Search This Blog

17.3.23

பெரியாரை வைத்தியநாத அய்யர் காப்பாற்றினாரா?

தந்தை பெரியாரை வைத்தியநாத அய்யர் காப்பாற்றினாரா? மதுரைக் கலவரம் பற்றி தந்தை பெரியார் விளக்கம்!



மதுரை கருப்புச் சட்டைப் படை மாகாண மாநாடு ஊர்வலம் 11.05.1946ஆம் தேதி மதுரை காங்கிரசுக்காரர்களைக் கதி கலங்கச் செய்துவிட்டது. 50,000 மக்கள் கொண்ட 6 மைல் ஊர்வலமும், சவுராஷ்டிர, பார்ப்பன ஆண்கள், பெண்மணிகள் உள்பட ஊர்வலத்தைக் கடவுள் உற்சவ ஊர்வலமாகக் கருதிக் கும்பிட்டு மரியாதை செய்த மூட-நம்பிக்கைக் காட்சியும், வைகை ஆற்றில் போடப்பட்டிருந்த பிரமாண்டமான கொட்டகையிலும் அதற்கு வெளியிலும் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களையும் கண்டு மனம் வெடிக்கப் பொறாமை கொண்ட காங்கிரசாரில் 11ஆம் தேதி இரவே சில தலைவர்கள் கூடி, சுமார் 1000 ரூபாய் போல் தங்களுக்குள் செலவு தொகை ஏற்பாடு செய்து கொண்டு இரவு முழுதும் சுற்றி அலைந்து தொண்டர்களையும், கலகக்காரர்களையும் ஏற்பாடு செய்து கொண்டு 12ஆம் தேதி காலையில் அட்டூழியம் துவக்கி விட்டுவிட்டார்கள்.


இப்படிச் செய்வதற்கு தங்களுக்கு ஒரு சாக்கு கற்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இரண்டு விஷயங்களை கற்பனை செய்து கொண்டார்கள்.

1. கருப்புச் சட்டையினர் கோவிலில், சாமி, பெண்கள் ஆகியவர்களை அவமதித்ததாகவும்,
2. காங்கிரசு கொடியை கொளுத்தினதாகவும்,

கற்பித்த இரு விஷயங்களைக் காங்கிரசு தொண்டர்கள் ஊர் முழுவதும் குழாயில் கூவியும், பறையடித்தும் ஜனங்களை கிளப்பி விட்டார்கள். அப்படி இருந்தும் ஜனங்கள் ஒன்றும் ஆத்திரம் அடையாமல் அலட்சிய-மாகவே இருந்துவிட்டார்கள்.

பிறகு காங்கிரசுக்காரர்கள் சிலர் மதுரை நகரில் உள்ள கருப்புச் சட்டைப்படை காரியாலயத்தில் புகுந்து (அந்த சமயம் அங்கு ஒருவரும் இல்லை, எல்லோரும் மாநாட்டில் இருந்தார்கள்) அங்குள்ள சாமான்களை எடுத்துக் கொண்டு கட்டி இருந்த கொடியையும் சாய்த்துப் பிடுங்கிக் கொண்டு, கூட்டமாக வீதியில் கூப்பாடு போட்டுக் கொண்டு வழி நெடுக கட்டி இருந்த கொடிகளையும் பறித்துக் கொண்டு எதிரில் தென்பட்ட இரண்டொரு கருப்புச் சட்டை போட்டிருந்தவர்களையும் தாக்கிக் கொண்டு கூத்தடித்தவண்ணம் தோழர் ராதா வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அந்த வீடு தாளிட்டிருந்த படியால் பெரும் பெரும் கற்களை கதவின் மீது எறிந்திருக்-கிறார்கள்.

இந்தச் சமயத்தில் இரண்டொரு தொண்டர்கள் டவுனிலிருந்து கொட்டகைக்கு ஓடிவந்து இந்தப்படி காங்கிரசுக்காரரால் டவுனில் காலித்தனம் நடப்பதாகச் சொன்னார்கள். இதைக் கேட்டவுடன் நான் கொட்டகை-யில் இருந்தவர்களுக்குத் தக்கபடி அடக்கம், பொறுமை, கட்டுப்பாடு ஆகியவை-களைப் பற்றி மறுபடியும் (அதாவது முதல்நாள் எனது தலைமை உரையில் இவைகளையே சொன்னேன்.) வற்புறுத்திச் சொல்லி யாரையும் பந்தலுக்கு வெளியில் போகக் கூடாது என்றும் சொல்லி அடக்கிவிட்டு மாநாட்டை நடத்திக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் மறுபடியும் சில தொண்டர்கள் மேடைக்கு ஓடிவந்து, காங்கிரசு காலிகள் வழிநெடுக கருப்புச் சட்டைக்காரரை தாக்கிக் கொண்டு இங்கும் வரவும், கொட்டகையை கொளுத்தவும், திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள், வரப்போகிறார்கள் என்று சொன்னார்கள். நான் அதைப் பற்றி கவலைப் படாதீர்கள்; வந்தால் பார்த்துக் கொள்ளலாம்; நீங்கள் வெளியில் போகாதீர்கள் என்று சொன்னேன்.


கொட்டகையில் இருந்த ஒரு தொண்டர் இரண்டு ஊர் வாலண்டியர்கள் ஒன்றாய் வந்து கேளுங்கள் என்று ஒலி பெருக்கியில் கூப்பிட்டார். அவர்கள் பந்தலுக்கு முன்புறம் சுமார் 100, 200 பேர்கள் ஒன்று சேர்ந்திருக்-கிறார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தத் தொண்டர் ஊருக்குள் இருக்கும் கருப்புச் சட்டைப் பிரதிநிதிகளை காப்பாற்றி அழைத்துவரச் சென்றார்கள். வழியில் ஒரு இடத்தில் இவர்களைக் கண்ட போலிசார் மேலே செல்ல ஒட்டாமல் தடுத்து அப்படியே ஒரு இடத்தில் சேர்த்தாற்போல் அடைத்து-வைத்துக் கொண்டார்கள். இது தெரிந்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டுக் காரியதரிசி தோழர் திராவிடமணி கொட்டகையில் இருந்த ஒரு சப் இன்பெக்டரை அழைத்துக்கொண்டு டவுனுக்குள் சென்றார். சப்இன்பெக்டர் சைக்கிளில் சென்றார், திராவிட மணி குதிரை வண்டியில் சென்றார். சைக்கிள் வேகமாகச் சென்றதால் மறைந்துவிட்டது.

திராவிடமணி சென்ற வண்டியைக் காங்கிரசுகாரர்கள் நிறுத்தி, திராவிட மணியை இறங்கச் செய்து கடினமாகத் தாக்கினார்கள். தாக்குதல் பொறுக்கமாட்டாமல் அவர் ஓடி ஒரு அடுத்த முசுலிம் வீட்டிற்குள் புகுந்துவிட்டார். ஆனால் அவர் எங்கு போனார் என்று மற்ற நம் தொண்டர்களுக்குத் தெரியாததால் திராவிட மணியை தூக்கிக் கொண்டுபோய் விட்டார்கள் என்று சத்தம் கொட்டகையில் போடப்பட்டது. ஜனங்கள் ஒரே கட்டுப்பாடாய் எழுந்தார்கள். நான் எழுந்து அவர்களை உட்காரச் சொல்லிக் கொண்டிருக்கும்போது போலிசு ஜில்லா சூப்பிரண்டு, சில இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், மேஜிஸ்ட்ரேட்டுகள் ஆகியவர்கள் கொட்டகைக்குள் நுழைந்து மேடைக்கு வரலாமா என்று கேட்டார்கள். நான் வரலாம் என்று சொன்னேன். நகரத்தில் காலித்தனம் (ஹூலிகானிசம்) தலைவிரித்து ஆடுகின்றது. இங்கு வராதபடி தக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். உங்கள் கூட்டத்தை எவ்வளவு சுருக்கி நடத்தலாமோ அவ்வளவு சுருக்கமாக நடத்தி முடியுங்கள் என்று சொன்னதோடு, உங்கள் ஆட்களுக்கு ஒன்றும் கவலை வேண்டியதில்லை. அவர்களை அடக்கமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஜில்லா சூப்பரண்ட் சொன்னார். கலகத்துக்குக் காரணம் என்ன என்று கேட்டேன். அதில் ஒருவர் இன்றைய ஆட்சி அப்படி இருக்கிறது நாம் என்ன செய்ய முடியும்? என்றார்.

அதோடு கூடவே மற்றொருவர் உங்கள் ஆளுகள் காப்பிக் கடை கண்ணாடிகளை உடைத்த-தாகவும், காங்கிரசு கொடியை அவிழ்த்து கொளுத்தியதாகவும், கோவிலில் சென்று கணேச விக்கிரகத்தைத் தொட்டு விட்டதாகவும் சொல்லுகிறார்கள் என்று சொன்னார். உடனே எனக்கு கோபம் வந்து இந்தப்படி நம்மவர்கள் நடந்ததாக அதிகாரிகள் சொல்லுகிறார்கள். இப்படி நம்மவர்கள் செய்வது என்றால் நமக்கு யோக்கியதையா என்று கேட்டேன். உடனே ஞி.ஷி.றி. அவர்கள், அவர்கள் செய்ததாக நான் சொல்லவில்லை, செய்ததாகக் காங்கிரசுக்காரர்கள் சொன்னார்கள், அதை உங்களிடம் சொன்னேன் என்று சொன்னதோடு, இதை இந்த ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றார் (அதாவது இந்தப் பழி கற்பனை என்பதை அவர் அப்போதே உணர்ந்திருக்கிறார் என்பதற்கு அறிகுறியாகும்).


எனவே முதல்நாள் ராத்திரி, காங்கிரசு தலைவர்கள் தோழர் வைத்தியநாதய்யர், தந்தி பத்திரிகை ஆசிரியர் இன்னும் இரண்டொருவர் சேர்ந்து வம்புச்சண்டைக்கு வர ஏற்படுத்திக் கொண்ட காரணங்கள் இவை என்றும், அங்கு கோவிலுக்கு உண்மையில் ஆண்கள் யாரும் செல்ல-வில்லை. வெளியூர் பெண்கள் சிலர் கோவிலுக்குப் போனார்கள் என்றும் சிலர் அப்போதே சொன்னார்கள்.

இதன் பின் சில தீர்மானங்கள் படிக்கப்பட்டு என்னால் முடிவுரை கூறப்பட்டுத் தலை-வருக்கும், போலிசுக்கும் நன்றிகூறிக் கூட்டம் முடித்து யாவரும் கொட்டகைவிட்டு வெளிவந்துவிட்டோம்.

வெளிவந்தவர்கள் ஊருக்குள் சாப்-பாட்டுக்குப் போனால் காங்கிரசார் அடிப்பார்கள் என்றும் சாப்பாடு இங்கேயே கொண்டு வரப்படும் என்றும் யாரும் வெளியில் போகக்கூடாது என்றும் மேஜிஸ்ட்ரேட், சப்இன்ஸ்பெக்டர் என்னிடம் வந்து சொன்னார்கள், அதன் மீது யாரும் வெளி செல்லவில்லை. கடைசிவரை அன்று முழுவதும் சாப்பாடு வரவில்லை. காரணம் கேட்டதில் காங்கிரசார் நாம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த ஓட்டலுக்குள் புகுந்து சாப்-பாட்டை நாசம் செய்துவிட்டதாகப் பிற்பகல் 4 மணிக்குச் சொன்னார்கள். இதற்குள் காலி கூட்டம் பந்தலுக்கு வந்து அங்கு ஒவ்வொரு கொட்டகையாக நெருப்புவைத்துவிட்டு பிரதிநிதிகள் தங்கியிருந்த ஒரு முனிசிபல் பள்ளிக்கூடக் கட்டிடத்திற்குள் புகுந்து அங்குள்ள சிலரை அடித்துவிரட்டிவிட்டு, அங்குள்ள சுமார் 300, 400 பிரதிநிதிகளின் கைப்பை, பெட்டி, செருப்பு, குடை, பாத்திரம் முதலியவைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்கள். சிலர் நான் இருந்த கட்டிடத்-தையும் மற்றும் பிரதிநிதிகள் இருந்த கட்டிடத்தையும் சூழ்ந்து கொண்டு கற்களை எறிந்தார்கள், இந்த இடத்தில் போலிசார் துப்பாக்கியுடன் காவல்காத்து காங்கிரசுக்-காரர்களை விரட்டிக் கொண்டே இருந்தார்கள்.

எனவே, முதலில் கொட்டகையிலும், பிறகு பிரதிநிதிகள் சுமார் 2000 பேர்கள்  அடை-பட்டுக்கிடந்த கட்டடத்திலும் இந்த காரியம் மாலை 7 மணி வரை நடந்த வண்ணமாக இருந்தது.

மாலை சுமார் 5.30 மணிக்கு D.I.G. (டி.அய்.ஜி.), D.S.P. (டி.எஸ்.பி) சில இன்ஸ்பெக்டர்கள், மேஜிஸ்ட்ரேட்டுகள் நான் இருந்த ஜாகைக்கு வந்து தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டு, தங்களால் அடியோடு அடக்க முடியாததற்குக் காரணம் சொல்லி தங்களுக்கும் (ஞி.ஷி.றி.க்கும்) கண்ணிற்கு பக்கத்தில் கல்லடிபட்டு ஒழுகிய ரத்த ஒழுகலோடு,  காயத்தைக் காட்டிவிட்டு இன்று 7 மணிக்கு ஊரடங்குச் சட்டம் போடப்போகிற படியால் யாரும் ஊருக்குள் நடமாடமுடியாதென்றும் ஆதலால் நீங்கள் இன்றே போவதானால் அடுத்த டேஷன்களுக்கு வண்டி சப்ளை செய்கிறோம் என்றும் இல்லாவிட்டால் காலை போகலாம் என்றும் சொன்னார்கள்.

காலை முதல் பலருக்கு ஆகாரமில்லை ஆதலால் இப்பொழுதே அவர்களை அனுப்பிக்கொடுத்து விட்டால் நலம் என்றேன். சரி, வண்டியும் ஆளும் அனுப்புகிறேன் என்று சொல்லிப் போய்விட்டார். 7.30க்கு பஸ்கள் வந்தன. மக்கள் ஏறிச் சென்று கொண்டே இருந்தார்கள். மற்றும் பலர் டவுனுக்குள் இருந்து வந்து சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.

விசாரித்ததில், கருப்புச் சட்டை போட்ட தோழர்கள் சுமார் 40, 50 பேர்களுக்கு காங்கிரசுக்காரரால் அடி என்றும், ஒரு கருப்புச் சேலை அணிந்திருந்த பெண்ணை அடியோடு சேலையை அவிழ்த்துக் கொண்டு நிர்வாண-மாகத் தெருவில் ஓடஓடத் துரத்திக் காங்கிரசுக்காரர்கள் அடித்தார்கள் என்றும், சில பெண்களின் முகத்தில் காரி உமிழ்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஜாகையில் இருந்து எடுத்துக் கொண்டு ஓடிய சாமான்களும் பிரதிநிதிகளிடம் அடித்து மிரட்டிப் பிடுங்கிக் கொண்ட பணமும் காணாமல் போன சாமான்களின் பெருமானமும் எல்லாம் சேர்ந்து சுமார் 5000, 6000 ரூபாய் மதிப்பிடப்படுகிறது. இவை தவிர கொட்டகை, ஸ்டால்கடைகள் ஆகியன நாசப்படுத்திக் கொள்ளையடித்ததின் காரணமாய் ஏற்பட்ட நஷ்டம் சுமார் 15000 ரூபாய் என்று சொல்லப்படுகிறது.


தோழர் வைத்தியநாதய்யர் அவர்கள் கலவரத்தின் போது வந்தார் என்பது அவர் பணம் கொடுத்து ஏவிவிட்ட காலித்தனம் கிரமமாய், வெற்றியாய் நடந்ததா என்பதைப் பார்க்க வந்தார் என்றே நம் கூட்டத்தினர் கருதி அவரைக் கோபித்திருக்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் அவர் வந்தவுடன் காலிகள் அவரை மரியாதை செய்து வழியனுப்பி-யிருக்கிறார்கள். போலிசு சூப்பிரண்டை கல்லால் அடித்த காலிகள் தோழர் வைத்தியநாதய்யருக்கு அடிபணிந்து வாழ்த்து கூறினார்கள் என்றால் அதில் நம்மவர்கள் கொண்ட கருத்துக்கு ஆதரவு இல்லாமல் இருக்க முடியாது.

ஊர்வலத்தின் போதும், மாநாட்டில் எனது தலைமை உரையிலும் கருப்புச் சட்டைப் படையினரையும், திராவிடர் கழகத் தொண்டர்களையும் புத்தி கூறி அவர்களுக்கு அடக்கம், பொறுமை, ஒழுக்கம், கட்டுப்பாடு, கீழ்ப்படிதல் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதைத் தொண்டர்கள் மனம் புண்படும்படியான அளவுக்கு நான் இடித்து இடித்துக் கூறியிருக்கிறேன். மக்களிடம் சிறப்பாக காங்கிரசு கம்யூனிஸ்ட் தோழர்களிடம் நட்புரிமை காட்டவேண்டும் என்றும் கூறியிருக்கிறேன். இரவு நடந்த நாடகத்தையும் அடக்கமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்-கொண்டிருக்கிறேன். இவை சி.மி.ஞி சுருக்கெழுத்து ரிப்போர்ட்டை பார்த்தால் தெரியும். இப்படியெல்லாம் இருக்கக் கருப்புச் சட்டையினர் கோயிலுக்குள் செருப்புடன் சென்றது என்பதும் பெண்களை இழிவாகப் பேசியது என்பதும் காங்கிரசு கொடி கொளுத்தப்பட்டது என்பதும் எப்படி நடந்திருக்க முடியும் என்பதும் எனக்கு விளங்கவில்லை.


தோழர் இராதா வீட்டிற்குப் போய் அங்கு குழப்பமும், நாச வேலையும் செய்யப்பட்டதற்கு தோழர் வைத்தியநாத அய்யர் அறிக்கையிலும் நிருபர் சேதிகளிலும் ஒரு காரணமும் சொல்ல-வில்லை.

தவிர கோவில் பெண்கள் சாமி சாக்கை, காங்கிரசார் குறிப்பாகப் பார்ப்பனர்கள் கட்டுப்பாடாக கற்பித்துப் பேசி வருகிறார்கள்

திருச்சி மாநாடு நடந்த மறுநாள் இதையே சொல்லிக் கலகம் துவக்கினார்கள். அதாவது மலைக்கோட்டைக் கோவிலுக்குள் சென்று சுவாமியை அசுத்தப்படுத்தினார்கள் என்று எல்லாப் பத்திரிகைகளும் பிரசுரித்தன. பிறகு அது சிறிது கூட உண்மையற்ற அபாண்டப் புளுகாக முடிந்தது. ஒரு கருப்புச் சேலை கட்டிய பெண்ணை நிர்வாணமாக்கினார்கள் இந்தக் காலிக் கூட்டத்தினர். இந்த அட்டூழியம் பார்ப்பனர் பணத்தால் பார்ப்பனர்கள் பத்திரிகையால் கட்டுப்பாடாகச் செய்யப்-படுகின்றன. இன்று நேற்றல்ல வெகு நாளாகவே செய்யப்படுவதாகும். தோழர் வைத்தியநாத அய்யர் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வார் என்று நான் கருதவேயில்லை. ஆனால், முதல்நாள் ஊர்வலமும் மாநாடும், நாடகமும், பார்ப்பனர்களை அவர்களது கடைசி ஆயுதத்தைப் பயன்படுத்தி செய்தேதான் தீரும்.

அதனாலேயே அவர்கள் இந்த விளையாட்டு விளையாடினார்கள் எனலாம். ஆனால் சுத்த திராவிடர்கள் இதற்கு வானர சேனைகளாக விபீஷணர்களாக இருந்தது நம் சமுதாயத்-திற்கே இழிவான காரியமாகும்.

பத்திரிகைகளின் விஷமப் பிரசாரத்தால் பார்ப்பனர்களுக்கு, இவ்வளவு அட்டூழியம் செய்ய முடிகிறது. இவற்றால் எல்லாம் நமது தன்மானக் கிளர்ச்சி அடங்கிவிடும் என்று நினைப்பது அறியாமையேயாகும்.

கருப்புச் சட்டை படையினர் இதை ஒரு படிப்பினையாகக் கொள்ள வேண்டும். அடுத்த கருப்புச் சட்டைப் படை மாகாண தனிக் கூட்டம் ஒன்று சமீபத்தில் கூட்டப்பட வேண்டும். அது சமீபத்தில் நாம் கூட்டப்படப்-போகும் திராவிடர் கழகத் தனி ஸ்பெஷல் மாகாண மாநாட்டுடன் கூட்டப்பட வேண்டும். அதில் நாம் இதில் விட்டுப்போன காரியங்களைத் தொடர்ந்து நடத்தி நம் எதிர்காலப் போக்கை நிர்ணயிக்க வேண்டும். அதற்குள் கருப்புச் சட்டை போடுகிறவர்கள் பெருகி அங்கத்தினர் எண்ணிக்கையும் நிதி வசூலும் பூர்த்தியாக வேண்டும். மதுரையில் நடந்த பார்ப்பன சூழ்ச்சி, தொல்லை, துன்பம் ஆகியவை நாம் வேகமாய் நமது லட்சியத்தை நாடிச் செல்வதற்கு சாட்டை அடியேயாகும். நம் பெண்களுக்கும், சில பிரதிநிதிகளுக்கும் மதுரையில் ஏற்பட்ட இழிவு, துன்பம் ஆகியவை நமக்கு உணர்ச்சியை உள்கொள்ளும் மருந்தின் மூலம் கொடுக்காமல் இஞ்சக்ஷன் (அதாவது ஊசிபோடுவதன்) மூலம் செலுத்தப்பட்ட மருந்து மூலம் கொடுக்கப்பட்டதாகக் கருத வேண்டும். பார்ப்பனர் இப்படிச் செய்தும் நமக்கு மான உணர்ச்சி வரவில்லையானால் பிறகு நமக்குப் பார்ப்பனர் சொல்லும் வேசிமகன், சூத்திரன், கீழ்ஜாதி, என்பனவாகிய பேர் மிக மிகப் பொருத்தமானதே யாகும். ஆகையால், மதுரை படிப்பினையைக் கொண்டு யார் யார் பரிட்சையில் தேறுகிறார்கள் என்று பார்க்க ஆவலோடு காத்திருக்கிறோம்.


குறிப்பு:- கவர்மெண்டில் இருந்து ரிபோர்ட் கேட்டவுடன் தோழர் வைத்தியநாதய்யர் தமது இயற்கையான கவுண்டர் ஸ்டேட்மெண்ட் போடும் தொழில் சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி மதுரை அதிகாரிகளுக்கு இன்னவிதமாய் ரிபோர்ட் செய்வது என்று வழி சொல்லிக் கொடுக்கும் முறையில் ஒரு அபாண்ட அறிக்கை விட்டிருக்கிறார். துப்பாக்கி அடிபட்டுச் செத்தவர்கள் சவுராஷ்டிரப் பார்ப்பன ஆட்கள், இவர்கள் காங்கிரசுக்காரர்கள். குத்துப்பட்டவர் போலிசார் என்பதை மறந்து பத்திரிகை நிருபர்களும், நிகழ்ச்சி அன்று இவரது (தோழர் வைத்தியநாத அய்யரது) யோசனை கேட்டு அந்தப் படியே சேதி தயாரித்து அனுப்பி இருக்கிறார்கள்.

இனி இவைகளை அனுசரித்துத்தான் மதுரை அதிகாரிகள் ரிபோர்ட் செய்வார்கள் என்பதில் அய்யமில்லை. ஆனால் அந்த அதிகாரிகளில் சிலரே மதுரையில் காங்கிரசு ஆட்சியில் இவற்றை நீங்கள் எதிர்பார்க்க வேண்டியதுதான் என்று ஜாடை காட்டினார்கள். ஆனதால் மந்திரிகள் நீதியும் எப்படி இருக்கும் என்பது முடிவான-தேயாகும். எப்படி இருந்தாலும் நமக்கும் நம் தோழர்களுக்கும் அங்கு நடந்த உண்மைகள் தெரியும். கலவரம் எப்படி நடந்தது? யாரால் நடத்தப்படுகிறது? என்பதை கண்ணால் பார்த்ததேயாகும். எதிரிகள் தொல்லையையும், துன்பத்தையும், அனுபவிக்க சக்தி நமக்கும், நமது தொண்டர்களுக்கும் உண்டு. ஆகவே நாம் பயப்படவோ, கலங்கவோ, தேவையில்லை. இந்த மதுரை படிப்பினையில் நம் முயற்சியும், உள்ளமும் சற்று அதிகமாக உரம் பெற்றிருக்-கிறது. யாரும் கலங்க வேண்டியதில்லை.


                        --------------------------"குடிஅரசு" - தலையங்கம் - 18.05.1946
                                                                       ***

வைத்தியநாத அய்யரின் சதிவேலைகள் பற்றி

தந்தை பெரியார் கூறிய குறிப்புகள்!

¨    மதுரையில் கருப்புச் சட்டைப் படையினர் பிராமண சமுகத்தைக் கேவலமாகத் தாக்கியதாக பிராமண சேவா சங்கம் கண்டித்திருப்பதாகவும், மேற்படி சங்க காரியதரிசி சட்டமந்திரியிடம் இதுபற்றி புகார் செய்திருப்பதாகவும் - அதில் இந்தியன் பினல் கோட்படி கருஞ்சட்டைப்-படை நடத்தை குற்றமாகுமென்றும், 25 வருட காலத்துக்குமேல் பிராமணர்கள் பொறுத்து வந்ததாகவும், இனிப் பொறுக்க முடியா-தென்றும், குறிப்பிட்டிருக்-கிறதாகவும், 15ஆம் தேதி தினமணி எழுதுகிறது. இதிலிருந்து மதுரைக் கலவரத்துக்கு பார்ப்பன தூண்டு-கோல் எவ்வளவு இருக்கும் என்பதையும், தோழர் வைத்தியநாதய்யர் பணம் கொடுத்து கலவரத்தை கிளப்பிவிட்டார் என்பதில் உண்மை இல்லாமலிருக்குமா என்பதையும் திராவிடர்கள் சிந்திப்பார்களாக.

                       -----------------------"குடிஅரசு" - பெட்டிச்செய்தி - 18.05.1946


                                                                          ***

¨    அதில் மதுரை வக்கீல் தோழர் வைத்தியநாத அய்யர் என்பவர் இரண்டு விதத்தில் முக்கியமானவராகி அட்டூழியத்தை அவசிய-மாக்கி விட்டார் என்று தெரிகிறது. 
 
அவையாவன:- 1. மதுரையில் பொதுவாக இருந்து வரும் பார்ப்பனர்,- பார்ப்பனரல்லா-தார் என்கிற பேத உணர்ச்சி
 
 2. தோழர் வைத்தியநாத அய்யர் ஆச்சாரியார் கட்சியைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் அவருக்கு மதுரையில் மதிப்பு இல்லாமல் போனதோடு அவர் பேரில் மதுரை காங்கிரசின் பார்ப்பனரல்லாதாருக்கு வெறுப்பு அதிகமாய் இருந்ததும், அவருக்கு அங்கு மேடையே இல்லாமல் இருப்பதும், வீதியில் நடக்கக்கூட போதிய தாராளம் இல்லாமல் இருந்ததுமாகும். இந்த இரண்டு காரியத்துக்கும் பரிகாரம் தேட வேண்டிய முறையில் மதுரை அட்டூழியத்திற்கு அவர் பிறப்பிடக்காரராக ஆகவேண்டியவராகி-விட்டார். அதனாலேயே இந்த அட்டூழியத்-திற்கு வழி சொல்லிக் கொடுக்கவும், துவக்கப்படுவதற்கு செலவு கொடுக்கவும், இவர் பேரில் வெறுப்புள்ள காங்கிரசு தலைவர்களைக் கண்டு நேசம் பேசவும் முனைந்தார் என்றும் தெரியவருகிறது.

¨    தடிகளுடனும், கல்லுகளுடனும் காலிகள் வந்து பிரதிநிதிகள் தங்கியிருந்த கட்டடங்கள் மீது கல்லெறியவும் உள்ளே நுழையவும் ஆரம்பித்தார்கள். ரிசர்வ் போலிசார் துப்பாக்கிகளுடன் இருந்து அவர்கள் கட்டடங்களுக்குள் புகாமல் தடுத்து-வந்தார்கள். எனினும் அவர்கள் கலகமும், கல்வீச்சும் நடந்தவண்ணமாகவே இருந்தன. இதே சமயத்தில் தோழர் வைத்தியநாதய்யர் வந்து காலிகளுடன் குலாவி காலிகளின் புகழ் வார்த்தைகளை பெற்றுக் கொண்டு ஆசிர்வதித்துவிட்டுப் போனார் என்றும் தெரியவந்தது.

¨    இந்தக் காலித்தனத்தக்குக் காரணஸ்தர்களில் தோழர் வைத்தியநாத அய்யர் அவர்களே முக்கியமானவரும் முதன்மையானவரும் என்று பல இடங்களிலிருந்து சேதிகள் வந்து-கொண்டு இருக்கின்றன. அதற்கேற்றாற்-போல் கலவரத்துக்கு மறுநாளே மதுரை பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து கருப்புச் சட்டைப் படைக்காரர்-களால் தங்களுக்கு பயமாயிருக்கிறதென்றும் மந்திரிகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பத்திரிகைகளில் அறிக்கை விட்டிருக்-கிறார்கள். தோழர் வைத்தியநாத அய்யரும் எங்க அய்யா குதிருக்குள் இல்லை என்கிற பழமொழியை அனுசரித்துத்தான் இந்தக் கலவரத்தில் பிரவேசித்ததற்குச் சமாதானம் சொல்லும் முறையில் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். அந்த அறிக்கை எந்த விதத்திலும் அதிகாரமுறையில் வைத்தியநாத அய்யருக்கு சம்பந்தப்-பட்டதல்ல. அவர் மதுரையில் காங்கிரசு பிரதிநிதி என்று ஒப்புக் கொள்ளப்பட்டவருமல்ல. அங்குள்ள காங்கிரசு பார்ப்பனர் அல்லாதாருடைய வெறுப்புக்கு ஆளானவர். அப்படிப்பட்டவர் அபாண்டமான ஒரு அறிக்கையை வெளியிட முன்வந்ததானது அவருடைய சம்பந்தத்தை உறுதிப்-படுத்தத்தக்கது ஆகும்.
 
                     ----------------தந்தை பெரியார் சொற்பொழிவில் இருந்து.‘குடிஅரசு’ - 25.05.1946
 
இப்படி கலவரத்தைத் தூண்டிய காரண-கர்த்தா வைத்தியநாத அய்யரை, காப்பாற்றிய கர்த்தாவாகக் காட்டுவது உலகமகா மோசடியல்லவா? நரியைப் பரியாக்கிக் காட்டிய ஆரிய கூட்டமல்லவா? அதுதான் கலவரகர்த்தாவை காருண்ய கர்த்தாவாக காட்ட முயலுகிறது! ஆரிய பார்ப்பன இனப் புத்தி என்றைக்கும் மாறாதோ?


16.3.23

தோள் சீலைப் போராட்டம்

 

தோள் சீலைப் போராட்ட நாயகர் சமூகப் போராளியான வைகுண்டர் - அய்யா வழி

சமூக நீதி மறுக்கப்பட்டு, அதிகார மனிதர்கள் ஜாதி, மதத்தின், அரசியலின் பெயரால் பிற மக்கள் மேல் வன்கொடுமை நிகழ்த்தும்போது, அவைகளை எதிர்த்துப் போராடிப் புதுச் சமூக விழுமியங்களையும், அறங்களையும் வென்றெடுக்கும் போராளிகளைச் சமூகமே உருவாக்குகிறது. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில் கேரளத்திலும் கேரளத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த இன்றைய தமிழ்நாட்டின் குமரி மாவட்டப் பகுதியிலும் மக்களுக்கான மாபெரும் போராளிகள் உருவானார்கள். அவர்கள் அய்யன்காளி, நாராயண குரு மற்றும் வைகுண்ட சாமி என்னும் முத்துக்குட்டி சாமிகள். இவர்களில் காலத்தால் மூத்த, மிகப் பெரிய விழுப்புண்கள் பெற்ற சமூகப் போராளியான வைகுண்டரை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1050 ஜாதிகள்

அக்காலங்களில் கேரளம், 1050 ஜாதிகள் கொண்டதாக, பார்ப்பனர்களிடையே உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட நம்பூதிரிகளின் ஜாதிய ஆட்சிக் கூடாரமாக இருந்தது. நம்பூதிரிகளும், நாயர்களும், வெள்ளாளர்களும் கூட்டுச் சேர்ந்து மிகக் குரூரமான முறையில் மனுதர்ம நடைமுறைகளை அமல்படுத்தி, யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஜாதி வன்கொடுமைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அன்றைய கேரளத்தைப் ‘பைத்தியக்காரர்களின் கூடாரம்’ என்றார் விவேகானந்தர்.

எந்த ஜாதியாக இருந்தாலும் மீன் மாமிசம் சாப்பிடுபவர்கள் தாழ்ந்த ஜாதி. மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள் மிகவும் தாழ்ந்த ஜாதி. நாடார்களும் ஈழவர்களும்  தாழ்ந்த ஜாதி. புலையர்கள் தாழ்ந்த ஜாதி யிலும் தாழ்ந்த ஜாதி. அவர்கள் அடிமைகளாவே நடத்தப்பட்டார்கள். பெண்கள் மாதவிலக்குக் காரணமாகத் தாழ்ந்தார்கள்.

நம்பூதிரிகளை நாயர்கள் நெருங்கலாம். தொடக்கூடாது. நம்பூதிரிகளிடம் இருந்து நாடார், ஈழவர் போன்றோர் முப்பத்தாறு அடி தள்ளியும், புலையர் போன்றோர் தொண்ணூறு அடி தள்ளியும் நிற்க வேண் டும். நாயரிடம் இருந்து நாடார், ஈழவர்கள் பன்னிரண்டு அடி தள்ளியும், புலையர் போன்றோர் அறுபத்து நான்கு அடி தள்ளியும் நிற்கவேண்டும். இப்படியே 1050 ஜாதிகளுக்கும் தூரக் கணக்குகள் இருந்தன. தீட்டுத் தூரத்தை மீறுபவர்கள், நாயர்களால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்.

கேரள அரசர்கள் மக்களிடம் வசூலித்த வரியைப்போல, உலகின் வேறு எந்த நாட்டிலும் வசூலிக்கப்பட்டதா என்பதை ஆராய வேண்டும். குறிப்பாக நாடார்களும் ஈழவர்களும் இந்த வரிவிதிப்பால் மிகவும் துன்பத்துக்கு ஆளானார்கள்.

வரிக்குமேல் வரி

சுமார், நூற்றுக்கும் மேற்பட்ட வரிகளை அவர்கள் செலுத்த வேண்டியிருந்தது. உயிரோடு இருக்கும் 16 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தலைவரி செலுத்த வேண்டும். செத்தவர்களுக்கும் வரி. சொத்து மதிப்பில் 40 சதவிகிம் வரி. நாடார்கள் தங்கள் வீட்டுக்கும், வீட்டுக்கு ஓலை போட்டாலும் வரி. புல் அறுக்கிறவர்களும், சுமை தூக்குபவர்களும் வரி செலுத்த வேண்டி இருந்தது. பனை ஏறுகிறவன், அவன் ஏறும் ஏணிக்கு வரி; பனை ஏறும்போது அவன் காலில் இட்டுக் கொள்ளும் தளை நாருக்கும் வரி; நிலத்தைத் தரிசாகப் போட்டாலும் வரி. பெண்களுக்கு முலை வளர்ந்தால் முலை வரி, தாலிக்குத் தாலி வரி. சிலவகை ஆடைகள் அணிகள் அணிய, குடைபிடிக்க, பல்லக்கில் போக வரி. மீசை வளர்த்தால் கூட வரி  உண்டு. கல்யாணத்துக்கும் வரி. கருமாதிக் கும் வரி.

எல்லாவற்றுக்கும் மேலான கொடுமை, நாடார் மற்றும் ஈழவர் பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதிக்கப்பட வில்லை. அது ஒரு மரியாதைச் சின்னமாகக் கருதப்பட்டது. நம்பூதிரி பெண்கள் இறைவனுக்கு முன்னால், மார்பைத் திறந்து போட்டார்கள். நாயர் பெண்கள், தமக்கு மேலே உள்ளோர், நம்பூதிரிகள், அரசு அதிகார மய்யத்தினர்கள் முன் மார்பைத் திறந்து போட வேண்டும். நாடார், ஈழவர் முதலான தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்த பெண்கள் எப்போதுமே எவர் முன்பும் மார்பை மூட முடியாமல் இருந்தது. அவர்கள் இடுப்புக்குக் கீழே, முட்டிக்கு மேலே மட்டும் ஏதேனும் சாக்கு மாதிரியான ஆடை (முண்டு) அணிந்து கொள்ளலாம். குடத்தை இடுப்பில் சுமக்கக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும். மொத்தத்தில் நாய், மாடுகள், பன்றிகளுக்குச் சுதந்திரம் இருந்த அளவுக்குக்கூட தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்ட மக்களுக்கு இல்லை.

இவ்வளவு தாழக் கிடப்பாரைக் கை தூக்கி விடக் காலம் இருபெரும் சக்திகளை உருவாக்கித் தந்தது. ஒன்று சீர்த்திருத்தக் கிறிஸ்தவம். மற்றது, வைகுண்ட சாமியின் தோற்றமும் தொண்டும்.

1810-க்குப் பிறகு திருவிதாங்கூர் (கேரளா) அரசு, கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது. அது ஆங்கில, அய்ரோப்பிய கிறிஸ்தவச் சமயப் பாதிரியார்களின் வருகைக்கு நல்ல வழியாக அமைந்தது. குறிப்பாக இந்தப் பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு சீர்திருத்தக் கிறிஸ்தவம் ஆற்றிய பங்கு மகத்தானதாகும். முறையான, ஜாதி அடிப்படையில் அல்லாத நீதிமன்றங்களையும், தாழ்த்தப்பட்டவர்க்கும் பெண்களுக்கும் இடம் கொடுத்த கல்விக் கூடங்களையும் இந்தக் கிறிஸ்தவர்களே முதல் முறையாக இந்தப் பகுதியில் அமைத்தார்கள்.

 வைகுண்டரின் தோற்றம்

இந்தச் சூழலில்தான் வைகுண்டர் தோன்றுகிறார்.

வைகுண்ட சாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரிக்கு அருகே உள்ள சாஸ்தான் கோவில்விளை (அதன் இன்றைய பெயர் சாமித்தோப்பு) என்ற ஊரில் 1809-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி, பொன்னு நாடார் - வெயிலம்மை தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இந்த ஆண்டில் மயிலாடியில் சீர்த்திருத்த கிறிஸ்தவ சமயம் வேர்விட்டது. வைகுண்ட சாமிக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் முடிசூடும் பெருமாள் என்பது. அக்காலத்தில் இப்படியான இரட்டைப் பெயர்கள் வைக்க நாடார்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே பள்ளிக்கூடத்தில் அவருக்கு முத்துக்குட்டி என்று வைக்கப்பட்டது. வைகுண்ட சாமி, தன் வாழ்க்கை முறையினூடகவே, சமூக வாழ்க்கையையும் கூர்ந்து நோக்கிக் கற்றுக் கொண்டு வந்தார். தென் திருவிதாங்கூரின் இந்த நாகர்கோவில் குமரிப் பகுதி ஏடுகள் நிறைந்த மாவட்டம். மாலையானால் மக்கள் ஏடு படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். வைகுண்டர் ஏடும் எழுத்தும் கற்றார். தாமரைக் குளம் கிறிஸ்தவப் பள்ளியிலும் அவர் கற்றிருக்கிறார். கிறிஸ்தவ விவிலியத் தில் (பைபிள்) அவருக்கு நிறைந்த ஞானம் இருந்தது. இளமையிலேயே சீர்திருத்த மனோபாவம் அவரிடம் இருந்தது.    

அந்தக் காலத்தில் பொதுக் கிணற்றில் எல்லா ஜாதியாரும் நீர் அருந்த முடியாது. வைகுண்டர் ஒரு சமூகப்புரட்சி செய்தார். அவரே ஒரு கிணறு வெட்டி பள்ளு பறை என்று சொல்லப்பட்ட அனைத்து ஜாதியாரையும் அந்த முந்திரிக் கிணற்றில் குளிக்கவும் குடிக்கவும் செய்தார். இதன் மூலம் ஜாதி ஒடுக்கு முறைக்கு ஆக்கபூர்வமான ஒரு புதிய மறுப்பைத் தந்தார்.

கல்விப் பணியிலும் தீவிரமான கவனம் செலுத்தினார் வைகுண்டர். தன் சீடர்களைக் கொண்டு பல நிழல் தாங்கல்களை ஏற்படுத்தினார். நிழல்தாங்கல்கள் பகலில் பள்ளிக்கூடங்களாகவும், இரவில் சமூகக் கூடங்களாகவும், இராப் பள்ளிக் கூடங்களாகவும் செயல்பட்டன. வழிப்பாட்டு மன்றமாகவும் அவை செயல்பட்டன. வைகுண்டர், ஹிந்து மதத்தில் இல்லாத கூட்டு வழிபாட்டு முறையை ஜாதி பேதமின்றி உருவாக்கிக் தந்தார். அன்புவழி, சமயம் முதல்முதலாகக் கூட்டு வழிபாட்டு முறையை எல்லாத் தாழ்த்தப்பட்ட வகுப்பார்க்கும் உரிய முறையை ஏற்படுத்தியது.

தலைப்பாகை

அக்காலத்தில் அடிமைச் சின்னமாக, நாடார்கள் உள்ளிட்டு தாழ்த்தப்பட்ட ஜாதியார் எவரும், தலைப்பாகை அணியக் கூடாது. வைகுண்டர், ‘நீ யாருக்கும் அடிமை இல்லை. தலைப்பாகையைக் கட்டு’ என்றார். தலைப்பாகை கட்டிக் கொண்டே கோயிலுக்குள் பிரவேசம் செய்ய வேண்டும் என்றார். இன்னும், வைகுண்டர் உருவாக்கிய பதிகளில் (கோயில்களில்) அந்த நிலைமையே நீடிக்கிறது. தலைப் பாகையோடுதான் உள்ளே நுழைய வேண்டும்.

பெருந்தெய்வக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர்க்கு நுழைவுரிமை இல்லை, அக்காலங்களில். இன்றும்கூட பல கோயில்களில் அப்படித்தான். ஆகவே, வைகுண்டர் தாமே பல பதிகளைக் கட்டினார். அவர் வாழ்நாளில் ஏழு பதிகளையும், ஏழு நிழல் பதிகளையும் கட்டி இருக்கிறார்.

வைகுண்டர் உருவாக்கிய கோயில்களில் சிலைகள் இல்லை. மாறாகக் கருவறையில், கண்ணாடியும், கண்ணாடி முன் ஒரு விளக்குச் சுடரையும் வைத்தார். கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடரும் ஒளியே கடவுள். உருவ வழிபாட்டுக்கு மாற்றான ஒளி வழிபாட்டை மக்களுக்கு அறிமுகப்படுத்திய முதல் ஞானி வைகுண்டர் என்றால் தவறு இல்லை. ஒளி ஜாதி மதம் இனம் கடந்த இயற்கை. சூரியன் போல எல்லோருக்கும் மேலே இருந்து எல்லோருக்கும் சமமாக ஒளியைத் தருவது. சமத்துவமே இயற்கை அல்லது கடவுள்.

கோயிலுக்குள் ஆரவாரத்தை மறுத்தார் வைகுண்டர். ‘காணிக்கை போடாதீங்கோ, காவடிகள் தூக்காதீங்கோ' என்றார் அவர்.

வைகுண்டரின் புகழும் தத்துவங்களும் திருவிதாங்கூர் அரசனை அச்சம் கொள்ள வைத்தன. அவன், அவரைச் சிறைபிடிக்க நினைத்தான்...

மேலாடைக்குத் தடை

கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த ஹிந்து நாடாக இருந்தது. அந்தக் கால கட்டத்தில் ஜாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 ஜாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் ஜாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18 ஜாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமானத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார் ஜாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஜாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிறிஸ்தவப் பெண்களுக்கு தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.

போராட்டத்திற்கான காரணம்

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜென்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பிராமணர்களினதும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் ஜாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12ஆம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல்ஜாதி ஹிந்து என்றும், கீழ்ஜாதி ஹிந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த ஜாதி ஹிந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதேப் போன்று ஜாதி வரிசையின் அடிப்படையில் கீழ் ஜாதி ஹிந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இவ் உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

உடை கட்டுப்பாடு

திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப்பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் ஜாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப்பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிராமணர்கள் முன்பு அனைத்து ஜாதிப் பெண்களும் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822ஆம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப்போராட் டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டப் போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைப்பெற்றது.

முதல் போராட்டம்

சீர்திருத்தக் கிறிஸ்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் கிறிஸ்தவ பெண்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனால் கிறிஸ்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் ஜாதியினர் கலவரம் செய்தனர். மே மாதம் 1822ஆம் ஆண்டு கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் அய்யர் என்ற அய்ரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இந்நிகழ்வுகளைப் பற்றி விரிவாக கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் குப்பாயம் என்ற உடையை அணியலாம் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

இரண்டாம் கட்டப் போராட்டம்

மிக அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை, புலிப்பனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827ஆம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறிஸ்தவப் பெண்கள் உயர்ஜாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இதனால் கிறிஸ்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட அய்ரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் ஜாதி பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர் களைப் பின்பற்றி ஹிந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு முத்துக்குட்டி (வைகுண்டர்) போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மூன்றாம் கட்டப் போராட்டம்

1858ஆம் ஆண்டு விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. 

நெய்யாற்றின்கரையில் தொடங்கியப் போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. ஆண்கள் தங்கள் உயிருக்கு பயந்து பல இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் அய்ரோப்பிய மறைபரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். டிசம்பர் 30, 1859 ஆம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து கிறிஸ்தவ நாடார்களுக்கும் உயர் ஜாதி நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. ஹிந்து நாடார்களும் கிறிஸ்தவர்களுடன் இதில் கைகோர்த்து கொண்டனர்.

உடை உடுத்த உரிமை

இப்போராட்டத்தின் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர். இதற்கான அரசாணை 26, சூலைத் 1859ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் ஜாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமைகளை மற்ற கீழ் ஜாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறிஸ்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.

வைகுண்ட சாமிகள்

வைகுண்டசாமிகள் என்பவர் குமரியில், அன்று பெரிதும் ஒடுக்கப்பட்ட நாடார் சமுதாய மக்களின் தன்மானத்திற்காகப் போர்க்கொடி தூக்கிய பெருமகனார் ஆவார்.

கன்னியாகுமரிக்கு அருகில் பூவண்டன்தோப்பு எனும் கிராமத்தில் நாடார் சமூகத்தில் பிறந்தவர் (1809)

முடிசூடும் பெருமாள் என்று பெயரிடப்பட்டார். தாழ்ந்த ஜாதியினருக்கு இத்தகு மேன்மை தாங்கிய பெயரைச் சூட்டக்கூடாது என்பதுதானே மனுதர்மம்? மன்னர்ஆட்சி தடுத்தது. விளைவு புதுப்பெயர் முத்துக் குட்டி.

அன்றைய தினம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் மரம் ஏறும் மக்கள் சாணார் என்று அழைக்கப்பட்டனர். உரிமைகள் அறவே மறுக்கப்பட்ட பரிதாபத்துக்குரியவர்களாக அவர்கள் ஒடுக்கப்பட் டனர். நம்பூதிரிப் பார்ப்பான் எதிரே வந்தால் அவர்கள் 36 அடிதூரம் விலகி நிற்க வேண்டும். நாயரிடமிருந்து 12 அடி தூரம் ஒதுங்க வேண்டும். பொதுவீதிகளில், சாலைகளில் நடக்க உரிமையில்லை. பெண்கள் ரவிக்கை (தோள் சேலை) அணிந்திடத் தடை!.

மன்னர் ஆட்சி மனுதர்ம ஆட்சியாகச் சீறியது. இந்த நிலையில் தான் வைகுண்ட சாமிகள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட முத்துக்குட்டி சமத்துவ சங்கம் என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினார்.

அவர் ஆன்மிகக் குடைக்குள்ளேயே சீர்திருத்தங்களைச் செய்ய முன்வந்தார். அதே நேரத்தில் உருவ வழிபாட்டை எதிர்த்தார். காணிக்கை கொடுப்பது கண்டிப்பாகக் கூடாது என்றார். மாந்திரீகர்களிடம் மதி மயங்காதீர் என்று எச்சரித்தார்.

தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளில் உணவருந்துமாறு தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

காவி நிறத்தில் வெள்ளைத் தீபச் சுடரைத் தாங்கிய கொடியை அறிமுகப்படுத்தினார். ஒரு வகையில் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சாயலை இவரிடம் காண முடியும்.

மன்னரையும் பார்ப்பனர்களையும் எதிர்க்கத் துணிந்த அவர் 110 நாள்கள் கொடுஞ்சிறையையும் அனுபவிக்க நேர்ந்தது.

இன்றைய நிலை என்ன தெரியுமா? சென்னை மணலியில் அவருக்குக் கோயில் கட்டி கோபுரங்கள் எழுப்பி, தேர்த் திருப் பணியையும் நடத்தியுள்ளனர்.

எந்த உருவ வழிபாடு கூடாது என்றாரோ, அந்த உருவ வழிபாட்டை, அவரையே கடவுளாக்கி நடத்துகின்றனரே.

கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று தந்தை பெரியார் சிலைகளின்கீழ் கடவுள் மறுப்பு பொறிப்பதன் முக்கியத்துவம் புரிகிறதா?


                    -------------------------------------
மயிலாடன்  அவர்கள் “விடுதலை”  20-4-2010  இதழில் எழுதிய கட்டுரை

2.2.23

ஆத்மா பற்றி பெரியார்

ஆத்மா பற்றி பெரியார்


 


சமீபத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வக்கீல் உயர்திரு. மைலாப்பூர் எஸ்.ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர் களுடன் காங்கிரஸ் பிரசாரமாக ஆங்காங்கு சென்ற காலையில், ஒரு நாள் மதுரையில் இரவு 10 மணிக்கு மேல் படுத்துக்கொண்டு வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருக்கையில், ஆத்மாவைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் இதே அபிப்பிராயம் சொன்னபொழுது, உடனே அவருக்குக் கோபம் வந்து, உம்மிடம் சாவகாசம் வைத்ததே தப்பு என்றும், நீர் இவ்வளவு கீழான மனிதனென்று எனக்கு இதுவரையிலும் தெரியா தென்றும் சொல்லிப் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டார்.

ஆனால், அப்படிப் பேசுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தில் அவருடைய தலைமையின்கீழ் ஒத்துழையாமை சம்பந்தமான பிரசங்கம் செய்த பிறகு, தலைவர் முடிவுரையாக என்னைப் பற்றி அவர் பேசும்போது, ஸ்ரீமான் ஈ.வெ.-இராமசாமி நாயக்கர் ஒரு பெரிய ராஜரிஷி யென்றும், இவர் நமக்குத் தலைவராகக் கிடைத்தது நமது பாக்கியம் என்றும், மற்றும் பல விதமாகப் புகழ்ந்து பேசினார். மறுநாள் காலையில் அவருடைய கோபம் தணிந்த பிறகு, தானாகவே என்னுடன் பேசவந்த பொழுது, நாயக்கர்வாள்! கோபஞ்செய்து கொள்ளாதீர்கள். இராத்திரி தாங்கள் அம்மாதிரி பேசியதற்குக் காரணம் இன்னதென்று தெரிந்து கொண்டேன்.

அதாவது, சீமைக்குச் சென்று, கல்வி கற்றுவந்த உங்களுடைய குழந்தைகள் திடீரென்று இறந்து போன வெறுப்பினால் தாங்கள் இவ்வித எண்ணங்கொண்டு விட்டதாக உணர்ந்தேன். ஆதலால் கோபித்துக் கொள்ளாதீர் களென்று சமாதானம் சொன்னார். நான் அதற்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்றும், அக்குழந்தைகள் என் தமையனார் குழந்தைகள் என்றுமே அவருக்கு மீண்டும் உரைத்து, எனதபிப்பிராயத்தையே பலமாக மறுபடியும் வற்புறுத்தினேன். ஆகவே, நான் இந்த விஷயங்களெல்லாம் வெகு நாளாகவே கொண்டுள்ள அபிப்பிராயங்களானாலும், அவற்றின் சம்பந்தமான சகல தொல்லைகளையும் மேற்போட்டுக் கொண்டு, பிரசாரம் செய்கிறதென்கிற வேலையாக இப்பொழுதுதான் திரிகிறேன். இதற்கு முன் நான் எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், சிநேகமாக ஏற்பட்டவர்களிடமெல்லாம் இதைப்பற்றியே பேசியும் இருக்கிறேன்.

ஆத்மா என்னும் விஷயத்தில் சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமானால், அது ஒருவித உணர்ச்சியே ஒழிய ஒரு தனிப்பட்ட வஸ்துவல்ல. அவ்வுணர்ச்சியானது சரீரத்தின் அசைவு நின்றவுடன் ஒழிந்துபோகும் என்பதேயாகும். இதைப்பற்றி இரண்டு விசயங்கள் குடிஅரசுவில் முன்னாலேயே எழுதப்பட்டிருக்கிறது. மூன்றாவது விஷயமும் சமீபத்தில் வரும் ஆத்மா என்பதைப் பற்றிய பேச்சே பேசாமலிருந்தால் நல்லதென்றும், இதனால் பல ஜனங்களுடைய அதிருப்தி ஏற்பட்டு, நமக்கு வெளி உதவிகள் குறைந்து போகுமெனவும் சிலர் கூறுகின்றார்கள். அதை ஒத்துக் கொள்ள என்னால் முடியவில்லை. எனது அபிப்பிராயங்களைச் சொல்லுவதை நமது கடமையாக வைத்துக் கொள்ளுவோம். மற்றவர்களுக்குத் துன்பமில்லாத முறையில் அதைப் பிரசாரம் செய்வோமென்பதைத் தவிர, வேறு விஷயங்களை எதிர்பார்த்துக் கொண்டு, அபிப்பிராயங்களை மூடி வைத்துக் கொண்டிருப்பது நியாயமாகாது. நமது ஆயுள் காலத்திற்கு எவ்வித அளவும், உறுதியும் பந்தோபஸ்-துமில்லையாதலால், கூடுமானவரை சவுகரியமிருக்கும்பொழுது நமது அபிப்பிராயங்களை எல்லாம் சொல்லி விடுவதுதான் சரியென்று நினைக்கின்றேன்.

                             -----------------------------தந்தைபெரியார் -”குடிஅரசு” 31,5.1931

1.2.23

பார்ப்பானை எதிர்த்துப் பிழைத்திருப்பவர் நாமே! ஜாதி ஒழிப்பே நமது முக்கியப் பணி!

 



ஜாதி ஒழிப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், சாதியை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதையும் உணராத மக்களே இல்லை.

 

ஜாதி காரணமாக மக்கள் மனவருத்தமும், தொல்லையும் அடைவதை நாம் காண்கிறோம். அந்தச் ஜாதி இழிவை ஒழிக்க நாங்கள் பாடுபடுகின்றோம். இப்படிச் ஜாதியில் கஷ்டம் (தொல்லை) அனுபவிப்பவன் கூட வருவதில்லை. ஏன் 3000- ஆண்டாக எவனுமே வரவில்லை. நாங்கள் தான் பாடுபடுகிறோம்.

 

ஜாதி ஒழிப்பு வேலை என்பது மேல் ஜாதிக்காரனுக்கு ஆபத்து. அவன் நம்மை ஒழித்து விடுவான் என்று எண்ணுவதாலும், பயன்படுவதாலும் எவனும் இந்த வேலைக்கு வருவதே இல்லை.

 

எந்தச் சாதனமும், கருவியும் மேல் ஜாதிக்காரன் கையில் சிக்கி விட்டது. கடவுள், மதம், சாஸ்திரம் ஆட்சி எல்லாம் மேல் ஜாதிக்காரர் என்பவர்கள் கையில் தான் சிக்கி விட்டன.

 

நம் அறிவு வளர்ச்சி அடையும்படியான கல்வியோ மற்ற சாதனங்களோ நமக்கு அளிக்கப்படவே இல்லை. மூவேந்தர் காலத்திலே ஆகட்டும், அடுத்து "நாய்க்கன் முஸ்லிம்கள் மராட்டியன்" ஆட்சியிலும் கூட நமக்கு அறிவு பெறக் கல்வி அளிக்கவே இல்லை. 1961- இல் நாம் 100-க்கு 7- பேர்கள் தான் படித்து இருந்தோம். 1910-இல் ஏழரை பேர், 1920- இல் 9-பேர், 1931- இல் நாம் 100- க்கு 10- பேர்கள் தான் படித்து இருந்தோம். பிறகு அட்வைசர் ஆட்சியின் காரணமாகவும், ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் காரணமாகவும் 1951- இல் 100- க்கு 16- பேர்களாகவும் வந்தோம். அதற்கு அடுத்து தமிழகத்தில் பதவிக்கு வந்த ஆச்சாரியார் ஆட்சியில் 16- பேரை 10- பேராகவும் முயற்சியில் இறக்கினார் ஆச்சாரியார்.

 

நல்ல வேலையாக தமிழ்நாட்டில் ஆச்சாரியார் ஆட்சி ஒழிந்து காமராஜர் ஆட்சி ஏற்பட்டதன் பயனாக 16- பேராக இருந்தவர்கள் இன்று 100- க்கு 32- பேர்கள் படித்த இருக்கும் படியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

தோழர்களே! இப்படி நமது கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டும் காமராசரை ஒழிக்க வேண்டும் என்று தான் அத்தனைக் கட்சிகளும் பாடுபடுகின்றன.

 

காமராசர் கட்சியும், எங்கள் கட்சியும் தான் அவர்கள் ஒழியக் கூடாது என்று பாடுபடுகிறோம். மற்றவன் எல்லாம் தாங்கள் எப்படி எதைச் செய்தாவது தாங்கள் பதவி அடைந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு காமராசரை எதிர்க்கின்றார்கள்.

 

தோழர்களே! இன்று பார்ப்பானை எதிர்த்துக் கொண்டு நாட்டில் வாழ்கின்றவர்கள் என்றால் நாங்கள் தான். மற்ற யாராவது இருக்கின்றார் என்றால் அது காமராசர் தான். மற்றவர்கள் எல்லாம் பார்ப்பானை எதிர்க்காததோடு அவன் கால் அடியில் கிடக்கின்றவர்கள் ஆவார்கள்.

 

இன்று நாட்டில் அரசியலில் எந்தக் குறையும் மக்களுக்கு இல்லை. 21- வயது ஆன எல்லோருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், வோட்டுரிமை கொடுக்கப்பட்டு விட்டது. பின் இன்னும் என்ன உரிமை வேண்டும்?

 

எருமைக்கு குதிரை ஓட்டு வேண்டும் என்கிறீர்களா? புரியனுமே!

 

நமக்கு இன்று வேண்டியதுசமூதாயக் குறை ஒழிய வேண்டும். ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காகப் பாடுபடுவது தான்.

 

தோழர்களே! நான் இந்தத் தொண்டை 30- ஆண்டுகளாகச் செய்து கொண்டு தான் வருகிறேன். என்னை "என்ன! ஓட்டைக் குடத்தில் தண்ணீர் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறாயே"? என்று கேலிப் பேசினார்கள். நாங்கள் கவலைப்படாமல் பாடுபட்டுக் கொண்டு தான் வந்தோம். நல்ல வேலையாக காமராசர் பதவிக்க வந்ததன் காரணமாக இன்று கூப்பாடு பயன் அளிக்க ஆரம்பித்துள்ளது.

 

இன்று நடைபெறும்படியான போராட்டமானது பழமைக்கும், புதுமைக்கும் நடைப் பெறும்படியான போராட்டமாகும்.இராஜாஜி பழமையை அலட்சியம் செய்யாது காக்க வைத்துக் கொண்டு பாடுபடுகிறார். அவருக்கு வால் பிடித்துத் திரிவது தானா நமது தமிழர்களின் செயல்? நம் மக்கள் சிந்திக்க வேண்டும்.

 

பார்ப்பான் கையில் இருந்து வந்த காங்கிரஸ் ஆனது இன்றைக்குத் தான் கைக்கு வந்து தமிழர்களுக்குப் பலன் அளிக்க வல்லதாக இன்று வந்து உள்ளது.

 

நமக்கு கல்வி, உத்தியோகம் முதலியவைகளில் என்றைக்கும் இல்லாத அளவு நன்மைகள் ஏற்பட்டு உள்ளன.

 

இன்றைக்கும் ஆள்கள் டாக்டராகவோ, எஞ்சினியர்களாகவோ படித்து வரும்படியாக ஏற்பட்டு உள்ளது. இதற்கு முன் இருந்த ஆட்சியில் இவை நமக்கு இல்லை. இன்றைக்குத் தான் காமராசர் ஆட்சியில் தான் ஏற்பட்டு உள்ளது.

 

இந்த ஆட்சியானது மீண்டும் ஏற்பட வேண்டும். இதற்கு நீங்கள் உங்கள் ஓட்டை மட்டும் அளிப்பதோடு மட்டும் இல்லாமல் ஓவ்வொரு கவலை எடுத்துக் கொண்டு பாடுபட வேண்டும். காமராசர் ஆட்சி ஏற்பட அவர் கட்சி வெற்றி பெறவும் பாடுபட வேண்டும்.

 

                                           --------------------------------------------- 22.10.1961- அன்று திருச்சியில் தந்தை பெரியார் 83-ஆம் பிறந்த தின விழாவில் பெரியார் .வெ.ரா சொற்பொழிவு. "விடுதலை", 25.10.1961