Search This Blog

8.3.21



சகோதரிகளே! சகோதரர்களே!!
இங்கு இன்று நடைபெறப்போகும் திருமணமானது நமது நாட்டில் இப்போது புதியதாய் தோன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளில் ஓர் அம்சமாகிய மூட பழக்க வழக்கங்களை ஒழிப்பதென்னும் திட்டத்தில் சேர்ந்ததாகுமே தவிர இதில் புதிதாய் புகுத்தும் கொள்கை ஒன்றுமே இல்லை. தீண்டாமை ஒழிப்பதென் பதற்கு முக்கியமாய் வேண்டியது எப்படி வெறும் மனம் மாற்றம் என்பதைத்தவிர அதில் வேறு தத்துவமோ, தப்பிதமோ, தியாகமோ இல்லையோ, அதுபோலவே தான் இந்த விதவா விவாகம் என்பதற்கும் எவ்வித தியாகமும் கஷ்டமும் யாரும் படவேண்டியதில்லை. ஒரு பெண் ணையோ, பல பெண்களையோ மனைவியாகக் கட்டி அனுபவித்தவனும் ஒரு பெண்ணையோ, பல பெண் களையோ வைப்பாட்டியாக வைத்தோ தற்காலிக விபசார சாதனமாக அனுபவித்தோ வந்துள்ள, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு புருஷனை ஒரு புதுப் பெண் மணப்பது  இன்று எப்படி வழக்கத்தில் தாராளமாய் இருந்து வருகின்றதோ அதுபோலத்தான் அப்படிப்பட்ட ஒரு பெண்ணையும் ஒரு புருஷன் மணப்பது முறையாக வேண்டும் என்று சொல்லுகின்றோமே தவிர மற்றபடி காரியத்திற்கு ஒவ்வாததும் யுக்திக்கு ஒவ்வாததும் உலகத்தில் பெரும்பான்மையான மக்களின் நடப்புக்கு விரோமான தத்துவங்கள் எதுவும் அதிலில்லை.
நமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களிலெல்லாம் இது மிகவும் முக்கியமான மூடப்பழக்கமாகும். மற்றொருவர் அனுபவித்த பெண்ணை அல்லது அனுபவித்துக் கொண்டிருக்கிற பெண்ணை ஒரு புருஷன் பார்த்தால் அவளை அனுபவிப்பதற்கு திடீர் என்று ஆசைப்படுகிறான். அவற்றில் சிலது அனுபவிக்க கிடைத்துவிட்டால் சிலசமயங்களில் தனது முழு வாழ்க்கையில் அடையாத ஒரு பெரும் பேற்றை அனுபவித்ததாக மகிழ்ச்சியடை வதோடு தனக்குள்ளாகவே ஒரு பெரும் பெருமையையும் உற்சாகத்தையும் அடைகின்றான். அதிலும் தாசிகள், வேசிகள், பிரபல குச்சிக்காரிகள் ஆகியவர்கள் விஷயத்தில் மனிதன் கொள்ளும் ஆசைக்கு அளவே இல்லை. ஆகவே இம்மாதிரி தற்கால அவசியமாக செய்துவரும் காரியங்களில் உள்ள மனப்பான்மையைவிட இந்த மாதிரி விதவா விவாகத்தில் ஒரு மனிதனிடம் அதிகமான மனப்பான் மையோ மனமாற்றமோ நாம் ஒன்றும் எதிர் பார்க்கவில்லை. ஆயிரம் பெண்களை அனுபவித்த புருஷனின் திருமண விஷயத்தில் இல்லாத குற்றம் ஒரு புருஷனை மாத்திரம் அனுபவித்த பெண்ணிடம் எப்படி வந்து விடும் என்று யோசித்துப் பார்த்தால், விதவா விவாகம் என்பது யாருக்கும் அதிசயமாய் தோன்றாது.
பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பதும் பெண்கள் அடிமைப் பிறவி என்பதும் தான் விதவைத் தன்மையின் அஸ்திவாரமாகும். பெண்களுக்குச் சுதந்திரம் ஏற்பட்டு விட்டால் விதவைத் தன்மை தானாகவே பறந்துபோய் விடும். உதாரணமாக மனைவி இழந்த புருஷனைக் குறிப்பிட நமக்கு வார்த்தையே இல்லை. ஏன் இல்லை அவர்களுக்குள்ள சுதந்திரத்தினால் தங்களின் அப்படிப் பட்ட ஒரு நிலையைக் காட்ட ஒரு பெயரை பழக்கத்தில் கொண்டு வருவதற்கில்லாமல் செய்து விட்டார்கள்.
சாதாரணமாக, கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகின்றோமோ அதுபோலவே மனைவியை இழந்த புருஷனை விதவன் என்று கூப்பிட வேண்டும். ஆனால் நமது நாட்டில்தான் அப்படிக் கூப்பிடுவதில்லை. மேல் நாட்டில் விடோ, விடோயர் (கீவீபீஷீஷ், கீவீபீஷீஷ்மீக்ஷீ) என்கின்ற பதங்கள் இருக்கின்றன. இந்த விடோ என்பதும் விதவை என்பதும் ஒரு சொல் மூலத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இதுவும் வடமொழியாகவே இருப்பதால் வடமொழிக்கும், மேல் மொழிக்கும் மற்ற வார்த்தை களுக்குள்ள சம்பந்தம் போலவே இதற்கும் இருக்கின்றது. ஆனால் நமது புராணங்களில் கூட விதவன் என்கின்ற வார்த்தை இல்லாததால் புராணகாலம் முதலே ஆண்கள் செய்த சூழ்ச்சிதான் விதவைத் தன்மைக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே இவ்விதத் திருமணம் பகுத்தறிவுக்கும் நடு நிலைக்கும் ஒத்ததே தவிர இதில் குருட்டு நம்பிக்கையோ, ஏமாற்றமோ, கொடுமையோ ஒன்றுமில்லை.
அன்றியும் இன்றைய மணமகனுக்கு முந்திய மனைவியால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருப்பது போலவே மணமகளுக்கும் முந்திய கணவனால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருக்கின்றது. இதிலும் நியாயத்திற்கும், யுக்திக்கும் ஒவ்வாத குற்றங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆணும் பெண்ணும் சம உரிமை உள்ளவர்கள் என்று உணர்ந்தால் இது சரி என்று தோன்றும். தவிரவும் பெண் ணுக்கு ஆணுக்குள்ளது போன்ற தனிச்சொத்துரிமை இருக்க வேண்டும் என்கின்ற கொள்கையை அனுசரித்து மணமகன் இந்த மணமகள் பேருக்கு சர்வ சுதந்திரமாய் 5000ரூ பெறுமான சொத்தை எழுதி வைத்ததானது மிகவும் பாராட்டத்தக்க காரியமாகும். தவிரவும் இம்மாதிரி பெண்களுக்கு மறுமணம் என்பது எங்கள் பக்கங்களில் அநேக வகுப்புகளுக்குள் இருக்கின்றது.
சாதாரணமாக விதவைமணம் என்பது மாத்திரமல்லாமல் நமது நாட்டில் விவாகரத்து செய்து கொண்டு மறுமணம் முடித்துக் கொள்வது என்கின்ற வழக்கம்கூட சில வகுப்புகளில் இருந்து வருகிறது. எங்கள் பக்கத்தில் வன்னியர்கள் அதாவது படையாச்சி வகுப்பார், தெலுங்கு செட்டியார்கள், அகம்படியர், சணப்பர்கள் என்று சொல்லும் செட்டிமார்கள் சில வகுப்புப் பண்டாரங்கள் என்பவர்கள் சில வகுப்பு ஆண்டிகள் என்பவர்கள், தேவாங்கர்கள், செங்குந்தர்கள், கற்பூரச் செட்டிமார்கள், போயர்கள், கொத் தர்கள், ஒக்கிலியர்கள் முதலிய வகுப்புகளில் சிலவற்றில் இரண்டும் சிலவற்றில் ஒன்று மாத்திரமும் இருந்து வருகின்றன. ஆனால் இப்போது மேற்கண்ட வகுப்பார்களில் கூட பலர் அவ்வழக்கங்கள் கூடாதென்று கருதுகின்றார்கள் என்று தெரிந்து விசனிக்கிறேன். சில இடங்களில் அனுப வத்தில் இல்லாமலும் இருக்கின்றது என்றாலும் எங்கள் வகுப்பு அதாவது பலுஜ நாயுடு என்பது போன்றவைகளில் முன்னால் வழக்கம் இருந்ததோ இல்லையோ என்பதை கவனியாமல் இப்போது செய்யப்பட வேண்டும் என்று எங்கள் மகாநாடுகளில் தீர்மானமாய் இருக்கிறது. எனது தங்கைப் பெண்ணுக்கு விதவை மணம் செய்யப்பட்டி ருக்கின்றது.
ஆகவே இம்மாதிரி மணம் புதியதென்று சொல்லு வதற்கோ, அல்லது இயற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமானதென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. இதை ஆட்சேபிப்பவர்களை நான் மனிதர்கள் என்றே ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர்களுக்குச் சுயமரியாதை இருக்கும் என்றும் நான் கருதமாட்டேன்.
சாதாரணமாக, நமது நாட்டில் விதவைகள் உள்ள வீடுகளில் நடக்கும் காரியங்கள் எனக்கு நன்றாய்த் தெரியும். அநேகச் சிசு கொலைகளும் அநேக மன வருத்தங்களும் இயற்கைக்கு விரோதமான காரியங்களும் ஏதாவது ஒன்றும் நடந்த வண்ணமாகவே இருந்து வருகின்றது. இதனால் பல கொலைகளும் நடக்கின்றன. சில இடங்களில் பெண்கள் வெளியில் ஓட ஓட அழைத்து வந்து பந்தோபஸ்தில் வைக்கப்படுகின்றனர். சில இடங்களில் முறைகள் என்பது தவறியும் நடத்தப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி வைப்பதேயாகும். இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும்படியான எந்தக் கொள்கைகளும், சட்டங் களும் ஒரு நாளும் சரியாக நடைபெறவே நடைபெறாது. அப்படி எங்காவது நடை பெற்றாலும் அது நிலைத்திருக்கவே முடியாது. இந்தக் கொடுமைகள் இப்படி இருக்குமானால் 4 பெண்கள் 5 பெண்கள் கூடி ஒரு ஆணைத் தங்கள் இன்பத்திற்கென்று ஏற்படுத்தி அவனுக்கு நல்ல போஷணையும், அழகும் செய்து அடைத்து வைத்து அவனைத் தங்களது காம இச்சைத் தீர்க்கும் இன்பப் பொருளாய் அனுபவிக்கும் காலமும், வீட்டு அடிமையாய் நடத்தப்படும் காலமும் வந்து விடும் என்று நான் கருது கிறேன். அப்படி வந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆண்களினது கருமத்தின் பயன் என்றுதான் அதைக் கருதுவேன்.
தவிர சுயமரியாதைக் கலியாணம் என்பதில் புதிய முறையோ, புதிய சடங்கோ ஒன்றுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அர்த்தமற்றதும், பொருத்த மற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும் அனாவசிய மான அதிகச் செலவும், அதிகக் காலக் கேடும் இருக்கக் கூடாது என்பதும்தான் சுயமரியாதைக் கலியாணத்தின் முக்கியத் தத்துவமாகும். ஆதலால் உள்ள சடங்குகளையும், பணச்செலவையும், காலச் செலவையும் குறைத்து நடத் துவதே இத்திருமணத்தின் முக்கிய கொள்கை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மற்றும் திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் ஏற்பட்டக் கூட்டு வாழ்க்கையின் ஒப்பந்தம் என்பதும், இத்திருமணம் இந்த மணமக்களின் இந்த உலக மானுஷிக வாழ்க்கைக்கேதான் என்பதும் உணர்ந்து மணமக்கள் மணம் செய்துகொள்ளவேண்டும் என்பது சுயமரியாதைத் திருமணத்தில் மிகவும் முக்கியமானதாகும். அதாவது கலியாணம் மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தென்றும் "ஆத்மார்த்தத்"திற்கு என்றும், அதில் ஏதோ "தெய்வீகம்" இருக்கிற தென்றும் கருதி வாழ்க்கையில் உள்ள சுதந்திரங்களையும், இயற்கை இன்பங்களையும் அடையமுடியாமல் செய்யும் ஜீவனற்ற உணர்ச்சியை ஒழிக்க வேண்டுமென்பதே முக்கியமானதாகும்.
தெய்வீகம் என்கின்ற பதமே சாதாரணமாக நமக்குத் தெரியாது என்பதற்குத்தான் பெரிதும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. அதோடு ஆத்மார்த்தம் என்பதும் புலனறிவற்ற சூனியத்திற்குச் சமமானதற்கே பெரிதும் பயன்படுத்தப்படு கின்றது. ஆகவே மனித வாழ்க்கையின் முக்கியமான தத்துவமான இன்ப உணர்ச்சியின் இயற்கை அனுபவத்தை அடைய முடியாமல் தடைசெய்வதற்கு மாத்திரம் பயன் படும்படியாகத் தெரியாத, அர்த்தமற்ற தெய்வீகத்தையும் ஆத்மார்த்தத்தையும் இப்படிபட்ட விஷயத்தில் கொண்டு வந்து புகுத்தியதானது மனிதனை வெறும் பிணம் ஆக்குவதற்கும் அடிமையாக்குவதற்குமே பயன்படுத்தச் செய்த புரட்டே யொழிய வேறில்லை. தெய்வீகக் கலி யாணத்தில், ஆத்மார்த்த கலியாணத்தில் புருஷனுக்கும் பெண்ணுக்கும் வித்தியாச நிபந்தனைகளும் எஜமான் அடிமைத் தன்மைகளும் எதற்காக ஏற்படுத்த வேண்டும்? தெய்வீகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாச முண்டா? ஆத்மார்த்தத்தில் ஆண் ஆத்மா; பெண் ஆத்மாவென்கின்ற பிரிவுண்டா?
எவ்வளவு பெரிய புரட்டுகளை இந்த முக்கியமான காரியத்தில் கொண்டு வந்து போட்டு, இன்பமும், சுதந்திரமும் பாழக்கப்பட்டுவிட்டது என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகையால் புருஷனுக்காகப் பெண்ணும், பெண்ணுக் காக புருஷனும் இரண்டு பேரும் சேர்ந்து இன்பமடைவதற்கு என்பதைத் தவிரத் திருமணத்தில் வேறு தத்துவமொன்றும் இல்லவே இல்லை என்பது தான் திருமணத்தைப் பற்றிய நமது அபிப்பிராயம். இம்மாதிரி மணமக்கள் இருவரும் ஒரு பொது வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டதற்கு அவர் களுக்குள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்திற்குச் சாட்சி யத்தைத் தவிர நமக்கு இதில் வேறு வேலை இல்லை. ஆகவே நாம் எல்லோரும் சாட்சியத்திற்காகவே அழைக் கப்பட்டிருக்கின்றோம், கூடி இருக்கின்றோமென்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாதிரியான சமுதாய உதவி கூட்டு வாழ்க்கையில் கலந்துள்ள ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் செய்து கொள்ள வேண்டியதேயாகும். இதில் மணமக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் தங்களில் எவருக்கும் எந்த விதத்திலும் வாழ்க்கை நடத்துவதில் பொறுப்போ உரிமையோ ஜாஸ்த்தி கம்மியாய் இருக்கின்றது என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது என்பது தான். அதாவது பெண் தான் புருஷனுக்கு அடிமை யாயிருக்க கடவுளால் பிறப்பிக்கப்பட்ட ஒரு சுய உணர்ச்சியற்ற ஜீவனென்றோ "கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன்", அவன் அடித்தாலும், உதைத்தாலும் அன் னியருக்கு கூட்டிவிட்டு ஜீவித்தாலும் புருஷனே தெய்வம் என்று கருதுகின்ற அடிமை உணர்ச்சிக் கண்டிப்பாய் பெண்ணுக்கிருக்கவே கூடாது. நமது கணவனும் நம்மை போன்ற மனித ஜீவனேயாகும். பெண்ணிடம் அவன் எப்படி நடந்து கொள்ளுகிறானோ அப்படி தான் அவள் தன்னிடமும் நம்மை நடந்து கொள்ள எதிர்பார்க்க முடியும். ஒழுக்கத்திலோ, சுதந்திரத்திலோ உணர்ச்சியிலோ நமக்கும் அவனுக்கும் வித்தியாசம் கிடையாதென்று எண்ண வேண்டியது மாத்திரமல் லாமல் ஒவ்வொருத் துறையிலும் அனுபவத்தில் கொண்டு வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்கள்தான்; பெண்கள் நாயகம் என்று அழைக்கப்படத் தக்கவர்கள் ஆவதோடு பெண்கள் உலகத்திற்கும் பெரிய உபகாரம் செய்த வர்களாவார்கள். முக்கியமாய் இதற்காக வேண்டியேதான் ஆத்மார்த்தம் தெய்வீகம் என்பவை களிலுள்ள புரட்டுகளை வெளியாக்கக் கட்டாயப்படுத்தப்படு கின்றோம். இது போலவே மணமகனும் தனக்குள்ள உணர்ச்சி, அவா, சுதந்திரம் ஆகிய காரியங்கள் எல்லாம் பெண்ணுக்கும் உண்டென்றும் தான் எவ்வளவு காரியம் பெண்ணிடம் எதிர்பார்க்கின்றோமோ அவ்வளவு காரியம் பெண்ணுக்கும் தன்னிடம் எதிர்பார்க்க முடியும் என்றும் கருதி அனுப வத்திலும் அதுபோலவே நடக்கவிட வேண்டும். தனக்கு அடிமைக்காக ஒரு பெண்ணை மணம் செய்து கொண் டோமென்கின்ற உணர்ச்சியை அடியோடு மறந்து விட வேண்டும்.
இந்த நாட்டில் பொதுவாக ஒழுக்கம் சீர்பட வேண்டு மானால், விபசாரம் என்னும் காரியத்தில் உள்ள கெடுதிகள் நீங்க வேண்டுமானால் விதவைத் தன்மையும், ஆண்களுக்கு விபசார தோஷமில்லை என்கின்ற நடப்பையும் ஒழித்தாக வேண்டும். இவை ஒழிந்தால் உண்மையான காதலின்பமும், வாழ்க்கையில் திருப்தியும், சாந்தியும், ஒழுக்கமும் கட்டாயம் ஏற்பட்டுவிடும்.
ஆகவே மேற்கண்ட இரண்டு காரியங்களே பெரிதும் மனிதத் தன்மைக்கும், இயற்கை இன்ப நுகர்ச்சிக்கும் இடையூறாய் இருந்து வருகின்றது. பெண்களைப் பெற் றோர்களும் ஒருவிஷயத்தை முக்கியமாய் கவனிக்க வேண்டும்.
அதாவது பெண்களுக்கும் 16 வயது வரை நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். மனித இயற்கைக்கு விரோதமாக ஆணுக்கு ஒருவிதமும், பெண்ணுக்கு ஒரு விதமுமாக அடக்கத்தையும் அடிமை உணர்ச்சியையும் கற்றுக் கொடுக்கக்கூடாது. பெண்ணின் தாய்மார்கள் பெண்களை அவர்களின் மாமியார்கள் வீட்டுக்கு அடிமைக்காக அனுப்புவதாய்க் கருதி, அதற்குத் தயார் செய்யும் வழக்கத்தைவிட்டுவிட வேண்டும். எந்தப் பெண்களையும் தான் ஆண்களுக்குக் கீழ்பட்ட ஒரு பெண் என்றும், தனக்கு ஆண்களைவிட சில அடிமை குணங்களோ, அடக்கக்  குணங்களோ வேண்டுமென்று கருதும்படி கற்றுக் கொடுக்கக் கூடாது.
அநேகமாய்த் தானே தனக்கு வேண்டிய காதலனைத் தெரிந்தெடுத்துக் கொள்ள பெண்களைப் பழக்கப்படுத்த வேண்டும். இம்மாதிரியாகப் பழக்கினோமானால் பெண்கள் உலகம் தலைசிறந்து சுதந்திரம் பெற்று உலகத்திற்குப் பெருத்த உதவியாக இருக்கும்.
இப்பொழுது பெரும்பான்மையான தெய்வீகத் திருமணங்கள் என்பது வெறும் அடிமைத் திருமணமாகவும் பிறர் இஷ்டத்திற்கே முழுபொறுப்பும் விடப்பட்டதாகவும், நிர்ப்பந்தத்திற்கும், ஒரு கட்டுப்பாட்டிற்கும் கட்டிக் கொண்டு எப்படி இருந்தாலும் சரிப்படுத்திக் கொள்ள வேண்டிய தாகவும் இருக்கின்றது. ஆகையால் அந்த முறைகளும் ஒழிய வேண்டும்.
இன்றையதினம் ஒரு குழந்தையுடனுள்ள ஒரு விதவைப் பெண்ணை மணம் செய்து கொள்ள ஏற்பட்டதால் பலர் விதவையானாலும் குழந்தை இல்லாத விதவை கிடைக்க வில்லையா என்று சொல்ல வந்து விட்டார்கள்.
இதற்கு முன் பக்குவமான "சாந்தி முகூர்த்தமான" விதவையைக் கலியாணம் செய்தபோது பக்குவமாகாத விதவை கிடைக்கவில்லையா என்றார்கள்.
வேறு ஜாதியில் ஒரு "விதவை"யைக் கல்யாணம் செய்து கொண்டபோது நமது ஜாதியிலேயே ஒரு விதவை இல்லையா என்றார்கள். ஆதலால் இவ்விஷயங்களில் நாம் பொது ஜன அபிப்பிராயத்தைக் கண்டு பயப்படக்கூடாது. நல்ல வார்த்தையில் மிதமான வழியில் செய்யப்படும் முயற்சி கைகூடவே கூடாது. ஏனென்றால் நமது மக்கள் பெரிதும் பாமர மக்களாகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அடிமைகளுக்கு லட்சணமே ஒரு சிறு மூட்டையைத் தூக்கச் சொன்னாலும் "முடியாது போ, உன் வேலையை பார்" என்றுதான்  சொல்வார்கள். ஆனால் டவாலியைக் கழற்றி இரண்டு கொடுத்தால் பெரிய மூட்டையாய் இருந் தாலுங் கூட "தூக்குவதற்குள் என்னய்யா அவசரம்" என் பார்கள். ஆகையால் நாட்டைப் புதுப்பிக்க வேண்டுமானால் அமிதமான கொள்கையில் போய்க் கொண்டே இருக்க வேண்டும். அப்போது ஒருபடி நமது பின்னாலேயே மக்கள் வந்து கொண்டிருப்பார்கள் என்று பேசியவுடன் மணமக்கள் தங்கள் ஒப்பந்தம் சொல்லி மாலை மாற்றிய பின் திருமணம் முடிந்தது.
         ----------------தந்தை பெரியார் 'குடிஅரசு' - சொற்பொழிவு -  28.09.1930

கலப்பு மணம் பெருக வேண்டும் - பெரியார்






இத்திருமணத்தில் இதற்கு முன் நடந்த திருமணங்களில் நடந்திராத மாறுதல் விஷயங்கள் ஒன்றும் அதிகமாக நடந்துவிடவில்லையானாலும், இரகசியமாக நடந்தது என்பதும், சர்க்காரில் பதிவு செய்ததும், இக்கூட்டம் கூட்டினதுமல்லாமல் வேறு சடங்கும், அதாவது தாலி கட்டுதல், மாலை மாற்றுதல் முதலியவை கூட இல்லாமல் நடந்தது என்பதுதான். மாப்பிள்ளை தொண்டை மண்டல வேளாள சைவ வகுப்பைச் சேர்ந்தவர். பெண் சாதாரண வேளாள அசைவ வகுப்பைச் சேர்ந்தவர், இருவரும் கல்வியில் இரட்டைப் பட்டம் பெற்றவர்கள். சமவயதினர். இதில் நாம் எடுத்துக் கொள்வது ஜாதி கலப்பு மணம் என்பதுதான் என்றாலும் இது ஒன்றும் அதிசயமல்ல. இதற்குமுன் 20, 30 வருஷங்களுக்கு முன்னாலேயே பல இம்மாதிரி நிகழ்ந்திருக்கின்றன.
ஆதலால், அதுவும் முக்கியம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இம்மாதிரி ஜாதிக் கலப்பு மணம் இன்னும் சர்வசாதாரணமாக, ஆக்கப்படுவதற்கு ஒரு பிரசாரத்திற்காகவே இதை இப்படி விளம்பரப்படுத்துகிறோம்.
உதாரணமாக, சரோஜினி அம்மாள் என்கின்ற பார்ப்பனப் பெண்ணுக்கும் கோவிந்தராஜுலு நாயுடு என்கின்றவருக்கும் 1910க்கு முன்பே திருமணமாகியிருக்கிறது. டாக்டர். சுப்பராயன் என்கின்ற வேளாளக் கவுண்டருக்கும், ராதாபாயம்மாள் என்கின்ற பார்ப்பனப் பெண்ணுக்கும் 25 வருடங்களுக்கு முன்பே திருமணமாகி இருக்கிறது.
தேவதாசி வகுப்பு என்பதைச் சேர்ந்த முத்துலட்சுமி அம்மையார் என்கின்ற பெண்ணுக்கும், ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆகியிருக்கிறது.
முத்துலட்சுமி அம்மையார் தங்கை நல்லமுத்து அம்மை யாருக்கும் டி.ஆர்.வெங்கிட்டராம சாஸ்திரியார் குமாரரான ஒரு பார்ப்பனருக்கும் (ராமமூர்த்தி)  திருமணம் நடந்திருக்கிறது.
ஒரு சாயபுக்கும் எண்டோமென்ட் போர்டு பிரசிடெண்ட் நாயுடு பெண்ணுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
ஒரு அய்யங்கார் பெண்ணுக்கும், ஒரு சாயபுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
ஜட்ஜு குமாரசாமி சாஸ்திரியார் குமாரருக்கும். ஒரு அய்ரோப்பிய மாதுக்கும் திருமணம் நடந்திருக்கிறது. ருக்மணி அம்மாள் என்கின்ற ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கும், அருண்டேல் துரைக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
தோழர்.சி. ராஜகோபாலாச்சாரியார் (பார்ப்பனர்) பெண் ணுக்கும், காந்தியார் (வாணியர்) மகனுக்கும் திருமணம் நடந்திருக்கிறது. (தேவதாஸ்காந்தி - லட்சுமி)
மற்றும், சில ஆதிதிராவிடப் பெண்களுக்கும், நெல்லை சைவ வேளாள வகுப்பு ஆண்களுக்கும், திருமணம் எனது வீட்டிலேயே ஒன்றுக்கு மேற்பட்டு நடந்திருக்கிறது. சென்ற மாதத்திலும் ஒரு தேவதாசி வகுப்பு ராஜம் என்னும் பெண்ணுக்கும் சம்மந்தம் என்னும் ஒரு சைவப் பண்டிதர் மகனுக்கும் திருமணம் நடந்தது.
கலப்பு மணம் செய்து கொண்டால் சொத்து இல்லையா?
ஆகவே, கலப்பு மணமோ உயர்வு தாழ்வு ஜாதி மணமோ இக்காலத்தில் ஒன்றும் அதிசயமல்ல என்பது எனது அபிப் பிராயம். எனக்கு முன் பேசிய பல பெரியார்கள் இப்படிப்பட்ட திருமணங் களுக்கு நானும் சுயமரியாதை இயக்கமும் காரணம் என்பதையும் நான் ஒப்புக் கொள்வதற்கில்லை, நாம் செய்வதெல்லாம் இவற்றை விளம்பரம் செய்து மற்றவர் களையும் இதைப் பின்பற்றும்படி ஆசைப் படுவதையும் தவிர வேறில்லை.
கலப்பு மணம் செய்துகொண்டால் சொத்து இல்லையென்றும், சட்டப்படிச் செல்லாது என்றும் சொல்வதுகூட சரியல்ல. பார்ப்பனப் பெண்ணைக் கல் யாணம் செய்து கொண்டாலோ, அல்லது பார்ப்பன ஆணைக் கல்யாணம் செய்து கொண்டாலோ மாத்திரம்தான் செல்லாதாம். அதைத்தவிர மற்றபடி பார்ப்பனரல்லாதார் இந்துக்கள் தங்களுக்குள் எந்த ஜாதியில் யாரை மணம் செய்து கொண்டாலும் அது செல்லுபடியாகும். ஆதலால் அதைப்பற்றிய சந்தேகம் இனி யாருக்கும் வேண்டாம்.
இந்துலா என்பதில் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி கலந்து போகக் கூடாது என்பதற்காக, ஏன் எனில் தாங்கள் மற்ற ஜாதிகளை விட உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வ தற்காக, தங்களைப் பொறுத்த வரையில் வேறு ஜாதியில் கல்யாணம் செய்து கொண்டால் சொத்து பாத்தியமில்லை என்று செய்து கொண்டார்கள். ஆதலால் நமக்கு அதனால் கெடுதல் ஒன்றும் இல்லை.
பெரியதொரு வெற்றி
நாம் கோருவதெல்லாம் ஒவ்வொருவரும் தாங்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களை இம்மாதிரி, அதாவது சரியான நல்ல ஜோடி சேர்க்கத்தக்க வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். குமாரராஜா அவர் களும் இதற்கெல்லாம் சுயமரியாதை இயக்கமும் நானும்தான் காரணம் என்றார். அவர் கலப்புமணத்தைப் பற்றி மாத்திரம் அல்லாமல் செலவு சுருக்கத்தைப் பற்றியும், நாள் சுருக் கத்தைப் பற்றியும் ஆடம்பர ஒழிப்புப் பற்றியும் சொன்னார். அவைகளுக்காகச் சுயமரியாதை இயக்கம் பாடுபட்டு வருவது உண்மைதான். அதை குமாரராஜா (செட்டிநாட்டரசர்) அவர்கள் ஒப்புக் கொண்டு ஆதரித்தது நமக்கு பெரியதொரு வெற்றியாகும்.
ஏனெனில், அவர் பெரிய செல்வவான். செல்வவான்கள் சிக்கனமாகவும், ஆடம்பரமில்லாமலும் நடத்தினால்தான் அது வழிகாட்டியாகும். ஏழைகள் சிக்கனமாக நடத்துவது அதிசயமாகாது. ஆகவே சிக்கனத்தைப் பற்றி நான் பேசுவதை விட அவர் பேசுவது மிகவும் சிறந்ததாகும்.
வள்ளல் சிவஞான தேசிகர் அவர்கள் நமது முறையை போற்றிப்பேசி என்னையும் புகழ்ந்து கூறி, இதுதான் பழந்தமிழர் முறை என்று கூறினார். அவர் பெரிய கல்விச் செல்வம் படைத்தவர். அவர் கூறியவைகளுக்கு என்னைப்பற்றிக் கூறியதைத் தவிர மற்றவைகளுக்காக நான் நன்றி செலுத்து கிறேன்.
நான் ஒருவன் இல்லாவிட்டால் தமிழர் உலகமே முழுகிப் போயிருக்குமென்றார். அதற்காக நான் பெருமைப்பட வில்லை. அவரது அன்பு அப்படிச் சொல்லச் செய்தது. ஆனால் அவரைப் போலவே என்னைப் பற்றி அதற்கு விரோதமாக அவதூறாகப் பேசுவதையும் கேட்கிறேன். ஆதலால் இரண் டையும் சரிசெய்து விடுகிறேன். அதாவது என் னாலேயே தமிழர் சமுதாயம் மாத்திரமல்லாமல் மனித சமுதாயமே பாழாகி விடுகிறதென்றும், மதங்கள், கடவுள்கள் ஒழிகின்றதெனவும் குறை கூறப்படுகின்றன என்றும், இனி சுயமரியாதை இயக்கத்தை ஒழிப்பது தங்கள் கடமையாகக் கொண்டிருப்பதாயும் பலர் சொல்லுவதையும் நான் காதில் கேட்கிறேன்....
பழந்தமிழர் கொள்கை என்பதைப் பற்றியும், காதல் மணம் என்பதைப் பற்றியும், சுயமரியாதை இயக்கம் பற்றியும் வேண்டுமானால் பேசுகிறேன். ஏனெனில் இவை மூன்றும் இங்கு பேசப்பட்ட விஷயமாகும். மற்றவைகளை வேறு மேடையில் பேசுகின்றேன்.
இம்மாதிரி திருமணங்களில் மற்றும் தமிழர் வாழ்க்கை நடப்புகளில் இனிமேல் பழந்தமிழர் கொள்கை என்பதைப் பற்றி பேசக்கூடாது என்றும், அதைக் கொண்டுவந்து மேற்கோள் காட்டக்கூடாது என்றும் எனது தோழர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
பழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? இதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல இன்று ஆளைக் காணோம். வீணாக அந்தப் பெயரின் பேரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச் சுரண்டவோ, தங்கள் எண் ணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவோ பயன்படுத்தப்படு கிறது. பழந்தமிழன் யாராய் இருந்தால் எனக்கு என்ன? உங்களுக்குத்தான் என்ன காரியமாகும்? அவன் கொள் கையோ, மதமோ, கடவுளோ, நடப்போ, சக்தியோ எதுவாய் இருந்தால் இங்கு இன்று நமக்கு என்ன லாபம்? என்பதுதான் எனது கேள்வி - பழந்தமிழர் நிலையையும் பற்றி பேசுபவர்கள் பகுத்தறிவுவாதிகளானால், பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுக்கும் அறிவாளிகளானால், நடுநிலைமைக் காரர்களானால் அவர்களை ஒன்று கேட்கிறேன். அதாவது காட்டுமிராண்டி வாழ்க்கை கால மனிதனைவிட, கல் ஆயுதகால வாழ்க்கை மனிதன் சிறந்தவனல்லவா? என்பதும், அதுபோலவே 4000, 5000 வருஷ காலத்திற்கு முன் இருந்த மனிதனைவிட இன்று 20ஆம் நூற்றாண்டில் வாழும் மனிதன் சிறிதாவது மேலான அனுபவமும், அனுபவம் பெற சவுகரியமும், ஆராய்ந்து பார்க்கும் வசதியும் உடையவனா அல்லவா என்பதோடு, அந்தக் காலத்தில் வாழ்ந்த வாழ்வைவிட, எண்ணிய எண்ணத்தைவிட வேறான வாழ்வும், வேறான எண்ணங்களும் கொள்ள வேண்டியவனாய் இருக்கின்றானா? இல்லையா? என்பது மேயாகும்.
இன்று வாழும் மனிதனுடைய எந்தக் காரியத்திற்குப் பழந்தமிழனுடைய வாழ்க்கைக் குறிப்பும் நினைவுக்குறிப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது என்று உங்களை வணக்கமாகக் கேட்கிறேன்.
பகுத்தறிவுவாதியின் கடமை
வீணாக பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பதும், அந்நியனை ஏய்க்கவோ, அறி யாமையில் மூழ்கவோதான் பயன்படக் கூடியதாக ஆகி விட்டது.
இனி நம்முடைய எந்த சீர்திருத்தத்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பகுத்தறிவுவாதியின் கடமையாக ஆகிவிட்டது.
பழந்தமிழன் வந்து போதிக்கத் தகுந்த நிலையில் இன்று நமது மனித சமுகம் இல்லை. பழந்தமிழன் கொள்கை எதுவும் இன்று எந்த மனித சமுகத்திற்கும் அவசியமும் இல்லை. மனிதன் காலத்தோடு மாறுதலோடு செல்ல வேண்டியவனே ஒழிய வேறில்லை. வேண்டுமானால் மடையர்களைத் தட்டி எழுப்ப ஆயுதமாக அதைக் கொள்ளலாம். ஆனால் சாது மக்களை ஏமாற்ற அதைப் பயன்படுத்த விடக்கூடா தென்பதோடு  அவ்வளவு மடையர்களும் நம்மில் இல்லை. இன்று நம் பண்டிதர்கள் பலருக்குப் பகுத்தறிவு இல்லாமல் போனதற்குக் காரணமே பழந்தமிழர் வாழ்க்கை, பழங் கொள்கை என்பன போன்ற பழமையேயாகும். பழந்தமிழர் பேச்சுப்பேசி ஆகவேண்டிய காரியம் இனி இல்லை. ஆதலால் பொதுமக்கள் பழந்தமிழர் கொள்கைப் பேச்சு பித்தலாட்டத்திற்கு இடம் கொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கிய கடமையாகும். அன்றியும் பழந்தமிழர் கொள்கை என்பது விவகாரத்திற்கு இடமாய் விட்டது.
காதல் மணம்
இனி காதல் மணம் என்பதைப் பற்றியும் பேசுவோம். பழங்கால காதல் மணம் இன்று மிருகப்பிராய மணம் என்றே சொல்லவேண்டும். காதல் என்பது மிகமிக சாதாரண அற்ப விஷயம். காதலுக்கு அடிமையாவது இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்கு சிறிதும் பொருந்தாது. கண்டதும் காதல் கொண்டு, காதல் பசி தீர்ந்ததும் சலிப்படைந்து, அதன் பயனைப் பிறகு வேதனையுடன் பொறுத்துக் கொண்டிருப்ப தென்றால், அது இன்ப வாழ்க்கையாக இருக்க முடியாது. உண்மையைப் பேச வேண்டுமானால் யாரைப்பார்த்தால் யாருக்குக் காதல் இல்லாமல் இருக்க முடியும்? சமுதாயக் கட்டுப்பாடுகள் பல இருப்பதால் காதல் கொண்டு, காதல் கொண்டு ஏமாற்றமடைவதுமாக வாழ்வு முடிகிறதேயொழிய வேறில்லை. காதலை அவரவர்கள் உள்ளத்திற்கே விட்டு விடுவோம்.
ஆனால், வாழ்க்கைத் துணை விஷயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, பொருத்தம், அனுபவம் ஆகிய பல காரியங்களே முக்கியமானதாகும். பழங்காலத்தில் காதலே போதுமானதாக இருக்கலாம். அப்போதைய அறிவுக்கு அவ்வளவுதான் தேவையாக இருக்கும். இப் போதைய அறிவுக்குத் திருமணம் வாழ்நாள் முழுவதும் பொருந்தும்படியாக இருக்க வேண்டும். மனித வாழ்வையும் பிறவிக் குணங்களையும் மேன்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இச்சையின் பெருக்கம்தான் பெரிதும் காதலின் முழு இடத்தையும் பெற்றுவிடுகிறது. மற்ற பல வாழ்க்கை வேறுபாடுகளுக்கு, அந்த இச்சை பெருக்கம் இருவருக்கும் போதவே போதாது. ஆகையால் அறிவையும், நிகழ்ச்சிப் பயனையும் அலட்சியப்படுத்தும் காதலை மனிதன் அடக்கி வாழ்க்கைத் தன்மையைக் கொண்டு வாழ்க்கைத் துணையைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தாகும். ஆதலாலேயும் பழைய தமிழர் மணமுறைகளுக்கோ ஆரியர் மண முறைகளுக்கோ இங்கு வேலை கிடையாது. அறிவு, அனுபவம், ஆராய்ச்சி ஆகியவற்றின் மீது ஏற்பட்ட மண முறைகளுக்கே இங்கு வேலை உண்டு. அவை பழையதானாலும், புதியதானாலும், தமிழனுடையதானாலும், ஆரி யனுடையதானாலும், அய்ரோப்பியனுடையதானாலும் இருந்து போகட்டும்.
மணமுறை
மணமுறைக்கும் பழமையைத் தேடித் திரிய வேண் டியதில்லை. இன்றுள்ள எந்த மனித னுடைய அறிவும் அநேகமாய் பழமைக்கு இளைத்ததாய் இருக்காது. இருந்தாலும் நிலைமை தானாக சரிப்படுத்திவிடும். கால நிலைக்கும், சமுதாய நிலைக்கும், அறிவு முதிர்ச்சி நிலைக்கும் ஏற்றபடிதான் முறைகள் வகுக்கப்படவேண்டியவைகளே ஒழிய, ஒரு காலத்து முறைகள் எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பது தான் பொருள். அந்தப்படி எந்த மனிதனும் தனது அனுபவத்தையே சொல்லமுடியாது என்று கூறுவேன்.
இதில் பிரத்தியட்ச அனுபவத்திற்கும், அறிவுக்கும் மேற்பட்ட காரியம் எதையும் கலக்கக்கூடாது. கலக்குவ தானால் அதை எழுதி நெருப்பில் போட்டு அது பொசுங்காமல் இருக்கிறதா என்று பார்த்த பிறகே அறிவை அடக்க வேண்டும். இந்த நிலையில் ஏதோ சிலர் தாங்கள் தான் அறிவாளிகள், மற்றவர்கள் அறிவிலிகள் என்று நினைப்பதும் கற்றறி மூடர்கள் குணங்களேயாகும்.
சுயமரியாதை இயக்கம்
இனி அடுத்தாற்போல் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி இங்கு பேசப்பட்டது. அதைப் புகழ்ந்து பேசியதற்கு நான் நன்றி செலுத்துகிறேன், பெருமையும் அடைகிறேன். ஆனால் சுயமரியாதை இயக்கத்தைக் குறை கூறுகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் அறியாமலும் இல்லை; அதை மறைக்கவுமில்லை.
சுயமரியாதை இயக்க விஷயமாய் என்மீது சில குறைகள் கூறலாம். என்னவெனில் நான் அதைச் சரியாய் கவனிக்க வில்லை என்று, அதில் சிறிது உண்மை இருக்கலாம். ஆனாலும் அதற்குச் சமாதானம் இல்லாமலும் இல்லை. நான் எவ்வளவு வேலைகளைப் பார்ப்பது? நான் எவ்வளவு தொல்லைகளை மேலே போட்டுக் கொண்டிருக்கிறேன். எதிரிகளும், பொறாமைக்காரர்களும் எவ்வளவு வளர்ந்து கொண்டு வருகிறார்கள். நமது மக்கள் எவ்வளவு சுலபமாக ஏமாற்றப்படுகிறார்கள். சுயநலக்காரர்கள் தொல்லை எவ்வளவு? என் சொந்த நிலைமை என்ன? எனக்கு இயற்கையில் உள்ள பலவீனங்கள் எவ்வளவு? இவ்வளவு உள்ள ஒரு மனிதன், அதிலும் தான் மேற்கொண்ட வேலை எதற்கும் தானே எஜமானன் என்கின்ற ஆணவமும் கொண்டு, சகல பொறுப்புகளையும் சுமக்கிற பயித்தியக்காரனான நான் எதைப் பார்ப்பது, எதை விடுவது என்பது எனக்கே புரியவில்லை. இந்த நிலையில் சுயமரியாதை இயக்கம் சரியாகக் கவனிக்கப்படவில்லை என்றாலும், ஒரு காரியத்தில் நான் மிகக் கவனிப்போடு இருக்கிறேன். அதாவது சுய மரியாதை இயக்க சம்பந்தமாக எந்தக் கொள் கையையும் நான் விட்டுக் கொடுக்கவில்லை. அதை எந்தவிதமான ராஜிக்கும் உட்படுத்த வில்லை. கூடுமானால் மற்றவர்கள் மீது வலுக் கட்டாயமாகச் சுமத்தாமல் இருந்திருப்பேனே ஒழிய, நான் மாற்றிக் கொள்ளவில்லை என்பதையும், நான் சற்றுக் கவனக்குறைவாய் இருந்து விட்டதால் ஒன்றும் முழுகிப் போகவில்லை என்பதையும், நான் சும்மா இருந்தாலும் அதன் எதிரிகள் முயற்சியில் அது வளர்ச்சியும் விழிப்பும் பெற்று வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
தன் மதிப்பியக்கத்தின் முக்கியத்துவம்
சுயமரியாதை இயக்கத்திற்கு சமயம், சமுதாயம், பொரு ளாதாரம், அரசியல், கல்வி, ஆராய்ச்சி ஆகிய துறைகளில் அறிவைச் செலுத்தி மனிதத் தன்மைக்கு ஏற்ற வாழ்க்கைத் திட்டத்தை நிறுவச் செய்வதே முக்கியத்துவமாகும்.
10, 15 வருஷங்களுக்கு முன்பாகவே பெரியார் எ. முத்தையா முதலியார், குமார ராஜா போன்றவர்கள் ஆதரவைப்பெற்று தொண்டாற்றியிருக்கிறது. முத்தையா முதலியார் அவர்கள் சுயமரியாதை இயக்கக்காரர் என்கின்ற பெயரால் செய்யவில்லையானாலும் தமிழர் சுயமரியா தைக்காக, அவர் அரசியல் ஆதிக்கத்தில் இருக்கும்போது பல காரியங்கள் செய்திருக்கின்றார்கள். அதற்காக தமிழர்கள் வீட்டிற்கு ஒரு குழந்தைக்கு முத்தையா என்று பெயர் வைக்க வேண்டும். இன்று மாத்திரம் நம்மியக்கத்தையும் சீர்திருத் தத்தையும் அவர் புகழ்ந்து பேசிவிடவில்லை. அநேக சுயமரியாதை மகாநாட்டைத் திறந்து வைத்திருக்கிறார். மற்றவர்களைப் போல அவர் பாமர ஜனங்கள் என்ன சொல்லுவார்களோ என்று பயப்படுபவரல்ல. அதுபோலவே வள்ளல் சிவஞான தேசிகர் அவர்களும் 12 வருஷமாக நம்மை ஆதரித்து வருகிறார். இங்கு என்னைப் புகழ்ந்து பேசினாலும், குற்றம் கண்டவிடத்து தைரியமாய் திருத்தி இருக்கிறார்.
சுயமரியாதை இயக்கத்தில் பல தோழர்கள் இருக்கிறார்கள் என்று பேசப்பட்டது. அப்படிப்பட்ட தோழர்கள் சிலராவது நிலைமை மாறாமல், உறுதியோடு தங்கள் நலத்தை விட்டுக் கொடுத்தும் போராடுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களாலேயேதான் எனக்கு உறுதியும் ஊக்கமும் வளருகிறது. அவர்களுக்கு எனது உபதேசமெல் லாம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதேயாகும்.
சேவை
சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுய நலத்தை உத்தேசித்தோ, செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவ தற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவையாகும்.
ரஷ்யாவில் மதம் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்லுவார்கள். ஆனால் அங்கு ஒருவன் மற்றவர்களைக் கடவுளாகக் கருதுகிறான். அவர்களுக்குத் தொண்டாற்று வதை மதமாகக் கருதுகிறான்.
ரஷ்யாவில் சொத்தெல்லாம் பொதுச் சொத்து. உழைப் பெல்லாம் பொதுநல சேவை என்று இருந்தாலும், தொண் டாற்றுவதன் மூலம் வாழ்வுக்குப் பயன் அனுபவிப்பதால் அப்படிப்பட்ட தொண்டை அவன் பொதுத்தொண்டு என்று கருதுவதில்லை.
அந்த நேரம் போக, அதாவது ஊதியத்திற்காக வேலை செய்யும் நேரம் போக இவன் இஷ்டப்படி அனுபவித்துக் கொள்ள, இவனுக்குச் சுதந்திரமாய் இருக்கும் நேரத்தில் எவ்வளவு நேரத்தை எந்தக் காரியத்திற்கு ஊதியமில்லாமல் செலவழிக்கிறானோ, அதற்குத்தான் பொதுநல சேவை என்று பெயர். இப்படியே ரஷ்யாவில் உள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் இம்மாதிரி ஒரு பொது நல சேவை, தொண்டு இருக்கும். அதற்கு ஒரு அடையாளமும் உண்டு. அதுபோல் சுயமரியாதை இயக்கக்காரன் யார் எந்த வேலை செய்து எவ்வளவு ஊதியம் சம்பாதித்து எவ்வளவு செலவு செய்தாலும், பொது நல சேவைக்கு ஒரு காலத்தை ஒதுக்கி வைத்து வேலை செய்யவேண்டியது முக்கியக் காரியமாகும். அதில் மற்றவர்கள் விருப்பு வெறுப்பைப் பார்க்காமல் நற்பயனைக் கருதி அதற்கு ஏற்ற தொண்டாற்ற வேண்டும். மற்றபடி சுயமரியாதை இயக்கத்திற்கு அதுவுண்டா? இது உண்டா? என்பதைப் பற்றி நமக்கு கவலை வேண்டாம். அதற்கு அறிவு உண்டு; அந்த அறிவு மானத்தைக் காப்பாற்றப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சுருக்கமாக முடித்துக் கொள்வோம்.


----------------தந்தை பெரியார் - 'குடிஅரசு' - சொற்பொழிவு - 10.01.1948