் பார்ப்பனீயத்தால் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களைச் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் தூக்கி விடும் சிறப்பு ஏற்பாடு.

பார்ப்பனர்களில் ஏழைகள் இருக்கலாம்; ஆனால், கல்லாதவர் கிடையாதே! உலகிலேயே பெரும்பான்மையான மக்களுக்குக் கல்வியைக் கொடுக்காதே! என்று சொன்ன ஒரே ஒரு மதம் உங்களின் இந்துமதம் தானே!

ஏழைகளுக்கு உதவவேண்டும் என்பது பொருளாதாரத் திட்டம், குறைந்த வட்டிக்குக் கடன் கொடுப்பது போன்ற உதவிகளைச் செய்யலாம், அதை விட்டுவிட்டு குறுக்குச்சால் ஓட்டலாமா?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு இருந்தும் இன்னும் 12 சதவிகிதத்தைத் தாண்டவில்லையே! தாழ்த்தப்பட்டவர்களின் நிலையும் இதுதானே!

சென்னை அய்.அய்.டி.யை எடுத்துக் கொள்வோமா?
 
பேராசிரியர்களில் பார்ப்பனர்கள் 98.59 சதவிகிதம்; தாழ்த் தப்பட்டோர் 1.41 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்.

இணைப் பேராசிரியர்களில் பார்ப்பனர்கள் 96.7 சதவிகிதம்; தாழ்த்தப்பட்டோர் 3.3 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யமே!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மகேந்திர பிரசாத் சிங் என்பவர் பெற்ற தகவல்தான் இது.


இதற்கு உங்களின் அறிவு நாணயமான பதில் என்ன?

பொருளாதார அளவுகோல்பற்றி பார்ப்பனர்கள் பேசு கிறீர்களே - அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் தந்தை பெரியார் அவர்களின் இடையறாத கடும் போராட்டத்தால் ஏற்பட்டபோது, பொருளாதார அளவுகோலும் பேசப்பட்டது உண்மைதான். வாக்கெடுப்பு நடத்தியதில் முடிவு என்ன தெரியுமா?
பொருளாதார அளவுகோலுக்கு ஆதரவாக அய்ந்தே அய்ந்து வாக்குகளும், எதிர்ப்பாக 243 வாக்குகளும் கிடைத்தன என்பதை நினைவில் வையுங்கள்.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட்டதே - அதனை நீதிமன்றம் நிராகரித்த தகவல் தங்களுக்குத் தெரியுமா?
6. அர்ச்சகர், அர்ச்சக மொழி பிரச்சினைபற்றியும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

கடவுளே இல்லை என்று சொல்லுகிற உங்களுக்கு உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளீர்களே - ஒருகணம் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா?
திராவிடர் கழகத்துக்காரர்களாகிய நாங்கள் அர்ச்சகர்களாக ஆவதற்காகவா போராடுகிறோம்? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது மனித உரிமைப் பிரச்சினை!

சரி, உங்களையே திருப்பிக் கேட்கிறோம். கடவுள் உண்டு, உண்டு என்று டமாரம் அடிக்கிறீர்களே, நீங்கள் அந்தக் கோரிக்கையை வைக்க வேண்டியதுதானே - போராட வேண்டியதுதானே?
ஏன் செய்யவில்லை?

எங்களை விட்டுத் தள்ளுங்கள். நீதிபதி மகாராஜனும், நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியாரும், நீதிபதி ஏ.கே.ராஜனும், அரசு அமைத்த குழுக்களில் அங்கம் வகித்த சிவாச்சாரியார்களும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை ஆகமப்படியும், சட்டப்படியும் உண்டு என்று அறிக்கை கொடுத்துள்ளார்களே அவர்களையெல்லாம் கடவுள் மறுப்பாளர் பட்டியலில் சேர்த்திட உத்தேசமா?
இந்துக்களே  ஒன்று சேருங்கள் என்கிறீர்களே - அர்ச்சகர்ப் பிரச்சினையில் மட்டும் ஜாதி பேசி ஒதுக்கித் தள்ளுகிறீர்களே - யாரை ஏமாற்றிட?

ஆகமங்களை முறையாகப் படித்துத் தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட தோழர் சாமி சிலையைத் தொட்டால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்று சொல்கிறீர்களே - இதுதான் உங்கள் இந்து மதத்தின் யோக்கியதையா? தாழ்த்தப்பட்டவன் கைபட்டாலே சாமி தீட்டாகிவிடும்; செத்துப் போய்விடும் என்றால், அந்தச் சக்தியற்ற சாமியை ஏன் வீணாகக் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள்?
இதில்கூட உங்கள் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.
‘‘சில நிபந்தனைகளோடு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கான பயிற்சித் திட்டங்கள்பற்றி மடாதிபதிகள், ஆதீனங்கள் தீர்மானிக்கவேண்டும். அர்ச்சகர்களைத் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுத்து பணியமர்த்தும் பணியை ஆன்மிக அமைப்புகளே செய்யவேண்டும். (‘தமிழ்முரசு’, 19.5.2006) என்று சொன்னீர்களே - இதற்காக நீங்களோ, உங்கள் அமைப்போ சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டதுண்டா?

நீங்கள் சொல்லுகிறபடி பார்த்தாலும் மூன்று நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்களில் எல்லாம் - ஆதீனகர்த்தர்கள், சிவாச்சாரியார்கள் இடம்பெற்றிருந்தனரே!

குறிப்பாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப் பட்ட குழு என்பது பயிற்சிக்கான பாடத் திட்டம் உள்பட வரையறுக்கத்தானே; அதில் இடம்பெற்றவர்களின் பட்டி யலைப் பார்த்தாலே பளிச்சென்று புரியுமே!
தவத்திரு தெய்வ சிகாமணி பொன்னம்பல தேசிக அடிகளார், குன்றக்குடி, திருக்கயிலாய பரம்பரை மெளிணி கண்ட சந்தானம் கயிலை குருமணி; சீர்வளர் சீர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், பேரூர், சிறீரங்க நாராயண ஜீயர், சிறீரங்கம், சிவநெறிச்செம்மல் முனைவர் பிச்சை சிவாச் சாரியார், பிள்ளையார்பட்டி, சிவாகம சிரோமணி சந்திரசேகர பட்டர், திருப்பரங்குன்றம் ஆகியோர் அங்கம் வகித்தனரே!

இந்த ஆலோசனைக் குழுதான் பாடத் திட்டத்தை வகுத்த குழு - இதனை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் சொன்னவர்கள் எல்லாம் இடம் பெற்ற குழு அமைத்த பாடத் திட்டப்படி பயிற்சி பெற்று தேர்ந்தவர்களை அர்ச்சகர்களாக்க என்ன தடை?

நீதிமன்றம் தடை விதித்ததாக நீங்கள் சொல்லி ஆனந் தப்படுவது - உங்களின் இரட்டை முகத்தைக் காட்ட வில்லையா?


7. மற்ற மதங்களைப்பற்றி நாங்கள் விமர்சிப்பதில்லை என்று குற்றப் பத்திரிகைப் படித்துள்ளீர்கள். கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்று நாங்கள் பிரச்சாரம் செய்வது எல்லா மதங்களையும் சேர்த்துத்தானே!
இங்கர்சால் கிறித்துவ மதத்தைப்பற்றிதானே பேசினார் - இந்து மதத்தைப்பற்றி ஏன் பேசவில்லை? என்று அந்நாட் டுக்காரர்கள் கேள்வி கேட்கவில்லை. பெரும்பாலான மக்களைப் பாதிக்கச் செய்யும் பெரும்பான்மையான ஒரு மதத்தைக் குறித்துக் கூடுதல் விமர்சனம் என்பது பகுத்தறிவு உள்ள எவரும் ஒத்துக் கொள்வார்கள். உங்களுக்கு நினைவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளீர்கள். குறிப்பிட்ட வயதைத் தாண்டிய சிலருக்கு வரும் மறதி (Amnesia) தொடர்பானதாக இருக்கலாம். (குணம்பெற வாழ்த்துகள்!).

8. இறுதியாக இந்து மதத்தின் பிரதாபங்களை முழங்கி யுள்ளீர்கள். வரலாற்றுப் பின்னணி உண்டாம். அப்படியா? எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது, தோற்றுவித்தவர் யார்? கிறித்தவருக்குப் பைபிள் போல, முசுலிம்களுக்குக் குரானைப் போல இந்துக்களுக்கு ஒரு நூலைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
உங்கள் மதத்துக்கு இந்து என்று பெயர் சூட்டியவன் கிறித்தவனான வெள்ளைக்காரன்தானே! உங்கள் சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியார் ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம் 267 ஆம் பக்கத்தைக் கொஞ்சம் புரட்டுங்கள் - ‘வெள்ளைக்காரன் ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ - நாம் பிழைத்தோம்’ என்று சொல்லியிருக் கிறாரே! இந்தத் தன்மையில் கித்தாப்புப் பேசலாமா? வெள்ளைக்காரக் கிருத்துவன் வைத்த பெயரை மாற்றிக் கொள்வோம் என்று மார் தட்டுங்கள் பார்க்கலாம்.
பல தவசிரேஷ்டர்களும், ஞானிகளும் பல நன்னெறி களைப் போதித்தனர் என்று புகன்றுள்ளீர்.

உங்கள் ஞானிகள், முனிவர்கள் எப்படியெல்லாம் பிறந் துள்ளனர் என்று உங்கள் புராண ஆதாரங்கள்படியே அவிழ்த்துவிட்டால் அவ்வளவுதான். அசிங்கத்திற்குப் பொட்டு வைத்த கதைதான்; என்ன செய்வது ஆரம்பித்து விட்டீர்கள் - எடுத்துச் சொல்லாவிட்டால் உங்கள் மனம் நோகும்தானே!

கலைக்கோட்டு ரிஷி  - மானுக்கும், 
ஜம்புகன் - நரிக்கும், 
அகஸ்தியர் - குடத்துக்கும்,
மாண்டல்யர் - தவளைக்கும்,
காங்கேயர் - கழுதைக்கும்,
சவுனகர் - நாய்க்கும்,
கணாதர் - கோட்டானுக்கும்,
ஜாம்புவந்தர் - கரடிக்கும்,
அஸ்வத்தாமன் - குதிரைக்கும்

பிறந்தனர் என்பதுதான் உங்களின் உத்தமமான இந்து மதத்தின் உச்சக்கட்ட மகாத்மியமோ!

உங்கள் இந்து மதத்தில் வடகலைக்காரர் தென்கலைக் காரரை ஏற்றுக் கொள்வாரா?

காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்ற வழக்கு வெள்ளைக்காரன் ஆட்சிக்காலத்தில் லண்டன் பிரிவு கவுன்சில்வரை சென்று நாற்றமெடுக்கவில்லையா?

கடலூர் - திருவந்திபுரத்தில் தேவநாதசாமி கோவில் உள்ளது.

இக்கோவிலின் வடக்குப் பிரகாரத்தையொட்டி மணவாள மாமுனி கோவிலும் உண்டு. ஆண்டுதோறும் அய்ப்பசி மாதம் மூலநட்சத்திரத்தில் மணவாள மாமுனிகள் ஊர்வலம் வரும்பொழுது தேவநாத சாமி கோவில் சன்னதிக் கதவை மூடி விடுவார்கள். மணவாள மாமுனியைப் பார்க்கக் கூடாதாம் - பார்த்தால் தீட்டுப்பட்டுவிடுமாம். ஒவ் வொரு ஆண்டும் ரகளைதான்! மாவட்ட ஆட்சித் தலைவர், இந்து அறநிலையத் துறை தலையிட்டும் சண்டை தீர்ந்த பாடில்லையே!
இந்துக் கடவுள்களுக்குள்ளேயே தீண்டாமை - வெட்கப்படவேண்டாமா?
திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்றரை கிலோ தங்கத்தில் பூணூல் அணிவித்தாரே காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி!

கடவுளையே பூணூல் ஜாதி வட்டத்துக்குள் திணிக்கின்ற நீங்கள் அர்த்தமுள்ள இந்து மதம்பற்றிப் பேசலாமா?

கீதையைப் படித்துப் பாருங்கள் என்று எழுதியுள்ளீர்கள். நன்கு படித்துப் பார்த்துதான் அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பார்த்துதான் எங்கள் தலைவர் ‘‘கீதையின் மறுபக்கம்’’ நூலை எழுதினார். மானமிகு சுயமரியாதைக் காரரான கலைஞர் அவர்கள் தங்களுக்கு அன்பளிப்பாக அந்த நூலைக் கொடுத்தாரே படித்துப் பார்த்தீர்களா? நீங்கள் மட்டுமல்ல - யாராவது அந்நூலின் ஒரே ஒரு வரிக்காவது மறுப்பு எழுத முடிந்ததுண்டா?

கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32 என்ன கூறுகிறது?

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று ‘பகவான்’ கிருஷ்ணன் கீதையிலே திருவாய் மலர்ந்துள்ளாரே - தாயை மதிக்கிற ஒவ்வொரு மனிதனும் இதனைக் கொளுத்த முன் வரவேண்டாமா? உங்கள் வசதி எப்படி? கீதையை முட்டாளின் உளறல் என்று அண்ணல் அம்பேத்கர் ஏன் சொன்னார் என்பது புரிகிறதா?
தங்களுக்கு ஞாபக மறதி இருக்கலாம்; ஒன்றை நினைவூட்டுகிறோம்.

‘‘நம்முடைய கடந்த கால செயல்களின்மூலம் இப்பொழுது நடைபெறும் மத மாற்றங்களுக்கு வழிவகுத்து விட்டோம். மதத்திற்குள்ளேயே ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத்தி, நம்மை விட்டுச் செல்லும் அளவுக்குத் தூண்டிவிட்டோம்’’ (‘தினமலர்’, 2.2.1982, பக்கம் 6).
இதைச் சொன்னது யார் தெரியுமா? சாட்சாத் நீங்கள்தான்!
உங்களாலேயே இந்து மதத்தைக் காப்பாற்ற முடியவில்லை - இதில் வீண் ஜம்பம் தேவையில்லை அல்லவா?

ஒரு முக்கிய நிகழ்ச்சி - அதுவும் உங்களைப்பற்றியது.
புலவர் மா.நன்னன் அவர்களும், தாங்களும் ‘‘இந்தி வேண்டுமா? வேண்டாமா?’’ எனும் தலைப்பில் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது - இடம் சென்னை மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி மண்டபம், நாள்: 27.2.1987.

புலவர் நன்னன் முறைப்படி விவாதங்களை எடுத்து வைத்தார்கள். அதற்குத் தக்க வகையில் பதில் சொல்ல வக்கில்லாத நிலையில், அடாவடித்தனமாகப் பேசினீர்கள். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நான் மேடையில் ஏறி அமைதிப்படுத்தினேன். தொடர்ந்து தங்களுக்கே உரிய அதே பாணியில் பேசினீர்கள் - மீண்டும் பிரச்சினை எழுந்தது. அதுதான் சாக்கு என்று பின்புறம் வழியாக நடையைக் கட்டினீர்களே - அந்த வகையில் உங்கள் வீரம் மகத் தானதுதான்!


கடைசியாக ஒன்று, நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொன்னவர் உங்கள் தலைவர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (‘தெய்வத்தின் குரல்’, 3 ஆம் பாகம், பக்கம் 75-76).

எனக்கு மனிதப் பற்றைத் தவிர வேறு பற்று கிடையாது என்று சொன்னவர்; அதற்காகப் பாடுபட்டவர் எங்கள் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
யார் நாட்டுக்குத் தேவை?

எந்தத் தத்துவம் மக்களை உயர்த்தும்?

பண்பாட்டுக்குரியவர் யார் என்பதை மக்களின் பகுத்றிவுக்கே விட்டு விடுவோம்!

ஓர் அருமையான சந்தர்ப்பத்தை அளித்த தங்களுக்கும், ‘துக்ளக்’குக்கும் நன்றி! நன்றி!!

                        ------------------------------ கவிஞர் கலி.பூங்கன்றன் அவர்கள்  13,14, -01-2016 ‘விடுதலை’ யில் எழுதிய கட்டுரை

2.1.16

கர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக?-பெரியார்

கர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக?



- தந்தை பெரியார்

இப்போது நாம் எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சி, கோயிலில் கர்ப்பக்கிருகம் இருக்கிற இடத்திலே நீ சூத்திரன்,- இழிசாதிக்காரன், நீ உள்ளே நுழையக்கூடாது என்று பார்ப்பான் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கின்றதை மாற்ற வேண்டும் என்று போராட இருக்கிறோம். இதற்கு முன் தெருவிலே மனிதனை நடக்கக் கூடாது புனிதம் கெட்டுவிடும் என்று சொன்னான்; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று வைத்திருந்தான்; ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு ஜாதியார் கோயிலுக்கும் போகக்கூடாது என்று வைத்திருந்தான், அதுபோல, சாப்பிடும் பொது இடங்களில் பார்ப்பனருக்கு வேறு இடம், நமக்கு வேறு இடம் என்று வைத்திருந்தான்; இதையெல்லாம் மாற்றி விட்டோம்.

அதனால் ஒன்றும் புனிதம் கெட்டுவிடவில்லை. எந்த மனிதனின் மனமும் புண்படவில்லை. மதம், சம்பிரதாயம் அழிந்து பாழாகி விடவில்லை. மிகப் பெரிய புண்ணிய ஸ்தலங்களாகக் கருதப்படும் காசி, ஜெகநாத், பண்டரிபுரம் ஆகிய இடங்களிலிருக்கிற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை யார் வேண்டுமானாலும் தொட்டு வணங்கலாம் என்றிருக்கிறது. அதுபோல இங்கேயும் கர்ப்பகிரகத்திற்கு வெளியே இருக்கிற உருபரிவாரங்களை யார் வேண்டுமானாலும் தொடலாம். அதே சிலை கர்ப்பகிரகத்தில் இல்லாமல் வெளியே இருந்தால் நாய்கூட நக்கிவிட்டுச் செல்லலாம். அதனால் அந்தச் சிலையின் புனிதம் ஒன்றும் கெட்டு விடுவதில்லை. கர்ப்பக்கிரகத்திற்குள் இருப்பதைத் தொட்டால் மட்டும் எப்படிப் புனிதம் கெட்டுவிடும்? வெளியே யிருக்கிற சிலைக்கு இல்லாத புனிதம் அதற்கு மட்டும் எப்படி வந்தது என்று கேட்கின்றேன்? பார்ப்பான் ஆக்கிய சோற்றை நம் கண்ணால் பார்த்தால் அதைக் கீழே கொட்டிவிடுவான். இன்று நம்முடன் வந்து உட்கார்ந்தே சாப்பிடுகின்றான்,- நாம் சமைப்பதைச் சாப்பிடுகின்றான்.

இப்படி உண்பதில்- பழகுவதில் எல்லாம் ஒன்றான பின் எல்லோருக்கும் பொதுவான கர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் இந்தப் பேதம் எதற்காக என்று கேட்கின்றேன்? சாதி இழிவை, சூத்திரத் தன்மையை நிலைநிறுத்த அல்லாமல் வேறு எதற்காக? வேறு என்ன அவசியத்திற்காக இங்கு மட்டும் நாம்  போகக் கூடாது என்பது என்று நம் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். சிலர் நகை இருக்கிறது அதனால் தான் எல்லோரும் வரக்கூடாது என்று சமாதானம் சொல்கிறார்கள். உன் சாமிக்கு  நகை போட்டிருக்கிறாய் என்பதற்காக நான் சூத்திரன் என்பதை ஒப்புக் கொள்வதா? இடம் சிறிதாக இருக்கிறது, அதிகம் பேர் உள்ளே போக முடியாது என்றால், ஒவ்வொருவராகச் சென்று தொட்டுக் கும்பிட்டு வருகிறார்கள். நகை இருக்கிறது என்றால் இரண்டு போலீசைப் போட்டுப் பாதுகாத்துக் கொள். இவற்றிற்காக நாங்கள் எங்கள் மானத்தை இழக்கத் தயாராக இல்லை.

மொழிக்காகப் போராட்டம் என்கின்றார்கள். இன்றைக்கும் அனேகக் கோயிலில் பார்ப்பான் சமஸ்கிருதம் சொல்லிக்கொண்டு பூசை செய்கிறான். எதற்காகத் தமிழ்நாட்டில் இப்படி நடக்க வேண்டும் என்று இதுவரை எவனுமே கேட்க வில்லை? இந்த அரசாங்கம்- நம் அரசாங்கம் சும்மாவிட்டுவிடும் என்று கருதவில்லை. அவர்கள் கடமையை அவர்கள் செய்வார்கள். அதுபற்றி நாம் அரசாங்கத்தைக் குறை கூறப் போவதில்லை.

காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தனிக் கிணறு, தனிக்கோயில், தனி பள்ளிக்கூடம், தனிக் குளம் வெட்டுவது என்று அதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேல் பணம் ஒதுக்கி அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்தார்கள். நான் ஆதிதிராவிடர் மக்களுக்குத் தனியாகப்  பள்ளிக்கூடம் கிணறு கட்டுவதை விரும்பவில்லை. அதை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டேன்.

நாம் கர்ப்பக்கிருகத்திற்குள் போக வேண்டுமென்பது கடவுள் நம்பிக்கைக்காக, பக்திக்காக, புண்ணியம் சேர்ப்பதற்காக, போக வில்லை; அதில் உள்ள அவமானத்தை நீக்க வேண்டும் என்பதற்காகப் போகிறோம். திறந்து விட்டுவிட்டால் அதனால் என்ன பலன் என்று கேட்பீர்கள். சாமிக்கு இருக்கிற யோக்கியதையே போய் விடும். பார்ப்பானுக்கிருக்கிற உயர்சாதித் தன்மையும் போய் விடும். பார்ப்பானே வெளியே வந்து அங்குக் கடவுள் இல்லை, கல்தான் இருக்கிறது என்று சொல்வான்.

உனக்குத் தான் சாமி இல்லையே- நீ ஏன் அங்கு போகிறாய் என்று கேட்கிறான். மானம் இருப்பதால் போகிறேன். மானம் இல்லாத தால், அறிவு இல்லாததால், இழிவைப்பற்றிச் சிந்திக்காததால் நீ வெளியே நிற்கிறாய்-  என்று சொல்வேன். நாம் போவதற்கு உரிமை வந்துவிட்டால், பிறகு பூசை செய்கிற உரிமை நமக்குத் தானாகவே வந்து விடும்.

மொழிக்காகச் சத்தம் போடுகிறாய்; கோயிலிலே சமஸ்கிருதத்திலே மந்திரம் சொல்கின்றான். அதுபற்றி எவனுமே சிந்திப்பது கிடையாது. தமிழில் சொல்லக் கூடாது என்கின்ற ஏற்பாடு பார்ப்பானாகச் செய்து கொண்டதே தவிர சாஸ்திரத்தில் கிடையாது.

இதெல்லாம் வளர்ந்தால் மனிதனுக்கு இருக்கிற மூடநம்பிக்கைப் போய்விடும்; பூச்சாண்டி போய்விடும்.

சமுதாயத் துறைக்காக இந்த நாட்டிலே என்னைத் தவிர எவனய்யா பாடுபட்டான்? பந்தயம் கட்டிக் கேட்கிறேன். எவன் பாடுபட்டான்?

நீங்களெல்லாம் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று பயப்படாதீர்கள்; கடவுள் உண்மையில் இருந்தால் அதை ஒழிக்க யாராலும் முடியாது. அது போன்றுதான் இந்து மதம் என்பதும், இல்லாத ஒரு கற்பனையாகும். என்று தெளிவாக எடுத்துவிளக்கி இழிவு நீக்கிக் கிளர்ச்சியில் எல்லா மக்களும் பங்கேற்க முன்வர வேண்டும்.
--------------------------------26.10.1969 அன்று வேலாயுதம்பாளையம் நாகம்மையார் திடலில் ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு- "விடுதலை", 7.11.1969

1.1.16

கன்னட ராமசாமிக்குத் தமிழ் அபிமானம் ஏன்? - பெரியார்

தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை





- தந்தை பெரியார்




தலைவரவர்களே! தாய்மார்களே! தோழர்களே! மற்றும் முத்தையா முதலி யார், தாவூத்ஷா முதலிய தலைவர்களே! இன்று இங்கு நீங்கள் லட்சக்கணக்காகக் கூடி, என்னை ஆடம்பரமாக வரவேற்று பல சங்கங்களின் சார்பில் வரவேற்பு அளித்து, நமது முயற்சிகள் ஈடேறத் தமிழ்நாட்டிற்கே வழிகாட்டியாக முதன் முதல் 1001 ரூபாய் பரிசளித்த உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான  நன்றியைத் தெரிவிக்கின்றேன். என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசி, நான் ஏதோ செய்து விட்டதாக வரவேற்புகள் அளித்தது எதற்கு என்பது எனக்கு நன்கு தெரியும். உண்மையில் அப்புகழ்ச்சிகளுக்கெல்லாம் நான் தகுதியுடையவனல்ல. ஆனால், எனது தொண்டின் கருத்தினிடமும், அவசியத்தினிடமும், நீங்கள் வைத்துள்ள உண்மை அன்பும், ஆசையுமே இதற்குக் காரணமென எண்ணுகிறேன்.


மேலும் எனக்கு ஊக்கத்தைத் தூண்டவே எனக் கருதுகிறேன். இந்த நன்றி, வார்த்தையால் மட்டும் போதாது. எனினும் கருத்திற் கிணங்க நீங்கள் இட்ட பணியை நிறை வேற்ற எனது ஆயுள்வரை தயாராக இருக்கிறேன். (கை தட்டல்) நான் உங்க ளுக்காகப் பல தொண்டுகள்  செய்ததாக எனக்கு முன் பேசிய தலைவர்கள் கூறி னார்கள். ஆனால், நான் தமிழர்களுக் காகச் செய்ததைவிட மற்றவர்களுக்காகச் செய்ததே மிக அதிகமாகும். நீதிக் கட்சி, தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள் ஆகியவர்களுக்காகச் செய்ததைவிட, காங்கிரசிற்கு நான் உழைத்தது கணக்கு வழக்கில்லை. எனது வாலிபப் பருவத்தை யும், ஊக்கத்தையும் காங்கிரசிற்காகவே கழித்தேன். இன்று அதன் சக்கையைத் தான் உங்களுக்காகச் செலவிடுகிறேன். நான் முன்பு சென்றது தப்பு வழி என உணர்ந்து திருந்தி சென்ற 15 வருடங்களாக வேலை செய்து வருகிறேன். நான் கோரிய பலனில் நூற்றில் ஒன்றுகூட இன்னும் வரவில்லை. ஓரளவுக்குத் தமிழர்களுக்கு உண்மையைத் தெரிவித்து வருகிறேனே ஒழிய, இன்னும் காரியம் கைகூடவில்லை. சுமார் முப்பதிற்கு மேற்பட்ட சங்கங்கள் இன்று எனக்கு வரவேற்பளித்தன. அவை களில் தொழிலாளர்கள் சார்பாகவும், முஸ்லிம்கள் சார்பாகவும், விசுவப் பிராமணர்கள் சார்பாகவும் அளித்த வரவேற்புப் பத்திரங்களையே மற்றவை களைக் காட்டிலும் நான் பெருமையாகக் கொள்ளுகின்றேன். தொழிலாளர்கள் சம்பந்தமாக இன்று சிலவற்றைக் கூற ஆசைப்படுகிறேன்.


அன்பும், பக்தியும், கவலையும் தொழிலாளரிடமே!

முன்பு இரண்டொரு சந்தர்ப்பங்களில் சென்னையில் நடைபெற்ற கடற்கரைக் கூட்டங்களில் தொழிலாளர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லியுள்ளேன். எனக்குத் தொழிலாளர்களிடம் உண்மை யில் அன்பும், பக்தியும், கவலையும் வேறெதையும்விட அதிகம் என்பதை உண்மைத் தொழிலாளர்கள் 15, 16 வருடமாகத் தொழிலாளருடன் பழகுபவர் அறிவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு தொழி லாளர் சங்கத்தை அரசியல் கூட்டமும், சுயநலக் கூட்டமும் வேட்டையாடின. அவைகளுக்குக் காட்டிக் கொடுத்தவன் நான் என்பதும் எனக்கு நன்கு தெரியும். ஆனால், பின்பு உண்மை உணர்ந்து தொழிலாளர்களை அரசியல் புரட்டுக் காரர்களிடத்தி லிருந்தும், சுயநலக் கூட்டத்திலிருந்தும் விடுவிக்கப் பெரிதும் பாடுபட்டேன்; முடியவில்லை. காதினிக்கப் பேசுபவர்களைக் கண்டு தொழிலாளர்கள் மயங்குவது அறியப் பெரிதும் வருந்தி னேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு நாகையில் ரயில்வே வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கக் கூடாதென்று அவர்களை எவ்வளவோ வேண்டியும் சில போலி களை நம்பி வேலை நிறுத்தம் ஆரம்பித்த தால் தொழிலாளர்கள் காட்டிக் கொடுக் கப்பட்டனர். நான் வேண்டாமென்ற வேலை நிறுத்தத்தை மீறி நடத்துவது கண்டும் பின்னிடாது, தொழிலாளர்களுக் காக அதில் கலந்துகொண்டு பாடுபட்டு, அதற்காக நான் சிறை சென்றதை அக் காலத் தலைவர்கள் உணர்வார்கள்.

தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை

எதனால் தொழிலாளர் நன்மை அடைவார் என்பதில் எனக்கும் அரசிய லாளர்கள், தொழிலாளர்களுக்கும் அபிப் பிராய பேத மேற்பட்டதால் என்னால் தொழிலாளருடன் அதிகமாகக் கலந்து கொள்ள முடியாது போயிற்று. எனினும் தொழிலாளர்களின் விடுதலையே தமி ழர்களின் விடுதலை - பார்ப்பனரல்லா தாரின் விடுதலையாகும். பார்ப்பனரல்லா தார் முன்னேற்றமென்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே. இயந்திரத் தின் பக்கத்தில் நிற்பவனே தொழிலாளி என்று கருதுகிறார்களே ஒழிய, நிலத்தை உழுபவன் - உழவனும் தொழிலாளிதான் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் தான் அவ்வியக்கம் எத்தன்மையது என்பதை உணர்வர். இந்து மதக் கோட்பாட்டின்படி நாம் அத்தனை பேரும் தொழிலாளிகளே. பல வர்ணம், ஜாதிகள் சொல்லப்பட்டாலும் உலகத்தில் சூத்திரன், பிராமணன் என்ற இரண்டே ஜாதிதான் உண்டு என வருணாசிரமிகள் என்போரும், வைதிகர்கள் என்போரும் கூறி வருகின் றனர். இவ்வாறு பார்க்கும்போது பார்ப் பனர்கள் அத்தனை பேரும் முதலாளிகள், நாம் அனைவரும் தொழிலாளிகள். பார்ப்பனர்கள் பாடுபடாமலேயே வயிறு வளர்க்கின்றனர். நாம் பாடுபட்டும் வயிறு கழுவ முடியாத நிலையிலிருக்கின்றோம். எனவே, இந்நிலை மாறினால்தான் நமது தொல்லைகள் நீங்குமே ஒழிய, ஆலையில் வேலை செய்பவனுக்கு ஒரு நாலணா கூலி அதிகமாகக் கிடைத்து விட்டதாலேயே தொழிலாளிப் பிரச்சினை முடிந்துவிடாது.

தொழிலாளரை ஆதரியுங்கள்

அந்த வழியில் எனக்கு விழிப்பேற்பட்ட காலம் முதல் சூத்திரன் என்று சில சோம் பேறிகளால் பேரிடப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வருகி றேன். அவர்கள் வார்த்தைகளை நம்பி தொழிலாளிகள் இன்று எங்களைப் பரிகசித் தாலும், கேலி செய்தாலும் கடைசி வரை நாங்கள் தொழிலாளிகளுக்காகவே உழைப் போம். இன்று வேலை நிறுத்தத்தால் சூளை மில் முதலிய மில் தொழிலாளர்கள் கஷ்டப் படுகின்றனர். முன்னின்ற தொழிலாளர் தலைவர் பலர் அரசாங்கத் தலைவர் களுக்குக் கீழ்ப்படியாத காரணத்தாலேயே இன்று தொழிலாளிகள் கஷ்டப்படுத்தப்படு கின்றனர். எனவே, நாம் அத்தொழிலாளர் களுக்குச் சகாயம் செய்வதுடன், வேலை யிழந்த பலருக்கும் நம்மால் ஆகும் வேலை களைக் கொடுத்து ஆதரிக்க வேண்டுமென உங்களை வணக்கமாகக் கேட்டுக் கொள் கிறேன். இக்கூட்டத்தின் சார்பாகக்கூட தொழிலாளர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும்.

அடுத்த ஆண்டில் ரூ. 10001 பெறுவேன்!

1001 பேர் சிறை சென்றதன் அறிகுறியாக நீங்கள் இன்று 1001 ரூபாய் கொடுத்தீர்கள். இது எனது சொந்தச் செலவிற்கல்ல. நமது தொண்டு, இயக்கம், எண்ணம் நிறைவேறு வதற்காகவே உதவினீர்கள். இதைப்போல் மற்ற ஜில்லாக்காரர்களும் செய்ய வேண்டுமென வழிகாட்டினர் சென்னைத் தோழர்கள். நாம் எண்ணுவது சரியாயிருக்கு மானால், இனியும் ஒரு  வருடம் ஆச்சாரி யார் நம்மீது கருணை வைத்தால் அடுத்த ஆண்டில் 10001 ரூபாய் பெறுவேன் எனக் கருதுகிறேன். முதன் மந்திரியாரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாண்டில் 10001 தொண்டர்களைப் பிடிப்பதன் மூலம் நமக்கு 10001 ரூபாய் நீங்கள் கொடுக்க வழிசெய்து  உதவ வேண்டுகிறேன்.

சிறை செல்வது பிரமாதமல்ல

சிறை சென்றதில் புகழோ, தியாகமோ ஒன்றுமில்லை. அதன் ரகசியம் எனக்குத் தெரியும். என்னுடைய வழக்கில்கூட  அய்க் கோர்ட்டு நீதிபதி முன்பு, 7 தடவை சிறை சென்றவருக்கு இது என்ன பிரமாதம்? என்று கூறியதாகக் கேள்வியுற்றேன். ஒரு காரியத் திற்காகத்தான் தாங்கள் சிறையில் கஷ்டம் அனுபவித்ததாகச் சிலர் சொல்வது, வெளி யில் வந்தால் என்ன கூலி என்பதற்காகவே, இதை எதிரிகள்தான் சொல்லிக் கொடுத் தார்கள். மந்திரி வேலை முதலில் எனக்குத் தான் என உரிமை பாராட்டவே தாங்கள் கஷ்டமனுபவித்ததாகக் கூறுவதுண்டு. உண்மையில் நமது உணர்ச்சியை மாற்றக் கூடிய நிலையில் அவ்வளவு கஷ்டம் சிறையில் ஒன்றுமில்லை. சிறை செல்வதால் ஏற்படும் பலாபலனை உணர்ந்தே செல்லுகிறோம். இதில் என்ன தியாகம் இருக்கிறது? நான் சிறையில் அதிகம் கஷ்டப்படவில்லை. 3 சிறை அதிகாரிகளும் என்னை நன்கு கவனித்தனர். ஆனால், அரசாங்கத்தின் பழிவாங்கும் எண்ணம் அங்கு தாண்டவமாடுகிறது. உடல் நோயுற்ற வர்களிடத்துச் சிறிதுகூட கருணை காட் டப்படவில்லை. அவர்களை ஒழிக்கவே டாக்டர்கள் நினைக்கின்றனர்.

சிறைச்சாலை டாக்டர்கள் போக்கு

முன்பு பேசியதுபோல இன்று நான் பேச முடியவில்லை. எனக்குச் சில பொறுப்புகள் இருக்கின்றதென சில தலைவர்கள் எனக்குப் புத்தி புகட்டுவதுண்டு. அது எனக்கு முடிவதில்லை. ஆனாலும் ஓரள வுக்கு அடக்கியே பேசுகிறேன். வெளியில் காயலா கண்ட ஒருவன் 6 மாதத்தில் செத்து விடுவான் என்றால், சிறையில் 15 நாட் களிலேயே இறந்து படுவான். இதற்கு அரசாங்கத்தாரோ, மற்ற யாரோ, யார் பொறுப்பாளி என்று என்னால் கூற முடியாது. அல்லது அந்த நிர்வாகத் தோர ணையோ என்னவோ தெரியவில்லை. ஒருவனுக்கு நோய் என்றால் அவன் பொய்  பேசுவதாகவே டாக்டர்கள் நினைகின்றனர். இன்னும் சொல்வேன்; ஒருவனுக்கு நோய் என்றால் காதிலிருக்க வேண்டிய ஸ்டெ தெஸ்கோப்பை கழுத்தில் போட்டுக் கொண்டே அவனை டாக்டர்கள் பரிட்சிக் கின்றனர். இதை ஏன் சொல்லுகிறேனென் றால் கைதிகளை அவ்வளவு மோசமாக நினைக்கின்றனர். இதைப் பற்றிச் சர்க்கார் சிறிதுகூடக் கவலை எடுத்ததாகத் தெரிய வில்லை.

சட்டம் மீறல் - சண்டித்தனம் நமது கொள்கையல்ல

இதனால் உங்களைச் சிறைக்குச் செல்லுங்கள் என நான் கூறவில்லை. ஏன்? மக்களிடம் ஒழுங்கு மீறும் எண்ணத்தையும், சட்டத்தை மறுக்கும் உணர்ச்சியையும் உண்டாக்கக் கூடாது  என்பதே எனது எண்ணம். காரணம்? அது பின்னர் நமக்கே திரும்பிவிடும். பலவற்றிற்கும் பட்டினி யிருந்த காந்தி இன்று பட்டினி இருப்பது கூடாதென்கிறார். ஏன்? பலர் சிறு காரியங் களுக்கும் அதைப் பின்பற்றுகின்றனர். அதேபோலச் சட்டம் மீறல், சிறை செல்லும் உணர்ச்சி, அடாவடி, சண்டித்தனம் ஆகிய வைகளை அவர்களே கற்றுக் கொடுத்தனர். இந்த 24 மாத ஆட்சியில் 100, 200 இடங் களில் சத்யாக்கிரகக் கூப்பாடு கேட்கின்றது கண்டு வருந்துகின்றனர் காங்கிரஸ்காரர்கள். இரண்டு பக்கங்களிலும் தொல்லை. என்ன செய்வது என்றே முடிவுக்கு வரமுடியாது தவிக்கின்றனர்.  எனவேதான், காரணம் சொல்லாது இந்தி எதிர்ப்பாளர்களை வெளியில் விட்டனர்.  தொண்டர்கள் விடுதலைக்கு இதுவரை சரியான காரணம் சொல்லப்படவில்லை.

சட்டம் மீறக் கூடாதென்பதே எனது எண்ணம். ஆனால், மக்கள் உணர்ச்சியைத் தப்பாக எண்ணி அதனை அடக்க அரசாங் கத்தார் தப்பான முறைகளைப் பலவந்தமாக உபயோகித்தால் நியாயமான உரிமைகளை இழக்க எவனும் பின்னிட மாட்டான்.

மூச்சு விடுவதே சட்ட விரோதமானால் அதற்காகத் தற்கொலை செய்து கொள்வது மேலா? சிறை செல்வது மேலா? எனவே, மக்கள் மீது அரசாங்கத்தார் மீண்டும் அடக்குமுறை உபயோகிக்க முன் வந்தால் அதனை வரவேற்பேனே ஒழிய, அதற்காகச் சிறிதும் பயப்பட மாட்டேன்.
ஏமாற்றப் பார்க்கின்றனர்!

இந்தி எதிர்ப்பைப் பற்றி ஏமாற்றிக் காரியம் செய்ய எண்ணுகின்றனர். நேற்று கூட இந்தியை எடுத்து விடுவதாக ஆச் சாரியார் சொன்னார். எனவே, மறியல் செய்ய வேண்டாம் என இந்தி எதிர்ப்புச் சர்வாதிகாரியாயிருந்த ஒரு அம்மையார் சொன்னதாகப் பத்திரிகையில் பார்த்தேன். அது உண்மையானால் அன்று சென்ட்ரல் ஸ்டேஷனில் காலில் விழுந்த மூர்த்தியாரி டமே ஆச்சாரியார் கூறியிருக்கலாமே இந்தியை எடுத்து விட்டேன் என்று. அதை விட்டு யோசிக்கின்றேன் என்பானேன். எனவே, கட்டாயம் எடுபடவில்லை என்பது விளங்கவில்லையா? எனவே, மக்களை ஏமாற்றத்தானே இது. இந்தி சம்பந்தமான சர்க்கார் உத்தரவை நேற்று விடுதலையில் நீங்கள் பார்த்திருக்கலாம். அது எல்லாப் பள்ளிக்கூட அதிகாரிகளுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறது. அதில் கட்டாயம் என்பது நன்றாக எழுதப்பட்டிருக்கின்றதே. 100 பள்ளிகளிலிருந்து இன்று 225 பள்ளிகளி லாயிற்று. இன்று 4, 5, 6ஆம் பாரங்களிலும் வைக்கப் போவதாகச் சொல்லுகின்றனர். இதில் தேசியம் ஒன்றுமில்லை. வேறெ தையோ எண்ணி தமிழர்மீது கட்டாயமாகச் சுமத்துகின்றனர்.

அகராதி கூறுகிறதே!

இனி, நாங்கள் வேறு; ஆரியர்கள் வேறு என்பதைப் பல இடங்களில் கூறி யுள்ளோம். பல பார்ப்பன நண்பர்கள் தனியே என்னிடத்தில் வந்து இதை மட்டும் விட்டுவிடு; மந்திரிசபையை எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கு என்று கூறுகின்றனர். ஆனால், இந்தி என்றால் ஆரியர் மொழியென அகராதி  கூறுகின்றது. நீங்கள் எடுத்துப் பாருங்கள். அந்த ஆரிய மொழி யைத் தமிழர் தலையில் ஏன் கட்டாயப் பாடமாகப் புகுத்த வேண்டும்? பல பத்திரிகைகள் இந்துஸ்தானி என்று கூறி னாலும், சர்க்கார் உத்தரவு  இந்தி என்றுதான் கூறுகிறது; ஒரு இடத்தில் இந்தி என்பது; பின்னர் இந்துஸ்தானி என்பது; 200 வார்த் தைகள் படித்தால் போதும், கட்டாயமில்லை; பாசாகாவிட்டாலும்  பரவாயில்லை; இப்பொழுது அசட்டை செய்தால் பின் னால் உத்தியோகங்கள் கிடைக்காது வருந்த நேரிடும் என்று இடத்திற்குத் தக்கவாறு பேசுவதன் கருத்தென்ன? எனவே, இனி உண்மை கூறாது, சூழ்ச்சி யாகச் செய்யும் தந்திரங்களை நினைக்கும் போது இதில் ஏதோ பின்னால் ஆபத்து இருக்கிறதென உணருகிறோம். எனவே, எந்த விதத்திலும் ஆரிய பாஷை கட் டாயப் பாடமாகாமல் இருப்பதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்தால்தான், பின்னர் நீங்கள் தமிழர் என்று சொல்லிக் கொள்ள முடியும்.

தமிழ்க் கலையைக் காப்பது தமிழன் கடமை

ஒரு சிலர் கன்னட ராமசாமிக்குத் தமிழ் அபிமானம் ஏன் என்கின்றனர். அவர்கள் தமது தாய்மொழியை - கலையை விற்று, பிறருக்கு அடிமையாகி, தன்னையும் விற்றுப் பேசுகின்றனர்.

கன்னடன், தெலுங்கன், மலையாளி என்போர் யார்? எல்லோரும் தமிழர்களே - திராவிடர்களே. தமிழிலிருந்துதான் இவைகள் வந்தன. அம்மொழிகளில் கலந்துள்ள வடசொற்களை நீக்கிவிட்டால் எஞ்சுவது தனித் தமிழே. அப்பொழுது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற பெயர் மறைந்துவிடும். எனவே, எங்கள் மொழியிலுள்ள சீரிய கலைகளை ஒழிக்க முயல்வதாலேயே பலத்த கிளர்ச்சி செய் கிறோம். இது ஒரு அற்ப விஷயமல்ல. தமிழ்க்கலை ஒழியாதிருக்க நாம் வகை தேட வேண்டுவது உண்மைத் தமிழன் கடமையாகும். எல்லாப் பள்ளிகளிலும் இந்தி வைத்து விட்டால், இந்தி வேண்டாத மாணவர்கள் எங்கு சென்று படிப்பது என்று சிலர் கேட்கின்றனர். 3ஆம் பாரம் வரை தனிப் பள்ளிக்கூடங்களை ஆங் காங்கு ஏற்படுத்தி அதில் மாணவர்களைத் தயார் செய்து 4ஆம் பாரத்தில் கொண்டு சேர்த்துவிடலாம். இது ஒரு பெரிய காரியமல்ல. இதற்குச் சர்க்கார் உத்தரவு தேவையில்லை. இத்தகைய பள்ளிகளை விரைவில் சென்னையில் தொடங்கச் சிலர் முயல்கின்றனர். அதற்கு நீங்கள் ஆக்கம் அளியுங்கள்.

லட்ச ரூபாய் வேண்டும்

தென்னிந்திய நலவுரிமைச் சங்கமென் பது காங்கிரஸ்காரர்களால் 500, 1000 அடி ஆழத்தில் புதைப்பட்டதாகச் சொல்லப் படும் கட்சியாகும். அக்கட்சி புதைக்கப் பட்டதா? அன்றி நாட்டில் வேரூன்றி கிளை விட்டு ஓடுகின்றதா? என்பதைக் கண்ணுற்றவர் அறிவர். சென்னையிலும், வெளி ஜில்லாக்களிலும் காங்கிரசை விட அதிக உறுப்பினர்களைச் சேர்த்து ஆங்காங்கு கிளைச் சங்கங்கள் நிறுவ வேண்டும். இதைத் தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்துவதோடு அல்லாது இதைக் கொண்டு சமுதாய முன்னேற்றத்திற்கு வேலை செய்ய வேண்டும். நமக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. நமக்கு ஆள் பலம் அதிகம் என்பது காண மகிழ்ச்சியடைகிறேன். இன்று எனக்குக் கொடுத்த 1001 ரூபாய்களும் ஒவ்வொரு ரூபாயாக வந்தது என்பது எனக்குத் தெரியும். எப்படி இதைச் சேர்க்க முடிந் ததோ, அதேபோல் தலைவர் குமாரராஜா போன்றவர்கள் வெளியில் பிச்சைக்குப் போக வேண்டும். அவர் மேல் துண்டை எடுத்து நீட்டிப் பிச்சை கேட்டால் பதினா யிரம், லட்சக்கணக்கில் சேர்க்கலாம். 6 மாதத்தில் லட்ச ரூபாய் சேர்த்தால் ஒழிய நமக்கு வெற்றியில்லை. எனவே, ஒவ் வொரு ஜில்லாத் தோழர்களும் இம்முயற் சியில் ஈடுபட்டு உதவ வேண்டுகிறேன்.

-----------------------------------18.06.1939 அன்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு- "குடிஅரசு" - சொற்பொழிவு - 25.06.1939