Search This Blog

31.3.11

சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும் ஏன்?


ஏன் சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும்?

1. அது ஒன்றேதான் மக்கள் சமூகவாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக்கூடாது என்று கூறி சமதர்மத்துக்கு போராடுகின்றது.

2. அது ஒன்றேதான் மனிதசமூகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.


3. அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரிசமத்துவம் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.


4. அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக நேய, ஒருமையே வேண்டும் என்று கூறி சமதர்மத்திற்குப் போராடுகின்றது.

5. அது ஒன்றேதான் உலகில் உழைப்பாளி என்றும், முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர் களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரிசமமாக அனுப விக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.


6, அது ஒன்றேதான் ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத் தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகிய வைகளுக்கு இணங்கி நடக்க சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.

-----------------------தந்தைபெரியார் -”புரட்சி” - பெட்டிச் செய்தி - 17.12.1933

30.3.11

ஹிந்து மதம் யாருக்கு நன்மை தரும்?


இது தர்மம் ஆகுமா?
இப்படிப்பட்ட ஹிந்து மதம் யாருக்கு நன்மை தரும்?

"மநு தர்ம சாஸ்திரம்" என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அநுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டதிட்டங் களால் அநுசரிக்கப்பட்டதுமாகும். அதிலுள்ள நீதிகளும், விதிகளும், எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்து கொள்ளுவது அவசியமாகும். ஆதி திராவிட சமூகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தார்கள் வரை இந்த மநுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்ட திட்டங்கள் அமைந்துள்ள "இந்து" மதத்திலேயே அடிமைப்பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மநுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்.

1. "பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது" அத்தியாயம் 8. சுலோகம் 20.

2. "சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை யுடையதாயிருக்கும்" அ.8. சு.22.

3. "சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி" அ.8.சு. 22.

4. "ஸ்தீரிகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை" அ.8. சு.112.

5. "நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனை சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்ய வேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனை பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்" அ. 8. சு. 113115.

6. "சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்" அ.8. சு. 270.

7. "சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்" அ.8. சு.271.

8. "பிராமணனைப் பார்த்து, "நீ இதைச் செய்ய வேண்டும், என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்" அ.8. சு.272.

9. "சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்" அ.8. சு.281.

10. "பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை" அ.8. சு.349.

11. "சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்."

"பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும்." அ.8. சு.380.

12. "அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு பணி விடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்." அ. 8. சு.410.

13. "பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்" அ. 8. சு.413.

14. "பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்" அ. 8. சு.417.

15. "சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது" அ. 9. சு.416.

16. "பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு தந்தை சொத்தில் பங்கில்லை" அ. 8. சு.155.

17. "பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்தரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம்." அ.9. சு.248.

18. "பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்" அ. 9. சு. 317.

19. "பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள்." அ. 9. சு.319.

20. "பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்கு துன்பஞ் செய்தால் அவனை சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்." அ.9 சு. 320.

21. "சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாதவிடத்தில் க்ஷத்திரியனுக்கும், க்ஷத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு." அ.11. சு.12.

22. "சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்." அ.11. சு.13.

23. "யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது." அ.11. சு.20.

24. "பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்." அ.11. சு.66.

25. "ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்." அ.11. சு.131.

25(அ). "அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது." அ.11. சு.132.

26. "க்ஷத்திரியன் இந் நூலில் (மநுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப்பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணி விடை செய்வதே தவமாகும்." அ.11 சு.285.

27. "சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவன். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவன். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்." அ.10. சு.75.

28. "பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்." அ.10. சு.96.

29. "சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும்." அ.10. சு.96.

30. "பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும், சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும்." அ.10. சு.125.

31. "சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும்." அ.10. சு.129.

32. "மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர்." அ.2. சு.7.

இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாரருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் "பிராமணன்" என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை "மனுதர்மம்" என்று கூறுவதா? அல்லது "மனு அதர்மம்" என்று கூறுவதா? சற்று யோஜித்து முடிவு செய்யுங்கள்.

------------------- தந்தைபெரியார் - “குடி அரசு” கட்டுரை 10.03.1935

29.3.11

பணக்காரத்தன்மை ஒரு மூடநம்பிக்கையே - பெரியார்




மனிதனைப் பிடித்து வாட்டும் மூடநம்பிக்கைகளில் பணக்காரத் தன்மையும் ஒரு மூடநம்பிக்கையேயாகும். இந்தப் பணக்காரத் தன்மை மூடநம்பிக்கையானது மத சம்பந்தமான மூடநம்பிக்கைகளைவிட மிக முக்கியமானதும் மோசமானதுமாகும்.

பணம் இல்லாவிட்டால் கடவுளுக்குக் கூட வேலை இல்லை என்று முடிவு கட்டிவிடலாம். பணமே கடவுளுணர்ச்சிக்கும் முக்கியமாய் மத உணர்ச்சிக்கும் மற்றும் பல மூடநம்பிக்கை உணர்ச்சிக்கும் மூல காரணமாய் இருக்கிறது. பணம் என்று சொல்லுவது செல்வம் என்பதின் கீழ் வரும் எல்லாவற்றையும் பொறுத்தது. அச்செல்வத்தன்மைக்கு அடிப்படையானது புகழ் ஆசை என்று தான் சொல்ல வேண்டும். அப்புகழ் ஆசை என்பதும் வெறும் சுயநலத்தையே அடிப்படையாகக் கொண்டதே தவிர மற்றப்படி செல்வ சம்பந்தமான புகழில் ஆசையில் வேறு எவ்வித பகுத்தறிவும் காண முடியவில்லை.

சமூகத்தில் தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சி எல்லா மக்களுக்கும் உள்ளது என்று ஒரு சாரார் வாதிக்கக் கூடுமானாலும் அப்புகழுக்கும், தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கின்ற தன்மைக்கும் பணம் சேர்ப்பது என்பதை சாதனமாகக் கொண்டதானது மூடநம்பிக்கையில் பட்டதேயாகும்.

மனிதனுக்கு சுயநலமும் புகழ் ஆசையும் இல்லாமல் இருக்காது என்பது ஒரு அளவுக்கு உண்மைதான். ஆனால் அதற்கு சாதனம் செல்வம் சேர்ப்பது என்பது இயற்கையாய் ஏற்பட்டதல்ல என்போம். ஒரு மனிதன் மேல் லோகத்தில் போய் சுகமாய் (மோட்சத்தில்) இருக்க இந்த லோகத்தில் கடவுள் தயவும் புண்ணியமும் சம்பாதிக்கலாம் என்று சில காரியங்கள் செய்ய எப்படி கற்பிக்கப்பட்டிருக்கிறானோ, அது போலவே தான் சுயநலத்துக்கும், புகழுக்கும் பணம் சம்பாதிப்பதை சாதனமாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறான். இவனுக்கு முன் பிறந்த மற்ற எல்லோரும் செய்வதைப் பார்த்து இவனும் செய்கிறான். அதனால் அச்செல்வம் தேடி செலவழிப்பதால் ஏதோ சில சௌகரியங்கள் ஏற்படுவதாக கருதிக் கொள்ளுகிறான். மற்றவனும் இவனை பெரியவனாக மதிக்கிறான் என்றாலும் இச்செல்வத்தால் உண்மையில் எவ்வித பலனும் அடைவதில்லை. தன்னைப் பார்த்து பிறர் செல்வவான் என்று சொல்லுவதை ஒரு புகழாகவும் தனக்கு இவ்வளவு செல்வம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வதை தான் ஏதோ ஒரு பெரிய பலன் அனுபவிப்ப தாகவும் கருதிக்கொள்ளுகிறான்.

மேலும் ஒருவன் செல்வவானாய் இருப்பதற்காக அவனுக்கு சில கடமைகள் இருக்கிறது. அக்கடமைகளை நிறைவேற்றுவதையும், தான் ஏதோ ஒரு பெரும் பயன் அனுபவிப்பதாகக் கருதிக் கொள்கிறான். ஒருவன் போலீசு அதிகாரியாய் இருப்பதற்காக அவனுக்குள்ள கடமைகளைச் செய்யும் போது அவன் எப்படி தன்னை ஒரு பெரிய தலைவனாக நினைத்து எப்படி மகிழ்கிறானோ அவனைப் பார்த்து பிறர் அவனை அதிகாரி என்று எப்படி நினைக்கிறார்களோ அவ்வளவுதான் செல்வவான் தான் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்தும் போது தன்னை நினைத்து மகிழ்வதும் இவனைப் பார்த்து மற்றவர்கள் நினைப்பதும் என்றுதான் சொல்ல வேண்டும்.

செல்வவான் என்று நினைத்துக் கொள்வதும் பிறர் இவனை செல்வவான் என்று சொல்லுவதும் தவிர செல்வவானுக்கு வேறு என்ன நலம் இருக்கிறது என்று பார்த்தால் அதிலுள்ள மூடநம்பிக்கை நன்றாய் விளங்கும். செல்வவான் அல்லாத சாதாரண மனிதன் அதாவது வரவுக்கும் செலவுக்கும் சரிக்கட்டும்படியான ஒரு சம நிலையுள்ள மனிதன் இன்னமும் தெளிவாய்ச் சொல்ல வேண்டுமானால், தன்னுடைய தேவைகளுக்காக தன் வருமானமல்லாமல் மற்றொருவனைப் போய் கெஞ்ச வேண்டிய அவசிய மில்லாத மனிதனின் நிலைமையை விட செல்வவான் என்கின்றவன் நிலைமை எந்த விதத்தில் மேலானது நன்மையானது என்பதை யோசிப்போம்.

செல்வம் (பணம்) தேடவேண்டும் என்று கருதி அதில் இறங்கியவ னுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகின்றது. பணம் சம்பாதிப்பதில் போட்டி, பணக்காரன் என்று காட்டிக் கொள்வதில் போட்டி, அதற்கேற்ற புகழ் சம்பாதிப்பதில் போட்டிகள் இத்யாதி போட்டிகள் இவனது ஊக்கத்தையெல்லாம் கொள்ளை கொண்டு விடுகிறது.

இவ்வளவோடல்லாமல் சம்பாதித்த பணத்தை காப்பாற்றுவதில் உள்ள சிரமம், இவற்றால் ஏற்படும் எதிரிகள், பொறாமைக்காரர்கள் ஆகியவர்களின் தொல்லைக்கு ஈடுகொடுப்பது ஆகியவை பெருங்கவலைக்கு இடமாய் விடுகிறது. பிறகு செல்வவானாய் இருப்பதற்கு ஆக செய்ய வேண்டிய கடமைகள் இடையறாமல் அதாவது அறுபது நாழிகையும் ஓடும் யந்திரம்போல் செய்து கொண்டே இருக்க வேண்டியதாய் இருக்கிறது.

இவ்வளவோடு இந்தக் காரியம் முடிந்துவிட்டது என்று சொல்லுவதற்கு இல்லை. செல்வம் படைத்ததின் பலன் தனக்குப் பிறகு இந்தச் செல்வம் என்ன கதி ஆவது என்கின்ற கவலையானது மற்றொரு பெரும் பாகமான கவலைக்கு இடமானது. எதிர்பாராத வார்சுகள் ஆண் பிள்ளையோ பெண்பிள்ளையோ அல்லது இரண்டு மில்லாமல் எவனுக்கோ பிறந்த தத்துப்பிள்ளையோ என்பதொருபக்கமிருக்க ஆண் பிள்ளையானால் எத்தனை பேர்கள்? பெண் பிள்ளையானால் எத்தனை பேர்கள்? அவர்களுக்கு வரும் பெண்ஜாதி புருஷன்மார் யார்? அவர்கள் இச் செல்வத்தை எப்படி அனுபவிப்பார்கள்? எத்தனை நாளைக்கு வைத்து இருப்பார்கள்? தான் எத்தனை நாள் எவ்வளவு கஷ்டப்பட்டு எந்தஎந்த வழியில் தேடிய செல்வத்தை எத்தனை நாளில் எந்த எந்த வழியில் பாழாக்கி விடுவார்கள்? என்கின்ற கவலை லேசானதல்ல என்பது மாத்திரமல்லாமல் அந்தச் செல்வங்கள் 100க்கு 75 விகிதம் ஒரு செல்வவான் முன்பாகவே மற்ற செல்வவான் செல்வம் அவன் பிள்ளைகளால் பாழாக்கப்படுவதையும் பார்க்கக்கூடியதாகவே இருக்கிறது.

அன்றியும் கஷ்டப்பட்டு தேடிய செல்வவான், தேடிவைப்பதிலேயே கவலையாய் இருந்து சாக அவன் பின் வார்சு ஒருபாடும் படாமல் அதை அல்லது அதன் அனுபவத்தை தான் ஒரு செல்வவான் என்கின்ற உணர்ச்சியிலேயே அனுபவித்துக் கொண்டிருப்பதையும் பார்த்து வருகிறான். தத்துக்கு வருகிறவன் புதையல் எடுத்தது போல் அனுபவிக்கிறான்.

ஆகவே செல்வமானது செல்வவானுக்குப் பின்னால் இந்தப்படி யெல்லாம் ஆவதில் செல்வவானுக்கு ஏற்படும் பயன் என்ன? எவ்வளவோ கஷ்டம் கவலை தொல்லை ஆகியவைகள் அனுபவித்துப் பொருள் தேடியதற்கு இதுதான் பயன் என்றால் சொத்து சேர்ப்பது என்பது ஒரு மூடநம்பிக்கை அல்லது குருட்டு பழக்க வழக்கத்தில் பட்டது என்பதில் என்ன ஆட்சேபணை இருக்கின்றது என்று கேட்கின்றோம்.

ஒரு தாசி ஓடி ஓடி ஒரு இரவுக்கு 10 புருஷர்கள் வீதம் கூடி 10 ஆயிர ரூபாய் நகையும், 2 வீடும், 5, 6 ஏக்கர் நஞ்சை பூமியும் எல்லாம் 30, 40 ஆயிரம் ரூபாய் சம்பதிக்கிறாள். கிழப்பருவம் வந்த உடன் மகளைத் தயார் செய்கிறாள். மகள் தயாரானதும் மகளிடம் செல்வத்தை ஒப்புவித்து விட்டு செத்துப் போகிறாள். தாய் செத்த பிறகு மகள் தனக்கு இச்சையான ஒரு நாயகனை ஆசை நாயகனாக வைத்துக் கொண்டு அவன் இஷ்டப்படி சல்லாபமாய் விளையாடி 2, 3 வருஷத்தில் சொத்துக்களை எல்லாம் தொலைத்துவிட்டு ஓட்டாண்டியாகி இருவரும் கஷ்டப்படுகிறார்கள். இப்படிப்பட்ட எத்தனையோ கேசுகள் நாம் பார்க்கின்றோம். இதுபோலவே வியாபாரியோ, வக்கீலோ, மிராசுதாரனோ, லேவாதேவிக்காரனோ, உத்தியோகஸ்தனோ எவனாய் இருந்தாலும் பணம் சம்பாதிப்பதில் அவனவன் படும் கஷ்டமும் அவன் பிள்ளை வந்து அதைத் தொலைப்பதில் நடந்து கொள்ளும் மாதிரியும் நாம் அறியாததல்ல.

ஏதோ ஜாதியானது பிறவியால் வருவதுபோல் செல்வமும் பிறவியினால் வரும்படியாக ஜமீன் அரசு முதலிய முறைகளில் சட்டத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு வருணாச்சிரமதர்மம் போல் சொத்துக்கள் அழிக்க வசதி இல்லாமல் இஷ்டப்படி அனுபவிக்க வசதி இருக்கிற பதினாயிரத்துக்கு ஒரு குடும்பம் அதுவும் மூத்த பிள்ளை மாத்திரம் என்பது தவிர மற்ற குடும்பங்கள் எவ்வளவு செல்வமுள்ளதானாலும் 2, 3 தலைமுறைகளில் ஏதாவது ஒரு மாற்றத்தை அடைந்து செல்வவான் என்கின்ற தன்மைபோய் மாஜி செல்வவான் குடும்பம் என்று சொல்லத்தக்க நிலையில் எத்தனை குடும்பங்களை நேரில் பார்க்கிறோம்.

புதிய செல்வவான்கள் என்கின்ற முறையில் கவர்ன்மெண்ட் ஷாப்புக்கள் போலவும், பாங்கி காஷியர்கள் போலவும் வரவு செலவு செய்து சம்பாதித்து சம்பாதித்து பின் வார்சுக்கு கணக்கு ஒப்புவித்து விட்டுப் போகிறவர் எத்தனை பேரைப் பார்க்கிறோம்.

ஆகவே செல்வவான் என்பதில் இருக்கும் புகழும் சுயநல அனுபவமும் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தால் முன் குறிப்பிட்டதுபோல் பணக்காரத் தன்மை என்பது மூடநம்பிக்கையும், குருட்டு பழக்க வழக்கமுமாய் இருப்பதும் அதற்கு அனுகூலமாக அரசாங்கமும் சமூக கட்டுப்பாடும் இருப்பதும் நன்றாய் விளங்கும்.

நிற்க "சுயநலம் பேணுவதும் புகழ் விரும்புவதும் மனித இயற்கை என்பதை மேலே ஒப்புக்கொண்ட பிறகு அதற்கு சாதனமான காரியங்களை செய்வது என்பதில் மனிதன் பணம் சேர்க்காமலும் பணக்காரன் என்கின்ற புகழ் விரும்பாமலும் இருக்க எப்படி முடியும்? ஆகவே இது இயற்கையே ஒழிய மூடநம்பிக்கையோ குருட்டு பழக்க வழக்கமோ அல்ல" என்று சொல்ல வரலாம்.

இதற்கு மேலேயே சமாதானம் சொல்லப்பட்டது. அதாவது மோக்ஷத்தை விரும்புவது எப்படி மூடநம்பிக்கையோ அதுபோல் தான் செல்வத்தையும் அதனால் ஏற்படும் புகழையும் விரும்புவதாகும் என்று சொன்னோம். ஆனால் அது நடைபெறுவதற்கு காரணம் அரசாங்கமும் சமூகக் கட்டுபாடும் என்றும் காட்டினோம். அரசாங்கமும் சமூகக் கட்டுப்பாடும் தனி உடமை தத்துவமான முறையில் இருக்கிறபடியால் அவை நடக்க முடிகின்றது.

வேதாந்த முறை என்பது போன்ற பொதுஉடைமை தத்துவ முறையுள்ள அரசாங்க ஆட்சியும் சமூக கட்டுப்பாடும் உள்ள இடத்தில் சுயநலத்துக்கும் புகழுக்கும் செல்வம் சேர்த்து பணக்காரன் ஆகிறது என்கின்ற தத்துவம் சாதனமாய் இருக்க முடியவே முடியாது. அங்கு எப்படி மதவாதிகள் நாஸ்திகர்களை வெறுத்து குற்றவாளியாக ஆக்குகிறார்களோ அதுபோல் பணக்காரத் தன்மையை வெறுத்து குற்றவாளியாக்கி தண்டிக்கச் செய்கிறார்கள்.

அப்படி இருப்பதாலேயே அங்குள்ள மக்களுக்கு சுயநலம் இல்லை என்றாவது புகழில் விருப்பமில்லை யென்றாவது சொல்விட முடியுமா? என்று பார்த்தால் ஒரு நாளும் முடியாது.

இங்குள்ள பணக்காரனுக்கு இருக்கும் சுயநலம் என்பது அவன் பணந்தேடி மீதி வைத்து, தான் எதிர்பாராத பின் வார்சுக்கு தன்னால் அடக்கி ஆள முடியாதபடி அனுபவிக்க விட்டுவிட்டுப் போவதும் தன்னை மாத்திரமோ தன் குடும்பத்தை மாத்திரமோ பணக்கார பிரபுக் குடும்பம் என்று சொல்லும் படியானதையும் சாதனமாய் கருதுகிறான்.

அங்குள்ளவன் சுயநலமும் புகழாசையும் தானும் தனது தோழனும் கூடுமான அளவு பாடுபட்டு தேடி தேவையான அளவு விகிதாச்சாரம் வரும்படி அனுபவித்து மீதி உள்ளதை தானும் தன் தோழர்களும் இன்னமும் கொஞ்சம் முற்போக்கான முறையில் பெருக்கி தேவையான அளவு சரிசமமாய் அனுபவித்து பொதுவில் பொறுப்பு ஏற்றுக்கொள்வதை சாதனமாய் கருதுகிறார்கள்.

இதிலிருந்து அடிப்படையான இயற்கை என்னும் சுயநலமும் புகழாசையும் மாறாமலேயே சாதனங்கள் மாத்திரம் மாறி இருக்கிறதை உணரலாம்.

ஆகவே பணக்காரத் தன்மை மூட நம்பிக்கையிலும் குருட்டுப் பழக்க வழக்கத்திலும் பட்டது என்பதும், பணக்காரன் என்று இல்லாமல் எல்லோரும் சரிசமம் என்னும் தன்மை பகுத்தறிவில் பட்டது என்பதும் விளங்கும்.

---------------- தந்தைபெரியார் - “குடி அரசு” தலையங்கம் 08.03.1936

28.3.11

மதங்கள் அன்பினால் பரப்பப்பட்டதா? - பெரியார்


பகுத்தறிவாளர் கழகம் துவக்குவதற்கு முன் பகுத்தறிவாளர் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும். பகுத்தறிவாளர் என்றால் மனிதன். மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மனிதன் ஒருவன்தான் சிந்திப்பான். வாய்ப்பு வசதி, தேவை, வளர்ச்சி இவைகளைப் பற்றி மனிதன் ஒருவன்தான் சிந்திக்கின்றான், நிலைமைக்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவன் மனிதன் ஒருவனேயாவான். மற்ற எந்த ஜீவனுக்கும் இந்த அறிவு கிடையாது.

பகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறிவினைப் பயன்படுத்திச் சிந்திக்காத காரணத்தால் சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொண்டு இராகுகாலம், குளிகை, எமகண்டம் என்றும், பூனை குறுக்கிட்டால் கெட்ட சகுனம் என்றும் முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு முட்டாளாக இருக்கின்றான்.

மனிதன் தோன்றிப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகின்றன. அப்படிப்பட்ட மனிதர்கள் கடவுள், மதம், சாஸ்திரம், ஜாதி என்கின்றவைகளில் இன்னமும் நம்பிக்கை கொண்டு மடையர்களாக, முட்டாள்களாக இருக்கின்றனர். சுமார் 100, 150 ஆண்டுகளுக்குள், தோன்றிய இரயில், மோட்டார், மின்சாரம், தந்தி, டெலிபோன், ரேடியோ என்பவைகளும், இன்றைக்குத் தோன்றுகின்ற விஞ்ஞான அதிசய அற்புதங்கள் என்பவைகளும் மனிதனின் பகுத்தறிவு வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டவைகளேயாகும். இவற்றையெல்லாம் தன் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டிருக்கிற நம் ஒரு நாட்டு மனிதன் மட்டும் தான் மதம் - கடவுள் - சாஸ்திரம் என்கின்ற மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக சிந்திப்பது பாவம், பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்வதுபாவம் என்று கருதிக்கொண்டு இன்னமும் காட்டுமிராண்டியாக இருக்கிறான்.

ஆடு, கோழி, பன்றிகளைத் தின்பவன் மாடு தின்பது பாவம் என்கிறான். ஆடு, மாடு, கோழிகளைத் தின்பவன் பன்றி தின்பது பாவம் என்கின்றான். எதனால் பாவமென்றால், மதத்தில் அப்படி இருக்கிறது; பெரியவர்கள் அப்படிச் சொல்லி இருக்கிறார்கள் என்று மதத்திற்கு அடிமையாக இருக்கிறான்.

அதன் காரணமாக மனிதன் அறிவு வளரவேண்டிய அளவிற்கு வளர்ச்சியடையாமல் இருக்கிறான். இங்குள்ள இந்த விஞ்ஞான விந்தைகளைக் கண்டவர்களெல்லாம் இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம் என்பவைகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு தங்கள் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்துச் சிந்தித்தலேயாகும். உலகில் பகுதிக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் அறிவிற்கு முதன்மை கொடுத்து அறிவைக்கொண்டு சிந்திக்கின்றார்கள்.

பகுத்தறிவுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடக்கும் நாடுகள் உலகில் பல இருக்கின்றன. பல கோடிக்கணக்கான மக்கள் பகுத்தறிவாளர்களாக இருக்கிறார்கள்.

நம் ஒரு நாட்டில் மட்டும் எதற்காக இத்தனை மதம்? இதனால் மனிதன் ஒருவனுக்கு ஒருவன் பிரிந்து வேறுபட்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதைத் தவிர இவைகளால் மனிதன் பெற்ற பலனென்ன? இத்தனைக் கடவுள்களும், மதமும் இருந்து மனிதனை ஒன்றாக்க வில்லையே! இன்றைக்கு உலகம் மிகச் சுருங்கிவிட்டது. முன் மாதக் கணக்கில் பயணம் செய்து போகவேண்டிய இடத்திற்கு ஒருசில மணிநேரத்திற்குள் இன்று போகும்படியான வசதி கிடைத்துவிட்டது. நினைத்தவுடன் 10 ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள மனிதனிடம் பேசும்படியான (டெலிஃபோன்) சாதனங்கள் ஏற்பட்டுவிட்டன. இரண்டு நாட்களுக்குள் உலகத்தின் எந்தப் பாகத்திற்கு வேண்டுமானாலும் போகும்படியான நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. இன்னும் மனிதனின் உறுப்புக்களை மாற்றியமைக்கவும், மனிதனின் உறுப்பில் கேடானதை நீக்கி வேறு மிருகங்களின், இறந்த மனிதனின் உறுப்பினை வைத்துச் சரி செய்யும்படியான அளவிற்கு வைத்திய வசதியும் இன்று பெருகியுள்ளதென்றால் இதற்குக் காரணம் மனிதனின் அறிவு வளர்ச்சியினாலேயேயாகும்.

பகுத்தறிவு என்பதற்குச் சக்தி எவ்வளவு இருக்கிறது? அதற்கு எவ்வளவு பலன் இருக்கிறது? அதனால் எவ்வளவு நன்மை விளைகிறது? அதனால் எவ்வளவு கேடுகள் நீங்குகின்றன? என்பவைகளைச் சிந்தியுங்கள். இவற்றையெல்லாம் சிந்திக்காமல் கடவுள் என்கின்ற முட்டாள்தனமான நம்பிக்கையால் மனிதன் வளர்ச்சியடையாமல் கேட்டிற்கு ஆளாகின்றான்.

மனிதனை மாற்றவேண்டும்; மனிதனைச் சிந்திக்கச் செய்யவேண்டும் பகுத்தறிவுடைய வனாக்கவேண்டும். உலகில் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடையவர்கள் பலர் இருக்கின்றனர். என்றாலும், இதில் எவரும் கடவுள் சக்தியை உண்மையில் நம்புவது கிடையாது. நம்பி அதன்படி நடந்து கொள்வதும் கிடையாது. எவ்வளவு தீவிரமான கடவுள் நம்பிக்கைக்காரனாக இருந்தாலும் தனக்குச் சிறு நோய் ஏற்பட்டால் டாக்டரிடம் சென்றுதான் மருத்துவம் செய்து கொள்கின்றானே தவிர, கடவுள் அருளால்தான் இந்த நோய் நமக்கு வந்தது என்று கருதி சும்மா இருப்பதில்லையே! கடவுள் சர்வ வல்லமை உள்ளவர் என்கின்றபோது அவர் தனது நோயினைத் தீர்ப்பார் என்று கருதி எந்தக் கடவுள் நம்பிக்கைக்காரன் வைத்தியம் செய்து கொள்ளாமல் இருக்கிறான் என்று கேட்கின்றேன்.

இன்று நாட்டிலிருக்கிற கேடெல்லாம் மதத்திற்காக கடவுளுக்காகச் செய்யப்பட்டவைகளேயாகும். சைவன் எத்தனை பேரைக் கொன்றிருக்கின்றான்? முஸ்லிம், கிறிஸ்தவன் எத்தனை பேரைக் கொன்றிருக்கின்றார்கள்? மதத்தையும், கடவுளையும் பலாத்காரத்தால், கொலையால்தான் மக்களிடையே பரப்பி இருக்கின்றனரே தவிர அன்பாலல்ல. கடவுள் நம்பிக்கையற்றவர்களையெல்லாம் கொடுமைகள் செய்து அழித்து ஒழித்திருக்கின்றனர். நாம் இன்னமும் இந்த அளவிற்கு வரவில்லை.

பகுத்தறிவு என்பது அறிவைக்கொண்டு சிந்திப்பது. அனுபவத்திற்கு ஏற்றதைப் பஞ்சேந்திரியங்களால் உணர்ந்து கொள்ளக்கூடியதை ஏற்றுக்கொள்வதாகும். அதற்கு மாறானது எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளாததாகும். அதனைப் பரப்புவதே இக்கழகத்தின் கொள்கையாகும்.

------------------15.12.1970 அன்று தருமபுரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - "விடுதலை", 30.1.1971

27.3.11

தீண்டாமையும் இஸ்லாமும்




இந்து மதத்தில் தீண்டாமையானது பலமான இடம் பெற்றிருக்கிறது என்பதை எந்த இந்துவும் இதுவரை மறுக்கவே இல்லை. அப்படி மறுப்பவர்கள் தாங்கள் யோக்கியமான இந்துவா, இந்து சாஸ்திரங்களை புராணங்களை வேத சாஸ்திரங்கள் எனபவைகளை கடவுள் வாக்குகள். கடவுள் நடவடிக்கைகள் என்பவைகளை அப்படியே ஒப்புக்கொள்ளுபவர்களா அல்லது தங்களுக்கு இஷ்டமானபடி சமயத்துக்கு மக்களை ஏய்ப்பதற்கு ஆக பேசுபவர்களா? என்பதை முதலில் நாணயமாய் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

ஜாதி பேதங்களையும், தீண்டாமையையும் ஒழிக்க இந்து மதம் இடம் கொடுக்குமானால் இந்து மதத்துக்கும் இஸ்லாம் மதத்துக்கும் வேறு என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நாம் பந்தயம் கட்டி கேட்கின்றோம். மதத்தின் பேரால் வயிறு வளர்த்து மரியாதை சம்பாதித்துத் திரியும் சோம்பேறிகள், எல்லா மதங்களிலும் இருக்கலாம். அதனால் மத தத்துவ ஆதாரங்களின்படி தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும், பேதமும் இஸ்லாம் மதத்தில் இல்லை என்பதையும் இந்து மதத்தில் இருப்பதோடு அல்லாமல் அமுலிலும் மிக்க கொடுமையான தத்துவத்துடன் இருந்து வருகிறது என்பதையும் நாம் எங்கும் நிரூபிக்கமுடியும்.

இந்த நிலைமையில் தீண்டாதார் என்று இழிவாய் கருதப்படும் மக்கள் ஜாதிபேதத்தையும் தீண்டாமையையும் முக்கியத்துவமாய்க் கொண்ட இந்து மதத்தைவிட்டு அதில்லாத மதத்துக்குப் போவதால் என்ன கெடுதியென்று கேட்கின்றோம்.

முஸ்லீம் மதத்துக்கு போனால் உயர்ந்த முஸ்லீம் பெண் கொடுப்பானா? என்று ஒரு தலைவர் கேட்கிறார். ஆனால் இந்து மதத்தில் இருந்தால் மாத்திரம் இவர் தன் பெண்ணைக் கொடுக்கக்கூடுமா என்று நாம் கேட்டால் அது அதிகப் பிரசங்கித்தனமாய்விடும் என்று அஞ்சுகிறோம்.

பெண்கொடுப்பது வாங்குவது கர்னாடகக் காலம் ஆகப்போகிறது. புதிய உலகில் அவனவனுக்குப் பிடித்தது தானாகவே ஜோடி சேரப்போகிறது. அப்படியே சில இடங்களில் சேர்ந்தும் வருகிறது.

ஆனால் ஒரு தீண்டாதவன் முஸ்லீமானாலும் ஒரு கூட்ட தீண்டாதவர்கள் முஸ்லீம்களானாலும் அவர்களைப் பொறுத்தவரை தீண்டாமை அந்த நிமிடமே ஒழிந்துவிடுகிறது மாத்திரம் நேரில் பிரத்தியக்ஷத்தில் பார்த்து வருகிறோம்.

இஸ்லாம் மதத்தில் பெண்கள் மூடிபோட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அது மத சம்பிரதாயமல்ல. ஏனெனில் இந்து சமூகத்திலும் சிறிது பணமோ வலிமையோ சந்தேகமோ இருந்தால், பெண்கள் மூடித்தான் வைக்கப்படுகிறார்கள். இது பெண் அடிமையைப் பொறுத்ததாகும். தீண்டாமை, அதாவது ஆண் அடிமை தீர்ந்த உடன் பெண் அடிமை தீரப்போகிறது. அதற்காகப் போர் நடக்கப் போகிறது. அந்தக் காலம் வெகுதூரத்தில்இல்லை. ஆதலால் அதற்கும் இதற்கும் சம்மந்தம் வைப்பது தகுந்த நியாயம் சொல்ல முடியாத பயங்காளித்தனமே ஆகும்.

ஆதலால் இதுவரை தீண்டாமை விலக்குக்காக சமூக சீர்திருத்தக்காரர் களும், அரசியல் கிளர்ச்சிக்காரரும் செய்த சகலவித முயற்சிகளிலும் கிளர்ச்சிகளிலும் தோல்வியே அடைந்துவிட்டார்கள்.

அம்பேத்கார் உபதேசமே இப்போது தீண்டாமை ஒழிவதற்கு உண்மையான சாதனமாய் இருக்கிறது. சுமார் 6,7 கோடி பேர்கள் ஏற்கனவே அனுபவித்துப் பார்த்துவிட்டார்கள்.

தீண்டாதவர்கள் இஸ்லாமாகி முஸ்லீமாகி மனிதர்களாவதுதான் யோக்கியமான மார்க்கம் என்று கூறுகிறோம்.

இதை ஆட்சேபிப்பவர்கள் தங்களால் இதுவரை இது விஷயத்தில் செய்யப்பட்ட காரியம் இன்னது, அதனால் ஏற்பட்ட பயன் இன்னது, அல்லது காந்தியார் ஈறான மற்ற சீர்திருத்தக்காரர்களால் ஏற்பட்ட காரியம் இன்னது என்று அனுபவரீதியாய் எடுத்துக்காட்டி ஆட்சேபிக்கத் தாழ்மையாய்க் கேட்டுக்கொள்ளுகிறோம்.

-------------------தந்தைபெரியார் - ”குடி அரசு” துணைத் தலையங்கம் 09.08.1936

முஸ்லீம் சுயமரியாதை வாலிபர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களாக!- பெரியார்


இந்தியாவில் வகுப்புத் தொல்லை ஒழிய வேண்டும்
உண்மைச் சுதந்திரத்துக்கு மார்க்கம் முஸ்லீம் சமூகம் 16 கோடி ஆவதே

இன்று இந்தியாவில் வகுப்புத் தொல்லையானது அளவிட்டுக் கூறும்படியான நிலையில் இல்லை. இவற்றுள் இந்து முஸ்லீம் வகுப்புத் தொல்லையானது எல்லாவற்றையும்விட தலை சிறந்து விளங்குவதாகும், இது இந்தியா முழுமையையும் பொறுத்ததாக இருக்கிறது.

அடுத்தாற்போல் தீண்டப்படாதவர்கள் மேல்ஜாதிக்காரர்கள் என்கின்ற தொல்லையாகும். இதுவும் ஏறக்குறைய இந்தியா பூராவையும் பொறுத்ததானாலும் தீண்டப்படாத மக்கள் கல்வியிலும், செல்வத்திலும் சுயமரியாதை உணர்ச்சியிலும் மிகவும் பிற்பட்டவர்களாய் இருப்பதாலும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததாலும் தனித்தனியே மக்கள் சுயநலம் கோருவதாலும் அத்தொல்லை சம்பந்தமான கிளர்ச்சிக்கு எவ்வித ஜீவ உணர்ச்சியும் இல்லாமல் போனதோடு அதை பலர் உபயோகித்துப் பயன் பெறும்படியாக இருந்து வருகிறது.

அடுத்தாப்போல் சொல்ல வேண்டியது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் வகுப்புத்தொல்லை என்று சொல்லலாம். இது தென்னிந்தியாவில் மாத்திரமே விசேஷ கிளர்ச்சியில் இருந்தாலும் பார்ப்பனரல்லாதார் மத விஷயத்தில் சுயமரியாதை அற்று பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருப்பதாலும் பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள மதப்படிப்பினையானது தங்கள் சமூகத்தையும் சகோதரர்களையும் காட்டிக்கொடுத்தாவது முத்தி பெறலாம் என்பதாக கற்பிக்கப்பட்டிருப்பதாலும் அதையே பல வைதீக மக்களும் கீழ்ப்படியிலுள்ள மக்களும் பின்பற்றுவதில் சிறிதும் மான அவமானத்தை கவனிப்பதற்கு இல்லாமல் போய்விட்டதாலும் அக்கிளர்ச்சிக்கும் தகுந்த பலனில்லாமல் போய்விட்டது. என்றாலும் அக்கிளர்ச்சித் தொல்லையில் உண்மையான பொது நன்மைகள் பெரிதும் பாதிக்காமல் இருப்பதில்லை.

அடுத்தாப்போல் பல தொல்லைகள் வடக்கிலும் கிழக்கிலும் நடந்து வருகின்றது என்றாலும் அவை மற்றவைகளைக் கவனிக்கும்போது மிகச் சிறியவை என்றே சொல்லலாம்.

எப்படி இருந்தாலும் இந்தியாவானது உலகத்தின் கண்முன் ஒரு காட்டு மிராண்டி தேசமாகவும், இந்திய மக்கள் ஒரு இழிகுல மக்களாகவும் காணப்படுவதற்கு இந்த வகுப்புப் பிரிவுகளும், வகுப்புத் தொல்லைகளும் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதுமாத்திரமல்லாமல் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் என்பவர்களிலேயே 100க்கு 90 பேர்களாய் உள்ளவர்கள் கல்வியிலும் சுயமரியாதையிலும் கீழ் நிலையில் இருப்பதற்கும் பொருளாதாரத்தில் மிக மிக கேவல நிலையில் இருப்பதற்கும் இந்த பிரிவினைகளும் அதனால் ஏற்பட்ட தொல்லைகளும்தான் காரணம் என்பதையும் எவரும் மறுக்கமுடியாது.

ஆனால் அரசியல் கிளர்ச்சிக்காரர்கள் இந்த வகுப்புத்தொல்லைகளை மறைத்தும் அதை அலக்ஷியப்படுத்திக் கூறியும் விட்டு அதனால் ஏற்பட்ட கெடுதிகளுக்கெல்லாம் அரசாங்கத்தார் மீது பழிபோட்டுப் பேசலாம்.

அரசாங்கத்தைப்பற்றி பேசுவதானால் இன்றைய அரசாங்கம் இதற்கு முன் இருந்த எந்த அரசாங்கத்தையும் விட மோசமானதாய் இருந்ததாக சரித்திரங்கள் காணப்படவில்லை. சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு, மக்களைச் சமமாய்க் காணல் என்கின்ற துறைகளில் இதற்கு முன் இருந்த ஆட்சிகளில் இது ஒரு துறையிலும் குறைந்ததாகவும் காணப்படவில்லை.

இந்த உண்மைகள் பழய சரித்திரங்களில் காணப்படுவது மாத்திர மல்லாமல் 1920ம் வருஷம்வரை இந்திய அரசியல்வாதிகளும் தேசியவாதிகளும் இன்றைய அரசாங்கத்தைப் புகழ்ந்து பாராட்டி "தெய்வீக" ஆட்சியாகவும் தர்மராஜ்ஜிய ஆட்சியாகவும் வர்ணித்து எழுதிய சாசனங்களும் பேசிய பேச்சுக்களும் இன்றும் கல் எழுத்துப்போல் இருந்து வருகின்றன.

இவைகளையெல்லாம் பற்றி இரண்டுவித அபிப்பிராயம் இருக்கலாமானாலும், தர்க்கத்திற்கு இடமிருக்கிறது என்றாலும் உலகமே விழிப்படைந்த இந்த சுயமரியாதை வேகமுள்ள இக்காலத்தில் மற்ற நாடுகள் எல்லாம் பொருளாதாரத்திலும் விஞ்ஞானத்திலும் சுதந்திரத்திலும் முற்போக்கடைந்து கொண்டிருக்கும்போது இந்தியா மாத்திரம் ஏன் இன்னும் சராசரி கல்வியில் 100க்கு 92 பேர்கள் தற்குறிகளாகவும், பொருளாதாரத்தில் சராசரி ஒரு மனிதனுக்குரிய தின வரும்படி 2 அணாவை விட குறைவாகவும் இருக்கும் படியான நிலை, குறிப்பு கண்டுபிடிக்க முடியாத காலத்திலிருந்து இன்றுவரை ஏன் நிலைத்துவருகிறது? இப்படிப்பட்ட ஒரு ஆட்சி ஏன் திருத்தமடையாமல் இருக்கிறது? என்பதற்கு இந்திய அரசியல்வாதிகளும், தேசியவாதிகளும் என்ன பதில் சொல்லக்கூடும்?

இந்திய ஜனத்தொகை லக்ஷம் இரண்டு லக்ஷமல்ல, ஒரு கோடி இரண்டு கோடி மாத்திரம் அல்ல. ஜன கணிதப்படி முப்பத்திஐந்து கோடியாகும். ஆளும் சமூகத்தை பிரித்து பார்ப்போமானால் மிக மிக சொல்பமேயாகும்.

ஆளுகின்றவர்கள் "தெய்வ பல" மில்லாமலோ, மந்திர தந்திர சக்தியினாலோ ஆளுகிறார்கள் என்று யாரும் சொல்லிவிட முடியாது. எல்லோருக்கும் தெரிந்த பலத்தைக்கொண்டும் எல்லோரும் அறிந்து கொள்ளக்கூடிய மார்க்கங்களை கொண்டும் தான் ஆளுகிறார்கள். ஆளும் ஜாதியாரைப் பிரித்துப்பார்த்தால் அவர்கள் இந்தியாவில் சில லக்ஷ கணக்கில் தான் இருக்கும். அப்படி இருக்க அவர்களுடைய ஆட்சி ஒழுங்காயில்லையானால் இந்த முப்பத்தி ஐந்து கோடி மக்களும் ஏன் அவர்களைத் திருத்தி நல்ல ஆட்சியாக அரசு புரியும்படி செய்து இருக்கக்கூடாது? ஜனங்களுக்கு புத்தி இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அல்லது இந்திய மக்கள் பயங்காளிகள் என்று சொல்லிவிட முடியுமா? அல்லது ஆட்சிபுரிகின்றவர்களாவது மனிததன்மை அற்ற மிருக சுபாவ அநாகரீக ஜாதியார் என்று சொல்லிவிட முடியுமா? அப்படியிருந்தால் உலகில் தலை சிறந்த மக்களாகவும் உலகத்துக்கு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் போதிக்கும் மக்களாகவும் அவர்கள் இன்றுஇருக்க முடியுமா என்பவைகளையெல்லாம் யோசித்துப் பார்த்தால் நமக்குள் ஏதோ ஒரு தவறுதல் இருப்பதாகத்தான் உணரமுடியும்.

அது எது என்று பார்த்தால் இந்த வகுப்புத்தொல்லைகள் என்பவைதான்.

இந்தியா இன்று உள்ள நிலையில் எந்தக் காரணத்தைமுன்னிட்டும் வகுப்புத்தொல்லைகளை ஒழித்துக் கொள்ளக் கூடியதாய் இல்லை. ஏதாவது ஒரு வகுப்பு ஆதிக்கம் பெற்று மற்ற வகுப்புகளை அடக்கி ஆளும் நிலைமை பெற்றால் தான் வகுப்புத் தொல்லைகள் நீங்க முடியுமே ஒழிய வேறு வழியில் ஒருநாளும் ஒழியக்கூடியதாய் இல்லை.

நம் தேசிய வாதிகளும் அரசியல் வாதிகளும் ஜெயிலிலும் தங்கள் வகுப்பு உரிமை இருந்தாகவேண்டும் என்று தான் பாடுபடுகிறார்களே ஒழிய நாம் எல்லோரும் ஒரே வகுப்பு என்று வேஷத்தில் கூட இருக்க சம்மதிப்பதில்லை.

இதற்கு மார்க்கம்

இப்படிப்பட்ட இந்த இந்திய நாடு இன்று வகுப்புத் தொல்லை ஒழிந்து ஒரு குறிப்பிட்ட லட்சியத்துக்கு எல்லா மக்களுக்கும் ஒருவரை ஒருவர் நம்பி ஒற்றுமையுடன் பாடுபடவேண்டுமானால் எல்லோரும் ஒரு வகுப்பு ஆவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு வழி கிடையாது என்பதுதான் நமது முடிவு.

அப்படிப் பார்ப்போமேயானால் அதிகமான ஜனத்தொகை கொண்ட வகுப்பு எதோ அதில் மற்ற வகுப்புக்காரர்கள் கலந்துகொள்வதுதான் புத்திசாலித்தனமாகும்.

உதாரணமாக நமது காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) இந்தியா பூராவும் ஒரு பாஷை ஆவதற்கு இந்தி பாஷை தான் தகுந்தது என்று சொல்லி அதையே இந்தியர்கள் எல்லோரும் கற்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இந்தியாவின் மெஜாரட்டி ஜனங்கள் இந்தி பேசுகிறார்களா என்பது ஒரு புறம் விவகாரத்துக்கு இடமாய் இருந்தாலும் இருக்கின்ற பாஷைகளில் அதிகமான ஜனங்கள் பேசும் பாஷை இந்தி என்று சொல்லி அதைக் கற்க அரசாங்கத்தின் மூலமும் முயற்சி செய்கிறார்கள் அல்லவா?

அதுபோல் இன்று இந்தியாவில் உள்ள வகுப்புகளில் அதிகமான ஜனங்களைக் கொண்ட எந்த வகுப்பார் ஒற்றுமையோடு ஒரேவிதமான வகுப்புணர்ச்சியோடு இருக்கிறார்களோ அந்த வகுப்பைக் கைப்பற்றி விடுவதுதான் இந்தியா ஒரு வகுப்பு என்று சொல்லுவதற்கு தகுதி உடையதாகும்.

அப்படி பார்த்தால் இன்று இந்தியாவில் முஸ்லீம் வகுப்புதான் ஒற்றுமையுடன் தங்கள் மக்களுடன் பிறவிக் காரணங்களை லக்ஷியம் செய்யாமல் உண்ணல், பொருந்துதல், சமுதாய வாழ்வில் சமமாக பாவித்தல் முதலிய காரியங்களில் எல்லா வகுப்புகளையும் விட முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களது எண்ணிக்கை இன்று இந்தியாவில் மாத்திரம் 9 கோடிக்கு மேல்பட்ட ஜனசங்கையாகும்.

அவ்வளவு ஜனசங்கை உள்ளவர்கள் இந்தியாவில் வேறு எந்த வகுப்பிலும் இல்லை.

இந்துக்கள் என்பவர்கள் சுமார் 24 கோடி இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடுமானால் இவர்களில் சீக்கியர், பாரசீகர், ஜெயினர், பௌத்தர், கிருஸ்தவர் முதலிய இந்துக்கள் அல்லாத வகுப்புகளைப் பிரித்துவிட்டால் 20 கோடிக்குத்தான் வரும். அதிலிருந்தும் தொடுவதற்கும் கிட்ட நெருங்கு வதற்கும் "தகுதி இல்லாத" 7 கோடி தீண்டப்படாத மக்களைப் பிரித்து விட்டால் 13 கோடியே யாகும். இதிலிருந்தும் ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்ள முடியாத, ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிட முடியாத, சம்மந்தம் செய்ய முடியாத, பார்ப்பனர், கோமுட்டிகள், ஆசாரிகள், செட்டிகள், சைவர்கள் போன்ற பல உள் வகுப்புக்காரர்களையும் பிரித்து விடுவோமேயானால் இன்னும் எவ்வளவு சிறிய தொகைக் கொண்ட வகுப்பாகும் என்று பார்த்தால், சமத்துவமாய் ஒற்றுமையாய் புழங்கிக்கொள்ளும் மக்களுள் முஸ்லீம்களே அதிக எண்ணிக்கை கொண்டவர்கள் என்பதில் யாரும் ஆக்ஷேபிக்க முடியாது. அப்படி யாராவது ஆக்ஷேபப்படுவதாயிருந்தாலும், ஒற்றுமையிலும் சமத்துவ பாவத்திலும் பலம் பொருந்திய வகுப்பார் முஸ்லீம்கள் தான் என்பதை எவரும் சுலபத்தில் ஆக்ஷேபிக்க முடியாது.

அவர்களோடு அதாவது இந்த முஸ்லீம்களோடு டாக்டர் அம்பத்கார் அவர்கள் யோசனைப்படி 7 கோடி தீண்டப்படாத மக்களும் சேர்ந்து முஸ்லீம்கள் எண்ணிக்கையை 9+7 = 16 கோடியாக ஆக்கிக் கொள்வார்களேயானால் பிறகு அவர்களை அவர்களது இஷ்டத்திற்கு விரோதமாய் அடக்கி ஆளும் மக்கள் உலகத்தில் இல்லை என்றும், இருக்கவும் முடியாது என்றும் வலியுறுத்திக் கூறலாம்.

இந்தியாவுக்கு உண்மையாகவே ஒரு சுதந்திர ஆட்சி வேண்டுமானால், ஐரோப்பியா ஆட்சியானது இன்று இந்தியர்களுடைய இஷ்டத்துக்கு விரோதமாக ஆளப்பட்டு வருகின்றது என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுவது அவர்கள் மனப்பூர்வமாய் சொல்லப்படுவதனால் இவைகளுக்கு பரிகாரம் முஸ்லீம் சமூகத்தை 16 கோடியாக ஆக்கிவிடுவதேயாகும்.

அப்படிக்கு இல்லாமல் இந்துக்கள் ஆட்சி வேண்டும், கிறிஸ்தவர்கள் ஆட்சி வேண்டும், முஸ்லீம்கள் ஆட்சி வேண்டும், பார்ப்பனர்கள் ஆட்சி வேண்டும், பார்ப்பனரல்லாதார் ஆட்சி வேண்டும், தீண்டப்படாதார் ஆட்சி வேண்டும் என்பன போன்ற முயற்சிகளும் சூழ்ச்சிகளும் ஒவ்வொரு வகுப்பாரும் செய்வது என்பது, பொதுக் கிணற்றில் மலம் விழுந்ததற்கு ஒப்பான பலனைத்தான் கொடுக்குமே அல்லாமல் வேறு எவ்வித பயனையும் கொடுக்க முடியாது.

மற்றும் இன்று இந்தியா ஒரு தேசம் என்றோ, ஒரு சமூகம் என்றோ சொல்லிக்கொள்ளுவது ஒரு நாளும் புத்திசாலித்தனமான பேச்சாகவோ, யோக்கியமான பேச்சாகவோ இருக்க முடியாது என்பதும் நமது வெகு நாளைய அபிப்பிராயமாகும்.

ஆதலால் இந்தியாவின் சுயமரியாதையும், விடுதலையும் நெருங்கி இருக்கிறது என்பதோடு இந்தியா ஒரு சமூகம் என்று சொல்லக்கூடிய நிலை எய்துவதற்கும் அறிகுறியேதான் இன்று டாக்டர் அம்பேத்கார் அவர்கள் "தீண்டப்படாதவர்கள் இந்துமதத்தை விட்டு சமுதாய வாழ்வில் சமத்துவம் அளிக்கக்கூடிய வேறுமதத்துக்கு போய்விட வேண்டும்" என்று கண்டு பிடித்த அபிப்பிராயமாகும். முஸ்லீம் சமூகத்தில் உள்ள செல்வவான்கள், சுதந்திரவாதிகள், சுயமரியாதைக்காரர்கள் ஆகியவர்கள் இது சமயம் பல கோடி ரூபாய்களைப் பண்டாக சேர்த்து ஏழை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பண உதவி புரிந்தாவது வேறு பல சவுகரியங்கள் செய்து கொடுத்தாவது முஸ்லீம்களாக ஆக்குவார்களானால் அவர்கள் முஸ்லீம் மதத்தை பெருக்குகிறார்கள் என்பதாக கருதுவதை விட இந்தியாவின் விடுதலைக்கு, சுயமரியாதைக்கு அருகதை உடையவர்களாக்குகிறவர்களாவார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாததாக ஆக்கினவர்களாவார்கள்.

முஸ்லீம் சீர்திருத்தக்காரர்கள் என்பவர்களில் பலரை வயிற்றுப் பசி பிராணனை வாங்குவதால் அவர்களிடம் உள்ள 10ம் பறந்து போகா விட்டாலும் 10ல் 6க்கு குறையாமலாவது பறந்து போய் விடுகின்றன.

அதுபோலவே தேசீய முஸ்லீம் என்பவர்களிலும் பலர் பசி கொடுமையால் 10ல் 8ஐ விற்றுப் பிழைக்கிறார்கள்.

ஆகையால் சீர்திருத்த முஸ்லீம்கள் தேசாபிமான முஸ்லீம் என்பவர்களை விட்டுவிட்டு அவர்களை இவ்விஷயத்தில் லக்ஷியம் செய்யாமல் சுயமரியாதை முஸ்லீம் வாலிபர்கள் ஒன்றுகூடி ஆங்காங்குள்ள செல்வவான்களைப் பிடித்து முதலில் நிதியைத் திரட்டிவிட்டால் நிதியின் தொகை இவ்வளவு என்று வெளிப்படுத்தி விட்டால் பஞ்சாமிர்தத்திற்கு ஈக்கள் வந்து விழுவதுபோல் ஏராளமான மக்கள் முஸ்லீம்களாவதாகச் சொல்லிக் கொள்ள முன் வருவார்கள். ஏனெனில் இன்றைய மத தத்துவமும், மதம் மாறும் தத்துவமும் 100க்கு 75 பாகத்துக்கு மேல் பொருளாதாரத்தையும், அரசியல் ஆதிக்கத்தையுமே பொறுத்திருக்கிறது.
அன்றியும் உண்மையிலேயே ஒரு மனிதன் தனக்கு ஏதாவது ஒரு மதம் வேண்டும் என்று சொல்லுவானேயானால் அவனுக்கும் "இந்து மதத்தை விட, கிறிஸ்தவ மதத்தை விட, முஸ்லீம் மதமே சிறந்தது" என்று இதற்குமுன் பலதடவை நாம் சொல்லி வந்திருக்கிறோம்.

அம்மதமே இன்று உலகில் மற்ற பாகங்களில் எவ்வித வேகமான சீர்திருத்தத்தையும் வரவேற்று வருகின்றதைப் பார்க்கின்றோம்.

துருக்கியையும், ரஷ்யாவையும், ஈஜிப்டையும், தார்த்தார் ரிப்பப்ளிக்கையும் நேரில் பார்த்தவர்களுக்கு பெண்கள் விஷயத்திலோ, தொழுகை விஷயத்திலோ, மற்ற வைதீக விஷயத்திலோ, வேஷம் விஷயத்திலோ, மற்ற சமூகத்தாருடன் கலந்து வாழும் விஷயத்திலோ முஸ்லீம்கள் எவ்வளவு துணிந்து மாறுதலடைந்து இருக்கிறார்கள் என்பது நன்றாய் விளங்கும்.

இந்தியாவில் உள்ள முஸ்லீம் மத சம்பிரதாயங்கள் எல்லாம் முஸ்லீம் மார்க்கத்தின் அரிவரி ஏ,பி,சி,டி யேயாகும். தண்டவாளத்தின் மீது போகும் ரயில்வண்டி போன்றதேயாகும்.

உலக முஸ்லீம்களின் மொத்த ஜனத்தொகை இன்று 682870000 அறுபத்தி எட்டேகால் கோடி ஆகும். இன்று இந்தியாவில் உள்ள முஸ்லீம் மார்க்க சம்பிரதாயம் அரிவரி என்று மேலே சொன்னோம். ஆனாலும் அது பெரிதும் இந்துக்களில் தொல்லைகளை சமாளிக்கவோ இந்துக்களோடு தொல்லை கொடுக்கவோ நடத்தப்பட்டு வருவதாகும். இதை சாதாரண முஸ்லீம்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால் ராஜதந்திர முஸ்லீம்கள் இதை ஒப்புக்கொள்ளுவார்கள். உதாரணமாக சாதாரண முஸ்லீம்கள் காந்தியாரை மகாத்மா என்று கூட சொல்லமாட்டார்கள்; ஏனென்றால் மகமது நபி ஒருவரைத் தவிர மற்றவர்களை மகாத்மா என்று அழைப்பது முஸ்லீம் மார்க்கத்துக்கு ஏற்றதல்ல என்கிறார்கள். என்றாலும் பல காரணங்களால் முஸ்லீம்கள் காந்தியாரையும் அறிந்தும் அறியாமலும் மகாத்மா என்று பிறரையும் சொல்லுவது சகஜமாக இருக்கிறது.

அது போல இன்னும் அனேக விஷயங்கள் மார்க்க விஷயமாக நடைபெற்று வருகின்றது என்றாலும் முஸ்லீம் சமூகம் பலப்படுமானால் அவை இந்துக்களைப்போல் தனித் தனி பிரிவார் சுயநலம் என்று இல்லாமலும் தனிப்பட்ட மனிதன் சுய நலம் என்று இல்லாமலும் அது உயர்ந்த முன்னேற்ற மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளும்.

ஆதலால் வகுப்புத் தொல்லை ஒழியவும், இந்தியா விடுதலையும் சுயமரியாதையும் அடையவும், தீண்டாமை என்பதே இந்தியாவை விட்டு மறையவும், இதைத்தவிர வேறுமார்க்கமில்லை என்பது தான் இவ் வியாசத்தின் கருத்து.

கிருஸ்தவ மார்க்கத்தைப்பற்றியோ என்றால் அவர்களில் ஒரு பெரும் பகுதியாரை நினைத்தால் நமது வருணாச்சிரமப் பார்ப்பனர்கள் 1000 பங்கு மேலானவர்கள் என்று சொல்லலாம்.

பொதுவுடைமை வாதிகள், நாஸ்திகர்கள் ஆகியவர்களில் சிலர் இந்த அபிப்பிராயத்தில் மாறுபடலாம். இப்போது நாம் இந்த அபிப்பிராயம் கூறுவது நாஸ்திகர்களுக்கும் பொதுவுடமை வாதிகளுக்கும் வைதீக முஸ்லீம்களுக்கும் அல்ல.

ஆஸ்திகர்களாய் ஏதாவது ஒரு மதக்காரர்களாய் தீண்டிக்கொள்ளப் படக்கூடியவர்களாய் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும், இந்தியாவை ஒரு வகுப்பாக்கி (நேஷனாக்கி) அதன் மூலம் விடுதலை அடைய வேண்டும் என்று கருதுபவர்களுக்கும் சொல்லும் யோசனையாகும். ஆகவே முஸ்லீம் சுயமரியாதை வாலிபர்கள் இதை சிந்தித்துப் பார்ப்பார்களாக.

--------------------தந்தைபெரியார் - “குடி அரசு” துணைத் தலையங்கம் 12.01.1936

26.3.11

விநாயகன் திருமணம் ஆனதா? அல்லது பிரம்மசாரியா?





முருகன், விநாயகன் இவர்களில் யாருக்குத் திருமணம் செய்வது என்பது குறித்தான போட்டியை சிவன் செய்ததாம். யார் உலகை முதலில் சுற்றி வருகிறதோ அதற்கே திருமணம் என்கிற போட்டியாம். மயிலில் ஏறி உலகைச் சுற்றிய முருகன் வந்து சேர்வதற்குள் கணபதி அம்மாவையும் அப்பாவையும் சுற்றி வந்து வெற்றி பெற்றதாம். இதனால் கோபமடைந்த முருகன் மலை மேல் ஏறிக் கொண்டதாகவும் ஒரு புராணக் கதை உண்டு.

தன் அம்மாவைப் போன்ற பெண்தான் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று கணபதி விரும்பியதாகவும் பொருத்தமானப் பெண் தேடி குளத்தங் கரையில் குந்தியிருப்பதாகவும் ஒரு கதை உண்டு. பெண் கிடைக்க வில்லையாம். திருமணமும் ஆகவில்லையாம்.

ஆனால், நாரத புராணம் வேறு கதை கூறுகிறது. விநாயகன் பிரமனின் முன் தோன்றி பிரமனுக்கு இரண்டு வரங்களைத் தந்ததாம். கிரியா சக்தியையும் ஞானசக்தியையும் தந்ததாம். புராணம் கூறுகிறது:
இரு சக்திகளும் சித்தி, புத்தி என்ற பெயரில் பிரமனது இரண்டு பெண்களாக வளர்ந்தனர். அவர்கள் திருமணப் பருவம் அடைய, அவர்களை அவர்களின் விருப்பப்படி கணநாதனுக்கே திருமணம் செய்து வைக்க பிரமன் உளங்கொண்டார்.

ஒருநாள் நாரதர் தந்தையைக் காண வந்தவர் சித்தி, புத்திகளைக் கண்டு செய்தி அறிந்து அவர்கள் கோரியபடி திருமண ஏற்பாட்டிற்காக கைலாயம் சென்று விநாயகரை வணங்கி சித்தி புத்திகளுடைய கோரிக்கையையும், பிரம்மனின் விருப்பத்தையும் கூறி, அவர்களை மனம் உவந்து ஏற்றுக் கொள்ளுமாறு பிரமன் வேண்டியதாகக் கூறினார். விநாயகரும் தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தி ஒப்புதல் தந்தார்.

நாரதர் சத்தியலோகம் சென்று தந்தையிடமும், சித்தி, புத்தியிடமும் விநாயகர் சம்மத்தைக் கூற, பிரமதேவன் பெரு மகிழ்ச்சியுற்று, கைலாயம் சென்று சிவபெருமான், பார்வதியிடம் தன் புத்திரிகளான சித்தி, புத்திகளைக் கணபதிக்குத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டிட அம்மையும் அப்பனும் அதனை ஏற்றனர்.

விசுவகர்மா திருமண மண்டபம் அமைத்திட, கற்பகத் தருவும், காமதேனுவும் வாரி வழங்கினர். அம்மையப்பருடன் கணநாதர் வந்து சேர்ந்தார். அவர்களை அரியும், அயனும் எதிர்கொண்டு அழைத்துச் சென்று அமரச் செய்தனர். பிரமன், சித்தி, புத்தி இருவரையும் விநாயகருக்குக் கன்யாதானம் செய்து கொடுத்தார். திருமணம் இனிதே நடந்தது. அரி, அயன், அலை மகள், கலைமகள் மற்றும் இந்திராதி தேவர்கள் வாழ்த்திட அது ஒரு கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது.நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

---------------சு. அறிவுக்கரசு அவர்கள் "விடுதலை" 19.05.2007 இல் எழுதிய கட்டுரை