Search This Blog

31.12.09

மானுடம் போற்றிய பெரியார்



"ஒரு பகுத்தறிவாளன் என்கிற எனக்கு மதப் பற்றோ, கடவுள் பற்றோ, இலக்கியப் பற்றோ, மொழிப்பற்றோ எதுவும் கிடையாது. அறிவிற்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சி அடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசுவேன்".

(விடுதலை,- 20.4.1965)

என்கிறார் தந்தை பெரியார். மனிதப் பற்றுதான் தந்தை பெரியாருக்கு உரியதாகும். மானுடத்தைத் தந்தை பெரியார் மதித்ததும், போற்றியதும் மானுடம் தந்தை பெரியாரைப் போற்றியதும் இந்தத் தன்மையில்தான்.

"தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்-டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்-குக் கண் வலியாய் இருப்பவர்கள். அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவதுதான் என் கண்ணோய்க்குப் பரிகாரம்"

(விடுதலை,- 15.10.1967)

பிறவியிலேயே பெரும்பான்மை மக்கள், பிறவித் தொழிலாளர்களாக இருக்கிறார்களே என்பதை எண்ணினால் எனக்கு ரத்தக் கொதிப்பாக இருக்கிறது என்றும் செல்லுகிறார்.

தன் உடலுக்கு ஏற்பட்டுள்ள உபாதைகளை நோய் என்று கருதவில்லை அந்த மானுடத் தந்தை; மாறாக குறிப்பிடத்தக்க மக்கள் பகுதியினருக்கு இழைக்கப்பட்டுள்ள தீங்குகளை, உரிமை மறுப்புகளைக் கண்டு கொதிக்கிறார். அந்தத் தீங்குகளை அகற்றி, சமத்துவம் உள்ளவர்களாக மாற்றி அமைப்பதைத்தான் தனது தொண்டறமாகக் கருதுகிறார்.

மனிதன் தானாகப் பிறக்கவில்லை. எனவே தனக்காக வாழக் கூடாதவன் என்னும் அவரின் கூற்றிலே பொதிந்து கிடக்கும் மானுடப்பற்று மகத்தானது.

மானிடத்தின் சமத்துவத்துக்காகத்தான் தந்தை பெரியார் கடவுள் முதல், ஜாதி, மத, கோத்திரங்கள் வரைக் கடுமையாக எதிர்த்தார்.

1927 குடிஅரசு மே முதல் தேதி இதழில் தந்தை பெரியார் கூறியதைப் படிக்கும் தொறும் படிக்கும் தொறும் மிகவும் மலைப்பாக இருக்கிறது. இதோ அந்த எழுத்துகள்.

பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், குடிஅரசுவினாலும் நான் செய்து வந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவற்றைக் கண்டித்தேன். மதம் என்பதைக் கண்டித்தேன். மதத் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன். மதச் சடங்கு என்பவற்றைக் கண்டித்திருக்கின்றேன். வேதம்என்று சொல்லுவதைக் கண்டித்திருக்கின்றேன். சாத்திரம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். புராணம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். ஜாதி என்பதனைக் கண்டித்திருக்கின்றேன். அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். உத்தியோகம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். நியாயாதிபதி என்பவர்களைக் கண்டித்திருக்கின்றேன். நீதி ஸ்தலம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். ஜனப் பிரநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். கல்வி என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சுயராச்சியம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்திருக்கின்றேன். இன்னும் என்னென்னவற்றையோ,யார் யாரையோ கண்டித்திருக்கின்றேன். கோபம் வரும்படி வைதும் இருக்கின்றேன்.

எதைக் கண்டித்திருக்கின்றேன் ; எதைக் கண்டிக்கவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுதலாமென்று பேனாவை எடுத்தாலும், பேசலாமென்று வாயைத் திறந்தாலும் கண்டிக்கவும்வையவும் துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை. கண்டிக்கத் தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ என் கண்களுக்குப்படமாட்டேன் என்கிறது என்கிறார்.

விரக்தியின் மேலீட்டால் தந்தை பெரியார் இப்படி எழுதவில்லை. மானுடத்தின் நேர்த்திக்காக, சமத்துவத்துக்காக, ஏற்றத் தாழ்வுகளைத் தரை மட்டம் ஆக்குவதற்காக, மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் உரிமைக்காகப் போராடும்போது, தொண்டாற்றும்போது யாரெல்லாம் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்பதை ஒரு வகையில் பட்டியலிட்டுக் காட்டுகிறார் என்றே கருதவேண்டும். இவர்களை, இவைகளை எதிர்த்துத்தான் தீரவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு:

சிதம்பரத்தில் சகஜானந்தாவின் பள்ளியில் ஆண்டு விழா. அதற்குப் பெரியார் அழைக்கப்பட்டார். அந்தப் பள்ளி நிருவாகிகளுக்கும், உள்ளூர் சனாதனிகளுக்கும் பகைமை உண்டு. அதுவும் பெரியார் வருகிறார் என்றவுடன் அது பல மடங்காகப் பெருகியது. பெரியார் வந்தால் கலகம் செய்வது தாக்குவது என்று முடிவு. அடியாட்கள் தயாரிக்கப்பட்டனர். கையில் ஆயுதங்களுடன் கூடினர். பெரியார் ரயிலில் வர இருந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நிலைமைகளை நேரில் பார்த்து அறிந்தார். பெரியாரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் செய்வதே நல்லது என்று முடிவு செய்து, ரயில்வண்டி நிலையத்துக்கு விரைந்தார்.

அங்கு என்ன நடந்தது? அதைப் புரட்சிக் கவிஞரின் வாயாலேயே கேட்போம்.

பெரியார் வண்டியில் வந்திறங்கினார். அங்குள்ள நிலைமையைக் கூறினோம். கேட்டுக் கொண்டே விடுவிடு என்று ஊருக்குப் போனார். போக வேண்டாம் ஆபத்து, ஆபத்து என்று கூறக் கூறக் கேட்டுக் கொண்டே போனார். எந்த வழியில் போகக் கூடாது என்று நினைத்தோமோ அந்த வழியிலேயே போனார். போய் டக் என்று நின்றார். அதுவும் எந்த இடம்? எந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று பயந்தோமோ, அதேஇடம்! காலிகளின் கூட்டம் எதிர்ப்பை ஆரம்பித்து விட்டது. காலிகளின் ஆயுதம் தாங்கிய கரங்கள் உயர்ந்து விட்டன. இன்று என்ன செய்யப்போகிறோம்? என்று எங்கள் கூட்டில் உயிர் இல்லை.

இந்த நிலையில் பேசவும் ஆரம்பித்துவிட்டார் பெரியார். எப்படிப்பட்ட பேச்சு? பாமரர் முதல் அனைவருக்கும் புரியும் முறையில் அழகாக உள்ளம் கவரும் விதத்தில் பேசினார்.

உங்கள் பையன் ஒருவன் படித்திருக்கிறான், உயர்சாதிப் பையன் ஒருவன் படித்திருக்கிறான். நீங்கள் என்ன விரும்புவீர்கள்? உங்கள் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்றுதானே? ஆனால் இன்றைய ஆதிக்க நிலையில் யாருக்குக் கிடைக்கும்?இதைத்தானே நான் கூறுகிறேன் என்று ஆரம்பித்தார். அவர்கள் மத்தியிலே கருத்து மழை பொழிந்தார். அந்த நேரத்தில் அந்தக் கூட்டம் பெரியார் எதைச் சொன்னாலும் அதைச் செய்யத் துடித்தது; எதிரிகள் மீதுஅதை எளிதாகத் திருப்பி விட்டிருக்கவும் முடியும். அதைப் பெரியார் செய்யவில்லை. சாகடிக்கப்படவிருந்த பெரியார், சாவடிக்க வந்தவர்களையே கருத்தால் மாற்றிவிட்டார் என்று புரட்சிக்கவிஞர் கூறுகிறார்.

மக்களுக்குத் தொண்டாற்றுவது, அதுவும் சமூகப் புரட்சியை மேற்கொள்வது என்பது உயிரைப் பணயம் வைப்பதாகும். இத்தகைய தொண்டைத்தான் தந்தை பெரியார் செய்தார்.

தந்தை பெரியார் மானுடக் குடும்பத்தில் தனித் தன்மையானவர், தனி வழி காட்டிய தத்துவ ஒளி விளக்கு!

வழக்கத்தால், செக்கு சுற்றி வந்த மந்தையில் தனிப்பாதையைக் காட்டி தலைகளைத் தூக்க வைத்து, முதுகு எலும்புகளை நிமிர வைத்து, கண்களைத் திறந்து வைத்து, கால்களுக்கு வலுவூட்டி, மூளை இயந்திரத்தை முடுக்கிவிட்டு கைநீட்டிக் கம்பீரமாக நடக்க வைத்த தன்மானபகுத்தறிவு மூலிகைத் தோட்டம் அவர்.

அவர்களின் ஒவ்வொரு எழுத்திலும், சொல்லிலும், அசைவு இயக்கத்திலும் பகுத்தறிவு மணம் இருக்கும்! தன்மான வெடி இருக்கும்; மனித நேயத் தேன் சுரக்கும்; மனித உரிமைப் பாளை வெடிக்கும்!

அதிர்ச்சி தருகிறதே - ஆபத்தாக முடியுமோ? திடுக்கிட வைப்பதாக இருக்கிறதே - தீங்கு விளையுமோ? நம்பிக்கைகளைத் தகர்க்கப் பார்க்கிறதே - நாசம் விளையுமோ? - என்றுதான் அவரின் புரட்சிக் கருத்துகளை, புதுமை முழக்கங்களைக் கேட்டவர்கள், படித்தவர்கள் அதிர்ந்து போவார்கள். ஆனால் அவையனைத்தும் மானுடத்தை வாழ வைக்கும் மீட்சிப் படகுகள், முன்னே கசந்து பின்னே இனிக்கும் முது நெல்லிக் கனிகள் என்பதைப் பின்னர் உணர்ந்தனர். வசைபாடிய வாய்கள் வாழ்க முழக்கமிட்டன. வாழ்விக்க வந்த தந்தையே என்று வாழ்த்துப் பாடின! கற்களைத் தூக்கியடித்த கரங்கள் கனத்த மாலைகளைத் தூக்கி வந்து அந்த மனித குலச் சிற்பிக்குச் சூட்டி மகிழ்ச்சியில் திளைத்தன!

ஆனால் தந்தை பெரியார் அவற்றை எல்லாம் எப்படிப் பார்த்தார்? ஆண்டு முழுவதும் அய்யா அவர்களுக்குப் பிறந்த நாள் விழா நடக்கும். இந்த அதிசயம் அய்யா அவர்களுக்கு மட்டும்தான் தமிழ் நாட்டில். ஏராளமான பரிசுப் பொருள்களைக் கொண்டு வந்து குவிப்பார்கள். அவற்றை எல்லாம் பெற்றுக் கொண்ட அறிவுத் தந்தை கூறுவார் :

இவ்வளவு பரிசுப் பொருள்களை எனக்குக் கொடுத்தீர்கள். இதே ஊரில் இதே இடத்தில் 50, 60 ஆண்டுகளுக்கு முன் வந்து பேசி இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் கடும் எதிர்ப்பு! கற்களை வீசுவார்கள்; பன்றிகளை, பாம்புகளைக் கூட்டத்தில் விட்டுப் பொது மக்களைக் கலைப்பார்கள். இப்பொழுது அதே ஊருக்கு அதே மனிதனாகிய நான் வந்திருக்கிறேன். அதே மனிதருக்கு இவ்வளவு வரவேற்பு - அன்பளிப்பு என்றால் என்னவோ நம்ப முடியவில்லை. நான் ஏதாவது மாறிவிட்டேனா? கொள்கையில் பல்டி அடித்துவிட்டோனா? அல்லது பொது மக்களாகிய நீங்கள்தான் மாறிவிட்டீர்களா? என்று யோசித்துப் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை என் கொள்கையில் மேலும் மேலும் தீவிரத் தன்மை கொண்டுதான் பணியாற்றி வந்திருக்கின்றேன். எதிலும் நான் பின் வாங்கிவிடவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

உங்களிடம்தான் மாறுதல் வந்திருப்பதாகக் கருதுகிறேன். உங்களை அன்று அழுகிய முட்டைகளைக் கொண்டு வீசிய நாங்கள் இப்பொழுது திருந்திவிட்டோம். எங்களுக்குப் புத்தி வந்துவிட்டது என்று காட்டிக் கொள்வதற்காகத்தான் இந்தப் பரிசுகளை எனக்கு அளிக்கிறீர்கள் என்று கூறுவார்.

தனக்குப் பரிசுகளை அள்ளிக் குவித்த பொது மக்களைப் பார்த்து இப்படிக் கூறும் துணிவு நாட்டில் எவருக்கு வரும்?

தந்தை பெரியாருக்கு அப்போது 40 ஆவது வயது. நாக்கில் புற்றுநோய் ஏற்பட்டது. தந்தை பெரியார் மருத்துவராகிய டாக்டர் பி.எம்.சுந்தரவதனத்திடம் காட்டினார். அட சனியனே, உங்களுக்கா இது வரவேண்டும், என்று கூறி சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் அனுப்பி வைத்தார். அந்த நோயும் குணப்படுத்தப்பட்டது. இதைப் பற்றி தந்தை பெரியார் கூறுவதுதான் முக்கியம்.

நான் கவலைப்பட்டது நாக்கில் புற்று நோய் வந்ததால் சாகப் போகிறோம் என்றல்ல! இந்தப் பாவி கடவுளை, மதத்தைத் திட்டினான், அதனால்தான் நாக்கில் புற்று வந்து செத்தான் என்று என் கருத்துக்கு எதிர்ப்பானவர்கள் அவதூறு பரப்பிவிடுவார்களே. . . அதனால் நமக்குப் பின்னும்இந்த வேலைக்கு எவனும்துணிந்து வரமாட்டானே என்ற கவலைதான் எனக்கு என்று பெரியார் கூறுகிறார்.

தனக்கு நோய் வந்தது என்பதை விட, அதனால் கொள்கைக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்கிற நோக்கும் சிந்தனையும்தான் அவர்களுக்கு! பொதுவாக நோய் வயப்படும் மனிதன் பலகீனமடைவான். ஆனால் அந்த நேரத்திலும் கொள்கைக்கு முன்னிடம் கொடுத்துச் சிந்தித்த மன உறுதிக்குப் பெயர்தான் பெரியார். அந்த நோயை வென்று காட்டியதன் வாயிலாகவும் தந்தை பெரியார் தமக்கு எதிர்ப்பான சக்திகளை முறியடித்து விட்டார்!

அதனால்தான் உடலால் அவர் மறைந்திருந்தாலும் அன்றாடம் பெரியார் பேசப்படுகிறார், போற்றப்படுகிறார்.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஆம், அவர் மண்டைச் சுரப்பான சிந்தனைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய அவர் வழி வந்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீமணி அவர்கள் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரைத் தலைமை யிடமாகக் கொண்டு பெரியார் பன்னாட்டு மய்யம் உருவாக்கப்பட்டுள்ளது. லண்டன், பிரான்சு, சிங்கப்பூர், மியான்மா நாடுகளில் எல்லாம் இவைகளைப் பரப்பி செயல்பட்டு வருகிறார்.

சோதனைக் குழாய்க் குழந்தையைப் பற்றி 1938 ஆம் ஆண்டிலேயே தொலை நோக்குப் பார்வையோடு கூறியவரும் அவரே!

அந்த இனி வரும் உலகம் என்ற நூல் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பாரிசில் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் பெரியார் மய்யம் பெரியார் அறக்கட்டளையின் சார்பில் எழுப்பப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனின் கருத்துக் கதிர்களை ஊடுருவச் செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

பெரியார் காணும் உலகைக் காண்போம்! வாழ்க பெரியார்!

---------------- கலி.பூங்குன்றன், தி.க. பொதுச்செயலாளர் அவர்கள் தந்தை பெரியார் நினைவு நாளான
(24.12.2009) அன்று நிகழ்த்திய
வானொலி நிலைய உரை

பெரியார் பார்வையில் பாரதியார் - 1


(பாரதியார் பற்றி அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் ஒரு வித போதையான பிம்பத்தை கட்டிவைத்திருக்கிறது. அதிலும் ப(வெ)ட்டி மன்றங்களில் பாரதியாரைப் பற்றி பேசாத பேச்சாளர்கள் மிக மிகச் சொற்ப அளவினரே.முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சில வலைப்பதிவர்கள் கூட அவரவர்கள் வலைப்பதிவில் பாரதியாரின் மேற்கோள்களை பதிவிட்டு ”பாரதியார் போதை” என்னும் மயக்கத்தில் தள்ளாடி வருகின்றனர். உண்மையில் பாரதியார் யார்? அவர் யாருக்காக?எதற்காக? என்ன நோக்கத்திற்காக பாடினார் -செயல்பட்டார் என்பதை இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது. ஊன்றிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.இக்கட்டுரை இரண்டு பகுதிகளாக வெளிவரும்)



பாரதியார் மண்டபமா? பார்ப்பனர் வெற்றிச் சின்னமா?


தமிழ்நாட்டில் தமிழனுக்கு இன உணர்ச்சி தலையெடுத்து தமிழ் மொழிப்பற்றின் ஆர்வம் வெளியானது ஆச்சாரியார் கட்டாய இந்தியைப் புகுத்திய நேரத்தில் நிகழ்த்திய போராட்டத்தினாலாகும்.

தமிழ்பற்று மிகுந்து இன உணர்ச்சி தோன்றிபோது தான் தமிழ் மக்கள் தங்களின் உண்மையான பகைவர் யார்? பகைமைக் கருவிகள் யாவை? எனத் தீவிரமாகச் சிந்திக்கத் தலைப்பட்டனர். பார்ப்பனர் பார்னரல்லாதார் என்று கூறுவதே இழிவு என உணர்ந்து தங்களுக்கென, தங்களையே குறிக்கும் தனிப் பெயர் கொள்ள விரும்பினார்கள். இவ்விருப்பம் இறுதியில் திராவிடர் என்று, வரலாற்றிற்கும், இழிந்த நிலை மாறி மனித நிலையடைதற்கும் பொருத்தமாக, யாரும் அசைக்க முடியாத உண்மைப் பெயராக, உணர்ச்சி தருங் கருவியாக அமைந்து விட்டது. இந்நிலையையுணர்ந்த தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள், இந்நிலை நீடிக்குமேயானால் தங்களின் சோம்பேறி வாழ்வு சுடுகாடாகும் என்பதை நன்கு உணர்ந்து, வழக்கம் போல சாம பேத தான தண்டம் என நான்கு வகை உபாயங்களையும் கையாளுகின்றனர்.

தமிழ் மக்களின் தமிழுணர்ச்சியை ஆரியர்க்கு விரோதமாக வீறிட்டெழுந்த விழுமிய உணர்ச்சி வெள்ளத்தை வேறு வகையில் திருப்பி திராவிடர்களுக்குள்ளேயே பிளவையுண்டு பண்ண வேண்டும் என்ற திட்டமிட்டே, தமிழர் - தெலுங்கர் போராட்டமாக மாற்றித் தவறுதலான வேறு வழியில் செல்ல இந்நாட்டுப் பார்ப்பனர்கள் முயலுகின்றார்கள். இம்முயற்சிக்கு, இந்நாட்டு வரலாற்றின் வாய்மைக் கிணங்கச் சில திராவிடர்களே தமிழர் தெலுங்கர் போராட்டத்தைத் தொடங்குகின்றார்கள் என வெளியுலகிற்குக் காண்பிக்கின்றது இந்நாட்டு ஆரியம். இவ்வுண்மையைத் தமிழ் நாட்டு அரசியல் போக்கைக் கண்ணுற்று வருகின்றவர்கள் நன்கு உணரலாம்.

தமிழுணர்ச்சி ஆரியத்தை அழிக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காகக் கையாளுகிற மற்றொரு வகை முயற்சிதான், பாரதி விழாவும் பாரதி ஒட்டிய பிற நினைவுக்குறி நிகழ்ச்சிகளும் ஆகும்.

தமிழ் நாட்டின் பெரும் புலவர்களாகிய தொல்காப்பியர், திருவள்ளுவர், அவ்வையார் போன்றவர்களை ஆரியக்கலப்பு என்று கூறி, இந்நாட்டு மக்களை ஆரியர்கள் இழிவு செய்து தன்னினத்திற்குப் பெருமை தேடிக் கொண்டதும், தமிழ் நாட்டின் பெருமையைச் சிதைத்து வந்த தமிழைக் கற்ற உ.வே.சாமி நாதய்யர், ராகவய்யங்கார் போன்ற ஆரியர்க்கு உயர்வு தந்து தன்னினப் பெருமையை நிலைநாட்டிக் கொண்டதும், தமிழ் வரலாற்றை அறிந்தோர் உணர முடியும். ஆரியர்கள் கையாண்டு வரும் பரம்பரை வித்தைக் கிணங்கவே சமீபத்தில் சுப்பிரமணிய பாரதியார் என்ற பார்ப்பனர்க்கு மண்டபம் எழுப்பிக் கும்பாபிஷேகம் செய்ததுமாகும்.

பாரதியாரை நல்லதொரு வெள்ளைக் கவிஞர் என்று கூறுவதிலோ, உணர்ச்சி ததும்பப் பாடுபவர் என்று கூறுவதிலோ நமக்கு எத்தகைய ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பாரதியாரைத் தமிழ் நாட்டுத் தனிப்பெருங் கவிஞர் என்றும், தமிழுணர்ச்சியை வளர்த்தவர் என்றும் தமிழன் தலை நிமிர்ந்து நடக்க வழி செய்தவர் என்றும் கூறுவதுதான் திராவிட இனத்திற்கே அழிவைத் தருவதாய், திராவிட உணர்ச்சியை ஒழிக்கவல்லதாய் இருக்கின்றது என்பதையும், ஆரியர்கள், பாரதியாரைக் காட்டித் திராவிட உணர்ச்சியை ஒடுக்க வழி செய்கிறார்கள் என்பதையும் எடுத்துக்கூற வேண்டிய நிலையை உண்டாக்கியிருக்கிறது.

தமிழறிஞர்களே! தமிழ்நாட்டு வரலாற்றைப் படித்த மாணவர்களே! நீங்கள் அறிந்த வரலாற்றை உங்களின் நினைவிற்குக் கொண்டு வாருங்கள். எந்த வரலாற்றிலாவது நீங்கள் வாழுகின்ற இத்தமிழ்நாடு ஆரிய நாடு என்று தீட்டப்பட்டிருக்கிறதா?. தமிழ்நாட்டின் "அமரகவி" பாரதியார் கூறுவதைக் கேளுங்கள். நீங்கள் இப்பகுதிகளை அறிந்திருந்தாலும், அவை அறிவில் நிலையாதவாறு இந்நாட்டு ஆரியம் பேரொலி எழுப்பி, வெவ்வேறு வழிகளில் அறிவைச் செலுத்தச் செய்திருக்கின்றது என்பதனாலேயே, இங்கு அவற்றை எடுத்தியம்ப முன் வந்ததாகும்.

"உன்னத ஆரிய நாடெங்கள் நாடே"
என்று நாட்டின் பெயரைக் கூறி

"வானாறு பேரிமய வெற்பு முதல் பெண்குமரி யீறாகும் ஆரியநா டென்றே யறி"

என்று ஆரிய நாட்டிற்கு எல்லையும் கூறுகிறார்.

இவர் கூறுகின்ற எல்லை முன்பொரு காலத்தில், "ஒரு மொழிவைத் துலகாண்ட" இமயவரம்பன் காலத்தில், தமிழ் நாட்டின் எல்லையாகும்," எனப் புறநாநூறு போன்ற தமிழிலக்கியங்கள் கூறும் பாரதியார், தமிழ்நாட்டின் எல்லையாக நூல்களில் குறித்திருப்பதையே ஆரிய நாட்டின் எல்லையாகக் கூறுகின்றார். தமிழ் நாட்டை ஆரிய நாடாகக் கூறுகின்ற பாரதியார் தமிழர்களின் பெருமையை ஆரியர்களின் பெருமையாகக் கூறுகின்றாரா என்றால் இல்லை.

"ஆதிமறை தோன்றிய ஆரிய நாடே"
என்று கூறுகின்றார்.

மேலும்,

"முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடைய வில்" ஆரிய ராணியின் வில் ஆரிய ராணியின் சொல் ஆரிய தேவியின் தேர்

என ஆரியர்களின் பெருமையாக ஆரிய இராமனின் பெருமையைக் கூறுகின்றார்.

ஆரியர்களுடைய வேதங்களைக் (ஆங்கில ஆட்சியின் துணையைக் கொண்டு) கற்றறிந்த திராவிடர்கள், வேதங்களின் உண்மையை எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். தங்களுக்கு மாறுபட்டவர்களாயிருப்பவர்கள், "உயர்ந்த மாடி வீடுகளில், சிறந்த அணிகளோடு, நிறைந்த வாழ்வு வாழுகின்றார்களே" என வயிறெரிந்து இந்திரனையும் பிற தேவர்களையும் அழைத்து; இந்தத் தஸ்யூக்களை அரக்கர்களை அழித்துவிடுக" என வேண்டிக் கொண்ட பகுதிகளே வேதத்தில் நிரம்பவுண்டு என்று விளக்கங் கூறுகின்றார்கள். மகாகவி பாரதியார் கிருஷ்ணனை அழைத்துக் கூறுகின்ற கூப்பாட்டை நன்கு சிந்தித்துப் பாருங்கள்.

"ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான்" "ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மை தந்த" "எங்கள் ஆரிய பூமியெனும் பயிர் மங்களம் பெற" "ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே" "ஆரிய! நீயும் நின் அறமறந்தாயோ" "வெஞ் செயலரக்கரை வீட்டிடுவோனே" "ஆரியர் கோனே"

இக்கூப்பாட்டிற்கும் வேதங்களில் காணப்படும் பழைய ஆரியர்களின் கூப்பாட்டிற்கும் ஏதேனும் வேறுபாடு காண முடிகிறதா?.

------------------------ தொடரும்.....

--------------- “ஈட்டி” என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை- “குடிஅரசு” 18-10-1947

பெரியார் தத்துவத்தை ஒரு நாட்டிற்குள்ளோ,இனத்திற்குள்ளோ அடைத்துவிட முடியுமா?


மனிதன் என்பவன் எல்லையற்ற சுயநலவாதியாக இருக்கிறான்
பெரியார் கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரை

மனிதன் என்பவன் எல்லையற்ற சுயநலவாதியாக இருக்கிறான் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறிய கருத்தை மேற்கோள்காட்டி விளக்கவுரையாற்றினார் தமிழர் தலைவர் கி.வீரமணி.

சிங்கப்பூர் நாட்டில் 8.11.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

மனிதன் என்பவன் ஒரு கூட்டுப் பொருள் கொண்டவன். தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவத்தை ஒரு நாட்டிற்குள்ளோ ஒரு இனத்திற்குள்ளோ அடைத்துவிட முடியுமா?

அவனது அவயவங்களில் ஒன்று இரண்டு குறையாக இருந்த போதிலும் அவனை மனிதன் என்று தான் அழைக்கிறோம். மற்றும் மனிதனின் சுபாவம் என்ன என்று பார்த்தால் மற்ற ஜீவன்களுக்கெல்லாம் இல்லாத சுபாவம் கொண்டவனாக இருக்கின்றான்.

நாய்க்கு நன்றி விசுவாசம் என்பது மிகுதியும் உண்டு. நாய் நன்றியை கொஞ்சம் கூட குறையாமல் விசுவாசத்துடன் தன் எஜமானனுடன் இருக்கும்.

தன் எஜமானன் வெளியேசென்றுவிட்டு வந்ததும் நன்றியின் அறிகுறியாக தத்தி தாவி வாலை ஆட்டிக்கொண்டு துள்ளிக்குதித்து மேலே விழுந்து விளையாடுவதற்கு முயற்சிக்கும் - எது? அய்ந்தறிவுள்ள நாய்.

அய்ந்தறிவுள்ள நாய் இப்படி தன் நன்றியைக் காட்டும். மனிதனோ நாயைப் போன்று நன்றி இயல்பு உடையவன் அல்லன். நாயைத் தன் எஜமானன் எவ்வளவு அடித்தாலும், உதைத்தாலும் மறு நிமிடத்தில் அதே நாய் தன் எஜமானனிடம் அன்பு காட்டுவதைப் பார்க்கலாம். சோறு போடவிட்டாலும் நாய் விசுவாசத்தைக் காட்டும். ஆனால் மனிதன் அப்படி அல்லன். என்ன நன்மைக்கு அழைத்தாலும் ஒரு தீமை நேர்ந்துவிட்டால் முன்பு அடைந்த நன்மைகளை மறந்து தீமையை மட்டும் எடுத்துக் கொள்வான். இது மனிதனின் ஜீவ சுபாவமாகும்.

மனிதனுக்கு சகலமும் சுயநலம்

மனிதனுக்கு சகலமும் சுயநலம், வியாபார முறை துரோகம் என்பது இயல்பு. எனவே இவர்கள் நன்றியோடு இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அல்லவா நான் ஏமாற்றம் அடையவேண்டும்? யாரும் நன்றி காட்டமாட்டார்கள். யாரும் தேவையில்லை என்று கருதி பொதுப்பணியில் தானே இறங்கினார் பெரியார்.

பெரியார் அவர்கள் நடத்திய குடி அரசு ஏட்டில் உள்ள செய்திகளை இப்பொழுது நாங்கள்முதல் தொகுதியை வெளியிட்டிருக்கின்றோம், இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. குடிஅரசு மிகுந்த பொருள் நட்டத்தில் நடந்தது. நம்முடைய தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் குடிஅரசு ஏட்டின் முகவராக இங்கே இருந்தார்கள்.

குடிஅரசுவில் பணியாற்றிய நண்பர்கள் தந்தை பெரியார் அவர்களிடம் சொன்னார்கள், அய்யா நிறைய பொருள் நட்டம் ஆகிறது; இந்த இதழை நாம் நிறுத்திவிடலாம். பொதுக் கூட்டத்தில் பேசுகிறீர்கள்; அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் போதும்; பத்திரிகை வேண்டாம், இதனால் நட்டமாகிறது என்று சொன்னார்கள். பெரியார் சொன்னார்

இப்படி சொன்னவுடனே அய்யா அவர்கள் சொன்னார்கள், குடிஅரசு ஏட்டை யார் வாங்குகிறார்கள்? யார் படிக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலை இல்லை.

நான் ஒரு கொள்கையிலே திட சித்தம் உள்ளவன். இந்தக் கொள்கையைப் பரப்புவதற்காக 1925லேயிருந்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி குடிஅரசு இதழை நடத்தி வருகிறேன்.

எனவே நட்டத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. யாரும் வாங்கவில்லையானாலும் எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.

நானே எழுதி நானே படித்து.........!

நான் ஒருவனே எழுதி நான் ஒருவனே அச்சடித்து நானே திண்ணையிலே உட்கார்ந்து படித்துக்கொண்டிருப்பேனே தவிர குடிஅரசு இதழை நிறுத்த மாட்டேன் என்று சொன்னார்.

தந்தை பெரியாருடைய உறுதியை எண்ணிப் பார்க்க வேண்டும். பெரியார் கண்ட வாழ்வியலில் இது போன்ற சம்பவங்கள்தான் முக்கியமானது.

ஒரு முறை கலைஞரைப் பார்த்து கேட்டார்கள்

நீரோடு போகக் கூடாது. ஒரு முறை கலைஞரைப் பார்த்துக் கோட்டார்கள். நெருக்கடி காலத்திலே உங்கள் மீது குற்றச்சாற்றே என்னவென்றால், நீங்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்பதுதான்.

உடனே கலைஞர் அவர்கள் பளிச்சென்று அதற்கு பதில் சொன்னார். ஏனென்றால் தந்தை பெரியாருடைய குருகுலத்திலே பயின்றவர். அந்த பள்ளிக் கூடத்தில் முதல் வகுப்பே கேள்வி_பதில்தான்.

வரலாற்றிலேயே கிடையாது

ஆகவே கேள்விகளை யார் கேட்டாலும் பெரியார் மாதிரி பதில் சொன்ன தலைவர்கள் வரலாற்றிலேயே கிடையாது. நீங்கள் பெரியார் திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். பெரியாரை எதிர்த்து ஒருவர் கேள்வி கேட்டார். எழுதியவருடைய பேனா எழுதவில்லை என்று தெரிந்தவுடனே தன்னுடைய பேனாவை தந்தை பெரியார் எடுத்துக்கொடுத்தார்.

என்னுடைய பேனா மூலம் எழுதிக்கொடுங்கள். கேள்வி கேளுங்கள் என்று எடுத்துச்சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். ஆகவே அவரைப் பொறுத்த வரையிலே எதிர் நீச்சல் அடிக்கக் கூடியவர். தந்தை பெரியார் அவர்களிடத்திலே இருந்த தொண்டர்கள், தோழர்கள்,பயின்றவர்கள்தாம் அண்ணா அவர்களிலிருந்து, கலைஞர் அவர்களிலிருந்து எங்களிலிருந்து வந்தவர்கள்.

கலைஞர் பளிச்சென்று பதில் சொன்னார்

கலைஞர் அவர்களுடைய பதவி பறிபோயிருக்கிறது. நெருக்கடிகாலம் இதற்காகத்தான் உங்களுடைய பதவி பறிக்கப்பட்டிருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். ஆகவே நீங்கள் தேசிய நீரோட்டத்தோடு கலந்து சென்றிருந்தால் இப்படி ஆகியிருக்காது என்று சொன்னபொழுது கலைஞர் அவர்கள் பளிச்சென்று சென்னார், நான் ஈரோடு போனவன்; ஆகவே நீரோடு போக மாட்டேன் என்று அழகாக பதில் சொன்னார் (பலத்த கைதட்டல்)

ஏனென்றால் ஈரோடு போனவன் என்றால், அது எதிர் நீச்சல். எதிர் நீச்சல் அடிக்கும் பொழுதுதான் மனிதன் இலக்கை அடைய முடியுமே தவிர, ஓடுகின்ற நீரில் அவன் விழுந்துவிட்டால், அந்த நீரோட்டத்தோடே தான் அவன் போக வேண்டும்.

இரண்டு வகை தலைவர்கள்

தலைவர்களிலே இரண்டு பேர் உண்டு. ஒரு வகை நீரோடு போகக் கூடியவர்கள். இன்னும் சிலர் மிகச்சிலர் ஈரோடு போகக்கூடியவர்கள். ஈரோடு என்பது ஊரைக் குறிக்காது. அதன் இலக்கை குறிக்கும் அவ்வளவுதான். தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்வியல் சிந்தனையில் சொல்லுகிறார்.

பூனையைப் பாருங்கள்

இப்படிப்பட்ட மற்ற ஜீவன்களில் பூனையை எடுத்துக்கொண்டால் அதன் சுபாவப்படி மனிதன் எப்பொழுது ஏமாறுவான்? அல்லது எப்பொழுது இருட்டாகும் அறையில் உள்ள பால், தயிரை உருட்டிவிட்டு ருசி பார்க்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கும். (இது பூனையினுடைய ஜீவ சுபாவம். அடுத்து அய்யா சொல்லுகிறார்) மற்றவனை ஏமாற்றும் சுபாவத்திலேயே எப்பொழுதும் இருக்கிறது.

அது போல மாத்திரமல்லாமல் மனிதனை மனிதன் குரோதக் கருத்திலும், துரோகக் கருத்திலும் இருப்பான். கொல்வான், விஷமிடுவான், சாகத் தவம் கிடப்பான் என்பது மனித இயல்பு

பறக்கும் பருந்து

பூமிக்கு மேல் மைல் கணக்கில் தூரத்தில் இருக்கும் பருந்து பூமியில் கிடக்கும் சிறிய வஸ்துகளை கண்டுபிடித்து விடுகிறது.

நம்முடைய கண் பருந்தின் கண்ணைவிட பெரியது நம் கண் உருவத்தில் பெரியதே தவிர, பார்வைக்குரிய சக்தி அதிகம் கொண்டிருக்கவில்லை. பருந்தின் கண்களுக்கு தனி சக்தி இருக்கிறது. மனிதன் கரும்பை உற்பத்தி செய்கிறான். ஆனால் யானைக்குக் கரும்பைத் தின்னத்தான் தெரியும்; கரும்பை பயிர்செய்யத் தெரியாது. ஆறாவது அறிவினுடைய பயன் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் பிறருக்குத் தொண்டு செய்து வாழ்வதையே குறியாய்க் கொண்டுள்ளான். இந்த குறிக்கோள் மற்ற ஜீவனுக்கு இல்லை என்று தந்தை பெரியார் சொன்னார்.

எல்லையற்ற சுயநலம்

எனவே, பெரியார் கண்ட வாழ்வியலிலே மிக முக்கியமான அடிப்படை என்னவென்றால் தொண்டறம், இல்லறம், துறவறம் எப்படியோ அது போல தொண்டறம்.

மனிதர்களாக நாம் வாழ்கிறோம் என்று சொன்னால் ஓரளவுக்கு சுயநலமில்லாத மனிதர்கள் இருக்க முடியாது. முதலிலே மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதைத் தவறு என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லவில்லை. எல்லையற்ற சுயநலம் இருக்கக் கூடாது என்று சொல்லுகிறார். அது மட்டுமல்ல, மிகுந்த தன்னடக்கத்தோடு தந்தை பெரியார் சொல்லுகிறார். இவர்மாதிரி தொண்டு செய்த பொதுநலவாதி வேறு எவரும் இல்லை என்று சொன்னபொழுது, தந்தை பெரியார் அவர்கள் ஏற்புரை_கடைசியாக பதில் உரை சொன்ன நேரத்திலே சொன்னார்.

பெரியார் அவர்களுக்கு இருக்கின்ற அடக்கம்

இப்படி எல்லாம் சொன்னார்கள். நான் ஏதோ பெரிய காரியம் செய்து விட்டேன். தொண்டு செய்து விட்டேன் என்று சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்களுக்கு இருக்கின்ற அடக்கம் மிகப்பெரிய அடக்கம் ஏதோ பணி செய்திருக்கிறேன் என்று சொல்வதில் ஏதோ உண்மை இருக்கலாம்.

இவை அத்தனையும் உங்களுக்காக தேர்ந்தெடுத்து நான் சொன்னது அல்ல. மாறாக எனது சுயநலத்திற்காக என்றார்.

எல்லோரும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவுடனே சொன்னார். ஆம். எது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ, அது என் ஆயுளை நீட்டும். எனவே அந்த மகிழ்ச்சி அதிலே இருக்கிறதென்றால், தொண்டு செய்வதில்தான் இருக்கிறது. அதனால் தான் தொண்டு செய்தேன் என்று சொல்லுவதைவிட எனக்காக நான் செய்தேன்.

எனவே எவர் சுயநலம் என்று நினைக்கிறார்களோ அது உண்மையில் பொதுநலம். எது பொது நலம் என்று நினைக்கிறார்களோ அது உண்மையில் சுயநலம். மிக அருமையாக தந்தை பெரியார் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

எனக்கே கூட கொஞ்சம் சங்கடம்

அது மட்டுமல்ல. எனக்கே கூட கொஞ்சம் சங்கடம். என்னை நீங்கள் பாராட்டினீர்கள். அய்யா அவர்கள் கவிதை எழுதிக்கொடுத்தார். உங்களுடைய அன்புக்கு நன்றி. தந்தை பெரியார் சொன்னதை நினைவுபடுத்தி நானே அவருடைய தொண்டன் என்ற முறையிலே நினைவு படுத்திக்கொண்டேயிருந்தேன்.

அய்யா அவர்களை வைத்து இந்த மாதிரி பாராட்டுகளை ஏராளமாக சொன்னபொழுது அய்யா சங்கடத்தோடு அமர்ந்திருப்பார்.

மனிதன் என்பவன் ஒரு கூட்டு பொருள் கொண்டவன். தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவத்தை ஒரு நாட்டிற்குள்ளோ ஒரு இனத்திற்குள்ளோ அடைத்துவிட முடியுமா?

அவனது அவயங்களில் ஒன்று இரண்டு குறையாக இருந்த போதிலும் அவனை மனிதன் என்று தான் அழைக்கிறோம். மற்றும் மனிதனின் சுபாவம் என்ன என்று பார்த்தால் மற்ற ஜீவன்களுக்கெல்லாம் இல்லாத சுபாவம் கொண்டவனாக இருக்கின்றான்.

நாய்க்கு நன்றி விசுவாசம் என்பது மிகுதியும் உண்டு. நாய் நன்றியை கொஞ்சம் கூட குறையாமல் விசுவாசத்துடன் தன் எஜமானனுடன் இருக்கும்.

தன் எஜமானன் வெளியேசென்றுவிட்டு வந்ததும் நன்றியின் அறிகுறியாக தத்தி தாவி வாலை ஆட்டிக்கொண்டு துள்ளிக்குதித்து மேலே விழுந்து விளையாடுவதற்கு முயற்சிக்கும் எது? அய்ந்தறிவுள்ள நாய்.

---------------------------தொடரும். ...... "விடுதலை” 30-12-2009

30.12.09

பூணூல் பாசத்துடன் தினமணி வெளியிட்ட செய்தி


பூணூல் பாசம்

ஆந்திர மாநிலத்தின் ஆளுநராகயிருந்த என்.டி. திவாரி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக சட்டீஸ்கர் மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி தினமணி (29.12.2009, பக்கம் 9) செய்தியை எப்படி வெளியிடுகிறது?

ஆந்திரத்தில் ஆளுநராகப் பதவி வகித்த நாராயண் திவாரி உடல்நலக் குறைவு காரணமாக திடீரென விலக நேர்ந்ததால் ஆந்திர மாநில ஆளுநர் பொறுப்பையும் சேர்த்து வகிக்குமாறு நரசிம்மன் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

இதுதான் தினமணி வெளியிட்ட செய்தி.

எப்படி செய்தி? புரிகிறதா? உடல்நலம் சரியில்லாமல் திவாரி பதவி விலக நேர்ந்ததாம்!

தினமணி என்னும் பூனை கண்களை மூடிக்கொண்டு விட்டது. அதனால் அதன் கண்களுக்குப் பூலோகமே இருண்டு விட்டதாகத் தெரிகிறது. இந்தத் தினமணி பூனை தன் கண்களை மூடிக்கொண்டது மட்டுமல்ல, திறந்திருக்கும் பொதுமக்களின் கண்களிலும், வாசகர்களின் கண்களிலும்கூட மிளகாய்ப் பொடியைத் தூவப் பார்க்கிறதே அதனை நினைத்தால் விலா நோக சிரிப்புதான் வெடித்துக் கிளம்புகிறது!

86 வயது நிறைந்த என்.டி. திவாரியின் தேவநாதன் லீலைகள் விலாவாரியாக ஏடுகளில் வெளிவந்துள்ளன; தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பி மானத்தை வாங்குகின்றன.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரன் கோயில் அர்ச்சகன் தேவநாதனின் கோயில் கர்ப்பக் கிரக (ஃபுளு பிலிம்) சேட்டைகள் லீலைகள்பற்றி பொதுமக்கள் காரித் துப்புகின்றனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு வந்த தேவநாதனுக்கு தமிழினப் பெண்மணிகள் துடைப்பத்தாலும், காலணிகளாலும் அபிஷேக ஆராதனைகள் (கோயில் அர்ச்சகர் அல்லவா!) செய்தனர்.

அந்தச் செய்தி ஆடி அடங்குவதற்குள் 86 வயதான ஒரு மாநில ஆளுநரே மன்மத லீலைகளில் அன்றாடம் குளியலாடினார், நீச்சலடித்தார் என்ற செய்தி அங்கு இங்கு எனாதபடி எங்கு பார்த்தாலும் பிரவாகித்துவிட்டது.

ஒரு புரோக்கர் ஒரு ஆளுநரை வெளியேற்றினார் என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்றே!

இவ்வளவு நடந்திருக்கிறது ஊர் உலகமே சிரிக்கிறது. ஆனால், தினமணியின் வைத்தியநாதய்யரோ உடல்நலக் குறைவு காரணமாகப் பதவி விலக நேர்ந்தது என்று செய்தி வெளியிடுகிறார்.

இதன்மூலம் தினமணியின் நம்பகத்தன்மையை இதுவரை தெரிந்துகொள்-ளாதவர்களும் இப்பொழுது தெரிந்து கொண்டுவிட்டனர். தினமணி இப்படி ஏன் மூடி மறைக்கிறது?

காரணம் என்ன தெரியுமா? சம்பந்தப்பட்டவர் திவாரி என்பதுதான்.

ஹி... ஹி.... ஹி..... ஹி..... பூணூல் பாசம் எவ்வளவு பொல்லாதது பார்த்தீர்களா? -

----------------மயிலாடன் அவர்கள் 30-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

பார்ப்பானுங்கோ திங்கிறதைக் கண்ணில் பார்த்தால்...?

தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை -2


ஒரு தடவை, எங்கள் ஊருக்கு நெரிஞ்சிப்பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) வந்தார். அது 1902 ஆம் வருஷமாய் இருக்கலாம்; அவருக்கு, எங்கள் ஊர் நகரத்து செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய் பிட்க்ஷ (பிட்சை) நடத்துகிறார்கள். எங்கள் தகப்பனாரும் 50 ரூபா கொடுத்தார். பெரிய சமாராதனை நடக்கிறது. அந்தச் சாமியார் தம்பி ஒரு மைனர்; கடன்காரன்; அவனும் கூட
வந்திருந்தான். அவன், ஈரோட்டில் ஒரு வியாபாரிக்கு கடன் கொடுக்கவேண்டும்; அது கோர்ட்டில் டிக்ரி ஆகி இருந்தது. அந்த சமயம், அந்த வியாபாரி அக்கடனை வசூல் செய்ய, என்னை யோசனை கேட்டார். நான் அவசரமாய் ‘படிபோட்டு, வாரண்டு கொண்டு வா’ என்று சொன்னேன். உடனே, நிறைவேற்ற விண்ணப்பம் போட்டு அன்றே, வாரண்டு வந்தது. மறுநாள், பகல் 12 மணிக்கு வாரண்டு எடுத்துக்கொண்டு சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார்.

நான் அவர்களைக் கூட்டிக் கொண்டு, ஈரோட்டில் சாமியார் இறங்கியிருந்த “எல்லைய்யர் சத்திரம்” என்கின்ற இடத்துக்குப் போனேன். உள்ளே, சுமார் 200 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டி ருக்கிறார்கள். சத்திரத்திற்குப் பக்கத்தில், வெளியில், நான் நின்று கொண்டு, சாமியார் தம்பிக்கு நான் ஆள் அனுப்பினேன்; உள்ளே இருந்து, அவர் ரோட்டுக்கு வந்தார். சேவகனுக்கு கைகாட்டி, ‘இவர்தான்’
என்று சொன்னேன். சாமியார் தம்பி, ‘வாரண்டு என்று தெரிந்ததும், ஓடினார். நான் கூடவே கையைப் பிடித்துக்கொண்டு, இழுத்துக்கொண்டே போனேன்; திமிரிவிட்டு ‘சட்’டென்று வீட்டுக்குள் புகுந்து, வெளிக்கதவைத் தாளிட்டுக் கொண்டான். நான் உடனே தூணைப் பிடித்து, தாழ்வாரத்தின்மீது ஏறி, ஓடுகள் உடைய ஓடி, புறக்கடைப்பக்கம் வீட்டிற்குள் குதித்து - சாப்பாடு இருக்கும்
இடத்தையும், பார்ப்பனர் சாப்பிடும் பந்தியையும் தாண்டிவந்து, வீதிக் கதவைத் திறந்துவிட்டு, சாயபு சேவகனைக் கூப்பிட்டு ஒரு அறைக்குள் ஒளிந்துகொண்ட, சாமியாரின் தம்பி கையைப் பிடித்து ஒப்புவித்தேன். அவன் திமிரினான்; என் கடை ஆட்கள் நாலைந்து பேர்கள் அங்கிருந்தவர்களை - `இவனைப் பிடித்து, வெளியில் தூக்கிக்கொண்டு போங்கள்’ என்று சொன்னேன்; தூக்கிவந்துவிட்டார்கள். கூட்டம்
சேர்ந்துவிட்டது. சாப்பிட்டுக்கொண்டிருந்த பார்ப்பனர்கள் சுமார் 200
பேர்கள், அரைச் சாப்பாட்டோடு இலையை விட்டெழுந்து கழுவிக்கொண்டார்கள். ஆளைப் பிடித்து ஒப்புவித்துவிட்டு நான் நேரே வீட்டிற்கு சாப்பாட்டுக்குப் போய்விட்டேன்.

சாமியார் கோஷ்டி போலீசில் பிராது எழுதி வைத்துவிட்டு, டெபுடி கலெக்டரிடம் பிராது கொடுக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார் என்பதாக எனக்குத்
தெரியவந்தது, பிட்சை நடத்துபவர்கள் வியாபாரிகள்; என் தகப்பனாரும் 50 ரூபா, கொடுத்திருக்கிறார்; ஈரோடு நகரத்துச் செட்டிமார் பெரிதும் என் தகப்பனாரிடம் லேவாதேவி செய்பவர்கள்; சினேக முறையில் பழகுபவர்கள்; ஈரோடு வக்கீல்களும், பிராமணர்களும் என் தகப்பனாரிடம் தாக்ஷண்ய மனோபாவமுடையவர்கள்; ‘என்ன நடக்கிறது, என்று பார்க்கலாம்’ என்றே கலக்கத்துடன், சாப்பிட்டுவிட்டு கடைக்கு வந்தேன். கடை வீதியில், வழிநெடுக. இதைப்பற்றி பெரிய பிரஸ்தாபம். கடையில் வந்து நான் உட்கார்ந்த உடன் “நீ அந்தப் பார்ப்பானைப் பிடித்துக் கொடுத்தது சரி. ஆனால், அந்த பிராமண
சமாராதனையைக் கெடுத்து விட்டாயே, அதைப்பற்றிதான் உன்மீது
எல்லோருக்கும் வெறுப்பேற்பட்டு விட்டது” என்று என்னிடம் வந்து பலர்
சொன்னார்கள். “நல்லவேலை செய்தாய்; எப்படியும் அந்தப் பார்ப்பானைப் பிடித்தே தீர்த்தாயே. அவன் எத்தனை பேர்களை ஏமாற்றிக்கொண்டு வாங்கின கடன் கொடுக்காமல் திரிகிறான்” என்று சிலர் சொன்னார்கள். நான் அப்போதுதான் “நாம் கண்ணால் பார்த்தால், சமாராதனை எப்படிக் கெட்டுப்போகும்; இந்தப் பார்ப்பான்கள் அங்கு வந்து சாப்பிட்டது தண்டசோறு; நாம் கொடுத்த பணம்; நான்
ஒன்றையும் தொட்டுவிடவும் இல்லை; இப்படி இருக்க சமாராதனை எப்படிக் கெடும்? . . . . . கெட்டால்தான் கெடட்டுமே, என்ன முழுகிப் போய்விட்டது? பார்க்கலாமே!” என்று ஒரு மாதிரி திடப்படுத்திக் கொண்டு கடைவேலை பார்த்துக்கொண்டும்., வருகிறவர்கள் போகிறவர்களிடம் இதைப் பற்றிப் பேசிக்கொண்டும் இருந்தேன். என் தகப்பனாருக்கு, இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவர் பிற்பகல் 3 அல்லது 4 மணி சுமாருக்கு வீட்டிலிருந்து கடைக்கு வந்தார். வந்து சிறிது நேரம் ஆனவுடன் ஒரு கூட்டம் சுமார் இருபது பேர்கள் கடைக்கு வந்தார்கள். அவர்கள் பெரிதும் நகரத்துச் செட்டியார் வகை; பெரிய
ஆள்கள்; வக்கீல் குமாஸ்தா; பார்ப்பனப் பிள்ளைகள் - 2, 3 பேர், சாமியாருடைய அதிகாரி ஒருவர், இப்படியாக வந்தார்கள். இவர்கள் வந்த உடன் என் தகப்பனார் மறுபடியும் சாமியார் விஷயத்திற்கு ஏதாவது வசூலுக்கு வந்திருக்கிறார்களோ என்னமோ என்று நினைத்துக்கொண்டு மேலும் ஏதாவது கொடுக்கவே முடிவு
செய்துகொண்டு சாமியார் “பிட்சை (சமாராதனை, ஊர்கோலம்) பற்றி ‘நன்றாய் நடந்ததா?’ என்பதுபற்றி சிரித்த முகத்துடன் விசாரித்தார். வந்தவரில் பெரிய வர்த்தகச் செட்டியார் ஒருவர் - “அந்தக் கண்றாவியை ஏன் கேட்கிறீர்கள். அங்கு வந்து பாருங்கள், 200 - 300 பேர் பட்டினி. இனிமேல்தான், சமையல் நடக்கவேண்டும். ஆச்சார்ய சாமிகளுக்கு மிகமிக மனவேதனை” என்று சொல்லிக்கொண்டு வரும்போதே ஒருவர், ‘எல்லாம் பாழாய்விட்ட’தென்றும், மற்றொருவர், ‘ இந்த அக்கிரமம், இதுவரை எங்கும் நடந்திருக்காது’ என்றும், என்ன என்னமோ என்னைப் பார்த்துக்கொண்டே பேசுகிறார்கள். நான் கடைக்கு உள் உட்கார்ந்திருந்தவன், வெளியில் வந்து, தாழ்வாரத்தின் சுவற்றுடன்
சாய்ந்து நின்றுகொண்டேன். என் தகப்பனாருக்கு, ஒன்றும் புரியவில்லை. சங்கடமான வருத்தக் குறியுடன் முகத்தைச் செய்துகொண்டு ‘என்ன சங்கதி?’ என்று ஆச்சரிய பாவத்துடன் கேட்டார். “ சங்கதி என்ன, எல்லாம் உங்கள் மகன் நம்ம ராமுவால்தான்” என்று செட்டியார் பதில் சொன்னார். “எங்க ராமனாலா? அவன் என்ன, இந்த காரியத்தில் சம்மந்தம்?’ என்று மனவருத்தத்துடனும், ஆத்திரத்துடனும் கேட்டார், என் தகப்பனார். “அந்த அநியாயத்தை ஏன் கேட்கிறீர்கள்? அங்கு வந்துபாருங்கள், சாப்பாடு பண்டங்கள் நாசமாய்க் கிடப்பதை, மலையாட்டம் கெட்டுப்போன பண்டம் குவிந்துகிடக்கிறது” என்றார் வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர்; “என்ன சங்கதி, எனக்குப் புரியவில்லை. சொல்லுங்கள் தெரியும் படியாக” என்று அவசரமாகக் கேட்டார் என் தகப்பனார்.
“சமாராதனை நடந்துகொண்டிருக்கும்போது, உங்க ராமு வீட்டின்மீது ஏறி புறக்கடைப் பக்கம் குதித்து, பந்தி நடந்த பக்கம் வந்து வெளிக்கதவைத் திறந்து துலுக்கனையெல்லாம் கூட்டி வந்து உள்ளே விட்டு விட்டான்; பிராமணாள் 200, 300 பேர் சாப்பிடச் சாப்பிட இந்த அக்கிரமம் நடந்ததால், அவர்கள் அத்தனை பேரும் எழுந்துவிட்டார்கள். பின்புறம் செய்து வைத்திருந்த சாப்பாடு, கறி, குழம்பு, பதார்த்தம் எல்லாம் நாசமாய்விட்டது” என்றார் மற்றொரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர்; “ சொல்லுங்கள் சாமி, நன்றாய் நாய்க்கருக்கு விளங்கும்படி சொல்லுங்கள்” என்றார் மற்றொரு செட்டியார்; என் தகப்பனார் மகா ஆத்திரத்துடன் “என்னடா ராமா என்ன நடந்ததுடா? அங்கென்னத்துக்கு நீ போனாய்? என்ன சங்கதி சொல்லு . . . .” என்று ஆவேசம் தாண்டவமாட, அதிகார தோரணையில் கேட்டார். நான் “ஒன்றும் இல்லையப்பா; இந்த சாமியார் தம்பியை வாரண்டு சேவகன் வாரண்டில் பிடித்துவிட்டான்; பிறகு, கையெழுத்துப் போடாமல் தப்பி ஓடி எல்லைய்யர் சத்திரத்திற்குள்ளே போய் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார்; நான் ‘சட்’ டென்று ஓட்டுமேல் ஏறி குதித்து கதவைத்
திறந்து விட்டேன். பிறகு சேவகன் வந்து பிடித்துக்கொண்டு போய்விட்டான். அதனால், இவர்கள் சமாராதனை கெட்டுப் போய்விட்டதாம்” என்றேன். என் தகப்பனாருக்கு ஏற்பட்ட கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் அளவே இல்லை! “அடத் தேவடியாள் மகனே, உனக்கென்ன அங்கு வேலை? வாரண்டுக்காரனிடமிருந்து ஓடிவிட்டால், சேவகன் என்னமோ பார்த்துக்கொள்ளுகிறான். நீ ஏன் சுவர் எட்டிக் குதித்து உள்ளே போனாய்?” என்றார். இதற்கு மத்தியில் “அது மாத்திரமில்லிங்கோ நாய்க்கர்வாள்; பிராம்மணர் வரிசையாக பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு
மத்தியில் இலைகளை மிதித்துக்கொண்டு ஓடி கதவைத் திறந்துவிட்டு ஒரு நூறு பேருக்கு மேல் துலுக்கன், மலுக்கன், கண்டவன், நின்றவன், தெருவில் போனவன், எவனெவனோ வந்து உள்ளே புகுந்து அத்தனையையும் தோஷமாக்கி வெளியில் வாரிக்கொட்டப்பட்டது. இன்னமும் இப்ப மணி 4 ஆகியும் அத்தனை பிராம்மணாளும் பட்டினியாய் இருக்கிறார்கள். என் மனம் பதறுதுங்கோ” என்று
சொன்னார்.

“ஆமாங்காணும், உங்கப்பன் வீட்டுச் சாப்பாடு நாசமாய்ப் போய் விட்டதாக்கும்; மிகப் பாடுபட்டு உழைத்த பிராமணாள் பட்டினி கிடக்கிறாங்களாக்கும். வாங்கின கடனை மோசம் பண்ணி, கடங்காரனை ஏமாத்திவிட்டு, வாரண்டு சேவகனிடமிருந்து தப்பிக்கொண்டு திருட்டுப் பயலாட்டம் ஓடிவிடுகிறது; சமாராதனையில் போய் ஒளிந்துகொள்வது; கதவைத் தாள் போட்டுக் கொள்வது;
இதெல்லாம் மிக நியாயமான சங்கதி . . . நான் கதவைத் திறந்ததால் . . . . உலகம் முழுகிப்போய்விட்டது. இந்தப் பிராமணாள் பட்டினி கிடந்தால் உலகமே இருண்டு போகுமாக்கும். ஏகாதசி என்று நினைத்துக் கொள்ளட்டுமே . . . வந்துவிட்டார்கள் . . . வெட்கமில்லாமல், பிராது சொல்ல” என்று நானும் ஆத்திரமாகக் கேட்டேன். உடனே என் தகப்பனார் எழுந்தார். “இரங்கேசா . . . . எனக்கு இப்படிப்பட்ட
பிள்ளையையா நீ கொடுக்க வேணும் . . . ? நான் முன் ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணினேன்” என்று மார்மாராக, பெண்களைப் போல் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டார். “என்ன முழுகிப்போய்விட்டது? அந்தத் திருட்டுப் பார்ப்பான் பண்ணினதைப்பற்றி சிந்திக்க மாட்டேன் என்கிறீர்கள். இவர்கள் கொழுத்துப் போய் சோற்றை எடுத்துத் தெருவில் கொட்டிவிட்டால், அதற்கு யார் என்ன பண்ணுவார்கள்? இன்னமும் பணம் அடிக்கலாம் என்று இந்தப் பார்ப்பான்கள், இந்தச் செட்டியார்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள்” என்றேன்,
அதற்குள் வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர் “ நான் அப்போதே சொல்ல வில்லையா? . . . கலெக்டரிடம் பிராது கொடுத்துவிடுங்கள் என்று” என்று சொன்னார். என் தகப்பனாருக்கு நான் சொன்ன பதில் மேலும் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது. “சாமி நீங்க சும்மா இருங்க” என்று சொல்லிக்கொண்டு, குனிந்து பக்கத்தில் இருந்த அவரது செருப்புகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்மீது வெத்திலை பாக்கு எச்சிலைத் துப்பி, என் குடுமியை பலமாய்ப் பிடித்துக்கொண்டு தலை - முகம் -
முதுகு - என்று ஒன்றும் பார்க்காமல் 7, 8 அடி - வாயில் வந்தபடி வைதுகொண்டு, பலமாக அடித்தார். செட்டியார்மார்கள் எல்லோரும் எழுந்து ‘அண்ணா, அண்ணா, விட்டுவிடுங்கள்..... அவனுக்கு இன்னமும் சரியாப் புத்தி வரவில்லை; நாளாவட்டத்தில் வந்துவிடும்; அடிக்காதீர்கள்” என்று மத்தியில் புகுந்து அடிப்பதைத் தடுத்து நிறுத்தினார்கள். தகப்பனாருக்கு கோபம் தணியவில்லை; நானும் அடிக்குப் பயந்து, குனிந்து கொடுக்காமல் - இந்தப் பார்ப்பனர்களை
முறைத்துப் பார்த்த வண்ணமே நின்று கொண்டிருந்தேன். என் தகப்பனார் செருப்பைக் கீழே போட்டுவிட்டு, கையைக் கழுவிக் கொண்டு, பெட்டிக்கு முன் உட்கார்ந்து, பெட்டியைத் திறந்து ஒரு அய்ம்பது ரூபாய் நோட்டு ஒன்றையெடுத்து பெரிய செட்டியார் கையில் கொடுக்க, எழுந்து நின்று “நீங்க பெரிய மனது பண்ணி, என்னை மன்னித்து, இதை மறந்துவிடவேண்டும். இவன் எனக்கு மகனல்ல;
சத்ரு . . . என் பெயரைக் கெடுக்கத் தோன்றியவன். ஏதோ இரண்டு ஆளைவிட்டு, நன்றாக உதைத்து, கையையோ, காலையோ ஒடித்துவிடுங்கள். நான் ஏன் என்றுகூட கேழ்பதில்லை. எனக்குப் போதும் . . . இந்தப் பிள்ளையைப் பெற்ற பெருமை. இவன் துலைய வேண்டும்; இல்லாவிட்டால் நான் துலையவேண்டும்; இனி இரண்டில் ஒன்றுதான். சரி, இனிமேல் என்ன செய்வதென்பதை நான்
பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே, கண்களில் நீர் தாரை தாரையாக ஒழுக அவர் கையைப் பிடித்துக்கொண்டு “நீங்கள் பெரிய மனசு பண்ணி மன்னிக்கவேண்டும்” என்று சொல்லி 50 ரூபா நோட்டை கையில் கொடுத்தார். இரண்டொரு செட்டியார் ‘பணம் வாங்க வேண்டாம்’ என்று கண் ஜாடை காட்டிவிட்டு,”நீங்கள் இதற்காக கவலைப்படாதீர்கள். தம்பியை மேலும் கோபிக்காதீர்கள்; எல்லாம் கொஞ்ச நாளில் சரியாய்ப் போய்விடும் மன வருத்தப்படாதீர்கள்” என்று என் தகப்பனாருக்குச் சமாதானம் சொல்லி அவரை கையைப் பிடித்து உட்காரவைத்துவிட்டு, என்னைப் பார்த்து “தம்பி இனிமேல் இந்தப் பதட்டத்தை விட்டுவிடு. உங்கய்யா பேரைக் காப்பாற்று. அய்யா
எவ்வளவு மனவேதனைப் பட்டாரு, பார்த்தாயா? இதற்கா பிள்ளை பிறப்பது அவர் செய்கிற தர்ம தானத்திற்கு நீ இந்த பெயரா எடுப்பது?” என்று எங்கய்யாவுக்கு சமாதானம் சொல்லியும், எனக்கு புத்தி சொல்லியும் விட்டு, ரூபாயையும் வாங்காமல் மனவருத்தத்துடன் அதாவது நாய்க்கர் மனதுக்கு இவ்வளவு சங்கடத்தை உண்டு பண்ணிவிட்டோமே என்கிற பரிதாபத்துடன் சென்றுவிட்டார்கள்.

அவர்கள் போன உடன் ஒரு மாதிரி மயக்கம் பிடித்தவர்போல் சாய்வு பெட்டியில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டு இருந்தார்.

நான் கல்யாணமான பையன்; ஒரு குழந்தையும் பிறந்து 5 மாதத்தில் இறந்துவிட்டது; கடை வீதியில் ‘நாய்க்கர் மகன்’ என்கிற பெருமையும், சற்று செல்வாக்கும் எனக்குண்டு; இந்த நிலையில் சுமார், 100, 200 பேர்களுக்கு முன்னிலையில் என்னைக் கண்டபடி திட்டி, முகத்தில் காரி வெத்திலை பாக்கு போட்ட எச்சிலைத் துப்பி, என் துணியையெல்லாம் வெத்திலை பாக்குக் கரை செய்து, செருப்பால் அடித்ததானது என் தகப்பனார் மனதை வாட்டுகிறது என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது.

போலீசு கச்சேரி எங்கள் கடைக்கு எதிர்த்த கட்டடம். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பதவி கிடையாது. ஏட்டுதான் ஸ்டேஷன் அவுஸ்ஆபீஸர். அவர் ஒரு நாயுடு; எனக்கு ஸ்நேகிதர். அவரும் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து 5, 6 கான்ஸ்டெபிள்களுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார். கூட்டம் போன பின்பு நான் எங்கள் கடைத் திண்ணையில் இருந்து குறுஞ்சிரிப்புடன் அவரைப் பார்த்தேன். அவரும் என்னைப்பார்த்து சிரித்துவிட்டு, எழுந்து நேரே எங்கள்
கடைக்கு வந்து என் தகப்பனாரைக் கும்பிட்டு விட்டு - தெலுங்கில் “என்னங்கோ அண்ணா தங்களுக்கு இவ்வளவு கோபம் வரலாமா” என்று கேட்டுக்கொண்டே பெஞ்சின் மீது உட்கார்ந்திருந்தார். என் தகப்பனார் நிமிர்ந்து உட்கார்ந்து, “எல்லாம் கர்ம பலன், நான் என்ன செய்யட்டும்? என் மானமே போய்விட்டது இன்றைக்கு. நான் எப்படி நாளைக்கு கடைவீதியில் நடப்பேன்? இப்படிப்பட்ட பிள்ளையைப்
பெத்துவிட்டு” என்றார். “ஒன்றும் முழுகிப்போய்விடவில்லை நீங்கள் இதற்காகப் பிரமாதமாய் வருத்தப்படாதீர்கள். என்னிடத்தில்கூட இந்தப் பிராது வந்தது. இரண்டு பிராமணர்கள் வந்து எழுதி வைத்தார்கள். ‘இதில் நான் ஒன்றும் செய்ய முடியாது. கச்சேரியில் பிராது கொடுங்கள்’ என்று சொல்லி அனுப்பிவிட்டேன். அந்த சாமியார் தம்பி ஒரு அயோக்கியன். அவன் வாரண்டை மீறி ஓடிப்போய் ஒரு வீட்டில் நுழைந்தது தப்பிதம்; கோர்ட்டுக்குப் போனாலும் அவன் பழைய சங்கதி.
. . . அவன் ஒரு படையாச்சி பெண்ணை வைத்திருப்பது, `சாமியார் யோக்கிதை’ எல்லாம் வெளியில் வரும்; அந்த பசங்க போகமாட்டார்கள்; நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்று சொன்னார். “கோர்ட்டு கிடக்கட்டுமுங்கோ. . . . அவன் ஜெயிலுக்குப் போகட்டும், வேணும் அவனுக்கு . . . என் யோக்கியதை என்ன ஆச்சுது பாருங்கள்” என்றார் என் தகப்பனார். நான் மிக்க தைரியத்தோடு, “என்னப்பா கெட்டுப் போச்சுது, இன்னும் நாலடி வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளுங்கள். நான் என்ன திருடினேனா? முடிச்சவித்தேனா? இந்தப்
பார்ப்பானுங்கோ திங்கிறதைக் கண்ணில் பார்த்தால் அந்தச் சோறெல்லாம் புழுவாய்ப் போய்விடுமா? தண்டச்சோறு தின்கிறாங்கோ; அதுவும் நாம் எல்லோரும் கொடுத்த பணம். இவன் வாரண்டை மீறி ஓடினது தப்பில்லை, நான் கதவைத் திறந்துவிட்டது தப்பு என்றால் . . . என்ன நியாயம்? நாளைக்கு எல்லோரும் இப்படித்தானே செய்வார்கள். கச்சேரிக்குத்தான் போகட்டுமே. நான் எட்டிக்குதித்துப் போனது பொதுச் சத்திரம். அந்தப் பார்ப்பான் வெகு பேருக்குக் கடன் கொடுக்கவேண்டும்; எல்லோரையும் ஏய்க்கிறான். அவனைச் சும்மா
விடுவதா?. . . இதனால் சாமியாருக்கு நாம் என்ன தவறு செய்துவிட்டோம்” என்றேன். அங்கிருந்த ஏட்டும் “தம்பி சொல்லுறது ரொம்ப சரிதான் . . . அண்ணா நீங்க வருத்தப்படாதீங்க. தம்பியை நீங்கள் அத்தனை பேர் எதிரில் அடித்தது. . . எனக்கு ரொம்ப வருத்தமாயிட்டது. என்ன பிரமாதமான காரியம் ஏற்பட்டுவிட்டது . . . உங்களுக்கு ரொம்ப ஆத்திரம் வந்துவிட்டது. என்றாலும் நீங்கள்
தகப்பன்தானே. . . அடித்தது போகட்டும்; இனி ஒன்றும் மனதில்
வைக்காதீர்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். என் தகப்பனார்,
தனக்குக் களைப்பாய் இருப்பதாகச் சொல்லிவிட்டு, வண்டியைக் கட்டச்
சொல்லி, வீட்டுக்குப் போய்விட்டார். எங்கய்யா, வீட்டிற்குப் போன உடன்
என்னிடம் சுமார் 40, 50 பேருக்குமேல் இதைப்பற்றிப் பேச வருவதும், போவதுமாகவே இருந்தது. இதே பேச்சுதான்; ‘சமாராதனை கெட்டுப் போச்சு’ என்பவர்களும் ‘கெட்டால் என்ன? இந்த பாடுபடும் பாட்டாளி மக்களுக்கு முழுகிப் போய்விட்டதா?” என்பவர்களும் இப்படியாக பெரிய தர்க்கம் ஏற்பட்டு, ‘நான் செய்தது சரி’ என்கிற முடிவு ஏற்பட்டு, இந்த செய்கையால் கடைவீதியில் நான் ஒரு வீரனாகிவிட்டேன். “பார்ப்பான் சாப்பிடுவதை நாம் பார்த்தால் குற்றம், தோஷம் என்று சொல்லுவது நமக்கு அவமானம் என்றும், கடை வியாபாரிகள், குமாஸ்தாக்கள், மனதில் படும்படியாக ஏற்பட்டுவிட்டது. இந்தப் பிரஸ்தாபம்
ஜாதிபேதத்தைப்பற்றிய பேச்சாகி, கடைசியில் சாயபு வீட்டில் சாப்பிட்டால்தான் என்ன கெடுதி? என்று ஏற்பட்டு, அப்போது முதலே சமபந்தி சாப்பாடு - வியாபாரிகளுக்குள் - வருஷா வருஷம் சித்ரா பவுர்ணமி அன்று - என் தலைமை ஆதிக்கத்தில் நடப்பதும் எல்லா ஜாதியார் - மதத்தார் வந்து சாப்பிடுவதும் வழக்கமாகிவிட்டது. ‘ சாப்பிடுவதைக் கண்களால் பார்த்தால் ‘குற்றம்’ என்பதில் ஆரம்பித்த விவகாரம், ‘சாப்பாட்டில் ஜாதி பேதம் காட்டுவது, அறியாமை’ என்கிற
முடிவு - உண்மையாகவே - மக்களுக்கு ஏற்படும்படி, அந்தச் சம்பவம்
செய்துவிட்டது.

------------------------தொடரும் ............

------------------- நூல்:- “தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை” பக்கம் : 4 - 11

29.12.09

அனைத்து பெருமைகளும் பெரியாருக்கே

நான்காவது வகுப்பு படிக்காத பெரியாருக்கு
பல பல்கலைக் கழகங்களில் அவருடைய பெயர்
சிங்கப்பூரில் தமிழர் தலைவர் அறிவுப்பூர்வமான விளக்கம்

நான்காவது வகுப்பு வரை படிக்காத தந்தை பெரியார் அவர்களுக்குப் பல பல்கலைக் கழகங்கள் அவருடைய பெயரைச் சூட்டியுள்ளன என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சிங்கப்பூர் நாட்டில் 8.11.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் 21.12.2009 அன்றைய உரையின் தொடர்ச்சி வருமாறு:

அனைத்து பெருமைகளும் பெரியாருக்கே

எங்களை சிங்கப்பூர் நாட்டினர், அமெரிக்காவிலே இருந்து வந்திருக்கிறவர்கள் பாராட்டுகிறார்கள் என்பதை விட, நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தைபெரியார் அவர்களுக்குத் தான் இந்த அனைத்து பெருமைகளும் சாரும். இன்றைக்கு இந்த நிலையிலே உங்கள் மத்தியிலே வாழ்கிறேன் என்று சொன்னால் எனக்கு மட்டுமல்ல; இந்த இனத்திற்கே மானத்தையும், அறிவையும் தந்த மாபெரும் அறிவு வள்ளல் தந்தை பெரியார். (கைதட்டல்). எனவே அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களுடைய பெயராலே விருது வழங்கியதை எண்ணி மகிழ்கிறேன்.

வேர்கள் சரியாக இருந்தால் விழுதுகள்...!

அதே போல இன்னொரு சிறப்பைப் பார்த்து எண்ணி நான் மகிழ்வது என்னவென்றால், ஒரு ஆலமரத்துக்கு விழுதுகள் முக்கியம். விழுதுகள் அடிப்படையானவை. அந்த விழுதுகள் மிக நீண்ட காலமாக இருப்பது சிறப்பானது.

வேர்கள் சரியாக இருந்தால்தான் விழுதுகள் சரியாக இருக்கும். விழுதுகளாக வரக்கூடியவர்களுக்கு விருதுகள் வழங்குவது மிகச் சரியான ஒரு முறையாக இருக்கும்.

அந்த வகையிலே பெண்ணியத்தினுடைய உரிமையைத் தந்தை பெரியார் வலியுறுத்தினார்கள். அது எப்படி மலர்ந்துள்ளதென்றால் அதற்கு எடுத்துக்காட்டான நாடு இந்த சிங்கப்பூர் நாடு தான். தந்தை பெரியாருடைய கருத்தை நடைமுறைப்படுத்தியிருக்கின்ற நாடு.நான் அடிக்கடி இங்கு வரும் பொழுதெல்லாம் சொல்லுவேன். பலர் சிங்கப்பூருக்கு வருவது பெற்றுக்கொள்வதற்காக வருவார்கள்.

பெற்றுக்கொள்ள அல்ல; கற்றுக்கொள்ள

எங்களைப் பொறுத்த வரை நாங்கள் கற்றுக்கொண்டு போவதற்காக சிங்கப்பூருக்கு வந்திருக்கின்றோம். மலேசிய நாட்டைச் சார்ந்த அருமை நண்பர்கள் ஜொகூர் டத்தோ பாலகிருஷ்ணன் அவர்கள், அதே போல டாக்டர் நெடுஞ்செழியன் ஒரு சிறந்த மருத்துவர் அவர் மலேசிய நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கின்றார்.

சிங்கப்பூர் நாடு மட்டுமல்ல, மலேசியநாடும் தந்தை பெரியாருக்கு பெரும் வரவேற்பைக் கொடுத்த நாடு. தந்தை பெரியார் அவர்கள் 1929லேயே மலேசியாவிற்கு வந்த ஒரு நிலை உண்டு. இங்கே பலதரப்பட்ட அறிஞர் பெருமக்கள் வந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டு போனால் அதுவே அதிக நேரம் ஆகிவிடும்.

நேரம் அறியாமல் பேசிக்கொண்டிருப்பது என்னுடைய தலைவருக்கும் வாடிக்கை, எனக்கும் வாடிக்கை. அந்த வகையிலே அய்யா தேவேந்திரன் அவர்கள் வாழ்நாள் குடிமக்களிலே ஒருவர் என்பதை அறிந்து நாங்கள் மிகுந்த பெருமைப்படுகிறோம். சிறப்பு விருந்தினராக இங்கே வந்திருக்கின்றார்கள். அவர்களை அனைவரின் சார்பாக வரவேற்பதோடு தமிழ்நாட்டின் சார்பாகவும் வரவேற்கின்றேன்.

Management development Institute of Singapore என்ற அமைப்பிற்கு நாங்கள் அழைக்கப்பட்டு, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டோம். சென்ற ஆண்டு இதை பெரிய அளவிலே செய்தோம். பெரியார் சமூக சேவை மன்றம் நடத்தக்கூடிய விழாவில் அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த அய்யா தேவேந்திரன் அவர்கள் கலந்துகொள்வது சிறப்பு மிகுந்த ஒன்று. அவர் தொடர்ந்து பல்லாண்டு காலம் பணியாற்றி தொண்டாற்ற வேண்டும். சிங்கப்பூரில் உள்ள பல்வேறு அமைப்புகளை ஒரு கட்டமைப்பாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கக்கூடிய

தமிழவேள் கோ.சாரங்கபாணி, அதே போல ராமசாமி இவர்கள் எல்லாம் தமிழர் சீர்திருத்த சங்கத்தை ஆரம்பித்து தமிழர் பிரநிதித்துவ அமைப்பை உருவாக்கினார்களோ, இன்றைக்கு அந்தக் கொள்கைச் சுடரை அவர்கள் ஏந்திக்கொண்டிருக்-கின்றார்கள். இன்றைக்கும் தமிழர்களுடைய அமைப்பை அவர்கள் ஒருங்கிணைக்கக் கூடிய ஓர் அற்புதமான பணியை செய்திருக்கின்றார்கள். இவர்களெல்லாம் கலந்து கொள்வதைப் பார்த்து எல்லையற்ற மகிழ்ச்சியை இந்தப் பெரியார் தொண்டன் பெறுகிறான். பெரியாருடைய பெருமைகளை பேசாத நாள்கள் எல்லாம் பிறவாத நாள்கள். அப்படிப்பட்ட நிலையிலே பெரியாருடைய பெருமைகளை பேசாத நாள்கள் எல்லாம் பிறவா நாள்கள் என்று கருதுபவர்கள். அப்படிப்பட்ட நிலையிலே பெரியாருடைய பெருமைகளை நாங்கள் பேசுவதைவிட அடுத்தடுத்த தலைமுறைகள் பேச வேண்டும். அது தான் எங்களுக்கு சிறப்பு.

ஒரு தலைவருக்கு என்ன பெருமை?

ஒரு தலைவருக்கே பெருமை என்னவென்றால் அவரோடு அந்தப் பணி முடிந்துவிட்டது என்பது பெருமை அல்ல. அவருக்குப் பிறகு அவர் ஏந்திய சுடரைத் தூக்குபவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் மெழுகுவர்த்திகள் அந்தப் பணியிலே தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள்.

இன்றைக்கு மூன்று நிகழ்ச்சிகள் இங்கே நடந்தன, மிக அருமையான நிகழ்ச்சிகள். ஒன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் புதியதோர் உலகு செய்வோம் என்னும் பாடல். ஓர் இளம் மாணவி அற்புதமாக நடனமாடினார். புதிய உலகத்தை உருவாக்க வேண்டுமானால் இப்படிப்பட்ட தலைமுறையினர் வரவேண்டும். அது போலவே அடுத்ததாக பெரியாருடைய சிந்தனைகளை, பெரியாருடைய பொன்மொழிகளை நம்மைவிட செல்வி குந்தவி அவர்கள் சிறப்பாக அருமையாக பல கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.

குந்தவி-பொன்மொழி

ஒவ்வொருவரும் இணைப்புரையிலிருந்து பெரியார், பெரியார், பெரியார் சிந்தனைகளையே எடுத்துக் கூறினார்கள். நாம் எல்லோருமே மழையிலே நனைந்ததைப் போல அரங்கத்திற்குள்ளாக அதே சிந்தனையில் இருந்தோம். அருமைச் செல்வி குந்தவி அவர்கள். இங்கே அருமையாகப் பேசினார்கள். அதைவிட இன்னொரு போனஸ் மகிழ்ச்சி_புரட்சிக் கவிஞர் பாடல் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற பாடலைக் கேட்கும் பொழுது எனக்கே வியப்பாக இருந்தது.

இனியநிலா

இணைப்புரையிலே கூட உயர்ந்த செய்தியைச் சொன்னார்கள். நாங்கள் இங்கே பேசிக்கொண்டிருந்தோம். டாக்டர் சோம.இளங்கோவனும், நானும் பேசிக்கொண்டிருந்தோம். உச்சரிப்பிலே இனியநிலா கவனமாகப் பாடுகிறது என்று சொன்னார்கள். உள்ளபடியே தன்மகனை சான்றோன் எனக்கேட்டதாய் என்பது போல எனக்குப் பெருமையாக இருந்தது. மறுபடியும் வள்ளுவர் தன் மகனுக்கே சொன்னார். இதிலே எல்லோரும் வருவார்கள் என்று மற்றவர்கள் சொல்லலாம். எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.

நான் டாக்டர் பட்டம் வாங்கினேன் என்பது போன்றவை முக்கியமல்ல. பெரியாருடைய கருத்துகள் பெரியார் பிஞ்சுகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பது தான் முக்கியம். இதுதான் வளர்ந்து வரக்கூடிய ஒரு பெரிய நிலை. எனவே இனியநிலாவுக்கு எனது வாழ்த்துகள். அது போல உங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.

அவரது பேச்சை நான் கேட்பதில்லை

டாக்டர் சோம.இளங்கோவன் என்னுடைய உடலையும் கண்காணிக்கக் கூடியவர். நான் உரையாற்றுவதற்கு எழுந்தபொழுது என்னுடைய காதிலே மெதுவாக சொன்னார். அண்ணியார் அவர்கள் (திருமதி மோகனா வீரமணி) 30 நிமிடங்கள்தான் உங்களுக்குப் பேசக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார்.

ஆனால் இந்த மேடையிலே யாரும் என்னை வரை முறைப்படுத்தவில்லை. பல நேரங்களிலே டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுடைய பேச்சைக் கேட்பதில்லை. அதுதான் உண்மை. என்னதான் பெண்ணுரிமை பேசினாலும் சில முக்கியமான நேரங்களில் அவருடைய ஆலோசனைகளை அறிவுரைகளை, அவருடைய ஆணைகளை ஏற்பேன். ஆனால், இது போன்ற நேரங்களில் உங்களைப் பார்க்கும் பொழுது அவைகளை ஏற்க வேண்டிய அவசியமில்லை என்று அவர்களே ஒப்புக்கொள்வார்கள்.

நல்ல மாமருந்து

காரணம் நான் பேசுவதால் களைப்படைவதில்லை. அதற்கு பதிலாக உங்களை சந்திப்பதிலே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் நான் பெறுகின்றேன். இதுதான் எனக்கு நல்லமாமருந்து. மீண்டும் நான் சொல்லுகின்றேன். ஆகவே அருமை சான்றோர் பெருமக்களே, தோழர்களே! அனைத்து அமைப்புகளைச் சார்ந்த என்னருந் தோழர்களே! சிங்கப்பூரில் இருக்கக் கூடிய முக்கியமான அமைப்புகளான ‘சிந்தா’ போன்ற முக்கியமான அமைப்புகளுக்கெல்லாம் பெரியார் சேவை மன்றம். நல்ல நன்கொடையைக் கொடுத்து ஒரு புதிய முறையை உருவாக்கியிருக்கிறது. ஏதோ தமிழ்நாட்டிலிருந்து வந்தால், வெளிநாட்டிலிருந்து வந்தால் பெற்றுக்கொண்டு போவார்கள் என்பதல்ல.

இன்னும் கேட்டால் கட்டணம் வசூலித்துக் கூட நாங்கள் பேசி இந்த ‘சிந்தா’ போன்ற மன்றங்களுக்கு தமிழ் வளர்ச்சி பெறுவதற்குரிய வாய்ப்பை அளிப்போம். அதற்காகவும் பெரியார் சேவை மன்றத்தைப் பாராட்டுகிறோம். இதை மிக அருமையாக நீங்கள் செய்திருக்கின்றீர்கள்.

‘பெரியார் கண்ட வாழ்வியல்’

பெரியார் கண்ட வாழ்வியல் என்ற தலைப்பு எனக்குப் பேசக் கொடுத்திருக்கின்ற தலைப்பாகும். தந்தை பெரியார் அவர்கள் ஒப்பற்ற சுயசிந்தனையாளர். நான்காவது வகுப்பு கூட படிக்காத பெரியார் இன்றைக்கு அவர் பெயராலே பல்கலைக் கழகங்கள். அது மட்டுமல்ல, பல்கலைக் கழகங்களில் பெரியாரைப் பற்றி பல தலைப்புகளில் ஆராய்ச்சி செய்கிறார்கள்.

அதற்கு என்ன காரணம்? மனிதனுடைய வாழ்வியலோடு தன்னை இணைத்துக்கொண்டவர் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியார் ஓர் ஒப்பற்ற சுயசிந்தனையாளர் என்பதை அருமையாக எடுத்துச் சொன்னார்கள். புரட்சிக் கவிஞர் இன்னொரு பாட்டிலே சொன்னார்_உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்று, தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொன்னார்கள்.

‘ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி’

மனிதனுடைய வாழ்வியலோடு தன்னை இணைத்துக் கொண்டவர் தந்தை பெரியார் அவர்கள்.

புரட்சிக் கவிஞர் இன்னொரு பாட்டிலே சொன்னார்கள். உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்று சொன்னார்கள்.

பெரியார் அவர்கள் ஆயிரம் ஆண்டு காலத்திற்கு கிடைக்க முடியாத தலைவர் என்று சொல்லும் பொழுது சொன்னார்.

ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி

அவர் அறிந்திராத அறிவாவார்

அணிந்திராத அணியாவார்

என்று அழகாக அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அப்படிபட்ட சிந்தனையிலே பெரியார் கண்ட வாழ்வியல் எப்படிப்பட்டதென்று சொன்னால் தொலைநோக்கு உடையவர் அவர். பல தலைவர்கள் தொலைநோக்குடையவர்கள். பெரியாரவர்களோ தொலைநோக்குடைவர்கள்.

தொலைநோக்கு என்றால்

தொலைநோக்கு என்றால் தன் குடும்பம், தன்பிள்ளை, தன் பெண்டு என்று பார்ப்பதில்லை. மாறாக சமூகத்தைப் பார்த்தார். மனிதனைப் பார்த்தார்.

அறிவுக்கு முன்னோடியான கிரேக்கத்து அறிஞர் பட்டப்பகலிலே சூரியன் கனன்று கொண்டிருக்கின்ற காலத்திலே கையிலே ஒரு வெளிச்சமான விளக்கொன்றை எடுத்து கிரேக்கத்து வீதிகளிலே நடந்து கொண்டு போகின்றார்.

எல்லோரும் அவரைப் பார்த்து பரிகசிக்கிறார்கள். என்னய்யா, இருட்டாக இருக்கிறதா இப்பொழுது? இவர் எவ்வளவு பெரிய பைத்தியக்காரராக இருப்பார்.

நல்ல வெளிச்சத்திலே பகல் வெளிச்சத்திலே இப்படி யாராவது விளக்கைத் தூக்கிக் கொண்டு போவார்களா? என்று சொல்லி அவரைப் பரிகசித்தார்கள்.

ஒருவர் மட்டும் துணிந்து கேட்டார்

ஒருவர் மட்டும் துணிந்து கேட்டார் அவர்களிடத்திலே. கிரேக்க அறிஞன் சாக்ரட்டீஸ் சொன்னான் ஆம். நீங்கள் எல்லாம் வெளிச்சத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள். நான் அப்படி நினைக்கவில்லை.

நீங்கள் அனைவரும் இருட்டில் இருப்பதாக நான் நினைக்கின்றேன். அந்த இருட்டு அறியாமை இருட்டு அவர்கள் மத்தியிலே வெளிச்சத்தை உண்டாக்க வேண்டுமானால் உங்கள் அறிவு என்ன சொல்லுகிறது? ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டால்தான் துணிச்சல் வரும். நோய்களிலேயே மிகப்பெரிய நோய் அறியாமை நோய்.

எனவே அந்த அறியாமையைப் போக்குவதற்காக இருட்டைப் போக்குவதற்காக முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி அவர்கள் அறிவு வெளிச்சம் தந்தார்கள்.

யாரைத் தேடுகிறீர்கள்?

யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார்கள். மனிதனைத் தேடுகிறேன் என்று சொன்னார் சாக்ரட்டீஸ் இந்த நாட்டிலே பதவியாளர்கள் உண்டு. படிப்பாளிகள் உண்டு. அல்லது பெரிய பணக்காரர்கள் உண்டு. ஆனால் நல்ல மனிதர்கள் தேடப்படக் கூடிய நிலை இருக்கிறதென்று சொன்னால் எப்படிப்படிப்பட்ட நிலை இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களுடைய கோணங்கள் இன்னமும் மக்கள் மத்தியிலே புரிந்துணர்வோடு இருக்கக் கூடிய அளவில் இல்லை. தந்தை பெரியார் அவர்களை வெறும் கடவுள் மறுப்பாளராகப் பார்க்கிறார்கள்; அவரை வெறும் பார்ப்பனிய எதிர்ப்பாளராகப் பார்க்கிறார்கள்; அல்லது வேறு ஏதோ சமூகத்திற்கு எதிரானவர் போல நினைக்கிறார்கள்.

யானையைக் கண்ட அய்வர் போல்

அவர்கள் எல்லோருடைய நிலையும் யானையைக் கண்ட அய்வர் நிலை போலத்தான் உள்ளது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். யானையைக் கண்ட அய்ந்து பேரில் ஒவ்வொருவரும் எப்படிச் சொன்னார்கள் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

ஆனால் உண்மையாகத் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டுமானால் அவரே சொல்லியிருக்கின்றார். என்னுடைய மக்கள் மானமும், அறிவும் உள்ள மக்களாக வாழவேண்டுமென்று மானிடப் பற்றோடு வாழ வேண்டுமென்று.

எனக்கு மற்றப் பற்றுகள் எல்லாம் கிடையாது. எனக்கு இரண்டு பற்றுதான் முக்கியம். ஒன்று அறிவுப்பற்று. மற்றொன்று மனிதப் பற்று என்று தெளிவாகச் சொன்னார்.

மனிதப்பற்றை முன்னிறுத்தியவர்

உலகத்திலேயே மனிதப்பற்றை முன்னிறுத்திய தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான். எனவே அது தமிழ்நாட்டிற்குரியதோ, இந்தியாவிற்குரியதோ, அல்லது இன்னொரு நாட்டுக்குரியதோ அல்ல. தந்தை பெரியாரின் தத்துவங்கள்.

பெரியார் மறைந்து விட்டார் என்று யாரும் நினைக்க வேண்டிய அவசியமில்லை. பெரியார் என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்று நினைக்கின்றோம்.

காரணம் பெரியார் ஒரு தனிமனிதரல்ல. தனி மனிதர்களுக்குப் பிறப்பு உண்டு. இறப்பு உண்டு. ஆனால் மிகப்பெரிய தத்துவங்களாகவே வாழ்ந்து மறைந்து தனக்குப் பிறகு தனது கொள்கைகள் மக்களிடம் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டவர்.

பெரியார் கண்ட வாழ்வியல்

அதனால்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெரியார் கண்ட வாழ்வியல் எப்படி பூத்துக்குலுங்குகிறது என்பதை தாம் முதலமைச்சராக ஆன நிலையிலே எழுதிக்கொடுத்த கட்டுரையான ‘‘அந்த வசந்தம்’’ கட்டுரையிலும் சரி, அதற்குப் பிறகு திருச்சியில் நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவிலும் கலந்து கொண்ட பொழுதும், அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

பெரியார் தனி மனிதரல்ல

பெரியார் என்பவர் ஒரு தனிமனிதரல்ல வாழும் பொழுதே அண்ணா அவர்கள் எழுதிக்கொடுத்தார். பகுத்தறிவு குடும்பத்தின் தலைமகன் அண்ணா அவர்கள்.

அண்மையிலேதான் அண்ணா அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடந்தது. அண்ணா சொன்னார் மிக அழகாக பெரியார் ஒரு தனிமனிதரல்ல. அவர் ஒரு சாகப்தம். என்ன ஒரு அழகான சொல் அவர் ஒரு சகாப்தம் மட்டுமல்ல தந்தை பெரியார் அவர்கள் ஒரு வரலாறு ஒரு திருப்பம் ஒரு கால கட்டம் என்று அழகாகச் சொன்னார்கள்.

பெரியாருக்கு முன் பெரியாருக்குப் பின் என்று சமூகத்தை எல்லாத் துறைகளிலும் நீங்கள் அலசி ஆராய்ந்தீர்களேயானால் பெரியார் கண்ட வாழ்வியல் நாளும் தோற்றதில்லை. எல்லா இடங்களிலும், எல்லா நாடுகளிலும் வெற்றி பெற்றுக்கொண்டுதான் வருகின்றது என்று சொன்னார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் 1954ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தபொழுது ஒரு அறிவுரை சொன்னார்கள்.

சிங்கப்பூருக்கு விசுவாசமாக இருங்கள்

நீங்கள் இந்த நாட்டிற்கு விசுவாசமாக இருந்து இந்த நாட்டு நீரோட்டத்தோடே இணைந்து கொள்ளுங்கள். நீங்கள் சிங்கப்பூரியர்களாகவே இருக்க வேண்டும் என்று சொன்னார்.

அதைத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். இப்படி மற்றவர்கள் சொல்லமாட்டார்கள். காரணம் என்னவென்றால் நம்முடைய நாடு பிறந்தபொன்னாடு என்று ஒன்று இருக்கலாம்.

ஆனால் சிங்கப்பூரியர்களின் எல்லா அமைப்பையும் ஒன்றாக்கி ஒன்றாக வாழ்ந்து கொண்டு சகோதரத்துவத்தோடு வாழக்கூடிய சமவாய்ப்பு பெறக்கூடியவர்களாக வாழக்கூடிய சிந்தனை தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை இருந்திருக்கிறது.

இன்னொன்றைத் தந்தை பெரியார் அவர்கள் அழகாகச் சொன்னார்கள். அய்யா அவர்கள் வாழ்வியலைத் தொட்டுத்தான் அவருடைய அமைப்பையே உருவாக்கினார்கள்.

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் என்று தனது இயக்கத்தைத் தோற்றுவித்து அதை ஏன் தோற்றுவித்தேன் என்று 1938 லேயே சொல்லியிருக்கின்றார்.

சுயமரியாதை இயக்கத்தை 1925 இல் அய்யா அவர்கள் தோற்றுவித்தார்கள். அப்பொழுதே அவர்கள் விளக்கினார்கள். உலகம் முழுவதும் வாழக்கூடிய மனிதர்கள் சுயமரியாதையுடன் மனிதர்களாக வாழ வேண்டும் என்று சொன்னார். அதனால்தான் சுயமரியாதை இயக்கத்தை ஏற்படுத்தினார்.

நான் எடுத்துச்சொல்வதைவிட, தந்தை பெரியார் பேசுவதையே கேளுங்கள். மனித வாழ்வின் பெருமை எது? என்று ஒரு சிறிய நூலை நாங்கள் வெளியிட்டிருக்கின்றோம். பெரிய நூல்களைப் பலர் வாங்குகிறார்கள். ஆனால் படிப்பதில்லை. இவ்வளவு பெரியா புத்தகமா? அப்புறம் படிக்கலாம் என்று வைத்துவிடுவார்கள். அய்யா அவர்களுடைய உரைகள் எல்லாம் ‘கேப்சூல்’ மாதிரி அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

குளிகைக்குள் நூற்றாண்டு

Putting Centuries into a Capsule - நூற்றாண்டுகளை ஒரு குளிகைக்குள் அடைப்பதைப் போல தந்தை பெரியாருடைய உழைப்பு சிந்தனை இருந்து கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

அய்யா அவர்கள் ரொம்ப அழகாக சொல்லுகின்றார். வாழ்வியலிலே இலக்கு வேண்டும் அதுதான் மிக முக்கியம். இலக்கு இல்லாமல் போனால் என்ன ஆவோம்?

எங்கள் நாட்டிலே தமிழ்நாட்டிலே மூட நம்பிக்கைகள் உண்டு. இங்கே இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் மாறுபட்ட சூழ்நிலையிலே வாழ்ந்திருக்கின்றீர்கள். வளர்ந்திருக்கின்றீர்கள். எங்கள் நாட்டிலே மூட நம்பிக்கைகள் அதிகம்.

ஒருவர் டாக்சி கூப்பிடுவார். அதில் ஒரு பயணி எழுந்து உட்காருவார். அந்த டாக்சி ஓட்டுநர் உடனே எங்கே போக வேண்டும் என்று கேட்பார்.

இதைக் கேட்டவுடனே கதவை மூடிவிட்டு அப்படியே கீழே இறங்கிவிடுவார் அந்த பயணி. டாக்சி டிரைவருக்கு ஒன்றும் புரியாது. இவர் எதற்கு கீழே இறங்கினார்? நாம் என்ன தவறு செய்து விட்டோம். இன்னும் ஏதாவது அவரிடம் சரியாக நடந்து கொள்ள வில்லையா? என்று எண்ணுகிறார்.

புறப்படும்பொழுதே எங்கே போகிறீர்?

ஆனால் டாக்சியில் ஏறிய பயணியோ என்ன சொல்லுகிறார். வண்டியில் ஏறியவுடன் எங்கே போகிறீர்கள் என்று ஓட்டுநர் கேட்டுவிட்டாரே. புறப்படும் பொழுதே எங்கே போகிறோம் என்று கேட்டுவிட்டாரே என்று புலம்புகிறார்.

ஓட்டுநர் எங்கே போகிறீர்கள் என்று கேட்காமல் வண்டியை எங்கே வேண்டுமானாலும் ஓட்டிக்கொண்டு செல்வாரா? இலக்கு என்பது மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அப்படிப்பட்ட நிலையிலே இலக்கைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் சொல்லுகிறார்.


------------------- தொடரும்... “விடுதலை” 19-12-2009

பெரியார் கருத்து உலகமெலாம்

பெரியார் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது
பெரியாரின் மறு உருவாக்கமாகத் திகழ்கிறார் வீரமணியார்
திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் மு.நாகநாதன் பாராட்டு

தந்தை பெரியாரின் மறு உருவாக்கமாகத் திகழ்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியார் அவர்கள் என்று தமிழக திட்டக்குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் தனது உரையில் குறிப்பிட்டார்.

சென்னை பெரியார் திடலில் நேற்று (27.-12.-2009) இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ரிச்சர்டு டாகின்ஸ் அவர்கள் எழுதிய God Delusion என்னும் ஆங்கில நூலை தமிழில் மொழியாக்கம் செய்து திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். இந்நூலின் முதல் படியினைப் பெற்றுக் கொண்டு தமிழ்நாடு திட்டக் குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பிற்போக்கான அமெரிக்க நாடு

வளர்ந்த அமெரிக்க நாடு பிற்போக்குவாதிகள் நிறைந்த நாடு. அங்கு கடவுளை மதத்தை நம்பக் கூடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் அறிவியல் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மனிதனின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு பிடித்த டார்வின் மிகச் சிறந்த பகுத்தறிவுவாதி.

இருபதாம் நூற்றாண்டில் கடவுள் இல்லை என்று சொல்லி இடையறாமல் போராடியவர் தந்தை பெரியார். அவர் மதங்களை ஒழிக்கப் போராடினார். ஜாதிகளை ஒழிக்கப் போராடினார். மக்கள் சமத்துவ உரிமை பெறவேண்டும் என்பதற்காகப் போராடினார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காகப் போராடினார்.

இப்படிப்பட்ட நிலையில் ரிச்சர்டு டாகின்ஸ் அவர்கள் எழுதிய ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட நமது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பெருமகனார் அவர்களையும், இந்த நூலை தமிழில் மொழி பெயர்ப்பதற்கு உதவிய பேராசிரியப் பெருமக்களையும் பாராட்டுகிறேன். தந்தை பெரியார் வழியில் மிகச் சிறப்பாக ஆசிரியர் அவர்கள் செயல்பட்டுக் கொண்டு வருகிறார்.

பெரியார் வழியில் ஆசிரியர்

1930, 1940ஆம் ஆண்டுகளில் உலக அறிவியல் அறிஞர்களின் நூல்களை எல்லாம் ஆங்கில மொழியில் இருந்து மொழி பெயர்த்து தமிழில் கொண்டு வந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

அது மட்டுமல்ல. தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எல்லா ஊர்களிலும், எல்லா நகரங்களிலும் பரப்பிக் கொண்டிருக்கின்றார்.

நமது ஆசிரியரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் தந்தை பெரியாரின் மறுவடிவமாக, தந்தை பெரியாரின் மறு ஆக்கமாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு ஆசிரியர் வீரமணியார் அவர்களுடைய பணி பாராட்டத் தக்க அளவிலே நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவருடைய பணியைப் போற்றுகிறேன். கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை என்ற இந்த நூலை ஆங்கிலத்தில் இரண்டு முறை படித்தேன்.

பெரியார் கருத்து உலகமெலாம்

தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகள் இன்றைக்கு உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் பெரியாருடைய கருத்துகளை இருட்டடிப்பு செய்து பார்த்தார்கள்.

கலைஞர் - வீரமணியார் சுறுசுறுப்பு

பெரியாருடைய கடவுள் இல்லை என்ற கருத்து இன்றைக்கு ரிச்சர்டு டாகின்ஸ் மூலம் வெளியே வருகிறது, பரவுகிறது. பெரியாரைப் பின்பற்றுகிறவர்கள் நீண்ட காலம் வாழுகிறார்கள். தந்தை பெரியாருடைய குருகுலத்தில் பயின்ற தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 86 வயதிலும் சுறுசுறுப்பாக பொதுமக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டு வருகின்றார்.

அதே போல நமது ஆசிரியர் அவர்களும் இந்த 77 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்து கொண்டு பொதுப் பணிகளை ஆற்றி வருகிறார். பெரியாரின் பேரியக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

தேவநாதன் என்ற காஞ்சிபுர அர்ச்சகர் அவருடைய செயலாலேயே கடவுள் இல்லை என்று காண்பித்துவிட்டார்.

நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர், நாத்திகர்

2003ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அறிஞர் தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் ஒரு நாத்திகர். அவர் ஒரு நாத்திகர் என்ற செய்தியே ஊடகத் துறையால் மறைக்கப்பட்டது. பிறகு நான் தேடித் தேடி அலைந்து அந்த ஆதாரத்தைக் கண்டுபிடித்தேன். அறிவியல் இதழ்களிலிருந்து ஆதார பூர்வமாக எடுத்தேன், அவர் ஒரு நாத்திகர் என்ற செய்தியை. நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர் சாகும் தறுவாயில் இருந்த பொழுது அவரிடம் கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் கேட்டார்கள். ‘‘எனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை கிடையாது. நான் ஒரு நாத்திகன். நான் இளமையிலிருந்தே நாத்திகனாக வளர்ந்தேன். நான் இறப்பைப் பற்றி கவலை கொள்ளவில்லை’’ என்று தெளிவாகச் சொன்னார்.

12 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய கவிஞர் உமர் கயாம் ஒரு நாத்திகர். கடவுளை நம்பாதவர். சொர்க்கம், நரகம் என்று வேறெதுவும் இல்லை. இந்த பூமிதான் சொர்க்கமும் நரகமும் ஆகும் என்று பாடியவர் அவர்.

மா சே துங் சொன்னார்

மாசேதுங் சொல்கிறார் ‘‘தொழிலாளிகள், விவசாயிகளின் மூளையை உறைய வைப்பதற்காக முதலாளிகள் மதம் என்ற மாத்திரையைப் பயன்படுத்தினார்கள்’’ என்று. தந்தை பெரியார் அவர்கள் கடவுள் இல்லை என்று சொன்னார். அந்தக் கருத்துகளைத்தான் இன்றைக்கு அறிவியல் அறிஞர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள். நான் நாத்திகன் என்னுடைய சகோதரர் நரேந்திரன் ஒரு நாத்திகர்.

முரசொலி மாறன் சொன்னார்

மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களைப் பார்க்க நான் டில்லி சென்றிருந்தேன். அவர் உடல் நலம் இன்றி வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பி வந்த சமயம். நான், அண்ணன் முரசொலி மாறன் அவர்களைப் பார்க்க டெல்லியில் அவருடைய இல்லத்தில் அமர்ந்திருந்தேன். மத்திய அமைச்சரான அவரோ எங்கோ வெளியே சென்று விட்டு இல்லத்திற்குத் திரும்பினார். என்னைப் பார்த்தவுடன் ‘‘நீங்கள் எவ்வளவு நேரமாகக் காத்திருக்கிறீர்கள்’’ என்று கேட்டார். ‘‘நான் அரைமணி நேரமாகக் காத்திருக்கிறேன்’’ என்று செல்லிவிட்டு ‘‘நீங்கள் எங்கே சென்று வருகிறீர்கள்’’ என்று கேட்டேன். ‘‘ஒன்றுமில்லை. நான் உடல் நலம் தேறி வந்ததற்காக குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ண காந்த் என்னைப் பார்ப்பதற்காக வருகிறேன் என்று சொன்னார். இல்லை நீங்கள் வர வேண்டாம் நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்ததில்தான் இந்த காலதாமதம்’’ என்றார். அது மட்டுமல்ல குடியரசுத் துணைத் தலைவரே ஒரு மூடநம்பிக்கையாளராக இருக்கிறார் என்று சொல்லிவிட்டுச் சொன்னார். என்னை குடியரசு துணைத் தலைவர் கேட்டார். நீங்கள் வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் வந்திருக்கிறீர்கள். நீங்கள் உயிர் பெற்றது கடவுளால் என்பதை இப்பொழுது ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டார். உடனே நான் சொன்னேன். நான் உயிர் பெற்றது மருத்துவர்களின் முயற்சியால், மனிதர்களின் முயற்சியால். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று அன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறன் சொன்னார். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த ஆசிரியர் அவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் மு.நாகநாதன் பேசினார்.

---------------------------- “விடுதலை” 29-12-2009

உலகில் பெரியார் ஒருவரே!

இந்நாள்

1938 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 29) தான் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவும் எந்த நிலையில்?

தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக சிறையில் இருந்த காலகட்டத்தில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமான நீதிக்கட்சியின் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை எல்லாப் பொறுப்புகளும் (பதவிகள் அல்ல) அவரைத் தேடி சென்றுள்ளனவே தவிர, அவர் அவற்றை நோக்கிக் காலடி எடுத்து வைத்தவர் அல்லர். அவர் ஏற்ற பொறுப்புகள் அவரால் பெருமை பெற்றுக் குலுங்கின என்பதுதான் வரலாறு.

1938 டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாள்களில் சென்னையில் நீதிக்கட்சியின் 14 ஆவது மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் தலைவராக தந்தை பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தந்தை பெரியாரோ சிறைக் கொட்டடியில் இருக்கிறார்.

50 ஆயிரம் மக்கள் மாநாட்டில் கூடியிருந்தனர். மாநாட்டுக்குத் தலைமை தாங்கவேண்டிய தந்தை பெரியார் சிறையில் இருக்கிறாரே என்ற உணர்ச்சி எரிமலையாகத் தகித்துக் கொண்டிருந்தது தமிழர்கள் மத்தியில்.

தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலையைத் தேரில் வைத்து சிறையில் உறைவதுபோல ஒப்பனை செய்து, ஊர்வலமாக மாநாட்டுப் பந்தலுக்குக் கொண்டு வரப்பட்டது. தந்தை பெரியார் அவர்களின் உருவம் நாற்காலியில் வைக்கப்பட்டு இருந்தது.

மாநாட்டுக்குத் தலைவராக சர் ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிக்கப்பட்டார்.

மாநாட்டுத் தலைவருக்குப் போடப்பட்ட மாலையை நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் உருவத்திற்கு அணிவித்தனர்.

தம் தோளுக்குப் போட்ட மாலையைத் தந்தை பெரியாரின் தாளுக்கு அணிவித்து பேச முடியாமல் நா தழு தழுத்தார்.

தந்தை பெரியார் எழுதியிருந்த மாநாட்டுத் தலைமை உரையை ஏ.டி. பன்னீர்செல்வம் படித்தார்.

மாநாட்டில் கூடியிருந்த 50 ஆயிரம் மக்களும் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

“எங்கள் மாபெரும் தலைவரே! உங்கள் உடல் சிறைப்படுத்தப்பட்டிருந் தாலும், உங்கள் வீரத் திருவுருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நின்று ஒன்றுபட்டிருக்கி றோம். உங்கள் தலைமை யில் நாங்கள் அனைவரும் சொல்வழி நின்று, கடைசி வரை, நோக்கம் நிறைவேற ஓயாது உழைத்து வெற்றி பெறுவோம் என்று உறுதி கூறுகிறோம்’’ தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் இவ்வாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதுபோன்ற சிறப்புகள் எல்லாம் உலக வரலாற்றில் தந்தை பெரியாரை நோக்கி பாய்ந்து வந்ததுபோல வேறு யாருக்காவது வந்ததுண்டா?

ஆம் உலகில் பெரியார் ஒருவரே!

--------------- மயிலாடன் அவர்கள் 29-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

அறுத்தெறி பூணூலை என்று ஆவேசக் குரல் கொடுக்க வேண்டாமா ஆரியப் புத்திரர்கள்?

‘மும்மூர்த்திகளும் பார்ப்பனர்களே!’


பாரதீய ஜனதாவா? அது தேசியக் கட்சி! அதன் பார்வை ஏகப் பாரதம்! மாநிலங்கள் என்ற அமைப்பே கூடத் தேவையில்லை; கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை ஒரே தேசம்! பாகிஸ்தான் பர்மாவைக்கூட இணைத்து அகண்ட பாரதத்தை உருவாக்குவதுதான் அவர்களின் கட்டுக்கடங்கா ஆர்வம்.

காந்தியாரைப் படுகொலை செய்ததால் தூக்கலிடப்பட்ட நாதுராம் கோட்சேயின் அஸ்திகூட கலசத்தில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருவது எதற்காக? பாகிஸ்தானை இந்தியாவோடு இணைத்த பிறகு அந்தப் பகுதி சிந்து நதியில் அதனைக் கரைப்பதற்குத்தானாம்.

இப்படியெல்லாம் பேசுவதற்கு இவர்களுக்கு அருகதையுண்டா? இந்தியா ஒரே நாடு ஏகப் பாரதம் என்று பிலாக்கணம் பாடும் இவர்கள் இந்திய மக்கள் அனைவரும் ஒரு தாயின் மக்கள் என்று நெஞ்சார நினைப்பவர்கள்தானா?

பாரதத் தாயின் புதல்வர்கள் என்றால் இங்கு எல்லோரும் சகோதர சகோதரிகள்தானே! சரிசமம்தானே! அப்படியென்றால் எங்கிருந்து வந்து குதித்தது வர்ணாசிரமம் என்னும் நாகம் ஜாதி என்னும் புற்றுநோய்?

பதிலளிக்க வேண்டாமா பாரதீய ஜனதாவையும் ஆர்.எஸ்.எஸையும் ஆட்டிப் படைக்கும் பார்ப்பனர்கள்?

“அறுத்தெறி பூணூலை’’ என்று அண்டம் நடுங்க ஆவேசக் குரல் கொடுக்க வேண்டாமா ஆரியப் புத்திரர்கள்?

சங்கராச்சாரி மடத்தில் ஒரு சாம்பானை நியமிப்போம் என்று சங்கநாதம் செய்ய வேண்டாமா?

இதிகாசங்களை எரி தீயில்! வாட்டிட எழுச்சி கொள்ள வேண்டியதுதானே? மனுதர்மம் ஒழிப்பு மாநாடு கூட்ட வேண்டியதுதானே?

ஏன் செய்யவில்லை? ஏன் எழுதவில்லை?

ஏன் குரல் கொடுக்கவில்லை?

ஏடுகள் என்ன இவர்களுக்குப் பஞ்சமா? ஊடகங்களும் இவர்களின் கையிருப்புதானே? உண்டு இல்லை என்று ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதானே?

ஏன் தயக்கம்? ஏன் மயக்கம்? இன்னும் புரியவில்லையா? எல்லாம் வெளி வேடம்தான் ஊராரை ஏமாற்றத்தான். உள்ளுக்குள். ஓங்கி ஒலிக்கும் நாதம் எல்லாம் “நாங்கள் பிராமணாள்!’’ ‘‘நீங்கள் எல்லாம் சூத்திராள்!’’ என்பதுதான்.

ஆர்.எஸ்.எஸை உருவாக்கியவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்களே! மூத்த குருநாதரான பாலகங்காதர திலகரே பச்சைப் பார்ப்பனர்தான்

பிளேக் நோயை ஒழிக்க அதற்கு மூலாதாரமான எலியை வேட்டையாடினால், எலி விநாயகரின் வாகனம் என்று கூறி எலியை ஒழித்த வெள்ளைக்கார அதிகாரிகளை சுட்டுக் கொல்லத் தூண்டிய சூட்சும மனிதர் அவர்.

இவ்வளவு எழுச்சிக்குப் பிறகும்கூட.. இன்றளவில்கூட நிலைமை என்ன?

பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவர் நிதின் கட்காரி யார்? ஒரு பார்ப்பனர்.

நாடாளுமன்றத்தில் மக்களவையின் தலைவர் சுஷ்மா சுவராஜ் யார்? ஒரு பார்ப்பனர்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவர் அருண்ஜேட்லி யார்? ஒரு பார்ப்பனர்.

பாரதீய ஜனதா என்ற கட்சியின் மூன்று முக்கிய பதவிகளின் மும்மூர்த்திகள் மூவரும் பார்ப்பனர்களே!

ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் யார்? ஒரு பார்ப்பனர்

விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால் யார்? ஒரு பார்ப்பனர்.

அகில இந்திய விசுவ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் வேதாந்தம் யார்?

ஒரு பார்ப்பனர் இப்படி சகலமும் பார்ப்பனமயமாகித் திமிரிக் கொண்டிருக்கும் ஒரு கட்சிதான் பாரதீய ஜனதாவும் அதன் பரிவாரங்களும்.

இந்த அமைப்புகளில் உள்ள பார்ப்பனர் அல்லாதார் குறிப்பாக “சூத்திரர்கள்” “பஞ்சமர்கள்’ இப் பொழுது இவர்களை அடையாளம் காணாவிட்டால் வேறு எப்போது?

கிலுகிலுப்பையைக் குழந்தைகளி டம் காட்டி கழுத்துச் சங்கிலியைக் களவாடும் திருடர்களுக்கும், சிறுபான்மையினர்களைக் காட்டி, இந்தியாவில் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை வருணா சிரமத்தின் பெய ரால் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் பார்ப்பனர்களுக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு?

பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஒன்றும் தந்தை பெரியாரின் சீடரல்லர் _ ‘வகுப்புத் துவேஷியும்’’ அல்லர். அவரே என்ன கூறுகிறார்? ‘‘முன்னாள் ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க.வின் அனைத்துக் கூட்டங் களையும் கருத்தரங்குகளையும், பேச்சுகளையும் கடந்த நாற்பதாண்டு காலமாக நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்த இந்துக்களின் கட்சி ஏன் எப்போதுமே தீண்டாமைபற்றிய கேள்வியை எழுப்பியதேயில்லை? இந்துக்களிடையே உள் ஜாதி நடைமுறை மிகவும் அடக்குமுறை நிறைந்த ஒன்றாக உள்ளது. பா.ஜ.க.வைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். பார்ப் பனர்களின் அமைப்பு என்பது இதன் காரணங்களுள் ஒன்றாக இருக்க லாம்.’’

(‘டெக்கான் கிரானிக்கல்’ 4.2.2008)

உமாபாரதி யார்? பாரதீய ஜனதா கட்சியின் அனல் பறக்கும் பேச்சாளர் ஆயிற்றே! கட்சியின் இளைஞர் பிரிவின் செயலாளராகவும் இருந்தவர் ஆயிற்றே! பாபர் மசூதி இடிப்பில் துள்ளிக் குதித்து ஆனந்த வெள்ளத்தில் நீந்தியவராயிற்றே!

பா.ஜ.க.,வைப்பற்றி அவரைவிட அதிகம் தெரிந்தவர் வேறு யாராவது இருக்க முடியுமா? அவர் என்ன சொல்லுகிறார்?

“பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தங்கள் கொள்கைகளில் நிலையற்றவர் களாக இருக்கிறார்கள். கட்சியின் தலைமை மேல்ஜாதி பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்குள்ளேயே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த தலைவர்கள் கட்சியில் புறக்கணிக்கப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சரியாக வழங் கப்படவில்லை. வேறுபாட்டுக் கண்ணோட் டத்தோடு பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினருக்கே அதிக வாய்ப்புகள் தரப்படுகின்றன. இது மிகப் பெரிய சமூக அநீதியாகும். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமா?’’

(பா.ஜ.க.வின் இளைஞர் பிரிவு செயலாளராக விருந்த உமாபாரதி மத்தியப் பிரதேசம் போபால் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி -25.4.1996) இதற்கு என்ன பதில்?

கல்யாண்சிங் யார்?

பாரதீய ஜனதா கட்சி யின் சார்பில் உத்தரப்பிரதேச மாநில முதல் அமைச்சராக யிருந்தவர், பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அம்மாநில முதல் அமைச் சரும் அவர்தான். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கள் பட்டியலிலும் இடம் பெற்றவர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

அவர் என்ன சொல்லுகிறார்?

‘‘பாபர் மசூதிக்கு ஒன்றும் ஆகாது என என்னிடம் பா.ஜ.க., தலைவர்கள் தெரி வித்தனர். அயோத்தியில் அடையாள கரசேவை மட்டுமே செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள். இருவர் எழுத்துப் பூர்வ மாகத் தெரிவித்தனர்.

அவர்களது வாக்குறுதியை நம்பியே மசூதி பாதுகாக்கப்படும் என நானும் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தேன். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் என்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்க பா.ஜ.க., தலைவர்கள் இந்த விஷயத்தில் சதி செய்தனர் என்றே தோன்றுகிறது’’

(‘தினமணி’ 3.5.2009)

இதற்கு என்ன பதில்?

பங்காரு லட்சுமணன் யார்?

பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவராக கொண்டு வரப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அதுகூட பா.ஜ.க. என்பது பார்ப்பனர் கட்சி என்ற முத்திரை விழுந்துள்ளதே அதைத் திசை திருப்புவதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடுதான் அவரை வெளியேற்றிய விதமும் அத்தன்மையைச் சேர்ந்ததுதான் அவர் ஒரு முறை (1.4.2002) சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது.

“அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் பி.ஜே.பி. மரண அடி வாங்கியதற்குக் காரணம் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர்களைக் கட்சி அலட்சியப்படுத்தியதுதான்’’ என்று கூறினாரே இதற்கு என்ன பதில்?

கிருபாநிதி யார்?

தமிழ்நாட்டு மண் ணில் தந்தை பெரியார் ஊன்றியிருக்கும் உணர்வின் அலைகளிலிருந்து தப்பிக்க, பா.ஜக.. என்ன செய்தது? ஒரு தாழ்த்தப்பட்டவரை தமிழகத் தலைவராக நியமித்தது. அவர்தான் டாக்டர் கிருபாநிதி.

அவரின் கண்ணீர்ப் பேட்டி இதோ:

“தேசிய கவுன்சில் கூட்டம் இந்தூரில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். இல. கணேசனும் வந்திருந்தார். கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, நான் தங்கியிருந்த தாஜ் ரெசிடென்சியல் ஹோட்டலுக்குக் கிளம்ப வேண்டும். காருக்காக போர்டிகோ அருகில் காத்திருந்தேன்.

அப்போது அங்கு இல. கணேசன் அவசரமாக வந்தார். ‘நீ என்ன பெரிய ஆளா? உன்னை ஒழிச்சுடுவேன்’ என்றெல்லாம் பேசியவர் ஜாதி ரீதியாகவும் என்னை இழிவாகப் பேசினார்.

நான் அவர்கிட்ட பொறுமையா பேசுங்கன்னு சொன்னேன். ஆனா அவர் எதையும் கேட்கிற நிலையில் இல்லை. நிதானம் இழந்து காணப்பட்டார். யார்கிட்டப் பேசறோம், என்ன பேசறோம்னு உணருகிற நிலைமையில் இல்லை. ஒரு கட்டத்துல என் கையைப் பிடிச்சு முறுக்கி அடிச்சுட்டார்.

கேள்வி: இல. கணேசன் உங்கள்மீது அவ்வளவு கோபமாவதற்கு என்ன காரணம்?

டாக்டர் கிருபாநிதி: என் பதவிக் காலம் முடியப் போகிறது. அதற்குமுன் கட்சி கணக்கு வழக்குகளை ஒப்படைக்கணும். அதனால் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோது பல இழுப்படிகள் நடந்திருப்பது புரிந்தது. மாநிலச் செயலாளராக இருந்த இல. கணேசன் தேசிய செயலாளராக ஆன பிறகும் மாநிலக் கட்சி நிதியைக் கையாண்டு கொண்டிருந்தார். இதை நான் தடுத்ததால்தான் ஆத்திரப்பட்டு என்னை அடிக்கும் அளவுக்குப் போய்விட்டார்.

கேள்வி: நீங்கள் தமிழகத் தலைவராகப் பதவியேற்றதிலிருந்தே பலவித அவமானங்களை சந்தித்து வந்தீர்கள் அல்லவா?

டாக்டர் கிருபாநிதி: ஆமாம் தலைவர் என்கிற முறையில் கட்சிப் பணிகளைக் கவனிக்க எனக்கு அடிப்படை வசதிகள்கூட செஞ்சுத்தரலை ஃபேக்ஸ் மிஷினை நானே சொந்தமா வாங்கினேன். டைப் அடிக்கணும் என்றால் வெளியில் கொடுத்து அடிச்சுக்கிட்டேன். இப்படிக் கட்சிப் பணிகளுக்கு சொந்த பணத்தைச் செலவழித்தேன். கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்திலேயே (கமலாலயம்) ரங்கநாதன் மற்றும் ராஜசிம்மன் ஆகிய இருவரும்தான் ஆட்டிப் படைக்கிறார்கள்.

இவர்களை இயக்கும் சூத்திரதாரி இல. கணேசன் தான். கமலாலயத்துக்கு வரும் கட்சிக்காரர்கள் தலைவர் இருக்கிறாரா என்று கேட்டால் சரியான பதில்கூட சொல்ல மாட்டார்கள். எவ்வளவோ அவமானங்கள்.

கேள்வி: உங்கள் கட்சியில் சாதீய உணர்வுகள் தலை விரித்து ஆடுகிறது என்று பலகாலமாக செய்திகள் வருகின்றன. நீங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதால் தான் அவமானப்படுத்துகிறார்களா?

டாக்டர் கிருபாநிதி: (சற்று மவுனத்திற்குப்பிறகு) நடக்கிறதை எல்லாம் பார்க்கும்போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருத்தன் தலைமைப் பதவியில் இருக்கிறதை அவங்களால் ஜீரணிக்க முடியலை. (“தமிழா தமிழா’’ ஏப்ரல் 2003).

இந்தத் தகவல்களை கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கும் டாக்டர் கிருபாகரன் எழுதியிருப்பதாகவும் இதே பேட்டியில் வெளியாகியுள்ளது.

இதற்கு என்ன பதில்?

‘‘தமிழ்நாட்டில் கூட மிக வெளிப்படையாக நடந்த ஒரு தகவல். அப்பொழுது மாநில பா.ஜ.க., தலைவராக இருந்தவர் கே. நாராயணராவ். மாநில பா.ஜ.க., செயலாளராகவும், மாநில விவசாயி அணித் தலைவராகவும் தேசியப் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர் பொ. நந்தகுமார், கோவை மாவட்ட பா.ஜ.க., இளைஞரணி தலைவராகயிருந்தவர் ந. லட்சுமணகுமார் இருவரும் பா.ஜ.க.வை விட்டு விலகியபோது மாநிலத் தலைவர் நாராயணராவுக்கும், அகில இந்திய பா.ஜ.க,. தலைவர் ஏ.பி. வாஜ்பேயியிக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விவரம் மிக முக்கியமானது.

‘‘தமிழக பாரதீய ஜனதா தொடர்ந்து மற்றொரு பிராமணர் சங்கமாக செயல்படுவதை எதிர்த்து வெளியேறுகிறோம்’’ என்று எழுதினார்களே இதற்கு என்ன பதில்? பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களின் பார்ப்பன மனப்பாங்கு எத்தகையது? தாழ்த்தப்பட்ட மக்கள்மீது அவர்களின் பார்வை எந்தத் தரத்தைச் சார்ந்தது?

முரளி மனோகர் ஜோஷி, பவுதிகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்தானேஅக்கட்சியின் தலைவராக அலங்கரித்தவர்தானே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தவர்தானே!

படிப்பும் பதவியும் வளர்ந்த அளவுக்குப் பார்ப்பனர்களின் மனப்பாங்கு பக்குவப்பட்ட ஒன்றுதானா? வளர்ச்சியை நோக்கிப் பயணம் செய்வதுதானா?

ஒரு தகவல்: நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் தேர்தல், காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் தொடக்கத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலை; பா.ஜ.க., சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்ற அறிவிப்பும் வெளிவந்தது. இந்த நிலையில் முரளி மனோகர் ஜோஷி அளித்த பேட்டி ஒன்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் வெளிவந்தும் உள்ளது (11.7.1991)

Nobody can take the BJP as a pariah and then expect it to support you’’

“பாரதீய ஜனதாவை தங்கள் வசதிக்கேற்ப யாரும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. பா.ஜ.க.வை நீங்கள் ஒரு பறையனைப் போல் நடத்தக் கூடாது. இதைச் செய்துவிட்டு நாங்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது’’ என்று ‘மெத்தப் படித்த மேதாவி’ ஒருவர் பேசுகிறார் என்றால் அவர் படித்த படிப்பும்கூட அவரின் பார்ப்பனத் திமிருக்கு முன் மண்டியிடுகிறது என்றுதானே பொருள்!

ஜோஷியின் இந்தச் சொல் பிரயோகத்தை எதிர்த்து பல அமைப்புகள் குடியரசு தலைவருக்குத் தந்திகளைக்கூட அனுப்பின என்பதும் மறக்காமல் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்தப் பார்ப்பன ஜனதா (பா.ஜ.க.,) கட்சியில் பாதந்தாங்கிக் கிடக்கும் பஞ்சமர்களே விழிமின்!

அடியாள்களாக சேவகம் செய்யும் பிற்படுத்தப்பட்டோரே விழிமின்! விழிமின்!!


-------------------மின்சாரம் அவர்கள் 27-12-2009 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

சொர்க்க வாசல் நுழைந்த பக்தர்களே சொர்க்கத்துக்குப் போகவில்லையா?


‘சொர்க்கவாசல்’

நாடு முழுவதும் 108 வைணவக் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் அனைத்திலும் இன்று இரவு கண் விழித்து ஏகாதசி விரதம் இருந்து விடியற்காலை சொர்க்கவாசல் திறப்பு.

ஸ்ரீரங்கநாதன் ஸ்தோத்திரத்தை 1008 முறை சொல்பவர்களுக்கு இப்பிறவியில் எல்லா க்ஷேமங்களும் பேஷாகக் கிடைக்குமாம்.

மத்திய, மாநில அரசுகள் எதற்காக தேவையில்லாமல் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி திட்டங்களை வகுக்கின்றன என்று தெரியவில்லை. அய்ந்தாண்டு திட்டங்கள் எல்லாம் எதற்காக?

பேசாமல் இந்தியாவின் குடியரசுத் தலைவரும், பிரதமரும் இன்று இரவு ஸ்ரீரங்கநாதர் ஸ்தோத்திரத்தை 1008 முறை சொன்னால் தீர்ந்தது கதை. 110 கோடி மக்களுக்காக ஒரு இரவு கண் விழித்து இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லவேண்டியதுதானே!

பக்தியின் பெயரால் மக்களை எந்த அளவுக்கு முடமாக்கி வைத்திருந்தால் இந்த 2009 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற தெருப் புழுதிக் கூத்துகளை அரங்கேற்றுவார்கள்?

இந்த ஸ்ரீரங்கநாதன் ஸ்தோத்திரத்தில் ஒரே ஒரு பாடல்; ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கைதானே பதம்?

‘தேவேந்திரனின் அமர லோகத்தில் வாசம் செய்து தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம் ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியம் எனக்குக் கொடுப்பீராக!’ எப்படிப்பட்ட சுலோகம்!

அரிது அரிது மானிடராகப் பிறப்பது அரிது என்ற கருத்தையும் படித்திருக்கிறோம். இப்படி நாயாகப் பிறக்கவேண்டும் என்று கூறுவதையும் படிக்கும்பொழுது ஆறறிவுள்ள ஒரு மனிதனின் புத்தியை எப்படியெல்லாம் நாசமாக்கி விட்டனர்! நாயாகப் பிறக்கவேண்டும் என்று ஒரு வேண்டுகோளை ஒரு கல் சிலைக்கு முன் வைக்கும் அளவுக்கு அறிவின் தரத்தை பக்தி என்னும் ஆபாசக் குழியில் தள்ளி மிதித்து அசிங்கப்படுத்தி விட்டனரே!

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற தந்தை பெரியாரின் அறிவு மொழி, ஆகா, எவ்வளவு வானளாவியது! வையத்து அறிவுக் கண்ணின் ஊற்றைத் திறக்கக் கூடியது!

கடைசியில் ஒன்று:

இன்று இரவு கண் விழித்து ஸ்ரீரங்கநாதர் ஸ்தோத்திரங்களை 1008 முறை ஓதி, விடியற்காலையில் கோயிலில் டிக்கெட்டும் வாங்கிக் கொண்டு சொர்க்க வாசல் நுழைந்த பக்தர்களே, மீண்டும் வீட்டுக்குத் திரும்புகிறீர்களே, சொர்க்கத்துக்குப் போகவில்லையா? (சாகவில்லையா) இது என்ன நியாயம்? வடலூர் இராமலிங்கனார் சொன்னதுபோல இது என்ன பிள்ளை விளையாட்டு!

யாரை ஏமாற்றுகிறீர்கள்? அல்லது உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளவில்லையா!

---------------- மயிலாடன் அவர்கள் 28-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

25.12.09

ஒரு மனிதன் மதத்தை, கடவுளை ஏன் மறுக்கிறான்?


கடவுள், மதமும், மக்களும்

மதம் என்பது ஒரு கட்டுப்பாடு. மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்த கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தவிர மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப்போவதில்லை. ஒரு மதவாதிக்கு மதம் காரணத்தால் ஏற்பட்ட கடவுள், மோட்சம், நரகம், வேதம், மதத்தர்மம், மதத்தலைவன், என்பனவெல்லாம் அந்த அதாவது அவன் சார்ந்திருக்கிற மதக் கட்டுப்பாட்டினால் ஏற்பட்டவையே ஒழிய, உண்மைப் பொருளோ, உண்மைத் தத்துவமோ அல்ல என்பதோடு, அவை எல்லாம் செயற்கையே ஒழிய இயற்கையுமல்ல.


ஒரு மதவாதிக்கு அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், அவனுக்குக் கடவுள் அது எப்படிப்பட்ட கடவுளானாலும், அது செயற்கைக் கடவுளே ஆகும். இதில் இயற்கை, செயற்கை என்பதற்கு என்ன விளக்கம் என்றால் இயற்கை என்பது உணவு உட்கொள்வது, மலஜலங் கழிப்பது பார்ப்பது கேட்பது, மூச்சுவிட்டு இழுப்பது, பேசுவது, வலி காண்பது, பசி தோன்றுவது, தூங்குவது, விழித்திருப்பது, காம உணர்ச்சி, துக்கம், சுகம், சூரியன், சந்திரன், வெளிச்சம், இருட்டு, பஞ்சப்பூதங்கள் முதலியவை இயற்கையாகும். இவை எல்லா மக்களுக்கும் பொது என்பதோடு யாராலும் மறுக்க முடியாதவை. மற்றபடி இத்தன்மைகளல்லாத கடவுள், மதம், மோட்சம், நரகம், சன்மானம், தண்டனை, செல்வம், சிறுமை, பெருமை, பக்தி, பிராத்தனை, வேதம் முதலியவை அடியோடு கற்பனையேயாகும்.

இந்த இயற்கை, செயற்கைகள் அறியப்படுவதற்கு ஆதாரம் முறையே பிரத்தியட்ச அறிவும் - பிரத்தியட்ச அறிவுக்குப்புறம்பான நம்பிக்கையுமேயாகும்.
ஆகவே, உலகில் உள்ள எப்படிப்பட்ட மதக்காரனும், கடவுள் உணர்ச்சிக்காரனும், நம்பிக்கைவாதி ஆவானே ஒழிய, அறிவுவாதி ஆகவேமாட்டான். உதாரணமாக "கிறிஸ்து" என்றால் "பைபிள்" என்றால் கிறிஸ்துவை ஏற்று அவரில் நம்பிக்கை வைத்து பைபிளை ஒப்புக் கொண்டவருக்குத் தான் "கிறிஸ்துவே" தவிர, "பைபிளே" தவிர அவை, நம்பிக்கையில்லாதவருக்கு உண்மையாய் தத்துவமாய் இருக்க முடியாது. அதுபோலவே, "முகமது நபி" என்றால், "குரான்" என்றால் முகமது நபியை ஏற்று, அவரின் மீது நம்பிக்கை வைத்து குரானை ஒப்புக் கொண்டவருக்குத் தான் நபியே தவிர, குரானே தவிர, நம்பிக்கை இல்லாதவருக்கு எப்படி நபியாகவும், குரானாகவும், இருக்க முடியும்? அப்படியே தான் மற்ற மதங்களும், வேத சாஸ்திரங்கள் முதலியவையுமாகும். ஆகவே, நம்பாதவனுக்கு, ஏற்காதவனுக்கு எது எது இல்லையோ அவை எல்லாம் பெரிதும் செயற்கையே ஆகும். கடவுளும், கடவுள் நம்பிக்கையும் அதில்பட்டதுதான்.

ஒரு மனிதனை மற்றொரு மனிதன் "நீ கிறிஸ்துவை நம்பித் தான் ஆக வேண்டும்? பைபிளை நம்பித்தான் ஆக வேண்டும்; இல்லாவிட்டால் நரகத்தில் அழுந்துவாய்" என்று சொல்பவனும் "நீ நபியை நம்பித்தான் ஆக வேண்டும்; இல்லாவிட்டால் எரி நரகில் அழுந்துவாய்" என்று சொல்பவனும் எவ்வளவு அறிவற்றவனாவானோ அவ்வளவு அறிவற்றவனே ஆவான். ஒரு மனிதனைப் பார்த்து, "நீ கடவுளை நம்பித்தானாக வேண்டும்; இல்லாவிட்டால் நீ நரகத்தில் அழுத்தப்படுவாய்" என்று சொல்கிறவனும் என்பதை மதவாதிகளும் உணர வேண்டும். கடவுளும், மதமும் அறிவற்றவனைத்தான் ஆட்டும் என்பதோடு வெறியனாகவும், பைத்தியக்காரனாகவும் கூட ஆக்கிவிடும்.

ஆனால், எப்படிப்பட்ட தன்மையுள்ள கடவுளும், மதமும் பகுத்தறிவுவாதி இருக்கிற பக்கம் எட்டிக்கூடப் பார்க்க முடியாது.



எப்போதுமே நான் கடவுளையும், மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே, "வெங்காயம்" என்று தான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது. வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது உரிக்க உரிக்கத் தோலாகவே – சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் விதை இல்லாத தன்மையாய் முடிவது என்பது பொருள். ஆகவே விதை - வித்து இல்லாத காரணத்தால் தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று. அது போன்றவைதான் கடவுளும், மதமுமாகும். இச்சொற்களுக்கு இயற்கைப் பொருளே இல்லை. கற்பிக்கிறவர்கள் சொல்லும் பொருள்தான்.

ஆனால், சூரியன், சந்திரன் முதவானவைகளை அப்படிச் சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால் அவை உண்மையானவை. எவ்வளவு மடையனும், எப்படிப்பட்ட பகுத்தறிவாதியும் அவைகளை மறுக்க மாட்டான் என்பதோடு, "எனக்கு அவை இல்லை", "என் கண்ணுக்கு – என் புத்திக்கு அவை தென்படவில்லை", "நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்" என்று சொல்லவே மாட்டான். இதுதான் இயற்கைக்கும் - உண்மை பகைக்கும் ஏற்ற உதாரணமாகும்.

மற்றும், கடவுள், மதவாதியாக இருப்பவர்கள் "ஒரு மனிதன் மதத்தை ஏன் மறுக்கிறான்?" என்பதைப்பற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும். அது போலவே ஒரு மனிதன் கடவுளை ஏன் மறுக்கிறான் என்பதையும் (கடவுள்வாதி) சிந்தித்துப் பார்க்க வேண்டும். மற்றும் கடவுள், மதவாதிகள், கடவுள் - மத மறுப்பாளர்களை விட எந்த விதத்தில் அறிவாளிகள்? எந்தவிதத்தில் உயர்ந்த இந்திரியங்களை (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவைகளை) உடையவர்களாக இருக்கிறார்கள்? என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.


மனிதனுக்கு மிக அருமையான அறிவும், பகுத்தறியும் சக்தியும், ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையும், அனுபவத்திற்கு ஏற்ப நடக்கும் உரிமையும் இருக்கும் போது கடவுள் எதற்காக வேண்டும்? என்பதையும் மனிதன் நல்ல வண்ணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


கடவுள் என்ற பொருளுக்கு மனிதன் கற்பித்து இருக்கும் குணம் என்னவென்றால், கடவுள் யாவற்றையும் படைத்து (படைத்ததோடல்லாமல்) யாவற்றையும் நடத்துகிறவன் என்பதாம்.


அதாவது நன்றோ செய்வேன், தீதோ செய்வேன், நானா அதற்கு நாயகன், நீ நடத்துகிறபடி நடத்தப்படுகிறவன்தானே? என்பது தான் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுளைப்பற்றி மக்களுக்குச் சொல்லும் இலட்சணம்.

இந்தக் கருத்து ஒரு கடுகளவாவது மனிதனுக்குப் பயன்படுகிறதா? மற்ற மனிதர்களுக்குத்தான் சொல்லப்படுகிறதே ஒழிய, எவனுக்காவது தன் விஷயத்தில் நம்பவோ நம்பி நடக்கவோ வாழ்க்கையில் கொள்ளவோ பயன்படுகிறதா?

மக்கள் மடையர்களாக இருந்த வரையில் அதாவது சிந்திக்கும் தன்மை இல்லாதவர்களாக இருந்தவரையில் - இருக்கிறவரையில் கடவுளுக்கு சர்வ சக்தி, சர்வ செயல் "இருந்திருக்கலாம்". இன்று அறிவாளிக்கு – அறிவுவாதிக்கு அந்த எண்ணம் சரி என்று தோன்ற முடியுமோ?

தவிரவும் கடவுளும், மதமும் மனிதனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்பிக்கப்பட்டவை அல்லது தோன்றியவை என்பதை யாரும் மறுக்க முடியாது. அக்காலக் கற்பனையானது காலக்கிரமத்தில் மாறுதலடைந்து கொண்டே வந்திருக்கிறது என்பதையும் யாராவது மறுக்க முடிகிறதா?

இந்த நிலையில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கிறிஸ்துவ மதமும், கிறிஸ்துவக் கடவுளும், 1500 ஆண்டுகளுக்கு முந்தைய நபி மதமும், முகமது நபி கடவுளும் மாத்திரம் சீர்திருந்தி மாற்றம் அடைந்துள்ளபோது, பலப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆரியக் கடவுள்களும், ஆரிய மதமும் மாற்றமடையக் கூடாது என்றால் அது எப்படிப் பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்க முடியும்?

இவைகள் எல்லாம் மனிதர்களால் அமைக்கப்பட்டனவே அன்றி மனிதப் பிறவியில் மனிதத் தன்மைக்கு மேற்பட்ட சக்தி கொண்டு ஒரு மனித உருவால் அமைக்கப்பட்டது என்று சொல்லப்படுமானால், அது பெரும் புரட்டாகத்தான் இருக்க முடியுமே ஒழிய, அப்படிச் சொல்வதில் சிறிதாவது உண்மையோ, அறிவுடைமையோ இருக்காது என்பதுடன், அதில் யோக்கியப் பொறுப்பும் இருக்க முடியாது என்று வலியுறுத்திக் கூறுவேன். ஏனென்றால், இன்றைய மக்கள் தன்மை - இன்றைய விஞ்ஞான அறிவு சக்தித்தன்மை 10000, 5000, 2000, 1500ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட எத்தனையோ மடங்கு அதிகமானது.


அக்காலக் கடவுளும், மதமும் இவைகளைக் கற்பித்தவர்களும், அக்கால மனிதத் தன்மைக்கு மேற்பட்டவர்களும் "ஏழைகளுக்கு உதவி செய்தால் உனக்கு "மோட்சம்", "சன்மானம்" கிடைக்கும் என்று சொன்னார்கள். அவர்களால் சொல்லப்பட்ட வேத சாஸ்திரங்களும் அப்படியே சொல்கின்றன. இன்றைய வெகு சாதாரண விஞ்ஞான அறிவு, ஏழைகள் ஏன் இருக்க வேண்டும்? அவர்கள் பிறப்பிக்கப்பட என்ன அவசியம்? அவர்கள் யாரால் எதனால் பிறப்பிக்கப்பட்டாலும் சரி, இன்று அவர்கள் கண்டிப்பாக மனித உலகத்தில் இருக்கக்கூடாது" என்று கூறுகிறது. இதற்கு யாரால் தான், எந்தத் தெய்வீகப் புருஷனால்தானாகட்டுமே என்ன பதில் சொல்ல முடியும்?

ஆகவே, கடவுள், மதம், தெய்வீகப் புருஷர்கள் என்பவற்றை எப்படிப்பட்டவர்களானாலும் பாதுகாக்க வேண்டுமானால், அவர்களைப் பொறுத்தவரை அடக்கமாக வைத்திருத்தால் காக்கப்பட்வர்கள் ஆவார்கள். அப்படிக்கினறி, தான் பெரிய கடவுள் பக்தன் மத பக்தன் என்கின்ற கர்வங்கொண்டு அவற்றைக் காப்பாற்ற வெளிக்கிளம்புவானேயானால், அவன் கண்டிப்பாக அவர்களை ஒழிக்க அவற்றின் "பெருமை"யை அழிக்கப் புறப்பட்டவனே ஆவான்.

கடவுள், மதம், தெய்வீகப் புருஷர்கள் என்பவற்றில் கடவுளைவிட மோசமானது, மக்களை அலைக்கழித்து வேற்றுமை உணர்ச்சியை உண்டாக்குவது மதமாகும். மதத்தைவிட மக்களுக்கு மடமையையும், அகம்பாவத்தையும் உண்டாக்குவது தெய்வீக சக்தி உள்ள மனிதத் தன்மையைவிட மேற்பட்ட சக்தி உள்ள மனிதன் மனிதப் பிறவி என்பதாகும்.

எனவே, பெரிய ஆட்கள் அதாவது 25 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த கடவுள், மத உணர்ச்சி இருந்தாலும், 24 அல்லது 30 வயதிற்கு உட்பட்ட மக்களிடம் கண்டிப்பாக இந்த உணர்ச்சி இருக்கவே கூடாது என்பது என் ஆசை.

அப்படி இந்தக் கடவுள், மத உணர்ச்சி இல்லாமல் இருந்தால் தான் மனிதப் பண்பு, மக்கள் யாவரையும் ஒன்றுபோல கருதும் உணர்ச்சி இல்லாமல் தான் மனிதப் பண்பு மக்கள் யாவரையும் ஒன்று போல கருதும் உணர்ச்சி, நேர்மை நல்லதைப் போற்றவும், தீயதைக் கண்டிக்கவுமான துணிவு, யாவையும் ஒன்று போல் கருதிச் செய்யும் பொதுத் தொண்டு உணர்ச்சியும் ஏற்பட முடியும்.


இன்று இவை சுத்த சத்தமாய் இல்லாததற்குக் காரணம் இந்தக் கடவுள், மதம், மனிதத் தன்மைக்கு மேற்பட்ட தன்மையுள்ள மனிதப் பிறப்பு என்கின்ற உணர்ச்சிதான் என்பது எனது தாழ்மையான முடிந்த முடிவு.



------------21-09-1973 "விடுதலை" நாளிதழில் தந்தைபெரியார் எழுதிய தலையங்கம்.