Search This Blog

2.2.23

ஆத்மா பற்றி பெரியார்

ஆத்மா பற்றி பெரியார்


 


சமீபத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வக்கீல் உயர்திரு. மைலாப்பூர் எஸ்.ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர் களுடன் காங்கிரஸ் பிரசாரமாக ஆங்காங்கு சென்ற காலையில், ஒரு நாள் மதுரையில் இரவு 10 மணிக்கு மேல் படுத்துக்கொண்டு வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருக்கையில், ஆத்மாவைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் இதே அபிப்பிராயம் சொன்னபொழுது, உடனே அவருக்குக் கோபம் வந்து, உம்மிடம் சாவகாசம் வைத்ததே தப்பு என்றும், நீர் இவ்வளவு கீழான மனிதனென்று எனக்கு இதுவரையிலும் தெரியா தென்றும் சொல்லிப் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டார்.

ஆனால், அப்படிப் பேசுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தில் அவருடைய தலைமையின்கீழ் ஒத்துழையாமை சம்பந்தமான பிரசங்கம் செய்த பிறகு, தலைவர் முடிவுரையாக என்னைப் பற்றி அவர் பேசும்போது, ஸ்ரீமான் ஈ.வெ.-இராமசாமி நாயக்கர் ஒரு பெரிய ராஜரிஷி யென்றும், இவர் நமக்குத் தலைவராகக் கிடைத்தது நமது பாக்கியம் என்றும், மற்றும் பல விதமாகப் புகழ்ந்து பேசினார். மறுநாள் காலையில் அவருடைய கோபம் தணிந்த பிறகு, தானாகவே என்னுடன் பேசவந்த பொழுது, நாயக்கர்வாள்! கோபஞ்செய்து கொள்ளாதீர்கள். இராத்திரி தாங்கள் அம்மாதிரி பேசியதற்குக் காரணம் இன்னதென்று தெரிந்து கொண்டேன்.

அதாவது, சீமைக்குச் சென்று, கல்வி கற்றுவந்த உங்களுடைய குழந்தைகள் திடீரென்று இறந்து போன வெறுப்பினால் தாங்கள் இவ்வித எண்ணங்கொண்டு விட்டதாக உணர்ந்தேன். ஆதலால் கோபித்துக் கொள்ளாதீர் களென்று சமாதானம் சொன்னார். நான் அதற்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்றும், அக்குழந்தைகள் என் தமையனார் குழந்தைகள் என்றுமே அவருக்கு மீண்டும் உரைத்து, எனதபிப்பிராயத்தையே பலமாக மறுபடியும் வற்புறுத்தினேன். ஆகவே, நான் இந்த விஷயங்களெல்லாம் வெகு நாளாகவே கொண்டுள்ள அபிப்பிராயங்களானாலும், அவற்றின் சம்பந்தமான சகல தொல்லைகளையும் மேற்போட்டுக் கொண்டு, பிரசாரம் செய்கிறதென்கிற வேலையாக இப்பொழுதுதான் திரிகிறேன். இதற்கு முன் நான் எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், சிநேகமாக ஏற்பட்டவர்களிடமெல்லாம் இதைப்பற்றியே பேசியும் இருக்கிறேன்.

ஆத்மா என்னும் விஷயத்தில் சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமானால், அது ஒருவித உணர்ச்சியே ஒழிய ஒரு தனிப்பட்ட வஸ்துவல்ல. அவ்வுணர்ச்சியானது சரீரத்தின் அசைவு நின்றவுடன் ஒழிந்துபோகும் என்பதேயாகும். இதைப்பற்றி இரண்டு விசயங்கள் குடிஅரசுவில் முன்னாலேயே எழுதப்பட்டிருக்கிறது. மூன்றாவது விஷயமும் சமீபத்தில் வரும் ஆத்மா என்பதைப் பற்றிய பேச்சே பேசாமலிருந்தால் நல்லதென்றும், இதனால் பல ஜனங்களுடைய அதிருப்தி ஏற்பட்டு, நமக்கு வெளி உதவிகள் குறைந்து போகுமெனவும் சிலர் கூறுகின்றார்கள். அதை ஒத்துக் கொள்ள என்னால் முடியவில்லை. எனது அபிப்பிராயங்களைச் சொல்லுவதை நமது கடமையாக வைத்துக் கொள்ளுவோம். மற்றவர்களுக்குத் துன்பமில்லாத முறையில் அதைப் பிரசாரம் செய்வோமென்பதைத் தவிர, வேறு விஷயங்களை எதிர்பார்த்துக் கொண்டு, அபிப்பிராயங்களை மூடி வைத்துக் கொண்டிருப்பது நியாயமாகாது. நமது ஆயுள் காலத்திற்கு எவ்வித அளவும், உறுதியும் பந்தோபஸ்-துமில்லையாதலால், கூடுமானவரை சவுகரியமிருக்கும்பொழுது நமது அபிப்பிராயங்களை எல்லாம் சொல்லி விடுவதுதான் சரியென்று நினைக்கின்றேன்.

                             -----------------------------தந்தைபெரியார் -”குடிஅரசு” 31,5.1931

1.2.23

பார்ப்பானை எதிர்த்துப் பிழைத்திருப்பவர் நாமே! ஜாதி ஒழிப்பே நமது முக்கியப் பணி!

 



ஜாதி ஒழிப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், சாதியை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதையும் உணராத மக்களே இல்லை.

 

ஜாதி காரணமாக மக்கள் மனவருத்தமும், தொல்லையும் அடைவதை நாம் காண்கிறோம். அந்தச் ஜாதி இழிவை ஒழிக்க நாங்கள் பாடுபடுகின்றோம். இப்படிச் ஜாதியில் கஷ்டம் (தொல்லை) அனுபவிப்பவன் கூட வருவதில்லை. ஏன் 3000- ஆண்டாக எவனுமே வரவில்லை. நாங்கள் தான் பாடுபடுகிறோம்.

 

ஜாதி ஒழிப்பு வேலை என்பது மேல் ஜாதிக்காரனுக்கு ஆபத்து. அவன் நம்மை ஒழித்து விடுவான் என்று எண்ணுவதாலும், பயன்படுவதாலும் எவனும் இந்த வேலைக்கு வருவதே இல்லை.

 

எந்தச் சாதனமும், கருவியும் மேல் ஜாதிக்காரன் கையில் சிக்கி விட்டது. கடவுள், மதம், சாஸ்திரம் ஆட்சி எல்லாம் மேல் ஜாதிக்காரர் என்பவர்கள் கையில் தான் சிக்கி விட்டன.

 

நம் அறிவு வளர்ச்சி அடையும்படியான கல்வியோ மற்ற சாதனங்களோ நமக்கு அளிக்கப்படவே இல்லை. மூவேந்தர் காலத்திலே ஆகட்டும், அடுத்து "நாய்க்கன் முஸ்லிம்கள் மராட்டியன்" ஆட்சியிலும் கூட நமக்கு அறிவு பெறக் கல்வி அளிக்கவே இல்லை. 1961- இல் நாம் 100-க்கு 7- பேர்கள் தான் படித்து இருந்தோம். 1910-இல் ஏழரை பேர், 1920- இல் 9-பேர், 1931- இல் நாம் 100- க்கு 10- பேர்கள் தான் படித்து இருந்தோம். பிறகு அட்வைசர் ஆட்சியின் காரணமாகவும், ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் காரணமாகவும் 1951- இல் 100- க்கு 16- பேர்களாகவும் வந்தோம். அதற்கு அடுத்து தமிழகத்தில் பதவிக்கு வந்த ஆச்சாரியார் ஆட்சியில் 16- பேரை 10- பேராகவும் முயற்சியில் இறக்கினார் ஆச்சாரியார்.

 

நல்ல வேலையாக தமிழ்நாட்டில் ஆச்சாரியார் ஆட்சி ஒழிந்து காமராஜர் ஆட்சி ஏற்பட்டதன் பயனாக 16- பேராக இருந்தவர்கள் இன்று 100- க்கு 32- பேர்கள் படித்த இருக்கும் படியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

தோழர்களே! இப்படி நமது கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டும் காமராசரை ஒழிக்க வேண்டும் என்று தான் அத்தனைக் கட்சிகளும் பாடுபடுகின்றன.

 

காமராசர் கட்சியும், எங்கள் கட்சியும் தான் அவர்கள் ஒழியக் கூடாது என்று பாடுபடுகிறோம். மற்றவன் எல்லாம் தாங்கள் எப்படி எதைச் செய்தாவது தாங்கள் பதவி அடைந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு காமராசரை எதிர்க்கின்றார்கள்.

 

தோழர்களே! இன்று பார்ப்பானை எதிர்த்துக் கொண்டு நாட்டில் வாழ்கின்றவர்கள் என்றால் நாங்கள் தான். மற்ற யாராவது இருக்கின்றார் என்றால் அது காமராசர் தான். மற்றவர்கள் எல்லாம் பார்ப்பானை எதிர்க்காததோடு அவன் கால் அடியில் கிடக்கின்றவர்கள் ஆவார்கள்.

 

இன்று நாட்டில் அரசியலில் எந்தக் குறையும் மக்களுக்கு இல்லை. 21- வயது ஆன எல்லோருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், வோட்டுரிமை கொடுக்கப்பட்டு விட்டது. பின் இன்னும் என்ன உரிமை வேண்டும்?

 

எருமைக்கு குதிரை ஓட்டு வேண்டும் என்கிறீர்களா? புரியனுமே!

 

நமக்கு இன்று வேண்டியதுசமூதாயக் குறை ஒழிய வேண்டும். ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காகப் பாடுபடுவது தான்.

 

தோழர்களே! நான் இந்தத் தொண்டை 30- ஆண்டுகளாகச் செய்து கொண்டு தான் வருகிறேன். என்னை "என்ன! ஓட்டைக் குடத்தில் தண்ணீர் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறாயே"? என்று கேலிப் பேசினார்கள். நாங்கள் கவலைப்படாமல் பாடுபட்டுக் கொண்டு தான் வந்தோம். நல்ல வேலையாக காமராசர் பதவிக்க வந்ததன் காரணமாக இன்று கூப்பாடு பயன் அளிக்க ஆரம்பித்துள்ளது.

 

இன்று நடைபெறும்படியான போராட்டமானது பழமைக்கும், புதுமைக்கும் நடைப் பெறும்படியான போராட்டமாகும்.இராஜாஜி பழமையை அலட்சியம் செய்யாது காக்க வைத்துக் கொண்டு பாடுபடுகிறார். அவருக்கு வால் பிடித்துத் திரிவது தானா நமது தமிழர்களின் செயல்? நம் மக்கள் சிந்திக்க வேண்டும்.

 

பார்ப்பான் கையில் இருந்து வந்த காங்கிரஸ் ஆனது இன்றைக்குத் தான் கைக்கு வந்து தமிழர்களுக்குப் பலன் அளிக்க வல்லதாக இன்று வந்து உள்ளது.

 

நமக்கு கல்வி, உத்தியோகம் முதலியவைகளில் என்றைக்கும் இல்லாத அளவு நன்மைகள் ஏற்பட்டு உள்ளன.

 

இன்றைக்கும் ஆள்கள் டாக்டராகவோ, எஞ்சினியர்களாகவோ படித்து வரும்படியாக ஏற்பட்டு உள்ளது. இதற்கு முன் இருந்த ஆட்சியில் இவை நமக்கு இல்லை. இன்றைக்குத் தான் காமராசர் ஆட்சியில் தான் ஏற்பட்டு உள்ளது.

 

இந்த ஆட்சியானது மீண்டும் ஏற்பட வேண்டும். இதற்கு நீங்கள் உங்கள் ஓட்டை மட்டும் அளிப்பதோடு மட்டும் இல்லாமல் ஓவ்வொரு கவலை எடுத்துக் கொண்டு பாடுபட வேண்டும். காமராசர் ஆட்சி ஏற்பட அவர் கட்சி வெற்றி பெறவும் பாடுபட வேண்டும்.

 

                                           --------------------------------------------- 22.10.1961- அன்று திருச்சியில் தந்தை பெரியார் 83-ஆம் பிறந்த தின விழாவில் பெரியார் .வெ.ரா சொற்பொழிவு. "விடுதலை", 25.10.1961