Search This Blog

18.12.09

குலேசன் தினத்தைக் கோயிலில் கொண்டாடுவதன் தாத்பரியம் என்ன?


குசேலன்

குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் குசேலர் தினம் கொண்டாடப்பட்டதாம். நைவேத்தியத்துக்காக மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்யப்பட்டதாம்.

பிரசாதத்தைப் பெற சிறப்பு ஏற்பாடுகள் உண்டாம். நீண்ட வரிசையில் நின்று இதற்கான சீட்டுகளைப் பணம் கொடுத்துப் பக்தர்கள் பெற்றார்களாம்.

எதற்காக இந்தக் குசேலர் விழாவாம்? வறுமையில் வாழ்ந்த குசேலர். தனது வறுமையைப் போக்க பால்ய நண்பனான கிருஷ்ணனைத் தரிசிக்க துவாரகை சென்றானாம். கிருஷ்ணன் தன் நண்பன் குலேசனின் வறுமையைத் தீர்க்க ஆவன செய்தானாம்!

இந்தக் குசேலர் கதையை நினைத்தால் ஒரு பக்கம் சினமும், இன்னொரு பக்கம் சிரிப்பும்தான் வருகிறது. இதுகுறித்து தந்தை பெரியார் குறிப்பிடுவது மிகவும் சிந்திக்கத் தக்கதாகும். இதோ பெரியார் பேசுகிறார்:

‘‘குசேலர் கதையில் குசேலருக்கு 27 பிள்ளைகள் என்றும், 27 பிள்ளைகள் பெற்று குசேலர் தரித்திரத்தில் துன்பப்பட்டு, 27 பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கிருஷ்ணன் (கடவுள்) இடத்தில் சென்று பிச்சை கேட்டதாகவும், கடவுள் ஏராளமாகச் செல்வம் கொடுத்ததாகவும் கதை சித்தரித்த ஆசிரியர் சிறிதுகூடப் பகுத்தறிவைப் பயன்படுத்தவில்லை. ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால், அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தை பெற்றிருந்தால், இருபது வயதும், அதற்கு மேற்பட்ட வயதும் நிறைந்த குழந்தைகள் எட்டாக இருக்கவேண்டும். இந்தக் குழந்தைகளும் சோம்பேறித் தடியன்கள்போல் ஒரு வேலைக்கும் இலாயக்கில்லாத மாமிசப் பிண்டங்களாகவா இருந்திருக்கக் கூடும்? இப்படி 20 வயதுக்கு மேற்பட்ட மக்களை வீட்டில் வைத்துக்கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்கவேண்டாமா? அப்படியிருந்தால் அந்த நாடு எப்படி உருப்படியாகி இருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியன்களுக்கு கடவுள் செல்வம் கொடுக்கலாமா?

இப்படி ஒரு கூட்டம் நம்மிடம் வந்து பிச்சை கேட்டால், நாம் என்ன சொல்லுவோம் என்பதைச் சிந்தியாது, இவ்வளவு முட்டாள்தனத்தை கடவுள் மீது ஏற்றிய ஆசிரியர் எவ்வளவு அறிவற்றவராக இருக்கவேண்டும்?’’ என்று வினாக்களை அடுக்கிக்கொண்டே போகிறார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

குலேசன் தினத்தைக் கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடுவதன் தாத்பரியம் என்ன?

சோம்பேறியாகக் கிடந்தாலும் கடவுளிடத்தில் சென்றால் சோறு கிடைக்கும், செல்வம் கிடைக்கும் என்றுதானே சொல்ல வருகிறார்கள்? அதாவது உண்மையா? கடவுளிடம் சென்றால் கிருஷ்ணன், குலேசனுக்குக் கொடுத்ததுபோல், இப்பொழுதும் கொடுப்பானா? அப்படி ஒரு நிலை ஏற்படின் நாட்டில் அரசுகள் எதற்கு? திட்டங்கள் எதற்கு? இந்தப் புராணங்கள் புகட்டப்படும் வரை நாடு முன்னேறுமா? சிந்திப்பீர்!

---------------------- மயிலாடன் அவர்கள் 18-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: