Search This Blog

29.12.09

சொர்க்க வாசல் நுழைந்த பக்தர்களே சொர்க்கத்துக்குப் போகவில்லையா?


‘சொர்க்கவாசல்’

நாடு முழுவதும் 108 வைணவக் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் அனைத்திலும் இன்று இரவு கண் விழித்து ஏகாதசி விரதம் இருந்து விடியற்காலை சொர்க்கவாசல் திறப்பு.

ஸ்ரீரங்கநாதன் ஸ்தோத்திரத்தை 1008 முறை சொல்பவர்களுக்கு இப்பிறவியில் எல்லா க்ஷேமங்களும் பேஷாகக் கிடைக்குமாம்.

மத்திய, மாநில அரசுகள் எதற்காக தேவையில்லாமல் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி திட்டங்களை வகுக்கின்றன என்று தெரியவில்லை. அய்ந்தாண்டு திட்டங்கள் எல்லாம் எதற்காக?

பேசாமல் இந்தியாவின் குடியரசுத் தலைவரும், பிரதமரும் இன்று இரவு ஸ்ரீரங்கநாதர் ஸ்தோத்திரத்தை 1008 முறை சொன்னால் தீர்ந்தது கதை. 110 கோடி மக்களுக்காக ஒரு இரவு கண் விழித்து இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லவேண்டியதுதானே!

பக்தியின் பெயரால் மக்களை எந்த அளவுக்கு முடமாக்கி வைத்திருந்தால் இந்த 2009 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற தெருப் புழுதிக் கூத்துகளை அரங்கேற்றுவார்கள்?

இந்த ஸ்ரீரங்கநாதன் ஸ்தோத்திரத்தில் ஒரே ஒரு பாடல்; ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கைதானே பதம்?

‘தேவேந்திரனின் அமர லோகத்தில் வாசம் செய்து தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம் ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியம் எனக்குக் கொடுப்பீராக!’ எப்படிப்பட்ட சுலோகம்!

அரிது அரிது மானிடராகப் பிறப்பது அரிது என்ற கருத்தையும் படித்திருக்கிறோம். இப்படி நாயாகப் பிறக்கவேண்டும் என்று கூறுவதையும் படிக்கும்பொழுது ஆறறிவுள்ள ஒரு மனிதனின் புத்தியை எப்படியெல்லாம் நாசமாக்கி விட்டனர்! நாயாகப் பிறக்கவேண்டும் என்று ஒரு வேண்டுகோளை ஒரு கல் சிலைக்கு முன் வைக்கும் அளவுக்கு அறிவின் தரத்தை பக்தி என்னும் ஆபாசக் குழியில் தள்ளி மிதித்து அசிங்கப்படுத்தி விட்டனரே!

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற தந்தை பெரியாரின் அறிவு மொழி, ஆகா, எவ்வளவு வானளாவியது! வையத்து அறிவுக் கண்ணின் ஊற்றைத் திறக்கக் கூடியது!

கடைசியில் ஒன்று:

இன்று இரவு கண் விழித்து ஸ்ரீரங்கநாதர் ஸ்தோத்திரங்களை 1008 முறை ஓதி, விடியற்காலையில் கோயிலில் டிக்கெட்டும் வாங்கிக் கொண்டு சொர்க்க வாசல் நுழைந்த பக்தர்களே, மீண்டும் வீட்டுக்குத் திரும்புகிறீர்களே, சொர்க்கத்துக்குப் போகவில்லையா? (சாகவில்லையா) இது என்ன நியாயம்? வடலூர் இராமலிங்கனார் சொன்னதுபோல இது என்ன பிள்ளை விளையாட்டு!

யாரை ஏமாற்றுகிறீர்கள்? அல்லது உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளவில்லையா!

---------------- மயிலாடன் அவர்கள் 28-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

Thamizhan said...

சொர்க்க வாசல் திரும்பி வர முடியாத ஒரு வழிப் பாதையாக இருந்தால் எத்தனை பேர் உள்ளே நுழைவார்கள் ?

படித்து ,பட்டங்கள் வாங்கியவர்கள் தங்கள் பட்டங்களையாவது கிழித்துப் போட்டு விட்டுச் சொர்க்க வாசல் நுழையட்டும்.