Search This Blog

31.8.10

கி.வீரமணி அவர்கள் பார்வையில் கலைவாணர்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது கிராமிய மக்கள் மத்தியிலும் வெகுகாலமாகப் புழங்கும் ஓர் அற்புதமான அனுபவப் பழமொழியாகும்.

மனிதர்களிடம் உள்ள நகைச்சுவை உணர்வு (Sense of Humour) என்பது அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும்; அவர்களை மட்டுமல்ல, அவர்களுடன் பழகுபவர்களிடமும்கூட இதன் தாக்கம் ஏற்பட்டு அவர்களது வாழ்வும் நோயற்ற வாழ்வாக அமையும்.

கலைவாணர் நகைச்சுவை அரசர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் கலைத்துறையில் நாடகம், சினிமா போன்ற துறைகளில் எளிதில் காணமுடியாத கொள்கை வைரமாகும்!

அவர் பச்சை அட்டை குடிஅரசு ஏட்டினை வாராவாரம் படித்தே, பல்வேறு பகுத்தறிவு சிந்தனைகளைப் பெருக்கிக்கொண்ட குடிஅரசின் விசித்திர மாணவர் - மாமனிதர்!

அவரது நகைச்சுவைக் காட்சிகள் என்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் இராது; மாறாக, வாழ்வியலை மற்றவர்களுக்கு ஒரு சில நொடிகளில் பதிய வைக்கும் ஆற்றலை உள்ளடக்கியவையாகும்!

அவர் மறைந்து சுமார் 50 ஆண்டுகளுக்குமேல் ஆன போதிலும்கூட, கலையுலகில் அவர் சாகா சரித்திரமாக வாழ்ந்து வருகிறார்கள்!

அவரது வாழ்க்கையில் பல்வேறு பழிகளுக்கு ஆளாகி, செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதை உள்ளபடி ஏற்றும்கூட, சிறையேகிய பின்னரும் உறுதி குலையாது, உண்மையை நிலைநாட்டி விடுதலையாகி வந்தும் தனது தொண்டறத்தைத் தொடர்ந்தவர்!

தனது பொருளையெல்லாம் தாராளமாக வாரி வழங்கிய ஒப்புவமை இல்லாத வள்ளல் அவர்!

எந்தெந்த வள்ளல்களைப்பற்றியெல்லாம் படிக்கிறோம்; ஆனால், நம் கண்ணெதிரே வாழ்ந்த கலைவாணர் அவர்கள் தமது பொருள், செல்வத்தை ஊருணி நீராக மக்களுக்குத் தந்த மகத்தான உண்மை வள்ளல் ஆவார்கள்!

மனிதர்கள் தங்களைப்பற்றிக் கவலைப்படுவதைவிட, பிறரை அழிக்கவே சிந்திக்கின்றனர்; குரூர மனப்பான்மையாளர்களாகவும் அல்லது பொறாமையால் நெளிபவர்களாகவும்தான் வாழுகிறார்கள்; அது மிகவும் மோசமானது என்பதை அவர் நல்லதம்பி திரைப்படத்தில் (அறிஞர் அண்ணா அவர்கள் எழுதி வெளிவந்த திரைப்படம் சுமார் 60 ஆண்டுகளுக்குமுன்பு) ஒரு காட்சி:

அவரது உறவுக்காரராக அண்ணன் என்று அழைக்கும் திரு. சி.எஸ். பாண்டியன் (குழு நடிகர்) வந்து இவரிடத்தில், அண்ணே, அடுத்த தெரு பரமசிவஞ் செட்டியார் கதையைக் கேட்டீர்களா? அவருக்கு ஏகப்பட்ட கடனாம்! ரொம்ப கஷ்டமாம்! இனி தேறவே மாட்டாராம் என்றெல்லாம் ரொம்ப உற்சாகமாகப் பேசுவார்!

இவரும் அவரை தற்காலிகமாக உசுப்பிவிடுவதுபோல, ஓகோ அப்படியா? அப்ப, பரமசிவம் செட்டியார் சீக்கிரத்தில் குளோஸ்! அப்படித்தானே...?

ஆமாம் அண்ணே, அதிலென்ன சந்தேகம்?

அப்படி, சரி, சரி... உன் பையிலே என்னென்ன வச்சுருக்கே, தம்பி?

அதுவா? கொஞ்சம் காசு, சில நோட்டு, இப்படி பர்சிலே இருக்கு.

ஹூகும்... சரியா நோட்டு எவ்வளவு, சில்லறை எவ்வளவு என்றெல்லாம் விவரமாக சரியா சொல்லுப்பா...

அதெப்படிண்ணே உடனே சரியா சொல்ல முடியும்? எண்ணி, பிறகு சொல்றேன்...

...ஏம்பா, உன் பையிலே இருக்கிறது எவ்வளவுங்கிற விவரம்பற்றி உனக்குக் கவலை இல்லை; பக்கத்துத் தெரு பரமசிவம் செட்டியார் கதையைப்பற்றிப் பேசறீயே, உன் பையை முதலில் நீ எண்ணிப் பார்க்கவில்லை. இப்படி அக்கப்போர் எல்லாம் தேவையா? என்றவுடன்,

அவருக்குப் பொறி தட்டுகிறது. உடனே மன்னிப்புக் கேட்டு இனிமேல் ஊர் வம்பு, வெட்டிப் பேச்சு பேசமாட்டேன் என்று இவரிடம் கூறிவிட்டுச் செல்வார்!

ஒரே காட்சியில் எவ்வளவு பெரிய தத்துவம்! எவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாழ்வியல் பாடமாகப் போதித்தது.

கலைவாணர் என்.எஸ்.கேயை தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், கலைஞரும், எம்.ஜி.ஆரும், திராவிடர் இயக்கமும் ஏன் இவ்வளவு சிறப்பாக நேசித்தது என்பது புரிகிறதா?

இளைய தலைமுறைகூட அவருடைய பழைய நகைச்சுவை துணுக்குகளை இன்றும் சுவைக்கிறதே தலைமுறை இடைவெளி தாண்டிய மனிதாபிமானி அல்லவா அவர், அதனால்தான்!

அவருடைய நினைவு என்றும் நீங்கா நினைவாகும்!

வாழ்க கலைவாணர்! வளர்க அவர்தம் தொண்டறம்!!

---------------- கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகளிலிருந்து - “விடுதலை” 31-8-2010

பதில் சொல்லட்டும் பார்ப்பனர்கள்!



ஆவணி அவிட்டம் பற்றியும், அந்நாளில் பார்ப்பனர்கள் பூணூல்களைப் புதுப்பிப்பது குறித்தும் விடுதலை ஆதாரப்பூர்வமாக வெளுத்து வாங்கியது இப்பொழுதெல்லாம் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் வகையிலும் பார்ப்பனர்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற தலைவராகவும் துருத்திக் கொண்டு நிற்பவர் திருவாளர் சோ ராமசாமிதான். அந்த வகையில் ஆவணி அவிட்டம் குறித்து விடுதலைக்கு மறுப்பு எழுதுவதாக நினைத்துக் கொண்டு விழி பிதுங்கி நிற்கிறார்.

கேள்வி: இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலைக் கழற்றிவிட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது! அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?

பதில்: நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆவணி அவிட்டம் அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்ம தேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது. அந்தத் தினம் ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் அதற்கு ஆவணி அவிட்டம் என்ற பெயரும் வந்தது. அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால் அவனுக்கு ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.

(துக்ளக், 1.9.2010, பக்கம் 17).

சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவதாக ஒரு நினைப்பு தொடக்கத்திலேயே ஓர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். பார்ப்பனர்கள் புதிய பூணூலைப் போட்டுக் கொள்வதுபோல்தான் ஆவணி அவிட்டம் ஆகிவிட்டது என்பதை ஒப்புக்கொண்டுள்ளதே துக்ளக்.

அது தவறு என்றால், அதனைக் கண்டித்தோ, அது கூடாது என்றோ என்றைக்காவது துக்ளக் சோ ராம சாமியோ, காஞ்சி சங்கராச்சாரியாரோ, கல்கியோ, ஆனந்த விகடனோ, காமகோடி இதழோ எழுதியது கிடையாதே!

விடுதலை எழுதுகிறது என்றவுடன், தலையைச் சுற்றி மூக்கைத் தொட முயற்சிக்கிறார்கள் அவ்வளவுதான்! அதிலாவது சரக்கு இருக்கிறதா என்றால், அதுதான் இல்லை.

பிரம்மதேவனுக்கு முதன்முதலில் வேதம் கிட்டியது அல்லது உபதேசம் ஆகியது அந்த நாள்தான் இந்த ஆவணி அவிட்டமாம். பிரம்மதேவனுக்கு முதன்முதலில் வேதம் கிட்டியது என்றால் எப்படி கிட்டியது? யாரால் கிட்டியது? உபதேசம் கிடைத்தது என்றால், யாரால் அந்த உபதேசம் கிட்டியது என்று ஆதாரத்தோடு கூறவேண் டாமா?

அப்படியெல்லாம் கேட்டால், தயாராக ஒன்று வைத்துள்ளனர்.... என்பது நம்பிக்கை; என்பது அய்தீகம் என்று சொல்லித் தப்பிக்கப் பார்ப்பார்கள்.

இன்னொன்றையும் துக்ளக் குறிப்பிடுகிறது.

இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்துவிடக் கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்திரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ஆவணி அவிட்டம் என்கிற உபாகர்மாவைச் செய்யவேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதிவிடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருதவேண்டும் என்று கூறி மங்களம் பாடி முடித்துக் கொண்டுவிட்டது.

இந்தப் பூணூலைத் தரிப்பதில்கூட இந்த மூன்று வர்ணத்தாருக்கும் வேறுபாடு காட்டப்பட்டுள்ளதே அது ஏன்?

பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயி ராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது (மனுதர்மம் அத்தியாயம் 2; சுலோகம் 44) என்று வேறுபாடு காட்டப்படுவதும், பெரும்பாலான மக் களான சூத்திரர்கள் பூணூல் தரித்தால், அவன் அங்கங் களை அரசன் வெட்டிவிடவேண்டும் என்றும் (மனு அத்தியாயம் 9; சுலோகம் 224) கூறப்பட்டுள்ளதே இதற்கு என்ன சமாதானம்?

பிறப்பால் பிராமணன் கிடையாது குணத்தால் பிராமணன் என்று துக்ளக்கில் திருவாளர் சோ ராமசாமி எழுதி வந்தது என்னாயிற்று?

பூணூல் அணிந்த பிறகுதான் பிராமணன் துவிஜாதி இரு பிறப்பாளன் என்று கூறப்படுகிற வைதீகம் என்னாயிற்று?

தொடக்கத்தில் கோவணம் கட்டிக் கொள்ளப் பயன்படும் அரைஞாண் கயிறாக இருந்ததுதான் பின்னர் பூணூலாகி விட்டது என்று விவேகானந்தர் கூறியுள்ளதற்கு என்ன பதில்?

வேதம் சூத்திரர்களுக்குக் கிடையாது அதனால் பூணூல் தரிக்கக் கூடாது என்று சாமர்த்தியமாகக் கூறுவார்களேயானால், பெரும்பான்மையான இந்த மக்கள் வேதம் படிக்கக் கூடாது என்றால், அந்த மக்கள் இந்து மதத்திலேயேதான் இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க் கிறார்கள் வேறு மதங்களுக்குச் சென்று அந்த மதங்களில் வேத நூலைப் படிக்க வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டும்போது, அய்யயோ மத மாற்றம்! மத மாற்றம்! என்று கூப்பாடு போடுவானேன்? மரியாதையாக துக்ளக் அடுத்த இதழில் பதில் சொல்லட்டும்!

--------------------"விடுதலை” தலையங்கம் 31-8-2010

ஆண்கள் ஏன் குங்குமம் வைக்கிறார்கள்?

மத வக்ரங்கள்


உலகத்தில் ஆறு பெரிய மதங்கள் உள்ளன. யூத மதம், கிறித்துவம், இசுலாம் எனும் மூன்று மதங்களும் ஒரு பிரிவிலும், ஹிந்து, ஜைனம், பவுத்தம் எனும் மூன்றும் ஒரு பிரிவிலுமாக இருபிரிவுகளில் இம்மதங்கள் அடங்கும். முதல் பிரிவு அய்ரோப்பிய, அரேபிய நாடுகளில் தோன்றிப் பரவியவை. இரண்டாம் பிரிவு இந்திய நாட்டில் தோன்றிப் பரவியவை. இரண்டாம் பிரிவு இந்திய நாட்டில் தோன்றிப் பரப்பப்பட்டவை. முதல் பிரிவு வகை மதங்கள் மறுபிறப்பை நம்புவது இல்லை. இரண்டாம் பிரிவு மதங்கள் அதில் நம்பிக்கை கொண்டவை. வாழ்வு என்பது இவ்வுலகப் பிறப்புக்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்திற்கு மட்டுமே உரியது. இந்தப் பிறவியில் ஒருவர் செய்யும் பாபம், புண்ணியம் ஆகிய (நல்லவை, தீயவை) செயல்களுக்கேற்ப நரகம், சொர்க்கம் கிட்டும்; அவற்றைக் கடவுள் தீர்மானிக்கும் என்பது இவ்வகை மதங்களின் கொள்கை, மறுபிறவி என்பதே கிடையாது: மறுஉலக வாழ்வுமட்டுமே என்கிறது.

இரண்டாம் பிரிவான இந்தியப் பிரிவினர், பிறப்பு என்பது மீண்டும் மீண்டும் நிகழ்வது, முக்தி அடையும் வரை நிகழும், இனிப்பிறவா (முக்தி) நிலை அடையும் வரை நிகழும், சக்கரம் சுழல்வது போல பிறப்பும் இறப்பும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்கிறது.

இதன் விளைவு என்னவென்றால், கீழை நாட்டு மதப்பிரிவினர் எப்போதும் இறப்பைப்பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பதால், சிற்சிலசமயம் சிலருக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் ஏற்படுவதாக மனநல மருத்துவர்கள் கருதுகின்றனர்.

கிழக்கும் மேற்கும்

இந்த பிறப்பு இறப்புக் சக்கரம் கீழை நாட்டு ஆன்மீகத்தில்தான் மிகவும் வலுவாகச் சொல்லப்பட்டு, அதன் காரணமாக நம்பப்பட்டு வருகிறது. மேலைநாட்டு மதத்தவர்களிடம் அந்நிலை இல்லை. இருப்பினும் ஒரு சில வக்ரங்கள் ஃபிரெட்ரிக் நீட்சே போன்றோர் மறுபிறப்பில் நம்பிக்கை வைத்து கீழை ஆன்மீகத்தைப் பேசிவந்தனர். மனு நூல், மகாபாரதம் ஆகிய இரண்டு மதக் குப்பைகளை படித்ததன் கெட்ட விளைவு இது. மனுநீதி அல்லது மனு தருமம் அல்லது மனுஸ்மிருதி எனப்படும் மனு சம்ஹிதா என்பது மிகவும் அநீதியான, அதருமமான நூல் ஆகும். இதன் அடிப்படையில்தான் இந்து சமூகமே அமைந்தது, அமைக்கப்பட வேண்டும் என்பது அம்மதத்தவரின் கூற்று. ஆணைவிடப் பெண் மட்டமானவள் என்று மிக மிகக் கேவலமாகவும், மனித இனமே நான்கு வருணங்களாக மேல், கீழ் எனும் தன்மையில் கடவுளால் படைக்கப்பட்டதாகவும் கூறும் மனித விரோத நூலாகும் இது. அத்தகைய நான்கு வருணங்களும் தனித்தனியே இயங்க வேண்டும். வருணக் கலப்பே கூடாது, கலப்பு ஏற்பட்டு விட்டால் ஹிந்து மதத்தின் புனிதத் தன்மையே போய்விடும் எனும் தத்துவத்தைக் கூறும் நூல் இது. பல லட்சக்கணக்கான மக்களை அவர்கள் யூத மதத்தினர் என்ற காரணத்திற்காகக் கொன்று குவித்த கொடுங்கோலன் இட்லர் தன் மேசையில் வைத்திருந்து படித்துப்போற்றிய நூல் இது என்றால்.. இதன் தன்மை விளங்கும்.

கடவுள் இல்லா மதம்

மனித இனத்துக்கு ஒத்துப் போகாத பல கோட்பாடுகளையுடையது ஜைன (சமண) மதம். அம்மதத்தினர் பெரும்பாலும் வணிகர்கள் என்பதால் அம்மதமே வியாபாரிகளுக்குச் சாதகமான மதமாகவே இருக்கிறது எனலாம். இந்த உலகத்தில் எப்படி லாபம் அடைவது என்பதையே அம்மதம் தன் அடிப்படை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. ஆனால் அம்மதத் துறவிகள் மறுஉலக வாழ்க்கையில் சொர்க்க போகத்தை அடைவதற்காகச் செய்யும் உடல் வருத்தக் காரியங்கள் மன வருத்தத்தை தரும் அளவுக்கு உள்ளன. என்றாலும் அவர்கள் நோக்கம் நிறை வேறுமா? இம்மதத்தின் ஆதாரக் கொள்கையும், நோக்கமும் மறுபிறப்பை தவிர்க்க வேண்டும் என்பதே. இதற்காக இப்பிறப்பு வாழ்க்கையை இவர்களாகவே முடித்துக் கொள்ள தற்கொலை செய்து கொள்ளவும் தயாராகிறார்கள். மதத்தின் பெயரால் இக்குற்றம் செய்யப்படுவதால் இந்தியக் குற்றச் சட்டப் பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எதுவும் சாப்பிடாமல், நீர்கூடக் குடிக்காமல், நாள் கணக்கில் பட்டினி கிடந்து உயிரைத் துறக்கிறார்கள். கொடுமை! இதற்குப்பிறகு அவர்கள் சொர்க்கவாசலில் நுழைகிறார்களாம்!

இதற்கு ஆசையை ஊட்டுவதற்கு அவர்கள் கையாளும் அச்சுறுத்தல் நரகம் உண்டு; ஏழு உண்டு. ஏழாவதுநரகத்தில் நுழைந்தால் திரும்பவே முடியாது. மீதி ஆறு நரகங்கள் சற்றுப் பரவாயில்லை என்கிறது ஜைன மதம். திரும்பி வரவே முடியாத ஏழாம் நரகத்தை யார் பார்த்தது? யார் பார்த்துத் திரும்பி வந்தது? வெறும் கற்பனை தானே! கேட்டால், பதில் வராது.

ஆனாலும் ஜைன மதம் கடவுளை நம்பாத மதம்! உலகிலேயே, கடவுளை நம்பாத, ஏற்காத ஒரு மதம் உண்டென்றால், அது ஜைன மதம்தான். மதம் என்றாலே கடவுள் பற்றித்தானே பேசும்? பருப்பில்லாமல் கல்யாணமா? ஒரு மதம் நாத்திகக் கொள்கையில் எப்படி இயங்கும்? என்ன கேள்வி கேட்டாலும் உண்மை அதுதான்? ஜைன மதம் நாத்திகக் கொள்கையை அடிப்படையாக வைத்துதான் இயங்குகிறது. அதே சமயத்தில் மதங்களின் லட்சணங்கள் எல்லாவற்றையும் கொண்டுள்ளது. உதாரணத்திற்காக ஒன்று; இவர்கள் உணவில் தக்காளி இடம் பெறாது. அது சிவப்பாக இருப்பதால் இரத்தத்தை நினைவுபடுத்துகிறது. அவர்கள் புலால் உண்ணாதவர்கள் என்பதால் இரத்த நிறம்கூட எதிர்ப்பு! அதுதான் மதம்!

குங்கும மகிமை

இப்படி மூடநம்பிக்கைகளின் உறைவிடம் மதங்கள். இந்து மதத்திலோ, சொல்லவே வேண்டாம். லட்சுமி என்று ஒரு பெண் கடவுள். மீன், நண்டு போலக் கடலில் கிடைத்தவள். அமுதத்திற்காகக் கடையும்போது வந்தாளாம்! வரும் போதே கையில் மாலையோடு வந்தாளாம். அவளைப் பார்த்தவுடனே விஷ்ணு, நான் இவளை வைத்துக் கொள்கிறேன் என்று சுட்டிக் கொண்டனாம். இவள் பணத்துக்கு அதிபதியாம். அதனால், வங்கியில் இருக்கிறாள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இவள் இருக்கும் இடங்கள் 5. பசுவின் யோனி, யானையின் நெற்றி, தாமரைப்பூ, வில்வ இலை, பத்தினிப் பெண் ஆக 5 இடங்கள். கூடுதலாகப் பெண்களின் நெற்றி. அதன் அடையாளமாகத்தான் பெண்கள் குங்குமம் வைக்க வேண்டுமாம். பிச்சை எடுத்துச் சாப்பிடும் பெண்ணுக்கு குங்குமம் ஏன்? யாரும் யோசிக்கவில்லை. நெற்றியில் லட்சுமி இருக்கும் நிலையில் ஏன் வயிற்றுச் சோற்றுக்குப் பிச்சை எடுக்க வேண்டும்? லட்சுமி வங்கி திவால் ஆகிப் போனதா? யாரும் யோசிக்கவில்லை.

சரி, ஆண்கள் ஏன் குங்குமம் வைக்கிறார்கள். ஓர் அரசியல் கட்சி இந்த ஆபாச அநாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது. ஓர் ஆள் மடம் கட்டி குங்குமம் வைப்பதை வளர்த்து விட்டார். அறிவே இல்லாமல் ஆண்கள் இந்த ஆபாசத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள். சிவன் வைத்துக் கொண்டான், நானும் வைத்துக் கொள்கிறேன் என்று சிவஞான சூன்யங்கள் கூறும். சிவன் ஏன் வைத்துக் கொள்கிறான்? திலக புராணம் கூறுகிற கதையைத் தெரிந்து வைத்திருந்தால் அறிவும் சொரணையும் உள்ள எவனும் குங்குமம் வைக்க மாட்டான். சிவனின் வைப்பாட்டி கங்கை அம்மாளைத் தன் தலை மயிரில் மறைத்து வைத்திருக்கிறான் சிவன். அவனுக்கு மாதம் மூன்று நாள் பிரச்சினையில் வெளியாகும் ரத்தம் முகம் முழுவதும் வழிந்து நாறுகிறது. அதை அப்படியே வழித்து ஓரிடத்தில் தேக்கி வைக்கும் ஏற்பாடுதான் குங்குமம் போலத் தெரிகிறது. குங்குமம் வைக்கும் கூழ் முட்டைகள் யாரைத் தலையில் வைத்துக் கொண்டிருக்கின்றன? அதையாவது தெரிவிப்பார்களா?

நெற்றிச் சித்திரம்

நம் தலைவர்தான் கரூரில் சொன்னார் நெற்றியில் டிராயிங் (வரை படம்) போட்டிருப்பவர்களே சைவ, வைணவக்காரர்கள் தானே! உலகில் எந்த மதக்காரனாவது இந்தக் காரியத்தைச் செய்கிறானா? என்று கேட்டார். திடீர் பணக்காரர்கள், திறமையே இல்லாமல் பொது வாழ்க்கையில் உயர்ந்து விட்ட அரசியல்வாதிகள், கள்ள மார்க்கெட் கனவான்கள் என எல்லார் நெற்றியிலும் குறுக்குக் கோடுகள், நட்ட நடுக்குத்துக் கோடுகள், நடுவில் வட்டப்புள்ளி என்று பழைய ஆப்பிரிக்கப் பழங்குடிகள் போலவே நடமாடும் நிலை. பார்க்க அசிங்கமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் வெள்ளைக்காரர்களின் கோட், சூட் உடைகள் வேறு! கிழக்கும் மேற்கும் இந்தப் போலிகளிடம் தான் சந்திக்கின்றன போலும்! இந்தக் கண்ராவியைக் கிண்டல் செய்து அமெரிக்க டைம்ஸ் ஏடு எழுதியது. புள்ளி வைத்த தலையன்கள் என்று இந்தியர்களை எழுதியது ஞிஷீமீபீ பிமீணீபீ என்று எழுதியது. உண்மைதானே!

உடனே அங்கே இருக்கும் ஆர்.எஸ்.எஸ். இந்துவுக்குக் கோபம்! டைம்ஸ் ஏட்டைக் கண்டித்துக் கத்தினார். என்ன நியாயம்?

ராஜஸ்தானின் புஷ்கார் எனும் ஊரில் ஒரு நிகழ்ச்சி. பெரிய குளம், ஒட்டகச் சந்தை எனப் பெயர் பெற்ற சுற்றுலாத்தலம். மகளையே புணர்ந்தான் என்பதால் சபிக்கப்பட்ட பிரமனுக்கு எங்குமே கோயில் கூடாது என்பதுதான் சாபம். அதையும் மீறி அவனுக்குக் கோயில் இருக்கும் ஊர் என்று ஒரு சிறப்பு இந்த ஊருக்கு. வெளிநாட்டு ஆணும் பெண்ணும் பார்ப்பன முறைப்படி திருமணம் செய்ய விரும்பி அந்த ஊருக்கு வந்தனர். இந்து முறைப்படி திருமணமும் நடந்தது. புரோகிதர் தட்சணையைக் கை நிறைய வாங்கிக் கொண்டார். அவர்கள் நாட்டு, மதப் பழக்கப்படி திருமணம் முடிந்ததும் முத்தமிட்டுக் கொண்டனர். உடனே, இதே புரோகிதப் பார்ப்பான், ஆச்சாரம் போச்சு என்று கத்திக் கூப்பாடு போட்டுப் புகார் கொடுத்து விட்டான். இந்து முறைத் திருமணம் செய்து கொண்ட வெள்ளைக்காரர்கள் தம் தேனிலவைக் காவல் நிலையத்தில் கொண்டாடி மறுநாள் அபராதம் கட்டி விட்டுத் தப்பித்தனர்.

அவன் நாட்டுப் பழக்கம் அது! இந்த நாட்டுப் பழக்கம் வேறு! அந்த அளவுகோல் வெளிநாட்டுக்குச் சம்பாதிக்கப் போன இந்துக்களுக்கும் பொருந்தும்தானே! டாட்டட் ஹெட் என்று எழுதினால் ஏன் கோபம் வருகிறது? சிந்திக்க வேண்டும்!

---------------------சு. அறிவுக்கரசு அவர்கள் 14-8-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

30.8.10

இராஜாசி வாக்கும் - பெரியார் நோக்கும்


சாமி சண்டை

வைதீகரான மறைந்த ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் ஒருமுறை சொன்னார்: நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும் பக்தர்களின் சண்டையே அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா? என்ற சண்டைதான் அதிகம் என்றார். (சென்னை தமிழிசைச் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில், 15.4.1953).

அவர் வாய்க்குச் சர்க்கரையைத்தான் போடவேண்டும் என்பதற்குச் சாட்சியமாக நாட்டில் அன்றாடம் ஒரே மதத்துக்குள் சண்டை சாமி நம்பிக்கையின் அடிப்படை யில் சண்டைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

சாமி ஊர்வலம் என்கிறபோது தாழ்த்தப்பட்டோர் வீதிக்குச் செல்லுவதா செல்லக்கூடாதா என்பதில் சண்டை; கோயிலில் பரிவட்டம் யாருக்கு முதலில் சூட்டுவது என்பதில் சண்டை; தேரை இழுப்பதில் தாழ்த்தப்பட்டோர் பங்குகொள்ளலாமா கூடாதா என்பதில் சண்டை; கோயிலில் தேவாரம் ஓதலாமா, ஓதக்கூடாதா என்பதில் சண்டை; யானைக்கு வடகலை நாமம் போடுவதா தென்கலை நாமம் போடுவதா என்பதில் சண்டை; தேரை எந்த மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் ஓட்டுவது என்பதில் துண்டறிக்கை சுவரொட்டி அச்சிட்டுப் பொதுமக்கள் மத்தியிலே குழப்புவதுவரை பெரிய சச்சரவுகள் (திருவாரூர்) இப்படி பக்தர்களுக்குள் சண்டைகள் நடைபெற்று வருவது வழமையாகிவிட்டது.

தெருச்சண்டை, அடிதடி சண்டைகள் மட்டுமல்ல; நீதிமன்றம் வரை இவர்களின் சண்டை தவம் கிடப்பதும் உண்டு. காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடு வதா, தென்கலை நாமம் போடுவதா என்ற சண்டை லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்றது என்பதெல்லாம் சாதாரணமா?

இவ்வளவு சண்டைகள் சாங்கோபாங்கமாக தம் பக்தர்களிடையே நடந்துகொண்டு வந்தாலும் எந்த சாமியும் தலையிட்டு சண்டையைத் தீர்த்து வைத்த தாகவோ, சமாதானம் செய்ததாகவோ தகவல் இல்லை.

இவ்வளவுக்கும் பல சண்டைகள் அந்தச் சாமிகளின் முன்னிலையில்தான் நடைபெற்று இருக்கின்றன. அந்தச் சாமியைத் தூக்குவதிலும்கூட பிரச்சினைகள் வெடித்துள்ளன. அப்பொழுதும்கூடக் கொஞ்சம் கண்களைத் திறந்து சைகைக் கூட காட்டியதில்லை. காரணம் வெளிப்படை அது ஒரு கல்லு அல்லது உலோகம்.

பிரபல கணபதி ஸ்தபதி அவர்களே இதுபற்றி வித்தாரமாகக் கூறிவிட்டாரே ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால மட்டும் எப்படி அத்தனைத் தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டுவர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்படறீங்க?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு, சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும்; அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்கிறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? (கல்கி, 11.6.2006) என்று புகழ்பெற்ற தமிழரான கணபதி ஸ்தபதி பேட்டி கொடுத்தாரே, இதன் பொருள் என்ன? கல்லைக் கடவு ளாக்கும் சக்தி சிற்பியிடம்தான் உள்ளது என்று மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்துக் காட்டிவிட்டாரா இல்லையா?

கல்லுக்குச் சக்தி கொடுக்கும் சிற்பி மனிதன்தானே? அப்படியென்றால், கடவுள் என்ற எண்ணம் மனிதனால் செயற்கையாகக் காட்டப்படுகிறதே தவிர, கடவுள் என்று தனியாக ஏதும் இல்லை என்பது பெறப்படவில்லையா?

இந்தச் செயற்கை விடயத்திற்கு மனிதர்கள் ஒருவருக் கொருவர் அடித்துக்கொள்கிறார்களே ஆச்சாரியார் சொன்னதுபோல, பக்தர்கள் என் கடவுள் பெரியதா? உன் கடவுள் பெரியதா? என்று சண்டை போட்டுக்கொள்கிறார்களே என்னே பரிதாபம்!

நேற்று ஒரு சேதி ஏடுகளில் வெளிவந்தது. திட்டக் குடியை அடுத்த கண்டமத்தான் அய்யனார் கோயிலில் திருப்பணி நடந்ததாகவும், அப்பொழுது ஒரு பெண் சாமி வந்து ஆடியதாகவும் (அது ஒரு ஹிஸ்டீரியா நோய்!) இந்தக் கோயிலுக்குரிய அய்யனார் சாமி சிலை கேட்பாரற்றுக் கிடப்பதாகவும் (கேட்பாரற்றுக் கிடக்கும் அளவுக்குச் சாமிக்குச் சக்தியில்லையோ!) அதைக் கொண்டு வந்து இந்தக் கோயிலுக்குள் வைத்தால், சுபிட்சம் ஏற்படும் என்றும் சொன்னாராம்.

அவ்வளவுதான் அந்தக் கருங்கல்லாலான அய்யனாரைத் தேடிப்பிடித்து கோயிலுக்குக் கொண்டு வைத்துவிட்டார்களாம். அங்குதான் பிரச்சினையே கிளம்பி இருக்கிறது. பக்கத்து ஊரான புலிகரம்பனூர் கிராம மக்கள் 500 பேர் திரண்டு, கண்டமத்தான் கோயிலுக்குள் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள அந்தச் சாமி சிலை எங்கள் ஊருக்குச் சொந்தமானது இங்கு கொண்டு வந்து எப்படி வைக்கலாம்? என்று தகராறு வெடித்து இரு கிராம மக்களிடம் மோதல் நிலை உருவாகியிருக்கிறது. காவல் துறை அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் தலையிட்டு, அய்யனார் சிலையை வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு போய் வைத்துள்ளனர்.

இரு கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி, அதன் அடிப்படையில் அய்யனாரை எங்கு கொண்டுபோய் வைப்பது என்று முடிவு செய்யப்படுமாம்.

எப்படி இருக்கிறது இந்தக் கேலிக் கூத்து? கடவுள் சமாச்சாரங்களைக்கூட மனிதர்கள்தான் தீர்த்து வைக்க வேண்டியுள்ளது.

சாமி சண்டைபற்றி ஆச்சாரியார் சொன்னதையும், கடவுளை மற, மனிதனை நினை என்று தந்தை பெரியார் சொன்னதையும் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கட்டும் பக்தகோடிகள்.

------------------- ”விடுதலை” தலையங்கம் 30-8-2010

பெரியாரும் - கலைவாணரும்


கலைவாணர்

சிரிப்பும், சிந்தனையும் மனிதனுக்கு அழகு என்பதை கலை வடிவம் மூலம் மக்களுக்கு அன்றாடம் பாடம் நடத்திய நகைச்சுவை மன்னன் கலை வாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1957).

தந்தை பெரியாரால் உச்சி மோந்து போற்றப்பட்ட, பாராட்டப்பட்ட கலையுலகக் கனிகள் இருவர் உண்டென்றால், அவர்கள் நடிகவேள் எம்.ஆர். இராதாவும், என்.எஸ்.கே. அவர்களுமேயாவார்கள்.

இனி என்.எஸ். கிருஷ் ணன் செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப்பற்றி சரித்திரம் எழுதப்பட்டால், அச்சரித்திரத்தின் அட்டைப் பக்கத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித் திரமே தீண்டப்படாததாக ஆகி விடும் (குடிஅரசு, 11.11.1944) என்று தந்தை பெரியார் எழுதி னார் என்றால், இதைவிட கலை வாணரின் பெருமைக்கும், தொண்டுக்கும் கட்டளைக்கல் வேறு ஒன்றும் இருக்க முடியுமா?

கலைவாணர்பற்றி தந்தை பெரியார் கூறினார்; சரி, தந்தை பெரியார்பற்றி கலைவாணர் என்ன கூறினார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?

நம் நாட்டைப் பொறுத்த வரையில் செயற்கரிய செய்த பெரியவர்கள் பலர். அவர்களின் வரிசையிலே இடம்பெறத்தக்க ஒரு பெரியார் நமது தலை முறையில் வாழ்ந்து கொண் டிருப்பது குறித்து நாம் பெருமை கொள்ளலாம்.

சிந்திப்பதே பாவம் என்று எளியோரை வலியோர் அர்த்தமில்லாமல் வேத, புராண, இதிகாசங்கள் மூலமாக அடக்கி வருகின்றனர் என்று கருதப்படும் சூழ்ச்சியை ரகசியமாகவோ, தந்திரமாகவோ அல்லாமல் வெளிப்படையாக எதிர்க்கும் யாவரும் சிந்திக்கலாம் என்கிற புதிய பொது நிலையை உண்டு பண்ணி வைத்த ஒரே ஒரு பெரியார் நமது ஈ.வெ.ரா. அவர்கள்தான்.

பெரியாரை வாழ்த்தாத தமிழன் இருக்கமாட்டான். பெரியாரால் வாழ்த்துப் பெறாத தமிழனும் இருக்க முடியாது.

தமிழகம் பெற்றிருக்கும் பொதுச் செல்வங்களில் அவரும் ஒருவர் பூப்போன்ற நெஞ்ச முள்ளார் புகழுக்காகத் தம் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார். அவருக்காக வேண் டுமானால் புகழ் தனது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். புனிதமான மனிதர். துணிவு என்னும் மூன்றெழுத்து முத் தமிழ்ப் பண்பை மனித உருவில் காணவேண்டுமாயின் அந்த உருவம் ஈ.வெ.ரா.தான். காரணம், வேறு எதுவுமில்லை, அவரது உண்மையில், உயர்ந்த பண்பில், ஒழுக்கத்தில் அவ ருக்கு அவ்வளவு நம்பிக்கை.

ராஜதந்திரிகளையும் கவரும் அளவுக்குப் பொல்லாத அரசியல் மேதை. புரிய முடியாத பெரிய மூளை. பொறுமைமிகும் தலைவர். சுருங்கக் கூற வேண் டுமாயின், தமிழ் இனத்தின் மெய் யான தந்தை. இன்று அன்னாரது பிறந்த தினவிழாவைப் பெரு மிதத்துடன் கொண்டாடுகிறோம்.

வாழ்க பெரியார். ஏனெனில், தமிழனும், அறிவும் இன்னும் எவ்வளவோ வளரவேண்டியி ருக்கிறது.

(விடுதலை, 17.9.1959).

இவ்வளவு பெரிய கலை உலக மேதை 50 வயதுவரை கூட (49) வாழாமல் மறைந்தது தமிழினத்துக்கு மாபெரும் இழப்பாகும்.

நடிகவேளும், கலைவாணரும் இன்னொருவருக்கு ஒப்பிடப்பட முடியாத கலையுலகச் சிகரங்கள்!

வாழ்க கலைவாணர்!

------------------------மயிலாடன் அவர்கள் 30-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

குறிப்பு: படிக்கப்பட வேண்டிய நூல்: பேராசிரியர் அன்புக்கொடி நல்லதம்பி (கலைவாணரின் மருமகள்) எழுதிய கலை வாணர் சிந்தனைத் துளிகள்.

29.8.10

சோ இராமசாமியின் திடீர் ஞானோதயம்!



பிராமணர்கள் தமிழ் நாட்டிற்குத் தேவையில்லை; அதற்கு மேல் எதுவும் நான் சொல்ல மாட்டேன். சோ இராமசாமி, ஓர் ஆங்கில இதழில் பேட்டியில் பார்ப்பனர் பற்றிய பேட்டியில்.

பலே, பலே, சோ அவர்களே, சரியாகச் சொன்னீர்கள்!

ஆம், தமிழ்நாடு பெரியார் அவர்களால் பக்குவப் படுத்தப்பட்ட சுயமரியாதை இயக்க பூமி ஆனதால்,

இங்கு பிராமணர் தேவையில்லை. சூத்திரர் பஞ்சமர் எவரும் தேவையில்லை. மனிதர்கள் மட்டும்தான் தேவை! மக்களை மனிதர்களாக மட்டும் பார்க்கத் தெரியாத பிராமணர்கள் தேவையில்லை என்பது எங்கே பிராமணன் எழுதிய சோவுக்கு இப்போதாவது புரிந்ததே! நன்றி! நன்றி!

முன்பு 1971 இல் பொதுத் தேர்தலில். நீங்கள் போட்ட இராமனைச் செருப்பால் பெரியார் அடிக்க, கலைஞர் வேடிக்கை பார்த்த துக்ளக் கார்ட்டூனுக்குப் பிறகும், தி.மு.க. 184 இடங்களைப் பெற்றவுடன், இனி தமிழ்நாடு ஆஸ்திகர்கள் வாழ இலாயக்கற்ற பூமி என்று கல்கியில் ஆச்சாரியார் எழுதினார்; இப்போது 39 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கும் ஞானோதயம் வருகிறது. பலே! பலே!

------------------ நன்றி: - “விடுதலை” 28-8-2010

காவி திமிர்வாதத்திற்கு கண்டனம் தெரிவித்திடுவீர்!

லிபரான் கமிஷன் குற்றவாளிகள் - காந்தியாரைக் கொன்ற, காமராசரை உயிரோடு எரிக்க முயன்ற - தடை செய்யப்பட்ட காவிக் கூட்டத்தினர்
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை பதவி விலகச் சொல்வதா?
முற்போக்கு கட்சியினர் காவி திமிர்வாதத்திற்கு கண்டனம் தெரிவித்திடுவீர்!
தமிழர் தலைவர் வேண்டுகோள்

காவி பயங்கர வாதத்தைப் பற்றி உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் குரல் கொடுத்தார் என்பதற்காக லிபரான் கமிஷன் குற்றவாளிகள், காமராசரை உயிரோடு எரிக்க முயன்ற காவிக்கூட்டம், காந்தியாரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காவிக் கூட்டத்தினர் அவரைப் பதவி விலகச் சொல்வதா? அத்துணை முற்போக்கு கட்சியினரும் காவிக் கூட்டத்தின் திமிர்வாதப் போக்கைக் கண்டித்து குரல் எழுப்ப வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டு கோள் விடுத்து அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

காவி பயங்கரவாதம் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளதாம்!

இதைவிட முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் மோசடி வேலை அண்மைக்கால அரசியலில் வேறு எதுவும் இல்லை!

காவி பயங்கரவாதம் பற்றி ப. சிதம்பரம்

உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் கடந்த புதன்கிழமை டில்லியில் நடைபெற்ற, மாநில காவல் துறைத் தலைவர்கள் மாநாட்டில், காவி பயங்கரவாதம் புதிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது என்று கூறியதோடு, பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு காவி பயங்கரவாதம்தான் காரணம் என்று விளக்கியுள்ளார்!

இதுபற்றி விடுதலையில் கடந்த இரண்டு நாள்களாக விவரமான ஆதாரங்களுடன் தலையங்கமே தீட்டியுள்ளோம்.

ஆத்திரம், பொத்துக் கொண்டு வருவானேன்!

உள்துறை அமைச்சர், காவி பயங்கரவாதம்! என்று சுட்டிக்காட்டியவுடன், ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க., அதன் சுற்றுக் கோளான சிவசேனா போன்ற கட்சிகளுக்கு ஆத்திரம் பொங்கி, பொத்துக் கொண்டு வருவானேன்?

ஊறுகாய் ஜாடியில் போட்டதன் விளைவு

பாபர் மசூதி இடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு வரை இராணுவத்திற்கு சப்ளை செய்யப்பட்ட ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து, துப்பாக்கிகள், அபிநவ பாரத் என்ற பயங்கரவாதிகள் காவி உடை அணிந்து பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் என்பதை உலகே அறியும் உண்மையாயிற்றே! வழக்குகள் இன்னும் இருக்கிறது! நீதிபதி லிபரான் கமிஷனின் அறிக்கையை, ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஊறுகாய் ஜாடியில் போட்டு வைத்ததால், பா.ஜ.க., மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் இப்படி கொக்கரிக்கின்றன.

பதவி விலக வேண்டுமாம்!

உண்மையைக் கூறியதால் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பதவி விலக வேண்டுமா? இதைக் கேட்க, குற்றவாளிகள் பட்டியலில் வழக்குமன்றத்தில் உள்ள இவர்களுக்கு எந்த உரிமையும் - தார்மீக உரிமையும் கிடையாதே!

பாம்புக்கும் நோகாமல் பாம்படித்த கோலுக்கும் நோகாமல்...

இந்தக் காவிக் கூட்டத்தை மென்மையாக, பாம்புக்கும் நோகாமல் பாம்படித்த கோலுக்கும் நோகாமல் மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மன்மோகன்சிங் அரசு நடத்துவதால் தான், சட்டம் அதன் கடமையைச் செய்வதில் உள்ள மெத்தனம் மேலோங்கியிருப்பதால்தான், இப்படி உண்மையைக் கூறும் உள்துறை அமைச்சரை பதவி விலகச் சொல்லிக் கேட்கிறார்கள்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர் கோட்சே என்பதை அவரது தம்பி கோபால் கோட்சே ஒரு பேட்டியில் கூறியதோடு, கோட்சே வரலாறே கூறுமே அவர்தானே காந்தியைக் கொன்ற மதவெறி கொலை பாதகன்? அதுதானே காவி பயங்கரவாத துவக்கம்?

3 முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 3 தடவை தடை செய்யப் பட்டதே எதற்காக? அதன் அதீதமான நடவடிக்கைக்குத் தானே!

இந்தியாவில் மூன்றுமுறை தொடர்ந்து மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். காவி அமைப்பு.

காமராசரை கொளுத்த முயன்ற கூட்டம்

பச்சைத் தமிழர் காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அவர் வீட்டையே தீவைத்துக் கொளுத்தி, உயிரோடு கொல்ல முயற் சித்தகூட்டம் இந்த நிர்வாண காவிச் சாமியார் கூட்டம் அல்லவா?

கண்டனம் தெரிவிக்க வேண்டும்

இவர்கள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தைப் பதவி விலக, அல்லது பிரதமரை நோக்கி விலக்குங்கள் என்று கூற எந்த வகையில் யோக்கியதையோ, உரிமையோ, உடையவர்கள்?

இதனை அத்துணை முற்போக்குக் கட்சிகளும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அத்துணை பேரும் காவியின் இந்த திமிர்வாதப் பேச்சை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்ப உடனடியாக முன்வர வேண்டும்.

அனுமதிக்கக் கூடாது!

இது சிதம்பரம் என்ற தனிநபர், தனி அமைச்சரைப் பொறுத்த விஷயம் அல்ல; மதவெறிச் சக்திகளின் குரல் ஓங்குவதை, மதச் சார்பற்ற செக்யூலர் சக்திகள் அனுமதிக்கலாமா என்கிற பிரச்சனையாகும்!

லாலுபிரசாத் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகளுக்குத் தடையே விதிக்க வேண்டும் என்று முழங்கியுள்ளார்!

அப்படிப்பட்ட நடவடிக்கைகள் வந்தால் ஒழிய, இந்தக் காவி பயங்கரவாதம் பாபர் மசூதி இடிப்பு முதல் மாலேகான் குண்டு வெடிப்புவரை தொடரும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட முடியாது.

சமரசம் கூடாது!

பயங்கரவாதத்தில் முஸ்லிம் தீவிரவாதம், இந்து தீவிரவாதம், காவி தீவிரவாதம் என்ற எந்த தீவிரவாதத்துடனும் அரசுகள் சமரசம் செய்துக் கொள்ளக் கூடாது.

உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களை, உண்மை விளக்கத்திற்காகப் பாராட்டுகிறோம்.


தலைவர்,
திராவிடர் கழகம்.
29.8.2010

28.8.10

பரலோகத்துக்குப் பார்ப்பானை அழைத்த கதை



தஞ்சை ஜில்லாவில் ஒரு சம்பவம் நடந்ததாகக் கூறுவார்கள். அதாவது இறந்து போனவர்கள் மோட்சம் அடைவதற்கென்று அங்கு பார்ப்பனப் புரோகிதன் ஒருவன் பணம் பெற்றுக் கொண்டு சிவபிரானுக்குச் சீட்டுக் கொடுப்பது வழக்கமாம். மக்கள் அவனிடம் சீட்டுப் பெற்றால் சிவபெருமான் அவசியம் மோட்சம் கொடுத்து விடுவார் என்று நம்புவார்கள் ஆதலால் செத்துப்போனவனின் வாரிசு இந்தப் பார்ப்பானுக்குப் பணம் கொடுத்து செத்தவன் பாவத்திற்கு ஏற்ற அளவு மோட்சச்சீட்டு வாங்கி அந்தச் சீட்டை பிணத்துடன் பாடையில் கட்டிககொண்டு போய், சுடுகாட்டில் பிணத்துடன் போட்டு எரித்துவிட்டால், இறந்து போனவன் சீட்டில் எழுதியுள்ளபடி மோடசத்துக்குப் போய்ச்சேருவான் என்பது அதன் பொருள். இதை ஒருவன் கண்டிக்கவேண்டும் என்று முற்பட்டான்.

ஒரு நாள் அந்த புரோகித சாமியாரிடம் சென்று நீங்கள் கொடுத்த ஒரு மோட்சச் சீட்டில் தவறாக மற்றொருவர் பெயரை நீங்கள் எழுதிவிட்டீர் என்ற காரணத்தால் சிவபெருமான் அந்த நபருக்கு மோட்சம் கொடுக்க மறுப்பதோடு, விவரம் அறிய உங்களை எப்படியாவது அனுப்பிக் கொடுக்கும்படியும், நீங்கள் வரும்வரை அந்த நபர் அந்தரத்தில் தொங்கிககொண்டுதான் கிடப்பார் என்றும் என் கனவில் வந்து சொல்லிவிட்டுப் போயவிட்டார். ஆதலால் உடனே புறப்படுங்கள் காலையில் இறந்துபோன ஒருவருக்கு நீங்கள் மோட்ச சீட்டுக் கொடுத்தீர்களே அவனுடனேயே நீங்களும் செல்லலாம். இன்னும் அவன் கொளுத்தப்படவில்லை உங்களுக்காகக் காத்துக் கொண்டிருககிறார்கள். நான் உங்களைக் கூட்டிவருவதாகச் சொல்லி வந்திருக்கிறேன், ஆகையால் தயவு செய்து புறப்படுங்கள்.

சிவபெருமானிடம் வாதாடி எப்படியாவது அந்த நபரை திருப்பிவிடாமல் அவனுக்கு மோட்சம் வாங்கிக் கொடுத்துவிட்டு உடனே தாங்கள் இந்த லோகத்திற்கு வந்து சேருங்கள் என்று கூப்பிட்டான். அதற்கு சாமியார் ஆனாலும் பாதகம் இல்லை. நான் வேறு ஏதோ பெயரை மறதியாக எழுதிவிட்டேன் போலிருக்கிறது. இபபோது வேறு சீட்டுத் தருகிறேன். அதை எரித்துவிட்டால் அந்த ஆளுக்கு மோடசத்தில் இடம் கிடைக்கும் என்றானாம். ஆனாலும் வந்தவன் அதையும் மறுத்துககூறி உங்களையே அனுப்பிக் கொடுக்கும்படி என் நேரில் சிவபெருமான் சொன்னார்கள், நீங்கள் நேரில் சென்று இந்த ஆளைக் காட்டி இந்த ஆளுக்குத்தான் சீட்டுக் கொடுத்தேன் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் என்று கட்டாயபபடுத்தினானாம். சாமியார் எவ்வளவோ மறுத்துக் கூறியும், தப்பித்துக் கொள்ள வழியில்லை. அங்கு குழுமியிருந்த மற்றவரகளும் சாமிகளே ஒரு ஆள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு மோட்சம் அடைய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கையில் நீங்கள் தான் நேரில் சென்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வருவதில் என்ன மோசம் போய்விடும். ஆகவே நீங்களே புறப்பட்டுச் செல்லுங்கள் என்றார்களாம்!

அதற்கு சாமியார் மறுத்துக் கூற முடியாமல் விழித்தார். உடனே சாமியாரைககட்டி பாடையில் வைத்து சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று அங்கு கொளுத்தினால் தானாகவே சாமியார் மோட்சம் போய்ச் சேருவார் என்று அங்கிருந்த எல்லோரும் கூறியவுடன், சாமியாரைக் கட்டி, சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றார்கள். அதுவரை சாமியார் தன் விஷயத்தை வெளியில் கூறவில்லை. இறுதியில் நெருப்பு வைத்துக் கொளுத்தும் சமயத்தில், என்னை விடுங்கள் நான் உண்மையைச் சொல்லி விடுகிறேன் என்று சொல்லி, நான் இதுவரை செய்ததெல்லாம் உங்களிடம் பணம் காசு சம்பாதிப்பதற்கே ஆகும். மோட்சம் நரகம் என்பதும் அதற்கு நான் சீட்டுக் கொடுப்பதும் பெரும்பித்தலாட்டம் என்று சொல்லியவுடன் சாமியாரை அடித்து உதைத்து இனி இந்த ஊர்பபக்கமே திரும்பக்கூடாது என்று துரத்தினார்களாம்.

------------------24.4.1956 எடைகீழையூர் (மன்னார்குடி) குமாரசாமி நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு "விடுதலை" 10.6.1956

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உடனடியாக ஆணை வரவேண்டும்

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசே, உடனே ஆணையிடுக!
பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டப்படியான
நாடாளுமன்றக் குழுவை அமைத்திடுக!

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்
கழகத்தின் சார்பில் கடிதம்
வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்!

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க முன்வரவேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கான பார்லிமெண்டரி கமிட்டியை காலந்தாழ்ந்த நிலையில் உடனே அமைத்திடவேண்டும். கட்சி வேறுபாடு இல்லாமல் இதற்குக் குரல் கொடுத்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் பாராட்டி வரவேற்கிறோம். அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் திராவிடர் கழகம் கடிதம் எழுதும். இப்பிரச்சினை வெற்றியடையும் வரையில் வற்புறுத்தி செயலில் இறங்க முற்படுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நேற்று, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினைச் சார்ந்த அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து, முக்கியமாக மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு சூழ்ச்சி தாமதம்

1. மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரம் சேர்க்கப்படுவது அவசர அவசியமாகும். 1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப்பின் ஜாதிவாரி மக்கள் தொகைக்கான சரியான புள்ளி விவரங்கள் இல்லை என்பதால், இது மிக முக்கியம் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் வலியுறுத்தியதோடு, உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு, சமூகநீதி சம்பந்தமான வழக்குகள் நடைபெறும் போதெல்லாம் நீதிபதிகள் வழக்கமாக எழுப்பும் கேள்விகளாகவும் இவை உள்ளன. எனவே, மத்திய கணக்கெடுப்பு (சென்சஸ்) 2011 இல் நடப்பதில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க, கட்சித் தலைமைகள், மத்திய அமைச்சரவை அதன் குழு எல்லாம் முடிவு செய்த பிறகும் காலதாமதம் செய்வது மிகப்பெரிய சமூக அநீதியாகும். ஆட்சியில் உள்ள உயர்ஜாதி அதிகார வர்க்கத்தின் ஆளுமை காரணமான சூழ்ச்சியாகும்!

இடைக்கால தீர்ப்பு போன்றதொரு ஆணை

தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்குமேல் அமலில் இருந்துவரும் 69 சதவிகித ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீடுபற்றி வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்றுவரும் நிலையில், சில மாதங்களுக்குமுன் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் கபாடியா தலைமையில் உள்ள பெஞ்ச், இதற்கு ஓராண்டு அவகாசத்தில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை தமிழ்நாட்டில் உள்ளதையொட்டி இட ஒதுக்கீடுபற்றி, இங்குள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு (மாநிலக் குழு) புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பரிந்துரைத்து, தீர்ப்பு வழங்க உதவலாம் என்கிற ஒரு மிக நியாயமான இடைக்காலத் தீர்ப்பு போன்ற ஓர் ஆணையை வழங்கியுள்ளது.

தி.மு.க. அரசுமீது குறை காணும் ஒரு தலைவர்

இதற்கும்கூட ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் தேவை. தமிழ்நாட்டுத் தலைவர் ஒருவர், மாநில (தி.மு.க.) அரசுமீது குறைகூறும் நோக்கத்தோடு மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திடவேண்டும் என்கிறார்; மண்டல் கமிஷன் அறிக்கைக்குப் பிறகு, அரசியல் சட்டத்தில் இட ஒதுக்கீடு சம்பந்தமான சட்டத் திருத்தங்கள் நமது மற்றும் தி.மு.க. போன்ற ஒத்த கருத்துள்ள இயக்கங்களின் ஒத்துழைப் போடு அரசியல் சட்ட திருத்தங்களாக வந்து, இட ஒதுக்கீடு அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய நிறுவனங் களிலும் கல்வி, வேலை வாய்ப்பில் செயல்படுத்திட வேண்டிய சட்டக் கட்டாயம் இப்போது வந்துவிட்டது. எனவே மத்திய சென்செஸ் ஜாதிவாரி இருந்தால் மத்திய. மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்கும்.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உடனடியாக ஆணை வரவேண்டும்

எனவே, இந்தியா முழுமைக்குமான ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் சரியான புள்ளிவிவரம் தேவை என்னும் போது, நமது முதல்வர் கலைஞர் அவர்களும், மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முழு அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொண்டு வற்புறுத்து கின்றனர்.

எனவே, இனி ஒருபோதும் எந்த சாக்கையும் கூறி மத்திய அரசு காலதாமதம் செய்யக்கூடாது. ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு உடனடியாக ஆணை பிறப்பிக்க முன்வரவேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் பார்லிமெண்டரி கமிட்டி

2. இரண்டாவது, இவ்வளவு பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கையில், அச்சமூகத்தின் உரிமையையும், நலவாழ் வையும் சட்டப்படி பாதுகாக்க, அரசியல் சட்டத்தின் ஜனநாயக நெறிமுறைப்படி, பிற்படுத்தப்பட்டோர் பார்லி மெண்டரி கமிட்டியை பல ஆண்டுகளுக்குமுன்பே ஏற்படுத்தி யிருக்கவேண்டும்; க்ஷநவவநச டயவந வாய நேஎநச காலந் தாழ்ந்தேனும் செய்ய வேண்டியதைச் செய்தால் நல்லது என்பதற்கொப்ப உடனடியாக சபாநாயகர் திருமதி மீராகுமார் அவர்களிடம் பிரதமர் பேசி ஏற்பாடுகளை விரைந்து செய்யவேண்டும். உறுதி அளித்த பிரதமருக்கு நமது நன்றி!

கொலு பொம்மைபோல்...

3. தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் ஒரு சட்டப்படி அமைக்கப்பட்ட குழு (ளுவயவரவடிசல க்ஷடினல) ஆகும். ஆனால், அதற்குரிய சட்ட அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை; அது வெறும், கொலு பொம்மைபோல உள்ளது. இதனால் பிற்படுத்தப்பட்ட சமூக ஊழியர்களின் குறைகள் தீர்க்கப்பட போதிய வாய்ப்பும், வழியும் இல்லை. பிற்படுத்தப்பட்டோருக்கென ஒதுக்கப்படும் நிதி சரியான முறையில் செலவழிக்கப்பட்டு உரியவர்களுக்குப் போய்ச் சேருகிறதா என்று உறுதிப்படுத்தப்பட முடிய வில்லை.

இக்கமிஷனுக்குப் போதிய அதிகாரங்கள் கொடுக்கப் பட்டால், அது அரசின் பணிகளுக்கே மிகப்பெரிய உதவிகரமாக அமையக்கூடும்.

சட்ட மேதை ஜஸ்டீஸ் எம்.என். ராவ் அவர்கள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்குத் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், இவ்வாணையம் மிகவும் பயனுறு வகையில் செயல்பட (நுககநஉவஎந குரஉவடிபே) அதிகாரங் களை அதற்கு அளிப்பது முக்கியமாகும்.

இப்படி முயற்சி எடுத்த பிற்படுத்தப்பட்டோர் நாடாளு மன்றக் குழுவின் அமைப்பாளர் திரு. எம். அனுமந்தராவ் அவர்களையும், அவர்களோடு இணைந்து கட்சி வேறுபாடு கருதாமல் குரல் கொடுக்கும் அத்துணை நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் வெகுவாகப் பாராட்டி வரவேற்கிறோம்.

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு கடிதம்மூலம் வேண்டுகோள் விடுக்கவும், இவை வெற்றியடையும்வரை வற்புறுத்தி செயலில் இறங்கிடவும் இருக்கிறோம்.

சென்னை
27.8.2010

தலைவர்,


திராவிடர் கழகம்.

27.8.10

பூணூல் போட்டவன் கேட்கிற கேள்வி

ஜாதியின் பெயரால் கட்சி நடத்துகிறவர்கள்
திராவிடர் இயக்கத்தைப் பற்றி பேசலாமா?
தமிழர் தலைவர் தர்க்க ரீதியான கேள்வி

ஜாதியின் பெயரால் கட்சி நடத்துகிறவர்கள் சமூக நீதியைப் பற்றியும், திராவிடர் இயக்கங்களைப் பற்றியும் பேசலாமா? என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் 17.8.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

கடவுள் எப்படியப்பா இருப்பார் என்று கேட்டால் கடவுளை வணங்குகிறவன், நான் நம்புகிறேன் என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டுப் போய்விடுகின்றான். அவனிடம் போய் நாம் எப்படி மாரடிக்க முடியும்? (கைதட்டல்). நம்புவதற்கு உனக்கு உரிமை உண்டு. அறிவு பூர்வமாக ஆராய்வதற்கு உனக்கு ஏன் தயக்கம்?

கண்டவர் விண்டிலர்

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் அப்படி என்றால் என்ன அர்த்தம்? பார்த்தவன் சொன்னதில்லை. சொன்னவன் பார்த்ததில்லை. அப்படியானால் அதற்குப் பெயர் என்ன? ஆனாலும் அதை எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கின்றானே. அது மாதிரி நம்முடைய நாட்டில் கடவுள் மூடநம்பிக்கை மட்டுமல்ல; அரசியலிலும் பல வகையான மூடநம்பிக்கைகள் பல பேருக்கு இருக்கிறது.

அரசியலுக்கு திடீரென வந்தவர்

அரசியலில் திடீரென்று வந்த காரணத்தினாலே அவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று கருதுகிறார்கள். ஆகவே அதைப் பற்றி எல்லாம் நாம் கவலைப்படாமல் இந்த இயக்கம் முழுக்க, முழுக்க சமுதாயத்திற்காகப் பாடுபடுகின்ற இயக்கம். சமூகநீதியைப் பரப்புகின்ற இயக்கம். அதற்காகத்தான் விடுதலை ஏடு இருக்கிறது. விடுதலையில் பார்த்தீர்களேயானால் எல்லா கேள்விகளுக்கும் தெளிவான பதில் கிடைக்கும். விடுதலையில் வரலாறு இருக்கும்.

இங்கே சொன்னார். அழகாக மனிதநேயர். கேள்வி கேட்டு தூண்டி விட்டுவிடுவான். நாம் அறிவு பூர்மாக பதில் சொன்னால் நம்மாள்களுக்கு அவ்வளவு சுலபமாக விளங்காது.

பூணூல் போட்டவன் கேட்கிற கேள்வி

ஏங்க! ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்லு கின்றீர்கள். ஆனால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று சொல்லுகின்றீர்களே இது எப்படிங்க? பெரியார் கொள்கைக்கே விரோதம் இல்லையா? என்று சொல்லுவான்.

நம்மாளும் விஷயம் தெரியாமல் ஆமாங்க, அது விரோதம் தாங்க என்று சொல்லுவான். சொல்லு கிறவன் யார்? முதுகில் பூணூல் போட்டிருக் கின்றவன். ஜாதியைக் கணக்கெடுக்க வேண்டும் என்று சொல்லுகின்றவன் யார்? வெறும் முதுகுக்காரன். இராமகோபாலன் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று ஒரு கூட்டத்தில் பேசினார். வாங்க, சட்டையைக் கழற்றுவோம்

இரண்டு பேரும் ஓர் இடத்தில் கூடுவோம். இரண்டு பேரும் சட்டையைக் கழற்றுவோம். முதுகில் பூணூல் உள்ளவர், ஜாதியைக் கணக் கெடுக்கக் கூடாது. ஜாதியைப் போடக்கூடாது என்று சொல்லுகிறார்.

நான் ஜாதியை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டவன். கணக்கிற்கு ஜாதி வேண்டும் என்று சொல்லுகின்றவன். ஏனென்றால் இதை வைத்துத் தான் நீதிமன்றத்தில் கேட்கிறான். பிற்படுத்தப் பட்டவன் தாழ்த்தப்பட்டவன் எத்தனை சதவிகிதம் இருக்கிறீர்கள். அதன்படிதான் இடஒதுக்கீட்டைக் கொடுக்க முடியும் என்று நீதிமன்றத்திலே கேட் கின்றான்.

1931க்குப் பிறகு இல்லையே

அந்த இடஒதுக்கீட்டைப் புள்ளிவிவரத்தோடு சொல்லுங்கள் என்று கேட்கின்றார்கள். 1931இல் தான் ஜனத்தொகை கணக்கெடுப்பு நடை பெற்றிருக்கிறது. அதற்கப்புறம் ஜாதிவாரி கணக் கெடுப்பு இல்லையே. இப்பொழுது எவ்வளவு என்று கேட்கின்றான்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்கு பதில் சொல்ல, இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற, சமூக நீதியைக் காப்பாற்றுவதற்காக ஜாதிவாரி கணக் கெடுப்புத் தேவை என்று சொல்லுகின்றோம்.

அரசியல் சட்டத்தில் என்ன உள்ளது?

எதிலே இவர்கள் ஜாதியை விட்டிருக்கின்றார்கள்? பார்ப்பனர்களுக்கு ஆவணி அவிட்டத்தின் பொழுது பூணூல் மாற்ற விடுமுறை விடுகின்றார்கள். பழைய பூணூலைக் கழற்றி விட்டு புதிய பூணூலைப் போடுகின்றான். பூணூல் எதற்கு அடையாளம்? முதுகு சொரிவதற்கு வதிசயாக இருக்கிறது என்பதற்காகவா அது. ஜாதியின் சின்னம்தானே பூணூல். ஆவணி அவிட்டம் கொண்டாடுகின்றவன், ஜாதி வாரி கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லுகின்றான். வித்தியாசமே இருக்கக்கூடாது என்று சொல்லுகின்ற நாங்கள் ஜாதி வாரியாகக் கணக் கெடுப்பு நடத்தவேண்டும் என்று கேட்கின்றோம்.

ஏன்? ஜாதி இன்னமும் ஒழியவில்லையே. அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்று இல்லை. அரசியல் சட்டத்தில் ஜாதியை ஒழித்திருந்தால் நாம் கேட்கமாட்டோம். ஜாதியை ஒழிக்க வில்லையே.

கட்சியின் பெயரில் ஜாதி

ஒவ்வொருத்தன் பெயருக்குப் பின்னாலும் ஜாதி இருக்கிறது. நம்முடைய நாட்டில் கட்சித் தலைவர்கள் பெயரிலேயே ஜாதி இருக்கிறது. ஜாதியை வைத்துக்கொண்டே பல பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஜாதி என்கின்ற மூலதனம் இல்லை என்றால் அவர்களால் வாழ முடியாது. ஜாதியை ஒழிக்க வந்தவன் ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை என்று சொல்லுகின்றான். ஜாதியை ஒழிக்காத, ஜாதியில் ஊறிப்போனவன் அய்யய்யோ ஜாதி வாரிக்கணக்கெடுப்பு நடத்துவதா என்று கேட்டால் என்ன அர்த்தம்? அடையாளம் தெரியாமல் உள்ளே புகுந்துவிட வேண்டும். தாங்கள் ஏற்கெனவே அடைந்திருக்கிற நூற்றுக்கு நூறு சுரண்டல் இருக்கிறதே, அது தொடரவேண்டும் என்பதுதானே அவர்களின் எண்ணம்?

சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ்

இதை நாள்தோறும் விளக்குவதற்கு விடுதலை இதழ் தேவை. இந்த மேடைகள் தேவை. எனவேதான் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும் இயங்கும் ஆட்சியிலே கலைஞர் அவர்கள் செய்வார்கள். அதற்கு முன்னாலே சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ் படை மாதிரி ஒரு இராணுவம் முன்னாலே செல்லும். சாலை அமைப்பது, பாலம் போடுவதை முன்னாலே சென்று செய்யும்.

அந்தப் பணிதான் திராவிடர் கழகத்தினுடைய பணி (கைதட்டல்). ஆகவே எங்களைப் பொறுத்த வரையிலே இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருப்போம். காலம் காலமாக இந்த மாதிரி ஒரு ஆட்சி இந்தியாவின் வரலாற்றிலே கிடையாது. தமிழ்நாட்டிலே இப்பொழுது அய்ந்தாவது முறையாகப் பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறாரே கலைஞர். இந்த மாதிரி ஒரு ஆட்சியை நீங்கள் காட்ட முடியாது.

வாக்குறுதியை நிறைவேற்றியதற்கு வழக்கா?

உலகத்தில், ஜனநாயகத்தில் உள்ள நிலைமை ஒரு சின்ன விசயம். தேர்தல் வாக்குறுதி என்று ஒன்றைக் கொடுப்பார்கள். யாரும் தேர்தல் வாக்குறுதியை தேர்தல் அறிக்கையைப் பார்க்கவே மாட்டார்கள்.

ஆனால் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கைகள் கலர் டி.வி கொடுப்போம் என்பதிலிருந்து, 1 கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு கொடுப்பதிலிருந்து இவை எல்லாம் பார்த்தீர்களே யானால் இவை எல்லாம் முடியுமா? என்று சவால் விட்டார்கள். அத்தனையையும் செய்து முடித்து விட்டு, தேர்தல் வாக்குறுதியாக இல்லாத வாக்குறுதி

குடிசைகளே இல்லாத கான்கிரீட் வீடுகள், நேற்று கூட ஒவ்வொரு கான்கீரிட் வீட்டிற்கும் ரூ.75 ஆயிரம் என்று அறிவித்திருக்கின்றார். விவசாயி களுக்கு பழைய மோட்டாரை எடுத்துவிட்டு புதிது போடுகிறோம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

இன்னும் என்ன செய்ய?

கலைஞர் அவர்கள் இன்னும் என்ன செய்யப் போகிறார் என்றே தெரியவில்லை. விவசாயிகளுக்கு என்ன குறை சொல்வது என்றும் தெரியவில்லை. ஒருவன் தமிழ்நாட்டிலிருந்து போய் திமுக ஆட்சி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டி ருக்கின்றான்.

இந்த டி.வி. செட்டை எங்கு பார்த்தாலும் சொன்னபடி கொடுக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டும். உலகத்தில் இதற்கு முன்பு அரசியல் கட்சிகளை குற்றம் சொல்ல வேண்டுமானால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக வழக்கு போடலாம். தேர்தலின்பொழுது சொன்னார்கள். இந்தக் காரியத்தைச் செய்யவில்லை என்று.

இப்பொழுது வழக்கு எப்படி வந்திருக்கிற தென்றால், தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றினார்கள்? அது தப்பு; அதைத் தடுங்கள் என்று வழக்குப் போடக்கூடிய அளவிற்கு வந்ததென்றால், இது ஒன்றே போதும். திமுக ஆட்சி தனித்தன்மையாக இந்தியாவிலேயே வேறு. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? இந்த மாதிரி விசித்திர நிலையை எங்காவது காண முடியுமா? முதலில் என்ன சொன்னார்கள்? இதே ஆள்கள் கலர் டி.வி., இலவச எரிவாயு, எல்லாம் கொடுக்க முடியுமா? அம்மா சொல்லுவார்கள் இதெல்லாம் நடக்குமா என்று சொன்னார்கள்.

இன்னொருத்தர் சொன்னார் டி.வியை அப்படியே கொடுத்தாலும் அதைப் பார்க்க முடியுமா? அது ரிப்பேர் ஆகிவிடும் என்று சொன்னார்கள். இதை எல்லாம் தாண்டி அடுத்த கட்டம் தேர்தல் வரப்போகிறது என்றவுடன் டி.வி. கொடுக்கி றார்களா? அதைத் தடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு செயல்திறன் உள்ள ஓர் ஆட்சியாக உள்ள கலைஞர் ஆட்சியைத் தடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த...

எனவே மக்களுடைய அறியாமை மக்களுடைய விழிப்புணர்வைத் தேவையான அளவுக்கு உருவாக்க வேண்டும். அதற்குத் தேவை பிரச்சாரம், பிரச்சாரம், பிரச்சாரம் செய்ய வேண்டும்.

ஆளுங்கட்சியும் கூட, தங்களுடைய சாதனைகளே போதும் என்று கருதிக் கொண்டிருக்கக் கூடாது. இது போன்ற கூட்டங்களை அவ்வப்பொழுது கிராமங்கள் உள்பட போட்டு, அவர்கள் செய்த காரியங்களை மக்கள் மத்தியிலே விளக்கமாகச் சொல்ல வேண்டும். எதிர்க்கட்சிகள் எங்கேயாவது வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்.

தி.மு.க ஆட்சியின் சாதனைகள்

அதற்கு ஏடுகள் தேவை. மற்ற ஏடுகளில் பார்த்தீர்களேயானால் நேர்மாறாக எழுதுவார்கள். தி.மு.க ஆட்சியின் சாதனைகளைச் சொல்லுவதற்கு இரண்டு ஏடுகள்தான் இருக்கின்றன. ஒன்று முரசொலி மற்றொன்று விடுதலை. அதிலேயும் ஆளும் கட்சிக்கு சில ரிசர்வேஷன்கள் இருக்கிறது. சில எல்லைகள் உண்டு. எங்களுக்கு அதெல்லாம் கிடையாது.

நாங்கள் துணிந்து எதை வேண்டுமானாலும் சொல்லுவோம். எதை வேண்டுமானாலும் எழுதுவோம். அய்யா சொல்லுவார்: எதையும் சிந்தியுங்கள் கேட்டால் கேளு. விட்டால் விடு. எனக்கென்ன இருக்கிறது என்று சொல்லுவார். பெரியார் அய்யா நல்ல உதாரணம் சொன்னார். ஒருவன் திடீரென்று சொன்னான். உலகில் எந்த வங்கி காலாவதியானாலும் எனக்குக் கவலை இல்லை என்று சொன்னான்.

எந்த வங்கி வீழ்ந்தாலும் எனக்குக் கவலை இல்லை

எல்லோரும் அவரை ஆச்சரியமாகப் பார்த் தார்கள். என்ன இவ்வளவு பெரிய பணக்காரர் போலிருக்கிறதே. எந்த பேங்க் விழுந்தாலும் பரவாயில்லை. எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை என்று சொன்னார்.

அவனவன் கவலைப்படுவான். பேங்க் வீழ்ந்து விட்டால், போட்ட பணம் கிடைக்காது என்று கவலைப்படுவான். உடனே எல்லா செய்தியா ளர்களும் அவரை சுற்றிக்கொண்டு நீங்கள் யாருங்க? அம்பானிக்கு சொந்தக்காரரா அல்லது டாடாவுக்கு சொந்தக்காரரா என்று கேட்டார்கள். அவன் சிரித்துக் கொண்டே சொன்னான், இது என்னய்யா, பெரிய சங்கதி, எந்த பேங்கிலேயும் ஒரு காசு போடவில்லை. எனக்கென்னய்யா கவலை என்று சொன்னானாம். அது மாதிரி எங்களைப் பொறுத்தவரையிலே மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். மக்களுக்கு நன்மை செய்பவர்களை அடையாளம் காட்ட வேண்டியது எங்களுடைய பொறுப்பு.

இந்தச் சமுதாயத்தின் நலனைப் பாதுகாப்பது எங்களுடைய கடமை. அந்த அடிப்படையில்தான் நாங்கள் இந்தப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றோம். எனவே அம்மாப்பேட்டையிலே ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின்னாலே ஓர் அற்புதமான கூட்டத்தை ஏற்பாடு செய்து நல்ல சிந்தனைகளை மக்கள் சிந்திக்கக் கூடிய அளவிற்கு இன்றைக்கு இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறது. இளைஞர்கள் இந்த இயக்கத்தை நோக்கி வரவேண்டும். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இவற்றினுடைய பணியின் மூலமாகத்தான் இன்றைக்கு மூட நம்பிக்கையை ஒழிக்க முடியும்.

மெகா ஊழல்

தினமும் பத்திரிகையைப் பாருங்கள். குடந்தை அருகே சர்வேஸ்வரர் கோயில் தேரிலிருந்து 5 கிலோ வெள்ளித் தகடுகள் கொள்ளை. கடவுள் சர்வ சக்தி படைத்தவன். போலீசிடம்தான் புகார் சொல்ல வேண்டும்.

அதே மாதிரி திருப்பதி கோயில் அறங்காவலர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவுமெகா ஊழல். ஊழலிலேயே மெகா ஊழல் எங்கே என்றால் திருப்பதி கோயிலில்தான். இருக்கிற கடவுள் களிலேயே கேபிடலிஸ்ட் கடவுள் அவர்தான். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏகப்பட்ட ஊழல்.

இந்த இயக்கம் இல்லை என்றால், மக்களிடம் இடித்துச் சொல்வதற்கு வேறு யார் இருக்கிறார்கள்? ஆகவேதான் இந்த இயக்கம், இந்த ஏடுகள் மிக மிக முக்கியம். எப்படி கண்ணை இமை காப்பது போல இந்த இயக்கங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திராவிட மக்களுக்கு உண்டு. தி.க., தி.மு.க தோழர்களுக்கு நன்றி

ஆகவே கட்சி வேறுபாடு இல்லாமல், கருத்து மாறுபாடு என்ன இருந்தாலும்; நீங்கள் அதைத் தெளிவுபடுத்திக்கொள்ள இந்த ஏடுகளைப் படியுங்கள். இந்தக் கூட்டங்களுக்கு வாருங்கள். உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்களின் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்விற்கு பாதுகாப்பான ஒரு வாய்ப்பை உருவாக்கும் என்று கேட்டு, வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி, மிகச் சிறப்பான இந்தக் கூட்டத்தை நடத்திய தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

--------------- "விடுதலை" 27-8-2010

காவி தீவிரவாதமும் ப.சிதம்பரமும்! 1 & 2





டில்லியில் நேற்று அனைத்து மாநிலக் காவல் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதிர்ச்சி ஊட்டும் தகவல் ஒன்றை அதிகார பூர்வமாகத் தெரிவித் துள்ளார்.

தற்போது புதிதாகக் காவி தீவிரவாதம் பரவி வருகிறது. சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் காவி உடை அணிந்தவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒரு சிறு திருத்தம் என்னவென்றால் புதி தாகக் காவி தீவிரவாதம் பரவி வருகிறது என்பதாகும்.

என்றைக்கு இந்து மகா சபையும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார்க் கும்பலும், அவற்றின் அரசியல் வடிவமான ஜனசங்கமும், பாரதீய ஜனதாவும் தோற்றமெடுத்தனவோ, அந்த நொடி முதலே அதன் குருதி ஓட்டத்தில் மதக் கலவர எண்ணங்கள் கருத் தரித்து அவ்வப்போது வாய்ப்புக் கிடைத்த போதெல் லாம் கலவரத்துக்குக் கத்தி தீட்டிதான் வந்திருக் கின்றன. அரசால் நியமனம் செய்யப்பட்ட ஆணையங்களும் ஆதாரப் பூர்வமாகவே இந்தக் கூட்டத்தின் வன்முறைக் கலாச்சாரத்தினை வெளிப் படுத்தியும் உள்ளன. இதற்காகவே இந்த அமைப்பின் முக்கிய கூர்மையான அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பலமுறை தடை செய்யவும் பட்டது.

இந்தியா முழுவதும் நடைபெற்று வந்திருக்கிற பல்வேறு கலவரங்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கும், சங் பரிவார்க் கூட்டத்தின் தலைமை அமைப்புகளுக்கும் சங்கிலித் தொடர்போன்ற இணைப்புகள் இருந்திருக்கின்றன என்ற தகவல் ஆதாரப் பூர்வமாகக் கிடைத்துவிட்டது.

மாலேகான் குண்டு வெடிப்பில் பிரக்யா தாகூர் எனும் சாத்வி (சன்யாசியாம்) லெஃப்டினண்ட் கர்னல் சிறீகாந்த் புரோஹிட், தயானந்த பாண்டே எனும் சங்கராச்சாரியார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட பின்னணியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச் சத்துக்கு வந்தன. இந்தச் சங்கராச்சாரியாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட லாப்டாப் கருவியிலிருந்து அதிர்ச்சியூட்டக்கூடிய சதித் திட்டங்கள் வெளிப்பட்டன. இந்தச் சதித் திட்டங்களையெல்லாம் நுண்மையாக ஆய்வு செய்த ஹேமந்த் கர்கரே என்ற உயர் காவல்துறை அதிகாரி படுகொலை செய்யப்பட்டதும் சாதாரணமான தல்ல. சங்பரிவார் கும்பலின் மிகப் பெரிய சதித் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது கருதப்படுகிறது.

இந்தப் படுகொலையில் சதியுள்ளது என்று மத்திய அமைச்சராக உள்ள ஏ.ஆர். அந்துலேயே கூறி இருக்கிறார் என்றால், இதன் தன்மையைப் புரிந்து கொள்ளலாமே.

புதுடில்லியில் உள்ள ஹெட்லைன்ஸ் டுடே என்னும் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய தகவல்கள் சங் பரிவார்க் கூட்டத்திற்கு நெரி கட்டச் செய்துள்ளன. காவிக் கூட்டத்துக்கும், அதன் தீவிரவாத வன்முறைக் கூட்டத்துக்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பினை அது அம்பலப்படுத்திவிட்டது.

காந்தியார் படுகொலை, தென்காசி சதித்திட்டம், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், மாலேகான் குண்டு வெடிப்பு என்று மிகப் பெரிய வன்முறைப் பாதைகளின் சுவடுகளையெல்லாம் மிகத் திறமையாக உளவுத் துறையையும் விஞ்சிய சாமர்த்தியத்தோடு இந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அலசி எடுத்துத் தோரணமாகத் தொங்க விட்டுவிட்டது.

தாம் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டோம் அதன் மூலம் சட்ட ரீதியான கடுந்தண்டனைக்கு ஆளாக்கப்படப் போகிறோம் என்பதைத் தெளிவாக உணர்ந்த இந்தக் காவிக் கூட்டத்தால் ஆத்திரத்தை அடக்க முடிய வில்லை.

கடந்த மாதம் (ஜூலை 16) புதுடில்லியில் உள்ள அந்தத் தொலைக் காட்சி நிறுவனத்தின் முன் காவிக் கூட்டத்தினர் ஆயிரக்கணக்கில் கூடி அந்நிறுவனத் தைத் தரைமட்டமாக்க ஆவேசமாக எழுந்தனர். காவல் துறையின் சாமர்த்தியத்தால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்பது போல, நான்காவது மாடியில் இருந்த அந்த நிறுவனத்துக்குள் இந்தக் காலிகளாகிய காவிகள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டனர். ஆனாலும் கல்லெறி எனும் கலையில் தேர்ந்தவர்களாயிற்றே! அதைப் பயன்படுத்தி கண்ணாடிக் கதவுகளை யெல்லாம் அடித்துத் தூள் தூளாக்கிவிட்டார்கள்.

இந்த ஆத்திரமே அவர்களின் குற்றங்களுக்கான அளவுகோல் என்பதை மத்திய அரசு அறிந்திருக்க வேண்டும்..

அபினவ் பாரத் என்ற மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டர்களின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் காந்தியார் கொல்லப்பட்ட பின்பு நமக்கு நேர்ந்த கதியை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த தலைவர்களே அலற ஆரம்பித்துள்ளனர்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, மத்திய உள்துறை சட்ட ரீதியாக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமோ, அவற்றைக் கொஞ்சமும் தயக்க மின்றி எடுத்தாகவேண்டும். இல்லையென்றால், நிவர்த்திக்க முடியாத கடும் விலையை இந்தியா கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.

--------------------- “விடுதலை” தலையங்கம் 26-8-2010

*******************************************************************************


காவி தீவிரவாதமும் ப. சிதம்பரமும் (2)

காவிக் கூட்டத்தின் வன்முறைக் கலாச்சாரம் நாளும் நாளும் கொம்புசீவிக் கொண்டு பாய்வதற்கு முக்கியக் காரணம் 1992 டிசம்பர் 6 இல் ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான காவிகள் கூடி, திட்டமிட்ட வகையில் பெரிய தலைவர்களின் நேரடி வழிகாட்டு தலில், 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினார்களே அந்தக் குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படாதது தான்.

கொடிய குற்றம் செய்த அந்தத் தலைவர்கள் இந்தியாவின் பிரதமராகவும், துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும், மத்திய அமைச்சர்களாக வும் மாநில முதலமைச்சர்களாகவும் வர முடிந்தது என்றால், இதைவிட கேடுகெட்டத் தனத்தை உலகில் எந்தச் சந்தில் போய்த் தேடுவது?

குஜராத் மாநிலத்தில் அரச பயங்கரவாதமாக காவல்துறையின் துணை கொண்டு, முதலமைச்சரின் வழிகாட்டுதல்படியும், கட்டளைப்படியும் அம்மாநிலம் முழுவதும் உள்ள முஸ்லிம்களை நரவேட்டையாடி, பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று கிழித்து, அவர்கள் வணிக நிறுவனங்களையும், வீடுகளையும், உடைமைகளையும் தீக்கு இரையாக்கிய நிலையில் அவர்களின் மீண்டும் அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என்றால், காவிகள் கொட்டம் உற்சாகத்துடன் நடைபெறத்தானே செய்யும்! இந்தக் குற்றங்கள்மீது விசாரணை நடத்த நியமிக் கப்பட்ட ஆணையங்கள் நத்தை வேகத்தில் நடந்து, பல்லாண்டு களை விழுங்கி, கோடிக்கணக்கான ரூபாய்களைச் சாப்பிட்டு, பாம்பும் நோகாமல், பாம்பை அடித்த கொம்பும் நோகாமல் அறிக்கை கொடுக்கின்றன என்றால், இந்த நாட்டில் எந்த அதீதமான குற்றங்களையும், வன்முறை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எப்படி தயக்கம் காட்டுவார்கள்?

பாபர் மசூதியை நாங்கள்தான் இடித்தோம். உங்களால் என்ன செய்ய முடியும் என்று நாடாளு மன்றத்திலேயே பா.ஜ.க.வின் நாடாளுமன்றத் தலைவர் சுஷ்மா சுவராஜ் முழங்கினாரே இதற்குமேல் என்ன இருக்கிறது?

இந்தியாவின் முகத்தில் உலகம் பூசிய கறுப்புச் சாயத்தின் மேல் மேலும் அழுத்தமாக தார் அடித்துக் கொண்ட கேவலம்தான் இது!

மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கியக் குற்றவாளி யான சிறீகாந்த் புரோகித் என்பவர் இசுரேல் நாட்டுடன் கையிணைத்து, இந்தியாவிற்குள் ஓர் இந்து சாம்ராஜ் ஜியத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார் என்பதும், அவர் இராணுவத்தில் உயர் அதிகாரி என்பதும் எவ் வளவு பெரிய திடுக்கிட வைக்கும் அபாயகரமான சேதி.

அந்த ஆசாமி பிணை பெற்று இந்த நாட்டில் ராஜ கம்பீரமாக நடைபோட முடிகிறது என்றால், இந்திய நாட்டின் நிருவாக லட்சணமும், காவல்துறை, நீதித்துறையின் நீர்த்துப்போன செயல்பாடுகளையும் கண்டு உலகம் நகைக்காதா?

96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பா.ஜ.க. வில் சேர்க்கப்பட்டனரே அதன் பொருள் என்ன? உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களுக்குப் புரியாதா?

பா.ஜ.க. மத்திய ஆட்சியில் இருந்தபோது, இராணுவத்தில் ஏராளமான ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திணிக்கப்பட்டனர் என்று சொன்னவர், தெருவில் போகும் குப்பனும், சுப்பனும் அல்லர் விமானப் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத்.

2006 ஆம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமி யாவில் நடைபெற்ற விழா ஒன்றிற்கு வருகை தந்த இந்திய நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி அவர்களை, பெட்ரோல் குண்டுவீசி தீர்த்துக் கட்டத் திட்டமிட்டிருந்தனர் என்பதை அறிந்த பிறகும் கூட, உள்துறை புதிதாகத் தெரிந்துகொள்வதற்கோ, புலனாய்வதற்கோ எஞ்சியிருப்பது என்ன?

மக்களைக் கூட்டி வைத்து, கிறித்துவர்களையும், முசுலிம்களையும், மதச் சார்பின்மை பேசும் இந்துக் களையும் குத்திக் கிழிக்க பொதுக்கூட்டம் போட்டு, பல்லாயிரக்கணக்கானவர்களைக் கூட்டி வைத்து பகிரங்கமாக திரிசூலங்களை வழங்குகின்றனர் என்றால், இது நாடா? கடும் புலிகள் துள்ளிக் குதிக்கும் காடா? என்ற கேள்வி கண்டிப்பாக எழுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் சொல்கிறார் புதிதாக காவி தீவிரவாதம் தலையெடுத்திருக்கிறது என்று. இன்னும் தொடக்க நிலையில்தான் மத்திய அரசு இருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்று கிறது.

இந்தக் கூட்டம் தேர்தலில் நிற்க அருகதை உடையதுதானா? சட்டம் இதற்குச் சம்மதிக்கிறதா? இந்தக் கோணத்தில் இந்திய அரசு ஏன் சிந்திக்கக் கூடாது? அதிகாரத்திற்குச் செல்லும் விறகை இழுத் தால், இந்தக் கூட்டம் அந்தக் கணமே அஸ்தமனம் ஆகிவிடுமே!

-------------------------”விடுதலை” தலையங்கம் 27-8-2010

பெரியார் என்னும் வீரியம் ஆரியத்தை அழித்துக் கொண்டு இருக்கிறது

உ.பி.க்குப்பெரியார்அந்நியரா?


உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சி செல் வாக்குப் பெற்ற விதமே தனித்தன்மை யானது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களும், சிறுபான்மையினருமே இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள்; அவர்கள் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும் பகுஜன் என்பது இதுதான்! ஆனால் இன்றோ, இதற்கு மாறாக சிறுபான்மை எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர் களின் கையில்தான் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் பகுஜன் சமாஜ் கட்சியைக் கண்டார் மதிப்பிற்குரிய கான்ஷிராம்.

இந்தியாவின் மிகப் பெரிய மாநில மான உத்தரப்பிரதேசத்திலேயே இந்தக் கொள்கையை அரங்கேற்றினார். இதன் நோக்கத்தை வெற்றி புரிக்கும் அழைத்துச் சென்றார். அதன் அடையாளமாகவே செல்வி மாயாவதி என்னும் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் முதல் அமைச்சர் நாற்காலியில் கம்பீரமாக வீற்றிருக்க முடிந்தது.

அந்த உணர்வைக் கடைசிவரை கொண்டு செல்லாமல் நொடித்துப் போன அரசியல் சேற்றில் சிக்கி தமது கட்சிக்கே பொது செயலாளராகப் பார்ப்பனரை அமர்த்திக் கொள்ளும் நிலைக்கு ஆளானது பரிதாபமே!

உ.பி. தலைநகரான லக்னோவில் 1995 செப்டம்பரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா அரசு விழாவாகவே எடுக் கப்பட்டது.

இந்தியாவிலேயே 12 சதவிகிதத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்கள் வாழும் மாநிலம் உத்தரப்பிரதேசம்! பல பிரதமர்களைத் தந்த மாநிலம் அங்கு பெரியாருக்கு விழா என்றால் சாதாரணமா?

லக்னோவில் நடு நாயகமான இடத்தில் பரிவர்த்தன் சவுக் என்ற பூங்கா உருவாக்கப்பட்டது. தந்தை பெரியார் ஜோதிபா பூலே, சாகுமகராஜ், நாராயணகுரு, அண்ணல் அம்பேத்கர் ஆகிய சமூகப் புரட்சியாளர்களுக்கு அப்பூங்காவில் சிலைகள் நிறுவுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இவ்விழா எடுக்கப்பட்ட சில நாள்களிலேயே உ.பி.யில் மாயாவதியின் ஆட்சியைக் கவிழ்த்தது ஆரியம்.

அதன்பின் சிறிய இடைவெளிக் குப்பிறகு மீண்டும் அரியணை ஏறினார் அம்மையார். பாரதீய ஜனதா கட்சி கயோடுகூட சமரச உடன்படிக்கை செய்து கொண்டார்.

அய்ம்பெரும் தலைவர்களின் தனிப் பட்டியலிலிருந்து தந்தை பெரியாரை அகற்றிக்கொண்டார் அதன் மூலம் ஆரியத்தின் சுவீகாரப் புத்திரியாக ஆகலாம் என்று மனப்பால் குடித்தார்.

Periyar No More On ‘Great Leaders’ என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தலைப்பிட்டுச் செய்தியை வெளியிட்டது. (6.12.2007)

பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பொதுச் செயலாளராக உ.பி.யின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் சதிஸ் சந்திர மிஸ்ரா என்ற பார்ப்பனர் ஆக்கப்பட்டார். ஆனாலும் அந்தப் பார்ப்பனர் எந்த வகையிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைக் கோட்பாடுகளைத் தீண்டிக் கொள்ளவில்லை.

மாயாவதி முதல் அமைச்சராகப் பதவியேற்ற தருணத்தில், ஏழு பார்ப்பன அமைச்சர்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாயாவதியின் காலைத் தொட்டு விடாமல் ஏற்பாடு செய்து கொண்டார். அதே நேரத்தில் அந்த ஏழு பார்ப்பன அமைச்சர்களும், அந்த சதீஷ் மிஸ்ராவின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டுச் சென்றனர்.

என்னே நவீன வருணாசிரம தர்மத்துச் சர்ப்பம்!

உ.பி.யில் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்னும் நெருப்பு சோம்பிப் போய்விடவில்லை.

சூத்ரா என்ற ஓர் அமைப்பு உருவானது. அதுகுறித்து பார்ப்பன, இதழான ஜூனியர் விகடனே செய்தி வெளியிட்டது. (5.2.2006)

பார்ப்பனர்கள் ஒரு மசூதியை உடைத்து 5ஆண்டு ஆட்சி செய்யும்போது, நாங்கள் ஏன் 100 இந்துக் கோயில்களை உடைத்து 500 ஆண்டு காலம் ஆட்சி செலுத்த முடியாது என்ற வினாவை எழுப்பினர்.

பெரியார் விழாவை கொண்டாடி ராமன் உருவத்திற்குச் செருப்பு மாலை சூட்டினார்கள்.

இந்தியாவின் அரசியல் தலையெழுத்தையும் நிர்ணயிக்கக் கூடியது உத்தரப்பிரதேசம் என்று சொல்லப்படுவது உண்டு. இப்பொழுது அந்த மாநிலம் இரு கூறாக்கப்பட்டுவிட்டது உத்தரகாண்ட் உருவாகி விட்டது.

உ.பி.யில் எப்படியும் காலூன்ற வேண்டும் என்பதிலே காங்கிரஸ் குறியாக உள்ளது. இளையத் திலகமாக நெற்றியில் குங்குமத் திலகமிட்டுத் தூக்கி நிறுத்தப்படும் ராகுல் காந்தி உ.பி.யில் வியூகங்களை வகுத்துச் செயல்படுகிறாராம்.

சமூக நீதித் தலைவர்களாக உ.பி.யில் வலம் வரும் தலைவர்கள்மீது காங்கிரசின் கவனக் கணை பதிந்து வருகிறது. அம்பேத்கரைத் தவிர மற்ற நான்கு தலைவர்களும் அவரவர் மாநிலத்தில் சமூகப் போராட்டத்தை நடத்தியவர்கள்.

உள்ளூர் சமூகப் போராட்ட வீரர்களை நாங்கள் கையில் எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்கிறது காங்கிரஸ்; 5 ஆயிரம் சமூகப் போராளிகளை அவர்கள் பட்டியலிட்டு வைத்துள்ளார்களாம்.

லக்னோவில் தந்தை பெரியார் விழாவை எடுத்த தற்கான காரணத்தை கான்சிராம் செய்தியாளர் களிடம் வெளிப்படுத்தினார் (17.9.1995).

மற்ற நான்கு தலைவர்களும் பார்ப்பனர்களை எதிர்த்தனர் என்றாலும், மிகுதியும் பார்ப்பனர்கள் பாதிக்கப்பட்டது தந்தை பெரியார் அவர்களால்தான் என்று குறிப்பிட்டார். (17.9.1995) ஆனாலும், அகில இந்திய தேசியம் பேசும் காங்கிரசோ பிராந்தியத் தலைவர்களைத் தேடி அலைகிறது.

உண்மையைச் சொல்லப் போனால் உ.பி.க்கும் தந்தை பெரியார் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டே!

1944இல் (டிசம்பர் 29,30,31) ஆகிய மூன்று நாட் களிலும் உ.பி. கான்பூரில் அகில இந்திய பிற்படுத் தப்பட்டோர் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட் டுக்கு தந்தை பெரியார் அழைக்கப்பட்டார். அம்மாநாட்டுக்குத் தலைமை தாங்கி ஜாதி ஒழிப்புத் திட்டம் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

ஜாதி ஒழிப்பு என்பது புண்ணுக்குப் புனுகு பூசுவதல்ல அறுவை சிகிச்சையின் மூலம்தான் அதனை அகற்ற முடியும். ஜாதியின் ஆணிவேர் இந்துமதமும், இந்து சாஸ்திரங்கள், வேதங்கள், இதிகாசங்கள் இவைதாம். ஆகவே ஜாதி ஒழிக்கப்பட வேண்டுமானால், அதற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய இந்து மதக் கடவுள்கள், இந்து மத சரஸ்திர, வேத, இதிகாசங்கள், புராணங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற விரிவாக எடுத்துரைத்தார். தந்தை பெரியாரின் எழுச்சிமிகு எரிமலை உரையைக் கேட்ட மக்கள் திரண்டு எழுந்தனர். தீர்க்கமான முழக்கங்களை எழுப்பினார்.

இராவணாக்கி ஜே! (இராவணன் வாழ்க!) சம்புக்கி ஜே (சம்பூகன் வாழ்க!) இராமன் நாஸ்தி (ராமன் ஒழிக), சீதை நாஸ்தி (சீதை ஒழிக) என்று இடி முழக்கம் செய்தனர் (குடிஅரசு 13.1.1945).

1959இல் மீண்டும் ஒரு முறை வடநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பகுத்தறிவுப் பகலவன். கான்பூரில் தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு அதற்கு முன் கண்டிராதது. பெரியார் இராமசாமி ஜிந்தாபாத்! பம்மன் பாரத் சோடுதோ! (பார்ப்பானே, இந்தியாவை விட்டு வெளியேறு!)

நேரு ஜாதி நை சலேகி நை சலேகி!

(நேருவின் ஜம்பம் இனி பலிக்காது) என்று முழக்கமிட்டனர். குடியரசுக் கட்சியின் (ரிபப்ளிக்கன் பார்ட்டி) தொண்டர்கள் உருவிய வாளுடன் நின்று தந்தை பெரியார் அவர்களுக்குக் கொடுத்த வரவேற்பு அசாதாரணமானதே!

லக்னோவிலும், கான்பூரிலும், அலிகார் போன்ற இடங்களிலும் இருந்த முசுலிம்கள் தந்தை பெரியாரைச் சந்தித்து, பார்ப்பனர்களின் ஆதிக்கப் பிடியிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டனர். லக்னோ பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரை மாணவர்களை வீறு கொள்ளச் செய்தது. இந்து மகாசபை, ஜன சங்கம், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எதிர்த்துக் கூச்சல் போட்டும் பார்த்தனர்; பார்ப்பனர் அல்லாத மக்களின் எழுச்சி அவர்களை அடங்கச் செய்தது.

உ.பி.யில் தந்தை பெரியார் பயணம் செய்ததன் விளைவு, தந்தை பெரியார் எழுதிய இராமாயணப் பாத்திரங்கள் எனும் நூல் சச்சு இராமாயண் என்று இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டது. உ.பி. அரசு தடை செய்தது; ஆனாலும் உச்சநீதிமன்றம் அந்தத் தடையை விலக்கியது.

1968இல் மீண்டும் ஒருமுறை வேன் மூலமாக தந்தை பெரியார் உத்தரப்பிரதேசம் சென்றார். லக்னோவில் நடந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட சிறுபான்மை வகுப்பினர் மாநாட்டில் பங்கு கொண்டார். அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி. வீரமணி முதலியோர் உடன் சென்றிருந்தனர்.

தந்தை பெரியார் அவர்கள் உரையை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். மற்றொருவர் அதனை இந்தியில் மொழி பெயர்த்துச் சொன்னார்.

இழிவு நீங்கிட, டில்லி ஆட்சியிலிருந்து விலகுவதே ஒரே வழி என்றார் தந்தைபெரியார். இந்திய அரசியல் சட்டம் என்பது தங்கள் உணர்வுக்காகப் பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்து கொண்டது என்றும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.

உ.பி.க்கும், தந்தை பெரியார் அவர்களுக்கும் நெருக்கமான இந்த உறவைப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது புரிந்து கொண்டு வேண்டும் என்றோ பெரியார் வேறு மாநிலத்தவர் என்ற ஒரு பிரச்சாரத்தைக் காங்கிரசார் முடுக்கி விடுகின்றனர்.

தந்தை பெரியார் மருந்து உ.பி.யில் பரவுமேயானால் அது உயர் ஜாதி ஆதிக்கத்தின் வேருக்கு வைக்கப்படும் அதிர்வேட்டு என்ற அச்சத்தால்கூட இந்தத் தந்திரத்தை அவர்கள் கையாளலாம்.

தந்தை பெரியார் மறைவுற்று 37 ஆண்டுகள் கடந்த பிறகும், பெரியார் என்னும் வீரியம் ஆரியத்தை அன்றாடம் அரற்றிக் கொண்டும், அழித்துக் கொண்டும் இருக்கிறது என்பது மட்டும் உண்மை உண்மையிலும் உண்மையே!

----------21-8-2010 ”விடுதலை” ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

26.8.10

தந்தை பெரியாரின் பழக்கங்கள்


கேள்வி: தங்களைப் போல் 95 வயது வரையிலும் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

பதில்: எப்போதும் ஆக்டிவாக (சுறுசுறுப்பாக) இருக்கவேண்டும்.

கேள்வி: இந்த வயதிலும், தாங்கள் பல மைல்கள் சுற்றுப் பயணம் செய்கிறீர்களே, உடல் நலம் பாதிக்காதா?

பதில்: வயதிற்கும், இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. என்னைப் பொறுத்த வரை சும்மா இருக்கப் பிடிக்காது. சுற்றுப்பயணம் செய்தால்தான் நன்றாக இருக்கிறது.

கேள்வி: எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?

பதில்: சாதாரணமாக இரவு 8, 9 மணிக்குத் தூங்கிவிடுவேன். பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் இருந்தால், இரவு 11 மணிக்கு மேல் தூங்குவேன். எப்படியும், 8 மணி நேரம் தூங்கிவிடுகிறேன்.

கேள்வி: தங்கள் உணவுப் பழக்கம் என்னென்ன?

பதில்: எப்பொழுதும், காலை 6 மணிக்கு எழுந்துவிடுவேன். 8 மணிக்கு 2 இட்டிலி, ஒரு வாழைப்பழம் சாப்பிடுவேன். முன்பெல்லாம், 4, 3 வாழைப் பழங்கள் சாப்பிட முடிந்தது. ஆனால், இப்போது ஒரு பழத்திற்கு மேல் சாப்பிட முடியவில்லை. அதன் பிறகு, பார்வையாளர்களைச் சந்திப்பேன். இடையிடையே சிறிது காப்பி, பால் அருந்துவேன். மதியம் 12_1 மணிக்குள் ஒரு கரண்டி சாதம், சிறிதளவு மாமிசம், தயிர், குருமா, ஒரு வாழைப்பழம் இதுதான் ஆகாரம். மாமிசம் சாப்பிடாவிட்டால், அவ்வளவு திருப்திகரமாக இருக்காது.

நிருபர்: மாமிசம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி பாதிக்கப்படவில்லையா?

பதில்: என்னைப் பொறுத்தவரை, மற்ற உணவுப் பதார்த்தங்களைவிட மாமிசம் சாப்பிட்டால் ஜீரணமாகிவிடுகிறது. அதனால் எந்தவிதத் தொந்தரவும் கிடையாது. மாமிசம் இல்லாவிட்டால்தான் தொந்தரவு. இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் 2 இட்டிலி, ஒரு வாழைப்பழம், ஒரு டம்ளர் பால், அத்துடன் சரி. காப்பியும், பாலும்தான் முக்கிய உணவு.

கேள்வி: ஒரு நாள் பொழுதை எப்படிக் கழிக்கிறீர்கள்?

பதில்: முன்பெல்லாம் நிறையப் புத்தகங்கள் படிப்பேன்; எழுதுவேன். ஆனால் இப்போது படிக்கக் கஷ்டமாக இருக்கிறது. எழுதுவதற்குச் சலிப்பாக இருக்கிறது.

யாராவது கட்டுரைகள் கேட்டால் எழுதித் தருவேன். அத்துடன் முன்பு மாதிரி மூளை தெளிவாக இல்லை. கஷ்டப்பட்டுச் சிந்திக்க வேண்டி இருக்கிறது. முன்பெல்லாம் ஒன்றைப் பற்றித் தொடர்ச்சியாக வரும். ஆனால் இப்பொழுது நினைவாற்றல் குறைந்துவருகிறது.

கேள்வி: மது அருந்தும் பழக்கம் பற்றித் தங்கள் கருத்து என்ன? தங்களுடைய அனுபவத்தை அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

பதில்: இதுநாள் வரை நான் மதுவை அருந்தியதே இல்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை பலருக்கு வாங்கிக்கொடுத்து இருக்கிறேன். மது அருந்துவதால் கெடுதி இல்லை. அளவுக்கு மேல் போனால்தான் எதுவுமே கெடுதலே தவிர, அளவோடு இருந்தால் எந்தவிதக் கெடுதலும் இல்லை. 100க்கு 90 பேர் அளவோடுதான் குடிக்கிறார்கள்.

கேள்வி: முன்பெல்லாம் மாலை நேரங்களில் கார் மூலம் உலாவப் போவீர்களே, இப்போது போவதுண்டா?

பதில்: என்றைக்காவது ஒரு நாள் போவேன். முன்புபோல் இப்போது போக முடிவதில்லை. பொழுது போகவே கஷ்டமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட சமயங்களில் போவதுண்டு.

கேள்வி: கிளர்ச்சி, போராட்டம் நடத்த வேண்டும் என்கிறீர்களே, அது எப்படி இருக்கும்?

பதில்: என் உடல் வேண்டுமானால் தளர்ந்திருக்கலாம். ஆனால், நான் அவற்றில் நேரடியாகவே ஈடுபட நினைக்கிறேன். நான் என்ன சொல்லுகிறேனோ, அதை நானே முன்னின்று செய்தால்தானே நன்றாக இருக்கும்? ஒதுங்கிக்கொள்வது என்பது எனக்குப் பிடிக்காது.

கேள்வி: ஒரு குறிப்பிட்ட இனத்தார்மீது தங்களுக்கு வெறுப்பு ஏற்படக் காரணம், தாங்கள் அரசியலில் ஈடுபட்ட சமயத்தில் முதல் முதலாக ஒரு விருந்தில் தாங்கள் அலட்சியமாக நடத்தப்பட்டதுதான் என்று சொல்லப்படுகிறதே, அதுதான் உண்மையா?

பதில்: எனக்கு, யார் மீதும் வெறுப்புக் கிடையாது. நான் எதையும் லட்சியம் செய்யாமல், முரட்டுத்தனமாக யதேச்சையாகத் திரிந்தேன். அந்தச் சமயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும் சமுதாயத்தில் இருந்த மூடப்பழக்க வழக்கங்களும்தான் காரணமே தவிர, வேறு காரணம் எதுவுமில்லை. ஆனால், அந்தக் காலத்தில் விருந்துகளில்கூட நம்மை மிக இழிவாகவும், தரக் குறைவாகவும் நடத்தி ஒதுக்கியே வந்தார்கள்.

---------------மாலை முரசு 16.09.1973 -நாளிதழுக்கு பெரியார் அவர்கள் அளித்த நேர்காணல்

சுருட்டுப் பிடிக்கும் பிராமணன் அடுத்த ஜென்மத்தில் பன்றியாய்ப் பிறப்பான்?


பன்றி அய்யர்

புகையிலையினால் வரும் ஆபத்து குறித்து நிறைய தகவல்கள் நாள்தோறும் வந்து கொண்டு இருக்கின்றன. உலகில் தேவைப்படும் புகையிலையில் 85 விழுக்காடு இந்தியாவில் உற்பத்தியாகிறதாம். 44 லட்சம் தொழிலாளர்கள் பீடி, சுருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

புகையிலையை உபயோகிப்பதன் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு மரணத்தை வரவழைத்துக் கொள்பவர்கள் 8 லட்சம் பேர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அக்பரின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவில் இருந்து ஒரு கிறித்துவப் பாதிரியாரால் புகையிலை இந்தியா வந்தடைந்தது.

இந்தப் புகையிலை பற்றி இந்து மதப் புராண மான பத்ம புராணம் இவ்வாறு கூறுகிறது.

தாம்ப்ர பாணர தம் விப்ரம் நரஹ

தாதாரோ நரகம் யாதிப் ராமணோக் ராம சூக்ர ஹ:

இதன் கருத்து : தரும வான்கள் சுருட்டுப் பிடிக்கும் பிராமணர்களுக்குத் தருமம் செய்யக்கூடாது. அப்படித் தருமம் செய்யும் தருமவான் நரகத்துக்குத் தான் போவான். மேலும் சுருட்டுப் பிடிக்கும் பிராமணன் அடுத்த ஜென்மத்தில் பன்றியாய்ப் பிறப்பான் என்றும் கூறப்பட்டுள்ளது.

அக்பர் காலத்தில் சுருட்டு அறிமுகமாகி இருந்தாலும், அவுரங் கசீப், குரு கோவிந்தசிங் ஆகிய இருவரும் சுருட்டைத் தடை செய்துள்ளார்கள். ஒரு 300 அல்லது 350ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு அறிமுகமான சுருட்டுப் பற்றி பத்ம புராணம் பேசுகிறது என்றால், இந்தப் புராணம் அக் கால கட்டத்திற்குப் பின்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

சுருட்டுக் குடிப்பதால் ஆபத்து என்று சொல்லும் கருத்து மிகவும் நியாயமான ஒன்றுதான். அதில் கூட பிராமணர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் மட்டுமே எழுதப்பட்டிருப் பதைக் கவனிக்க வேண்டும்.

அது ஒரு புறம் இருக்கட்டும். சுருட்டுக் குடிக்கும் பிராமணன் அடுத்த ஜென்மத்தில் பன்றியாய்ப் பிறப்பான் என்று பத்ம புராணத்தில் கூறி இருப்பதால், இப்பொழுதெல்லாம் தெருக்களிலும், சாக்கடையிலும் திரிந்து கொண்டிருக்கும் இந்தப் பன்றிகள் எல்லாம் யார்? போன ஜென்மத்தில் சுருட்டுக் குடித்த பார்ப் பனர்கள்தானே. அப்படி என்றால் இந்தப் பன்றிகளுக்கு சாமா சாஸ்திரி, குப்புசாமி அய்யர், ஆராவமுது அய்யங்கார், பூவராக சர்மா என்று செல்லமாகப் பெயர் சூட்டி அழைக்கலாம் அல்லவா?

----------------- மயிலாடன் அவர்கள் 22-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

திராவிடர் இயக்கம் இல்லை என்றால்....

2400 கோடி ரூபாய் சேதுகால்வாய் திட்டத்திற்கு
மூடநம்பிக்கையால் முட்டுக்கட்டை போட்டுள்ளனர் சிலர்
அம்மாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு

ராமன் பாலன் என்ற மூடநம்பிக்கையைச் சொல்லி 2400 கோடி ரூபாய் சேது கால்வாய் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். மூட நம்பிக்கையாளர்கள் சிலர் காரணமாகி விட்டார்கள் என்று திராவிடர் கழக தலைவர் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் 17.8.2010 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

இந்தப் பகுதிக்கு வரும்பொழுது எண்ணிக்கொண்டே வந்தேன்

அம்மாப்பேட்டை நிகழ்ச்சிக்கு நாங்கள் வரும்பொழுது இந்தப் பகுதியில் இயக்கத்திற்காக அந்தக் காலத்தில் பாடுபட்ட மறைந்தும், மறையாமல் நம் நெஞ்சங்களிலே நிறைந்திருக்கின்ற தோழர் ராமு அவர்களை நினைத்துக்கொண்டே வந்தேன்.

தந்தை பெரியார் அவர்கள் ரயில் சுற்றுப் பயணம், போராட்டங்களுக்குச் சென்ற காலங் களிலே அம்மாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு வருகிற நேரத்தில் கூட, அவர்கள் தன்னந்தனியராக அமைதியாக வருவார்கள். அதற்குப் பிறகும் அவர்கள் தொடர்ந்து இங்கே பணியாற்றினார்கள். அதுபோல பல தோழர்கள் உண்டு.

நேரத்தின் நெருக்கடியில் நினைவாற்றலை கூர்மைப்படுத்திக்கொண்டு சொல்ல கடமைப் பட்டிருக்கின்றேன். இங்கே பாராட்டப்பட்ட இவர்கள் எல்லாம் கட்டிய மேடைதான். பலம் வாய்ந்த மேடை. இவர்களுடைய உழைப்பு இல்லாவிட்டால் இந்த இயக்கம் இவ்வளவு பலமாக இருக்காது.

87 வயது இளைஞர்கலைஞர்

இன்றைக்கும் நம்முடைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 87வயது இளைஞராக இருந்து ஓர் அரிய அறைகூவலை அண்மைக் காலத்திலே விட்டார்கள். ஏதோ இந்த ஆட்சி முடிந்துவிடும் என்பதுபோல சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்குச் சொல்லுகின்றோம். திராவிடர் இயக்கத்தினுடைய வரலாற்றை, திராவிடத்தை வெல்ல இனி யாருக்கும் துணிவு கிடையாது. வாய்ப்புக் கிடையாது. (கைதட்டல்). அவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இதை எளிதில் எந்தக் கொம்பனாலும் புரட்டி விட முடியாது என்று தெளிவாகச் சொன்னார்கள்.

வரலாறே தெரியாது

அதற்கு என்ன காரணம்? சிலர் கொச்சையாகப் பேசுகிறார்கள் என்று சொன்னார்கள். சொல்லு கிறவர்கள் வரலாறு தெரிந்தவர்களா? என்றால் இல்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கே வரலாறு இல்லை. (கைதட்டல்). வரலாறு தெரிந்த வர்களாக இருப்பது ஒன்று; வரலாறு இல்லாத வர்களாக இருப்பது மற்றொன்று. நாளைக்கொரு பேச்சு

அந்த வகையிலே எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று கருதுகிறார்கள். ஆளுக்கொரு பேச்சு. நாளைக்கு ஒரு பேச்சு. எங்கேயிருக்கிறோம். என்ன செய்யப் போகிறோம். என்று தெரியாதவர்கள் பாவம் பதற்றத்தினாலே எதை எதையோ சொல்லுகிறார்கள்.

இந்த இயக்கம்திராவிடர் இயக்கம் தாய்க்கழகம். அடித்தளத்திலே இருக்கக் கூடிய இந்த இயக்கம் இருக்கிறதே, இதனுடைய இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகத்தான் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் எப்பொழுதுமே ஒலிக்கும் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த மாபெரும் நிகழ்ச்சியை நீங்கள் பார்க்கின்றீர்கள். எங்களுடைய தோழர்கள் ஒன்றிய நிலையிலே இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

அரசியலுக்குச் செல்லாத இயக்கம்

காரணம் என்ன? அரசியலுக்குச் செல்லாத இயக்கம் திராவிடர் கழகம். ஆனால் அதே நேரத்திலே அரசியலை நிர்ணயிக்கின்ற இயக்கம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. (கைதட்டல்).

அரசியலைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்று அலட்சியமாக இருக்க மாட்டோம். நான் அடிக்கடி நண்பர்களுக்கு, இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பிலேகூட ஒரு செய்தியைச் சொல்வ துண்டு. நம்முடைய நாட்டிலே பொதுவான எத்தனையோ பழமொழிகள் உண்டு.

ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?

அதிலே ஒரு பழமொழி என்னவென்றால் மற்றவர்களைப் பற்றி, கொஞ்சம் அலட்சியமாக இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்லுவார்கள் என்று சொன்னால் ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?

சாதாரணமாக கிராமப் பகுதிகளில் சொல்லு வார்கள் . ஆனால் அது பொறுப்பற்றவர் களுடைய பழமொழி. தேர்தலுக்கு நிற்காத திராவிடர் கழகத்தினுடைய நிலை என்ன? ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று விட்டுவிடக்கூடிய இயக்கமல்ல.

மாறாக தெளிவான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய மக்களுக்கு வழிகாட்டக் கூடிய ஓர் இயக்கம். எப்படி என்று சொன்னால், ராமன் ஆட்சியாக இருந்தால் அந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும். ராவணன் ஆட்சியாக இருந்தால் அதைப் பாதுகாக்க வேண்டும். அந்த ஆட்சிக்கு அரணாக இருக்க வேண்டும். ராமன் என்கிற மூட நம்பிக்கையின் விளைவாக 2400 கோடி ரூபாய் சேதுசமுத்திர கால்வாய் திட்டம் என்ன ஆனது?

150 ஆண்டுகால கனவு

தமிழர்களுடைய நல்வாழ்விற்காக 150 ஆண்டுகாலம் கண்ட கனவுகளை கலைஞர் அவர்களுடைய அரிய திறத்தினாலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மிகப்பெரிய வாய்ப் பினாலே சேதுசமுத்திர திட்டம் முடிவடைந்து இந்நேரம் அந்தக் கால்வாயில் கப்பல் ஓடியிருக்க வேண்டும்.

அதைத் தடுத்த சக்திகள் எங்கிருந்து கிளம்பி யிருக்கின்றன? இங்கேதான் நீங்கள் சிந்திக்க வேண்டும். காரணம் என்ன? மூடநம்பிக்கை. என்ன சொல்லுகிறார்கள்? ராமன் கட்டிய பாலம் என்று சொல்லுகிறார்கள். இந்த மூட நம்பிக்கையினுடைய தாக்கம் உச்சநீதிமன்றம் வரையிலே போய் நிற்கிறது.

2400 கோடி ரூபாய் திட்டம்

2400 கோடி ரூபாய் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு வைத்துவிட்டார்கள். மக்களுடைய வரிப்பணம் முடிந்துவிட்டது. இன்னும் 12 கி.மீ தூரம் கூட இல்லை. அது மட்டுமல்ல. இந்த சேது சமுத்திர திட்டத்தைத் துவக்கியவர்கள் யார் என்றால், யார் எதிர்க்கிறார்களோ அவர்கள்தான் துவக்கினார்கள்.

முகவரி இல்லாத சிலர்

ஆறாவது வழித்தடம் சரியானது என்று சொல்லியே துவக்கினார்கள். எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தினாலோ அல்லது அய்க்கிய முற்போக்குக் கூட்டணியினாலோ அல்லது பிரதமர் மன்மோகன் சிங், அல்லது சோனியா காந்தி தலைமை தாங்கிய கட்டத்திலோ வந்ததல்ல. வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்திலேயே, பி.ஜே.பி ஆட்சி இருந்த காலத்திலேயே பல்வேறு வழித்தடங்களை ஆராய்ந்து ஆறாவது வழித்தடம்தான் சரியானது, என்று அனுமதி வழங்கியது.

இன்றைக்கு வழக்கு நீதிமன்றத்திலே இருக்கிறது. முகவரி இல்லாத அரசியல் தரகர்கள் சுப்பிர மணியசாமி போன்றவர்கள் இந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டேன் என்று சொன்னால் அதனால் மக்களுக்கு எவ்வளவு பெரியகேடு? இதற்கு அடித்தளம் எங்கே போய் நிற்கிறதென்று சொன்னால் ராமர் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று சொல்லுகின்றான்.

ராமன் என்று ஒருவன் இருந்தானா?

ராமன் என்று ஒரு பயல் பிறந்தானா என்பதே சந்தேகம். ஆனால் அவன் பாலம் கட்டினான் என்றான். சரி, கதைப்படி அந்தக் காலத்தில் பாலம் கட்டக்கூடிய வாய்ப்பு இருந்ததா? என்று ஆராய்ச்சி செய்தால் நம்முடைய நாட்டிலே எவ்வளவு காலத்திற்கு முன்னாலே பாலம் கட்டக்கூடிய நிலை இருந்தது என்று சொன்னால், 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாலே பாலம் கட்டினான் என்று சொல்லுகின்றான்.

17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பாலம் கட்ட முடியுமா? பல அரசியல் கட்சிகளுக்கு பயம் உண்டு. அய்யோ ராமனைப் பற்றிச் சொன்னால் ஓட்டு போய்விடுமோ? அல்லது மக்களைப் புண்படுத்தக் கூடியதாக இருந்து விடுமோ என்று எண்ணுகிறார்கள். ஆனால் திராவிடர் இயக்கம் என்று சொல்லக்கூடிய திராவிடர் கழகம் இந்த ராமன் பற்றிய மூடநம்பிக்கையைத் தாக்கிய காரணத்தினாலே, இதை மக்கள் மத்தியிலே எடுத்துச் சொன்ன காரணத்தினாலே இது ராமன் கட்டிய பாலம் அல்ல; அதைப்பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை என்று சொன்ன துணிவான முதலமைச்சர் யார் என்றால் இந்தியாவிலேயே ஒரே ஒரு முதலமைச்சர் தான் உண்டு. அவர்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை இங்கே நடத்திக்கொண்டிருக்கிறார்.

தி.க.தி.மு.க இணைந்து ஆற்றும் பணி

இன்னமும் அரசியல் களத்திலே நின்று மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றார். எனவே இந்த இயக்கத்திற்கு அப்படிப்பட்ட ஒரு பாரம்பரியம் உண்டு. இது சாதாரண விசயமல்ல. திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இது இரண்டும் இணைந்து இந்தப் பணியை செய்தது என்று சொன்னால், ஒன்று மூடநம்பிக்கையை எதிர்க்கின்ற இயக்கங்கள். இன்னொரு பக்கத்திலே மூடநம்பிக்கையை எதிர்ப்பது மட்டுமல்ல; அதைத் தகர்த்து மக்களுக்குப் பயன்படக் கூடிய அளவிலே வர வேண்டும் என்று சொன்னால், அதற்குரிய வாய்ப்பை சாலையைப் போட்டு வேகமாக செல்லக்கூடிய இயக்கங்கள். இந்த இயக்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். எங்களுடைய தோழர்கள் முதுகில் அலகு குத்தி காரை இழுத்தது புண்படுத்துவதற்காக அல்ல. பக்தர்களை சங்கடப் படுத்துவதற்காக அல்ல. எங்களுக்கு என்ன வேறு வேலையே இல்லையா?

மூடநம்பிக்கைகள் இருக்கின்ற காரணத்தால் தான் அந்த மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி ராமனைக்காட்டி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கருதுகின்றார்கள்.

ராமா உன் ஆட்சியில்...

ராமன் படத்தைக் கொளுத்தினார்கள். ராமனை செருப்பால் அடித்தார்கள். இந்த நிகழ்ச்சி எல்லாம் தமிழ்நாட்டிலே நடந்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்ததென்றால் எதற்காக?

புராணத்தில் அவனே எழுதி வைத்திருக் கின்றானே. ஒருவன் ராமனிடம் முறையிடுகின்றான். ராமா, உன்னுடைய ராம ராஜ்யத்தில் இவ்வளவு பெரிய அக்கிரமம் நடக்கிறது. என்ன அக்கிரமம் என்று கேட்கிறான். என்னடைய பையன் செத்துப் போனது உன்னால்தான். உன் ஆட்சியில்தான் என் பையனுடைய உயிர் போய்விட்டது என்று சொல்லுகின்றான்.

நான் எப்படி பொறுப்பு என்று ராமன் கேட்கின்றான். மனுதர்மப்படி ஆட்சி நடக்கவில்லை. குலதர்மப்படி ஆட்சி நடக்கவில்லை என்று சொல்லு கின்றான். ராமனுக்கு ஒன்றுமே புரியவில்லை. சூத்திரன் கடவுளை அடைய நேரடியாக தவம் செய்யக் கூடிய உரிமை கிடையாது. ஆனால் சம்பூகன் என்ற சூத்திரன். தவம் செய்து கொண்டி ருக்கின்றான். நேராக கடவுளைத் தொழுகின்றான்.

தர்மம் கெட்டுப்போய்விட்டது அவன் எங்கள் மூலம்தான் கடவுளை வணங்க வேண்டும். அதாவது பார்ப்பனர்கள் மூலம்தான் கடவுளை வணங்க வேண்டும். அதைவிட்டு விட்டு நேரடியாக அவன் தவம் செய்வதற்குப் போனான். தவம் செய்வதற்குப் போனதினாலே தர்மம் கெட்டுப்போய்விட்டது. எந்த தர்மம்?

மனுதர்மம்குலதர்மம் கெட்டுப்போய்விட்டது. அதனால் என் பையன் செத்துப்போனான். அவன் பிழைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? கடவுளை நேரடியாகத் தொழுத சம்பூகனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

ராமன் சம்பூகனை வெட்டினான்

ஒரு விசாரணையும் இல்லை. ராமன் நேராகப் புறப்படுகின்றான். நான் கதையில் இருக்கிறபடி சொல்லுகின்றேன். இந்த சம்பவம் நடந்ததா? இல்லையா? என்பது முக்கியமல்ல.

இதனுடைய தத்துவம் மிக முக்கியம். நேராகப் போகின்றான். தவம் பண்ணுவதினாலே யாருக்கு என்ன இடைஞ்சல்? அவன் ஊருக்கு ஒதுக்குப் புறத்திலே கண்ணை மூடிக்கொண்டு இல்லாத கடவுளைத் தேடிக்கொண்டிருக்கின்றான். எத்தனை வருடம் தேடினாலும் கிடைக்கப் போவதில்லை. அது வேறு செய்தி. ஆனால் ராமன் என்ன செய்கிறான்? வாளை உருவி சம்பூகணை கண்டந்துண்டமாக வெட்டுகிறான். சம்பூகன் கீழே விழுந்தவுடனே செத்துப் போன பார்ப்பன சிறுவன் உயிர் பெற்று எழுந்தான் என்று கதை எழுதி வைத்திருக்கின்றான்.

இந்த இயக்கத்தில் பக்குவமானவர்

எனவே ராமராஜ்யத்தில் ராமன் செய்த மிகப்பெரிய காரியமென்ன? இந்தக் கொலைச் செயல்தானே? ஆகவே சூத்திர மக்களாகிய நாம் இதை எப்படி ஏற்றுக்கொள்வோம்? இன்றைக்கு அது என்ன வென்று தெரியாமலே நம்முடைய மூளையில் ஏற்றிவிட்டானே!

நூறு தடவை ராமஜெயம் எழுதினால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்கிறான். ராமஜெயம் என்று எழுதினால் என்ன அர்த்தம். சம்பூகனுக்குத் தோல்வி என்று அர்த்தம். ராமஜெயம் எழுதினால் அதனுடைய தத்துவம் என்ன? மனுதர்மத்திற்கு வெற்றி என்று அர்த்தம், குலதர்மத்திற்கு வெற்றி என்று அர்த்தம். ஆகவே இதை எடுத்துச் சொல்வதற்கு தந்தை பெரியாருடைய இயக்கத்தை விட்டால் வேறு நாதி உண்டா? (கைதட்டல்)

கலைஞர் ஆட்சியைத் தவிர, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைத் தவிர, வேறு எந்த ஆட்சியாக இருந்தாலும் அது பார்ப்பன மனுதர்ம ஆட்சியாகத்தான் இருக்கும். அதனால்தான் கலைஞர் அவர்கள் அந்தத் துணிச்சலைப் பெற்றி ருக்கின்றார். இந்த இயக்கத்திலிருந்து பக்குவமானவர்.

தி.மு.கவினுடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பலபேருக்குத் தெரியும். கலைஞர் அவர்கள் ரொம்ப அடக்கமாக இருந்து, எல்லோ ருக்கும் மரியாதை கொடுத்து பகைவனுக்கும் அருள்வாய்! என்று ரொம்ப சாந்தமாகப் போகின்றார். ஏனென்றால் அவர் அந்தப் பொறுப்பிலே இருக் கின்றவர். அரணில் இருப்பவரின் வேலை

பாதுகாப்பு அரணில் இருக்கிறவன்துப்பாக்கி வைத்திருக்கிறவன் கொஞ்சம் சந்தேகப்பட்டாலும் சுட்டுவிடுவான். உள்ளே இருக்கிறவர் ஏன் என்று கேட்டால், நான் சந்தேகப்பட்டேன், சுட்டேன். நான் அலட்சியமாக இருந்திருந்தால் உங்களுக்கு ஆபத்து என்று சொல்லுவார். அதுதான் அரணில், பாது காப்பில் இருக்கிறவனுடைய வேலை.

(தொடரும்) -------------"விடுதலை” 25-8-2010

************************************************************************************

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தமிழகத்திற்கு வந்தபொழுது
கதவை சாத்தச் சொன்ன சமூகநீதிப் போராளி யார்?
அம்மாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் தமிழகத்திற்கு வந்தபொழுது அவரைப் பார்க்காதீர் கதவை சாத்திக்கொள்ளுங்கள் என்று சொன்ன சமூக நீதிப் போராளி யார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் 17.8.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பதவி இல்லையென்றாலும் .....

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிற்க வேண்டும் என்பதற்காகப் பிறந்த இயக்கமல்ல. பதவி கிடைத்தாலும் அந்த இயக்கம் இருக்கும். பதவி இல்லையென்றாலும் அந்த இயக்கம் இருக்கும். அப்படி இருந்துகொண்டிருக்கிறது என்கின்ற வரலாற்றை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் இன்றைக்குப் பாக்கிறோமே. நேற்று வரை பதவியில் இருந்துவிட்டு இன்று காலை பதவி கிடைக்கவில்லை என்று சொன்னவுடனே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறதே அதனுடைய விளைவுதானே ஆத்திரத்தோடு நம்முடைய சகோதரர்கள் இங்கே பேசினார்கள்.

சமூகநீதியைப் பேசத் தகுதி இல்லையா?

சமூகநீதியைப் பொறுத்த வரையிலே திராவிட இயக்கங்கள் பேசுவதற்கு தகுதி இல்லை என்று ஒருவர் சொல்லுகிறார் என்றால் என்ன அர்த்தம்? அவர் யாராக இருந்தாலும், எப்பேர்ப்பட்ட தலைவராக இருந்தாலும் அவருக்கும், தமிழ்நாட்டு வரலாற்றுக்குச் சம்பந்தம் உண்டா? திராவிடர் இயக்கம் பிறந்ததே சமூகநீதியினால்தான் (கைதட்டல்). இதை யாராவது மறுக்க முடியுமா? யாராவது மறுக்கட்டும்.

சமூகநீதி என்ற வார்த்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பிரபலப்படுத்தப் பட்டதற்கு முதல் காரணம் திராவிடர் இயக்கம்தான்.

வி.பி.சிங் அவர்களைத் தவிர மிகப்பெரிய சமூக நீதிக்காவலர் வேறு யார்? வி.பி.சிங் அவர்கள் சென்னையில் வந்து பேசும்பொழுது சொன்னார். தமிழ்நாட்டில் சென்னைதான் சமூகநீதிக்கு அடித்தளமான, மூலதனமான தலைநகரம் என்று சொன்னார் (கைதட்டல்).

அந்தத் தமிழ்நாடுதான் இந்தியாவுக்கே சமூகநீதியை சொல்லிக்கொடுத்தது. இன்றைக்கு சமூகநீதியை அனுபவிக்கின்ற ரொம்ப பேருக்குத் தெரியாது.

தி.மு.க, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலே சாலைகளை எல்லாம் அகலமாக, வேகமாகப் போட்டிருக்கின்றார்கள். திருச்சியி லிருந்து தஞ்சாவூருக்கு முக்கால் மணி நேரத்தில் வந்து விடலாம்.

சாலை போட்டவருக்கு நன்றி சொன்னதுண்டா?

அகலமான சாலையில் மேம்பாலத்தின்மீது போடப்பட்ட சாலையில் வண்டி ஓட்டிக்கொண்டு வருகின்றவர் எவராவது நன்றி சொல்லியிருக் கின்றார்களா? எப்பொழுது, யாரால் சிந்திக்கமுடியும்? ஏற்கெனவே சிக்கலில் இருந்து பலமுறை வருவதற்குத் தாமதமாகி பிறகு அந்த சாலையைப் பயன்படுத்தி அதற்கப்புறம் ரொம்ப சுலபமாக இப்பொழுது சாலையில் வருகிறார்கள், பாருங்கள். இந்த இரண்டையும் உணர்ந்தவர்களால்தான் சாலை போட்டது எவ்வளவு நன்மையைத் தந்துள்ளது என்பது அவர்களுக்குப் புரியும். அது மாதிரிதான் சமூகநீதி.

நான் பேசவேண்டும் என்பதாலேயே மனிதநேயர் எஸ்.எஸ்.ராஜ்குமார் சுருக்கமாக முடித்துக் கொண்டார். நான் ஒன்றே ஒன்றைக் கேட்கிறேன்.

அப்பொழுது இவர் எங்கிருந்தார்?

குலக்கல்வித் திட்டம் என்ற ஒரு திட்டத்தை ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்தாரே. அதனுடைய வரலாறு என்னவென்று சமூகநீதியைப் பற்றிச் சொல்லுகிறவருக்குத் தெரியுமா? அப் பொழுது இவர் எங்கு இருந்தார்? அவருடைய பொது வாழ்க்கையின் துவக்கம் என்ன?

குலக்கல்வித் திட்டத்தை ராஜகோபாலாச் சாரியார் கொண்டு வந்ததிருக்கிறதேஅரை நேரம் மகன் படிக்க வேண்டும். அரை நேரம் அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டும். அதைத் தடுத்து ஒழித்து அந்த இடத்தில் பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசரைக் கொண்டு வந்து அமர்த்திய பெருமை திராவிடர் இயக்கத்தைச் சார்ந்ததல்லவா?

திராவிடர் இயக்கம் இல்லை என்றால்....

திராவிடர் இயக்கம் இல்லையென்றால் என்ன நிலை? இன்றைக்கு முத்தன் மகன் முனியன், குப்பாயி மகள் கருப்பாயி, நியூயார்க்கில் கம்ப்யூட்டர் எஞ்சினியராக இருக்கிறார்கள்.

ஜெர்மனியில் இருக்கிறார்கள். ஆஸ்திரேலி யாவில் இருக்கிறார்கள். அங்கே இருக்கிறேன். இங்கே இருக்கிறேன் என்று சொல்லுகின்றார்கள்.

அப்பாவுக்கு கையெழுத்து போடத்தெரியாது. ஆனால் மகன் வெளிநாட்டிலிருந்து பேசுகிறார். ஹலோஅப்பா எப்படியிருக்கின்றீர்கள்? நான் ஆஸ்திரேலியாவிலிருந்து பேசுகிறேன். அமெரிக்கா விலிருந்து பேசுகிறேன், என்று சொல்லுகின்றான். அமெரிக்கா காரனுக்கே நமது ஊர் கருப்பன் தான் சொல்லிக்கொடுக்கின்றான். நமது ஊர் முனியப்பன் சொல்லிக்கொடுக்கின்றான் (கை தட்டல்). இதெல்லாம் எப்படி நடந்தது? சரஸ்வதி பூஜை கொண்டாடியதால் நடந்ததா? சரஸ்வதி பூஜை வருடா வருடம் கொண்டாடினான். சரசுவதி பாட்டிக்கே கையெழுத்துப் போடத் தெரியாதே.

கையெழுத்துப் போடத் தெரியாது

சரஸ்வதி என்று பெயர் வைத்திருப்பவர்களுக்கே கையெழுத்துப் போடத் தெரியாதே. தந்தை பெரியார் என்ற மாபெரும் வள்ளல் இந்த சமுதாயத்திற்குச் செய்த மகத்தான புரட்சியினாலே இன்றைக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு வந்திருக்கிறது.

எங்கு பார்த்தாலும் பள்ளிகள்; கல்லூரிகள்

தமிழ்நாட்டில் திரும்புகிற பக்கமெல்லாம் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், மெட்ரி குலேசன் பள்ளிகள், எங்கே பார்த்தாலும் பிள்ளைகள் படிப்பு, படிப்பு என்று படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நிறைய பிள்ளைகள் எஞ்சினீயரிங், மருத்து வத்தில் சேர்ந்திருக்கிறார்கள். இன்றைக்கு யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அரசாங் கத்தில் 10ஆயிரம் இடங்களுக்கு மேல் பொறியியல் கல்வியில் இடம் காலியாக இருக்கிறது.

தயவு செய்து ஒன்றே ஒன்றை நினைத்துப் பாருங்கள். 1952க்குப் பிறகு ராஜகோபாலாச் சாரியார் என்று ஒருவர் வந்தாரே, அவர் குலக்கல்வித் திட்டத்தை உண்டாக்கினாரே, அந்தக் குலக்கல்வித் திட்டம் நீடித்து நிலைத்திருந்தால் நம்மவர்கள் பொறியாளர்களாக, டாக்டர்களாக, நீதிபதிகளாக, வக்கீல்களாக சென்றிருக்க முடியுமா? அவரவருடைய அப்பன் தொழிலைத்தானே நாம் செய்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்?

இதை எதிர்த்துப் போராடிய இயக்கம் திராவிடர் இயக்கம். இதைவிட சமூகநீதிக்கு வேறு என்ன செய்ய வேண்டும்? வகுப்புவாரி வரலாறு தெரியுமா?

வகுப்புவாரி உரிமை 1928இல் கொண்டுவரப் பட்டது என்றால், அது தந்தை பெரியார் அவர்களுடைய முயற்சி அல்லவா? அதற்கு அடித்தளம் போட்டது நீதிக்கட்சி அல்லவா?

நீதிக்கட்சி போராடி அதனுடைய தலைவர்கள் எல்லாம் போராடி 1920இல் ஆட்சியைப் பிடித்தது. முத்தையாக்கள், டாக்டர் சுப்பராயன்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்துதானே கம்யூனல் ஜி.ஓ.வைக் கொண்டு வந்தார்கள்?

1928லிருந்து 1950வரை சுதந்திரம் பெற்ற பிறகும் வகுப்புவாரி உரிமை இருந்ததால்தான் நம்மவர்கள் கொஞ்சம் படிக்க ஆரம்பித்தார்கள்.

பார்ப்பனர் சொற்படி மூவேந்தர்களும்

காரணம் என்ன? சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கலாகாது. நமது சேரன், சோழன், பாண்டியன் எல்லோரும் சேர்ந்து என்ன செய்தார்கள்? மூவேந்தர்களும் என்ன செய்தார்கள்?

பார்ப்பானின் சொற்படிதானே நடந்தார்கள். கலைஞர் ஆட்சியில் இன்றைக்கு அப்பேர்ப்பட்ட சூழ்நிலை இல்லை. பார்ப்பனர்களுடைய தர்மம் இங்கே நடைமுறைப்படுத்தப்படவில்லை. மனுதர் மதத்திற்கு இடம் இல்லை. எல்லோர்க்கும் எல்லாமும் என்ற மனித தர்மம் இன்றைக்கு நடைபெறுகின்ற காரணத்தால்தான் இன்றைக்கு எல்லோரும் படிக்கக்கூடிய வாய்ப்பு ஏற் பட்டிருக்கின்றது.

என்னென்ன தடைகள் இருந்ததோ அவைகளை எல்லாம் நீக்கப்பட்டதற்குப் பிறகுதானே இந்த சூழல்? யார் அரசியல் சட்டத்தை உருவாக்கி னார்களோ, அவர்களே வாதாடி, அரசியல் சட்டம் செல்லாது என்று சொன்னவுடனே முதல் இந்திய அரசியல் சட்டத்திருத்தம் 1951இல் பண்டிதர்நேரு, டாக்டர் அண்ணல் அம்பேத்கர் இவர்களெல்லாம் இருந்த காலத்திலே வந்தது என்று சொன்னால் அதற்கு அடித்தளம் எங்கே இருந்து வந்தது? தந்தை பெரியார் அவர்களுடைய போராட்டத்தினாலே விளைந்தது. இதை அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் பாராளுமன்றத்திலே பதிவு செய்திருக்கின்றார்கள்.

முதல் அரசியல் சட்டத்திருத்தம் யாரால்?

இது திராவிடர் இயக்கத்தினுடைய விளைவு அல்லவா? இந்த இயக்கம் போராடியதினுடைய விளைவாகத்தான் முதல் அரசியல் சட்டத் திருத்தமே வந்தது. அதுதான் வகுப்புரிமையை சமூகநீதியைக் காப்பாற்றியது.

அதே மாதிரி 1951லே வந்த சமூகநீதி அரசியல் சட்டத்திருத்தம் 69 சதவிகித இடஒதுக்கீடு என்று வந்தது. அதுவும் திராவிடர் கழகம் எழுதிக் கொடுத்த சட்டம் 31சியைப் பற்றி இங்கு சொன்னார்களே, அனைத்துக் கட்சியையும் கூட்டி, அரசியல் சட்டத்தைத் திருத்தி பெரியார் இல்லாத காலத்திலே அண்ணா இல்லாத காலத்திலே இந்த சாதனையை செய்தோம் என்று சொன்னால் இது திராவிடர் இயக்கத்தின் சாதனை அல்லாமல் வேறு என்ன?

சுருக்கமாக ஒன்றைச் சொல்லுகின்றேன். நேரமில்லை. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஆட்சி நிருவாகத்தை நடத்துகிறவர்கள் இவர்கள்தான். யார் ஆட்சி வந்தாலும்....

யார் அமைச்சராக வந்தாலும், யார் ஆட்சி வந்தாலும் இவர்கள்தான் ஆட்சி நடத்துவார்கள். இந்திரன்கள் மாறினாலும், இந்திராணிகள் மாறமாட்டார்கள் என்று புராணத்தில் கதை சொல்லுகிற மாதிரி அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள்தான் இந்திராணிகள்.

இந்த இடத்தில் நம்மவர்கள் உண்டா? என்றால் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. ஆனால் மண்டல் கமிசன் பரிந்துரை வந்த காரணத்தால் அதை வி.பி.சிங் போன்றவர்கள் செயல்படுத்திய காரணத்தால் இன்றைக்கு மண்டல் கமிசன் பரிந்துரைப்படி 27 சதவிகிதம் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு 23 சதவிகிதம் குறைந்த பட்சம் 50 சதவிகிதம் என்று ஆக்கிய காரணத்தால்தான் இன்றைக்கு தமிழ்நாட்டிலிருந்து ஆண்கள், பெண்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றுத் தேறியிருக்கின்றார்கள்.

வரலாறு காணாத சாதனை

இந்தியாவிலேயே இது வரலாறு காணாத சாதனை. இதை செய்தவர்கள் யார்? இதற்கு என்ன காரணம்? சமூக நீதியைப் பற்றி பேசத் தகுதி இல்லை என்று சொன்னார் பாருங்கள் ஒரு தலைவர்.

அவர் என்ன செய்தார் தெரியுமா? இதை செய்த சமூகநீதிகாவலர் வி.பி.சிங் அவர்கள் சென்னை வந்தபொழுது, வி.பி.சிங்கை பார்க்காதீர்கள். எல்லோரும் கதவை சாத்திக்கொண்டு உள்ளே இருங்கள் என்று சொன்ன சமூகநீதி போராளி அவர்.

இதெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று யாரும் கருதக்கூடாது இப்படி எத்தனையோ செய்திகளை எடுத்துச்சொல்லலாம்.

திராவிடர் இயக்கம் சமூகநீதியின் காவலன்

ஆகவே தமிழ்நாட்டிலே ஒரு சிறு குழந்தைக்குக் கூடத்தெரியும். திராவிடர் இயக்கம் என்று சொன்னால் அது சமூசநீதியினுடைய மிகப்பெரிய காவலன்.

திராவிடர் இயக்கம் இல்லையென்று சொன்னால் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இல்லையென்று சொன்னால் சமூகநீதியில் இட ஒதுக்கீட்டில் நாம் வெற்றி பெற்றிருக்க முடியுமா?

பெரியார் கேட்டார்

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீடு 31 சதவிகிதமாக உயர்த்தப் பட்டது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 சதவிகிதம் இடஒதுக்கீடு என்று இருந்ததை 18 சதவிகிதமாக ஆக்கி 31+18=49 சதவிகிதமாக இடஒதுக்கீடு தமிழகத்திலே வந்தது. அதுவும் சட்டநாதன் அவர்களை கலைஞர் தலைவராகப் போட்டார். சட்டநாதன் கமிஷனைப் போட்டார். பெரியார் காலத்தில் இடஒதுக்கீட்டை இன்னும் அதிகப்படுத்தலாமே என்று கேட்டார். இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பிருக்கிறது என்று சொன்னார்.

50க்கும் கீழ் இடஒதுக்கீடு என்றால் நீங்கள் 49 சதவிகிதம் வரை இடஒதுக்கீட்டைக் கொடுக்க லாமே என்று தந்தை பெரியார் பளிச்சென்று சொன்னார். டெல்லிக்காரர்கள் ஏதாவது சொல்லுவார்களே என்று அதிகாரி, அய்யா அவர்களிடத்திலே சொன்னார். பழைய வரலாறு திருச்சி பெரியார் மாளிகையில் மத்திய அரசுக்குப் பரிந்துரை எப்படி எழுதுவது என்று கேட்டபொழுது பெரியார் சொன்னார்நான் சொல்லுகிறேன் பதிலை அந்த மாதிரி எழுதுங்கள் என்று. இதை பலபேர் தெரிந்துகொள்ள வேண்டும். பழைய வரலாறு மக்களுக்குத் தெரியாது.

பெரியார் சட்ட நுணுக்கத்தோடு சொல்லப் போகிறார் என்று அதிகாரி பேனாவைத் திறந்து பதிலை ஆவலோடு எதிர்பார்த்தார்.

அய்யா சொன்னார்வேறு ஒன்றும் இல்லை. இது சாதாரண விஷயம்தான். நான் சொல்லுகிறபடி எழுதுங்கள். 49 என்பது 50க்குக் கீழேதான் என்று எழுதுங்கள் என்று சொன்னார் (சிரிப்பு கைதட்டல்). உடனே 49 சதவிகிதம் வரை கலைஞர் அவர்கள் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தினார்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 9000 ரூபாய் வருமான வரம்பை எம்.ஜி.ஆர் அவர்கள் கொண்டு வந்த பொழுது அதை எதிர்த்தவர்கள் யார்? திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மற்ற கட்சிகள் அல்லவா?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம் என்று வந்தபொழுது 30 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 20 சதவிகிதம் மிக, மிக பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு என்று கொடுத்தவர் கலைஞர் அல்லவா ஆகவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவிகிதம், மலைவாழ் மக்களுக்கு 1 சதவிகிதம் என்று இடஒதுக்கீடு இன்றைக்கு வழங்கப்படுகிறது.

இந்த 69 சதவிகித இடஒதுக்கீட்டைக் காப்பாற்றி 76ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தில் வைக்கக் கூடிய வாய்ப்பு எப்படி வந்தது? அருள் கூர்ந்து எண்ணிப் பாருங்கள்.

ஆகவேதான் நண்பர்களே! சமூகநீதி என்று சொன்னால் திராவிடர் இயக்கம். திராவிடர் இயக்கம் என்று சொன்னால் சமூகநீதி. இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று பிரிக்கவே முடியாது.

எனவே வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது. யாராவது இதைப் பற்றி விவாதம் செய்யவேண்டும் என்று விரும்பினால் எந்த மேடையிலும் வாதாட நாங்கள் தயாராக இருக்கின்றோம் (கைதட்டல்).

ஆனால் விவாதம் செய்ய வருகிறவர்களுக்கு வரலாறு இருக்கவேண்டும். வரலாறே தெரியாதவர்களிடம் நாம் விவாதம் செய்ய முடியுமா?

---------------(தொடரும்) “விடுதலை” 26-8-2010