Search This Blog

15.6.15

மாணவர் எழுச்சி மகிழ்ச்சியளிக்கிறது!-பெரியார்

மாணவர் எழுச்சி மகிழ்ச்சியளிக்கிறது!

- தந்தை பெரியார்



தகுதி பார்த்துதான் மாணவர்களுக்கு உயர்ந்த படிப்பு, படிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற சட்டம் திராவிட மாணவர்களுக்குப் பெரிதும் கேடு விளைவித்துள்ளது.இச்சட்டம் செய்வதில் அடிப்படையான நோக்கம் திராவிடர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைப் பெருக்குவது என்பதுதான்.

மேலும் ஆங்காங்குள்ள உயர்நிலைப் பள்ளிகளின் பார்ப்பன ஆசிரியர்கள் திராவிட மாணவர்களுக்குப் பலவகையாலும் தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். பல பள்ளிக்கூடங்களில் திராவிட இன உணர்ச்சிபெற்ற திராவிட மாணவர்களைத் தேர்தலில் வெற்றிபெறாவண்ணம் ஆரியத் தலைமையாசிரியர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

வாய்மையில் வழுவாத  திருவள்ளுவரின் படத்தை வகுப்பு அறையில் வைக்கவேண்டுமென்று திராவிட மாணவர்கள் விரும்பினால் அதற்கு ஆரிய ஆசிரியர்கள் பெரும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதோடுமாத்திரமன்றி வடநாட்டுப் பார்ப்பனத் தலைவர்களின் படத்தை திறந்துவையுங்கள் என்று ஞானோபதேசம் செய்கின்றனர். வேறு சில பள்ளிகளில் கருப்புச்சட்டையணிந்து பள்ளிக்குச் செல்லக்கூடாது என்றும், பெரியார் பேட்ஜு சட்டையில் குத்திக் கொண்டு பள்ளிக்குச் செல்லக் கூடாதென்றும் கட்டளையிடுகின்றனர். அதே நேரத்தில் வடநாட்டுத் தலைவர்களின் உருவம் பதித்த  பேட்ஜுகளைக் கதர்ச்சட்டையில் குத்திக்கொண்டு பள்ளிக்குவரும் மாணவர்களைக் கண்டிப்பதில்லை. அதற்கு மாறாகக் கருப்புச் சட்டையணிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களைப் பற்றிப் புகார் செய்யுங்கள் என்று கதர்ச்சட்டை அணிந்த மாணவர்களை ஏவி விடுகின்றனர் பார்ப்பன ஆசிரியர்கள்.

சில பள்ளிகளில் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த குறிப்பிடத்தக்கவர்களைக் கொண்டு கூட்டம் நடத்துகிறார்கள். ஆனால் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களையோ, அல்லது தமிழன் என்ற உணர்ச்சி பெற்றவர்களையோ அவர்கள் எவ்வளவு தகுதியுடையவர்களாயினும் பள்ளிகளில் மாணவர்கள் அழைத்து கூட்டத்தில் பேசவைக்கவேண்டுமென்று விரும்பினால் தலைமையாசிரியர்கள் தடைசெய்கின்றனர். தடை செய்வது மாத்திரமன்றி அப்படிப் பட்டவர்களை வரவழைக்கவேண்டும் என்று கூறும் மாணவர்களின் பிற்கால வாழ்க்கையைக் கெடுத்துவிடவும் செய்கின்றனர். சில மாணவர்கள் எதற்கும் அஞ்சாது இனவுணர்ச்சிபெற்ற திராவிடத் தலைவர்களைக் கொண்டு கூட்டம் நடத்தித்தான் தீருவோம் என்று கூறினால், அரசியலில் சம்பந்தப்பட்டவர்கள் பள்ளிகளில் வந்து சொற்பொழிவாற்றக் கூடாது; அங்ஙனம் அவர்கள் சொற்பொழிவாற்றினால் மாணவர்கள் மனம் சிதறுண்டுவிடும்.   அவர்கள் செவ்வனே பாடங்களைப் படிக்கமாட்டார்கள் என்று பொய்க் காரணத்தைக்காட்டி இனவுணர்ச்சிபெற்ற மாணவர்களின் முயற்சியைத் தடைசெய்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் தகுதியிருப்பினும் இராவிடினும் பள்ளிகளில் வந்து சொற்பொழிவாற்றலாமோவென்று கேட்கிறோம். அவர்கள் மாத்திரம் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களல்லவா? பின்னர் ஏன் திராவிடவுணர்ச்சி பெற்றவர்களையும்,  தமிழன்  என்ற உணர்ச்சி பெற்றவர்களையும் பள்ளிகளில் பேச அனுமதிப்பதில்லை?

சில பள்ளிகளில் திராவிடமாணவர்கள் நன்றாகப்படித்து முதல்  மார்க்கு பெறும் வண்ணம் தேர்வு எழுதினாலும் பார்ப்பன ஆசிரியர்கள் வேண்டுமென்றே அவர்களுக்கு குறைந்த மார்க்கு போட்டுச் சிறிதும் தகுதியில்லாத பார்ப்பன மாணவர்களுக்கு முதல் மார்க்கு கொடுக்கிறார்கள்.

வேறு சில பள்ளிகளில் காலையில், செத்தமொழியான  வடமொழியில்தான் இறை வணக்கம் பாடவேண்டும், தமிழ் மொழியில் இறை வணக்கம் பாடக்கூடாது என்று பார்ப்பன ஆசிரிரியர்கள் கூறுகிறார்கள். மீறி தமிழில்தான் இறைவணக்கம் பாடவேண்டும் என்று சொல்லும் மாணவர்கள் பார்ப்பன ஆசிரியரின் சூழ்ச்சிக்கு ஆளாகாமலிருப்பதில்லை. இன்னும் சில பள்ளிகளில் பார்ப்பன மாணவர்களுக்கெனத் தனியான உணவு விடுதிகளும்,   திராவிட மாணவர்களுக்கென தனியான உணவு விடுதிகளும் வைத்துள்ளனர். சமத்துவத்தையும், சமரசத்தையும் போதிக்கும் பள்ளிகளில் ஜாதி வித்தியாசம் ஏன்? என்று மாணவன் கேட்டால் அப்படிக்கேட்கும் மாணவன் பள்ளியிலிருந்து நீக்கப்படுகின்றான்.

மாணவர்களின் பாடத்திட்டத்தில் திராவிடர் களை அடிமைப்படுத்துவதற்குக் கருவிகளாயிருந்த புராணங்களைச் சேர்த்து அவைகளையும் படித்துத் தேர்ச்சிபெறவேண்டும் என்றுள்ளது. சில பள்ளிகளில் திராவிட உணர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் இருப்பார்களானால் அவ்வாசிரியர் களைத் தொலைத்துக் கட்டுவதற்குப் பார்ப்பன ஆசிரியர்களும், பார்ப்பனப் பாதந்தாங்கும் ஆசிரியர்களும் சதிசெய்கின்றனர்; மாணவர்களைத் தூண்டிவிட்டு இனவுணர்ச்சி பெற்ற நல்லாசிரியர்கள்மீது புகார் செய்யச் சொல்லுகிறார்கள். அதன் காரணமாகப் பல திராவிட ஆசிரியர்கள் வேலையினின்றும் விலக்கப்படுகிறார்கள்.

ஒருசில பள்ளிக்கூடங்களில் பார்ப்பன ஆசிரியர்கள் கருங்காலி மாணவர்களைத் தூண்டிவிட்டு ஆசிரியர்களையும் அடிக்கச் செய்கின்றனர். அடிபட்ட ஆசிரியர் மேலிடத்தில் நியாயத்திற்குச் சென்றால், பார்ப்பன ஆதிக்கம் பெற்ற மேலிடம் நீதி விழைந்து சென்ற ஆசிரியர்தான் தவறிழைத்தவர் என்று தீர்ப்பு கூறுகிறது.

இனவுணர்ச்சி கொண்ட மாணவர்கள் கல்விபயிலும் ஒரு பல்கலைக் கழகத்திற்கே ஆண்டுதோறும் அரசியலார் அளித்துவரும் பணவுதவியை நிறுத்திவிடவேண்டும் என்று சட்டசபையில் கூறப்படுகின்றது.

இன்னும் போகப் போக காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து ஏனைய கட்சியை ஆதரிக்கும் எந்த மாணவனும் கல்விச்சாலையில் கல்வி பயிலக்கூடாது என்று சட்டம் இயற்றினாலும் இயற்றுவார்கள்! யாரறிவார்?

இன்னோரன்ன குறைபாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றிற்கெல்லாம் காரணம் நாட்டு ஆட்சியும், அதிகாரபீடமும் பார்ப்பனர்களிடத்திலும், அவர்களின் அடிவருடி களிடத்திலும் இருப்பதுதான். இந்நிலை மாறினால் ஒழிய திராவிட மாணவர்களின் இழிவு நீங்காது என்று திட்டமாகக் கூறிவிடலாம்.

இவற்றை மாற்றுவதற்குத் திராவிட மாணவர்கள் என்ன செய்யமுடிவு செய்துள்ளனர்? இழிநிலை மாறுவதற்கு ஒரே ஒரு மருந்துதான் உண்டு. அதுதான் இனப்புரட்சி. அதுவும் ஒற்றுமையுடன் கூடிய இனப்புரட்சிதான் எளிதில் இழிநிலையைப்போக்கும்.

இப்போது திராவிட மாணவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இனவுணர்ச்சிபெற்று விட்டனர். இனஉணர்ச்சிப் பெற்ற மாணவர்களெல்லாம் தங்கள் இனவுணர்ச்சியால் எழும் சக்திகளை ஒன்று  திரட்டி ஒரு பெரும் புரட்சி செய்தல் வேண்டும். அங்ஙனம் பெரும் புரட்சி செய்தால்தான் திராவிட மாணவர்களுக்கு இப்போதுள்ள இழிவுகளைப் போக்கமுடியும். அப்பெரும் புரட்சிதான் பாராளுமன்றம் முதல் பஜனைமடம் வரையில் பரவியிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை அடியோடு ஒழித்துத் திராவிடர்களை மக்களாக ஆக்கும்.

இன இழிவைப்போக்க எழுச்சி பெற்ற மாணவர்கள் செய்யப் போகும் தொண்டு சற்றுக் கடினம்தான். கரடுமுரடான பாதையையன்றோ செம்மைபடுத்த வேண்டும்? என்றாலும் தாங்கள் மேற்கொண்ட பணியை சலியாது ஆற்றுவர் என்பது திண்ணம். காரணம் அவர்கள் உலக வரலாறுகளை படிப்பவர்கள், சாம்ராஜ்யங்கள் சரிவுற்ற சரித்திரங்களை படிப்பவர்கள் முதலாளிகளின் ஆட்சியை ஒழித்துத் தொழிலாளர்களின் ஆட்சியை நிறுவிய தீரச்செயலை நன்குணர்ந்தவர்கள். எனவே அவர்கள் எதற்கும் அஞ்சார்கள்.

அதோ புரட்சி வாடை வீசுகிறது!

கோடை விடுமுறையில் அவர்கள் மாவட்டம் தோறும் செய்யும் பிரசாரந்தான் புரட்சியின் முதல் அறிகுறி. அதுதான் புரட்சி வாடை. இப்புரட்சிவாடை வரப்போகும் பெரும் புரட்சிக்கு வித்து என்று துணிந்து கூறலாம்.

எனவே, மாவட்டந்தோறும் உள்ள திராவிடர் கழகத் தோழர்கள் அடுத்த மாதம் தொடக்கத்தில் பிரசாரம் செய்யும் மாணவர்களை நன்கு பயன்படுத்திக்கொள்வார்களாக! உறுதியாக வருங்காலத்தில் இன இழிவு ஒழியும்!
                      --------------------- தந்தை பெரியார்-"குடிஅரசு", கட்டுரை, 19.04.1947

(குறிப்பு : அன்றைக்கு பெரியார் பேசியதை இன்றைக்கு அய்.அய்.டி.யில் பெரியார்-அம்பேத்கார் வாசகர் வட்டத் தடை - மற்றும் பி.ஜே.பி. ஆட்சியுடன் ஒப்பிட்டு, பள்ளி பற்றி பேசியதை பல்கலைக் கழகம், அய்.அய்.டி. வரை விரிவு படுத்திப் பாருங்கள். அய்யா சென்னது அப்படியே பொருந்துவதை அறியலாம்.)

102 comments:

தமிழ் ஓவியா said...

மழைக்கு சிறப்பு பூஜை ஆணையிட்ட அதிகாரி மீது வழக்கு தொடுக்கப்படும்


தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத்துறை - காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதற்காக சிறப்பு பூஜைகளை நடத்துமாறு அத்துறையைச் சார்ந்த அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.

1. பொறியியல் படித்தவர்கள் அறிவியலுக்கு மாறான - அவர்கள் படித்த படிப்புக்கு முரணான வகையில் இப்படி ஓர் சுற்றறிக்கையை ஆணையாக வெளியிட்டு இருப்பது மிக கேலிக்குரியது என்பதில் சந்தேகம் இல்லை.

யாகம் செய்தால் மழை பொழிந்து விடுமா? மழை எப்படி பொழிகிறது என்பதை இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களைக் கேட்டாலே எளிதில் தெரிந்து விடுமே! பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்குத் தெரியவில்லையா? படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தந்தை பெரியார் கூறியது சரியாகி விட்டதே!

அதிகாரிகளா அழுக்கு மூட்டைகளா இவர்கள்?

2) இரண்டாவதாக அரசு அலுவலர்கள் - இந்தியா மதச் சார்பற்ற நாடு (Secular State) என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? கோயில்களில் சிறப்புப் பூஜைகள், யாகங்கள் நடத்தினால் மழை பொழிந்து தீர்த்து விடுமா?

மக்களுக்குத் தேவை என்பது கடவுள்களுக்குத் தெரியாதா? பூஜை செய்தால்தான் கடவுள் மனம் திறப்பாரா? அப்படி என்றால் கடவுள் மனம் கல்லா? கருணையே உருவானவன் கடவுள் என்பது எல்லாம்  புனை சுருட்டுதானா?

வருண பகவானுக்காக யாகம் நடத்தினால் மழை பொழியும் என்பது இந்து மதத்தின் ஏற்பாடு; யாகம் மூலம் பார்ப்பனப் புரோகிதர்களுக்கு நல்ல வருவாய்க்கிட்டும் அல்லவா! மக்களின் மூடத்தனம்தானே அவர்களுக்கு முதலீடு.
1992இல் மதுரா நகரில் 86 வயதான முதியவர் ஒருவர் யாகம் நடத்தி மழையை வரவழைக்கிறேன் என்று சவால் விட்டார். அந்தச் சமயத்தில் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அதனைக் கண்காணித்தனர். ஒரு சொட்டு மழைகூட பெய்யவில்லை என்பதை டில்லியிலிருந்து வெளிவந்த நேச்சர் (ழிணீக்ஷீமீ) என்ற இதழில் கே.எஸ். ஜெயராமன் கட்டுரை ஒன்றை எழுதியதை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமானதாகும்.

3) அரசு என்பது மதச் சார்பற்றது - அது எந்த மதச் சடங்கோடும் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.

உச்சநீதிமன்றத்தில் பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட ஓர் அமர்வு வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. எந்த ஒரு மாநில அரசும், மதச் சார்பின்மைக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருப்பதோ, மதச் சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அத்தகைய மாநில ஆட்சிகளை அரசமைப்புச் சட்டத்தில் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க குடியரசு தலைவருக்கு உரிமை உண்டு என்று 1994 மார்ச்சில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பில் கூறியுள்ளது. எங்களுடைய இந்தக் கருத்துகளை சிலர் ஜீரணிக்க முடியாமல் போகலாம். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மதச் சார்பின்மைக்கு விரோதமாக நடப்பது எவ்வளவுப் பெரிய குற்றம் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

மழை பொழிவதற்கு இந்து மதத்தின்படி பூஜை நடத்த சொல்லி ஆணை பிறப்பித்த அதிகாரிகள்மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இந்த சுற்றி அறிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; இல்லையெனில் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை திராவிடர் கழகம் தொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

4) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51கி(லீ) என்ற பிரிவு என்ன கூறுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ பிரிவில் ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய பத்து அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)  சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதில் எட்டாவது கடமையில் - 51ஏ(எச்) அறிவியல் உணர்வையும், மனிதநேயத்தையும், சீர்திருத்தத்தையும் ஆய்வு மனப்பான்மையையும் போற்றி வளர்க்க வேண்டும். To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reforms 51A(h),  என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள இந்த விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமானது - மழைக்காக சிறப்புப் பூஜை நடத்துவது, யாகம் நடத்துவது என்பது வெளிப்படை; இந்த வகையிலும் தமிழ்நாடு அரசு, அதன் நீர்வளத்துறை சட்டத்தை மீறி இருக்கிறது. தமிழ்நாடு அரசு இதற்குரிய விளக்கங்களை அளிக்க வேண்டும்; தவறு செய்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இல்லையெனில் அரசும் இதற்குப் பொறுப்பு ஏற்க நேரிடும். அடுத்த கட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கையில் விரைவில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

அய்யாவிற்கு அய்.நா. (யுனஸ்கோ) விருது தந்த நாள் “ 27-06-1970




உலகில் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத ஒப்பற்ற வாசகங்களை பாராட்டுரையில் கொண்ட விருது; ஒப்பற்ற ஏற்பளிப்பு. உலகில் வேறு யாருக்கும் இந்த பெருமை கிடைத்ததில்லை. இவ்விருது 27.06.1970 அன்று மத்திய அமைச்சர் திரிகுணசென் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற விழாவில் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் என்றால் பார்ப்பானைத் திட்டுவார்; கடவுள் இல்லையென்பார் என்று குறுகிய வட்டத்திற்குள் அவரை குறைத்து குறுக்கிக் காட்டும் குள்ளநரிக் கூட்டத்திற்கு இவ்விருது ஒரு பதிலடி!

ஆரிய பார்ப்பனக் கூட்டம் அய்யாவை எவ்வளவு மறைக்க முயன்றாலும் அய்யா ஆதவன்போல் அறிவு பரப்பி வெளிப்படுவார் என்பதன் அடையாளம் இவ்விருது. “

Periyar - The Prophet of the New age;
The Socrates of South East Asia;
Father of the Social reform movement;
and Arch enemy of ignorance, superstitions,
meaningless customs and base manners”.
- UNESCO (27.06.1970)

இதன் தமிழாக்கம்: பெரியார் _ புதிய உலகின் தொலைநோக்காளர்; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி அண்ணா அவர்கள் (தமிழக முதல்வர்) அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நிலையில் 10.10.1968இல் தந்தை பெரியாருக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வகையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை, அதுவும் நமது நாட்டில் என்று குறிப்பிட்டு பெருமைப்படுத்தினார். தந்தை பெரியார் ஒப்பாரில்லா உலகத் தலைவர் என்பதை இந்த விருது வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு, அவரைக் கொச்சைப்படுத்த, புரட்டு, திரிபுவாதங்கள், அபாண்ட குற்றச்சாட்டுகள் கூறும் குறுமதியாளர்களின், மோசடிப் பேர்வழிகளின் அயோக்கியர்களின் முகத்திரையையும் கிழித்தெறிந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூறிய மண்டைச் சுரப்பை உலகு தொழும்! என்ற வரிகளின் ஏற்பளிப்பாகவும் இது அமைந்தது! தந்தை பெரியாரின் இனிவரும் உலகம் என்ற நூல் அவர் ஓர் தொலைநோக்காளர் என்பதை உறுதிசெய்தது.

அதையும் இவ்விருது ஏற்பளிப்புச் செய்தது! வாழ்க பெரியார் பெருமை!

குறிப்பு: இந்த விருது பற்றி, தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், ஒரு நாளைக்கு ஒரு வரியை எடுத்துக்கொண்டு நான்கு நாள்கள் ஆற்றிய உரை (23.09.2014 முதல் 26.09.2014 வரை) விரைவில் நூலாக வந்து, அய்யாவின் பெருமையின் அழியாச் சின்னமாக நிலைக்கவுள்ளது என்பதை அறிவித்து மகிழ்கிறோம்.

தமிழ் ஓவியா said...

அய்(யர்) அய்(யங்கர்) டெக்னாலஜியில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் எதிர்த்தெழுந்த மாணவர் எழுச்சி!



கோயிலின் கருவறைக்குச் சமமாக தங்களைத் தவிர வேறு யாரும் நுழையக் கூடாது என்று ஆரியப் பார்ப்பனர்கள் புனிதங்காத்த ஓர் இடம் அய்.அய்.டி. வளாகம்.

50 ஆண்டுகளுக்கு முன் வானொலி, அஞ்சல் துறை, இரயில்வே, தந்தி, தொலைபேசித் துறைகள், அய்.ஏ.எஸ். பதவிகள், ஒட்டுமொத்த மத்திய அரசின் உயர்பதவிகள் அனைத்தையும் தங்களுக்கென்றே அபகரித்துக் கொண்டவர்கள் அல்லவா அவர்கள்.

அப்படிப்பட்ட ஆதிக்கக் கோட்டையை இடஒதுக்கீடு என்ற அணுகுண்டுமூலம் தகர்த்து, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நுழைய வழிவகுத்தவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும். எனவே, ஆரிய கும்பலுக்கு எப்போதும் இவர்கள் இருவரும் எரிச்சலையேத் தந்தனர். அதனால், அவர்கள் பெயரை, அவர்களின் தொண்டை, அவர்களின் சிறப்பை எப்படியெல்லாம் மறைக்க, திரிக்க, குறைக்க முடியுமோ அப்படியெல்லாம் செய்து வருவது அவர்களின் வாடிக்கை.

அப்படிப்பட்ட இருவர் பெயரில், அவர்கள் புனிதங்காத்த, அவர்களின் ஆதிக்க வளாகத்திற்குள் வாசகர் வட்டம் வைத்து, இவர்களின் கொள்கைகளை, இலக்குகளை, பெருமைகளைப் பேசுவதோடு, இவர்கள் பெயரில் அமைத்த அமைப்பின்மூலம், அவர்கள் செய்யும் அநியாயங்களை, ஆதிக்கங்களை, மோசடிகளை கண்டிக்க, எதிர்க்க, கிளர்ச்சி செய்ய முற்பட்டால் சும்மா இருப்பார்களா?

தமிழ் ஓவியா said...

சராசரிப் பார்ப்பனர்களே ஆதிக்க முனைப்பிலே செயல்படக் கூடியவர்கள் என்ற நிலையில், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் அங்கு ஊடுருவியுள்ள நிலையில், ஆதிக்க வெறியோடு அவர்கள் அங்குச் செயல்படுவார்கள் என்பதை விளக்க வேண்டியதே இல்லை. அதுவும், மத்திய ஆட்சி அவர்கள் கையில் என்ற நிலையில் மதக் கொள்கையைத்தானே செய்வர். அதன் விளைவுதான் இன்றைய போராட்டம், எழுச்சி, கிளர்ச்சியெல்லாம்.

மனிதர்களில் பஞ்சமர்கள், சூத்திரர்கள் என்று பிரித்து, ஒதுக்கி தீண்டாமையைக் கடைபிடித்த அவர்களுக்கு, படிப்பில்கூட சூத்திரப் படிப்புகளைப் பிரித்து ஒதுக்கி வைத்தனர். ஆனால், அப்படிப்புகள் (ஆங்கிலம், பொருளாதாரம், வளர்ச்சிக்கான கல்விகள்) 2016இல், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அய்.அய்.டி. வளாகத்திற்குள் கற்பிக்கப்பட பஞ்சமர்களும், சூத்திரர்களும் அங்கு நுழைய வாய்ப்புக் கிடைத்தது.

ஆம், பொருளாதாரம், வரலாறு, ஆங்கிலம் வளர்ச்சிக்கான கல்விகள் போன்ற படிப்புகளை அவர்கள் பஞ்சமர், சூத்திரர்களுக்காகவே ஒதுக்கி வைத்தனர். கலைக்கல்லூரிகளும் பஞ்சமர் சூத்திரர் கல்லூரிகளாகவே செயல்படுகின்றன. அப்படிப்புகள் அவர்கள் புனிதம் காத்த வளாகத்திற்குள் வந்ததால், நொந்து, வெந்து வெடிக்கின்றனர்.

இப்படிப்புகள் சார்ந்த பாடப் பொருள்கள், சமூகம், பொருளாதாரம், வரலாறுகள் பற்றிய கருத்துகள் பேசுவதால், ஆய்வதால், இதைப் படிக்கும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் சமூக, பொருளாதார உரிமைகளுக்கான கருத்துக் களங்களும், பேசும் வாய்ப்புகளும், விவாதிக்கும் உரிமைகளும் தானே அந்த வளாகத்துள் வருகின்றன. நிர்வாகம் அதை கல்விக்கு அப்பாற்பட்டவையாகக் கருத முடியாமல், கண்டிக்க முடியாமல் போனதால் காழ்ப்பின் உச்சத்தில் நின்றனர். அய்ந்தாண்டுக்கால ஒருங்கிணைந்த அப்படிப்புகளை அவ்வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தவும், அந்த ஆசிரியர்களை நீக்கவும் ஆர்.எஸ்.எஸ். முயற்சித்து வருகிறது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கட்டாயம் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று சட்டம் போட்ட இந்த ஆரிய பார்ப்பனர்கள் இன்றைக்கு கலைப் பாடங்களை அய்.அய்.டி. வளாகத்தில் வரக் கூடாது என்பது ஏன்?

இச்சூழலில்தான் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் தொடங்கி, பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள், பார்ப்பன ஆதிக்கப் பாதிப்புகள் போன்றவற்றை விவாதித்து மாணவர்களுக்கு விழிப்பூட்டினர். மோடி அரசின் மோசடிகள் தோலுரிக்கப்பட்டன, முகமூடிகள் கிழிக்கப்பட்டன. மோடி அரசைத் தாங்கி நிற்கும் ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகள் ஆத்திரங்கொண்டன. கண்ணெதிரே தங்கள் ஆதிக்கக் கோட்டைச் சரிவதைக் கண்டு கலங்கின. வரலாற்றை மறைத்து, ஆரிய பார்ப்பனர்களை இந்த நாட்டின் மக்களாகவும், முஸ்லீம்களை வந்தேறிகளாகவும் காட்ட முயன்றனர். அவர்கள் முயற்சி முறியடிக்கப்பட்டதாலும் கொதிப்பேறினர்.

அய்.அய்.டி. வளாகத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் என்று 70% மேல் ஆரியப் பார்ப்பனர்கள்தான். அவர்களிலும் பலர் ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள்தான். எனவே, ஆர்.எஸ்.எஸ்.இன் வழக்கமான செயல்திட்டப்படி சூழ்ச்சி, மோசடி, வதந்தி பரப்பல், இரகசியத் திட்டம், வன்முறை என்ற பல வழிகளில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர்.

அம்பேத்கர்_பெரியார் வாசக வட்டத்தினர் அவர்களுக்கு முதன்மை எதிரிகளாய் முன்னால் நிற்கின்றனர். நடிகர் பின்னால் நின்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அம்பேத்கர், பெரியார் கொள்கை ஏந்தி ஆதிக்கம் அழிக்க, உரிமை காக்கப் புறப்பட்டதால், அவர்களின் வேகத்தை, செயலை, நடவடிக்கைகளை ஒடுக்க ஆரிய ஆர்.எஸ்.எஸ். கூட்டம் திட்டமிட்டு, அதனால், முதல் கட்டமாக மொட்டைக் கடுதாசி மூலம் அதை நிறைவேற்றியது.

ஆதாரப்பூர்வமான கடிதத்தை ஏற்று அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவே பல விதிமுறைகள் உள்ளன. அப்படியிருக்க இவர்களே ஒரு மொட்டைக் கடுதாசியைத் தயாரித்து, அதை மத்திய அரசு வரைக் கொண்டுசென்று, அம்பேத்கர் பெரியார் வாசக  வட்டத்திற்கு தடை விதித்துள்ளனர்.

ஆரிய பார்ப்பனர்களும், ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளும் சூழ்ச்சிக்காரர்களே தவிர அறிவாளிகள் அல்ல என்பதை அவ்வப்போது நிரூபித்து வந்ததைப் போலவே, இதிலும் நிரூபித்துள்ளனர். ஒடுக்க நினைத்த உணர்வு இப்போது உசுப்பிவிடப்பட்டு, ஓங்கி வளர்ந்ததோடு ஒவ்வொர் இடத்திலும் முளைத்து கிளைத்தெழத் தொடங்கிவிட்டது.

தமிழ் ஓவியா said...

ஆம். இந்தியா எங்கும் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தலைவர்களின் பெயரால் அமைப்புகளை மாணவர்கள் அமைத்து வருகின்றனர். ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிரான கிளர்ச்சி, மத்திய அரசுக்கு எதிரான போராட்டம், அய்.அய்.டி. நிர்வாகத்திற்கு எதிர்ப்பு இந்தியா முழுக்கவுள்ள மாணவர் அமைப்புகளால் நடத்தப்படுகின்றன.

இது தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களையும் தாண்டி மற்ற கல்வி நிறுவன மாணவர்கள் மத்தியிலும் இன உணர்வை, ஆரியம் ஆதிக்க எதிர்ப்பு வேகத்தை உருவாக்கியுள்ளது. மாணவர், வெடித்துக் கிளம்பினால் விளைவு எப்படியிருக்கும் என்பதை அவர்கள் பலமுறை பல நிகழ்வுகளில் காட்டியுள்ளனர். தற்போது எழுந்துள்ள இந்த ஆதிக்க அழிப்புப் போராட்டம் அடையவேண்டிய இலக்கை நிச்சயம் அடையும், ஆதிக்கக் கோட்டையை ஆரியக் கொழுப்பைக் குடையும்!

ஒட்டுமொத்த மாணவர் சமுதாயம் உணர்வுகொண்டு எழுந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் சமூகத் தொண்டு அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் ஆதரவாக குரலெழுப்பி, ஆரிய ஆதிக்கத்திற்குக் கண்டனம் தெரிவிக்கின்ற நிலையில், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன தலைவர்களும், இந்துத்துவா பேர்வழிகளும்  பி.ஜே.பி.யினரும் மாணவர் போராட்டத்தை திசைதிருப்ப, ஒடுக்க தவறான, மோசடியான கருத்துகளைக் கூறுவதோடு, எதிர்ப்பான முழக்கங்களை எழுப்பி, பெரியாரையும், அம்பேத்கரையும் பிரித்துக்காட்ட, பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். எனவே, இந்த நேரத்தில் மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும் விழிப்பாகவும், தெளிவாகவும் இருந்து எதிரிகளை எதிர்கொண்டு, முறியடிக்க வேண்டும்.

ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்க, மோசடிச் செயல்பாடுகளை அம்பலப்படுத்த வேண்டும். அதற்கு நமது நியாயங்களை, உண்மைகளை பல வகையிலும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். மாணவர்களிடையே பிளவு உண்டாக்க எதிரிகள் செய்யும் சதியை முறியடித்து, இன்னும் இறுக்கமாய், நெருக்கமாய் ஒருங்கிணைத்துப் போராட வேண்டும். வசிஷ்டர் வட்டம், வியாசர் வட்டம், தூர்வாசர் வட்டம் என்று பல அமைப்புகள் அங்கு இருக்கும்போது, சுதந்திரமாக, விதிமுறைகளுக்கு எதிராய் பல செயல்களைச் செய்துவரும்போது, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை மட்டும் தடைசெய்த அநீதியை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு சென்று பரப்ப வேண்டும். துண்டு பிரசுரங்கள், தொலைக்காட்சிகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கங்களை எல்லாம் மதப் பிரச்சாரங்களை, மூடநம்பிக்கைகளை, ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை வளர்க்கும் முயற்சிகளைத் தொடர்ந்து அங்கு செய்துவரும்போது, அதைக் கண்டிக்காத, ஆர்.எஸ்.எஸ். ஆட்களையெல்லாம் அழைத்துவந்து நிகழ்ச்சி நடத்துவதை தடுக்காத அய்.அய்.டி. நிர்வாகத்தின் பாரபட்சத்தை பரப்புரை செய்ய வேண்டும்.

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் பெரியார் அமைப்புதான் புதிதாக அரசியல்சார் கருத்துகளை அங்கு விதைப்பதாகவும், பிரச்சாரங்களைச் செய்வதாகவும் பொய்யான பிரச்சாரம் செய்யப்படுவதை முறியடிக்க, இந்துத்துவா அமைப்புகள் இதுவரைச் செய்த மதப்பிரச்சாரங்களை, அரசியல் பிரச்சாரங்களை தொகுத்து வெளிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக 2006ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராய் அய்.அய்.டி. ஆரிய பார்ப்பன மாணவர்கள் செய்த போராட்டங்களையும், அதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அளித்த ஆதரவையும் எடுத்துக் கூற வேண்டும்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாத நிர்வாகம், இன்றைக்கு உண்மைகளை எடுத்துக்கூறி விழிப்பூட்டிய அம்பேத்கர் பெரியார் அமைப்பினர் இடஒதுக்கீடு கேட்டு உரிமைக்குரல் எழுப்பினால் தடைவிதிக்கும் அயோக்கித்தனத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

இராமாயண வாசிப்பு வைத்துக் கொண்டு, ஆரியர்களை உயர்த்தியும், திராவிடர்களைத் தாழ்த்தியும் பிரச்சாரம் செய்ய அனுமதித்த நிர்வாகம், அம்பேத்கர், பெரியாரின் பெயரில் மனிதநேயக் கொள்கைகளைக் கூற தடைபோடும் அநீதியை வெளிப்படுத்த வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்களில் போராட்டமே நடத்தப்படாதது போலவும், அம்பேத்கர் பெரியார் அமைப்பினர்தான் போராட்டம் செய்து பெருமையை குலைப்பதாகவும் இந்துத்துவா அமைப்பினர் தவறாகப் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், உண்மை என்ன?

2006இல் சென்னை அய்.அய்.டி.யில் மத்திய அரசின் 27% இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆரிய பார்ப்பன மாணவர்கள் போராட்டம் நடத்தியது மட்டுமல்ல, அதே 2006இல் உயர்கல்வி அமைப்பான எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். ஒரு நாளா? இரண்டு நாளா? 17 நாள்கள் நடத்தினர். அப்போது அந்த நிர்வாகம் இப்போராட்டத்தைத் தடுத்ததா? மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததா? சுகாதாரத்துறை அமைச்சர் ஆணையிட்டும் எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபால் நடவடிக்கை எடுக்கவில்லையே! மாறாக அவர்களுக்கு அந்த 17 நாட்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டது.

 

சமூகநீதிக்கு விரோதமாக அய்.அய்.டி. பேராசிரியர்கள் நியமனப் பட்டியல்

சென்னை அய்.அய்.டி.யையே எடுத்துக் கொள்ளலாம் மொத்தம் 212 பேராசிரியர்கள் என்றால் அவர்களில் உயர் ஜாதியினர் 209. (98.59 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம்; தாழ்த்தப்பட்டோர் 3 (1-41 சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம்.

தமிழ் ஓவியா said...

இணை பேராசிரியர்கள் (Associate Professors)  91 பேர் என்றால் அதில் உயர் ஜாதியினர் 88 (96.70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம் தாழ்த்தப்பட்டோர் 3 (3.3. சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம், உதவிப் பேராசிரியர் 177 என்றால் அதில் உயர் ஜாதியினர் 165 (93.22 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் 7 (3.95 சதவீதம்) தாழ்த்தப்பட்டோர் 4 (2.25 சதவீதம்) பழங்குடியினர் - 1.

ஆகக் கூடுதல் உயர் ஜாதியினர் (பெரும்பாலும் பார்ப்பனர்களே!) 462, பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் 7, தாழ்த்தப் பட்டோர் 10, பழங்குடியினர் ஒன்றே ஒன்று -இதுதான் சென்னை அய்.அய்.டி.யின் நிலை.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு - மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப் படையில் வழங்கப்பட்டதால்தான் முதன் முதலாக உதவிப் பேராசிரியர்களில் மட்டும் 7 இடங்கள் கிடைத்துள்ளன. பேராசிரியராகவோ, இணைப் பேராசிரியராகவோ ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை; பழங்குடியினரிடமிருந்து ஒரே ஒருவர் மட்டும் - அதுவும் உதவிப் பேராசிரியர் பணியில்.

 

அன்றைக்கு ஆரவாரம் செய்த ஆரிய ஆர்.எஸ்.எஸ். கூட்டம், இன்றைக்கு, மாணவர் போராட்டத்தை எதிர்ப்பது அயோக்கியத்தனமல்லவா?

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் செய்த குற்றம் என்ன?

அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த மாமேதை. பெரியார் யுனஸ்கோவால் தீர்க்கதரிசி, சீர்திருத்தச் செம்மல் என்று விருது பெற்றவர். இருவரும் உலக அளவில் உயரிய தலைவர்கள். இருவரும் ஒரே கொள்கை உடையவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களை விழித்தெழச் செய்தவர்கள்; அவர்களின் இழிவு நீக்கி, உயர்த்தி நிறுத்தியவர்கள், ஆதிக்கவாதிகளின் அயோக்கியத்தனத்தை முறியடித்து ஆதிக்கம் அழித்தவர்கள். இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த ஏந்தல்கள்.

அவர்களின் பெயரால், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் அமைப்பு உருவாக்கியது தவறா? அவர்கள் காட்டிய வழியில் ஆதிக்கச் செயல்பாடுகளைக் கண்டித்தது தப்பா? அவர்கள் தந்த இடஒதுக்கீடு அய்.அய்.டி.யிலும் வேண்டும் என்று ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கேட்டது குற்றமா? இந்துத்வாவாதிகளை வளரவிட்டு, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு எதிராய்ச் செயல்படும் மோடி அரசை விமர்சித்தது தகாத செயலா?

ஆரிய பார்ப்பன மாணவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்துப் போராடினால், மத்திய அரசைக் கண்டித்தால் அது சரி, தர்மம், நியாயம்!

ஒடுக்கப்பட்ட மாணவர்கள் இடஒதுக்கீடு கேட்டு, ஆதிக்கப் பேர்வழி களுக்குத் துணைபோகும் மத்திய அரசை விமர்சித்தால் அது குற்றமா?

இங்கு நடப்பது மக்களாட்சியா? மனுதர்ம ஆட்சியா? மாணவர்கள் உணர்ச்சி மகத்தானது என்பது புரியாமல் சீண்டிப் பார்த்ததால், தாண்டி வந்து தாவி எழுந்தார்கள் என்றால், காவிக்கூட்டம் காணாமல் போய்விடும். எச்சரிக்கை!

தீர்வு என்ன?

உயர்கல்வி நிறுவனங்களில் ஆரிய பார்ப்பன ஆதிக்கம் ஆசிரியர் மத்தியிலும் உள்ளது; மாணவர்கள் மத்தியிலும் உள்ளது. ஒடுக்கப்பட்ட மாணவர்கள் என்றைக்கும் அடங்கியே இருக்க மாட்டார்கள்.

தங்கள் உரிமைக்கும், வாழ்வுக்கும், கல்விக்கும் குரல் எழுப்பியும், போராடவுமே செய்வர். அதை ஒடுக்கி, அடக்க நினைப்பது அறிவீனம்! மாறாக, மக்கள் விகிதாச்சாரப்படி உயர்கல்வி நிறுவனங்களிலும் தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டியது கட்டாயக் கடமையாகும். இடஒதுக்கீடு ஒன்றே எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு.

அனைத்து கல்வி நிலைய மாணவர்களும் இதற்காகப் போராட வேண்டும். படிப்பது மட்டும் மாணவர் வேலை. இதையெல்லாம் செய்யலாமா? என்று ஏமாற்றுப் பேர்வழிகள் ஏய்க்கப் பார்ப்பர். படிப்பது வாழ்விற்கும் வளர்ச்சிக்கும்! இந்தப் போராட்டங்களும் அதற்காகத்தான் என்பதை அடிமுட்டாள்கள் அறிய வேண்டும்! அறியச் செய்ய வேண்டும்!

அய்.அய்.டி வளாகத்திற்குள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட அய்ந்தாண்டுகளுக்கான ஒருங்கிணைந்த கலைப் பாடங்களை நீக்கவும், அதற்கான ஆசிரியர்களை அகற்றவும் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். முயற்சியை மாணவர்கள் ஒன்றுசேர்ந்து  முறியடிக்க வேண்டும். தொழில்நுட்பத்தோடு கலைசார்ந்த மானுடக் கல்வியும் கட்டாயம் வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் எழுந்துள்ள இந்த மாணவர் எழுச்சி இலக்கை எட்டட்டும்! ஆதிக்கம் அழியட்டும்!

மற்றவர்களால் முடியாதது மாணவர்களால் மட்டுமே முடியும்! மாணவர்களுக்கு வந்துள்ள ஆதிக்க எதிர்ப்புணர்வு, தன்மான உணர்வு, உரிமை வேட்கை வளரும், பரவும், இலக்கை எட்டும்!

- மஞ்சை வசந்தன்

தமிழ் ஓவியா said...

செய்யக் கூடாதவை!




பல்வலிக்கு கற்பூரத்தை வைக்கக் கூடாது!

கற்பூரம் வேதிப் பொருள்களால் (Chemicals) ஆனது. அதைப் பல்லில் வைக்கும்போது, கன்னத்தின் உட்புறமுள்ள மென்மையான சதைப் பகுதியை அரித்துவிடும். கற்பூரம் வைக்கும்போது (பல்லில்) தற்காலிகமாக வலி நின்றதுபோல் தோன்றினாலும், அது நிரந்தரத் தீர்வு அல்ல. பல்வலிக்கு வலிக்கும் பல்லால் இரு கிராம்பை மென்று அப்படியே அவ்விடத்தில் வைத்தால் வலி நீங்கும். பின் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

நீண்ட நேரம் பல் தேய்க்கக் கூடாது

பிரஷ் கொண்டு பல் தேய்க்கும்போது அதிக நேரம் தேய்க்கக் கூடாது. அதிக பற்பசையும் உபயோகிக்கக் கூடாது. பட்டாணிக்கடலை அளவிற்குப் பற்பசை எடுத்துக் கொண்டு, பற்களில் கீழ்வரிசைப் பற்களைக் கீழிருந்து மேலும், மேல்வரிசைப் பற்களை மேலிருந்து கீழும் தேய்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் இரண்டு மூன்று முறை மென்மையாய்த் தேய்த்தால் போதும் ஓரிரு நிமிடங்களில் தேய்த்து, முடித்து நன்றாகக் கொப்பளித்துத் துப்பி வாயைத் தூய்மை செய்ய வேண்டும்.

கருவேலன், வேம்பு, ஆல மரவிழுது இவற்றைக் கொண்டு பல் துலக்குவது பல்லுக்கு நன்மை பயக்கும். கிடைக்கின்றவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதே நலம்.

காலை எழுந்தவுடனும், இரவு படுக்கப்போகும் முன்னும் பல் துலக்குவது நலம்.

விரலால் பல் துலக்கக் கூடாது

விரலால் பல் துலக்கினால் பல்லிடுக்கில் உள்ள உணவுத் துணுக்குகள் வெளியில் வராது தங்கி, பற்களுக்கும், உடல் நலத்திற்கும் கேடு தரும். எனவே, மேற்சொன்ன குச்சிகள் அல்லது பிரஷ் கொண்டு துலக்குவதே நன்று. விரலால் துலக்கக் கூடாது.

அதிக குளிர்ச்சியோ, அதிக சூடோ பற்களில் படக் கூடாது

அதிக குளிர்ச்சியான அய்ஸ்கிரீம், அய்ஸ், குளிர்பானம், மிகச் சூடான வெந்நீர், பால், காபி போன்றவற்றைச் சாப்பிடுதல் கூடாது. அவை பற்களுக்கும் நல்லதல்ல; உடலுக்கும் நல்லதல்ல.

செங்கற்பொடி, சாம்பல் கொண்டு பல் தேய்க்கக் கூடாது

செங்கல்லைத் தூளாக்கி அல்லது சாம்பலைப் பொடித்துப் பற்களில் விரலால் தேய்ப்பர். இவை ஈறுகளைத் தேய்த்துப் பற்களையும் கெடுக்கும். பற்களின் மேலுள்ள பளபளப்பைத் தேய்த்து அழித்துவிடும். ஈறுகள் தேய்ந்து பற்கள் வலுவிழந்து போகும். எனவே, செங்கற்பொடி, சாம்பல் கொண்டு பல் துலக்கக் கூடாது.

இயற்கையாய் ஏற்படும் பல்வலிக்குப் பனிக்கட்டியை வைக்கக் கூடாது

பல்லில் அடிபட்டு வலியிருந்தால் பனிக்கட்டி வைக்கலாம்.

உப்பு கலந்த நீரை (ஒரு டம்ளர் நீரில் ஒரு டிஸ்பூன் உப்பு கலந்து) வாயில் ஊற்றிக் கொப்பளித்து வந்தால் பல்வலி நீங்கும். ஈறுகளிலுள்ள கிருமிகளும் அழியும். இதைத் தினமும் செய்தால் பல்வலி வரவே வராது.

கடும் வெய்யிலில் சென்று வந்தவுடன் குளிர்பானம் அருந்தக் கூடாது

பொதுவாகச் செயற்கைக் குளிர்பானங்கள் அருந்தக் கூடாது. காரணம், அதில் கலக்கப்படும் எப்பொருளும் உடலுக்கு நன்மை செய்வன அல்ல. மாறாகக் கேடு பயப்பன.

கடும் வெய்யிலில் செல்லும்போது நம் உடலும் நரம்புகளும் சூடேறியிருக்கும். சூடான பொருளில் திடீரென குளிர்ந்த நீர்பட்டால் உடனே அது நொறுங்கும். சூடான கண்ணாடியில் குளிர்ந்த நீர் ஊற்றினால் அது நொறுங்கிவிடும். அப்படித்தான் நம் உடல் நரம்புகளும் சூடேறி இருக்கும்போது அச்சூடு தணிவதற்குள் குளிர்ந்த பானம் குடிப்பதோ, குளிர்ந்த நீரில் குளிப்பதோ கூடாது. அவ்வாறு செய்தால் நமது நரம்புகள் பெரிதும் பாதிக்கப்படும்.

அதேபோல் உடல் சூடாகியுள்ள நிலையில் குளிர்ந்த நீர் குடிக்கவும் கூடாது. உடற்சூடு தணிந்த நிலையிலேதான் குடிக்க வேண்டும். அய்ஸ் கலந்த நீர் எவ்வகையிலும் நல்லதல்ல. குளிர்ந்த நீர் வேண்டுமானால், மண்பானையில் வைத்துக் குடிக்க வேண்டும். குளிர்ந்த மண்பானை நீரைக்கூட வெய்யிலிருந்து வந்தவுடன், உடல்சூடு தணிவதற்குள் குடிக்கக் கூடாது.

மண்பானை நீரில் வெல்லம் கலந்து பருகுவது உடல்நலத்திற்கு உகந்தது. சோற்றுக்கற்றாழையில் உள்ள சோற்றை ஏழுமுறை அலசி, சோற்றுக்கற்றாழையில் தேன் கலந்து சாப்பிடுவதும், வெந்தயத்தை ஊற வைத்து உண்பதும், பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி கீரைகள் சாப்பிடுவதும் உடல்சூடு தணிக்கும். வளமை தரும்.

தமிழ் ஓவியா said...

தாலி பல்கோணப் பகுத்தாய்வு (3)

ம.பொ.சி.க்கு கண்ணதாசன் மறுப்பு

- மஞ்சை வசந்தன்



சோழன் கரிகாற் பெருவளத்தான் உயிர் நீத்தகாலை, அவன் பிரிவாற்றாது வருந்திய கருங்குளவாதனார் என்னும் புலவர் அவனைப் பற்றிப் பாடிய பாடல் ஒன்று, புறநானூற்றில் 224_வது பாடலாக நிற்கிறது. அதில், கரிகாற் பெருவளத்தான் இறந்ததும் அவனது உரிமை மகளிர் நின்ற கோலத்தைப் புலவர் கூறுகிறார்.

பூவாட் கோவலர் பூவுடனுதிரக் கொய் கட்டதுழித்த வேங்கையின் மெல்லியன் மகளிரும் இழைகளைந்தனரே!,

_ அதாவது, ஆடு மாடுகளுக்கு இரைபோடுவான வேண்டி, மேய்ப்போர், வேங்கை மரத்தின் இலைகளைக் கொய்து விடுகிறார்கள். அந்த மரம் மொட்டையாக நிற்கின்றது. அதுபோன்று மங்கையரும் எல்லா அணிகளையும் களைந்துவிட்டு நிற்கின்றனர்... _இதுதான் பொருள். இதில் இழை களைத்னர் என்பதற்கு ஒவை துரைசாமி பிள்ளை சொல்லும் பொருள். அருங்கலஅணி முதலாய அணிகளை ஒழித்தனர் என்பதாகும்.

இதில் அருங்கலம் என்பதற்கு, ஆபரணம், அழகு செய்யும் பொருள் என்ற இரண்டு பொருள்கள் உண்டு. அதைத் தவிர தாலி என்கிற பொருள் கிடையவே கிடையாது.
ஆகவே, அழகு செய்யும் ஆபரணங்களோட நகைகளோடு, மற்ற அணிகளையும் _ அதாவது அழகுகளையும் (தொய்யில்எழுதல் போன்ற அழகுகள் _ அலங்காரங்கள்) துறந்தனர் என்பதே பொருள். இதிலும், மங்கல அணி _தாலி _ வரவே இல்லை! மரத்திலிருந்து சகலஇலைகளையும் பறித்துப் போட்ட மாதிரி சகல நகைகளையும் பறித்துப் போட்டு, மொட்டை மரம் மாதிரி _ எவ்விதச் செயற்கை அழகும் அணியும், அலங்காரமும் இன்றியிருந்தார்கள் என்பதே பொருள். இதிலும், இழை வந்திருக்கிறது, பொதுப்பொருளில்! _ தாலி என்கிற ஸ்பெஷல் பொருளில் அல்ல! ஆகவே, ஈகையரிய இழையணி என்பதற்கு விலையுயர்ந்த _ கொடுக்க முடியாத _ நகைகள் என்ற பொதுப் பொருள் கொள்ளலாமே அன்றி தாலி என்று தனிப் பொருள் கொள்வது இமய மலையளவு மடமையாகும்.

224வது பாட்டில், இழை களைந்தனர் என்று வருகிறதே தவிர கழற்றினர் என்று வரவில்லை. தாலி அந்நாளில் இருந்திருந்தால், கணவனை இழந்த பெண்கள்பற்றிக் கூறும்போது அதக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. மேலும் வெறும் நகை பற்றி மட்டுமே கருங்குளவாதனார் கூறியிருந்தால், துறந்தனர் என்றோ, கழற்றினர் என்றோ கூறியிருக்கலாம். இலக்கணம் தப்பாமலேயே இவ்வார்த்தைகளில் ஒன்றைப் போட்டிருக்க முடியும். களைந்தனர் என்று வருவதால், எல்லா அலங்காரங்களையும் அணிகளையும் களைந்தனர் என்பதே பொருள். ஆகவே புறப்பாட்டின் 400 பாடல்களிலும் ஒரு இடத்தில்கூட தாலி (மங்கல அணி!) குறிப்பிடப்படவில்லை.

வேண்டுமானால், நான்கு கால் இருப்பதால் ஆடு; ஒரு வாலிருப்பதால் மாடு என்கிற மாதிரி, வாதத்துக்காக வலிந்து பொருள் கொள்ளலாம். அது, ஆராய்ச்சியாளர்களுக்கு இருக்க வேண்டிய அறிவுடமைக்கு எடுத்துக்காட்டாக முடியாது.

தமிழ் ஓவியா said...

இவற்றை நோக்குமிடத்து சில உண்மைகள் புலனாகும். சிவஞானம் எடுத்துச் சொன்ன சங்க காலப் பாடல்களில் எங்கும் மங்கல அணி, இழையணி, என்று அணி அணி, இழையணி என்று அணி அணியாக வருகிறதே அன்றி, தாலி என்கிற பதத்தைக் காணோம். அப்படியானால் தாலி என்கிற பதமே சங்க காலத்தில் இல்லையா? இருந்தது! அப்படியானால் அதை ஏன் ஒரு இலக்கிய கர்த்தனும் தொடவே இல்லை. எல்லோரும், தாலியை அணி என்றே அழைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஒரு இடத்தில் ஒரு கவிஞனாவது தாலிஎன்கிற பதத்தை, உபயோகித்திருக்க வேண்டாமா? மங்கலஅணி தாலிதான் என்றால், ஒருவன்கூட அதை அப்பெயரிட்டே அழைக்காதது ஏன்? உண்மை இதுதான்; மங்கல அணிக்கு தாலி என்ற பொருளே அந்நாளில் கிடையாது.

சங்க காலத்தில் தாலி என்று வரும் வார்த்தை, மணமகன் மணமகளுக்குச் சூடிய மாங்கல்ய சூத்திரமாக வரவில்லை. உதாரணமாக புறநானூற்றில் காணப்படும் 374வது பாடலில், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர், ஆய் அண்டிரன் என்ற வேளைப்பற்றிப் பாடியதாக உள்ள பூவை நிலைப்பாட்டில், ஒன்பதாவது வரியில்.

புலிப் பற்றாலிப் புற்றலைச் சிறா அர்...

என்று வருகிறது. அதாவது, சிறுவர்களுக்கு புலிப் பல்லாற் கோர்க்கப்பட்ட தாலி அணிதலைக் குறிக்கிறது. மணமகளுக்கு மணமகன் சூட்டியது! அது தான் தாலி என்று அழைக்கப்படுகிறது. (இதில் ஐம்படைத் தாலி, முப்படைத் தாலி எனப் பலவகை உண்டு.) இந்தப் பாடலில், சிவஞானம் கருதுகிற தாலியின் பொருள் சுக்கு நூறாக உடைபட்டுப் போகிறது.

புலிப்பல் கொண்டுவந்து திருமணம் செய்து கொள்வது கூட இலக்கிய வழக்காக இல்லை. வெறும் சமீபகால வாய் வழக்காகவேதான் இருக்கிறது. ஆகவே தாலி அணிதல் _ மணமகன் மணமகளுக்குப் புனிதச் சின்னமாக அணிதல் _தமிழ்ப் பண்பாட்டில்அறவே இல்லை எனத் துணிந்து கூறலாம். திருமணமான பிறகு, வேட்டைக்குப் போகும் கணவன், புலியைக் கொன்று அதை மாலையாக்கி தன் பெருமையை மனைவிக்குக் காட்டி மனைவியின் கழுத்தில் ஜம்மென்று வேடிக்கையாகப் போட்டிருக்கிறான். அதாவது திருமணமெல்லாம் முடிந்து, எல்லாம் ஆன பிறகு!

ஆகவே, அறுதியிட்டு உறுதியாக தமிழ்ப் பண்பாட்டில் _ சங்க இலக்கியத்தில் _ திருமணத்தில் தாலி அணிதல் இல்லவே இல்லை என்று கூறலாம்.

மற்றுமொரு கருத்தைக் கூறுகிறார் சிவஞானம். இதில்தான் மடமையின் சிகரத்துக்கு ஏறிவிடுகிறார்! ஆண்டாள் பாடல்களில் நாச்சியார் திருமொழியில் _ திருமண சம்பந்தமாக வருகிற வாரணம் ஆயிரம் என்ற பாடலில், கோபி உடுத்தி மணமாலை சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான் என்று வருகிறது. இதில் மணமாலை என்பது தாலிதான் என்று உடும்புப் பிடியாகப் பிடிக்கிறார்! மண என்பதற்கு நேரடியாக தாலி என்ற பொருள் எந்த அகராதியிலும் இல்லை! இப்படி யாரும் கூறிவிடுவார்களே என்ற பயத்தில், மணமாலை என்ற சொல்லில் தாலியைக் குறிப்பிடுவது இன்றளவும் வழக்கமாகவும் இருந்திருக்கிறது என்கிறார். ஆமாம்; வழக்கமாக இருந்திருக்கிறது என்றுதான் கூறுகிறார். அந்தப் பொருள் வெறும் வாய் வழக்கு என்பதைத்தான் குறிப்பிடுகிறார்.

வாய் வழக்கை வைத்து இலக்கியச் சொற்களை எடைபோடுவது என்ன ஆராச்சியோ நமக்குப் புரியவில்லை! பொருள் காணமுடியாத பதங்களுக்கு, வழக்குத் தேடுவதுதான் அறிவுடையோர் வழக்கம்! மணமாலை என்ற பதத்துக்கு மணம் தரும் பூமாலை என்கிற பொருள் அழகாக _ தெளிவாக இருக்கிறது! அப்படிப் பொருள் உள்ள சொல்லை வாய் வழக்கை வைத்துக்கொண்டு ஆராய்வது, மடமையை வெளிப்படுத்திக் கொள்வதாகும்! இதிலிருந்து ஆண்டாளின் மண மாலைத் தாலியும் சிவஞானத்தைக் கைவிடுகிற பரிதாபத்தைப் பார்க்கிறோம். மணமாலை என்ற சொல்லுக்கு மலர்மாலை என்ற பொருளே, சரியாக அழகாக நிற்பதைக் காண்கிறோம். அங்கே, தாலி இல்லவே இல்லை என்பதையும் புரிந்து கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...

இப்படி எல்லா இலக்கியங்களிலும் நுனிப்புல் மேய்ந்து, தனக்குப் புரியாததைப் போட்டுக் குழப்புகிறார், சிவஞானம். இதன் மூலம், டாக்டர் ராசமாணிக்கனாரோடு, தி.மு.கழகத்தின் கருத்தையும் ஆராய்ச்சியையும், வெற்றிகரமாக நொறுக்கி விட்டதாகப் பகல்கனவு கண்டு தன் கதையை முடிக்கிறார்.

புறநானூற்றுப் பாடல் (127) கூறும், ஈகையரிய இழையணி என்பதற்கு உரையாசிரியர் இருவர் (உ.வே.சாமிநாதையர், ஔவை சு.துரைசாமி பிள்ளை) மாங்கல்ய சூத்திரம் என்றே பொருள் கூறியுள்ளனர். இந்த உரைகளில் ஒன்றைத்தான் தோழர் சிவஞானம் தன் முடிவுக்கு ஆதாரமாக்கியுள்ளார். இந்த உரையாசிரியர்கள் புறநானூற்றுப் பாடல் தாலியைத்தான் குறிக்கிறது என வலிந்துபொருள் கொண்டுள்ளனர். அதாவது, கொடுத்ததற்கரிய இழையணி என்று வருவதால் அது தாலியாகத்தான் இருக்க முடியும் என்று யூகித்துப் பொருள் கூறியுள்ளனர். ஆமாம்; வெறும் யூகத்தையே இவர்கள் உரையாக்கி முடிவு கட்டியுள்ளனர். மறுக்க முடியாத உரையாக அதைக் கொள்ள நியாயமே இல்லை. கொடுத்தற்கரியது தாலி மட்டும்தான் என்பது என்ன முடிவோ தெரியவில்லை! (மங்கையர் தம் இடையணியாம் மேகலை கூட ஈகையரியதுதான்!) ஈகையரிய இழையணி என்பதற்கு, கற்பு என்று பொருள் கொள்கிறார் மற்றொரு புலவர். இது சரியாக இருக்க முடியும். சிவஞானம் விரும்புவதாகச் சொல்லிக்கொள்ளும் தமிழன் பண்பாட்டுக்கு அது மிகவும் பொருந்த முடியும். அத்தனையும் பாடல் வல்ல பாணருக்குக் கொடுத்த பின், ஈகையறிய கற்பினொடுங் கூடிய மாதரோடு, ஆய் கோயில் இருந்ததெனவும் கொள்ள முடியும். சென்ற இதழில் நான் கூறியதுபோல, விலையுயர்ந்த ஆபரணங்கள் என்றோ, கற்பு என்றோ கொள்ளல் சாலும். ஏணிச்சேரி முடமோசியாரே பாடியதாக உள்ள அந்தப் பாடலில், களிறு அனைத்தையும் கொடுத்த பின் என்று வருகிறதே தவிர, நகைகள் அணிகள் பற்றிய பேச்சே இல்லை. அப்படியிருந்தாற்றான், மற்ற நகைகளை _ அணிகளை ஈந்து, ஈகையறிய இழையணியோடிருந்த மாதர் என்று கொள்ள முடியும், அப்போது, மற்ற நகைகளிலிருந்து இதற்கு தனி மதிப்பு ஏற்படுவதால் இது தாலியாக இருக்கலாம் என்கிற யூகம் புலப்படும். இப்போது, பாடல் காட்டும் முடிவு, அது தாலி என்பதற்குச் சிறிதுகூட உதவவில்லை. ஔவைப் பிள்ளை, சாமிநாதையரின் முறையிலேயே அப்பொருளைக் கூறியுள்ளார். இதனைப் பொருந்தா உரை என சுலபமாகக் கூறிவிடலாம்.

புறம் 374_வது பாடலில் தாலி என்கிற பதத்தை உபயோகித்திருக்கும் முடமோசியார், (குறச்சிறுவர்க்கு அணியப்படும் தாலி) நமக்குத், தாலிஅன்றையத் தமிழகத்தில் எந்த நோக்கத்தோடு இருந்தது என்பதை அறிய வசதி தந்துள்ளார்.

முடிவாக, சங்ககால இலக்கியங்களைக் கொண்டு, தாலி இருந்தது என்பதற்கு ஆதாரம் தேடுகிறவர்கள், இழையணி, மங்கல அணி, மண்ணாங்கட்டி அணி தெருப்புழுதி அணி என்றெல்லாம் வார்த்தைகளைக் கண்டு தாலி என்று மயங்குகிறார்களே தவிர, அசல் தாலி எனும் பதம் தனித்தமிழ்ப் பதமாக இருந்தும், அதுநேரடியாக ஒரு இடத்தில்கூட தாலி என்றே வரவில்லை. அதாவது திருமணத்தில் கட்டப்படும் புனிதப் பொருளில்!

ஆகவே, சுலபத்தில் சங்ககாலத்தில் தாலி கட்டப்படும் பழக்கம் இல்லையெனும் முடிவுக்கு வரலாம். அது தமிழ் வழக்கம் அல்ல என்பதுதான் உண்மையாகவும் இருக்க முடியும்.

பிறகு ஒரு பெரிய ஆதாரத்தைத் தோழர் சிவஞானம் காட்டுகிறார். அதாவது கம்பன் தாலி பற்றிக் குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறார். இதை ஒப்புக்கொள்ள நமக்குத் தடை இல்லை! கம்பன் காலம் மிகவும் பிற்பட்ட காலம்! அதாவது 12-ஆம் நூற்றாண்டு-_ சுமார் எழுநூறு ஆண்டுகட்கு முன்புதான் கம்பன் வாழ்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகினறனர்! அந்த நாளில் தாலி கட்டும் வழக்கம் புகுத்தப்பட்டிருக்கலாம். ஆரியம், கோயில் கோயிலாக உருவான காலம் கம்பன் காலம். தாலி பற்றிக் கம்பன் கூறியதாகக் கூறுவது, முந்தா நாள் முத்தைய செட்டி வீட்டில் தாலி கட்டினார்கள் என்று ஆதாரம் காட்டுவது போலாகும்! சங்க காலத்தில் உண்டா? என்று கேள்வி, இல்லை என்கிற பதிலோடு முடிகிறது.

(தொடரும்)

தமிழ் ஓவியா said...

கருப்பூ


சென்னை லூகாஸ் மேம்பாலத்தை ஒட்டிய சாலையில் தினமும் பயணிக்கும் பெரும்பாலான மக்கள் அதைக் கவனித்திருப்பார்கள்.

இன்னும் ஆறு மாதங்களுக்குப் பிறகு வரக்கூடிய தன் தலைவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஏதோவொரு லெட்டர்பேடு கட்சியின் விளம்பரம் எழுதப்பட்ட அந்த மேம்பாலத்தினடியில், வெகுநாட்களாக டேரா போட்டிருந்தது ஒரு நரிக்குறவர் கூட்டம்.

அடித்தட்டு மக்கள் என்பதற்கேற்ப இந்த நாடோடிகள் எந்த ஊருக்கு இடப்பெயர்ச்சி செய்தாலும் டேரா போடுவது மேம்பாலங்களின் அடியில்தான். வழக்கமான காயா போய பேச்சுவழக்கு, கண்களை உறுத்திடும் பாசிமணி மாலை, அரை டவுசர், அரைக்கால் கவுன் கூட்டத்திற்கிடையே வித்தியாசமாய் ஒரு கறுப்புப் பூனை.

முழுக்க முழுக்க கறுப்பு நிறம். கல்பதித்த மோதிரம் போல் பளிச்சிடும் துருதுரு கண்கள். கழுத்தில் சிவப்பு நிறத்தில் பட்டையும் அதே நிறத்தில் கயிறும். அக்கயிற்றின் மறுமுனை ஒரு செங்கல்லில் கட்டப்பட்டிருந்தது. அந்த பூனையோடு எந்நேரமும் கொஞ்சி விளையாடியபடி ஒரு சிறுமி.

ஏ பக்கி ஒரு கனத்த பெண்மணி குரல் கொடுக்க, அச்சிறுமி விளையாட்டை நிறுத்தி திரும்பிப் பார்த்தாள். பக்கி என்பது அச்சிறுமியின் பெயராகவோ, செல்லப் பெயராகவோ அல்லது செல்லத் திட்டாகவோகூட இருக்கலாம். அப்பெண் சிறுமியின் அம்மாவாக இருக்கக்கூடும். தொடர்ந்து அப்பெண்மணி, கக்கரே புக்கரே யென அவர்களுக்குப் புரிந்த மொழியில் ஏதோ சொல்ல, சிறுமி பூனையின் கயிற்றை அவிழ்த்து ஒரு முனையை கையில் பிடித்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்தில் மொத்தக் கூட்டமும் அன்றாட வேலைக்கு ஆயத்தமாகி பாலத்தினடியிலிருந்து வெளிவந்தது.

அந்த நரிக்குறவர் இனக் கூட்டத்திற்கு எனது ஆங்கிலம் புரியாதென்று நான் கர்வப்பட்டால் அவர்களது மொழி எனக்குப் புரியவில்லையேயென நான் வெட்கித் தலைகுனிந்தாக வேண்டும். ஆக ஒரு மொழியை வைத்து ஒருவனை அறிவாளியெனத் தீர்மானிப்பது எத்தனை தவறென்று அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் உள்மனசு சொல்லும்.

தமிழ் ஓவியா said...

திசைக்கிருவராக அவர்கள் பிரிந்து செல்ல, அச்சிறுமியும் அவளது அம்மாவும் அண்ணா நகரின் ஏதோவொரு நிழற்சாலையில் கையில் காந்தக்கம்பியுடன் நடந்தனர். அச்சிறுமி, ஒரு கையில் பூனையின் கயிறு, மறுகையில் கம்பியுடன் பின்தொடர்ந்தாள். பூனை எதையெதையோ முகர்ந்தபடி ஆங்காங்கே நின்று நின்று வர, கருப்பூ, கருப்பூ என அடிக்கடி விளித்தபடியே அதனை இழுத்துக்கொண்டு நடந்தாள். கருப்பூ என்பது பூனையின் காரணப்பெயராகத்தான் இருக்கக்கூடும். கண்டிப்பாக ஜாதகம் பார்த்து வைத்திருக்க மாட்டார்கள். எண்ணை காணாத செம்பட்டைத்தலை மனிதர்களிடையே கருகருவென்ற கருமை நிற மயிர்களோடிருந்த கருப்பூவை அழகனாகத்தான் எல்லோருமே பார்த்தார்கள்.

கருப்பூவோடு இவர்கள் செல்லுமிடமெல்லாம் அழையா விருந்தாளியாக அந்தந்த ஏரியா நாய்க்கூட்டம் துரத்தத் தவறுவதில்லை. வித்தியாசமான கெட்டப்பிலிருக்கும் நரிக்குறவர் கூட்டத்தை நாய் துரத்தும் வழக்கமான செயல், அச்சிறுமிக்கு மட்டும் வேறுவிதமாகப்பட்டது. ஏதோ, தன்னுடைய கருப்பூவைத்தான் நாய்கள் துரத்துவதாக எண்ணி அதனைப் பாதுகாப்பாகவும், சற்று கர்வமாகவும் இழுத்தபடி நடப்பாள்.

இப்படியாக அலைந்து, தெருவின் மூலையெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காலி மதுப்பாட்டில்கள், பால்பாக்கெட் கவர்கள், கழிவு பிளாஸ்டிக்குகள், தகர டப்பாக்களென சேகரித்து அங்கிருக்கும் பழைய காகிதக்கடையில் எடைக்குப்போட்டு பெற்ற பணத்தில்; ஒரு குவாட்டரையும் வாங்கியபடி அந்த பாலத்தினடியே வந்துசேருவது இவர்கள் வாடிக்கை.  போதை தலைக்கேறவும் பழைய எம்.ஜி.யார் பாடல்களைப் பாடுவதும், ஆடுவதுமாக பெரிய ரகளை செய்து அவ்வப்போது அடிதடிகளும் நடத்தியபின் தூங்கிச் சரிவது இவர்களின் வாடிக்கை. போதையில் கருப்பூவைச் சீண்டிப் பார்ப்பதும், அச்சிறுமி அழுவ

தமிழ் ஓவியா said...

தும், சிறுமிக்காக அவளது அம்மா சண்டை பிடிப்பதுமாக பல இரவுகள் கழியும்.
சிறுமியும் பூனையும் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் விதமே அலாதியானது. மழைநேரங்களில் வெளியே செல்லமுடியாமல் பாலத்தினடியில் ஒதுங்கியிருக்கும்போது பூனைக்கு பலத்த அலங்காரம் நடக்கும். தங்களிடமுள்ள பாசிமணிகளை ஒவ்வொன்றாக பூனையின் கழுத்தில் மாட்டி அழகுபார்ப்பாள். குரங்காட்டியைப்போல் கருப்பூவை புரட்டிப்போட்டு பல்டியடிக்க வைப்பாள். தன்னோடு படுக்கவைத்து பூனையை இவள் வருட, பதிலுக்கு அதுவும் ஆர்வமாக இவளைப் பிராண்டி வைக்கும்.

ஊருக்குள் எத்தனை பூனைகள் திரிந்தாலும் கறுப்பூவின் குரல் மட்டும் அச்சிறுமிக்கு தெளிவாகப் புரியும். ஒருமுறை கருப்பு திடீரெனக் காணாமல் போனது. அவளது அம்மாவுடன் சேர்ந்து அழுதபடியே நாலாப்புறமும் தேடியலைந்து களைத்ததுதான் மிச்சம். அங்கிருந்த பெட்டிக் கடையோரமாக நிழலுக்கு ஒதுங்க, எங்கிருந்தோ மெல்லிதாய் ஒரு பூனைச் சத்தம் கேட்காமல் கேட்டது. சிறுமிக்கு உடம்பு முழுக்க பரவசம். அது கருப்பூவின் குரலே தான். குரல் வந்த திசைநோக்கி பெட்டிக்கடை ஓரத்தில் கைவிட்டுத் துழாவ கருப்பூ மாட்டிக்கொண்டது.

அதுநாள் முதல், கருப்பூ அவ்வப்போது காணாமல் போவதும், திரும்பக் கிடைப்பதும் வாடிக்கையானது. ஒவ்வொரு முறை திரும்பக் கிடைக்கும்போதும் கருப்பூ மேல் சிறுமி வைத்துள்ள அன்பு அதிகமாகிக்கொண்டே தான் இருந்தது. ஆண்மை விருத்திக்கு கறுப்புப்பூனையின் ரத்தத்தை சூப் வைத்துக் குடித்தால் நல்லதென்று ஏதோவொரு மிட்நைட் தொலைக்காட்சி மருத்துவர் சொன்ன குறிப்பைக் கேட்டு, அந்த கருப்பூவை விலைக்கு கேட்டு பக்கத்து தெருவிலிருந்து ஒரு பெரியவர் வந்தபோது, பெரும்பணத்திற்கு ஆசைப்பட்டு அங்கிருந்த ஒருவன், அச்சிறுமியில்லாத பொழுதில், விலைக்கு விற்று விட்டான்.

செய்தியறிந்து அச்சிறுமி பெருங்களேபரம் செய்ய, விற்றவனே அந்த பூனையை திரும்ப மீட்டு வந்தான். அதிலிருந்து அவன் மீது இச்சிறுமிக்கு தீராத கோபம். அவனைத் தவிர்த்த மொத்த கூட்டத்திற்கும் திரும்பக் கிடைத்த கருப்பூ, செல்லப்பிள்ளையாகி விட்டது. கழிவு பொறுக்கச்செல்லாமல் பாலத்தினடியில் சுருண்டு ஓய்வெடுப்பவர்களுக்கு கறுப்பூ தான் பொழுதுபோக்கு! துரத்தும் நாய்களுக்குப் பயந்து பாலத்தை விட்டு வெளியேறாமல் விளையாடப் பழகி விட்டது.

பூனைகள் உணவு உண்ணாமல் பதிமூன்று நாட்கள்வரை தாக்குப்பிடிக்குமாம். எனவே நகரத்து பூனைகள், உணவின்று உயிரிழப்பது அரிது. பெரும்பாலும் விபத்துகளில் தான் அவற்றை மரணம் நெருங்குகிறது.

இதோ, வழக்கம்போல் கருப்பூவைத் தன்னோடு அணைத்தபடி அச்சிறுமி தூங்குகிறாள். நள்ளிரவில் திடீரென விழித்துக்கொண்ட கருப்பூ விபரீதம் புரியாமல் மெல்ல கயிற்றிலிருந்து நழுவி பாலத்திற்கு வெளியே வருகிறது. கும்மிருட்டில் தூரத்தில் ஏதோ அசைவது கண்டு துரத்தியபடி திசைதெரியாமல் ஓடுகிறது. இடம்மாறி வெகுதூரம் வந்ததை உணர்ந்து, வந்த வழியே திரும்ப, எங்கிருந்தோ வந்த வெண்ணிற சொகுசு வாகனம், கருப்பூவின்மேல் ஏறி இறங்கியதுகூட தெரியாமல் ஓடி மறைகிறது. சத்தமேயில்லாமல் பூனையின் உயிர் அடங்கிவிட்டது.

காலையில் எழுந்த சிறுமிக்கு வெறும் சிகப்புக் கயிறை மட்டும் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது. கருப்பூ, கருப்பூ எனக் கத்தியபடி பாலத்தின் மறுமுனை வரை சென்று பார்த்தாள். அவளது சத்தம் கேட்டு விழித்த அம்மாவும் சுற்றுமுற்றும் கருப்பூவைத் தேடத் தொடங்கினாள். இம்முறை இருவரும் எங்கெங்கோ தேடியும் கருப்பூவைக் காணவில்லை. நல்லவேளை, கருப்பூ அடிபட்ட சாலைப் பக்கமாக இவர்கள் இறுதிவரை செல்லவேயில்லை.

அழுதழுது அச்சிறுமியும் ஓய்ந்துவிட்டாள். கருப்பூ எங்கிருந்தாவது திரும்பக்கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கையில் காந்தக்கம்பியுடன் வயிற்றுப்பசி போக்க, கழிவுகளைப் பொறுக்கக் கிளம்பிவிட்டாள். இதோ இன்றும் இவளைச் சுற்றி நாய்கள் கூட்டம் குலைத்தபடி பின்தொடர்கின்றன. பாவம், இதுங்களும் நம்ம கருப்பூவை நெனைச்சுக்கிட்டே என் பின்னால சுத்துதுங்க! என மனதிற்குள் நினைத்துக்கொண்டே நடந்த அவள், அருகில் ஒரு கார் வந்து நின்றது. பசியால் வாடிய ஒரு கைக்குழந்தையுடன் கையேச்சிய தாயைப் பார்த்து காரிலிருந்து இறங்கியவர், போம்மா!, டிஸ்டர்ப் பண்ணிணாதே...! என்றபடி விரைந்து உணவு விடுதிக்குச் சென்றார்.

சிறுமியின் காதுகளில் கருப்பூவின் குரல் மெல்லியதாய் கேட்பதுபோல் தோன்றியது... அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது!

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

தமிழ் ஓவியா said...

ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!




இந்திய அரசியல் சாசனம் நாட்டுக் குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. நாட்டுப் குடிமக்களுக்கு, அவர்கள் விருப்பப்படி, நாட்டு நலனுக்கு ஏற்ற முறையில், மக்களின் நன்மைகளை வலியுறுத்தும் வகையில் பல சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உரிமை, குடிமக்களோ அல்லது அயல்நாட்டுவாசிகளோ, குற்றம் செய்தால், அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் காவல்துறை, அவர்கள் கைது செய்ய உரிமை பெற்றுள்ளது. காவல்நிலையக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, வன்முறை, சித்திரவதை நடக்க வாய்ப்பிருக்கிறது. அடிப்படை உரிமைகளின் அத்துமீறலுக்கு வழிவகுக்கிறது.

ஒரு குடிமகனைக் கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிய முதல் திருப்புமுனை தீர்வு D.K.Basu Vs. State Case என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்தது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை செய்ய, காவல்துறை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்து உச்சநீதிமன்றம் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது.

இதனால், போலீஸ் காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும்போது, சித்திரவதைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும். ஆனால், இந்தியாவில் பெண்கள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும்பொழுது பல சூழ்நிலைகளில் அவர்கள் காவல் நிலையத்தில் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெண்கள் பல காவல் நிலையங்களில் பாலியல் கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உச்சநீதிமன்றமும், அரசியல்வாதிகளும் சேர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.


பெண்களைக் கைது செய்யும்போது காவல்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:-

1.    கைது செய்யப்பட்ட பெண்களை, ஆண் குற்றவாளிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனி லாக்-_அப்பில் அடைக்கப்பட வேண்டும். தனியாக லாக்_அப் இல்லாவிட்டால், பெண்களை தனி அறைகளில் அடைக்க வேண்டும். மேலும், பெண்கள் கைது செய்யப்படும்போது, பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.    பெண்களை, சூரிய அஸ்தமனம் -_ சூரிய உதயம் இடையே அதாவது இருட்டியபிறகு, கைது செய்யக்கூடாது. ஆண் காவலர்களால் பெண்கள், பாலியல் தொல்லைகளுக்கு காவல் நிலையத்திலேயே ஆளாக்கப்பட்டதால், இந்த விதி உருவாக்கப்பட்டது.

3.    மூன்றாவதாக, பெண்களை, சிறுமிகளை காவல் நிலையத்திற்கோ, வேறு இடங்களுக்கோ விசாரணை செய்ய அழைக்கக்கூடாது. அவர்கள் வசித்துவரும் வீட்டில்தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை செய்ய வேண்டிய நேரமும், முறையும் பெண்களுக்கு கூச்சத்தை, அவமானத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.

4.    பெண் கைதிகளுக்கு, அல்லது வேறு பெண்களுக்கு மருத்துவ சோதனை செய்ய பெண் மருத்துவர்களையே அனுமதிக்க வேண்டும். பெண் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த மருத்துவ பரிசோதனை கையாளப்பட வேண்டும். பெண் கைதிகள் குழந்தை பெற்றால், Prenatal and Postnatal Care  பராமரிப்பு அளிக்க வேண்டும்.

5.    பெண்கள் பேறுகாலத்தில் இருந்தால், அவர்களை கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, கருவில் இருக்கும் சிசுவும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால், இந்த முடிவை முடிந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். மேலும், கருத்தரித்த பெண்களை கட்டுப்படுத்தக் கூடாது.

ஓரளவு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்களையும், சிறுமிகளையும் பெண் காவலர்கள் அல்லது பெண் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். பெண் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி உண்பதில் மக்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் கருத்து


 




மகாராட்டிராவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது குறித்து கருத்துக்கூறிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் உணவுப் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப்பாடோ தடையோ விதிக்கக் கூடாது என்றார்.

மாட்டிறைச்சியை உண்ண விரும்பக் கூடியவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என்று அடாவடியான, ஆதிக்கப் போக்கிலான கருத்தைச் சொன்னவர் முக்தார் அப்பாஸ் நக்வி. இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நான் மாட்டிறைச்சியை உண்பவன் என்னைத் தடுக்க யாராலும் முடியாது என்று காட்டமாய் பதில் கூறி கண்டனம் தெரிவித்தவர்தான் கிரண் ரிஜிஜு அவர்கள்.

மதச்சார்பற்ற நாட்டில் மத நல்லிணக்கத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் ரிஜிஜு.

- தினமணி, 28.05.2015

தமிழ் ஓவியா said...

திருமணங்கள் எல்லாம் பெரியார் வழியில் நடக்க வேண்டும்!




வியப்பாக இருக்கிறதா? உங்களுக்கு வியப்பாக இருக்கும்; இந்துத்வா பேர்வழிகளுக்கோ அதிர்ச்சியில் இருக்கும். வியப்பாயினும் அதிர்ச்சியாயினும் உண்மை இதுதான்!

31.05.1936இல் குற்றாலத்தில் காலை 9 மணிக்கு பட்டிணம் பொடி உரிமையாளர் தோழர் எஸ்.தங்கவேலுவுக்கும் மதுரை அய்யம்பாளையம் வியாபாரி கே.எஸ்.இராமசாமி பிள்ளையின் மகள் பூரணத்தமாளுக்கும் குற்றாலம் காடல்குடி ஜமீன்தார் மாளிகையில் தந்தை பெரியார் தலைமையில் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் நடந்தது.

அத்திருமணத்தில் இராசகோபாலாச்சாரியார் (இராஜாஜி), டி.கே.சிதம்பரநாத முதலியார், பப்ளிக் பிராசிக்கியூட்டர் பி.ஆவுடையப் பிள்ளை, அ.பொன்னம்பலனார், ஏ.வேணுகோபால், பி.பிச்சையா, கே.சி.இராமசாமி (கொல்லம்), எ.கே.கே.குற்றாலிங்க முதலியார், சு.ரா.அருணாசலம் பிள்ளை, எஸ்.சண்முகசுந்தரம் பிள்ளை முதலானோர் கலந்துகொண்டனர்.

தமிழ் ஓவியா said...

தலைமை வகித்த தந்தை பெரியார் முகவுரையாக, நான் இங்கு புரோகித முறையில் திருமணம் நடத்திக் கொடுக்க வரவில்லை, சீர்திருத்த முறையில் மக்களுக்கு நன்மையுண்டாக நாலு வார்த்தைகள் பேசவும், கொஞ்ச நேரமாவது இதில் கவனம் செலுத்தவும்தானே ஒழிய வேறில்லை என்று சொல்லி, மணமக்களுக்கு திருமண ஒப்பந்த உறுதிமொழியை எடுத்துச் சொல்லி அவர்களையும் சொல்லச் செய்து திருமணத்தை முடித்தார்.

அதன்பின் பேசிய இராஜகோபாலாச்சாரியார்,

நண்பர்களே! இந்தத் திருமணத்தைப் பார்க்க எனக்குத் திருப்தி ஏற்படுகிறது. நல்லமுறையில் இந்தக் கல்யாணம் நடத்தப்பட்டது. எனது நண்பர் இராமசாமி (பெரியார்) அவர்கள், தான் புரோகிதர் இல்லையென்று சொன்னார். அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவர் புரோகிதர்தான். நூறு தடவைச் சொல்வேன். ஆனால், இந்தப் புரோகிதம் (ஒப்பந்த உறுதிமொழியும் அதுசார்ந்த சொற்பொழிவும்) மேலான புரோகிதமாகும். அவர் அதை விடாமல் மக்கள் ஷேமத்துக்காக இன்னும் வெகு நாளைக்குத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இராமசாமி இதனால் தேசத்துக்கு நன்மை செய்து கஷ்டம் இருந்து வருகிறது. அது மாறவேண்டும். திருமணம் என்றும் நினைவில் நிற்கும்படி நடக்க வேண்டும். அச்செய்கையில் ஒரு மதிப்பு இருக்கும்படியாகவும் நடத்தவேண்டும்.

கல்யாணத்தில் தம்பதிகள் சேமமும் சந்தோஷமும் முக்கியமானவை. அவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்.

மணமக்களை ஆசீர்வதிக்கும்படி இராமசாமி என்னைக் கேட்டுக்கொண்டார். நான் ஆசீர்வதிக்கத் தகுதியற்றவன். கடவுள்தான் ஆசீர்வதிக்க வேண்டும். ஆனாலும் அவர் சொன்னதற்கு மணமக்கள் சந்தோஷமாகவும், ஒற்றுமையாகவும் நீண்ட நாள் வாழவும் வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

மணமகன் பெண்ணுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும். கல்யாணம் எல்லாம் சீர்திருத்த முறையில் நடக்க வேண்டும். இது மாதிரி எல்லோரும் செய்ய முன்வர வேண்டும் என்று பேசினார்.

பின் தலைமை வகித்த தந்தை பெரியார் தன் முடிவுரையாக பேசியதாவது:-

எனது மதிப்பிற்குரிய தோழர் ஆச்சாரியார் அவர்களும், தோழர் முதலியார் அவர்களும் இத்திருமணத்தைப் பாராட்டிப் பேசியது எனக்கு மிகவும் பெருமையளிக்கத் தக்கதாகவே இருந்தது.



இதுவரை நான் எத்தனையோ திருமணத்தில் கலந்திருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்; தலைமை வகித்தும் இருக்கிறேன் என்றாலும், இன்றைய திருமணத்தில் நான் கலந்திருப்பதை உண்மையாகவே நான் பெருமையாக எண்ணுகிறேன். இத்திருமண முறை இப்பெரியார்களின் ஆமோதிப்பையும் ஆசியையும் பெற்றது உண்மையிலேயே எனக்குக் கிடைக்கக் கூடாத ஒரு சாதனம் கிடைத்தது போலவே இருக்கிறது. மணமக்களுக்கும் இந்த சந்தர்ப்பமானது ஒரு மறக்கக் கூடாததும், என்றும் ஞாபகத்தில் இருக்கக்கூடிய பெருமையானதுமான சம்பவமும் ஆகும். ஆதலால் அவர்களையும் நான் பாராட்டுகிறேன்.

எனது பணிவிற்குரிய ஆச்சாரியார் அவர்கள் நான் இத்திருமணத்திற்கு புரோகிதன் என்று சொன்னார்கள். இதுதான் புரோகித முறையாகவும் புரோகிதத்துக்கு இவ்வளவுதான் வேலை என்றும் இருந்தால் நான்அந்த புரோகிதப் பட்டத்தை ஏற்க தயாராய் இருப்பதோடு புரோகிதத் தன்மையை எதிர்க்கவும் மாட்டேன். புரோகிதக் கொடுமையும் புரோகிதப் புரட்டும் பொறுக்க முடியாமல் இருப்பதாலும் அப்படி இருந்தும் அதற்கு செல்வாக்கு இருப்பதாலும் தான் புரோகிதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்கிறேன். மற்றபடி எனக்கு வேறு எண்ணம் இல்லை. இன்று நடந்த இந்த காரியங்கள்கூட இல்லாமல் திருமணம் என்பவை நடக்க வேண்டும் என்பது எனது அவா. அப்படியே அநேக இடங்களில் நடக்கின்றன.

தமிழ் ஓவியா said...

ஆணும் பெண்ணும் ரிஜிஸ்டர் ஆபீசுக்குப் போய் வாழ்க்கைத் துணைவர்களாகி விட்டோம் என்று சொல்லி கையெழுத்துப் போட்டுவிட்டு வந்துவிட்டால் போதும். அந்த வெறும் கையெழுத்து திருமணத்துக்கு இதைவிட அதிக மதிப்பும் நன்மையும் சுதந்திரமும் உண்டு. புருஷன் பல பெண்ஜாதிகளைக் கட்டிக் கொள்ள முடியாது. ஆண் பெண் குழந்தைகளுக்கு சொத்தில் சரிபங்கு உண்டு. நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டால் ஆணோ பெண்ணோ பிரிந்து இஷ்டமானால் வேறு கல்யாணமும் செய்து கொள்ளலாம். புரோகித கூலி, தட்சணை, தாம்பூலம், சாப்பாடு, ஆடல், பாடல், ஆடம்பரம் ஆகிய செலவும் தொல்லையும் கிடையாது. இன்று கூட நாம் இங்குக் கூடி இந்தக் காரியங்களைச் செய்வது இந்த வாழ்க்கை ஒப்பந்தத்துக்கு ஒரு விளம்பரத்துக்கு ஆகவே ஒழிய மற்றபடி இப்படிச் செய்தால்தான் கல்யாணம் ஆகும் என்பதற்கு ஆக அல்ல. ஆகையால் வர வர இவைகள்கூட அவசியமில்லாத மாதிரி செய்து கொள்ள வேண்டும். சட்டங்களிலும் சீர்திருத்தம் வேண்டும்.

மற்றும் ஆச்சாரியார் அவர்கள், நான் அவர்களை திருமணத்தை பாராட்டி வாழ்த்தும்படி கேட்டதை ஆசீர்வாதம் செய்யும்படி கேட்டதாகவும், அது கடவுளுக்குத்தான் உரிமை என்றும் சொன்னார். நான் கேட்டுக் கொண்டதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆச்சாரியார் பாராட்டுதலக்கும் வாழ்த்துதலுக்கும் மதிப்பு உண்டென்று இப்போதும் கருதுகிறேன்.

இத்திருமண முறையை பெரியார் ஆச்சாரியார் ஆதரித்து விட்டதால் எனக்கு எவ்வளவோ தைரியம் ஏற்பட்டுவிட்டது.

இத்திருமண முறைக்கு இன்று ஒரு பொது ஆமோதிப்பு ஏற்பட்டுவிட்டதென்றும் அது இம்முறை பெருக ஒரு நல்ல ஆதரவு என்றும் சொல்லுவேன்.

இது நமக்கு ஒரு லாபகரமான காரியம் என்றே கருதுகிறேன். இதற்கு ஆக அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவனேயாவேன்.

நிற்க ஆசீர்வாதம் செய்யச் சொன்னேன் என்பதிலும் எனக்கு ஆட்சேபணையில்லை.

ஆனால் அதற்கு தான் தகுதியில்லை என்றும் கடவுள்தான் செய்யவேண்டும் என்று சொன்னதற்கு நான் சொல்லக்கூடிய சமாதானம் என்னவென்றால் ஆச்சாரியார் அவர்கள் ஆசீர்வாதம் செய்வதற்கு தகுதி உடையவர்கள் என்றே சொல்லுகிறேன். அவர் போன்றவர்கள் இம் மணமக்கள் வாழ்க்கை நலத்தில் ஆசை கொண்டு ஆசி கூறிவிட்டால் அந்த ஆசி வீண் ஆசியாகவோ, கடவுள் ஆசியாகவோ, தட்சணைக்கு ஆக செய்யவும் ஆசியாகவோ ஆகிவிடுமா?

உதாரணமாக அரசியல் உலகில் ஒரு வைசிராய் ஒரு ஆசாமியைப் பார்த்து நீ முன்னேற்றமடைய தகுதி உடையவன், நீ முன்னேற்றமடைந்து பெரிய பதவிகளுக்கு வரவேண்டுமென்று ஆசைப்படுகின்றேன் என்று ஆசி கூறுவாரேயானால் அந்த ஆளுக்கு அந்த ஆசி பயன்படுமா, படாதா என்று யோசித்துப் பாருங்கள். வைசிராயானவர் அந்த ஆசாமிக்கு ஆபத்து வரும் காலத்தில் எல்லாம் தன்னால் கூடியதைச் செய்து தன் வாக்கு நிறைவேற முயற்சிப்பாரா இல்லையா என்று யோசித்துப் பாருங்கள். அதுபோல் ஆச்சாரியார் அவர்களால் ஆசி பெற்றுவிட்டால் மணமக்கள் வாழ்க்கையில் ஆச்சாரியார் அவர்கள் கண்காணிப்பும் கவலையும் இருந்துதான் தீரும். அதற்கு ஆகத்தான் தகுந்தவர்களிடம் ஆசி பெறவேண்டும் என்பது.

மற்றபடி கடவுள் ஆசி என்றால் அரை அணா வாங்கிக் கொண்டு தெருவில் போகின்றவன் யாதொரு பொறுப்பும் இல்லாமல் மணமக்கள் 16 மக்கள் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று சொல்லி விடுவார்கள்.

கடைசியாக இவ்வளவு சுருக்கமுறையில் திருமணம் நடத்திக் கொள்ள முற்பட்ட மணமக்களுக்கும் அதை ஒப்புக்கொண்ட மணமக்கள் பெற்றோர்களுக்கும் இங்கு விஜயம் செய்த பெரியோர்களுக்கும் நன்றி கூறி அமருகிறேன் என்று பேசினார்.

தமிழ் ஓவியா said...

உற்சாக சுற்றுலாத் தொடர் - 10


இயற்கையின் இன்ப ஊற்று

- மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்



விமானத்தில் ஏறிய எங்கட்கு மகிழ்ச்சியான அதிர்ச்சி !

சேலை கட்டிய மாந்தரின் புன்னகை! பணிப்பெண்கள் சேலையுடனும் ஆண்கள் தலைப்பாகையுடனும் வரவேற்றனர். வெள்ளையர்கள் இந்திய உடையிலே!

ஆப்ரிக்க டான்சானியா

அக்டோபர் 23 ம்தேதி ஆக்ராவிலிருந்து சுமார் 8 மணி நேரம் விமானப்பயணம் செய்து டான்சானியாவின் கிலிமஞ்சாரோ விமானநிலையம் வந்தடைந்தோம். விமானநிலையத்தில் சிற்றுண்டி உண்டபின் சிறிய விமானங்களில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து செரங்கெட்டி (Serangeti National Park) வந்தடைந்தோம்.

தமிழ் ஓவியா said...

செரங்கெட்டி உலகிலேயே மிகவும் நன்றாக இயற்கை சூழ்நிலையில் மிருகங்கள் உலாவும் பெரிய பூங்காக்களில் முக்கியமானது.இந்த விமானப்பயணத்தின் போது ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பரப்பளவு உள்ள பசுமையான திறந்த வெளியையும் , சிறு குன்றுகளையும் 'மாசா' என்ற ஆப்பிரிக்க இனத்தினரின் கோழி கூண்டுகள் போன்று வட்டமாக அமைக்கப்பட்டிருந்த குடிசைகள் நிறைந்த குக்கிராமங்களையும் பார்த்தோம். இந்த விமானப் பயணத்திற்குப் பிறகு 4 பேர்கள் அமரும் ஊர்தியில் (Jeep) ஏறி நடு காட்டில் அமைக்கப்பட்ட உல்லாச விடுதிக்கு சென்றோம்.  ஆப்பிரிக்க விலங்குகள் இவ்விடுதியைச் சுற்றி சுதந்திரமாக அலைகின்ற சூழ்நிலை.

மாசா இனத்து இளைஞர்கள் 24 மணி நேரம் இவ்விடுதியைச் சுற்றி காவல் காக்கிறார்கள். இவர்கள் பார்ப்பதற்கு கருமை நிறத்துடன் ஒல்லியாக உயரமாக உள்ளனர். எளிமையான தோல் செருப்பு அணிந்து கொண்டு, வலிமையான நெடிய குச்சியை ஆயுதமாக வைத்துக்கொண்டு, சிவப்பு வேட்டி அணிந்து கம்பீரமாக இருந்தார்கள். உதவி தேவை என்றால் புன்முறுவலுடன் செய்தார்கள்.

விடுதி அறை மிக அழகாக ஆப்பிரிக்க கலைப்பொருட்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. கொசு வலை படுக்கைகளில் பொருத்தப்பட்டிருந்தது.

தமிழ் ஓவியா said...

உணவுக்கூடத்தில் ஒரு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம் காத்திருந்தது. அங்கு ஒரு இந்திய சமையல் நிபுணர் மேலதிகாரியாக ( Supervisor) இருந்தார்.

சிறு வயதாக இருந்தாலும் திறமை மிக்கவராக இருந்தார். எங்களுக்கு இரண்டு நாட்கள் இனிமையான சாப்பாடு. விடுதியில் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு ஊர்தியில் விலங்குகளையும் இயற்கை எழிலையும் காணச் சென்றோம். பைனாக்குலர்  (ஙிவீஸீஷீநீறீணீக்ஷீ) எனப்படும் நல்ல தொலைநோக்குக் கண்ணாடி கொடுத்தார்கள். இந்த மாதிரி  வாய்ப்பு எங்களுக்கு பெரியார் காமராசர் பெற்றோர் மற்றும் எங்கள் கல்விக்கு உதவி செய்த உற்றோர்களையும் நன்றியுடன் நினைவு படுத்தியது.

இந்த அகண்ட பசுமை வெளியில் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக 'வில்லபி' என்ற விலங்குகள் ஓடிக் கொண்டிருந்தன. ஊர்திக்கு முன்பு பல தடவை எதிர்கொண்டோம். இவ்விலங்குகளின் முகம் மாடுபோலவும் உடல் குதிரை போலவும் இருந்தன. இயற்கையின் அதிசயம் தான். இந்த வில்லபி தான் அங்குள்ள பல மிருகங்களுக்கு அடிப்படை உணவு! நீர் யானைகள் நீரோடைகளில் உல்லாசமாக விளையாடிக் கொண்டும் , சண்டை போட்டுக் கொண்டும் இருந்தன. சில நீரை விட்டு வெளியே வந்து மரங்களில் உராய்ந்து கொண்டிருந்தன.

எனக்கு மிகவும் பிடித்த விலங்கு ஒட்டகச்சிவிங்கி. அவை கூட்டமாக குழந்தைகளுடன் மனிதர்களை கண்டு பயமில்லாமல் எங்களை கடந்து சென்று கொண்டிருந்தன.

எங்கள் பயண உதவியாளர் ஒட்டகச்சிவிங்கி பற்றி எதிர்பாராத செய்தி சொன்னார். அது என்னவெனில், குழந்தை பிறந்தவுடன் தாயை விட தந்தை தான் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாம். தாய் உணவு உண்ண வேண்டுமே!

மேலும், காட்டெருமை கூட்டங்கள் எங்களை தாக்க வருவது போல் பார்த்தன. அவை பக்கத்தில் யாரும் போனால் உடனே கொம்பை ஆட்டிக் கொண்டு முட்ட வரும் என்று எங்களுடன் வந்த கைடு (tour guide) சொன்னார்.வரிக்குதிரைகள் மந்தை மந்தையாக யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அலைந்து கொண்டிருந்தன.

யானைகள் கூட்டம், மின்னல் வேகத்தில் தாவி ஓடும் கெசல் (Gazelle) என்ற பெயருள்ள மான்கள், நூற்றுக்கணக்கான குரங்குகள் , நீளப் பற்கள் கொண்ட காட்டுப்பன்றிகள் பார்த்தோம். மரத்தில் ஏறும் சிருத்தை, சிங்கம் இவற்றைப் பார்த்து ஆரவாரம். என்ன தான் படங்களில் பாரத்திருந்தாலும் நேரே பார்ப்பது போல் இருக்காதல்லவா?.

இரண்டாம் நாள் மதிய நேரத்தில், Jeep  ல் போகும் போது ஒரு சிங்கக்கும்பல் மரத்தடியில் எங்கள் ஊர்திக்கு 10 அடி தூரத்தில் தூங்கி கொண்டிருந்ததைப் பார்த்தோம். இவ்வளவு பக்கத்தில் 20காட்டு ராசாக்களையும் , ராணிகளையும் பார்ப்பதற்கு கிடைத்த வாய்ப்பை நினைத்து மலைத்து போனேன். கழுதைப்புலி என்று அழைக்கப்படும் ஓநாய் குடும்பத்தை சேர்ந்த விலங்குகள் சிரிப்பது போல் சத்தம் போட்டுக் கொண்டு ஓடுவதை பார்த்தோம். பல வகை பறவைகள் கண்களுக்கு விருந்தளித்தன. மதிய உணவிற்கு நடுக்காட்டிலே நாற்காலி மேசை விரிப்புடன் அங்கே கொண்டு வரப்பட்ட கரி அடுப்புகளில் ( பார்பிக்கு) சுடச்சுடத் தயாரித்த வித விதமான உணவுகளும், பழங்களும் கொண்ட உல்லாச விருந்து ! பணம் நடுக்காட்டிலும் உணவுமழை பெய்ய வைத்தது! எங்களுக்கு ஒரே ஒரு குறை காண்டாமிருகத்தை காணமுடியாதது தான்.

பெரிய அய்ந்து என்பவை யானை, சிங்கம், சிறுத்தை, எருமை, காண்டாமிருகம்

ஏன் என்று கேட்டதற்கு அவை ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதிக்கு குடி போய் விட்டதாகத் சொன்னார்கள். இனி மேல் 5 மாதங்கள் கழித்து மழை கால பருவத்தில் திரும்பி வருமாம்.

இரண்டாம் நாள் மாசா இளைஞர்கள் குச்சிகளை வைத்து கொண்டு குதித்து குதித்து நடனம் ஆடினார்கள். பிறகு உலகப்புகழ் பெற்ற தொல் பொருள் ஆராய்ச்சியாளர் மகள் லூயிஸ் லீக்கி உலக முதல் மனிதனின் எலும்புக்கூட்டை எவ்வாறு அவர் தந்தை கண்டு பிடித்தார் என்பது பற்றி ஆராய்ச்சி சாதனங்களுடன் சொற்பொழிவு ஆற்றினார்.ஏதோ நாங்களே நேரிலேசென்று அந்த முதல் மனிதனின் எலும்புக்கூட்டைக கண்டுபிடித்த மாதிரி பெருமைப் பட்டோம்.

எங்களுடன் வந்த சில பயணிகள் நகோரோங்கோரோ பள்ளத்தாக்கு  (Ngorongoro Crater) என்ற உலகத்திலேயே பெரிய எரிமலை பள்ளத்தாக்கைப் பார்க்கச் சென்றனர். அது பத்து மைல்கள் அகலம் உள்ளது. அந்த பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கில் ஆப்பிரிக்க மிருகங்கள் திரிகின்றனவாம். அந்த பயணிகள் மாசாய் கிராமங்களையும் பார்த்து வந்தனர்.

கனவா,நனவா என்று எண்ணித் தெளிய நேரங்கொடுக்காமல் அடுத்து ஒரு பழைய நாகரீகக் கோட்டையை அடைந்தோம்.
தயாராகுங்கள் சந்திப்போம் .

(தொடரும்)

தமிழ் ஓவியா said...

ஜூன் 16-30 தமிழ்ப் பாடலில் தமிழர் நாடுகளின் எல்லை!
தமிழ்ப் பாடலில் தமிழர் நாடுகளின் எல்லை!


சோழநாட்டு எல்லை

கடல்கிழக்குத், தெற்குக் கரைபொரு வெள்ளாறு,
குடதிசையில் கோட்டைக் கரையாம்; - வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோணாட்டு எல்லையெனச் செப்பு.

சோழ நாட்டிற்கு எல்லையாகக் கிழக்குத் திசையில் கடலும், தெற்குத் திக்கில் நீர் நிரம்பிக் கரைகளைத் தாக்குகின்ற வெள்ளாறும், மேற்குத் திசையில் கோட்டைக் கரையும், வடக்குத் திக்கில் ஏணாட்டின் வயல்களும் உள்ளன. இவற்றிற்கு இடைப்பட்ட இருபத்து நான்கு காத தூரம் உள்ள நிலப் பரப்பே சோழநாடாகும் என்று சொல்வாயாக!

வெள்ளாறு _ புதுக்கோட்டை நகருக்கு அருகில் ஓடும் ஆறு. இதனைத் தென் வெள்ளாறு எனலாம்; குடதிசை _ மேற்குத் திசை; கோட்டைக்கரை குழித்தலைப் பகுதியாக இருக்கலாம். (திருச்சி மாவட்ட கெசட்டியர் ப.28); ஏணாடு _ நடுநாடு (திருக்கோவலூர் வட்டம்); காதம் _ பத்து மைல்கள்.

பாண்டிநாட்டு எல்லை

வெள்ளாறு அதுவடக்காம்; மேற்குப் பெருவழியாம்;
தெள்ளார் புனல்கன்னி தெற்காகும்; - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் அய்ம்பத்து அறுகாதம்
பாண்டிநாட்டு எல்லைப் பதி.

பாண்டிய நாட்டின் எல்லையாவது, வெள்ளாறு வடக்கு எல்லையாகும்; மேற்குத் திசையில் உள்ள பெருவழி (Highway) அத்திக்கில் உள்ள எல்லையாகும்; தெளிந்த நீரையுடைய குமரி ஆறு தெற்கு எல்லையாகும்; மனமார ஆட்சிக்குரிய கடல் கிழக்கு எல்லையாகும். இந்நான்கு எல்லைகளுக்கு உள்ளடக்கிய அய்ம்பத்தாறு காததூரம் உள்ள இடம் பாண்டிய நாடாகும்.

கன்னி ஆறு _ மிகப் பழங்காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் குமரிக்கண்டம் என்னும் நிலப்பரப்பு இருந்தது; அங்கே குமரிமலை என்றொரு மலை இருந்தது; அம்மலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய ஆற்றிற்குக் குமரி ஆறு என்று பெயர். அவ்வாறு, பாண்டிய நாட்டின் தென் எல்லையாகத் தலைச் சங்க காலத்தில் இருந்தது. கடல் கொந்தளிப்பால் அந்த நிலப்பகுதி கடலுள் மூழ்கி மறைந்தது. பிறகு இன்றைய குமரிமுனை பாண்டிய நாட்டின் தென் எல்லையாக இருந்து வருகிறது. கன்னி _ குமரி.

சேரநாட்டு எல்லை

வடக்குத் திசைபழனி; வான்கீழ் தென்காசி;
குடக்குத் திசைகோழிக் கோடாம்;- கடற்கரையின்
ஓரமோ தெற்காகும்; உள்எண் பதின்காதம்
சேரநாட்டு எல்லையெனச் செப்பு.

வடதிசையில் பழனியையும், பெருமை உடைய தென்காசியைக் கீழ்த் திசையிலும், மேற்குத் திசையில் கோழிக் கோட்டையும் (கள்ளிக்கோட்டை), தெற்கில் கடற்கரையையும் எல்லையாக உடையது சேரநாடு. அதன் பரப்பு எண்பது காத தூரமாகும் என்று கூறுக!

தொண்டைநாட்டு எல்லை

மேற்குப் பவளமலை; வேங்கட நேர்வடக்காம்;
ஆர்க்கும் உவரி அணிகிழக்கு; _ பார்க்குள்உயர்
தெற்குப் பினாகினி திகழிருப தின்காதம்
நல்தொண்டை நாடெனவே நாட்டு.

மேற்குத் திசையில் பவளமலையும், நேரே வடதிசையில் திருவேங்கட மலையும், அழகிய கிழக்குத் திசையில் ஒலிக்கின்ற கடலையும், தென்திசையில் உலகில் சிறந்த பெண்ணை ஆற்றையும் எல்லையாக உடையது சிறந்த தொண்டைநாடு. அதன் அமைப்பு இருபது காத தூரம் என்று உறுதியாகச் சொல்லுக.

வேங்கடம் _ திருப்பதி; ஆர்க்கும் _ ஒலிக்கும்; உவரி _ கடல்; பார் _ உலகு; பினாகினி _ பெண்ணையாறு, தென்பெண்ணை.

தமிழ் ஓவியா said...

கல்லூரி முதல்வரானார் திருநங்கை!




நாட்டில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராகியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் மிதுனபுரி மாவட்டத்தில் உள்ள விவேகாநந்தர் நூற்றாண்டு நினைவுக் கல்லூரியில் வங்கமொழி ஆசிரியராகப் பணியாற்றிய மானபி பந்தோ பாத்தியாயா என்ற இவர் ஜூன் மாதம் (2015) 9ஆம் தேதி முதல் கிருஷ்ணா நகர் பெண்கள் கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். தற்போது கிடைத்துள்ள இந்த உயர்வு சிறப்பு வாய்ந்தது. வாழ்வில் சாதிக்க பாலினம் ஒரு தடையல்ல என்பதை இது உறுதிசெய்கிறது என்றார்.

தமிழ் ஓவியா said...

இந்தியா எங்கும் “தமிழ்” என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள்

ஆந்திராவில் - 29 ஊர்கள்
அருணாசலப் பிரதேசத்தில் - 11 ஊர்கள்
அசாமில் - 39 ஊர்கள்
பீகாரில் - 53 ஊர்கள்
குஜராத்தில் - 5 ஊர்கள்
கோவாவில் - 5 ஊர்கள்
அரியானாவில் - 3 ஊர்கள்
இமாசலப்பிரதேசத்தில் - 34 ஊர்கள்
கர்நாடகாவில் - 24 ஊர்கள்
மகாராட்டிரத்தில் - 120 ஊர்கள்
மேகாலயாவில் - 5 ஊர்கள்
மணிப்பூரில் - 14 ஊர்கள்
மத்தியப்பிரதேசத்தில் - 60 ஊர்கள்

தமிழ் என்று தொடங்கும் ஊர்களுக்கு அருகே பழனி, தேக்கடி, தேனி, போடி என மதுரை மாவட்டத்தில் உள்ள ஊர்கள் உள்ளன.

நாகாலாந்தல் 4, ஒரிசாவில் 84, பஞ்சாபில் 4, இராசஸ்தானில் 26, தமிழ்நாட்டில் 10, உத்திரபிரதேசத்தில் 64, மேற்கு வங்கத்தில் 24 உள்ளன.

இந்தியா முழுமையிலும் தமிழ் என்று தொடங்கும் ஊர்கள் 612 உள்ளன.

தமிழ் ஓவியா said...

சிந்துவிலும் காவிரியிலும் ஒரே நாகரிகம்!



நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் செம்பியன் கண்டியூரில் 2006 பிப்ரவரியில் இரு புதிய கற்காலக் கைக்கோடாரிகள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றுள் ஒன்றில் கி.மு.2000 கி.மு.1500ஆண்டுகளுக்கு இடைப்பட்ட அரப்பா மொகஞ்சதாரோ கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை தெரிவிக்கிறது.

இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் சிந்துசமவெளி நாகரிகமும் தொல்தமிழர் நாகரிகமும் திராவிடர் நாகரிகமும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டுப் புதிய கற்கால மக்கள் அரப்பா மக்களின் திராவிட மொழியைப் பயன்படுத்தினர் என்பது இதன்வழி தெரிகிறது. இது தமிழ்நாட்டில் புதிய கற்கால மக்கள் தமிழ்ப் பேசியதற்கான முதல் சான்று.

ஆதாரம்: (உலக மொழிகளில் தமிழ்ச் சொற்கள் - ப.சண்முகசுந்தரம், உலக தமிழாராய்ச்சி நிறுவனம்)

குறிப்பு: இந்த இரண்டு சான்றுகளும் இந்தியா தமிழர் (திராவிடர்) மண் என்பதை உறுதி செய்கின்றன.

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி உண்பதில் மக்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் கருத்து


 




மகாராட்டிராவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது குறித்து கருத்துக்கூறிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் உணவுப் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப்பாடோ தடையோ விதிக்கக் கூடாது என்றார்.

மாட்டிறைச்சியை உண்ண விரும்பக் கூடியவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என்று அடாவடியான, ஆதிக்கப் போக்கிலான கருத்தைச் சொன்னவர் முக்தார் அப்பாஸ் நக்வி. இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நான் மாட்டிறைச்சியை உண்பவன் என்னைத் தடுக்க யாராலும் முடியாது என்று காட்டமாய் பதில் கூறி கண்டனம் தெரிவித்தவர்தான் கிரண் ரிஜிஜு அவர்கள்.

மதச்சார்பற்ற நாட்டில் மத நல்லிணக்கத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் ரிஜிஜு.

- தினமணி, 28.05.2015

தமிழ் ஓவியா said...

திரைப்பார்வை : புறம்போக்கு




இயல்பாகவே தான் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர் என்று சொல்லாமல் தன் படங்களின் வாயிலாக அதனை வெளிப்படுத்தி வருபவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.

இவரின் படங்கள் அனைத்தும் அனைவராலும் அந்தந்த காலகட்டத்தில் பேசப்படுபவையாகவே அமையும், அதற்கு இந்த புறம்போக்கு என்கிற பொதுவுடைமை திரைப்படம் விதிவிலக்கல்ல.

இந்த திரைப்படம் ஒரு வழக்கமான திரைப்படம் கிடையாது. ஆழமான சமூக கருத்தினை அடிப்படையாகக் கொண்டது. தேசத் துரோகக் குற்றச்சாட்டிற்காக மூன்று மரண தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டிய குற்றவாளி ஆர்யா. இந்த மரண தண்டனையைக்கூட அனுபவமிக்க, கைதேர்ந்த தூக்கிலிடும் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை வைத்தே செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இந்த பாலுச்சாமி என்கிற ஆர்யாவின் தேசத்துரோகம் அமைந்திருக்கிறது.

தூக்கிலிடும் அனுபவத்தை தன் தந்தையின் மூலமாக பெற்றிருக்கும் எமலிங்கம் என்கிற விஜய் சேதுபதியை வலை வீசிப் பிடிக்கிறது சிறை நிர்வாகம். கலாசியாக பணியாற்றும் விஜய் சேதுபதி முதலில் வரமாட்டேன் என்று முரண்டு பிடித்து பின்பு ஒத்துக்கொள்கிறார். தூக்கிலிட அல்ல, தூக்கில் தொங்க வேண்டியவரைக் காப்பாற்ற.   கதாபாத்திரங்களின் பெயர்களையே பொருத்தம் பார்த்து வைத்துள்ளார் இயக்குநர். தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வசித்து, பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலியின் பெயர் கார்த்திகாவிற்கும், சுதந்திரப் போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயரை ஆர்யாவிற்கும், ஆங்கிலேயர்களின் கல்வி முறையையும், அவர்களின் கடுமையான தண்டனையையும் அறிமுகப்படுத்தியவருமான மெக்காலேவின் பெயர் சிறைத்துறை அதிகாரி ஷாமுக்கும் வைக்கப்பட்டுள்ளன.

படத்தின் தொடக்கத்திலேயே வெளிநாடுகளில் குப்பை என்று சொல்லப்படுபவையெல்லாம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு அப்பாவி மக்களுக்கு ஆபத்தாக மாறி வருவதையும், குப்பைக் கூளங்களால் இந்தியாவே குப்பையாகிக் கொண்டிருப்பதையும் இந்த ஏகாதிபத்திய அவலட்சணத்தை இந்திய அரசு மறைமுகமாக ஊக்குவித்து வருவதையும் கடுமையாகச் சாடியிருக்கிறார் இயக்குநர்.

திரைப்படத்தின் வசனங்கள் மிகவும் கூர்மையானவை. நம் புத்தியை குத்திக் கிளறுகிறது. கிடங்குகளில் இருப்பு வைத்து வீணாகிக் கொண்டிருக்கும் தானியங்களை மக்களுக்கு பிரித்துக் கொடுக்கச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது. எடுத்துக் கொடுத்தால் உள்ளூர் போலீஸ் கைது செய்கிறது  என்று நாயகன் பேசும்போது காட்சியோடு ஒன்றிப்போன பார்வையாளர்களுக்கு அரசின் மீதான கோபம் கைத்தட்டலாக வெளிப்படுகிறது.

இப்படிப்பட்ட வசனங்கள் வாயிலாக பொதுவுடைமை என்றால் என்ன? மார்க்சியம் என்றால் என்ன? மக்களுக்கும் மார்க்சியத்திற்கும் இடைவெளி ஏன்? யார் மக்கள் என்பதையெல்லாம் விலாவாரியாக இயக்குநர் விளக்கியுள்ளார்.

நடிகர் ஷாமுக்கும், ஆர்யாவுக்குமான பல வசனங்கள் இன்றைய புரட்சிகர அரசியலை எடுத்துக் காட்டுகிறது.

நீ கொஞ்ச நாள்ல சாகப்போற தூக்கு தண்டனைக் கைதி என்ன எழுதப்போற? என்று சிறை அதிகாரி ஷாமின் கேள்விக்கு எல்லோருமே ஒரு நாள் சாகத்தான் போறோம், சாகுறதுக்கு முன்னாடி என்ன செய்யுறோம் என்பதுதான் முக்கியம் என்ற பாலுவாகிய ஆர்யாவின் பதில் இறப்பதற்கு முன் வயலின் வாசிக்க கற்றுக்கொண்ட சாக்ரடீஸை நினைவுப்படுத்துகிறது.

வெறுமனே தூக்குத் தண்டனைக்கு எதிரான திரைப்படமாக காட்டாமல், ஏன்? எதற்கு? எதனால்? என்பதற்கான காரண காரியங்களுடன் விளக்கமாக காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.

இன்றைய குடி தமிழகத்தின் அவலநிலையை தோலுரித்துக் காட்டும் வகையில், குடும்பம் அழியுது ஆனால் அரசு நடக்குது என்ற பாடல் வரிகளை இடம்பெறச் செய்து அசத்தி இருக்கிறார்.

பாலியல் தொழில் செய்யும் பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, அவளையும் நல்லவளாக மாற்றிடலாமே என்ற தாயின் வசனங்கள் தோழர்களின் சமூகம் சார்ந்த அக்கறையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

சிறைச்சாலையை வடிவமைத்த கலை இயக்குநரையும், அதை அழகாக பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளரையும் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
மொத்தத்தில் புறம்போக்கு என்னும் பொதுவுடைமை, பாலைவனத்தில் ஒரு சோலை? பொதுவுடைமை ஒளிச்சிந்தும் புரட்சி வெடி!

- அமுதரசன்

தமிழ் ஓவியா said...

இவ்விடம் அரசியல் பேசலாம்


- கல்வெட்டான்



தோழர் சந்தானத்தின் சலூனில் அப்போதுதான் சற்று கூட்டம் குறைந்தது. பெரும்பாலும் மொட்டை போட வந்தவர்களின் கூட்டம் தான். மொத்த வாடிக்கையாளர்களும் கிளம்பியபின் சற்று ஓய்வாக அரசியல் பேச்சைத் தொடங்கி வைத்தார் தோழர் மகேந்திரன்.

என்ன தோழர், உங்க சலூன் கடையை தடை பண்ணப் போற தா கேள்விப்பட்டேனே, உண்மையா? என தோழர் சந்தானத்திடம் கேட்க,

அட நான் என்ன இந்தக் கடையில சலூன் தானே நடத்துறேன், இல்ல, வர்றவங்களுக்கு ஷேவிங்கோட பாடி மஸாஜும் பண்ணி விடறேன்னு சொல்லிட்டு எதாவது சைடு பிஸினெஸ் பண்றேனா? என்ன தோழர் குண்டைத் தூக்கிப் போடுறீங்க?

பின்ன எப்ப பார்த்தாலும் அரசியல் பேசுறதும், அதுவும் குறிப்பா ஆளும் மத்திய அரசுக்கு எதிரா பேசுறதும், இந்துத்வாவுக்கு எதிரா பேசுறதும், அப்பப்ப, தமிழக அரசை குறை சொல்றதும்னு இங்க நடக்குறதெல்லாம் தெரிஞ்சால் தடை பண்ணாமல் என்ன பண்ணுவாங்களாம்? என விளக்கம் தர,

என்ன நீங்களே போட்டுக் கொடுப்பீங்க போல! அப்படியெல்லாம் தடை பண்ணணும்னு நினைத்தால் மொத்த சலூன்கடையையும் தான் தடை பண்ணணும் தோழர்! சலூன் கடைல முடி வெட்டுறாங்களோ இல்லையோ, பல அரசியல் முடிவுகளை எடுக்குறது சலூன் கடையில! இன்னும் சொல்லப்போனால் மொத்த சலூன் கடைக்காரங்களும் சொல்லிவச்சு அரசியல் பேசினால் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்த முடியும்!

தமிழ் ஓவியா said...

அடேங்கப்பா! இது போதாதா! சென்னை ஐஐடில பண்ணின மாதிரி, முதல் கடையா

உங்க கடைக்குத்தான் அரசியல் பேசக்கூடாதுன்னு தடை வரப் போகுது!

அதுசரி, இந்த சொத்துக்குவிப்பு வழக்குல உயர்நீதிமன்றத்தோட தீர்ப்ப பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க தோழர்?

நான் என்ன நினைக்கிறது, என்னோட நண்பன் ஒருத்தன் அதிமுக அனுதாபி. அவனுக்கே அந்த தீர்ப்பைக் கேட்டதும் அதிர்ச்சி தான். கீழ்க்கோர்ட்டுல அவ்ளோ தூரம் வாதாடி குற்றவாளின்னு தீர்ப்பு வந்த ஒரு வழக்குல இப்படி சட்டுபுட்டுன்னு அவசரகதியில் யாருமே குற்றம் பண்ணலன்னு வந்தத அவனால ஏத்துக்கவே முடியல தோழர்! எதாவது குறைந்தபட்ச தண்டனையாவது கொடுத்திருக்க வேண்டாமான்னு அப்பாவியா கேட்கிறான்.

இதுல என்னன்னா, நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பாய்ந்த கதையா சசிகலா, சுதாகரன், இளவரசின்னு அத்தனை பேருமே குற்றம் பண்ணலன்னு விடுதலை பண்ணினாங்க பாருங்க! இதையும் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.

தமிழ் ஓவியா said...

அதுசரி! இனியாவது தமிழ்நாட்டுல மாமூல் வாழ்க்கை திரும்பினால் சரி!

என்னத்த மாமூல் வாழ்க்கை! உள்ள வச்சப்பவும் ஊரெல்லாம் வழிய மறிச்சு பேனர் வச்சு நீதியை கொன்னுட்டாங்களேன்னு கதறுனாங்க! அடுத்து, நீதி வென்றதுன்னு சொல்லி ஊரெல்லாம் பேனர் வச்சாங்க! அடுத்து உச்ச நீதி மன்றத்துல கர்நாடகா மேல்முறையீடு செய்யப்போறதால திரும்பவும், மொட்டை போட்டவங்க எல்லாரும் தாடியும் முடியும் வளர்க்கப் போறாங்க!

அதுசரி, உங்க கஷ்டம், மக்கள் தாடி வளர்க்குறதுல இருக்கு போல! அதுக்காவது விடுதலையாகணும்னு நினைப்பீங்க போல தோழர்!

சமீபத்துல முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப்னு எல்லாத்திலும் கேலிக்கூத்தானது ரெண்டு விசயம் தான் தோழர். ஒன்னு அந்த நீதிபதியோட தீர்ப்பு. இன்னொன்னு பத்தாம்புத் தீர்ப்பு. பத்தாம்புத் தீர்ப்புனா அதாங்க பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட்.

ரிசல்டை ஒட்டி சில தனியார் பள்ளிகளால் வெளியிடப்பட்ட, பதினொன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை விளம்பரத்தில் தங்கள் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் மாநில அளவில் ரேங்கிங் பெற்ற மாணவர்கள்னு வரிசையா புகைப்படங்களா போட்டு இருந்தாங்க. அந்த விளம்பரங்களில் ஒரு ஓரத்தில், பத்தாம் வகுப்பில் மாநில அளவில் ரேங்கிங் பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமைன்னும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகைன்னும் போட்டிருந்தாங்க. இது அப்பட்டமான ஏமாற்று வேலையா தெரியலையா தோழர்?

சரியாச் சொன்னீங்க தோழர். அப்படிப்பட்ட பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும் தோழர்..

எல்லாமே விளம்பரமயமான உலகத்தில் விளம்பரத்தை நம்பி ஏமாறும் மக்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரிச்சுக்கிட்டேதான் தோழர் இருக்குது.

ஆமா தோழர். சமீபத்துல வத்திராயிருப்பு அருகிலுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலையில காட்டாற்று வெள்ளத்துல எட்டு பேருக்கு மேல உயிரிழந்ததிலும்கூட ஆழமா பார்த்தோமானால் இந்த விளம்பரங்களோட விபரீதத்தை புரிஞ்சுக்கலாம்
அப்படியா தோழர்

ஆமா தோழர். அந்த மலைப்பகுதியில் பாதுகாப்பு வசதி குறைவுதான். மலைக்கு மேல ஏழு கிலோமீட்டர்கள் வரை நடந்துபோகணும். ஆனால் பாதை அவ்ளோ நல்லா இருக்காது. மலையேற்றத்தில் ஆர்வமுள்ளவர்களுக்குத்தான் அது சாகசப்பயணம் மாதிரி இருக்கும். அதுபோக அங்க மழைக்காலங்களில் அருவி, சுனை, நீர்ச்சறுக்குன்னு பொழுதுபோக்கலாம். அப்படிப்பட்ட மலையில சித்தர்கள் வாழ்றாங்கன்னு ஏகப்பட்ட விளம்பரங்கள், கட்டுக்கதைகள். இதை பரப்பி விடுறதுல டிராவல்ஸ் கம்பெனிகளோட வேலை இருக்கு. அதுமட்டுமில்லாமல் அந்த மலையடிவாரத்துல நிறைய திடீர் ஆசிரமங்கள், சாமியார்கள் முளைச்சு வந்துட்டாங்க! அவங்களோட பிழைப்பிற்காகவும் இந்த மாதிரி கட்டுக்கதைகளைக் கிளப்பிவிட்டு சதுரகிரி மலைக்கு ஏகப்பட்ட விளம்பரம்!

தமிழ் ஓவியா said...

கொடுமைங்க தோழர்!

இந்த விளம்பரத்தை நம்பி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்னு அத்தனைபேரையும் கூட்டிக்கிட்டு கூட்டம்கூட்டமா தினசரிமலையேறத் தொடங்கிட்டாங்க. இதுல மதுபானங்களைக் குடிச்சு கூத்தடிக்கிற கூட்டமும் அதிகம். ஆக, அந்த மலையேற்றத்தோட விபரீதம் தெரியாமல் போயி காட்டாற்று வெள்ளத்தில் மாட்டிக்கிட்டவங்க தான் சமீபத்தில் உயிரிழந்த மக்கள்.

போறபோக்கைப் பார்த்தால் இந்த சதுரகிரி மலையும் கேதாரிநாத் மாதிரி பேரழிவு பூமியாகிடும் போலயே!

கண்டிப்பா தோழர். இயற்கையை நாம எந்த அளவுக்கு சீண்டாமல் இருக்கிறோமோ அந்த அளவுக்குதான் நமக்கு பாதுகாப்பு. பின்ன, சிவனா இருந்தாலும் சரி, சுந்தரமகாலிங்கமா இருந்தாலும் சரி உருண்டு புரண்டு அவங்க சிலைக்கே பாதுகாப்பில்லாதபோது இந்த சித்தர்கள் கட்டுக்கதையை நம்பினால் அதோ கதிதான்!

சுந்தரமகாலிங்கம் சாமிய விடுங்க, நம்ம சுப்பிரமணியம்சாமி தாலியெடுத்துக் கொடுத்த கூத்தைப் பார்த்தீங்களா தோழர்?!

ஆமா ஆமா. அவரை சந்திரலேகா தடுக்காமலிருந்து அவரும் தாலி கட்டியிருந்தால் தாலி பற்றிய போலித்தன்மையை உடைச்சிருக்கலாம் தோழர். தாலி கட்டுனவன் யாராயிருந்தாலும் அவன்கூட தான் வாழணும்கற சென்டிமெண்ட் தப்புன்னு சுப்பிரமணியன்சாமியே பிரச்சாரம் பண்ண வேண்டியிருந்திருக்கும்! ஜஸ்ட் மிஸ்!

விளம்பரம்னு சொன்னதும் தான் இன்னொண்ணு நினைவுக்கு வருது தோழர்... மேகி நூடுல்ஸை இந்தியா முழுக்க தடை பண்ணிட்டு வர்றாங்க பார்த்திங்களா? நல்ல விசயம் தான தோழர்?

உலகமயமாக்கல் வந்தபிறகு எத்தனையோ கேடு விளைவிக்கும் எத்தனையோ பொருட்கள் நம்மூருக்கு வந்திடுச்சு... மேகின்னு மட்டுமில்லாமல் இன்னும் பல பொருட்களையும் தடை பண்ணியாகணும். இதுல என்னன்னா அந்த தயாரிப்பு கம்பெனிக்காரன் மேல நடவடிக்கை எடுக்குறதை பெரிதுபடுத்தாமல் விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது நடவடிக்கைன்னு சொல்லி தேவையில்லாத அனுதாபத்தைத்தான் ஏற்படுத்துறாங்க!

சரியா சொன்னீங்க! நாம தான் சிகரெட்டை தடுக்க மாட்டோம்.. ஆனால் சிகரெட்டு குடிக்கிறது தப்புன்னு ஸ்டிக்கர் விளம்பரம் மட்டும் பண்ணுவோமாச்சே!

அதே தான்! அடுத்ததா, மேகி, பிங்கோ, லேஸ், ஓரியோ பிஸ்கட்டுன்னு அம்புட்டு மேலயும் உடல் நலத்திற்கு தீங்குன்னு மட்டும் லேபிள் ஒட்டிட்டு விற்பனைக்கு கொண்டு வந்தாலும் கொண்டு வந்திடுவாங்க!

எல்லாஞ்சரி, அப்படியே சைக்கிள்கேப்புல, உப்புமாவிலும் உயிருக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல் இருக்குன்னு சொல்லி தடை கொண்டு வந்தால் நல்லாயிருக்கும்! ஆ ஊன்னா உப்புமாவா போட்டு வீட்டுல கொல்லுறாங்க தோழர்!
ஹஹஹஹ! சிரிப்பொலியால் சலூன் கடையே அதிர்கிறது!

தமிழ் ஓவியா said...

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?


- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்



ஆலயம் இதையும் வடசொல் என்று கூறுகின்றார்கள் பார்ப்பனரும் அவர் அடியார்க்கடியாரும். ஏன் கூறமாட்டார்கள். ஏமாந்தாரும் காட்டிக் கொடுத்தாரும் நிறைந்த தமிழகத்தில்? ஆல் என்பதனடியாகப் பிறந்தது இச்சொல். ஆல்+அ+அம் எனின் அவ்வும், அம்மும் சாரியைகள். அம் என்பது அகம் என்பதன் திரிபு எனினும் அமையும். ஆலயம் என்பன் நேர்பொருள் ஆலாகிய இடம் என்பதாம். முன்நாளில் ஆலின் அடியில் அமைந்த நிழல் மிக்க பேரிடத்தை வழக்குத் தீர்ப்பிடமாகவும், கல்வி பயிலிடமாகவும், விழா நடைபெறுமிடமாகவும் கொண்டு பெருமைப்படுத்தினார்கள். அதுவே பிற்காலத்தில் உருவ வணக்கத்திற்குரிய இடமாயிற்று என்றும் ஆராய்ந்துரைத்தார்கள் அறிஞர்கள் பலர். ஆலயம் இடம் என்ற பொருளில் இலக்கியங்களிலும் வந்துள்ளது.

.................. மழை இடிப்புண்டு ஓர் நாகம் ஆலயத்தழுங்கி யாங்கு மஞ்சரி அவல முற்றாள். (சீவக சிந்தாமணியின் 897 ஆவது பாடல்) என்று வரும் அடிகளில் ஆலயம் என்பது நாகம் தங்கும் இடம் என வந்துள்ளது. தான் விளையாடி மேனாள் இருந்ததோர் தகைநல் ஆலைத் தேன் விளையாடும் மாலை யணிந்தபொற் பீடம் சேர்த்தி யான் விளையாடும் அய்ந்தூர் அதன்புறம் ஆக்கி னானே! என்ற சிந்தாமணிச் செய்யுளையும் நோக்குக.

எனவே, ஆலயம் காரணப் பெயராகிய தூய தமிழ்ச் சொல்லே. நாகரிகம் நகர சம்பந்தம் நாகரிகம் என்று கரடி விடுவார் தமிழின் பகைவர். அன்று! நாகரிகம் தூய தமிழ்ச் சொற்றொடர் என்க, என்னை? நாகம் என்ற சொல்லுக்கு, நாகன் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை என்ற நூற்பாவினால், இத்தனை பொருள்கள் இருப்பது அறியப்படும். எனவே, நாகம் மலைக்கும் பெயர். நாகர் என்பது மலையாளிகள் என்பதாயிற்று. இனி இகத்தல் என்பது பகைத்தல் வெறுத்தல் என்பதாம். நாகரிகம் என்பது நாகர்களை _ மலையாளிகளை வெறுப்பதோர் பண்பாடு என்க. நாகரிகம் ஈறு திரிந்ததோர் ஆகுபெயர். பண்டு தீயொழுக்கத்தவரான ஆரியர் தமிழரால் புறந்தள்ளப்பட்டனர். அவ்வாரியர் மலைப்பாங்கில் ஒதுங்கி வாழ்ந்தனர். அவர் தீயொழுக்கம் தமிழர்க்குத் தீரா வெறுப்பை உண்டாக்கிற்று. தமிழரிடத்து _ ஓர் புதிய பண்பாடு தோன்றியது. நாகரை _ நாகரின் தீயொழுக்கத்தை வெறுப்பதென்று அன்று தோன்றியதே நாகரிகம் என்பது. ஆதலின் நாகரிகம் காரணம் பற்றி வந்த செந்தமிழ்ச் செல்வமே என்க. (குயில், 08.07.1958) வேட்டி! இது வேஷ்டி என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு பார்ப்பனரும், பார்ப்பனர் அடியாரும் பகர்வர்.

வெட்டப்படுதலின் வேட்டி எனத் தூய தமிழ்க் காரணப்பெயர். வெட்டல் என்ற தொழிற் பெயரின் அல், இறுதிநிலை கெட, வெட்டு என நின்று முதல் நீண்டது வேட்டு என. அது இ என்னும் பெயர் இறுதி பெற்று வேட்டி ஆனது. அறுக்கப் படுதலின் அறுவை என்றும், துணிக்கப் படுதலின் துணி என்றும், துண்டிக்கப் படுதலின் துண்டு என்றும் வருவதும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். முட்டி இது முஷ்டி என்ற வடசொற் சிதைவாம். முட்டுதல், முட்டு, முட்டி என வந்தது காண்க.

(குயில், 15-07-1958)

தமிழ் ஓவியா said...

அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும்’




ஆசிரியர்:      பேராசிரியர் அ.அய்யாசாமி     வெளியீடு :          அன்னை முத்தமிழ்ப்            பதிப்பகம்,      10 (ணி55), மூன்றாம்        குறுக்குத் தெரு,     திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை- -_ 600041. விலை: ரூ.50 பக்கங்கள்: 72

அண்ணாவின் வாழ்வு என்பது தனிமனிதரின் சராசரி வாழ்வாகாது. அது வரலாற்றோடு பிணைந்தது. அதிலும் தந்தை பெரியாருடன் இணைந்தது என்னும்போது அந்த வரலாறு இன்னும் முதன்மைப் பெறுகிறது. அண்ணாவின் இளமைக் காலம் முதல் இந்நூலில் விளக்குகிறார். இந்நூலுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அணிந்துரை அளித்து அனைவரும் படித்து, பரப்ப வேண்டு என்கிறார் என்றால் அந்நூலின் உள்ளடக்கம் எத்தகையது என்பதை எளிதில் உணரலாம்.

தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை இந்நூல் விளக்குகிறது. ஒரே நோக்கத்திற்கான இரு பிரிவுகள் என்பது அதன் பொருள். அதை மிகச் சரியாக அய்யாவும் அண்ணாவும் உறுதி செய்தனர். அதன் பின் கலைஞரும், அன்னை மணியம்மையாரும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் நிலைநாட்டியுள்ளனர். இந்தத் துப்பாக்கிக்கு மட்டுமே ஆரியம் அலறுகிறது என்பதே அந்த வெற்றியை வெளிப்படுத்துகிறது.

அண்ணா கண்ட _ கொண்ட ஒரே தலைவர் பெரியார். பெரியாரின் வழிசென்று அரிய சாதனைகள் புரிந்தவர் அண்ணா. அண்ணாவிடம் பெட்டிச் சாவியை ஒப்படைத்தவர் பெரியார்.

ஜாதி ஒழிப்பு,மத ஒழிப்பின் மூலமே முடியும் என்ற அய்யாவின் முடிவை அண்ணா ஏற்றார். அரசியல் ஈடுபாட்டில் அய்யாவிடம் அண்ணா வேறுபட்டார். விளைவு தி.மு.க.

திராவிட அமைப்புகள் பிரிந்து பிரிந்து வளர்ந்தன. அதன் பயன் தமிழ்நாட்டில் திராவிடம் என்ற சொல்லை, பெரியார் என்ற வழிகாட்டலை சொல்லாமல் அரசியல் இல்லை என்றானது. இதுதான் ஆரியத்தைக் கலக்குகிறது.

அண்ணா அரசியலில் சாதித்தார். அய்யாவின் எண்ணத்தைச் சட்டமாக்கினார். எதிரியின் தோளில் ஏறி எட்ட வேண்டியதை எட்டிய கெட்டிக்காரர் அண்ணா. அவரை இன்றைய தலைமுறைக்கு இந்நூல் அறிமுகம் செய்கிறது கொள்கை வெளிச்சத்தில். இதுபோன்ற நூல்கள் ஏராளமாய் இளைஞர்களைச் சென்றடைய வேண்டும். இது ஒரு தொடக்கப் பாடநூல். இதன் வழி பல்கலைக்கழகம் வரைப் பயிலலாம்.

தமிழ் ஓவியா said...

காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு பெயரால் விருதுகள்


 




சீரிய பகுத்தறிவாளரும், செயல்வீரரும், உண்மை-பெரியார் பிஞ்சு இதழ்களின் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றியவருமான காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு அவர்களின் பெயரால் பெரியார் சாக்ரடீசு நினைவு விருது வழங்கும் விழா சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் அவரது முதலாமாண்டு நினைவு நாளில் (12.05.2015) நடைபெற்றது. பெரியாரின் கருத்துக்களை கொண்டு செல்வதில் முனைப்புடன் செயலாற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவது என பெரியார் சாக்ரடீசு நினைவு விருது விழாக்குழுவினர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டனர். இக்குழுவைச் சேர்ந்த முனைவர் எம்.நாச்சிமுத்து, எழுத்தாளர் அஜயன்பாலா உள்ளிட்டோர் இதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர். ஆவணப்பட இயக்குநரும் செயல்பாட்டாளருமான ஆர்.பி.அமுதன் அவர்கள் முதல் விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இயக்குநர் தங்கர்பச்சான் விருதினை வழங்கிச் சிறப்பித்தார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விழாவில் பங்கேற்று பெரியார் சாக்ரடீசு குறித்து நினைவுரையாற்றினார். இதழாளர்கள் கோவி.லெனின், மை.பா.நாராயணன் ஆகியோர் தங்களுக்கு பெரியார் சாக்ரடீசுக்கும் இடையிலான நட்பையும், அவர் தம் பணியையும் எடுத்துரைத்தனர்.

இதேபோல், காரைக்குடி பாரதிதாசன் தமிழ்ப்பேரவையின் சார்பில் 24.05.2015 அன்று காரைக்குடியில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் விழாவில், செம்மொழித் தமிழுக்குச் சிறந்த பணியாற்றிவரும் அழகப்பா பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் சே.செந்தமிழ்ப்பாவை அவர்களுக்கு அறிவாளர் தி.பெரியார் சாக்ரடீசு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

பெரியாரியலைப் பரப்பும் பணியிலும், அதை நோக்கி இளைஞர்களை ஈர்க்கும் பணியிலும் தன் வாழ்க்கையைச் செலவிட்டு, எண்ணற்ற புதிய படைப்பாளர்களை உருவாக்கி, இளம் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், படைப்பாளர்களையும் அடையாளம் கண்டு, ஊக்குவித்து நெறிப்படுத்திய பெரியார் சாக்ரடீசின் பெயரால், அதே பணியை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தல் சாலப்பொருத்தம். பெரியார் சாக்ரடீசு மறைவின்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உருவாக்குவோம் என்ற வரி செயல்வடிவம் பெற இப்பணிகள் தான் அடிகோலும்.

தமிழ் ஓவியா said...

அய்.அய்.டி. சிக்கலுக்கு இடஒதுக்கீடு ஒன்றே தீர்வு! - போராட்ட மாணவர் தலைவருடன் ஒரு நேர்காணல்




மத்தியில் மதவாத பி.ஜே.பி. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மதசார்பற்ற தன்மையை குழித்தோண்டிப் புதைக்கும் வகையில் தங்களது மறைமுகக் கொள்கைகளை (பிவீபீபீமீஸீ கிரீமீஸீபீணீ) மக்களிடம் திணிக்க முற்படுவதும், எல்லா தளங்களிலும் எதிர்ப்பு ஏற்பட்டவுடன் தந்திரமாக அதை பின்வாங்கிக் கொள்வதும், பிரதமர் மோடி அவர்கள் இவற்றைக் கண்டும் காணாமல் இருப்பதும் கடந்த ஓராண்டாகவே நடந்து வருகிற ஒன்று. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட நிலை இது.

ஆனால், இன்னமும் சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பற்ற தன்மை ஆகியவைகளுக்குக் கட்டுப்படாமல், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக இருக்கக்கூடிய அமைப்புகளும் உண்டு. அதில் இந்தியாவில் இருக்கக்கூடிய அய்.அய்.டி.களும் ஒன்று. குறிப்பாக சென்னை அய்.அய்.டி.யில் இந்த பாகுபாடுகளை களையும்வண்ணம் வசந்தா கந்தசாமி போன்ற தகுதியுள்ளவர்கள் உள்ளிருந்தும், வெளியிலிருந்து பல முற்போக்கு சக்திகளும் போராடி வந்திருந்தாலும், அண்மையில் அங்கு படிக்கும் மாணவர்கள் மூலம் அவர்கள் தொடங்கி நடத்திவரும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் மூலம் அய்.அய்.டி.யும் இந்துத்துவாக்களும் அம்பலப்பட்டுப் போயிருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அ.இ.அ.தி.மு.க., பி.ஜே.பி. தவிர மற்ற எல்லா அரசியல், சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்ற சூழலில், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் - அமைப்பைச் சேர்ந்த ரமேஷ் - என்ற மாணவரிடம் உண்மை - இதழுக்காக உரையாடினோம்.

இதோ நமது கேள்விகளும், அவரின் பதில்களும்.

கேள்வி: அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதற்கான காரணம் என்ன?

பதில்: இதற்கான காரணம் அய்.அய்.டி. நிர்வாகமும், அய்.அய்.டிக்குள் இருக்கக்கூடிய அந்தப் பார்ப்பனீயம் சார்ந்த புற சூழ்நிலைகளும் தான். அந்தப் பின்புலத்திலிருந்துதான் ஆறேழுபேர் சேர்ந்து இப்படி செய்யலாம் என்று யோசித்துச் செய்தோம். இதனுடைய வரலாறு என்று சொல்லும்போது, பொதுவாகவே அய்.அய்.டி.யின் உள்ளே இருக்கக்கூடியவர்களின் சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டம் எல்லாம் எப்படி இருக்கிறது என்றால், இந்துத்துவாவுக்கு ஆதரவானதாகவும், கார்ப்பரேட்டுக்கு ஆதரவானதாகவும்தான் இருக்கிறது.

கேள்வி: அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் இப்போது பளிச்சென்று தெரிகிறது. அந்த வளாகத்தினுள்ளே வேறு என்னென்ன அமைப்புகள் இருக்கின்றன?
பதில்: நிறைய அமைப்புகள் இருக்கின்றன. விவேகானந்தா வாசகர் வட்டம். இவர்களின் வேலை என்னவென்றால், வாராவாரம் பகவத் கீதை நிகழ்ச்சி நடக்கும். அரே ராமா அரே கிருஷ்ணா என்கிற குழு ஒன்று உள்ளது. இவர்கள் பகவத் கீதை புத்தகத்தை விற்பார்கள். அதுமட்டுமில்லாமல், ஆசிரமங்கள், கோயில்கள், ஓய்வு நேரங்களில் வீடுவீடாகச் சென்று பகவத் கீதை குறித்து பேசுவது என்று எல்லாமே இருக்கும். வாராவாரம் ஒரு குறிப்பிட்ட கிழமைகளில்  பஜனையை தொடர்ச்சியாக நடத்துவார்கள். அய்.அய்.டி. வளாகத்துக்கு உள்ளே ஒரு கோயில் இருக்கிறது. அவர்களுக்கு நிரந்தரமாகவே இடம் உண்டு. விடுதிகளிலும் பஜனை நடத்துவார்கள். அடுத்து வந்தே மாதரம் என்கிற பெயரில் ஒன்றை இப்போதுதான் ஆரம்பித்துள்ளார்கள். இப்போதுள்ள அரசுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்து இலவச முகாம்களை நடத்துவார்கள். வியாசர் வாசகர் வட்டம், அங்குதன் சங்குதன் என்கிற (இந்துத்துவா ஆதரவு அமைப்புதான்) அமைப்பு இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி, அய்.அய்.டி. நிர்வாகத்தினரை இலவச முகாம்களுக்கு அழைத்துக் கொண்டு வருவார்கள். மதம் சம்மந்தமான கூட்டம் எல்லாம்கூட நடக்கும்.  பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களை  இக்கூட்டங்கள் முன்னெடுப்பதாகவே இருக்கும். எப்படியும் வாரத்தில் இரண்டு மூன்று முறை நடக்கும்.

கேள்வி: இந்துத்துவா அமைப்புகள் தவிர வேறு அமைப்புகள் குறித்து...?

பதில்: இதுவரை சொன்னவை இந்துத்துவா பக்கம் உள்ளவை. இன்னொரு பக்கத்தில் நாங்கள் (அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம்) இருக்கிறோம். அடுத்தாற்போல் பிருந்தா.... என்று ஒரு சிறிய குழு உள்ளது. பிறகு கொஸ்ட் எனும் அமைப்பு இருக்கிறது.  இவர்கள் எல்லாம் பொதுவாக சமகாலப் பிரச்சினைகளைப் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். இதைத்தாண்டி பல அமைப்புகள் உள்ளன.  இதுமட்டுமன்றி இசுலாமிய வாசகர் வட்டம் உண்டு. இவைகளில் ஆதிக்கம் செலுத்துபவையாக இருப்பவை குறிப்பாக   இந்துத்துவா  அமைப்புகள்தான் அதிகம். அதற்கு அடுத்தாற்போல் கார்ப்பரேட்டுகளின் கூட்டங்கள் நடத்தப்படுவது அதிகம். சோதிட அறிவியல்  என்கிற விஷயம் நிறைய நடக்கும்.

தமிழ் ஓவியா said...

கேள்வி: இதுபோன்ற இந்துத்துவா அமைப்புகளுக்கு, நீங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களா?

பதில்: கூட்டங்களுக்கு சென்று கேள்விகள் கேட்டதெல்லாம் உண்டு. ஆடிட்டர் குருமூர்த்தி அடிக்கடி அய்.அய்.டி.க்கு பேசுவதற்காக வருவார். அவர் கூட்டத்துக்கு சென்று கேள்விகள் கேட்பதுண்டு. ரொம்ப மோசமாகப் போனால், நிறுவனத்தில் புகார்கள் அளிப்போம். அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் மாணவர்களிடம் விவாதங்கள் செய்வது, கேள்விகள் கேட்பது என்று நிறைய நடந்து இருக்கிறது. குறிப்பாக அரவிந்தன் நீலகண்டன் வந்து பேசியிருக்கிறார். அவருக்காகவே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள். அய்.அய்.டி நிறுவனத்தின் சார்பில்கூட அவர் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இதுதான் அய்.அய்.டியின் நிலை. நிறுவனம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது.

கேள்வி: மற்ற அமைப்புகளுக்கும், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கும் நிர்வாகம் காட்டிவரும் பாரபட்சம் என்னென்ன?

பதில்: எங்களுடைய பிரச்சினையின் மய்யமே அதுதான். விவேகானந்தா வாசகர் வட்டம் எங்கள் (அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம்) அமைப்பைப் போன்றே சிறு குழுவாக இருந்தது. அவர்களுக்காக கூட்டம் நடத்துவதற்கென்று தனியே அரங்கு உண்டு. அது நிரந்தரமாக உள்ளது. அவர்கள் எப்போதும் அதில் கூட்டம் நடத்திக் கொள்ளலாம். விடுதியில் அவர்களுக்கென்று தனியான நூலகம் இருக்கிறது. அய்.அய்.டியின் இணைய வலைத்தளத்தில்  அவர்களுக்கென்று விவேகானந்தா வாசகர் வட்டம் என்கிற இணைப்பு இருக்கும். இதேபோன்று நிறைய வசதிகள் அவர்களுக்கு உண்டு. அய்.அய்.டி. நிறுவனப் பணியாளர்கள் நிறைய இருக்கிறார்கள். நிறுவனத்தில் எங்கு பார்த்தாலும் மேல் ஜாதிக்காரர்கள்தான் இருப்பார்கள். அண்மைய புள்ளிவிவரம்கூட அதுதான். 87 விழுக்காட்டினர் (திஷீக்ஷீஷ்ணீக்ஷீபீ சிணீமீ) அவர்கள்தான் இருக்கிறார்கள். மாணவர்களும் கிட்டதட்ட அதே நிலையில்தான் இருக்கிறார்கள். ஆகவே, இயல்பாகவே அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துகொள்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

கேள்வி: எந்தெந்த வகுப்பினர் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கூறமுடியுமா?
பதில்: அண்மையில் நான்கு வாரத்துக்கு முன்பாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, ஆசிரியர்களில் 87 விழுக்காட்டினர் பார்ப்பனர்கள், மேல்ஜாதிக்காரர்கள். இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 11 விழுக்காட்டினர். 2 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள்.

இங்கு முதலில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதே கிடையாது. மாணவர்களில் முதுகலைப்பிரிவு மாணவர்களைத் தேர்வு செய்யும்போது, இடஒதுக்கீட்டைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும். ஆனால், அதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்றால், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவருக்கும் கட்ஆப் மதிப்பெண் கொடுப்பார்கள். அந்த மதிப்பெண்ணுக்குக் கீழே இருந்தால் யாரையும் எடுக்க மாட்டார்கள். அதனாலேயே தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அப்படி ஒரு தந்திரத்தை கடைபிடிப்பார்கள்.

ஆய்வு மாணவர்கள் (எம்எஸ், பிஎச்டி) தேர்வு செய்வதில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுவதே கிடையாது. அதில் மேல்ஜாதிக்காரர்கள்தான் கிட்டதட்ட 64 விழுக்காட்டினர் உள்ளனர். அதில் இட ஒதுக்கீடே கொஞ்சம்கூட கிடையாது.

கேள்வி: இடஒதுக்கீடு, மண்டல் அறிக்கை எல்லாம் இருக்கும் போது, தொடர்ந்து இட ஒதுக்கீடு இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணத்தை சொல்கிறார்கள்?

தமிழ் ஓவியா said...

பதில்: இருக்கக்கூடிய பிரச்சினையே இதுதான். பார்ப்பனர்கள் என்ன விஷயத்தை முன்வைக்கிறார்கள் என்றால், இட ஒதுக்கீட்டைக் கொடுத்தோம் என்றால், இதனுடைய தகுதி (மெரிட்) போய்விடும் என்பதுதான் அவர்கள் வைக்கின்ற வாதம். மெரிட் போய்விடும் என்று அவர்கள் கூறுவது பொய்யானது. தங்களுடைய ஜாதியில் இருக்கக்கூடியவர்கள், அதாவது மேல்ஜாதியினர் மட்டுமே வேலைக்கு வரவேண்டும் என்பதற்காக உருவாக்கிய செயல்திட்டம் அது. அய்.அய்.டி. நிறுவனத்தில் இடஒதுக்கீட்டை ஒத்துக்கொள்வதில்லை என்று செனட் விதியை ஏற்படுத்தி உள்ளது. அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மனிதவளத்துறை அமைச்சராக அர்ஜுன்சிங்  இருந்தபோது,  இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது அய்.அய்.டியில் உள்ள மாணவர்கள் குறிப்பாக சென்னை அய்.அய்.டியில் அதற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். (சீஷீலீ யீஷீக்ஷீ ணிஹீணீறீவீஹ்) யூத் ஃபார் ஈகுவாலிட்டி என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி, இங்குள்ள மாணவர்கள் எல்லோரையும் திரட்டி, (அதில் ஆசிரியர்களும் ஆதரவு) அதன்மூலம் அய்.அய்.டிக்கு உள்ளே 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டுவரக்கூடாது. அர்ஜுன்சிங் கொண்டுவந்தது தப்பு என்று அதற்கு எதிராக கடுமையாகவேப் போராடி இருக்கிறார்கள். தங்களுடைய ஜாதியினர், இங்கிருக்கக்கூடிய எல்லோருமே பார்ப்பனர்களில் மத்தியத்தர வர்க்கத்துக்கு மேல் இருப்பவர்கள்தான் வேலையிலேயேகூட இருப்பார்கள். இதற்குக் காரணம் ஒன்று பார்ப்பனீயம், அடுத்தது தரகு முதலாளி. இந்த இரண்டுபிரிவினரின் கலவையாக அய்அய்டி நிறுவனம் இருக்கிறது. மிக எளிதாக சம காலத்தில் வரக்கூடிய மாற்றங்களை தங்களுக்கு ஏற்ப  மாற்றிக்கொள்வார்கள். குறிப்பாக இவர்கள் அகில இந்திய அளவில் தொடர்பு வைத்திருப்பவர்கள். கூடுதலாக தங்களுடைய ஜாதியை நிலைநாட்டுவதற்காக, அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் போராடுவார்கள் என்பார்கள்.

கேள்வி: இதற்கு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறதா?

பதில்: இருக்கிறது. இதுகுறித்து முழுவிவரமும் பேரா.வசந்தா கந்தசாமியிடம் இருக்கிறது. அவருக்கு முழுமையாகத் தெரியும். எனக்குத் தெரிந்தவரை வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இவர்கள் எல்லாம் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதாக இல்லை. இவ்வளவு பெரிய போராட்டம் வெளியே நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எதையுமே மதிக்காமல், உள்ளே வேறு வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரையும் மதிக்க மாட்டார்கள். அதுதான் பார்ப்பனிய புத்தி. கேள்வி: உங்களது பிரச்சாரம் அந்த மாணவர்கள் மத்தியில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?

பதில்: அய்.அய்.டி. என்பது இந்துத்துவா ஆதரவு மற்றும் கார்ப்பரேட் ஆதரவு சூழல்கள் உள்ள பகுதி. என்றாலும், இதுகுறித்த விவாதங்கள் உருவாகி உள்ளது. இதுபற்றி உள்ளேயும் விவாதங்கள் உருவாகியிருக்கிறது. அய்.அய்.டி.க்கு வெளியே குறிப்பாக பார்த்தீர்களானால்,  பொதுவாகவே இந்த இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக வெளிப்படையாகப் போராடுவதற்கு மாணவர்களுக்கு பெரிய ஒரு தளம் உருவாகி உள்ளது. சரியாக சொல்வதானால், எல்லாக் கல்லூரிகளிலும் அம்பேத்கர் பெரியார் பெயரில் அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். எல்லா அய்.அய்.டி. நிறுவனங்கள் உள்பட. பெரிய பெரிய மத்திய அரசின் நிறுவனங்களில்  அம்பேத்கர், பெரியார் வாசகர் அமைப்பு உருவாகி வருகிறது. மாணவர்கள் மத்தியில், மற்ற செய்திகள் படிப்பவர்கள் மத்தியிலே, மதவாதக் கருத்துகளுக்கு எதிரான ஓர் அலை உருவாகி உள்ளது. இந்துத்துவவாதிகள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப்போய் இருக்கிறார்கள்.  அதில் குறிப்பாக அம்பேத்கர் இந்தியா முழுமைக்கும் தெரிந்த ஒரு தலைவராக இருக்கிறார். இப்போது அம்பேத்கர் போலவே இந்தியா முழுமைக்கும் அனைத்து பகுதிகளுக்கும் பெரியார் பெயர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அய்.அய்.டி நிறுவனத்துக்குள் அனைத்து நிலைகளிலும் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தாலே மாபெரும் மாற்றம் இயல்பாகவே ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

இதற்கிடையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடம் செய்தியாளர்கள் அய்.அய்.டி._பற்றி கேள்வி எழுப்பினர். அப்போது அவர், அது அய்யர், அய்யங்கார் டெக்னாலஜி. ஆகவே, அது அவ்வளவு எளிதாக அசைந்து கொடுக்காது. ஆனாலும் மக்கள் அதை அசைப்பது உறுதி _ என்று நறுக்குத் தெறித்தார்போல பதில் கூறினார். ரமேஷின் எதிர்பார்ப்பும் மாணவர்களின் போராட்டம் மற்றும் மக்களின் ஆதரவு மூலம் விரைவில் நிறைவேறும் என்பது உறுதி.

- உடுமலை வடிவேல்

தமிழ் ஓவியா said...

குரங்குக்கு நோட்டீஸ்!

திங்கள், 15 ஜூன் 2015
 

மத்திய பிரதேச மாநிலம், பிண்ட் மாவட்டத்தில் உள்ள  பஜாரியா என்ற இடத்தில் உள்ள அனுமார் கோவில் சமீபத்தில் பெரிதாகக் கட்டப் பட்டது. பெரிதாகக் கட்டப் பட்ட போது அரசு நிலத் திலும் ஆக்ரமித்து மண்டபம் ஒன்றும், சிறிய ராமர் கோவி லும் கட்டப்பட்டன. இதனை எதிர்த்து அப்பகுதியில் உள்ள வணிக அமைப்பினர் மாநகராட்சியில் முறையிட் டனர். மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத தால் குவாலியர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வணிக அமைப்பின் கோரிக் கையை ஏற்று, அரசு நிலத் தில் கட்டப்பட்ட கோவில் மற்றும் மண்டபத்தை இடிக்க வேண்டும் என்று உத்தர விட்டார்.

இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் அந்தக் கோவில் நிர்வாகி வைபவ் சுக்லா என்பவருக்கு நோட் டீஸ் அனுப்பியது. அதற்குப் பதிலளித்த பூசாரி இந்தக் கோயிலை அனுமார் மற்றும் அவரது வானரங்கள்தான் (குரங்குகள்) நிர்வகிக்கின்றன.

அவர்கள்தான் இந்தக் கோவிலுக்கான உரிமையா ளர்கள், நான் அவர்களுக்குப் பணிவிடை செய்யும் சாதா ரண தொண்டன். ஆகவே எனக்கு இந்தக் கோவில் அத்துமீறி கட்டப்பட்ட ராமர் கோவில் மற்றும் மண்ட பத்தை இடிக்க உரிமை யில்லை என்று கூறி விட்டார்.

இதனை அடுத்து மாநக ராட்சி நிர்வாகம் குரங்கு பெயரிலும், ராமர் கோவிலில் சிலையாக உள்ள, ராமர் பெயரிலும் நோட்டீஸ் அனுப் பியுள்ளது. அதில் கூறப் பட்டுள்ளதாவது:

பெறுநர்:
மிஸ்டர் அனுமான் ஜி

நீங்கள் வார்ட் எண் 29 பஜாரியா பகுதியில் புதிய மண்டபமும், ராமர் கோவி லும் உங்கள் ஆணைப்படி கட்டப்பட்டள்ளன. முக்கிய மான சுற்றுலாத்தலமான இப்பகுதி மத்திய அரசின் புராதன துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள கடைகளுக்குச் செல்லும் பகுதியை ஆக்ரமித்து  கோவில் கட்டப்பட்டுள்ளது. இது மாநகராட்சி சட்டம் 1961, 187,223 பிரிவின்படி சட்ட விரோதச் செயலாகும்.

ஏற்கெனவே 17.7.2014 ஆம் தேதி அன்று உங்களது கோவில் பூசாரிக்கு சட்ட விரோதமாக கட்டடம் கோவில் கட்டக் கூடாது என்று அறிவுறுத்திக் கடிதம் எழுதியுள்ளோம். அதையும் மீறி மண்டபம் கோவில் கட்டப்பட்டுள்ளது. பிரச் சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளதால்  இந்தக் கடிதம் கண்ட ஒரு வாரத்திற்குள் நீங்கள் விதி முறை மீறி கட்டிய கட்ட டத்தை இடிக்க வேண்டும். அப்படி இடிக்காவிட்டால் அதற்கான அபராதத் தொகை மற்றும் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

(என்று இதில் எழுதியுள் ளோம்) இப்படிக்கு நிர்வாக அதிகாரி மாநகராட்சி பிண்ட்.

சபாஷ்! மாநகராட்சி நிருவாகம் அனுப்பிய நோட் டீசுக்கு அனுமானாகிய குரங்கு சாமி பதில் அனுப் புமா? அப்படி அனுப்பா விட்டால் சாமியாவது - கீமியாவது எல்லாம் வெறுங் கல்லு என்ற பகுத்தறிவுவாதி களின் கருத்தை ஏற்றுக் கொள்வார்களா?

பதில் இல்லாத நிலையில் ஒரு தலைப்பட்சமாக (ணிஜ்ஜீணீக்ஷீமீ) தீர்ப்பு வழங்க வேண்டியதுதானே? அப்பொழுது மட்டும் இந்தப் பக்தர்கள் முஷ்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பு வார்கள். ஆம் மனிதர் என் பது உண்மை - கடவுள் என்பது பொய் என்று ஆகி விட்டதா இல்லையா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

மூடத்தனத்தின் முடைநாற்றம் பாரீர்!

நரபலி, உயிரோடு பக்தர்கள் பாடை கட்டி ஊர்வலம் கோயில் நகையைத் திருடி சாமி கும்பிடும் பக்தன்




அறிவியல் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலையில் மக்களிடம் உள்ள அறியாமையினால் நரபலி கொடுப்பதும், கோவில் விழா என்ற பெயரில் உயிரோடு உள்ள நபரை பாடை யில் வைத்து ஊர் வலமாக அழைத்து வரும் மூடத்தனத் திற்கும் என்றுதான் விடிவு ஏற்படுமோ?

ஒன்றரை வயது  குழந்தை நரபலி! மந்திர சக்தியை அடைவதற்காக ஒன்றரை வயது பெண் குழந்தையை நரபலி கொடுத்து அதன் இதயம் மற்றும் சிறுநீர கத்தை தீயிலிட்டு யாகம் வளர்த்த காட்டுமிராண் டியை உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர்   கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஹ்ரியாச் மாவட்டத்தில் உள்ள மோதிபூர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் குமார் என்பவர், மாந்திரீக சக்தி களை பெறுவதற்காக நரபலி கொடுக்கும் நோக்கில் ஜூன் 12 அன்று தனது தங்கையின் ஒன் றரை வயது பெண் குழந்தையான நீத்துவை கடத்திச் சென்றார். தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து கிராமத்துக்கு வெளியே உள்ள ஒதுக் குப்புறமான இடத்தில் நீத்துவை வெட்டிக் கொன்றார்.

அந்த குழந்தையின் இதயம் மற்றும் சிறுநீர கத்தை வெளியே எடுத்து, தீயிலிட்டு யாகம் வளர்த் துக் கொண்டிருந்தபோது, குழந்தையை தேடிவந்த நீத்துவின் தந்தை சந்திரிகா பிரசாத் இதைக் கண்டு துடிதுடித்துப் போனார். இச்சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் ராகேஷ் குமார் மற்றும் அவரது காதலி புலாவ் ஆகியோரைக் கைது செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

கோவிலில் தாலி சங்கிலிகள் திருட்டு புதுவை லாஸ் பேட்டை பெத்துசெட்டி பேட்டையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இந்த கோவில் வழக்கம் போல் நேற்று காலை திறக்கப்பட்டு பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்தன.

அப்போது வள்ளி-தெய்வானை சிலைகளின் கழுத்தில் அணிவிக்கப்பட் டிருந்த தங்க சங்கிலிகள் (தாலிச் சரடு) காணாமல் போய் இருப்பதை பார்த்து பூசாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அறங்காவலர் குழுவினர் லாஸ்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து காவலர் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத் தினார்கள்.



கோவிலில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறை யினர் ஆய்வு செய்த போது, அதில் தங்க சங்கிலிகளை திருடிய நபரின் உருவம் பதிவாகி இருப்பது தெரிய வந்தது.

காலை 7-.53 மணிக்கு கோவிலுக்குள் நெற்றியில் திருநீற்றுடன் ஒரு நபர் உள்ளே நுழைந்து பயபக் தியுடன் சாமி தரிசனம் செய்தபடி சுற்றும் முற்றும் பார்க்கிறார். அப்போது கோவிலில் ஆட்கள் நட மாட்டம் எதுவும் இல்லை. இதைத்தொடர்ந்து கரு வறைக்குள் ஓடும் அவர், ஒரு சில நொடிகளில் திரும்பி வந்து மீண்டும் பயபக்தியுடன் சாமி கும்பி டுகிறார். அவருடைய கையில் மஞ்சள் நிறத்தில் சங்கிலி போன்ற பொருள் தெளிவாகத் தெரிகிறது.

தமிழ் ஓவியா said...

இந்தக் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. இந்தக் காட்சிகளின் மூலம் அந்த நபர்தான் சாமி சிலை களின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலிகளை திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது. அந்த நபரைக் கைதுசெய்ய காவல்துறை யினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரோடு பாடை கட்டி ஊர்வலமாக வந்த மக்கள் வேடசந்தூர் அருகில் உள்ள சிங்கிலிக்காம்பட் டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. பழைமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டு திருவிழா நடத்துவதற்காக ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி கோவில் முன்பு அமர்ந்து உத்தரவு கேட் பது வழக்கம். அதன்படி கடந்த 18 ஆண்டுகள் திருவிழா நடந்த உத்தரவு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு திருவிழா நடத்த உத்தரவு கிடைத்ததால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

18 ஆண்டு கழித்து திருவிழா நடத்துவதால் சம்பிரதாய சடங்கு நடத்தி தோஷம் கழிப்பது வழக்கமாம். கடந்த 3 நாட்களாக நடந்து வந்த திருவிழாவின் நிறைவு நாள் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை இறந் தவர் போல் பாவித்து அவரைப் படுக்க வைத்து பெண்கள் ஒப்பாரி வைத் தனர்.

பின்னர் அவரைப் பாடை கட்டி ஊர்வல மாக எடுத்து வந்தனர். ஊர்வலத்துக்கு பின்னால் கரகம் மற்றும் அம்மன் சிலைகள் எடுத்து வரப்பட்டன. இறந்தவர் உடலை கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்து தலையை மட்டும் விடுத்து உடல் முழுவதையும் மண்ணுக்குள் புதைத்தனர். அதன் பிறகு கோவில் பூசாரி அங்கு வந்து அருள் வாக்கு கூறி அவரது நெற்றியில் திருநீறு பூசினார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு குளிக்க வைத்து கோவிலில் சாமி கும்பிட்டுச் சென்றாராம்.

மதபோதகர் மோட்டார் சைக்கிளில்
இருந்து தவறி விழுந்து பலி

சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் டேவிட் (வயது 45). இவர் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் ஒரு பெந்தேகொஸ்தே சபை வளாகத்தில் தங்கி மதபோதகராக பணிபுரிந்து வந்தார்.
டேவிட் தனது மோட்டார் சைக்கிளில் அய்யன் சாலை பகுதிக்கு சென்று பிறகு மீண்டும் சத்திக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் டேவிட்டை மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகவத்கீதை பூஜைக்கு சென்ற 17 பேர் சாவு  பகவத்கீதை பூஜைக்கு மக்களை அழைத்துச் சென்ற இரண்டு டிராக்டர்கள் மீது லாரி மோதியதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். உத்தர பிரதேச மாநிலத்தி லுள்ள பூரா என்ற கிராமத்தில் பகவத் கீதை பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக 50க்கும் மேற்பட்டோர் இரண்டுடிராக்டர்களில் பூஜை நடைபெறும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். ஹர்சந்த்பூர் கிராமம் அருகேடிராக்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றுகொண்டிருந்தன. அப்போது அதே சாலையில் எதிரேவந்த லாரி ஒன்று முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியது. இதனால் பின்னால் வந்த டிராக்டரும் முன்னால் சென்ற டிராக்டரின் மீது மோதியது.இந்த விபத்தில் 12 பெண்கள், அய்ந்து சிறுவர்கள் என 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந் தனர். அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பக்தி

தந்தையைக் கொன்று, தாயைப் புணர்ந் தவனுக்கு மதுரையில் சிவன் மோட்சம் கொடுத்தான் என்று எழுதி வைத்துள் ளார்களே இதுதான் பக்தி வழிகாட்டும் ஆன்மிகமா?

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

ஏழுமலையான்

செய்தி: திருப்பதி கோவி லுக்கு மேலே விமானம் பறந்தால் ஆகம விதிப்படி கேடு விளையும்.
- திருப்பதி கோயில் அர்ச்சகர்

சிந்தனை: எத்தனையோ ஆண்டுகளாக திருப்பதி கோயிலுக்கு மேலே விமா னங்கள் எல்லாம் பறந்து கொண்டுதான் உள்ளன. அப்பொழுதெல்லாம் ஏற் படாத கேடு திடீரென்று குதிக்கிறதோ


அது என்ன திருப்பதி ஏழுமலையின் ஸ்பெஷல் மற்ற மற்ற கோவில்களுக்கு மேலே பறக்கலாமோ!

தமிழ் ஓவியா said...

இருட்டிலே திருட்டு செய்ய எத்தனிக்கும் எத்தர்கள்!


- மஞ்சை வசந்தன்

இந்த நாடு அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்ததால், ஆதிக்கக் கும்பலுக்கு அது வாய்ப்பாக இருந்தது. அந்த வாய்ப்பு தானே வந்ததல்ல; இவர்களே உருவாக்கியது. கல்வியைப் பறித்து, கண்மூடிக் கதைகளைப் பரப்பி, மூடநம்பிக்கைகளை உருவாக்கி அறியாமையை வளர்த்துத் தழைக்கச் செய்ததன் விளைவால் வந்தது.

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒவ்வொரு புரட்சியாளர்கள் முயன்று அறிவு ஒளியேற்றி அறியாமை இருளில் தவித்த, தடம்மாறிய மக்க ளுக்குத் தெளிவும், தெம்பும் ஊட்டினர். அதை அவ்வப்போதே ஆதிக்கக் கும்பல் அரும்பாடுபட்டு அணைத்து, மீண்டும் மக்களை இருளில் ஆழ்த்தி வந்துள்ளனர்.

புத்தர் முயன்றார். அவர் ஒளியை மற்ற நாட்டு மக்கள் ஏற்று விழித்தனர். ஆனால், அவர் பிறந்த நாட்டில் அவரது அறிவுதீபம் அணைக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

பெம்மான்பகவர் கர்நாடகத்தில் தோன்றி ஆரிய பார்ப்பன ஆதிக்கத் திற்கு எதிராய் குரல் கொடுத்து, சாதி யொழிப்பு, கலப்பு மணம், பெண் ணுரிமை இவற்றிற்காக பெரிதும் உழைத்தார். அவர் ஊட்டிய அறி வையும், ஒளியையும், தெளிவையும் மறைத்து மீண்டும் மக்களை மட மையில் ஆழ்த்தினர்.

ஜோதிராவ் பூலே மகாராட்டிரத்தில் தோன்றி சாதியொழிப்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியறிவு, பெண் ணுரிமை இவற்றிற்காக பெரிதும் பாடு பட்டார். அதையும் ஆரிய பார்ப்பனக் கூட்டம் நீர்த்துப்போகச் செய்தது. இறுதியில் பெரியாரும் அம்பேத்காரும் விழிப்பூட்டி, அறிவூட்டி, தெளிவூட்டி தன்மானம் ஊட்டி, சம உரிமை உணர்வை உண்டாக்கினர். இந்து மதச்சீர்க்கேட்டை, ஆதிக்கத்தை, இழிவை, மோசடியை அக்கக்காய் பிரித்து அலசினர். கல்வியும், வேலையும் எல்லோ ருக்கும் கிடைக்கச் செய்தனர். இடஒதுக் கீட்டை அதற்கு மிகச்சரியான கருவியாகக் கண்டறிந்து பயன்படுத்தினர். ஆரியப் பார்ப்பன ஆதிக்கம் அடியோடு சாய்ந்து நொறுங்கியது. இந்தியாவைவிட்டே மூட்டைக் கட்டிக்கொண்டு வெளியேறி விடலாம் என்று எண்ண எத்தனித்த நிலை உருவாக்கப்பட்டது.
பிற்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் ஒவ்வொரு துறையிலும் நுழைந்து சாதித்துக் காட்டினர். தகுதி திறமை தங்களுக்கேயென்று தலைகனத்து நின்ற ஆரிய பார்ப்பனக் கூட்டம், ஒடுக்கப்பட்ட மக்களின் சாதனைக்கு முன்னால் சக்தி யற்று நின்றது. இந்நிலையில் மக்களின் இன உணர்வை மழுங்கடித்து, அறிவுச் சுடரை அணைக்க இராமாயணத்தைக் கையில் எடுத்து அதைத் தொலைக்காட்சி வழி ஒளிபரப்பி, மதஉணர்வை ஊட்டினர். மதவெறியை உருவாக்க பாபர்மசூதியை இடித்தனர். இடஒதுக்கீட்டிற்கு எதிராய் இரதயாத்திரை விட்டனர். என்றாலும் மக்கள் ஏமாறவில்லை மதவாத சக்தி களைப் புறக்கணித்தனர். சோர்ந்து கிடந்த மதவாதக் கூட்டம் முதலாளிகளுடனும், கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் கூட்டு சேர்ந்து தொலைக்காட்சிகளைப் பயன் படுத்தி, இல்லத ஒரு வளர்ச்சி குஜராத்தில் எற்பட்டுவிட்டதாகவும் ஏற்படுத்தியவர் மோடிதான் என்றும், அவரைத்தேர்வு செய்தால் இந்தியாவே வளர்ச்சி பெறும் என்று மோசடியான பொய்யான பரப்புரை மேற்கொண்டு மக்களை மயக்கினர். காங்கிரஸ் மீதிருந்த வெறுப்பும், ஏமாற்றத்தை எதிர்நோக்கியிருந்த மக்கள் மனநிலையும் இப்பரப்புரைக்குப் பயன் தந்தன. வளர்ச்சி வந்துவிடும், வேலை கிடைத்துவிடும், வருவாய் பெருகும் என்று நம்பி வாக்களித்தனர்.

மதவாதக்கும்பல் அதிக இடங்களைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அமர்ந்த நாள்முதல் தங்கள் உள்ளார்ந்த திட்டங் களை நிறைவேற்றினதே தவிர, வளர்ச்சிக் கான எம்முயற்சியும், திட்டமும் இவர் களால் செய்யப்படவில்லை.

தமிழ் ஓவியா said...

ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத் தைப் பரப்பும் அனைத்து முயற்சிகளும் செய்யப்படுகின்றன. சமஸ்கிருதத் திணிப்பு, பகவத்கீதை தேசிய நூல், மாட்டுக்கறி உண்ணக்கூடாது, இஸ்லாமி யர்களும், கிறித்தவர்களும் இந்துமதத்தை ஏற்க வேண்டும் இல்லையென்றால் இந்தியாவை விட்டு வெளியேறி விட வேண்டும். இந்துக்கலாச்சாரம் ஒன்றே இந்த நாட்டுக் கலாச்சாரம். அதை மறுக்கின்றவர்கள் நாட்டின் எதிரிகள். அவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டிய வர்கள் என்று ஒவ்வொரு நாளும் பேசி யும், செயலில் இறங்கியும் வருகின்றனர்.

ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில் வளர்ச்சியெங்கே யென்றால் வாய்ச்சவடால் அடிக்கின்ற னர்,  மோடி என்ன மோடி மஸ்தானா வளர்ச்சி மந்திரம் மூலமா வரும் என்று தினமணி வைத்திய நாதன்கள் வரிந்து கட்டி நிற்கிறார்கள்.

முற்போக்காளர்களும், மதஇணக்கம் காப்போரும், மதச்சார்பற்ற அணியினரும் தேர்தலின்போது இதைத் தான் சொன் னார்கள். மோடி வந்தால் மட்டும் வளர்ச்சி எப்படி வரும் என்றுதான் கேட்டனர். அன்றைக்கு அதை மறுத்து, மோடி வந்தால் ஆறுமாதத்தில் வளர்ச்சி வரும் என்றனர். இன்றைக்கு மோடி என்ன மந்திரமா வைத்திருக்கிறார் என்று அயோக்கியத் தனமாக மாற்றிப் பேசு கிறார்கள்.

ஆக இந்த மதவாதக்கும்பல் ஒரு மோசடிக்கும்பல். அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும தொடர்பே இருக்காது. அவர்களின் அடிப்படை, அந்தரங்க இரகசியத் திட்டங்களைத் (ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை) தான் செயல்படுத்துவர். எனவே இவர்களிடமிருந்து நம்மைக் காக்க இளைஞர் ஒட்டு மொத்தமாகத் திரண்டு கிளர்ந்தெழுந்து போராட வேண்டும்.

இந்த மதவாதக் கும்பலின் அடுத்த முயற்சி கருத்துச் சுதந்திரத்தைத் தடுத்து அவர்கள் கொள்கைகளைத் திணிப்பது தான். அதன் முதல் முயற்சி தான் அய்.அய்.டியின் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்தது.

இந்துக்கடவுளின் கோயில்கள் அந்த வளாகத்தில் இருக்கலாம்; இந்துமதத் தலைவர்கள் பேரால் அமைப்புகள் இருக்கலாம். அவர்கள் கொள்கைகளை அவர்கள் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களான பெரியார், அம்பேத்கர் பெயரில் அமைப்பு இருந்தால் அதை தடை செய்ய வேண்டும் என்கின்றனர்; தடையும் செய்துள்ளனர்.

அய்.அய்.டி வளாகத்தில் ஈ.வெ.ரா. கொள்கைகளை பேசக்கூடாது என்று ஒரு மதவெறியன் பேசுகிறான். பெரியார் மண்ணில் பெரியார் கொள்கையைப் பேசக்கூடாது என்று ஒரு சூத்திரனே பேசுகிறான் என்றால், சொரணையில்லா சூத்திரர்கள் சிலர் மதவெறி மாயையில், சுயநலத்திற்காக ஆரிய பார்ப்பனர்கனின் ஆதிக்கத் திற்குத் துணை நிற்கின்றனர்.

ஆரிய பார்ப்பன மதவெறிக் கூட்டம் விரும்புவது இதுதான். தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் கொள்கை ஒளியை அணைத்து, அந்த இருட்டில் கொள்ளையடிக்க திருட்டுக் கும் பல் முயலுகிறது. அதை முறி யடித்து பெரியார், அம்பேத்கர் அறிவுச் சுடரை, சுயமரியாதை ஒளியை, கருத் துச் சுதந்திர தீபத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். ஏமாந்த இளைஞர்கள் விழித்துக் கொள்ளத் தொடங்கி விட்டனர். இளைஞர்கள் எழுப்பும் உரிமைக் குரல்கள் நம்பிக்கையூட்டு கின்றன.

இது சரியான நேரம் அனைத்து மாணவர்களும், இளைஞர்களும் ஆர்த்தெழுந்து ஆரிய ஆதிக்கத்தை அழித்து கருத்துச் சுதந்திரத்தைக்  காக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

சிந்திக்க முடிந்தது

புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசிய முமில்லை என்று சொன் னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
_ (விடுதலை, 23.1.1968)

தமிழ் ஓவியா said...

கிஸ்தானும், வங்காளதேசமும் இந்து நாடுகளாம்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார்



மதுரா, ஜூன் 15_ -பாகிஸ்தான், மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் அனைவரும் இந்து நாட்டில் வாழ்பவர் களே என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மதுராவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட அதன் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-

ஒரே இந்து நாடு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவை யில்லை.இந்தியா என்பது இந்துநாடு என்ற நம்பிக் கையை எந்த விலை கொடுத்தாலும் மாற்ற முடியாது. சில மக்கள் தங்களை இந்துக்கள் என சொல்கின்றனர். சிலர் இந்தியன் என சொல் கின்றனர். இன்னும் சிலர் தங்களை ஆரியர்கள் என் றும் சிலர் உருவ வழி பாட்டில் நம்பிக்கையற்ற வர்கள் எனவும் கூறிக் கொள்கின்றனர். இந்தி யாவை இந்து ராஷ்டிரா என்று ஏற்றுக் கொண் டாலும் எந்த மாற்றமும் இதில் ஏற்படாது.

இந்திய துணைக் கண்டத்தில் வாழும் அனைவருமே இந்துநாட்டை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் வேறுபட்ட குடியுரிமையை கொண்டி ருந்தாலும் அவர்களுடைய நேஷனாலிட்டி இந்து தான். சிந்து நதி இங்கு ஓடியதால் அரபு மன் னர்கள் இந்த பகுதியை இந்து என அழைக்க தொடங்கினர். பாகிஸ் தான் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிடம் இருந்து பிரிக்கப்பட்டது. 1971 ல் வங்காளதேசம்  பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள மக்களின் குடியுரிமை மாறுவதற்கு பிரிக்கப்பட்டதே காரணம். ஆனால், அவர்கள் தங்கள் வீடுகளையோ, நாடுகளையோ விட்டு செல்லவில்லை. எனவேதான் அவர்களின் நேஷனாலிட்டி இன்னும் மாற வில்லை என்று நான் கூறுகிறேன்.  சில மக்கள் தெளிவில்லாமல் தங்களை கிறிஸ்தவர்கள் என்றும் முஸ்லீம்கள் எனவும் கூறிக் கொள்கின்றனர். இந்த நிலப்பரப்பின் பழங்கால பெயர் இந்துஷ்தான். வெளிப்படையாகவே இங்கு வாழும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்துக்களே என்று தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

தஞ்சைத் தீர்மானம்
 

கடந்த 13ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு பல வகைகளிலும் சிறப்பானது; சிறந்த ஏற்பாடுகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். கழகத் தலைவர் உடல் நலம் சரியில்லை; நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப் பட்டன; அவருக்கு ஓய்வு தேவை; தோழர்கள் அவரைச் சந்திப்பதற்காக சென்னை  வர வேண்டாம் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.

இந்தச் சூழலில் கழகப் பொதுக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் வருகிறார் என்ற நிலையில், அவரை நேரில் காண வேண்டும்; உடல் நலனை விசா ரிக்க வேண்டும் என்ற உந்துதல் முக்கிய காரணமாக இருந்ததைக் காண முடிந்தது; கழகத்தின் எதிர்கால செயல்பாடுகளை பொதுக் குழுவில் அறிய வேண்டும் என்ற கொள்கை ஆர்வமும் அதில் கலந்திருந்தது. இரங்கல் தீர்மானம் உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை இராதாகிருஷ்ணன் நகர் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் இடதுசாரி களின் சார்பில் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் வேடபாளர் தோழர் சி. மகேந்திரன் அவர் களுக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற தீர்மானத்தை கழகத் தலைவரே முன்மொழிந்து விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது.

இந்தத் தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல்; முதல் அமைச்சர்  செல்வி ஜெயலலிதா தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இராதா கிருஷ்ண நகர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரை பதவி விலகச் செய்து அந்தத் தொகுதியில் போட்டி யிடுவது என்பது எந்த வகையில் சரி - எந்த வகையில் நியாயம்? ஓர் இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது என் றால் அதற்காக மக்கள் வரிப் பணம் செலவழிக்கப் படுவது பொறுப்பானதுதானா?

அ.இ.அ.தி.மு.க. நான்காண்டு ஆட்சியில் மக்களுக் காகச் செய்யப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் என்ன? வேலை வாய்ப்பு எந்த அளவுக்கு இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் மக்கள் தொகை 76,656,206 இதில் இளைஞர்களின் எண்ணிக்கை 3,42,42327 இவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணமாவது குறைந்தபட்சம் உண்டா என்று கேட்க விரும்புகிறோம்.

பல ஆண்டுகள் பணியாற்றிய 13 ஆயிரம் கிராம நல பணியாளர்களைத் திடீரென்று வீட்டுக்கு அனுப்பியதுதானே அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் வேதனை என்னும் சாதனை - மறுக்க முடியுமா?

போதிய மாணவர்கள் இல்லை என்று கூறி அரசுப் பள்ளிகள் மூடு விழா நடத்தப்படுவது இன்னொரு பக்கம் ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என்று அறிவித்தது தான் இவ்வாட்சியின் சாதனையா? போதும் போதாததற்கு மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கும், மதவாதப் போக்குக்கும் தோள் கொடுக்கும் அரசாகத்தானே இருக்கிறது?   அ.இ.அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஆளும் பிஜேபிக்கு கை தூக்கும் வேலையில் தானே ஈடுபட்டுக் கொண்டுள்ளனர்?

தமிழ் ஓவியா said...

மத்தியில் பிஜேபி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மையை முற்றிலும் சிதைத்துக் கொண்டு இருக்கிறது என்றால் அ.இ. அ.தி.மு.க. ஆட்சி அதற்கு அப்பனாக அல்லவா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மழை பொழிவதற்கு இந்துக் கோயில்களில் சிறப்புப் பூஜை, யாகங்கள் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லுவது அப்பட்டமான சட்டமீறல் அல்லவா! மதச் சார்பற்ற அரசின் அமைச்சர்கள் இந்து மதத் தொடர் பான நேர்த்திக் கடன்களை செய்து கொண்டு இருக் கிறார்களே! இன்னொரு வகையில் சொல்ல வேண்டும் என்றால் அண்ணா பெயரில் கட்சியின் பெயரை வைத்துக் கொண்டும், கட்சியின் கொடியில் அண்ணா உருவத்தைப் பொறித்துக் கொண்டும், அ.இ.அ.தி.மு.க. பிரச்சார சுவரொட்டிகளில் தந்தை பெரியார் உரு வத்தை அச்சிட்டுக் கொண்டும் - இவர்களின் அடிப்படைக் கொள்கையான பகுத்தறிவைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு தரையில் கிடந்து உருளுகிறார்களே! (அதாவது அங்க பிரதட்சணம்?

பால் காவடி எடுப்பதுதான் பகுத்தறிவா? தேர் இழுப்பதுபற்றி எல்லாம் அண்ணா எழுதவில்லையா - பேசவில்லையா?

அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லிக் கொண்டே அண்ணாமலையார் கோயிலில் விழுந்து புரளுவதுதான் அண்ணா திமுகவா? அண்ணா ஆட்சியா?

கட்சியின் பொதுச் செயலாளர் பக்திமானாக மூட நம்பிக்கைக்காரராக இருக்கிறார் என்பதால் கட்சியின் தொண்டர்கள் உறுப்பினர்கள் அத்தனைப் பேரும் நெற்றியில் திருநீறு - குங்குமம் சகிதமாகக் காட்சி அளிக்க வேண்டுமா?

இதில் அமைச்சர்கள்  மூடப் பக்தியிலும் நேர்த்திக் கடன் கழிப்பதிலும் யாருக்கு முதல் பரிசு என்பதில் தான் போட்டா போட்டி; அம்மாவின் பார்வைக்கு அது செல்ல வேண்டும் என்பதுதான் அதில் பதுங்கியுள்ள பரம இரகசியம்.

அதே நேரத்தில் இடதுசாரிகள் மதச் சார்பற்ற தன்மையிலும், சமூக நீதியிலும் திராவிடர் கழகத்துக் கொள்கைகளோடு மிகவும் நெருக்கமாக இருப்பதாலும் இடைத் தேர்தலை பல  பெரிய கட்சிகள்   புறக்கணித்த நிலையில், இடதுசாரிகள் ஜனநாயக அடிப்படையில் எதிர்த்துப் போட்டியிடுவதை ஜனநாயக சக்திகளும், மதச் சார்பற்ற சக்திகளும், ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த இடைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிப்பதன் மூலம் அக்கட்சியும், ஆட்சியும் திருத்த மடையச் செய்வதற்கும், வளர்ச்சித் திட்டங் களில் அக்கறை செலுத்துமாறு செய்வதற்கும் உதவியது ஆகுமே!

அந்த வகையில் திராவிடர் கழகப் பொதுக் குழு அனைத்துத் தரப்பினருக்கும் நல் வழிகாட்டுதலைத் தந்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நன்றி


சென்னை, ஜூன் 15_ இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க் சிஸ்டு) மற்றும் இடது சாரி கட்சிகளின் ஆதர வோடு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்த லில் போட்டியிடும் சிபி அய் வேட்பாளர் சி.மகேந் திரனுக்கு ஆதரவு அளிப்ப தென திராவிடர் கழக மாநிலக் குழு முடிவு செய்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பதுடன் திராவி டர் கழக தலைவர் கி.வீர மணிக்கு சிபிஅய் தமிழ் நாடு மாநிலக்குழு சார் பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனதா தளம் (எஸ்) ஆதரவு

இதற்கிடையே சி. மகேந்திரனுக்கு மதச்சார் பற்ற ஜனதா தளம் ஆத ரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் பி.முக மது இஸ்மாயில் தலைமை யில் சென்னையில் நடை பெற்றது. துணைத் தலை வர் எம்.சொக்கலிங்கம், மாநிலப் பொதுச் செயலா ளர்கள் கே.ஜான்குமார், கரு. பவனாச்சாரி உள்ளிட் டோர் பங்கேற்றனர். கூட் டத்தில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்த லில் போட்டியிடும் இடது சாரி இயக்கங்களின் வேட் பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து களப்பணி ஆற் றுவது எனத் தீர்மானிக் கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவரை கழகத் தோழர்கள் சந்தித்துப் பாராட்டினர்


பரணம், ஜூன் 15_ எளிய விவசாய குடும்பத் தில் பிறந்த சே.பாரதிராஜா செந்துறை ஒன்றியம் பர ணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து மாநி லத்தில் முதல் இடம் (499) மதிப்பெண் பெற்ற மாணவர் பாரதிராஜாவை அரியலூர் மண்டல செய லாளர் சு.மணிவண்ணன் தலைமையில் 14.6.2015 அன்று பரணம் கிராமம் மாணவரின் இல்லத்திற்கு சென்று சால்வை அணி வித்தும், நிதியுதவி வழங்கி யும் தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனை, கீதையின் மறுபக்கம் ஆகிய இயக்க நூல்களையும் வழங்கி பாராட்டி மகிழ்ச் சியை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல இளை ஞரணி செயலாளர் வழக்கறிஞர் மு.ராசா, மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்.செந் தில்குமார், வஞ்சினபுரம் ஊராட்சிமன்ற தலைவர் க.தனபால், ஒன்றிய அமைப்பாளர் மு.முத் தமிழ்ச்செல்வன், இளைஞ ரணி தோழர்கள் பரணம் இராமதாசு, பழனிச்சாமி, ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த வெற்றி குறித்து மாணவர் பாரதிராஜா கூறும்போது:-_ எனது தாயார் கவிதா, தந்தை சேகர் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் ராஜம், தமிழாசிரியை இராணி ஆகியோர் ஊக்கப்படுத் தினர் என்றும் கூறினார்.

மாணவரின் சகோதரர் பொறியியல் படித்து வருகிறார் தாய் தந்தை பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளனர். மாணவர் தனிப்பயிற்சி (டியூஷன்) நிலையம் போய் படிக்கவில்லை. பெற் றோர்களுக்கு விவசாய வேலைகளுக்கு உதவியாக வேலை செய்பவர், மேலும் நன்றாக படித்து கலெக்டர் ஆவதே எனது இலட்சி யம் எனவும் கூறினார்.

பரணம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்து வதற்கு கழக தோழர்கள் செந்துறை சா.ராசேந்தி ரன், சு.மணிவண்ணன், க.தனபால் ஆகியோரும் பேராட்டத்தில் கலந்து கொண்டு பள்ளியை தரம் உயர்த்த பாடுபட்டார்கள் என மாணவரின் தந்தை சேகர் நினைவு கூர்ந்து பாராட்டினார்.

குறிப்பு: மதிப்பெண் விவரம்

தமிழ் _ 99, ஆங்கிலம் _ 100, கணிதம் _ 100, அறிவியல் _ 100, சமூக அறிவியல் _ 100, மொத்தம் _ 499 மார்க்குகள்.

தமிழ் ஓவியா said...

சீரான உடல் நலத்துக்கு தூதுவளை



சிறிய, உடைந்த முள் போன்ற இலைகளையும், மித ஊதா நிற பூக்களையும், உருண்டையான பச்சைநிறக் காய்களையும், சிவப்பு  நிறப் பழங்களையும், வளைந்த முட்களைப் போன்ற தண்டையும் உடைய தூதுவளை, கொடி இனமாகும். இதை நம் வீட்டு  தோட்டத்தில் பந்தல் போட்டு வளர்ப்பது சிறந்த முறையாகும்.

அய்ந்து ஆண்டுகள் வரை வளரும் இக்கொடியின் தண்டுகளில்  முட்கள் இடைவிடாமல் நிறைந்திருக்கும். சரியான முறையில் தூதுவளை கொடியை வளர்த்தால், அவை அதிக நாட்கள் வரை  வளர வாய்ப்பு உள்ளது.

தூதுவளையின் வேர் முதல் பழம் வரை எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இதன் இலையும் பூவும் கோழை சளியை  அகற்றவும், நம் உடலைப் பலப்படுத்தவும், வீரிய சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இதன் காய் மற்றும் பழங்கள்நமக்கு  பசியைத் தூண்டுவதுடன், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள இந்த தூதுவளை கொடி  சிங்கவல்லி, ரத்து நயத்தான், தூதுவேளை, தூதுளம், தூதுளை என்று அழைக்கப்படுகிறது.

மருத்துவ குணங்கள்- தூதுவளை இலைகளை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை காலை  வேளையில் மட்டும் ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து குடித்தால் நாக்கு வறட்சி, கபநீர், மூட்டுவலி மற்றும் காசநோய்  குணமாகும். தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, குழம்பாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால், நெஞ்சில்  சேரக்கூடிய கபக்கட்டு நீங்குவதுடன், நம் உடல் பலம் பெறும்.

தூதுவளை இலையை சாறு பிழிந்து, அதே அளவு நெய்யில் காய்ச்சி, ஒரு தேக்கரண்டி அளவு 2 வேளை தொடர்ந்து குடித்து  வந்தால் எலும்புருக்கி காசம், மார்சளி உடனடியாக நீங்கும். தூதுவளை காயை நிழலில் உலர்த்தி காயவைத்து தயிர், உப்பு  சேர்த்து பதப்படுத்தி, எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டுவர மனநல பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் போன்றவை  குணமாகும்.

தூதுவளை சமூலத்தை 50 கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 150 மி.லி. அளவுக்கு சுண்ட  காய்ச்சி வடிகட்டி, தொடர்ந்து 2 வேளை குடித்து வந்தால் இரைப்பு, சுவாச சளி, இருமல் குணமாகும்.

தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து பொடியாக்கி புகைமூட்டம் போட்டு நுகர்ந்து வந்தால் மூச்சிரைப்பு  இருமல், மூச்சு திணறல் விலகுவதுடன், மார்பில் சேர்ந்த சளி இளகி வெளியேறும்.

தூதுவளை பூக்களை 10 எண்ணிக்கை  எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து, 48 நாட்கள் தொடர்ந்து 2 வேளையும் பருகி  வந்தால் தாது விருத்தி ஏற்படுவதுடன் உடல் பலம் பெறுவதுடன், நமது முகமும் வசீகரமாகும்.

தமிழ் ஓவியா said...

இயற்கை நமக்கு தரும் சத்துக்கள்



அன்னாசி பழம், பப்பாளி, மாம்பழம், கொய்யா, மஞ்சள், பரங்கிக்காய், நெல்லிக்காய், கேரட், பொன்னாங்கண்ணி கீரைகளில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகம் உள்ளன. இவற்றை அளவோடு உட்கொண்டால் மாலைக்கண் நோய் தீரும். சருமம் பொலிவு பெறும்.

வைட்டமின் பி- வாழைப் பூ, சாம்பல் பூசணி, நாட்டு தக்காளி, முருங்கைக்காய், முருங்கைக் கீரை, முட்டைகோஸ், காலிபிளவர், பட்டாணி, கடலை, மாதுளை போன்றவற்றில் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை அளவோடு உண்டால், நமது உடல் வலிமைக்கும் நரம்புகள் ஊட்டத்துக்குள் வலு சேர்க்கும். மேலும் வயிற்றுப் புண், வாய்ப் புண், ரத்தசோகை, கை-கால் செயலிழத்தலை விரைவில் குணமாக்கும்.

வைட்டமின் சி- எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி, நாட்டு தக்காளி, நெல்லிக்காய், ஆரஞ்சு, முட்டைகோஸ், காலிபிளவர், வெள்ளை முள்ளங்கி மற்றும் புளிப்பு சுவை உடைய காய்கள் மற்றும் கீரைகளில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பாற்றலுக்கும் ரத்த சுத்திகரிப்பு செய்வதற்கும் அதிகளவில் உதவுகிறது.

மேலும் சளி பிடித்தல், வயிற்றுப் புண் (அல்சர்), குடல் புண் உள்ளவர்கள் இதுபோன்ற ரத்த சத்து மிகுந்த உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது.

வைட்டமின் டி- முட்டை, மீன், தேங்காய், கடலை, பட்டாணி, துவரை, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, எண்ணெய் வித்துக்கள் உள்ள பொருட்களில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் நமது உடலுக்கு ஊட்டத்தையும் வலிமையையும் கொடுக்கும். இந்த சத்து குறைவதால்தான் நமக்கு தோல் வியாதிகள் வருகின்றன.

தே

தமிழ் ஓவியா said...

ங்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை 20 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாகவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைவாகவும் எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின் இ- முருங்கைக்காய், முருங்கை விதை, கடலை, வேர்க்கடலை, முந்திரி பருப்பு, தேங்காய், பேரீச்சம்பழம், பதநீர் போன்றவற்றில் வைட்டமின் இ சத்துக்கள் அதிகம்.

இவை நமது உடல் ஆரோக்கியத்துக்கும், உயிர் சத்தான விந்துவையும், கரு தரித்தலுக்கான சினை முட்டைகளையும் அதிகரிக்க இந்த சத்து மிகவும் முக்கியம். வயதுக்கு வராத பெண்கள், கருத்தரிக்காத பெண்கள் மற்றும் ஆண் மலடுகளுக்கு இந்த சத்து மிக அவசியம்.

வைட்டமின் கே- வாழைப் பூ, அத்திக்காய், மாதுளை, வாழைத் தண்டு, நெல்லிக்காய், கொய்யாப் பிஞ்சு, மொச்சை, புளிச்ச கீரை போன்றவற்றில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் காணப்படும்.  நம் உடலில் இந்த சத்துக்கள் குறைந்தால் ரத்தம் நீர்த்து போய், ரத்த ஒழுக்கு ஏற்படும். இந்த சத்து ரத்தம் உறைதலுக்கு மிக அவசியம்.

இரும்பு சத்து- முருங்கைக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, அவரை, வாழைப்பூ, கத்திரி பிஞ்சு, நாட்டு தக்காளி, வெள்ளரி, வெண்டை மற்றும் பாகற்காயில் இரும்பு சத்துகள் அதிகம். இந்த சத்து நம் உடலில் குறைவதால் ரத்தம் கெடுவதுடன் தோல் வியாதி ஏற்படுகிறது.

அடிக்கடி சளி பிடித்தல் மற்றும் ரத்த சோகை ஏற்படும். ஆனால், அதுவே அளவுக்கு மீறியிருந்தால் வயிற்றுக் கோளாறு மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்.

மாவு மற்றும் சர்க்கரை சத்து- நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை, வெல்லம், கிழங்கு வகைகள், வெங்காயம், அரிசி, கோதுமை, பால், பருப்பு மற்றும் தானிய வகைகளில் இந்த 2 சத்துகளும் அதிகம் உள்ளன. நமது உடலில் சேரும் கொழுப்பு சத்துகளை கரைந்து போகாமல் தடுப்பதுடன், விரதம் இருப்பவர்களும் நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களை காப்பதும் இந்த 2 சத்துகளும்தான்.

புரத சத்து- சோயா மொச்சை, பாதாம் பருப்பு, முந்திரி, வேர்க்கடலை, கொட்டை பருப்பு, பால், பாலாடை, மீன், முட்டை போன்றவற்றில் புரத சத்து அதிகம். இவை உணவை ஜீரணிக்க உதவுவதுடன், ஜீரண நீர் வளர்ச்சிக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது.

இவை குறைவதால் தசைகள் இளைத்து போவதுடன், சத்து குறைவு காரணமாக உடலில் வீக்கம் ஏற்பட்டு ஊதி பெரிதாகிறது.

கொழுப்பு சத்து- வெண்ணெய், மிருக கொழுப்புகள், தேங்காய், எண்ணெய், கடலை எண்ணெய், பருத்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோள எண்ணெய் போன்றவற்றில் கொழுப்பு சத்துக்கள் அதிகம். இந்த சத்துக்கள் நீரில் கரையாமலும், எண்ணெய் போன்ற பிசுக்களினால் ஆன தனித்தன்மை பெற்றது.

சுண்ணாம்புச் சத்து- நம் உடலின் தாதுப் பொருட்களில் மிக முக்கியமான சத்து சுண்ணாம்பு சத்தாகும். இவை முருங்கை கீரை, ராகி, கோதுமை, நண்டு, ஆட்டு இறைச்சி, பீட்ரூட், வெங்காயம், வெண்டைக்காய் மற்றும் கேரட் போன்ற வற்றில் மிகுதியாக இருக்கும். நமது உடலில் எலும்புகள், பற்கள், நரம்பு மற்றும் தசைகளின் சரியான இயக்கத்துக்கும், ரத்தம் உறையவும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவைப்படுகிறது.

சாம்பல் சத்து- முருங்கை, ராகி, கோதுமை, நண்டு, வெங்காயம் மற்றும் வெண்டைக் காயில் சாம்பல் சத்து அதிகம் உள்ளது. நமது உடலில் உள்ள ரத்தத்தின் அமில, காரத்தன்மையைக் கண்காணிப்பது சாம்பல் சத்தாகும். எலும்புகளுடன் சுண்ணாம்பு சத்து சேருவதில் சாம்பல் சத்து பெரும்பங்கு வகிக்கிறது.

உப்பு சத்து- நம் உடலில் சேரும் நீர் சத்துக்கு அடுத்தபடியாக மிக முக்கிய பங்கு வகிப்பது உப்புதான். ஆனால், இவற்றை நாம் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். இவை நம் உடலில் அதிகமானால், கழுத்துக்கு முன்புற வீக்கமும் உடல் தளர்ச்சியும் ஏற்படும்.

தமிழ் ஓவியா said...

நீரிழிவு நோயை போக்கும் முட்டை



மனிதர் களை தாக்கும் முக்கிய நோய் களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப் 2  நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் அதிக அளவு கொழுப்பு சத்துகளால் உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்பட்டு அதன்மூலம் இந்தநோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக் கின்றன. இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் தாக்கம்  குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரி  சமப்படுத்தி சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதயநோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள்.  அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது. அதன் மூலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

உடல் எடையைக் குறைக்க வழி?

நீங்கள் உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும். வராதி என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவை 200 மி .லி அளவில் கிடைக்கும்.

3 ஸ்பூன் மருந்து + 12 ஸ்பூன் (60 மி .லி) கொதித்து ஆறிய தண்ணீர் + கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் மருந்தைச் சாப்பிட்டதும் அரை மணி நேரம் இடது பக்கமாகச் சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாகத் தண்ணீரைக் குடிக்கவும். உடல் பருமனைக் குறைக்க இது நல்ல கஷாயம்.

தயிரைத் தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும். தேன் கால் ஸ்பூன் சிறிது தண்ணீரில் கலந்து அல்லது திரிபலா எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 ஸ்பூன் (5 கிராம்) 80 மி .லி தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகு, கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்குப் பிறகு உடனே அருந்த வேண்டும். அதன் பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.

தமிழ் ஓவியா said...

தினமணி: லலித் மோடிக்கு வக்காலத்தா?

புதன், 17 ஜூன் 2015 15:16

லலித் மோடி விவகாரத்தில் வழக்கம்போல பி.ஜே. பி.,க்கு வரிந்து கட்டிக்கொண்டு தலையங்கம் எழுதியுள்ளது தினமணி. அதில் ஓரிடம் கவனிக்கத்தக்கது.

பல கோடி ரூபாய் புழங்கும் இடத்தில் (அய்.பி.எல். கிரிக்கெட்டில்) குறைபாடுகள் இல்லாமல் எப்படி இருக்கும்? என்று தலையங்கப் பகுதியில் எழுதியுள்ளது தினமணி.
எப்படி இருக்கிறது நியாயம்?

பல கோடி ரூபாய் புழங்கும் இடத்தில் முறைகேடுகள் நடக்கத்தான் செய்யும். இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று எழுதுகிறது தினமணி.

இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இன்னொரு நேரத்தில் நமக்குப் பயன்படும்.

தமிழ் ஓவியா said...

காவிரி நீர்ப் பிரச்சினை தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினை

பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினால் மட்டும் போதாது!

அனைத்துக் கட்சியினரையும், எம்.பி.,க்களையும் இணைத்து முதல்வர் தலைமையில் தூதுக்குழு பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும்


தமிழக அரசுக்கு தமிழர் தலைவரின் வேண்டுகோள் அறிக்கை



காவிரி நதிநீர்ப் பிரச்சினை தமிழ்நாட்டின் வாழ் வாதாரப் பிரச்சினை; இதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி களைச் சமாளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் அனைத் துக் கட்சித் தூதுக்குழு ஒன்றை தமது தலைமையில் அமைத்து பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

1. காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கைவைத்து, அதனை தமிழ்நாட்டின் வறண்ட பூமியாகவும், தப்பித்தவறி விடப்படும் (கருநாடகத்தால்) நீர் கழிவுப் பொருள்கள் கலந்த நீராகவும் வருகிறது என்ற  வேதனை - விவசாயப் பெருங்குடிகளை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது.

பசுமை

தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர் களில் துத்த நாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப் பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

வெந்த புண்ணில் வேல்!

இவைகளோடு, வெந்த புண்ணில் வேலைச் சொருகும் வகையில், கருநாடக அரசு காவிரியின் குறுக்கே நான்கு சிறிய அணைகளைக் கட்டிட மிகவும் மும்முர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இரண்டு பெரிய அணைகளைக் கட்டினால் மத்திய அரசின் அனுமதி பெற்றாகவேண்டும் என்ற சட்ட விதிகளைப் புறந்தள்ளிடவே இப்படி ஒரு தந்திர வியூகம்!

மற்றொரு தந்திரம் தங்களுக்குக் குடிநீர் தேவை என்ற ஒரு பொய்ச் சாக்கைப் பயன்படுத்தி இப்படி ஒரு முயற்சி.

முல்லைப் பெரியாறிலும் பிரச்சினை!

2. இதுபோலவே, கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கட்டின் உயரத்தை தமிழ்நாடு அரசு உயர்த்திட லாம்; மேலும் கூடுதலாகத் தண்ணீரைத் தேக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினையே புறந்தள்ளி, குறுக்கு வழியில், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்காமல் தடுக்க, புதிதாக ஒரு அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சின் அனு மதிகூட பெறாமல், தன்னிச்சையாக, துணிவாக அணைகள் கட்ட சர்வே முதலியவற்றை முடுக்கிவிட்டுள்ளது.

இதை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கண்டும், காணாததுபோல இருப்பதும் ஏனோ?

உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் ஆணையம் - மேற்பார்வை பொறுப்பு - வழக்கு - பிரச்சினை ஏற்படினும், தீர்வு தரும் நிலையை உடனடியாகத் தரக்கூடிய பொது அமைப்பாக இன்னும் மத்திய அரசால் அமைக்கப்பட வில்லை!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு  முன்பே வந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பு - தேர்தல் முடிந்தவுடன் அமைக்கப்படும் என்று தமிழ்நாட்டிற்கு மோடி அவர்கள் வந்தபோது கூறிய தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று? காற்றில் பறந்து போயிற்றா?

கருநாடகத்தையும், கேரளாவையுமாவது தங்கள் பா.ஜ.க. கட்சி வசப்படுத்த வேண்டுமென்பதற்காக மத்திய அரசு கண்ணை மூடி ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளுகிறதா என்ற அய்யம் பரவலாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

குறுவை சாகுபடிக்கு வழமைபோல இவ்வாண்டும் மேட்டூர் தண்ணீர் ஜூன் 12 இல் திறக்கப்படவில்லை; மாறாக, குறுவை தொகுப்பு உதவி என்ற பஞ்சு மிட்டாயை அழும் குழந்தைக்குக் காட்டுவதுபோன்று தமிழக அரசு காட்டி விவசாயிகள் வீட்டு அடுப்பில் பூனை தூங்கச் செய்கிறது!

கடிதம் எழுதினால் போதாது - பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சி தூதுக்குழு தேவை!

இதற்காக பிரதமருக்கு முதலமைச்சர் வெறும் கடிதம் எழுதினால் போதாது.

அதன்மேல் நடவடிக்கையாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கருநாடகா, கேரள அரசுகளின் அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு, மேலும் காலம் தாமதிக் காமல், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட உடனடியாக முன்வரவேண்டியது அவசியம்.

இதற்காக முதல்வர் தலைமையில், அனைத்துக் கட்சியினரை அழைத்து, எம்.பி.,க்களோடு இணைத்து, தூதுக்குழுவாக பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய தமிழக அரசு, முதலமைச்சர் முன்வரவேண்டும்.

கட்சிக் கண்ணோட்டம் வேண்டாம்!

இதில் கட்சிக் கண்ணோட்டத்திற்கு இடமின்றி, அனைத் துக் கட்சிகளும் முதல்வரின் முயற்சிக்கு - அரசியலைத் தாண்டி - ஒத்துழைப்பு நல்குவர் என்பது உறுதி.

எனவே, மேலும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக இக்கருத்தினை ஏற்று செயல்படவேண்டியது அவசரம்! அவசியம்!!


கி.வீரமணி   
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
17.6.2015

தமிழ் ஓவியா said...

இன்றைய  ஆன்மிகம்?

உதைபட்டது சிவனா? ஆறுமுகசாமியா?

மாணிக்கவாசகர் தனது இறுதிக் காலத்தில் சிதம்பரத்தில் வாழ்ந்து வந்தார். ஒருமுறை அவரைப் பார்க்க அந்தணர் உருவில் வந்தார் சிவபெருமான். மாணிக்க வாசகரிடம், இதுவரை அவர் பாடிய பாடல்களை தனக்கு சொல்லி அருளும்படி வேண்டினார். மாணிக்கவாசகரும் அந்தணரை அருகில் இருத்தி, தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார். அந் தணரும் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி முடித்தார்.

பின்னர் திருக்கோவை என்ற நூல் பாடலையும் பாடச் சொல்லிக் கேட்டு, அதனையும் தன் திருக்கரத் தால் எழுதி முடித்தார். பின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார். அதைக் கண்ட மாணிக்க வாசகர், வந்தது சிவபெருமானே என்று எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்க இறைவனைத் துதித்தார்.

திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவை யையும் தம் கையால் எழுதிய இறைவன், அந்த நூல்களை உலகறியச் செய்வதற்காக, நூலின் முடிவில், திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து என கையொப்பம் இட்டு தில்லைச் சிற்றம்பலத்தில் வாசல் படியில் வைத்தருளினார்.

இப்படி சிவனே கைப்பட எழுதிய திருவாசகத்தை சிவனடியார் ஆறுமுகசாமி சிதம்பரம் நடராஜன் (சிவன்) கோவில் சிற்றம்பல மேடையில் பாடியபோது, தீட்சதர் கள் அடித்து உதைத்தனரே - அப்படி என்றால், உதை பட்டது சிவனா? ஆறுமுகசாமியா?

தமிழ் ஓவியா said...

இதுதான் பா.ஜ.க. ஆட்சி!

தாழ்த்தப்பட்ட சிறுமியின் நிழல் பட்டதால் தாக்கப்பட்ட பெருங்கொடுமை




சத்தார்பூர், ஜூன் 17_ பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கணேஷ்புரா கிராமத்தில்  தாழ்த்தப்பட்ட சிறுமி யின் நிழல் பட்டுவிட்டது என உயர் ஜாதி ஆணவத் தால் அச்சிறுமியை மோச மாகத் தாக்கிய கொடுமை நடந்துள்ளது.

13.6.2015 அன்று கணேஷ்புரா கிராமத்தில் ஒரு சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக ஆழ் துளைக்கிணறு அமைக் கப்பட்ட இடத்துக்கு சென்றாள். அப்போது உயர்ஜாதியைச் சேர்ந்த ஒருவர்மீது தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த  அச்சிறுமியின் நிழல்  விழுந்ததாம். அதனால், அச்சிறுமியை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அப்பெண்ணின் தந்தை தகவல் அறிந்து தன் மகளுடன் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க செல்ல முயன்ற போது, மற்றவர்களால் தடுக்கப்பட்டார். இருந்த போதிலும், வேறு வழியில் காவல்நிலையத்துக்கு சென்று தன் மகள் தாக் கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தார். புகா ரின்பேரில் காடி மல் ஹேரா காவல்நிலையத் தில் வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறை கூடுதல் கண் காணிப்பாளர் நீரஜ் பாண்டே கூறும்போது, சிறுமியின் தந்தை அளித்த புகாரில் குறிப் பிடும்போது, அவர் மகள் கிராமத்தில் உள்ள பொதுக்குழாயில் தண் ணீர் எடுப்பதற்காக சென்றபோது (உயர் ஜாதியைச் சேர்ந்த) புரான் யாதவ் என்பவர்மீது அவர் மகளின் நிழல்பட் டது என்று அச்சிறுமியை அவர் தாக்கியுளளார்.   அதைத் தொடர்ந்து உயர்ஜாதியினர் என்று கூறிக்கொள்ளும் அவர் குடும்பத்து பெண்ணும் சிறுமியை சரமாரியாகத் தாக்கியதோடு, இனிமேல் அந்த பொதுக்குழாய் பக்கம் வரக்கூடாது என் றும் எச்சரித்து உள்ளனர். அப்படி மீண்டும் அந்தப் பொதுக்குழாய் பக்கம் அச்சிறுமியைப் பார்த்தால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கக்கூடாது என் றும் தடுத்துள்ளனர். ஆனால், வேறு வழியாக காவல்நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்து விட்டார்கள் என்று கூறினார்.

அந்தப் புகாரின் பேரில் இந்திய தண்ட னைச் சட்டப்பிரிவுகள் 323, 341, 506 ஆகிய பிரி வுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடை பெற்று வருகிறது.

இந்தியாவின் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் தீண்டாமை இன்னமும் சர்வ சாதாரணமாக இருந்துவருகிறது.

தாழ்த்தப்பட்ட வகுப் பினத்தவர்கள் உயர்ஜாதி யினராக இருப்பவர்களை சந்திப்பதோ, அவர்கள் சமைத்த உணவை   பகிர்ந்து கொள்ளுவதோ முடியா தது மட்டுமன்றி, அவர்கள் பார்வையில்கூட படக் கூடாது என்கிற நிலை இருந்துவருகிறது. தாழ்த் தப்பட்டவர்களின் நிழல்கூட உயர்ஜாதியினர் மீதுபட்டுவிட்டால் தீட் டாகிவிடுகிறது என்று கூறுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

யோகா வேண்டாம்! பி.ஜே.பி. முதலமைச்சர்!

புதன், 17 ஜூன் 2015
 

பனாஜி, ஜூன் 17- வருகிற 21 ஆம் தேதி உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் அன்றைய தினம் யோகா பயிற்சி மற்றும் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் சிறுபான்மையினர் எதிர்ப்பு காரணமாக சூரிய நமஸ்காரம் ரத்து செய்யப்பட்டு யோகா மட்டும் நடத்தப் படுகிறது. கோவாவில் 21 ஆம் தேதி பாம்புலிம் ஸ்டேடி யத்தில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் யோகா சனம் நிகழ்ச்சியில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளு மாறு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

இதற்கு சிறுபான்மையினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது. யோகா பயிற்சி கட்டாயம் என்று கூறப்படாவிலும் அன்றைய தினம் நடத்துவது தங்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் என்று சிறுபான்மையினர் கேட்டுக் கொண்டதால் உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் லட்சுமி காந்த் பர்சேகர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

செய்தியும்
சிந்தனையும்

ஆச்சாரம் கெடாதோ...!

செய்தி: தமிழ்நாட்டில் 37 இந்துக் கோவில்களில் தங்கத் தேர் வடிவமைத்துக் கொடுத்தவர் மதுரையைச் சேர்ந்த ரகுமான் என்ற முஸ்லிம்

சிந்தனை: இங்கு மட்டும் ஆச்சாரம் கெடாதோ? தண்ணீருக்குத் தீட்டு; பாலுக்குத் தீட்டு இல்லை என்று சொல்லும் கும்பல்தானே!

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை


மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு, தாழ்வு உணர்ச்சி போய் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் ஏற்படவேண்டும்.
_ (குடிஅரசு, 3.4.1927)

தமிழ் ஓவியா said...

நாட்டு நடப்புகள்


நாடாளுமன்றம், நீதிமன்றம், நிருவாகம், பத்திரிகை கள் இவை நான்கும் நாட்டின் தூண்கள் என்று சொல்லப்படுகின்றன. இவை நான்கும் நாணயமான முறையில் நடந்துகொள்ளுமேயானால், நாடும் ஒழுங் காக நாளும் பயணிக்கும் என்பதில் அய்யமில்லை.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த நான்கும் நேர்மையான முறையில் நடக்கவில்லை என்பது நன்கு தெரிந்ததுதான்.

எல்லா அமைப்புகளையும்விட கூடுதலான அதிகாரம் படைத்த நீதிமன்றங்களே - ஏன் உச்சநீதி மன்றமே சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நடக்கவில்லை என்கிறபோது, மற்றவற்றைப்பற்றிக் கேட்பானேன்?

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீதே வழக்குத் தொடுக்கப்பட்ட நிலை எல்லாம் உண்டே! சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரே (ஜஸ்டிஸ் இராமச்சந்திர அய்யர்) தன் வயதை தன் பதிவேட்டில் (சர்வீஸ் ரிஜிஸ்டர்) திருத்தி மோசடி செய்து பதவியில் நீடிக்கவில்லையா?

தலைமை நீதிபதியே தவறு செய்யும்போது கடுமை யான அதிகபட்சத் தண்டனையை அல்லவா அளித்திருக்கவேண்டும்? வேலியே பயிரை மேய்வது எவ்வளவுப் பெரிய ஆபத்தானது!

ஆனால், என்ன நடந்தது? குடியரசுத் தலைவராக வும் ஒரு பார்ப்பனர் இருந்ததால், பூணூல் பாலங்கள், நீதிபதிக்கு ஒரு சொட்டு வேர்வைக்குக்கூட சேதாரம் இல்லாமல் வெளியில் அனுப்பிய பவித்திரம் சாதாரணமானதுதானா?

நீதித்துறை இப்படி என்றால், ஆட்சித்துறை எப்படி இருக்கிறது என்பதற்கு இப்பொழுது நடந்துகொண்டு இருக்கும் லலித் மோடி பிரச்சினை ஒன்றே ஒன்று போதாதா? அறிவிக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் காதும் காதும் வைத்தாற் போல உதவி செய்வது எந்த வகையில் சரியானது?

நிருவாகத் துறையின் இலட்சணத்திற்கு ஓர் உதாரணம் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு. கேள்வி - பதில்கள் குறுஞ்செய்திகளாக உலா வருகின்றன என்றால், மேலே என்ன சொல்லவேண்டும்?

பத்திரிகைகளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்; அய்.பி.எல்.லில் பெரும் பணம் புழக்கத்தில் இருப்பதால், அதில் தவறுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததே என்று தினமணி இன்று தலையங்கத்திலேயே குறிப்பிட்டுள்ளதே.

நடுநிலையில் நின்று பேனா பிடிப்பதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் துக்ளக் ஆசிரியர், சம்பந்தப்பட்டவர் பார்ப்பனர் என்றால், அவர் பேனா எப்படியெல்லாம் நாட்டியம் ஆடும்; கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, சிறையிலும் இருந்து வந்தவர்தானே அவாளுக்கு லோகக் குரு;  வழக்கு நடந்துகொண் டிருந்தபோது, சங்கராச்சாரியார் விஷயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது! என்று எழுதினாரா இல்லையா?

பக்தி, தாத்பர்யம், தார்மீகம்பற்றியெல்லாம் எச்சில் ஒழுகப் பேசுகிறார்களே - அந்தப் பக்தி லோகம் எப்படி இருக்கிறது? இன்றைய ஏடுகளில்கூட ஒரு சேதி வெளிவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருநின்ற வூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலின் அர்ச்சகர் மணிவண்ணன் - புதிய தேர் செய்வதாகக் கூறி, ரூ.60 லட்சம் கையாடல் என்று, தினமலரே செய்தி வெளியிடுகிறதே!

சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி, தங்கும் இடத்தில் மதுபாட்டில்கள், விபச்சாரி வீட்டில் கைது என்றெல்லாம் செய்திகள் வெளிவரவில்லையா?

குஜராத் மாநில சவுமிய நாராயணசாமி கோவில் குருக்கள் குடியிருப்பில் விபச்சாரிகளுடன் குருக்கள் சல்லாபம் என்ற செய்தி பலான படங்களுடன் வெளிவரவில்லையா?

வெகுதூரம் போவானேன்? காஞ்சிபுரம் மச்சேந்திர நாதர் கோவில் குருக்கள் பார்ப்பான் தேவநாதன், கோவிலுக்குச் சாமி கும்பிட வந்த பெண்களைப் பாலியல் வெறிக்குப் பயன்படுத்தினான் என்ற தகவல் கள் பக்கம் பக்கமாக வெளிவரவில்லையா? இதுகுறித்து எந்தப் பார்ப்பன ஏடுகளாவது மூக்குச் சிந்தியது உண்டா?
பக்தி பெருகினால் ஒழுக்கம் பரவும் என்று சொல்லு வதெல்லாம் யாரை ஏமாற்ற? இன்னும் சொல்லப் போனால், பக்தி பெருகப் பெருகத்தான் ஒழுக்கக்கேடும் வால் முளைத்து, இறக்கைகள் முளைத்து வீறுகொண்டு விண்ணில் பறக்கின்றன.

12 ஆண்டுகள் பாவம் செய்து விட்டு 12 ஆவது ஆண்டு வரும் கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்துவிட்டால், பாவங்கள் பஞ்சாகப் பறந்து போய் விடும் என்றால், நாட்டில் ஒழுக்கக்கேடாக நடக்காதவன் பைத்தியக்காரனாகப் பார்க்கப்படமாட்டானா?

குறைந்த முதலீடு - கொள்ளை லாபம் என்றால், பலகீனமான மனிதன், அந்தப் பக்கம்தானே தாவுவான்!

இந்து மதமும், பார்ப்பன தர்பாரும் நாட்டில் நீடிக் கும்வரை நேர்மை, நடுநிலைமை, ஒழுக்கம் என்பதெல் லாம் குதிரைக் கொம்பே! ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் கோணல் புத்திதான் நடமாடும்.

இதைத் தந்தை பெரியார் உரைக்கல்லில் உரைத்துப் பார்த்து, பகுத்தறிவைக் கூர்தீட்டிப் பார்த்தால், உண்மைகளின் தன்மை வெளிச்சமாகவே தெரியும்!

தமிழ் ஓவியா said...

சிறப்பான வாழ்விற்கு சிந்தனையே மூலதனம்


யானைக்கு மதம் பிடித்தால் காடு தாங்காது, மனிதனுக்கு மதம் பிடித்தால் நாடு தாங்காது என்பார்கள். இதற்கு புண்ணிய பாரதமே. ஒரு சிறந்த எடுத்துக் காட்டு, காரியம் ஆகிறவரை காலைப் பிடிப்பதும் காரியம் முடிந்ததும் கழுத் தைப் பிடிப்பதும் பார்ப்பனியத்துக்கே உள்ள தனிப்பண்பு.

விடுதலை ஞாயிறு மலரில் (7.6.2015) தி இந்து தமிழ் நாளேட்டில் வந்துள்ள பத்து ரூபாய்த் தாள் படம் ஒன்றே போதும் இதனை உறுதிப்படுத்த! வெள் ளையரை விரட்டும்வரை தேவைப்பட் டார் காந்தி. விடுதலை நாள் விழாவிற்குக் கூட அவர் அழைக்கப்படவில்லை. அப் படியிருக்க ரூபாய்த் தாளிலே நோட் டிலே மட்டும் அவர் படத்தை எப்படி இடம் பெறச் செய்வார்கள்? அதனால் தான் காந்தியாரையே சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு நாடு நெடுகிலும் சிலை வைக்க வேண்டுமென்று கொஞ்சமும் கூச்சநாச்சமோ மனித நேயமோ இன்றி உளறிக் கொண்டிருக்கிறார்கள்! குடி வைத்த வீட்டிலேயே கொள்ளி வைக்கத் தயங்காத இந்தக்கும்பலுக்கு அன்றும் இன்றும் காந்தியார் மீது ஏன் இத்தகைய வெறுப்பு என்பதற்கும் காரணம் இருக் கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல இதோ, ஒரு சான்று 1909இல் இந்தியன் ஒப்பீனியன் என்ற இதழில் காந்தியார் எழுதியிருப் பது:

திராவிட மொழிகளில் மிகச்சிறந்தது தமிழ்மொழி. அய்ரோப்பிய நாடுகளுக்கு லத்தீன் மொழி எப்படியோ, அதே போன்று இந்தியாவுக்குத் தமிழ் மொழி பழைமையானது ஆகும். எந்த வகையில் பார்த்தாலும் லண்டன் பல்கலைக்கழகத் தில் விருப்பப்பாடமாக ஏற்கத் தகுந்தது தமிழே ஆகும். அதுமட்டுமல்ல. இந்திய ஒருமைப்பாட்டிற்காக வடமாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ் மொழியைக் கற்க வேண்டும்!

இது பாக்யா இதழிலும் (4.10.2013) வெளியாகி இருக்கிறது.

இந்தியாவையே இந்துத்வா நாடாக்க வேண்டும். சமஸ்கிருதத்தைத் தேசிய மொழி ஆக்கவேண்டும். கீதையை தேசிய நூலாக்க வேண்டும். காஷ்மீரி லிருந்து கன்னியாகுமரிவரை பார்ப்ப னியப் பேரரசே தழைத்துச் செழிக்க வேண்டும் என்று துடிதுடித்துக் கொண் டிருப்போருக்கு காந்தியாரின் இந்தக் கருத்து பிடிக்குமா? பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பித்து, அடுத்தவர் உழைப்பை அட்டைபோல் உறிஞ்சி, தானும் தன் இனமும் மட்டுமே கொழுக்க வேண்டும் என்ற கெடு நினைப்பு கொண்டோருக்கு, காந்தியார் தமிழ்மொழியைப் புகழு வதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? அதனால்தான் அவர்களுக்கே உரித் தான அந்த சிறுமைப் பண்பிலே இறங்கி இருக்கிறார்கள்.

அரசியல் பற்றியும், சமூகக் கருத்துக் கள் பற்றியும் சொல்லும்போது வர லாற்றுப் பிழைகள் இருக்கக்கூடாது. ஆனால் பார்ப்பனியமோ புராணப் புளுகுகளை எல்லாம் வரலாறு என புளுகும். தமிழகவரலாற்றுச் செய்தி களையே ஊடகங்களைத் துணை கொண்டும், பணபலம், அதிகாரபலம் கொண்டும் அப்படியே புரட்டிப்போட்டு விடும்! தமிழர் தனது உழைப்பால் உயர்ந்தால் கூட, அதற்குப் பொறுக்காது. உடனே ஏதாவதொரு பழி சுமத்தி ஒழித்துவிடத்துடிக்கும்!
இதனைத் தமிழினம் புரிந்து கொண் டால், தன்னலத் தலைவர்களைக் கொண்ட இத்தனை அரசியல் கட்சிகள் முளைத்திருக்காது. கோட்டையிலே பார்ப்பனக்கொடி பறந்திருக்காது!

இனியேனும் ஒற்றுமையின் அவசி யத்தை தமிழ் மக்களின் நலன் கருதி உணர்வார்களா தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள்?

செல்லும் பாதை.. அய்யா தந்த பகுத்தறிவுப் பாதையாக இருக்கும்போது மெல்ல ஓடினாலும் அது வெற்றியிலே தான் முடியும்! இது வரலாறு!! ஆம் சிறப்பான தமிழினத்தின் நல்வாழ்வுக்கு அய்யா, நமக்களித்த சிந்தனையே மூலதனம்!

பகுத்தறிவுச் சிந்தனையால், பார்ப் பனியத்தை வெல்வோம்! அய்யாவின் அறிவுப்படை என்றுமே தோற்றதில்லை!! இதுவும் கடந்த கால வரலாறே!

- நெய்வேலி க.தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...

தஞ்சைப் பொதுக் குழுவில் கழகத் தோழர்கள் காட்டிய மகத்தான அன்பு - யான் பெற்ற பெரும் பேறு!

இலட்சியப் போரில் வெற்றி பெற போராட்ட வீரர்களின் பட்டியல் தொடரட்டும்!

பொதுக் குழுவை சிறப்பாக நடத்திய தஞ்சை மாவட்ட தோழர்களுக்குப் பாராட்டு!

கழகத் தலைவர் ஆசிரியர் விடுக்கும் அறிக்கை




தஞ்சாவூரில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு குறித்தும்,  கொள்கைக் குடும்பத்தினர் காட்டிய அன்பால், தாம் அடைந்த மகிழ்ச்சிப் பேறு பற்றியும் - எந்தப் பணியைக் கொடுத்தாலும் முகம் சுளிக்காது பெரும் சிறப்புடன் நிகழ்ச்சியை நடத்திக் காட்டும் தஞ்சை மாவட்ட கழகத் தோழர்களின் செயல் திறன் குறித்தும் பாராட்டி அடுத்து நாம் சந்திக்க இருக்கும் இலட்சியப் போராட்டங்களில் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கும் போராட்ட வீரர்தம் பட்டியலின் அவசியம் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

13.6.2015 சனிக்கிழமை தஞ்சையில் சுமார்  ஆயிரம் (1000) கழகத் தோழர்கள் - தோழியர் களைக் கொண்ட கழகத்தின் கொள்கைக் குடும்பப் பொறுப்பாளர்களை - 40 நாள்கள் இடைவெளியில் சென்னை மருத்துவமனையிலிருந்து திரும்பி பணியாற்ற பக்குவமாகித் திரும்பிய நான், சந்தித்தபோது அடைந்த எல்லையற்ற கொள்ளை மகிழ்ச்சியை அளக்கத்தான் அளவுகோல் ஏது?

அதேபோல், எம்மைச் சந்தித்த கழகக் குடும்பத்தவரின் மகிழ்ச்சிக் கண்ணீர் அருவியில் குளிக்கத் தள்ளி விட்டனர்!

கொள்கை வாழ்வில் கிடைக்கும் அரும் பேறு! கொள்கை வாழ்வில் கிடைக்கும் அரும் பேறு இது! இதற்கு பட்டமோ, பதவியோ, பணமோ ஒரு போதும் ஈடாகாது!
எனது உணர்ச்சிகளை - அவர்கள் காட்டிய அன்பெனும் வெள்ளத்தில் மிதக்க விட்டேன் என்றாலும் அதை வெளியே தெரியாத அடி நீரோட்டமாகவே அமைத்து விட்டேன்.

நம் அறிவு ஆசானையும், அவரைத் தொடர்ந்து நம்மை வழி நடத்திய அன்னையாரையும் என்றென்றும் தலைவர்களாக ஏற்று, பதவி நாடா, சுகம் தேடா, மானம் பாரா நன்றியை எதிர்பாரா  எதிர் நீச்சல் - போராட்ட களம் என்ற தன்னலமற்ற தியாக வாழ்வு - இவைகளையே தங்களது தனித் தன்மையாகக் கொண்ட இயக்கத் தளபதிகள், தளர்ச்சி தலை காட்டாத செயல் வீரர் - வீராங்கனைகளின் பாசறைச் சந்திப்பாக அச்சந்திப்பு - இரு வழிப் பாதையாக அமைந்தது எனக்கு அருமருந்து, அதிக வேக நடைகுன்றா உற்சாக ஊற்று ஆகும்!
தஞ்சைத் தோழர்களின் செயல் திறன்

தஞ்சைக் கழகப் பொறுப்பாளர்கள் எப்போது தலைமை சொன்னாலும், ஓ செய்து முடித்து விடுகிறோம் அதிலென்ன அட்டி? என்று முகம் சுளிக்காது, அகம் மலர சாதனையாளராகக் கொண் டவர்கள் - அவர்களுக்கு வழிகாட்ட 91 வயது இளைஞர் நம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அய்யா ராஜகிரி கோ. தங்கராசு அவர்கள்!

கமிட்டியும், மாலைப் பொதுக் கூட்டமும் மிகவும் அருமையான ஏற்பாடுகளாலும், அவர்தம் அயராத உழைப்பினாலும், மாபெரும் வெற்றியாக அமைந்தன.

வழக்கம் போன்று ஊடகங்களில் பல, நம் நிகழ்வை இருட்டடித்து, தங்கள் தனித்துவத்தை நிலை நாட்டின.

எதிரிகளின் எதிர்ப்பு என்ற உரம்!

நாளும் பல்லாயிரக்கணக்கில் மக்களைச் சந்திக்கும் இயக்கம் நம் இயக்கம். இது ஒன்றும் காசு கொடுத்து மற்றும் கொடுக்கக் கூடாதவைகளைக் கொடுத்து ஆள் பிடித்து அடைத்து பெருங் கூட்டம் என்று காட்டும் கட்சிகளின் வரிசையில் உள்ள இயக்கம் அல்ல. 250 மாநாடுகள் - இன்னும்  தொடரும் மாநாடுகள் என்ற கொள்கை உறுதியுடன் தனித்துவ முடிவுகளை, தக்க நேரத்தில் எடுத்து தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கு நம் இயக்கம்!

நம் எதிரிகள் எப்போதும், எதிர்ப்பு என்ற உரமிட்டு வளர்க்கத் தவறாத வாய்ப்புள்ள இயக்கம் நமது என்பதை எவரே மறுப்பர்?

பெரியார் என்ற தத்துவம் தந்த தலைவர் இன்று உலகமயமாகி, அதனை வழி நடத்தும் சமூக விஞ்ஞானியாக வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலை இத்தனை ஆண்டு உழைப்பிற்குக் கிடைத்த மகத்தான வெற்றி!

உள்ளூர் தொடங்கி, உலக நாடுகள் வரை கல்வி மூலமாகவும், கழகச் செயற்பாடுகள் வாயிலாகவும் பெரியார் என்பது ஒரு சகாப்தம், கால கட்டம், திருப்பம் என்று அறிஞர் அண்ணா தீட்டிய ஓவியம் - என்றும் உயிர் ஓவியமாக ஒளி பொருந்திய இலக்கியமாக உள்ளது.

போராட்ட வீரர்களின் பட்டியல் தொடரட்டும்!

எனவே, இருட்டடிப்பு, எதிர்ப்பு மலை, ஏகடியப் பேச்சு இவைகளை அலட்சியப்படுத்தி சிறைச் சாலை நோக்கிச் சென்று, அதை வாசமாகக் கொள்ளத் தேவைப்படின் நாங்கள் என்றும் தயார் என்று தந்தப் பட்டியல் தொடரட்டும்! அதுவே இயக்க ஆரோக்கிய காப்பீடு - மறவாதீர்!

நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்கள் அன்பின் அடிமை

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

ஐ-ஐயர்



ஒரு காலத்தில் நமது பாடத் திட்டத்தில் இவ்வாறு இருந்தது.

இவன் உழவன் - ஏர் உழுகிறான், இவன் தச்சன் - மரம் அறுக்கிறான், இவன் வண்ணான் - துணி துவைக்கிறான், இவன் அம் பட்டன் - சவரம் செய்கிறான், இவன் குயவன் - மண் பாண்டம் செய்கிறான், இவர் அய்யர் - பாடம் படிக்கிறார் என்று பாடத் திட்டங்களில் இருந்தது இறந்த காலம் என்று எண்ணி மகிழ வேண்டாம்.

இதோ சேலத்தில் ஒரு தனியார் புத்தக நிறுவனம் (Shabari Book House) வெளியிட்டுள்ள புத்தகத்தில் உயிர் எழுத்துகள் ஐ - ஐயர் என்று வெளியிட்டுள்ளது. இதுவரை ஐ - ஐவர் என்று தான் இருந்து வந்திருக்கிறது.

இந்தத் திடீர் மாற்றத் திற்கு என்ன காரணம் என் பதைவிட இந்தத் தைரியத் துக்கு என்ன பின்னணி என்று கேள்வியை மாற்றிக் கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

1937இல் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் சென்னை மாநில பிரதமராக இருந்தபோது ஆசாரியார்கள் ஆச்சாரியார் என்று போடக் கூடாது என்று ஆணை பிறப்பித்ததுண்டு.

காலம் மாறி விட்டது; பழையன கழிந்துஓடி விட் டன. இப்பொழுதெல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள்? பிராமணர்கள்கூட மாறித் தான் இருக்கிறார்கள்; என் நண்பன் முனியாண்டி ஓட் டலில் என்னோடு தினமும் சாப்பிடுகிறான் என்று சொல் லும் விரிந்த (?) மனப் பான்மை கொண்ட மெத்தப் படித்த மேதாவிகள் நம் மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

தினமணியையும் தின மலரையும் துக்ளக்கையும் தொடர்ந்து படித்து வந்தால் அதில் துள்ளும் பூணூல் வக்கிரத்தைத் தெரிந்து கொள்ள முடியும். தொலைக் காட்சிகளில் அரட்டைக் கச்சேரி நடத்தும் பிஜேபி பார்ப்பனர்களின் தடித்த வார்த்தைகளைக் கேட்கும் போதும் புரியும்.

தமிழில் பெயர் சூட்டிக் கொள்ளும் ஒரே ஒரு பார்ப்பனரைக் காட்டுவதுகூட கடினம்தான். ஒரே ஒரு பரிதிமாற் கலைஞரைத் தவிர (இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி) வேறு ஒருவரைச் சுட்டிக் காட்ட முடிய வில்லையே!

கோயிலுக்குள் தமிழில் வழிபாடு என்றால் விட் டேனா பார் என்று எகிறிக் குதித்து உச்சநீதிமன்றத்தின் கதவில் போய் முட்டு கிறார்களே..

ஐ - ஐயர் என்றால் நீங்கள் எண்ணுவதுபோல பார்ப்பனரையல்ல - பெரி யோர், பெருமையிற் சிறந்தவர், பாதிரிமார் பட்டப் பெயர் என்று தப்பிக்க முடியாது; காரணம் ஒரு ஐயர் படத்தையும் போட்டு பச்சையாக ஜாதி உணர் வைக் காட்டி விட்டனரே!

தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போட்டுக் கொள்வதற்கு வெட்கப்படும்படிச் செய்தார் தந்தை பெரியார். மீண்டும் தலை தூக்கப் பார்க்கிறது;

மத்தியில் மதவாத ஆட்சியும், மாநிலத்தில் அதற்குத் துணை போகும் ஆட்சியும் இருப்பதுதான் இதற்குக் காரணம் போலும்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

காலந்தோறும் மனித குலத்துக்குத்
தேவைப்படும் மாமருந்து தந்தை பெரியார்

பார்வர்டு பிரஸ் இதழைச் சுட்டிக் காட்டி முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெருமிதம்



சென்னை, ஜூன் 16- டில்லியிலிருந்து வெளி வரும் பார்வேர்டு பிரஸ் இந்தி - ஆங்கில இதழில் வெளிவந்த கட்டுரையைச் சுட்டிக் காட்டி (விடுதலை ஏட்டில் வெளிவந்துள் ளதைச் சுட்டிக் காட்டி!) தந்தை பெரியார் காலஞ் தோறும் மனித குலத் துக்குத் தேவைப்படும் மாமருத்து என்று கலைஞர் எழுதியுள் ளார். இன்றைய (16.6.2015) முரசொலி யில் அவர் எழுதியுள்ளதாவது:

கேள்வி :- தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கள் பற்றி, டெல்லி யிலிருந்து வெளிவரும் "பார்வர்டு பிரஸ்"  என்ற மாதம் இருமுறை இதழ் மிகச் சிறப்பாக எழுதியதோடு,  அந்தக் கருத்துக்கள் இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டு மென்றும் வலியுறுத்தியிருக்கிறதே?

கலைஞர் :- அந்த இதழில் பெரியார் பற்றி  கூறியிருந்ததை, "விடுதலை" நாளேட்டில் முழு வதுமாக மொழி யாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.  அதில் ஆதிக்கச் சாதியினரின் சர்வாதிகாரத்தைச் சாமானிய மக்களிடம் விளக்கி   மகத்தான வெற்றி பெற்ற மாபெரும் புரட்சியாளர்  தந்தை பெரியார் என்றும், அவருடைய கருத் துக்கள் இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவை என்றும், அந்தக் கருத்துக்களை இந்தியா முழுமைக்கும்  கொண்டு செல்ல வேண்டுமென்றும் எழுதியிருக் கிறது.  பெரியார் போன்ற தலைவர்களின் கருத்துக் களால்தான் இந்தியா இன்று சமூக நீதிக் களத்தில் முன்னேற்றம் பெற்று வீர நடைபோடுகிறது. தற்போது இந்துத்துவாக் கொள்கை களைப் போற்றும் ஆட்சியாளர்களால் சமூக நீதிக்குச் சிறிது பின்னடைவு ஏற்படத் துவங்கியுள்ளது. இந்தக் கால கட்டத்தில்  பெரியாரின் கருத்துக் களுக்கு மீண்டும் உயிரூட்டம் கொடுத்து இந்தியா முழுவதும் கொண்டு செல்லக் கடமைப்பட்டுள் ளோம் என்றெல்லாம் அந்த இதழில் செய்தி வந்துள்ளது.   காலந் தோறும்  பெரியார்,  மனித குலத்துக்குத் தேவைப்படும்  மாமருந்து என்பது அசைக்க முடியாத உண்மை!

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தியின் சாதனையை பாரீர்!

குமரி மாவட்டத்தில் கோவில் உண்டியலை உடைத்துப் பணம் கொள்ளை கன்னியா குமரி மாவட்டம் திருவட் டார் அருகே காங்கரை என்னும் ஊரில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு கோவில் நிர்வாகிகள் நேற்று காலை சென்ற போது அந்த கோவிலில் உள்ள உண்டியல் உடைக் கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டுப் போய் இருந்தது  தெரிய வந்தது. உடைக்கப்பட்ட உண்டி யலில் பணத்தை திருடி விட்டு அந்த உண்டியலை திருடர்கள் அருகில் உள்ள ரப்பர் தோட்டத் தில் வீசி விட்டு சென் றுள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகி திரு வட்டார் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். தனது உண்டியலையே பாதுகாக்க இயலாத வக்கற்ற அந்த கடவுள் பொம்மை பக்தர்களைப் பாதுகாக்க போகிறது.  இயேசுவின் சக்தியும் சந்தி சிரிக்கிறது

கன்னியாகுமரி மாவட் டம்  தக்கலை அருகே உள்ள கடமலைக்குன்று பகுதியில் உள்ள சி.  எஸ்.  அய்.  தேவாலயத்திற்கு வழிபாட்டுக்கு நேற்று மக்கள் வந்தனர்.  அப் போது ஆலயத்தின் ஒரு பக்க கதவு உடைக்கப் பட்டு ஆலயத்தில் உள்ள பொருட்களும் மாயமாகி இருந்தன. இது பற்றி ஆலய நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட் டது. ஆலய நிர்வாகிகள் வந்து உள்ளே சென்று பார்த்த போது உள்ளே இருந்த ரூபாய் 8 ஆயிரம் பணம்,  மற்றும் ஆலயப் பொருட்களும் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

கர்த்தருக்கு சக்தி இருந் தால் இந்த பணத்தை பறி கொடுத்திருப்பாரா?

தமிழ் ஓவியா said...

ராமர் கோவில் கட்டுவதை தடுத்தால் மசூதிகள் கோயில்களாக மாறுமாம்

மதக் கலவரத்தைத் தூண்டுகிறார் வி.எச்.பி. தலைவர்

புதுடில்லி, ஜூன் 16_ அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தடுத் தால் அனைத்து மசூதி களும் கோயில்களாக மாறும் என விஷ்வ இந்து பர்ஷத் தலைவர் அசோக் சிங்கால் எச்சரிக்கை விடுத் திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது ராம ரின் விருப்பம் என்றார். இதனை யாரால் எதிர்க்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர் ராமர் கோவில் கட்டுவது குறித்து முடிவு எடுக்கவிடாமல் தடுத்தால் அனைத்து மசூதிகளும் கோயில் களாக மாறும் என்றார். பாஜக ஆட்சியிலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என அக்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ் அண்மையில் கூறியிருந்தார். இல்லையெல் ராமர் கோவில் கட்டுவதை தடுத் தால் அனைத்து மசூதி களும் கோவில்களாக அசோக் சிங்கால் கூறியி ருப்பது சர்ச்சையை ஏற் படுத்தி உள்ளது.

தமிழ் ஓவியா said...

இல்லவே இல்லை!

எல்லா மதக்காரர்களும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, ஒரு முடிகூட உதிராது என்று கூறுகிறார்கள். அது வெறும் வேஷம் ஆகும். அவன் அவன் முடியை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், நாவிதனிடம்தான் போகின்றான்! எனவே, 370 கோடி மக்க ளில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை.
_ (விடுதலை, 26.4.1972)

தமிழ் ஓவியா said...

சமைப்பது மட்டுமே பெண்களின் வேலையா?

தடைகளும் சோதனைகளும்தான் ஒரு மனிதனை முன்னுக்குக் கொண்டுவரும் முக்கியப் படிக்கட்டுகள் என்பதை உணர்த்துகிறது சந்திராவின் வாழ்க்கை.

காரைக்குடியைச் சேர்ந்த சந்திரா, கைவினைக் கலைஞர், கராத்தே பயிற்சியாளர், ஒப்பனைக் கலை நிபுணர், செல்போன் பழுது நீக்குபவர் எனப் பன்முகம் காட்டுகிறார். இவர் இந்த உயரத்துக்கு வரக் கடந்துவந்த பாதை கரடுமுரடானது, வலிகள் நிறைந்தவை. இவருடைய அம்மா ராமு, பிரசவத்தின் போது மகளின் முகத்தைக்கூடப் பார்க்காமல் கண்ணை மூடிவிட்டார்.

மகள் மீது அந்தச் சோகம் படராமல் வளர்த்தார் அப்பா சேது ராமன். ஆனால், சந்திராவுக்கு 12 வயதிருக்கும்போது அப்பாவும் ஒரு விபத்தில் உயிரிழக்க, துவண்டு போனார் சந்திரா.

அப்பாவையும் பறிகொடுத்துட்டு அந்தச் சின்ன வயசுல அடுத்த வேளைக்கு எங்க போறதுன்னு தெரியாம நின்னேன். அப்பச் சித்தியும் மாமாவும் எனக்கு ஆறுதலா இருந்தாங்க. இங்க கொஞ்ச நாள் அங்கக் கொஞ்ச நாள்னு ரெண்டு பேர் வீட்டுலயும் நாட்களை ஓட்டினேன்.

அப்பவே, எப்படியாவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து சொந்தக் காலில் நிக்கணும்னு எனக்குள்ள ஒரு வைராக்கியம் இருந்துச்சு. கஷ்டப்பட்டுப் பி.பி.ஏ. வரைக்கும் படிச்சேன். கூடவே தனித் திறமைகளையும் வளர்த்துக்கிட்டேன். போலீஸ், இல்லாட்டி ராணுவத்துல சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்யணும்ங்கிறது என்னோட விருப்பம்.

அதுக்குத் தற்காப்பு கலை அவசியம். எங்க மாமா கராத்தே மாஸ்டரா இருந்ததால அதுவும் எனக்கு எளிதில் சாத்தியமாச்சு என்று தான் கடந்து வந்த பாதையை விவரிக்கிறார் சந்திரா. கராத்தேயில் மூன்று பிளாக் பெல்ட் வாங்கியிருக்கும் சந்திரா, அய்ந்து முறை தேசியச் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார். 2006இல் இவருக்குக் காவல்துறையில் வேலை கிடைத்தது. ஆனால், இவரது லட்சியம் பெரிதாக இருந்தாலும் காவல்துறை கனவு நிறைவேறவில்லை.

அதற்காக வீட்டுக்குள் முடங்கிவிடாமல், கிராஃப்ட், ஃபேஷன் டிசைனிங் படிப்புகளில் சேர்ந்து அவற்றையும் கற்றுக் கொண்டார். செல்போன் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் தொழில்நுட்பமும் படித்திருக்கும் இவர், செல்போன் சர்வீஸ் செய்துகொண்டே பியூட்டி பார்லரில் பயிற்சியாளராகவும் இருக்கிறார். காலை, மாலை வேளைகளில் கராத்தே வகுப்புகளையும் நடத்துகிறார்.

இவை அனைத்தும்தான் இப்போது சந்திராவைத் தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாகத் தலை நிமிர்ந்து நடக்கவைத்திருக்கின்றன. அரசுப் பள்ளி தையல் ஆசிரியர் பணிக்கும் சமீபத்தில் தேர்வாகியிருக்கிறார். முதலில் என்னை நான் ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்க முடியும். அதைத்தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன்.

சமைத்துப் போடுவது மட்டுமே பெண்களின் வேலை இல்லை. அந்தக் குறுகிய வட்டத்தைத் தாண்டி ஆண்களுக்கு நிகராகப் பெண்களாலும் அனைத்துத் துறைகளிலும் கோலோச்ச முடியும். திறமை இருந்தால் படிக்காவிட்டாலும் சாதிக்க முடியும். அதற்கேற்ப பெண்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

அப்படி, பெண்கள் தங்களை அனைத்து விதத்திலும் தயார்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சி மய்யத்தை மதுரையில் தொடங்கப் போகிறேன். அங்கு வரும் பெண்கள் பயிற்சி முடித்ததும் தன்னம்பிக்கை உடையவர்களாக வெளியில் வருவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சந்திரா.

தமிழ் ஓவியா said...

உள்ளூரிலிருந்து உலகச் சந்தைக்கு!

வெளிநாட்டுப் பயணிகளுடன் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் அந்தக் கிராமத்துப் பெண்களைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. நம் எண்ணத்தைப் புரிந்து கொண்டவர்கள் போல, நாங்க கிராமத்துல பிறந்திருந்தாலும் நாங்கள் தயாரிக்கிற பொருட்கள் வெளிநாடு களுக்குப் போவதால் ஆங்கிலத்தையும் கத்துக்கிட்டோம் என்கிறார்கள்.

புதுச்சேரி அருகே உள்ளது சர்வதேச நகரம் ஆரோவில். காகிதத்திலிருந்து கலைப் பொருட்களை உருவாக்கி அசத்தி வருகின்றனர் கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்த மதர், அரவிந்தர், ஜெயம், எஸ்தர் மகளிர் குழுவினர். வழக்கமான வீட்டு வேலைகளைக் கவனித்துக் கெள்வதுடன் தங்களுக்கு ஏற்ற வருமானத்தையும் ஈட்டி வருகின்றனர்.

இவர்களின் விருப்ப மொழியே, நேற்றைய நாளிதழ் இன்றைய கலைப் பொருள் என்பதுதான். நாளிதழ்களில் இருந்து வண்ண வண்ணக் கலைப் பொருட்களைத் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறார்கள். நாளிதழ்களைக் கொண்டு வட்ட மற்றும் சதுர வடிவிலான கூடைகள், கிண்ணங்கள், காகித நகைகள் ஆகியவற்றைச் செய்கிறார்கள்.

பேக்கிங் செய்யப் பயன்படும் அட்டைகள், மாங்கொட்டைகள், தண்ணீர் பாட்டில்கள், தேவையில்லாத சிடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பலவிதப் பொம்மைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றையும் செய்கின்றனர்.

இப்படித் தயாராகும் காகிதக் கலைப் பொருட்கள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதே போல் சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி, கொல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலச் சந்தைகளிலும் இவர்களின் கலைப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு. ஆர்வமுள்ளவர்களுக்கு இங்கே குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு ஆரோவில்லுக்கு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டேனி-ஓர்லி இணையர் வந்தனர். ஆரேவில் கிராமச் செயல்வழிக் குழுவில் இருந்த எங்களுக்குப் பழைய பேப்பர்களைக் கொண்டு கூடைகள் செய்ய நான்கு மாதம் பயிற்சியளித்தனர்.

நாங்கள் தயார் செய்யும் கலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வெல் பேப்பர் என்ற நிறுவனத்தை உருவாக்கிக் கொடுத்ததுடன் இன்றும் துணையாக இருக்கின்றனர் என்கிறார்கள் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள்.

இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். தொடக்கத்தில் எட்டுப் பேராக இருந்த குழுவில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 25. குழுவுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.

நாங்கள் செய்யும் வேலைக்கு நாள் ஒன்றுக்குத் தலா ரூ. 180 ஒவ்வொருவருக்கும் தரப்படும். மீதமுள்ள தெகையை வங்கிக் கணக்கில் சேமிப்போம். எங்களுக்குள் முதலாளி, தொழிலாளி என்ற பேதம் கிடையாது.

அனைவரும் இங்கே சமம். வெல் பேப்பர் நிறுவனம் சார்பில் எங்கள் தனித்திறமையை உயர்த்திக்கொள்ளும் வகையில் ஆங்கிலம் பேசவும், யோகா செய்யவும் பயிற்சி தருகின்றனர் என்று சொல்லும் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், பழைய சேலைகளைக் கொண்டு புதுமையான கையடக்கப் பைகளைத் தயார்செய்ய முடிவெடுத்திருக் கிறார்களாம். இதுவும் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்கின்றனர் உற்சாகமாக.

தமிழ் ஓவியா said...

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?


ஊன்றிப் படித்து உண்மையை உணருக!

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

பகவன்

பகவான் என்று வடவர் சொல்லுகிறார்களே அதுதானாம் இது. இது கலப்பில்லாத முட்டாள்தனமான பேச்சு. பகல் என்பதும் பகவு என்பதும் ஒரே பொருளைய சொற்கள். பகல் என்பதில் பகு முதனிலை. பகவன் என்பதில் பகவு முதனிலை. பகல் என்பதற்கும் பகவு என்பதற்கும் நடுவுநிலை. அறிவு என்பன பொருள்கள்.

பகவு என்பதற்கு பாவேந்தர்கள் அன் இறுதிநிலை சேர்த்துப் பகவன் என்று சிறப்புறுத்துவார்கள். எனவே பகவு, பகவன் இவைகட்கு அறிவு, அறிவன் என்பன பொருள். பகவன் தூய தமிழ்ச்சொல். பகவன் வடசொல்லாம், அது திருவள்ளுவரின் தந்தையின் பெயராம். அந்த பகவனும் பார்ப்பனனாம். ஆதியும் பகவனும், புலைச்சியும் பார்ப்பனனுமாம். திருவள்ளுவர் பேரறிஞராகத் திகழக் காரணம் அவர் பகவன் என்னும் பார்ப்பனனுக்குப் பிறந்ததாகும். இப்படி அந்தப் பாவிகள் ஒரு கதை கட்டி விட்டிருக்கிறார்கள்.
(குயில், 24.6.58)

சலம்

ஜலம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறுவார்கள் கலகக்காரர்கள்.

சலம் என்பது காரணம் பற்றிவந்த தூய தமிழ்ச் சொல். சல, சல என்று இயங்குவது காரணமாக தண்ணீர் சலம் என்று பெயர் பெற்றது. இவ்வாறு மறைமலையடிகளும் கூறியருளினார். இதைப் பார்ப்பனர் ஜலம் என்கிறார்கள் அல்லவா? நாத்திருந்தாமை அவர் கொண்ட குற்றம். அதனால் சலம் அவர் மொழியாகிவிட்டது.
(குயில், 1.7.58)
உவமை

உவமை என்பது உபமானம் என்பதன் சிதைவாம். இவ்வாறு மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிபோடுவர் பார்ப்பனரும், அவர் அடியாரும். பொருள் நிலை உணர்வித்து உவப்புறச் செய்வது உவமை. உவத்தல், உவமை ஒரு பொருட் சொற்கள். தாமரை மலர் முகம் என்பதில் தாமரை மலர் உவமை முகம் உவமை ஏற்கும் பொருள். இவ்வாறு கூறாமல் முகம் என்று மட்டும் சொன்னால் முகம் என்ற பொருளின் நிலையை நன்கு உணரச் செய்ததாகாது என்பதை நோக்குக. உவப்புறச் செய்வது உவமை எனின் இச்சொல் காரணப் பெயராதலும் அறிக. எனவே, உவமை செந்தமிழ்ச் செல்வமே என்க.

அமிழ்து

இது குன்று, குன்றம் என அம் சாரியை பெற்றது போல், அமிழ்தம் என்றும் வரும். அன்றியும் அமுதம் அமுது என்றும் மருவி வழங்கும். இதை பார்ப்பனரும் அவர்களின் அடியார்க்கடியாரும் அம்ருதம் என்னும் வடசொற் சிதைவு என்று கதைப்பர். அது கான்றுமிழத் தக்கதோர் கதை என்க. அமிழ்து என்பது அமிழ்+து எனப்பிரியும். இதன் பொருள் மேலிருந்து அமிழ்கின்ற உணவு என்பது மழைக்குப் பெயர். அமிழ்+து வினைத்தொகை நிலைத் தொடர். அமிழ்து மழைக்குப் பெயர் என்பதென்ன? மழையானது வாழ்வார்க்குப் பயன்படும் வகையில், வளவயல் வறளாது உயிர் மருந்தாய்ப் பெய்யும் நிலையில் அமுது எனப்படும். மேலிருந்து அமிழும் உணவும் என்றும் இத்தொடரின் பொருள் கண்டு இன்புறுக. து_-உணவு. இதனாற்றான் வள்ளுவரும்,
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
என்று குறித்தார். எனவே அமிழ்து, அமிழ்தம், அமுதம், அமுது என்பன அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்க.

மழை என்று தோன்றிற்று. அன்று தோன்றிற்று அதன் பெயராகிய அமிழ்து என்பது. அதன்பின் அதாவது கிரேதாயுகத்தில் பாற்கடல் கடைந்ததில் வந்ததாக உள்ள பொய்க்கதையில் வந்துள்ளது அம்ருதம் என்ற சொல். இதனால் அமிழ்தை அம்ருதம் என்று எடுத்தாண்டனர் வடவர் என்று தெளிதல் வேண்டும்.

(குயில், 08.07.1958)

தமிழ் ஓவியா said...

நான் ஒரு நாத்திகன் - அய்ன்ஸ்டீன் அறிவிப்பு


நான் ஒரு நாத்திகன்

- அய்ன்ஸ்டீன் அறிவிப்பு

அறிவியல் மேதை, அய்ன்ஸ்டைன் ஒரு நாத்திகர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அவரது கடிதமே சான்றாவணம்!

இயற்பியல் அறிவியலாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கடவுள் மற்றும் மதம் பற்றிய அவரது கருத்துகளைப் பிரதிபலிக்கும் இரண்டு அரிய கடிதங்கள் அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்தன. இந்தக் கடிதம் இந்திய ரூபாய் மதிப்பில் 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை ஏலம் போகும் என்று தெரிகிறது.    இந்தக் கடிதங்களில் அய்ன்ஸ்டைனின் மனைவி மிலெவா மாரிக் மற்றும் அவரது மகன்களான ஹான்ஸ், எட்வார்ட் ஆகியோருக்கு 1949-ஆம் ஆண்டு அய்ன்ஸ்டைன் தனது கைப்பட எழுதிய கடிதமும் அடங்கும்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: தனது அணுப்பிளவுக் கொள்கை மற்றும் சார்பியல் கோட்பாடு குறித்தும், மற்றும் மதம் கடவுள் குறித்த தனது நிலைப்பாட்டையும் எழுதியுள்ளார். முக்கியமாக ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் மீண்டும் பதவிக்கு வருநிலை உள்ளதால் தான் ஜெர்மன் திரும்ப வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தக் கடிதம் குறித்து வரலாற்று ஆய்வாளர், மற்றும் புகழ்பெற்ற நபர்களின் கடிதங்களைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்துவரும் அமைப்பின் தலைவரான ஜோசப் மெடலினா கூறியதாவது,: அய்ன்ஸ் டைனின் புகழ்பெற்ற இக்கடிதங்கள் ஜூன் மாதம் 11-ஆம் தேதி ஏலத்திற்கு வரும், இந்தக் கடிதங்கள் அய்ன்ஸ்டைனின் கடவுள் குறித்த பார்வையைத் தெளிவாகக் கூறும் விதத்தில் உள்ளன. ஒரு தலைசிறந்த இயற்பியலாளர் கடவுள் குறித்த தனது பார்வையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும் 1945-ஆம் ஆண்டு கய் எச் ரானேர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில், நான் யூதனாக அறியப்பட்டாலும் நான் ஒரு நாத்திகனே என்று குறிப்பிட்டுள்ளார். நான்கு ஆண்டிற்குப் பிறகு மீண்டும் அவர் ரானேருக்கு எழுதிய கடிதத்தில் அவர் தான் ஒரு நாத்திகன் என்பதை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார்.

கடவுள் நம்பிக்கை என்பது குழந்தைத்தன-மானது, புரியாத வயதில் எளிதில் எதையும் நம்புவது போன்றது,  ஆனால் நாத்திகம் என்பது தெளிவான ஒரு மனநிலையில் எந்த ஒரு செயலையும் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுப்ப-தாகும், இங்கு நான் ஒரு கடவுள் மறுப்பாளராகவே இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.

அய்ன்ஸ்டைன் தனது இளைய மகன் ஹன்ஸ்ற்கு எழுதிய கடிதத்தில் அணு குண்டு பற்றியும் அது ஹிரோஷிமா, நாகாசாகி போன்ற நகரங்களில் ஏற்படுத்திய பேரழிவு பற்றியும் குறிப்பிட்டு தனது சார்பியல் கோட்பாட்டை அதனுடன் இணைத்துத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். மற்றொரு கடித்தில் அவர் நாஜிக்களின் மோசமான நடவடிக்கையால் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு இடம் பெயர வேண்டியிருந்தது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் ஜெர்மனியில் வாழும் யூதர்கள் பற்றியும், யூதக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் தனது கடிதத்தில் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். 1933-ஆம் ஆண்டு ஜெர்மன் குடியுரிமை தொடர்பாக தனது மகனுக்கு எழுதிய கடிதம் மற்றும்  மனைவிக்கு எழுதிய கடிதத்தில் தனது மகனின் திருமணம் மற்றும் தனது கண்டுபிடிப்புகள் குறித்த தனது மனநிலையை எழுதியுள்ளார். இந்தக் கடிதங்கள் அனைத்தும் ஏலத்திற்கு வரும்போது  அமெரிக்க டாலர் மதிப்பில் 15,000 முதல் 25,000 டாலர் வரை விலைபோகும் என்று தெரிகிறது.

தமிழ் ஓவியா said...

கலாச்சாரம் காக்கும் லட்சணம் இதுதானா?


மகனின் ஓரினச் சேர்க்கைக்கு ஆண் தேடும் பார்ப்பனத் தாய்!

கலாச்சாரம் காக்கும் லட்சணம் இதுதானா?

மும்பை மே 22_ மும்பையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக நடத்தப்படும் பத்திரிகை ஒன்றில் தனது மகனுக்காக தகுந்த மணமகன் வேண்டும் என்று ஒரு பார்ப்பனத்தாய் விளம்பரம் செய்துள்ளார்.

ஹரீஸ் அய்யர் என்ற 36 வயதுடைய மும்பை பார்ப்பனப் பையனுக்கு அவனுடைய இனத்தில் பெண் கிடைக்கவில்லை. நீண்ட நாள்களாக தேடிய பிறகு சலித்துப்போன அந்தப் பார்ப்பனத்தாய் தனது மகனுடன் கலந்து ஆலோசித்து ஒரு திடகாத்திரமான ஆணை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவனும் தலையை ஆட்டிவிட, உடனே இந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரே ஓரினச் சேர்க்கையாளருக்கான இதழில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

ஓரினச்சேர்க்கை மணமகன் தேவை; வயது 25 முதல் 40 வயதுவரை; எனது மகனின் தகுதி _  வளர்ப்புப் பிராணிப் பிரியர், சைவ உணவுப் பழக்கம் உள்ளவர். ஒரு தொண்டு நிறுவனத்தில் பணி யாற்றுகிறார். நல்ல சம்பாத்தியம், என்று குறிப்பிட்டு முக்கியமாக ஜாதிபற்றிக் கவலையில்லை என்று தெரிவித்திருக்கிறார். அந்த விளம்பரத்தில் மின்னஞ்சல் முகவரி குறிப்பிட்டு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டும் இருக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியான இந்த விளம்பரத்திற்கு இணையதளம் மூலம் ஆயிரக் கணக்கான விருப்ப மின்னஞ்சல் சென்றுள்ளதாம். பொதுவாக இந்தியாவில் தற்போது கலாச்சாரக் காவலர்கள் ஆட்சியில் இருக்கும்போது பூணூல் அணிந்த பார்ப்பானுக்கு அவனது தாயே ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அனுமதியளித்து இணையும் தேட ஆரம்பித்துவிட்டார். இந்தியாவில் இருந்தும் அயல் நாடுகளிலும் இருந்தும் நிறைய அழைப்புகள் வருவதாகவும், எனது மகன்தான் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்வான் என்றார். மேலும் திருமணம் முழுக்க முழுக்க இந்து முறைப்படி சாஸ்திர சாம்பிரதாயங் களுடன் நடைபெறும் என்றார்.

கலாச்சாரம் காக்கும் காவலர்களே!
இதற்கு என்னச் செய்யப் போகிறீர்கள்?

தமிழ் ஓவியா said...

புலிக்கறி சாப்பிட்ட புரட்சிக்கவிஞர்


அரிய செய்திகள் :

புலிக்கறி சாப்பிட்ட புரட்சிக்கவிஞர்!

குப்புறப்படுத்து மார்புக்குத் தலை-யணையைத் தாங்கலாக வைத்துக் கொண்டு எழுதும் வழக்கமுடையவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
(ஆதாரம்: பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் பக்கம் _ 18)

தமிழ் எழுத்தாளர் தமிழை நன்றாகக் கற்கவேண்டும். இன்றைய தமிழ் எழுத்தாளர் பலருக்குத் தமிழே தெரியாது. எழுத்தாளன் என்பவன் எப்போதும், எவருக்கும் அஞ்சாமல் தன் உள்ளத்தில் தோன்றும் கருத்தை வெளியிடும் துணிச்சல் பெற்றவராய் இருக்க வேண்டும்.
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

கறியை விடாதே. கறிதான் மனிதனுக்கு உணர்ச்சி வெறியை உண்டாக்குது. உணர்ச்சி வெறிதான் கவிஞனுக்கு வேண்டும். கடைசிவரை கறியை விடாதே. நான் அதுக்கு எடுத்துக்காட்டு... என்ன... சைவத்தை நம்பி நம்பி வீரஉணர்ச்சியே போயிடிச்சு!
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இலையில் பரிமாறப்பட்டிருந்த உப்புக் கண்டத்தைக் காட்டி இது என்ன உப்புக் கண்டம்? சொல்லு பார்க்கலாம் என்றார் பாவேந்தர். நான் அதைச் சுவைத்துப் பார்த்தபோது அது ஆட்டுக்கறியாகத் தெரியவில்லை. சுவை மாறுபட்டிருந்ததால் மான் கறியாக இருக்கும் என்று நினைத்து மான்கறியா? என்றேன். உடனே பாவேந்தர், இல்லை. புலிக்கறி என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

என்ன புலியா? புலிக்கறி எப்படிக் கிடைக்கிறது? என்றேன்.

புதுக்கோட்டை அரசருக்கு வேண்டிய ஒரு நடிக நண்பர் எனக்கு அடிக்கடி அனுப்புவார். சாப்பிடு! என்றார்.
- கவிஞர் முருகு.சுந்தரம்

* * *

தப்பெனில் ஒப்பும் தலைமைப் பண்பினர்

கனியிடை ஏறிய சுவையும் _ முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் _ காய்ச்சுப்
பாகிடை ஏறிய ருசியும்
என்ற புரட்சிக்கவிஞரின் பாடலைப் படித்த தமிழ் மறவர் பொன்னம்பலனார், புரட்சிக்-கவிஞரிடம் இதிலுள்ள ருசி என்னும் வடசொல்லை நீக்கி சுவை என்று அழகு தமிழில் சொல்லலாமே என்றார்.

தவறு என்று அறிந்ததும் உடனே அதை ஏற்று அடுத்த பதிப்பில் சுவை என்று மாற்றம் செய்யச் சொன்னார் புரட்சிக்-கவிஞர். தவற்றை ஒப்பிக் களைதல்தானே தலைமைப் பண்பிற்கு அழகு! அது புரட்சிக்கவிஞரின் முரட்டு உள்ளத்திற்குள் அழகுறக் குடிகொண்டிருந்ததை நம்மால் இதன் வழி அறிய முடிகிறது. அது மட்டுமல்ல அதன்பின் வடசொல் கலப்பின்றி எழுத முற்பட்டார், எழுதினார்.

* * *

தமிழாசிரியர்களின் சம்பளத்தை ரூ.45/_லிருந்து ரூ.75/_ஆக உயர்த்த அரசுக்குப் பரிந்துரை செய்து உயர்த்தச் செய்தவர் பொன்னம்பலனார்.

தியாகராய நகர் இராமன் தெருவில் பாவேந்தர் வாழ்ந்தபோது, ஆனந்த-விகடனில் பாரதியாரைப் பற்றி எழுதும்படி திரு.எஸ்.எஸ்.வாசனே நேரில் வந்து கேட்டுக்கொள்ள, அதற்கு இணங்கிய பாவேந்தர் ஒரு கட்டுரை அனுப்பினார். அதன்பின் எழுத-வில்லை, நிறுத்திவிட்டார். ஏன் மறந்துவிட்டீர்கள் என்று கேட்ட-போது, முகத்தைச் சுளித்தார். பதில் எதுவும் சொல்லவில்லை.

கவிஞர் தாகூரிடம் ஒரு வினோத பழக்கம் உண்டு. அவருடைய கையெழுத்துப் படியில் மை சிந்திவிட்டால் அல்லது எழுத்தில் பிழை ஏற்பட்டுவிட்டால் அதை ஓர் ஓவியமாக மாற்றிவிடுவார். அதேபோல், தன் கையெழுத்துப் படியில் மை சிந்தினால் அதைப் பூவாக மாற்றும் பழக்கம் பாவேந்தருக்கும் உண்டு.

தாம் கதை வசனம் எழுதிய வளையாபதி திரைப்படத்தில் சில வரிகளை மாற்றிவிட்டார்கள் என்பதற்காக, மார்டன் தியேட்டர்ஸாரின் ரூ.40,000/_ ஒப்பந்தத்தைத் தூக்கி எறிந்துவிட்டு வந்த சுயமரியாதைக்-காரர் புரட்சிக்-கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.

தமிழ் ஓவியா said...

நூல் மதிப்புரை


எம்.எஸ்.எஸ்.பாண்டியன் காலச்சுவடு கட்டுரைகள்

மறைந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் (1958_2014) அவர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு எம்.எஸ்.எஸ். பாண்டியன்  பெயரில் வெளியிட்டுள்ளன.

இப்புத்தகத்திலுள்ள மூன்று கட்டுரைகளும் வெவ்வேறு காலக்கட்டத்தில் வந்திருப்பினும் ஒன்றோடொன்று கருத்துரீதியாக தொடர்புடையவையாக உள்ளன.
தேசியத்தை பழமையிலிருந்து விடுவித்து எதிர்காலத்தில் நிலைகொள்ள பகுத்தறிவு, அறிவியல், மனித விடுதலை, போராட்டம் மூலம் முன்னேற்றம் தேவை என்று பெரியார் வழிகாட்டியதாகக் கூறுகிறார்.

மனிதனின் பிறப்புரிமையான சுதந்திரத்தைப் பெற சுயமரியாதை ஒன்றே வழி என்பதே பெரியாரின் கருத்து என்று எழுதிய திரு.  பாண்டியன் அவர்கள், அடித்தட்டு மக்கள் பகுத்தறிவு, அறிவியல் ஆகியவற்றின் மூலமே சுயமரியாதையையும் அதன்மூலம் அரசியல் முகமையையும் பெற முடியும் என்று பெரியார் அவர்கள் கருதியதாகவும் கூறியுள்ள நிலையில், பாண்டியன் அவர்களின் எழுத்துகள் பன்மைப் புலம் சார்ந்ததாகவும், பெரியார் அவர்கள் நிலைகொண்ட திராவிட அரசியல் ஆதரவு என்பதாகவும் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

புத்தகத்திலுள்ள அய்ந்து கட்டுரைகளுமே எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்களின் அறிவுக் கூர்மையையும், துணிச்சலையும் எடுத்துக் காட்டுகிறது. அறிவை வளர்த்துக்கொள்ள விழைவோருக்கு இந்த நூல் சிறப்பு விருந்து என்று கூறினால் தவறில்லை.

வெளியீடு :

காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்,
669, கே.பி.சாலை, நாகர்கோவில்-629001.
பக்கங்கள்: 95, விலை: 75/-

தமிழ் ஓவியா said...

பெரியாரைத் தோற்கடிக்க முடியாது!


கேள்வி: சமீபகாலமாக, தமிழகத்தில் ஜாதி அமைப்புகள் வலுவடைந்து வருகின்றன. மதவாத சக்திகளும் இவற்றை ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அரை நூற்றாண்டுக்கு மேலாக ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த பெரியாரின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றனவே?

பதில்: பெரியார் தோற்றுப்போகவில்லை என்பது மட்டுமல்ல, பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால், அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர். அவர் மனிதகுலத்தின் விடுதலைக்கு இந்தியாவின் தென்பகுதியில் முதல் நிபந்தனையாக முன்வைத்தது ஜாதி ஒழிப்பு என்பதைத்தான். எனவே, அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று சொல்லமுடியுமே தவிர, தமிழர்களின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்லமுடியாது. அந்த விடுதலைக்கான வழியாக அவர் ஜாதி ஒழிப்பை முன்வைத்தார். கடவுள் ஒழிப்பு, மத ஒழிப்பு அல்ல, ஜாதி ஒழிப்புதான். ஜாதி புகல்கிற கோவில்கள், ஜாதி புகல்கிற இலக்கியங்கள், ஜாதி புகல்கிற மொழி என்று அவர் அதை முன்வைத்தார்.

ஜாதிக்கு அங்கீகாரம் தருகிற எல்லாவற்றுக்கும் அவர் அங்கீகாரம் தர மறுத்தார். பெரியாரைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்குக் காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான். நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டதால்தான் பெரியாரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. ஊழல், அரசியல் ஒழுக்கமின்மை காரணமாக, பெரியாரை திராவிடக் கட்சிகளால் முன்வைக்க முடியவில்லை. பெரியாரை, சமூகத்திடம் கொண்டு செல்வதற்கான திறனை அவர்கள் இழந்துவிட்டார்கள்.

- பேராசிரியர் தொ.பரமசிவன்

நன்றி: தி இந்து தமிழ், 17.5.2015

தமிழ் ஓவியா said...

முரண்பாடுகளின் மொத்தமே மத நம்பிக்கைகள்!

மதம், மத நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள் ஆகியவற்றின் பெயரால் மனிதன் தன்னுடைய அறிவை இழக்கிறான். மதத்தைப் பின்பற்றுவோர் முற்றிலும் முரண்பாடுகளைக் கொண்டிருப்பதை இங்கே உள்ள படங்கள் காட்டுகின்றன.

அர்ச்சகர்களுக்கும், மூட நம்பிக்கை மற்றும் சடங்குகளுக்கும் பணத்தை மக்கள் கொடுக்கின்றனர். அதேநேரத்தில், பெற்றோருக்கு உணவளிக்க, கவனிக்க மறுக்கிறார்கள். இறந்தபின் திதி கொடுக்கிறார்கள்!

கர்நாடகாவில் பொங்கல் விழாக் கொண்டாட்டத்தில் எருதுகளைத் தீயில் புகுந்து விரட்டுகிறார்கள். அதேநேரத்தில் பசுவைப் புனிதம் என்பார்கள். மாட்டிறைச்சியை உண்பவர்கள்மீது ஆத்திரப்படுவார்கள். வழிபாடு என்பதன் பெயரால் விலங்குகளைக் கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள். அனுமனுக்குக்கூட பான் அட்டை கொடுக்கும் அவல நிலை. தேவி சரசுவதி பெயரில் முகநூல். அதேநேரத்தில் மேற்கத்தியக் கலாச்சாரம் என்று எதிர்ப்பு, விமர்சனம் செய்கிறார்கள்!

பன்னாட்டளவில் ஒவ்வொரு 3.6 வினாடிகளிலும் பட்டினியால் வதைபடுகிறார்கள் என்கின்ற நிலையில், லட்சக்கணக்கில் குழந்தைகளுக்கு பாலில்லை. ஆனால், கல் கடவுளுக்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம். இதில் யாருக்கு முக்கியத்துவம்? சாப்பிட முடியாத கடவுளுக்கா? சாப்பிட முடிந்த மனிதனுக்கா?

சிந்திக்க வேண்டாமா? முரண்பாடுகளின் மொத்த உருவம்தானே மதம், மத நம்பிக்கைகள்.

 

50 ஆயிரம் செலவில் விநாயகர் சிலை ஆயிரக்கணக்கில் அதற்குப் பூசை - வணக்கம்! அடுத்த நாள் அதைத் தடியால் அடித்து கடலில் மிதிக்கிறான்!

கருடனை பார்த்து கன்னத்தில் போட்டு வணங்குகிறான். கோழிக்குஞ்சை அது தூக்கும்போது கல்லால் அடித்து விரட்டுகிறான்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்கிறான். ஆனால் கோயிலுக்குப் பூட்டுப் போடுகிறான்!

கடவுள் நம்மைப் படைத்தது; நம்மைக் காப்பது என்கிறான். ஆனால், இவன்தான் கடவுளைப் படைக்கிறான், காக்கிறான்.
சிந்தியுங்கள்...

தமிழ் ஓவியா said...

உற்சாக சுற்றுலாத் தொடர் - 9


- மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்

ஆக்ரா - அய்.நா.அடையாளச் சின்னம் ஆக்ரா கோட்டை

தாஜ்மகாலை விட்டுப் பிரிவது, காதலர்கள் சந்திப்பின் பின்னர் பிரிவது போலத்தான்! மீண்டும் வருகின்றோம் என்று சொல்லி விடை பெற்றோம்.

ஆக்ராவின் அடுத்த சிறப்பான இடம் ஆக்ரா கோட்டை. ஆக்ரா கோட்டை  பல வரலாற்று மிக்க இடம். மூன்று பானிப்பட்டுப் போர்கள் பற்றி வரலாற்றில் படித்திருப்போம். ராஜபுத்திரர்களுக்கும், முகமதியர்களுக்கும் நடந்த போர்கள். மாறி மாறி இந்தக் கோட்டையில் ஆண்டுள்ளனர்.அக்பர் கோட்டையைப் பெரிதாக்கி உள்ளே அரண்மனைகளையும் கட்டியுள்ளார். 500 கட்டிடங்களில் தற்போது 30-_35 கட்டிடங்கள் மட்டுமே அழிக்கப்படாமல் உள்ளன. சுற்றிலும் பெரிய அகழ்வுகள், அடுத்து 70 அடி உயர கோட்டைச் சுவர்கள். மிகவும் பெரிய, வேலைப்பாடு மிக்க   கோட்டை நுழைவுகளும், கதவுகளும். உள்ளே நுழைந்ததும் 90 டிகிரியில் திரும்பும் பாதை யானைகள் வேகமாக உள்ளே நுழைந்தாலும் அதே வேகத்தில் இதில் திரும்ப முடியாது தங்கள் வலுவை இழந்து விடுமாறு இந்தத் திருப்பம். உள்ளே அழகிய பூங்காக்கள், அரண்மனைகள், மாட மாளிகைகள். அற்புத வேலைப்பாடுகள். ராஜபுத்திர, முகமதிய அடையாளங்கள் கலந்துள்ளன. ஜஹாங்கீர் அரண்மனை மிகவும் அழகாக உள்ளது.

அரண்மனைவாசிகளுக்காக பெரிய நீர்த்தொட்டி! அதிலே ரோசாப்பூ நீர் வைக்கப்பட்டிருக்குமாம்.  மாடியில் ஒரு அரண்மனையில்தான் ஷாஜஹான் அவரது மகன் ஔரங்கசீப்பால் சிறை வைக்கப் பட்டிருந்தாராம். அது ஒன்றும் சிறை அல்ல. மாடமாளிகைதான். அங்கிருந்து தாஜ்மஹால் அழகாகத் தெரிகின்றது. அதுதான் அவருக்குத் தண்டனையாம். பின்னர் ஆக்ரா கோட்டையிலிருந்து டில்லி செங்கோட்டைக்கு ஆட்சி மாற்றப்பட்டு விட்டது.

ஆக்ரா கோட்டையில்தான் 1857இல் பன்றிக் கொழுப்பைப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட்டம், சிப்பாய்க் கலகம், முதல் விடுதலைப் போராட்டம் என்றெல்லாம் அழைக்கப்படும் போராட்டம் நடந்தது. அதன் முடிவுதான் கிழக்கிந்தியக் கம்பெனி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தது. இப்போதும் இந்தியப் படையின் ஒரு பிரிவு கோட்டையின் மேற்குப் பகுதியில் உள்ளது.

அங்கிருந்து மற்றும் இரண்டு இடங்களைப் பார்த்தோம். ஒன்று, உலகின் பெரிய சித்திர வேலைப்பாடுகள் பளிங்குக் கற்களில் பொதிக்கப்படும் விற்பனைச் சாலை. சிறியதும் பெரியதுமான விலையுயர்ந்த கற்கள் பெரிய பளிங்குக் கற்களிலும், யானை போன்ற  அழகான சிலைகளிலும் பொதிக்கப் படுகின்றன. ஆயிரக்கணக்கல்ல, கோடிகள் விலை பெறும் அற்புதங்களைப் படைத்து உலகெங்கும் விற்பனை செய்கின்றனர். அதை வாங்குவது ஒருபுறம் இருக்கட்டும், அதை வைப்பதற்குச் சரியான அரண்மனை வேண்டாமா? அரசியல்வாதிகளுக்காகத்தான் செய்கின்றார்கள் போலும்! எங்களுடன் வந்தவர்கள் சில சிறிய அழகிய சிற்பங்களை வாங்கினார்கள்.

அடுத்துச் சென்ற இடம் ஆம்! ஒரு நகைக் கடை. கொல்லம் பட்டறையில் ஈக்களுக்கு என்ன வேலை? இது ஒரு குடும்பத்தின் கதை. இந்தக் குடும்பம் மும்தாஜ் மஹாலுக்கே நகை செய்து தந்த குடும்பம். பல அரச குடும்பத்தினருக்குச் செய்த நகைகளையும், மும்தாஜ் அணிந்திருந்த நகைகளையும், எங்கள் குழுவிற்குக் காண்பிப்பதற்காகவே வங்கியின் பாதுகாப்பிலிருந்து எடுத்து வந்திருந்தனர். அந்தக் குடும்பத்தினர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் நான் ஒரு பெரிய கழுத்தணியையும், மும்தாஜின் மோதிரத்தையும் அணிந்தேன். அப்போதாவது நாங்கள் ஏதாவது விலையுயர் நகை வாங்குவோம் என்று பார்த்திருக்கலாம்! நல்ல வேலைப்பாடு, அது போலவே விலையும் நிறையதான். எங்கள் குழுவில் சிலர் வாங்கினார்கள்.

கனவுகள் கலைந்து நினைவுலகத்திற்கு வந்து விமானத்தில் ஏறிய எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது!

தமிழ் ஓவியா said...

நாடாளுமன்றத்திலே பெண்ணுக்கு நா(நீ)தியில்லையா?


நாட்டையே பாதுகாக்கும் செயல்களை நிறைவேற்றும் நாடாளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்யும் பெண் ஒருவர் அவரது மேலதிகாரியால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளார்.

நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் துப்புரவுப் பணியை ஒப்பந்த அடிப்படையில் பி.வி.ஜி. லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செய்துவருகிறது. நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெண் 2013ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். 2014ஆம் ஆண்டு புதிய மேற்பார்வையாளராகப் பொறுப்பேற்ற நபரால் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளார்.

கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும்போது, மேற்பார்வையாளர் பின்தொடர்ந்து வந்து அநாகரிகமாகப் பேசுவார் என்றும், எதிர்ப்புத் தெரிவித்தால் மிரட்டுவார் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், கழிப்பறைகள் சுத்தம் செய்வதற்கான இரசாயணப் பொருள்கள் காலியாகிவிடவே, புதிதாகத் தருமாறு அவரது அறைக்குச் சென்று கேட்டுள்ளார். உடனே, பதிலுக்கு நீ என்ன தருவாய்? என மேற்பார்வையாளர் கேட்டதும், கழிப்பறையைச் சுத்தம் செய்யும் என் கடமையை ஒழுங்காகச் செய்வேன் என்று கூறியுள்ளார் அந்தப் பெண். அதுதவிர நீ கொடுப்பதற்கு நிறைய இருக்கிறது என்றதும் மேற்பார்வையாளரை வன்மையாகக் கண்டித்து எச்சரித்ததும், பணிநீக்கம் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து, டெல்லி கனோட் பிளேசில் இருக்கும் பி.வி.ஜி. தலைமை அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்ததையடுத்து, அந்தப் பெண்ணுக்கு மக்களவையில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 2015 ஏப்ரலில், பி.வி.ஜி நிறுவனம் மீண்டும் நாடாளுமன்ற வளாக இணைப்புக் கட்டிடத்தில் பணி வழங்கியிருப்பதாக கூறியதும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மேற்பார்வையாளரை மன்னிப்புக் கேட்கும்படிக் கூறியுள்ளது. இன்றுவரை அந்த மேற்பார்வையாளர் மன்னிப்புக் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான் என் உரிமைகளுக்காகப் போராட விரும்புகிறேன். என் குழந்தையைப் பராமரிக்க நான் மட்டுமே இருக்கிறேன். இந்நிலையில் என் பணிக்குப் பாதுகாப்பு இல்லாமல் போனால் அது இன்னமும் சிக்கலாகும் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்குரைஞர், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களைப் பரிசீலிக்கும் குழு நாடாளுமன்றத்தில் வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கிறது. ஆனால், உண்மையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண் தன் வேலையைக் காப்பாற்றிக் கொள்ளக்கூட வழியில்லாமல் இருக்கிறது என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணே தனது குறைகளுக்குத் தீர்வு காண எவ்வித உதவியும் பெற முடியவில்லை என்பது கவனிக்க வேண்டிய பிரச்சினை என மே 3 அன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குரல் எழுப்பினார். இப்பிரச்சினையில் சிறப்புக் கவனம் செலுத்திய ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியன், இப்பிரச்சினை தொடர்பாக சிறப்புக் கவன ஈர்ப்பு நோட்டீஸ் சமர்ப்பிக்க அனுமதி வழங்கினார். பின்னர் மக்களவையிலும் எதிரொலித்தது.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்றத்தில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறிய புகார் தொடர்பாக லோக்சபா செயலர் தகவல் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

அறிவோம்! தெளிவோம்!


கோபுர தரிசனம் செய்வதால் மட்டுமே கோயிலுக்குச் சென்றுவந்த பலனைப் பெற முடியுமா?

- இது 11.12.14 தினமலர் பக்தி மலரில் கேட்கப்பட்ட கேள்வி. அதற்கு, வேலைநிமித்தமாக கோவிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் பொருத்தமான விஷயம் இது. மற்றபடி கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால்தான் சிறப்பு - என பதில் தரப்பட்டிருக்கிறது. ஆக,

ஆரியக் கூத்தாடினாலும் ஆரியம், காசு காரியத்தில் கண்ணாயிருக்கும் என்பது இதன் வாயிலாக உறுதிப்படுத்தப்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்குப் போனால்தானே குருக்களுக்குத் தட்சணை கிடைக்கும். பக்தியின் பெயரால் இப்படிச் சுரண்டித்தானே... பார்ப்பனீயம் இதுவரை செழித்துக்கொண்டிருக்கிறது. இதன் ஆணிவேரை அறுக்கத்தானே தந்தை பெரியார் அகவை 95லும் அயராது உழைத்தார்!

விளைவு? இன்று....

அறிந்தோம்! தெளிந்தோம்!!

கோபுர தரிசனம் எதற்கு? தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் இந்து மதத்தைவிட்டு விலகவும் கூடாது... ஆனால், அதேசமயம் அவர்களை கோயிலுக்குள்ளே அனுமதிக்கவும் கூடாது! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுதானே பார்ப்பனீயத்தின் சூழ்ச்சி! அதன் தாரக மந்திரம்!! இதைத் தோலுரித்துக் காட்டிவிட்டாரே தந்தை பெரியார்!

அதனால்தானே இன்று தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையில் இளைஞர் படை அணிவகுத்து நிற்கிறது. இன்று அறிந்தோம்! தெளிந்தோம்!! என்று உறுதிகூறி!

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...

சொன்னது சொன்னபடி


அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். எனினும் இப்போதைய சூழ்நிலையில் கோவில் கட்ட முடியவில்லை. காரணம், ராஜ்யசபாவில் எங்கள் கட்சிக்குப் போதிய பலம் இல்லை. அதனால்தான் ராஜ்யசபாவில் மசோதா கொண்டுவந்து நிறைவேற்ற முடியவில்லை.

- ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர்

முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அவசரக் கோலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம். அதற்கு பா.ஜ.வும் ஆதரவு அளித்து அப்போது தவறு செய்துவிட்டது. நான் பிரதமரானதும் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என பல மாநில முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் எழுதிய கடிதங்கள் என்னிடம் உள்ளன.

- நரேந்திர மோடி, இந்தியப் பிரதமர்

திருநங்கைகள் பாதுகாப்பை உறுதி செய்யும்விதமாக அவர்களுக்கு எதிராக இருக்கிற 377 சட்டப் பிரிவை முழுமையாக நீக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு என்பது எப்படி அரசு மற்றும் தனியார் துறையில் அனைவருக்கும் கிடைக்கிறதோ அதேபோல் திருநங்கைகளுக்கும் வழங்க அரசு இடஒதுக்கீடு செய்ய வேண்டும்.

_ திருநங்கை ரேவதி

உயர் பதவிகளில் இருப்பவர்கள் வழக்கமான சிந்தனையிலிருந்து மாறுபட்டுச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்சினைகளுக்குப் புதுமையான தீர்வுகளைத் தர முடியும்.

_ ஹர்ஷ் வர்தன், மத்திய அமைச்சர்

சென்னையிலும் அதனைச் சுற்றியுள் ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் உள்ள மரங்களின் அடர்த்தி 13 விழுக்காடு குறைந்திருக்கின்றன. இந்த அளவில் மரங்களின் மோசமான இழப்புக்குக் காரணம் ரியல் எஸ்டேட் தொழில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதே ஆகும்.

இதனைச் சரிசெய்ய அனைவரும் ஒன்றிணைந்து மரங்களை நடும் முயற்சியில் ஈடுபட வேண்டும். மரங்கள் நடுவதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை. அதனை முறையாகப் பராமரிப்பதுதான் அந்த முயற்சியின் முழுமையான வெற்றி.

-  சாந்தா ஷீலா நாயர், தமிழ்நாடு திட்டக்குழுத் துணைத் தலைவர்

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வெளிநாட்டினர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விஷயத்தில் பன்னாட்டு விதிமுறையைப் பின்பற்ற சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் விரைவில் பரிசீலிக்கும்.

_ அம்மான், பொருளாதாரத்துறை அமைச்சர், சுவிட்சர்லாந்து

மாநிலங்களவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. மாநிலங்களவையின் கருத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.

_ சோம்நாத் சட்டர்ஜி, மக்களவை மேனாள் தலைவர்

கார்கில் போரின்போது நான்கு இடங்களில் பாகிஸ்தான் வீரர்கள் முன்னேறினர். அந்தப் போரில் இந்தியாவின் கழுத்தை நெரித்துவிட்டோம். அதை இந்தியாவால் மறக்கவே முடியாது.

_ பர்வேஸ் முஷாரப், மேனாள் அதிபர், பாகிஸ்தான்

தமிழ் ஓவியா said...

புதுப்பா


ஓராயிரம் சூரியனின்
வெப்பம் தெறிக்கும்,
உன் வார்த்தைகள்!
எதிரிகளை வதம் செய்கையில் உன் (எழுத்து) நடையின்
அதிர்வில்
நடுங்குகிறது ஆரியம்! உன் சிந்தனையின்
பெரு வெடிப்பில்
சின்னா பின்னமாகிறது
ஜாதியக் கோட்டைகள்!
உன் கைத்தடியில்
அடி பட்டு
நொறுங்கிக் கிடக்கிறது
மத வெறி! தன்மானம் இழந்தேனும்
இனமானம் காத்தவரே,
கனமான கொள்கைகளை
கிழத் தோளில் சுமந்தவரே, எத்தனை விமர்சனம்
இன்றும் உன் மீது,
எவர் சொன்னது ?
நீ இறந்து விட்டாயென்று ....

-  பாசு.ஓவியச் செல்வன்

தமிழ் ஓவியா said...

ஆட்சியர் அணியலாமா கூலிங் கிளாஸ்?



சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மே 9 அன்று சென்ற பிரதமர் மோடியை அம்மாநிலத்திலுள்ள பஸ்தார் மாவட்ட ஆட்சியர் அமித் கட்டாரியா வரவேற்றுள்ளார். அப்போது அவர், பந்காலா என்ற அலுவலக அதிகாப்பூர்வ அணியாமலும் கூலிங் கிளாஸ் அணிந்தும் கை கொடுத்து (கொலுத்தும் வெயிலில் அணியத்தக்க உடை அல்ல அது) பிரதமரை வரவேற்றதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு நோட்டீசு அனுப்பியுள்ளது.

அதில், பஸ்தார் மாவட்ட ஆட்சியராக நீங்கள் பிரதமரை ஜக்தால்பூரில் வரவேற்றீர்கள். நீங்கள் அப்போது முறையான உடைகளை அணியவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டதுடன் கூலிங் கிளாஸ் அணிந்தும் வரவேற்றுள்ளீர்கள். இனி இத்தகைய தவறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டாம் என மாநில அரசு உங்களை எச்சரிக்கிறது.

நீங்கள் செய்தது அரசு ஊழியருக்குரிய நடத்தை விதிகளுக்குப் புறம்பாக அமைந்துள்ளது. அரசு ஊழியர்கள், குறிப்பாக சேவைத் துறையில் பணியாற்றுபவர்கள் நேர்மையையும், கடமை உணர்வையும் பராமரிப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

மோடி மட்டும் கோமாளி கூத்து போல விதவிதமான ஆடைகள்  அணிவதும், ஆடை முழுவதும் தன்னுடைய பெயரை பதித்து 10 இலட்ச ரூபாய்க்கு வெளிநாட்டு ஆடை  அணிவதும் நடக்கலாம். அய்.ஏ.எஸ். அதிகாரி வெயிலுக்கு கூலிங்கிளாஸ் அணியக் கூடாது. நல்லா இருக்கு உங்க நடத்தை விதிமுறைகள்!

தமிழ் ஓவியா said...

நான் என்ன மாடா? என் கழுத்துக்கு ஏன் லைசென்ஸ்?


தாலிக்கு எதிராய்

புரட்சிக்கவிஞர் மகளின் கேள்வி :

நான் என்ன மாடா? என் கழுத்துக்கு ஏன் லைசென்ஸ்?

1944இல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மூத்த மகள் சரஸ்வதிக்கும், கரூர் அருகில் உள்ள கட்டிப்பாளையத்தைச் சேர்ந்த கண்ணப்பருக்கும் திருமணம் முடிக்க முடிவாயிற்று.

திருமணத்துக்கு முன்பு தாலி செய்வதைப் பற்றி பேச்சு எழுந்தது. உடனே சரசு (சரஸ்வதி) என்னைப் பார்த்து,

ஏன் அத்தை! நான் என்ன மாடா? முனிசிபாலிட்டியில் கட்டுவதுபோல் எனக்கும் லைசென்ஸா கட்டப் போறாங்க?

என்று கேட்டாள். நான் வியப்பில் விக்கித்துப் போனேன். தமிழ்நாட்டின் புரட்சிக்கவிஞனுக்கு ஏற்ற புரட்சிப் பெண்தான் இவள் என்று நான் மகிழ்ச்சியடைந்தேன்.

- திருமதி மஞ்சுளாபாய் கானாடுகாத்தான்

குறிப்பு: திருமதி மஞ்சுளாபாய் பெரும் செல்வந்தரான வை.சு.சண்முகம் செட்டியாரின் இணையர். தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் ஆகியோருடன் பற்றுக் கொண்டவர். அன்னை நாகம்மையார் காலனியில் தங்கி, சுயமரியாதை இயக்கப் பணியாற்றியவர்.

தமிழ் ஓவியா said...

நான் என்ன மாடா? என் கழுத்துக்கு ஏன் லைசென்ஸ்?


தாலிக்கு எதிராய்

புரட்சிக்கவிஞர் மகளின் கேள்வி :

நான் என்ன மாடா? என் கழுத்துக்கு ஏன் லைசென்ஸ்?

1944இல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மூத்த மகள் சரஸ்வதிக்கும், கரூர் அருகில் உள்ள கட்டிப்பாளையத்தைச் சேர்ந்த கண்ணப்பருக்கும் திருமணம் முடிக்க முடிவாயிற்று.

திருமணத்துக்கு முன்பு தாலி செய்வதைப் பற்றி பேச்சு எழுந்தது. உடனே சரசு (சரஸ்வதி) என்னைப் பார்த்து,

ஏன் அத்தை! நான் என்ன மாடா? முனிசிபாலிட்டியில் கட்டுவதுபோல் எனக்கும் லைசென்ஸா கட்டப் போறாங்க?

என்று கேட்டாள். நான் வியப்பில் விக்கித்துப் போனேன். தமிழ்நாட்டின் புரட்சிக்கவிஞனுக்கு ஏற்ற புரட்சிப் பெண்தான் இவள் என்று நான் மகிழ்ச்சியடைந்தேன்.

- திருமதி மஞ்சுளாபாய் கானாடுகாத்தான்

குறிப்பு: திருமதி மஞ்சுளாபாய் பெரும் செல்வந்தரான வை.சு.சண்முகம் செட்டியாரின் இணையர். தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் ஆகியோருடன் பற்றுக் கொண்டவர். அன்னை நாகம்மையார் காலனியில் தங்கி, சுயமரியாதை இயக்கப் பணியாற்றியவர்.

தமிழ் ஓவியா said...

பக்தர்கள் உயிரிழப்பை பகவான் தடுக்காததேன்?


கடவுள் நம்பிக்கை, பக்தி இவைதான் மூடநம்பிக்கைகளிலேயே தாய் மூடநம்பிக்கை! காரணம், அறிவுக்குச் சிறிதேனும் இடந்தராது கண்ணை மூடிக்கொண்டு நம்பி, மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும் என்பதுபோல மீளமுடியாத பழக்கம், பிறகு வழக்கமாகியதன் விளைவுதான் இந்த நம்பிக்கை.

மனிதனைவிட கடவுள் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று காட்டி, பக்தியின் பேரால் சுரண்டிக் கொழுப்பதில் மதங்களுக்குள் போட்டி ஏராளம்!

இதற்கு விதிவிலக்கு சிராவணம் (சமணம்), பவுத்தம் _ இரண்டும் கடவுளை நம்பாத நெறிகள். (பிற்காலத்தில் இவற்றையும் மதமாக்கி புத்தரை அவதாரமாக்கி, ஜாதகக் கதைகளை தம் இஷ்டம்போல் புனைந்து புழக்கத்தில்விட்டுள்ளனர்.

மனிதனைவிட கடவுளே உயர்ந்தவர். இயற்கையை மீறிய சக்தி என்றெல்லாம் புளுகப்பட்டது!

முப்பெரும் தன்மைகள் எல்லா மதக் கடவுள்களுக்கும் இட்டுக்கட்டப்பட்டன!

எல்லாம் கடவுள் செயலா? சிந்தியுங்கள்!

1. கடவுள் சர்வசக்தி வாய்ந்தவர். (Omnipotence)

2. கடவுள் சர்வவியாபி (Omnipresence)

3. கடவுள் கருணையே வடிவானவர் (Omniscience)

இந்த மூன்றும் எந்தக் கடவுளுக்கு இருந்தது _ இருக்கிறது என்று இதுவரை உலக நடப்புகள் தொன்றுதொட்டு இன்றுவரை நிரூபித்து உள்ளனவா?

கடவுள் சர்வசக்தி உடையவன் என்றால், அவனால் சிருஷ்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் அவனது பிள்ளைகளுக்குள் சண்டை _ போர் _ நடந்து ஒருவரை மற்றவர் அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை முன்கூட்டியே அவன் தடுத்து இருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை?

கடவுளைத் தொழ _ வணங்கச் செல்லும் பக்தர்கள் உயிர் பறிபோகிறது விபத்து மூலம். அதை அங்கிங்கெனாதபடி எங்கும் உள்ள கருணையே வடிவான கடவுள் தடுத்து இருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?

தூங்கிய காவல்காரனைக்கூட தண்டிக்கிறோம்; காரணம், அவன் கடமை தவறி தூங்கியதால் பொருள் களவு போனது என்று. இத்தனைக்கும் அவன் சராசரி மனிதன்; ஆனால், அதைவிட மேலான அற்புத சக்தி படைத்ததாகச் சொல்லப்படும் கடவுள்கள் ஏன் 10 ஆயிரம் மக்களைப் பலிகொண்ட ஈவிரக்கம் அற்ற நேபாள பூகம்பத்தைத் தடுத்து நிறுத்தவில்லை?

எவ்வளவு அறியாமை!

ஒரு சில உயிர் பிழைத்தவர்கள் நாங்கள்  தெய்வாதீனமாக _ கடவுள் அருளால் உயிர் பிழைத்து மீண்டோம் என்று கூறுகின்றனரே!

இத்தனை ஆயிரம் பேர் செத்தார்களே!  அது எந்த ஆதினம்? என்று பகுத்தறிவு உள்ளவர் கேட்க வேண்டாமா?

பஞ்சாபில், ஒரு மத்திய அமைச்சருக்குச் சொந்தமான ஓடும் பேருந்தில் ஓர் இளம் பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையோடு, அப்பெண்ணை ஓடும் பேருந்திலிருந்து கீழே, ஈவிரக்கம் சிறிதும் இன்றி தள்ளிவிட்டனர்; அவர் மாண்டார்.

இந்தக் கொடுமையான காட்டுமிராண்டிச்  செயலைக் கண்டித்து நாடே குமுறிய நிலையில் (சில வாரங்களுக்கு முன்) பஞ்சாப் அமைச்சரவையில் அமைச்சராக உள்ள ஒருவர் (பா.ஜ.க. கூட்டணி அமைச்சர்) இதுபற்றி சிறிதும் கூச்சநாச்சம், மனிதாபிமானம் இன்றி, இது ஆண்டவன் செயல் என்று வெகு சாதாரணமாகக் கூறி, இன்னமும் அமைச்சராக நீடிக்கும் அவலம் இந்த ஞானபூமியில் உள்ளது!

நம் கடவுள்கள் எவ்வளவு கேவலமான, கொடூரமான உணர்வாளர்களாக இருக்க வேண்டும்? மகா வெட்கக்கேடு! இது நம் நாட்டில் மட்டுமா? கடவுள் நம்பிக்கை என்ற மூடத்தனம் உலகளாவிய நிலையிலும்கூட மக்களை எப்படி ஏமாற்றப் பயன்படுகிறது என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு:

முன்பு அமெரிக்காவில் அதிபராக (குடியரசுக் கட்சி) இருந்து, ஈராக் மீது போர் நடத்தி அந்நாட்டை அழிக்க முயன்ற (ஜுனியர்) ஜார்ஜ் புஷ் அவர்கள், ஈராக் மீது போர் தொடுக்குமாறு கடவுள்தான் எனக்குக் கட்டளை இட்டார் என்று புருடா விடவில்லையா?

கடவுள் என்பது எப்படிப்பட்ட ஏமாற்றுக் கருவியாகப் பலருக்கும் பயன்படுகிறது என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் தேவையா?

சில நாள்களுக்கு முன் வேலூர் அருகில் ஒரு கோவில் தேரோட்டத்திற்காக _ தேர் இழுத்து, பொம்மை விளையாட்டு விளையாடிய பெரியவர்களில், மின்சாரம் தாக்கி (தேரின் கம்பி மின்சாரக் கம்பியுடன் உரசி) ஆறு பேர் உயிர் இழந்த கொடுமை கண்டு, நாம் துன்பமும் துயரமும் கொள்ளுகிறோம்.

பக்தர்கள் பக்திப் பரவசம் அடைந்து தேர் இழுத்தனர். கருணையே வடிவான கடவுள் காப்பாற்றவில்லையே!

கடவுளைவிட மனிதன் கண்டுபிடித்த மின்சாரம் சக்தி வாய்ந்தது என்பது புலனாகவில்லையா?

இம்மாதிரி பக்தர்களின் மரண ஓலம் நாளும் இடையறாது கேட்டுக் கொண்டேதானே இருக்கிறது!

இதெல்லாம் தலைவிதி _ தலையெழுத்து என்று சமாதானம் கூறப்படுமானால், கடவுள் சக்தியற்றவராக, கருணையற்றவராக  அதற்குமுன் காட்சியளிக்கிறார் என்றுதானே அர்த்தம்? அதுபற்றிச் சிந்திக்க வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார் மொழி எத்தகைய பொய்யாமொழி!

சிந்தியுங்கள் பக்தர்களே, சிந்தியுங்கள்!

நாம் வாழுவது 21ஆம் நூற்றாண்டில்!

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


மாண்டேகு - செம்ஸ் போர்டு அறிக்கை, சட்டம் ஆவதற்கு முன், நீதிக் கட்சித் தலைவரான டாக்டர் நாயர் தாழ்த்தப்பட்டோருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் சட்டமன்றத்தில் ஒதுக்கீடு தேவை என்று வற்புறுத்தச் சென்றபோது, 1918ஆம் ஆண்டு லண்டனுக்குத் இங்கிலாந்து அரசாங்கம் அவர் கருத்துத் தெரிவிக்கத் தடைபோட்டதும், தளர்ச்சி அடையாமல் டாக்டர் நாயர், தனித்தனியாக ஆங்கிலேய அதிகாரிகளைச் சந்தித்துத் தடையை நீக்கச் செய்து, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை எடுத்துச் சொல்லிவிட்டுத்தான் சென்னை திரும்பினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. அரசு எங்கே போகிறது?

அவசர நிலைப் பிரகடனம் வரும்

அத்வானி அபாய அறிவிப்பு!



புதுடில்லி, ஜூன் 18_ முன்னாள் பிரதமர் இந் திரா காந்தி காலத்தில் அவசரநிலைப் பிரகடனத் தின்போது சிறை சென்ற அன்றைய ஜனசங்கக் கட்சித் தலைவரும் இன் றைய பாஜகவின் முக்கிய தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி மீண் டும் ஒரு அவசரநிலைப் பிரகடனம் வர 99 விழுக் காடு வாய்ப்புள்ளது என் றும், இதற்குக் காரணமாக அவர் கூறும் போது மோடி அரசின்மீது எதிர் கட்சிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் போது அரசு வேறு வழி யின்றி அவசர நிலைப் பிரகடனம் செய்யக் கூடும் என்று கூறினார்.

பத்திரிகைக்குப் பேட்டி

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வியாழ னன்று பேட்டியளித்த லால்கிருஷ்ண அத்வானி கூறும்போது,

மீண்டும் ஒரு அவசர நிலைப் பிரகடனத்திற்கு தற்போதைய அரசு தயா ராகி வரக்கூடும். இதற்கு முக்கியக் காரணமாக அரசியல் சூழல் தற்போது மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. இதை யாரும் மறுக்கமுடியாது. 2015- ஆம் ஆண்டு இறு திக்குள் அரசியல் மற்றும் சட்டம் போன்றவை களால் சூழ்நிலையை சமாளிக்க இயலாத நிலை உருவாக்கூடும், அந்த நேரத்தில் அவசரநிலைப் பிரகடனம் ஏற்பட்டால் அரசியல் மற்றும் சட்டம் போன்றவை மக்களைப் பாதுகாக்கும் கவசமாக இருக்க முடியாது. அதே நேரத்தில் மக்களின் சுதந் திரம் மற்றும் உரிமைகள் பறிக்கப்படும் வாய்ப்பை யும் மறுக்க முடியாது.

அதிகாரம் திசை மாறுகிறது

அவசரநிலைப் பிரகட னத்தை இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் அதுவும் தற்போதைய சூழலில் கொண்டுவருவது இயலாதகாரியம் என்றா லும், மக்களாட்சியில் சில எதிர்மறை சக்திகளின் வலிமை பெருகிக் கொண்டு இருக்கிறது, மேலும் சில அரசியல் சக்திகளின் தலைமையின் போக்கில் மாற்றம் ஏற்படும் போது அது அவசரநிலைப் பிர கடனத்திற்கு வழிவகுக் கும், காரணம் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சிலரின் கைகளில் இருந்து அதிகாரம் திசைமாறு கிறது. இதை யாரும் மறுக்க முடியாது.     தற்போதுள்ள சூழ் நிலையில் நான் அவசர நிலைப் பிரகடனம் குறித்து வலியுறுத்திக் கூறக்காரணம் _ அரசியல் சூழல் மாறிக்கொண்டு வருகிறது. இங்கு நீதிமன் றம் மற்றும் ஆட்சி அதி கார வலிமை மெல்ல மெல்ல வலுவிழந்து கொண்டிருக்கிறது.

2015- இறுதியில் மீண் டும் அரசியல் குழப்பம் ஏற்படும்; இந்த நிலையில் அவசர நிலைப்பிரகடனம் என்பது தவிர்க்க முடி யாது ஒன்றாகிவிடும். அப் போது எந்த அரசியல் சக்தியும் மக்கள் உரிமை களை மீட்டெடுக்க குர லெழுப்ப இயலாத நிலைக் குச் சென்றுவிடும், எப்படி இந்திரா காந்தியின் காலத் தில் ஏற்பட்டதோ அதே நிலை மீண்டும் ஏற்படும் என்று என் உள்மனம் கூறுகிறது என்று கூறி னார்.

கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் ஒழிப்புப் போராட்டம் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் திடீர் வரவு பற்றி கூறும் போது ஊடகங்களுக்கு அளவுக்கு மீறி சுதந்திரம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த அதி காரம் மக்களின் உரிமை மற்றும் மக்களாட்சிக்கு எதிராக திருப்பப்படும் அச்சமும் உள்ளது. எடுத் துக்காட்டாக அன்னா அசாரே நடத்திய ஊழல் ஒழிப்புப் போராட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், இறுதியில் அது அரசியல் கலந்து ஆம் ஆத்மி கட்சி உருவாகவே பயன்பட்டது. இதனால் மக்கள் ஏமாற்றமடைந் துள்ளனர்.

ஆம் ஆத்மி கருத்து

அத்வானியின் இந்த பேட்டி குறித்து உடனடி யாக கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி கூறிய போது, அரசியலில் மிக வும் பழுத்த அனுபவாதி யான அத்வானி இப்படி மக்களாட்சிப் படுகொலை குறித்து கூறுவது, மிகவும் வியப்பாக உள்ளது.

மோடி தலைமையை ஏற் றுக்கொண்டு மோடிக்கு எதிராகவே கருத்து கூறு வது நகைப்பிற்குரியதாக உள்ளது. அத்வானியின் இந்தப் பேச்சு சுஷ்மாவின் தவற்றை திசை திருப்புவ தற்காகக் கூட இருக்க லாம் இருப்பினும் அரசியல் சூழலில் அத்வானி கூறுவதுபோல் நடக்க லாம் எதற்கும் மக்கள் தயாராக இருக்கவேண்டும் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

ராமர் கோயில் கொள்கையில் மாற்றமில்லையாம் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா

வியாழன், 18 ஜூன் 2015


புதுடில்லி, ஜூன் 18_ அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மற்றும் அரசியல் சாசன சட்டம் 370- ஆவது பிரிவை நீக்கு வது ஆகிய கொள்கை களில் எந்தவித மாற்றமும் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் சதா னந்த கவுடா தெரிவித் துள்ளார்.

அதே வேளையில் இந்த விவகாரங்களில் விரி வான ஆலோசனைக்குப் பிறகே எந்த முடிவும் எடுக்க முடியும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறும்போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத் துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட் டத்தின் 370 ஆ-வது பிரிவை நீக்குவது ஆகி யவை பாஜகவின் கொள் கைகளாக தொடர்கின் றன. எங்களுடைய கட்சி யின் தேர்தல் வாக்குறுதி யிலும் இதுபற்றி குறிப் பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஒருபோதும் நாங்கள் கைவிடமாட் டோம்.

குறிப்பாக 370- ஆவது சட்டப் பிரிவை நீக்குவது குறித்து பல்வேறு அரசி யல் கட்சிகளுடன் விரி வான ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது. மேலும், இதனால் பயன டையும் பகுதி மக்களிட மும் கருத்து கேட்கப்படும். அதன் பிறகுதான் இது பற்றி முடிவு எடுக்க முடி யும். அனைத்து தரப்பின ரின் ஒருமித்த கருத்தை எட்டாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்கப்படமாட் டாது. இதுதொடர்பான நடைமுறைகள் மெதுவாக நடைபெறும். எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். _ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

யோகா தின கொண்டாட்டங்களில் உத்தரகாண்ட் பங்கேற்காது:
முதல்வர் ஹரிஷ் ராவத்

டேராடூன், ஜூன் 18_ வருகிற ஜூன் 21- ஆம் தேதி முதல் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் யோகா தின கொண் டாட்டங்களில் உத்தரகாண்ட், அதிகாரப்பூர்வமாக பங்கேற்காது என்று அறிவித்துள்ளார். டேராடூனில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர், நாங்கள் சர்வதேச யோகா நாளில் பங்கேற்கப் போவதில்லை. இந்த முடிவு குறித்து தம்பட்டம் அடிப்பதில் எங்களுக்கு ஆர்வமில்லை. என்றார். மேலும் இந்தியாவின் பாரம்பரியமான உடல் மற்றும் மன ஒழுக்கங்களை பொதுமக்களிடையே பிரபலப்படுத்துவதில் மாநில அரசு முழு ஆர்வத்து டன் திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரி வித்தார்.

தமிழ் ஓவியா said...

சோம்பேறிகளுக்கும், பணக்காரர்களுக்கும்தான் யோகாசனம் தேவை:
கருநாடக அமைச்சர்

பெங்களூரு, ஜூன் 18_- உலகம் முழுவதும் வரும் 21- ஆம் தேதியை சர்வதேச யோகா நாளாகக் கடை பிடிக்க உள்ள நிலையில் சோம்பேறிகளுக்கும், பணக்காரர்களுக்கும் தான் யோகாசனம் தேவை என கருநாடக சமூக நலத்துறை அமைச்சர் அன் ஜனய்யா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- யோகாசனம் என்பது சோம்பேறிகளுக்கான, குறிப்பாக பணக்காரர்களுக்கான ஒரு பயிற்சியாகும். அவர்களுக்குதான் பொது இடங்களில் நடைபயிற்சி செய்வதற்குக்கூட நேரம் கிடைப்பதில்லை. ஆனால், வயல்களில் வியர்வை சொட்டச்சொட்ட கஷ்டப் பட்டு வேலை செய்பவர்களுக்கு யோகாசனம் தேவை இல்லை. யோகாசனத்துக்கு பதிலாக, மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஓட்டப் பயிற்சி, நெடுந்தூர நடைப் பயிற்சி போன்ற திறந்தவெளி பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும். யோகாவின் பலன்களை விளக்கவும், பயிற்சிகளை அளிக்கவும் எத்தனையோ குருக்களும், நிபுணர்களும் உள்ளனர். பிரதமரின் நேரம் என்பது மிகவும் பொன்னானது, யோகா சனத்தை பற்றி விளக்கம் அளிப்பதை விட்டுவிட்டு, இந்த நாட்டை வழிநடத்துவதில் அவர் தனது நேரத்தை செலவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு
 

தஞ்சைப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடுபற்றியது குறிப்பிடத்தக்க தாகும்.

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற சொலவடையை உருவாக்கி மக்கள் மத்தியில் அது குறித்து சிந்தனைப் பொறியைத் தட்டி எழுப்பிடும் பணியைத் தொடர்ந்து செய்து வந்துகொண்டிருக்கும் இயக்கம் திராவிடர் கழகம்  என்பது நாட்டு மக்கள் அறிவார்கள்.

கச்சத்தீவு, காவிரி நதி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறுப் பிரச்சினை, பாலாறுப் பிரச்சினை என்று தமிழ்நாடு, தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் சூழ்நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

நதிநீர்ப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும்கூட, அதனைச் சற்றும் பொருட்படுத்தாத போக்குகள் தொடர்ந்து கொண்டுள்ளன; காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கருநாடகமும், முல்லைப் பெரியாறுப் பிரச்சினையில் கேரளமும் இத்தகைய போக்குகளை மேற்கொண்டு வருகின்றன. நீதிமன்ற அவ மதிப்பு என்ற ஒன்று இருக்கிறதா? அதன்மீதான மரியாதையின் கதி இதுதானா? என்ற கேள்விகளும் செங்குத்தாகவே எழுந்து நிற்கின்றன.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல நீதிமன்ற தீர்ப்புக்குமேல், மேலும் அதிரடி யாகவும், ஆணவமாகவும் நீதிமன்ற தீர்ப்புகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு, அதற்குமேலும் தீவிரமாக சட்ட விரோத - நீதிமன்ற தீர்ப்பு விரோத வேலைகளில் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுவதை என்ன சொல்ல?

காவிரியின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 2500 ஏக்கர் பரப்பளவில் இரண்டு பெரிய அணைகள் கட்டுவதாக தொடக்கத்தில் கூறப்பட்டது. இப்பொழுது அதில் சிறு மாற்றம் செய்து,  நான்கு சிறிய  அணைகளை எழுப்பி 100 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கிட கருநாடக அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த அணைகள் மூலம் பெங்களூரு, மைசூரு, கோலார், சிக்பள்ளாப்பூர், தும்கூரு உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் குடிநீர் வழங்கிட இத்திட்டமாம்.

கருநாடக மாநில நீர்வளத் துறை நிபுணர்கள் காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து இதற்கான திட்ட அறிக் கையைத் தயாரித்துள்ளனர். கருநாடக வனத்துறையினரும், மேகதாதுப் பகுதியை ஆக்கிரமித்துள்ள தனியார் விடுதிகளின் கூட்டமைப்பினரும் தனித்தனியாக அறிக்கைகளைத் தயாரித் துள்ளனராம். குடிநீருக்காக மட்டுமல்ல 1000 மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இத்தோடு நின்றுவிடவில்லை கருநாடகா, டில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமும் பன்னாட்டுத் தனியார் நிறுவனம் ஒன்றிடமும்கூட வரைவு அறிக்கை கோரப்பட் டுள்ளதாம். போகிற போக்கைப் பார்த்தால் அதிவிரைவில் இந்தச் சட்ட விரோதப் பணிகளில் கருநாடக அரசு ஈடுபடுவதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

பிரதமரைச் சந்தித்தாகி விட்டது; குடியரசுத் தலைவரையும் சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்டு அலுத்துப் போய்விட்டது தமிழ்நாடு.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு அரசோ நாங்களும் இதில் செயல்பட்டோம் என்று காட்டிக் கொள்ளும் மேனா மினுக்கித்தனமாக செயல்படுகிறதே தவிர - குறைந்தபட்சம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி - இப்பிரச்சினையில் தமிழ்நாடு ஒன்று பட்டு நிற்கிறது என்று காட்டுவதற்குக்கூடத் தயாராக இல்லை என்பது பெரிதும் வேதனைக்குரியது. தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதனைப் பலமுறை வலியுறுத்தியும்கூட தமிழ்நாடு அரசு கேளாக்காதாக இருப்பது சரியல்ல.

அதேநேரத்தில், கருநாடகத்தில் என்ன நடந்துகொண்டி ருக்கிறது? கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும், மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசின் அமைச்சர்கள், கருநாடகத் தின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்குத் துணை நிற்போம் என்று பச்சையாகக் கருத்துத் தெரிவிக்கின்றனரே!

2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது. 2013 பிப்ரவரி 19 ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதுவரை ஏன் அந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை? காங்கிரஸ் ஆட்சியை மட்டும் குறைகூறி பி.ஜே.பி. அரசு தப்பிப் பிழைக்க முடியாது.

மத்திய அமைச்சர்கள் அனைத்து மாநிலங்களுக்கும், பொதுவானவர்கள் என்பதையும் மறந்து கருநாடக மாநில உணர்வோடு பேசுவது சரியானதுதானா?

காவிரி நீரில் கருநாடகப் பகுதியில் கழிவு நீர் கலக்கப்படு வதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றாலும், அதனைச் சந்திக்க கருநாடகம் தயார் என்று சொல்லுவது பி.ஜே.பி.யைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா (கருநாடகம்) என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு மத்திய அமைச்சரே ஒரு சார்பாகப் பேசுவதுபற்றி பிரதமர் கண்டிக்க வேண்டாமா?

இந்தியத் தேசியம்பற்றி வாய் கிழியப் பேசுவார்கள்; அதே நேரத்தில், மாநில சுயநலம் என்று வரும்போது தேசியமாவது - கீசியமாவது என்று கிழித்து எறிந்துவிடுவார்கள்.

கடந்த நூற்றாண்டுக்காலமாக தமிழ்நாட்டு விவசாயம் சாகடிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. விவசாயத்தை நம்பியுள்ள விவசாயப் பெருங்குடி மக்கள் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கான விவசா யிகள் விவசாயத் தொழிலுக்கே முழுக்குப் போட்டுவிட்டு வேறு கூலி வேலைகளுக்கு நகர்ப்புறங்களுக்குப் படையெடுக்கும் பரிதாப நிலை.

காவிரி மட்டுமல்ல, முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் கேரள அரசு - கருநாடக அரசுக்கு அப்பனாகவே நடந்து கொண்டு வருகிறது!

இன்னும் எத்தனை முறைதான் நிபுணர்கள் குழு முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது! உறுதியாக இருக்கிறது! என்று தண்டோரா போட்டுச் சொல்லவேண்டுமோ?

நீரோட்டத்தில் நியாயமான முடிவு எட்டப்படா விட்டால், தேசிய நீரோட்டம் என்பது கேள்விக்குறியாக ஆகும் நிலைக்குத் தள்ளப்படுவது தவிர்க்கப்படவே முடியாததுதான்.

தமிழ்நாடு, உபரி நீரின் வடிகாலாக இருக்கும் பிச்சைக் காரப் பூமியாக ஆக்கப்பட்டு விட்டது. இதற்காக வெட்கப்பட வேண்டியவர்கள் தேசியவாதிகளே!

தமிழ் ஓவியா said...

பார்ப்பான் பொதுநலவாதியல்லன்


இந்த நாட்டில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களெல்லாம் பொதுமக்களுக்குப் பாடுபடுகிறவர்கள்தாம். உலகத்தில் மனிதனாக உள்ள அனைவரும் பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பொதுமக்களுக்குத் தொண்டாற்றுகிறவர்கள்தாம்.
_ (விடுதலை, 11.4.1959)

தமிழ் ஓவியா said...

அஞ்சுவதற்கல்ல முதுமை; அனுபவப் பகிர்வுக்கே!
--veramani



அமெரிக்க குடிஅரசுத் தலைவர் களில், மிகுந்த பண்பாளர்களில் ஒருவ ராகத் திகழ்ந்த மிக நல்ல ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அவர்கள்!

அப்போதே இந்திய நாட்டை மிகவும் நேசித்து, நல்லறிவுடன் இருந்த குடிஅரசுத் தலைவர். இவர் விவசாயி களின் பிரதிநிதியாவார். இவருக்கு மற்றொரு செல்லப் பெயரே - பதவி வகித்தபோது ‘Peanut President’ - வேர்க்கடலை ஜனாதிபதி என்பதாகும்!

சில ஆண்டுகளுக்குமுன் அமெ ரிக்கா சென்றிருந்தபோது நான் வாங்கிப் படித்துச் சுவைத்த அவரது அறிவுச் செல்வ நூல் ஒன்று, ‘‘The Virtues of Aging’’(வயதாவது - முதுமை என்ற பெரும் நன்மைகளுக்கான வாய்ப்பு) என்ற நூல்.

மறுமுறை இப்போது படித்தேன் - சுவைத்தேன்!

இவர் 56 வயதிலேயே பதவி வாழ்க் கையிலிருந்து ஓய்வு பெற்று, மக்களி டையே தொண்டறத்தை மேற்கொண்ட வர்.

அமெரிக்காவில்  65 வயது அல்லது அதற்கு மேலும் என்ற வயது முதுகுடி மக்கள் என்ற தகுதி முத்திரையைப் பொறிக்கக்கூடியதாகும்.

எந்த வயதை அடைந்தால் நாம் முதியவர் (வயதானவர்) என்ற நிலையை அடைகின்றோம்? என்ற கேள்விக்கு அவர் அந்த பொத்தகத்தில் சிறப்பாக விடையளிக்கிறார்:

அது வெறும் வயதின் கூட்டலினால் வருவதல்ல; ஒவ்வொரு நபருக்கும், இடம் பொறுத்து மாறுகிறது. உதாரணத் திற்கு அமெரிக்காவில் இது சராசரியாக 73 வயதாகிற நிலையில், முதியவர் என்ற பட்டத்திற்குத் தயாராகிறார்கள்.

ஒருவர் எப்போது வயதானவராக முதுமை அடைந்தவராக - கருதப்படு கிறார்? என்ற கேள்விக்கு அருமை யான இலக்கணம் கூறுகிறார்! நம்மில் அவர் எப்படி சிந்திக்கிறாரோ அதைப் பொறுத்தே அதற்கு விடை கிடைக் கிறது! நகர முடியாத குந்தியே இருக்கும் நிலை, மற்றவர்களின் உதவியைப் பெரிதும் நாடியே வாழும் சூழ்நிலை, குறிப்பிடத்தக்க அளவு நம்முடைய உடல், உள்ள இயக்கத்தின் அளவு குறைந்துவிட்டது என்ற உணரும் நிலை, நாம் சந்தித்து உரையாடிடும் நண்பர் களின் எண்ணிக்கை குறையும்போது - அந்தப் பருவம் - நிலை நம்மைத் தொடுகிறது என்று கருதலாம்.

எத்தனை ஆண்டுகள் வாழுகிறோம் என்பது வயதுடன் இணைந்த ஒன்றல்ல. வயதுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே நடைமுறை உண்மை யாகும்.

நம்முடைய ஆயுள் குறைவதோ, நீளுவதோ, நம் இளமைக்கால நடவடிக் கைகளின்போது ஏற்படும் உடல்நலப் பாதுகாப்பைப் பொறுத்த ஒன்றேயாகும்.

அமெரிக்காவின் 6 குடிஅரசுத் தலை வர்கள் (வாஷிங்டனில் தொடங்கி ஜான்குன்சி ஆடம்ஸ்வரை) சராசரி வயது 76 ஆண்டுகள் ஆகும்.

கடைசி 6  குடிஅரசுத் தலைவர்கள் (பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் முதல் ரிச்சர்ட் நிக்சன்வரை) வாழ்ந்த சராசரி வயது 70 ஆண்டுகளே; கென்னடியைத் தவிர்த்து விட்டுக் கணக்கிட்டால், மற்ற வர்கள் சராசரி வயது 74.8 ஆண்டுகளே என்று விவரிக்கிறார்!

ஜிம்மி கார்ட்டர் அவர்கள் பதவியை விட்டு விலகி ஓய்வுக்குத் தயாராகும் போது, அவர்பற்றி பல அரிய தகவல் களைத் திரட்டி எழுதிய பார்பாரா வால்டர் என்ற எழுத்தாளர், இவரைப் பேட்டி கண்டு ஓர் அருமையான கேள் வியைக் கேட்டார்!
மிஸ்டர் பிரசிடெண்ட், நீங்கள் எவ்வளவு பரபரப்பான, சவால் விடுத்த பணிகளையெல்லாம் எதிர்கொண்டு பணியாற்றியுள்ளீர்கள். எது உங்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டுகள், விளக்குவீர்களா? என்று கேட்டார்.

சிறிது நேர யோசனைக்குப்பின், ஜிம்மி கார்ட்டர் கூறினார்:

(இது) இப்போதுதான் சிறப்பான ஆண்டு எனக்கு.

அந்த கேள்வியாளருக்கு வியப்பு. காரணம் கூற முடியுமா? என்று கேட்கிறார்.

சிறிதுநேரம் மீண்டும் யோசிக்கிறார் ஜிம்மி கார்ட்டர்; பிறகு பதிலளிக்கிறார்:



எனக்குப் பல்வேறு விஷயங்களைப் பற்றி நிதானமாக, முன்பு எதிரொலித்த சிந்தனைகளையும், எனது குடும்பத்த வருடன் மேலும் அதிகநேரம் செலவிட வும், எனது முந்தைய தவறுகளை நான் திருத்திக் கொண்டு வாழும் வாழ்க்கையை நடத்த அரிய வாய்ப்பு - இந்த நிலையில்தான் என்று கூறுகிறார்.

எவ்வளவு நேர்த்தியான பதில் - அறிவார்ந்த விளக்கம்!

முதுமையில் நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது நாம் சேர்த்த செல்வம் அல்ல; அனுபவித்த பதவியல்ல; முன்பு சுவைத்த ஆடம்பரங்கள் அல்ல.

நல்ல ஆதரவுள்ள அன்பு பொழியும் - வழியும் - நல்ல குடும்பத்தவர். நண்பர் கள் வட்டம்.

புதுப்புது திட்டங்கள் - தொண்டறப் பணிகள் நம்மை என்றும் சீர் இளமை யாகவே வைத்திருக்கும். முதுமை என் பது பயந்து ஓடவேண்டிய ஒன்றல்ல; மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு, வாழ்க்கை யில் முன்பு கிடைக்காததற்கு வருத்தப் படாமல், கிடைத்தவைகளை மகிழ்ச்சியாக ஏற்று, அனுபவித்துள்ள மகிழ்ச்சியை அசை போட்டு வாழுவதே முதுமையின் நற்பயன்கள்!

இளமையில் கிட்டாத வாய்ப்பு - முதுமை என்ற அனுபவக் களஞ்சியத் தின் தொகுப்பு என்பதாகும். அதைப் பகிர்ந்தளித்து நாளும் மகிழ்வுடன் வாழுவோம்.

எதுவும் நம் மனதின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்ததே!

நன்றும் தீதும் பிறர் தர வாரா! - இல்லையா?