Search This Blog

9.12.09

கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு...



கடவுள் பக்தர்களே, நீங்கள் கடவுள் மறுப்பாளர்களான சுயமரியாதை, நாத்திக, பகுத்தறிவாளர்களை வெறுக்கிறீர்களே நியாயந்தானா?

எதையும் காரண காரியத்துடன் சிந்தித்து நம்ப வேண்டியவைகளை நம்புவதும், நம்ப வேண்டாதவைகளை மூடநம்பிக்கைகள் என்று மூளையில் சேர்ந்துள்ள குப்பைகளை அங்கேயே வைத்துக் கொண்டு அவதியுறாதீர்கள்; அறிவு விடுதலை பெற்று, முழு சுதந்திர அறிவுள்ள, தன்னம்பிக்கையாளர்களாக வாழுங்கள் என்று அவர்கள் கூறுவது தவறா? குற்றமா?

1. பானைக்குள்ளே யானை ஒளிந்துள்ளது என்று கூறினால் சிரிக்கமாட்டீர்களா?

இருப்பது உண்மை; அஞ்ஞானிகள் கண்ணுக்கு அது தெரியாது, கண்ணால் பார்க்க முடியாது, உடம்பால் உணர முடியாது, உள்ளத்தாலும் அறிய முடியாது -‘மனோ’, வாக்கு, காயங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று சொல்லி நம்ப வைப்பதும், பானைக்குள் யானை இருக்-கிறது என்று கூறுவதும் ஒன்றுதானே? பானைக்குள் பூனை இருக்கிறது என்றால் நம்பலாம்; ஆனால் யானை இருக்கிறது என்றால் அது இல்லாத ஒன்றுதானே?

2. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் சந்நிதியில் பூஜை செய்த ஒரு காமாந்தகாரனின் காமலீலைகள் அதுவும் கருவறையில் ஒரு நாள் அல்ல, பல நாள்; ஒரு பெண்ணோடு மட்டுமல்ல, பல பெண்களுடன் சல்லாபித்து, உல்லாசமாக இருந்ததோடு, அவற்றை செல்போன் கேமிராமூலம் படம் பிடித்தும் உள்ள அந்த அர்ச்சகப் பார்ப்பானின் செயல்கண்டு, ஆத்திரப்படும் பக்தைகளே, பக்தர்களே, உங்கள் கோபம் அந்த காமாந்தகாரன்மீது பாய்வதற்குமுன் இதுபற்றிக் கவலையே இல்லாத சாமியும் சாட்சியாக மாறிவிட்டதன்மூலம் என்ன புரிய வேண்டும் உங்களுக்கு? கோயில் உள்ளே, கருவறை உள்ளே இருப்பது எல்லாம்வல்ல கடவுள் அல்ல; அது ‘வெறும் கல்’தான் என்று புரிந்து கொண்டிருக்க வேண்டுமே!

அர்ச்சகப் பார்ப்பனன் மீது பாய்வதை (விளக்குமாறு, பழஞ்செருப்பு) விட அங்குள்ள கடவுள் மீது அல்லவா பாய வேண்டும். ‘‘கடவுள் இல்லை; இல்லவே இல்லை’’ என்று கூறிடும் எங்களுடன் அல்லவா வந்து சேரவேண்டும்?

3. அதே காஞ்சிபுரத்தில், காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சங்கரராமன் ரத்தம் வழிய வழியப் படுகொலை செய்யப்பட்டாரே, அதனைத் தூண்டியவர்கள் என்று குற்றம்சாற்றி காஞ்சி மடத்தின் தலைவர்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் என்பவர்கள் மீது கொலை வழக்கு நடைபெறுகிறதே, அதை காஞ்சி வரதராஜபெருமாள் வேடிக்கைதானே பார்த்தார்? தடுத்தாரா? அல்லது கொலையாளிகளின் கொடூர செயலைக் கண்டு அவர்களை ‘கண்ணவித்து’ விட்டாரா? எதுவும் இல்லையே! ஏன்? அது ‘வெறும் கல்’ என்பதுதானே!

4. திருட்டு நடந்துவிட்டாலே, அலட்சியமாக இருந்த காவலாளியை நீக்குகிறீர்களே, அதுபோல வேடிக்கை பார்த்த சாமிகளை மீண்டும் வழிபட அந்தக் கோயிலுக்குச் செல்லலாமா? யோசியுங்கள்.

‘கோயில்கள் விபச்சார விடுதிகள்’ என்றார் ‘தேசபிதா’ அண்ணல் காந்தியார். அதற்கு காஞ்சிபுரம் சம்பவம்போல் வேறு பொருத்தமானது உண்டா?

இதுபோலவே அய்யப்பன் கோயில் அர்ச்சகர்கள் கதையும். அதைப் பற்றியே கவலைப்படாமல், மீண்டும் ‘‘கன்னி சாமிகளாக’’, ‘‘குருசாமிகளாக’’, ‘‘பெரிய சாமிகளாக’’ அங்கு சென்று பொருளையும், அறிவையும் (ஏன் சிலர் உயிரையும் பறிகொடுக்கின்றனர்) இழந்து திரும்புகிறீர்களே அதைவிட வேறு கொடுமை பரிதாபத்திற்குரிய அசிங்கம் வேறு உண்டா?

5. எல்லாக் கோயில்களின் நுழைவு வாயில்களில் ‘‘மெட்டல் டிடெக்டர்கள்’’ வைத்து, பரிசோதித்த பின்பே, பக்தர்களாகிய உங்களை கோயிலுக்குள் காவல்துறையின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு அனுப்புகிறார்களே, அதிலிருந்து தெரிய வேண்டிய ஓர் உண்மை மனிதனை கடவுள் பாதுகாக்கவில்லை; கடவுளை, கடவுளச்சிகளை மனிதர்கள்தான், அதுவும் 47 துப்பாக்கி முனையில், தீவிரவாதிகளிடமிருந்து கடவுளையும் காவல்துறைதானே பாதுகாக்கிறது என்பதுதானே!

6. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இனிமேல் தேங்காய் உடைக்க அனுமதி இல்லை. ஏனெனில், தேங்காய்களுக்குள் ‘குண்டு’ வைத்திருக்க சாத்தியக் கூறு உண்டு என்று கூறுகிறார்களே; அப்படியானால் கடவுளுக்கு ‘‘சர்வசக்தி’’ என்பது இல்லாத ஒன்று என்பதுதானே! தனக்கு வரும் தோங்காய்க்குள் மறைந்திருக்கும் ‘‘குண்டினைக்’’ கண்டுபிடிக்க கடவுளால், கடவுளச்சிகளால் முடியாதா? முடியாது என்றால் அந்தக் கடவுளை நம்பி, கைப்பொருளை இழப்பதனால் யாருக்-கென்ன லாபம் என்று யோசித்தீர்களா?

7. திருப்பதி கோயில் அருகில், ‘‘திருமலை மேல் செல்போன் அனுமதி இல்லை’’ என்பது தீவிரவாத பயத்தால்தானே? அங்கிருப்பது ‘‘நட்டகல்’’ என்று கூறினாரே திருமூலர்? அது சரிதானே?

பக்தி வந்தால் புத்தி போகும்;

புத்தி வந்தால் பக்தி போகும்

என்ற தந்தை பெரியார் அறிவுரை எவ்வளவு உண்மை என்பதை உணருங்கள்.

‘‘மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும்’’ என்பது போல் சிந்திக்காமல், வழக்கம் என்ற பெயரால் கோயிலுக்குச் செல்லலாமா?

8. கோயில்கள் ஆதியில் இல்லை; பாதியில் வந்தது; அது அரசனுக்கு வருவாய் தேட என்று கவுடில்யரின் (சாணக்கியர்) அர்த்த சாஸ்திரம் கூறுகிறது. திருக்குறளில் கோயில் இல்லை. தமிழர்களே, வள்ளுவத்தைப் பாராட்டிவிட்டு கோயிலுக்குச் செல்லலாமா?

குறிப்பு: இதனை எவரும் அச்சிட்டு துண்டறிக்கையாக வழங்கலாம்.


-------------------நன்றி:-"விடுதலை" 9-11-2009 - மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதிய கட்டுரை

6 comments:

வால்பையன் said...

நல்ல கட்டுரை!

நண்பர்களுக்கு இதையும் படிக்குமாறு பரிந்துரைக்கிறேன்!

Thamizhan said...

படித்துப் பட்டம் பெற்றவர்கள்,
பல துறைகளிலே கடுமையாக உழைத்து
முன்னேறியவர்கள்,
இந்தக் கடவுள், கடவுளின் தரகர்களான
காஞ்சி சுப்புணி,காஞ்சி தேவனாதன்,
புட்டபர்த்தி சாயிபாபா என்று பல்ரிடம் தங்கள் மூளையை அடகு வைத்து விடுகிறார்கள்.
இதை அவரவர் தான் சிந்தித்துச் செயல் பட வேண்டும்.

பெசொவி said...

உங்கள் கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை, இருந்தாலும் என்னை மீறிய சக்தி ஒன்று உலகத்தில் இருக்கிறது என்று நான் திடமாக நம்புகிறேன்.
எனவே, அந்த சக்திக்கு கடவுள் என்று பெயரிட்டு நான் வழிபடுவதை விடுவதாக இல்லை. அதற்காக நான் மூட நம்பிக்கை உள்ளவனும் இல்லை. (ராகுகாலம், எமகண்டம் முதலியவற்றை நம்புவதில்லை.) என் பின்னூட்டம் தங்கள் மனத்தை புண்படுத்தும் என்றால் அதை நீக்கிவிடவும். நன்றி!

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வால்பையன்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Thamizhan அய்யா

தமிழ் ஓவியா said...

//என் பின்னூட்டம் தங்கள் மனத்தை புண்படுத்தும் என்றால் அதை நீக்கிவிடவும். நன்றி!//

உங்களின் பின்னூட்டம் நாகரிகமாக உள்ளது. நீக்கவேண்டிய அவசியமில்லை