Search This Blog

7.3.22

நமக்குப் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயர் இழிவை கொடுக்கிறது - பெரியார்

 

திராவிட மக்களின் இழிவு நீக்கமும் முன்னேற்றமும் நமது குறிக்கோள்!



சாதாரண மக்களுக்குத் தேசீயகழகம் என்றால் என்ன என்று உணர தெரியாவிட்டாலும் படித்த மக்களுக்கு வித்தியாகமாகத் தெரியும். அந்த வார்த்தை ஒரு நாட்டிற்காகச் சொல்லப்படுவதல்ல. தப்பாக மக்கள் கருதுகிறார்கள், அது ஒரு நாட்டு அரசியலுக்குச் சொல்லப்படுவது என்று. அது தவறு. தேசீயம் என்று சொன்னால் அது - அந்த வார்த்தை இனத்திற்கு பிறவிக்கு ஜாதிக்கு சொல்வதே ஒழிய, தேசத்துக்கு சொல்வதல்ல. நேஷன் என்றால் ஜாதியம் என்று பொருள். இந்தியாவில் பல இனம் உண்டு. இந்தியா ஒரு தேசம் அல்ல அல்லது அது நேஷன் (ஜாதியும்) அல்ல. இந்தியா எப்பொழுதும் ஒரே நாடாக இருந்ததில்லை. ஒரே சமுதாயமாகவும் இருந்ததில்லை.

 

உலக மக்களில் 250 கோடி மக்களில் எத்தனையோ பிரிவுகள், எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன. அவைகளில் உடற்கூற்று வல்லுநர்கள் 4, 5 இனங்களாக மக்களைப் பிரித்து இருக்கிறார்கள். அந்தந்த தட்பவெட்ப, சீதோஷண ஸ்திதி நிலைமைக்கு ஏற்றவாறும், பழக்க வழக்கம் நடை உடை பாவனைகட்கும், உணவு, நாகரிகம் முதலிய தன்மைகட்கும் ஏற்றவாறு பிறவி இந்திரிய உறுப்புகளுக்கு ஏற்றவாறு மக்களை இனப்படுத்தி இன வாரியாகப் பிரிக்கப்பட்ட இனமாகிய ஒன்றுதான் நாமாகிய திராவிட இனம் என்பதும் மற்றவை ஆரியர் என்றும் மங்கோலியர் என்றும் நீக்கிரோவர் என்றும் காக்கேசியர் என்றும் பல வகை உண்டு. இந்நாட்டுப் பெரும்பான்மை மக்களாகிய திராவிடர்கள் இன்று இந்த நாட்டிலேயே அந்நியர்களால் சமுதாயத் துறையில் மிக்க இழிவாக நடத்தப்படுவதுடன் சாத்திரத்தில், சட்டத்தில் நாலாவது அய்ந்தாவது ஜாதிகளாக அதாவது கீழ் மக்களாகக் கருதப்படுகிறோம். இன்றும் நம்மவரில் பழங்குடி மக்களாக இருப்பவர்களை பஞ்சமர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் கருதி ஒதுக்கிவைத்து இருக்கிறார்கள். இந்த நிலை நம்மவர்கட்கு மாற வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் முக்கியத் தொண்டு. அதற்காகவே அது இருந்து வருகிறது. பல ஆண்டுகளாகப் பாடுபட்டு வந்திருக்கிறது.

 

இதற்கு முன் நம் இயக்கம் வேறு பெயரால் இருந்து வந்தது. அதாவது ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) என்றும் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும் அழைக்கப்பட்டு வந்தது. திராவிடர்களுக்கு உத்தியோகங்கள் வாங்கிக் கொடுப்பதிலும், பதவிகள் பெறுவதிலும், விகிதாச்சாரப்படி அந்தந்த துறையில் பார்ப்பனரல்லாதார் முன்னுக்கு வரவேண்டும் என்பதிலும்தான் பெரிதும் அது தன் கவனத்தைச் செலுத்திப் பாடுபட்டு வந்தது. ஒருவிதத்தில் அந்தக் காரியத்தில் யாருக்காகப் பாடுபட்டார்களோ அந்த மக்கள் அந்த நலனை உணரக் கூடிய தன்மையில் அந்தப் பெயர் அமையாததுதான் காரணம்.

 

மக்கள் தங்களை இன்னார் என்று உணரும் சக்தி இல்லாதவர்களாய் இருந்தார்கள். பார்ப்பனரல்லாதார் என்னும் பேதங்களை ஒரு அந்நியரைப் போலவே பார்ப்பனர்களுக்கு அடிமைகளைப் போலவே கருதி வந்தார்கள். அந்தப் பெயர் இந்தச் சமுதாயத்திற்கு மான உணர்ச்சியை கொடுக்கவில்லை. ஒற்றுமை உணர்ச்சியை கொடுக்கவில்லை. அதன் காரணமாகத்தான் பெயரை மாற்ற வேண்டியதாயிற்று. ஒரு பெயரைச் சொன்னால் மக்களுக்கு உணர்ச்சி ஏற்படும் வித்ததிலும், அவர்கள் ஒன்று சேரும் வண்ணத்தை ஊட்டும் விதத்திலும் இருக்க வேண்டும். அதற்கு ஆகவே நாம் உண்மையிலே நமக்கு என்று இருந்த வந்த சரித்திர காலம் தொட்டும் ஆராய்ச்சி காலம் தொட்டும் வழங்கிய 'திராவிடர்' என்ற பெயரைச் சொன்னோம். அதோடு மாத்திரமல்லாமல் நாம் இந்த நாட்டு பழங்குடி மக்கள், இந்த நாட்டை ஆண்டவர்கள், இந்த நாட்டுச் சொந்தக்காரர்கள், உரிமையாளர்கள் அப்படிப்பட்ட நமக்கு என்று ஒரு பெயர் இல்லாமல் இந்த நாட்டிற்குப் பிழைக்க வந்த கூட்டத்தினரை மேன்மைப்படுத்தி அவர்களால் இழிவு படுத்தப்பட நாம் அவர்கள் அல்லாதவர்கள் என்று அதாவது 'பார்ப்பனர் அல்லாதவர்கள்' என்று அதாவது பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் என்று நம்மைச் சொல்லிக் கொண்டால் நமக்கு மானம் இருக்கிறதா? அறிவு இருக்கிறதா? என்பதை தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

 

நமக்குப் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயர் இழிவை கொடுக்கிறது நம் அறிவுக்கு அது பொருத்தமற்றதாய் இருக்கிறது என்று கருதிதான், சொன்னமாத்திரத்திலேயே நாம் ஒன்று என்ற எண்ணம் தோன்றவும், நாம் இந்த நாட்டு அரச பரமபரையினர் என்ற கருத்து வரும்படியான ஒரு பெயரை 'திராவிடர்' என்று சொல்லிக் கொள்கிறோம். அந்த மக்கள் நலத்திற்குப் பாடுபடுவோர் ஸ்தாபனத்திற்கு 'திராவிடர் கழகம்' என்று அழைக்கிறோம்.

 

 இதைத் தவிர எங்களுக்கு ஒருவரிடத்திலும் வெறுப்புக் கிடையாது. பார்ப்பனர்களை அடியோடு வெறுக்க வேண்டும் என்பதோ அல்லது அவர்களை இந்த நாட்டை விட்டு விரட்டி விடுவது என்பதோ எங்கள் கருத்தல்ல. மக்கள் சரியானபடி புரிந்து கொள்ளாததனால் எதிரிகள் எங்களைப் பற்றித் தப்பான முறையில் பிரசாரம் செய்வதனால் எங்களுடைய உண்மையான நோக்கங்களை நீங்கள் உணர முடியாமல் போய்விடுகிறது.

 

சமுதாயத்தில் கீழ் ஜாதி மக்களாகவும், கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகியவைகளில் அறிவும் ஆற்றலும் கருதியும் சரி உரிமையும் இடமும் இல்லாத மக்களாகவும் இருந்து வருகிறோம். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் அடிமையும் உடல் உழைப்பாளியும் அக்காரணத்தினால் சமுகத்தில் தாழ்ந்தவனாகவும் இழிமகனாகவும் இருந்து கொண்டு வருகிறோம். நம் உழைப்பின் பலன் நமது ஜீவனத்துக்கு மாத்திரமே போதும் போதாததாக அனுபவிக்க உரிமை உடையவர்களாக இருந்து வரவுமான நிலையில் சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பெயராலும் இருக்கின்றோம். அதாவது இருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையிலும், தன்மையிலும் உள்ள மக்களாகிய நாம் எண்ணிக்கையில் அதிகமாய் இருந்துவருவதோடு, சரித்திர ஆதாரங்களின்படி திராவிடர் ஆகிய நாமே இந்த நாட்டிற்கு உரிய பழக்குடி மக்களாகவும், இந்த நாட்டை ஆண்டு அரசு செலுத்தி வந்த மக்கள் சந்ததியார்களாகவும் இருந்து வந்திருக்கிறோம்.

 

இப்படிப்பட்ட நாம் இன்றைய இந்த நிலையில் இருப்பதற்கக் காரணம் என்ன? நாம் அன்னியரால் அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் நாம் ஜெயிக்கப்பட்டவர்களாகவும், ஆகிவிட்ட மக்களானதனால்தான்.

 

யாரால் எப்படி இந்த இழிவு என்று சிந்திக்க வேண்டியது அவசியமாகும். அப்படி சிந்தித்துப் பார்த்தோமேயானால் அன்னியர்கள் இந்த நாட்டு தலைவர்களான இந்த நிலை நமக்கு ஏற்பட்டது. இந்த நாடு என்பது வடக்கே இமயமலை, தெற்கே கன்னியாகுமரி, கிழக்கிலும், மேற்கிலும் பெரும் அளவுக்குக் காடும் மலையும் உள்ள பிரதேச எல்லைக்குள் இருக்கும் நாடாகும். இதில் அந்நியர்கள் என்பது இப்பிரதேச எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள், இருந்தவர்கள் ஆவார்கள். அது மாத்திரமேயல்லாமல் பிறவி உணர்ச்சி, பழக்க வழக்கம், கலை, நாகரிகம் முதலிய வகைகளிலும் வேறுபட்டவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்ட அந்நியர்கள் நம் இனமல்லாதவர்களுமாவார்கள். வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆரியர்கள் என்று சொல்லப்படுவார்கள்.

 

ஆரியர்கள் இந்த நாட்டில் பிரவேசித்து, இந்த நாட்டு மக்களை ஏய்த்து, தந்திரமாக ஏமாற்றி, தங்களுக்கு மேன்மையாகும்படியான கலாச்சாரத்தைப் புகுத்தி நம் மீது ஆரியக் கருத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் மேன்மக்களாகவும் நாம் கீழ் மக்களாகவும், அவர்கள் உயர் பிறவிகளாகவும் நாம் இழி பிறவிகளாகவும், நாம் கீழ் மக்களாகவும் அவர்கள் பாடுபடாமல் சுகவாசிகளாக வாழ வேண்டியவர்களாகவும், நாம் பாடுபட்டு அவர்களுக்கு அடிமையாய்ப் பணியாற்றி அரை வயிற்றுக் கஞ்சிக்கும் திண்டாட வேண்டியவர்களாகவும், அவர்கள் நல் வாழ்வுக்கு ஆகவே நாம் பாட்டாளி, சூத்திரமக்களாக இருந்து வர வேண்டியதாகிப் பரம்பரையாக இருக்க சாஸ்திர பூர்வமாக, சட்ட பூர்வமாகச் செய்து கொண்டார்கள். அவர்களுக்குச் சாஸ்திரம், ஸ்மிருதி, மனுதர்மம், கடவுள், மோட்சம், நரகம், பண்டிகை, விரதம், விசேஷ நாள், புண்ணிய நாள் முதலியவைகளை ஆக்கி அவற்றை நம்மை ஏற்கச் செய்து அதன் மூலம் நம்மை இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். நமது இழிவும் தாழ்மையும் பிற்பட்டவர்களாக ஆக்கின தன்மையும் நாலாவது, அய்ந்தாவது ஜாதியாக அதாவது சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்ற தன்மையும், மதத்திலும் கடவுள் தன்மையிலும் பட்டுவிட்டதாலும், வாழ்வில் அந்நியர்களான அவர்களே சகலத்துறையிலும் ஆதிக்கத்தில் இருப்பதாலும், நம் இழிவை முன்னேற்றத் தடையை மாற்றிக் கொள்ள நீக்கிக்  கொள்ள நமக்கு வசதியும் சாத்தியமும் இல்லாமல் போய்விட்டன. அதனாலேயேதான் இந்தக் குறைபாடும் கொடுமையும் நீங்க யாரும் இதுவரை பாடுபட்டு இருப்பதாகத் தெரியவில்லை.

 

ஏராளமான அவதாரங்கள், தெய்வீகர்கள், சுவாமிகள், ஆழ்வார்கள், ஆச்சார்ய சுவாமிகள், நாயன்மார்கள் தோன்றி இருந்தாலும் அவர்கள் யாவரும இந்த இழிவை நிலை நிறுத்த இருந்தார்களே ஒழிய, ஒருவராவது இந்தக் கொடுமை நீக்குவதற்குச் சாதனமாகச் செயல்படவே இல்லை.

 

ஆகவே திராவிடர் கழகம் ஒன்றுதான் இந்த 25 ஆண்டுகளாப் பாடுபட்டு வருகிறது.

 

நம் முன்னோர்கள் சிலர் பாடுபட்டு இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அசுரர்கள் என்றும் இராட்சதர்கள் என்றும் கூறி, கடவுள்கள், அவதாரங்கள் தோன்றி அழித்ததாகத்தான் புராணங்கள் கூறுகின்றன. அதோடு மாத்திரமல்லாமல் எவனாவது பாடுபட்டால் அவன் வம்சத்திலேயே ஒருவனை பிடித்து அவனை ஒழிக்க முயற்சி செய்வார்கள். இராவணனை ஒழிக்க அவன் தம்பியையும், சூரனை ஒழிக்க அவன் தம்பியையும் இரணியனை ஒழிக்க அவன் மகனையும் பிடித்து எதிரிகளாய் உண்டாக்கினார்கள். அந்த மாதிரி பாடுபட்டவர்களை எல்லாம் ஒழித்து மக்களிடத்திலும் செல்வாக்கு அற்றவர்களாகவும் ஆக்கப்பட்டு விட்டார்கள். இந்த மாதிரிதான் நம் மன்னர்களில் பலர் ஆளாயினர்.

 

நம் அரசர்கள் என்று சொல்லப்படுகிற மூவேந்தர்கள் இந்த இழிவுக்கு ஆக்கம் தந்ததனால் தான் அவர்கள் மன்னர்களாகப் பெருமை பெற்றவர்களாக இன்று நம்மிடம் சொல்லப்படும்படியான அளவுக்கு இருந்து வருகிறது. அவர்களும் இந்த இழிவு ஒழிப்புக்குப் பாடுபட்டு இருந்தால் குலத்தோடு தொலைந்து இருப்பார்கள். அவர்களால்தான் ஆரிய ஆதிக்கம் வேருன்றி விட்டது நமது நாட்டில் என்பேன். இன்று தமிழ்நாட்டிலுள்ள பெரும் பெரும் கோயில்கள் எல்லாம் அவர்கள் காலத்தில் ஏற்பட்டவைகள் தான். ஏராளமான சத்திரங்களும், சாவடிகளும், தரும நிலையங்களும், கடவுள்களுக்கு மானியங்களும், கோபுரங்களும் மண்டபங்களும் ஏராளமாக ஏற்படுத்தப்பட்டன. பார்ப்பனருக்கு அவர்கள் காலத்தில் மிகுந்த செல்வாக்கு இருந்து வந்து அவர்களுக்குப் பயந்து அவர்கள் கொள்கைகளுக்கு ஏற்ப அரசு புரிந்து நம் சந்ததியார்களை என்றென்றும் அவர்கள் அடிமைகளாக இருக்கும்படியான வசதிகளை எல்லாம் செய்துவிட்டார்கள் அதனால்தான் அவர்கள் பெயர் நாட்டில் நடமாடுகிறது.

 

பாரதம், இராமயணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் இவைகள் எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொருவனைக் கொல்ல அவதாரம் எடுத்த நூல்கள்தாம்.

 

இராமன் கடவுள்; அவனை இராவணை எதிர்த்தான் தொலைந்தான். அதேபோல் இரணிய அரசன் விஷ்ணுவை வணங்கமாட்டேன் என்றான்; அவனும் தொலைந்தான். சூரன் சுப்பிரமணியனை வெறுத்தான் அவனும் தொலைந்தான். இப்படியாக ஆரியத்தை கண்டிக்கும் எவனும் தொலைவான் என்பதற்காக எழுதப்பட்டவை தான் மேற் சொன்ன புராண நூல்கள் அனைத்தும். வேதனைப்படுவதா? இது எவ்வளவு மானக்கேடான சங்கதி! சிந்தித்துப் பாருங்கள்.

 

ஆரியர்கள் போர்  செய்து திராவிடர்களை வென்றுவிடவில்லை - வெல்லவும் முடியாது. ஆனால் ஆரியக் கலாச்சாரத்தை நம் மக்களிடையே புகுத்தியே வெற்றி பெற்றனர். அதிலிருந்து முளைத்ததுதான் இந்தக் கீழ் சாதி - மேல் சாதியாகும். மதத்திலே, கடவுள் தன்மையிலே, தத்துவத்திலே நம்மை வென்றுவிட்டனர். அதிலிருந்துதான் இப்போது நாம் மீட்சியடைய வேண்டியிருக்கிறது. பார்ப்பனீயத்தை அடியோடு நாம் அழித்தாக வேண்டும்.

 

கோயிலுக்குப் போவதைக் கண்டிப்பாய் விட்டுவிட வேண்டும். நெற்றிக்குறியிடுவதையும் விட வேண்டும். ஆரியப் பண்பாட்டின் அறிகுறி எதுவும் தெரியாதபடி ஆரியப் பெயர்களையும் ஒழித்துகட்ட வேண்டும்.

 

                               ---------------------------    12.03.1950 செங்கல்பட்டு திராவிடர் கழக மாபெரும் பொதுக் கூட்டத்தில் பெரியார் .வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை”, 15.03.1950