Search This Blog

30.9.09

பார்ப்பனரல்லாதாருக்கு பெரியார் அழைப்பு

பிராமணரல்லாதாருக்கு ஈ.வெ.ரா. அழைப்பு

காஞ்சிபுரம் தமிழர் மாநாடுகள்

காஞ்சிபுரத்தில் 21-ஆவது ராஜீய மகாநாடு நாளது நவம்பர் மாதம் 21, 22 ஆம் தேதி-களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை நவசக்தி ஆசிரியர் ஸ்ரீமான். திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் அக்ராசனத்தின் கீழ் கூடும்.

அது சமயம் சர்வகட்சியார்களுமடங்கிய பிராமணரல்லாதார் மகாநாடொன்றும் கூடும்.

பிராமணரல்லாதார் முன்னேற்றத்தில் கரிசனமுள்ள தமிழ் நாட்டுப் பிராமணரல்லாதார் அனைவரும் வந்திருந்து, தங்களது முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தைக் காணவும், அதைச் சரிவர அமலுக்குக் கொண்டு வரவும் ஏற்பாடு செய்ய வேணுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இது விஷயத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ராஜீய அபிப்பிராய பேதங் காரணமாகவாவது, சொந்த அசவுகரியங் காரணமாகவாவது அலட்சியமாய் இருந்துவிடாமல் கண்டிப்பாய் வர வேண்டுமாய் மறுபடியும் வினயத்துடன் கேட்டுக் கொள்கிறேன்.

தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார்களின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் பிராமணரல்லாதார் கடைத்தேற முடியும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் நாடு சுயராஜ்யமடையும். ஆதலால், தீண்டாமை விலக்கிக் கவலையுள்ளவர்களும், தீண்டாதாரென்று சொல்லப்படுபவரும் அவசியம் காஞ்சிபுரத்திற்கு வந்து அதற்கென்று ஓர் மகாநாடு கூட்டி காரியத்தில் பலன் தரத்தக்க திட்டங்களைக் காண வேண்டுமாயும் கேட்டுக் கொள்கிறேன்.

ஈ.வெ. ராமசாமி, ஈரோடு
15.11.1925

வெளியேறினார் ஈ.வெ.ரா.,

தேசிய முன்னேற்றத்திற்கு இந்து சமூகத்தாருக்குள் பற்பல ஜாதியாருக்குள்ளும் பாஸ்பர நம்பிக்கையும் துவேஷமின்மையும், ஏற்பட வேண்டுமாகையால் ராஜிய சபைகளிலும் பொது ஸ்தாபனங்களிலும் பிராமணர், பிராமணரல்லாதார், தீண்டாதார், எனக் கருதப்படும் இம்மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாக ஜனத்தொகை விழுக்காடு தங்கள் தங்கள் சமூகத்தில் இருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை ஏற்படுத்த வேண்டும் என்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

பிரேரேபிப்பவர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர், ஆமோதிப்பவர் எஸ். ராமநாதன் என்பதையும் தேசிய ஒற்றுமையையும் பற்பல சமூகத்தாரின் நன்மைகளையும் உத்தேசித்து கான்பூர் காங்கிரசில் சட்டசபை தேர்தல்களை காங்கிரஸ் நடத்தும்படி தீர்மானித்த பிறகு, நமது மாகாணத்தில் அத்தேர்தல்களை நடத்தும் பொருட்டு, ஓர் தேர்ந்தெடுக்கும் கமிட்டியை நியமித்து நடத்தி வைப்பது அவசியமாகும் என்று, இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

பிரேரேபிப்பவர் பி. வரதராஜுலு நாயுடு என்பதையும் வாசித்துக் காட்டி சுயராஜ்யக் கட்சியார் தேர்தல்களை நடத்தப் போவதால் இவ்விரண்டு தீர்மானங்களுக்கும் அர்த்தமில்லை என்று சொல்லி இவைகளைதான் ஒழுங்கு தவறானதென்று தீர்மானித்து விட்டதால் இவைகளை பிரேரேபிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஸ்ரீமான், ராமசாமி நாயக்கர் எழுந்து கொஞ்ச நேரத்திற்கு முன்புதானே 25 பேர் பிரதிநிதிகள் கையெழுத்து போட்டால் பிரேரேபிக்கலாம் என்று சொன்னீர்கள்; அதையும் ஒப்புக் கொண்டு 30 பிரதிநிதிகள் கையெழுத்தும் வாங்கிக் கொடுத்தேன். இப்பொழுது திடீரென்று சில பிராமணர்கள் வார்த்தையைக் கேட்டு இப்படி சொல்லுகிறீர்களே, இது என்ன நியாயம் என்று கேட்டார். (இந்த சமயம் சில பிராமணர்கள் உட்கார் உட்கார் என்று கத்தினார்கள்)

நாயக்கர் அவர்களைப் பார்த்து இப்போது தனக்கும் அக்கிராசனாதிபதிக்கும் தான் தப்பு என்று நினைக்கிற ஒரு விஷயத்தின்பேரில் பேச்சு வார்த்தை நடக்கிறதென்றும் மற்றவர்கள் இதில் பிரவேசிக்கவோ கத்தவோ கூடாது என்றும் கூறி அயோக்கியத்தனமாகவாவது அதிகப் பிரசங்கித் தனமாகவாவது யாராவது கத்துவீர்களானால் அவரவர்களுக்குத் தகுந்த புத்தி கற்பிக்க தன்னால் கூடுமென்றும் யார் யாருக்கு தன்னுடைய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள ஆசையிருக்கிறதோ அவர்கள் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டுமென்றும் அக்கிராசனர் தன்னை உட்காரும்படி சொன்னாலாவது வெளியிடம் போகும்படி சொன்னாலாவது தான் உட்காரவோ வெளியில் போகவோ தயாராயிருப்பதாகவும், அய்யங்கார்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நீங்கள் கத்துவதாலோ கலவரம் செய்வதாலோ ஒரு காரியமும் சாதித்து கொள்ள முடியாது என்றும், கொஞ்சம் ஜாக்கிரதையாய்த்தானே இருங்கள் என்றும் சொல்லி விட்டு அக்கிராசனரைப் பார்த்து என்ன முடிவு சொல்லுகிறீர்கள் என்றும் கேட்டார்.

அக்கிராசனர் ஸ்ரீமான், கல்யாணசுந்தர முதலியார் பதிலளிக்கையில் கையெழுத்து வாங்கி-வரும்படி சொன்ன சந்தர்ப்பத்தில் இருந்த நிலைவேறு; இப்போதைய நிலை வேறு என்றார்.

நாயக்கர் ஒரு மணி நேரத்திற்கு முன்புதானே தாங்கள் கையெழுத்து வாங்கிவரும்படி சொன்னீர்கள். அதற்குள் நிலைமை ஒன்றும் மாறவில்லையே. அய்யங்காருக்கு பயந்து அவருக்கு நீங்கள் அடிமையாய் விட்டதைத்தவிர வேறில்லையே. நீங்கள்கூட இப்படிச் செய்யலாமா? என்று சொன்னார்.

ஸ்ரீமான் முதலியார் நான் யார் சொற்படியும் கேட்கவில்லை. தேச நன்மையை உத்தேசித்து என் மனதில் தோன்றியதை சொல்லுகிறேன் என்று சொன்னார்.

நாயக்கர் நீங்கள் அய்யங்கார் பேச்சைக் கேட்டாலும் சரி, பிராமணர்கள் உங்களை தங்கப் பல்லக்கில் வைத்து, வைரத்தால் கீரிடம் சாத்தி தூக்கிக் கொண்டு சுமந்தாலும் சரி எனக்கு அக்கரையில்லை. உங்கள் யோக்கியதையை சபையோர் அறியவேண்டுமென்பதுதான் என் ஆசை. மற்றபடி இந்தக் கூட்டத்தில் தீர்மானமாகிவிட்டால்தான் பிராமணரல்லாதாருக்கு நன்மை ஏற்படுமென்றாவது இல்லாவிட்டால் ஏற்படாதென்றாவது நான் பயப்படவில்லை.

ஸ்ரீமான் முதலியார்: நான்சொல்வது சரிதானா இல்லையா என்பதை ஸ்ரீமான். வரதராஜுலு நாயுடுவைக் கேளுங்கள் என்று ஸ்ரீமான் நாயுடுவைப் பார்த்து நான் செய்வது சரிதானே என்று கேட்டார்.

ஸ்ரீமான். நாயுடு சரி என்று சொன்னார் (எல்லோரும் சிரித்தார்கள்)

ஸ்ரீமான். நாயக்கர்:- ஸ்ரீமான் நாயுடுவைக் கேட்பானேன். அவரைவிட ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரையே கேளுங்களேன். அவர்தான் உங்களை இப்போது நடத்துகிறார். அடியோடே சரி என்று சொல்லிவிடுவாரே என்று சொல்லி பொதுஜனங்களைப் பார்த்து, நீங்களே இவர்கள் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிக் கூட்டத்திற்கு வெளியில் வந்து விட்டார். கூடவே ஸ்ரீமான்கள், சர்க்கரைச் செட்டியார், எஸ். ராமநாதன், ஆரியா, மேனன் மற்றும் பலரும் புறப்பட்டு விட்டார்கள்.

(குடிஅரசு, 29.11.1925)

சாட்டை அடிகளை எந்தப் பார்ப்பனப் பெண்ணாவது வாங்குவது உண்டா?


சாட்டையடி!

நாமக்கல் அருகே வெள்ளாளப்பட்டி அச்சப்பன் கோயில் விழாவில் பெண்களை சாட்டையால் அடித்துப் பேய் விரட்டும் ஒரு அகோர காட்சியை, ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஏடுகளிலும் செய்தி வெளிவந்துள்ளது.

இவ்வாறு சாட்டையால் பெண்ணை அடித்தால், அந்தப் பெண்ணைப் பிடித்த பேய் ஓடிவிடுமாம். அந்தப் பெண்ணுக்குக் குழந்தைப் பேறு இல்லாதிருந்தால் குழந்தையும் பிறக்குமாம்; இப்படி ஒரு பித்தலாட்டம் இந்த 2009 ஆம் ஆண்டிலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இத்தகு மூடத்தனத்துக்கும், மூர்க்கத்தனத்துக்கும் காரணம் மத மூட நம்பிக்கை என்று ஒரு பக்கத்தில் சொன்னாலும், ஆன்மிகச் சிறப்பிதழ்களை வெளியிடும் நவீன ஏடுகளும், இதழ்களும் இதற்கான பொறுப்பினை மரியாதையாக ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும்.

மாட்டுக்குத் தார்க்குச்சி போட்டாலே குற்றம் என்று சட்டம் உள்ள ஒரு நாட்டில், மனிதர்களை இப்படி மதத்தின் பெயரால் சித்திரவதை செய்கிறார்களே, இதனை அனுமதிப்பது எப்படி என்று ஊடகங்கள் குரல் கொடுக்கவேண்டாமா?

ஏன் கொடுப்பதில்லை? மக்களுக்கு நல்ல புத்தி வந்துவிட்டால் இதுகளை யார் காசு கொடுத்து வாங்குவார்கள்? மடமையில் ஆழ்த்தி வைத்திருந்தால்தானே அவர்களைச் சுரண்டிட முடியும்?

சேலம் பக்கத்தில் அன்னதானப்பட்டியில் அங்காளம்மன் கோயில் திருவிழா எப்படி தெரியுமா? பக்தர்களைத் துடைப்பத்தால் அடிப்பார்கள். எம்.ஏ. படித்த முண்டங்கள்கூட காசு கொடுத்து விளக்கமாற்று அடி வாங்குகின்றன என்றால், இதன் பொருள் என்ன? கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும் எவ்வளவுப் பெரிய மதிப்பு என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாமே!

மொட்டைத் தலையில் தேங்காய் உடைக்கிறார்கள். இரத்தம் பீறிடும் காட்சியைக்கூட தொலைக்காட்சிகள் அப்படியே காட்டுகின்றன. இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்படுகின்றன என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். ஆனாலும், மொட்டையாகிவிட்ட மூளை கொஞ்சமும் சிந்திப்பதில்லையே! பக்தி வந்தால் புத்தி போயே போகிறதே!

பேய் என்றால் என்ன அப்படி ஒன்று இருக்கிறதா? பிள்ளைப் பேறு இல்லை என்றால், சாட்டையால் அடித்தால் மலட்டுத்தனம் பறந்து ஓடிவிடுமா?

சரி, இதுபோல சாட்டை அடிகளை எந்தப் பார்ப்பனப் பெண்ணாவது வாங்குவது உண்டா? துடைப்ப அடியை எந்தப் பார்ப்பான் வாங்குகிறான்?

பக்தியில்கூட வெஜிட்டேரியன், நான் வெஜிடேரியனா? சிந்திப்பீர்!

------- மயிலாடன் அவர்கள் 30-9-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

பொது இடங்களில் உள்ள கோவில்களை இடிப்பதை முடிவு செய்ய வேண்டும்-உச்சநீதிமன்றம் உத்தரவு


மதச்சார்பற்ற தன்மையில் புதிய மைல்கல்
பொது இடங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் புதிய கட்டுமானம் கூடாது

ஏற்கெனவே உள்ள கோவில்களையும் இடிப்பதை
மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும்

உச்சநீதிமன்றம் உத்தரவு

பொது இடங்களில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் புதிதாகக் கட்டுமானப் பணி எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை செவ்வாய்க்கிழமை (29.9.2009) பிறப்பித்தது. நாடு முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் இதர மதத்தை சார்ந்த வழிபாட்டுத்தலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை இந்த இடைக்கால உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று நீதிமன்றம் மேலும் கூறியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அனைத்து மாநகரங்களிலும் பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்கள் உள்பட அனைத்துக் கட்டடங்களையும் இடிப்பதற்கு 2006 ஆம் ஆண்டு அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், வழிபாட்டுத்தலங்களுக்காக பொது இடங்களை ஆக்கிரமிப்பது தடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து, அதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு ஜூலை 31 ஆம் தேதி மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால்சுப்பிரமணியம், பொது இடங்களை ஆக்கிரமித்து வழிபாட்டுத்தலங்களை கட்டுவது தொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. அதன்படி, இனிமேல் பொது இடங்களில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் புதிதாகக் கட்டுமானப் பணி ஏதும் மேற்கொள்ளப்படாது என்று உறுதி அளித்தார். இதைக் கேட்டறிந்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் புதிய கட்டுமானப் பணிக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

ஜூலை 31 ஆம் தேதிய தீர்ப்பு

இதே நீதிபதிகள் 2009,ஜூலை 31 ஆம் தேதி பிறப்பித்த ஆணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், குருத்வாராக்கள் என எந்த வழிபாட்டுத் தலமும் இடம் பெறக் கூடாது. தற்போது உள்ள வழிபாட்டுத் தலங்களை அகற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என வாதிடுவதை ஏற்க முடியும். இருப்பினும், மத்திய அரசு எதிர்காலத்தில் பொது இடங்களில் எந்தவிதமான வழிபாட்டுத் தலமும் இடம் பெறாமல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது இடத்தில் யாராவது ஒருவர் வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்தினாலும் கூட அதை அனுமதித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து அரசு சொலிசிட்டர் ஜெனரல் கோபால்சுப்பிரமணியம் நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசின் கருத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதற்குப் பதிலளித்த கோபால் சுப்ரமணியம், மத்திய அரசு இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுடன் பேசி ஒருமித்த முடிவை ஏற்படுத்த முயலும் என்று உறுதியளித்தார்.

இதையடுத்து வழக்கு செப்டம்பர் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி மேற்கண்ட தடை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.


---------------------நன்றி:-"விடுதலை" 30-9-2009

கடவுள் நம்பிக்கையாளர்களை கடுமையாக விமர்சிப்பது சரியா?



கடவுள் நம்பிக்கையாளர்களை கடுமையாக விமர்சிப்பது சரியா? கடவுள் இருக்கிறது என்பவர்களை எல்லாம் கடுமையாகப் பேசுகின்றீர்களே, இது சரியா என்று கேட்கலாம்!

நியாயம்தான்.

அதே நேரத்தில், உங்கள் புராணங்களில் கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களை எவ்வளவு கேவலமாக - இழிவாக எழுதி வைத்திருக்கிறார்கள். கடவுள் இல்லை என்பவன் மனைவியை எல்லாம் கற்பழிக்க வேண்டும் தலையை வெட்ட வேண்டும் என்று எல்லாம் எழுதி வைத்துள்ளார்களே! அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?

கடவுள் இருக்கிறது என்பவனைத் தான் கேட்கின்றேன். கடவுள் இருக்கிறது என்று கருதுகிறவன் எல்லாம் மற்றவன் சொல்லி நம்புகிறானே தவிர, அவனுக்கே – அவன் சொந்தப்புத்திக்குப் பட்டு ஏற்றுக் கொண்டு இருக்கிறானா? கடவுளுக்கு ஏன் இவ்வளவு கோயில்கள், உருவங்கள்? கடவுள் அன்பே உருவானவன் என்கிறான். அவன் கையில் ஏன் அரிவாள், கொடுவாள் ஈட்டி எல்லாம்? இவை எல்லாம் கொலைக்காரன் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்கள் அல்லவா? உருவமே இல்லாத கடவுளுக்குப் பொண்டாட்டி ஏன்? வைப்பாட்டி ஏன்? வருஷா வருஷம் கலியாணம் ஏன்? போன வருடம் பண்ணின கல்யாணம் என்ன ஆச்சு? எவன் அவளை அடித்துக் கொண்டு போனான் என்று பக்தன் சிந்திக்க வேண்டாமா? இவற்றையெல்லாம் நம்புவதால் யாருக்கு என்ன பிரயோசனம்? மனித சமூதாயத்திற்கு என்ன லாபம்? பார்ப்பான் இடுப்பில் காசு சேருவதுதான் மிச்சம்.

----------------தந்தைபெரியார் -"விடுதலை" 20-1-1973

29.9.09

தலித் விடுதலை முன்னோடி – பெரியார் - 2





இதில் இன்னொரு உண்மையும் பொதிந்து கிடக்கிறது. அது என்னவெனில் “தலித்துகளின் பார்ப்பனிய எதிர்ப்பை பெரியார் தமதாக்கி கொண்டார்” என்று தலித் பார்வையில் ஒரு சிலர் வைத்த கருத்தும் உண்மைக்கு புறம்பானது என்பதும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் முன்வைத்த பார்ப்பனிய எதிர்ப்புக்கும், பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்புக்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு. ஒப்பீட்டுடன் பார்க்க வேண்டுமானால், அயோத்திதாசாரின் பார்ப்பனிய எதிர்ப்பும், பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பும் எப்படிப்பட்டது? இது குறித்து பேராசிரியர் திரு.அ.மார்க்ஸ் தரும் தகவல் இதோ

பெரியாரின் அரசியல் என்பது கடவுள் மறுப்பு புராண இதிகாச ஒழிப்பு ஆகியவற்றோடு ஜாதி ஒழிப்பை இணைப்பதாக உள்ளது. ஆனால் அயோத்திதாசாரின் பவுத்தமோ, புத்தரைக் கடவுளாக ஏற்றல், இந்துப் புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் பதிலாக புதிய புராணங்களையும், தொல் கதைகளையும் மாற்று மரபுகளிலிருந்து தேடிப்பிடிப்பது என்பதாகவே உள்ளது. இருவரின் நோக்கங்களும் ஒன்றான போதிலும் பாதைகள் முற்றிலும் வேறானதாகவும் இறுதி இலக்கு வரை வழியில் எந்தப் புள்ளியிலும் சந்திக்க இயலாதவையாகவும் உள்ளன. எனவே பெரியாரால் எந்த வகையிலும் அயோத்திதாசரை முன்மாதிரியாக கொள்ள இயலாத நிலை இருந்ததை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். நடைமுறையில் கூட இறைவணக்கங்களையும் பண்டிகைகளையும் ஒழிப்பதாக பெரியாரது பார்வை இருந்தது. அயோத்திதாசாரின் பார்வையோ புதிய பெயர் சொல்லி, விளக்கம் கூறி எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதாகவும், கொண்டாடுவதாகவும் இருந்தது. கார்த்திகை தீபத்தை “கார்த்துலதீபம் எனவும் தீபாவளியைத் “தீபவதிப் பண்டிகை எனவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அயோத்திதாசர் பரிந்துரை செய்வது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் பெரியாரின்

பகுத்தறிவு சார்ந்த நவீனத்துவப் பார்வையும், அயோத்திதாசாரின் தொன்ம மீட்புப் பார்வையும் சந்திக்க இயலாதவையாக இருந்தன.

-“கவிதாசரண் மே-ஜூன் 2003

ஓத்தகருத்துடையவர்களை, ஒத்த தத்துவங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி பரப்பியவர் பெரியார். சான்றாக கம்யூனிசத்தை ரஷ்யாவுக்கு செல்வதற்கு முன்பே மக்களுக்கு அறிமுகம் செய்து பரப்பினார். ஆதேபோல் அம்பேத்கரை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி அவரின் ‘ஜாதி ஒழிய வழி எனும் நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு பட்டி தொட்டியெல்லாம் பரப்பியவர் பெரியார்.

தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட. ஒடுக்கப்பட்ட மக்ககளின் உயர்வு என்பது பிறவி ஆதிக்க சக்தியான பார்ப்பனிய ஒழிப்பில் தான் உள்ளது என்ற காரணத்தினால்தான். “பாதைகள் வேறாக இருந்தாலும், நோக்கம் ஒன்றாக இருந்ததால்தான் அயோத்திதாசாரின் நூல்களை படிக்க வலியுறுத்தி தனது ‘குடியரசுஇதழில் விளம்பரம் செய்த பெருந்தகையாளர் பெரியார்.

எனவே., பெரியாரின் “பார்ப்பனிய எதிர்ப்பு என்பதே இந்துத்துவத்தின் இடுப்பு எலும்பை முறிக்க கூடியதுதான்.

கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம் புராணங்களில்தான் இந்துத்துவத்தின் உயிர் அடங்கியிருக்கிறது. இவைகளை ஒழிப்பதில் பெரியார் தொண்டர்களைத் தவிர வேறு யாரும் இப்பணியை முன்னெடுத்துச் செ(ய்)ல்வதில்லை. இப்பணியை செய்யாவிட்டாலும் பரவாயில்லை முட்டுக்கட்டை போடாமலாவது மற்றவர்கள் இருக்க வேண்டும் என்பதே பெரியாரின் தொண்டர்களின் வேண்டுகோள்.

உதாரணமாக, தமிழக அரசு கோயில்களில் ஆடு, மாடு, கோழி, பலியிடும் தடைச் சட்டத்தை கொண்டு வந்தபோது அதை எதிர்த்து செயல்பட்டவர்கள் யார்? யார்? என்பதை நாடு அறியும். கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரால் யார் எவ்விதமாக நடந்து கொண்டாலும் கண்டிக்கத் தயங்காதவர்கள் பெரியாரும், பெரியார் தொண்டர்களும்.

ஷெட்யூல்டு வகுப்புக் கலாச்சார ஆண்டு விழா மலர் ஒன்றுக்காக பெரியாரிடம் வாழ்த்துக் கேட்டார்கள் அவ்வமைப்பினர். அதற்கு பெரியார் அளித்த வாழ்த்து இதோ.

செட்யூல்டு வகுப்பினர் கலாச்சார ஆண்டு விழாவை ஒட்டி மலர் ஒன்று வெளியிட இருப்பதைத் தங்களின் மூலம் அறிந்தேன்.

செட்யூல்டு வகுப்பினரின் தாழ்விற்குக் காரணமான கலாச்சாரத்தின் பெயரால் ஒரு அமைப்பு குறித்து வெட்கப்படதக்கதாகும். செட்யூல்டு வகுப்பினரின் தாழ்விற்கும், சமுதாய இழி நிலைக்கும் காரணம், அவர்களின் கலாச்சாரமும், ஏற்றுக் கொண்டிருக்கிற பரம்பரைத் தொழிலும், கடவுள் , மத, சாஸ்திர பழைமை நம்பிக்கையுமேயாகும். இவையாவற்றையும் விட்டொழிந்தால்தான், செட்யூல்டு வகுப்பினர் தங்களின் சமுதாக இழிவற்று, சுதந்திரமாக, சமத்துவமாக, மனிதனோடு மனிதராக வாழமுடியும். அதற்கு இக்கூட்டம் வகை செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

(96-வது பெரியார் பிறந்த நாள் மலர் )

தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் மீது பெரியாரின் தாக்கம் எப்படியிருந்தது என்பதை இதன் மூலம் டாக்டர் வேலு அண்ணாமலை உணர்ந்து கொள்ளட்டும். தமிழ்நாட்டில் பெரியாரின் தாக்கம் ஆழமாக வேருன்றி இருந்த காரண்ததால் தான், இந்தியாவில் தலை விரித்தாடும் “இந்துத்துவம் தமிழ்நாட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பெரியார் தத்துவம் இருக்கும்வரை, எந்தப்பட்டாளத்துடன் கூட்டு சேர்ந்து வந்தாலும் “இந்துத்துவம் தலையெடுக்க முடியாது. ஓட்ட நறுக்கப்படும் பெரியார் தொண்டர்களால்.

பார்ப்பனிய எதிர்ப்பில் பெரியார் தெளிவாக இருந்ததால்தான், அவர் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அலறுகிறது. “இந்துத்துவா. “இந்துத்துவாவை எதிர்த்தவர்களை எலலாம் தன் வயப்படுத்தியது பார்ப்பனியம். இன்று வரை “பார்ப்பனியம்பலிக்காத ஒரே தலைவர் “பெரியார்மட்டுமே. யாராலும் யாருக்காகவும், தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத தன்னலமற்ற தத்துவம் “பெரியாரியல்

“இந்துத்துவா வளராமல் இருப்பதற்கு டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. முட்டுக்கட்டை போடாமல் இருந்தாலே போதும்.

----------------------------------தொடரும்

ஆட்சி மொழியும், மாநில சுயாட்சியும்



காஞ்சிபுரத்தில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட விழாவில் நிறைவேற்றப்பட்ட எட்டு தீர்மானங்களும் நறுக்குத் தெறித்தவையே!

இந்தியாவில் உள்ள தேசிய மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும் என்ற ஒரு தீர்மானமும், அதனையொட்டி மாநிலங்களுக்கு சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற தீர்மானமும் இந்தக் காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளே!

இது இன்று நேற்றல்ல வெகுகாலமாக தி.மு.க.வால் எழுப்பப்பட்டு வரும் கோரிக்கைகள்தான்.

இப்பொழுது மேலும் அழுத்தம் கொடுத்து, ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி, செயல்பாடு என்கிற கட்டத்துக்குக் கொண்டு வருவதற்கான முனைப்பு என்றே இதனைக் கருதவேண்டும்.

இது ஒரு கட்சியின் தீர்மானமாகக் கருதப்படாமல், இனம், மொழி, பண்பாடு என்ற தனித்தன்மையைக் காப்பாற்றவேண்டும் என்கிற இயல்பான உணர்வு கொண்ட அனைவராலும் வரவேற்கப்படவேண்டியதுமாகும்.

இது ஏதோ இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் எழுந்துள்ள உயிர்த்துடிப்புள்ள பிரச்சினையாகும்.

உண்மையைச் சொல்லப்போனால், இந்தியா என்பது ஒரே நாடல்ல பல முரண்பட்ட இனங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் வாழுகிற துணைக் கண்டமாகும்.

தேசிய ஒருமைப்பாடு என்றால், மாநிலங்கள் தங்கள் இனம், மொழி, பண்பாடு அனைத்தையும் துறந்துவிட்டு கரைந்துபோய்விடவேண்டும் என்று பொருள் அல்ல!

இனத்தைப்பற்றிப் பேசினால் இனவாதம், மொழியைப்பற்றிப் பேசினால் மொழிவாதம், பண்பாட்டைப் பற்றிப் பேசினால் துவேஷம் என்று நினைக்கிற, சொல்கிற, பிரச்சாரம் செய்கின்ற ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறது. இதுதான் பார்ப்பனர்கள்; ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்றால், தங்களுக்கு இல்லாதது மற்றவர்களுக்கும் இல்லாததாக ஆக்கப்படவேண்டும் என்கிற குறுகிய புத்தியாகும்.

அவர்களுக்கென்று ஒரு நாடு கிடையாது; அவர்களுக்கென்று உள்ள சமஸ்கிருத மொழியோ செத்துச் சுண்ணாம்பாகி விட்டது_ செத்த மொழி (Dead Language) என்று கூறப்படும் அவல நிலைக்கு ஆளாகிவிட்டது. இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவதாகக் கூறப்படுவோர் எண்ணிக்கை 0.01 ஆகும்.

இந்த நிலையில் பார்ப்பனர்கள் தங்கள் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள எங்குப் போய் முட்டிக்கொள்ள முடியும்?

இன்று உலகில் கிட்டத்தட்ட 20 நாடுகளில் கூட்டாட்சி முறை வெற்றிகரமாக நடந்துதான் வருகிறது. பிரிந்து செல்லும் உரிமை கூட வழங்கப்பட்டுள்ளது. வளர்ச்சி பெற்று வரும் ஒரு சிந்தனைப் போக்கில் பெட்டியில் அடைக்கப்பட்டு பூட்டப்பட்ட பொருள்களாக மக்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

மாநிலங்களில் சுயாட்சிபற்றி ஆய்வு நடத்தி கற்றுத்தேர்ந்த அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழுக்கள் அறிக்கைகளைக் கொடுத்திருக்கின்றன. ராஜ மன்னார் குழு (1969_71), சர்க்காரியா தலைமையிலான குழு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பூஜ் தலைமையிலான குழு (2007) என்று அறிக்கைகள் கொடுக்கப்பட்டன; அதற்காக பல கோடி ரூபாய்களும்கூட செலவழிக்கவும்பட்டன. ஆனாலும், அவற்றைச் செயல்படுத்த மத்தியில் உள்ளவர்களுக்கு மனம் மட்டும்தான் இறங்கி வரவில்லை. ஆதிக்கத்தின் சுவையை ருசித்தவர்கள் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க முன்வரமாட்டார்கள்.

நிலைமை என்ன ஆயிற்று என்றால், ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல் மாநில அதிகாரத்தின் கீழிருந்த பல துறைகள், அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பொதுப்பட்டியலுக்குக் கடத்தப்பட்டன என்பதுதான் உண்மை.

எடுத்துக்காட்டாக, மாநிலங்களின் பட்டியலில் இருந்த கல்வி, நெருக்கடி நிலை காலத்தில் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இப்பொழுது கூட ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மாநிலங்களின் அதிகார வரம்புக்குள் இருந்த உள்ளாட்சித் துறையை மத்திய ஆட்சியின் நேரடித் தொடர்பில் கொண்டு செல்லும் முயற்சிதான். அதற்காக மிகப்பெரிய திட்டம் பின்னப்பட்டது.

2008 ஏப்ரல் 22_24 ஆகிய நாள்களில் புதுடில்லியில் உள்ளாட்சித் தலைவர்களின் மாநாட்டினை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கூட்டியது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட உள்ளாட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

உள்ளாட்சியை வலுப்படுத்துவது உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு ஏராளமான நிதிகளை ஒதுக்கச் செய்து, அவர்களின் உதடுகளில் தேன் தடவி, மாநிலப் பட்டியலில் இருப்பதைவிட மத்திய ஆட்சியின் நேரடித் தொடர்பில் இருந்தால் நல்லது என்கிற தன்மையான ஒரு எண்ணத்தை ஏற்படுத்துவதுதான் மத்திய அரசின் நோக்கமாகும். அதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு, மாநாட்டில் பிரதமரிடம் அளிக்கும் வரைவுத் தீர்மானமும் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலையிட்டதன் காரணமாக அந்தப் பரிந்துரை விலக்கப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து பிரதிநிதிகள் அம்மாநாட்டுக்குச் செல்லவில்லை.

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் காஞ்சிபுரம் விழாவில் சரியான ஒரு காலகட்டத்தில் ஆட்சி மொழித் தீர்மானமும், மாநில சுயாட்சித் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனை அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்று பொதுக் கருத்தை உருவாக்கும் ஒரு முயற்சியில் முதல்வர் கலைஞர் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று எதிர்ப்பார்ப்போம்!


--------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம் 29-9-2009

திராவிடர், ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவர் அனைவரும் ஓரினத்தவரே !

திருவாரூர் போகாமல் இருப்போமா?

* சென்னை மாகாண 2 ஆவது சுயமரியாதை மாநாடு (30.8.1931)
* சென்னை மாகாண 15 ஆவது ஜஸ்டிஸ் கட்சி மாநாடு (24, 25.8.1940)


சுயமரியாதை இயக்க நிலையிலும் சரி, நீதிக்கட்சி என்ற அமைப்பிலும் சரி, திராவிடர் கழகம் என்ற முறையிலும்கூட திருவாரூரில் நடைபெற்ற மாநாடுகளும், விழாக்களும், நிகழ்ச்சிகளும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடியவை.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்கள் திருவாரூர்,நாகைவட்டாரங்களில் ஒவ்வொரு குக்கிராமத்திலும், ஒவ்வொரு குடிசையிலும் கோலாகலமாக இன்றுவரை கொண்டாடப்படும் கோலத்தை, குதூகலிப்பைக் காணலாம் - கண்டு களிக்கலாம்.

அதுவும் 1940 ஆகஸ்ட் 24 ஆம் நாளன்று தந்தை பெரியார் தலைமையில் திருவாரூரில் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக்கட்சி) 15 ஆவது மாகாண மாநாட்டில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றால், ஒவ்வொன்றும் ஒரு கோடி பெறும் என்று சொன்னாலும், அது சாதாரணமானதுதான். அதற்கு மேலான விலை மதிப்பிட முடியாத அருஞ்செல்வங்கள் அவை.

அடடா, இப்பொழுது நினைத்தாலும் மயிர்க்காம்பெல்லாம் சிலிர்க்கின்றன. இன்றைக்குக்கூட அவை அசாதாரணமானவை என்றால் அன்று...

முதல் தீர்மானமோ கண்களைக் குளமாக்கக் கூடியது! தந்தை பெரியார் தம் எண்ணத்தில் தனிப்பீடம் கொடுத்து வைத்திருந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட செல்வமாகச் சேகரித்து வைத்திருந்த _ அந்தப் பன்னீர்செல்வம் பாழும் விமான விபத்தில் கண நேரத்தில் பலியாகி தந்தை பெரியார் அவர்களையே கதறச் செய்த அந்தக் காலத்திலேயே பார்அட்லா படித்த ஏ.டி. பன்னீர்செல்வத்தின் மறைவு குறித்து முதல் தீர்மானம்தான் அது.

கண்ணீரில் ஆரம்பித்த தீர்மானம் அடுத்தடுத்தவை ஒவ்வொன்றும் தமிழர்களின் கண்ணீரைத் துடைத்து கவுரவமான இடத்திற்கு உயர்த்தும் உன்னதமான ஒப்புயர்வற்ற தீர்மானங்கள்.

இந்தி ஒழிப்புக்கு நன்றி, ஆதிதிராவிடர்க்குத் தனித் தொகுதி கோரல், பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனித் தொகுதி கோரிக்கை.

(தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை உணர்வை தம் உண்ணாவிரதத்தால் காந்தியார் ஒடுக்கியதற்கு எதிரான தீர்மானம்) கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்லூரி குழுவை காங்கிரஸ் ஒழித்ததற்கு எதிர்ப்பு, மீண்டும் கோருதல், ஸ்ரீ என்ற வார்த்தைக்குப் பதில் திரு என்ற சொல்லைப் பயன்படுத்தக் கோரல், அரிஜனன் என்ற பெயருக்குப் பதிலாக ஆதிதிராவிடர் என்று அழைத்திட வேண்டுதல். கைத்தறித் துணிக்குக் கைலாகு, மக்கள் கணக்கெடுப்பில் இந்துக்கள் என்று கூறக் கூடாது வேண்டுமானால் திராவிட சமயம் என்று கூறுதல், வகுப்புவாரி உரிமை வெறும் ஆணையாக மாத்திரம் இல்லாமல் சட்டமாக ஆக்கப்படவேண்டும் என்ற வலியுறுத்தல், மக்கள் தொகைக்கேற்ற பிரதிநிதித்துவம் கோருதல், மாநில அரசிடம் மட்டுமின்றி இந்திய அரசுத் துறைகளிலும் இட ஒதுக்கீடு வற்புறுத்தல், இந்து சட்டத்தை திராவிடர்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என்ற மறுப்பு, (திராவிட லா தேவை) உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி அமைப்புக்குக் கல்தா, இந்து முசுலிம் ஒற்றுமை என்பதை திராவிடர் முசுலிம் என்று சொல்லப்படல், திராவிட மாகாணத்தில் உள்ள 18, 21 வயதினரான ஆண்கள் யாவருக்கும் இராணுவப் பயிற்சி அவசியம், மார்வாடி வட்டிக்கடைகளின் வட்டிகளைக் குறைத்தல், ஒரு மாநாட்டில் இத்தனை உயிர்த்துடிப்பான தீர்மானங்கள் என்றால் நம்ப முடிகிறதா?

ஆனாலும், நம்பித்தான் தீரவேண்டும். திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானங்கள் மட்டுமே போதும். திராவிட இயக்கம், தன்மான இயக்கம், தமிழர்களின் அனைத்து வகையான வளர்ச்சியில், உரிமைகள் அனைத்திற்குமே கட்டியங் கூறிய வரலாற்றுச் சிறப்புமிக்க உதயம் . அவற்றைச் செயல்படுத்திட சர்வபரித் தியாகம் செய்திருக்கும் சீர்மை இவற்றிற்கெல்லாம் காரணம் திராவிட இயக்கமல்லாமல் வேறு எது? வேறு யார்?

அந்த மாநாட்டின் தலைவர் யார் தெரியுமா? தந்தை பெரியார். அத்தகு மாநாட்டில் புரட்சிகள் பூக்காமல் பூஞ்சைக் காளான்களா புறப்பட முடியும்?

திராவிடர், ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவர் அனைவரும் ஓரினத்தவரே என்ற கருத்து அம்மாநாட்டிலேயே இன்றைக்கு 69 ஆண்டுக்கு முன்பே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைக்குத் தோள்தட்டும் ஆரியம் அதன் மாற்று வடிவங்களான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., சங் பரிவார்க் கும்பலுக்கு எதிரணியில் இருக்கவேண்டியவர்களை கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பே அடையாளம் காட்டிய அந்தத் தொல்லறிவை நினைக்க நினைக்க நெஞ்சு நெக்குருகிப் போகிறது. அணுக்கள் எல்லாம் சிலிர்த்து நிற்கின்றன.

இத்தகைய சிந்தனைகள் வடிக்கப்பட்ட ஊரிலே ஆம் அந்தத் திருவாரூரிலே சிந்தனைச் சிற்பியாம் தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை நிறுவாமல் வேறு எந்த ஊரிலே நிறுவுவது?

அந்த மாநாடு நடந்தபோதெல்லாம் 16 வயதுடைய துருதுரு சுறுசுறு மாணவர்தான் அன்றைய திருவாரூர் மு. கருணாநிதி.

அப்பொழுது தந்தை பெரியார் அவர்களுக்கோ வயது 61. 16 அய் திருப்பிப் போட்டால் 61 தானே!

காலத்தின் விசித்திரச் சுழற்சியின் வேடிக்கை, வினோதங்கள் தாம் என்னே, என்னே!

அந்த மாணவர் பிறகு கலைஞராகி, மானமிகு மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சராகி, அந்தத் தத்துவ ஆசான் அய்யாவின் சிலையைத் திறக்கிறார் என்றால், சாதாரணமா?

நாளை மாலை தான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்கொள்ளாக் காட்சி.

தம் சொந்த ஊரிலே தந்தை பெரியார் சிலையைத் திறக்கிறோம் என்று நினைக்கும்போது மானமிகு கலைஞர் அவர்களின் சிந்தனையில்தான் எத்துணை எத்துணை எண்ண அலைகள் கரை புரண்டு ஓடும் அந்த உணர்வுகளையெல்லாம் அங்கு வெளிப்படுத்திட உள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கூட சிறுவயதில் வீரமணியும், தாமும் பட்டி தொட்டிகளில் எல்லாம் பம்பரமாய்ச் சுற்றி அலைந்து பிரச்சாரம் செய்த மலரும் நினைவுகளையெல்லாம் பசுமையாக நினைவுபடுத்தினார்.

மூன்று நாள் இடைவெளியிலே மீண்டும் அந்தப் பழைய நினைவுகளின் சங்கமத்திலே தமிழர் தலைவரும், தமிழக முதல்வரும் சங்கமிக்க யிருக்கின்றனர்.

கருஞ்சட்டையின் மகாசமுத்திரத்தை பிரவாகத்தை நமது முதல்வரும், நமது தலைவரும் கண்டு களிக்கவேண்டும்.

தமது பாடி வீட்டில் பகுத்தறிவுப் பாசறையின் வீச்சைப் பார்த்து மகிழவேண்டும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கருங்கடலாகக் காட்சி அளிக்கவேண்டும்.

கழகத் தோழர்களே, குடும்பம் குடும்பமாகக் கரங்களில் கழகக் கொடி ஏந்தி, கலந்துகொள்ளுங்கள். நமது அறிவு ஆசான் அய்யா அவர்களுக்குச் சிலை திறக்கப்படும் விழாவிலே நமது அருமைத் தலைவர்களுக்கு நமது அளப்பரிய அன்பைக் கழகக் கொடி அசைவுகள்மூலம் காட்டுவோம், வாரீர்! வாரீர்!!

95 வயதை நெருங்கும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு எஸ்.எஸ். மணியம் அவர்களும், கழகப் பொறுப்பாளர்களும் களப் பணிகளிலே மூழ்கி இருக்கிறார்கள்.

நாம் செய்யவேண்டியதெல்லாம் மிகச் சிறிய பணிதான் ஆம், அவ்விழாவிலே உற்றார், உறவினர், நண்பர்களுடன் சங்கமிப்பதுதான்!

என்ன சரிதானே!


---------------மயிலாடன் அவர்கள் 30-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

வால்மீகியின் வாய்மையும்-கம்பனின் புளுகும்!!

அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார். Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

இதன் பொருள் வருமாறு:

தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள். இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை?

------------------- பா.வே. மாணிக்கவேலர் அவர்களால் எழுதப்பட்டது -நன்றி:-"விடுதலை"25-9-2009

சுயமரியாதை இயக்கம் ஜாதியை கடவுளை மதத்தை எதிர்ப்பது ஏன்?




“சுயமரியாதை இயக்கம் - ஜாதியிலும், மதத்திலும், கடவுளிலும் பிரவேசித்தாலேயே அதன் யோக்கியதையைக் கெடுத்துக் கொண்டது என்கிறார்கள். மனிதனுக்கு இழிவு ஜாதியால் தானே உண்டாகி வருகிறது? ஜாதியோ மதத்தினால் தானே உண்டாகி வருகின்றது? மதமோ கடவுளால்தானே உண்டாக்கி வருகின்றது? இவற்றுள் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை அழிக்க முடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக இருக்கின்றது என்று யோசித்துப் பாருங்கள். ஜாதியை அழித்துவிட்டால் இந்து மதம் நிலைக்குமா? அல்லது இந்துமதத்தை வைத்துக் கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா? ஜாதியையும் மதத்தையும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா? நான்கு ஜாதியை இந்தமத தர்ம சாஸ்திரமாகிய மனுதர்ம சாஸ்திரங்கள் முதலியவை ஒப்புக் கொள்ளுகின்றன. நான்கு ஜாதிமுறைகளைக் கீதை முதலியவை கடவுள் வாக்குகள் ஒப்புக் கொள்கின்றன. "நான்கு ஜாதிகளையும் நானே சிருஷ்டி செய்தேன். அந்த ஜாதிகளுக்கு ஏற்ற தர்மங்களை (தொழில்களை)யும் நானே சிருஷ்டி செய்தேன். அத்தருமங்கள் தவற எவனாவது நடந்தால் அவனை மீளா நரகத்தில் அழுத்தி இம்சிப்பேன்" என்று இந்துக்களின் ஒப்பற்ற உயர் தத்துவமுள்ள கடவுளான கிருஷ்ண பகவான் என்பவர் கூறி இருக்கிறார். இதிலிருந்து ஜாதிக் கொடுமை, ஜாதி இழிவு, ஜாதிபேதம், ஜாதிப்பிரிவு ஆகியவைகளையோ, இவற்றில் ஏதாவது ஒன்றையோ ஒழிக்க வேண்டுமானால் மதங்களையும், கடவுள்களையும், சாஸ்திரங்களையும் ஒழிக்காமல் முடியுமா? அல்லது இவைகளுக்குப் பதில் ஏற்படுத்தாமலாவது முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். வீணாய் சுயமரியாதைக்காரர்கள் ஜாதியை, மதத்தை, கடவுளை எதிர்க்கிறார்கள், ஒழிக்க வேண்டுமென்கிறார்கள் என்பதில் ஏதாவது அர்த்தமோ அறிவோ இருக்கிறதா என்று பாருங்கள்”.

----------------- சென்னை சுயமரியாதைச் சங்கம் விழாவில் பெரியார் ஈ.வெ.ரா. பேச்சு, "குடிஅரசு" 19-01-1936

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் புத்தர் கோயிலே!


பவுத்தநெறி வளர்த்த காஞ்சி காஞ்சிஏகாம்பரநாதர்கோவில்புத்தர்கோயிலே!

நாகைப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட வேறு பவுத்த உருவச் சிலைகள் சென்னைப் பொருள்காட்சிச் சாலையில் உள்ளன.

வெள்ளனூர்: இவ்வூர் புதுக்கோட்டையில் உள்ளது. இவ்வூர் கச்சேரியின் தென்புறத்தில் புத்தர் உருவச்சிலையொன்று இருக்கிறது.

செட்டிபட்டி: புதுக்கோட்டை குளத்தூர் தாலுகாவில் உள்ள இவ்வூரில், 3 அடி 9 அங்குலம் உயரம் உள்ள புத்தர் உருவச்சிலை ஒன்று இருக்கிறது.

ஆலங்குடிபட்டி: இதுவும் அதே தாலுகாவில் உள்ள ஊர். இங்கும் 3 அடி 6 அங்குலம் உயரம் உள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது.

இனி, தொண்டை நாட்டில் சிறப்புற்றிருந்த பவுத்த ஊர்களைப் பற்றி ஆராய்வோம்.

காஞ்சிபுரம்: இந்த ஊர்தொன்றுதொடு சைவ, வைணவ, ஜைன, பவுத்த மதத்தவர்களுக்கு நிலைக்களமாக இருந்துவந்தது. பவுத்தர்கள் பண்டைக்காலத்தில் இங்கு அதிகமாக இருந்தனர். இந்த ஊரில், கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பவுத்த தூபிஇருந்தாக கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவாங்சுவாங் என்றம் சீன யாத்திரிகர் எழுதியிருக்கின்றார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளி-வளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி என்பவன காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட காலத்தில், பைம்பூம் போதிப் பகவற்கு ஒரு சேதியம் அமைத்தான் என்று மணிமேகலையினால் அறிகின்றோம். இளங்கிள்ளி அரசாண்ட கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலே, காஞ்சிபுரத்துக்குத் தென்மேற்குத் திசையில், தருமத வனம் என்றும் ஒரு பூந்தோட்டம் இருந்ததென்றும், அதில் இளங்-கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலையினால் அறிகின்றோம்.

காவிரிப்பூம்பட்டினத்தில் பவுத்த பள்ளியில் தலைவராக இருந்த அறவண அடிகள், பிற்காலத்தில காஞ்சிபுரத்தில் வந்து தங்கிப் பவுத்த மதத்தைப் போதித்து வந்தார் என்பதும் மணிமேகலையினால் பெறப்படுகின்றது. இன்றைக்கும், காஞ்சிபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டு. அது அறவணஞ்சேரி என்பதன் மரூஉ. அறவண அடிகள் தங்கிருந்த சேரி (சேரி=தெரு) ஆதலின், அத்தெரு இப்பெயர் வாய்ந்தது. இப்போது அப்பெயர் அறப்பெருஞ்செல்வி தெரு என மாற்றப்பட்டிருக்கிறது. அன்றியும், புத்தேரித் தெரு என்னும் பெயருடன் ஒரு தெரு காஞ்சிபுரத்தில் இருக்கிறது. அது புத்தர் தெரு என்பதன் மரூஉ. மாதவிமகள் மணிமேகலை பவுத்த தருமங் கேட்டுத் துறவு பூண்டபின், காஞ்சிபுரத்திலே கடைநாள் வரையில் இருந்ததாக மணிமேகலை கூறுகின்றது.

கி.பி.5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த புத்தகோஷ ஆசாரியர், பிடக நூல்களுக்கு உரைகளை எழுதியவர். இவர், தமது நண்பர்களான சுமதி, ஜோதிபாலா என்னும் பவுத்த பிக்குகளுடன் காஞ்சிபுரத்தில் வசித்திருந்ததாகவும், அவர்கள் வேண்டுகோளின்படி, இலங்கைக்குச் சென்றதாகவும் தமது மனோரதபூரணீ என்னும் உரையில் குறிப்பிடுகிறார். புத்தகோஷர் காஞ்சியில் இருந்த போது அவருக்கு அண்டாத்தகதா என்னும் நூல் கிடைத்தததாகவும், அந்நூல், தாம் திரிபிடகங்-களுக்கு உரை எழுதுவதற்குத் துணையாக இருந்தது என்றும் சாமந்தபாசாதிகா என்னும் உரையில் இவர் கூறுகிறார்.

நளாந்தா பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இருந்த ஆசாரிய தர்மபாலரும், அபிதம்மாத்த சங்கிரகம் முதலிய நூல்களை இயற்றிய அநுருத்தரும் காஞ்சியில் பிறந்தவர்கள். அநுருத்தர் காஞ்சியில் இருந்த மூலசோமவிகாரையில் இருந்தவர்.

கி.பி.640இல் காஞ்சிபுரத்திற்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீன யாத்திரிகர், காஞ்சிபுரத்தில் நூறு பவுத்தப்பள்ளிகளும் ஆயிரம் பிக்குகளும் இருந்தாகக் கூறுகிறார். ஆசாரிய திக்நாகர் என்பவர், காஞ்சிக்கு அருகில் சிம்மவக்த்ரம் என்னும் இடத்தில் பிறந்தவர் என்று இந்த யாத்திரிகர் கூறுகிறார். இவர் கூறுகிற சிம்மவக்த்ரம் என்னும் ஊர், காஞ்சிக்கு அருகில் உள்ள சீயமங்கலமாக இருக்க வேண்டும்.

யுவாங் சுவாங் காஞ்சிக்கு வந்த சற்றேறக்குறைய அதே காலத்தில் காஞ்சிபுரத்தை அரசாண்ட மகேந்திரவிக்கிரமன் என்னும் பல்லவ அரசன் (அப்பர் சுவாமிகள் காலத்தவன்), தான் எழுதிய மத்தவிலாசப் பிரகசனம் என்னும் நூலில், காஞ்சியில் பல பவுத்த விகாரைகள் இருந்தன என்றும் அவ்விகாரைகளுக்கெல்லாம் தலைமையாக இருந்த பெரிய விகாரைக்கு இராஜ விகாரை என்று பெயர் இருந்ததென்றும் கூறுகிறார்.

காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு அரசாண்ட பல்லவ அரசர்களுள் புத்தவர்மன் என்பவன் பவுத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகின்றான். இவன் பவுத்தர்களுக்காகப் பவுத்தப்பள்ளிகளைக் கட்டி அவர்களைஆதரித்திருக்கக்கூடும். கி.பி.எட்டாம் நூற்றாண்டில், ஹிமிசீதளன் என்னும் அரசன் பவுத்தர்களை ஆதரித்தான் என்றும், அகளங்கர் என்னும் ஜைனர் காஞ்சிபுரத்தில் இவ்வரசன் முன்னிலையில் பவுத்தர்களுடன் சமயவாதம் செய்து வென்று, இவ்வரசனை ஜைன மதத்தில் சேர்த்ததோடு, தோல்வியுற்ற பவுத்தர்களை இலங்கைக்கு அனுப்பிவிட்டார் என்றும் தெரிகின்றது.

காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் கோயில் காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் கோயில் என்று வழங்கும் ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோயிலெனத் தெரிகிறது. இக்கோயிலின் முன் கோபுரத்தின் அஸ்தி வாரக் கல் கட்டடத்தில் சில புத்த விக்கிரகங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில, முன்பு இருந்த உருவம் தெரியா-மலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன. கோவில் உள்மண்டபத்திலும் சில கல்தூண்களில் புத்தவிக்கிரங்கள் இப்போது மிருக்கின்றன. இது புத்தர் கோவில் என்பதற்கு மற்றோர் ஆதாரமிருக்கிறது. அஃதாவது இக்கோவில் மேல்புறம் வீதிக் கடைசியிலிருந்து வரும் ஏரிக்கு புத்தேரி என்றும், வீதிக்கு புத்தேரித்தெரு என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கி வருகின்றன.

கச்சீஸ்வரர் கோயிலுக்கு நான் சென்று பார்த்தபோது, தூண்களில் மட்டும் புத்தர் உருவங்களைக் கண்டேன். கோபுர அஸ்திவாரத்தில் இருந்த புத்த விக்கிரகங்கள் காணப்படவில்லை. புத்தேரித்தெரு என்று இப்போது வழங்கப்படுகிற தெரு முற்காலத்தில் புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரய பத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன. புத்தேரித் தெருவின் மேற்குச் கோடியில் உள்ள கயிலாசநாதர் கோயில் என்னும் இராஜசிம்மேச்சரம் ஆதியில் புத்தர்கோயிலாக இருக்கவேண்டும் என்பதற்கு அக்கோயிலின் புராண ஆதாரங்களால் யூகிக்கப்படுகிறது.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளிமதில்:

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளிமதில் சுவரில் சில புத்த விக்கிரகங்கள் பலகைச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனை கிருஷ்ணதேவராயரால் 1509இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோயில்களை இடித்து அக்கற்களைக்-கொண்டு இந்த மதிற்சுவர் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோயில்களை இடித்து அக்கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த விக்கிரகங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன. காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த விக்கிரகம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் பரிநிர்வாணம் அடையும் நிலையில் உள்ளது போன்ற கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோவில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில், கச்சிக்கு நாயகர் கோயில் என்னும் புத்தர் கோயில் இருந்தது. அதற்கு மானியமாக செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ள நாவலூர் கிராமம் விடப்பட்டிருந்தது. இந்தக் கோவில் இப்போது காணப்படவில்லை. காஞ்சி, கருக்-கினில் அமர்ந்தாள் கோயில் என்னும் கோயிலில் இரண்டு புத்தச்சிலைகள் உள்ளன. அவை, முன்பு காஞ்சிமேட்டுத் தெருவில் இருந்தனவாம். காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி ஆலயம்

இவ்வாலயத்தில் பல புத்த விக்கிரங்கள் இருந்தன. அவைகளில், 6 அடி உயரம் உள்ள நின்ற வண்ணமாக அமைக்கப்பட்ட சாஸ்தா (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருள்காட்சி சாலையில் இருக்கிறது. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்போது காணப்படவில்லை. இக்கோயிலில் இருந்த வேறு புத்த விக்கிரங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்குமுன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால் அவை பிறகு துண்டுதுண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை இருந்தவிடமே தெரியவில்லை. காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில்உள்ள ஒரு தோட்டத்தில் புத்தவிக்கிரகம் ஒன்று இப்போதும் நன்னிலையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தைக் கட்டியபோது, அதன் அடியில் சில புத்த விக்கிரகங்களைப் புதைத்து இருக்கிறார்களாம்.

கி.பி.14ஆம் நூற்றாண்டில் இருந்த ஜாவா தேசத்துக் கவிவாணர் ஒருவர், காஞ்சிபுரத்தில் 14 பவுத்தப் பள்ளிகள் இருந்தன என்று கூறியுள்ளார். அந்நூற்றாண்டில், காஞ்சியில், பவுத்தமதத்தையும் வைணவ மதத்தையும் பிரித்தறிய முடியாதபடி இரண்டறக் கலந்திருந்தன என்று தெரிகிறது.

அறவண அடிகள், மணிமேகலை, ஆசாரிய புத்த கோஷர், சுமதி, ஜோதிபாலர், திந்நாக ஆசாரியர், போதிதரும ஆசாரியர், ஆசாரிய தருமபாலர், ஆநந்ததேரர், அநுருத்தர், புத்தாதிக்யர் முதலிய பேர்பெற்ற தேரர்கள் இவ்வூரில் வசித்தவர்கள். இவர்கள் அன்றியும்,

காஞ்சிபுரத்தில், கி.பி. 9 முதல் 11ஆவது நூற்றாண்டு வரையில் இருந்த சில பவுத்தப் பெரியார்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இப்பெயர்கள், பாடலிபுரத்தில் உள்ள பொருள்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ள பவுத்த உருவங்களின் பீடத்தில் நாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்தப் பவுத்த விக்கிரகங்கள். கயா ஜில்லாவில் உள்ள குர்கிஹார் என்னும் இடத்தில் இருந்து கிடைத்தன. குர்கிஹார், பண்டைக் காலத்தில் குக்குட பாதகிரி என்னும் பவுத்த இடமாக இருந்தது. இங்கிருந்து கிடைத்த, உலோகங்களால் செய்யப்பட்ட பவுத்த உருவங்களில் 17 உருவங்கள் காஞ்சிபுரத்திலிருந்த பவுத்தப் பெரியவர்களால் அளிக்கப் பட்டவை. அவர்கள் பெயர் வருமாறு:

அம்ருதவர்மன், புத்தவர்மன், தர்மவர்மன், தூதசிம்மன், பிரபாகரசிம்மன், மஞ்சுஸ்ரீ, வீரியவர்மன், புத்தவர்மன் (இவர் காஞ்சியில் இருந்த கந்தகுடியில் இருந்தவர். புத்தர் கோயிலுக்குக் கந்தகுடி என்பது பெயர்). புத்தஞானர், சுகசுகர், விரோசன சிம்ம ஸ்தவிரர் (இவர் காஞ்சிக்கு அருகில் உள்ள நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில் பிராமண குடும்பத்தில் பிறந்து, வேத வேதாங்கங்களைக் கற்றுணர்ந்து, பின்னர் பிரஞ்ஞசிம்மர் என்னும் பவுத்த குருவின் சீடராகி விரோசன சிம்ம ஸ்தவிரர் என்னும் துறவுப் பெயர் கொண்டவர்) ரகுலவர்மர், சந்திரவர்மர், நாகேந்திரவர்மர், வீரவர்மர், அவ-லோகித சிம்மர் (இவர் கேரள தேசத்திலிருந்து வந்து காஞ்சியில் தங்கியவர்) இவர்கள் எல்லோரும் பவுத்த பிக்குக்கள் என்று தெரிகிறது. இவர்களில் வர்மர் என்னும் பெயரையுடைவர்கள் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். இவர்கள் கி.பி. 9 முதல்11ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்தவர்.

--------------ஆதாரம்:-நூல்:- "பவுத்தமும் தமிழும்" பக்கம் 51-57

28.9.09

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் - ஈரம் கசிந்த தீர்மானம்


ஈரம் கசிந்த தீர்மானம்

ஈழத்தில் தமிழர்கள் திட்டமிட்ட முறையில் கொடுமைப்படுத்தப்படும் நிலையைப் பார்த்தவர்களுக்கு அறிவார்ந்தவர்களுக்கு உணர்ந்தவர்களுக்குத்தான், காஞ்சிபுரம் விழாவில் தி.மு.க. நிறைவேற்றிய எட்டாவது தீர்மானத்தின் அருமை என்னவென்று புரியும் அதன் அவசியத்தையும் உணர முடியும்.

அரச பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை ஏட்டளவில் படித்தவர்கள், நிதர்சனமாகத் தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பை சிங்கள அரசு தங்கத் தாம்பாளத்தில் வைத்து உலகத்திற்கே பிரகடனப்படுத்தி விட்டது என்றே கருதவேண்டும். இந்தச் செயலுக்காக அது கூச்சப்படவில்லை கூனிக் குறுகிடவும் இல்லை.

சிங்களப் பேரினவாத அரசின் இந்தக் குரூர செயல்பாடுகளுக்குப் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்கக்கூடிய ஒரு கூட்டம் இருக்கிறது என்றால், அது உலகம் முழுவதும் பரவியிருக்கக்கூடிய பார்ப்பனர்கள்தான் அவர்களின் கைகளில் குவிந்திருக்கும் ஊடகங்கள்தான்.

ஈழத்தில் தமிழர்களின் அவல நிலையைச் சுட்டிக்காட்டுவது சிங்களப் பத்திரிகையாளராகவிருந்தாலும் கூட அவர்களின் கழுத்துகளையும் சீவி எறிந்திட சற்றும் தயங்கிடவில்லை. இட்லரை இரு நூறு மடங்கு பெருக்கினால் கிடைக்கும் கூட்டுத் தொகையான மகிந்த ராஜபக்சே!

பல லட்சம் மக்களை முப்படை கொண்டும், வெளிநாட்டு இராணுவ உதவிகள் கொண்டும் கொன்று குவித்தும் இன்னும் தாகம் அடங்கவில்லை இந்த அதிபருக்கு.

முள்வேலி முகாமுக்குள் மக்களை முடக்கி, அவர்கள் நொடிதொறும், நொடிதொறும் அனுபவிக்கும், துடிக்கும் அவலங்களைக் கண்டு ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறார் இந்த இடிஅமீன்.

உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்துப் பார்த்துவிட்டன. ஒப்புக்காவது அய்.நா.மன்றமும் வேண்டுகோள் விடுத்துப் பார்த்தது.

இன்னும் சொல்லப்போனால், இலங்கையின் தலைமை நீதிபதியான சரத் என் சில்வாவே முகாமில் முடங்கிக் கிடக்கும் ஈழத் தமிழர்களின் நிலையைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்தார். அதன் அவலத்தை ஒரு நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைத்த விழாவிலேயே எடுத்துக் கூறினார். இந்த உண்மைகளைக் கூறுவதால், தாம் தண்டிக்கப்படலாம் என்று தலைமை நீதிபதியே அச்சப்பட்டுக் கூறும் அளவுக்கு அங்கு நிலைமைகள் நெருப்பாய்த் தகிக்கின்றன!

இன அழிப்பு என்கிற சூரசம்ஹாரங்கள் நாளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அங்கு நிலவும் பரிதாபகரமான நிலையை என்னால் விளக்க முடியவில்லை. ஈழத் தமிழர்கள் கடுமையான மன அழுத்தத்திலும், விவரிக்க முடியாத துயரத்திலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உடல் கழிவை வெளியேற்றுவதற்குக்கூட நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். அவர்களைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. அவர்களிடம் எனது உணர்வுகளைத் தெரிவிக்க முயன்று தோற்றுப் போனேன். அவர்களின் துயரத்தைக் கண்டு நாங்களும் அழுகின்றோம் என்று கூற முயன்றேன், முடியவில்லை என்று மனந்திறந்து ஒரு தலைமை நீதிபதியே (அவரும் சிங்களவர்தான்) மனம் வெடிக்கிறார் என்றால், இன்னும் சாட்சிகளைத் தேடிச் செல்ல வேண்டுமா?

இந்த நிலையில் உலகம் முழுவதும் ஏதிலிகளாகச் சிதறிக் கிடக்கின்ற ஈழத் தமிழர்கள் மீண்டும் தங்கள் தாயகம் திரும்பவேண்டும் என்பதை மனதளவில் நினைத்துப் பார்க்கவே பயந்து சாகும் நிலைதான் இருந்து வருகிறது.

உள்நாட்டில் வாழும் தமிழர்களே தங்களின் சொந்த ஊர்களுக்கு சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை இருக்கும்போது, வெளிநாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள், ஈழம் திரும்ப எப்படித்தான் எண்ணிப் பார்ப்பார்கள்?

இவற்றையெல்லாம் மனிதநேயக் கண்ணோட்டத்தில் நெஞ்சில் கசியும் ஈர உணர்வோடு காஞ்சிபுரம் முப்பெரும் விழாவில் இறுதித் தீர்மானமாக ஒரு முத்தாய்ப்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க.வின் பொருளாளர் துணை முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் மூலமாக அத்தீர்மானத்தின் முக்கியத்துவம் கருதி முன்மொழியச் செய்யப்பட்டுள்ளது.

நிறைவுரையாற்றிய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அந்த எட்டாவது தீர்மானத்தைத்தான் முதல் முக்கிய தீர்மானமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஏதிலிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் எண்ணத்திற்கு மாறாக, அவர்களை இந்தியாவிலேயே நிரந்தரக் குடிமக்களாக அமர்த்தும் வகையில் இந்திய அரசு சட்ட ரீதியான வகையில் முடிவெடுக்கவேண்டும் என்ற அந்த வேண்டுகோள் தீர்மானம் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மனிதாபிமானிகள், மானிட உரிமை ஆர்வலர்கள் அனைவராலும் இருகரம் கூப்பி வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.

இத்தீர்மானம் குறித்து முதலமைச்சர் அவர்கள் கருத்துகள் கூறியபோது, என்னையே நான் கேட்டுக்கொண்டிருக்கும் தீர்மானம் என்று குறிப்பிட்டதன்மூலம் இந்தத் தீர்மானத்தின் சகல பரிமாணங்களையும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

உலகம் முழுவதும் ஒரு பேரலையை இந்தத் தீர்மானம் உருவாக்கும். இந்திய அரசு மிகவும் கருத்தூன்றிச் செயல்படுத்தவேண்டிய தீர்மானம் இது.

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இந்திய அரசின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கக் கூடியவைகளாகவே இருந்து வந்திருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் கழுவாயாக தி.மு.க. தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும்! கொடுக்கவேண்டும்!! கொடுக்கவேண்டும்!!!

உலகமே இதனை எதிர்பார்க்கிறது, அலட்சியம் வேண்டாம்!

-------------------நன்றி:-"விடுதலை"தலையங்கம் 28-9-2009

நவராத்திரி-சரசுவதிபூஜை-ஆயுதபூஜை கொண்டாடுபவர்களின் சிந்தனைக்கு....!!!


நவராத்திரி

"நவராத்திரி" என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்காலமும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேத பாராயணம், சூரியநமஸ்காரம் முதலிய வைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாள் களில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப்பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக்களுக்கும், பணம்படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பானுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.

நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்து, காலை முதல் உபவாசமிருந்து சரஸ்வதியை பூசை செய்யவேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடையவர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்து பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப்பூசைக்கு 'ஆயுதபூசை' என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப்பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண்டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங்களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடுகிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள். இந்த வேடிக்கை களைப் பார்க்கவே அனேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப்பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்பதால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென்றால், கல்வியும் ஆயுதமும் அதற்குக் கற்பிக்கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங்களின் அம்மன்களானதனாலும், இந்து மதத் தவர்களுக்கெல்லாம் இது சம்பந்தப்பட்ட புராணக்கதைகளிலிருப்ப தாலுமேயாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்காவிட்டாலும் இது சம்பந்தமான கதைகள் அவர்களிடையேயும் உண்டு. மற்றவர்கள் 'சரஸ்வதிபூசை' யன்று துர்க்காலட்சுமி 'ஸரஸ்வதீப்யோ நம' என்று கூறிப் பூசை தொடங்குவார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தியாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக்கொண்டிருந்ததால் , இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்திபெற்று, ஒன்பதாம் நாள் மகிஷா சூரனைக் கொன்று, பரிவாரங்களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷா சூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே இந்தக் கதையின் ஆதாரத் தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தை கொண்டே

இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் புராணக் கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறுவளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள் என்று எதற்கும் தத்துவ நியாயம் சொல்வது போல் இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூசை , ஆராதனைகள் , ஒன்பது நாளும் பார்ப்பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம். படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத்தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என்பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாகவும், பார்வதியை சித் சக்தியாகவும் அது பரம்பொருளாகிய ஆத்ம ஸாசாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். பிதுர்க்காலட்சுமி சரஸ்வதீப்யோ நம' என்னும் மந்திர மடத்து சாஸ்திரிகள் வரையிலும் மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும் தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக் கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்துவார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல்லாம் மகிஷா சூரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டிருக் கிறார்கள்?

முன்னொரு காலத்தில் லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுபெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட்டுதான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது.பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு , கடைசி மூன்று நாள்களும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம். தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.

இதை நம்பி நடக்கும் நம்மை விட , மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் வருடத்திற்கு ஒரு நாள்தான் கண்ணைத் திறந்து திருப்திப்படுகிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறைவாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றிகெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன் மொழியான சமஸ்கிருத இலக்கணத்தை தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.

கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந்ததாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்கிற இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித்த தாகவும், அவ்வாறே அவள் செய்து அரங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து அவன் சத்துருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக்கொடுத்தாகவும் சொல்லப்படுகின்றது. நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.

கிரேதாயுகம் முதற் கொண்டு , இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும் அதைச் செய்த ஜன சமூகங்களும் நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்நூறு வருடங்களாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப்பட்டு வெள்ளைக்கார மந்திரத்தால் வெளியேற்றப்பட்டிருக்கையில் நமது 'சரஸ்வதியும், லட்சுமியும் , பார்வதியும்' அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு என்று குடிஅரசு கேட்டு விட்டால் சமயவாதியும் , சாஸ்திரவாதியும் 'அது சமயத்தை அடியோடு தூஷிக்கின்றது' என்று சொல்லுவதானாலும் படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ் பி.ஏ, எம்.ஏ, வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா, இல்லையா என்றுதான் கேட்கிறோம்.

மேலும் விஜயதசமி அன்று சிவன் கோயிலில் பிபரிவேட்டை உற்சவம்' என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று பிபகவான்' எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னி மரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி , அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேடடையாடுவோருக்கும், ராஜக்களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்த காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும் இதற்கும் உள்கருத்தை வைத்து வைத்துத் தான் நம் நாடு உள்ளேயே போயிற்று . பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும் படித்தவர்களுக்குச் சூட்சுமமாகவும் இருப்பதாகச் சொல்லுகிறார்கள் . (எந்த சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன்

ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை) அதாவது, நெருப்பிலடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேசமாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடுவதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண்ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டுமென்பார்கள் . இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்சமெல்லாம் நடுத்தெருவில் நின்றதான வடதேசத்துக் கதைகள் அனேகம்.

மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டை தான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர் ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆடிய பரிவேட்டையும், சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின் வாயிலில் ராஜாவை ஒடச் செய்து விட்டது. அது போலவே திப்பு காலத்தில் திருவனந்தபுரத்து ராஜாவிற்கு வெள்ளைக் காரர்கள் அபயம் கொடுத்தார்களே ஒழிய சரஸ்வதி பூசையும், பரிவேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத்திராவிடில் அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண்சாதியும், அவர் மருமகளும் ஓடிப்போயன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடி வந்து தங்கள் சொத்தென்று அங்கு

சயனித்துக் கொண்டிருப்பதாக இப்பொழுதும் சொல்கிறார்கள்.

கடவுளையும் பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங்களையும், அதன் நியாயவாதங்களையும் கூட்டி ஆலோசியுங்கள், சரஸ்வதியைக் கொலுவிருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்துக்கு 50 பேருக்குக் கூட கல்வி இல்லை. சரஸ்வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்துக்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானியமல்லவே ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைப்பட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் பிபுண்ணிய தீர்த்தத்தில்' கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும் கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்தனையும் போதாமல் வருடம் ஒரு தரம் பத்து நாள் பள்ளி யறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய,இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும் பிஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார் கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்று கூட நினைப்பதில்லை; உனக்கு பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே நீ செய்வது நியாய மாகுமா?' என்று நாங்கள் சொல்லிவிட்டால் உன் பாஷையான சமஸ்கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுகிறார்கள். உன் முதற்பிள்ளையான பார்ப்பனர்களின் தாசிப்பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்க மற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும் கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற்பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக்கூட கிழித்தெறியாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லி விட்டால், தூஷித்தவர்களாகிவிடுவோமா? நீயே சொல்லு?

நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசையில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையுமில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற்றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளை களுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லுவதாலேயே உன் பக்தகோடிகள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத் திற்கும் உன் பாட்டனும் மகனுமான சிவனுடைய கைலாசத்திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோமாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடி போயிருக்கும் நாட்டில் உங்கள் புருஷர்களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங்களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும் கும்பாபிஷேகமும் பூசையும் எதற்கு?

இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத்தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக்களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங்களையெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்களென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல்லலாமா?

ஆச்சாரிகளுக்கும் குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங்களென்றால் ஆச்சாரி களையும் பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லு கிறவர்களாகி விடுவோமா? அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள் கூட ஒரு மூலையில் கவலையற்றுத் தூங்குகிறதே!

வருண பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்து விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்துவிட்டானே! உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும் கூட வேலையில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூசை ஏன்?

சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும் கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலுவால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும் கடமையும் எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந்தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள் . இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும்.

---------------- நூல்:- "இந்துமதப் பண்டிகைகள்" (இக்கட்டுரை அறிஞர் கைவல்யம் அவரகளால் எழுதப்பட்டது) பக்கம்:-11-19

27.9.09

இந்த சனி பகவான் என்பவர் யார்?சனி பெயர்ந்தால் என்ன ஆகும்?


உண்மையாக சனி பெயர்ந்தால் என்ன ஆகும்?

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சனிப்பெயர்ச்சி - சனிப்பெயர்ச்சி என்று எந்த ஏட்டைப் பார்த்தாலும் சனிப்பெயர்ச்சி மயம்தான்.

சனி பகவான் - சிம்ம ராசியிலிருந்து - கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்து குடிபெயர்கிறாராம்!

சரி; இந்த சனி பகவான் என்பவர் யார்?-வானமண்டலத்திலிருந்து கத்திரி - அக்னி நட்சத்திரம் என்ற பெயர்களில் நம்மையெல்லாம் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கிறதே சூரியன்; அந்த சூரியனுக்கும் சாயாதேவி என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்தான் இந்த சனி பகவான் என்கிறார்கள்.

சுட்டெரிக்கும் சூரியனைக் கட்டியணைத்து கர்ப்பம் தரித்து ஒரு மகனையும் பெற்றெடுத்தாள் ஒரு பெண் என்றால் எத்தனை வோல்டேஜ் - ஏ.சி. வசதி படைத்த பெண்ணாக அவள் இருந்திருக்கவேண்டும்?

வோல்டாஸ் - ஏ.சி. கம்பெனிக்காரர்களைத்தான் கேட்கவேண்டும். ஏனெனில் அவர்கள்தான்

தங்களது ஏ.சி. கருவிகளை எரிமலையையும் பனிமலையாக்கும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்!

இந்த சனி என்பது பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

சனி என்பது விண்வெளியிலுள்ள ஒரு கோள் என்கிறது விஞ்ஞானம். வியாழன் என்ற கோளுக்கு அடுத்தபடியாக இது ஒரு மிகப்பெரிய கோள். இந்தக்கோளின் குறுக்களவு மட்டுமே 73 ஆயிரம் மைல் என்று அறுதியிட்டு உறுதிபட வரையறுத்திருக்கிறது விஞ்ஞானம்.

பூமிக்கும் இந்த சனி என்கிற கோளுக்குமிடையில் உள்ள தூரம் எவ்வளவு? 75 கோடி மைலாகும்!

இந்த சனிக் கிரகத்தை - கோளைத்தான் இங்கே சனி பகவான் என்கிறார்கள்.

விஞ்ஞானம் கூறும் சனி ஒரு கோள் என்பதை நம்புவதா? நம்மூர் சோதிடர்கள் சனிபகவான் என்கிறார்களே அதை நம்புவதா?

விடை காண்பது மிக எளிது!

விஞ்ஞானம் கூறுவது - அதன் அடிப்படையிலான கண்டுபிடிப்புகள் எல்லாமே உலகம் முழுவதிலுமுள்ள நாடுகள் - மக்களுக்குப் பொதுவானது!

தொலைக்காட்சி என்றால் உலகத்தின் எந்த நாட்டிலும் - எந்த வீட்டிலும் படிப்பறிவற்ற பாமரன்கூட இயக்கலாம். காட்சிகளைக் கண்டுகளிக்கலாம்!

செல்போன் என்றால் முதலாளியின் கையிலும் வைத்துக்கொள்ள முடியும்; அவரின்கீழ் பணியாற்றும் கடைநிலை ஊழியரின் பையிலும் வைத்துக் கொள்ளலாம்; அவரும் பேசலாம். இவராலும் பேச முடியும்.

இப்படி விஞ்ஞானம் கூறுவதையும் அதன் அடிப்படையிலான கண்டுபிடிப்புகளின் பயன்களையும் எல்லோரும் அனுபவிக்கலாம்! ஆனால் -சோதிடம் சொல்லும் இந்த சனிபகவான் - அவரது பெயர்ச்சி பற்றியெல்லாம் - உலகில் எத்தனை நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியும்? அவர்களுக்கெல்லாம் சனிப் பெயர்ச்சிப் பலன்கள் பற்றி எதுவும் தெரியுமா? அந்த நாடுகளில் எல்லாம் நம்ம ஊர்த் திருநள்ளாறு போல - சனீஸ்வரன் கோயில் என்று உண்டா? அங்கே எல்லாம் நளதீர்த்தக்குளங்கள்தான் உண்டா?

காக்கையின் மேல் ஓர் ஆளே ஏறி உட்காரலாம். காக்கை நசுங்காது. சனீஸ்வரர் ஏறி அமர்ந்த பிறகும் பிள்ளையார் சதுர்த்திக் கொழுக்கட்டை போல காக்கை அப்படியே இருக்கும் என்றால் நம்புவார்களா?

நம்பமாட்டார்கள் - என்ன காரணம்?

தொலைக்காட்சிப் பெட்டி போல - செல்போன் போல எல்லோரும் சனி பகவானைக் கண்ணால் காணமுடியாது! அவன் எங்கேயிருந்து எங்கே போகிறான் என்பதை ஜோதிடர்கள்தான் கண்டுபிடித்துப் பலன் சொல்ல வேண்டும். யாரை ஏழரைநாட்டுச் சனி பிடித்துக்கொள்ளும்? யாரை விட்டுவிடும்? என்பது பற்றியெல்லாம் ஜோதிடர்கள் சொல்வதைத்தான் நம்பித் தொலையவேண்டும். ஆனால் -

செல்போன்களால் என்ன பயன் என்பதை ஒவ்வொருவரும் உலகம் முழுவதும் ஒவ்வொரு நொடியிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது விஞ்ஞானத்தின் சக்தி.

ஜோதிடர்கள் கூறும் சனிபகவான் சக்தி என்ன?

திருநள்ளாறில் சனிப் பெயர்ச்சி விழா.

பக்தர்கள் நளதீர்த்தத்தில் நீராடும்போது அவர்களது உடைமைகள் திருட்டுப் போவதாகப் புகார்!

யாரிடம் புகார் கூறுகிறார்கள்? சனீஸ்வரரிடமா? போலீசாரிடம்தான் தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துத் தரும்படி கோருகிறார்கள்.

பக்தர்களின் உடைமைகள் திருட்டுப் போகாமல் பாதுகாக்க கோவிலைச் சுற்றி 37 ரகசியக் கேமராக்களை போலீசார் பொறுத்தியிருக்கிறார்கள்.

பக்தர்களைப் பாதுகாக்க மொத்தம் அங்கே 1500 போலீசார்!

பக்தர்கள் சனீஸ்வரனுக்குச் சக்தி அதிகமா? போலீசாருக்கு சக்தி அதிகமா? தங்கள் உடையைக் காக்கும் சக்தி போலீசாருக்கே உண்டு என்று நம்புகிறார்கள்!

இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்க, -

73 ஆயிரம் மைல் குறுக்களவு கொண்ட சனி நிஜமாகவே பெயர்ந்தால் என்ன ஆகும்?

நினைத்துப் பார்ப்பவர்களின் நெஞ்சம் பதறும்!

- நாற்பதாண்டுகளுக்கு முன்பு -

விண்ணிலே பறந்து கொண்டிருந்த சாட்டிலைட் ஒன்று பூமிப் பந்து நோக்கி வருகிறது; எங்கே விழும் என்று கணிக்க முடியவில்லை; எங்கே விழுந்தாலும் நாசம்; சர்வநாசம்தான் என்று உலகமே பயந்து நடுங்கியது!

அதுபோல சனி என்ற கோள் இடம்பெயர்ந்து பூமி நோக்கி வந்தால் என்ன ஆகும்?

சனிப் பெயர்ச்சியின் பலன் எழுதுபவர்கள், அதனை நம்புகிறவர்கள் எல்லாம் சிந்தித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை,

நளன்குளம் என்கிற மூடநம்பிக்கைக் குளத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களது உடைமைகளை சனி பகவானால் பாதுகாக்க முடியவில்லை. அதைத்தான் -

நளன்குளத்தைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள 12 கேமராக்கள் எடுத்துக்காட்டுவனவாக இருக்கின்றன.

அதனால்தான்

இந்த கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை, கோவில் நிருவாக அதிகாரி அறைக்குள்ளும், திருநள்ளாறு காவல் நிலையத்திலும் செயல்படுகிறது.

இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் திருட்டுச் சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என்றும், இதனால் பொது மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க முடியும் என கோவில் நிர்வாக அதிகாரி பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார் -

என்கிறது பத்திரிகைச் செய்தி!

-------------------------(நன்றி: முரசொலி 27.9.2009)

தமிழகத்தின் முதல் பேராசிரியர் - பெரியார்


தமிழகத்தின் முதல் பேராசிரியர்
அறிஞர் அண்ணா

பல வருடங்களுக்கு முன் நான் எனது திராவிடநாடு பத்திரிகையில் ஆண்டு மலருக்காக ஒரு கட்டுரை எழுதினேன். அதில் பல நாட்டுக்கவிஞர்கள், பலநாட்டுப் பேராசிரியர்களைப்பற்றி குறிப்புத் தந்த போது நமது தமிழகத்தின் முதல் பேராசிரியர் பெரியார் என்று எழுதி இருக்கிறேன்; அவர் சமுதாயத்துறையில் செய்த தொண்டு மிக அதிகம். அவரது கருத்துகளை, கொள்கைகளை, இந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளுமளவிற்கு மனவளம் பெறவில்லை. நிலத்தினுடைய வளத்திற்குத் தக்கபடிதான் பயிர் வளர முடியும்; அதுபோல மனவளம் பெற்றவர்களால்தான் பெரியாரின் கருத்துகளை வளர்க்க முடியும்.

அவரது தொண்டு வீண்போகவில்லை. பெரியார் அவர்கள் நினைக்கும் அளவுக்கு வேகமான அளவு பலன் ஏற்படாமலிருக்கலாம்; ஆனால் பெரியார் அவர்களின் 30, 40 ஆண்டு தொண்டுக்குப் பிறகு புதிதாகக் கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை, பள்ளிகள் எத்தனை என்று கணக்கில் பார்த்தால், தமிழகத்தில் அறிவுப்புரட்சி ஏற்பட்டிருப்பதும், வெற்றி பெற்றிருப்பதும் தெரியும். பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் வலிமை எவ்வளவு என்பது தெரியும்.

அவர் பிரசாரத்தைத் தொடங்கிய காலத்தில் பல வகுப்பார் படிப்பதற்கே அருகதை இல்லாதவர்கள் என்று எழுதிவைக்கப்பட்டது மட்டுமல்ல, நாட்டிலே சொல்லப்பட்டும் வந்தது. அந்த வகுப்பாரே கூட நம்பினார்கள்; நமக்குப் படிப்பு வராது என்று! நாம் எதற்காகப் படிக்க வேண்டும் என்று அவர்கள் தெரியாமல் தடுமாறினார்கள்.

நான் கல்லூரியில் பொருளாதார ஆனர்ஸ் வகுப்பை எடுக்கச் சென்றபோது அதற்கு ஆசிரியராக இருந்த பார்ப்பனர் ஒருவர் இந்தப் பொருளாதாரப் பாடம் உனக்கு வருமா? உனக்கேன் இது? வேறு ஏதாவது எடுத்துக் கொள்! என்று கூறி, என் ஆர்வத்தைக் குறைக்கப் பார்த்தார். நான் பொருளாதாரத்தையே எடுத்து சிறந்தமுறையில் தேர்வும் பெற்றேன்.

நான் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு அது எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதை உணர்கிறேன்.

நம் மாணவர்கள் ஒன்றும் அறிவில் குறைந்தவர்கள் அல்லர்; அவர்களுக்குத் தகுந்த ஊக்கமும், தகுந்த வாய்ப்பும் கொடுத்தால் முற்போக்கு சமுதாயத்தோடு போட்டி போடக்கூடிய அளவிற்கு அவர்கள் முன்னேற்றத்தையடைவர்; அடைந்திருக்கின்றனர் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் ஆயிரம் ஆயிரம் மேடைகளிலே பேசியுள்ளேன். அதற்குமுன் தமிழகத்திலே தலைசிறந்த வக்கீல் யாரென்றால் அல்லாடி கிருஷ்ணசாமி, தலைசிறந்த டாக்டர் யாரென்றால் ஒரு ரங்காச்சாரி, நீதிபதி என்றால் முத்துசாமி அய்யர், சிறந்த நிர்வாகி யாரென்றால் கோபால்சாமி அய்யங்கார் என்று இப்படித்தான் சொல்லக்கூடிய நிலையில் தமிழகம் இருக்கிறது என்று கூறி வந்தேன். இன்றையதினம் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் இதுவரையில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற நிலையில் இருந்தவர்கள் முதல்தரமான வக்கீல்கள், தலைசிறந்த மருத்துவர்கள் என்று இப்படித்தான் இருக்கிறார்கள்.

சர்.ஏ.இராமசாமி முதலியார் அரசியலில் இருந்து விரட்டப்பட்டார் என்றாலும், அய்தராபாத் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு விவகாரத்தைத் தீர்ப்பதற்கு அய்.நா.வில் பேச அவரை நேரு விரும்பி வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள் என்றால் அவர் திறமையைக் கருதியே அல்லவா?

சர்.ஏ.இராமசாமி அய்.நா. சென்று வந்தது மட்டுமல்ல வென்றும் வந்தார்! இப்படி நம்மிலே. பல அறிஞர்கள், படித்தவர்கள் இருக்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட இனம் என்று தவறான காரணங்களைக் காட்டி அடக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் இன்று உயர்பதவிகளில், உத்தியோகங்களில் நல்ல செல்வாக்கோடு இருக்கின்றனர். இந்த அளவு அதிகப்படவேண்டும். பெரியார் அவர்களின் அரைநூற்றாண்டு இடைவிடாத தொண்டினால் ஏற்பட்ட பலன் இது.

பெரியார் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்ற பணி சமுதாயத்தை மாற்றியமைக்கும் பணியாகும். சர்க்காரின் மூலம் மட்டுமே ஒரு சமுதாயத்தை அடியோடு மாற்றியமைத்துவிட முடியாது. சர்க்காருக்கு அந்த வலிமை இல்லை. என்னிடம் ஒரு சர்க்கார் அளிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அது ஒரு பெரிய சர்க்காருக்குக் கட்டுப்பட்டுக் காரியமாற்ற வேண்டிய ஒன்றே தவிர தன்னிச்சையாகக் காரியம் ஆற்ற முடியாது. இதனைப் பெரியார் அவர்கள் நன்கு அறிவார்கள். உலகத்திலேயே எந்த நாட்டிலும் சர்க்காரால் சாதித்ததைவிட தனிப்பட்ட சீர்திருத்தவாதிகளாலேயே சமூகம் திருத்தப்பட்டிருக்கிறது,

ஒரு மாதத்திற்கு முன் காமராசரோடு பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிக அன்போடு சொன்னார். நமது பெரியாரவர்களைப் போன்று பத்துப் பெரியார்கள் இருந்திருந்தால் இந்தியா நல்லவண்ணம் சமுதாயத் துறையில் சீர்திருத்தம் அடைந்திருக்கும்; உலகநாடுகளைப்போல சிறந்ததாக இருக்கும் என்று குறிப்பிட்டார்கள்.

பெரியார் அவர்கள் தரும் பெரும் பேருரைகளால், அவருடைய சலியாத உழைப்பால், அவர் தந்துள்ள பகுத்தறிவுக் கருத்துகளால் இன்றைய தினம் நம் சமூகம் மிக நல்ல நிலையிலே முன்னேறிக்கொண்டு வருகிறது. அவருக்குத் திருப்தி ஏற்படுகிற வகையிலே இல்லாமலிருந்தாலும் என்னைப் போன்றவர்கள் இந்த அளவுக்குக்கூட மாறுமா என்று எண்ணிப் பார்த்ததில்லை.

இப்போது பெரியார் அவர்கள் பேசும் பேச்சுகளைக் கேட்டால் ஒரு கணம் மயக்கம் வருகிறது. அடுத்து ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசும்போது நியாயம்தான் தேவைதான் என்ற எண்ணம்தான் வருகிறதே தவிர, அதைக்கேட்ட உடனேயே பதறிய காலம் பகைத்தெழுந்த காலம் இவர்களைப் படுகொலை செய்யலாகாதா என்று பேசிக்கொண்டிருந்த காலம் இந்தக் காலங்கள் எல்லாம் அந்தக் காலங்களாகி விட்டன.

இப்போதிருக்கும் காலம் மிகப்பக்குவம் நிறைந்த காலம். பெரியார் அவர்களின் கருத்துகளை சட்டமூலம் செயல்படுத்த இந்த சர்க்காரின் அதிகார எல்லைக்குட்பட்டு, என்னென்ன செய்யமுடியுமோ அவைகளைச் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்.

பெரியார் அவர்கள் எடுத்துச் சொல்லுகின்ற கருத்துகளையும் கொள்கைகளையும் பரப்புவதற்கு, செயலாக்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன். சர்க்காரிலே இருந்து கொண்டு ஏதோ சில காரியங்களை செய்யவா? அல்லது விட்டுவிட்டு உங்களோடு வந்து தமிழகத்திலே இதே பேச்சையே பேசிக்கொண்டு உங்களோடு இருக்கவா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை பெரியார் அவர்களுக்கே விட்டுவிடுகின்றேன். அவர் என்னோடு சேர்ந்து பணியாற்று என்றால் அதற்குத் தயாராக இருக்கிறேன்.

பெரியாரவர்களுக்கு நாம் தந்துள்ள சமுதாய சீர்திருத்த வேலை. அவர் இறுதி மூச்சுள்ள வரை செய்து தீரவேண்டிய வேலை ஏனென்றால் அவரைத் தவிர வேறு ஆள் இல்லை. நேற்று இருந்ததில்லை. நாளைக்கு வருவார்களா என்பதும் அய்யப்பாட்டிற்குரியது. அவர்கள் செய்யும் வேலையில் ஒரு மன நிம்மதியோடு, இருக்கலாம். தமிழகம் இன்று எந்தப் புதுக்கருத்தையும் ஏற்றுக்கொள்வதற்கும், தாங்கிக்கொள்வதற்கும் தயாராக இருக்கிறது. அது செயல்வடிவத்திலே வருவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கலாம்.

அவரது கொள்கைகளும், கருத்துகளும் இன்னும் முற்றும் செயல்படவில்லை. அது செயல்வடிவத்திற்கு வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால் அது செயல்பட்டே தீரும்! பெரியாரவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பணி மிகச்சிறந்த பணி. நம் நாட்டிற்குத் தேவையான பணி; அதை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் பெரியார் அவர்களுக்கே உண்டு அவருக்கு ஓய்வு கொடுத்து அவரது வேலையை நாம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் நான் ஏற்றுக்கொண்டிருக்கிற துறை வேறு. அவர் ஏற்றுக்கொண்டிருக்கிற துறை வேறு; நான் மேற்கொள்ளும் முறை வேறு. அவர் கொள்ளும் முறை வேறு, இந்தத் துறை இல்லை என்றால் அந்தத் துறையில்லை அந்தத் துறை இல்லை என்றால் இந்தத் துறையில்லை என்ற நிலை உள்ளது.

நானிருக்கிற இடத்தில் அவருடைய கருத்திருக்கும். அவர் இருக்கிற இடத்தில் நானிருப்பேன்.

நாம் அவரை வெகுவாகக் கஷ்டப்படுத்தி விட்டிருக்கிறோம். அவர் இப்போது ஓய்வெடுத்துக்கொண்டு, கட்டளை இடவேண்டிய வயது. அவரது தொண்டினை நாம் மேற்கொள்ளவேண்டும். அப்படி சூழ்நிலை நமக்கு ஏற்படவில்லை. ஆனதினாலே நாம் அவருக்குக் காட்டவேண்டிய நன்றியைக் காட்டக் கடமைப்பட்டவராவோம். நன்றியைக் காட்டிக் கொள்வதில் நான் முதல்வனாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-----------(நாகரசம்பட்டி (19.12.1967), அரூர் (12.7.1968) ஆகிய இரு நிகழ்ச்சிகளில் முதல்வர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் சில முக்கிய பகுதிகள்)

26.9.09

பார்ப்பனரைப் பற்றிய பழமொழிகள்


1897ஆம் ஆண்டில் தமிழ்ப் பழமொழிகள் 3644அய்த் தொகுத்து ஹெர்மன் ஜென்சன் என்கிற பாதிரியார் 523 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார் (அது 1982ஆம் ஆண்டில் புதுடில்லி Asian Education Services ஆல் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது). A Classified Collection of Tamil Proverbs என்னும் அந்நூலில் பார்ப்பனரைப் பற்றிக் காணப்படும் பழமொழிகள் வருமாறு:

241: அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்.

744: குள்ளப் பார்ப்பான் கிணற்றில் விழுந்தால் தண்டு எடு, தடி எடு என்பார்கள்.

887: அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா?

981: பானையில் அரிசி இருந்தால் பார்ப்பான் கண் உறங்காது.

1581: அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல.

1625: அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.

1626: ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.

1657: பெற்ற தாய் பசித்திருக்க, பார்ப்பனப் போஜனம் செய்வித்தது போல

1930: சாகிற வரையில் வைத்தியன் விடான்; செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

2278: கெட்டுப்போன பார்ப்பானுக்கு செத்துப் போன பசு தானம்

பெரியாரைப் பொறுத்தமட்டில் எத்தகைய எதிர்ப்பும் பகையும் துரும்பே!


இதிகாச காலத்திலும் புராண காலத்திலும்- வெள்ளையர் ஆட்சியில் நாடு முழுவதும் கல்விக் கூடங்கள் முறையாக அமைக்கப்பட்ட காலத்திலும்- குருகுலங்கள் இருந்திருக்கின்றன!

இதிகாச காலத்து, புராண காலத்து குருகுலங்கள் ஒழுக்கக் கேட்டிற்கும் - ஜாதி ஆதிக்கம் - சமூகத்தின் கடைக்கோடிப் பிரிவினருக்குக் கொடுமை இழைத்தல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்திருக்கின்றன! வெள்ளையர் ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் என்று அறியப்பட்ட வ.வே.சு. அய்யர் நடத்திய குருகுலம் போன்றவையும் ஜாதி பேதம் வளர்ப்பனவாகவும் உயர் ஜாதிக்காரனுக்குத் தனிப் பந்தி, மற்றவர்களுக்கு வேறு பந்தி என்று வித்தியாசம் காட்டி - அவமதிப்பின் - ஜாதித் துவேஷத்தின் அடையாளமாகவே செயல்பட்டு வந்ததையும் வரலாறு பதிவு செய்து வைத்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கிடையிலும் -

குருகுலம் என்றால், - பகுத்தறிவுப் பாசறை; கட்டுப்பாடு, சிக்கனம், வாழ்க்கையில் எக்காலத்திலும் குருகுலத்தில் பயின்றவர்களுக்கு முன்னேற்றம்தானே தவிர - பின்னடைவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிற அளவுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக ஒரு குருகுலம் எக்காலத்திலும் நினைவை விட்டு நீங்காததாக - மறக்க முடியாததாக அமைந்தது என்றால் அது ஈரோட்டுக் குருகுலம் ஒன்றுதான்!

ஈரோட்டுக் குருகுலத்தில் பயின்று - அதாவது அந்தப் பகுத்தறிவுப் பல்கலைக் கழகத்தின் குருவாகத் திகழ்ந்த பேராசான் பெரியாரிடம் நேரடியாகவே பழகி, பயின்று, குருகுலத்தின் பெருமைக்கே அடையாளமாக விளங்குகின்ற மூன்று பேர் உண்டு என்றால் அவர்கள்,

அண்ணா

கலைஞர்

வீரமணி

ஆகியோர்தாம்!

ஈரோட்டு குருகுலம் என்ற பெயரையே நாட்டு மக்களிடம் நாள்தோறும் சொல்லிப் பிரபலப் படுத்தியவர்கள் இந்த மூவருமே!

அய்யாவிடம் ஈரோட்டிலேயே தங்கி அவரது நேரடி மேற்பார்வையில் பயின்றவர்கள் என்ற பெருமைக்குரியவர்களாக இந்த மூவர் இருப்பினும் இவர்களுக்கு முன்பே - இவர்கள் காலத்திலேயே பெரியாரோடு நெருங்கிப் பழகி - அவரோடு தோளோடு தோள் இணைந்து பணியாற்றியவர்கள் பல பேருண்டு! இயக்க வரலாற்றை நன்கறிந்தவர்களைக் கேட்டால்,

- பெரியாரிடம் பிணக்கு ஏற்பட்டு

அவரிடமிருந்து பிரிந்து போனவர்கள்

- அவரை எதிர்த்துப் பார்த்தவர்கள்

- தனிக்கட்சி நடத்தியவர்கள்

என்று ஒரு பெரிய பெயர் பட்டியலையே வெளியிட்டுக் காட்டுவார்கள்.

அவர்களும் இயக்கத்தின் தொடக்கம் முதல் ஒரு காலகட்டம் வரையில் தங்களது அறிவு, ஆற்றல், தொண்டு ஆகியவற்றால் - அய்யா அவர்களுக்குத் துணை நின்று - இயக்க வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் கள்தாம் என்பதால் - அவர்களது பெயர் பட்டியலை இங்கே வெளியிட வேண்டிய அவசியமில்லை.

ஒரே ஒரு உதாரணம் -

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்! இவர் பெரியாரின் நம்பிக்கைக்குரிய தளபதியாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்களில் ஒருவர். ஒரு கட்டத்தில் பெரியாரோடு இவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பெரியாரை விட்டு விலகி வெளியேறினார்!

பெரியாரைக் கண்டித்து, காட்டமாக, காரசாரமாக கண்டித்து அறிக்கைகள் விட்டார். அத்தோடு நின்றாரா?

பெரியாரின் இயக்கம் போகாத ஊருக்கு இல்லாத வழியை இருட்டில் காட்டும் இயக்கம் என்று கூறி, இதோ ஒரு புதிய தமிழ் அமைப்பு; தமிழுக்காக - தமிழருக்காக தமிழரால் நடத்தப்படும் தமிழியக்கம் என்ற பிரகடனத்தோடு தமிழர் கழகம் என்ற அமைப்பினை தோற்றுவித்தார்.

தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோஷத்துடன் முத்தமிழ்க் காவலர் அவர்கள் தொடங்கிய தமிழர் கழகத்தின் பிரச்சார பீரங்கியாக தமிழர் நாடு என்ற பெயரில் ஓர் ஏட்டினையும் தொடங்கினார். பெரியாரையும், அவரது கொள்கைகளையும் இதழ் தவறாது கனல் பறக்க விமர்சித்தார்.

ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுக் காலத்திற்குப் பிறகு - தமிழர்நாடு ஏட்டின் முதல் பக்கத்தில்,

கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிவிட்டேன்

என்ற தலைப்பில் - பெரியாரின் இயக்கத்தை எதிர்த்து - புதுக்கட்சி - புது ஏடு நடத்துவதில் தமக்குத் தோல்வியே கிட்டியது என்பதை நேர்மையோடும், நாணயத்தோடும், பெருந்தன்மையோடும் ஒப்புக் கொண்டு எழுதியதோடு, இந்த இதழோடு தமிழர்நாடு ஏடு நிறுத்தப்படுகிறது; தமிழர் கழகத்தின் செயல்பாடும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

இந்த உதாரணத்தின் மூலம் - பெரியாரை எதிர்த்து யாரும் இயக்கம் கட்ட முடியாது என்பதை அனுபவ ரீதியாக எடுத்துக் காட்டினார் முத்தமிழ்க் காவலர்.

எனினும், -

விதி என்றிருப்பின் எந்த விதியானாலும் அதற்கு ஒரு விலக்கு விதிவிலக்கு என்பது ஒன்று இருக்குமல்லவா? அந்த விலக்குதான் பேரறிஞர் அண்ணா!

தந்தை பெரியாரை விட்டுப் பிரிந்துதான் புதியதோர் அமைப்பைத் தொடங்கினார் அண்ணா. - ஆனால் பெரியாருக்கு எதிராக அந்த இயக்கத்தைச் செயல்படுத்தவில்லை; பெரியார் கொள்கைகளே தி.மு.க.வின் கொள்கைகள் என்று பிரகடனம் செய்தார்.

பெரியாரிடம் பணியாற்றியபோதும், பெரியாரை விட்டுப் பிரிந்தபோதும் - தாம் தமது வாழ்க்கையில் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்தான் என்று அந்த வசந்தம் என்ற கட்டுரையில் எழுதிய அண்ணா, பெரியாரின் பெருமைகளை - தலைமைப் பண்புகளை அந்தக் கட்டுரை முழுவதும் விளக்கியிருக்கிறார்.

பெரியார் அவர்களோடு கருத்து வேறுபாடு சமயங்களிலும் கூட பெரியாருக்கு எதிர்ப்பு என்று மற்றவர்களைப் போல - கண்மூடித்தனமாக எதிர்க்காமல் - பெரியாரின் ஆற்றல் - அஞ்சாமை ஆகியவைகளை விவரமாக எழுதி

அவரால் முடியும் நம்மால் முடியாது.

அவர் செய்திடும் காரியங்கள் எல்லாம் - அவரைப் போல் நம்மால் செய்ய முடியாது

- என்று கூறிவிட்டு தமது இயலாமையை ஒப்புக் கொண்டு எதிர்ப்புக்குக் காரணம் சொல்லுவார்.

அய்யா அவர்கள் தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்திருந்த நேரம்! அண்ணாவால் அதனை ஆதரிக்க முடியவில்லை.

ஏன் ஆதரிக்க முடியவில்லை என்பதை அண்ணா விரிவாக விளக்குகிறார். அந்த விளக்கம்தான் அய்யாவிடமிருந்து பிரிந்து போய் அவரைக் கடுமையாக எதிர்த்து அரசியல் நடத்தியவர்களுக்கும் அண்ணாவுக்கும் என்ன வித்தியாசம் என்பதை பட்டாங்கமாக எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.

பெரியாரைப் பற்றியும் - அவரது போராட்ட முறை பற்றியும் பெரியாரின் பலம் பற்றியும் - தனது பலகீனம் பற்றியும் கட்டுரை முழுவதும் எடுத்துக் காட்டி விட்டு அய்யா அவர்களது போராட்டத்தில் தம்மால் கலந்து கொள்ள முடியாத இயலாமையைக் குறிப்பிட்டிருக்கிறார். அதன் சில பகுதிகள் வருமாறு:

நாட்டு மக்களிடம், குறிப்பாக

இன்னும் காங்கிரசிலுள்ள திராவிட மக்களிடம் கொள்கையைப் புகுத்துவதிலே பெறுகிற வெற்றியையே நான் பெரிதும் விரும்புகிறவன். அப்படிக் கூறுவதால் போரே கூடாது என்பவனல்லன்;

காங்கிரஸார் மனத்தில், வேதனை, வெறுப்புணர்ச்சி, பகை உணர்ச்சி மூட்டிவிடக் கூடிய வகையிலே கிளர்ச்சிகள் அமைவதை, நான் இன்றல்ல, எப்போதுமே விரும்பியதில்லை; இந்த என் எண்ணத்தை எடுத்துரைக்க என்றும் தயங்கினதுமில்லை.

ஆகஸ்ட் முதல் நாள் அய்யா அவர்கள் சொன்னபடி கொடி கொளுத்தப்பட்டிருந்தால், அவரைப் பொறுத்தமட்டில் எத்தகைய எதிர்ப்பும் பகையும் துரும்பே. எனவே, அவருக்கு ஒரு சிறு குறைபாடும் ஏற்படாது.

ஆனால், பரவாயில்லை அவர்கள் கூறுவதிலும் நியாயம் இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்கள், நாம் கூறும் எதையும் ஏற்றுக் கொள்ளலாகாது என்ற அளவுக்கு நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.

தம்பி! ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்துப் பணியாற்றும்போது நாளாக ஆக எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாக அந்தக் கொள்கை சிலரிடம் பதிந்து விடுகிறது என்பது மட்டுமன்று; வெற்றிக்கு வழி, நாளாக நாளாக எவ்வளவுக் கெவ்வளவு விரிவடைகிறது, பரவுகிறது, மாற்றாரை உற்றார் ஆக்குகிறது என்பதுதான் வெற்றிக்குப் பெரிதும் துணை செய்யும்.

இந்த முறையில்தான், நான் பலகாலமாகவே, காங்கிரஸ் கட்சியில் இன்று உள்ள திராவிடத் தோழர்களில் அந்தக் கட்சியாலேயே வாழ்ந்து தீர வேண்டியவர்கள் தவிர மிகப் பலரை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் வகையான கிளர்ச்சி வேண்டும் என்று கூறிவருகிறேன் . . .

காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும், அந்தச் சம்பவம் நடைபெறவில்லை. கடைசி நேரத்தில், கொடி கொளுத்துவதைப் பெரியார் நிறுத்திக் கொண்டார்.

பெரியாருக்கு இன்று உள்ள பெரும் செல்வாக்கு சாமான்யமானதன்று. அதைக் குறைத்து மதிப்பிடும் கயவனல்லன் நான். காங்கிரசிலே உள்வர்களிலேயே சிலருக்கு இன்று செல்வாக்கு இருப்பதை - உதாரணமாகக் காமராஜருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதை ஒப்புக் கொள்ளும் நான், பெரியாருக்கு உள்ள செல்வாக்கையா குறைத்து மதிப்பிடுவேன்? அவருக்கு இன்றுள்ள செல்வாக்கும், அதனை ஈட்டிட அவர் ஆற்றியுள்ள அரும்பெரும் பணியும் அபாரம். எதற்கும் அஞ்சுபவரல்லர். எதிர்நீச்சலில் பழகியவர். கொடி கோட்டை வாசலில் உள்ளதைக் கொளுத்த வேண்டுமென்றாலும், அதனால் ஏற்படக் கூடிய ஆபத்தைப் பற்றித் துளியும் கவலைப்படமாட்டார். அது அவருக்கு சேவையால் கிடைத்தது மட்டுமல்ல, அவருடைய சுபாவமே அத்தகையது. அந்தக் குறுகுறுப்பான கண்களிலே நான் பல சமயங்களில் கோபம் கொந்தளிக்கக் கண்டிருக்கிறன். அடிக்கடி அலட்சியத்தைக் கொட்டக் கண்டிருக்கிறேன். சில வேளைகளில் பரிவு, பச்சாதாபம் தோன்றிடக் கண்டிருக்கிறேன்.

ஒரு போதும் அந்தக் கண்களிலிருந்து பயம் கிளம்பக் கண்டதில்லை.

நானொன்றும், தம்பி, பத்து கெஜத் தொலைவிலே இருந்து அவரைப் பார்த்துப் பழகியவனல்லன்; பல கோணங்களிலே இருந்து பார்த்தவன் பல பிரச்சினைகள் குறித்த அவருடைய பிரத்யேகக் கருத்துகளை அறிந்தவன்.

எனவேதான், திராவிட இயக்கத்தில் வகுக்கப்படும் போர்த் திட்டம், பரவலான அளவில் செல்வாக்குப் பெறத்தக்கதும், பகைக் கூடாரத்தில் உள்ளவர்களின் உள்ளத்திலும் பரிவு ஊட்டக் கூடியதுமான திட்டமாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். பிரிந்த பிறகு ஏற்பட்ட பித்தமல்ல இது. ஒன்றாக இருந்த நாள்தொட்டு எனக்குள்ள கருத்து.

அவர் அத்தகைய விரோதப் பெரு வெள்ளத்தை எதிர்த்து நிற்கவல்லவர்.

பெரியாருக்கு உள்ள அஞ்சாமையும், எதிர் நீச்சுத் தன்மையும், எத்தகைய நிலைமையையும் சமாளிக்கும் திறமையும், எவருடைய விரோதம், குரோதம், பகையாயினும் சரி, எத்தகைய பூசலாயினும் சரி, அவற்றைத் துச்சமெனக் கருதிடும் நெஞ்சழுத்தமும், இந்த இயக்கத்தில் நிரம்பி, ததும்பி இருக்கிறது என்று நான் நம்பவில்லை . . .

தம்பி! நாம் மேற்கொண்டுள்ள காரியம் எளிதுதான். நமக்கு அந்தக் காரியத்தை முடித்துக் காட்டும் ஆற்றல் ஏராளமாக இருக்கிறது என்ற எண்ணம் நம்மில் யாருக்கும் எழுந்ததில்லை. எனவே தான் நம்மால் எவ்வளவு சாதாரணமாக வெற்றி பெற முடிகிறபோதும், மனத்தில் அலாதியான ஒரு மகிழ்ச்சி பிறக்கிறது.

சுடு சோறும், சுவையான குழம்பும், பாட்டாளிக்கு இனிக்கிறது. பாதாம் அல்வா, பதிர்பேணி பங்களாவில் கசப்பாகக்கூட ஆகிவிடுகிறது. நாம், அரசியலில், பொது வாழ்வுத் துறையில் தீண்டப்படாதவராக ஒதுக்கப்பட்டோராக விரட்டப்பட்டவர்களாக ஆக்கப்பட்டவர்கள். எனவே நமக்குக் கிடைக்கும் மிகச் சாமான்யமான வெற்றியும், மனத்தில் மகிழ்ச்சி யூட்டுகிறது. மேலும் பல வெற்றிக்கான வாய்ப்பினையும் வலிமையும் தருகிறது.

இவ்விதமின்றி நாம்; நமது ஆற்றலைக் குறித்து மிகஅதிகமான கணக்கிட்டுக் கொண்டு, நாம் சாதிக்க வேண்டிய காரியம்பற்றி மிகக் குறைவாக கணக்கிட்டிருந்தால், எத்துணை மனவேதனை ஏற்பட்டிருக்கும் தெரியுமா?

நமக்கு இருக்கும் திறமையும் குறைவு; அதைவிடக் குறைவு நமக்கு அமைந்துள்ள வாய்ப்புகளும் வசதிகளும். நாம் எதை எதை மாற்ற வேண்டும் என்று பாடுபடுகிறோமோ, அவற்றைக் கட்டிக் காப்பவர்களும், அதனால பலன் பெறுபவர்களும் அறிவிலிகளல்லர். அவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பும்; வசதியும் நமக்கு உள்ளதை விட அதிகமானது. எனவே நமது பணியின் பலன் வேகமாக உருவெடுக்க முடியாது என்பதை உணருகிறேன். எனவே உள்ளத்திலே, அமைதியே கூட ஏற்படுகிறது. சிறு உருவில் பலன் தெரியும்போது மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்கிறது. நம்மால் இவ்வளவாவது முடிகிறதே என்ற மகிழ்ச்சி! ...

விலக்கியவர்கள்- விலக்கப்பட்டவர்கள் அந்தந்தக் கால கட்டத்துக்கு ஏற்றபடி கசப்பும், காரமும் காட்டியும், கண்ணீர் வடித்துக் கை பிசைந்து நொடித்துப் போயும் வேறிடம் தேடிக் கொண்டும், அல்லது வாழ்க்கைக்கலையில் ஈடுபட்டும் பல்வேறு வழியில் சென்றுவிட்டனர். நாம் மட்டுந்தான் தம்பி! கொள்கையை மாற்றிக் கொள்ளாமல், மாற்றாருடன் கூடிக் குலவிடாமல், முக்காடிட்டு மூலைக்குச் சென்றிடாமல் வீண் வம்புக்குப் பலியாகாமல், கலத்திலிருந்து வீசி எறியப்பட்டவர்கள், சுழலுக்கும், சுறாவுக்கும் தப்பி, தெப்பத்தின் துணை கொண்டு, எங்கோ ஒரு திட்டைத் தேடி அலைந்து அங்கு தங்கி, சிறியதொரு சிங்காரத் தோணி அமைத்துக் கொண்டு அதிலேறிப் பயணம் செய்வோர் போல நமது பயணத்தை, அதே பாதையில் தொடர்ந்து நடத்துகிறோம்.- என்பதே அண்ணா தந்த அந்த கண்ணியமும்- குருபக்தியும் ததும்பும் விளக்கம்!

பெரியாரது கொள்கைகளில் எப்போதும் ஈடுபாடு எள்முனையளவும் குறையாதவராக, பெரியாரின் பிரதான சீடராக, விசுவாசமிக்க தலைமகனாக இருந்த காரணத்தினால்தான். -

1967 இல் முதல்வர் பதவி ஏற்பதற்கு முன்பே திருச்சி சென்று அய்யாவிடம் ஆசி பெற்றார். சட்ட மன்றத்திலேயே இந்த அரசு பெரியாருக்கு அளிக்கப் பட்ட காணிக்கை என்று பிரகடனம் செய்தார். பெரியாரின் உயிர்க்கொள்கைகளில் ஒன்றான - சுயமரியதைத் திருமணங்களை முன் தேதியிட்டு செல்லுபடியாகும் வகையில் சட்டமியற்றினார்.

அது மட்டுமா?

பெரியாரின் கொள்கைகளை- ஆட்சி மூலம் படிப்படியாக அமல் நடத்தி சாதனைச் சரித்திரம் படைத்திட

வரலாற்றின் முதல் பகுதியை மட்டுமே நான் எழுதியிருக்கிறேன். அடுத்த பகுதியை தம்பி கருணாநிதி எழுதுவார்

என்று தொலைநோக்குப் பார்வையோடு குறிப்பிட்டு கழகத்தைப் பாதுகாத்து வளர்த்திடவும் கழக ஆட்சியில் ஏழை எளியவர்களுக்கான நலத் திட்டங்களை அமல்படுத்தவும்- பெரியாரது கொள்கைகளை நிறைவேற்றவும் தலைவர் கலைஞர் அவர்களை அடையாளம் காட்டி விட்டுப் போனார்.

அவர் கண்ட கனவான

இரட்டைக் குழல் துப்பாக்கியென

வீரமணி தலைமையிலான

திராவிடர் கழகமும்

கலைஞருடன் கைகோத்து

செயல்பட்டு வருகிறது.

அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழாவில் தலைவர் கலைஞருக்கு அண்ணாவிருதும், ஆசிரியர் வீரமணிக்குப் பெரியார் விருதும் வழங்கப்படுவது என்ன பொருத்தம்! என்ன பொருத்தம்!! என்று கேட்டு ஆடிப்பாடி மகிழ்ந்திடும் வகையில் இல்லையா?

(நன்றி: முரசொலி 26.9.2009)