Search This Blog

4.3.11

அக்ரகாரம் அலறுவது - ஏன்?

தோழமை காட்ட வேண்டிய கட்சிகள் தி.மு.க.வின் தோள்மீது சவாரி செய்வதா?

கருவறைமுதல் கல்லறைவரை - தி.மு.க. ஆட்சியில் பலன் பெற்ற மக்கள் இருக்கிறார்கள் - மறந்து விடாதீர்!

குட்டக் குட்ட குனியவேண்டாம் தி.மு.க.

சுதந்திரமாக முடிவெடுக்கட்டும் தி.மு.க. தலைமை
தீரமிக்க தி.மு.க.வுக்குத் தாய்க் கழகத்தின் வேண்டுகோள்

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தாய்க் கழகத்தின் சார்பில் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மான மிகு சுயமரியாதைக்காரர். இதை எப்போதும் எங்கும் கூறத் தயங்காத பெருந்தகையாவார்!
கலைஞரின் தனித் தன்மைகள்

அய்யாவின் துணிவும், அண்ணாவின் கனிவும், அவரது ஆற்றல்மிகு ஏழை, எளிய மக்களுக்கும் ஒடுக்கப்பட்டோரை உயர்த்தும் ஓயாத சிந்தனையும் செயலாக்கமும் அவரது தனித்தன்மைகள்.

அவரது தலைமையில் அய்ந்தாவது முறை நடை பெறும் ஆட்சி, தமிழ்நாட்டின் சமதர்ம சகாப்தத்தை சமானிய மக்கள் சுவைத்து அன்றாடம் பயன்படும் ஒப்பற்ற ஆட்சியாக கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கருவறைமுதல் கல்லறைவரை....

கருவறை துவங்கி கல்லறை வரை, கலைஞர் ஆட்சியால் நேரிடையாகவோ, மறைமுக மாகவோ (Directly or Indirectly) பயன் பெறாத மக்களே இல்லை என்பதை மார்தட்டி எங்கும் சொல்லும் மாண்புகள் மலிந்த மகத்தான ஆட்சி!

தசரதன் கொடுத்த வரமாகி விடக் கூடாது!


கூட்டணி என்ற ஒன்றைக் காட்டி, தசர தனிடம் கைகேயி வரம் பெற்றதாக இராமா யணக் கதையில் வரும் நிகழ்வைப் போல, தோழமை உணர்வு காட்ட வேண்டிய சில கட்சிகள், தோள் மேல் சவாரி செய்ய, மிரட்டல் பாணி ஆயுதங்கள் கையில் கிடைத்து விட்டதுபோல் கற்பனைக் குதிரைகள்மீது சவாரி செய்வது போன்ற நிபந்தனைகளை ஏற்படுத்தினால், அதற்கு தி.மு.க., இணங்க வேண்டிய, இறங்கி வர வேண்டிய அவசியம் இல்லை.

தி.மு.க. - ஜனநாயக பீனிக்ஸ் பறவை!


தி.மு.க. தேர்தல் கால நெருக்கடிகளைச் சந்திக்கும் கட்சி மட்டும் அல்ல; அரசியல் நெருக்கடி கால நெருப்பாற்றில் நீந்தி வந்த ஓர் ஜனநாயக பீனிக்ஸ் பறவை!

தமிழ் மக்கள் அதன் பக்கம் உள்ளனர். அதன் தன்னிகரற்ற சாதனைகள் அதன் பலம். அக்கட்சி காட்டும் பண்பாடு, மனிதநேயம், கண்ணியம் அதற்கு பலவீனமாகி விடக் கூடாது!

கட்டுப்பாட்டோடு பட்டி தொட்டியெங்கும் படர்ந்துள்ள பலம் வாய்ந்த இயக்கம் இது.

குட்ட குட்டக் குனியக்கூடாது!


எனவே குட்டக் குட்ட குனியும் போக்குக்கு எங்கே இது ஆட்பட்டுவிடுகிறதோ என்ற அச்சம் தமிழ் இனவுணர்வாளர்களுக்கு, தன்மானத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்ற கூடுதல் பாரத்தை இறக்கிவிட்டு, அதன்மூலம் நிரந்தர சுமை தாங்கியாக ஆகாமல், சுயமரியாதையுடன் முடிவு எடுக்க வேண்டும்.

நட்பு பேசிக் கொண்டே கசப்பும், வெறுப்பும் மேலோங்கும் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு களத்தில் இறங்குவது யாருக்கும் நல்லதல்ல - கூட்டணி அரசியலில். நான் உமி கொண்டு வருவேன்; நீ நெல் கொண்டு வா, குத்தியபின் ஊதி ஊதி தின்போம் என்ற போக்கு நியாயமாகுமா?

விட்டுக் கொடுத்துக் கெட்டுப் போன பழைய கதை


1980இல் இப்படி விட்டுக் கொடுத்து கெட்டுப் போன பழைய வரலாறு மீண்டும் திரும்ப வேண்டாம்!

அதற்குமுன் 1971இல் செய்யப்பட்ட கோயபெல்ஸ் பிரச்சாரத்தின் கொடுமையையே சந்தித்து, வெற்றி வாகை சூடிய இயக்கம் தி.மு.க.

தி.மு.க.வின் தீரமிக்க தலைமைக்கு நமது வேண்டுகோள்!


எனவே தி.மு.க. சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும். பல பழிகளை கடந்த காலத்தில் அது சுமந்த கறை நீங்கும். வெற்றிச் சூரியன் விரிகதிர் வெளிச்சத்துடன் கிளம்பும் என்பதே தாய்க் கழகத்தின் கணிப்பு.

உலகத் தமிழர்கள் - உண்மைத் தமிழர் களின் உணர்வும் அதுதான்!

தி.மு.க.வின் தீரமிக்க தலைமைக்கு எமது வேண்டுகோள் இதுவே. தம்பி உடையான் படைக்கஞ்சான்!

--------------கி. வீரமணி தலைவர் திராவிடர் கழகம் 28-2-2011

**************************************************************************

(தினமலர், 2.3.2011 பக்கம் 9) தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டாலும் வெளியிட்டார் (விடுதலை, 28.2.2011), தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளில் இருந்தும் அருமையான எதிரொலியை ஏற்படுத்திவிட்டது.

எங்கள் உணர்வின் அலைகளை உங்கள் அறிக்கை வழியாக வடிகாலுக்கு வழி செய்துவிட்டீர்கள் என்ற கருத்தை அனேகமாக அனைவருமே பிசிறு சிறிதும் இல்லாமல் ஒருமித்த முறையில் பாராட்டுகிறார்கள்.

தொலைப்பேசி வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் தங்கள் உள்ளக் கண்ணாடியைத் திறந்து காட்டுகிறார்கள்.

டில்லியில் அதிர்ச்சி என்ற ஒரு ஏடு தம் சொந்த சரக்கைக் கொட்டுகிறது.
இன்றைய தினமலர் ஏடோ மேற்கண்ட கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.

யார் யாருக்கு என்னென்ன தோன்றுகிறதோ, அவரவர்களும் அவரவர்கள் கண்ணோட்டத்தில் ஆலாபரனை செய்கிறார்கள்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவு. திராவிடர் கழகத் தலைவர் வெளியிடும் ஒரு கருத்து, ஓர் அறிக்கை பல தளங்களிலும் அதிர்வை உண்டாக்கக் கூடியது என்பதுதான் அது.

தமிழர் தலைவர், தந்தை பெரியார் அல்லர் - அப்படிச் சொல்லுவதையும் ஏற்றுக் கொள்பவரும் அல்லர் - அதனைக் கண்டிக்கவும் செய்வார்.

அதே நேரத்தில் தந்தை பெரியார் இடத்தில் இருந்து, அய்யா அவர்களின் கண்ணோட்டத்தில், எந்தவித நிர்பந்தங்களும் தன்னிடம் கிட்டே நெருங்க முடியாது என்ற அளவுக்குத் தனித்த முறையில் கருத்தினைத் துணிவுடன் கூறும் தகைமையாளர் என்பது மட்டும் உலகறிந்த உண்மை

அந்த வகையில் வெளியிடப்பட்டதுதான் அந்தச் சுயம் பிரகாசமான அறிக்கை. தேர்தலில் ஈடுபடாத ஒரு இயக்கத் தின் தலைவர் என்பதால் தயக்கமின்றி, தன் மனதில் பட்டதை அழுத்தமாகக் கூறிட முடிகிறது. மானமிகு - மாண்புமிகு கலைஞர் அவர்களின் கருத்தும் அதுதான் என்று தினமலர் கருதுமேயானால் அதுகூட மகிழ்ச்சிக்கு உரியதுதான்.

மானமிகு சுயமரியாதைக்காரர்கள் ஒன்றாகவே சிந்திக்கக்கூடாதா?
கன்னியாகுமரிப் பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால், காஷ்மீரத்தில் உள்ள பார்ப்பானுக்கு நெறி கட்டுகிறதே, அது எப்படி? அந்த உணர்வு தமிழர்களிடத்தில் வரக்கூடாதா?

திராவிடர் கழகம் எந்தக் கட்சியை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. தன்னிலைத் திரிபு என்பது அதற்கு என்றுமே கிடையாது.

பி.ஜே.பி. எதிர்நிலையில், திராவிடர் கழகம் ஒரு முடிவு எடுத்தபோது மக்கள் தலைவர் மதிப்பிற்குரிய ஜி.கே.மூப்பனார், அவர்கள்கூட தமிழர் தலைவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, எங்கள் ராஜகுருவே! என்று விளித்ததுண்டே! இந்த நிலை என்றைக்குமே உண்டு கழகத்துக்கு.

பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதெல்லாம் கழகத்திற்கு ஒரு பிரச்சினையே அல்ல!

--------------- தி.க. பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் அவர்கள் 2-3-2011 “விடுதலை” யில் எழுதியகட்டுரை

********************************************************************************


ஒரு கருத்தைச் சொன்னார் திராவிடர் கழகத் தலைவர்-குட்டக் குட்ட குனிய வேண்டாம் என்றார்.

தோளில் ஏறி மற்றவர்கள் சவாரி செய்ய அனுமதிக்க வேண்டாம் என்றார்.

அடேயப்பா - இந்த அக்ரகார திருமேனிகளுக்கு அண்டைக் கட்டிவிட்டது.

தினமலர் ஒரு கார்ட்டூன் போடுகிறது.

அதன் அக்காவான தினமணி இன்னொரு கார்ட்டூன் போடுகிறது.

இவற்றிலிருந்தே தமிழர் தலைவர் வெளியிட்ட கருத்து விவேகமும், வீரமும், தமிழர் நலனும் நிறைந்தது என்பது விளங்கிவிட்டதே.

ஆம், திராவிடர் கழகத்தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் - வருவதற்கு முன் தொலைநோக்கோடு எச்சரிக்கும் மணி ஓசைதான். விபத்துகளைத் தடுக்கும் எச்சரிக்கை விளக்குதான்.

எங்களுக்கு இரண்டு சீட்டு ஒதுக்குங்கள் என்று மனுபோடும் இடத்தில் இல்லாதது திராவிடர் கழகம் ஆயிற்றே!

அந்த வகையில் தந்தை பெரியார் எந்தப் பதவியின் உயரத்துக்கும் மேலான பதவியில் அல்லவா எங்களை உட்கார வைத்திருக்கிறார். இந்தக் கம்பீரம் கறுப்புச் சட்டைக்காரர்களைத் தவிர வேறு யாருக்குக் கிடைக்கும்?

எந்த உள்நோக்கத்தில் அக்ரகார ஏடுகள் கார்ட்டூன் போட்டு இருந்தாலும் சரி - அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை.

மானமிகு வீரமணி அவர்கள் எழுப்பிய மணிஓசை எட்ட வேண்டிய இடத்திற்கு எட்டிவிட்டது என்பது மட்டும் உண்மை.

அக்ரகார ஏடுகளுக்கு ஒன்றை சொல்லுகிறோம்.

தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் அந்த அறிக்கை அமெரிக்கா வாழ் தமிழர்கள் முதல் அண்டக்குடியில் வாழும் தமிழர்கள் வரை - தமிழர் தலைவர் அவர்களே, எங்கள் உள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்ச்சிகளை அப்படியே முனை மழுங்காமல் பிரதிபலித்து விட்டீர்களே! நன்றி அய்யா, நன்றி! என்று சொல்கிறார்கள்.

தமிழர்கள் தங்கள் உள்ளக் குமுறலைக் கொட்டும் இடம் பெரியார் திடலாகவும், திராவிடர் கழகமாகவும், அதனை எதிரொலிக்கும் - அதிகாரத்திற்குப் போகாத அதிகாரப்பூர்வக் குரலாக-உலகத் தமிழர் தலைவராக மானமிகு வீரமணி அவர்களாகவும் விளங்குகிறார்கள் என்று வரலாற்றுக்கு இன்னொரு முறை மணி அடித்துத் தெரிவித்தாகி விட்டது.

அக்ரகாரவாசிகளே, ஏடுகளே! அலறுங்கள் - அலறுங்கள் - நன்றாக அலறுங்கள் - தொண்டைத் தண்ணீர் அற்றுப் போகும் வரை அலறுங்கள்! 1971அய் மீண்டும் அரங்கேற்றம் செய்யாமல் விட மாட்டீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும் - நன்றாகவே தெரியும்!

------------ கலி. பூங்குன்றன் பொதுச் செயலாளர் திராவிடர் கழகம் "விடுதலை” 4-3-2011




3 comments:

தமிழ் ஓவியா said...

63 இடங்களை காங்கிரஸ் கேட்பதோடு அல்லாமல்
கேட்கும் இடங்களை கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை வைப்பதா?
இந்த நிபந்தனைக்கு திமுக கட்டுப்பட வேண்டாம்!
தி.மு.க.வுக்கு தாய்க் கழகத்தின் வேண்டுகோள்!!

தஞ்சை, மார்ச் 5- தி.மு.க., தலைவர் கலைஞர் அவர்களின் அறிக்கை நியாயமானது. காங்கிரசின் நிபந் தனைகளுக்கு உட்பட்டுதான் தேர் தலைச் சந்திக்க வேண்டும் என்கிற நிலையில் திமுக இல்லை. காங்கிரசின் நிபந்தனைகளுக்கு பணிந்து போக வேண்டிய அவசியமில்லை என்பதை திமுக தலைவர் கலைஞர் அவர்களையும், திமுக உயர்நிலைக் குழுவினரை யும் கேட்டுக் கொள்கின்றோம். தி.மு.க. பெரு உருவெடுத்து (விஸ்வரூபம்) வெற்றி பெறும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை என்று தாய்க் கழகத்தின் சார்பில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் கனி வான வேண்டுகோள் விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:

அனைவருக்கும் அதிர்ச்சி

இன்று காலை தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களது அறிக்கை - நியாய உணர் வும் சுயமரியாதை உணர்வும் உடைய அனை வரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை போன்றே நமக்கும் அதே எண்ணம் ஓடியது.

காங்கிரசின் பிடிவாதம்

தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம் பெற காங்கிரஸ் கட்சி மிகவும் அதிகமான - நடைமுறைக்கு சாத்தியமற்ற - தொகுதிகளை பிடிவாதமாகக் கேட்பதும், கூட்டணி நெறிமுறை களிலேயே கேள்விப்படாத வகையில், தாங்கள்தான் அத்தொகுதிகளையும்கூட தேர்வு செய்வோம் என்று நிபந்தனை விதிப்பதும் என்ற நிலை காங்கிரஸ் கட்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கட்சியாகவும், தி.மு.க. அவர்கள் தொடுக்கும் நிபந்தனை ஏற்கும் ஒரு கட்சியாகவும் உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.

தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காகவே!

தி.மு.க. தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக மறைமுகமாக அதற்கு போதிய அளவு போட்டியிட வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்கவே இக்கோரிக்கை என்பது சற்று நிதானமாகச் சிந்திக்கும் எவருக்கும் - நடுநிலையாளருக்கும் தெளிவாகவே புரியும்.

தி.மு.க. இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் தி.மு.க. இருக்கவில்லை.
மக்களுடைய பேராதரவினைப் பெற்று பட்டி தொட்டியெல்லாம் கிளைகளுடன் கட்டுப்பாடு மிக்க தொண்டர்களை, தோழர்களைக் கொண்ட - பல்வேறு சோதனைகளைச் சந்தித்து கரையேறி வெற்றி கொண்ட இயக்கமாகும்.

நிபந்தனைகளுக்குப் பணியத் தேவையில்லை

எனவே, தமிழர்களின் இன உணர்வு, சுயமரியாதை காக்கவே தந்தை பெரியார் கொள்கை லட்சியப்படி அறிஞர் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இன்று அந்தக் கொள்கைப் பாரம்பரியத்தை விடாமல் தொடரும் மானமிகு கலைஞர், இனமானப் பேராசிரியர் போன்றவர்களால் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற நிபந்தனைகளுக்குப் பணிந்து போகாமல் பெரும்பான்மை வரும் அளவுக்கு தி.மு.க. செயல் வீரர் - வீராங்கனைகளுக்கு அவ்வாய்ப்பினை அளித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கும் இயக்கம் மீண்டும் பெரு உரு (விஸ்வரூபம்)க் கொள்ள வேண்டும்.

சுதந்திர முடிவெடுங்கள்!

சுதந்திரமாக, முடிவு எடுக்க வேண்டுமென சாதனைச் செம்மல் கலைஞர் அவர்களுக்கும், தி.மு.க.வின் உயர்நிலை, அரசியல் செயற்குழுத் தோழர்களுக்கும் தாய்க் கழகம் சார்பில் கனிவான வேண்டுகோளை முன் வைக்கிறது.

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

தனித்து நின்றாலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும்!

தஞ்சை, மார்ச் 5- தி.மு.க. தனித்து நின்றாலும் வெற்றி பெறுமா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தி.மு.க. தனித்து நின்றாலும் வெற்றி பெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி கூறினார்.

தஞ்சையில் இன்று (5.3.2011) காலை செய்தியாளர்களை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சந்தித்தார். அவர் தி.மு.க.வுக்கு வேண்டு கோள் விடுத்த அறிக்கையைப்பற்றி செய்தியாளர்களிடம் விளக்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களிடம் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:

செய்தியாளர்: தேர்தலில் எந்த அணி வெற்றி பெறும்?

தமிழர் தலைவர்: தி.மு.க. தலைமை யிலான அணி அமோக வெற்றி பெறும்.

செய்தியாளர்: தி.மு.க. தனித்து நின்றா லும் வெற்றி பெறுமா?

தமிழர் தலைவர்: நிச்சயமாக வெற்றி பெறும். மக்களுக்குத் தி.மு.க. அரசு செய்துள்ள சாதனைகளே தி.மு.க.வுக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கும். - இவ்வாறு தமிழர் தலைவர் பேட்டி அளித்தார்.

தமிழ் ஓவியா said...

கலைஞரின் வரலாற்று அரசியல் முடிவை உள்ளூர்முதல் உலகத் தமிழர்வரை பாராட்டுகின்றனர் பதவிகளைவிட கொள்கைகளே முக்கியம்
தி.மு.க.வின் தேர்தல் திட்டம் அமைவதே நல்லது! தமிழர் தலைவர் பாராட்டுத் தெரிவித்து வேண்டுகோள்!

சென்னை, மார்ச் 6- தி.மு.க. தலைவர் கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள்வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற் கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை எடுத்த தி.மு.க. - அதன் தலைவருக்கு நமது பாராட்டும் மகிழ்ச்சியும்.

உலகமே வரவேற்கிறது

தமிழ் மானம், தன்மானம் இவற்றை எல்லாம் காப்பதுதான் தி.மு.க.வின் அடிப்படை லட்சியம் - குறிக்கோள் என்பதை பறைசாற்றிய இந்த முடிவு உலகத் தமிழர்கள்முதல் உள்ளூர்த் தமிழர்கள்வரை அனைவரும் வரவேற்கும் முடிவாக அமைந்துவிட்டது.
பதவிகளைவிட கொள்கைகளே முக்கியம்

இனி, தி.மு.க., கறந்தபால் முலை புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா என்ற சிந்தனைக்குரிய சித்தர்கள் வாக்கினை எண்ணிப் பார்த்து, பதவிகளைவிட, கொள்கைகளும் அவற்றைப் பரப்பிடும் இயக்கமுமே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நடந்தால் அனைவருக்கும் நல்லது.

லட்சிய வீரர்கள் மகிழ்ச்சி....!

கட்சித் தோழர்கள், இனவுணர்வாளர்கள், லட்சிய வீரர்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் வகையில் தி.மு.க. வின் தேர்தல் பணித் திட்டம் அமைய வேண்டும் என்பதே நமது அடக்கமான ஆசையாகும்.

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்