Search This Blog

30.11.12

தந்தை பெரியாரும் - கலைவாணர் என்,எஸ்.கே அவர்களும்

கலைவாணர் பிறந்த நாள் - நவம்பர் 30 

தந்தை பெரியாரும் தமிழ்க் கலைவாணரும்

தந்தை பெரியார் பார்ப்பனரல்லாத மக்கள், தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் தன்மானம் பெற்று உரிமை பெற வேண்டும் என்று விரும்பினார். தகுதி இருந்து, திறமை இருந்து, ஆற்றல் இருந்து தன்மானத்தை இழக்காதவர்களை எல்லாம் தூக்கி நிறுத்தியவர் தந்தை பெரியார், கலைத் துறையிலும்  பெரியாருடைய கண் ணோட்டம் சுயமரியாதைக் கண் ணோட்டமாக இருந்தது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களுக்குத் தந்தை பெரியார் ஆதரவு காட்டினார்.
கலைவாணர் திரைப்படம், நாடகம் வாயிலாகச் சுயமரியாதைக் கருத்து களை நாட்டில் உலவ விட்ட நாகரிகக் கோமாளியாக விளங்கினார். அவரே அதனை நல்லதம்பி திரைப்படத்தில் நாட்டுக்குச் சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானய்யா, ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி - நல்ல அழகான ஜதை யோடு வந்தானய்யா! மோட்டாரை விட்டிறங்கி வந்தானய்யா! முன்குடுமி சீவிக்கிட்டு வந்தானய்யா!  ராட்டினம் போல் சுழன்று வந்தானய்யா! - நம்ம ராஜ்ஜியத்தைச் சுற்றிப் பார்த்து வந்தானய்யா! என்று பாடினார்.

30.8.1957-இல் நம் நாடு இதழில் தி.மு.க.வின் அதிகார பூர்வ ஏடாக விளங்கிய இதழில் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கோட்பாட்டின் வழி நின்றவர்தாம் என்பதை அவர் மறைந்த போது வெளியிட்ட இரங்கல் செய்தி யில் பதிவு செய்திருப்பது கலைவாணர் பகுத்தறிவு நெறி, பகுத்தறிவு இயக்க வழி நின்றவர் என்று காட்டும்.

தமிழகம், தன்னைச் சிரிக்க வைத்தே சிந்திக்கச் செய்த பகுத்தறிவுக் கலைஞனை இழந்து தவிக்கிறது. அன்பும், பண்பும் நிறைந்த கள்ளமில்லா வெள்ளை உள்ளமும், எப்போதும் இதழ்க்கடையில் தங்கும் புன்னகையும், அகமும் முகமும் மலர்ந்து தரும் அன்புரையும் நகைச்சுவையோடு இணைந்த  நற்கருத்தும் இனி நமக்கு எங்குக் கிடைக்கும்? கலைவாணர் மறைந்துவிட்டார். ஆனால் கலைத் துறை மூலம் பகுத்தறிவு வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அரும்பணி, பொது வாழ்வுத் துறையில் அவர் காட்டிய அக்கறை, ஏழை எளிய மக்கள் மீது அவர் கொண்ட அன்பு, அவர்களின் ஈடேற்றத்திற்காக - ஈட்டிய பொருளை எல்லாம் வாரி வழங்கிய வள்ளல் தன்மை - திரைப்பட உலகிற்கு அவர் செய்துள்ள சேவை முதலியவற்றால் அவர். தமிழ் நாட்டில் பெற்றுள்ள புகழ், தென்னவர் உள்ளத்தில் பெற்றுள்ள இடம் என்றும் மறையாது - மங்காது
கலைவாணர் திரைப்படத்தில் சிரிப்பு நடிகர். ஆனால் அவரிடம் ஆழ்ந்து ஊறித் திளைத்தது தந்தை பெரியார் ஊட்டி வளர்த்த பகுத்தறிவு உணர்ச்சி. எனவே அதைச் சுட்டிக் காட்டாமல் எவரும் கலைவாணர் குறித்துப் பேசினால் பேசாமல் விட்டு விட முடியாது என்பதற்கு சென்னை - மெரீனா கடற்கரையில் 6.9.1957ஆம் நாள் நடைபெற்ற கலைவாணரின் இரங்கல் கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சை முதலில் தொட்டுக் காட்டுவோம். ஏனென்றால் இப்படி ஒரு பகுத்தறிவுக் கலைஞர் கலைவாணர் இருக்கிறார் என்று தந்தை பெரியாருக்கு முதலில் எடுத்துக் கூறித் தந்தை பெரியாரை முதலில் பாராட்டச் செய்தவர் பேரறிஞர் அண்ணா. அண்ணா இரங்கலுரையில் கூறுகிறார்:

கலைவாணர் மக்களின் உள்ளத்தைத் தொட்டுச் சிரிக்க வைத்தவர் உல கிலேயே இவர் ஒருவர் தாம் மக்களிடத் திலே தொடர்பு கொண்டு, மக்களுக்காக உழைத்த கலைஞராவார். இவரைப் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் நாட்டிலே இருப்பது மிக அபூர்வம்.

மக்களின் மன அழுக்கு நீங்க, மூடநம்பிக்கை அகல, குருட்டுப் பழக்க வழக்கங்கள் ஒழிய, தாழ்ந்த மக்கள் தன்னுணர்ச்சி பெற இதுவரை இந்த நாட்டில் எந்த ஒரு  நடிகனும் கலை வாணரைப் போல் பணியாற்ற முடிந்த தில்லை. இந்த நாட்டில் மட்டுமல்ல மேலை நாடுகளிலும்கூட இப்படிப்பட்ட ஒரு கலைஞன் இருந்ததுமில்லை, இருக்கவுமில்லை. (நம் நாடு 7.9.1957).

பெரியார் வழியில் பகுத்தறிவுப் பாதையில் தனி வாழ்க்கையும், கலை வாழ்க்கையும் மேற்கொண்ட கலைவாணர் பெரியாரைப் பற்றிக் குறிப்பிடுகையில் தூங்காமை, கல்வி துணிவுடைமை என்ற நீங்காக் குணம் படைத்த ஆங்காரமான அறிவுத் தந்தை பெரியார் பிறந்த நாடு என்றே குறிப்பிட்டுச் சொன்னார் என்றால் அவர் உள்ளத்தில் பெரியார் உரம் எந்த அளவிற்கு ஊறித் திளைத் திருத்தது என்பது விளங்கும்.

கலைவாணர் கதர் கட்டினாலும், காந்தியைப் பெரிதும் போற்றினாலும் தன்னை ஒரு சுயமரியாதைக்காரன் என்றே கூறிக் கொண்டார். இதற்குச் சான்று வேண்டுமாயின் 1952 தென்றல் ஏட்டின் பொங்கல் மலருக்கு அளித்த நேர்முகம் இது.

ஆதிமுதல் குடிஅரசு, கிருஷ்ண சாமி பாவலர் நடத்திய தேசபந்து ஆகிய இரண்டு பத்திரிகைகளையும் நான் படித்து வந்தேன். அப்போதுநான் சிறுவன். நாடகக் கம்பெனியில் வேலை. பக்தி மார்க்கத்திற்கும், நாஸ் திகத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நான் அப்போது நானாகத் தெரிந்து கொண்டேன். படித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தேன். சுயமரியாதைக் கொள்கை நம் நாட்டுக்குத் தேவை என்பதுதான் அந்த முடிவு

மாணிக்க வாசகர்

கலைவாணர் நடித்த மாணிக்க வாசகர் எனும் திரைப்படம்தான் அண்ணாவை ஈர்த்தது மட்டுமல்லாமல் பெரியாரிடம் கலைவாணரை அண்ணா அழைத்துச் செல்லவும், பெரியாரின் பாராட்டைக் கலைவாணர் நேரில் பெறவும் துணை புரிந்தது.

1939இல் வெளிவந்த திரைப்படம் இசை மேதை எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்த மாணிக்கவாசகர் எனும் படம். அதில் மேஸ்திரி வெங்குப் பிள்ளையாகக் கிருஷ்ணன் நடித்தார்.

அந்தப் படத்தில் மன்னர் எதையும் தானே சொந்தமாகச் சிந்தித்து முடிவெ டுப்பதில்லை. அரச குடும்பத்துப் புரோகிதர் சொல்வதைத்தான் அவர் கேட்கிறவர். இதைக் குறித்து அரண் மனை நிருவாகி வெங்குப் பிள்ளையிடம் ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கப் புரோகிதர் அவர்களைக் கடந்து போவார்.
நம்மைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று யூகித்த புரோகிதர், உச்சிக்குடுமி வைத்துப் பூணூல் அணிந்தவர் அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பார். அதைப் பார்த்துவிட்ட வெங்குப் பிள்ளை பாத்திரமேற்ற கலைவாணர் தலையை ஆட்டிக் கொண்டு என் கையில் இருக்கும் இது என்ன தெரியுமா? எழுதுகோல்! தர்ப்பைப் புல் இல்லை. தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு நினைவு வைச்சுக்க ஜாக்கிரதை என்று புரோகிதர் காதில் விழும்படி உரக்கக் கூறுவார்.

அண்ணாவின் வியப்பு
மாணிக்கவாசகர் படத்தைத் தம் நண்பர்களுடன் பார்த்து விட்டு அண்ணா வியந்து போனார். நாம் இத்தனை வருடங்களாகச் சொல்ல முயற்சி செய்ததை ஒரு நிமிடத்தில் சொல்லி விட்டாரே, இவர் என்று தந்தை பெரியாரிடம் அண்ணா சொல்ல, அதைக் கேள்விப்பட்ட பெரியார் கலைவாணரை நேரில் பார்க்க விரும்பினார்.

பெரியார் பாராட்டு

அண்ணா, அவரைப் பெரியாரிடம் அழைத்துக் கொண்டு போனார். பெரியார் பாராட்ட, பெரியார் அறிமுகம் கிடைத்த மகிழ்ச்சியில் கிருஷ்ணன் பெரியாருக்கு மாலை அணிவித்து வணங்கினார். தாம் சொல்ல விரும்பும் கருத்துக்கள் கிருஷ்ணனுக்குப் பிடித்துப் போனவையாக இருந்தது குறித்து அறிந்த பெரியார் மகிழ்ந்தார்.

கலைவாணரைப் பெரியார் பாராட்டிப் பேசிய பேச்சுக்கள் பலவாகும். 31.7.1944இல் சென்னையில் சந்திரோதயம் நாடகத்துக்குப் பெரியார் தலைமை வகித்தார்.

நாடகத்திற்குச் சென்னை மாநில மாஜிஸ்ட்ரேட், கலைவாணர், தியாகராஜ பாகவதர், தண்டபாணி தேசிகர் பல திரைப்பட நடிகர்கள் உட்பட சுமார் 4000 பேர் வரையில் வந்திருந்தனர்.

மண்டப ஒலி பெருக்கி பெரிதாய் வைத்து மேடை நடிப்பு, பேச்சுக்கள் ஆகியன ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியார் நடிப்பின் கடைசிப் பகுதியில் சொற்பொழிவாற்றினார்.

தாய்மார்களே! தோழர்களே! நகைச்சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணன் முதலாகிய திராவிடக் கலைவாணர்களே! கலா நிபுணர்களே! உங்கள் மத்தியில் பேசக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாகக் கருதுகிறேன் தோழர் அண்ணாதுரை அவர்களால் துவக்கப்பட்டு, அவரே தலைமை வகித்துச் சுயமரியாதை இயக்கத்தார் ஆதரவில் நடைபெற்ற சந்திரோதய நாடகத்தைக் கண்டு களித்தீர்கள். நீங்கள் 4000 பேர் கண்டும் கேட்டும் உணர்ச்சி பெற்று அனுபவித்த மகிழ்ச்சி இன்பம் எவ்வளவோ அவ்வளவு இன்பத்தைவிட பெரும் பாகத்தை நான் ஒருவன் அனுபவித் தேன். திராவிட கலைவாணர்களாகிய தோழர்கள் என்.எஸ். கிருஷ்ணன் தியாகராஜ பாகவதர், தண்டபாணி தேசகர் முதலியோர் முன்பு ஒருவர் நடிப்பது என்றால் அதுவே ஒரு அதிசயிக்கத் தகுந்த காரியமாகும். அப்படி இருந்தும் நீங்கள் ஆரம்பம் முதல் முடிவு வரை மிக்க மகிழ்ச்சியோடு சுவைத்ததை நான் கண்டு வந்தேன் என்று தொடங்கினார்.

அடுத்து அவர் நாடகத் துறையில் இன்று சில திராவிடர்கள் நடந்து வரும் மானங்கெட்ட தன்மையான நடிப்புகளை மாற்றி திராவிடர் நலனுக்கு ஏற்ற வண்ணம் நடித்துக் காட்டி அதை நாட்டில் பரவச் செய்ய நகைச்சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் மங்கள கான சபை என்னும் ஒரு நடிகக் குழுவை தனதாக்கி அதன் செயலை ஏற்று நடத்தப் போகிறார்கள் என்று கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நானறிந்த வரை சுமார் 10,15 வருட காலமாகவே திராவிட உணர்ச்சி கொண்டு துணிந்து திராவிடத் தொண்டு ஆற்றுவதானது உண்மைத் திராவிடன் ஒவ்வொருவரும் அவருக்குக் கடமைப்பட்ட வனாக ஆக வேண்டியதாகும் என்பதோடு மற்ற நடிகர்கள் வெட்கப்பட வேண்டியது மாகும் என்று கூறியவர் தோழர் என்.எஸ். கிருஷ்ணன் தொண்டானது திராவிடர்கள் தன்மானம் பெற்று மனிதத் தன்மை அடைந்து விட்டார்கள் என்று திராவிட சரித்திரத்தில் முக்கிய இடம் பெற வேண்டியதாகும் என்று பாராட்டினார்.

அதோடு பெரியார் அந்தக் கூட்டத்தில் சில சிந்தனை விதைகளை வழக்கம் போல விதைத்தார்.

கலையோடு மனிதனுக்கு அறிவு, மானம், இனப் பற்று ஆகியவை இருக்க வேண்டாமா? பணமே தானா பெரிது? என்று கேட்டதோடு தாங்கள் பெற்ற கலை வளத்தால் பெற்ற செல்வத்தை உண்மைத் திராவிடன் திராவிடனுக்கும் பயன்படுத்தாவிட்டாலும் திராவிடர் கேட்டிற்குப் பயன் படுத்தாமலாவது இருக்க வேண்டாமா? அப்படித் திராவிடருக்குக் கேடாகப் பயன்படுத்தியவர்களைப் பயன்படுத்துபவர்களை எப்படித் திராவிடர் என்று நம்மால் சொல்ல முடியும் என்று கேட்டார் பெரியார்.

சற்றுக் கடுமையாகவே, இவர்தான் பெரியார் என்று சொல்லும் வகையில் பொருத்தமாக, அப்பப்பா இந்த சினிமாக்களையும் புராண நாடகங்களையும், பாட்டு பிளேட்டுகளையும் எடுத்துக் கொண்டால், நம் கள், சாராயக் கடைகளையும், தாசிவேசிகள் குச்சுக்காரிகள் வீடும், மார்வாடி செட்டி கொள்ளைகளும் ஆயிரம் பங்கு மேலென்று சொல்லுவேனே சுயமரியாதைக்காரர்களின் காரியம் போதிய வெற்றி பெறாமல் தடைப்படுவதற்குக் காரணமே இந்த முக்கலையும், முக்கலைவாணர்களும், முக் கலை ரசிகர்கள் என்று சொல்லப்படுபவர்களுமாவார்கள் என்று கடுமையாகச் சாடினார்.

அடுத்துப் பேசிய கலைவாணர் தந்தை பெரியார் அவர்கள் சொன்னது சரியானதே என்றார் பெரியாரவர்கள் சொன்னதெல்லாம் சரியானதே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு என்றார். பெரியார் அவர்கள் இந்த மாதிரி வெகு நாளைக்கு முன்னமே எங்களுக்குச் சொல்லி, எங்களை மிரட்டிக் கண்டித்திருக்க வேண்டும். இப்பொழுது துணிந்து சொன்னதற்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அண்ணாதுரை அவர்கள் எங்கள் விரோதம் கூடாது என்பதற்கு ஆக எங்களைப் பாராட்டியும் பெரியார் சொன்னதைக் கொஞ்சம் பூசிமெழுகியும் பேசினார். அப்படி ஒருவர், இப்படியும் ஒருவர் இருக்க வேண்டியதுதான் பெரியார் எங்கள் தலைவர்; அண்ணாதுரை என் குரு, தந்தை, சகோதரர் ஆவார். நாங்கள் பெரியார் தொண் டுக்கு உதவியளிக்க வேண்டியவர்களாவோம். அதுவே எங்கள் நன்றி அறிதல் கடமையாகும் என்றார் (குடிஅரசு 6.8.1944).

இதனைப் போலவே 8-9-1944-இல் ஈரோட்டில் கிந்தனார் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றபோதும், 1.11.1944இல் இழந்த காதல் நாடகத்திற்குத் தலைமை ஏற்றபோதும் பெரியார் அய்யா அவர்கள் என்.எஸ். கிருஷ்ணனைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

நகைச்சுவை அரசர் கிருஷ்ணன் அவர்கள், நான் அறிந்த வரை சுமார் 10,15 வருஷ காலமாகவே, திராவிட உணர்ச்சி கொண்டு துணிந்து திராவிடத் தொண்டு ஆற்றி வருவதால் உண்மைத் திராவிடன் ஒவ்வொருவனும் அவருக்குக் கடமைப்பட்டவன் ஆகிவிட்டான் என்பதோடு, மற்ற நடிகர்கள், நாமும் இப்படி நடிக்கவில்லையே என்று வெட்கப்பட வேண்டியும் ஏற்பட்டு விட்டது தோழர் கிருஷ்ணனின் தொண்டானது திராவிடர்கள் தன்மானம் பெற்று மனிதத் தன்மை அடைந்து விட்டார்கள் என்ற திராவிட சரித்திரத்தில் முக்கிய இடம் பெற வேண்டிய தாகும். இவர் தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற, புரட்சி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாடகத் துறையிலும் இசைத் துறையிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

நம் அருமை கிருஷ்ணன் அவர்கள் தனது தொழிலை வெகு தூரத்திற்கு மாற்றியும், புரட்சி செய்தும், மற்றவர் களுக்கு வழிகாட்டியாகவும் ஆகிவிட்டார். கலை சீர்திருத்தம் சரித்திரத்தில் கிருஷ்ணன் பெயர் பொன் னினால் பொறிக்கப்படும்

கிந்தன் கதை நடத்துவதில் கதை பொய்யானாலும் அதை மக்களுக்கு மானமும், அறிவும் முற்போக் குணர்ச்சியும் ஏற்படும்படி செய்து அதன் வருவாயில் பெரும்பாகம் பொது நலத்துக்கு உதவுகிறார்.
பணப் பிசாசுக்கு அவர் மனம் அடிமைப்படவில்லை. மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்ற கவலை அவருக்கு இல்லை. இதுபோல எவனொருவன் தன்னலமில்லாமல் தொண்டாற்ற முயலுகிறானோ அவன் வெற்றி பெறுவான் என்பதோடு ஒரு புரட்சி வீரன் என்பதற்கு நமது கிருஷ்ணன் அவர்களே எடுத்துக் காட்டாகும்

கிருஷ்ணனைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் அவரை ஒரு புரட்சி வீரரென்றே கருதுவது ஏன்? அவர் ஒரு நல்ல தேவையான புரட்சியில் வெற்றி கண்டவர் இனி அவர் செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக் காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால் அச்சரித்திரத்தின் அட்டைப் பக்கம் கிருஷ்ணன் படம் போடா விட்டால் அச்சரித்திரமே தீண்டப்படாததாக ஆகிவிடும்

பெரியார் வரிசையில்...

ஒரு முறை அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதியி ருந்தார். இதுபற்றி மாறபாடன கருத்துடை யவர்கள் வ.ரா.வும் எப்படி இவ்வாறு எழுதலாம் என்று மோதினர். உடனே அவர் இது பற்றி என்னிடம் கேட்பதைவிடப் பெரியாரிடமே கேட்டுப் பாருங்கள் என்று கூறவே பெரியாரிடம் போய் இதுகுறித்துக் கேட்டார்கள்.

அதற்குத் தந்தை பெரியார் தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு

பெரியார் மேல் கலைவாணரின் பற்று

திரைப்பட உலகிலே முதன் முதலாக பெரியார் என்ற பெயரை அறிவித்தவர் கலைவாணர் என்று கூறலாம். பணம் படத்தில் வரும் பாடலில் தினா - முனா கானா என்பதில்

பெரியார் வள்ளுவப் பெரியார்
அந்தப் பாதையில் நாடு சென்றிட வழி
வகுப்பதும் அதன்படி நடப்பதும் எங்கள்

ராஜா ராணி படத்தில் சாக்ரடீஸ் ஒரங்க நாடகம் இடம் பெறும். அந்த நாடக நிகழ்ச்சிக்குக் கலைவாணர் தலை மையேற்று நாடகத்தில், சாக்ரடீசுக்கு நஞ்சு கொடுக்கும் கட்டத்தில் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கலைவாணர் மேடைக்கு ஓடிப் போய் நாட்டுக்கு நல்லது செய்த பெரியாரையா சாகச் சொல்றீங்க? என்று பதறிக் கேட்பார். அவர் தந்தை பெரியாரை நினைத்துக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட மக்களின் ஆரவாரக் குரலால் திரை அரங்கே அதிரும்.

கலைவாணர் தந்தை பெரியாரைக் குறித்துக் கூறிய இந்த வைர வரிகளில் பெரியார் அவர் நெஞ்சில் வாழ்ந்தார் என்பது விளங்கும். தமிழகம் பெற்றிருக்கும் பொதுச் செல்வங்களில் அவரும் ஒருவர். பூப்போன்ற நெஞ்ச முள்ளவர் புகழுக்காகத் தம் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார். அவருக்காக வேண்டுமானால் புகழ் தான் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். புனிதமான மனிதர் துணிவு என்றும் மூன்றெழுத்து முத்தமிழ் பண்பை மனித உருவில் காண வேண்டுமாயின் அந்த உருவம் ஈ.வெ.ரா.தான் வேறு எதுவும் இல்லை

வானொலியில்...

1947 முதல் விடுதலை நாள் கொண்டாட இருந்த வேளையில் சென்னை வானொலியில் கலைவாணரின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பப்பட இருப்பதாக விளம்பரம் செய்தனர். கலைவாணர் நடத்தும் அந்த நிகழ்ச்சிக்குரிய எழுத்து வடிவத்தைச் சென்னை வா னொலி நிலையத்துக்கு அளித்தவர் ராங்கு விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்கள் வரிசையில் தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.

ஒலிபரப்புப் பதிவாக வேண்டிய நாளில்  நிலையம் வந்த கலைவாணரிடம் வானொலி நிலைய உயர் அதிகாரி எழுத்து வடிவத்தில் பெரியார் பெயர் நீக்கப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்லி ஒலிபரப்பின் போது பெரியார் பெயரைச் சொல்லாமல் விட்டுவிடச் சொன்னபோது கலைவாணர் அதிர்ச்சி அடைந்ததுடன், பெரியார் பெயர் இடம் பெறாது என்றால் எந்த நிகழ்ச்சியும் தன்னுடைய நிகழ்ச்சி வானொலியும் இடம் பெறாது என்றால் எந்த நிகழ்ச்சியும்  தன்னுடைய நிகழ்ச்சி வானொலியில் இடம் பெறாது என்று வெளியேறினார். அதிகாரிகள் செய்வதறியாது திகைத் தனர். மறுபடியும் கூடிப் பேசி கலைவாணர் விரும்பியவாறே பெரியார் பெயரைச் சேர்த்துச் சொல்லுவதை அனுமதிக்க வைத்து அதன்படியே நிகழ்ச்சியை ஒலிபரப்பினார்கள் என்றால் கலைவாணர் தந்தை பெரியார் மீது கொண்ட பற்றும் அன்பும், மதிப்பும் சாதாரணமானதா? 

14.1.1948 திராவிடன் பொங்கல் மலரில் இச்செய்தி அன்றே இடம் பெற்றது.
தந்தை பெரியார் கலைவாணர் குறித்து என்ன கருத்துக் கொண்டிருந்தாரோ அதே கருத்தை மாற்று முகாமைச் சேர்ந்தவரானாலும் தந்தை பெரியாரின் நண்பராகவே வாழ்ந்த இராஜாஜியும் கொண்டிருந்தது வியப்பு எனலாம். எனவேதான் இராஜாஜி கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் விட்டுச் சென்ற இடத்தில் வேறு யாரும் புகுந்து புகழ் பெற இயலாது என்று வெகு பொருத்தமாகச் சொன்னதை இங்கே சுட்டிக் காட்டுவோம். அது உண்மையே. கலைவாணர் மறைந்து 50 ஆண்டுகள் ஆனபின்பும் வெற்றிடமாகவே அவ்விடம் நிரப்பப்படாத இடமாகவே உள்ளது என்பது உண்மையே.

---------------- - முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்  அவர்கள் 30-11-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

ஜாதி ஆணவப் புரட்டு பற்றி கலைவாணர் என்.எஸ்.கே.

பகுத்தறிவுச் செம்மல் கலைவாணர் என்.எஸ்.கே. என்றும் வாழுகிறார்!
இன்று (நவம்பர் 29) நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ்.கே. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட, போற்றுதலுக்குரிய என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்.

மூடநம்பிக்கை முட்புதர்களே நிறைந்த நாடகம் மற்றும் சினிமா துறைகளில் 70 ஆண்டுகளுக்கு முன்பே அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சி செய்த மாமேதை அவர்.

அவருடன் இணையாக டி.ஏ. மதுரம் அம்மையார் நடித்து, அந்த ஜோடிப் புறாக்கள் புதுவானத்தில் தன்னிகரற்றுப் பறந்தன; பார்த்தோரைப் பரவசமாக்கியது மட்டுமா? பார்த்தவர்களை ஒரு நொடிப் பொழுதாவது (சிரிக்க வைப்பதோடு) சிந்திக்கவும் வைத்தார்கள்.

அப்படிப்பட்ட இணையர் தேடினாலும் எளிதில் கிடைக்க மாட் டார்கள்.
நாகர்கோயில் குமரி தந்த குணாளர் என்.எஸ்.கே. ஒரு படிக்காத மேதை - ஆனால் மற்ற படித்த மேதைகளுக்குப் புரியாதவை, தெரியாதவை எல்லாம் இவர்களால் நாட்டுக்கே வகுப்பெடுத்து பாடங்கள்போல் சொல்லிக் கொடுத்தார் என்பது ஒரு தனி வரலாறு.

இவ்வளவு பகுத்தறிவுப் பாடங்களை, தமது எளிய நகைச்சுவைக் காட்சிகளை எங்கிருந்துதான் கற்றாரோ இவர் என்று வியத்த பலருக்கும் அவரே அந்தப் புதையல் அவருக்குக் கிடைத்த இடம் அக்காலத்தில் தந்தை பெரியார் நடத்திய பச்சை அட்டை குடிஅரசு ஏடு; நாடகக் கம்பெனியில் அவர் நடிகனாக இருந்த அக்காலத் தில் 80 ஆண்டுகளுக்குமுன்பே குடி அரசின் வாசகனாக - இல்லை இல்லை மாறாக காதலனாக அவர் மாறியதின் விளைவு அவர் அதன்மூலம் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டார்!

அந்த பச்சை அட்டைக் குடிஅரசுப் பயிற்சிப் பட்டறையில்  உருவான அந்த வாள்வீச்சு எத்தனையோ பழமையை, சனாதனத்தை, ஜாதி ஆணவங்களை வீழ்த்திட பல லட்சம் மக்கள் மனதைப் பக்குப்படுத்தியது.

அவ் வாள் தலையை வெட்டவில்லை; தலைக்குள் இருந்த அறியாமையை வெட்டிச் சாய்த்து, மூளைச் சலவை செய்து, பலரும் சிந்திக்கும்படிச் செய்தது!

அக்காலத்து உத்தமபுத்திரன் திரைப்படம் அதில் இவரது நகைச்சுவைப் பாத்திரம் ஒரு வைதீக வைஷ்ணவ அய்யங்கார் பாத்திரம்; மதுரம் அவரது மனைவி.

தன் பசு மாட்டிற்கு புல்லுக்கட்டு கொண்டு வந்து விற்கும் கீழ் ஜாதி (பறைச்சி வேடம்)ப் பெண் வேறு ஒருவர்.

ஜாதி குலம் எல்லாம் தான் காமத்தின் முன் சுட்டெரிக்கப்படும் என்பதை வைத்து, இந்த அய்யங்கார் அந்தப் பெண்ணை (பின் வழியாகத்தான் எப்போதும் வருவார் அவர்) ஒரு நாள் தனியே புல்லுக்கட் டுடன் மாலை வரச் சொல்லுகிறார்.

தனது மனைவி (மதுரத்தை) வேண்டு மென்றே சண்டை போட்டு, (சுடும் தோசையை கீழே  போட்டு புரட்டி மண்ணுடன் தான் உனக்கு தோசை விக்கத் தெரியுமோ, நீ ஒரு மனுஷியா? என்று வம்பு செய்து, ஆத்திரமூட்டுவார்; சண்டை முற்றும்... என் தாய் வீட்டுக்குப் போவதாக இவர் சொல்லி விட்டு வெளியேறுகிறார்.

வைணவ அய்யங்காருக்கோ மகிழ்ச்சி - தன் திட்டப்படி அவரது மனைவி வெளியேறிவிட்டார்!

மாலை காத்திருக்கிறார். காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் நோயால் தவிக்கிறார்!

இவரது மகன் (8 வயது பையன்) காக்கா இராதா கிருஷ்ணன் அப்போது இளைஞர், அந்த வேடம் ஏற்றவர்) ஓடி வந்து, அப்பா அப்பா என்று குறுக்கிட்டு இடைஞ்சல்போல பேசித் தொணதொணக்கிறார். அவருக்கு 4 அணா - பெரிய காசு அப்போது - எடுத்துக் கொடுத்து டேய் வெளியே போய் பக்ஷணம் வாங்கி சாப்பிட்டு வாடா என்று விரட்டுவார். மகனும் மகிழ்ச்சியோடு ஓடுவார் - வெளியே போகும் சமயம் இந்த தோப்பனார் அய்யங்கார் பையனை சத்தம் போட்டு கூப்பிட்டு டேய் பக்ஷணம் வாங்கிச் சாப்பிடும்போது, நம்மவா கடையாய்ப் போய் பாத்து சாப்பிடு; சூத்ராள் கடையில் இடையில் வாங்கி சாப்பிட்டிராதே; வாங்கி சாப்பிட்டு அப்புறமாக என்று அந்த அப்புறத்தை அழுத்திச் சொல்லுகிறார்  (அரங்கமே கைத்தட்டலால் அதிரும்).
பிறகு புல்லுக்கட்டுடன் கீழ் ஜாதிப் பெண் வருவா அவளை எதிர்கொண்டு சாகசமெல்லாம் செய்வார்; ஏஞ் சாமி, நீங்க உசந்தவங்க, நாங்க கீழ்ஜாதி - என்ன நீங்க...

அட நீ ஒண்ணு அதெல்லாம்... என்றெல்லாம் வசனம் பேசிடுவார்! தன் மனைவி பற்றி அவர் புல்லுக் கட்டுக்காரியிடம் அலட்சியமாகப் பேசுவார்; பிறகு தலை முக்காட்டை சிறிது நேரம் (வசனம்) பேசியபின், நீக்கிப் பார்த்தால் தன் மனைவிதான் (டி.ஏ. மதுரமே) அந்தப் புல் சுமந்த பெண்ணாக இருப்பார்! (ஏற்கெனவே அந்த கீழ்ஜாதிப் பெண் இவரது தகாத  உறவு அழைப்புபற்றி வீட்டு எஜமானி மதுரத்திடம் சொல்லியதால் இது மதுரம் செய்த ஏற்பாடு) அய்யங்காரை விளாசு விளாசு என்று விளாசித் தள்ளுவார் (மதுரம்) மனைவியார்!

இந்தக் காட்சி எப்படிப்பட்ட அருமையான உயர் ஜாதிக்காரர்களின் ஜாதி ஆணவப் புரட்டு பற்றியது பார்த்தீர்களா?

எத்தனையோ ஆண்டுகள் முன் பார்த்த காட்சி - கண்ணை - கருத்தை விட்டு அகலாக் காட்சி. கலைத்துறையில் அக்கால பெரியார் கொள்கை பரப்பாளர் அவர். இன்றும் வாழுகிறார்கள் அவ் இணையர்கள். மறையவில்லை என்றும் வாழ்வார்கள்.

கலைவாணர் - மதுரம் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

---------------- கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் பகுதியிலிருந்து.. “விடுதலை” 21-11-2012

29.11.12

சமதர்மம் பற்றி பெரியார்


சமதர்மம் என்றால், சாதாரணமாக பாரபட்சமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு, தாழ்வு இல்லாத நிலை என்பதாகும். ஆனால், இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல் கீழ் நிலை இருந்து வருகிறது.
இவற்றை ஒழித்து யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்கு சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம் என்றால், மதக்காரர்களுக்கும், கடவுள் நம்பிக்கைக் கொண்ட ஆஸ்திகர்களுக்கும் கஷ்டமாயிருக்கிறது. உழைப்பாளி மக்கள் உடல் வருந்தியுழைத்த பின்னும் குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக் கந்தையின்றியும், குடி இருப்பதற்கு ஓட்டைக் குடிசை கூட இல்லாமல் பரிதவிக்கும் பொழுது எந்தவிதமான வேலையும் செய்யாது, பணக்காரனாக இருக்கின்ற சந்தர்ப் பத்தால், அக்கிரமமாக அநீதியாக தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டு, தான் மட்டும் படோடோபம் டம்பாச்சாரித்தனமாக வீண் விரையமாக்குவது சரியல்ல.
எல்லோரும் கஷ்டப் பட்டு வேலை செய்து பலனை எல்லோரும் சமமாக அனுபவிக்கலாம் என்று சொன்னால், அது முதலாளி களுக்கும், பணக்காரர்களுக்கும், ஜமீன்தார், மிட்டா மிராசுதார் முதலியவர்களுக்கும் விரோதம் என்று வீண் கூக்குரலிடப்படுகிறது. 

சாதாரணமாக இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வேலை செய்து சமமாக உண்டு, உடுத்திக் களிப்புடன் வாழ்க்கை நடத்துவதில்லையா? அதுபோலவே ஒரு கிராமம், ஒரு ஜில்லா ஒரு மாகாணம் அல்லது தேசத்திலுள்ள சகல மக்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலவும், உள்ள பூமியும், பொருளும் எல்லாம் குடும்ப பொதுச் சொத்து போல் எல்லா மக்களுக் கும் பொதுவாகிய அக்குடும்பத்துக்குச் சொந்தமே அன்றி தனித்தனியாக அவனவன் இஷ்டம்போல் அனுபவிக்கும் தனி உரிமை யாருக்கும் இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு ஆளுக்கொரு வேலை செய்து, உண்டு உடுத்தி இன்ப வாழ்வு வாழ வேண்டுமென்பதுதான்தான் சமதர்மம், மற்றபடி இதில் பயப்படத்தக்க காரியமும், புரியாத காரியமும் இல்லை.
இந்த சமத்துவமான வாழ்க்கை வேண்டுமென்று கூறும்பொழுது சமதர்ம விரோதிகளான மதவாதிகளும், ஆஸ்திகர்களும் துள்ளிக் குதித்து அது கடவுளுக்காகாது. அவனவன் முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்றாற்போல் சுகமான வாழ்க்கையோ, கஷ்டமான வாழ்க்கையோ நடத்துகிறான். பணக்காரனாகவோ, ஏழையாகவோ இருப்பது கடவுள் சித்தம் அவர் கடாட்சத்தால் அவனுக்கே தனி உரிமை கொடுக்கப்பட்ட பொருள்களைப் பொதுவுடைமை ஆக்கப்படல் அநீதி, கடவுள் கட்டளைக்கு விரோதம் என்று கூப்பாடு போடுகிறார்கள். இன்றைக்கு முனிசிபல் கட்டடத்தையோ, பொது ரஸ்தாவையோ, ரயில்வேயையோ எடுத்துக் கொள்ளுங்கள். இதில் யாருக்கு உரிமையில்லையெனக் கூற முடியும்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவற்றை அனுபவிக்கிறார்களா? இல்லையா? இதனால் எந்தக் கடவுளுக்கு, மதத்துக்கு அல்லது பணக்காரனுக்கு ஆபத்து வந்துவிட்டதாகக் கூற முடியுமா? ``மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாததான பல வசதிகளையும், சாதனங்களின்றி மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும், பரவாயில்லை. எனக்குத் தேவைக்கு மேலிருந்தாலும், நான் அனுபவிப்பதற்கு வேண்டிய அளவுக்கு மேலிருந் தாலும், அது சும்மா இருந்து வீணாக அழிந்து போவதானாலும், பிறர் அனுபவிக்க நான் பார்க்கக் கூடாது என்றாலும், குறுகிய புத்தியும், கீழான எண்ணமும், சுயநல உணர்ச்சியும் கொண்டவர் களுக்கும்தான் உழைக்கக் கூடாது, உடல் வளையக் கூடாது. ஆனால், பிற மக்கள் உழைப்பதினால், விளையும் பயனைத் தட்டிப் பறித்து அனுபவிக்க வேண்டும் என்னும் சூழ்ச்சிமிக்க சோம்பேறி களுக்கும்தான் சமதர்மம் கசப்பாகவோ, வெறுப் பாகவோ, விரோதமாகவோ இருக்குமே தவிர, அவர்கள் இதைப்பற்றி மறுப்பார்களே தவிர மற்றபடி உடலைச் சாறாகக் கசக்கிப் பிழிந்து வேலை செய்யும் பாட்டாளி மக்களுக்கு இந்தக் கொள்கை ஒரு நாளும் விரோதமானதல்ல. பெரிதும் சாதகம் செய்யவல்ல வாழ்க்கை நிலைமை உயர்த்தவல்ல ஜீவ தாது இது என்றுதான் கூறவேண்டும். உலக ஜனத் தொகையில், 100க்கு 90 பேருக்கு மேற்பட்ட தொழிலாளிகள் பாமர மக்கள் ஆகியவர்களுக்கு அனுகூலமாயிருக்கின்றன. இந்தத் தத்துவத்தை நியாய புத்தியும், நேர்மையும் நோக்கமும், பரந்த மனப்பான்மையும் கொண்ட அனைவரும் ஆதரித்துத்தான் தீருவார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் மலிந்த இன்றைய சமுக அமைப்பால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ, சாந்தியோ, சமாதானமோ உண்டு என்று கூற முடியுமா? ஏழைக்கு கஞ்சியில்லை, கட்டத் துணி இல்லை, இருக்க வீடில்லை. ஓய்வில்லை, இல்லாத பிள்ளைக்கு கல்வி வசதி இல்லை என்பன போன்ற பல ஓயா கவலையே கவலையாய் சதா வறுமைக் கடலிலே கிடந்துழல்கிறான். பணம் படைத்த பணக்காரர்களுக்கோ இருப்பதைக் காக்கவேண்டும், மேலும் பெருக்க வேண்டும், பிறர் கவராது காப்பாற்றவேண்டும் என்றும் கவலையோடு பேராசை மிகுதியால் மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்கவே ஆசைப்படுகின்றார்கள். சாதாரணமாக ஒரு தோட்டி வேலை செய்யும் கீழ்தர நிலையில் உள்ளவன், ஆடு, கோழி வளர்த்துக் கொஞ்சம் பணக்காரனாக வேண்டும். பின்னர் மணியக்கா ரனாக ஆக வேண்டும் என்றெண்ணுகிறான். மணியக்கார வேலை கிடைத்தாலும், தாசில்தாராக வேண்டுமென்று ஆசிக்கிறான். அப்படியானாலும், கலெக்டர் ஆகவேண்டும், கவர்னர் ஆகவேண்டும். வைஸ்ராயாக வேண்டும், ஏக சக்கிராதிபதியாய் உலகாள வேண்டும். இன்னும் இதற்குமேல் வேறு உலகங்கள் இருந்தாலும் அவற்றையும் தான் ஒருவனே கட்டி ஆளவேண்டும் என்று கருதுகின்றான். இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்னவென்றால், கஷ்டப்பட்டு உழைக்காது சுகவாழ்வு நடத்துவதும், தேவைக்குமேற்பட்ட சொத்துகளுக்கு சொந்தக்காரனாக இருப்பதும் ஒரு கவுரவம் என்றும், தனி மதிப்புக்குப் பாத்திரமானது என்றும், கண்ணியமானது என்றும் கருதுகின்ற ஒரு ``மூட நம்பிக்கையே தவிர வேறில்லை.
இந்த மூட நம்பிக்கையின் பயனாய்த் தான் மனிதன் தேவைக்கு மேற்பட்ட பொருள் போகங்களைத் தானும் அனுபவியாது, பிறரையும் அனுபவிக்க விடாது, வைக்கோல் போரைக் காக்கும் நாய்போல் வாழ்கின்றான். இந்தத் தனிவுடைமை வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களுக்குப் பயன்படக் கூடிய பல பொருள்கள் சாதனங்கள் வீண் விரையம் செய்யப்படுகின்றன.
உதாரணமாக மோட்டார் காரை எடுத்துக் கொள்வோம். ஒரு செல்வந்தர் குடும்பத்துக்குத் தனியாக ஒன்று அல்லது மேற்பட்ட கார்கள் வைத்துக் கொண்டிருப்பது இன்றைய அனுபவம். ஒரு நாளில் சாதாரணமாக ஒரு மனிதனுக்கு மூன்று அல்லது நான்கு மணிநேர தேவைக்காக உபயோகிக்கப்படும் மோட்டார் ஒரு நாளில் இருபது மணிநேரம் வீணாக யாதொரு பயனும் இன்றி இருக்கிறது. இதில் வீணாக பணம் முடங்கிக் கிடக்கிறது. இந்த நிலை மாறி பஞ்சாயத்து போர்டு அல்லது முனிசிபாலிட்டிகளில் ஜனத்தொகைக்குத் தக்கவாறு 10, 15, 20 கார்கள் வைத்துக் கொண்டால், பொதுவில் தேவைப்பட்ட நேரங்களில் உபயோகித்துக் கொண்டால் வீணாக பணம் முடங்கிக் கிடக்க வேண்டிய தேவையில்லை.
இம்மாதிரியான முறைகளை அனுசரிப்பதால் வீண் விரயங்கள் தடுக்கப்பட்டு மக்கள் எல்லோரும் மனித வாழ்வை இன்ப மயமாக்கும் பல சாதனங்களையும் அனுபவித்துப் பயன்படுத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படும். இதற்கு பாடுபடாது பிறருழைப்பில் படோடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான, பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை என்பது தெளிவாக்கப்பட வேண்டும்.
                    --------------------செங்குந்த மகாஜன மகாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, "புரட்சி", 10.6.1934

28.11.12

கார்த்திகைத் தீபமா? இதற்கு என்ன கதையளப்பு?


இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் அது சடங்குகளின் - பண்டிகைகளின் குவியல். மனிதனின் அறிவைப் பாழ்படுத்துவதோடு நின்று விடாது; மனிதன் கடும் உழைப்பால் ஈட்டிய பொருளையும் சுரண்டக் கூடியதாகும்.

சித்திரை - தமிழ் வருஷப் பிறப்பு, சித்ரா பவுர்ணமி, இராம நவமி, ஆடி மாதம் பூர நட்சத்திரம் விழா, ஆடிப்பூரம் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி புரட்டாசி, நவராத்திரி (ஒன்பது நாள் கூத்து)

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி இன்னோரன்ன... புரட்டாசி சனி (4 சனிக்கிழமைகளிலும் விரதம்) மகாளய அமாவாசை அய்ப்பசி - தீபாவளி கந்தர்சஷ்டி கார்த்திகை மாதம் - கார்த்திகைத் தீபம்
மார்கழி: ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி.
தை தமிழர் திருநாளையும் மாற்றி சங்கராந்தி ஆக்கப்பட்ட கொடுமை! (புராணக் கதை புகுத்தப் பட்டுள்ளது) தைப் பூசம், தை அமாவாசை மாசி மகம், மகாசிவராத்திரி; பங்குனி - பங்குனி உத்திரம், காமன் பண்டிகை.
இப்படி பார்ப்பன சுரண்டலுக்கு நீண்ட பட்டியலை உருவாக்கி வைத்துள்ளனர். தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்த கதையாக ஒவ்வொரு நாளும் பண்டிகை - பண்டிகை என்று கூறி மக்களை சக்கையாக உறிஞ்சி எடுக்கும் மகா மகா கொடுமை.

இந்தப் பண்டிகைகளுக்காகக் கூறப்படும் கதை களோ ஆபாசம் - அருவருப்பு - அடி முட்டாள்தன மாகும்.

ஒரு கதையா? இரு கதையா? பைத்தியக்கார னுக்குக் கள் ஊற்றிய மாதிரி உளறல்! உளறல்!!

நவராத்திரி, தீபாவளி முடிந்த கையுடன் கார்த்திகை வந்து விட்டது. வீட்டுக்கு வீடு அகல் விளக்கு ஏற்றி வைப்பது என்பது எண்ணெய் செலவுக்குத்தான் கேடு.

இன்று திருவண்ணாமலையில் மகா தீபமாம்.

இதற்கு என்ன கதையளப்பு?

பிர்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் போட்டி- இரண்டு பேர்களில் யார் பெரியவன் என்ற சண்டையாம் (கடவுள்களிடத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது சண்டைதானா?)

பரமசிவன் நடுவில் புகுந்து ஜோதி உருவெடுத்து என் அடி, முடிகளை யார் முதலில் காண்கிறார்களோ அந்த ஆள் தான் பெரிய ஆள் என்றானாம்.
விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்துக் கொண்டே போனானாம். அடியைக் காண முடியாமல் திரும்பினானாம். (இதனை வைஷ்ணவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது வேறு கதை!)
பிரம்மன் அன்னப் பறவை உருவெடுத்து மேலே பறந்து சென்றானாம். அப்பொழுது தாழம்பூ ஒன்று மேலேயிருந்து கீழே வந்து கொண்டு இருந்ததாம்! எங்கிருந்து வருகிறாய் என்று அன்னப் பறவை தாழம் பூவைப் பார்த்துக் கேட்டதாம். சிவன் முடியிலிருந்து நீண்ட காலமாக வந்து கொண்டுள்ளேன் என்றதாம் தாழம்பூ.

எனக்கு ஒரு உதவி செய். சிவன் முடியை நான் பார்த்துவிட்டதாக சாட்சியம் சொல்லு என்று அன்னப் பறவை - கெஞ்ச, தாழம்பூவும் பரிதாபப்பட்டு பொய்ச்சாட்சி சொல்ல ஒப்புக் கொண்டதாம். சிவனிடம் வந்து சொல்ல, சினம் கொண்ட சிவன் சபித்து விட்டானாம். உனக்குக் கோயில் இல்லாமல்  போகக் கடவது! என்று பிர்மாவுக்கும் - பூசைக்கு உதவாமல் போகக் கடவாய் என்று தாழம்பூவுக்கும் சிவன் சாபமிட்டானாம்!

விஷ்ணுவும், பிர்மாவும் தவறுகளை ஒப்புக் கொண்டு - சிவனே நீதான் சக்தி வாய்ந்தவன் என்று ஒப்புக் கொண்டு, தங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததன் அடையாளமாக இம்மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்க வேண்டும்! என்று கேட்டுக் கொள்ள, சிவபெருமானும் சம்மதித்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகைப் பண்டிகையில் ஜோதியாய்க் காணப்படுவேன் என்று கூறினானாம். அதுதான் திருவண்ணாமலையில் மகா தீபம் கொண்டாடப்படும் இலட்சணம்!

இதில் சில கேள்விகள் உண்டு. பிர்மா, விஷ்ணு எனும் கடவுள்களிடையே யார் பெரியவன் என்று சண்டை போடுவது அசல் சிறுபிள்ளைத்தனம் அல்லவா!
இரண்டாவது, படைத்தல் கடவுள் என்று பார்ப்பனர்கள் கூறும் பிர்மா பொய் சொல்கிறானே, இது எந்த வகை ஒழுக்கம்?

மூன்றாவது, சிவன்தான் மற்ற இரு கடவுள் களையும்விட பெரியவள் என்பதை வைஷ்ணவர்கள் ஒப்புக் கொள்வார்களா?

நான்காவது, கார்த்திகையில் ஜோதியாய்த் தோன்றுவேன் என்று சிவன் சொன்னபடி, அவனாக அல்லவா ஜோதியாக உருவெடுக்க வேண்டும்? மாறாக மனிதர்களே கொப்பறை சட்டியில் நெய்யை ஊற்றி காடாத் துணியைப் பற்ற வைப்பது யாரை ஏமாற்ற? இது பச்சையான மோசடியல்லவா!
பக்தி வந்தால்தான் புத்தி போய் விடுமே - யார் சிந்திக்கப் போகிறார்கள்? உணவுக்குப் பயன்பட வேண்டிய நெய்யை டன் டன்னாக நெருப்புக்கு இரையாக்குகிறார்களே - இதைவிட பொறுப்பற்ற செயல் வேறு உண்டா? சிந்திப்பீர்!

                        --------------------------"விடுதலை” தலையங்கம் 27-11-2012

27.11.12

ஜாதியை ஒழிக்காமல், சுதந்திரம், சமத்துவம் என்பதெல்லாம் ஏமாற்று வேலையே!

நவம்பர் 26 
 
நவம்பர் 26 என்பது மறக்க முடியாத பொன்னாள். இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமை பெற்றது நவம்பர் 26 இல் (1949) என்பதற்காக அல்ல - இந்த நவம்பர் 26 இல் (1957) ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார்.

சட்டத்தை எரித்தால் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை என்ற அவசர சட்டம் கொண்டுவந்தும் அதனைக் கிஞ்சிற்றும் சட்டை செய்யவில்லை கருஞ்சட்டைத் தோழர்கள்.

தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை எந்த வகையில் கழகத் தொண்டர்களை உருவாக்கி யுள்ளார் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

மூன்று ஆண்டுகளுக்கோ, பத்து ஆண்டு களுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ மற்றும் பிரிட்டிஷ்காரன், காங்கிரஸ்காரன் கிளர்ச்சியின்மீது கையாண்ட எவ்விதமான கொடிய, தீவிரமான அடக்கு முறைகள் நம்மீதும், கழகத்தின் மீதும் பிரயோகித்தாலுங்கூட, அவைகளுக்குப் பயப்பட்டு என் லட்சியத்தையோ, திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

கழகத் தோழர்களே! தீவிர லட்சியவாதிகளே, நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்து விடவேண்டியதில்லை, பயந்துவிட மாட்டீர்கள்!
சட்டத்தைப் பார்த்து பயந்துவிட்டதாக கெட்டப் பேர் வாங்காதீர்கள்!
ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள் என்று தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்டார்.

தந்தை பெரியார் அவர்களின் கட்டளையை ஏற்று 10 ஆயிரம் கழகத் தோழர்கள் போர்க் களத்தில் குதித்தனர் என்றாலும், 4000 பேர்கள் மட்டும் கைது செய்யப்பட்டனர். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்கள் கூடப் போராட்டத்தில் குதித்தனர். சிறையில் பிறந்த குழந்தைக்குச் சிறைப் பறவை என்றுகூடப் பெயர் சூட்டப்பட்டதுண்டு.

பலர் சிறையில் பலியானார்கள் - சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு விடுதலையாகி வந்த சில நாள்களில், சில மாதங்களில்  மரணமடைந்தனர் சிலர்.

1957 நவம்பர் 26 இல் எந்தக் காரணத்தை முன்னிட்டு தந்தை பெரியார் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தச் செய்தார்களோ அந்தக் காரணம் இன்னும் நிலுவையில் இருக்கத்தான் செய்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக நடத்திய (1973 டிசம்பர் 8, 9) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக, ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

தீண்டாமை என்பது ஜாதியின் விளைவாகும். ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டு தீண்டாமை ஒழிப்பு என்பது நிஜத்தைவிட்டு நிழலோடு மோதுவதாகும்.

இன்றுவரை கோவில் கருவறைகளில் பார்ப்பனர் தவிர்த்த மற்றவர்கள் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பதெல்லாம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள மதப் பாதுகாப்புப் பிரிவுகளே!

இன்றைக்கும் ஜாதி வெறியர்கள் ஜாதியை தன்னலத்துக்கும், தலைவர்கள் ஆவதற்கும், அரசியலுக்கும் பயன்படுத்தி வருவதை நாடு கண்டுகொண்டுதானே இருக்கிறது.

55 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் அறிவித்து நடத்தப்பட்ட போராட்டம் இன்றைக்கும் தேவைப்படும் ஒரு நிலை - இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லப்படுவதற்குத் தகுதியுடையது அல்ல. சோசலிசம்பற்றிப் பேசுவதற்கு, அருகதை உடையதும் அல்ல.

முற்போக்குச் சக்திகள் இதில் கவனம் செலுத்துவார்களாக!

ஜாதி என்பது பிறவியில் பேதம் பேசும் கீழ்க் குணமாகும். இதனை ஒழிக்காமல், சுதந்திரம், சமத்துவம் என்பதெல்லாம் ஏமாற்று வேலையே!


                --------------------” விடுதலை” தலையங்கம் 26-11-2012

26.11.12

பெரியார் திடலில் ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமண விழா

ஜாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தோர், மணவிலக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான இணையர் தேடும் மன்றல் விழா!
பெரியார் திடலில் சுயமரியாதைத் தீ!
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சாதனையோ சாதனை!!

சென்னை, நவ.25- ஜாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தோர், மண விலக்குப் பெற்றவர். மாற்றுத் திறனாளிகளுக்கான இணையர் தேடும் மன்றல் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் இன்று காலை முதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. பெரியார் திடலே நிரம்பி வழிந்தது என்று சொல்லும் வண்ணம் வந்து கொண்டே இருந்தனர். பெண்கள் உடன்கட்டை ஏறுவதை தடுத்தவர் ராஜாராம் மோகன்ராய் என்று சொல்கிறார்கள்.
ஆனால், ஒரு தீ விபத்தில் தன் கணவரை இழந்த என் மகளுக்கு அதற்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்திருப்பது அய்யா தந்தை பெரியாரின் கொள்கைதான். பல்வேறு புரட்சிகரமான நிகழ்வுகளுக்கு முன்னோடியாக இருக்கும் பெரியார் திடல், இப்போதும் இப்படி ஒரு முற்போக்கான நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்துவது வெகு சிறப்பானது, மன்றல் நிகழ்வில் இணையரை இழந்த தன் மகள் சாந்தகுமாரி(33)க்கு மறுமணம் செய்யும் நோக்கோடு வந்திருந்திருந்த ஒரு தந்தை நம்மிடம் நன்றி பெருக்கோடு இப்படி கூறினார்.

ஆம், பெரியார் மறைந்து இத்தனை ஆண்டு களுக்கு பிறகும் கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் செய்து வைக்கும் துணிச்சல், எண்ணம் இந்த சமூகத்தில் நிலைபெறச் செய்வதற்கு அஸ்திவாரமாக அவரின் கொள்கை வீரியத்தோடு விளங்குகிறது என்பதை எண்ணி பார்த்து நாம் திமிர் கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை காலை பெரியார் திடலில் 9 மணிக்கெல்லாம் சாரை சாரையாக மக்கள் கூட்டம்.

ஏராள பதிவுகள்
ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மாற்று திறனாளி, இணையை இழந்தோர், மணமுறிவு பெற்றோர் ஆகிய பிரிவுகளுக்கு தனித் தனியே கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் தங்களுக்கு விருப்பமான கவுன்டர்களில் ஆர்வமாக இளம் வயதினரும் அவர்களுடைய பெற்றோர்களும் பதிவுகளை செய்த வண்ணம் இருந்தனர். எண்ணிக்கை கட்டுக்கடங் காமல் போனதால் ஒருகட்டத்தோடு பதிவுகளை நிறுத்தும் நிலையே ஏற்பட்டது.

இது குறித்து கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய சிறப்பம்சம் ஒன்று உண்டு. பெரியார் திடலுக்கு வந்திருந்த அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது அந்த நிகழ்வு. நம்புங்கள் தோழர்களே! அமைக்கப்பட்டிருந்த அத்துணை கவுன்டர்களிலும் கூட்டம் அதிகம் மொய்த்த்து ஜாதிமறுப்புக்கான பிரிவில்தான். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தோடு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள நீண்ட வரிசையில் இருபால் இளைஞர்களும் அவர்களின் பெற்றோர்களும் நின்ற காட்சி அடேயப்பா! தந்தை பெரியார் இருந்து இந்த காட்சியைப் பார்த்திருக்க வேண்டும்  பூரித்து போயிருப்பார்!

என் மகள் ஜெயந்தி(31), இசையில் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார். கால் ஊனமானவர். அவருக்கு ஏற்ற துணை தேடி வந்திருக்கிறோம். ஜாதி, மதம் எதுவாக இருந்தாலும் அதை பற்றி யெல்லாம் கவலையில்லை. என் மகளை அன்போடு நடத்தக்கூடிய மனமுடையவராக இருந்தால் போதும், சென்னை வானகரத்தில் இருந்து வந்திருந்த மோகன் என்பவர் கூறியது.

இளைஞர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு காட்டும் ஆதரவை பார்க்கும்போது, ஒன்றை மட்டும் உரக்க சொல்லிக் கொள்ளலாம்----பெரியார் வாழ்வார்! பெரியாரியல் வெல்லும்!! வென்றே தீரும்!!!

தமிழ் மண்ணின் ரசாயனத் தன்மையை பெரியார் மாற்றியிருக்கிறார், அவரின் தாக்கம் எந்த அளவுக்கு ஊடுருவி சென்றுள்ளது என்பதற்கு இந்த ஒன்றே தக்க சான்று!
மன்றல் 2012 ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழாவை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் துவக்கி வைத்தார். சுயமரியாதை திருமண இயக்குநர் திருமகள், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் பிறைநுதல் செல்வி, இரா. ஜெயகுமார்,  மனித வள பயிற்சியாளர் அருள்வேல்  ஆகியோர் உள்ளனர். (25-11-2012)

சுயமரியாதைத் தீ
ஜாதி, மதம் இவைதான் தமிழினத்தின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக நிற்கின்றன. அவற்றை தகர்த்து எறிந்தே தீர வேண்டும். என் உறவுக்காரப் பெண்கள் இருவர் நித்யமலர்(22) மற்றும் தாட்சாயிணி(22) ஆகியோர் இந்த முற்போக்கு திருமணம் செய்து கொள்ள இங்கே பதிவு செய் திருக்கிறார்கள், இது வாணியம்பாடி இளம்பரிதி.

ஜாதி தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளை யில் பெரியார் திடல் சுயமரியாதை தீயை பற்ற வைத்திருக்கிறது. தீ பரவட்டும்!
                -----------------------"விடுதலை” 25-11-2012

25.11.12

பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்களா? பார்ப்பனர்கள் இன்றைக்கும் எப்படி இருக்கிறார்கள்?

ஹிந்து தர்மாவைக் காப்பாற்றுகிறார்களாம்!

பார்ப்பனர்கள் இன்றைக்கும் எப்படி இருக்கிறார்கள்?

அவர்கள் எப்பொழுதோ திருந்தி விட்டார்கள். அவர்களிடையே எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன!

முனியாண்டி ஓட்டலில் மூச்சு முட்ட சாப்பிடுகிறார்கள் _ தண்ணி அடிக்கிறார்கள்; கஞ்சா அடிக்கிறார்கள் என்று சொல்லுவதெல்லாம் மாற்றமா?
மாட்டு நாக்கைத் தேடி வாங்கி சாப்பிடும் சர்.சி.பி. இராமசாமி அய்யர் கூட பார்ப்பனீயத் தன்மையைக் கட்டிக் காப்பதிலும், முட்டுக் கொடுப் பதிலும் முப்புரி நூலை முறுக்கிக் கொண்டு முன் வரிசையில் தானே நின்றிருக்கிறார்.

பல்கலைக் கழகத்திலே தங்க மெடல் வாங்கிய கே.ஆர். நாராயணன் பட்டுச் சட்டை போட்டு வந்தார் என்பதற்காக ஒரு கல்லூரி உதவிப் பேராசிரியர் வேலை கொடுக்க முன் வரவில்லையே! மாறாகக் கிளார்க்கு வேலை இருக்கிறது _ என்ன போறீயா என்று கேட்டவர்தானே?

குடிஅரசு தலைவரான நிலையில் இதுபற்றிக் கூறிப் புலம்பினாரே கே.ஆர். நாராயணன்.

வலைத் தளத்தில் ஒரு செய்தி! சென்னையைச் சேர்ந்த நாகராசன் என்ற ஒரு பார்ப்பனர்; அவர் ஒரு காலத்தில் நாத்திகவாதியாக இருந்து, மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் தெய்வத்தின் குரலைப் படித்துத் திருந்தி விட்டாராம். (அரைகுறை ஆசாமி!)
என்ன திருத்தம்? அங்கேதான் சமாச்சாரமே சத்தம் போடாமல் ஒளிந்து கொண்டிருக்கிறது.

நாகராஜனின் மகள் -வைஷ்ணவி பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணம் கட்டி இருக்கிறார்கள். பிள்ளையாண் டானுக்கும், பெண்ணுக்கும் இடைப் பட்ட வயது ஒன்றும் அதிகம் இல்லை _  பத்தே பத்து தானாம்!

சென்னையில் படித்த பெண்;  நன்றாகப் படித்துக் கொண்டிருந்த பெண்ணுக்குத் திருமணம் ஏற்பாடு _ பள்ளித் தலைமை ஆசிரியை நல்லா படிக்கிற பெண்ணுக்கு இப்ப என்ன கல்யாண அவசரம் என்று கேட்டி ருக்கிறார்.
இல்லை; இல்லை; கல்யாணத்துப் பிறகும் கூட எங்கள் பெண் படிப்பாள் என்று உத்தரவாதம் கொடுக்க, தலைமை ஆசிரியையும் நம்பி ஆசீர் வாதம் பண்ணி அனுப்பி வைத்தாராம்!

பெண்ணின் தாயார் சொல்கிறார் கேண்மின்! சிட்டியில கல்யாணப் பண்ணினா பிரச்சினை ஆகுமுன்னு கிராமத்திலே பண்ணினோம். அந்த நாள் கல்யாணம் பெரியவர் எப்படி சாஸ்திர வார்தமா பண்ணச் சொன்னாளோ அதே மாதிரி நடந்தது விவாகம் என்றார்.

பெண்ணின் தோப்பனாரோ கல்யாணம் சத்தியமங்கலத்தில் நடந்தது என்று கூறுகிறார்.

காஞ்சி  பெரியவாள் கூறியபடி நடத்தினார்களாம். ஹிந்து தர்மாவை கடைப்பிடிப்பதற்காகவே இப்படி செய்தார்களாம்!

பார்ப்பனர்கள் என்னவோ திருந்தி விட்டனர் என்று பார்ப்பனர்களைவிட பத்து மடங்கு அதிகம் பாய்ந்து பார்ப்பனர் அல்லாதார் சிலர் பசப்பு கிறார்களே _ இந்தக் குழந்தைத் திருமணத்துக்கு என்ன சமாதானம் சொல்லுவார்கள்?
ஹிந்து தர்மாவைக் காப்பாற்ற இவ்வாறு செய்தார்களாம். பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம்... ஆனால் சாஸ்திரத்தைப்பற்றி கவலைப்படுகிறார்களே தவிர சட்டத்தை மலம் துடைக்கும் காகிதமாக அல்லவா கசக்கி வீசுகிறார்கள்?

பெண்களுக்கு வயது வரம்பை நிர்ணயிக்கும் சாரதா சட்டத்தை எதிர்த்துப் பார்ப்பனத் தலைவர்கள் எப்படி எல்லாம் கூச்சல் போட் டார்கள்?
அரசாங்கம் இந்துக்களுடைய விவாகத்தில் தலையிட்டால் இந்து சமூகமே கெட்டு விடும்; பெண் களுக்கு 10,12 வயதுக்கு முன்னமையே திருமணம் செய்து விட வேண்டும், இல்லையேல் பாவம் வந்து சூழும் என்று பராசரர் எழுதி இருக்கிறார். நாங்கள் பாவத்திற்குப் பயப்படு வோமா? அல்லது உங்கள் சட்டத் திற்குப் பயப்படுவோமா என்று வயது சம்மதக் குழுவின் முன் சாட்சியம் அளித்தாரே திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்.

இந்து ஏட்டுக்கு மூக்குடைப்பு

இந்து ஏடு வேடிக்கையான வெண்டைக்காய், விளக்கெண்ணெய் பாஷ்யம் செய்தது.

இதுகுறித்து திராவிடன் ஏடு மூக்கை உடைக்கும் வண்ணம் பதிலடி கொடுத்தது.

இந்து பத்திரிகையில்  10 வயதுப் பெண்ணோ அல்லது 12 வயதுப் பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத் திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ! இந்துவே. நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனயே! இந்தக் காலத்தில்கூட 10 வயது அல்லது 12 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமோ? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்: 10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதானது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டுக்குள் விட்டுக் கதவு சாத்து கின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத்தனமாகப் பதில் எழுதிற்று.

இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால் ஓ இந்துவே! 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வதுபோல் கண்ணுக் குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10,12 வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பது ஏன்? அதுகூட உங்கள் நிச்சயதார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்திபோல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது. (திராவிடன் 13.03.1928 பக்கம் 7)
என்னதான் பார்ப்பனர்கள் படித் திருந்தாலும், பட்டம் பெற்றிருந்தாலும், தங்களின் பாசி பிடித்த பார்ப்பனீய ஆபாச கலாச்சாரத்திலிருந்து வெளியேறிட விரும்புவதில்லை.

எடுத்துக்காட்டாக திருவாளர் சோ. ராமசாமி அய்யரை எடுத்துக் கொள்ளலாம். இன்று வரை மனுதர்ம சாஸ்திரத்திற்கு முட்டுக் கொடுத்து எழுதி எழுதி மாய்கிறார்.

அந்த மனுதர்மம் என்ன கூறு கிறது? நாம் கூறினால் நமக்கு ஒரு முத்திரையைக் குத்தி விடுவார்கள் மறைந்த காஞ்சி மகாப் பெரியவாள் என்று மகாத்மியம் பேசுவார்களே, சந்திரசேகரேந்திர சரஸ்வதி, அவரின் அத்தியந்த சீடர் அன்னியோன்யம் என்று சொல்லுவார்களே _ அந்த அளவுக்குப் பாசக் கயிற்றால் பிணை யப்பட்டவரான அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

நக்கீரன் இதழில்  எழுதிய  எங்கே போகிறது இந்து மதம்? என்ற தொடர் பெரிய நூலாகவே வெளி வந்துள்ளது.

பால்ய திருமணம் குறித்து மனுகூறுவதை அவரே விசனப்பட்டு எழுதியுள்ளார். அதனை எடுத்துக் காட்டுவதற்குக்கூட, எழுதுவதற்குக் கூட பேனாமுனை வெட்கப்படுகிறது.

இந்த ஸ்மிருதி (மனுஸ்மிருதி) விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டு இருப்பதற்காக சமஸ்கிருதப் பாஷையே கூச்சப்பட வேண்டும் என்று பீடிகை போட்டே எழுதியுள்ளார்.
அவர் எழுதியதாவது: இக்கால அப்பாக்களுக்கு தெரி யாமல் இருக்கலாம். அக்கால அப்பாக் களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்தத் தண் டனையை அனுபவிப்பதை அவர் களால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அந்த அப்பாக்கள்; அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?

மாஸி மாஸி ரஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்...

இந்த ஸ்மிருதி விதியை எழுது வதற்கு என்  பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது.. தமிழன் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.

அது என்னவென்றால்... அடே கையாலாகாத அப்பா.. உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்க வேண்டும். தவறிவிட்டாய், அவள் இப்போது ருதுவாகி விட்டாள்.

ருதுவான பின் மூன்று வருஷத் துக்குள் நீ அவளுக்கு மண முடிக்க வில்லையென்றால்.. அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும்வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?

அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமா காமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற் றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறு கிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தண்டனை!

பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன் னதைத் தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல... இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது என்று எழுதியிருப்பவர் விடுதலை ஆசிரியர் அல்லர்; மறைந்த மகா பெரியவாளின்  அத்தியந்த சிஷ்யர் அக்னி கோத்திரம் ராமானுஜ தாத் தாச்சாரியார் _ நினைவில் வையுங்கள்!

பார்ப்பனர்களின் கூவம் கலாச்சாரத்துக்கு மேலும் என்ன சாட்சியம் வேண்டும்?
பத்தாம் வகுப்பில் படித்த பெண்ணை சத்தியமங்கலத்துக்கு அழைத்துச் சென்று அய்ந்து நாள்கள் கல்யாணம் நடத்தியுள்ளனர் - பெரிய சங்கராச்சாரியார் சொன்னதுக்கேற்ப நடத்தி இருக்கின்றனர். ஹிந்து தர்மாவைக் கடைபிடிப்பதற்காகத்தான் இப்படி செய்துள்ளார்களாம். பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்களா? பதில் உங்கள் முடிவுக்கே!

சட்டம் என்ன செய்கிறது?

15 வயது பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர். சிதம்பரத்தில் தீட்சதர்கள் வீடுகளிலும் பால்ய கல்யாணங்கள் இன்றும் நடந்து கொண்டு தானிருக்கின்றன. அரசு சட்டம் கொட்டாவி விட்டுக் கொண்டு இருப்பானேன்? பார்ப்பனர் சமாச்சாரம் என்றால் சட்டம்கூட பதுங்குக் குழிக்குப் போய் விடுமோ!

 ----------------------- மின்சாரம் அவர்கள் 24-11-2012 “விடுதலை”ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

24.11.12

பிளேக் நோய் தீர்த்த ஸ்லோகமாம்!சிருங்கேரிகள் பற்றி புரூடாக்கள்!


சிருங்கேரிகள் பற்றி புரூடாக்கள்!

நம் நாட்டில் ஒரு சொலவடை உண்டு; இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை. அப்படியானால் கந்தப் புளுகு தான் புளுகுகளின் மெகா தொகுப்பு போலும்!

இவ்வாரக் கல்கி ஏட்டில் (25.11.2012) சிருங்கேரி சங்கராச்சாரியார்பற்றி - சிருங்கேரி மடம்  - ஒரு ஆய்வு என்ற தலைப்பில் வெளியான ஒரு புத்தகத்தைப் பற்றி ஒரு நூல் அறிமுகம் என்ற பகுதியில் மதிப்புரை எழுதப்பட்டுள்ளது.
அதன் தலைப்பு என்ன தெரியுமா? ஸ்லோகத்தால் ப்ளேக்கை விரட்டினார் - இது சிருங்கேரி மடத்தின் சாதனையாம்! நூல்களின் தனி ரகப்புளுகுகள் அவர்களால் ஏமாற்றப்படும் பக்த கோடிகளும், பக்த கேடிகளும் அன்றாடம் பலியாவதால் உச்ச வரம்பின்றி புளுகி, கோணிப்புளுகன் கொயபெல்ஸையும் கூடத் தோற்கடித்து விடுகின்றனர்!
... பல ஆண்டுகளுக்கு முன்னால் பிளேக் என்னும் ஆட்கொல்லி நோய் பரவியபோது ஸ்ரீசச்சிதானந்த சிவாபிநவ நரசிம்மபாரதி சுவாமிகளின்
ஏதாவந்தம் ஸமயம் ஸ்வாபத் பயோசபி
ரக்ஷணம் க்ருத்வா!... என்று தொடங்கும்
துர்காஸ்தவம் ஸ்லோகத்தை மனமுருகிப்பாடி, நோய் பரவாமல் காத்தார் என்று எழுதுகிறார் இந்த ஆய்வாளர். நல்ல நூல் என்கிறார் மதிப்புரையாளர்.
ஸ்லோகங்களினால் - அதுவும் சிருங்கேரி சங்கராச்சாரியார் உச்சரித்த சில மந்த்ர ஸ்லோகங்களில் இப்படி பிளேக் போன்ற கொடிய நோய்களையே சொஸ்தப்படுத்தி விட்டார் என்றால் இதை விட நமக்கு வேறு மருத்துவமனையோ, டாக்டர்களோ, மருந்துக் கடைகளோ தேவையா? தேவையே யில்லையே!

பாழும் புற்று நோய் பல பேர்களைக் கொல்லும் நோயாகிறதே.
இருதயம்  - மாரடைப்பு, சர்க்கரை நோய் - இப்படி பலப்பல நோய்களால் மனித குலம் மாள்கிறதே அதற்கு சிருங்கேரியார் ஸ்லோகம் போதுமே!
பின் ஏன் அனாவசியமாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்கி பொருள்களை கோடிக்கணக்கில் செலவழிக்க வேண் டும்? அவரையே - சிருங்கேரி சங்கராச் சாரியையே தேசியமயமாக்கி ஒரு அவசரச் சட்டத்தை உடனே மத்திய அரசு போட்டு, எந்த நோய்க்கு எந்த ஸ்லோகம் என்று அவாளையே விட்டு சொஸ்தப் படுத்திடக் கேட்டுக் கொள்ளலாமே!
அந்தக் காலத்தில் ஈரோட்டில் பிளேக் நோயால் பல நூறு மக்கள் செத்தபோது, ஈரோடு நகரத்தில், நகரத் தந்தை நிலையில் இருந்து, தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று அருகில் இருந்து பிணங்களை அப்புறப்படுத்தி, சிகிச்சை சரியாக நடைபெற நேரிடையாக களத்தில் நின்று பாடுபட்டு வரலாறு படைத்தார் தந்தை பெரியார் அவர்கள்.
அதையெல்லாம் உணர்ந்துதான் சில ஆண்டுகள் கழித்து, சிருங்கேரிபீடம் பெரியாருக்கு ஸ்ரீமுகம் எழுதி, தாங்கள் பாரியாள் (நாகம்மையார்) சகிதமாக சிருங்கேரி மடத்திற்கு வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார் போலும்!
இந்த ஸ்லோகத்தை அவர் ஏன் பிளேக் வந்த பகுதிக்குச் சென்று அப்போது ஓதிடவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். (இதெல்லாம் நாஸ்தீகாளின் விதண்டாவாதம் என்கிறீர்களா?)
இப்போது டெங்கு காய்ச்சலால் பல பேர் அவதிப்படுகின்ற நிலையும், இறக்கும் கொடுமையும் உள்ளதே, சிருங்கேரி மடத் தலைவர் இந்த மாதிரி டெங்கு காய்ச்சலுக்கும் ஒரு ஸ்லோகத்தை ஓதி - மந்த்ரம் ஜெபித்து, குணமாக்கப்படாதோ! பகவத் கிருபையின் புண்யம் பரலோகம் வரை பரவாதோ!
முன்பு, திராவிடர் இயக்கத்திலிருந்து திடீர் பக்தர் ஆகிய ஒரு முன்னாள் அமைச்சர், காஞ்சிப் பெரியவாளை காஞ்சி மடத்தில் சந்தித்தபோது, மழை பெய்ய வில்லையே என்று பெரியவாளிடம் கேட்டாராம்; அவாள் அதெல்லாம் பெய்யும் என்று அவாள் திருவாய் மலர்ந்தருளினாராம். இவர் காஞ்சியி லிருந்து சென்னைக்கு காரில் திரும்பும் போது, ஸ்ரீபெரும்புதூர் வரும் போதே மழை கொட்டியதாம்! இந்த திடீர் 777 பக்தர் கோடிகள் நெஞ்சும் நெக்குருகி பெரியவாள் வாக்கு பலித்ததோ என்று மகிழ்ந்தனராம்!
இப்படி ஒரு கப்சா - புரூடா - சில வருஷத்துக்குமுன்!
இப்போது மேட்டூர் தண்ணீர் வராத தால் தஞ்சை - காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது; விவசாயிகள் கவலைப்படு கின்றனர்!
ஓடி தலைக்காவிரிக்கே சென்று தங்கிய வரலாறு படைத்தவாள்தான் இப்போது பெரியவாள்; இவாள் மந்த்ரம் ஜெபித்து மழையை வரவழைக்க முடியாதோ! நிச்சயம் முடியும் என்கிறார் பக்த கேடிகள் - ஆனால் அவாளுக்கு நேரமில்லை - பெயில் - கோர்ட் - வழக்கு இத்தியாதி இப்படி என்பதால்!
பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுங்கடா அட போக்கத்தவர்களே!
- என்ற உடுமலையார் பாட்டு அதோ கேட்கிறது. 

------------------------------- ஊசி மிளகாய் ----------"விடுதலை” 20-11-2012

23.11.12

சோவின் பார்வையில் - ராஜதர்மம் என்பது மனுதர்மம் தானே?


உபன்யாஸத்திலகம்
சோவின் பார்வையில் - ராஜதர்மம் என்பது மனுதர்மம் தானே?

துக்ளக் (28.11.2012) இதழில் நண்பர் சோ அவர்கள்.
ராமன் ஒரு மோசமான கணவன் என்று கூறிய ராம்ஜெத்மலானியின் கூற்றுக்கு பதில் எழுதியுள்ளார்.

ராம் ஜெத்மலானி சட்ட நிபுணரே தவிர, உபன்யாஸத்திலகம் அல்ல. அவர், ராமர் ஸீதையை கை விட்டவர்; ஆகையால் அவர் நல்ல கணவன் அல்ல என்று ஒரு தீர்ப்பு அளித்திருக்கிறார். இது பலவகைகளில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், இதுவே இன்று கூறப்படுகிற கருத்து அல்ல; ராமாயணத்திலேயே ராமரின் முடிவு விமர்சிக்கப்படுகிறது. ரைட் ஆனரபிள் வி.எஸ். சீனுவாச சாஸ்திரி தனது இராமாயண உரைகளில் இதைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இப்படி பலர் அபிப்பிராயபேதம் கொண்டு பேசியிருக்கிறார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்த வரையில் ராமர் செய்தது ராஜரீகமான ஒரு அவசியமான காரியமாகப் போய்விட்டது.

ராம் ஜெத்மலானி சொல்வது போல் ஒரு மீனவர் பேசியது போல் (மீனவர் அல்ல சலவைத் தொழி லாளி என்பது முக்கிய கருத்து அத்தொழி லாளி அவரது சந்தேகம் நியாயமானது - பொருத்தமானது காரணம் அவருக்குச் சேலைகளைத் துவைக்கும்போது ஏற்பட்ட பழைய  அனுபவம் புதிய அனுபவம் என்ற அடிப்படையிலேயே அப்படி ஒரு சம்பவம் - சந்தேகம் கூறப்பட்டிருக்கிறது) நகரத்தில் இந்தப் பேச்சு பரவிக் கொண்டே இருக்கிறது என்று ஒற்றர்கள் மூலம் அறிந்தார்.

இப்படி ஸீதையைப் பற்றி சந்தேகப்படுகிற பேச்சு பரவிக் கொண்டே போனால், அது அவளுக்கும் நல்லதல்ல. ஆட்சிக்கும் நல்லதல்ல என்ற முடிவுக்கு அவர் வந்தார். Ceaser’s wife must be above suspicion என்று சொன்னால் அதை நாம் பெரிய வார்த்தையாகப் பாராட்டுகிறோம். அதை ராமர் காரியத்தில் காட்டினார்.
அரசனின் மனைவிபற்றி நாட்டில் பலவித விமர்சனங்கள் எழுந்து விட்டால், அரசனுக்கு மரியாதை அவனுடைய ஆணைகளுக்கு மரியாதை இருக்காது. அவனுடைய ஆணைகளுக்கு மரியாதை இல்லை என்றால், ராஜ்யத்தில் அமைதி ஒழிந்து போகும். இவையெல்லாம் கருத் தில் கொண்டுதான் ராமர் ஸீதையை வெளியேற்றினார்.

(இது ஏன் ரைட் ஆனரபிள் சீனுவாச சாஸ்திரிக்குத் தெரியாமல் இந்த லெப்ட் ஆனரபுள்களுக்கும் மட்டும் எப்படி தெரிகிறதோ தெரியவில்லை!)

ஒரு வகையில் பார்த்தால், அது அவர் தனக்குத் தானே விதித்துக் கொண்ட தண்டனை; ஏனென்றால் அந்த அளவுக்கு அவர் ஸீதைமீது அன்பு கொண்டிருந்தார்.

ஸீதையை வெளியேற்றியபின்பு அவர் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இப்படிக் கூறுகின்றன சோ வின் கூற்று ஓட்டையை அடைக்கும் உதவாக்கரை வக்கீலின் வாதம்தான் அக்கால ராஜதர்மம் என்பது மனுதர்மமே! அதன் ஆட்சியே! பெண் என்பவள் சுதந்திரமாக விடப்படக் கூடியவள் அல்ல என்று கூறி, பெண்கள் இயல்பாகவே மோசமானவர்கள் - கணவனால் அடக்கி ஆளப்பட வேண்டிய வர்கள் என்பதை நிலை நாட்டுவது மனு தர்மம் - மனித தர்மத்தின் நேர் எதிரான பிறவியை அடிப்படையாகக் கொண்ட குல(அ) தர்மம்!
இவர் கூறுவதுபோல், இராமன் ஏக பத்தினி விரதன் அல்ல வால்மீகி இராமா யணத்திலேயே ஆதாரங்கள் உண்டு.

அதைவிட, இராவணனிடமிருந்து மீட்டு வந்த சீதையைப் பார்த்து, ஸீதே நீ ஒழுக்கமுள்ளவள், தவறு செய்யாதவள் என்பதற்காக உன்னை நான் மீட்டுக் கொண்டு வரவில்லை.

உனக்காக யுத்தம் செய்தேன் என்று நினைக்காதே, என் வீரத்தைக் காண் பிக்கவே என் க்ஷத்திரிய தர்மத்தைக்  நிறைவேற்ற வேண்டியது, எனக்குச் செய்த அவமானத்தைப் போக்க வேண்டியது கடமை. துஷ்டனான இராவணனுடைய வீட்டில் வசித்ததால் உன் நடத்தைப் பற்றி சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது

----------------------- வால்மீகி இராமாயணம் சர்க்கம் 117, பக்கம் 487

இதை அப்படியே மறைத்திடுவது தான் அறிவு நாணயமா?

அது மட்டுமா? அவன் நிறைமாத கர்ப்பிணியை காட்டுக்கனுப்பியதற்கு - அக்னி பிரவேசத்திற்குப் பின்பும் என்ன வகையில் நியாயப்படுத்தக் கூடிய செயல்?
இராம் ஜெத்மலானி கூற்றை நிரூ பிக்க இதுபோதாதா? இதுவும் ராஜ தர்மம் தானா?

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற ஆங்கில மொழியைக் காட்டும் சோ அவர்களே,

அந்த மொழியின்படி, அது சீசரின் மனைவியின் கடமைபற்றியதே தவிர சீசரைப் பற்றியதல்லவே. பெண் சந்தேக மற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினால், அது சீதையைப் பொறுத் ததே தவிர, இராமனின் செயலை நியாயப்படுத்த அதைத் துணைக்கழைப்பது, பொருத்தமற்ற, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பொருந்தாவாதம் அல்லவா?
எனவே புதிய உபன்யாஸத்திலகம் சோ அவர்களே இந்த வழக்கிலும் உங்களுக்குத் தோல்விதான் மிச்சம்
 

 -------------------------- ஊசி மிளகாய் - எழுதிய கட்டுரை-”விடுதலை” 22-11-2012

22.11.12

நாத்திகம் பேசாமல் நாசமாய்ப் போன பக்திப் பஜனைப் பாட்டா பாடுவார்கள்?

ஆம், அதே புதுச்சேரியில்தான்!
22.7.1945 திரையரங்கு ஒன்றில் திராவிடர் கழகத் துவக்க விழா; ஏற்பாடு செய்தவர் யார்?

இயக்கக் கவிஞன் என்று நாம் மார்புப் புடைக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்தான் அந்த விழா ஏற்பாட்டாளர். வெறும் மாலை நேரம் பொதுக் கூட்டமல்ல காலை - மாலை இருவேளைகளிலும் விழா!

தலைமை ஏற்றவரோ தந்தை பெரியார்! கழகக் கொடியேற்றியவரோ அறிஞர் அண்ணா! தந்தை பெரியார் படத்தைத் திறந்தவரோ மாணவர் க.அன்பழகன் (இன்றைய பேராசிரியர்). திராவிட நாடு படத்தினைத் திறந்து வைத்து ஒரு மணி நேரம் முழங்கியவர் தந்தை பெரியார்.

ஆந்திர மாநிலச் சுற்றுப் பயணத்தை முடித்து வந்ததால் களைப்புற்ற அந்தக் கர்ச்சனைச் சிங்கம் மயக்கமுற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் அடைந்தனர் பதற்றம், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி டி.சண்முகம் அவர்களைத் தலைமை ஏற்கச் சொல்லி ஓய்வெடுக்கச் சென்றார் தந்தை பெரியார். பிற்பகல் நிகழ்ச்சியிலோ கலகம் மூண்டது. கறுஞ் சட்டைச் சிறுத்தைகளின் திரண்டு வந்த கருத்து  வெள்ளத்திற்கு முகம் கொடுக்க முடியாத கோழைகள் காலித்தனத்தில் இறங்கினர். அந்தக் காலகட்டத்தில் இவை எல்லாம் சர்வசாதாரணம்.

வீதிகளில் சென்ற கருஞ்சட்டைத் தொண்டர்கள் எல்லாம் தாக்கப்பட்டனர். அதோ பாரடா வாத்தியாரு - அவனை விடாதே - பிடி! என்று ஆத்திரத்தோடு ஓடி வந்தது ஒரு கும்பல். வாத்தியார் என்றால் வேறு யாருமல்ல - நமது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைத்தான் அப்படி அழைத்தார்கள் - விரட்டினார்கள்.
புரட்சிக்கவிஞர் மட்டுமா? காஞ்சி கலியாணசுந்தரமும், அன்றைய திருவாரூர் மு.கருணாநிதி என்ற 21 வயது இளைஞரும் சிக்கிக் கொண்டனர்.

கலைஞர் சிக்கிக் கொண்டார். ஆனமட்டும் அடித்துத் தூக்கி எறிந்து சென்றனர் - பையன் குளோஸ் என்ற எண்ணத்தில். அடிபட்ட அந்த இளைஞனைப் பார்த்த அய்யா ஆசுவாசப்படுத்தினார்.  அதைப்பற்றிக் கலைஞர் அவர்கள் நெஞ்சுக்கு நீதியில் எழுதுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்துத்தான் நான் கண்விழித்துப் பார்த்தேன். எங்கேயோ வீட்டுத் தாழ்வாரத்தில் நான் படுக்க வைக்கப்பட்டிருந் தேன். முதிர்ந்த ஒரு தாயும், ஒரு சிறுமியும், ஓர் இளை ஞனும் என் அருகே இருந்தார்கள். நான் கண் விழித்துப் பார்த்தபோது அந்தத் தாய் சொன்ன வார்த்தை என் நெஞ்சில் அப்படியே பதிந்து விட்டது.
அய்யோ, யார் பெற்ற பிள்ளையோ! இப்படிச் சாகக் கிடக்கிறதே? என்பதுதான் அந்தத் தாயின் வாயிலிருந்து வந்த கனிவு மிக்க வாசகம்.

நீண்ட நாள் வரை தேடிக் கொண்டிருந்தேன்; புதுவை யில் எனக்கு உயிரளித்த அந்த நல்லவர்கள் யாரென்று. அதற்குப் பிறகு நான் அவர்களை இரண்டொரு முறை சந்தித்தேன். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் என்பது மட்டும் எனக்குத் தெரியும்

இதற்கிடையில் காலையில் கலைக்கப்பட்ட கழக மாநாடு மீண்டும் மாலையில் கூட்டப்பட்டு அழகிரிசாமி அந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் சொன்ன வாசகம்தான், காலையில் சில கவலை தரத்தக்க நிகழ்ச்சிகள் நடந்ததாகக் கேள்விப்பட் டேன் - நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்பதாகும்.
என்னுடைய நிலைமை என்னவாயிற்று என்று தெரியாமல் தலைவர்கள் ஊரெல்லாம் ஆள் அனுப்பித் தேடியிருக்கிறார்கள். பெரியாரும், அண்ணாவும் என்னைக் காணாமல் துடித்துப்போயினர். விடியற்காலை நாலு மணிக்கு தலைவர்கள் தங்கியிருக்கும் இடம் தெரிந்து அவர்களிடம் போய்ச் சேரப் புறப்பட்டேன். மீண்டும் என்னைத் தெருவில் கண்டால் கலக்காரர்கள் உயிரைப் பறித்துவிடக் கூடுமென்று அஞ்சிய எனக்கு உதவி செய்த வீட்டார் என்னை மாறுவேடத்தில் போகுமாறு வலியுறுத்தினர்.

அவர்களே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து, முஸ்லீம் வேடத்தில் என்னை அனுப்பி வைக்கத் திட்ட மிட்டனர். கைலி, நீண்ட ஜிப்பா, தலையில் குல்லாய் இவைகளுடன் ரிக்ஷா ஏறி தலைவர்கள் இருக்குமிடம் சென்றேன். பெரியார் கண்ணுறங்காமல் என்னைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். என்னைக் கண்டதும் ஆரத் தழுவிக்கொண்டு, சுகமாக இருக் கிறயா? என தழுதழுத்த குரலில் கேட்டார்.

அதற்குப் பிறகு அவரே என் காயங்களுக்கெல்லாம் மருந்திட்டார். என்னுடன் வா, போகலாம் என்று ஆணையிட்டார். நானும் அவருடன் புறப்படத் தயாரானேன். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் பெரியாரின் ஈரோட்டுக் குடிஅரசு அலுவலகத்தில் துணையாசிரி யனாகப் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. என் இனிய நண்பர் கருணானந்தம், ஜனார்த்தனம், தவமணி ராஜன் ஆகியோர் குடிஅரசு அலுவலகத்தில் பணியாற்றி வந்த காலம் அது.
(கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூல் பக்கம் 90, 91)

தேதி சொல்லியாயிற்று - நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பும் சொல்லியாயிற்று, கலவரத்தைப் பற்றியும் விவரித்தாகி விட்டது. இவையெல்லாம் நடந்தது எந்த ஊரில்?

எந்த ஊரிலா - புரட்சிக் கவிஞரை ஈன்று புறந்தந்த அந்தப் புதுச்சேரி மண்ணில்தான் இவ்வளவு அரங் கேற்றங்களும்.
கருஞ்சட்டைத் தோழர் குருதி கொட்டிய அதே புதுவையில்தான் நாளை மறுநாள் (23.11.2012) வெள்ளியன்று திராவிடர் கழக மாநாடு.
1945இல் நடந்ததுபோல காலை - மாலை இரு வேளைகளிலும் மாநாட்டு நிகழ்ச்சிகள். கூடுதலாக ஒரு சிறப்பு - இந்த மாநாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி யும் உண்டு.

ஊரையே கலக்கப் போகிற இந்த கருஞ்சட்டை வெள்ளம் கரைபுரண்டு ஓடப்போகிறது! கருத்துக் கர்ச்சனை கேட்கப் போகிறது. கத்துங்கடல் சூழ்ந்த புதுவையிலே கழகத் தோழர்களின் முழக்கம் கடல் அலைகளையும் அடங்கச் செய்யும். ஆவேசம் உண்டு என்றாலும், அமைதிக்குப் பங்கம் இருக்காது; கனல் பறக்கும் பேச்சு உண்டு - எந்த நிலையிலும் கண்ணியத் திற்குக் குந்தகம் இருக்கவே இருக்காது.

புரட்சி முழக்கங்கள் விண்ணை முட்டும். ஆனால் புரட்டுப் பேச்சுகள் கிடையாது.  பந்தை அடிக்க முடியாத கோழையல்லவா காலை அடிப்பான்? தலைமுறை தலை முறையாக கடல் கடலாய்க் கருத்துச் செல்வங்களைக் குவித்துச் சென்றுள்ளாரே குவலயத் தலைவராம் நமது அறிவுத் தந்தை. முக்கியமானதோர் காலகட்டத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. புதுச்சேரி என்றாலும், தமிழ்நாடு என்றாலும் நம் தமிழ் மக்களின் பூமிதானே. பிரச்சினைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பயணம் செய்யக் கூடியவைதானே.
ஜாதியற்ற சமூகம் படைப்போம், தீண்டாமை நோயைத் தீர்த்துக் கட்டுவோம்! மூடநம்பிக்கையை முற்றாக ஒழிப்போம்; சமூக நீதி சங்கநாதம் செய்வோம்! பெண்ணுரிமைக்குப் பீரங்கிக் குரல் கொடுப்போம்!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கு வழி செய்ய வலியுறுத்துவோம். மண்ணுக்கு உரிமை கேட்போரே! மனித உரிமைக்குக் குரல் கொடுப்போம், வாரீர்! வாரீர்!! என்று அழைப்புக் கொடுப்போம்!
பெரியார் பணி முடிக்க வாரீர்! வாரீர்!! என்று பெருங்குரல் கொடுப்போம், வாரீர்! வாரீர்!! ஒரு சேதி தெரியுமா?  

அதுதான் நமது மாநாட்டு விளம்பரப் பொறுப்பை எப்பொழுதும் நம் எதிரிகள் கையில் எடுத்துக் கொள்வார்களே - அதே வேலையைத்தான் புதுவையிலும் செய்துள்ளார்கள்.

சபாஷ்! அப்படி வாருமய்யா - இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களே! கருத்தைக் கருத் தோடு சந்திக்க இயலாத கடைந்தெடுத்த கோழைகள் காவல்துறைக்கு மூச்சு இரைக்க இரைக்க ஓடி மனு கொடுத்துள்ளார்களாம். கருஞ்சட்டைக்காரர்கள் நாத்திகம் பேசுவார்களாம். நாத்திகம் பேசாமல் நாசமாய்ப் போன பக்திப் பஜனைப் பாட்டா பாடுவார்கள்?
அந்த நாத்திகம்தானே சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டடி என்ற தன்மான உணர்வும் ஊட்டியது. அந்த நாத்திகம்தானே தமிழர்களுக்குக் கல்வி உரிமையை வாங்கிக் கொடுத்தது - உத்தியோக வாய்ப்புக்கு வழி செய்து கொடுத்தது. இன்னும் எத்தனை எத்தனையோ பட்டியல் உண்டே - இந்த நாத்திக இயக்கம் சாதித்துக் கொடுத்தது சாதனைகள் பற்றி! வாலாட்டிப் பார்க் கிறார்கள் - வாருங்கள், தோழர்களே வங்கக் கடலாய் - கருங் கடலாய்! அடேயப்பா - இத்தனை ஆயிரம் இளைஞர்களா இந்த ஈரோட்டுக் கிழவனாரின் மறைவிற்குப் பிறகும்? என்று கரித்துக் கொட்டட்டும் கபோதிகள்.
காலை கருத்தரங்க நிகழ்ச்சிக்கே வந்து குவிந்திடுவீர்! குடும்பத்தாரையும் கூட்டி வாருங்கள். தமிழர் தலைவர் அழைக்கிறார் புறப்படுங்கள். புரட்சிக் கவிஞன் மண்ணிலே புரட்சி இயக்கத்தின் மகத்துவம் காட்டுவோம், வாரீர்! வாரீர்!!
தீக்குண்டம்! தீக்குண்டம்!
தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி காணத்தக்கது. புதுச்சேரி மக்களால் பரபரப்பாகப் பேசப்படும் செய்தி! பக்திக்கும், தீமிதிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று நிரூபிக்கும் - அறிவியல் சிந்தனையைத் தூண்டும் செயல்முறை விளக்கம் இது. வாருங்கள், தோழர்களே!
                    ------------------------மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை 21-11-2012

21.11.12

டெசோவின் பயணம்


டெசோவின் அடுத்த கட்ட கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்று (19.11.2012) நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

டெசோவைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் விமர்சித்தவர்கள்கூட இப்பொழுது அதன் செயல்பாட்டை நேர்மையான முறையில் உள்வாங்கிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

12.8.2012இல் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாடு - அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் -  மற்றும் அதன் விளக்கம் அடங்கிய மனுவினை அய்.நா. செயலாளரிடம் அளித்தது; ஜெனிவா மனித உரிமை ஆணையரிடமும் அளித்து விளக்கம் தெரிவித்தது; லண்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற (7.11.2012) மாநாட்டில் பங்கேற்றது - என்று தொடர்ச்சியாக, ஆற்றொழுக் காக டெசோ மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஆக்க ரீதியானவை -  ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் ஆகும்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அசாதாரண கொடுமைகளுக்குப் பிறகு - எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரம் என்பது முக்கியமாகக் கையில் எடுத்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதே நேரத்தில்  ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரரான ராஜபக்சேமீது இனப் படுகொலை குற்றச்சாற்று என்பதிலும் கவனம் கொண்டு அந்தத் திசையிலும் காய்கள் நகர்த்தப்பட்டும் வருகின்றன.

இலங்கை அரசு, மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கிறது என்ற கருத்தாக்கம் மனித உரிமை ஆணையத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்பொழுது வெளிப்படையாகவே அய்.நா. தன் வாயைத் திறந்துள்ளது. அய்.நா. மன்றம் தன் கடமையைச் செய்யத் தவறி இருக்கிறது என்று அம்மன்றத்தின் பொதுச் செயலாளரே வெளிப் படையாக ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களைப்பற்றி குற்றவாளியான நாடே விசாரிப்பது என்னும் முடிவு - நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பது போன்றதாகும்.

இலங்கை அரசு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப்படுகொலைகள் குறித்து சுதந்திர மான விசாரணை நடத்திட பல நாடுகள் கொண்ட குழு ஒன்றினை அமைக்க வேண்டுமென அய்.நா. மன்றத்துக்கு லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு மிக மிகச் சரியானதாகும்.
இந்தக் கருத்தைத் தொடக்க முதலே நாம் கூறிக் கொண்டும் வந்திருக்கிறோம். லண்டன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தைத் தொடர்ந்து நேற்று சென்னையில் கூடிய டெசோ கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள திட்டம் சிறப்பானது.

அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தில் உறுப்பு நாடுகளான 47 நாடுகளின் இந்தியாவிற்கான தூதுவர்களையும் டெசோ சார்பில் நேரில் சந்திப்பது என்பது  - இந்த வகையில் மேலே முன்னேறுவதற்கான படிக்கட்டு என்பதில் அய்யமில்லை.
இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பு என்ற கருத்தாக்கம் உருவாக்கப்படுவதற்கு மேலும் மேலும் வலுவான அழுத்தத்தை நாம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வாக்கெடுப்பு -  ஒன்றும் புதிதான ஒன்றல்ல; இதற்கு முன் மாதிரிகளும் உண்டு.

ஒரு பக்கம் எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை, இன்னொரு பக்கம் ஈழத் தமிழர் அழிவுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை என்கிற இரண்டு தண்டவாளத்தில் நிதானமாக அதே நேரத்தில் உறுதியாக டெசோ தன் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கும் என்பதில் அய்யமில்லை.
வெறும் உணர்ச்சிகளை  ஒரு பக்கத்தில் ஒதுக்கி அதே நேரத்தில் சரியான உணர்வுடன் செயல்படும் பொழுதுதான் வெற்றி என்பது உறுதிப்படும். அந்த வகையில்தான் டெசோவின் செயல்பாடு இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
                               -----------------------------"விடுதலை” தலையங்கம் 20-11-2012

20.11.12

பக்தியில் நம்பிக்கை உள்ளவர்கள் இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இராம. கோபாலன் கோரிக்கையும் நமது கோரிக்கையும்
எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இந்துத்துவாவாதிகளுக்கு அவை எல்லாம் ஒரு பொருட்டல்ல.

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளரான திருவாளர் இராம. கோபாலன் அய்யர் அரசுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.

1) ஒவ்வொரு கோயிலிலும் உள்ள விக்கிரகங்கள், அவற்றின் நகைகள் ஆகியவைபற்றி முழு மதிப்பீடு செய்து குறிப்பிட்ட கால அளவில் பதிவு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அவை சரி பார்க்கப்பட வேண்டும். இதில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிறார் திருவாளர் இராம. கோபாலன்.

இந்துக் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி வந்த இவர்களுக்கு இப்பொழுது நல்ல புத்தி வந்துவிட்டதா? அரசின் கையில் இருந்தால்தான் அவை பாதுகாப்பு என்று மனம் மாற்றம் பெற்று இருக்கிறார்களா?

சர்.சி.பி, இராமசாமி அய்யர் தலைமையிலே அமைக்கப்பட்ட இந்துக் கோயில்களுக்கெல்லாம் நேரில் சென்று ஆய்வு செய்து கோயில்கள் எப்படி எல்லாம் அர்ச்சகர்ப் பார்ப்பனர்களின் சுரண்டல் கூடாரங்களாக இருக்கின்றன - பாழடைந்த மண்டபங்களாகக் காட்சி அளிக்கின்றன. அர்ச்சகர்களே கோயில் சிலைகளை அபகரிக்கின்றனர் என்றெல்லாம் விலாவாரியாக வெளிப்படுத்தியதுண்டு.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் இந்து அற நிலையத் துறை என்ற ஒன்றை உருவாக்கி, இந்துக் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த காரணத்தால்தான் ஓரளவு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராசன் கோயில் தீட்சதர்ப் பார்ப்பனர்களின் தனி உடைமையாக இருந்தது. அதனை தி.மு.க. ஆட்சியில், கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராகவிருந்தபோதுதான் இந்து அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

நீதிமன்றம் வரை சென்று பார்த்தனர் தீட்சதர்கள்.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கை சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பும் அளித்தது. அதனை எதிர்த்தும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆண்டு ஒன்றுக்கு வெறும் 32 ஆயிரம் ரூபாய்தான் வருமானம் என்று நீதிமன்றத்தில் தீட்சதர்கள் கணக்குக் காட்டினர். அதிலும் பெரும்பாலும் செலவு என்று கணக்குக் காட்டினர்.

அதே நேரத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் ஆண்டு ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை விலக்கிக் கொள்ள முயற்சி எடுப்பாரா இந்து முன்னணி அமைப்பாளர்?
இன்னொன்றையும் கோயில்களில் உள்ள சாமி சிலைகளின் கணக்கெடுப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

கடவுள் சிலைகளின் சக்திமீது அந்த அளவுக்குத்தான் நம்பிக்கை போலும்! அந்த சிலைகளின்மீது யாரும் கை வைக்க முடியாது - சர்வ சக்தி வாய்ந்தது என்று இராம. கோபாலன்கள் உண்மையிலேயே நம்புவார்களேயானால், இது போன்ற கோரிக்கைகளை வைக்க முன் வருவார்களா?

கோயில் சிலைகள் திருட்டு என்பது அன்றாட செய்தி யாகிவிட்டது. சில திருட்டுகளில் அர்ச்சகப் பார்ப்பனர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதும் நிரூபணமாகி விட்டதே - இதைப்பற்றி  எல்லாம் இந்துத்துவாவாதிகள் வாய் திறக்க மாட்டார்கள்.

இந்துத்துவா பேசும் இந்தப் பேர்வழிகள் இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? தி.மு.க. அரசு பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுவானேன்? மற்ற மற்ற விடயங்களில் எல்லாம் இந்துக் களே! ஒன்று சேருங்கள் என்று அழைப்புக் கொடுக்கும் இவர்கள். அந்த இந்துக்களில் பயிற்சி அளிக்கப்பட்ட எந்த ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை ஏற்றுக் கொள்ளாதது ஏன்?

காரணம் வெளிப்படையானதே! இந்து மதக் கோயில்கள் எல்லாம், அவை பார்ப்பனர்களின் தனி உடைமை, பார்ப்பனர்கள்தான் கடவுளுக்குப் பக்கத்தில் செல்லும் உரிமை பெற்றவர்கள் என்பதை நிலை நாட்டுவதன் மூலம்,  சமூக அமைப்பில் தங்களின் உயர் ஜாதித் தத்துவத்தை நிலை நாட்டுவதுதான் இதில் உள்ள சூட்சுமம் ஆகும்.

பார்ப்பனர் அல்லாதாரில் பக்தியில் நம்பிக்கை உள்ளவர்கள் இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

2) அனைத்து ஊர்களிலும் தேர்த் திருவிழா நடைபெற வேண்டும், அதற்கு இந்து அற நிலையத்துறை ஆவன செய்ய வேண்டும், என்பது அடுத்த கோரிக்கை
தமிழ் செம்மொழியாவதுதான் முக்கியமா? நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன;அவற்றை எல்லாம் விட்டு விட்டு, செம்மொழி ஆக வேண்டும் என்று குரல் கொடுப்பது ஏன்? என்று பார்ப்பனத் தலைவர்களும், பார்ப்பன ஊடகங்களும் விழுந்து விழுந்து எழுதுவார்கள்.

இப்பொழுது அதையேதான் நாமும் திருப்பிக் கேட்க வேண்டும்.
நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன - கடும் மின்வெட்டு உட்பட! இந்தநிலையில் தேர் ஓட்டம்தான் முக்கியமா? என்று கேட்க விரும்புகிறோம்.

மக்களில் அடிப்படை பிரச்சினைகள், தேவைகள் தீர்க்கப்பட கோயில் சொத்துக்களை அரசு பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் - அரசுக்கு நாம் வைக்கும் கோரிக்கை இதுதான்!


          -----------------------"விடுதலை” தலையங்கம் 19-11-2012