Search This Blog

23.9.18

தமிழ்ப் படித்து பகுத்தறிவாளரானவர் யார்? - பெரியார்

முதலாவது நான் பகுத்தறிவுவவாதி. எந்த விஷயத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவன் நான். பஞ்சேந்திரியங்களுக்கும் தெரியப்படும் விஷயங்களை நம்புவேனே தவிர, பஞ்சேந்திரியங்கட்கு புலப்படாத எதையும் நம்புவதில்லை. மற்றும் தமிழர்களுக்காக,நம் மக்களுக்காக தொண்டாற்றி வருகிறேன். தொண்டாற்றுவதில் கடவுள் பற்று, மதப் பற்று இன்றி தொண்டாற்றி வருகிறேன். அதனால்தான், உண்மையாகத் தொண்டாற்ற முடிகிறது என்று கொள்கைகளில் கருத்து வேற்றுமை உள்ளவர்கள் அநேகர் இருப்பார்கள் என்றாலும், என்னைப் பொறுத்தவரை எனது தொண்டு வீண்போக வில்லை என்று கருதித்தான் தொண்டாற்றி வருகிறேன்.



ஒரு சந்தர்ப்பத்தில் சேலம் கல்லூரியில் அப்போது இருந்த கல்லூரி முதல்வர் எனக்கு நண்பர். அவர் வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தமிழ்ப் பற்று என்கிற காரணத்தால் என் மீது மிகவும் அன்பு கொண்டவர். அவர் பேசும்போது, அய்யா அவர்கள் நாஸ்திகர் என்றாலும், மக்களுக்காகத் தொண்டாற்றுபவர் எனக் குறிப்பிட்டார். எனக்காகப் பேசியதாக இன்னொருவர் நான் நாஸ்திகன் அல்ல என்று வாதாடினார். அன்றும் இப்படித்தான் பேசுவதற்கு எனக்கு தலைப்புக் கொடுக்கவில்லை. என்ன பேசுவது என்று தெரியாமலிருந்தபோது இந்த நாஸ்திகம் என்பதையே வைத்துப் பேசினேன்.

அதுபோல, இங்கு தலைவரவர்கள்  தனது வரவேற்புரையில், தமிழைப் பற்றி குறிப்பிட்டர். இப்போது இது பரபரப்பாக இருக்கிறது.  பலர் என்னைக் கண்டித்து கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். சிலர், நீ தமிழனா? என்று கூடக் கேட்டு எழுதி இருக்கிறார்கள். சிலர் எனது கொள்கையை ஆதரித்தும் கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். நாம் எல்லோரும் தமிழ்நாட்டில் இருக்கிறோம், நாமெல்லாம் தமிழர்கள்தான்; நான் மொழிப்படி தமிழனல்ல; கன்னடியன் எனக்கு தமிழ் தெரிந்த அளவுக்கு கன்னடம் தெரியாது. அதற்காக நான் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழன் சிறப்பைச் சொல்லும்போது, அது கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ் என்கிறான். தமிழ் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வழங்கி வருகிறது என்றாலும், இன்றும் அதனைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து அதன் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.'

நான் அயல்நாடுகளையெல்லாம் சுற்றியிருக் கிறேன். அங்கெல்லாம் இங்கிலீஷைப் பாதுகாக்க வேண்டுமென்று இயக்கமோ, அதற்காக ஒரு போராட்டமோ கிடையாது. ஆனால், அந்த மொழி யாருடைய  பாதுகாப்பும் இன்றி வளர்ந்து கொண்டும், பரவிக் கொண்டும்தான் வருகின்றது.

மொழியின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்து மக்களிடையே எவரும் பிரச்சாரம் செய்வது கிடையாது. மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவர் உணரப் பயன்படுத்தும் ஒரு சாதனமே தவிர, மற்றபடி அதற்கென்று தனிச் சிறப்புக் கிடையாது! தமிழிலிருந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு இவைகள் தோன்றின என்று சொல்லுவார்கள். ஆனால், மலையாளியோ, தெலுங்கனோ, கன்னடி யனோ, துளுவனோ எவனும் இதனை ஒத்துக் கொள்வதில்லை. அந்தந்த எல்லைக்குத் தக்கபடி மாற்றமடைந்துள்ளது.

வடமொழியின் கலப்பு அதிகமாகி தமிழுக்கும், அதற்கும் சம்பந்தமில்லாமல் போய்விட்டது. வடமொழி கலப்பது ஒரு காலத்தில் நாகரிகமாகக் கருதப்பட்ட காரணத்தால் வடமொழிக் கலப்பு அதிகமாகி விட்டது. இப்படி நாகரிகம் - சந்தர்ப்பம் நடப்பு வழக்கம், காலம் இவைகளைப் பொறுத்து மொழி மாறுபட்டிருக்கிறது.


நம் நாட்டிலேகூட நாகர்கோயில்காரன் தமிழ் பேசுவதற்கும், திருநெல்வேலிக்காரன் பேசுவதற்கும் மாறுபாடு உண்டு. அது போலவே, மதுரைக்காரன் பேசுவதற்கும், திருச்சிக்காரன் பேசுவதற்கும், தஞ்சாவூர்க் காரன் பேசுவதற்கும், சேலம்காரன் பேசுவ தற்கும், கோயமுத்தூர்காரன் பேசுவதற்கும், சென்னையிலுள்ள தமிழன் பேசுவதற்கும் நிறைய மாறுபாடுகள், வித்தியாசங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் விட நம்மோடு பல காலமாகப் பழகி நம்மோடு இருக்கும் பார்ப்பனர் பேசுவது தனி அலாதியாகத்தான் இருக்கிறது. தமிழ் படித்த புலவர்களே மேடையில் பேசுவது போல வீட்டில் பேசுவது கிடையாது. இப்படி இடத்திற்குத் தக்க மாதிரி, சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி பேசுகிறார்கள்.



தமிழ் பேசுவதிலேயே இலக்கணப்படி பேசுவதற்கும் சாதாரணமாகப் பேசுவதற்கும் நிறைய மாறுபாடு இருக்கலாம் என்றாலும் நான் மொழியைப் பற்றி சொல்லுவதெல்லாம் மொழியினாலே நமக்கேற்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட நன்மையென்ன? அதனால் நம் மக்கள் எந்த அளவிற்கு முன்னுக்கு வந்தார்கள்? என்பதற்குத்தான். இதைக் கேட்டால் தமிழன்பர்கள் என்ன சொல்வார்கள்? எனக்கு கடிதம் எழுதிய ஒருவர் தமிழில் பெரிய புராணம், சிலப்பதிகாரம், குறள், கம்பராமாயணம் இவைகள் எல்லாம் இருப்பது உனக்குத் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார். இதிலிருந்து அவர் வேறு ஒன்றுமில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார். இன்னொரு நண்பர் தொல்காப்பியம் என்ற நூல் இருப்பது தெரியுமா? என்று எழுதியிருக்கிறார். கம்பராமாயணம், சிலப் பதிகாரம் இதைச் சொன்னதிலிருந்தே தமிழின் தன்மையை நாம் உணர்ந்து கொள்ளலாமே!

தொல்காப்பியத்திலே தான் என்ன இருக்கிறது? அதிலும் நாலு ஜாதி; அந்த நான்கு ஜாதியில் நம்மைத் தான் கீழ் ஜாதியாகக் குறிப்பிட்டிருக்கிறது. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்கு................
என்ற பாடலைப் பார்த்தாலே போதுமே. தமிழ் ஏதோ புலவன் பிழைப்புக்குப் பயன்படுகிறதே தவிர, அதனால் நம் மக்களுக்குப் பயன் இல்லை. அதன்படி நாம் கீழ்மக்கள்தானே.

குறளை ஒரு அளவுக்கு நாம் ஏற்றுக் கொள்ளலாம். அதை பரப்பியதில் எனக்கு பெருமை பங்கு உண்டு.

குறளைப் பற்றி அவ்வளவாக மக்களுக்குத் தெரியாது இருந்தபோது குறள் மாநாடு கூட்டி, தமிழ்ப் புலவர்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி குறளைப் பற்றி மக்களுக்கு விளக்கம் செய்து குறளைப் பரப்பினேன். இந்த மாநாட்டிற்கு மறைமலை அடிகளைத் தவிர மற்ற தமிழ்ப் புலவர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.



நான் பேசும்போது, குறள் குற்றமற்ற நூல் என்று சொல்ல முடியாது என்றாலும், மற்ற நூல்களில் இருப்பதைவிட இதில் குறைகள் குறைவு என்று சொல்லலாம். அந்த அளவுக்குத்தான் குறளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசினேன்.

அந்த மாநாட்டிற்கு திரு.வி.க. தலைமை வகித்தார். நான் இப்படிப் பேசியதை சிலர் போய் மறைமலை அடிகளிடம் சொல்லி இருக்கிறார்கள். என்னவென்றால், அவன் குறளைத் தான் பாக்கி வைத்திருக்கிறான் என்று நினைத்தேன். அதிலேயும் கை வைக்க ஆரம்பித்து விட்டானே. இதற்கு இவர் (திரு.வி.க.) போய் தலைமை வகிக்கிறாரே என்று வேதனையோடு சொன்னார்கள்.

திரு.வி.க. அவர்களை சந்திக்க நேர்ந்தபோது, மறைமலை அடிகள், நீ என்ன குறள் மாநாட்டிற்கு தலைமை வகித்தாயாமே, அதில் பேசியதையெல்லாம் எப்படிக் கேட்டுக் கொண்டிருந்தாய்? என்று கேட்டார்.

அதற்கு திரு.வி.க., அவர் பேசியதில் தவறு ஒன்றும் இல்லை. இத்தோடு விட்டதற்கு நாம் சந்தோஷப்பட வேண்டும். அவரில்லா விட்டால் குறள் இந்த அளவிற்கு வந்திருக்காது என்று ஏதோ சமாதானம் சொல்லி இருக்கிறார்.

பிறகு ஒரு சமயம் மறைமலை அடிகள் தனது லைப்ரரியை விற்க வேண்டுமென்று கருதி என்னை அழைத்து தனது லைப்ரரியைக் காட்டினார். குறைந்தது 20 - 30 பெரிய பெரிய கண்ணாடி பீரோக்கள் நிறைய புத்தகங்கள் இருந்தன. பீரோவின் இரு பக்கமும் கண்ணாடி கதவுகள் போட்டு புத்கங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நான் எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக் கொண்டு வந்து கடைசியில் அடிகளாரைப் பார்த்து, என்ன சாமி எல்லா புத்தகங்களும் இங்கிலீஷ் புத்தகங்களாகவே இருக்கின்றனவே. தமிழ்ப் புத்தகங்கள் ஒன்றுகூட காணவில்லையே என்று கேட்டேன். அதற்கு அவர்,

தமிழிலே அலமாரியிலே வைத்து பாதுகாக்கும்படியாக மக்களுக்குப் பயன்படும் படியாக என்ன இருக்கிறது? என்று சொன்னார். அதற்கு நான் சொன்னேன், சாமி எழுதிய புத்தகங்கள் இருக்குமே என்று சொன்னேன்.  அது நிறைய இருக்கிறது. இன்னும் அச்சுப் போட வேண்டியவைகளும் இருக்கின்றன என்றாலும், இதோடு அவைகள் வைக்கக் கூடியவை அல்ல என்றார். அவர்  அந்த அளவுக்கு ஒத்துக் கொண்டது எனக்கும் மகிழ்ச்சியளித்தது.

தமிழ் என்று சமயத்திலே போய் புகுந்ததோ, சமயக்காரன் எப்போது தமிழ் கதவைத் திறந்து இறந்தவனை எழுப்பியது என்று சமயத்தில் கொண்டு போய் புகுத்தினானோ, அன்றே தமிழும் முன்னேற முடியால் கெட்டுப் போய் விட்டது.

பட்டினத்தார் - தாயுமானவர் - இராமலிங்க அடிகள் எல்லாம் தமிழ் படித்து சாமியானவர்கள் தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானனே ஒழிய, எவனும் பகுத்தறிவு வாதியாகவில்லை. நமக்குத் தெரிந்து மறைமலை அடிகள் தமிழ்ப் படித்து சாமி ஆனவர்தானே. இப்போது நடந்தது சாமிசங்கரதாஸ் நூற்றாண்டு விழா. இந்த சங்கரதாஸ் என் வீட்டில் வந்து நாடகத்துக்கு பாட்டு எழுதிக் கொண்டிருந்தவர். சங்கரம் பிள்ளை என்று பெயர். பிறகு சங்கரம் பிள்ளை சங்கரதாஸ் ஆகி இன்று சாமி ஆகிவிட்டார். அதற்கு முன் தமிழ்ப் படித்தவர்கள் எல்லாம் கவியாகப் படித்தவர்கள். இப்போது போல் வசனமாகப் படித்தவர்கள் அல்ல. ஆதலால் அவர்களுக்கு கவி எழுத வந்தது. எல்லாம் குப்பை கூளங்கள்தான். கா. சுப்பிரமணிய பிள்ளை காலையில் எழுந்ததும் பட்டைப் பட்டையாக சாம்பலை அடித்துக் கொண்டு அரைமணி நேரம் தேவாரம், திருவாசகத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பார். இந்த திரு.வி.க.வும் அப்படி இருந்தவர்தான். என்னோடு பலமுறை வாதிட்டு கொஞ்ச நாள் கோபமாகக் கூட இருந்து பிறகு பழக ஆரம்பித்தார். அதன்பின்தான் அவர் சாம்பல் அடிப்பதையும், தேவாரம் ஓதுவதையும் நிறுத்தினார். பிறகுதான் அவர் உண்மையாகத் தொண்டாற்ற முடிந்தது.


                ----------------------------29.9.1967 அன்று சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய விளக்கவுரை - "விடுதலை" 3.10.1967

22.9.18

கி.வீரமணியின் வேலை இனி எடுபடாது! -தினமலரின் அருள்வாக்கு

தினமலரின் அருள்வாக்கு

***கவிஞர் கலி. பூங்குன்றன்***


கி.வீரமணியின் வேலை இனி எடுபடாது! என்று தினமலரில் ஒரு கடிதம் வெளிவந்துள்ளது.
ராமானுஜரும், பாரதியாரும் தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பூணூல் போட்டு பெரிய புரட்சியைச் செய்ததாகப் புலம்பும் பேர் வழிக்கு ஒரே ஒரு கேள்வி.
அந்த ராமானுஜரும், பாரதியாரும் அதில் ஏன் வெற்றி பெறவில்லை? அந்த ராமானு ஜரையும், பாரதியையும் பெருமைக்குரிய இடத்தில் வைத்துப் பேசும் பேர்வழிகளை நோக்கி ஒரே ஒரு கேள்வி. அந்தப் பணிகளை இப்பொழுது செய்ய ஏன் தயக்கம்?
சங்கராச்சாரியாரையும், ஜீயரையும் பார்த்துக் கேள்வி கேட்கும் திராணி - நல்ல புத்தி இவர்களுக்கு உண்டா?
காஞ்சிப் பெரியவாளே, சிறீப்பெரும்புதூர் ஜீயர் வாளே மரியாதையாக ராமானுஜரும், பாரதியாரும் மேற்கொண்ட அந்த வேலைகளை தொடர்ந்து செய்யுங்கள் - அப்படி நீங்கள் செய்ய ஆரம்பித்தால், இந்த வீரமணிகள் எல்லாம் இப்படித் துள்ளு வார்களா? என்று கேள்வி கேட்கும் அறிவு நாணயம் தினமலர் வகையறாக்களுக்கு உண்டா?
இவற்றிற்கெல்லாம் மூல காரணம் ஜாதிதானே. பூணூல் - கீணூல் பிரச்சினை எல்லாம் இந்தப் பாழாய்ப் போன ஜாதியால் தானே - கடவுள் படைப்பில் மேல்ஜாதி - கீழ்ஜாதி என்று எப்படி இருக்க முடியும்? எல்லாம் நாமாகப் பார்த்து செய்த ஏற்பாடு தானே!
வைஷ்ணவ பெரியவா ராமானுஜர், திருக் கச்சி நம்பி என்ற பிராமணரல்லாதாரைக் குருவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள் - அப்படி இருக்கும்போது, சங்கர மடத்திலும், வைணவ மடத்திலும் திருக்கச்சி நம்பி பரம்பரையைச் சேர்ந்த ஒருவரை அமர்த்த என்ன தடை? அது சாஸ்திரத் தடையாக இருந்து தொலையட்டும் - எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன - இதில் ஒரு மாற் றத்தைக் கொண்டு வந்தால் வீண் பிரச்சினை கள் தொடை தட்டி வெடித்துக் கிளம்பாதோ என்று சங்கர, ஜீயர் மடாதிபதிகளிடம் கோரிக்கை வைக்க முன்வருவார்களா?
இதே ஜீயரிடம் ஆனந்தவிகடன் சார்பில் திருவாளர் மணியன் பேட்டி கண்டபோது, என்ன சொன்னார்?
இதுதானே இன்றைய நிலை? இதற்கு நாணயமாகப் பதில் சொல்ல வக்கில்லாமல் திராவிடர் கழகத் தலைவரைப் பார்த்து வக்கணைப் பேசி என்ன பயன்?
இன்னவர்தான் பூணூல் போட வேண்டும் என யாரும் கூறவில்லையாம் - அடேயப்பா - பொய்யைச் சொல்லு வதற்கு இந்தப் பூணூல் கும்பல் சற்றும் வெட்கப்படாது என்பதற்கு இது ஒன்று போதாதா?
விடுதலையில் ஆதாரத்தோடு எந் தெந்த வருணத்தைச் சார்ந்தவர்கள் எத்த கைய நூலால் பூணூல் தரிக்கவேண்டும் என்பதை அவர்களின் மனுதர்ம சாஸ் திரத்திலிருந்தே எடுத்துக்காட்டப்பட்டு இருந்தது. ஜாக்கிரதையாக மறந்து போயிருந்தால், இப்பொழுதுகூட மீண்டும் எடுத்துக்காட்டுகிறோம்.
மனுதர்மம் - அத்தியாயம் இரண்டு; சுலோகம் 42 என்ன கூறுகிறது?
பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும்,
க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணை யொத்த முறுவற் புல்லினாலும்,
வைசியனுக்கு க்ஷணப்ப நாரினாலும் மேடு பள்ளமில்லாமல் மெல்லிதாகப் பின்னி மூன்று வடமா மேலே அரைஞாண் கட்ட வேண்டியது.
அடுத்த 43 ஆம் சுலோகம் என்ன சொல்லுகிறது?
இந்த மூன்றும், அகப்படாத காலத்தில், மேற்சொன்ன மூன்று வருண பிரம்மச்சா ரிகளுக்கும் கிரமமாக தருப்பை நாணல் சவட்டைக் கோரை - இதுகளினால் மூன்று வடம் அல்லது தங்கள் குல வழக்கப்படி அய்ந்து வடமாவது ஒரு முடியுடன் கட்ட வேண்டியது.
அதற்கடுத்த சுலோகம் (44) என்ன கூறுகிறது?
பிராமணனுக்குப் பஞ்சு நூலிலானும்,
க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலாலும்,
வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிரா லும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்கவேண்டியது.
தினமலர் திரிநூல் கூட்டத்துக்கு ஒரே ஒரு கேள்வி.
இத்தனை சுலோகங்களிலும் எந்த இடத்திலாவது சூத்திரர்களுக்குப் பூணூல் அணியும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளதா? அறிவு நாணயத்தோடு பதில் சொல்லட் டுமே பார்க்கலாம்.
அப்படி சொல்லியிருந்தால், அடே யப்பா எப்படியெல்லாம் சலாம் வரிசை ஆடியிருக்கும் இந்த அக்கிரகார அம்பிக் கூட்டம்!
சொல்லாதது மட்டுமல்ல, தப்பித்தவறி சூத்திரர்கள் அந்தப் பூணூலை அணிந் தால் அவர்களின் கெதி என்னவாகி இருக் குமாம்!
சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரர்களின் அங்கங்களை வெட்டி விடவேண்டும். (மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 224).
தினமலர் வகையறாக்களுக்கு இப் பொழுது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. விடுதலைக்கோ, வீரமணி அவர்க ளுக்கோ முந்திரிக் கொட்டை மாதிரி பதில் எழுத பேனாவைக் கையில் எடுப்பதற்கு முன்பு அந்த வேலை முடிந்தாகவேண்டும்.
இந்து மதத்தில் இந்த மனுதர்மம் என்பது வெறும் குப்பை - இதனை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று கூறுவதோடு அமைந்துவிடாமல், காஞ்சிபுரத்திலோ அல்லது ஜீயர் சுவாமிகள் சஞ்சரிக்கும் இடத்திலோ ஒரு மாநாடு கூட்டி மனு தர்மத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்திட முன்வரவேண்டும்; அதற்குப் பிறகு வீரமணிகளுக்குச் சவால் விடலாம். தயாரா என்ற சவால் விட்டே கேட்கிறோம்.
1937 இல் சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் சென்னை மாநில பிரதமராக வந்தபோது ஓர் உத்தரவு போட்டார் - அது என்னவென்று தெரியுமா?
இனி ஆசாரிகள் ஆச்சாரியார் என்று போடக் கூடாது என்பதுதான் அந்த உத்தரவு - இப்படி உத்தரவு போட்டவருக்கு உடம் பெல்லாம் மூளையாம்! (ஹி... ஹி....)
தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என்று கூறும் கூட்டம் வக்கணையாக எழுதுவது பாரு...
'எச்சல் பொறுக்கும்  ................... க்கு
ஏப்பத்தைப் பாரு'
என்ற பழமொழிதான் நினைவிற்கு வந்து தொலை(க்)கிறது.
இன்னொரு பெரிய கேள்வியைக் கேட்டுவிட்டதாக சிண்டை வெளியில் எடுத்து விட்டுக் கேள்வி கேட்கிறது தினமலர்.
கி.வீரமணி ஜாதி பேதம் பார்க்காதவ ரானால், ஈ.வெ.ரா. அறக்கட்டளை தி.க. சொத்துகளுக்கு அதிகாரமிக்கவராக ஆதி திராவிடர் ஒருவரை அப்பதவியில் அமர்த்தி விட்டு, தான் விலகட்டும் பார்க்கலாம்; அப்போது அவரைப் பாராட்டலாம் என்கிறது  தினமலர்.
சபாஷ் சரியான கிடுக்கிப்பிடி - வீரமணி யைத் திணற அடித்துவிட்டதாக ஒரு நினைப்பு.
பெரியார் அறக்கட்டளையில் தாழ்த்தப் பட்டோர் இருக்கக் கூடாது; அதற்குத் தலைவராக வரக் கூடாது என்று எந்த சட்ட விதிமுறையும் கிடையாது. தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்ட தாழ்த்தப் பட்டவர் ஒருவர் தாராளமாக வரலாம் - அதற்கான தடை ஏதும் கிடையாது.
ஆனால், தினமலர் ஜெகத்குரு என்று தூக்கிச் சுமக்கும் சங்கர மடத்தில் பார்ப்ப னரைத் தவிர வேறு யாராவது சங்கராச் சாரியாராக வர முடியுமா?
பார்ப்பனர் அல்லாதார் வரக்கூடாது என்ற தடை. அங்கே இருக்கிறதா, இல் லையா? சங்கர மடத்தில் சமைக்கப்படும் மீதியான உணவைக் கூட சூத்திராள், பஞ்சமாள் சாப்பிட்டு விடக்கூடாது என்று குழிதோண்டிப் புதைக்கும் கும்பலா சமத்துவம்பற்றி எல்லாம் பேசுவது?
திராவிடர் கழகத்தைப் பொருத்த வரையில் கட்சிக்குள் ஜாதி கிடையாது. அந்த எண்ணம் உள்ள எவருக்கும் இடமும் கிடையாது. பொறுப்பில் இருப்பவர்கள் யார்? என்ன ஜாதி? என்று அறிந்திருக்கவும் கிடையாது.
இந்து மதத்தில் உள்ள எந்த ஜாதியி னரும் அதற்குப் பயிற்சி கொடுத்து கோவில் அர்ச்சகராகலாம் என்று சட்டம் செய்தால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு 12 பார்ப்பனர்கள் சென்றார்களே - அப் பொழுது எங்கே சென்றது இந்தத் தினமலர் கும்பல். ஜீயரும், சங்கராச்சாரியார்களும், ராஜாஜிகளும் அதற்கு எதிர்நிலை எடுத்தது ஏன்? அடியாட்கள் தேவைப்பட்டால் இந்துக்களே ஒன்று சேருங்கள் என்பதும், நாங்களும் இந்துக்கள்தானே - முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்று விட்டோமே நாங்களும் ஏன் அர்ச்சகர் ஆகக்கூடாது என்று கேட் டால், ஆகமங்களைக் காட்டி ஏய்ப்பதும் தானே பார்ப்பனப் புத்தி!
உண்மையான தொண்டினால் கழகத் தின் எந்த முக்கிய பொறுப்புக்கும் எவரும் வரலாம். அதுதான் இங்கு நடைமுறை.
தினமலர்கள் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படக்கூடாது.
பிராமணர்கள் உடல், பொருள் அனைத் தும் இழந்து தேச விடுதலைக்காகவும், தீண்டாமையை எதிர்த்தும் போராடியதை மறக்க முடியுமா? என்று கேள்வி கேட்கும் தினமலருக்கு ஒரு கேள்வி. அது உண்மையாக இருந்தால், இந்து மதத்தின் நான்கு திசைகளிலும் உள்ள சங்கராச்சாரி யார்கள் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு அறிக்கையைக் கொடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம் - ஜீயர்கள் அவர்களோடு சேர்ந்து வரமாட்டார்கள் - அவர்கள் வேண்டு மானால், தனியாகவே அறிக்கை கொடுக் கட்டும்.
இந்து மதத்தில் நிலவும் தீண்டாமையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் - தீண்டாமையையும், அதற்கு மூல வேரான ஜாதியும் ஒழிக்கப்பட வேண்டியவைதான் - இந்துக்களே இன்று முதல் இவற்றை விட்டுத் தொலையுங்கள் - இந்துக்கள் அனைவரும் சரி சமம் என்று ஒரே ஒரு அறிக்கையை வெளியிடச் செய்யுங்கள் பார்க்கலாம்.
தீண்டாமை ஒழிப்புக்காக காந்தியார், காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியை பாலக்காட்டில் (15.10.1927) சந்திக்கச் சென்றபோது (மாட்டுக் கொட்ட கையில்தான் காந்தியாரை உட்கார வைத் துப் பேசினார் சங்கராச்சாரியார் என்பது நினைவில் இருக்கட்டும்) காந்தியாரிடம் சங்கராச்சாரியார் என்ன பதில் சொன்னார்?
ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்க ளையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார் களென்றும், அவர்களுடைய மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வரவேண்டியி ருக்கிறதென்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார்.
(நூல்: தமிழ்நாட்டில் காந்தி, பக்கம் 576).
கடைசியாக ஒரு கேள்வி: திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்றரைக் கிலோ எடையில் தங்க பூணூலையும், திருப்பரங் குன்றம் சுப்பிரமணிய சாமிக்கு ரூ.15 லட்சம் செலவில் தங்கப் பூணூலையும், காஞ்சி சங்கராச்சாரியார் அணிவித்தாரே, சிறீரங் கம் ரங்கநாதனுக்கு ரூ.52 லட்சம் செலவில் நாராயண ஜீயரும் தங்கப் பூணூலை அணிவித்தாரே, (தினமணி, 27.2.2014) கடவுளையும் பார்ப்பன ஜாதியில் சேர்த்து விட்டதை என்ன சொல்ல! பார்ப்பானை ஒழித்தால் கடவுளும், கடவுளை ஒழித்தால் பார்ப்பானும் ஒழிந்துவிடுவான் என்பது தானே உண்மை.


பார்ப்பனர்களிலேயே உயரமான பீடாதிபதியாக இருக்கக்கூடிய லோகக் குரு ஒருவரின் மனப்பான்மையே இப்படி பச்சை யாக தீண்டாமையை வலுவாகப் பிடித்துக் கொண்டு தூங்கும்போது, தினமலர்க் கும்பல் எந்தப் பார்ப்பனரை நம்பச் சொல்லு கிறது என்பது அறிவுக்கு விருந்தளிக்கும் அரிய கேள்வியே!
******************************************************************************************

இதுதான் இந்து மதத்தின் ‘ஜாதி பாராமைக்கான’ இலட்சணமா?


கேள்வி: தமிழ்நாட்டில் அரிஜனங்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்களே... அதைப் பற்றி?

சங்கராச்சாரி: அர்ச்சனை நடந்த அவர்களுக்குத் தகுதியில்லை. ஆகவே அவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது சரி இல்லை.

கேள்வி: அர்ச்சனை முறைகளைக் கற்றுக் கொள்ளலாம் அல்லவா? அதற்கு பிறகு அர்ச்சகர்களாகப் பணிபுரியும் தகுதி அவர்களுக்கு ஏற்படலாமே?

சங்கராச்சாரி: அவர்களுக்கு தகுதி இல்லை. அவ்வளவுதான். மேலே இதைப்பற்றி விவாதத்திற்கே இடமில்லை.

கேள்வி: ‘சாதுர்வர்ணயம்மயா சிருஷ்டம்’ என்ற கீதையின் சுலோகத்தைப் பற்றிச் சுவாமிகள் என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

சங்கராச்சாரி: பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற நால்வகையினரையும் தாமே படைத்ததாகக் கடவுள் கூறுகிறார்.

கேள்வி: ஆனாலும் குணம், தொழில் அடிப்படையில் (குணகர்மா) அவர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தானே கீதாசிரியர் கூறுகிறார்?

சங்கராச்சாரி: 
இக்காலத்துக் குணகர்மங்களின் அடிப்படையில் அல்ல. முற்பிறவியில் அவர்கள் செய்த குணகர்மங்களின் அடிப்படையில்தான் பிராமணர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் என்றும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த சுலோகத்தில் சொல்லப்படும் குணகர்மா முற்பிறவி சம்பந்தப்பட்ட குணகர்மாவாகும். ஒரு பிராமணன் தன்னுடைய கடமைகளைச் செய்யாவிட்டால் அடுத்த பிறவியில் கடவுள் அவனைத் தண்டிப்பார்.




- பூரி சங்கராச்சாரியாரிடம் மணியன் பேட்டி,
‘ஆனந்த விகடன்’, 16.6.1974


*****************************************************************************************************
                ------------------கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 22-9-2018  ‘விடுதலை’ ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

21.9.18

கர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக?


தந்தை பெரியார்
இப்போது நாம் எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சி, கோயிலில் கர்ப்பக்கிருகம் இருக்கிற இடத்திலே நீ சூத்திரன்,- இழிசாதிக்காரன், நீ உள்ளே நுழையக்கூடாது என்று பார்ப்பான் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கின்றதை மாற்ற வேண்டும் என்று போராட இருக்கிறோம். இதற்கு முன் தெருவிலே மனிதனை நடக்கக் கூடாது புனிதம் கெட்டுவிடும் என்று சொன்னான்; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று வைத்திருந்தான்; ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு ஜாதியார் கோயிலுக்கும் போகக்கூடாது என்று வைத்திருந்தான், அதுபோல, சாப்பிடும் பொது இடங்களில் பார்ப்பனருக்கு வேறு இடம், நமக்கு வேறு இடம் என்று வைத்திருந்தான்; இதையெல்லாம் மாற்றி விட்டோம்.
அதனால் ஒன்றும் புனிதம் கெட்டுவிடவில்லை. எந்த மனிதனின் மனமும் புண்படவில்லை. மதம், சம்பிரதாயம் அழிந்து பாழாகி விடவில்லை. மிகப் பெரிய புண்ணிய ஸ்தலங்களாகக் கருதப்படும் காசி, ஜெகநாத், பண்டரிபுரம் ஆகிய இடங்களிலிருக்கிற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை யார் வேண்டுமானாலும் தொட்டு வணங்கலாம் என்றிருக்கிறது. அதுபோல இங்கேயும் கர்ப்பகிரகத்திற்கு வெளியே இருக்கிற உருபரிவாரங்களை யார் வேண்டுமானாலும் தொடலாம். அதே சிலை கர்ப்பகிரகத்தில் இல்லாமல் வெளியே இருந்தால் நாய்கூட நக்கிவிட்டுச் செல்லலாம். அதனால் அந்தச் சிலையின் புனிதம் ஒன்றும் கெட்டு விடுவதில்லை. கர்ப்பக்கிரகத்திற்குள் இருப்பதைத் தொட்டால் மட்டும் எப்படிப் புனிதம் கெட்டுவிடும்? வெளியே யிருக்கிற சிலைக்கு இல்லாத புனிதம் அதற்கு மட்டும் எப்படி வந்தது என்று கேட்கின்றேன்? பார்ப்பான் ஆக்கிய சோற்றை நம் கண்ணால் பார்த்தால் அதைக் கீழே கொட்டிவிடுவான். இன்று நம்முடன் வந்து உட்கார்ந்தே சாப்பிடுகின்றான்,- நாம் சமைப்பதைச் சாப்பிடுகின்றான்.
இப்படி உண்பதில்- பழகுவதில் எல்லாம் ஒன்றான பின் எல்லோருக்கும் பொதுவான கர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் இந்தப் பேதம் எதற்காக என்று கேட்கின்றேன்? சாதி இழிவை, சூத்திரத் தன்மையை நிலைநிறுத்த அல்லாமல் வேறு எதற்காக? வேறு என்ன அவசியத்திற்காக இங்கு மட்டும் நாம்  போகக் கூடாது என்பது என்று நம் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். சிலர் நகை இருக்கிறது அதனால் தான் எல்லோரும் வரக்கூடாது என்று சமாதானம் சொல்கிறார்கள். உன் சாமிக்கு  நகை போட்டிருக்கிறாய் என்பதற்காக நான் சூத்திரன் என்பதை ஒப்புக் கொள்வதா? இடம் சிறிதாக இருக்கிறது, அதிகம் பேர் உள்ளே போக முடியாது என்றால், ஒவ்வொருவராகச் சென்று தொட்டுக் கும்பிட்டு வருகிறார்கள். நகை இருக்கிறது என்றால் இரண்டு போலீசைப் போட்டுப் பாதுகாத்துக் கொள். இவற்றிற்காக நாங்கள் எங்கள் மானத்தை இழக்கத் தயாராக இல்லை.
மொழிக்காகப் போராட்டம் என்கின்றார்கள். இன்றைக்கும் அனேகக் கோயிலில் பார்ப்பான் சமஸ்கிருதம் சொல்லிக்கொண்டு பூசை செய்கிறான். எதற்காகத் தமிழ்நாட்டில் இப்படி நடக்க வேண்டும் என்று இதுவரை எவனுமே கேட்க வில்லை? இந்த அரசாங்கம்- நம் அரசாங்கம் சும்மாவிட்டுவிடும் என்று கருதவில்லை. அவர்கள் கடமையை அவர்கள் செய்வார்கள். அதுபற்றி நாம் அரசாங்கத்தைக் குறை கூறப் போவதில்லை.
காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தனிக் கிணறு, தனிக்கோயில், தனி பள்ளிக்கூடம், தனிக் குளம் வெட்டுவது என்று அதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேல் பணம் ஒதுக்கி அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்தார்கள். நான் ஆதிதிராவிடர் மக்களுக்குத் தனியாகப்  பள்ளிக்கூடம் கிணறு கட்டுவதை விரும்பவில்லை. அதை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டேன்.
நாம் கர்ப்பக்கிருகத்திற்குள் போக வேண்டுமென்பது கடவுள் நம்பிக்கைக்காக, பக்திக்காக, புண்ணியம் சேர்ப்பதற்காக, போக வில்லை; அதில் உள்ள அவமானத்தை நீக்க வேண்டும் என்பதற்காகப் போகிறோம். திறந்து விட்டுவிட்டால் அதனால் என்ன பலன் என்று கேட்பீர்கள். சாமிக்கு இருக்கிற யோக்கியதையே போய் விடும். பார்ப்பானுக்கிருக்கிற உயர்சாதித் தன்மையும் போய் விடும். பார்ப்பானே வெளியே வந்து அங்குக் கடவுள் இல்லை, கல்தான் இருக்கிறது என்று சொல்வான்.
உனக்குத் தான் சாமி இல்லையே- நீ ஏன் அங்கு போகிறாய் என்று கேட்கிறான். மானம் இருப்பதால் போகிறேன். மானம் இல்லாத தால், அறிவு இல்லாததால், இழிவைப்பற்றிச் சிந்திக்காததால் நீ வெளியே நிற்கிறாய்-  என்று சொல்வேன். நாம் போவதற்கு உரிமை வந்துவிட்டால், பிறகு பூசை செய்கிற உரிமை நமக்குத் தானாகவே வந்து விடும்.
மொழிக்காகச் சத்தம் போடுகிறாய்; கோயிலிலே சமஸ்கிருதத்திலே மந்திரம் சொல்கின்றான். அதுபற்றி எவனுமே சிந்திப்பது கிடையாது. தமிழில் சொல்லக் கூடாது என்கின்ற ஏற்பாடு பார்ப்பானாகச் செய்து கொண்டதே தவிர சாஸ்திரத்தில் கிடையாது.
இதெல்லாம் வளர்ந்தால் மனிதனுக்கு இருக்கிற மூடநம்பிக்கைப் போய்விடும்; பூச்சாண்டி போய்விடும்.
சமுதாயத் துறைக்காக இந்த நாட்டிலே என்னைத் தவிர எவனய்யா பாடுபட்டான்? பந்தயம் கட்டிக் கேட்கிறேன். எவன் பாடுபட்டான்?
நீங்களெல்லாம் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று பயப்படாதீர்கள்; கடவுள் உண்மையில் இருந்தால் அதை ஒழிக்க யாராலும் முடியாது. அது போன்றுதான் இந்து மதம் என்பதும், இல்லாத ஒரு கற்பனையாகும். என்று தெளிவாக எடுத்துவிளக்கி இழிவு நீக்கிக் கிளர்ச்சியில் எல்லா மக்களும் பங்கேற்க முன்வர வேண்டும்.

                         -----------------------------------26.10.1969 அன்று வேலாயுதம்பாளையம் நாகம்மையார் திடலில் ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு "விடுதலை", 7.11.1969

20.9.18

பண்பாடற்ற பார்ப்பனர்களை அடையாளம் காணுங்கள்!

பண்பாடற்ற பார்ப்பனர்களை அடையாளம் காணுங்கள், தமிழர்களே! 'துக்ளக்'கைக் "கவனியுங்கள்!"


விஷமம் - பூணூல்தனம் - இவற்றைச் சன்னமாக நுழைப் பது எப்படி என்பதைத் 'துக்ளக்'கில் தான் பாடம் கற்க வேண்டும். குறிப்பாக அதன் கேள்வி - பதில் பகுதிகளில் அக்ரகாரத்தின் ஊத்தை நாற்றத்தின் மீது வாசனைத் திரவி யங்கள் பூசப்பட்டு இருப்பதை அறிய முடியும். எடுத்துக்காட் டாக இவ்வார (26.9.2018) 'துக்ளக்'கை எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி: காலில் விழ வேண்டாம், பேனர் வைக்க வேண்டாம் - என்று தன் கட்சியினருக்கு அறிவுரை கூறும் மு.க. ஸ்டாலின், பொது மக்களின் போக்குவரத்திற்கு இடை யூறாக ஊர்வலமோ, பொதுக் கூட்டமோ நடத்த வேண்டாம் என்று சொல்வதில்லையே, ஏன்?
பதில்: பந்த், மறியல், உண்ணாவிரதம், ஊர்வலம், பொதுக் கூட்டம் போன்றவற்றின் மூலமாக மக்களுக்கு இடையூறு செய்தால்தானே, கட்சி இருப்பது அவர்களுக்கு நினைவு வரும்.
கேள்வியே  தன் முரண்பாடு கொண்டது  - காலில் விழு வதையும், பேனர் வைப்பதையும் கிண்டல் செய்து வந்த வர்கள், அவற்றைத் தவிர்க்குமாறு ஒரு கட்சியின் தலைவர் சொல்லும்போது யோக்கியமான புத்தியிருந்தால் அதனை வரவேற்கத்தானே செய்ய வேண்டும். அதோடு கொண்டு போய் பொதுக் கூட்டம் போடுவது, ஊர்வலம் நடத்துவதை இணைப்பது சற்றும் பொருந்துமா?
பொதுக் கூட்டங்களும், ஊர்வலங்களும் பொதுவாக நம் நாட்டில் அவாளுக்கு அனுகூலமாக இருக்காதே! சமூகநீதிக் காகவும் பகுத்தறிவுக்காகவும், மொழி உரிமைக்காகவும் இவற்றை நடத்தினால், அவாள் வீட்டில் இடி விழுந்ததாகத் தானே இருக்கும். அதனால்தான் இப்படி இடக்கு முடக்காக எழுதுவது.
சரி... விநாயகர் ஊர்வலம் நடத்திக் கலவரம் செய் கிறார்களே, தேரோட்டம் நடத்தி போக்குவரத்துக்குப் பெரும் இடையூறுகளைச் செய்து கொண்டு இருக்கிறார்களே, பிரமோத்ஸவம் என்று சொல்லி எத்தனை நாள்கள் அல்லோல கல்லோலம் செய்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் மூச்சு விடச் சொல்லுங்கள் பார்க்கலாம். மயிலாப்பூரில், அறுபத்து மூவர் விழா என்று எத்தனை நாள் 'கழுதைக் கூத்து' நடக்கிறது.... போக்குவரத்துக்கு இடைஞ்சல் கொஞ்சமா நஞ்சமா? எழுதுமா  'துக்ளக்'?
அரசுக்குச் சொந்தமான இடங்களில் எல்லாம் அத்துமீறிக் கோயில் கட்டி பொது மக்களின் நடைபாதைகளை எல்லாம் ஆக்கிரமிப்பு நடந்து கொண்டுள்ளதே - ஒரே ஒரு வரி இதுகுறித்து எல்லாம் எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம் - எழுத மாட்டார்கள் - மூச்சுவிட மாட்டார்கள் - ஏன் - அந்தக் குழவிக் கல்லுதான் அவாளின் மூலச் சொத்து - என்ன புரிகிறதோ!
இன்னொரு கேள்வி பதில்
கேள்வி: 'தி.மு.க.வினர் மு.க. ஸ்டாலின் காலில் விழுவதைத் தவிர்த்து, சால்வைகளுக்குப் பதிலாக புத்தகங்களை வழங்க வேண்டும்' - என்று தி.மு.க. தலைமை வலியுறுத்தியுள்ளது குறித்து?
பதில்: சால்வைகளை இஸ்திரி போட்டு புதிய விலைக்கே விற்று விடலாம். புதிய புத்தகங்களைக்கூட பழைய புத்தக விலைக்குத்தான் விற்க முடியும். இருந்தும் ஏன் சால்வையை புத்தகமாக மாற்றினார்கள் என்று தெரியவில்லை.
இது ஒரு பதிலாம் - சால்வைகளைத் தவிர்த்துப் புத்தகங் களை வழங்குங்கள் என்பது அறிவார்ந்த செயல் என்பதுகூட  இந்த அம்பிப் பையன்களுக்குத் தெரியாதா? அந்த சால் வைகள் எதற்குப் பயன்படும்? புத்தகங்கள் வாசிப்பு ஆர்வத் தையும், கருத்துகளைத் தெரிந்து கொள்ளவும் பயன்படும். அது கூட அவாளுக்குக் குமட்டலாக இருக்கும்.
காரணம் இந்த நூல்கள் எல்லாம் பெரும்பாலும் நூல்களின் ஆதிக்கத்தை அறுக்கும் ஆயுதங்களாக இருக்குமே அதனால் தான்! இதுவே இராமாயணமாகவும், மகாபாரதமாகவும், புராணக் குப்பைகளாகவும் இருந்தால் அப்படி எழுது வார்களா?
கல்யாண வீட்டுக்கும், கருமாதிகளுக்கும் செல்லும் புரோகிதப் பார்ப்பனர்கள் பச்சையான காய்கறிகளையும், பொருட்களையும் அடித்துக் கொண்டு வருகிறார்களே அவைகூட மளிகைக் கடைகளில் விற்பதற்காகவா?
சீன யுத்தம் நடந்த போது இந்திய தரப்பில் செத்த இராணுவ வீரர்கள் எத்தனைப் பேர் என்று ஆச்சாரியார் (ராஜாஜி) கேட்டார். பொதுவாக யுத்த காலங்களில் இதுபோல செய்திகளை எந்த நாடும் வெளியிடுவது கிடையாது - அது நாட்டு மக்கள் மத்தியிலே பீதியை ஏற்படுத்தி விடும் என்பதால்!
இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பதவி வரை வகித்த ஆச்சாரியாருக்கு இது கூடத் தெரியாத பூஜ்ஜியமா? அப்பொழுதுதான் தந்தை பெரியார் நறுக்கென்று ஒரு கேள்வியைக் கேட்டார்.
ஏன் ஆச்சாரியார் கேட்கிறார் தெரியுமா? செத்தவர்களின் விவரங்கள் தெரிந்தால் அந்த வீடுகளுக்ªல்லாம் கருமாந்திரக் காரியங்களைச் செய்ய அவாள் ஆத்துப் புரோகிதர்களுக்குச் 'சான்ஸ்' கிடைக்கும் அல்லவா என்று கூறினாரே, அது மாதிரி பதில்கள் தான் இந்தச் சிண்டுகளுக்கு உரைக்கும்.
கேள்வி: தமிழகம் எங்கே இருக்கிறது?
பதில்மெரினாவில் இரண்டு நினைவிடங்களுக்கு நடுவில் நின்று கொண்டு, எங்கு செல்வது என்று தெரியாமல் திண்டாடுகிறது தமிழகம் - இது ஒரு பதில்.
கேட்ட கேள்வி என்ன? அதற்குச் சொல்லப்படும் பதில் என்ன?
பார்ப்பனர்களின் நினைப்பெல்லாம் பார்ப்பனர் அல்லாத மக்களை அவர்களின் தலைவர்களைப் பற்றிதான்.
சென்னைக் கடற்கரையில் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்கள் இருக்கிறதாம். அதைப் பொறுக்க முடியவில்லை இந்த உஞ்சி விருத்திக் கும்பலுக்கு.
அண்ணாவும், கலைஞரும் மறைந்து மண்ணுக்குள் போனாலும் இந்த மடி சஞ்சிக் கூட்டத்தை அன்றாடம் உலுக்கிக் கொண்டே இருக்கிறார்களே.
இந்தத் தலைவர்களும், இவர்களுக்கெல்லாம் தலைவரான பெரியாரும் செய்த வேலைகளால் அல்லவா - உச்சிக் குடுமியோடு வெளியில் நடமாட முடியவில்லை - பூணூல் மேனியோடு பயணம் செய்ய முடியவில்லை. ஒரு காலத்தில் இப்படியெல்லாம் சென்றால் 'வாங்க சாமி' என்று கும்பிட்டு ஒதுங்கிச் சென்ற கூட்டம், இன்று கேலி செய்யும் நிலைக்கு ஆளாகி விட்டோமே என்ற ஆத்திரம் அவாளை இப்படியெல்லாம் 'அர்ச்சனை' செய்ய வைக்கிறது.
கேள்வி: 'மெரினா கடற்கரையில் கூட்டம், போராட்டம் நடத்த அனுமதியில்லை' என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பற்றி?
பதில்: மெரினா கடற்கரையில் அமைதி வேண்டும் என்பதற்காகத் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றத்துக்கு நன்றி. ஆனால், ஏன் நீதிமன்றம் அங்கு மயான அமைதி வேண்டும் என்று நினைக்கிறது என்று தெரியவில்லை.
- இப்படியொரு பதில்.
"மயான அமைதி" இந்த வார்த்தையின் பின்னணியில் என்ன இருக்கிறது என்று புரிகிறதா?
அண்ணா, கலைஞர் உடல்கள் அங்கே புதைக்கப் பட்டுள்ளதால் அது மயானமாம் - அதாவது இடுகாடாம். அதற்கு கலைஞரை அங்கே அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்து விட்டதாம் - அந்த ஆத்திரத்தைத் தீர்த் துக் கொள்ளத்தான் இப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகம்!
கோடானு கோடி மக்களின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய  தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் வேலையில் இறங்கி அவர்களைச் சீண்டுவது நல்லதா?
இதே இடத்தில் பார்ப்பனப் பிரமுகர்களை அடக்கம் செய்திருந்தால் இப்படி எழுதுவார்களா? ஏன் ஜெயலலிதாவை இதே கடற்கரையில் அடக்கம் செய்தபோது 'துக்ளக்' இப்படி எழுதியதா?


பார்ப்பனர் அல்லாத மக்களே, தொண்டர்களே, இந்தப் பார்ப்பனர்களை அடையாளம் காணுங்கள்!

   -----------------------மின்சாரம்  அவர்கள் 20-09-2018 ‘விடுதலை’ யில் எழுதிய கட்டுரை 

17.9.18

தந்தை பெரியார் பிறந்த நாள் செய்தி

தந்தை பெரியார் பிறந்த நாள் செய்தி


எனக்கு (நான் பிறந்து) நாளது செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதியோடு, 93 ஆண்டு முடிவ டைந்து, 94-ஆம் ஆண்டு முதல் நாள் தோன்றி விட்டது.
93 ஆண்டு என்றால், நான் பிறந்து, மாதங்களில் 1116 மாதங்கள், நாட்களில் 34,045 நாட்கள், பிறை களில் (அமாவாசைகளும்) 1,635 ஏற்பட்டு மறைந்து விட்டன. இனிமேலும் எத்தனை காலத்துக்கு வாழ்ந்தாலும், வாழ்வில் தேய்மானம்தான் காண முடியுமே ஒழிய வளர்ச்சி காண்பது என்பது (இயற்கையில்) முடியாத காரியமேயாகும்.
நினைத்தேன்- -& சொன்னேன் -& நடத்திக் காட்டினேன்
என் வாழ்நாளில் நான், மற்றவர் (அனேகர்) கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் கருத்து என்பவைகளில், யாரும் நினைக்காததும், நினைத் தாலும் வெளியில் சொல்ல பயப்படுவதும், துணிந்து சொன்னாலும் செய்கையில் நடவாததும் நடத்திக்காட்ட முடியாததுமான காரியத்தை, எளிதாய் நினைத்து, வெளியில் எடுத்துச் சொல்லி (பிரசாரம் செய்து) காரியத்திலும் நடந்து வந்த தோடு, ஓரளவுக்கு மற்றவர்களுக்கும் தெரியும்படி-விளங்கும்படி, ஓரளவுக்கு நடத்திக் காட்டியும் வந்திருக்கிறேன்,
இந்த நிலை உலகெல்லாம் பரவவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்காக வாழ்கிறேன், என்ற எண்ணத்தில் இருந்து வருகிறேன். அப்படிப் பட்ட காரியம் (எண்ணம்) என்னவென்றால், தெய்வம் இல்லை, தெய்வசக்தி என்பதாக எதுவும் இல்லை, மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தெய்வ சக்தி - தெய்வீகத் தன்மை என்பதாக எதுவுமில்லை; அப்படிப்பட்ட தெய்வீகத் தனம் கொண்டவர்கள் என்பதாக யாருமே இல்லை ; அப்படிப்பட்ட காரியம் என்பதாகவும் எதுவுமே இல்லை என்றும் திண்ணமாய்க் கருதி, உறுதியான பணியாற்றியும் வந்திருக்கிறேன் - வருகிறேன்.
இந்த எனது நிலையால், எனது 93 ஆண்டு வாழ்நாளில் எனக்கு யாதொரு குறைவும், சங்கடமும், மனக்குறைவோ, அதிருப்தியோகூட ஏற்பட்டதேயில்லை. மேற்கண்ட எல்லா காரியங் களிலும், மற்றவர்கள் எளிதில் பெற முடியாத அநேக ஏற்றங்களை சாதாரணமாகப் பெற்றிருக் கிறேன்; மக்களால் நல்ல அளவுக்கு மதிக்கப்பட்டும், பாராட்டப்பட்டும், விரும்பப்பட்டும், போற்றப்பட்டும் வந்திருக்கிறேன். இதனால் உலகுக்கு-மக்க ளுக்கு யாதொரு கெடுதியும் ஏற்பட்டதில்லை என்ப தோடு நாட்டுக்கும், மக்களுக்கும், பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் யாவருக்குமே நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்பட்டு வருகின்றன என்றே சொல்லலாம். நோயும் சாவும் மட்டும் ஏராளம் நமது கருத்து வெளியீடும், பிரசாரமும் துவக்கப்பட்ட காலத்தில்,
நமது மக்களின் சராசரி ஆயுள் (வாழ்நாள்) பத்து ஆண் டே யாகும். கல்வியில் நமது மக்கள் 100க்கு 8 பேர், 10பேர் என எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் ஆவார்கள். ஏராளமான நோய் நலிவுகள்; அவற்றுள் பரிகாரம், சவுக்கியம் செய்ய முடியாத நோய்கள் அதிகம். காலரா (வாந்தி பேதி) வந்தால் 100க்கு 90 பேர் சாவார்கள்; பிளேக் வந்தால் 100க்கு 100ம் சாவார்கள். இருமல் (க்ஷயம்) வந்தால் 100க்கு 80 பேர் சாவார்கள். அம்மை (வைசூரி) வந்தால் 100க்கு 50 பேர்களுக்குமேல் சாவார்கள். தொத்து நோய்களும் பல- குழந்தைச் சாவுகளும் ஏராளம். கர்ப்பஸ்திரீகள் சாவுகளும் ஏராளம் இருந்தன. இதற்கு ஏற்ப ஏழ்மையும் கீழ்த்தரமான வாழ்க்கை நிலையும் இருந்து வந்தன,
அரசியலில் அந்நிய ஆதிக்கம், பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடின. அது போலவே உத்தியோகத் துறையிலும் பார்ப்பன மயமும், முன்னேற்ற வகுப்பார் ஆதிக்கமும் இருந்து வந்தன. முதலாளிகள் ஆதிக்கமும், எஜமான் - அடிமைத் தன்மையும், இயற்கை என்று சொல்லும் தன்மையில் தாண்டவமாடின. செல்வநிலையோ, ஒரு லட்சம் என்பதுதான் உயர்ந்த நிலை. 10 லட்சம் என்பது மிக மிக உயர்ந்த நிலையாய் இருந்தது. மற்றும் எவ்வளவோ கீழ் நிலைக்கு ஆளாகியி ருந்தது மாத்திரமல்லாமல், அந்நிலைபற்றி வெட்கப் படாமலும், கவலைப்படாமலும் வாழ்ந்து வந்தோம்.
"எல்லாம் கடவுள் செயல்; நம்மால் ஆவதில்லை"
இப்படிப்பட்ட நிலையில், இந்த நிலைபற்றி யாருமே கவலைப்படாமல்-இவற்றின் விளைவு பற்றி யாருமே கவலைப்படாமல், "எல்லாம் கடவுள் செயல். நம்மாலாவது ஒன்றுமே இல்லை" என்று கருதி, நிம்மதியுடன் மக்கள் இருந்த காலத்தில், நான் ஒருவன் மாத்திரமே தீவிரமாய் சிந்தித்து, இந்த நிலைக்குக் காரணம் நமது முட்டாள்தனமும், இதுவரை சிந்திக்காததுமேதான் என்று கருதி, துணிந்து கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும், முன்னோர் கூற்றையும் அழித்து, ஒழித்துக்கட்டி, மக்களுக்கு புது எண்ணங்களை - அறிவை உண்டாக்க வேண்டும் என்று பாடுபட்டு வந்ததே இம்மாற்றங் களுக்கு வழியேற்படக் காரணமாயிற்று.
கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கூற்று ஆகியவைகளை எதிர்க்கவும் அழிக்கவும், ஒழிக் கப்படவும் துணிவு எனக்கு எப்போது, ஏன் வந்தது; எப்படி வந்தது என்றால் மேற்கண்ட அவை எல்லாம் மனித சமுதாயத்தின் காட்டுமிராண்டிக் காலமான சுமார் 2000-3000 ஆண்டுகளுக்கு முந்தின மிருகப்பிராயத்தில் ஏற்பட்டவைகளே. அக்காலம் அறிவில்லாத காலம் என்பது மாத்திரம் அல்லாமல்; தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன்  - தங்கை என்பவைகளான முறை பேதங்கள் இல்லாத காலம். அவை மாத்திரமா ? பகுத்தறிவு, சிந்தனை அற்ற காலம் ; வளர்ச்சி என்பதாக ஒரு தன்மை இருக்கிறது என்பதே தெரியாத காலம்.
சாதாரணமாகக் கந்த புராணம், வாயு புராணம், பாரத புராணம், இராமயண புராணம் முதலிய கடவுள் சம்பந்தமான, மதசம்பந்தமான, சாஸ்திர சம்பந்தமான சாஸ்திர புராண இதிகாசங்களையும், சிவ புராணம், விஷ்ணு புராணம், பாகவதம், வெகு சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட பக்த விஜயம், திரு விளையாடல் புராணம், பெரிய புராணம் முதலிய ஆதாரங்களையும், இலக்கியங்களையும் பார்த் தாலே நல்ல வண்ணம் உண்மை விளங்கும்.
மற்றும் இந்த மடமைக் கூளங்களை இன்றைய தினத்திலேயே நம்மில், 100க்கு - 90க்கு மேற்பட்ட மக்கள், அதிகம் புலவர், பண்டிதர், வித்துவான், மகாமகோபாத்தியாய, பி.ஏ., எம்.ஏ., டாக்டர் பட்டம் பெற்ற பெரிய படிப்பாளி, அறிவாளிகள் என்பவர் களெல்லாம் கூட நம்பி, அதன்படி நடக்கத் துணிந்தவர்களும் இருக்கிறார்கள் என்றால், பக்தி என்றாலே, இதைக்காட்டுமிராண்டிக் காலத்திய கற்பனையை நம்புவதும், நடிப் பதும் அதற்கேற்ற கோயில், குளம், உற்சவம், பண்டிகைகள் ஆகிய வைகளை ஏற்படுத்தி பரப்பி கொண்டாடி வந்தனர் என்றால், அறிவிலிகள் எவ்வளவு மோசமாக ஏற்பட்டவர்களாக காட்டுமிராண்டி களாக இருந்திருக்க மாட்டார்கள்?
அந்தத் துணிவில் அதிசயம் ஏது?
அவ்வளவு ஏன், கிரகணங் களை நம்புகிறவர்கள் எத்தனை பேர்? இன்றுகூட சாதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் இந்தி யாவுக்கு அப்பால் உலகம் இருப்ப தாகவே தெரியாதோர் எத்தனை? இன் றைக்கு 150, 200, 300 ஆண்டு களுக்கு முன் நம் நிலை என்ன என்று பார்ப்போமானால் - நெருப் புக்குச்சி ஏது? ரயில், கார், கப்பல், ஆகாயக்கப்பல் ஏது? நடக்க நல்ல பாதை ஏது? இந்த நிலைமையில் உள்ள மக்களின் மூட காட்டு மிராண்டி நம்பிக்கையான - அதன் தோற்றங்களான கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என் பவைகளை ஒழிக்க ஒரு மனிதன் துணிவு கொள்ளுவானானால், அத் துணிவில் அதிசயம் ஏது? எப்படியிருக்க முடியும்?
பகுத்தறிவுள்ள மனிதனாக இருந்து கொண்டு, கடவுள், மதம், சாஸ்திரம், பெரி யோர் கருத்து என்பனவாகியவைகளை நம்புவதும்; அழிக்காமல், ஒழிக்காமல் இருப்பதும் - பின்பற்றுவதும்தான் முட் டாள்தனமான; காட்டுமிராண்டித்தனமான துணிவு கொண்ட தன்மையாகும் என்று சொல்லலாம்.
மூடனுக்கும் புரியாமல் போகாதே
நிற்க, மேலே கண்ட எனது துணிவான கருத் துக்களால், பிரசாரத்தால் இவ்வைம்பது ஆண்டுக் கப்பால் நம் நாட்டாருக்கு மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட தீமை என்ன? கேடு என்ன என்று பார்த் தால்; ஒரு சாதாரண மனிதனுக்கும், அவன் கடு களவு சிந்தனையாளனாக இருந்தால் ஒன்றும் ஏற்பட வில்லை என்பதோடு மேலே காட்டப்பட்ட அனேக நன்மைகள் ஏற்பட்டிருப்பது தெரியாமல் போகாதே.
அது மாத்திரமா? இந்தக் கடவுள், மதம், சாஸ் திரம், முன்னோர் கருத்து என்பவைகளால் நாட் டுக்கு - மனித சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளும், வளர்ச்சித் தடைகளும் எப்படிப்பட்ட மூடனுக்கும் புரியாமல் போகாது. எனவே நான், 93 ஆண்டு வாழ்ந்ததை வீண் வாழ்வு என்று கருதவில்லை - என் பணிகளை வீண்பணி என்றும் கருதவில்லை.   இனிமேலும் வாழ்வதைத்தான் கஷ்டமாகக் கருதுகிறேன். என் உடல் நிலைமை மிக மோசமாகி விட்டது. நினைவு சரியாக இல்லை . மறதி அதிகம். கண், காது சரியாக இல்லை. கால்கள், நடக்கவே முடிவதில்லை . அசதி அதிகம்.
இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, சிறிது உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணி களால்தான். காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை அவைகளால் நாட்டுக்கு - சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக் கட்டாததால் சமுதாய விஷயத்தில், ஜாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்; என்ன கொள்கை மேற்கொண்டார்கள் என்பவை களைச் சிந்தித்தால் தெரிய வரும்.
ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப்போதைய இந்த தி. மு. க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சிவரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளை சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது. மற்றபடி மகிழ்ச்சியோடு இதை முடிக்கிறேன்.
           ------------------------- ஈ.வெ.ராமசாமி - தந்தை பெரியார் 94ஆவது பிறந்த நாள் 'விடுதலை' மலரிலிருந்து.... - 17.9.1972

          ********************************************************************

எனது 95ஆம் ஆண்டு பிறந்த நாள் துவக்கத்துக்கு வழமைபோல் ஆண்டு மலரில் ஒரு கட்டுரை எழுதவேண்டியிருக்கிறது. அதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன், அப்படி எழுதப்படும் இக் கட்டுரை என்னால் ஆண்டு மலர்களுக்கு எழுதப்படும் கட்டுரைகளில் இதுவே கடைசியான கட்டுரையாக இருந்தாலும் இருக்கலாம். ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால், அடுத்த ஆண்டு மலர் எழுதப்பட வேண்டிய காலத்தில் நான் இருப்பேனோ, இல்லையோ என்கிற பிரச்னை மாத்திரமல்லாமல், எழுதும்படியான வாய்ப்பு இருக்குமோ, இருக்காதோ என்பதே முக்கிய காரியமாகும். ஏனெனில், இன்னும் நாம் இருப்பது போலவே அதாவது, இந்திய ஆட்சி என்பதற்குள் பிரஜையாகவும், சமுதாயத்தில் நாலாஞ் சாதி (சூத்திர மக்களா கவும்) சட்டப்படி, சாஸ்திரப்படி பார்ப்பானின் தாசி மகன் என்னும் பெயருடன் நமது தாய்மார்கள் பார்ப்பானின் தாசிகளாகவும் இருக்கும் தன்மையாலேயே இருப்போமா என்கின்ற கருத்தைக் கொண்டே இப்படி எழுதுகிறேன். !
நம்மில் பலர் சிறையில் இருக்க நேரிடலாம்
இந்திய அரசியல் சட்டப்படி நாம் இந்திய ஆட்சியில் பிரஜையாய் இருக்கும்வரை இந்துவாய் அதாவது, கிறிஸ்துவனாகவோ, முஸ்லீமாகவோ நாம் மதம் மாற்றிக் கொள்ளாதவரை நாம் நமது பண்டார சன்னதிகள் உட்பட பவுத்தனுக்கும், ஜெயினனுக்கும் சமானமாக இருக்கும்படியாக இருந்தாலும், பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், வேறு எந்தப் பெயரில் வாழ்ந்து வருபவனாக இருந்தாலும் சூத்திரனாகத்தான், பார்ப்பானின், தாசி மகனாகத்தான் இருந்தாக வேண்டும். இது தான் இன்றைய இந்திய அரசியல் சட்டமாகும். இந்த சட்டத்தைத் திருத்தவோ மாற்றவோ நம் மக்களுக்கு ஒருநாளும் சக்தியோ, உரிமையோ ஏற்படும் என்று கருதவே முடியாத நிலையில் இருக்கிறோம். அது மாத்திரமல்லாமல் இந்திய ஆட்சியில் இருந்து தமிழ் நாட்டை விலக்கிக் கொள்ள முயற்சி செய்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயமான - நிர்பந்தமான நிலையில் இருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் இந்திய ஆட்சியிலிருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமா என்பது பற்றி நமக்கு முடிவு செய்து கொள்ள முடியாமல் இருந்தாலும் இம் முயற்சியில்
நாம் பலர் சிறையில் இருக்க நேரிடலாம் என்கிறதாலேயேதான் இந்தப்படி எழுதுகிறேன்.  உடனடியாக விடுதலை முயற்சியில் ஈடுபட வேண்டும் நமக்கு இன்றைய இந்திய ஆட்சியில் அரசியல் பிரச்னை எப்படி இருந்தாலும், சமுதாயப் பிரச்னையில் நாம் இன்று இருக்கும் இழி தன்மையில் இருந்து, அதாவது சூத்திரனாக, தாசி மகனாக நம் தாய்மார்கள் தாசிகளாக சட்டப்படி, சாத்திரப்படி இருக்கும் நிலைமையை மாற்றிக்கொள்ள முயற்சிக்காமல் நாம் இருக்க முடியுமா? இந்தியாவில் நாம் இருக்கும்வரை இந்துவாகத்தானே இருந்து ஆகவேண்டும். இந்து என்றாலே, முஸ்லீம், கிறிஸ் துவம் தவிர மற்ற யாவருமே சூத்திரர் தாசி மக்கள் தான் என்று இருப்பதால், ஏதாவது முயற்சி செய்து தான் ஆகவேண்டும். நம் மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள். மதம் மாறுவதை இழிவாய்க் கருதுபவர்களாவார்கள். ஆதலால் நாம் உடனடியாக விடுதலை அதாவது இந்திய கூட்டாட்சியிலிருந்து விலகி சுதந்திரத் தமிழ் நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம் முயற்சிக்கு இன்றைய நம் தி.மு.க. ஆட்சி இணங்கும் என்று கருதமுடியாது.
ஏனெனில், தி.மு.க. ஆட்சி விரும்புவதெல்லாம் இந்திய கூட்டாட்சி ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுயாட்சிதான் அது விரும்புகிறது. மாகாண சுயாட்சி என்றால், அரசியலில் தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு காரியமும் செய்ய முடியாது. 'இந்து' என்றால் சட்டப்படியான விளக்கம் இந்திய அரசியல் சட்டத்தில் சமுதாய (மத) சம்பந்தமான காரியங்களைப் பற்றி பழைய மனுதர்ம நிலையை மிகமிகப் பலப்படுத்திக்கொண்டபடியிருக்கிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமானால், கர்ப்பகிரகத்திற்குள் சூத்திரன், அதாவது பண்டார சன்னதி உட்பட இந்து என்ற தலைப்பில் வரும் எவருமே, பார்ப்பான் தவிர்த்து எவருமே செல்ல முடியாதென்று உயர்நீதி (சுப்ரீம்) மன்ற தீர்ப்பு இருப்பதினாலும், இன்னும் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கென்று போகும் யாருமே தீண்டத்தகாதவர்கள்போல் வாயில்படிக்கு வெளியில் தான் எட்டி நிற்கவேண்டும் என்றால், மற்றப்படி எ தில் நாம் மாறுதலைக் காணமுடியும் ?
இன்று அமுலில் இருக்கும் இந்து லா என்னும் சட்டத்திலும், பல உயர் நீதி மன்றங் களின் தீர்ப்பிலும், பார்ப்பனரல்லாத இந்து மக்கள் என்பவர் களை மிகமிக இழிவாகக் கூறி, நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இந்து என்னும் சொல்லுக்கு சட்டத்தில் கொடுத்திருக்கும் விளக்கம் என்னவென்றால், "கிறிஸ்துவர்கள்- முஸ்லீம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள்.'' இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று  ஆகிவிடுகிறார்கள்.
சுயமரியாதை இயக்கத்தின் 50 வருட சாதனை
நான் முதலில், நான் இந்து அல்ல என்று சொல்லிவிட்டால் இழிவு நீங்கிவிடும் என்று தான் கருதினேன். பிறகு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் தவிர்த்த, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள் - இந்துக்கள் என்றால் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. ஆதலாலேயே தீவிர முயற்சி எடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இன்று நம் நாட்டில் இந்துக்கள் எல்லோருக்குமே அரசியலில் தான் முக்கிய கவனம் இருக்கிறது. அன்றியும் நாட்டுப் பிரிவினை என்றால், எல்லா மக்களுமே பயப்படுகிறார்கள். காரணம் பதவி கிடைக்காதே என்கின்ற காரணம் மாத்திரமல்லாமல், சிறைக்குச் செல்ல வேண்டுமே என்றும் பயப்படுகிறார்கள். 50 வருஷ காலமாக சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு - பல பதவி உத்தியோகம் பெற நேர்ந்ததோடு அரசியலில் பார்ப்பனர் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்கிற்று என்பதல்லாமல் சமுதாயத் துறையில் உள்ள அடிப்படை இழிவு நல்ல அளவுக்கு பலம் பெற்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.  எனவே, நாம் சட்டத்தைப் பற்றி பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப் படாமலும், சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன்வர வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதை பணிவோடு தெரி வித்துக் கொள்கிறேன்.  "சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம் ''
என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக் கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்து தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல் (கூப்பாடாக) லாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொது மக்களே ! இளைஞர்களே ! பள்ளி, கல்லூரி மாணவர்களே ! மாணவிகளே! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்!! உறுதி கொள்ளுங்கள்!!!
            --------------------- ஈ.வெ.ராமசாமி - தந்தை பெரியார் 95ஆவது பிறந்த நாள் 'விடுதலை' மலரிலிருந்து.... - 17.9.1973