அய்க்கிய அமெரிக்க நாடுகள்அமெரிக்காவில் கொலம்பஸ் தனது காலடியைப் பதிக்கவில்லை யென்றாலும் ஸ்பெயின் நாட்டினர் தளம் அமைத்திட இவர் பேருதவி புரிந்தார். அதனைத் தொடர்ந்து பல அய்ரோப்பிய நாட்டினரும் அமெரிக்காவில் குடியேறினர். வடஅமெரிக்காவில் வால்டர்ராலே முதல் பிரிட்டிஷ் குடியேற்றப் பகுதியைத் தொடங்கினார். இன்றைய வர்ஜீனியாப் பகுதியில் ஜேம்ஸ் டவுன் குடியேற்றப் பகுதி 1607 இல் உருவானது. தொடர்ந்து 1620 இல் அய்ரோப்பியர்கள் பிளிமத் காலனியை தற்போதைய (ஊடின) முனையில் அமைத்தனர்.
தற்போதைய நியூயார்க் நகரையும் ஹட்சன் ஆற்றுப் பகுதியையும் ஆய்வு செய்திட ஹென்றி ஹட்சன் என்பாரை 1609 இல் டச்சுக் கிழக்கு இந்தியக் கம்பெனி கேட்டுக்கொண்டது. 1624 இல் மன்ஹாட்டன் தீவை டச்சுக்காரர்கள் விலைக்கு வாங்கினர். விலை எவ்வளவு தெரியுமா? வெறும் 24 டாலர்கள். புதிய ஆம்ஸ்டர்டாம் எனப் புதுப் பெயர் வைத்தனர். அய்ரோப்பியர்கள் கொண்டு வந்த புது வகை நோய்களும் மண்ணாசையும் உள்ளூர் மக்களிடம் வெறுப்பையும் பகைமையையும் ஏற்படுத்தியது.
17, 18 ஆம் நூற்றாண்டுகளில் பஞ்சாலைகளிலும் புகையிலைத் தயாரிப்புத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்வதற்கு அடிமைகளாக ஆப்ரிக்க மக்களை இறக்குமதி செய்து விற்றனர் அய்ரோப்பியர்கள். ஏழாண்டுப் போரில் பிரான்சை வென்ற பிரிட்டிஷார் மிசிசிப்பி நதிக்கரை வரையிலான அமெரிக்கப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தித் தம் நாடு பிடிக்கும் வெறியை வெளிப்படுத்தினர். தனது நிருவாகச் செலவுகளுக்கும் பாதுகாப்புச் செலவுகளுக்குமான செலவுத் தொகையை குடியேற்றப் பகுதியிலிருந்தே வசூலிக்கத் தொடங்கினர். பிரிட்டிஷ் ஆட்சி மீது வெறுப்பும் எதிர்ப்பும் பரவலாக ஏற்பட்டது.
கடல் கடந்த பிரிட்டிஷ்காரர்களுக்கும் அமெரிக்காவில் குடியேறிய அய்ரோப்பியர்களுக்கும் (பிரிட்டாஷாரும் அடக்கம்) சண்டை 1775 இல் மூண்டது. மறு ஆண்டில் அன்றைய 13 மாநிலங்கள் தம் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தின. விடுதலைப் பிரகடனம் ஆவணமாகியது 1789 இல்! விடுதலைப் போரின் தளபதியாக இருந்து போருக்குத் தலைமை தாங்கிய ஜார்ஜ் வாஷிங்டன் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்கிற கருத்தைக் கொண்ட குடியரசுக் கட்சி (ரிபப்ளிக்)யின் வேட்பாளரான ஆபிரகாம் லிங்கன் 1860 இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். அடிமை முறையை ஆதரித்த 11 மாநிலங்கள் அய்க்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து பிரிந்து போய் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு எனும் பெயரில் அமைந்தன. இதன் தலைவராக ஜெபர்சன் டேவிஸ் என்பவர் ஆனார். உள்நாட்டுப் போர் தொடங்கியது. 1865 இல் கூட்டமைப்புப் படையினர் (அடிமை முறையை ஆதரித்தவர்கள்) சரண் அடைந்தனர். ஆபிரகாம் லிங்கனின் கருத்துகளுக்கு வெற்றி கிட்டியது.
ஆனால் ஒரு வாரத்திற்குள்ளாக ஆபிரகாம் லிங்கன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
1898 இல் அமெரிக்காவுக்கும் ஸ்பெயின் நாட்டுக்கும் நடந்த போரின் விளைவாக போர்டோ ரீகோ, குவாம், பிலிப்பைன்ஸ், கியூபா ஆகிய நாடுகளை அமெரிக்கா வென்று தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. ஹவாய் தீவுகளையும் மறு ஆண்டில் கைப்பற்றிக் கொண்டனர். 1920 இல் மதுவிலக்கு அமல்படுத்தப் பட்டது. மதுவகைகள் தயாரிப்பதும் விற்பதும் தடை செய்யப்பட்டன. இத்தடை 13 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. மதுவிலக்கு தோற்றது. மீண்டும் மதுக் கடைகள் திறக்கப்பட்டன.
1929இல் அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது (தற்போதுள்ள மாதிரியான தேக்கநிலை.) அய்ரோப்பிய நாடுகளும் ஏனைய வட அமெரிக்க நாடுகளும் தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளும் இத்தேக்க நிலையில் சிக்கித் தவித்தன. வால்ஸ்ட்ரீட் பங்குச் சந்தை சரிந்தது.
1932இல் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய முயற்சி (நியூ டீல்) என்ற திட்டத்தை அமல் செய்து, மது விற்பனைக்கு இருந்த தடையை நீக்கினார்.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா பெர்ல் (முத்து -_ றிமீணீக்ஷீறீ) துறைமுகத்தை ஜப்பானிய போர்க் கப்பல்கள் தாக்கின. ஹவாய்த் தீவில் உள்ள இந்தத் துறைமுகத்தில் அமெரிக்க ராணுவத் தளம் உள்ளது. இதனால் அமெரிக்கா போரில் ஈடுபட்டு, ஜப்பான் மீது போர் என அறிவித்தது. அமெரிக்கா மீது போர் என ஜெர்மனி அறிவித்தது. அச்சு நாடுகள் தோற்கடிக்கப்பட்டன. நேசநாடுகள் வென்றன. அணுகுண்டுகளைப் பயன்படுத்திய முதல் நாடாக அமெரிக்கா விளங்கியது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டது.
சண்டை முடிந்த பிறகு இரு வல்லரசுகளான அமெரிக்கா, சோவியத் நாடுகள் அணி சேர்க்கத் தொடங்கின. பல நாடுகள் இரு தரப்பிலும் சேர்ந்து செயல்பட்ட நிலையில் பனிப்போர் மூண்டு நடந்தது. 1991இல் சோவியத் ஒன்றியம் உடைந்த பிறகுதான் இந்த நிலை மாறியது.
ஆப்ரிக்க மரபு வழியினர்க்கும் சம உரிமை தராத நிலை அமெரிக்காவில் நிலவியது. சமஉரிமைப் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது. மார்ட்டின் லூதர் கிங் ஆப்ரிக்க இன மக்களின் தலைவராக இப்போராட்டத்தை வழி நடத்தினார்.
1955 முதல் 1975 முடிய 20 ஆண்டுகளுக்கு அமெரிக்கா வியட்நாமுடன் போர் நடத்தித் தோற்றது. வியட்நாம் பொது உடைமை நாடாகக் கூடாது என்கிற மனப்பான்மை கொண்ட அமெரிக்கா, எவ்வித முகாந்தரமும் இல்லாமல் போரில் இறங்கி மூக்கு உடைபட்டது. வட, தென் வியட்நாம் நாடுகள் இணையக்கூடாது என முயன்று மூக்குடைபட்டது.
பல்வேறு நாடுகளிலும் தனிநபர் ஆதிக்கச் சக்திகள் வலுப்பெறுவதற்காகத் தன் படை பலத்தைப் பிரயோகப் படுத்தி வருகிறது. இந்நாட்டின் மீது மத அடிப்படையில் இசுலாமியப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இரட்டைக் கோபுரத்தைத் தாக்கியது அமெரிக்காவை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
வடஅமெரிக்கக் கண்டத்தில் கனடாவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் அமைந்துள்ள 96 லட்சத்து 31 ஆயிரத்து 418 சதுர கி.மீ. பரப்புள்ள இந் நாட்டின் மக்கள் தொகை 30 கோடி ஆகும். பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு சுயாட்சி பெற்றுள்ளவை இணைந்து உண்மையான கூட்டாட்சியை நடத்திக் கொண்டிருக்கும் நாடு. 1776 ஜூலை 4 இல் விடுதலை நாளைக் கொண்டாடும் நாடு. இதன் தலைவராக குடியரசுத் தலைவர். இரண்டு நாடாளுமன்றங்கள். ஒன்றின் பெயர் காங்கரஸ். மற்றொன்று செனட் .
பிரதிநிதிகள் சபை (காங்கரஸ்)யில் 435 இடங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். செனட் சபையில் 100 உறுப்பினர்கள். பதவிக் காலம் 6 ஆண்டுகள். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிய முடிய இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும்.
உலகளவில் வலிமையான பொருளாதார நிலையில் உள்ளதாகக் கருதப்படும் இந்நாட்டில் வறுமைக் கோட்டுக்கும் கீழ் 12 விழுக்காடுப் பேர்கள் உள்ளனர். வேலை கிட்டாதோர் 5 விழுக்காடுப் பேர் இருக்கின்றனர். மக்களில் புரொடஸ்டன்ட் கிறித்துவர் 52 விழுக்காடு. ரோமன் கத்தோலிக்கர் 24 விழுக்காடு, யூதர்கள், முசுலிம்கள் தலா ஒரு விழுக்காடு உள்ளனர். எம்மதமும் இல்லை என்போர் 10 விழுக்காடு உள்ளனர்.
------------------------“விடுதலை” 12,13-8-2009