Search This Blog

28.2.16

பெரியார் சொன்ன பிராமினோகிரசி! யைப் பாரீர்!

பெரியார் கணித்த “பிராமினோகிரசி!’’


While Speaking at a public meeting at Salem E.V.Ramasamy Naicker said that they must settle the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called Brahminocracy.      (A Hundred of the “Hindu’’ Page 337)
சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராமசாமி நாயக்கர் கூறியதாவது: வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருக்கும்போதே இந்தப் பார்ப்பன ஆதிக்கம்பற்றிய பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். அவ்வாறு செய்யா விட்டால், இங்கே ஜனநாயகம்(Democracy) இருக்காது. பார்ப்பன ஆதிக்கம்தான் (Brahminocracy) மிஞ்சும் என்று கூறினார் (1925) என்று “இந்து’’ ஆங்கில ஏடு வெளியிட்ட இந்து நூற்றாண்டு நூலில் (பக்கம் 337) குறிப்பிடப் பட்டுள்ளது. பெரியார் அன்று சொன்னது இன்று பலித்துவிட்டதா இல்லையா? (புள்ளி விவரம் 11 பக்கம் காண்க).

பெரியார் சொன்ன “பிராமினோகிரசி!’’யைப் பாரீர்!


பெரியார் சொன்ன
“பிராமினோகிரசி!’’யைப் பாரீர்!



இந்தியாவின் - மத்திய அரசில்....
1.    அருண்ஜெட்லி  - பார்ப்பனர்
2.    நிதின் கட்கரி  - பார்ப்பனர்
3.    சுஷ்மா சுவராஜ்  - பார்ப்பனர்
4.    எச்.என் ஆனந்த் குமார்  - பார்ப்பனர்
5    கல்ராஜ் மிஸ்ரா  - பார்ப்பனர்
6.    நரேந்திரமோடி ‘பனியா’ - பிற்படுத்தப்பட்ட வகுப்பு
நரேந்திரமோடி பனியா உயர்ஜாதி வகுப்பைச் சார்ந்தவர். தனது ஆட்சியின் போது அரசானை மூலம் தனது வகுப்பை மிகப் பிறபடுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்துக்கொண்டார்.
7.    ரவிப்பிரசாத் ‘சத்திரியா’  - உயர்ஜாதி வகுப்பு
8.    ராஜ்நாத்சிங் ‘ராஜ்புத்’ - உயர்ஜாதி வகுப்பு
9.    கஜபதிராஜு ‘சத்திரியர்’  - உயர்ஜாதி வகுப்பு
10.    நரேந்திர தோமார் ‘ஜாட்’ உயர்ஜாதி வகுப்பு
11.    வெங்கையா நாயுடு ‘கம்மா’ - உயர்ஜாதி வகுப்பு
12.    ராதாமோகன் சிங் ‘ராஜ்புத்’  - உயர்ஜாதி வகுப்பு
13.    சதானந்த கவுடா ‘ஒக்கலிகே’  - உயர்ஜாதி வகுப்பு
14.    ஸ்மிருதி இரானி ‘சத்திரியர்’ - உயர்ஜாதி வகுப்பு
15.    ஹர்ஷவர்தன்  ‘பனியா’
16.     உமா பாரதி - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு
17.    ஆனந்த கீதே - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு
18.    அரிசிம்ராத் பாதல் - சீக்கியர்
19.    தவார் சி கோலட்  - தலித்
20.    ராம்விலாஸ் பாஸ்வான்  - தலித்
21.    ஜுவல் ஓரம் - பழங்குடி
22.    நஜ்மா ஹெப்துல்லா  - முஸ்லீம்
10 இணை அமைச்சர்களில் 4 பார்ப்பனர்கள், ஒரு  உயர்ஜாதி,
3 பிற்படுத்தப்பட்டவர்கள், 2 மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (தலித் மற்றும் பழங்குடியினர் யாருமில்லை).
பெரும்பாலும் பார்ப்பனரும் உயர்ஜாதியினரும் ஒரு பக்கம் என்றால் ஆட்சியின் கொள்கை என்பது பார்ப்பனியம்தானே!

                          -------------------------’விடுதலை’ ஞாயிறுமலர் -27-02-2016

14.2.16

மக்களை மடையர்களாக்கும் மகாமகம் - பெரியார்

மக்களை மடையர்களாக்கும் மகாமகம்



மகாமகம் அல்லது மாமாங்கம் என்பதாக ஒரு பெரிய திருவிழா அடுத்த மாதம் (மார்ச்சு மாதம்) 10 தேதியில் கும்பகோணத்தில் நடத்த ஏற்பாடுகள் வெகு துரிதமாக நடைபெற்று வருகின்றது. சுமார் ஒரு லட்சம் ஜனங்களுக்கு மேலாகவே வந்து கூடுவார்கள் என்று கணக் கிடப்பட்டு, ரயில்வேக்காரர்கள் பல பிளாட்டுப்பாரங்களையும், கொட் டகைகளையும் போடுகிறார்கள். அதற்குத் தகுந்தபடி கூட்டங்களை வரவழைக்க அநேகவித சித்திரப் படங்களை அச்சடித்து ரயில்வே ஸ்டேஷன்களின் மேடைகளில் எல்லாம் கட்டித் தொங்கவிட்டு, பத்திரிகைகளுக்குப் பணங்கொடுத்துப் பிரசுரிக்கும்படி செய்தும், மற்றும் பல வழிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள்.

கும்பகோணம் - பார்ப்பனர்கள்
சாதாரணமாக கும்பகோணமானது ஒரு அழகான பட்டணம் என்றோ, சுகாதார வசதியான பட்டணமென்றோ, வேறு ஏதாவது ஒரு வழியில் மக்கள் அறிவுக்கோ, தொழிலுக்கோ, பயன் படத் தகுந்த விசேஷம் பொருந்திய பட்டணமென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. அது ஒரு புராதனமான பட்டணம் என்பதோடு, நாளுக்குநாள் க்ஷீணதிசை அடைந்துவரும் தோற்றமுடைய பழங்கால முறைக் கட்டங்களையும் உடைய ஊராகும். அதில் வசிக்கும் மக்களோ பெரும் பாலோர் பார்ப்பனர்களும் மேல் ஜாதி மிராசுதாரர்களுமாகும்.
கும்பகோணப் பார்ப்பனர்கள் என்றால் மிக தந்திர சாலிகள் என் பார்கள். கும்பகோணம் மாத்திரமல்ல தஞ்சாவூர் ஜில்லா முழுவதுமே உள்ள பார்ப்பனர்கள் பழைய ராஜாவின் தர்மத்தினாலும், மற்றும் தஞ்சை ஜில்லாவிலேயே ஏற்பட்டிருந்த இரண்டு முதல்தர காலேஜினாலும் சாப்பாடும், கல்வியும் சுலபமாய் இருக்கும் இடத்திலேயே கிடைக்கக் கூடிய நிலைமை இருந்ததால் படித்துப்பட்டம் பெறவும், அதற்கேற்ற உத்தியோகங்கள் பெறவும் சவுகரியம் ஏற்பட்டு இந்த மாகாணத்தில் அவர்களே முக்கியமானவர்களாய் இருந்துவந்திருக்கிறார்கள். சுமார் 25 வருஷங்களுக்குமுன் தமிழ் நாடு மாத்திரமல்ல சென்னை மாகாண முழுவதிலும் தஞ்சை ஜில்லா பார்ப் பனர்களே திவான்களாகவும், பிரபல வக்கீல்களாகவும் முன்சீப், ஜட்ஜு, டிப்டி கலெக்டர், போலீஸ், இன்ஸ்பெக்டர், சூப்பிரண்டுகளாகவும் மற்றும் பல பெரிய பதவி உடையவர்களாகவும் ஆக நேர்ந்து பிரபலமாகி விட்டார்கள். இந்தக்காரணங்களால் கும்பகோணம் பார்ப்பனர்களுக்கு அதிகமான விளம்பரம் ஏற்பட வசதியாகிவிட்டது. அங்குள்ள மிராசுதாரர்களும், ஏறக்குறைய பார்ப்பனர்களைக் காப்பியடித்து தங் களையும் மேல் ஜாதிக்காரர்கள் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதோடு நின்றுவிட்டார்களே தவிர, கல்வியில் அவர்களுடன் போட்டி போடவோ, உத்தியோகம் பெறவோ, முடியாத படி பார்ப்பனர்கள் செய்து வந்த சூழ்ச்சியை வென்று முன்னேற முடியவில்லை.  ஆதலால் பணம் சேர்ப்பதிலும், பூமியை பெருக்குவதிலும் மாத்திரம் கவலைகொண்டு ஆள் ஒன்றுக்கு 1000 வேலி 2000 வேலி என்பதாக நிலத்தை பெருக்கிக் கொண்டார்கள். இரண்டு கூட்டமும் சிறிதாவது சரீரத்தினால் உழைக்காமல், ஏழைகள், உழைப்பாளிகள் ஆகியவர்களின் பாட்டினாலேயே வாழ்ந்து வருகிறார்கள். இதைத்தவிர மற்றபடி அந்த ஜில்லாவுக்கும், கும்ப கோணத்துக்கும் வேறு உண்மையான யோக்கியதை ஒன்றும் கிடையாது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள 
ஸ்தல புராணம்

ஆனால் மற்றொரு யோக்கிய தையும் உண்டு, அது மேற் சொன் னவைகளை விட மிகவும் மோச மான யோக்கியதையேயாகும். அதென்ன வென்றால் தஞ்சை ஜில்லாவிலுள்ள ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு விசேஷ ஸ்தலங்களாகும். பாடல் பெற்ற ஸ்தலங்களாகவும், பூலோக வைகுண்டமாகவும், பூலோக சுவர்க்க மாகவும், மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய க்ஷேத்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள், புண்ணிய மூர்த்தங்கள் என்பவை எல்லாம் தஞ்சை ஜில்லாவிலேயே ஒவ்வொரு கிராமத்தில் ஒவ்வொன்று பிரதிபலிப்பதாக கதைகளும், புராணங்களும் கர்ண பரம்பரை விசேஷங்களும் உண்டு. தஞ்சாவூர் ஜில்லாக்காரர்கள் படித்து விட்டு வெளியிடங்களுக்குச் சென்று ஆங்காங்குள்ள செல்வங்களை கொள்ளைகொண்டு போய் சேர்ப்பது ஒன்று, கிராமங்கள் தோறும் புண்ணிய க்ஷேத்திரங்களும், பாடல்பெற்ற க்ஷேத்திரங்களுமாய் இருப்பதால் மற்ற ஊர்களில் இருக்கும் மூடர்கள் எல்லாம் பாடுபட்டுத்தேடிய பணங்களை மூட்டை கட்டிக் கொண்டுபோய் அந்த ஜில்லாவில் அழுதுவிட்டு வரும் மடத்தனம் இரண்டு, ஆகிய இவைகளால் மாத்திரமல்லாமல், மைசூர், குடகு தேசத்தில் இருந்து வரும். காவேரியானது சேலம் கோயமுத்தூர் ஜில்லா வழியாக வந்தாலும் சேலம் ஜில்லாகாரர்களுக்கு குடிப்பதற்குக்கூட மார்க்கமில்லாமல்  செய்துவிட்டும், கோயமுத்தூர் ஜில்லாக்காரருக்கு ஒரு செண்டு பூமிகூட பயிராவதற்கு உதவாமல் ஏமாற்றிவிட்டு எல்லா தண்ணீரும் நேரே தஞ்சை ஜில்லா சென்று. ஜனங்கள் வெளிக்கு போவதற்குக்கூட இடமில்லாமல் எல்லா நிலமும் நஞ்சை பயிராகும்படியும் செய்து கொண்ட சூழ்ச்சியால் ஏற்பட்ட லாபம் மூன்று. இந்தப்படியாக இயற்கை வளம் பெற்ற தஞ்சை ஜில்லாவுக்கு மகாமக விசேஷம் என்னும் ஒருபுரட்டு யோகமும் சேர்வதில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இப்போது நாம் இதை ஏன் எடுத்துக்காட்ட வருகிறோம் என்றால், நமது மக்கள் இத்தனை காலம்தான் மூடர்களாய், மடையர்களாய், கடையர்களாய் இருந்து இவ்விதப் புரட்டுகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் ஆளாகி, நஷ்டமும், கஷ்டமும், இழிவும், ஏமாற்றமும் அடைந்து வந்தோம் என்றாலும் இனியும் பாரம்பரியமாய் தலைமுறை தலை முறையாய் அடைய வேண்டுமா? என்பதை ஞாபகப்படுத்தவே இதை எழுதுகிறோம்.
மகாமக அற்புதம்!
தோழர்களே! மகாமகம் என்றால் என்ன? என்பதை சற்று விசாரித்துப் பாருங்கள். இதை அறிவதற்காக நாம் ஆவல் பட்டு தேடினோம், கும்பகோண ஸ்தலபுராணம் என்பதில் இருப்பதாக அறிந்தோம், அதை வரவழைத்துப் பார்த் தோம். அதில் உள்ளதை வெளியிடுகின் றோம்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும் ஒன்பது கன்னிகைகளாக வெளிவந்து, வெள்ளியங்கிரிக்குச் சென்று பரமசிவனை அடைந்து, உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் எவ்வளவோ கொடியதாகிய பாவங்களைச் செய்து விட்டு எங்களிடத்தில் வந்து ஸ்நானம் செய்து அவர்களது பாவங்களை எங்களுக்குக் கொடுத்து தீர்த்துக் கொண்டு போய் விடுகிறார்கள் அந்தப் பாவங்களையெல்லாம் பெற்றுக்கொண்ட நாங்கள் எப்படி அவைகளை போக்கிக் கொள்ளுவது என்று கேட்டார்கள். அதற்கு பரமசிவனார் கும்பகோணத்திலே, தென் கிழக்கிலே ஒரு தீர்த்தம், உண்டு 12 வருஷத்துக்கு ஒரு முறை மாசி மாதம் மகாமக நாளன்று அதில் குளிப்பீர்களானால் உங்கள் பாவங்கள் தொலைந்து போகும் என்று சொன்னார்.  அதற்கு 9 கன்னிகைகளும் கும்பகோணம் எங்கே இருக்கின்றது என்று கேட்டார்கள். அதற்கு பரமசிவனார் அந்த 9 கன்னிகை களையும் பார்த்து நீங்கள் காசிக்குப் போயிருங்கள், அங்கிருந்து நான் விஸ் வேஸ்வரன் என்னும் பெயருடன் உங் களை கும்பகோணத்திற்கு அழைத்துப் போகின்றேன் என்று சொன்னார். அந்தப்படியே கன்னிகைகள் காசிக்குப் போயிருந்தார்கள். பரமசிவனார் அவர் களை காசியிலிருந்து கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று மகாமக குளத்தைக் காட்டி குளிக்க வைத்தார். பிறகு சிவபெருமானும் அந்த  கன்னிகைகளும் கும்பகோணத்திலேயே கோவில் கொண்டு விட்டார்கள். ஆதலால் இதில் அந்த காலத்தில் குளித்தவர்களுக்கு சர்வபாவமும் கலைந்து சர்வ மங்களமும் உண்டாகும் என்று கண்டிருக்கின்றது.
மடையர்கள் என்றால் கோபமேன்?
தோழர்களே!  இதுதான் கும்பகோண ஸ்தலமகத்துவமும், தீர்த்த மகத்துவமும், கோவில் மகத்துவமும் ஆகும். இதற்கு அப்புறம் அந்தக் குளத்தில் எப்படிக் குளிப்பது, அதற்காக பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனப் பெண்களுக்கும் எப்படி, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியது என்கின்ற விஷயங்களும் எந்தெந்த இடத்தில் குளிப்பது, எந்தெந்த சாமியை எப்படி எப்படி கும்பிடுவது என்கின்ற விஷயமும் இருக்கின்றது.
இந்தக் கதையை ஆதாரமாக வைத்த இந்தமகாமக உற்சவத்திற்காக எவ்வளவு ஆர்பாட்டங்கள், எவ்வளவு விளம்பரங்கள் எவ்வளவு பணச் செலவுகள், எவ்வளவு கஷ்டங்கள் என்பதை யோசித்துப்பாருங்கள். இந்துக்கள் மடையர்கள், அஞ்ஞானிகள், மூடர்கள் என்று ஒருவன் சொன்னால் உடனே கோபப்பட்டுக் கொள்ளத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கின்றோமே அல்லாமல் அறிவைக் கொண்டு பார்க்கின்றோமா?
இந்த கும்பகோணத்துக்கும், அங்குள்ள மாமாங்கக் குளத்திற்கும் உள்ள விசேஷம் போலவே உலகத்தில் உள்ள அனேக சாக்கடை களிலும், பட்டிக்காடுகளிலும், குப்பை மேடுகளிலும் உள்ள குழவிக் கல்லு களுக்கும், நீரோடைகளுக்கும், குளங்களுக்கும், குட்டைகளுக்கு மெல்லாம் புராணங்களும், கதை ஆதாரங்களும், ஐதீகங்களும் இருந்து வருகின்றன. பொதுவாக இதுபோன்ற எந்தக் காரியங்களுக்கும் விசேஷம் என்பதெல்லாம் இரண்டே இரண்டு வாக்கியங்களில் தான் அடங்கி இருக்கின்றன. அதாவது, 1. சர்வ பாவங்களும் நிவர்த்தியாகி விடும். 2. வேண்டியதெல்லாம் அடையலாம். என்கின்றவைகளேயாகும். இந்த இரண்டு காரியமும் யோக்கியமான காரிய மாயிருக்குமா? என்பதை யோசித்துப் பாருங்கள். மனிதன் செய்த பாவம் போகுமா?
மனிதன் செய்கின்ற பாவமெல்லாம் இந்த மாதிரியான காரியங்களால் தீர்ந்து போவதாயிருந்தால், உலகத்தில் எந்த மனிதனாவது பாவ காரியங்களைச் செய்யத் தவறுவானா? தயங்குவானா? என்று யோசித்துப்பாருங்கள்.
மனிதனுக்கு வேண்டிய - அவன் ஆசைப்படும் படியான காரி யங்கள் எல்லாம் இந்த மாதிரியான சிறுகாரியங்களால் கை கூடிவிடுவதாய் இருந்தால் மனிதனுடைய முயற்சி - நடத்தை - ஒழுக்கம் என்பவைகளுக் கெல்லாம் அவசியமும், நிபந்தனையும், வரையறையும் எதற்காக வேண்டும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
நிற்க, பாவமுள்ள மனிதர்கள் நதிகளில் ஸ்நானம் செய்ததால் நதிகளுக்கு அந்தப் பாவங்கள் ஒட்டிக்கொண்டது என்பதில் ஏதாவது அறிவோ, உண்மையோ இருக்க முடியுமா? அந்த நதிகள் அந்தப் பாவத்தை தொலைக்க மற்றொரு தீர்த்தத்தில் போய் குளிப்பது என்று மகாமக தீர்த்தத்துக்கு வந்து குளிப்பதானால் இதில் ஏதாவது புத்தி இருக்கின்றதா? நாணயம் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள். இத்தனை பாவங்களையும் ஏற்றுக்கொண்ட மகாமக தெப்பக்குளம் அதன் பாவத்தைத் தீர்க்க எந்த உரு வெடுத்து எந்த குளத்தில் போய் குளிப்பது என்பதையும், பிறகு அந்தக் குளம் வேறு எந்தக்குளத்துக்குப் போய் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளும் என்பதையும் யோசித்தால் கடுகளவு அறிவுள்ளவனாவது இதை ஏற்க முடியுமா என்று பாருங்கள். இதையெல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால், பாவ புண்ணியத்தின் பேரால், கடவுள் பேரால், தீர்த்தம் ஸ்தலம் மூர்த்தி என்னும் பெயர்களால் மக்கள் எவ்வளவு தூரம் ஏய்க்கப்பட்டு, கடையர்கள், மடையர்கள் ஆக்கப்படுகின்றார்கள் என்பதையும் சிந்தித்துப்பாருங்கள்.
மற்றும், அந்த புராணத்திலேயே இந்த மகாமகக் குளத்துக்குள் வடக்கு பாகத்தில் 7 தீர்த்தங்கள் இருப்பதாகவும், கிழக்கு பாகத்தில் 4 தீர்த்தங்கள் இருப்பதாகவும், நடுமத்தியில் 66,00,00,000 (அறுபத்தி ஆறுகோடி) தீர்த்தம் இருப்பதகாவும் இந்த மகாமக குளத்தில் முழுகினால் இத்தனை தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்குமென்றும் எழுதி, அந்தப்படி ஒரு சித்திரமும் வரையப் பட்டிருக்கின்றது. இது எவ்வளவு பரிகசிக்கத்தக்க விஷயம் என்றும் பாருங்கள். இதை எழுதினவன் எவ்வளவு அயோக்கியன் அல்லது எவ்வளவு மூடன் என்பதல்ல இப்போதய நமது கேள்வி. மற்றென்னவென்றால் இதைப் படித்துப் பார்த்து இதன்படி நடப்பார்கள் என்று நம்பிய மக்களை இவன் எவ்வளவு முட்டாளாகவும், அடிவண்டலாகவும் கருதி இருக்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வியாகும்.

தேங்கிய நீர் தீர்த்தமா-
தீர்த்தம் என்றாலும், நதி என்றாலும், குளம் என்றாலும் என்ன என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். நதி என்றால் மழைபெய்வதால் ஏற்படும் வெள் ளங்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஓடை அல்லது நீர்ப்போக்காகும்.
குளம் என்றால் இந்தமாதிரி ஓடையில் இருந்து வழி வைத்து தண்ணீர் நிரப்புவதோ, அல்லது மழை வெள்ளத்தால் ஊரில் உள்ள அசுத்தங்களையும், கசுமாலங்களையும் அடித்துக் கொண்டுவந்து குளத்தில் விழுந்து தேங்கியிருப்பதோதான். மற்ற குட்டித்தீர்த்தங்கள் என்பதும் கிணற்றுக்குநீர் ஊற்று போன்ற ஊற்றேயாகும். இந்தத் தண்ணீர்களுக்கு எல்லாம் அந்தந்த இடத்தை அனுசரித்த குணங்களேதான் உண்டு. மற்றபடி அவற்றில் ஒருமனிதன் செய்யும் பாவம் என்பதைப் போக்கவோ, அவன் ஆசைப் பட்டதைக் கொடுக்கவோ ஆன சக்திகள் எப்படி இருக்கக்கூடும் என்பது ஒரு மனிதனுக்கு தெரியாதா? என்றுதான் கேட்கின்றோம்.
மாமாங்கக் குளம் 
என்றால் என்ன?

மாமாங்க குளம் என்பது மேல் கண்டமாதிரியான ஒரு சாதாரண தெப்பக்குளம். மகாமக சமயத்தில் அதில் உள்ள தண்ணீர் அவ்வளவையும் இறைத்து விட்டுவெறும் அடிவண் டலையும், சேற்றையும் மாத்திரம் மீதி வைத்து அதிலும் கந்தகப் பொடியைக் கலக்கி விடுவார்கள். அந்த சேறானது கருப்புக் களிமண்போல் இருக்கும். அந்தக் குளத்தின் விஸ்தீரணமோ சுமார் 500 அடிசதுரம் இருக்கலாம். அடிமட்டம் சுமார் 200 அடி சதுரம் இருக்கலாம். இதில் லட்சம் பேர்கள் குளிப்பது என்றால் எப்படி சாத்தியமாகும். அந்தக் குளத்தில் இறங்கி அந்த சேற்றில் கொஞ்சம் எடுத்துச் சரீரத்தில் பூசிக்கொள்ள வேண்டியதுதான். பிறகு இந்த அசிங்கம் போவதற்கு வேறு குளத்தில் குளிக்க வேண்டியதுதான். இதுதான் வழக்கமாம். ஒரு கிறித்தவரோ, ஒரு மகமதியரோ இந்தப்படி செய்தால், அதை நாம் பார்க்க நேர்ந்தால் அப்போது நாம் என்ன என்று சொல்லுவோம். மிஸ் மேயோ நமது பழக்க வழக்கங்களைப் பற்றியும், சடங்குகளைப் பற்றியும் தீர்த்தங்களைப் பற்றியும் எழுதியதைப் பார்த்து கோபித்துக்கொண்டோம். ஆனால் இந்த மாதிரி சேற்றில் குளிப்பதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்து விடும் என்று கருதி இருக்கிற முட்டாள்தனமான பேராசைக்காக நாம் வெட்கப்படுவதில்லை. என் றால் பிறகு எந்த விதத்தில் நாம் அறி வாளிகள், யோக்கியர்கள், மனிதத் தன்மையுடையவர்கள் என்று யோசித்துப் பாருங்கள். இந்த மாமாங்கத்தால் எத்தனை லட்ச ரூபாய் இரயில்காரன் கொள் ளையடிக்கப் போகிறான்? எத்தனை லட்ச ரூபாய் பார்ப்பான் கொள்ளை அடிக்கப் போகிறான் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அம்மை, காலராவுக்குப் பலியாவதோ?
இவை ஒரு பக்கம் இருப்பதோடு கூட்ட நெருக்கடியில் உயிர்ச்சேதம் எவ் வளவு, திருட்டு எவ்வளவு, இவை தவிர இப்பொழுதே அங்கு கும்பகோணத்தில் - காலராவும் அம்மையும் வந்து விட்டது. இதற்காக கொட்டகை கட்டி அங்கு கட்டிலும் படுக்கையும் போட்டாய்விட்டது. பிளேக்குக்கும் கொட்டகையும் போட் டாகி விட்டது. அதுவும்தான் தன் பாவத்தைத் தீர்த்துக்கொள்ள அங்குவரப் போகின்றது. சுடுகாட்டுக்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கி வைத்து அங்கு சில குழிகளும் தயாராய் முனிசிபாலிடியார் வெட்டி வைத்திருக்கிறார்கள்.
கும்பகோணத்துக் கொசுக்களோ அந்த ஊர் பார்ப்பனர்களையும் குச்சிக்காரிகளையும் விட எத்தனையோ பங்கு மோசமானவை என்று சொல்லலாம். ஏனெனில் இது அவர்களை விட மோசமாக வெளியில் இருந்து வருகின்றவர்களின் இரத்தத்தை உறிஞ்சக் காத்துக் கொண்டு இருக்கின்றது. மாமாங்கத்துக்கு போய் வந்தவனுக்கு வரப்போகின்ற மலேரியா காய்ச்சல் அடுத்த மாமாங்கம் வந்தா லொழியதீராது. இந்த நிலையில் உள்ள மகாமகம் என்ன புண்ணியத்தைக் கொடுக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
--------------------------------தந்தை பெரியார் - ’குடிஅரசு’ - தலையங்கம் - 12.02.1933

-*****************************************************************************

மகாமகம்


மாமாங்க சம்பந்தமான இந்த உண்மைகளை வெளிப்படுத்தி பாமரஜனங்களுக்கு எச்சரிக்கை செய்ததற்காக மிக மிக கோபங்கொண்டு மெயில் பத்திரிக்கையில் அதன் நிருபர் ஒரு சேதி எழுதி இருக்கிறார் அதன் சுருக்கமாவது சுயமரியாதை இயக்கத் தலைவர்களும், சில காங்கிரஸ்காரர்களும் சேர்ந்து மகாமக பகிஷ்காரம் செய்யப் புறப்பட்டு சில துண்டுப் பிரசுரங்கள் மாயவரத்திலிருந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள். ஏனென்றால் சுயமரியாதைக்காரர்களை நாஸ்திகர்கள் என்றே ஜனங்கள் கருதுவதால் இவர்கள் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள். அன்றியும் இவர்கள் இப்படிச் சொல்லுவதாலேயே அனேகம் பேர் மாமாங்கத்துக்கு வருவார்கள், ஆதலால் சுயமரியாதைக்காரர் வேலை பயன்படாது என்று எழுதப்பட்டிருக்கிறது. சுயமரியாதைக்காரர்கள் நாஸ்திகர்கள் என்பதினாலேயே அவர்கள் நல்லது சொன்னாலும்கூட ஜனங்கள் கேட்க மாட்டார்கள் என்கின்ற தைரியம் மெயில் நிருபருக்கு எப்படி ஏற்பட்டதோ தெரியவில்லை. நாஸ்திகர் அல்லாதவர்கள் அவ்வளவு பெரிய மூடர்கள் என்று மெயில் பத்திரிகையின் நிருபர் கருதி இருப்பது அவரைத்தான் ஏமாற்றமடையச் செய்யுமே ஒழிய மற்றபடி சுயமரியாதைக்காரரை ஒன்றும் செய்து விடாது.


மாமாங்கத்திற்கு ஜனங்கள் போவதினால் சுயமரியாதைக்காரருக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை.  மாமாங்கத்திற்கு ஜனங்கள் போகாமல் இருந்து விடுவதால் சுயமரியாதைக்காரருக்கு லாபம் ஒன்றும் வந்து விடப்போவதில்லை. கால தேச நிலைமையை உத்தேசித்து இந்த மாதிரி முற்போக்குள்ள காலத்தில் எங்கோ ஒரு சுகாதார மற்ற ஆபாச ஊரில் உள்ள ஒரு சேற்றுத் தண்ணீரில் குளிப்பதற்காக மக்கள் 10, 20, 100, 200, ரூபாய் வீதம் செலவு செய்து கொண்டு போய், பலவித துன்பங்களையும் நோய்களையும் சம்பாதித்துக் கொண்டு வருவது அறிவுடமையா? என்ற கருத்தின் மீது தான் இந்தப் பிரச்சாரம் செய்கிறார்களே ஒழிய வேறு காரியம் ஒன்றும் இல்லை. இந்திய மக்களுடைய - (சிறப்பாய்) தென்னாட்டு மக்களுடைய பகுத்தறிவை அளப்பதற்கு இந்த கும்பகோண மாமாங்கமே ஒரு முக்கிய அளவு கருவி என்றே நினைக்கின்றோம். அன்றியும் இதுவரை செய்து வந்த பகுத்தறிவு பிரச்சாரமானது எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பதையும் அறிய இது ஒரு சந்தர்ப்பமும் ஆகும். தவிர ஆங்காங்குள்ள பகுத்தறிவு சங்கத்தாரும், சுயமரியாதைச் சங்கத்தாரும், அதன் சார்புடைய மற்ற சங்கத்தாரும், தேசியவாதிகள் என்பவர்களும் இந்த மாமாங்கப் புரட்டைப்பற்றி பாமர ஜனங்களுக்கு நன்றாய் விளக்கிப் பிரச்சாரம் செய்து அவர்களை இந்த மாதிரியான கஷ்டத்தில் இருந்தும், நஷ்டத்தில் இருந்தும் மீட்பார்களாக.       

               தந்தை பெரியார் -’குடிஅரசு’ - துணைத் தலையங்கம் - 19.02.1933

9.2.16

மகாமகம்-தண்ணீரில் குளித்தால் பாபம் தொலையுமா?-பெரியார்

மகாமகம் திராவிடனுக்கு மானக்கேடு!

- தந்தை பெரியார்

தண்ணீரில் குளித்தால் 
பாபம் தொலையுமா?

கும்பகோணத்தில் மகாமக உற்சவம் நடக்கப் போகிறது. அதற்கு திராவிட மக்களை வரும்படியாக கும்பகோணம் பார்ப்பனர்களால் அழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்தவண்ணமாக விளம்பரங்கள் காணப்படுகின்றன.
பார்ப்பனப் பத்திரிகைகள் மாமாங்கத்தைப் பற்றி பிரமாதப்படுத்தி மக்களை அங்கு சேர்ப்பிக்க  - தள்ளிவிட முயற்சிக் கின்றன.
இந்த 20ஆம் நூற்றாண்டுக்குப் பக்கத்தில் வாழும் திராவிட மக்கள் இப்படி ஒரு அறிவும், மானமும் சூன்யமான ஒரு உற்சவத்தை மதித்துக் கும்பகோணம் சென்று கூமுட்டைகள் ஆவதென்றால் இதை உலகின் 8வது அதிசயமென்றுதான் சொல்ல வேண்டும். கும்பகோணத்தில் இவ்வளவு கூட்டம் சேர்க்கப்படுவதற்கும் மாமாங்கத்தன்று அங்கு என்ன புதிய சங்கதி காணப்படப்போகிறது என்பதை யோசிப்போம்.


அங்குள்ள மாமாங்கக் குளம் என்பது வெகு நாளாக இருந்து வருவதேயாகும். அதில் உள்ள தண்ணீரும் வெகு நாளாக இருந்து வருவதேயாகும். அப்படி இருக்க அன்று (மக நட்சத்திரத் தினத்தன்று) மாத்திரம் அக்குளத்திற்கும் தண்ணீருக்கும் எப்படிப் புது யோக்கியதையோ, பெருமையோ உண்டாகிவிடும் என்பதை அறிவுள்ள மனிதன் யோசித்துப் பார்க்க வேண்டாமா!  தமிழனின் மதி ஈனத்தை கைமுதலாக வைத்து வாழும் பார்ப்பனர் கூட்டம் தங்கள் வாழ்க்கைக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமாக எதைக் கற்பித்தாலும், தமிழன் அதற்கு அடிமையாவதென்பது இழிவான காரியமல்லவா?
பார்ப்பனர் கட்டிய கதை

கும்பகோண மாமாங்கத்திற்குப் பார்ப்பனர் ஏற்படுத்தி இருக்கும் கதை என்னவென்பது எவரும் அறியாததல்ல.
அதாவது, சப்த நதிகளும் சிவனிடம் சென்று உலக மக்கள் தங்கள் தங்கள் பாவத்தைக் கழிப்பதற்கு ஆக தங்களிடம் வந்து குளித்து முழுகிப் பாவங்களை கழுவிவிட்டுக்கொண்டே இருப்பதால் அப்பாவங்கள் தங்களால் சுமக்க முடியவில்லை என்று அழுதார்கள். அதற்கு சிவன் அந்நதிகளைத் தேற்றி 12 வருஷத்திற்கு ஒரு முறை கும்ப கோணத்திற்கு வந்து அங்குள்ள ஒரு குளத்தில் ஒரு தீர்த்தத்தை உற்பத்தி செய்கிறேன். அக்குளத்திற்கு வந்து நீங்கள் குளித்தால் உங்களின் பாவங்கள் அதில் கழுவப்பட்டுப் போகும் என்றும் சொன்னார். அதற்கு ஆக அந்த நதிகள் அங்கு வந்து குளித்து தங்கள் மீதுள்ள பாவங்களை அதில் கழுவி விடுகின்றன. ஆதலால் மனிதர்களும் அன்று வந்து அதில் குளித்தால் அம்மனிதர்களின் பாவமும் அங்கு கழுவப்பட்டுவிடும் என்பது புராணக் கதை. இதுதான் மாமாங்கக் கதையின் சுருக்கம்.
இதை எந்த மனிதனாவது நம்ப முடியுமா? மனிதன் உயர்ந்த ஜீவப் பிராணி என்பதற்குக் காரணம் அவனுக்கு உள்ள ஆறாவது (பகுத்தறியும்) அறிவேயாகும். அதாவது சிந்தித்துப் பார்க்கும் தன்மையே யாகும். அப்படிப்பட்ட ஆறாவது அறிவுப்படி பார்த்தால் இந்த மாமாங்கக் கதையை எந்த மனிதனாலாவது நம்ப முடியுமா என்று கேட்கின்றோம்.
நதியில் குளித்தால் 
பாபம் போகுமா?

ஒரு நதியில் ஒரு மனிதன் குளித்த மாத்திரத்தில் அவனது பாபம் அதில் கழுவப்பட்டுப்போகும் (தொலையும்) என்பது எப்படி அறிவுக்குப் பொருந்தும் என்பதும், அந்த நதி அந்தப் பாவத்தை சுமக்காமல் சிவனிடம் சென்று அழுவது என்பதும், அதற்கு ஆக (அந்த நதிகளின் பாவபாரம் குறைவதற்கு ஆக) வேறு ஒரு குளத்தைக் கடவுள் சிருஷ்டிக்கிறது என்பதும், அந்தக் குளத்திற்கு இந்த (ஏழு) நதிகள் வருவது என்பதும் ஆகிய சங்கதிகள் மனிதர்களுக்குச் சொல்லக் கூடியவைகளா அல்லது மடையர்கள், மனிதத்தன்மை அற்ற, மனித உருக்கொண்ட மிருகங்களுக்கும் மரஞ்செடிகளுக்கும் சொல்லக் கூடிய கதையா என்று வாசகர்களை சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
12 வருடத்திற்கு ஒரு முறை அந்தக் குளத்தில் நீர் பொங்கி வருவதாக நேரில் பார்த்ததாகவே சிலர் கூறுகிறார்கள்.
தண்ணீரை நெருப்பில் வைத்துக் காய்ச்சினாலல்லாது, பொங்குகிற வஸ்துவை அதில் போட்டாலல்லாது தண்ணீர் எப்படிப் பொங்க முடியும்? மாமாங்க தினத்தன்று தண்ணீர் குளத்தில் விட்டு வைத்த அளவுக்கு மேல் அதிகமாக காணப்படுவதாக சில பார்ப்பனர்கள் கதை கட்டிவிடுகிறார்கள். மக்களைத் தண்ணீருக்குள் இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி பிறகு தண்ணீரைப் பார்த்தால் அப்போது அது பொங்குகிறதா இல்லையா என்பதின் உண்மை கண்டுபிடிக்க முடியும். அப்படிக்கில்லாமல் பதினாயிரக்கணக்கான மக்களை, லட்சக்கணக்கான மக்களைக் குளிக்கவிட்டு அதன்பிறகு தண்ணீர் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படித் தண்ணீர் என்றே சொல்ல முடியும்? குளிக்கப்போகும் மக்கள் அந்தக் குளிரில் தங்கள் சிறுநீரைக் கழிக்க அந்தக் கூட்டத்தில் குளக்கரையில் எங்கு இடம் காண முடியும்? ஆதலால் குளிக்கிறவர்கள் அவசர அவசரமாகத் தண்ணீரில் இறங்கி அங்கு நீர்கழிக்க ஏற்பட்டு விடுவதன் மூலம் குளத்தின் தண்ணீர் பெருகி இருக்கலாம்; அந்தச் சிறுநீரின் தன்மையால் குளத்தில் குமிழ்கள் காணப்படலாம். குளம் தன் பாவத்தை எங்குக் கழுவும்?
அன்றியும் மக்கள் ஏராளமாகத் தண் ணீரில் இறங்குவதாலும் தண்ணீர் உயர்ந்து இருக்கலாம். இந்த மாதிரி காரணங்களால் தண்ணீர் மட்டம் 4, 2 படிக்கட்டுகளுக்கு உயர்ந்துவிட்டால் அதைப் பொங்கிற்று என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று கேட்கிறோம்.
அன்றியும் சப்த நதிகளுக்குமே தங்களிடம் மக்கள் கழுவிவிட்ட பாபம் தாங்காமல் அங்கு (மாமாங்க குளத்திற்கு) வந்து குளித்துப் பாவங்களைக் கழுவி விட்டு விட்டுப் போக வேண்டிய அவசியம் வந்ததென்றால், பிறகு இந்த நதிகள் கழுவிவிட்ட பாபத்தை இந்த மாமாங்கக் குளம் கழுவி விட வேறு எந்தக் குளத்திற்கு வருஷத்திற்கு வருஷம் அல்லது 12 வருஷத்திற்கு ஒரு தரமாவது அது சென்று வந்தது என்ற கேட்கின்றோம்.

ஆகவே, எத்தனையோ காலமாக எத்தனையோ பேர் கழுவிவிட்ட பாபங் களைக் கொண்டு வந்து கழுவிவிட்ட மாமாங்க குளப் பாவத்தண்ணீரில் மனிதன் போய் குளிப்பதானால் அவனுக்கு பாவம் ஏறுமா? அல்லது கழியுமா? என்று அறிவுடைய மக்கள் யோசிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம். எனவே, இந்த மாமாங்கப் புரட்டு பார்ப் பனர் பிழைக்க ஏற்படுத்திக்கொண்ட சுங்கச்சாவடி, கட்டுக்கதை அல்லாமல் இதில் ஏதாவது நாணயமோ, உண்மையோ, அறிவுடைமையோ இருக்க இடமிருக்கிறதா? இதற்குப் பார்ப்பனப் பத்திரிகை உடையவும் காங்கிரஸ்காரர்களுடையவும் விளம்பரம் ஒருபுறமிருக்கக் காங்கிரஸ்காரர்கள் அதைத் தங்கள் பிரசாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளச் செய்யும் சூழ்ச்சி ஒருபுறம் இருக்க ரயில்வேக்காரருடைய விளம்பரம் வேறு பக்கம் இருந்து வருகிறது. இந்த வருஷம் மாத்திரம் சண்டை நெருக்கடி காரணமாக ரயில்விட முடியாது என்று சொல்லுகிறார்கள் என்றாலும், அந்த விளம்பரத்தின் மூலம் மக்களுக்கு மா மாங்கத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு தான் வருகிறார்கள். ரயிலுக்கு எப்படியும் சென்ற மாமாங்கத்திற்கு கிடைத்த வரும்படிக்குக் குறையாமல் வரும்படி கிடைக்கத்தான் போகிறது. ரயில்வே சிப்பந்தி பார்ப்பனர்களுக்கும் பிரைஸ் அடிக்கத்தான் போகிறது. மற்றும் பார்ப்பனர்களுக்குக் காப்பிக்கடை, ஓட்டல், தங்குமிட வசதி, பாட்டுக் கச்சேரி, சினிமா, முதலிய காரியங்களாலும், தர்ப்பணம், சங்கல்பம் முதலியவைகளாலும், மற்றும் பலசிங்காரச் சிற்றின்பக் காரியங்களாலும் இரும்பு, நூல், ஜவுளி வியாபாரிகள் அடித்த கொள்ளை லாபத்தைப் போல் லாபம் கிடைக்கத்தான் போகிறது. கடைசியில் கெட்டு நட்டமடைந்து இழிவடைந்த முட்டாளாகத் திராவிட மக்கள்தான் ஆகப் போகிறார்கள்.

மனைவி மக்கள் இடிபடவா?

மற்றும் தன் மனைவி மக்களை ஒரு மீட்டிங்குக்கும் கான்பரன்சுக்கும் அனுப்பக்கூடப் பயந்து நடுங்கியவனும் உறை போட்டு அறைக்குள் பூட்டி வைத்துப் பூட்டை இழுத்து இழுத்துப் பார்த்துவிட்டு வெளியில் போய்வருகிறவனும் கூடத் தன் மனைவி மக்களை மாமாங்கத்திற்குக் கூட்டிக்கொண்டு போய் கூட்டத்தில் சிக்கவைத்து நசுக்குண்ட பஞ்சாமிர்தம் போல் ஆனதைப் பார்த்து கழுத்து பத்திரம், காது பத்திரம் என்று மாத்திரம் உரத்துக் கூறிக்கொண்டு இழுத்து வரப்போகிறான் என்பதைத் தவிர மாமாங்கத்தின் முடிவு வேறு என்னமாக இருக்க முடியும்?
இந்த சர்க்கார் மனுதர்ம, புராண ஆட்சி சர்க்காராய் இல்லாமல் இருக்குமானால் இப்படிப்பட்ட முட்டாள்தனமான காரி யங்களுக்கு மக்களை ஆளாக்காமல் மாமாங்கம் நடத்தக்கூடாது என்று 144 உத்தரவு போட்டு அதற்குப் பதி லாக ஒரு உலகக் கண்காட்சியை நடத்தச் செய்து இருக்கும். மக்கள் மடமையாய் இருக்கும்வரை அரசருக்கும், ஆரியருக் கும் ஆதாயம் என்கிறது சாணக்கிய கொள்கை;ஆதலால் அறிவு வளர்ச்சிக்குச் சர்க்கார் தக்கது செய்யாமல் மாமாங்கம் முதலியவைகளுக்கு ஆதரவளித்து வருகிறது.
எப்படி இருந்தாலும் இந்த மாமாங் கத்திற்குத் திராவிட மக்கள் சிறப்பாகத் தமிழ் மக்கள் செல்லாமல் அதை வெறுத்துத் தள்ளி, போகிறவர்களுக்கும் விவரம் சொல்லி எவரையும் போகாமல் தடுத்துவிட வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.
மாமாங்கத்தையே நம்புவது கேடு! மதிகேடு!! மதிகேடு!!! என்று சொல் லுவதோடு அங்கு செல்லுவதும் தமிழ் மகனுக்கு (திராவிடனுக்கு) மானக்கேடு! மானக்கேடு!! மானக்கேடு!!! என்று பல தடவை சொல்லுவோம்.
-------------------------------------------------பெரியார்-" குடிஅரசு" - தலையங்கம் - 17.02.1945


************************************************************************************************************

மகாமக மூத்திரக் குளம்




புராண மரியாதைக் காரன் கேள்வி :- அய்யா, சுயமரியா தைக்காரரே கும்ப கோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம்.

சுயமரியாதைக் காரன் பதில்:- என்ன அற்புதமய்யா?
பு.ம    :- மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்த போதிலும்,  கூழாய் இருந்த போதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை? இதற்கு பதில் சொல் பார்ப்போம்.
சு.ம    :- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்வி தான், இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத்  தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும் அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிறமாக ஆகிவிடும். குளிக்கிற ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்றுவேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும். இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்தவம் தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண் பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.
பு-ம    :- அதெப்படி தண்ணீர் விட்டு விட்டுப் போகி றார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?
சு.ம    :- இதுவும் நல்ல கேள்வி தான், பதில் சொல் லுகிறேன், மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில் மறையவே இடம் இருக்காது. ஒரு மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்துகொள்ள வேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆக வேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள். எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார்கள். குளத்தில் இறங்கி துணியை நனைத்துக் கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும். அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டறக் கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பூர்த்தியாகிவிடும். ஆகவே வரவும், செலவும் சரியாகிவிடும்.
பு.ம    ;- அந்தப்படி அந்தக்குளத்தில் மூத்திரம் சேரு மானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?
சு.ம    :- நாற்றமிருக்கத்தான் செய்யும்.தீர்த்தத் தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக்கின்ற தல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும், குழம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னொரு விஷயம் என்னவென்றால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப் பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள். ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே செலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.
    
                            ------------------------பெரியார் "குடிஅரசு" - உரையாடல் - 26.02.1933


6.2.16

மதமும், முதலாளித்தனமும் ஒழிய வேண்டும்-பெரியார்


- தந்தை பெரியார்



சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்தில் சாஸ்திரங்களையும், சடங்கு களையும் ஒருவாறு கண்டித்ததோடு கூட அரசியலில் பார்ப்பனர்களைப் பலமாக எதிர்த்தும் போராடியது என்பது யாவரும் அறிந்ததாகும். இக்கார ணத்தால் பார்ப்பனர்களிடம் உள்ள உத் யோகங்களைத் தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்னும் நோக்கமுடைய பார்ப்பனரல்லாதார்கள் அனைவரும் சுயமரியாதை இயக்கத்தைப் பலமாக ஆதரித்து வந்தனர். பிறகு சுயமரியாதை இயக்கம் உண்மையான உருவத்தைக் காட்ட ஆரம்பித்தது. அதாவது மதத் தையும், சடங்குகளையும், கடவுளையும் கூட அடியோடு அழிக்க வேண்டு மென்னும் பிரச்சாரத்தில் இறங்கியது. இதனால் முதலில் ஆதரித்த சிலர் சுயமரியாதை இயக்கத்தை விட்டு விலகிக் கொள்ளாமலும், அதில் கலந்துகொள்ளாமலும், நடுத் தெருவில் நின்றனர். இதன் பின் சில மாதங்களாக, ஈரோடு வேலைத்திட்டத் தீர்மானங் களை மேற்கொண்டு, சமதர்மப் பிரசாரம் செய்து வந்தது. இதைக் கண்டும் அநே கர் பயந்து எங்கே சமதர்மப் பிரசாரத் தினால் தங்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சி ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நின்றனர்.

சிலர் சுயமரியாதை இயக்கம் முன்பிருந்தது போலவே அரசியலில் ஈடுபடாமல் பகுத்தறிவுப் பிரசாரம் மாத்திரம் செய்து கொண்டிருக்க வேண் டுமென அபிப்பிராயப்பட்டுக் கொண்டி ருக்கின்றனர். சிலர், ஈரோட்டுத் தீர்மா னங்களை ஒப்புக்கொண்டு, அரசியலிலும் தலையிட்டு சமதர்மப் பிரசாரத்திலும் ஈடுபடவேண்டும் என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் பார்ப்பனர்களை மாத்திரம் வைதுகொண்டு, பார்ப்பனரல்லாதார்க்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத் தால் போதுமென நினைக்கின்றனர். இந்த நிலையில் சுயமரியாதை இயக்கம் எந்த விதமாக வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய நமது முடிவை வெளி யிடுகிறோம்.


முதலில் சுயமரியாதைச் சமதர்ம இயக்கமானது, ஒரு வகுப்பை மாத்தி ரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு மாகாணத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு தேசத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஆனால் ஓர் அகில உலக இயக்கமாகும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இக்கொள்கையை மனத்தில் வைத்துக்கொண்டே அதன் கொள்கைகளும், சட்ட திட்டங்களும், வேலை முறையும் அமைக்கப்பட வேண்டும்.


வகுப்பு பேதங்கள் ஒழிந்து, எல்லாம் ஒன்றாகவேண்டும் என்னும் எண்ணம் எல்லா மக்கள் மனதிலும் வேரூன்றி வருகிற இக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மாத்திரம் ஆபாச முறையில் கண்டிப்பது விரும்பத்தக்கதல்ல என்பதே நமது தாழ்மையான அபிப்பிராயமாகும். பார்ப்பனருக்கும், நமக்கும் எக்காலத் திலும் பகையில்லை. பார்ப்பனீயத்திற்கும், நமக்குமே போராட்டம். பார்ப்பனீயத்தை விடாப் பிடியாகப்பிடித்திருக்கும் பார்ப் பனரல்லாதாரே அதிகம். பார்ப்பனீயம் எங்கெங்கே இருக்கின்றதோ அங்கெல் லாம் நமது போராட்டம் சென்றுதான் தீரவேண்டும். வகுப்புத் துவேஷம் என்பது ஒரு வகுப்பினர் அடிக்கும் கொள்ளைத் தொழிலை இன்னொரு வகுப்பினர் கைப்பற்றிச் செய்யும் முயற்சியேயாகும். ஆதலால் நமக்கும், அதற்கும் சம்பந்தமே இல்லை.

சுயமரியாதை இயக்கம் இதுவரை யிலும் செய்து வந்த மத ஒழிப்பு வேலையைச் சிறிதும் தளரவிட முடியாது. நமது கொள்கைகளுக்கெல்லாம் அடிப் படை இதுவேயாகும். இப்பொழுது மதத்திற்கு நெருக்கடி நேர்ந்திருக்கும் விசயத்தை மதவாதிகளும், முதலாளி வர்க்கத்தினரும் உணர்ந்து விழித்திருக் கின்றனர். இருவரும் கூடி மீண்டும் பாமர மக்களின் மனதில் மதவுணர்ச்சியை (அடிமை மூடத்தனத்தை)ப் புகுத்த பலமான முயற்சிகளைச் செய்து வருகின் றனர். தேசிய இயக்கங்களும் (முதலாளி இயக்கங்கள்) தேசியவாதிகளும் பலமான மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின் றனர். இதற்கு காந்தி அவர்களின் ஹரிஜன இயக்கமும், இந்து மகாசபைப் பிரச்சாரமும் போதிய சான்றாகும். ஆகை யால், நாம் முன்னிலும் அதிதீவிரமாக மதமறுப்புப் பிரச்சாரத்தை விடாமல் செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.
சமதர்ம திட்டத்தை மேற்கொண்டு அரசியலில் தலையிட வேண்டுவது அவ சியம் என்பது ஆலோசிக்கத் தக்கதாகும். அரசாங்கத்தின் துணையில்லாமல், சட்டங் களின் ஆதரவில்லாமல், தேச மக்களிடம் உள்ள ஊழல்களை அடி யோடு போக்கி விடவோ புதிய காரி யங்களைச் செய்வதில் தேச மக்களை ஈடுபடுத்திவிடவோ எக்காலத்திலும் இயலாது. ஆதலால் சீர் திருத்தவாதிகளுக்குத் தங்கள் சீர்திருத்தக் கொள் கைகள் செயலில் நடைபெற வேண்டு மானால் அரசாங்கத்தின் துணையும், சட்டத்தின் துணையும் அவசியமாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில் நமது நாட்டில் இனி அமையப் போகும் அரசாங்கம் கட்சிகளால் ஆளப்படும் அரசாங்கமாகவே இருக்கும் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சுயமரியாதை இயக்கமானது நேர்முகமா கவோ, அல்லது மறைமுக மாகவோ சமதர்ம திட்டமுடைய அரசியல் கொள்கையையும் ஒப்புக்கொண்டு தீர வேண்டிய அவசியத்தை அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம். நமது சமதர்ம அரசியல் திட்டத்தைக் கண்டு யாரும் அஞ்சவேண்டிய அவசிய மில்லை. அரசாங்க சட்டத்திற்குள் அடங்கியே நமது அரசியல் இயக்கம் வேலைசெய்து வரும். பலாத்கார முறை யையும் நாம் ஒப்புக்கொள்ளுவதில்லை. இத்தகைய சமதர்ம அரசியல் திட் டத்தைக்கண்டு ஏன் பயப்படவேண்டும்?

(5) சமூகச் சீர்திருத்த வேலையையும் அதை நிறைவேற்ற அரசியலைக் கைப் பற்றும் வேலையையும் சுய மரியாதை இயக் கத்தின் திட்டமாக வைத்துக் கொண்டு இரண்டையும் செய்து வர லாமென அபிப்பிராயப்படு கின்றவர்களும் பலருளர். ஆனால் இரண்டு வேலைகளை யும் ஒரே இயக்கம் அதாவது ஒரே ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் செய்ய முடியுமா? என்பது ஆழ்ந்து ஆலோசிக்கத் தக்க விஷயமாகும். தற்பொழுது சமூக சீர்திருத்த வேலையென்பது, அரசாங்க விஷயங்களில் தலை யிடாமல் ஜன சமூகத்துக்கு இடையேயுள்ள மூடப் பழக்க வழக்கங்களைப் போக்குவதும், அப்பழக்க வழக்கங்களில் வைத் துள்ள நம்பிக்கையை ஒழிப் பதும், புதிய வாழ்க்கை முறையில் பற்றுக் கொள்ளச் செய்வதும் ஆகும். இதைப் பிரசாரத்தின் மூலம் ஜனங்களுக்கு எடுத்துக் காட்டி வருவதே சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய வேலையாகும். இவைகளைச் சட்டத்தின் மூலம் ஜன சமூகத் தில் புகுத்த அரசாங்கத்தைக் கைப்பற்ற வேலை செய்வது அரசியல் இயக்கமாகி விடும். இவ்வளவே தான் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கும், அரசியல் இயக்கத் திற்கும் வித்தியாசம் என்று கூறலாமே தவிர, வேறு காரணம் கூறுவதற்கு நமக்குத் தோன்ற வில்லை. மற்றபடி சமூகச் சீர்திருத்தம் என்பதும், அரசியல் என்பதும் ஒன்றே தவிர வேறில்லை. சமூகம்தான் அரசியல், அரசியல் தான் சமூகம். இரண்டையும் வேறுபடுத்தி பிரிக்க முடியாது. ஆயினும் இருகாரியங்களையும் ஒரே ஸ்தாபனத் தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் தற்சமயம் செய்ய முடியாதென்பது நமது கருத்து. இத்தகைய இரு நோக் கத்தையும் கொண்டு தொடங்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியின் அக்காலநிலையை நோக்குவார் இதன் உண்மையை நன்கு தெரிந்து கொள்ளலாம். பிரசாரம் பண்ணும் வேலையையும் காரிய நிர்வாகம் செய்யும் வேலையையும் எப்படிச் செய்ய முடியும். சமூகச் சீர்திருத்தத்திற்கும் நாட்டில் பலமான எதிர்ப்பு இருக்கின்றது. சமதர்ம அரசியலுக்கும் நாட்டில் எதிர்ப்பு இருக்கிறது. இரண்டிற்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு இரண்டையும் இயக்கம் செய்து முடிப்பது என்பது சாமானியமான காரியமல்ல. இவ்விரண்டு கொள்கைகளுக்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொள்ளுகின்ற திறமை ஓர் இயக்கத்திற்குத் தற்கால நிலையில் ஏற்பட முடியாது. சமதர்ம அரசியல்வாதிகள் அரசாங்க அதிகா ரத்தை வகிக்க வரும் காலத்தில்தான் இரண்டையும் செய்ய முடியும். அது வரையிலும் சீர்திருத்த இயக்கம் தனித்து நின்று வேலை செய்ய வேண்டுவது அவசியமல்லவா? என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வருமாறு வேண்டுகிறோம்.
பொருளாதாரத் திட்டத்தையும், சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப் பதையும் வேலை முறையாகக் கொண்ட சமதர்ம அரசியல் கட்சி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இத்தகைய கட்சி தற்பொழுது நமது நாட்டில் ஒன்றுகூட இல்லை. ஜனநாய கக் கட்சியென்றும், வகுப்புவாதக் கட்சியென்றும் சொல்லிக் கொண்டி ருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் முதலாளிக் கட்சிகளே என்பது வெட்ட வெளிச்சம். இக்கட்சியின் நோக்கத்தை ஒப்புக்கொள்ளுகின்றவர்கள் யாராயிருப்பினும் நிற வகுப்பு, மத வேற்றுமை பாராமல் அவர்களையெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசிய மாகும். இந்த அரசியல் கட்சி, சுயமரியாதை இயக்கத் தினால் பிரசாரம் பண்ணப்படும் சீர்திருத்தங்களுக்கெல்லாம் ஆதர வளித்து வர வேண்டுமென் பதையும் கட்சிக் கொள்கையில் முக்கியமான ஒன் றாகக் கொள்ள வேண்டும். இதற் கென்று ஒரு தனி ஸ்தாபனம் இருக்க வேண்டியது அவசிய மாகும்.
சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை களைக் கொண்ட, அரசியல் கலப்பற்ற, தனி ஸ்தாபனம் ஒன்று வேண்டுவது அவசிய மாகும். இந்த ஸ்தாபனத்தில் அரசியல் நிறம் வகுப்பு முதலிய வேற்றுமை பாராட்டாமல் மதமற்றவர்கள் எல்லோ ரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் சமதர்ம அரசியல் கட்சியாரை எப்பொழுதும் ஆதரித்து நிற்க வேண்டும். தற்பொழுது சுயமரியாதை இயக்கம் செய்து வரும் சமூக வேலையைச் செய்து வர வேண்டும்.
மேற்கூறிய இரு இயக்க ஸ்தாப னங்களின் உறுப்பினர்கள் அந்த ஸ்தா பனங்களின் கொள்கைகளுக்கு மாறு படாதவர்களாகவும், அக் கொள்கைகளை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு நடக் கின்றவர்களாகவும், அவைகளுக்காகத் தியாகஞ் செய்யப் பின் வாங்காதவர் களாகவும் இருக்க வேண்டும். மற்றபடி இயக்கப் பிரசாரத்தில் அதாவது மகா நாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும் யாரையும் சேர்த்துக் கொள்ளலாம். நமது பல கொள்கைகளுக்கு எதிரியாக இருந்து ஒரு கொள்கைக்குச் சாதகமா யிருப்பார்களாயின் அதைப் பொறுத்த வரையிலும் அவர்களை நம்மோடு அவரோடு ஒத்துழைப்பதிலே ஒரு தவறும் நேர்ந்துவிடாது. அதனால் இயக்கத் திற்கு லாபமே தவிர நஷ்டம் வந்துவிடாது. பிரசார நிலையில் கட்டுப்பாடு ஏற்படுத் தினால் இயக்கம் வளருவதற்கே வழி யில்லாமற் போய்விடும். நமது கொள் கைக்கு முரண்பட்டவர்களை நம்மோடு சேர்க்கக்கூடாது, நமது கூட்டத்திற்கு வரக்கூடாது என்றால் அவர்களை எப்படி நமது கொள்கைகளை ஒப்புக்கொள்ளச் செய்யமுடியும்? ஆதலால் பிரசாரத்தின் பொருட்டு நம்மிடம் சிறிது அனுதாபம் உள்ள எவரையும் சேர்த்துக் கொள்ள மறுக்காமலிருப்பதே இயக்க வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.
மேலே கூறிய விஷயங்களைக் கவனித்துச் சுய மரியாதை இயக்கத் தையும், சமதர்ம இயக்கத்தையும் நடத்தி வந்தா லொழிய உருப்படியான வேலை எதையும் செய்துவிட முடியாது என்பதே நமது கருத்து. இன்னும் பார்ப்பனர்களை மாத்திரம் வைது கொண்டிருப்பதனால் ஒரு பயனுமில்லை. நாமறிந்தவரையில், நமது சமதர்மக் கொள்கைகளையும், சுய மரியாதை இயக்கக் கொள்கைகளையும் முழுதும் ஒப்புக்கொண்டு வேலை செய்வ தற்குத் தயாராக எல்லா வகுப்பினரில் வாலிபர்களும், அறிவுடையவர்களும், இருக்கிறார்களென்பதை நிச்சயமாகக் கூறுவோம். ஆதலால் இனி பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், இந்துக்கள், முஸ் லீம்கள், கிறிஸ்துவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், என்ற பிரச்சினைகள் நம்மிடம் தலைகாட்டாமல் ஒழிக்க வேண்டும்; முதலாளிக் கொடுமைகளை ஒழிப்பதையும், மதக்கொடுமைகளை ஒழிப்பதையுமே பிரச்சினையாகக் கொண்டு இப்பிரச்சினையை ஒப்புக் கொள்கின்றவர்களை எல்லாம் இயக்கத் திற்கு சேர்த்துக் கொண்டு இப் பிரச் சினைகளைத் தீர்க்க வழி கோலுவதே சிறந்ததாகும். மேற்கூறியவைகளையெல் லாம், விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவு செய்யும்படி சுயமரியாதைத் தோழர்களை வேண்டிக் கொள்கிறோம்.
------------------ தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை, "விடுதலை", 11.7.1950