Search This Blog

1.3.11

விதவைத் துயரம் பற்றி பெரியார்

விதவைத் துயரம்

என்னைக் கேட்டால் இந்தக் கொடிய நாட்டில் விதவைகளுக்குத் துன்பத்தை இழைத்தவர் நமது இராஜாராம் மோகன்ராய் அவர்கள் என்பதே எனது அபிப்ராயம்.

ஏனெனில், அவரால்தான் நமது விதவைகள் இருக்கவும், கஷ்டப்படவும் ஏற்பட்டு விட்டது. எப்படி என்றால், மோகன்ராய் அவர்கள் உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நிறுத்தாதிருப்பாரானால் ஒவ்வொரு பெண்டும் புருஷன் இறந்தவுடனே அவனோடு கூடவே அவன் பக்கத்தில் மாங்கல்ய ஸ்திரீயாகவே உயிருடன் கட்டையில் வைத்துச் சுடப்பட்டுக் கற்பு லோகத்தை அடைந்து, மோட்ச லோகத்திலிருப்பாள்!

கற்புலோகமும், மோட்சமும் எவ்வளவு புரட்டாயிருந்தாலும் - ஒன்று மாத்திரம் நிச்சயம். அதாவது, உயிருடன் சுடப்பட்ட பெண்ணுக்கு ஒரு மணி நேரந்தான் கஷ்டம் இருந்திருக்கக் கூடும். ஆனால், அந்தப்படி நடவாமல் காப்பாற்றப்பட்ட விதவைப் பெண்ணுக்கு அவள் ஆயுள்காலம் முழுவதும் அங்குலம் அங்குலமாகச் சித்திரவதை செய்வது போன்ற கஷ்டத்தை விநாடிதோறும் அனுபவித்து வர நேரிடுகின்றதா-இல்லையா என்றுதான் கேட்கிறேன்.

இப்போதும் விதவைகளுக்கு உடனே மணம் செய்யவேண்டும்; மணமில்லாத பெண் இருக்கக்கூடாது என்ற நிர்பந்தம் கொஞ்ச காலத்திற்காவது இருக்க வேண்டும். இல்லையானால் உண்மையான ஜீவகாருண்யத்தை உத்தேசித்துப் பழைய உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தையாவது புதுப்பிக்க வேண்டும் என்பதுதான் எனது அபிப்பிராயம்.

ஏனெனில், விதவைத் தன்மையை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது; நெஞ்சம் கொதிக்கிறது. மனிதனுக்குத் தன் பெண்சாதி சமீபத்தில் இல்லாத காலங்களில் போக இச்சை ஏற்பட்டால் உடனே போக மாதர்களைக் கொண்டு அவ்விச்சையைத் தணிக்க வேண்டியதும்;

மிருகங்களுக்கு ஏற்படும் தினவைத் தீர்த்துக் கொள்ள மைதான வெளியில் சொறிக்கல் நட்டு வைக்க வேண்டியதும் 32 தர்மங்களில் 2 தர்மங்களாகக் கொண்டு - கோயில்களில் தாசிகளை வைத்தும், கிராமங்கள்தோறும் நத்தங்களில் ஆனால், இப்பேர்ப்பட்ட ஜீவகாருண்ய அறிவு - நமது பெண் மக்களிடம் மாத்திரம் ஏன் காட்ட முடியாமல் போய்விட்டது என்பதை நினைக்கும்போது, ஜீவகாருண்யப் புரட்டும் 32 தர்மங்களின் புரட்டும் நன்றாய் விளங்கும்.

-------------------------தந்தைபெரியார் - "குடிஅரசு", 27.10.1929