Search This Blog

Showing posts with label பெரியார்-மற்றவர்கள். Show all posts
Showing posts with label பெரியார்-மற்றவர்கள். Show all posts

6.8.23

பெரியார் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தாரா?

 

பெரியார் ஈ.வெ.ராவும் இஸ்லாமும்


இந்துத்துவச் சொல்லாடல்களுக்கும்  நடைமுறைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் என பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு இணையாக இந்திய வரலாற்றில் யாரையாவது சொல்ல முடியுமானால் அது புத்தரும் அம்பேத்கரும் மட்டுமே. இவர்களில் புத்தரையும் அம்பேத்கரையும் கூட இன்று இந்துத்துவ சக்திகள் எதையாவது சொல்லித் தம்முள் வாங்குவதற்குச் சதி செய்து கொண்டிருக்கும் சூழலில் இறுதிவரை இந்துத்துவ சக்திகளால் தொடமுடியாத நெருப்புத்துண்டமாக விளங்கக்கூடியவராகப் பெரியார் ஒருவரே உள்ளார். இந்நிலையில் இன்று இந்துத்துவ எதிர்ப்பில் அக்கறையற்ற சக்திகள் இன்னொரு வகையில் பெரியார் மீது பழி தீர்க்க முயற்சிக்கின்றனர். பெரியார் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தார் என்ற பொய்யான அவதூறைக் கட்டவிழ்த்து விடுவதுதான் அது. ஆனால் பெரியாரின் சுமார் ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்வையும் அவரது பேச்சுக்களையும் கூர்ந்து கவனிப்போருக்கு இப்படிச் சொல்வது எத்தனை பெரிய அபத்தம் என்பது விளங்கும். இது தொடர்பான அவரது சில கொள்கைகளையும் செயற்பாடுகளையும் மட்டும் பார்ப்போம்.

 

பெரியாரது அரசியல் வாழ்வின் தொடக்கப்புள்ளியாக வைக்கம் போராட்டத்தைக் கருதலாம். இது குறித்து பெரியாரே எழுதியுள்ள கட்டுரை அவரது சிந்தனைத் தொகுப்புகளில் உள்ளது. ஈழவர், புலையர் முதலான தீண்டத்தகாத  மற்றும் சூத்திரச் சமூகத்தினர் பொதுச்சாலையில் நடக்கக்கூடாது என்பதை எதிர்த்து அப் போராட்டம் நடைபெற்றது(1925).

போராட்டத்தின் உச்சகட்டத்தில் திருவிதாங்கூர் ராணி காந்தியாரோடு பேச்சு நடத்தினார். சாலையைத் திறந்துவிடத்தயார் எனவும் அதற்காக கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று சொல்லக்கூடாது என்றும் ராணி விதித்த நிபந்தனையைக் காந்தி ஏற்றுக்கொள்ள போராட்டம் முடிவுக்கு வருகிறது.

பெரியார் இதை ஒப்புக் கொள்ளவில்லை. கோயிலுக்குள் நுழைவது என்கிற பிரச்சாரத்தைத் தொடர்கிறார். பெரியார் சொல்கிறார்.

“அடுத்து எர்ணாகுளத்தில் ஒரு மாநாடு என் தலைமையில் கூட்டப்பட்டது. அதில் சாதி ஒழிப்புக்காக சாதி இல்லாத மதமாகிய இஸ்லாம் மதத்துடன் இந்துக்கள் சேர்ந்து விடுவது என்று தீர்மானம் நிறைவேற்றக் கொண்டு வரப்பட்டது. இது செல்வாக்குக்குட்பட்டவர்கள் கிறிஸ்துவ மதத்தில் சேர்வது என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். மாஜி மந்திரி ஐயப்பன் அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு போய்ச் சேருவது என்பதைத் திருத்தி போட வேண்டும் என்று சொல்லி ஏக மனதாக நிறைவேற்ற செய்தார். இஸ்லாத்தில் சேருவது என்ற தீர்மானம் வந்த அன்றைக்கே ஐம்பது பேர்கள் முஸ்லிம்களாகிவிட்டார்கள். பிறகு வெளியிலும் பலர் மதம் மாறிவிட்டார்கள், இது ஒரு பெரிய கலக்கு கலக்கிவிட்டது.”(விடுதலை 9.1.1959)

விசயம் அத்தோடு நிற்கவில்லை. இஸ்லாமாக மாறிய புலையர்களுக்கும் நாயர்களுக்கும் பலமான மோதல் ஏற்பட்டது. ஒருவர் செத்தும் போனார். இன்னும் பலர் இஸ்லாமாவது என்ற நிலை ஏற்பட்டவுடன் அன்றைய திவான் சி.பி.ராமசாமி ஐயரின் ஆலோசனையின்படி கோயில் கதவுகள் திறக்கப்பட்டன.

தீண்டத்தகாதவர்களின் விடுதலைக்கான வழிகளில் முதன்மையானது மதமாற்றமே, அதிலும் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதே என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார். எங்காவது தீண்டத்தகாதவர்களுக்கு நன்மைகள் ஏற்பட்டிருக்கிறது என்றால் அது மதமாற்றம் என்கிற அச்சுறுத்தலின் விளைவாகத்தான் நடந்துள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

உலகத்திலேயே மிகப்பெரிய கொடுமை தீண்டாமைதான் என்று சொன்னதோடு நிற்காமல்,“இந்த வியாதி மிகப் பெரியது. இது புற்று தொழுநோய் போன்றது. வெகு நாளைய நோய்” என்றும்,  இந்த நோயிலிருந்து விடுதலை பெற ஒரே வழி இந்து மதத்தை விட்டு வெளியேறுவதுதான் எனத்திரும்பத் திரும்பவும் சொன்னார். வெளியேறுவது என்று சொன்னதோடும் நிறுத்திவிடவில்லை.

“(இந்த நோய்க்கு) ஒரே மருந்துதான். அது இஸ்லாம்தான்! இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம்  என்னும் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும். வீரம் கொடுக்கும். நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்.” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் (‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ என்னும் பெயரில் குடியரசு பதிப்பகத்தால் இந்த உரை சிறு நூலாக 1947ல் வெளியிடப்பட்டது.)

 

தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக மத மாற்றத்தை முன் மொழிந்த இன்னொரு பெருந்தலைவரான அம்பேத்கரின் முயற்சிக்கு அகில இந்திய அளவில் பெருந்துணையாக நின்றவரும் பெரியாரே. தொடக்கத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறுவது என்கிற நிலைப்பாட்டையும் அம்பேத்கர் சிந்தித்தார். 1930ல் முஸ்லிமாக மாறுவது என அம்பேத்கர் சொன்னபோது,

“எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களெல்லாம் அதை கண்டித்தார்கள். மாளவியா, விஜயராகவாச்சாரியார் போன்றவர்களெல்லாம், ‘அம்பேத்கர் அவர்களே உங்களுடைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்யுங்கள்’ என்பதாகத் தந்தி கொடுத்தார்கள் அப்போது தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு நானும் ஒரு தந்தி கொடுத்தேன். என்னவென்றால், நீங்கள் ஒண்டியாகப் போகக்கூடாது. குறைந்தது ஒரு லட்சம் பேரோடு மதம் மாற வேண்டும். அப்போது தான் முஸ்லிம் மதிப்பான்… ஒரு லட்சம் பேரோடு தாங்கள் அங்கு போகும்  போது நானும் ஒரு பத்து இருபதாயிரும் பேர்கள் தருகிறேன் என்பதாகத் தந்தி கொடுத்தேன்.” (ஆனைமுத்து தொகுப்பு, பக். 1033)

இப்படியாக அவரை இஸ்லாமுக்கு மாற ஊக்குவித்தவர் பெரியார்.

அம்பேத்கர் இறுதியில் பௌத்தத்திற்கு மாறியபோது கூட இஸ்லாமுக்கு மாறுவதே சரியாக இருக்கும் என்ற கருத்து பெரியாருக்கு இருந்தது. இது குறித்து,

“அம்பேத்கர் பௌத்தத்தில் சேருகிறேன் என்று சொன்னவுடன் எப்போதும் போல பலர் எதிர்த்தார்கள். ஆனாலும் இஸ்லாம் ஆவது என்றால் பயப்படுகிற அளவுக்கு பௌத்தர் ஆகிவிடுவது என்று சொல்லுவதற்கு இந்து மதத்தார்கள் (பார்ப்பனர்கள்) பயப்படமாட்டார்கள். ஏனென்றால் பௌத்தத்தை இந்து மதத்தோடு ஏறக்குறைய கலர வைத்து விட்டார்கள்.”

என்று அவர் குறிப்பிடுவதிலிருந்து (சென்னை சொற்பொழிவு 13.5.1952) இது விளங்கும்.

ஏதோ இஸ்லாமுக்கு மதம் மாறுவது என்கிற அளவோடு பெரியாரின் முஸ்லிம் ஆதரவு நின்று விடவில்லை. முஸ்லிம் அரசியலுக்கும் அவர் ஆதரவாக நின்றார். விடுதலைக்கு முந்தைய முஸ்லிம் அரசியலில் இரண்டு கூறுகள் முக்கியமானவை:

  1. முஸ்லிம்களுக்கானத் தனி நாடு -பாகிஸ்தான் பிரிவு
  2. முஸ்லிம்களுக்குத் தனி வகுப்பு வாரி ஒதுக்கீடு.

 

இந்த இரண்டு கோரிக்கைகளையும் பெரியார் ஆதரித்தார். முஸ்லிம் இந்தியா என்ற கோரிக்கை பற்றி பேச வருமபோது,
“ஜனாப் ஜின்னா இந்தப் பிரிவினைக்கு கூறும் காரணங்கள் மறுக்க முடியாதன. அவரது கோரிக்கை நியாயமானதே. காந்தியார் சதா காலமும் பச்சையாகவே தாம் விரும்பும் சுயராஜ்ஜியம் ராம ராஜ்ஜியம் தானென்றும், தமது வாழ்க்கையின் இலட்சியமே இந்து மதத்தைப் புனருத்தாரணம் செய்வது தானென்றும் கூறிக் கொண்டிருக்க, தோழர் சாவர்கார் போன்ற  இந்து மகாசபைத் தலைவர்கள் ‘இந்துஸ்தானம் இந்துக்களுக்கே’ என்ற போர் முழக்கம் செய்து கொண்டுமிருக்கக் கண்ட பிறகும் முஸ்லிம்கள் கைகட்டி வாய்பொத்தி இருப்பார்கள்  என்று யார்தான் எதிர்பார்க்க முடியும்?

இந்து முஸ்லிம் பிரச்சனை தீர்க்கப்பட முடியாதோ என்று திகைக்குமளவில் இருக்கிறது. இதனைத் தீர்த்துக் கொள்ள ஜனாப் ஜின்னாவின் திட்டமே அறிவு ததும்புவது. நான் ஜனாப் ஜின்னாவின் கோரிக்கையை ஆதரிப்பதோடு,மற்றொரு முக்கியமான அம்சத்தையும் வற்புறுத்த விரும்புகிறேன். முஸ்லிம்கள் ‘முஸ்லிம் நாடு’ என இந்தியாவில் தனி நாடு பிரித்துக் கொள்ள முடியும். ஆனால் இந்துக்கள் முடியாது. ஏனெனில் இந்துக்கள் என்று கூறப்படும் தொகுப்பில் பலப்பல வர்க்கத்தார் உள்ளனர்”.

எனப் பெரியார் இக்கோரிக்கையை முழுக்க முழுக்க ஆதரித்தார். (குடியரசு அறிக்கை-31.3.1940).

இந்தியாவுக்கு ‘இந்துஸ்தானம்’ எனப்பெயர் வைப்பதைக்  காட்டிலும், ‘திராவிடக் கொள்கையை உடைய பாகிஸ்தான்’ என்று பெயர் வைக்கலாம் எனக் கூட அவர் ஒரு முறை குறிப்பிட்டார்.

முஸ்லிம்களுக்கு உரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பது இன்றளவும் நியாயமான ஒரு கோரிக்கை. பெரியார் அன்று சொன்னார்:

“இந்திய அரசாங்கத்தில், இந்திய ஜனங்களில் நான்கில் ஒரு பங்குக்கு மேற்பட்ட பெரிய சமூகத்தாராகிய முகம்மதிய சமூகத்தாரர்களுக்குப் பங்கு உண்டா இல்லையா?

அவர்கள் ஏழரைக் கோடிப் பேரும் இனிமேல் இந்தியாவை விட்டுப்போக முடியுமா? அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால் இராஜ்ய விஷயத்திலும் மத விஷயத்திலும் நமக்குச் சரியான அந்தஸ்து பெற்றுத்தானே ஆக வேண்டும்? வகுப்பு பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் அவர்களுக்குச் சம உரிமைகிடைத்துவிடுமா?” (குடிஅரசு, தலையங்கம் 14.2.1926)

தேர்தலில் மட்டுமின்றி அரசுப் பணிகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய பங்களிக்கப்படவேண்டும் என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.

முஸ்லிம்களை ‘அந்நியர்களாக’ முத்திரை குத்தும் சதிக்கு எதிராக அவர்களைத் திராவிடர்கள் என அணைத்துக் கொள்ளும் போக்கையும் பெரியாரிடம் காணமுடியும். பெரியாரைப் பொருத்தமட்டில் பார்ப்பனர்களே அந்நியர்கள் (பார்க்க: ஆனைமுத்து, தொகுப்பு, பக்.32. 55.)

இஸ்லாம் மீது பெரியாருக்கு இருந்த பற்றுக்கான காரணங்களையும் அவர் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். சுருக்கம் கருதி மேற்கோள்களைத் தவிர்த்து அவர் கூறுகிற காரணங்களை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

1.இஸ்லாம் மதத்தில் பல கடவுள் வணக்கம் கிடையாது. மூட நம்பிக்கைகள் கிடையாது. விக்கிர ஆராதனைகள் கிடையாது (ஆனைமுத்து தொகுப்பு பக்.301,302).

2.சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த ஒரே மதமாக இஸ்லாம் மட்டுமே உள்ளது. தீண்டத்தகாதவர் என்றோ வேதத்தை படிக்கக் கூடாதவர் என்றோ ஆலயத்திற்குள் அல்லது பொது இடங்களுக்குள் நுழைய முடியாதவர் என்றோ இங்கு யாரும் தடுக்கப்படுவது இல்லை(ஆனைமுத்து தொகுப்பு பக்.32.33).

இஸ்லாம் என்றால் ஏதேனும் ‘லுங்கி’ கட்டிக் கொள்வது அல்லது தாடி வைத்துக் கொள்வது என்று நினைக்க வேண்டாம். “இஸ்லாம் என்பது சாந்தி, பணிவு, பக்தி என்ற பொருள்படும் அரபுச் சொல். இஸ்லாம் என்பது சகோதரத்தன்மை என்பது. இவ்வளவு தான்” என்று சொன்னபெரியார்,

“நம்மிலும் பல பெரியார்கள் ஒன்றே குலம் ஒருவனே  தேவன் என்பது போலெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவைகள் என்றும் ஏட்டளவிலே இருக்கின்றனவே தவிர நடப்பில் இல்லை. ஆனால் முஸ்லிம் சமுதாயத்திலே நடப்பிலே ஒரே ஆண்டவன் வழிபாடும் மக்களுக்குள் பிறவியில் பேதமற்ற நிலைமையும் இருந்து வருகின்றன”

என்பதைக் சுட்டிக் காட்டினார்.

நபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த ஒரே முஸ்லிம் அல்லாத இந்திய அரசியல் தலைவர் பெரியார் ஒருவராகத்தான் இருக்கமுடியும். ‘நான்தான் கடைசி நபி’ என நாயகம் சொன்னதைப் பெரியார் விதந்தோதுகிறார்.

“இன்றைய வரையிலே அவருக்குப்பின்னால் இந்தத் துறைகளில் அவர் சொன்ன கொள்கை கருத்துக்களை விட மேலானதாகச் சொல்லுவதற்கு எவரும் தோன்றவில்லை” என முத்தாய்ப்பு வைக்கிறார் (சென்னை சொற்பொழிவு, 20.12.1953).

“திரு. முகம்மது  நபியைப் பற்றி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் நான் அவரை ஒரு மனிதர் என்றும், மனிதரைப் போலவே தாயும் தகப்பனும் கூடி கருத்தரித்து பிறந்தவர் என்றும் கருதித்தான் அவரால் செய்யப்பட்டதாகச் சொல்லும் விஷயங்களில் அனேகத்தை நான் புகழ்கிறேன். அதற்காகவே அவரையும் நான் பாராட்டுகிறேன்.அப்படிச் சொல்லப் படுபவைகளே அந்த மார்க்கத்திற்கு ஒரு பெருமை என்றும்  நினைக்கிறேன்…. ஆனால் மற்ற மதத்துக்காரர்களோ தங்கள் மதத் தலைவரை ஒரு மனிதர் என்றலே கோபித்துக் கொள்கிறார்கள். கழுதை, நாய், குதிரை இவற்றினுடைய வயிற்றிலிருந்து பிறந்தவர் என்றாலும் ஏற்றுக் கொள்கிறார்கள்”

என்றெல்லாம் சொல்லிச் செல்வது குறிப்பிடத்தக்கது (சாத்தான்குளம், 28.7.1931).

அப்படியானால் இஸ்லாமையும் முஸ்லிம் அரசியலையும் பெரியார் எங்குமே விமர்சிக்கவில்லையா? விமர்சிக்கிறார். அந்த விமர்சனங்களின் அடிப்படையில் தான் இன்று சில விஷமிகள் பெரியாரை இஸ்லாமுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர். இந்தியாவிற்கு வந்த இஸ்லாமில் கலந்து போன சில மூட நம்பிக்கைகளை, இந்து பழக்க வழக்கங்களையே அவர் கண்டிக்கிறார்.

“ஆனால் நான் இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமன கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மதத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கிறமோ அவை போன்ற சில நடவடிக்கைகள் இஸ்லாம் மதத்திலும் சிலர் செய்கிறார்கள்” (சாத்தான்குளம், 28.7.1931).

என்று சொல்கிற பெரியார் அத்தகைய மூட நம்பிக்கைகளாகச் சமாதி வணக்கங்கள், பஞ்சா அடித்தல், சந்தனக்கூடு, தீமிதி, கூண்டு உற்சவம், கொடிவணக்கம், அல்லாசாமி பண்டிகை முதலியவற்றைப் பட்டியலிடுகிறார். இத்தகைய பழக்க வழக்கங்கள் இஸ்லாமியருக்குரியவையல்ல என இன்று பல இஸ்லாமிய மத அறிஞர்களே குறிப்பிடுவது இங்கு சிந்திக்கத்தக்கது. இறுதியாக,

“இவற்றையும் மார்க்கக் கொள்கைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கிறவர்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படி சொல்ல இயலும்? கோபிப்பதில் பயனில்லை. மற்ற மதங்களை விட இஸ்லாம் மதம் மேலானது என்பது என் அபிப்ராயம். ஆனால் அதில் இனிச் சிறிது கூடச் சீர்திருத்தம் வேண்டியதில்லை என்பவர்களுடன் முரண்பட்டவன்” (களக்காடு, 23.12.1950).

என்கிறார். பகுத்தறிவுக்குட்பட்ட நவீன மதமாக இஸ்லாம் திகழ்வதில் தவறேதும் வந்துவிடலாகாது என்கிற அக்கறையோடு இந்த விமர்சனங்கள் அமைந்துள்ளன என்பது முக்கியம்.

அதே போல் முஸ்லிம் அரசியலை பெரியார் விமர்சிப்பது என்பது கூட 1948க்குப் பின்புதான். பிரிவினைக்குப் பிறகு இங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் முழுக்க முழுக்க காங்கிரஸ் ஆதரவு நிலை எடுத்த போதும், 1962க்குப் பின்பு ராஜாஜி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவெடுத்த போதும் தான் பெரியார் முஸ்லிம் அரசியலை விமர்சித்தார். பெரியார் வெறும் சமூக சீர்த்திருத்தவாதியல்ல. ஐம்பது ஆண்டு காலம் இந்த மண்ணில் தீவிரமாக அரசியல் போராட்டம் நடத்திய போராளி. பார்ப்பன எதிர்ப்பு என்பது அவரது அரசியலின் ஆணி வேராக இருந்தது. அதற்கு முஸ்லிம் மற்றும் தலித் அரசியல் துணையாக இருக்கும் என நம்பினார். அப்படி இல்லை என அவர் கருதியபோது அவரது அரசியல் நோக்கிலிருந்து அந்தப்போக்குகளை விமர்சித்தார். எனினும் அதற்காக இதுவரை தாம் முன்வைத்த அவரது கருத்துகள் எதையும் அவர் மாற்றிக் கொண்டதில்லை. கடைசி வரை இஸ்லாமிய ஆதரவிலேயே அவர் நின்றார்.


“நாத்திகம் எனது முக்கிய கொள்கை அல்ல. இஸ்லாமியர்கள் சுயமரியாதை இயக்கத்தில் சேருங்கள்” எனப் பெரியார் அறைகூவல் விடுத்ததையும் ஜின்னா அவர்கள் தென்னக முஸ்லிம்கள் சுயமரியாதை இயக்கத்திலேயே இருக்கலாம் எனச் சொன்னதையும் நாம் மறந்து விடலாகாது.

இஸ்லாமையும், முஸ்லிம்களையும், முஸ்லிம் அரசியலையும் இத்தனை அப்பட்டமாக ஆதரித்த ஒரு முஸ்லிம் அல்லாத தலைவரை இந்திய அரசியலில் பார்க்க இயலாது. அதனால்தான் இந்துத்துவம் பெரியாரை மட்டும் அண்ட முடியாமல் விலகி நிற்கிறது.

குறிப்புகள்


1.அப்படியானால் ஏன் பெரியார் மதம் மாறவில்லை எனக்கேள்வி எழுவது இயற்கை. அம்பேத்கரிடம் இதற்கான பதிலைப் பெரியார் கூறியுள்ளார்.

“அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து என்ன இராமசாமி நாம் இப்படி பேசிக் கொண்டே இருந்தால் என்ன பலன் ஏற்பட முடியும்? வாருங்கள். நாம் இரண்டு பேரும் புத்த மதத்தில் சேர்ந்துவிடுவோம் என்றார். நான் சொன்னேன். ’ரொம்ப சரி, இப்போது முதலில் நீங்கள்  சேருங்கள், நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப் பற்றித் தீர்மானமாகப்  பிரச்சாரம் செய்து வருகிறேன். இந்தியக் கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமர் சிலைகளை உடைத்தும், படங்களை எரித்தும்  இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்லி இப்போது பிரச்சாரம் செய்வதுபோல் அப்புறம் நான் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக் கூடாது’ என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான்,இன்னொரு மதக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது” (டெல்லி பகார் கஞ்ச், 15.12.1959).

என்று தான் வெளியே நிற்க வேண்டியதன் நியாயத்தைப் பெரியார் விளக்குகிறார்.

  1. தனது சுய மரியாதைக் கொள்கைக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதாக இஸ்லாத்தைப் பெரியார் கருதினார்.

 

இறைத்தூதர்’ என்கிற இஸ்லாமியக் கருத்தாக்கத்தைப் பெரியார் ஏற்றுக்கொண்டது பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேன். அதற்கான அவரது விளக்கமும் கூட நடைமுறை சார்ந்ததாகவும் சுயமரியாதைக்குப் பொருத்தமானதாகவுமே இருந்தது.

“மேலும், முகமதிய மதம் மிக்க சுயமரியாதை உணர்ச்சி உடையது என்றும் சொல்லுவோம். எப்படி என்றால், அது இனி உலகத்திற்குக் கடவுள் அவதாரங்ளோ, நபிமார்களோ, தீர்க்கதரிசிகளோ வரக்கூடும் என்பதை ஒருக்காலும் ஒப்புக் கொள்வதில்லை. மனிதனை மனிதன் வணங்குவதையோ அவன் காலில் விழுவதையோ அது சிறிதும் சம்மதிப்பதில்லை”(குடி அரசு’ ஆக. 25, 1929).

என இடைத்தரகர்கள், மகான்கள் ஆகியோர்  இஸ்லாத்தில் சாத்தியமில்லாமல் ஆக்கப்பட்டதை அவர் அடையாளம் கண்டார்.

இந்து மதத்தைப் போலன்றி இஸ்லாம் காலச் சூழலுக்கு ஏற்ப சீர்திருத்தத்திற்கு சாத்தியமுள்ளது என்றும் பெரியார் நம்பினார். அன்றைய துருக்கி (கமால் பாஷா), ஆப்கானிஸ்தான், எகிப்து ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை அவர் அடிக்கடி சுட்டிக் காட்டுவது குறிப்பிடத்தக்கது. (‘குடி அரசு’ ஆக. 23, 1931; ஆக.2, 1931; நவம்பர் 17, 1935).

“இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரீட்சைக்கு விட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள். அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை? ஏனெனில், திரு. முகம்மது நபி கொள்கைகள் ஆனதனாலும், அநேக விஷயங்களில் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கியதையுடையதாய் இருக்கின்றது” (‘குடி அரசு’ ஆக. 23, 1931).

“அவர் (முகமது நபிகள்-அ.மா) சொன்னவற்றிலேயே இது மிகவும் முக்கியமாய் கவனத்தில் வைக்க வேண்டிய காரியமாகும். என்ன அவர் சொல்லுகிறார்? நான் என்ன சொல்லியிருந்தாலும் அவற்றில் உனக்குச்  சம்மதமிருந்தால் நீ உன் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்’ என்பதாகச் சொல்லியிருக்கிறார்”  (டிசம்பர் 20, 1953, சென்னை).

என்பன பெரியாரின் கூற்றுகள். பஞ்சா கொண்டாட்டம், அல்லாசாமி பண்டிகை, சமாதி வணக்கம் முதலான  ‘மூடநம்பிக்கைகளை’ அவர் இந்த நோக்கிலேயே வெறுத்தார்.

“ஆகவே முஸ்லிம் பகுத்தறிவுக்கு விரோதமாய் ஏதாவது இருந்தால், அது தங்களது கட்டளை அல்ல என்று தள்ளிவிடவும், அவற்றை நீக்கிவிடவும், பகுத்தறிவுக்காரரையெல்லாம் தங்கள் சகோதரர்கள் என்றும், இஸ்லாம் என்று சொல்லவும் தயாராக இருக்க வேண்டும்… உலகமெல்லாம் ஒரே மார்க்கமாவதற்கு பகுத்தறிவு மார்க்கமாவதற்கு முஸ்லிம்கள் பாடுபடவேண்டும். அவர்களுக்கே அதிக சவுகரியமிருக்கிறது. ஆதலால் அதுவே நபி அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்” (‘குடிஅரசு’, ஆகஸ்டு 23, 1931).

என்பதே அவரது நபிகளின் பிறந்தநாள் செய்தியாக இருந்தது. மதங்கள் பகுத்தறிவுக்கு விரோதமானவையாக இருந்தபோதிலும் மதங்களை ஏதேனும் பகுத்தறிவு மயமாக்க  முடியுமெனில் முஸ்லிம்களுக்கே’ அதிக சவுகரியமிருக்கிறது’ எனவும் அவர் நம்பினார்.

பிரத்யட்சத்தில் முஸ்லிம் மதத்தின் சிறப்புக்கள் என்கிறபோது சாதியையும் தீண்டாமையையும் ஒழித்து சகோதரத்துவத்தை நிலை நாட்டும் அதன் சிறப்பை அவர் பலப்பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். அது சண்டாளர்களையும் ரட்சிக்கும் மதம்; வீரத்தையும் ஆண்மையையும் (ஒடுக்கப்பட்ட மக்களுக்கு-அ.மா) அளிக்கும் மதம் (‘குடிஅரசு’ ஆக.25, 1929). “ஒரு மனிதன் தான் மாலை 5 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக்கொண்டதாய்ச் சொல்லி, 5,30 மணிக்குத் ‘தீண்டாதவன் என்கின்ற இழிவிலிருந்து மீண்டு, தெருவில் நடக்க உரிமை பெற்று” மனிதனாக முடியும் என (‘குடிஅரசு’, ஆக.2, 1931) ரொம்பவும் romantic ஆகச் சிலாகித்தார். முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்பதே நம்மில் பலருடைய எண்ணம். ஆனால் பெரியாரோ, பெண்களுக்குக் கோஷா அணிவிக்கும் முறையில் தனக்கு உடன்பாடில்லை எனச் சொன்னபோதும்,

“முகமதிய மதத்தில் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது.அதாவது பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு, விதவை விவாகம் உண்டு, கணவனும் மனைவியும் ஒத்துக் கொள்ளாவிட்டால் விலகிக் கொள்ள சுதந்திரம் உண்டு” (குடிஅரசு, ஆக. 25, 1929)எனச் சுட்டிக்காட்டினார்.

கோஷா முறை பற்றி விமர்சனங்கள் இருந்த போதும் அதுவும் கூட படிப்படியாக விலகி வருவதையும் துருக்கி, ஆப்கானிஸ்தான் நாடுகளில் முஸ்லிம் பெண்கள் வேலைக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வதையும், ஹைதராபாத் நிஜாம் தம் புத்ரிகளுடன் தாராளமாய் பொது அரங்கில் உலா வருவதையும் அதே உரையில் அவர் கவனம் ஈர்த்தார்.

 

வருமானத்தில் ஒரு பகுதியைக் கட்டாயமாக ஏழைகளுக்குச் செலவிடுவது (சக்காத்), விக்ரக ஆராதனையை மறுப்பது, சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுகிற வகையில் மற்ற மதங்களைவிட மிக்க நாகரீகம் கொண்டதாக இருப்பது ஆகியன இஸ்லாத்தில் அவர் வரவேற்ற இதர அம்சங்கள் (பெ.சி.4.196-202,4.3-14).

ஹஜ் யாத்திரையையும் கூட அவர் ஆதரிக்கவே செய்தார். அதற்கான அவரது விளக்கம்  பகுத்தறிவு சார்ந்ததாக மட்டுமின்றி அறம் சார்ந்ததாகவும் இருந்தது. இதுகுறித்து.


“மவுல்வி அப்துல் அமீது சாயபு பாகவி அவர்களைக் கேட்டேன். முஸ்லிம்கள் மக்காவுக்குப் போவதில், செல்வத்திலும் சரீர திடத்திலும் தகுதியுள்ளவர்கள் தான் போகவேண்டுமென்று இருக்கின்றதே தவிர, எல்லோரும் போய்த் தீரவேண்டுமென்று இல்லையென்றும், அந்த இடம் முகம்மது நபி அவர்கள் பிரத்தியட்சத்தில் பிறந்த இடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை என்றும், அறிவு வளர்ச்சிக்கும், மற்ற மக்கள் நடை, உடை, நாகரீகம் பார்த்து வரவும் பயன்படும்படியான ஒரு யாத்திரை என்றும், கொலை, களவு, கொள்ளை நடத்தின பாபம் தீர்ந்துவிடும் என்று சொல்வது தப்பு என்றும் அந்த மாதிரி எண்ணத்துடன் யாரும் சொல்வதில்லை என்றும் சொன்னார்” (குடிஅரசு, ஆக. 9, 1931).

என்று விளக்கினார். புனித ஹஜ் என்பது நபிகள் பிறந்த தலத்திற்குச் சென்று வருதல் என்பதிலும் வேறான பல அர்த்தங்களை உடையது என்கிற அளவிற்குப் பெரியார் இஸ்லாம் குறித்து அறிந்திராத போதிலும் ‘பிரத்தியட்சம்’சார்ந்த ஒரு விளக்கத்தை அதற்கு அளித்தார். பிறமதங்களில் யாத்திரை என்பது பாவங்களை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படுவது. எல்லாப் பாவங்களையும் செய்துவிட்டுப் புண்ணிய தீர்த்தமாடினால் பாவங்கள் நீங்கிவிடும் என்பது இந்து மத நம்பிக்கை. ஒழுக்கமான வாழ்வொன்றின் மூலமாகவே நல்ல கதி அடைதல் என்கிற புரிதல் உள்ள இஸ்லாத்தில் யாத்திரைக்கு அந்தப் பொருள் இல்லை என்பதைப் பெரியாரால் அடையாளம் காண முடிந்தது.

இவை யாவும் ஏதோ முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்காகச் சொல்லப்பட்டவை அன்று. ஏனெனில் இதே காலகட்டங்களில் முஸ்லிம் சமூகம் மற்றும் இஸ்லாம் குறித்த தனது விமர்சனத்தைப் பெரியார் அவ்வப்போது முன் வைக்காதிருந்ததில்லை. “இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக்கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்துவிடாதீர்கள்” என்கிற எச்சரிக்கையை அவர் செய்யத் தயங்கியதில்லை(குடிஅரசு, ஆக.2, 1931). மதங்கள் சமூக அமைதியைக் கெடுப்பதைப் பற்றிச் சொல்ல வருகையில், 1926 தொடங்கி 1931வரை ஆண்டு வாரியாக ‘இந்து மூர்க்கர்கள்’ பலாத்காரமாகக் கற்பழித்த பெண்களின் எண்ணிக்கையைச் சொல்லும் அதே நேரத்தில் ‘முஸ்லிம் மூர்க்கர்கள்’ செய்ததையும் அவர் பட்டியலிட்டார் (பகுத்தறிவு, 1934, செப்டம்பர் 9. பார்க்க: ஆனைமுத்து, பக்.1420). கிறித்துவ மதத்தைப் போலவே இஸ்லாமும்கூட நடைமுறையில் ஒரு பார்ப்பனீய மதமாகவே உள்ளது என்றும் ஓரிடத்தில் குறிப்பிட்டார். முல்லாக்கள் புரோகிதர்கள் போலச் செயற்படுவதை அவர் விமர்சித்தார்.

விருதுநகர் மாநாட்டில் மத ஒழிப்புத் தீர்மானத்தை இயற்றியதோடு அதை விளக்கி,

“அன்றியும், இந்த நாட்டின் இன்றைய சுதந்திர ஆட்சிக்கு, சகோதரத்திற்கு சினேக தத்துவத்திற்கு மதங்களே இடை யூறாய் இருந்து கொண்டு உட்பகையையும் சாந்தியற்ற தன்மையையும் உண்டாக்கி வருவதை நாம் நேரிலேயே தினமும் பார்த்தும் கேட்டும் வருகின்றதோ மாதலால் விருதுநகர் மாமநாட்டில், ‘மக்களுக்குள் எவ்வித மத உணர்ச்சியும் இருக்கக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டியதாயிற்று”

எனத் தலையங்கம் வெளிவந்த (குடிஅரசு அக். 23, 1931) அதே இதழில்தான் கோயமுத்தூரில் நடைபெற்ற மிலாது நபி விழாவில் அவர் ஆற்றிய உரையும் வெளிவந்தது. உலகமெல்லாம் ஒரே மார்க்கமாக வேண்டும் என அங்கு பேசிய பெரியார் மத ஒழிப்பு குறித்த தனது பார்வையை ரத்தினச் சுருக்கமாக,

“’மதங்கள் ஒழிந்த பிறகுதான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும், என்பது அநேக அறிஞர்களது அபிப்ராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போதே ‘உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது.’ சாந்தி ஏற்பட்டு விட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன். ஏனெனில் அத சமூக ஒற்றுமை, சமூக சமத்துவம் ஆகிய காரியங்களில் மற்றெல்லோரைக் காட்டிலும் அதிகமான கவலை எடுத்து வருகின்றது” (குடிஅரசு, ஆக.23,1931).என்றார். ‘மதங்கள் ஒழிய வேண்டும்’ என்பதையும் ‘மதமாற்றம்’ என்பதையும் இணையாகவே அவர் சொல்லி வந்தததன் பொருள் இதுவே.

 

மதம் பற்றிய சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பற்றிச் சொல்ல வரும்போது அதில் ஆஸ்திகர்களும்  இருக்கலாம் என்று சொல்லும் பெரியார், ‘இந்து மதத்தை விட்டுவிடுங்கள். மதமில்லாமலும் நாஸ்திகர்களாகவும் தான் இருக்க வேண்டுமென்பதில்லை என்பார். வேறு ‘சிறிதாவது அதைவிட மேலானதும், சீர்திருத்தமானதும், மூடநம்பிக்கைகள் குறைவானதுமான மதத்தை’ அனுசரிக்கலாம் என்பார் (குடிஅரசு, நவம்பர் 17,1935).

அப்படியான மதமாக அவர் முகமதிய மதத்தையே திரும்பத் திரும்ப அடையாளம் காட்டினார் என்பதில் யாருக்கும் அய்யமிருக்க இயலாது.

   ----------------- பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள்  பல ஆண்டுகளுக்கு  முன்பு எழுதிய கட்டுரை

 https://www.amarx.in/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2/

26.8.22

‘திராவிடர்’ என்னும் சொல் தேர்வு ஏன்?


 

 ‘திராவிடர்’ என்னும் சொல் தேர்வு ஏன்?

 



மீண்டும் மீண்டும் ‘திராவிடர்’ என்னும் சொல்லுக்கு விளக்கம் அளித்து விரல் தேய்ந்து விட்டது. ‘திராவிடம்’ என்பதற்கு வாய்க்கு வந்தபடி பொருள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் திராவிட எதிரிகள்!

‘திராவிடம்’ என்றால் ஆரியம்!

‘திராவிடம்’ என்றால் பார்ப்பனர்கள்! _ என்று தமிழ்த்தேசியம் என்ற பெயரால் அலையும் சிலர் சொல்லித் திரிகிறார்கள். ‘திராவிடர்கள்’ என்று யாரும் கிடையாது என்றும் இவர்கள் சொல்கிறார்கள். இதையே, ‘ஆரியர்களும் இல்லை, அதனால் திராவிடர்களுக்கும் இல்லை’ _ என்று ஆரியச் சக்திகளே சொல்கிறது!

ஆரிய சக்திகளும் _ தமிழ்த்தேசியம் என்று சொல்லிக் கொள்பவர்களும் சொல்வது ஒன்றுதான். ஆரிய சக்திகளுக்காவது 100 சதவிகித நேர்மை உண்டு. அவர்கள் தங்கள் இனத்துக்கு உண்மையாக இருக்கிறார்கள். ஆனால், தமிழ்த்தேசியம் என்கிற பெயரால் பேசுபவர்கள் தமிழினத்தின் துரோகிகள். அந்தத் துரோகத்தை மறைப்பதற்காக, ‘திராவிடம்’ என்னும் சொல்லுக்கு எதிராக யுத்தம் செய்கிறார்கள்.

‘திராவிடம்’ என்னும் சொல் ஒரு காலத்தில் இடப்பெயராக _ அதன் பிறகு மொழிப் பெயராக _ சில காலத்தில் இனப்பெயராக இருந்தது என்பதை திராவிட மொழியியல் ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் தனது நூல்களில் பல இடங்களில் எழுதி இருக்கிறார். ‘திராவிடம்’ என்பது இன்று ஒரு தத்துவத்தின் சொல்லாக இருக்கிறது. அந்தத் தத்துவத்தை அயோத்திதாசர், இரட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியோர் முன்மொழிந்து அரசியல் களத்தில் போராடினார்கள். இன்னொரு பக்கத்தில் தந்தை பெரியார் பயன்படுத்திப் போராடினார். ‘திராவிடத்தை’  பேசிய பெரியாரை, தெலுங்கர் என்று சொல்பவர்கள், அயோத்திதாசரை, இரட்டமலையாரை, எம்.சி.ராஜாவை நோக்கி உள்நோக்கம் கற்பிக்க முடியாமல் போனது ஏன்? திராவிடம் பேசுபவர்கள் அனைவரும் தெலுங்கர்கள் என்றால் இவர்கள் யார்?


பெரியார் கேட்டுவந்த ‘திராவிட நாடு’ என்பது அன்றைய சென்னை மாகாணம். இதில் தமிழர்களோடு தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் வாழ்ந்து வந்தார்கள். இதில் முதன்முதலாக தெலுங்கர்கள் தனி மாகாணம் கேட்டார்கள். இது பெரியாருக்கு சிக்கலை உணர்த்தியது. நாம் ஒன்றாக இருக்கலாம் என்று முதலில் சொன்னார். தான் கேட்டு வந்த திராவிடநாட்டுக்கு மொழிவாரி மாகாணப் பிரிவினை என்பது தடை போடும் தந்திரமாக அரசியல் ரீதியாகவும் பார்த்தார். ஆனால், தெலுங்கர்கள் சென்னை மாகாணத்தையும் தங்களுக்குக் கேட்க ஆரம்பித்தும் தான் பெரியாருக்குள் இருந்த ‘தமிழன்’ விழித்தான். ‘தெலுங்கர் பேராசை’ என்ற தலையங்கம் தீட்டினார். நான்கு மொழிக்காரர்களையும் திராவிடர்கள் என்று அழைத்து வந்தவர்களை, தமிழர்களைப் பிரித்து ‘தமிழ்த்திராவிடர்கள்’ என்று சொல்ல ஆரம்பித்தார். சென்னை நகர், தமிழ்த் திராவிடனிடமிருந்து பறித்துக் கொள்ளப்படுவதை எந்த ஒரு திராவிடனும் ஒப்புக்கொள்ளவே முடியாது’’ என்று எழுதினார். (‘குடிஅரசு’ 27.8.1949) இதிலிருந்தே தமிழர்களுக்கு மட்டுமான அரசியல் தொடங்கிவிட்டது.

ஆந்திரர்களின் தனி மாகாணமாகப் பிரிந்து செல்வதை ஆதரித்த பெரியார், அவர்கள் சென்னையைக் கேட்டதைக் கண்டித்தார். ஆந்திரர்களுக்குச் சென்னை கிடையாது _ கிடைக்காது என்று எழுதினார். ம.பொ.சி. சென்னை மாநகராட்சியில் கொண்டுவந்த தீர்மானத்தை முழுமையாக ஆதரித்தார். ஆந்திர ராஜ்யத்துக்கு சென்னை நகர் தற்காலிகத் தலைநகராகவும் இருக்கக் கூடாது என்பதை திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு தீர்மானமாக நிறைவேற்றியது. (‘விடுதலை’ 11.1.1953)

சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய பெரியார், ‘தமிழ் பேசும் மக்கள் நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் ஆட்சி இருப்பதா?’ என்று கேட்டார். மலையாளிகளுக்கு எதிராக தென் திருவிதாங்கூரில் நடக்கும் தமிழர் போராட்டத்தை பெரியார் ஆதரித்தார். வடக்கில் தெலுங்கர், தெற்கில் மலையாளிகள் தமிழர்களுக்கு எதிராக நடத்தும் அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் கண்டித்தார். தென்னிந்தியப் பகுதிகள் இணைந்த தட்சிணப் பிரதேசம் திட்டத்தை எதிர்த்தார். இதனை மலையாளிகளின் சூழ்ச்சி என்றார். (‘விடுதலை’ 11.10.1955) தமிழர் பேசும் பகுதிகளை மட்டும் கொண்ட தமிழ்ப்பகுதிகளை இணைத்து தமிழ்நாடு உருவாக்கச் சொன்னார்.

1956ஆம் ஆண்டு மொழிவாரியாக மாகாணங்கள் பிரிந்துவிட்டன. வடநாட்டான் சுரண்டலில் இருந்து முழுமையாக விடுதலையடைய முன்வராத ஆந்திரமும் கேரளாவும் கன்னடமும் பிரிந்து போய்விட்டதால் இனி தமிழ்நாடு முழு விடுதலையடைய போராட வேண்டியதுதான் என்றார். இன்றிருப்பது தனித் தமிழ்நாடுதான் என்றார். தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள தெலுங்கர், மலையாளிகள் அவரவர் மாநிலத்துக்கு போய்விட வேண்டியதுதான் என்றார். ஆந்திர, கேரள, கன்னட மொழிக்காரர்கள் தொல்லை நீங்கிவிட்டது என்றார்.

அப்படியானால் திராவிடர் என்பதற்குப் பதிலாக தமிழர் என்றே இனி கூறலாமே என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்ட பெரியார், “திராவிடர் என்றால் ஆரியருக்கு எதிரிகள் என்ற பொருளிருப்பதனால் ஆரியர்களை அறவே ஒதுக்க முடிகிறது’’ என்றார். (‘விடுதலை’ 8.11.1956) அதுவரை கேட்டு வந்த ‘திராவிடநாடு’ இனி ‘தமிழ்நாடு’ ஆகிறது.

24.8.1958 அன்று வேலூரில் நடந்த சுதந்திரத் தமிழ்நாடு மாநாட்டில் பேசும் போது, “’இன்று மற்றவர்கள் எல்லோரும் பிரிந்து தனித்-தனியே நாடுகளாகப் போய்விட்டார்கள். இன்று தமிழ்நாடு என்று தெளிவாகச் சொல்ல முடிகிறது’’ என்று பேசினார் பெரியார். (‘விடுதலை’ 30.8.1958) திடீரென்று குரல் மாற்றிப் பேச ஆரம்பித்துள்ளார் பெரியார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதுதான், ‘சூழ்நிலைக்கேற்ப நமது குரல் மாறலாம். கொள்கை அணுவளவும் மாறாது’ என்று சென்னையில் பேசினார். ‘இனம் நோக்கில் திராவிடமும் மொழி அடிப்படையில் தமிழ்நாடும் அடைவதே நமது இலட்சியம்’ என்றார். தமிழ்நாடு கேட்கிறாயே உன் திராவிட நாடு என்ன ஆயிற்று என்று கேட்பவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார்.

“திராவிட நாடு என்று சொன்னாலும் தமிழ்நாடு என்று சொன்னாலும் இரண்டும் ஒன்றுதான். அகராதியில் எடுத்துப்பார். இலக்கியத்தைப் படித்துப் பார். அதிலிருக்கிறது தமிழ்நாடு என்றால் திராவிடநாடு. திராவிடநாடு என்றாலும் தமிழ்நாடுதான். இரண்டுக்கும் பெயர்தான் வேறே தவிர மற்றபடி காரியங்கள் எல்லாம் ஒன்றுதான். … இனத்தால் நாம் திராவிடர்கள். மொழியால் நாம் தமிழர்கள்’’ என்று விளக்கம் அளித்தார். (‘விடுதலை’ 13.8.1958)

‘திராவிடன்’ என்று சொல்வது ஏன் என்ற  இந்த விவாதங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் “மர மண்டைகளுக்கு மீண்டும் கூறுகிறோம்’’ என்ற தலையங்கம் தீட்டப்பட்டது.

திராவிடன் என்னும் சொல்லை ஏன் பயன்படுத்துகிறோம் என்பதற்கான விளக்கம் சொல்லப்பட்டது.

“திராவிடம் என்ற சொல்லை விடக்கூடாது என்று சொல்லி வருகிறோம். திராவிடன் என்ற சொல்லுக்கு அஞ்சுவது போல் தமிழன் என்ற சொல்லுக்கு அக்கிரகாரத்தான் அஞ்சுவதில்லை. தமிழன் என்றால், ஆமாம் சார் நாமெல்லாம் தமிழன்னோ என்று உடனே உறவு கொண்டாடுகிறான். இதைக் கேட்கும் தமிழன் (‘திராவிடன்’) பல்லை இளிக்கிறான். ‘அல்ல சார் அல்ல! நீர் ஆரியர்! நான் தமிழர்’ என்று கூறக்கூடியவன் கருஞ்சட்டைக்காரன் ஒருவன் தானே? தேவநேயப்பாவாணர், சுப்புரெத்தினம், வை.பொன்னம்பலனார் போன்ற அரை டஜன் புலவர்கள் தானே? மற்ற எல்லாத் தமிழ்ப் புலவர்களும் எல்லா அரசியல் கட்சிக்காரர்களும் எல்லாத் தலைவர்களும் ஆரியனையும் தமிழன் என்றுதானே கூறுகிறார்கள்? தென் ஆர்க்காடு கிராமவாசியான ஒரு தற்குறித் தமிழனுக்கு இருக்கிற அறிவுகூட இவர்களுக்கெல்லாம் இல்லையே? கிராமவாசித் தமிழன் படிப்பு எழுத்து வாசனை இல்லாதிருந்தாலும் ‘அதோ போகிறவன் பார்ப்பான், இதோ வருகிறான் தமிழன்’ என்று பிரித்துக் கூறத் தெரிகின்ற அடிப்படை இன உணர்ச்சி அறிவாவது இருக்கிறதே!

அந்த அறிவு எல்லாத் தமிழர்களுக்கும் வருகின்ற வரையிலும் தமிழர் என்ற சொல்லுக்குப் பதிலாக திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டியிருப்பது இன்றியமையாததாகிறது’’ (‘விடுதலை’ 22.11.1958) என்று எழுதினார்.

திராவிடநாடு முழக்கத்தை சுதந்திரத் தமிழ்நாடு முழக்கமாக பெரியார் மாற்றினார். திராவிடநாடு என்று சொல்லக் கூடாது என்று கூறினார். திராவிட நாடு என்பதை எதிர்க்கும் திராவிடர் கழகத்தவர் ‘தமிழர் கழகம்’ என்று பெயர் வைத்துக் கொள்ள வேண்டியது தானே என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ‘இது திராவிடர் கழகம், ஆரியர்கள் சேர முடியாத கழகம்’ என்று விளக்கம் அளித்தது ‘விடுதலை’. பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட கழகம், எந்தப் பிரச்னையையும் ஆரியர் _ திராவிடர் என்ற பூதக்கண்ணாடி போட்டு சோதிக்கிறது இக்கழகம் என்றது அத்தலையங்கம். (‘விடுதலை’ 22.6.1961)

1955ஆம் ஆண்டு பிறந்து அப்போதே கொல்லப்பட்ட தட்சிணப்பிரதேசம் உருவாக்கம் மீண்டும் 1963ஆம் ஆண்டு வேறொரு வடிவத்தில் வந்தது. தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்க வேண்டும் என்று அப்போது சொல்லப்பட்டது. ‘முளையிலேயே இதனைக் கிள்ளி எறியவேண்டும்’ (‘விடுதலை’ 9.2.1963) என்று எழுதினார். சுரண்டல் கொடுமை, மலையாளிகள் தொல்லை என்று கண்டித்தார். மலையாளிகளை பசுத்தோல் போர்த்திய புலிகள் என்று கண்டித்து தலையங்கம். (‘விடுதலை’ 10.1.1964)


இப்படி 1956 முதல் ‘திராவிடநாடு’ என்பதைக் கைவிட்டு, ‘தமிழ்நாடு’ என்பதை உச்சரித்தார் பெரியார்! இந்த நிலைப்பாட்டை முழுமையாக விளக்கி ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் ‘தமிழ்நாடா? திராவிட நாடா?’ என்னும் குறுநூல் எழுதி 4.8.1961 அன்று வெளியிடப்பட்டது. அதில் பெரியாரின் அறிக்கை ஒன்றை ஆசிரியர் அவர்கள் மேற்கோள் காட்டுகிறார். அதில் ‘திராவிடம்’ என்னும் சொல்லை தான் எதற்காகப் பயன்படுத்த வேண்டி உள்ளது என்பதை பெரியார் சொல்கிறார்.

“நம் நாட்டுக்கு சமுதாயத்திற்கு இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதானாலும் நமக்கு அது ஒரு பொதுக்குறிப்புச் சொல்லும் ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல்லுமானதாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன்’’ என்கிறார் பெரியார். (தமிழ்நாடா? திராவிடநாடா? பக்கம் 13) திராவிடன் என்ற சொல்லை விட்டு விட்டு தமிழன் என்று சொன்னால் பார்ப்பான் (ஆரியன்) நானும் தமிழன் தான் என்று உள்ளே புகுந்து விடுகிறான்’’ என்கிறார் பெரியார்.


திராவிடன் என்னும் சொல் தேர்வின் காரணம், ஆரியம் என்பதன் எதிர்ப்-புணர்ச்சிக்காகவே!

தமிழன் என்னும் சொல்லைப் பயன்-படுத்தாமல் இருந்ததற்குக் காரணம், ஆரியப் பார்ப்பனரும் தாங்களும் தமிழர்கள் என்று உள்ளே நுழைந்து விடுவார்கள் என்பதற்-காகத்தான். அதனால்தான் தமிழன் என்று அவர் பேசுவதை விடவில்லை. ‘தமிழா எழுச்சி கொள்’ என்றே சொன்னார்.

திராவிடர் கழகம் என்று பெயர் வைக்காமல் போயிருந்தால், சூத்திரர் கழகம் என்பதே தான் வைக்கப் பொருத்தமான பெயர் என்று சொன்னதன் காரணம், பார்ப்பனரல்லாதார் _ சூத்திரர் _ திராவிடர் என்ற சொல்லுக்குள் பார்ப்பனர் நுழைய முடியாது என்பதால் தான்.

மற்றபடி அதற்கு வடுகர், பார்ப்பனர் என்று தமிழ்த்தேசியர்கள் சொல்வது அவர்களது அறிவுப் பலவீனத்தின் கனமான கற்பனையே தவிர வேறல்ல.

திராவிடர் கழகத்தின் கொள்கையை எதிர்க்க முடியாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் குறை கண்டுபிடிக்க முடியாத நிலையில் தனது கையறு நிலையில் கனைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதைப் பற்றிக் கவலை இல்லை. இவை காலம் காலமாகப் பார்த்த கனைப்புகள்தாம்!

                                 செப்டம்பர் 16-30,2021 "உண்மை’’ இதழில்  ப.திருமாவேலன் அவர்கள் எழுதிய கட்டுரை

3.8.22

பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

 

பெரியோர் என்று பல மாமனிதர்களைச் சொல்வதுண்டு. ஆனால் பெரியார் என்றால், மூடப் பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து சமுதாய சமத்துவம் காணப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களை மட்டுமே அடையாளம் காட்டி நிற்கும் சொல்லாகத் திகழ்கிறது.. அத்தகு பெருமைபெற்ற நம் அய்யா அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளுள் சில:

@@@@@

அய்யாவின் அறிவாற்றல்

கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் அய்யா சொற்பொழிவாற்றினார். மொழிபெயர்ப்புப் பணிக்காக நமது உண்மை ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் உடன் சென்றிருந்தார். இயல்பிலேயே தன்னம்பிக்கையினை அதிகமாகப் பெற்ற அய்யா அவர்கள் எதையும் தாமே செய்து பார்ப்போம் என்ற ஆர்வம் கொண்டவர்.

கான்பூர் மாநாட்டினை முடித்துவிட்டு லக்னோ சென்று பேசச் சென்றார். ஆங்கிலத்தில் பேச முயன்றார். ஆசிரிருக்கோ வியப்பு. பேசும் இடமோ பல்கலைக்கழகம், அய்யா படித்ததோ மூன்றாம் வகுப்புவரை மட்டுமே. எனினும், அறிவு ஆசான் துணிச்சலுடன் பேச நினைத்தார்.

ஒரு சிறிய முன்னேற்பாட்டின்படி பேசத் தொடங்கினார். அதாவது, அய்யா ஆங்கிலத்தில் பேசுவார். அய்யாவுக்குப் பேசும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஆசிரியர் அந்த வார்த்தையினை எடுத்துக்கொடுத்து சரிசெய்ய வேண்டும். அய்யாவின் விருப்பப்படி ஆசிரியர் தயார்நிலையில் இருந்தார்.

அய்யா பேசத் தொடங்கினார். பேசிக்கொண்டிருந்தபோது அடுப்பு எனும் பொருளை உணர்த்தும் ஆங்கிலச் சொல்லினைச் சொல்ல வேண்டும். அது அவரது நினைவுக்கு உடனே வரவில்லை. பேச்சு தடைப்பட்டது. ஆசிரியரைப் பார்த்தார். அவசரத்தில் ஆசிரியருக்கும் அந்த வார்த்தை நினைவில் வராததால்  ஆசிரியர் சிறிதுநேரம் யோசித்தபோது, அய்யா ஓவன் (Owen) என்னும் ஆங்கிலச் சொல்லினைக் கூறி பேச்சைத் தொடர்ந்து ஆசிரியரை மட்டுமின்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் (Appropriate Word)  சரியான சொல்லையே தேர்வு செய்து பேசினார். லக்னோ பல்கலைக்கழகத்தில் அய்யா பேசிய பேச்சுத் திறமையும் நுண்ணறிவும் பாராட்டுக்குரியதே. அய்யா அவர்கள் கருத்தைத்தான் பார்த்தார். அதற்குத்தான் முன்னுரிமை கொடுத்தார்.

@@@@@

அய்யாவின் பொறுமை

அய்யாவும் கண்ணப்பரும் ஒரு முறை ரயிலில் பயணம் செய்தபோது கண்ணப்பர் பார்ப்பனர் ஒருவரோடு வாக்குவாதம் செய்துகொண்டே வந்துள்ளார். அப்போது கடுமையான பல சொற்களைப் பேசும்படியான சூழ்நிலை உருவானது.

இதனை வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டே வந்த அய்யா, இப்படியா பேசுவது? பொறுமையாக அவருக்குப் புரியும்படி பதில் கூறினால்தானே அவரது தவறான எண்ணத்தை மாற்றி நம் பக்கம் திருப்ப முடியும் என்றார்.

உடனே அந்தப் பார்ப்பனர், பெரியவரே நீங்கள் சொல்வதை அவர் கேட்க மாட்டார். இவர்கள் இராமசாமி நாயக்கர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இப்படித்தான் பேசுவர் என்றார். அய்யாவும் கண்ணப்பரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

கண்ணப்பர் அடுத்த வண்டிக்குச் செல்வதற்காக இறங்கிவிட்டார். அய்யா கழிப்பறைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் அந்தப் பார்ப்பனரைப் பார்த்து, அவர்தானய்யா ராமசாமி நாயக்கர். இப்படிப் பேசிவிட்டீரே என்றார். கழிப்பறையிலிருந்து அய்யா வந்தவுடன் பார்ப்பனர் எழுந்து நின்று இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டு, என்னை மன்னித்துவிடுங்கள் அய்யா. தங்களை யார் என்று தெரியாமல் பேசிவிட்டேன். உங்களைப் பற்றி அவதூறு பேசுபவர்களே பொய்யர்கள். தங்களது நற்குணமும் பொறுமையும் யாருக்கும் வராது. எங்கள் வீட்டிற்குத் தாங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று உபசரித்துச் சென்றார்.

@@@@@

அய்யாவின் சமாளிப்புத் திறமை

ஒருமுறை அய்யாவும் அண்ணாவும் மும்பை சென்றிருந்தனர். அங்கு எம்.என்.ராய் அவர்களைச் சந்தித்தனர். அய்யாவிடம் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருந்தவர் ராய். தமது அன்பினை வெளிப்படுத்த அய்யாவுக்கு விருந்து கொடுக்க நினைத்து அழைத்தார். அய்யாவும் அண்ணாவும் விருந்திற்குச் சென்றனர். ராய்க்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். தமிழ் தெரியாது. அய்யாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் மட்டுமே தெரியும்.

பிரமாதமாக நடைபெற்ற விருந்தில் இருவருக்கும் ராய்தான் பரிமாறினார். அய்யாவுக்கு, குறிப்பிட்ட ஒரு பதார்த்தத்தின் மீது ஆசை ஏற்பட்டது. மனதிற்குப் பிடித்ததைக் கேட்டு விடுவது அய்யாவின் குணங்களுள் ஒன்று. எப்படிக் கேட்பது? ராய்க்குத் தமிழ் தெரியாதே, ஊறுகாய் என்றால் ராய்க்குப் புரியாதே, என நினைத்தார். இதன் ஆங்கிலப் பெயரும் அப்போது மறந்துவிட்டது அய்யாவுக்கு.

அய்யாவின் தேவையை அண்ணா புரிந்துகொண்டார். எனினும் அய்யாவின் சமாளிப்புத் திறமையைக் கண்டு ரசிக்க விரும்பினார். ராய் அருகில் வந்தபோது, நாக்கில் கையை வைத்து நாக்கால் ஒரு சொடக் கொடுத்து ஓசை எழுப்பிக் காட்டினார் அய்யா.

உணவு பறிமாறிக்கொண்டிருந்த ராய் புரிந்துகொண்டு, ஓ பிக்கிள் என்றார். உடனே, எஸ் எஸ் பிக்கிள் என்றார் மலர்ச்சியுடன் அய்யா.

நாவினால் ஓசை எழுப்பியே தமது கருத்தைத் தெரிவித்துச் சமாளித்த அய்யாவின் திறமையை எண்ணி வியந்தார் அண்ணா.

@@@@@

நாகப்பட்டினம் விஜயராகலு வீட்டிற்கு அய்யா உணவு சாப்பிடச் சென்றார். 15 பேருக்கு உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. அய்யா 25 பேருடன் சென்றார். சென்றவர்களுள் பட்டுக்கோட்டை அழகிரி மெதுவாகச் சாப்பிடும் இயல்புடையவர். பச்சரிசிச் சோறு காலியாகிவிட்டது. எனவே, அழகிரிக்கு மோர் சாப்பாடு சாப்பிட்டபோது குறுவை அரிசிச் சோறு பரிமாறினர். சிவந்த நிறத்தில் பெரிது பெரிதாக இருந்த சோற்றினைப் பார்த்த அழகிரி கோபமுற்றார். சாப்பிட்ட கையை உதறிவிட்டு வேகமாக எழுந்தார். இதனைப் பார்த்த அய்யா, அப்பா அழகிரி இதுவரை மல்லிகைப்பூ, இப்போது ரோசாப்பூ என்றதும் அனைவரும் சிரித்தனர். மேலும் அய்யா, அழகிரிக்கு இரண்டு சாத்துக்குடிப் பழம் கொடுங்கள். பசியும் தணியும் சினமும் போய்விடும் என்றாராம்.

@@@@@

தண்ணீரும் மோரும்!

ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஒருவர் அய்யாவிடம் பேட்டி காண வந்தார். வந்தவருக்குக் காப்பி கொடுக்கச் சொன்னார் அய்யா. நான் இப்ப இங்க காப்பி சாப்பிடுகிறேன். போன தலைமுறையில் இது நடந்திருக்குமா? நான் ஆச்சாரமான பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவன் என்றார் வந்தவர். புன்முறுவல் பூத்த அய்யா, இப்போது காபி சாப்பிடுகிறீர் என்றால் என் பிரச்சார மாற்றம்தானே! என்றார்.

மேலும் அய்யா, பல வருடங்களுக்கு முன்பு ஒரு பார்ப்பன நண்பர் – குடும்ப நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஏதாவது சாப்பிடுங்கள் தாகமாக வந்திருப்பீர்களே என்றேன். ஒன்றும் வேண்டாம் என்றார் நண்பர். கொஞ்சம் வற்புறுத்தவே, சரி மோரும் தண்ணீரும் கொடுங்கள் என்றார். கொடுத்தோம்.

மோரில் சிறிது நீரைச் சேர்த்துச் சாப்பிட்டார். எதற்காக மோரில் நீரைக் கலந்து சாப்பிட்டீர்கள் என்றேன். மோரில் நீர் கலந்தால் மோர் சுத்தமாகிவிடும்  அதனால்தான் என்றார். நீரும் மோரும் எங்கள் வீட்டிலே இருந்தது. எங்க வீட்டு மோரை எங்க வீட்டுத் தண்ணீரே சுத்தப்படுத்துமா என்று கேட்டேன் என்றார். பேட்டி காண வந்தவர் தனது மடைமைத்தனத்தை நினைத்து தலைகுனிந்து சிரித்தாராம்.

நாகம்மையார் மரணமடைந்தபோது உள்ளே சென்று பார்க்கச் சென்றவர்களைப் பார்த்து, யாரும் அழக்கூடாது. அழுவதால் இறந்தவர் மீண்டு வரப் போவதில்லை. அமைதியாகச் சென்று பார்த்து வாருங்கள் என்றார் அய்யா. மேலும், அவரது உடல் அடக்கத்தினைப் புதுமையான முறையில் செய்தார். நாகம்மையாரின் உடலினை ஒரு பெட்டியில் வைத்து (முஸ்லிம் முறை) மாடு பூட்டிய வண்டியில் எடுத்துச் சென்று (கிறித்துவ முறை) எரியூட்டி (இந்துமுறை)  ஒற்றுமையினைப் புகுத்தி சமத்துவம் கண்டார் அய்யா.

@@@@@


அய்யாவின் தாடி ரகசியம்

ஒரு நாள் இரவு அய்யாவின் வீட்டு மாடியில் அவரது நண்பர்கள் அய்யா தாடி வளர்ப்பது ஏன் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முக அழகுக்காக தாடி வளர்ப்பதாக என்னிடம் அய்யா சொன்னார் என்றார் மாயவரம் நடராசன். எஸ்.வி.லிங்கமோ, இல்லையில்லை ரஷ்ய அறிஞர்கள் எல்லோரும் தாடி வைத்துள்ளனர். அவர்களைப் பார்த்தபின் வைத்தேன் என்று என்னிடம் கூறினார் என்றார். உடனே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், சவரச் செலவு தினமும் நாலணா மிச்சமாகிறது என்றாரே என்னிடம் என்றதும், பட்டுக்கோட்டை அழகிரி, கொஞ்ச நேரம் என்றாலும் இன்னொரு வரிடம் தலைகுனிந்து உட்காருவது தன்மானக் கேடாக உள்ளது என்றாரே என்னிடம் என்றார்.

மேடைஏறி பலரைத் தாக்கித் திட்டும்போது, போனால் போகிறான் கிழவன், வயதானவன் என்று விட்டுவிடுவார்கள் என்று என்னிடம் கூறினாரே என்றார் பூவாளூர் பொன் னம்பலனார். அப்போது கி.ஆ.பெ.விசுவநாதம், தூங்குங்கள் நாளை உங்களுக்கு உண்மையான காரணத்தை அய்யாவிடமே கேட்டுச் சொல்கிறேன் என்றார்.

மறுநாள் அய்யாவிடம் தாடியின் ரகசியம் கேட்டுவிட்டு, தினமும் பத்து நிமிடம் வீதம் மாதம் 300 நிமிடங்கள் வீணாகிறதே. பல நல்ல காரியங்களை இந்த நேரத்தில் செய்யலாமே என்று நினைத்து விட்டேன். தானாக வளர்ந்துவிட்டது. வேறெதுவும் காரணம் இல்லை என்று அய்யா கூறியதாக அனைவரிடமும் கூறினார். அப்போது கருகுடி சின்னையா பிள்ளை, இன்னும் யார் யாரிடம் என்னென்ன காரணங்கள் சொல்லியுள்ளாரோ அதையும் கேட்டு அனைவரும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றதும் அனைவரும் சிரித்துவிட்டனர்.

ஒருமுறை ரயில் நிலையத்திலிருந்து வந்தபோது எதிரில் வந்த ஒருவர் அய்யாவைப் பார்த்து, நீங்கள் ஏன் தாடி வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, எனக்கு பிளேடு செலவு மிச்சம், உனக்கு என்ன நஷ்டம் என்று கூறியுள்ளார்.

 @@@@@

தமிழிசை ராஜா அண்ணாமலை (செட்டியாரும்), ஆர்.கே. சண்முகம் (செட்டியாரும்) தமிழிசை இயக்கம் தொடங்கி அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். பல லட்சம் செலவு செய்தனர். வீண் விரயம் செய்வதைக் கண்டித்து அய்யா கூட்டத்தில் பேசினார்.

மருமகனுக்குப் பல் தேய்க்க சோம்பேறித்தனம். பல் தேய்க்கும்படி மருமகனிடம் சொல்ல வெட்கப்பட்டார் மாமியார். ஒரு யுக்தி தோன்றியது மாமியாருக்கு. கரும்பு மென்று தின்றால் பல் சுத்தமாகுமே என்று நினைத்து, மாப்பிள்ள இந்த ஊர்க் கரும்பு ரொம்ப ருசியாக இருக்கும். ஒரு பணத்துக்குக் கரும்பு வாங்கிச் சாப்பிடுங்கள் என்று கூறி பணமும் கொடுத்து அனுப்பினார். மாப்பிள்ளையோ பணத்தை வாங்கி எள்ளுப் புண்ணாக்கு வாங்கித் தின்றுவிட்டு பல்லை மேலும் கேவலமாக்கி வந்து நின்றார். மாமியாருக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இதுபோலல்லவா இந்தத் தமிழிசைக் கிளர்ச்சியும் ஆகியுள்ளது. தமிழ் மக்களுக்குப் பகுத்தறிவு உணர்வு தோன்றிவிடுமானால் தமிழிசை தானாக வளர்ந்துவிடும் என்றார்.

 

                                  ----------------தந்தை பெரியார் பற்றி வெளிவந்த நூல்களிலிருந்து  " உண்மை"  2011 செப்டம்பர் 16-30

29.4.18

பார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது-பெரியார் பாதையில் செல்லுங்கள் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்




பெரியார் பாதையில் செல்லுங்கள்

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

இப்போது "பார்ப்பனர் உணவு விடுதி களில் உண்ணக் கூடாது'' என்று - பெரியார் அவர்கள் சொல்கிறார்கள் என்றால் இதில் மாணவர்கள் முற்றிலும்  கலந்து கொள் ளலாம், இதில் பங்கேற்கலாம். அரசியலாரை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் மக்கள் மட்டுமே கலக்க  வேண்டும்; எந்தப் பகுதியில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று பெரியார் அவர்கள் கூறுகிறார்களோ அதில் கலந்துகொள்ளக் கூடாது. நம்முடைய சீர்திருத்தப் போராட் டத்திற்கு வேண்டிய கிளர்ச்சிகள் உங் களிடமே உள்ளன.  எத்தனை முயற்சிகள் எந்தெந்த முயற்சிகள் உண்டோ - அத்தனை முயற்சிகளையும் கையாள வேண்டும்.
இரண்டு தண்ணீர்ப் பானைகள் வைக் கப்பட்டு ஒன்று நமக்கு என்றும், மற்றொன்று பார்ப்பானுக்கு என்றும் கூறப்பட்டால் சும்மாவிடலாமா? இது போன்ற சின்ன தகராறுக்கெல்லாம்கூட பெரியாரிடம் சொல் லலாமா? நாமே இதற்கு முடிவுகட்ட வேண்டும்.
பெரியார் பாதையில்செல்லுங்கள்
ஆகையினால் தோழர்களே! எது அரசியல் பகுதி, எது சமூகப் பகுதி என்பதை நீங்கள் நன்கு அலசிப் பார்த்து போராட வேண்டும். இப்படிப்பட்ட சமுதாயத் துறையில் பெரியாருக்கு முப்பது ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு, நீங்கள் அவர் வழி நிற்க வேண்டும். அவர் பாதையில் செல்ல வேண்டும்.
தியாகத்தால் வளர்ந்த இயக்கம்
சிதம்பரம் பக்கம் பரதூர் என்ற ஊரிலே ராஜன் என்ற வாலிபர் இருந்தார். இந்த இயக்கத்திலே ஆழ்ந்த பற்றுள்ளவர். அந்த ஊரிலேயே நம் இயக்கத்தின் கூட்டம் ஒன்றைப் போட்டார். அதற்கு அந்த ஊரில் உள்ளவர்கள் என்ன பரிசு கொடுத்தார்கள் தெரியுமா? நீங்கள், சற்று கவனமாகக் கேளுங்கள்; அவருடைய மனைவியைத் தூக்கிச் சென்றனர். அவரையும் அடித்து ஊரை விட்டு விரட்டினர். அவருடைய வீட்டைப் பிடுங்கிக் கொண்டு, அவருடையது அல்ல  என்று சொல்லி விட்டனர். தாய், பாட்டி முதலியோரை ஊருக்கு அனுப்பி விட்டனர். கடைசியிலே மானத்திற்கு இழுக்கு வந்ததை எண்ணி எண்ணி ஏங்கிய அந்த தமிழன் தஞ்சைக்கருகில் உள்ள கரந்தை கல்லூரிக்குப் பக்கத்தில் தூக்கிட்டுக் கொண்டு மாண்டார். அதைப் போல பல பல உத்தமர்கள் தியாகம் செய்து வளர்த்த இயக்கம்.
எதிரியின் பெரும் சதி

 சிதம்பரத்தில் சகஜானந்தாவின் பள்ளியில் ஒரு சமயம் ஆண்டுவிழா.சகஜானந்தாவுக்கும், சிதம்பரம் தீட்சதர்களுக்கும் பகை நிறைய உண்டு. சிதம்பரம் தண்டபாணிப் பிள்ளை பெரியார் வந்து ஆண்டு விழாவில் கலந்து கொள்ள பெரிதும் விரும்பினார். பெரியார் அவர்களும் வர ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால் சனாதனிகளும், தீட்சதர்களும் எதிர்ப்பைப் பலமாகக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
அன்றைய தினம் கலகம் செய்ய ஆயிரக்கணக்கில் திரண்டுவிட்டனர். ஒவ்வொருவனிடமும் கல், தடி, கத்தி போன்ற ஆயுதங்கள் உள்ளன. அன்று பெரியாரை ஒழித்து விடுவது என்றே திட்டமிட்டு விட்டனர். நிலைமை மிக மிக பயங்கரமாக இருந்தது.
நாங்கள் பத்து பேர்கள்  போயிருந்தோம். இந்த நிலையைப் பார்த்து விட்டு பயந்தே போனோம். உடனே நாங்கள் ரயிலடிக்குப் போய் பெரியார் வந்ததும் திரும்பப் போகச் சொல்லி விடுவது என்று முடிவு கட்டிக் கொண்டு ரயிலடிக்குப் போனோம்; பெரியார் வராமலேயே இருந்தால் நல்லது என்று எண்ணினோம். 

பெரியாரின் ஆண்மையும் வீரமும்
ஆனால் வருகிறேன் என்று கூறியிருந்த   வண்டியில் வந்திறங்கினார்.  உள்ள நிலைமையைக் கூறினோம். கேட்டுக்கொண்டே 'விடு விடு', என்று ஊருக்குள் போனார். போகவேண்டாம் 'ஆபத்து ஆபத்து' என்று கூறக் கூற கேட்டுக் கொண்டே  போனார். எந்த வழியில் போகக் கூடாது என்று நினைத்தோமோ அந்த வழியில் போனார். போய்  'டக்'  என்று நின்றார். அதுவும்  எந்த  இடம்? எந்த இடத்தில் நிற்கக் கூடாது என்று நினைத்துப் பயந்தோமோ அதே இடம்; போலிகளின் கூட்டம் எதிர்ப்பை ஆரம்பித்து விட்டது. போலிகளின் ஆயுதம் தாங்கிய கரங்கள் உயர்ந்துவிட்டன. 'இன்று என்ன செய்யப் போகிறோம்?' என்று எங்கள்  கூட்டில் உயிர் இல்லை.
எதிரிகளின் மனதையும் ஈர்த்த பேச்சு

 இந்த நிலையில் பேசவும்  ஆரம்பித்து விட்டார். எப்படிப்பட்ட பேச்சு? பாமரர் முதல் அனைவருக்கும் புரியும்  முறையில், அழகாக உள்ளம் கவரும் விதத்தில் பேசினார். "உங்கள் பையன் ஒருவன் படித்திருக் கிறான்; பார்ப்பனரின் பையன் ஒருவன் படித்திருக்கிறான், நீங்கள் என்ன விரும்புவீர்கள்? உங்கள் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றுதானே? ஆனால் இன்றைய பார்ப்பன ஆதிக்கத்தில் யாருக்குக் கிடைக்கும்? இதைத்தானே கூறுகிறேன்" என்றார்.  உயர்த்திய கரங்கள் தாழ்ந்தன. அனைவரின் மனமும் சிந்திக்க ஆரம்பித்தன; "கடைசியில் மூட நம்பிக்கையின் பிறப்பிடமான இந்த ஊர் ஆலயத்திலே உள்ள நடராசன் சிலையைக் கொண்டு வந்து திருப்பிப்போட்டு வேட்டி துவைப்பேன்" என்றார் எதிர்த்த கரங்கள் திரும்பி தட்டுதலின் மூலம் ஓசையைக் கிளப்பின. அன்று சாகடிக்கப்படவிருந்த பெரியார், 'நடராஜன் கோவில் துவம்சமாக்கப்பட வேண்டும்' என்றும்,  அன்றே ஆக வேண்டுமென்றும் பெரியார் கட்டளையிட்டிருப்பாரேயானால் ஒரு நொடியிலே ஆகியிருக்கும். அப்படிப் பெரியார் அவர்கள் பாடுபட்டு முன்னுக்குக் கொண்டு வந்த இயக்கம். எந்த இயக்கம் நிலையானது - எந்த இயக்கம்  மக்களுக்கு உண்மையாகப் பாடுபடுவது - எந்த இயக்கம் நம் சமுதாயம் முன்னேற உண்மையாக உழைக்கிறது என்பதை உணர்ந்து நீங்கள் சேர வேண்டும்.  தமிழ் மாணவர்கள் எல்லோரும் ஒற்று மையாக இருக்க வேண்டும். பார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது. எஞ்ஞான்றும் விழிப் போடு இருக்கவேண்டும். பெரியார் அவர்கள் சொல்கின்ற அறிவுரைகளை அன்றாடம் கடைப் பிடிக்கவேண்டும்.


              ---------------------1957ஆம் ஆண்டு, 'பிராமணாள்' உணவு விடுதிகளுக்கு எதிராக, தந்தை பெரியார் அவர்கள் நடத்திய சாதி ஒழிப்புப் போராட்டத் தீ தமிழகத்தின் மூலை முடுக்கெல் லாம், பட்டி -- தொட்டியெல்லாம் கொழுந்துவிட்டு எரிந்த நேரம். இந்தப் பின்னணி யில் 23--.6.-1957 அன்று குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டில் புரட்சிக்கவிஞர் ஆற்றிய வீர உரையின் பகுதிகள் இவை.

19.3.18

பெரியார் : சரியாகப் பெயர் வைத்த பெண்கள்

பெரியார் : சரியாகப் பெயர் வைத்த பெண்கள்





தெய்வ பக்தர் ஒருவர் பெரியாரைச் சந்தித்தார். அவரும் அன்போடு வரவேற்றார். "சொல்லுங்க. என்ன சமாச்சாராமா வந்திருக்கீங்க” என்று கேட்டார். பக்தர் ரொம்பவும் ஆதங்கத்தோடு ஒரு கேள்வியை முன்வைத்தார். “கோடானு கோடி பேர் நம்புகிற கடவுளை வெறும் கல்லுன்னு சொல்றீங்களே. இது நியாயமா?" என்று கேட்டார். பெரியார் அவரிடம் நேரம் செலவழித்து எந்த தத்துவ விளக்கமும் தரவில்லை. அவர்தான்எதிலும் சிக்கனக்காரராயிற்றே!. மேலும் எதார்த்தமான  “வெளிப்படைச் சிந்தனையுள்ள பெரியார் அல்லவா? சித்த என்னோட வரீங்களா? கோயில் வரை போயிட்டு வந்துடலாம்” பெரியார் கேட்டார். வந்தவருக்கு ஆச்சரியம். பெரியாரா? கோயிலுக்கா? ஒன்றும் புரியவில்லை. "சரி போகலாம்” புறப்பட்டு விட்டார்.

இருவரும் கோயிலுக்குப் போனார்கள். கடவுள் சிலை இருக்கிறஇடம் வரை சென்றார் பெரியார். உடன் வந்தவருக்கு ஆச்சரியமோ ஆச்சரியம் . அங்கே பூசை செய்பவரிடம் பெரியார் கேட்டார்.

“இந்த சிலை தங்கமா?”
“அய்ம்பொன்னா?”
“செம்பா?”
“வெண்கலமா?”
பெரியார் கேட்டுக் கொண்டே வந்தார். பூசாரி இல்லை இல்லை என்று பதில் சொன்னார். கடைசியாக, “வேற எதுலதான் செஞ்சிருக்காங்க” என்றார். பூசாரி பட்டென்று "கல்லுல" என்றார்.
தன்னோடு வந்தவரைத் திரும்பிப் பார்த்து பெரியார் சொன்னார். “இதத்தான் நானும் சொல்றேன். பூசாரி சொன்னா பொறுத்துக்குறீங்க. நான் சொன்னா கோவிச்சுக்குறீங்க” என்று சொல்லிட்டு புறப்பட்டு விட்டார். உடன் வந்தவர் வாயடைத்து நின்றார்.
பெரியார் வாழ்க்கையில் இன்னொரு நிகழ்வு. ராமன் படத்தை செருப்பால் அடித்துவிட்டார் என்று பெரியார் படத்தை ராமர் பக்தர்கள்முச்சந்தியில் வைத்து செருப்பால் அடித்துக் கொண்டு இருந்தார்கள்.அடுத்த நாள் “குடிஅரசு” பத்திரிகையில் “செருப்பால் அடிக்க படம்தேவைப்பட்டால் முகவரியை அனுப்பிவையுங்கள் படம் இலவசமாக அனுப்பித்தரப்படும்" என்று குட்டி விளம்பரம்.
பெரியாரின் தோழர்கள் மனம் சங்கடப்பட்டு "என்னங்கய்யா இப்படி போட்டிருக்கிறீர்கள்” என்று கேட்டனர்.
“என்ன? சரியாத் தானே போட்டிருக்கேன். எதாவது அச்சுப்பிழை இருக்கா?” என்று பெரியார் கேட்டார். “அவங்க உங்களை அவமானப்படுத்துறாங்க அவங்களுக்குப் படம்அனுப்பித்தர்ரோம்னு சொல்றீங்க இது உங்களுக்கு நல்லாயிருக்கா” என்று தோழர்கள் கேட்டனர்.
“இத அப்டிப் பாக்கறது தப்பு. நிறைய பேர் என் படத்த செருப்பால அடிச்சா ஏன் அடிக்கிறாங்கன்னு நெறைய பேர் கேப்பாங்க. ராமன் படத்த இவர் செருப்பால அடிச்சாரு. ஆதனாலஅவர் படத்தை இவங்க செருப்பால அடிக்கிறாங்கன்னு சொல்லுவாங்க. ராமன் படத்த நாம செருப்பாலஅடிச்சதுக்கு அவங்களே விளம்பரம் குடுக்கறது நல்லது தானே” என்று பெரியார் எதிர் கேள்வி போட்டு விட்டு இயல்பாக இருந்துவிட்டார்.
இப்படி பெரியாரின் வாழ்க்கையில் எவ்வளவோ நிகழ்வுகள் இருக்கின்றன. எதையும் அவர் இழிவாக எடுத்துக் கொண்டதில்லை. எடுத்துக் கொண்ட செயலில் உறுதியாக இருந்ததால் எல்லாத் தடைகளையும் அவர் இனிதாகவும் பொறுமையாகவும் ஆத்திரப்படாமலும் எதிர் கொண்டார்.
எண்ணியர் திண்ணியராக இருந்தால் எண்ணிய எண்ணியாங்கு எய்துவார் என்பதுதான் வள்ளுவர் நூல் மொழி. இதையெல்லாம் நன்குணர்ந்ததால் தான் தமிழகத்துப் பெண்கள் ஈ.வெ.ராமசாமியாக இருந்தவரை “பெரியார்” என்று அழைத்தனர். அந்தப் பெயர்தான் இன்று தமிழகத்திற்குள் சாதிவெறி சக்திகள் மக்களை அண்டமுடியாமல் காக்கும் நெருப்பாக நீடிக்கிறது. அதனை அணையவிடாமல் பாதுகாப்பது நமது கடமை.
இப்போதைய பெரியார் போல் ஆதிகாலத்திலும் பெரியார்கள் தமிழ் மண்ணில் இருந்துள்ளனர். அவர்களின் அறிவுரையைக் கேட்டு மன்னர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர் இரண்டு அதிகாரங்களில் வலியுறுத்தி சொல்லியிருக் கிறார். ஒன்று பெரியாரைத் துணைக் கோடல் (அதிகாரம் - 45), மற்றொன்று பெரியாரைப் பிழையாமை (அதிகாரம் - 90).
இந்தி, சமஸ்கிருதம் என்ற இரு மொழி வெறி கொண்ட எச்.ராஜா போன்ற ஆர்எஸ்எஸ்., சங்பரி வாரம் தமிழ்நெறிகளை எங்கே அறிந்திருக்கப்போகிறது?
பெரியாரைத் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் ( குறள்  892 )
பெரியாருக்கு மரியாதை கொடுக்காமல் தான் தோன்றித் தனமாகத் திமிரோடு நடந்து கொண்டால் அது பெரும் துன்பத்தைத் தரும் என்று வள்ளுவர் கி.மு. முதல் நூற்றாண்டிலேயே சொல்லியிருக்கிறார். கி.பி. இருபத்தோராம் நூற்றாண்டிலும் இதனைப் புரிந்து கொள்ளாதவர்களை என்னென்று சொல்ல! ஒருவனை நெருப்பு சுட்டுவிட்டால் ஒரு வேளை பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியாரைப் பின்பற்றாமல் தவறு செய்கின்றவர்கள் பிழைப்பதென்பதே இல்லை என்ற கருத்தினை,
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியாரைப் பிழைத்தொழுகுவார் (குறள் 896)
எனும் குறளில் வள்ளுவர் சொல்லிச் செல்கிறார்.
வள்ளுவரைப் பொய் வேடம் பூண்டு சிலர் தூக்கிச் சுமக்கலாம். அவர் யாத்த திருக்குறளில் இருக்கும் கருத்துகளை உள்வாங்காதவர்கள் போலிச் சாமியார்கள் போன்றோரே. அவர்களிடம் எல்லாத் தீச் செயல்களும் மண்டியிருக்கும். சொற்களையும் பயனற்ற சொற்களாகவே உதிர்ப்பார்கள். அப்படிப் பட்டவர்களை மனிதப்பதர் என்றார் வள்ளுவர் (குறள் 196).
இப்படிப்பட்ட பதர்கள் காற்றில் அடித்துச் செல்லப்படும். நெல் மணிகள்தான் களஞ்சியத்தில் இருக்கும். விதைநெல்லாய் என்றும் விளங்குவார் என்ற தொலை நோக்குப் பார்வையோடுதான் தமிழகப் பெண்கள் பெரியார் எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
அவரை இழிவுபடுத்துவதை, அவரது சிலைகள் உடைக்கப்படும் என்பதை, சாதி வெறியர் எனத் தூற்றுப்படுவதை மக்கள் கவனித்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவசரக்காரனுக்குப் புத்திமட்டு என்ற பழமொழியை அறிந்துள்ள மக்கள் புத்திசாலிகள். இதையெல்லாம் உள்ளுக்குள்ளே பொதிந்து வைத்திருப்பார்கள். வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் வெளிப்படுத்துவார்கள். இந்த அனுபவத்தைத்தான் -
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
என்று வள்ளுவர் சாறாகப் பிழிந்து தந்துள்ளார்.
           --------------------------------நன்றி: மயிலை பாலு -“தீக்கதிர்” 19.3.2018

28.2.16

பெரியார் சொன்ன பிராமினோகிரசி! யைப் பாரீர்!

பெரியார் கணித்த “பிராமினோகிரசி!’’


While Speaking at a public meeting at Salem E.V.Ramasamy Naicker said that they must settle the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called Brahminocracy.      (A Hundred of the “Hindu’’ Page 337)
சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராமசாமி நாயக்கர் கூறியதாவது: வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருக்கும்போதே இந்தப் பார்ப்பன ஆதிக்கம்பற்றிய பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். அவ்வாறு செய்யா விட்டால், இங்கே ஜனநாயகம்(Democracy) இருக்காது. பார்ப்பன ஆதிக்கம்தான் (Brahminocracy) மிஞ்சும் என்று கூறினார் (1925) என்று “இந்து’’ ஆங்கில ஏடு வெளியிட்ட இந்து நூற்றாண்டு நூலில் (பக்கம் 337) குறிப்பிடப் பட்டுள்ளது. பெரியார் அன்று சொன்னது இன்று பலித்துவிட்டதா இல்லையா? (புள்ளி விவரம் 11 பக்கம் காண்க).

பெரியார் சொன்ன “பிராமினோகிரசி!’’யைப் பாரீர்!


பெரியார் சொன்ன
“பிராமினோகிரசி!’’யைப் பாரீர்!



இந்தியாவின் - மத்திய அரசில்....
1.    அருண்ஜெட்லி  - பார்ப்பனர்
2.    நிதின் கட்கரி  - பார்ப்பனர்
3.    சுஷ்மா சுவராஜ்  - பார்ப்பனர்
4.    எச்.என் ஆனந்த் குமார்  - பார்ப்பனர்
5    கல்ராஜ் மிஸ்ரா  - பார்ப்பனர்
6.    நரேந்திரமோடி ‘பனியா’ - பிற்படுத்தப்பட்ட வகுப்பு
நரேந்திரமோடி பனியா உயர்ஜாதி வகுப்பைச் சார்ந்தவர். தனது ஆட்சியின் போது அரசானை மூலம் தனது வகுப்பை மிகப் பிறபடுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்துக்கொண்டார்.
7.    ரவிப்பிரசாத் ‘சத்திரியா’  - உயர்ஜாதி வகுப்பு
8.    ராஜ்நாத்சிங் ‘ராஜ்புத்’ - உயர்ஜாதி வகுப்பு
9.    கஜபதிராஜு ‘சத்திரியர்’  - உயர்ஜாதி வகுப்பு
10.    நரேந்திர தோமார் ‘ஜாட்’ உயர்ஜாதி வகுப்பு
11.    வெங்கையா நாயுடு ‘கம்மா’ - உயர்ஜாதி வகுப்பு
12.    ராதாமோகன் சிங் ‘ராஜ்புத்’  - உயர்ஜாதி வகுப்பு
13.    சதானந்த கவுடா ‘ஒக்கலிகே’  - உயர்ஜாதி வகுப்பு
14.    ஸ்மிருதி இரானி ‘சத்திரியர்’ - உயர்ஜாதி வகுப்பு
15.    ஹர்ஷவர்தன்  ‘பனியா’
16.     உமா பாரதி - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு
17.    ஆனந்த கீதே - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு
18.    அரிசிம்ராத் பாதல் - சீக்கியர்
19.    தவார் சி கோலட்  - தலித்
20.    ராம்விலாஸ் பாஸ்வான்  - தலித்
21.    ஜுவல் ஓரம் - பழங்குடி
22.    நஜ்மா ஹெப்துல்லா  - முஸ்லீம்
10 இணை அமைச்சர்களில் 4 பார்ப்பனர்கள், ஒரு  உயர்ஜாதி,
3 பிற்படுத்தப்பட்டவர்கள், 2 மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (தலித் மற்றும் பழங்குடியினர் யாருமில்லை).
பெரும்பாலும் பார்ப்பனரும் உயர்ஜாதியினரும் ஒரு பக்கம் என்றால் ஆட்சியின் கொள்கை என்பது பார்ப்பனியம்தானே!

                          -------------------------’விடுதலை’ ஞாயிறுமலர் -27-02-2016

18.7.15

சிறைபட்ட தோழர் ஈ.வெ.இராமசாமி- ஊன்றிப்படியுங்கள்!உண்மைகள் புரியும்!!

சிறைபட்ட தோழர் ஈ.வெ.இராமசாமி

ராமசாமி என்று சொன்னால் நான் குறிப்பிடும்  ஆளை நீங்கள் சட்டென்றுகண்டு பிடிக்க மாட்டீர்கள் தோழர் ராமசாமி என்று சொன்னாலும் அவர் உங்கள் கைக்கு அகப்படமாட்டார். தோழர் ராமசாமி கூற வேண்டும் இல்லையேல், ஈ.வெ.ராமசாமி என்று சொல்ல வேண்டும் அல்லது குடிஅரசு என்று குறிப்பிடவேண்டும்.

இப்படி தெளிவாகச் சொன்னால்தான் அவர் உங்கள் கவனக் கைக்குள் சிக்குவார். அல்லது வேறொருவகையில் குறிப்பிட்டாலும் குறிப்பிடலாம். அதுதான் தமிழ்நாடு முறை. தமிழ்நாடு என்றால் தமிழ் தேசத்தைக் குறிப்பிடுவதாக நினைத்து விடாதீர்கள். சென்னையில் நடைபெறும் தினசரி பத்திரிகையான தமிழ்நாடு வைத்தான் நான்இங்கு குறிப்பிடுகிறேன்.
அந்தப்பத்திரிகைக்கு ராமசாமி நாயக்கர் என்று அழைப்பதில் தான் பிரீதி அதிகம் தோழர் ஈ.வெ.ரா அந்த நாயக்கர் பட்டத்தையும், அதற்குரிய ஸனத்தையும் வாபஸ் செய்து வெகு நாளாயிற்று என்பது தமிழ்நாடுக்குத் தெரியாதென்பதல்ல. குடிஅரசாலும் அதைத் தழுவிய குட்டிப்பத்திரிகைகளாலும்,
அதன் கோஷ்டியாராலும் தோழர் ஈ.வெ.ரா.உச்சரிக்கப்படுங் காலத்தில் ரத்து செய்யப்பட்ட நாயக்கர் பட்டத்தைச் சேர்க்காமல் வெறும் ராமசாமி என்று மொட்டையாக உச்சரித்து வருவதைத் தெரிந்தும், அறிந்தும் அதன் காரணத்தை உணர்ந்தும் இப்படி பிடிவாதமாக அந்த வாலையும் சேர்த்து எழுதி வருவதிலிருந்து தமிழ்நாடுக்கு ஜாதிப்பட்டத்தின் மேலுள்ள காதலை நன்கு அறியலாம். இவ்வகையில் தமிழ்நாடும் சுதேசமித்திரனும் ஒரு தனிரகம்.

தோழர் ராமசாமி இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? கோயமுத்தூரில், உயரமான சுற்றாலைச் சுவர்களுடன் கூடிய நல்ல கெட்டிக்கட்டடத்தில் இரும்புக்கம்பிக் கதவுகள் போட்ட அறைக்குள் இருக்கிறார். அவர் சாப்பிடுகிற சாப்பாடு சர்க்கார் சாப்பாடு. இந்த மகத்துவம் யாருக்கு கிடைக்கும். ஆனால் அவர் முன்போல பிரசங்கம் பண்ண முடியாது. பேப்பருக்குத் தலையங்கம் எழுத இயலாது.
குறிப்பிட்ட நேரத்தில் சாப்பாடு. மற்ற நேரத்தில் வேலை, மாலை 5 அடித்ததும் அறைக்குள் அதற்கப்பால் அயர்ந்து தூங்க வேண்டியதுதான். ஆனால் மூட்டைப்பூச்சிகளின் இஞ்ஜக்ஷன் சிகிச்சையும், கொசுக்களின் ரீங்காரகானமும் மட்டும் உண்டு. தோழர் ராமசாமி ஜெயிலுக்குள்ளிருப்பது இது நாலாவது தடவை. இவர் தான் மட்டிலும் ஜெயிலுக்குள் போகவில்லை தன்னோடு உடன் பிறந்த தங்கை தோழியர் கண்ணம்மாளையும் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்.
அண்ணனுக்கு ஆறு மாதம் தங்கைக்கு மூன்று மாதம் இதோடு போகாமல் தலைக்கு முன்னூறு ரூபாய் அபராதம் இது செலுத்தப்படாவிடில் இன்னும் ஒவ்வொரு மாதம் அதிகமான ஜெயில் வாழ்வு. இத்தனை உபத்திரவம் எதனால் தெரியுமா? சென்ற 29.10.33இல் குடிஅரசு பத்திரிக்கையில் இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?
என்று எழுதப்பட்டிருந்த தலையங்கந்தான். குடி அரசுக்கும், மேற்படி அண்ணன் தங்கைக்கும் உள்ள சம்மந்ததத் தைதான் நீங்கள் அறிவீர்களே. குடிஅரசு தான் பத்திரிகாசிரியர் அண்ணன் ஈ.வெ.ரா. அதன் பதிப்பாசிரியர் தங்கை கண்ணம்மாள் இதனால் இந்த இரண்டு பேருக்குமே தண்டனையும் அபராதமும்.
தோழர் நாயக்கர் (தமிழ்நாடுவின் அனுமதியை எதிர்பார்த்து நாய்க்கர் வார்த்தையை உபயோகிக்கிறேன்) தோழியர் கண்ணம்மாள் இருவரும் ஜெயிலுக்குப் போனது பற்றி நான் இங்கு வாழ்த்துக் கூறவில்லை. அவர்கள் பொதுவேலையில் இறங்கியது முதல், நாளது வரை செய்த சேவைகளை செய்த தியாகங்களை டைரி எழுதி கண், காது, மூக்கு வைத்து சித்திரம் வரையவும் முற்படவில்லை. ஜில்லா மாஜிஸ்திரேட் செய்த தீர்ப்பை சரி என்றோ, தப்பு என்றோ அப்பீல் ஜட்ஜ்மெண்டு கூறவும் முன்வரவில்லை.
தோழர் ராமசாமி இந்தத் தீர்ப்பை எப்படி ஏற்றுகொண்டார் என்பதை எடுத்துக்காட்டவே இந்தப்பாடுபடுகிறேன். ஆனால் என் உள்ளத்தில் உதயமாகும் எண்ணங் களை படம் பிடித்துக் காட்ட எனக்கு சக்தி இல்லை. அந்த சக்தி இருந்தால் இந்த குடி அரசு வழக்கையும், அதில் ஏற்பட்ட தீர்ப்பையும் ஈ.வெ.ரா.எப்படி ரசித்தார் என்பதை இந்தப்பேனா நர்த்தனத்தில் சித்திரம் தீட்டிவிடு வேன், சிலையாகக் கூட சிற்பம் சித்தரித்துவிடுவேன், அந்த எளவு சக்திதான் எனக்கு ஏற்பட வில்லை. ]
வசனநடை சித்திரத்தில் இல்லாமல் போனாலும் கவிநடைச் சித்திரத்தில் ஒருவர் படம் தீட்டிக்கொண்டிருக் கிறார். அந்த ஓவிய நிபுணர் - சிற்ப சாஸ்திரி - யார் தெரியுமா? அவர் தான் பாரதிதாசன். அவர் தீட்டிவரும் சித்திரம் முடிவடைந்தததும் அதை நகர தூதன் வாசகர்களும் கண்டு களிக்கலாம்.
தோழர் ராமசாமி ஒரு பொல்லாத கிழவர், மகா பிடிவாதக்காரர். எதில் தலையிட்டாலும் பிறர் பின்தொடர முடியாத ஒரே ஓட்டந்தான், பொது சேவையில் தான் இப்படி என்று நினைக்கீறீர்களா? அல்ல. அவர் செய்த மிளகாய் வியாபாரத்திலும் அதே ஒட்டந்தான். மதுவிலக்குப் போராட்டத்தில் முதல் மெடல் பெற்றவர் இந்த தாத்தாதான். ஒத்துழையாமைக் காலத்திலும் அவரால் நடத்தப்பட்ட ஈரோடு டீம் தான் ஜெயித்து தீண்டாமையைத் தொலைக்க வைக்கத்தில் நடந்த பந்தயத்திலும் ஈ.வெ.ராவுக்குத்தான் கெலிப்பு.
இன்னுஞ்செல்ல வேண்டுமா? ஒரு பானை சோத்துக்கு இரண் டொரு பருக்கைமட்டும் பதம்பார்த்தால்போதும். சுயமரியாதை இயக்கம் அதன் தத்துவம் இப்போது எப்படி ஓடிக்கொண்டி ருக்கிறதென்பதை நீங்கள்தான் பார்க்கிறீர்களே. சீர்திருத்தத் தொண்டனுக்கு ஓய்வு நேரமோ இளைப்பாறும் மண்டபமோ கிடையாது என்று ஒரு பெரியார் சொல்லியிருக்கிறார்.
அதை நிதர்சனமாகக் காணவேண்டுமானால் தமிழ் நாட்டில் தோழர் ஈ.வெ.ரா.சரித்திரத்தில் தான் காணமுடியும். இரண்டொரு பேனாக்காரர்கள் தான் இந்த இடத்தில் என்னை மிரட்ட சிறைவாசம் ஓர் இளைப்பாறும் மண்டபம் என்று என்ணி என்னை ஜெயிக்கப் பார்க்கிறீர்களா?
சீர்திருத்தக்காரன் ஜெயிலுக்குள் இளைப்பாறு வதேது? உள்ளே இருக்குங்காலத்தில் அவன் மனம் என்ன பாடுபடுந்தெரியுமா? உண்மையான சீர்திருத்தக்காரனுக்கு அப்போதுதான் நிஜமான ஆவேசம் ஏற்படும், சிறைவாசத்தில் தான் அவன் செய்யப்போகிற யுத்தத்திற்குப் படையை எப்படி அணிவகுத்து நிறுத்துவதென்பதற்குப் பிளான் போடுவான்.
தோழர் ராமசாமிக்கு இந்தத் தீர்ப்பு கிடைத்தது பற்றி வெகு சந்தோஷம். ஆனால் தண்டனையைப் பற்றி மட்டும் அவருக்குக் கொஞ்சம் வருத்தம். யாருக்குத்தானிருக்காது? சும்மா, காட்டில், மரத்துக்கு மரம் பறந்து கிள்க்குக் கிளை தாவி நினைத்த நேரங்களில் பாடித்திரிந்த பறவையைப் பிடித்துக் கூட்டுகுள்போட்டு அடைப்பதுபோல அறைக்குள்ளிட்டு அடைத்தால் எந்த மனிதன் தான் வருத்தப்படமாட்டான்?
தோழர் ராமசாமிக்கு அந்த முறையில் வருத்தம் அல்லவே அல்ல. பொசுக்கென்று ஆறுமாதம் கிடைத்தது. அதிகமாகக் கிடைக்குமென்று நம்பியிருந்தார். அந்த நம்பிக்கையை இரண்டொருவரிடமும் சொல்லி வந்தார். ஆனால் அது ஏமாற்றத்தில் முடிந்தது.
கைது செய்யப்பட்டது, தோழர் ராமசாமிக்கு ரெட்டை சந்தோஷம். இந்த சாக்கில் உள்ளே போய்விட்டு வந்தால் ஊக்கம் ரொம்ப ஏற்படுமென்பது அவரது ஆசை. இந்த ஆசையை அனுபவிப்பதற்காகவே அவர் எதிர்வழக்காடவில்லை என்று நினைக்கிறேன். எத்தனையோ பேர்கள் எடுத்துச் சொல்லியும் எவ்வளவோ தொண்டர்கள் கெஞ்சிக் கேட்டுங்கூட இந்தத் தாடிக்கார கிழவன் ஒரே பிடிவாதமாய் சாதித்துவிட்டாரம்.
அப்பப்பா! இருந்தாலும் இந்தப் பழுத்த வயதில் இவ்வளவு பிடிவாதங் கூடாது. எதிர்வழக்காடுவதில் தான் இவ்வளவு முரட்டுத்தனமென்றால் வாக்கு மூலமாவது வகையோடு கொஞ்சம் சீனஸ்வரத்தில் கொடுத்திருக்கக்கூடாதா? குடிஅரசுத் தலையங்கம் ஒரு படியைத் தாண்டியிருந்ததென்றால் இவரது வாக்குமூலம் ஒன்பத்திரெண்டு படியையும் தாண்டிவிட்டது.
கடைசியாகப் பப்ளிக் பிராசிகியூட்டர் தனது ஆர்குமெண்டைப் பேசும்போது பார்க்கவேண்டுமே. இவரது குறும்புத்தனத்தை அவர் பேசும்போது பத்திரிகை வாசகங்களைப் படித்துக்காட்டி இந்த இடத்தில் ராஜத்துவேஷம் இருக்கிறது.
இந்த இடத்தில் பொதுவுடமைப் பிரச்சாரம் இருக்கிறது என்று எடுத்துக்காட்டும் போது தோழர் ராமசாமி ஸ்பிரிங் பொம்மையைப்போல தலையை அசைத்து அசைத்து ஆட்டிக்கொண்டு, அதற்குத் துணையாக ஆள்காட்டி விரலையும் பலகையில் அடித்துக்கொண்டு பப்ளிக் பிராசிகியூட்டர் சொல்லுவதெல்லாம் வாஸ்தவம் எனச்சொல்லுவது போல தலையாட்டி வந்தார். தீர்ப்புக் கூறியதும் அவரது முகப்பொலிவுப் படம் பிடிக்கக்கூடியதாக விருந்தது.

இவரை கோயமுத்தூர் ஜெயிலில் போட்டதால் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. அதுதான் ராஜகோபாலாச்சாரி - ராமசாமி சந்திப்பு. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரிக்கும் ஈ.வெ.ராமசாமிக்கும் அக்காலத்திலிருந்த நேசபான்மையை தமிழ்நாடு நன்றாக அறியும்.
இரண்டுபேரும் இணைபிரியாதிருந்த காலமும் ஒன்றிருந்தது. அண்ணன்தம்பிகள் கூட அவ்வளவு மரியாதையோடும், வாஞ்சை யோடும், வாதசல்யத்தோடும் இருந்திருக்கமாட்டார்கள். வைதீக ஒத்துழையாதாராகக் கூட இருந்த இவ்விருவரும் பேசிய பேச்சுக்கள் வால்யூம் கணக்கில் சேரும் புட்டாலும் புடமுடியாது என்று சொல்லக்கூடிய விதமாக தோழர்கள் ராமசாமியும், ராஜகோபாலாச் சாரியாரும் இருந்ததுபோல் 1925க்கு மேல் இருவரும் அரசியல் சத்துருக்களாய் மாறினர்.
குருகுலப்போராட்ட காலத்தில் தோழர் ஆச்சாரியார் நடந்து கொண்ட தோரணையிலிருந்து ஆச்சாரியார் சமத்துவக் கற்பில் ராமசாமி சந்தேகங் கொள்ள ஆரம்பித்தார். அதற்கு பிறகுதான் பிராமணர்களென்றால் தோழர் ராமசாமிக்குப் பச்சநாவியாகிவிட்டது. அந்த சனியன் பிடித்த குருகுலக் கிளர்ச்சிதான் இணைபிரியாதிருந்த அவ்விருவரையும் வெட்டிவிட்ட தென்று சொல்ல வேண்டும்.
சுயமரியாதை இயக்கங்கண்ட பின் இவ்விருவரும் சந்தித்ததே கிடையாதென்று சொல்லாம். எங்கேனும் தப்பித்தவறி முகத்தோடு முகம் மோதிக்கொண்டிருந்தாலும் இருவரும் பேசியிருக்கக்கூடிய சந்தர்ப்பமே வாய்த்திருக்காது.
தோழர் ராமசாமியை ஜெயிலுக்குள் கண்டதும் தோழர் ராஜகோபாலாச்சாரிக்கு தூக்கி வாரிப்போட்டது போலிருக்கும். ராஜதுவேஷத்தின் காரணமாக தோழர் ராமசாமி சிறைக்கு வந்தாரென்றும் கேள்விப்பட்டதும் அதைவிடப் பெரும் வியப்பாக இருந்திருக்கலாம். தோழர் ராமசாமி கோவை சிறைக்குள் நுழையும்போது தோழர் ஆச்சாரியார் உள்ளே இருக்கிறார்.
ஈ.வெ.ரா. இம்மாதிரி சிறைக்கு வர சந்தர்ப்ப மேற்படாது என்ற நினைப்பு ஆச்சாரியாருக்கு உண்டு. அதனாலேயே அவர் அவ்வாறு ஆச்சரியமடைந்திருக்கலாமென்று நான் கூறினேன். இந்த இரண்டு பேருக்குள்ளும் இருந்த பழைய அன்பு அவ்விருவரையும் கோவை ஜெயிலுக்குள் கூட்டி வைத்துவிட்டது பழைய சினேகிதர்கள் புதிய முறையில் கூடிக்குலாவும்போது என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது.
அவர்கள் நெஞ்சம் எப்படி நெகிழ்ந்தது என்பதையும் நான் அறியேன். அதை நீங்கள் அறிய ஆசைப்படுகின்றீர்களா? ஆம் என்றால் அவர்களைச் சந்தித்து நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
                             --------------------------------------------------------------------------(நகரதூதன்-1934)