Search This Blog

26.9.12

பெரியார் அறக்கட்டளையின் பணியும்- நமது கடமையும்!

அறக்கட்டளையின் பணியும்- நமது கடமையும்! (2)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வைர விழா என்பது தமிழ்நாட்டின் சமூக, கல்வி வளர்ச்சி மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்பு என்னும் திசையில் அது சாதித்திருக்கும் பட்டியலை நினைவு கூர்வதாகும்.

மருத்துவ உதவிப் பணிகளும் சாதாரண மானவையல்ல; சென்னை, திருச்சி, வல்லம், சோழங்கநல்லூர், சேலம், திருவெறும்பூர் என்று இதன் மருத்துவப் பணிகளின் கரம் நீளக் கூடியதாகும். இயக்கத் தோழர்கள் பலருக்குத் தேவையான  மருந்துகளையும் வாங்கிக் கொடுத்து வருகிறது. அதனை ஓர் அமைப் புக்குள் கொண்டுவரவேண்டும் என்பதற் காகவே பெரியார் மருத்துவக் காப்பு நிதி என்ற ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (வாய்ப் புள்ளவர்கள் நிதி தரலாமே!)


கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் மனிதனை நினை என்று சொன்னதன் பொருளுக்கான விளக்கமும் - செயல்முறையும் இதன்மூலம் விளங்குமே!

பெரியார் அறக்கட்டளை ஒரு பக்கம் வளர்ந்து, அதன் பணிகள் பரவலாக விரிந்து, பயன்பெறுவோர் எண்ணிக்கையும் பெருகி வந்தாலும் உள்ளுக்குள் புகுந்து அழிக்கும் கிருமிகள்போல கூட இருந்தே குழி வெட்டிய கொடுமைகளும் நிகழ்ந்தன.

வெளிப்படையான இன எதிரிகள் ஒரு பக்கம் - இந்தத் தொண்டால் யார் பலன் அடைகிறார் களோ, அவர்களே அதனைப் புரிந்துகொள்ளாமல் எதிரிகளுக்கு அம்பாகப் பயன்படும் கொடுமை ஒருபுறம் - கூட இருந்தே உடன் கொல்லும் துரோகம் இன்னொருபுறம் - இவற்றையெல்லாம் கடந்துதான் தந்தை பெரியார் அவர்களின் தொண்டு, அவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் பணிகளும் ஓங்கி ஓங்கி வளர்ந்திருக்கின்றன.

வருமான வரித்துறை என்பது ஓர் ஆயுத மாகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கும் முகம் கொடுத்து, சட்டப்படி அறக்கட்டளை என்று ஏற்கும்படிச் செய்த வகையில், நமது மதிப்பிற் குரிய அறக்கட்டளையின் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஆற்றியிருக்கும் பணியை யாராலும் அளவிடவே முடியாது. பாதுகாத்தது மட்டுமல்ல - அதனை வளர்த்திருக்கும் நேர்த்தி களையெல்லாம் எண்ணிப் பார்த்தால், இயக்கம் மட்டுமல்ல, இந்த நிறுவனங்களால் பலன் பெறுவோரும் காலாகாலத்திற்கும் நன்றி கூறிடக் கடமைப்பட்டுள்ளனர்.

தனது மகத்தான இந்த வெற்றிகளுக்குப் பின் பலமாக, பின்புலமாக இருந்தவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவிக்கும் பண்பாட்டை உள்ளடக்கியதுதான் திருச்சி விழா. இது பாராட்டு விழா அல்ல - நன்றி காட்டும் விழா என்று குறிப்பிட்டது மிகச் செறிவானதாகும்.


இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அப்படி நன்றி காட்டப்பட்டவர்கள் அவ்விழாவில் சொன்ன கருத்து - மிக உயர்ந்த சீலத்தைக் கொண்டதாகும். தந்தை பெரியார் அவர்களால் பலன் பெற்ற இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த நாங்கள், தந்தை பெரியார் அவர்களின் நிறுவனத்துக்கு முடிந்த உதவிகளைச் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்புக்காக நாங்கள் தான் நன்றி கூறவேண்டும் என்று சொன்னார்களே, அந்த மெருகேறிய உள்ளங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகுமே!

தந்தை பெரியார் அவர்களை உணர்ந்தவர்கள், புரிந்துகொண்டவர்களின் ஒவ்வொரு செயல்பாடும், பண்பாடும் பெருநிலை கொண்டதாகத்தானிருக்கும் என்பதற்கு இவையெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

இந்த நிறுவனம் மேலும் வளர்ந்து, அதனால் பலன் பெறும் மக்களின் தொகையும் பெருக நம்மால் இயன்ற உதவிகளைத் தொடர்வது என்று தமிழர்கள் உறுதி கொள்வார்களாக!


வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!
                   --------------------”விடுதலை” தலையங்கம் 26-9-2012

பிள்ளையார் உடைப்புப்பற்றி பெரியார்









பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை தயங்கவேண்டிய தில்லை.

பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள். அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக ஆகி விடுவதில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் இந்த உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை; தொடவில்லை.

நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்யைர் கடவுளல்ல!
வேத சாஸ்திர ஆதாரம் என்பதன்படியும் அது - கணபதி கடவுளல்ல!
கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை!

கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறிவும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.
கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை; அறிவுள்ள - மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல!

காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் - தெய்வங்கள் உணர்ச்சியேதான் இந்த 1953 -ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?


ஆற்றங் கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங்களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, கல்லை - செம்பை- மண்ணை - அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டுமிராண்டி களான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன். இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது?

யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

மற்றும் இன்று ஆரியப் பார்ப்பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசந்தி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டன்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்ப வர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் - சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ்வரர்களே, புலவர்களே, பிரபுக் களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக்களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல் லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக இருக்கிறேன்.

----------------------7.5.1953 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை

25.9.12

பெரியார் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு


செப்டம்பர் 23 விழா!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் 60ஆம் ஆண்டு வைர விழா திருச்சியில் பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியன்று வெகு நேர்த்தியாக நடைபெற்றது.

பல ஆண்டுகளாக தந்தை பெரியார் அவர்களின் எண்ணத்தில் உதித்திருந்த கருத்துக்கு 1952 செப்டம்பர் 23ஆம் தேதியன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரம் என்ற அமைப்பைப் பதிவு செய்ததன் மூலம் சட்ட ரீதியான வடிவத்தைக் கொடுத்தார்கள்.

அன்னை மணியம்மையார் அவர்கள் திருமணம் என்பதுகூட இந்த எண்ணவோட்டத்திற்கான ஒரு முக்கிய அம்சமாகும்.

தந்தை பெரியார் அவர்களின் எண்ணமும், செயல்பாடும் எத்தகு தொலைநோக்கானவை - சிறப்பானவை  என்பதற்கு - பெரியார் நிறுவனங்கள் வளர்ந்தோங்கி நிற்கும் காட்சிகள் கட்டியங்கூறிக் கொண்டு நிற்கின்றன.

இயக்க வெளியீடுகள் விடுதலை (இரு இடங்களில் பதிப்பு) உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் போன்ற ஏடுகளும், இதழ்களும் அகப் பொலிவிலும், தோற்றத்தின் பொலிவிலும், புதிய தலைமுறையினர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.


வேறு எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்குச் சந்தாக்களின் எண்ணிக்கை உயர்ந்து பல்லா யிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்து, தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை மணம் தமிழர் களின் வீடுகளில் கமழும் நிலை என்பது சாதாரண மானதல்ல.

அதிகார மய்யங்களைக் கைகளில் வைத்துக் கொண்டுள்ள அமைப்புகளே ஆச்சரியப்படும் அளவுக்கு இந்தியாவின் தலைநகரமான டில்லியில் கேந்திரமான இடத்தில் பெரியார் மய்யம் செம்மாந்து நிற்கிறது.

அதை மய்யப்படுத்தி பல்வேறு ஆக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு மேலும் விரிவாக்கப் பணிகள் திட்ட அளவில் உள்ளன.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார்  அவர்களைப்பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இன்றைக்கு 55 ஆண்டுகளுக்கு முன் கணித்துச் சொன்னது கனிந்திருக்கும் கால கட்டம் இது.

மதவாதம் உலகப் பந்தை சீரழித்துக் கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில், மதமற்ற உலகு ஒன்றின் மூலம் தான் சமத்துவ, சமாதானம், ஒப்புரவு உலகினைக்  காண முடியும்.

சச்சரவுகளும், சுரண்டலும், ஆதிக்க வெறியும், அமைதி தொலைந்த வாழ்வும், மூடத்தனமும், பெண்ணடிமைத்தனமும் பின்னிப் பிணைந்து கிடக்கும் உலக மக்களுக்குத் தந்தை பெரியார் கொடுக்கும் சிந்தனை ஒளிதான் அதற்கான திறவு கோலாகும்!
இந்தத் திசையில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் மிகப் பெரிய பொறுப்பு இந்த இயக்கத்திற்கு இருக்கிறது.

கல்வியின் மூலம்தான் ஒடுக்கப்பட்ட எந்த ஒரு சமுதாயமும் முன்னேற முடியும் என்ற உறுதியான எண்ணத்தின் அடிப்படையில் பெரியார் அறக்கட்டளை மூலம் ஒரு தொடக்கத்தைக் கொடுத்தார்கள்.

இருபால் ஆசிரியர் பயிற்சி பள்ளி, தொடக்கப் பள்ளி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம் என்ற தொடக்கம், அன்னை மணியம்மையார் காலத்தில் வளர்த்து இன்று தமிழர் தலைவர் தலைமையில் வானுற உயர்ந்து கண்டோர் களிக்கவும், சரியாகக் கணிக்கவும், மாற்றார் மலைக்கவுமான ஒரு பெரு நிலையை எட்டியுள்ளது.

நிறுவனப்படுத்தப்படாத எந்த ஒரு செயலுக்கும் ஆயுள் காலம் குட்டையாகும். இதனை மிக ஆழமாக உணர்ந்து, காலா காலத்துக்கும் அய்யாவின் தத்துவம் நிலை பெற்று, இயக்கம் வலு பெற்று நிற்பதற்கான அடிப்படைப் பணிகளை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் திட்டமிட்டுச் செய்துள்ளது.

அந்த வரலாற்று உண்மையைப் பதிவு செய்யும் நிகழ்ச்சிதான் கடந்த 23ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற விழாவாகும். பல்வேறு சிறப்பு அம்சங்களோடு அது நடைபெற்றுள்ளது. அந்த நிறுவனம் மேலும் வலுப் பெற, ஒளி பெற ஒல்லும் வகைகளில் எல்லாம் உதவ வேண்டியது ஒடுக்கப்பட்ட மக்களின், தமிழினப் பெரு மக்களின் முக்கிய கடமையாகும்.

                     ------------------------"விடுதலை” தலையங்கம் 25-9-2012

ஆஸ்திகமும், நாஸ்திகமும்



1. ஆஸ்திகம் என்று உண்டானதோ, அன்றே நாஸ்திகமும் உண்டாயிற்று.

2. ஆஸ்திகம் அறியாமை, பயம், சுயநலம் இவற்றில் முளைத்து; நாஸ்திகம் அறிவின் விசாரணையில் முளைத்தது.

3. ஆஸ்திகம் அறிவைப் பாழ்படுத்துகிறது. நாஸ்திகம் அறிவை ஓங்கச் செய்கிறது.

4. ஆஸ்திகம் உலகை மிருகநிலைக்கு அழைத்துச் செல்கிறது; நாஸ்திகம் அதை நாகரிக நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

5. ஆஸ்திகம் மக்களை அவமதிக்கிறது. நாஸ்திகம் மக்களை மேன்மைப்படுத்துகிறது.

6. ஆஸ்திகம் மக்களை அழியவைக்கும்; நாஸ்திகம் மக்களை வாழவைக்கும்.

7. ஆஸ்திகத்தால் வறுமை, பிணி முதலியன ஓங்கும்; நாஸ்திகத்தால் அவை அழியும்.


8. ஆஸ்திகமும் நாஸ்திகமும் என்றும் தீராப்பகை கொண்டன.

9. ஆஸ்திகத்திற்கு அறியாமையும் அரசாங்கமும், முதலாளித்துவமும் துணை. நாஸ்திகத்திற்குப் பகுத்தறிவே (விஞ்ஞானம்) துணை.

10. ஆஸ்திகம் அழியக்கூடியது; நாஸ்திகம் என்றும் அழியாதது.

11. ஆஸ்திகம் சில சமயம் நாஸ்திகத்தைப் புறம்பே அழிக்கும்; ஆனால், நாஸ்திகமோ ஆஸ்திகத்தை உள்ளும் புறமும் அழிக்கவல்லது.

12. ஆஸ்திகத்தின் வெற்றி தற்காலிக வெற்றியாகும், நாஸ்திகத்தின் வெற்றியோ நிலைபெற்ற வெற்றியாகும்.

13. ஆஸ்திக நாஸ்திகப் போராட்டத்தின் லாபநஷ்டக் கணக்கு. ஆஸ்திகத்திற்குத் தோல்வியும், நாஸ்திகத்திற்கு வெற்றியும் சரித்திர முறைப்படி இதுவரை உண்டு, இனியும் உண்டு.

14. ஒரு மதத்தின்படி அதனை நம்பாத மற்ற மதங்கள் நாஸ்திகமானபடியால், எல்லா மதத்தையும் நம்பாத முழு நாஸ்திகமே நன்மையளிக்கும்; பெருமையளிக்கும். ஆகையால், அம்முழு நாஸ்திகமே எங்கும் பரவுக!
ஓங்குக!!


           --------------------------அறிஞர் அண்ணா - “திராவிடநாடு” 31.10.1943

24.9.12

கோயில் நகை அறைக்குள் பெண் அதிகாரி போகக்கூடாதா?



திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் இருக்கும் பொற்குவியலைக் கணக்கிடும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது - நீதி மன்றத்தின் ஆணையின் அடிப்படையில்.

ஒரு கோயிலுக்குள் தேவையில்லாமல் பெரும் அளவு மதிப்புள்ள பொற்குவியல்கள் முடங்கிக் கிடப்பது சரியானதுதானா? தேவையானதுதானா? அறிவுடைமையானதுதானா? என்ற கேள்விகள் எழுந்தால்,  அவை நியாயமானவையே!

ஆன்மிகப்படியோ ஆச்சாரப்படியோ  பக்த மெய்யன்பர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும் கூட கோயில் என்பது மனதை ஒருமுகப் படுத்துவதற்கான ஓரிடம் என்றே கூட வைத்துக் கொள்வோம்!

(உடம்பே கோயில் ; உள்ளமே இறைவன் உறையும் இடம் என்று கூறும் சிலரின் தத்துவார்த்தச் சங்கதியைக் கூட சற்றுத் தூர ஒதுக்கி வைத்துக் கொண்டு சிந்திப்போம்!)

இப்படி மனதை ஒருமுகப்படுத்தும் இடத்தில் எதற்காக இந்தத் தங்கக் குவியல்கள்? எதற்காக இவை தூசிபடிந்து, அழுக்கேறிக் கிடக்கவேண்டும்?

அதுவும் தேவையில்லாமல் இப்படி சொத்துக்கள் குவிந்து கிடந்தால் அங்கே தவறுகள் நடப்பது என்பது எதிர் பார்க்கக் கூடியதே! அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல சந்தர்ப்பங்களில் கோயில் நகைகளைக் கடத்திச் சென்றுள்ளனர் என்ற குற்றச் சாற்றும் கூட எழும்பியதுண்டே!


பொதுவாக தங்கம் என்பது அரசின் ரிசர்வ் வங்கியில் இருக்க வேண்டியதாகும். அதன் மதிப்பின் அடிப்படையில்தான் ரூபாய்ப் புழக்கமும் இருக்க வேண்டும் என்பது பொருளாதாரக் கண்ணோட்டத் தில் கூறப்படுவதாகும்! ரிசர்வ் வங்கியில் இருக்கும் தங்கத்தின் மதிப்பை விட பணப்புழக்கம் அதிகமாக நாட்டில் இருந்தால் அது பணவீக்கத்தில் கொண்டு போய்விடும் என்றெல்லாம் பொருளாதார மேதைகள் கூறி என்ன பயன்? அந்த மேதைகள் யாராவது அரசு கஜானாவில் இருக்க வேண்டிய தங்கம் கோயிலுக் குள் முடங்கிக் கிடக்கக்கூடாது என்று வாய் திறந்து சொன்னதுதான் உண்டா?

இப்பொழுது இதில் இன்னொரு பிரச்சினை கிளம்பியிருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் குறிப்பிட்ட அறையில் உள்ள நகைகளை மதிப்பிட பெண் அதிகாரி ஒருவர் சென்றபோது அவர் தடுக்கப்பட்டுள்ளார்! அது கோயில் அய்தீகத்துக்கு விரோதமானதாம்! பெண்ணை அனுமதிக்கக்கூடா தாம். எந்த ஒரு நியாயத்தின் அடிப்படையிலாவது கோயில் சமாச்சாரங்கள் ஒத்துப் போகின்றனவா?

பெண்ணை சக்தி என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, சக்தியில்லையேல் சிவன் இல்லை என்று இன்னொரு பக்கத்தில் சிலாகித்துக் கொண்டு, இப்படி பெண்ணை அவமானப்படுத்த லாமா?


கோயில் நிருவாக அதிகாரிகளாக, ஆணையர்களாக பெண்கள் இருக்கிறார்கள் - அவர்களையும் அனுமதிக்கக்கூடாது என்று சொல்லப் போகிறார்களா?

இராத்திரி பூராவும் என்ன வேலை செய்து கொண்டு இருந்தான் இந்த அர்ச்சகப் பார்ப்பான் என்று யாருக்குத் தெரியும்? குஜராத்தில் சவ்மிய நாராயண் கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் கோயிலுக்குள்ளேயே தனி அறையில் காமலீலைகள் செய்து வந்த செய்தி படங்களுடன் பக்கம் பக்கமாக வெளி வரவில்லையா?

காஞ்சிபுரம் மச்சேந்திரசுவாமி கோயில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் கர்ப்பக் கிரகத்திலேயே பக்தைகளிடம் உடலுறவு வைத்துக் கொண்டது சிரிப்பாய்ச் சிரித்ததே!  இந்த யோக்கியதையுள்ள பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாகக் கோயில் கருவறைக்குள் ராஜா மாதிரி நடந்து செல்லலாம். அதிகாரி என்ற முறையில் பெண் ஒருவர் கோயில் நகை அறைக்குள் போகக் கூடாதா?

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் நகையறைக்கு அரசு பணி நிமித்தமாகச் சென்ற பெண் அதிகாரியைத் தடுத்தவர்கள் மீது அரசு அதிகாரி தன் கடமையைச் செய்யவிடாமல் தடுத்த தாகக் கூறி வழக்குப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

                   -----------------------"விடுதலை” தலையங்கம்  24-9-2012

காந்தி ஜயந்தி பற்றி பெரியார்



கிருஷ்ண ஜயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு அநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன.

தோழர் காந்தியவர்கள் இந்திய அரசியலில் தலையிட்டு இன்றைக்கு ஏறக்குறைய 15 வருஷங்கள் ஆகின்றன. இந்தப் பதினைந்து வருஷ காலங்களில் அவர் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து செலவு செய்யச் செய்தார். பதினாயிரக்கணக்கான நபர்களை அடி, உதை, வசவு முதலியவைகள் படச்செய்தார். 40 ஆயிரம் 50 ஆயிரக்கணக்கான பேர்களை சிறை செல்லச் செய்தார். இந்திய அரசியல் உலகில் மிதவாதிகள், அமித வாதிகள், ஜஸ்டிஸ்காரர்கள், இந்து, முஸ்லீம்கள், சீக்கியர்கள் முதலிய எல்லாக் கூட்டத்தாரிடமும் சர்வாதிகாரப் பட்டமும் பெற்றார். மேல்ஜாதிக்காரர்கள், ஏழைகள், பணக்காரர்கள் முதலிய எல்லோருக்கும் தாமே தர்ம கர்த்தாவாக கருதப்பட்டார். காங்கிரஸ் ஸ்தாபனம் என்பதைத் தனது கால் சுண்டுவிரலால் மிதித்து அடக்கித் தனது இஷ்டம் போல் ஆட்டிவைத்தார் என்கின்றதான பெருமைகளை எல்லாம் பெற்றவர் என்பவராவார்.

அன்றியும் (ஆத்மா என்பதாக ஒன்று உண்டா? இல்லையா? என் கின்ற வாதம் தலை நிமிர்ந்து நிற்கின்ற காலத்தில்கூட) பெரும்பான்மை மக்களால் மகாத்மா என்று கொண்டாடப் படும்படியாகவும் செய்துகொண்டார்.

இன்னும் அநேக காரியம் செய்தார் என்றும் வைத்துக்கொள்ளலாம். இவையயெல்லாம் சாதாரண (அதாவது சராசரி) மனிதனால் செய்துகொள்ள முடியாத காரியம் என்றும் ஒப்புக்கொள்ளுவோம். ஆனால் இவ்வளவு செய்தும் இவ்வளவு சக்திஉடையவராய் இருந்தும், இவ்வளவு பெருமை பெற்றும் இவரால் மனித சமூகத்துக்கு நடந்த காரியம் என்ன? இதனால் எல்லாம் ஏற்பட்ட பலன் என்ன? என்பதே அறிவியக்கக்காரர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். இதுஒருபுறமிருக்க,

இப்போது அப்படிப்பட்ட காந்தியாரின் ஆட்ட பாட்டமெல்லாம் அடங்கி கடைசியில் “எல்லாம் கடவுள் செயலில்” வந்து நின்று “எனக்கு ஒன்றும் புரியவில்லையே” “என்னை இருள் சூழ்ந்து கொண்டதே” “மேலால் என்ன செய்வது என்பது எனக்கு விளங்கவில்லையே” “கடவுள் ஒரு வழிகாட்ட வேண்டியிருக்கிறதே” என்கின்ற பல்லவியில் வந்து விட்டார்.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் அவரிடம் உள்ள கடைசி ஆயுதத்தையும் காட்ட ஆரம்பித்துவிட்டார். அதாவது பொதுவுடமைப் பூச்சாண்டியைக் காட்டுவது. எப்படியெனில் தன் வாயால் ஒன்றும் சொல்லாமல் தன்மீது எவ்வித பொறுப்பும் போட்டுக்கொள்ளாமல் தோழர் ஜவகர்லால் அவர்கள் வாயினால் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுவதன் மூலம் பொதுவுட மையை ஜாடைகாட்டச் செய்து ஓரளவுக்கு அதை ஒத்துக்கொள்ளுவது போல் (பின்னால் எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு இடம் வைத்துக் கொண்டு) பேசி சர்க்காரை மிரட்டுகிறார்.

அதாவது தன்னுடன் சர்க்கார் ராஜிக்கு வரவில்லையானால் “பொது வுடமைக் கிளர்ச்சிக்கு இடம் கொடுத்து விடுவேன்” என்கின்ற ஜாடை. இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.

இதை ஏன் அடிக்கடி சொல்லுகிறோம் என்றால் தோழர் காந்தியார் முன்பு பட்டினியினிமித்தம் வெளி வந்து பூனா மகாநாடு நடத்தி விட்டு மறு படியும் தனிப்பட்ட சத்தியாக்கிரகம் செய்து சிறை செல்லும் போது சர்க்கா ருக்குக் கொடுத்த ஒரு ஸ்டேட்மெண்டில் இதே மாதிரி சர்க்காரை மிரட்டு வதற்குப் பொதுவுடமை ஜாடையை உபயோகித்துக் கொண்டார்.

அதாவது “ஜனங்களிடம் நான் கலந்து பார்த்ததில் மேல் ஜாதிக் காரருக்கும், கீழ்ஜாதிக்காரருக்கும், பணக்காரருக்கும், ஏழைகளுக்கும், பெண் களுக்கும், ஆண்களுக்கும் இடையில் சீர்கெட்டு இருக்கிறதாக அறிந்தேன். இதனால் சொத்துக்கும், உயிருக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று அவர வர்கள் பயப்படுகிறார்கள். இந்த சமயத்தில் அஹிம்சாவாதியான நான் ஜெயிலில் இருப்பதே முறை” என்று சொல்லியிருக்கிறார். இதற்கு ராஜ கோபாலாச்சாரியாரும் ஒத்துப்பாடி இருக்கிறார்.

இப்பொழுது ஜெயிலில் இருந்து வந்த பிறகும் முன்காட்டியபடி தோழர் ஜவகர்லாலின் பொருளாதாரத் திட்டத்தை ஒப்புக்கொள்ளுவ தாகவும் ஆனால் அவ்வளவு தூரம் போக முடியாதென்றும் சொல்லுகிறார். எவ்வளவோ முக்கியமானதும் அவசியமானதும், கட்டாயம் நடந்து தீர வேண்டியதுமான ஒரு கொள்கையைக் காரியத்தில் நடத்துவிக்கின்றதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யாமல் அல்லது அதுசெய்ய முடியாவிட்டால் பேசாமல் வாயை மூடிக்கொண்டாவது இருக்காமல் அதை வீண்மிரட்டலுக் கும் தனது சுயநலத்துக்கும் உபயோகப்படுத்தி “அதில் பலாத்காரம் வந்து விடும் ரத்தக்” களரி ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் பேசி கெடுக்கச் செய்வது என்றால் யார் தான் இச்செய்கையை பொருக்கமுடியும்?

அன்றியும் மனித சமூகத்திய இயற்கை சக்திகளையெல்லாம் பாழாக்கி இயற்கையான வழிகளையெல்லாம் அடைத்துச் செல்வவான் களையும், சூட்சிக்காரர்களையும் (பார்ப்பனர்களையும்) சுவாதீனப்படுத்திக் கொண்டு காரியத்துக்கு உதவாத வழிகளில் மக்களைத் திருப்பி மனித சமூகத்தைப் பாழாக்கி வைத்த பெருமையை என்றென்றும் கொண்டாடு வதற்கு அறிகுறியாய் காந்தி ஜயந்தி வருஷா வருஷம் கொண்டாடுவ தென்றால் இதன் அக் கிரமத்திற்கு எப்படித்தான் பரிகாரம் செய்வது என்பது நமக்கு விளங்க வில்லை. தோழர் காந்தியாருக்கு இன்று ஜயந்தி கொண்டாடு வதற்கு வேண்டிய யோக்கியதை வந்ததற்குக் காரணம் (இவரால் இதுவரை மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படவில்லை என்றாலும்) பார்ப்பனர் களுக்கு அனுகூலமாய் இருந்து வந்த காரணமே ஜயந்தி கொண்டாடும் யோக்கியதையை சம்பாதித்து கொடுத்து விட்டது. நமது நாட்டுப் பார்ப்பனர் களுக்கு இருக்கும் அபார சூழ்ச்சித் தன்மைக்கும் அற்புத புரட்டுத் தன்மைக்கும் இந்த காந்தி ஜயந்தி ஒரு பெரும் உதாரணமாகும். இன்று ஜயந்தி கொண்டாடத்தக்க “பெரியார்கள்” எல்லாம் இந்த யோக்கியதை அடைந்தவர்கள் தான் என்பதும் விளக்க இது ஒரு உதாரணமாகும்.

கம்ப ராமாயணத்தில் ஆரம்பத்தில் கம்பன் பார்ப்பனர்களுக்குச் சொன்ன காப்பு விருத்தத்தின்படியே தோழர் காந்தியாரும் பார்ப்பனர்களை உயர்த்தி அவர்களுக்கு அடி பணிந்து வந்ததாலேயே இன்று காந்தி ஜயந்தி நடந்து வருகிறது. அதாவது,

“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்,

நிலை பெறுத்தலும் நீங்கலு நீங்கிலா,

அலகிலா விளையாட்டுடையா ரவர்,

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”

என்ற பாட்டுப்பாடியே தூணைத் துரும்பாக்கவும், துரும்பைத் தூணாக் கவும் உள்ள பார்ப்பன சக்தியில் இன்று எவ்வளவோ காரியங்கள் அஸ்தி வாரம் சிறிதுகூட இல்லாமல் நடந்துவருகிறது. அதில் ஒன்றுதான் இந்த காந்திஜயந்தி. இதுபோலவே மற்றொரு விஷயம் என்னவென்றால்,

தோழர் அன்னிபெசண்டம்மையார் செத்து பத்து நாள்கூட ஆக வில்லை. ஆனாலும் அந்தம்மையாரின் சூக்ஷம சரீரம் அதற்குள் பூலோக ஜனங்களோடு பேச ஆரம்பித்து விட்டது. இந்த அம்மையாருக்கும் இவ்வளவு யோக்கியதை ஏற்பட்டதின் காரணம் அந்தம்மாளும் பார்ப்பனீய தாசராய் இருந்து பார்ப்பனப் பிரசாரம் செய்து வந்து செத்ததேயொழிய வேறு ஒன்றுமில்லை.

தவிர, தோழர் காந்தியாருக்கு ஜெயந்தி கொண்டாடும் விஷயத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு கடுகளவு புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ இருந்திருக்குமானால் பார்ப்பனரல்லாதார் இதில் கலந்து கொள்ளமுடியுமா? என்பதை வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்க வேண்டும். ஜாதி பாகுபாடு (வருணாச்சிரமம்) விஷயத்தில் தோழர் காந்திய வர்கள் பார்ப்பனரல்லா தாருக்கு நிரந்தர இழிவை உண்டாக்கி இருக்கும் விஷயமும், ஹரிஜன இயக்கம் என்னும் பேரால் செய்துவரும் சூட்சியும் பார்ப்பனரல்லாத மக்கள் தெரியாது என்று சொல்லிவிடமுடியாது. வருணாச் சிரம தர்மத்தை ஆதரிப்ப தினாலும் உறுதிப்படுத்துவதினாலும் பார்ப்பன ரல்லாதார் நிலை என்னவா கின்றது?

அன்றியும் “ஹரிஜன முன்னேற்ற” விஷயத்தில் காந்தியார் தனது வாக்கு மூலத்தில் குறித்தது என்னவென்றால்,

“கோவில், குளம், கிணறு, பள்ளிக்கூடம் முதலியவைகளில் பிராமணரல்லாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள சலுகைகள் அனைத்தும் தீண்டப் படாத வர்களுக்கு ஏற்படவேண்டும்”.

“இதுவரை தீண்டப்படாதவர்களாகக் கருதப்படுபவர்கள் இனி சூத்திரராகக் கருதப்படுவார்கள்”

“தீண்டாமை ஒழிந்தபின் பிராமணர்களுக்கும் தீண்டாதவர்களுக்கும் எப்படிப்பட்ட சம்மந்தம் எப்படிஇருக்குமென்றால் பிராமணர்களுக்கும், பிராமணரல்லாதார்களுக்கும் இருந்துவரும் சம்மந்தம் போலிருப்பார்கள்”.

“வருணாச்சிரமதர்மத்தை மதத்தின் தத்துவக் கொள்கைகளுக்கு ஏற்றபடி சீர்திருத்தம் செய்யப்படவேண்டும்”

என்று சொல்லியிருக்கிறார்.

இது “ஜெயபாரதி” என்னும் பத்திரிகையின் காந்தி ஜெயந்தி மலர் 9ம் பக்கத்தில் காந்தியாரின் வாழ்க்கைச் சம்பவ நிகழ்ச்சி என்ற தலைப்பின் கீழ் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

இதைப்பற்றி முன்பு ஒருதடவை எழுதியும் இருக்கிறோம். பார்ப்பன ரல்லாத தேசீயவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இரண்டொருவர்கள் இடமும் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்தும் இருக்கிறோம். ஆனால் அவர்கள் தேசம் பெரியதேயொழிய தேசத்தில் தன்னுடைய நிலைமை எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் போலவே காட்டிக்கொண்டார்கள்.

மானத்தை விற்று மனிதத்தன்மையை இழந்து வாழ்ந்து தீரவேண்டிய அளவு சோம்பேறிகளும், கோழைகளுமானவர்களுக்குத் “தேசம் பெரிது” என்கின்ற சாக்கு ஒரு உற்ற தோழனாய் இருந்து வருகின்றது, வந்தும் இருக்கிறது என்று கருதிக்கொண்டு அந்த சம்பாஷணையை நிறுத்திக் கொண்டோம்.

ஆகவே இப்படிப்பட்ட நிலையில் பார்ப்பனரல்லாதவர்களை நிரந்தரமாய் வைக்கப் பாடுபட்ட ஒரு “மகானின்” ஜெயந்திக்குப் பார்ப்பன ரல்லாதார் கூடியிருந்து கொண்டாடுவதென்றால் இதற்கு என்னபேர் வைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. விஷயம் இவ்வளவோடு முடியவில்லை. ஏனென்றால் காந்தி ஜயந்தியை விட மானமற்றதும், இழிவானதும் மடமை யானதுமான ஒரு காரியமாகிய தீபாவளி என்னும் ஒரு பண்டிகையையும் நாளை கொண்டாடப்போகும் சுயமரியாதை அற்ற தன்மை, காந்தி ஜயந்திக்கு ஒரு உதாரணமாகும்.


 ----------- தந்தைபெரியார் --”குடி அரசு” - தலையங்கம் - 15.10.1933

23.9.12

மக்களே! பார்ப்பனீயம் ஜாக்கிரதை!! BEWARE OF BRAHMINISM


தென் இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் மறுபடியும் கதர், காங்கிரஸ், மறியல் என்னும் பெயர்களைச் சொல்லி மூடமக்களிடம் உண்டியல் பிச்சை, தட்டப்பிச்சை முதல் பல தந்திரங்களால் பணம் வசூலிக்க வழிகளுண் டாக்கி, பார்ப்பனரால்லாதாரையே கூலிகளாகப் பிடித்து அவர்கள் வசம் அம் மார்க்கத்தை ஒப்புவித்து கூப்பாடு போடச்செய்து, பிரசாரம் செய்ததின் பயனாய் அடங்கிக்கிடந்த பார்ப்பனீயம் இப்போது மறுபடியும் தலை விரித்து ஆடத் தொடங்கி இருக்கிறதென்பது யாவரும் அறிந்ததேயாகும்.

பார்ப்பனீயத்தின் கருத்தெல்லாம், தேசம் பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு வரவேண்டுமென்பதைத் தவிர வேறு ஒரு காரியமும் இல்லை என்பதும் வெகு காலத்திற்கு முன்பே விளங்கிய விஷயமாகும். அதற்காக என்று செய்யப்படும் கதர்-காங்கிரஸ்-மறியல் முதலிய பிரசாரத்தின் கருத் தெல்லாம் சட்டசபை தாலூகா, ஜில்லாபோர்டுகள் முனிசிபாலிட்டி முதலிய வைகளை பார்ப்பனரல்லாதாரிடமிருந்து பிடுங்கி பார்ப்பன ஆதிக்க வசம் ஒப்புவிக்கும் தரகர் வேலை என்பதைத் தவிர மற்றபடி இவற்றால் எல்லாம் மதுபானமோ, ஏழ்மைத்தன்மையோ, அடிமைத்தன்மையோ ஒழியப்போவ தில்லை என்பதும் நிச்சயமான உண்மையாகும்.

‘தேன் அழித்தவன் புறங்கை நக்கமாட்டானா’ என்பது போல் ‘பார்ப் பனர்களுக்கு போகமுடியாத சமயத்தில் ஒன்று அரை உத்தியோகமோ, ஸ்தானமோ நமது கைக்கு வராதா’ என்று எண்ணுகின்ற தொண்டர்களும் சிலர் இருக்கலாம் என்றாலும் பார்ப்பனரல்லாத மக்கள் இது சமயம் ஏமாந்தால் கடைசியில் ஆபத்தாய் முடியும்.

உதாரணம் வேண்டுமானாலும் நிதானமாய் யோசித்துப் பார்த்தால் விளங்கும். இப்போது, முனிசிபல் எலக்ஷனும், தாலூகா ஜில்லாபோர்ட் எலக்ஷனும் சமீபித்த உடனே எத்தனை ‘வரி செலுத்துவோர்’சங்கம், ‘நகர நல உரிமை’சங்கம், ‘குடியானவர்கள்’சங்கம், ‘ரோட்டில் நடப்பவர் கள்’சங்கம், ‘ரயிலில் பிரயாணம் செய்கின்றவர்கள்’சங்கம், ‘மதுவிலக்கு’ சங்கம், ‘சுகாதார’சங்கம், ‘தொழிலாளிகள்’சங்கம், ‘உழுது பயிர் செய்வோர்’ சங்கம், ‘வேலையற்றவர்கள்’சங்கம் என்பவைகளாகிய அநேக சங்கங்கள் புறப்பட்டு வருகின்றதை கவனித்துப் பார்த்தாலே உண்மை விளங்கிவிடும். 1920- வூ த்திய சீர்த்திருத்தத்தின்போதும் சட்டசபை தேர்தலை உத்தேசித்து கிளப்பப்பட்ட காங்கிரஸ் கிளர்ச்சியானது ஒத்துழையாமையில் ஆரம்பித்து, தேர்தல்கள் வந்தவுடன் சட்டசபைப் பிரவேசமாக மாறி எலக்ஷன் முடிந்த உடன் எல்லாமுமே அடங்கிப்போய்விட்ட சங்கதி யாவரும் அறிந்ததே. இப்போதும் அதுபோலவே 1931ம் வருஷத்திய சீர்திருத்தத்தை எதிர்பார்த்து, சட்டசபை தேர்தல்களை உத்தேசித்து, ஒரு வருஷத்திற்கு முன்னால் இருந்தே போடுகின்ற கூச்சல் இது என்பதைத் தவிர மத்தியில் இந்த 5, 6 வருஷங்களாய் ஏதாவது நடவடிக்கைகள் நடந்ததா என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றியும் இவற்றிற்கு மத்தியில் ஏற்பட்ட ஒரு தேர்தலின் போதும், சட்டசபை காலாவதி முடிவதற்கு ‘மூன்று நாள்’ இருக்கையில் காலம் சென்ற ‘தேசபக்த சிகாமணி’ மோதிலால் நேரு உள்பட, பல ‘தேசபக்த சீஷர்கள்’ பின்பற்றுபவர்கள் உள்பட அநேகர் சட்டசபையின் மீது ‘கோபித்து’ ராஜினாமா கொடுத்து விட்டுவந்து , மறுபடியும் மூன்று நாளில் அடுத்த காலாவதி தேர்தலுக்கு நின்றது முதலிய காரியங்களையும் யோசித்துப்பாருங்கள்.

இன்று தென் இந்தியாவிலுள்ள காங்கிரஸ் ஸ்தாபனங்களின் தலைவர் கள் எல்லோருமே 100க்கு 90 பேர்களுக்கு மேலாகவே அந்த கூட்டத் தினரும், அதில் நேரில் கலந்து இருந்தவர்களும் பார்ப்பனர்களுமாகவே இருக்கின்றார்களா இல்லையா என்பதையும், மற்ற பொது ‘தேசீய’ ஸ்தாபனங்கள், கூட்டங்கள் ஆகியவைகளின் தலைவர்கள் காரியதரிசிகள் ஆகியவர்களும் அனேகமாய் பார்ப்பனர்களா? அல்லவா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

மற்றும் காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு, காங்கிரஸ் காரர்கள் என்கின்ற முறையில் வட்டமேஜை மகாநாட்டுக்குப் போயிருக்கும் பிரதிநிதிகளும் பார்ப்பனர்களா? அல்லவா?என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

கடைசியாக சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களும் காங்கிரஸ் மகாநாட்டுத் தலைவர்களும் பார்ப்பனர்களா? அல்லவா? என்பதையும் யோசித்துப்பாருங்கள். இவைகளை எடுத்துக்காட்டுவது வாசகர்களுக்கு ஒரு சமயம் பார்ப்பனத் துவேஷமாய் காணப்பட்டாலும் படலாம். என்றாலும் தொண்டர்கள் என்பவர்கள் மாத்திரம் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனரல் லாதார்களா? அல்லவா? என்பதையும், அத்தொண்டர்களின் ஜீவனம் பெரிதும் அக்காங்கிரஸ் சம்மந்தத்தின் பேரினாலேயே இருக்கின்றதா? இல்லையா? என்பதையும், இத்தொண்டர்களுக்கு காங்கிரசினால் ஜீவனம் இல்லாவிட்டால் இவர்கள் அங்கு இருப்பார்களா? என்பதையும், இவர்கள் காங்கிரசின் மூலம் ஜீவிப்பதைத் தவிர வேறு வழியில் பாடுபட்டுப் பிழைக்க 100க்கு 10 பேராலாவது முடியுமா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

மற்றும் ஒரு விஷயத்தையும் யோசித்துப்பார்க்க விரும்புகின்றோம். அதென்னவென்றால்:-

பார்ப்பனர்களின் வக்கீல்கள், டாக்டர்கள், மிராசுதாரர்கள், வியாபாரிகள் முதலியவர்களே காங்கிரசில் தலைவர்களாயிருக்கவும், பார்ப்பனரல்லாதார்களில் வக்கீல்கள், டாக்டர்கள், மிராசுதாரர்கள், வியாபாரி கள் முதலியவர்கள் அதுபோல் காங்கிரசில் சேராமலிருக்கவும் காரணம் என்ன? பார்ப்பனரல்லாத வகுப்போ, ஜாதியோ, அதாவது வயிற்றுப் பிழைப்பை காங்கிரசின் மூலம் நடத்துகின்றவர்கள் தவிர மற்ற பார்ப்பன ரல்லாதார் சமூகமே ‘தேசத்துரோகிகளா’? அல்லது ‘குலாம்களா’? அல்லது ‘நக்கிப்பொறுக்கிகளா?’ என்பதை யோசித்துப் பாருங்கள்.

திருவாளர்கள் ஏ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி, சி.வி.வெங்கட் ரமணய்யங்கார், பாஷ்யம்அய்யங்கார், ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன், மகாலிங்கய்யர் ஆகியவர்களுக்கு இருக்கும் ‘சுயராஜ்ய தாகம்’ ‘சமதர்ம உணர்ச்சி’ முதலியவைகள் திருவாளர்கள் வெரிவாட செட்டியார், இரத்தின சபாபதி முதலியார், டாக்டர் நடேச முதலியார், தம்மண்ண செட்டியார், குமார சாமி செட்டியார், காயாரோகணம் பிள்ளை முதலியவர்களுக்கு ஏன் இல்லை. முற்கூறியவர்களெல்லாம் மாத்திரம் தான் யோக்கியர்கள், நாணையக்காரர்கள், தேசபக்தர்கள், தியாகமூர்த்திகள் ஆகியவர்களா? பிற்கூறியவர்களெல்லாம் மாத்திரம் அந்தப்படி அல்லாதவர்களா? அல்லது தேசத்தின் பேரால் பணம் சம்பாதித்து அதனால் சாப்பிட்டுக் கொண்டிருப் பவர்களா?

இவைகள் ஒருபுறம் இருந்தாலும், இன்று தமிழ் நாட்டு காங்கிரஸ் மகாநாட்டுத் தலைவரிடமாவது, காங்கிரஸ் கமிட்டித் தலைவரிடமாவது இன்று காங்கிரசில் வேலை செய்யும் காங்கிரஸ் தொண்டர்கள் அல்லது பக்தர்கள் என்பவர்களில் 100க்கு 5 பேருக்காவது நம்பிக்கையோ, அல்லது மரியாதையோ இருக்கின்றதா? என்று காங்கிரஸ் பக்தர்களையும் தொண்டர் களையும் கேட்டுப்பாருங்கள். பார்ப்பனரல்லாத தொண்டர்கள் ஒவ்வொரு வரும் அவர்களிடம் அடியோடு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்லு வார்கள், சொல்லுகிறார்கள்.

அப்படி யிருக்க அவர்களை தலைவர்களாக்கியதும், தலைவர்க ளாகக் கொண்டாடுவதும், அவர்களது தலைமையில் தொண்டாற்றுவதுமான காரியம், வெறும் - பரிசுத்தமான வயிற்றுப் பிழைப்பு நாடகமாக இராமல், கடுகளவாவது நாணையமோ, சுயமரியாதையோ உடைய தேசியமாகவோ, தேசபக்தியாகவோ இருக்க முடியுமா என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள்.

சைவ மடங்களில் வெட்டிச் சோறு இல்லாவிட்டால் அங்கு எப்படி நூற்றுக்கணக்கான மொட்டைப்பண்டாரங்கள் இருக்கமுடியாதோ அது போலவே, காங்கிரஸ் பெயரைச் சொல்லி வயிறுவளர்க்க இடம் இல்லா விட்டால் இன்று இத்தனை தேச பக்தர்கள் ,தேசிய வீரர்கள் , தொண்டர்கள், காங்கிரசில் இருந்து ‘தொண்டாற்ற’ முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றியும் இன்று காங்கிரசில் வயிறு வளர்ப்பவர்களில் 100க்கு 90 பேர் இதில் வந்து சேர்வதற்கு முன் எங்காவது நாணையமான, கௌரவ மான தொழிலில் ஈடுபட்டு தாராள முறையில் சுதாவில் வயிறு வளர்த்தார்களா என்றாவது யோசித்துப் பாருங்கள்.

எங்கோ இரண்டு ஒன்று மூளையிலுள்ள கோளாறாலோ வேறு காரியங்களை எதிர்பார்த்தோ இந்த கூட்டத்தில் சேர்ந்திருப்பதாலேயே அவர்களை உதாரணமாகக் கொண்டு வராதீர்கள். அதிகம் பெயர்களின் யோக்கியதைகளையே கவனித்துப் பார்க்க விரும்புகிறோம்.

இவற்றையெல்லாம் ‘குடி அரசு’ ஆரம்பித்த காலத்திலேயே பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாலும் மேடை மேடையாய் கூப்பாடு போட்டிருந் தாலும் இப்போதும் அதை ஏன் திருப்புகிறோம் என்றால், உண்டியல் காசில் வயிறு வளர்த்துக் கொண்டு மேடையேறி கள்ளு, சாராயக்கடைகளில் குடி காரர்களும், கீழ்மக்களும், வெறிகாரர்களும் பேசுவதுபோல் வாயில் வந்த படி மற்றவர்களைப் பேசும் இழிதன்மையின் யோக்கியதையையும் காரணங்களையும் மக்களுக்கு எடுத்துக்காட்டவே நாம் எழுத நேரிடு கின்றது.

காங்கிரஸ் தொண்டர்கள் என்பவர்கள், காந்தி பக்தர்கள் என்பவர்கள், அஹிம்சா தர்மத்தைக் கடைப்பிடித்தவர்கள் என்பவர்கள் வெளிப்படை யாய் தேர்தல் கூலிகளான பிறகும், கூலிக்கு மற்றவர்களை வையத் தொடங் கிய பிறகு அவர்களது யோக்கியதையை பொது ஜனங்களுக்கு வெளிப் படுத்தாமல் இருக்க முடியவில்லை.

காந்தியைக் கும்பிடுவதிலோ, அவர்மீது புகழ் மாலை பாடி ஜீவனம் செய்வதிலோ நமக்கு பொறாமையில்லை. கல்லைக் கும்பிட்டு அதன்மீது புகழ்மாலை பாடி அதன் பெயரை சொல்லிக் கொண்டு வயிறுவளர்க்கும், முட்டாள்தனத்தை விட, இதை நாம் அதிகமாக குற்றம் சொல்லவரவில்லை. ஆனால், அதற்காக தேர்தலில் ஏன் பிரவேசிக்க வேண்டும் என்று தான் யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.

ஏற்கனவே இருக்கின்றவர்களை விட இவர்கள் தரகர்களாயிருந்து வேலை செய்வதன் மூலம் கொண்டு வந்து நிறுத்தப்படுபவர்கள் எந்த விதத்தில் யோக்கியர்கள், நாணையமானவர்கள் என்று சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம். தொண்டர்களுக்கு கூலி கொடுத்து, அல்லது கூலி கிடைக்கச் செய்து மற்றவர்களை வாய்கொண்டமட்டும் வையச் சொல்லு கின்றார்கள் என்பதைத்தவிர வேறு என்ன அதிகமான யோக்கியதை இருக்கின்றவர்களுக்கு இவர்கள் கங்காணிகளாக இருக்கின்றார்கள்?

எந்த காங்கிரஸ்-கதர்-மறியல் தொண்டருக்கும் தேர்தலைப்பற்றி பேசவும், பார்ப்பனரல்லாத பிரமுகர்களைப்பற்றி வசைபாடவும் என்ன அவசியம் இருக்கின்றது? சர்க்காராரை வைதுவிட்டு வயிறு வளர்ப்பதில் அக்கரை இல்லை. மற்றபடி தேர்தல் ஸ்தாபனங்களில் இருக்கும் நபர்களைப் பற்றி பேசவேண்டிய காரியம் எதற்கு? அதுவும் பார்ப்பனர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு எதிர் அபேக்ஷகர்களிடம் கூலி வாங்கிக் கொண்டு பேசுவது என்றால் யார் சகிப்பார்கள்? அந்தப்படி எதற்காக சகித்துக் கொண்டு இந்த இழிவான வேலையில் ஒரு கூட்டம் பிழைப்பதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியவில்லை.

மனிதர்களுடைய சொந்த குணங்களின் உண்மையை இருபுறமும் சொல்லுவதைப் பற்றி நமக்கு சங்கடம் இல்லை. ஆனால் அவர்கள் அந்தக் கக்ஷிக்காரர் இந்தக் கக்ஷிக்காரர் என்றும் காங்கிரஸ் கக்ஷிக்காரர் அல்ல என்றும் சொல்லுவதனால் அதில் நாணையம் உண்டா என்றும் பாருங்கள்.

காங்கிரஸ் கக்ஷிக்காரர் என்றால் என்ன அருத்தம்? ‘தொண்டர் களுக்கு சோற்றுக்கு கொடுக்கின்றவர்’ என்பதைத் தவிர வேறு என்ன வித மான நல்ல அபூர்வ- பொது நன்மைக்கு ஏற்ற நாணையமான குணம் இருந் தது - இருக்கின்றது-இருக்கும் என்று சொல்ல முடியும்? அளவுக்கு மிஞ்சி னால் எதுவும் கெடுதி என்பதை உணராமல் மக்கள் எல்லோரையும் மூடர்கள் என்று எண்ணிக்கொண்டு வேலை செய்வது என்பது என்றைக்கானாலும் ஒரு நாளைக்கு வெளியாக்கப்படவேண்டியதாய் தான் முடிகிறது.

ஆதலால் பொது ஜனங்கள் பார்ப்பன தந்திரத்தைக் கண்டும், பார்ப்பனக் கூலிகளின் நாடகத்தைக் கண்டும் ஏமாந்துபோக கூடாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.

நிற்க பல ‘தேசபக்தர்கள்’ தாங்கள் ஜெயிலுக்குப் போய் விட்டு வந்ததை பிரமாதமாகப் பேசி மக்களை ஏய்க்கின்றார்களாம். அனேகருக்கு வீட்டுச்சாப்பாட்டை விட இப்போதைய ஜெயில் சாப்பாடு நல்ல சாப்பாடு என்பதையும்,வீட்டிலிருப்பதை விட அங்கு சௌக்கியம் அதிகம் என்ப தையும் யாவரும் அறியாமல் இல்லை. இதற்கு மற்றொரு உதாரணமாக 5.11.31ந் தேதியின் ‘இந்தியா’ வாரப்பத்திரிக்கையில் உண்மையில் நடந்ததாக எடுத்துக்காட்டியிருக்கும் ஒரு விஷயத்தை குறிப்பிடுகின்றோம். அதாவது, ‘வேலையில்லா திண்டாட்டத்துக்கு பரிகாரம்’ என்ற தலைப்பின் கீழ்.

‘ஒரு அதிகாரி ஒருவனுக்கு 12 மாதம் தண்டனை விதித்தார். அதற்கு எதிரி பிரபுவே உமக்கு வந்தனம். எனது கஷ்டத்தை கொஞ்ச காலத்திற்குத் தீர்த்து வைத்தீர்கள். என்னைப்போல் வேலையில்லா மல் திண்டாடும் ஒவ்வொருவரும் இதை அடைவது நலம் என்று சொல்லி அதாவது (ஒரு வருஷத்திற்காவது தனக்கு சாப்பாட்டிற்கு வழியேற்றப்பட்டதே என்று) சந்தோஷப்பட்டான்

என்பதாகும்.

இந்தப்படி விஷயங்களைப் பச்சையாய் எடுத்துச் சொல்லுவதில் சிலருக்கு சங்கடம் இருக்கலாம். உண்மையாய், யோக்கியமாய் வேலை செய்கின்ற தொண்டர்களைப்பற்றி நாம் யாதொன்றும் கற்பிக்க வரவில்லை. அப்படிக்கில்லாமல் மேல் கண்டபடியெல்லாம் பேசுவதும், உண்மைக்கு விரோதமாக துவேஷபுத்தியுடன் சுயநலத்துக்கு விஷமப் பிரசாரம் செய்வதும், மற்றும் ஒருவருக்கொருவர் உள்ள சொந்த மனஸ்தாபங்களில் புகுந்து ஒருவரிடம் கூலி வாங்கி மற்றவர்களை வைய உபயோகித்துக் கொள்வதுமான ‘தேச சேவை’யைக் கண்டிக்காமல் இருப்பது பயங்காளித் தனமாகும் என்பதோடு, ஒழுங்குக்கும் சமாதானத்திற்கும் பங்கமேற்படுத்து வதுமாகும் என்றே வெளிப்படுத்துகிறோம்.

கடைசியாக ஒரு வார்த்தை சொல்லி இதை முடிக்கின்றோம். அதா வது:- இந்தமாதிரி ‘தேசீயத்தொண்டர்’களைச் சுவாதீனம் செய்து, அவர் களை ஏவி விட்டு, தங்கள் பகைமைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் காரியம் செய்கின்றவர்களுக்கு இன்று சற்று சந்தோஷமா யிருப்பதாகக் காணப்படலாமே ஒழிய, நாளைக்கு இதே தொண்டர்களை சற்று அதிகக்கூலி கொடுத்து வாங்கி, இவர்கள் மீதே உசுப்படுத்திவிடுவது என்பது பிரமாதமான காரியம் அல்லவென்பதை நினைவிலிருத்தும்படி தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

             -------------தந்தைபெரியார் -”குடி அரசு” - தலையங்கம் - 15.11.1931

22.9.12

ஜனனி அய்யர்! ராணி முகர்ஜியா? சர்ச்சைப் புயல்கள் வெடித்துக் கிளம்பும் ஜாதிப் பெயர்கள்

ஜனனி அய்யர்! ராணி முகர்ஜியா? (1)
ஜனனி அய்யர்! ராணி முகர்ஜியா? (1)

1. ஜனனி அய்யர் (கதாநாயகி) நடித்த திரைப்படம்: அவன் இவன்

2. அனுஜா அய்யர் (துணை நடிகை) நடித்த திரைப்படம் உன்னைப் போல் ஒருவன்

3. கவுதம வாசுதேவமேனன் (இயக்குநர்) காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, போன்ற திரைப்படங்களை எழுதி இயக்கியவர்.

4. சமீராரெட்டி (கதாநாயகி) நடித்த திரைப்படம்; வாரணம் ஆயிரம்.

5. பூமிகா சாவ்லா (கதாநாயகி) நடித்த திரைப்படம்; ரோஜாக் கூட்டம்.

6. ராணி முகர்ஜி (கதாநாயகி) நடித்த திரைப்பட  (ஹேராம்).

7. நவ்யா நாயர் (கதாநாயகி) நடித்த திரைப்படம்: சிதம்பரத்தில் அப்பாசாமி.

8. கீர்த்திசாவ்லா (கதாநாயகி) நடித்த திரைப்படம்: நான் அவன் இல்லை.

இவை எல்லாம் சினிமாவில் தலை காட்டும் கதாநாயகி கதாநாயகர்களின் பெயர்கள்.

ஒரு கட்டத்தில் ஜாதி பெயர்களில் சினிமாக்களை எடுக்க ஆரம்பித்தனர். கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பதோடு அவற்றின் கதை முடிந்து போயிற்று.

இப்பொழுது சினிமா நடிகைகள், நடிகர்கள் வெளி மாநிலக்காரர்கள் ஜாதிப்பட்டங்களோடு அரங்கேறிக் கொண்டு இருக்கின்றனர்.

இதில் ஒரு கடைந்தெடுத்த வெட் கக்கேடு பெண்களாக இருக்கக் கூடிய நடிகைகள்கூட தங்கள் பெயர்களுக்குப் பிறகு அய்யர் என்றும் ரெட்டி என்றும், முகர்ஜி என்றும்  ஜாதி வாலை ஒட்ட வைத்துக் கொண்டு இருப்பதுதான்.

பெயர்களுக்குப்பின் பெண்கள் ஜாதிப் பெயர்களை வைத்து கொள்வது கிடையாது. பெண்களைப் பொறுத்த வரை இந்து மதத்தில் அவர்ணஸ் தர்கள்; அதனால் ஜாதி என்ற பேச்சுக்கே இட மில்லை.

பெண்களுக்குப் பூணூல் தரித்துக் கொள்ளும் உரிமையும் கிடையாது. எனவே பார்ப்பனப் பெண்கள்கூட சாஸ்திரப்படி  பிராமணர் ஆகமுடியாது என்றாலும் அவ்வாறு சொல்லிக் கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.

சினிமாவில் குதிக்கும் பெண்கள் தங்கள் பெயர்களோடு அய்யர் பட்டத்தை, ஜாதிப் பட்டத்தைப் போட்டே தீர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களாம். சினிமா வட்டாரத்தில் அவ்வாறு சொல்லப்படுகிறது.

இது உண்மை என்றால், இதுபற்றி தமிழ்நாட்டு வீதிகளில் மேடைகளில் சர்ச்சைப் புயல்கள் வெடித்துக் கிளம்பும் என்பதில் அய்யமில்லை.


தமிழ் மண்ணுக்கென்று சில குணம், மணம் உண்டு. சினிமா தயாரிப்பாளர்க ளும், இயக்குநர்களும் இதனை அறிவார்கள். வீண் பிரச்சினையைத் தமிழ்நாட்டில் திணிக்க வேண்டாம். ஜாதிப் பெயர்களை ஒட்டிக் கொண்டு, சினிமா மோகத்தில் மயங்கிக் கிடக்கும் தமிழர்களின் அப்பாவி ரசிகர்களின் தொடைகளில் கயிறு திரிக்கலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

ஜாதியைக் காப்பாற்ற நிலை நாட்ட பார்ப்பனீயம் இப்படி ஒரு யுக்தியை மேற்கொள்கிறதோ என்று சந்தேகிக்கவும் இடம் உண்டு.

ஜாதி ஒழிக்கப்பட்டால் தங்களின் உயர் ஜாதித்தனம் ஒழிந்து போய் விடும் என்பது அவர்களுக்குத் தெரியுமே!\
 ********************************************************************

தமிழ்ச் சங்கம் - ஓர் எச்சரிக்கை! (2)

தமிழ்ச் சங்கங்கள் நாட்டிற்குத் தேவையானவை. இதன் மூலம் தமிழ் மொழியின் மீது ஓர் ஈர்ப்பு -அயல் ஆதிக்கத் தகர்ப்பு என்பது போன்ற தாக்கங்கள் ஏற்பட வேண்டும். அதை விட்டு விட்டு அயல் ஆதிக்கங்கள் புழக்கடை வழியாகப் புகுந்திட இடம் கொடுத்துவிடக்கூடாது.

குறிப்பாக தினமணியின் ஆசிரியராக திரு. வைத்தியநாதய்யர் என்பவர் வந்திருக்கிறார். இவருக்கு முன்  ஆசிரியராக இருந்தவர் தினமணியை உண்மையான தமிழ் ஏடாக நடத்தி சாதனை படைத்தார்; தினமணியில் தமிழர்களும் கணிசமான அளவுக்கு நுழையவும் வழி வகுத்தார்.

இப்பொழுது வந்துள்ளவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியைக் கொண்டவர். துக்ளக் குழுமத்தில் சுத்தமான நெய்யில் பொரிக்கப்பட்ட பண்டம் இவர்.

தமிழ் ஆர்வம் உள்ளவர் போல காட்டிக் கொள்வார். செம்மொழி மாநாட்டுக் குழுவில் இடம் பெறுவதற்குக் கூட அன்றைய முதல் அமைச்சர் கலைஞர், அய்யர்வாளுக்கு மிகவும் அழுத்தம் கொடுக்க நேர்ந்தது. அவ்வளவுக் கிராக்கிப் பண்ணினார்.

தினமணிக்கு எத்தனையோ பேர் ஆசிரியர்களாக வந்து இருக்கிறார்கள். அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள் என்றோ, அப்படியே கலந்து கொண்டாலும் அவர்களின் நிழற் படங்கள், பேச்சுகள் எவையும் தினமணியில் இடம் பெற்றது என்றோ கூற முடியாது.

இவர் ஆசிரியராக வந்த நாள் முதல் இவர் நிழற்படம் பெரும்பாலும் இடம் பெறும். இவர் சொற்பொழிவும் இடத்தை அடைத்துக் கொள்ளும்.

தினமணி வைத்தியநாதய்யரை நிகழ்ச்சிக்கு அழைத்தால், அந்தச் செய்தி நிழற்படங்களுடன் பிரமாதமாக தினமணியில் வரும் என்று நினைக்கிற தமிழ் அமைப்புகள், சங்கங்கள் தினமணி ஆசிரியரை அத்தகைய விழாக்களுக்கு அழைக்க ஆரம்பித்து ள்ளனர். இது டில்லிவரை நீளுகிறது.

இந்த விளம்பர வெளிச்சத்தில் விட்டில் பூச்சிகளாகத் தமிழ் அன்பர்கள் விழுந்து விட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.

சென்னை மாநகரில் வணிக விளம்பரப் பலகைகளில் தமிழ் முதல் இடத்தைப் பெற வேண்டும் என்று ஓர் இயக்கத்தையே நடத்தினார்- _ அன்றைய மாநகராட்சித் தந்தை மானமிகு மா. சுப்பிரமணியம் அவர்கள்; அதற்கெல்லாம் இந்தத் தினமணிகள் எந்த அளவு கை கொடுக்க முன் வந்தன என்பதை ஒரே ஒரு நிமிடம் நினைத்துப் பார்க் கட்டும்!

அதனை மொழி நக்சலிசம் என்று வருணித்தவர் தினமணி ஆசிரியரின் குருநாதரான திருவாளர் சோ.

பார்ப்பனர்கள் எதைச் செய்ய முன் வந்தாலும் அதில் தமிழர்கள் எச்சரிக் கையாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டும்!  எச்சரிக்கை! எச்சரிக்கை!!

   - -------------------- மின்சாரம் அவர்கள் 22-9-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

பார்ப்பனீய ஒழிப்புத் திருநாள்




சுயமரியாதை இயக்கத்தின் சுமார் 10 வருஷகால வேலையின் பயனாய் பார்ப்பனீயம் ஒரு அளவுக்காவது ஆட்டம் கொடுத்துவிட்ட விஷயம் நாம் எடுத்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறோம்.

ஆன போதிலும், சமுதாய விஷயங்களில் பார்ப்பனீயம் எவ்வளவு பகிஷ்கரிக்கப்பட்டிருக்கின்றதோ, அதில் 8ல் ஒரு பங்கு கூட அரசியல் விஷயத்தில் பகிஷ்கரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது.

அரசியலில் ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களுக்கு விரோதமாய் வேலை செய்வது என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும் அதன் தலைவர்கள் என்பவர்கள் பலர், தனிப்பட்ட முறையில் தங்கள் சுயநலத்திற்காக எதையும் விற்றுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

தோழர் முத்தையா முதலியார் அவர்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் திட்டம் அரசாங்க உத்திரவு மூலம் போட்ட காரணத்திற்காகவே பார்ப்பனர்கள் அவரை ஒழிக்கச் செய்த சதியில் சில ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும் உள் உளவாய் இருந்ததோடு, பார்ப்பனரல்லாதார் கட்சியின் பயனாய் முதல் மந்திரி ஸ்தானம் பெற்ற தோழர் முனிசாமி நாயுடு அவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் இருந்து வந்ததுடன் தனது ஸ்தானத்தைக் காப்பாற்ற பார்ப்பனர்களுக்கு அடிமையாக வேண்டிய நிலையையும் அடைந்தார். அதன் பயனையும் அடைந்தார் என்றாலும், இப்போது ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளவும் ஏற்பாடாகி வருகிறது.

இது எப்படியோ இருக்கட்டும். தோழர் முத்தையா முதலியார் அவர்கள் ஏற்படுத்திய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்திரவை ஜஸ்டிஸ் கக்ஷி அரசாங்கம் இப்போது மறுபடியும் பிரசுரித்திருப்பது போற்றத்தக்கதேயாகும்.

இன்றைய தினம் எந்த ஊரில், டவுனில் எடுத்துக் கொண்டாலும் வாசல் கூட்டி, பியூன் ஆகியவர்கள் போன்ற உத்தியோகம் போக பாக்கி உத்தியோகங்களில் பார்ப்பனர்கள்தான் 100க்கு 80 பேர், 90 பேர்கள் இருந்து வருகிறார்கள். அதிலும் நீதி இலாக்காவாகிய முனிசீப்பு, சப் ஜட்ஜ், ஜில்லா ஜட்ஜ் முதலியவைகளும், நிர்வாக இலாக்காவாகிய போலீஸ் டிப்டி சூப்பிரண்டெண்ட், சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியவைகளிலும் பார்ப்பன ஆதிக்கமே தலைசிறந்து நிற்பதுடன் பார்ப்பனரல்லாதார் முயற்சியையும், முன்னேற்றத்தையும் ஒழிக்கவும், தடுக்கவும் அவைகளின் மூலம் எவ்வளவு காரியம் செய்ய வேண்டுமோ அவ்வளவு காரியங்கள் நெஞ்சில் ஈரமில்லாமல் வன்னெஞ்சத்துடன் ஆங்காங்கு செய்யப்பட்டு வருகின்றதானது எவரும் அறியாததல்ல.

அரசாங்கத்தார் ஒவ்வொரு இடத்திலும் உத்தியோகங்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் நிலைமை சரிவரக் காக்கப்படுகிறதா என்று பார்க்க வேண்டும். அதிகாரிகளைக் குறைந்த அளவாவது பார்ப்பனரல்லாதார் பிரதிநிதித்துவம் கவனிக்கப்பட இடமிருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு ஊரில் டிப்டி கலெக்டர் பார்ப்பனராயிருந்தால் தாசில்தார் பார்ப்பனரல்லாதாராய் இருக்கும்படியும், சப்இன்ஸ்பெக்டர் பார்ப்பனராயிருந்தால் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பார்ப்பனரல்லாதாராயும், ஜில்லா ஜட்ஜ் பார்ப்பனராயிருந்தால் சப் ஜட்ஜ் பார்ப்பனரல்லாதாராயும் மற்றும் இதுபோல் அதிகாரங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அப்படி யில்லாதவரை, அரசியலிலானாலும், தேசியத்திலானாலும், வகுப்பு உணர்ச்சி தாண்டவமாடும் இக்காலத்தில் பல வகுப்பு மக்களுக்கு பந்தோபஸ்து இருக்குமென்று கருதமுடியாது.

அரசாங்கம் சம்மந்தமில்லாத வேறு பல விஷயங்களில் கூடியவரை பார்ப்பனரல்லாதார்கள் விழித்துக் கொண்டார்கள் என்றே சொல்லலாம்.

உதாரணமாக இப்போது நடைபெற்று வரும் முனிசிபல் எலக்ஷன்களில் பார்ப்பனக் கோட்டைகளாயிருந்த சேலம், திருப்பூர் முதலிய இடங்களில் ஒரு பார்ப்பனர் கூட வரமுடியாமல் போனதைப் பார்த்தால் அங்குள்ள காங்கிரஸ் ஆதிக்கமும், பார்ப்பன ஆதிக்கமும் எவ்வளவு என்பது விளங்கும்.

பெண்களும், ஆதிதிராவிடர்களும் ஒவ்வொரு முனிசிபாலிட்டியிலும் ஸ்தானம் பெற்றார்கள் என்றால், அது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் பெருமையாலேயே அல்லாமல் ஜனங்களுக்கு சமரச உணர்ச்சி ஏற்பட்டல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஈரோடு அர்பன் பாங்கி சமீபகாலம் வரை பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்தது என்றாலும் இந்த வருஷம் ஃ பாங்கு தேர்தலில் ஒரு பார்ப்பனருக்குக் கூட இடம் இல்லாமல் போய் விட்டது என்பதோடு ஒரு பெண் டைரக்டரும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறதானது மகிழ்ச்சிக்குரியதாகும். இவ்வளவு இருந்தாலும் சில இடங்களில் ஸ்தானங்கள் பெறப் பார்ப்பனர்கள் கையில் ஆகவில்லை என்றாலும் சிலர் சில பார்ப்பனரல்லாதாரைப் பல வழிகளில் தங்கள் வழிப்படுத்திக் கொண்டு கட்சிகள் தகரார்கள் உற்பத்தி செய்து தாங்கள் ஸ்தானத்தில் இருந்தால் என்ன நடக்குமோ அதுபோல் செய்து வருவது இன்னும் குறைந்தபாடில்லை.

நாட்டில் வகுப்பு உணர்ச்சி ஏற்பட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் தங்களைப் பிறவியிலேயே உயர்ந்த ஜாதி என்று கருதிக் கொண்டு மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியாக கருதிக் கொண்டிருக்கிறவர்களிடத்தில், தாழ்ந்த ஜாதிக்காரர்களாய் கருதப்படுகிறவர்கள் துவேஷமும் வெறுப்பும் இல்லாமல் இருக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பது மனித இயற்கைக்கு விரோதமானது.

உதாரணமாக ஒரு பிராமணன் என்பவனிடம் ஒரு சூத்திரன் என்பவன் துவேஷமாயிருக்கிறான் என்பது ஒரு நாளும் ஆச்சரியமான காரியம் ஆகாது. மற்றெது ஆச்சரியமான காரியம் ஆகுமென்றால் ஒரு பிராமணன் என்பவனிடம் கூட ஒரு சூத்திரன் என்று அழைக்கப்படுகின்றவன், தீண்டப்படாதவன் என்று அழைக்கப்படுகிறவன் துவேஷமில்லாமல், வெறுப்பு இல்லாமல் இருந்து வருவதுதான் ஆச்சரியப்படத்தக்கதாகும்.

ஆதலால் ஜாதிப்பிரிவு சம்பந்தமான உயர்வு, தாழ்வு இருக்கும் வரை நாட்டில் துவேஷம், வெறுப்பு, வகுப்பு உணர்ச்சி ஆகிய காரியங்களும் ஒரு வகுப்பாரால் ஒரு வகுப்பு கஷ்டமடையும் காரியங்களும் எதிர்பார்த்துத்தான் இருக்க வேண்டும்.

உதாரணம்

இதற்கும் ஒரு உதாரணம் கூறிவிட்டு இதை முடிக்கின்றோம்.

தோழர் எஸ். குஞ்சிதம் குருசாமி அம்மாளை யாவருக்கும் தெரியும். அந்தம்மாள் பி.ஏ., எல்.டி., பாஸ் செய்தவர்கள். அதிலும் யோக்கியதாபக்ஷத்தோடு உயர்ந்த வகுப்பில் பாஸ் செய்தவர்கள். அவர்களின் கல்வித் திறமை, போதிக்கும் திறமை, பிள்ளைகளிடம் அன்பாயிருக்கும் திறமை, சரீராப்பியாச விளையாட்டுகளில் உள்ள திறமை முதலியவைகள் அந்தம்மாள் வேலை செய்த பள்ளிக்கூட தலைமை உபாத்தியாயரின் நற்சாக்ஷிப் பத்திரத்தில் காணலாம். இப்படிப்பட்ட அம்மாள் மைலாப்பூரில் ஒரு பார்ப்பன ஆதிக்கமுள்ள பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக மாதம் 70 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு வந்தார்.

அந்தம்மாள் யாதொரு தப்பிதமும் செய்துவிடவில்லை. இரண்டொரு இடங்களில் பகுத்தறிவு பிரசங்கங்கள் செய்தது தவிர யாதொரு பாவத்தையும் அறியார். அப்படிப்பட்டவர்களைத் தோழர்கள் பி.எஸ். சிவசாமி அய்யர், டி.ஆர்.வெங்கிட்ட ராமசாஸ்திரி, சி.பி.ராமசாமி அய்யர், அல்லாடிக் கிருஷ்ணசாமி அய்யர் ஆகியவர்கள் போன்றவர்கள் நிர்வாக கமிட்டியாய் இருக்கும் பள்ளிக்கூடத்தில், அந்தம்மாளுக்கு இனி வேலை இல்லை என்று நோட்டீஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் என்றால், வகுப்பு உணர்ச்சியில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தப்படி ஒரு பார்ப்பனரல்லாதார் ஆதிக்கமுள்ள ஸ்தாபனங்களில் இருந்து, தகுந்த ஒழுக்கக் குறைவுள்பட ஒரு குற்றத்துக்காக ஒரு பார்ப்பனரை நீக்கிவிட்டால் அக்கிரகாரம் முதல் கொண்டு சர்க்கார் அதிகாரிகள் ஹைகோர்ட்டு வரை அந்த ஸ்தாபனத்தின் மீது பழி வாங்க நினைக்கிறார்கள். "பிராமணத் துவேஷம்" பிராமணத் துவேஷமென்று கூப்பாடு போடுகிறார்கள்.

பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தில் இருக்கிற எந்த ஸ்தாபனங் களிலாவது 100க்கு 10 வீதமாவது பார்ப்பனரல்லா தார்களுக்கு வேலை கொடுக்கிறார்களா? எனப் பார்த்தால் வகுப்பு துவேஷம் யாரிடத்தில் இருக்கிறது என்பது விளங்கும்.

ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் இனியாகிலும் இவ்விஷயங்களை உணர்ந்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள முயற்சிப்பதுடன் காந்தி ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஹரிஜன நாள், ஏகாதிபத்திய ஒழிப்பு நாள், மே டே என்பது போன்ற நாள்களை வருஷத்துக்கு ஒரு நாள் கொண்டாடுவது போல் "பார்ப்பன ஆதிக்கம் ஒழிப்பு நாள்" என்பதாக வருஷத்தில் ஒரு நாள் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், அதை அடுத்து வரும் தீபாவளிக்கு அடுத்த நாளோ, அல்லது முந்திய நாளோ வைத்துக் கொள்வது நல்லது என்றும் அபிப்பிராயப்படுகின்றோம்.

இத்தினங்களில் ஆங்காங்கு கூட்டம் போட்டு பார்ப்பன ஆதிக்கக் கொடுமை, சமுதாயத்திலும், அரசியலிலும் இருப்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி தீர்மானங்களை நிறைவேற்றி, அரசாங்கத்துக்கும் பத்திரிக்கைகளுக்கும் அனுப்ப வேண்டிய வேலையை அத்திருநாள் கொண்டாட்ட வேலையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் அபிப்பிராயப்படு கின்றோம். இன்ன நாள் என்பதைப் பின்னால் உறுதிப்படுத்துகிறோம்.

        -----------------தந்தைபெரியார் -”பகுத்தறிவு” துணைத் தலையங்கம் 30.09.1934

பார்ப்பனர்களைச் சேர்த்துக்கொள்ளலாமா? -பெரியார்



தோழர்களே! பார்ப்பனர்களைச் சேர்த்துக்கொள்ளலாமா? -என்கின்ற பிரச்சினையானது ஜஸ்டிஸ் கட்சியில் 1926ம் வருஷம் முதல் பேசப்பட்டு வருகிறது.

உதாரணமாக மதுரை மகாநாட்டில் பனகால் அரசர் பார்ப்பனர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு, அதற்கு ஒரு கமிட்டியை நியமித்துப் பார்ப்பனர்கள் விண்ணப்பங்களை கமிட்டி பரிசோதிக்கலாமா என்றும், பூணூல் இல்லாதவர்களைச் சேர்த்துக் கொள்வது என்கின்ற நிபந்தனை வைக்கலாமா என்றும், மற்றும் பலவித நிபந்தனைகளின் மீதாவது சேர்க்கலாம் என்றும் சொன்னார். பிறகு கோயம்புத்தூர் மகாநாட்டிலும், கடைசியாக நெல்லூர் மகாநாட்டிலும் பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை நான் ஆட்ஷேபித்தே வந்திருக்கிறேன். பொது ஜனங்களுக்கும் பிரியமில்லை என்பது எனது அபிப்பிராயம்.

ஆனால் தலைவர்களுக்கு ஏதோ அவசியமிருப்பதாகத் தெரிகின்றது. அதை உத்தேசித்தே சென்ற மாதம் கூடின ஒரு சாதாரண தனிப்பட்ட கூட்டத்தில் நான் ஆட்ஷேபிக்கப் போவதில்லை என்று கூறி இருக்கின்றேன். ஏனெனில் தலைவர்கள் என்பவர்கள் அதன் பயனை அடைந்து பார்க்கட்டும் என்று கருதித்தான்.

இது போலவே முன்னமும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காங்கிரசில் சேர வேண்டும் என்கின்ற ஒரு பிரச்சினை கோயம்புத்தூர் மகாநாட்டில் 1927 ல் எழுந்தது. நான் ஆட்ஷேபித்தேன். தோழர்கள் பனகால் அரசர், சர். பாத்ரோ முதலியவர்கள் மிகவும் கேட்டுக் கொண்டார்கள். பொது ஆறக்ஷபனை கூட பலமாய் இருந்தது. கடைசியாக நான் இவர்கள் அதன் பயனை அடைந்து பார்க்கட்டும் பின்பு விஷயம் தெரிந்து கொள்ளட்டும் என்கின்ற எண்ணத்தின் மீதுதான் தடுப்பதில்லை என்று சொல்லி விட்டேன். தீர்மானம் எவ்வித எதிர்ப்புமின்றி பாசாகிற்று என்றாலும் ஒரு அம்மன் காசு அளவு பயன்கூட ஏற்படவில்லை. இதன் பயனாய் முன்னையை விட அதிகமாய் காங்கிரசை ஜஸ்டிஸ் கக்ஷியார் எதிர்க்க நேர்ந்தது. அது போலவே இப்போதும் பொது ஜனங்களுக்கு இஷ்டமில்லாத காரியத்தை ஏதோ ஒரு உள் கருத்துக்கொண்டு சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறார்கள். இதன் பயனைக் கண்டிப்பாய் அனுபவிக்கப் போகிறார்கள். அந்த தைரியத்தின் மீதே இப்போது நான் தடுக்கப் போவதில்லையென்று சொல்லுகிறேன். இப்படிச் சொன்னதால் சில தோழர்கள் நான் சம்மதம் கொடுத்ததாகச் சொல்லு கிறார்கள். அவர்களை எனக்கு நன்றாய்த் தெரியும். பார்ப்பனர்களிடம் நான் துவேஷமாய் இருந்தாலும் சினேகமாய் இருந்தாலும் அந்தப் பலன்களையெல்லாம் இவர்கள் தான் அடைவார்களே ஒழிய, எனக்கு ஒரு லாபமும் இல்லை. வேண்டுமானால் பார்ப்பனர்களால் ஏற்படும் விஷமமும், தொல்லையும் எனக்குச் சொந்தமாகும்.

நான் சென்ற வாரப் பத்திரிகையில் "பார்ப்பனீய ஒழிப்புக் கொண்டாட்ட நாள்" என்பதாக வருஷத்தில் ஒரு நாள் கொண்டாட வேண்டும் என்று எழுதி இருக்கின்றேன்.

இவை நிற்க, பொதுவாக விஷயத்தை உங்கள் ஞாபகத்துக்குக் கொண்டு வர ஆசைப்படுகிறேன்.

பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விதியும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்கின்ற ஒரு விதியும் நமக்குள் இருந்து வருகின்றது என்றாலும் இது எப்போதும் இருக்க வேண்டியதா? அல்லது எவ்வளவு காலத்துக்கு இருக்க வேண்டியது? என்று யோசித்துப் பாருங்கள். எல்லா இந்திய மக்கள் மாத்திரம் அல்லாமல் உலக மக்கள் எல்லோருமே சகோதரர்களாக தோழமையுடன் வாழ வேண்டுமென்றும் வகுப்பு வித்தியாசங்கள் என்பது எங்கும், எந்த ரூபத்திலும் காணக் கூடாதென்றும் கூப்பாடு போடுகின்ற நாம் எப்போதும் பார்ப்பனர்களை சேர்க்கக் கூடாது என்று சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். சர்வ ஜன சகோதரத்துவத்துக்கும் வகுப்புப் பிரிவு மறைவுக்கும் தான் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்றும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். இது சாதாரண அறிவுடையவர்களுக்கு விளங்காது. சிறிது கூர்மையான பகுத்தறிவைப் பயன்படுத்திப் பார்ப்பவர்களுக்கு விளங்கிவிடும்.

எப்படியெனில் ஒரு வியாதியை சௌக்கியப்படுத்த அந்த வியாதியின் சத்தை இன்ஜக்ஷன் செய்வது போல் உதாரணமாக பீனிச மூக்கு வியாதிக்காரனுக்கு அந்தப் பீனிச மூக்குச் சீயையும், கெட்ட நீரையும் எடுத்துச் சேர்த்து பக்குவம் செய்து இன்ஜக்ஷன் செய்தால் அந்த மூக்கு வியாதி சௌக்கியமாய் விடுகின்றது.

அதுபோல் பார்ப்பனர்களை விலக்கி வைப்பது என்பதில் பார்ப்பனீயம் ஒழிந்து விடுகின்றது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதில் வகுப்புகளின் உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒழிந்து சமநிலைக்கு வர நேருகின்றது. இவற்றின் பலனாய் ஒற்றுமையும், சமத்துவமும் வந்து பிரிவும் பேதமும் தானாய் மறைய நேரிடுகின்றது.

இந்த நிலை ஏற்படும் வரையில்தான் நாம் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்றும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோமே ஒழிய, உலகம் உள்ள வரையில், மனித சமூகம் உள்ள வரையில் கூடாது என்றும் வேண்டும் என்றும் நாம் கருதி ஏற்படுத்தவில்லை.

இப்போது உள்ள கேள்வியெல்லாம் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எடுத்து விடவும் தகுதி ஆனதும் அவசியமானதுமான காலம் வந்து விட்டதா என்பதேயாகும். என்னுடைய அபிப்பிராயத்தில் இல்லை என்றே கருதுகிறேன். சிலர் வந்து விட்டது என்கிறார்கள். சிலருக்கு இரண்டும் புரியாமல், சொல்லிக் கொடுத்ததைச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் மாதிரி ஒரே மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய இந்த அபிப்பிராய பேதங்களுக்குக் காரணமே ஒழிய வேறில்லை.

"பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள காலம் வந்து விட்டது" என்று இன்று சொல்லுகின்றவர்கள் தலைவர்கள் என்கின்றவர்களே யாவார்கள். தோழர்கள் சர். ஷண்முகம், பொப்பிலி ராஜா, சர். உஸ்மான், ராஜன் போன்றவர்களே ஆசைப்படுகின்றார்கள் என்றால் அதன் பலாபலனை அடைந்து பார்க்க அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கும் வரையில் இந்தப் பிரச்சினை விஷயத்தில் ஒரு சாந்தியும் ஏற்படாது. ஆதலால் நான் குறுக்கே நிற்பதில்லை என்று சொல்லிவிட்டேன். எனது தோழர்கள் பலரும் இதை ஒப்புக்கொண்டது எனக்கு சந்தோஷமே.

இப்போது எனக்கும் மற்றும் பல எனது கூட்டு வேலைத் தோழர்களுக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினை இந்தப் பார்ப்பனர்களைப் பொருத்ததல்ல.

பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டு பிறகு ஜஸ்டிஸ் கட்சி செய்யப்போகும் வேலை என்ன? அதற்கு வேலைத்திட்டம் என்ன? என்பது தான் முக்கிய பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் தான் நாங்கள் ஜஸ்டிஸ் கட்சியில் இருப்பதா அல்லது விலகுவதா என்கின்ற தத்துவம் இருந்து வருகின்றது.

அதைத்தான் நாங்கள் முக்கியமாய்க் கருதுகிறோம். அந்த விஷயத்துக்கு ஒரு வேலைத் திட்டம் அனுப்பியிருக்கிறேன். அது யோசனைக்கு வரும். அதைப் பொறுத்தே எங்கள் முடிவும் இருக்கும். பார்ப்பனர்களைச் சேர்க்கும் விஷயம் முடிவடைந்தால் ஏதோ ஒரு சில கூட்டத்துக்குத்தான் பயன் உண்டாகலாம்.

நமது வேலைத்திட்ட விஷயம் முடிவடைவதில்தான், இந்த தேசப் பொது மக்களின் "தலையெழுத்து" நிர்ணயிக்கப்படப் போகின்றது.

ஆதலால் பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியில் சேர்க்கும் விஷயத்தில் எனது அபிப்பிராயத்தைச் சொல்லிவிட்டேன். பிறகு நீங்கள் எல்லோரும் யோசித்துத் தக்கது செய்யுங்கள்.

--------------------- 29, 30.09.1934 இரு நாள்கள் சென்னையில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வது என்ற தீர்மானத்தை யொட்டி தந்தைபெரியார் ஆற்றிய உரை.”பகுத்தறிவு ”சொற்பொழிவு 07.10.1934

21.9.12

விவேகானந்தர் ஒரு கிறுக்கன் மாதிரி - பெரியார்

கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தரா?

தந்தை பெரியார் அவர்களின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளிட்ட தினமலர் ஏட்டில் ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது.

கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் தந்தை பெரியாரை வணங்குகிறேன் என்று தலைப்பிட்டு  தந்தை பெரியார் உருவப் படத்துடன் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் கீழ் இடம் பெற்றுள்ள வாசகமும் முக்கியமானது.

ஆன்மீகம் இல்லாமல் அறிவியல் இல்லை. அறிவியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என்பதுதான் அந்த வாசகம். தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் அது.

விளம்பரம் என்பதால் தாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று தினமலர் தப்பித்துக் கொள்ளப் பார்க்கும். அது எப்படியோ தொலையட்டும்!

ஆனால் அதில் வெளி வந்துள்ள வாசகங்கள் சரியானதுதானா?


பெரியார் கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் என்பது எப்படி சரி ஆகும்?

இந்து என்று சொல்லாதே, இழிவைத் தேடிக் கொள்ளாதே என்று சொன்ன தந்தை பெரியார் எங்கே? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பிய விவேகானந்தர் எங்கே?

ஒரு முறை அமெரிக்கர் ஒருவர் தந்தை பெரியாரைச் சந்தித்தார். அப்பொழுது விவேகானந்தரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று தந்தை பெரியார் அவர்களிடம் அந்த அமெரிக்கர் கேட்டபோது, பட்டென்று அளித்த பதில் - அந்த ஆள் ஒரு கிறுக்கன் மாதிரி. இப்படியும் அப்படியு மாகப் பேசியவர் என்று பதில் சொன்னார்.

அப்படிச் சொல்லாதீர்கள். எங்கள் அமெரிக்காவிலேயே விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோமே? என்றார்.

அவ்வளவுதான், முட்டாள்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டுமே தான் சொந்தமா? என்று செவுளில் அறைந்தாற் போல் தந்தை பெரியார் சொன்னாரே பார்க்கலாம் - பொறி கலங்கிப் போனார் அந்த அமெரிக்கர்!

உண்மை இவ்வாறு இருக்க, தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் பெரியாரின் படத்தைப் போட்டு, கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் என்று விளம்பரம் செய்திருப்பது அசல் திரிபுவாத மாகும்.


பார்ப்பனர்கள் பற்றி தந்தை பெரியார் சொன்னது போல ஒன்றிரண்டு விவேகானந்தர் சொல்லியிருக்கலாம். அதை வைத்துக் கொண்டு பெரியாரும் விவேகானந்தரும் ஒன்று என்ற முடிவுக்கு வந்துவிட முடியாதே!

அந்த விளம்பரத்தில் இடம் பெற்ற இரு வாசகங்கள் கோணிப்பைக் குள்ளிருந்து பூனை வெளியில் வந்துவிட்டதைக் காட்டக் கூடியதாகும்.

ஆன்மீகம் இல்லாமல் அறிவியல் இல்லையாமே! ஏதாவது புரிகிறதா? சூடான அய்ஸ் கிரீம் என்று சொல்வது போல் இல்லையா?

அறிவியல், சந்திரனை பூமியின் துணைக் கோள் என்கிறது. ஆனால் ஆன் மீகமோ குரு பத்தினியின் கற்பினை அழித்தவன் சந்திரன் என்கிறது. குருவின் சாபத்தால் சந்திரன் தேய்கிறான் - ராகு, கேது என்கிற பாம்பு சந்திரனை விழுங்குகிறது. அதுதான் கிரகணம் என்கிறது ஆன்மீகம்.

பூமியின் சுழற்சியால் சூரியனின் ஒளி சந்திரனில் விழாமல் தடுக்கப்படுவ தால் கிரகணம் ஏற்படு கிறது என்கிறது அறிவியல். முரண்பட்ட இரண்டும் எப்படி ஒன்றாகும்?

அறிவியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என்பதை இப்படி எடுத்துக் கொள்ளலாம்.

அறிவியலை வைத்துத் தானே ஆன்மீகத்தின் பிழைப்பு நடக்கிறது! அறிவியல் நன்கொடையான தொலைக் காட்சியில் காலையிலிருந்து சோதி டம், வாஸ்து, எந்த நிறத்தில் உடை, எந்த நிறத்தில் மோதிரக் கல் அணிவது உட்பட எல் லாம் பிரச்சாரம் செய்யப் படுவது இல்லையா?

கம்ப்யூட்டர் சோதிடம் என்கிற அளவுக்கு வயிற்றுப் பிழைப்பு நடக்க வில்லையா?

ஆரிய மதத்தின் ஆணி வேரை அசைத்த புத்தரையே மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரம் ஆக்கிய பார்ப்பனர்கள் கொஞ்சம் நாம் அசந்தால் தந்தை பெரியாரையும் அவதாரப் புருஷர் ஆக்கி விடுவார்கள். அதன் ஒரு முன் னோட்டம்தான்  இந்தத் தினமலர் விளம்பரம்!

எச்சரிக்கை!
              --------------------"விடுதலை” 21-9-2012

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு


வரதராஜூலு கூட்டிய பார்ப்பனரல்லாதார் கூட்டம்
நூல்    :    பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு
ஆசிரியர்    :    பழ. அதியமான்
வெளியீடு    :    காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை, நாகர்கோவில் _ 629 001.
பக்கங்கள் :    480- ரூ. 375.
-நூலிலிருந்து.....
பார்ப்பனரல்லாதாரின் எதிர்காலத் திட்டம் குறித்து விவாதிக்க தலைவர்கள் கூட்டம் ஒன்றை 1926 அக்டோபரில் வரதராஜுலு கூட்டினார். அக்கூட்டத்திற்குப் பெரியார் உட்பட பல தலைவர்களை அழைத்தார். அதை ஒட்டி தேசிய அறிக்கை ஒன்றினையும் தமிழ்நாடு அலுவலகத்திலிருந்து அனுப்பினார். அதைக் குறித்த பெரியாரின் எதிர்வினை பின்வருமாறு:
சுயராஜ்யக் கட்சி பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்க் கட்டுப்பாடாக பிரசாரம் செய்து வருகிறது. இம்மாதிரியான நிலைமையை இன்றும் வளர விட்டுக்கொண்டே போனால் பிராமணரல்லாதாருக்குக் கெடுதல் வரும் என்பது வரதராஜுலு அறிக்கையில் கூறியிருக்கும் கருத்துகளில் ஒன்று. இந்த அபிப்பிராயத்தை நாம் இரண்டு வருஷத்திற்கு முன்னதாகவே கொண்டுள்ளோம்.... இதை வெளிப்படையாய் வலியுறுத்த முன்வந்ததற்கு நன்றி. அவர் எடுத்துக்கொள்ளும் எவ்வித முயற்சிக்கும் ஆதரவளிக்க வேண்டியது தமிழ் மக்கள் கடமை (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 2009, ப. 895).

வரதராஜுலு, திரு.வி.க., பெரியார் ஆகியோர் காங்கிரசைவிட்டு விலகியபோது இப்போதுதான் காங்கிரசு பரிசுத்தமானது என்று எஸ். சீனிவாச ஐயங்கார் கூறியதைக் குடிஅரசு பலமாகக் கண்டித்தது (குடிஅரசு, 26 செப்டம்பர் 1926: 3 அக்டோபர் 1926). பார்ப்பனரல்லாதாருக்குக் கெடுதல் செய்யும் காங்கிரசு தலைவர் எஸ். சீனிவாச ஐயங்காரோடு வரதராஜுலுவும், திரு.வி.க.வும் இணங்கி இருப்பது பற்றி கேலியும், கிண்டலும், கண்டனமும் பெரியார் செய்துவந்தார். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து வரதராஜுலு விலகினார் என அறிந்து நாட்டின் நல்ல காலத்தின் பயன் என்று பெரியார் எழுதினார். (குடிஅரசு, 26 செப்டம்பர் 1926).
காங்கிரசில் பார்ப்பனரல்லாதாரின் நிலைமை
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் எதிர்விளைவாகவே பார்ப்பனர் அல்லாதாருக்குக் காங்கிரசில் மதிப்பும் பதவியும் வாய்ந்தது என்று பல சமயங்களில் பெரியார் எடுத்துக் காட்டினார். அவ்வகையிலேயே காங்கிரசில் வரதராஜுலுவுக்குப் பதவி கிடைத்தது என்றும் ஒருமுறை அவர் குறிப்பிட்டார்.
ஜஸ்டிஸ் கட்சியே இல்லாதிருக்குமானால் அரசியல் சங்கங்களிலாவது டாக்டர் வரதராஜுலு நாயுடு, கலியாண சுந்தர முதலியார், தண்டபாணி பிள்ளை, சிங்காரவேலு செட்டியார், பாவலர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப்பிள்ளை, வெங்கிடு கிருஷ்ணப்பிள்ளை, இராமசாமி நாயக்கர், சக்கரை செட்டியார், மயிலை இரத்தினசபாபதி முதலியார், முனுசாமி கவுண்டர், அமீத் கான் சாயபு, ஷபி முகம்மது சாயபு, மாரிமுத்துப் பிள்ளை முதலிய எத்தனையோ கனவான்கள் தலைவர்களாகவும், தொண்டர்களாகவும் வந்திருக்க முடியுமா? முடியுமென்று சொல்வார்களானால் ஜஸ்டிஸ் கட்சி இல்லாதபோது ஐந்தைந்து வருஷம் ஜெயிலுக்குப் போன உண்மையான தேசபக்தர்களான ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம் பிள்ளை முதலிய கனவான்கள் உண்மையான தேசத் துரோகிகளான பல பார்ப்பனர்கள் மூட்டை தூக்கியும், அவர்களைச் சுவாமிகளே என்று கூப்பிட்டுக்கொண்டும் அவர்கள் வாலைப்பிடித்துத் திரிந்தால் மாத்திரம் வாழும்படியான நிலைமையில் இருக்கவில்லையா? (குடிஅரசு, 31 அக்டோபர் 1926).
வரதராஜுலுவின் பார்ப்பனச் சார்பைக் கண்டிப்பவராக இருந்தாலும் பார்ப்பனர்கள் அவரைத் தாக்கும்போது காப்பாற்றுபவராகப் பெரியார் இக்கட்டத்தில் (1926) இருந்தார். சுயராஜ்யக் கட்சியைப் பார்ப்பனர்கள் கட்சி என்று வரதராஜுலு கூறியதையடுத்து எதிர்ப்பு எழுந்தது. அச்சம்பவத்தில் குடிஅரசு வரதராஜுலுவை ஆதரித்தது.
சுயராஜ்யக் கட்சித் தலைவர்களைப் போல கள், சாராயம், பிராந்தி சாப்பிடுகிறாரா? சுயராஜ்யக் கட்சிப் பிரதானிகள் போல் தேவடியாளைக் கூட்டிக்கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறாரா? அல்லது போன இடங்களில் எல்லாம் குச்சு புகுந்து அடிபட்டாரா? சாராயம், பிராந்தி விற்றுப் பணம் சம்பாதிக்கிறாரா? பத்திரிகையில் பேர் போடுவதாகவும், படம் போடுவதாகவும் சொல்லிப் பணம் சம்பாதித்தாரா? பத்திரிகைச் செல்வாக்கை உபயோகித்து மடாதிபதிகளிடம் பணம் வாங்கினாரா? மகனுக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டாரா? வாங்கின கடனை ஏமாற்றினாரா? அல்லது வீட்டில் மல் துணியும் பெண்சாதிக்குப் பட்டுச் சல்லா முதலிய அந்நிய நாட்டுத் துணியும் உபயோகித்துக்கொண்டு மேடைக்கு வரும்போது கதர் கட்டிக்கொண்டுவந்து பொதுஜனங்களை ஏமாற்றுகிறாரா? திருட்டுத்தனமாய் சர்க்கார் அதிகாரிகளிடம் கெஞ்சி ஏதாவது தயவு பெற்றுக் கொண்டாரா? மந்திரி உத்தியோகம் வேண்டுமென்று யார் காலிலாவது விழுந்தாரா? பெரியபெரிய உத்தியோகங்களையும், பதவிகளையும் பெறலாமென்று தனது உத்தியோகத்தை இராஜினாமா கொடுத்து ஜனங்களை ஏமாற்றினாரா? அல்லது இன்னமும் தனக்கு ஏதாவது ஓர் உத்தியோகமோ பதவியோ கிடைக்குமென்று எதிர்பார்க்கிறாரா? இவர்கள் பூச்சாண்டிக்கு யார் பயப்படுவார்கள்? (குடிஅரசு, 10 அக்டோபர் 1926).
குடிஅரசின் மேற்கண்ட எழுத்து, சுயராஜ்யக் கட்சியினரின் மோசமான செயல்களின் பட்டியலாகவே இருந்தாலும் எதிர்நிலையில் வரதராஜுலுவின் சிறப்பான ஆளுமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனாலேயே வசையே வடிவான இப்பத்தியைத் தர நேர்ந்தது.
நவீனம்: வரதராஜுலுவும் பெரியாரும்
(மாறிவரும் காலத்தை உணர்ந்து புதியனவற்றை ஏற்றுக்கொள்ளும்) நவீன மனிதராக வரதராஜுலுவைக் கருத முடியாது என அவரோடு நன்கு பழகிய வ.ரா. குறிப்பிட்டுள்ளார். அப்படி பழமைவாதியாக அவரை முற்றாக ஒதுக்கிவிட முடியாது. பெரியாரைப் போல் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டாடுபவராக இருக்கவில்லை என்றாலும் பண்பாட்டு மாற்றங்களைச் சூழ்நிலைக்கேற்ப ஏற்பவராகவே இருந்தார் வரதராஜுலு. அதற்கு ஒரு சான்று 1933இல் மதவாதிகளால் எதிர்க்கப்பட்ட கர்ப்பத் தடையை வரதராஜுலு ஆதரித்தார். பெண் ஏன் அடிமையானாள்? எனச் சிந்தித்த பெரியார் கர்ப்பத் தடையை ஆதரித்தார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
பி.எஸ். சிவசாமி ஐயர் தலைமையில் நடந்த கர்ப்பத் தடையின் அவசியம் குறித்த கூட்டத்தில் (31 அக்டோபர் 1933, சென்னை) வரதராஜுலு கலந்துகொண்டார்.
கர்ப்பத் தடை போன்ற லௌகீக விஷயங்களில், சாஸ்திரம் பற்றிக் கவலையே கொள்ளக்கூடாது.... பழைய காலத்து சாஸ்திரங்கள் கர்ப்பத் தடையை ஆதரிக்கின்றனவா அல்லவா என்பது பற்றியும் கவலை வேண்டாம். இந்தக் காலத்தில் நடந்துகொள்ள வேண்டியது பற்றியே கவனிக்க வேண்டும்.
குழந்தைகளில்லாவிட்டால் அது பெருங்குறையாகவிருக்கிறது. அதிகமாகி விட்டாலும் கஷ்டம்... கர்ப்பம் ஏற்படாதபடியே தடுப்பது சரியா? அல்லது கர்ப்பம் ஏற்பட்ட பிறகு அதனைக் கலைப்பது சரியா? கர்ப்பத்தைச் சிதைத்து அது சம்பந்தமான குற்றங்கள் செய்த கைதிகளே பெரும்பாலோராய் சிறையில் இருக்கக் கண்டிருக்கிறேன்... நமது (இந்து) வைதீகர்கள் கர்ப்பத் தடை விஷயத்தில் குறுக்கிட்டு கூச்சல் போடவில்லை. ஆனால் அவ்வேலையைக் கத்தோலிக்கர்களுக்கு விட்டிருக்கிறார்கள்.... சர்க்கார் எவ்வித எதிர்ப்பையும் அலட்சியம் செய்யாமல் ஆஸ்பத்திரிகளில் தகுந்தவர்களைக் கொண்டு கர்ப்பத் தடை முறைகளைப் போதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் (குடிஅரசு, 5 நவம்பர் 1933) என்பது வரதராஜுலு அக்கூட்டத்தில் விடுத்த கோரிக்கையாகும்.
கர்ப்பத் தடையை ஆதரித்துச் சென்னையில் நடந்த அக்கூட்டத்தின் நிகழ்வுகளைச் சுதேசமித்திரன் வெளியிட்டிருந்தது. பலரும் ஆங்கிலத்தில் பேசியதை மொழிபெயர்த்துப் பிரசுரித்திருந்த அது வரதராஜுலுவின் பேச்சைத் தமிழில் பேசினார் என்று ஒருவரியில் முடித்துவிட்டது. அதைக் கண்டித்து எழுதியது குடிஅரசு.
இங்கிலீஷ் பேச்சுகளை எல்லாம் மொழிபெயர்த்து பிரசுரித்த இந்தப் பத்திரிகை தோழர் வரதராஜுலுவின் தமிழ்ப் பேச்சைப் பூராவாகப் போடாததற்குக் காரணம் என்ன? தமிழ்மொழி மீதுள்ள வெறுப்பா? அல்லது பார்ப்பனரல்லாதார் மீதான துவேஷமா? என்றுதான் கேட்கிறோம். பார்ப்பன பத்திரிகைகளை ஆதரிக்கும் தமிழ் வாசகர்கள் இதைச் சிந்தனை செய்வார்களாக! (குடிஅரசு, 5 நவம்பர் 1933).
கட்சியிலும் சமூகத்திலும் தனக்கும் தன் கல்வித் திட்டத்திற்கும் எதிர்ப்பு அதிகமாகிவிட்டதை உணர்ந்த இராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து உடல் நிலையைக் காரணம் காட்டி விலக முடிவு செய்தார். அதற்கு முன்னதாகச் சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்தல் நடத்தப்பெற்றது. புதிய தலைவர் தேர்வில் வரதராஜுலுவுக்கும் பெரியாருக்கும் முக்கியப் பங்கிருந்ததாகத் தெரிகிறது.
கூட்டம் (சென்னை சட்டசபை காங்கிரசு கட்சிக் கூட்டம்) ஆறு மணி அடித்த சிறிது நேரத்திற்கெல்லாம் துவக்கப்பட்டது. தமக்குப் பதிலாகக் கட்சித் தலைவர்
பதவிக்கு நியமனச் சீட்டுகளைப் பதிவு செய்யுமாறு ஆச்சாரியார் கேட்டுக்கொண்டார். டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு காமராசர் பெயரை முன்மொழிந்தார்.
என்.அண்ணாமலைப் பிள்ளை அதை வழிமொழிந்தார். கி.சுப்பிரமணியத்தின் பெயரை பக்தவத்சலம் முன்மொழிய டாக்டர் யூ.கிருஷ்ணாராவ் வழிமொழிந்தார்.
தேர்தல் நடைபெற்றது. காமராசருக்கு 93 ஓட்டுகளும், சி.சுப்பிரமணியத்துக்கு 41 ஓட்டுகளும் கிடைத்தன. (விடுதலை 31 மார்ச் 1954).
8 ஏப்ரல் 1954இல் இராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதையடுத்து காமராசர் முதலமைச்சரானார். ஏ.பி. ஷெட்டி, எம். பத்வத்சலம், சி. சுப்பிரமணியம், பி. பரமேசுவரன் ஆகியோர் அமைச்சர்களாக அமைந்தனர். காமராசர் பொறுப்பேற்றதும் புதிய கல்வித் திட்டத்தை விலக்கிக் கொண்டார்.
1953 முதல் 1954 வரை நடந்த புதிய கல்வித் திட்ட எதிர்ப்பு போராட்டத்திலும் அதன் இறுதிப் பகுதியாக அமைந்த முதலமைச்சர் மாற்றத்திலும் வரதராஜுலு பெரியாருடன் இணைந்து செயலாற்றியதைக் கண்டோம். 1925இல் நடைபெற்ற சேரன்மாதேவி போராட்டத்தை இது நினைவூட்டுகிறது. இரண்டு போராட்டங்களும் கல்வி சார்ந்தவை. இரண்டும் காங்கிரசுகாரர்களின் செயல் திட்டங்களாக அமைந்தவை. வர்ணாசிரமப் புதுப்பித்தலாகப் பார்ப்பனரல்லாதாரால் கணிக்கப்பட்டவை. 25 ஆண்டுகள் இடைவெளி கொண்ட இரண்டிலும் பார்ப்பனரல்லாத தலைவர்களான வரதராஜுலுவும் பெரியாரும் இணைந்து போராடினார்கள்.
இறுதியான இரண்டு போராட்டங்கள்
காமராசர் முதலமைச்சரான பிறகு வரதராஜுலு மூன்று ஆண்டுகளே வாழ்ந்தார். காமராசர் ஆட்சியின் இக்கட்டத்தில் தேசியக் கொடி, இராமர் பட எரிப்புப் போராட்டங்களில் பெரியார் ஈடுபட்டார். சட்டமன்ற உறுப்பினரான வரதராஜுலு பெரியாருக்கும், காமராசருக்கும் பாலமாகச் செயல்பட்டார்.
1955 ஆகஸ்ட் மாதத்தில் இந்தி எதிர்ப்பின் ஒரு அடையாளமாக இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார். வரதராஜுலுவின் முயற்சியினால் வெளியான முதலமைச்சர் காமராசரின் அறிக்கையை அடுத்துப் பெரியார் அப்போராட்டத்தை விலக்கிக் கொண்டார். இதன் பின்னணியில் வரதராஜுலு இருந்தார்.
தமிழ்நாட்டவர் மீது இந்தி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் வாக்குறுதி கொடுத்து கொடியைக் கொளுத்த வேண்டாம் என்று விரும்புவதாக உணர்கிறேன். ஆகவே நான் எனது தீர்மானம் அமுல் செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்று சர்க்கார் விரும்பினால் எப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தேனோ அப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
..... முதல் மந்திரியாரின் விருப்பத்திற்கு ஏற்பக் கொடி கொளுத்துவதைத் தற்காலிகமாகவே ஒத்திவைத்து திராவிடர் கழகத்தாரையும் மற்றும் இதில் ஈடுபட இருக்கிற பொது மக்களையும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்றைக்குக் கொடியைக் கொளுத்தாமல் இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 1974, ப. 1836).

காமராசர் ஆட்சிக்கு ஊறு வந்துவிடாமலும், அதேசமயம் தன்னுடைய தேசியக் கொள்கையை விட்டுக்கொடுத்து விடாமலும் அரசியல்ரீதியாகப் பெரியார் எதிராகச் சென்றுவிடாமலும் அமையக்கூடிய நடவடிக்கைகளை எடுத்தவராக வரதராஜுலு இச்சந்தர்ப்பங்களில் செயல்பட்டார் எனச் சொல்லலாம்.
1956இல் நிகழ்ந்த பெரியாரின் இராமர் பட எரிப்புப் போராட்டத்தை வரதராஜுலு எதிர்த்தார். அதைப் பெரியார் பின்வருமாறு எதிர்கொண்டார்.
நான் மதிக்கத்தக்க இரண்டு நபர்களிடமிருந்து இராமன் உருவம் கொளுத்தப்டக்கூடாது என்று ஒரு வேண்டுகோள் -- அதாவது ஒரு வகை எதிர்ப்பும் கொடி கொளுத்துவதைத் தடை செய்யும்படி சர்க்காரைக் கேட்டுக்கொள்ளும் மற்றொரு வகை எதிர்ப்பு ஒன்றும் ஆக இரண்டு எதிர்ப்புகளைப் பத்திரிகையில் பார்த்தேன்.
இந்தக் கனவான்கள் எனது மரியாதைக்கு உரியவர்கள் ஆவார்கள். இவர்களில் எம்.எல்.ஏ. ஒருவர். இவர் மக்கள் பிரதிநிதி உரிமை கொண்டவர். மற்றொருவர் ஒரு மடாதிபதி ஆவார். இவர்கள் இருவரும் யார் என்றால், வரதராஜுலு நாயுடு அவர்களும் குன்றக்குடி மடாதிபதிகளுமாவார்கள்.
ஆதாரத்தின் மீதும், பலத்தின் மீதும், ஆமோதிப்பின் மீதும் நடத்தப்படுகிற ஒரு காரியத்தை ஒரே வார்த்தையில் வேண்டாம் என்றும், தடைசெய் என்றும் பொறுப்புள்ள மரியாதையுள்ள இரு பெரியார்கள் சொல்லிவிடுவது என்றால் இதில் எப்படி நம் கருத்தைக் கூறாமல் இருக்க முடியும்? மற்ற வேறு யாராவது இருந்தால் நான் இவ்வளவு இலட்சியம் செய்யமாட்டேன்.....
என் உள்கருத்தை அறிந்து, நான் சொல்லும் காரணங்களை காட்டும் ஆதாரங்களை எடுத்துத் தலைப்பில் காட்டி, அதை மறுத்து அல்லது சமாதானம் சொல்லிக் கொளுத்த வேண்டாம், கொளுத்துவது தப்பு என்று சொல்லுவது எதிர்ப்புப் பண்பாகும். நமக்கும் உதவி செய்வதாகும். அப்படியில்லாமல் மக்கள் மனம் புண்படும் என்பது மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பவருக்காகத் தான் கவலைப்படத் தக்கதாகுமே தவிர மக்களை மூடத்தனத்திலிருந்து அதனால் ஏற்பட்ட இழிவிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்பவனுக்கு மக்கள் மனம் புண்படுவது என்பது மதிக்கத்தக்க தாகுமா? (விடுதலை, 30 ஜூலை 1956).

அரசு தடைவிதித்திருந்தாலும் இராமன் பட உருவத்தைக் கொளுத்தியது குற்றமல்ல என்று பெரியார் விடுதலையில் கட்டுரை எழுதும்படி இப்போராட்டம் ஒருவகையாக முடிவுக்கு வந்தது
(விடுதலை, 2 ஆகஸ்டு 1956).


காவிரி நதி நீர்ப் பிரச்சினை - திராவிடர் கழகம் கூறிய யோசனை! தீர்வுதான் என்ன?

காவிரி நதி நீர்ப் பிரச்சினை: பிரதமர் அடுத்து செய்ய வேண்டியது என்ன? கருநாடகாமீது 365அய் பயன்படுத்த வேண்டும் தொலைநோக்காக நதிகளை இணைக்க வேண்டும் தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை



பிரதமர் கூட்டிய நதி நீர் ஆணையக் கூட்டத்தில் ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில், மத்திய அரசு - பிரதமர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

காவிரி நதிநீர் ஆணையம் அதன் தலைவர் பிரதமர் (exofficio தகுதியில்) டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று (19.9.2012) புதுடில்லியில் கூடியது.

இக்கூட்டம்கூட, உச்சநீதிமன்றத் தில் போடப்பட்ட வழக்கில் உச்சநீதிமன் றம் சுருக்கென்று தைப்பதுபோல் கேள்வி கேட்ட பிறகே பிரதமர் அலுவலகத்தால் தேதி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, அதன்படி தான் கூட்டப்பட்டிருக்கிறது! 9 ஆண்டுகளுக்குப்பின் கூடிய கூட்டம்!

முந்தைய தேசீய முன்னணியின் பிரதமர் வாஜ்பேயி தலைமையில்தான் ஒரு கூட்டம் நடந்தது.

9 ஆண்டுகளுக்குப்பிறகே நேற்று அடுத்த கூட்டம் நடைபெற்றுள்ளது என்பதே, இப்பிரச்சினை எப்படி ஊறு காய் ஜாடியில் ஊறிக் கொண்டுள்ள பிரச்சினையாகி உள்ளது என்பது தெரியும். நமது தமிழ்நாட்டுத் தமிழர் களும், விவசாய சாகுபடி நேரத்தில் மட்டுமே விவசாயிகளுக்காக காவிரி யில் தண்ணீர் வராவிட்டாலும் தத்தம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் தலைவர்களும், கட்சிகளும் இருக் கின்றன!

காவிரி நடுவர் மன்றத்திற்குத் தலைவர் நியமிக்கப்படாத நிலை!

1. இல்லாவிட்டால், காவிரி நடுவர் மன்றத் தலைவர் ஜஸ்டீஸ் என்.பி. சிங் - உடல் நலம் காரணமாக - தனது பதவியை ராஜினாமா செய்து சில ஆண்டுகள் ஆகிவிட்டபோதும்கூட இதுவரை அத்தலைமைப் பொறுப்பு நிரப்பப்படாமல், காலியாகவே உள்ளது மிகவும் வருந்தத்தக்க நிலை அல்லவா? இதை தமிழ்நாடு முதல்வரும் சுட்டிக்காட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். நாமும் முன்பே சுட்டிக் காட்டி எழுதியுள்ளோம்.

2. இதைவிட இன்னொரு கொடுமை இந்த நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது 2007 பிப்ரவரி 5ஆம் தேதி. 5 ஆண்டுகளுக்கு மேல் ஓடி விட்ட நிலையில், இன்னமும் அது கெசட்டில் பதிவு செய்யப்பட்டு மத்திய அரசால் வெளியிடப்படவில்லை! (No Central Gazettee Notification). -  இது உடனடி யாகச் செய்யப்பட வேண்டும்.

ISRWD - நதி நீர்ப் பங்கீடு குறித்து மாநிலங்களிடையே உள்ள பிரச்சினை - தாவாக்களுக்குத் தீர்வு காணும் சட்டத்தின்படி இது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசும், முதல்வரும் இதனைப் பிரதமருக்கு சுட்டிக்காட்டியும் - மேற்காட்டிய இரண்டு பிரச்சினை களிலும் எந்த மேல் நடவடிக்கையும் இதுவரை பிரதமர் அலுவலகத்தால் எடுக்கப்படவில்லை என்பது வேதனைக் குரியது.

பாலையாகி வரும் தமிழ்நாடு

தமிழ்நாட்டுக் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கும் - நீர்வரத்து இன்மையால் சாகுபடி செய்ய வாய்ப்பில்லை- காவிரி நீர்ப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளின் நிலங்கள் தரிசுகளாகி பாலைகளாகி வரும் அவலம் தொடருகிறது!

இப்போது வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை இவ்வாண்டு திறக்கப்படாமல் தாமதம் ஆனபடியால் - போதிய நீரை - நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கருநாடக அரசு தராமல் மறுத்த காரணத்தால், இப் போது காவிரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடிக்கும் வாய்ப்பில்லாமல், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப்படும் அநீதி அரங்கேற்றப்பட்டுள்ளது!

காவிரி நடுவர் மன்றம் 1990 ஜூன் 2இல் அமைக்கப்பட்டது. (இன்று 22 ஆண்டுகள் ஆகி விட்டன!)

திராவிடர் கழகம் கூறிய யோசனை!

1991 ஜூன் 25ஆம் தேதி அந்த நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்புப்படி ஒவ்வொரு ஆண்டும் 205 டி.எம்.சி. தண்ணீரை - கருநாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டும் என்று கூறியது! மேட்டூருக்கு அந்த அளவு நீரை கருநாடக அரசு கொடுக்க வேண்டும் என்பது நீதிமன்ற ஆணை!

இதில் தமிழ்நாடு 6 டி.எம்.சி. காவிரி நீரை புதுச்சேரி அரசுக்கு அளிக்க வேண்டும் (காரைக்கால் பகுதியில் உள்ள நிலங்கள் பயன் பெறுவதற்காக)

இதனை ஒழுங்குபடுத்திக் கண் காணித்து நீர் வழங்கவே காவிரி நதிநீர் ஆணையம் (Cauvery River Authority) 1998இல் அமைக்கப்பட்டு அறி விக்கப்பட்டது. இடைக்கால நிவாரண ஆணையை ஒழுங்காகத் தரப்படு வதைக் கணித்து அளிப்பதற்காகவே இப்படி ஒரு நிரந்தர ஆணையம் உரு வாக்கப்பட்டது. (எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்து காவிரி நீர்ப் பிரச்சினை சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் இப்படி ஒரு யோசனையை எடுத்து வைத்து உருவாகச் செய்ததே திராவிடர் கழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது)

நடுவர் மன்ற தீர்ப்பு செயல்படுத்தப்படவில்லை

17 ஆண்டுகளுக்குப்பின், 500 கூட்டங்களுக்குப் பின் இந்த நடுவர் மன்றம் - (இது சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமரானபோது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு வழங்கிய அருட்கொடையாகும்) இறுதித் தீர்ப்பை 2007இல் தந்தது.இது 419 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு அளிக்கும் படி இறுதித் தீர்ப்பு வழங்கியது (தமிழ் நாட்டின் கோரிக்கை 562 டி.எம்.சி. தண்ணீராகும்) கருநாடகாவிற்கு 270 டி.எம்.சி., கேரளாவிற்கு 30 டி.எம்.சி., புதுச்சேரி மாநிலத்திற்கு 7 டி.எம்.சி. யாகும்!

இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் (அப்பீல்கள்) மேல் முறை யீடுகள், தமிழ்நாடு, கருநாடகா, கேரளா  அரசுகளால் தாக்கல் செய்யப் பட்டு நிலுவையில் உள்ளன!

டிசம்பர் 1996 அன்று, அதன் தலை வர் ஜஸ்டீஸ் N.P. சிங் 80 வயதாகி விட் டதால் உடல் நலம் காட்டி விலகினார்!

முதல் கட்டமாக, மேனாள் குடிய ரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் கூறிய ஆலோசனைப்படி தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்தை உடனடியாகத் துவங்கினால் இந்தப் பிரச்சினைகள் ஒரு நிரந்தரத் தீர்வைக் காண முடியும்.

அனைத்துக் கட்சிகளும் கருநாட கத்தைப் போல ஒரே குரலில் - இது பொதுப் பிரச்சினை என்கின்ற கண்ணோட்டத்தில் ஒன்றுபட்ட குரலைத் தர வேண்டும் -  ஓரணியில் நிற்கத் தயங்கினாலும்கூட என்பதே நமது வேண்டுகோள்!

வாடும் விவசாயியின் நிலங்களும், காயும் அவர்களின் வயிறுகளும்  நமது பார்வையில் தெரிய வேண்டும்.

வாக்கு வங்கி அரசியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு நாட்டு நலனைக் கருதியே யோசிக்க வேண்டும். செய்ய முன்வருமா நம் நாட்டு கட்சிகள்?

சென்னை
20.9.2012

கி.வீரமணி

தலைவர்
திராவிடர் கழகம்

******************************************************************************
பிரதமரின் தீர்ப்புரையை ஏற்க மறுக்கும் கருநாடக அரசு

இப்படிப்பட்ட நிலையில் நேற்றைய கூட்டத்தால் ஒரு பயனும் - விளையவில்லையே!

யானைப் பசிக்கு சோளப் பொரி போன்ற தீர்வை - பிரதமர் - காவிரி நதிநீர் ஆணையத் தலைவர் கூறியது தமிழ்நாட்டிற்கும் ஏமாற்றம்; கருநாடக அரசும் ஏற்க மறுத்துவிட்டது.

9000 கன அடி நீர் வினாடிக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 15 வரை திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் தீர்ப்புரை வழங்கினார்.

தமிழக முதல்வர் குறைந்தபட்சம் 15 லட்சம் ஏக்கர் சம்பா பயிரைக் காப்பாற்ற நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கேட்டும் கருநாடகம் ஒப்புக் கொள்ளவில்லை!

மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?

இந்நிலையில் இதற்குத் தீர்வுதான் என்ன?

1)    உச்சநீதிமன்றத்தில் வழக்கு என்றாலும் அதன் தீர்ப்பை முறையாக அமல்படுத்தினால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்கும் சாத்தியம் உண்டு. ஆனால் யதார்த்தத்தில் இதற்கென்ன வழி?

2) பிரதமர் - மத்திய அரசு - கருநாடக அரசைக் கண்டிப்புடன் வழங்க ஆணையிடலாம் - அரசியல் சட்டத்தின் 365 விதி அதற்குரிய அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது! செய்யும் நிலையில் இன்றுள்ள மத்திய அரசு உள்ளதா என்பது அடுத்த கேள்வி!

3)    நதிகளை தேசியமயமாக்கி அறிவிக்கும் அவசர சட்ட ஆணை (Ordinance) போட்டு நாட்டிலுள்ள எல்லா நதிகளும் மத்திய அரசுக்கு உரிமையானது என்றும் உடனடியாக அறிவிக்க முன்வர வேண்டும்.
நதிகளை இணைக்க வேண்டும்

4) தொலைநோக்காக, எல்லா நதிகளையும் இணைக்கும் திட்டத்தை - உலக வங்கி ; சர்வதேச நிதியம்  (IMF) போன்றவற்றில் நிதி உதவி, கடன் பெற்று திட்டத்தை பெரும் திட்டமாகத் தொடங்க வேண்டும்.

குறிப்பு: தலைமைக் கழகத்தின் சார்பில் இவ்வறிக்கை துண்டறிக்கையாக அச்சிடப்பட்டுள்ளது. காரைக்கால் முதல் மேட்டூர் வரையிலான காவிரி டெல்டா பகுதிகளில் கழகத் தோழர்களின் பிரச்சாரம் மற்றும் துண்டறிக்கைகள் விநியோகத்திற்கான ஏற்பாடுபற்றி தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளிவரும்.

                              *********************************

20.9.12

விநாயகனாகிய பிள்ளையார் கடவுள் பிறப்பின் கதையை எழுத வெட்கமா?

வெட்கமா?

இந்து மத வியாபாரிகள் இப்பொழுதெல்லாம் விவேகத்துடன், வீராப்புடன் மார் தட்டிக் கொள்ளும் வகையில் தங்களின் கடவுள்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.

வளைந்து, நெளிந்து, குனிந்து, குமைந்துதான் நடக்கும்படி, சொல்லும்படி, எழுதும்படி நேர்ந்துவிட் டது. ஒருவகையில் நம் இயக்கத்துக்கு, கொள் கைக்குக் கிடைத்த வெற்றி தான் இது!


எடுத்துக்காட்டாக விநாயகனாகிய பிள்ளையார் எனும் கடவுள் ஒன்று போதாதா?

கடவுள் என்றால் பிறப்பு - இறப்பு அற்றவர் என்று சொல்லிக் கொண்டு  ஆவணி மாதம் பூர்வபட்ச சதுர்த்தி, விசாக நட்சத் திரம் கூடிய சோம வாரத் தில், சிங்க லக்னத்தில் விநாயகர் பிறந்தார் என்று, கடவுளுக்கே ஜாதகம் எழுதி வைத்துள்ள தெருப்புழுதியை என்னவென்று சொல்லுவது!

இந்த முதல் பல்டியை! விட்டுத் தள்ளுவோம்!

மனிதனாக இருந்தாலும், மாடாக இருந்தாலும், கடவுளாக இருந்தாலும் அவர்களின் பிறப்பு என்பது ஒரே மாதிரியாகத்தானே இருக்கும். வெவ்வேறு வகையாக, விதவிதமாக முரண்பாடு இருக்க முடியாதல்லவா!

ஆனால் இந்த வீணாகப் போன விநாயகன் பிறப்புக்கு  எத்தனை எத்தனை ஆபாசக் கதைகள் - மூலங்கள்! நதி மூலம், ரிஷி மூலங்களைப் பார்க்கக் கூடாது என்பதில் உள்ள இரகசியம் இதுதானோ!

காட்டுக்குப் போனான் சிவன் - தன் மனைவியோடு. அங்கு ஆண் யானையும், பெண் யானையும் புணர்ந்ததைக் கண்டு சிவன் ஆண் யானையாகவும், பார்வதி பெண் யானையாகவும்  உருக் கொண்டு உடலுறவில் ஈடுபட்டு அதன் மூலம் விநாயகர் பிறந்தார் என்பதெல்லாம் மனிதன் காட்டு விலங்காண்டியாய் திரிந்த காலத்தில்  கற்பிக்கப்பட்டது என்பது, ஒரு கடுகளவு அறிவைப் பயன்படுத்தும் எவருக்கும் விளங்குமே!


(ஆனால் பக்தர்களுக்கு விளங்காது என்றால் - அதன் பொருளைப் புரிந்து கொள்க!)

பார்வதி குளிக்கப் போகும்போது தன் உடல் அழுக்கைத் திரட்டி பிள்ளை யாரைப் பிடித்து வைத்தார் என்பதுதானே பிள்ளையார் பிறப்பின் கதை.

ஒரு வார இதழ் விநாயக மலரை வெளியிட்டுள்ளது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது தெரியுமா? நீராடச் சென்றபோது காவலுக்கு ஒருபிள்ளையை உருவாக்கிக் காவலாக்கினாள் என்று தந்திரமாக எழுதுவதைக் கவனிக்கவும். உண்மையைச் சொல்ல ஒருக்கால் வெட் கப்பட்டும் இருக்கலாம்.

அழுக்கை உருட்டி உருவாக்கினாள் என்று தினமலரால்எழுத முடியவில்லை. இது பித்தலாட்டம் மட்டுமல்ல - நம்மை நினைத்து அவர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள் என்பதுதானே இதன் உட்பொருள்?


             ---------- மயிலாடன் அவர்கள் 20-9-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!



தந்தை பெரியார் அவர்கள் அறிவுரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:-

நமது நாட்டின் செல்வத்துக்கோ, படிப்புகோ மற்றபடி வளப்பத்துக்கோ குறைவேதுமில்லை. வேண்டிய அளவுக்கு மேல் உள்ளது. ஆனால், அது எங்கே போய் விட்டது என்றால் எல்லோ ருக்கும் கிடைக்கும்படி சரியானபடி பங்கிடப் படவே இல்லை.

இப்போதுதான் பூமி ஒருவர் இடம் 500-1,000 வேலி என்று குவிந்து இருந்ததை ஆளுக்கு 30 ஏக்கருக்கு மேல் இருக்கக் கூடாது என்று பிரித்தார்கள். அதுபோலவே, 10 கோடி, 20 கோடி, 50 கோடி என்று ஒரு சிலரிடம் போய் குவிந்துள்ள பணத் தையும் உச்சவரம்பு கட்டி பாக்கியை அரசாங்கம் எடுத்துக் கொண்டு எல்லா மக்களுக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்.

எல்லா வளமும் இருந்தும் அது எல்லோருக்கும் கிட்டவில்லையென்றால், எல்லா வளமும் இருந்தும் அறிவு வளம் இல்லாத குறை ஒன்றுதான் காரணமாக இருக்கின்றது. மனிதன் மற்ற மிருகங்களிடம் இல்லாத பிரத்தியோகமான அறிவான பகுத்தறிவினைப் பெற்றுள்ளான்.

அந்த பகுத்தறிவினை மனிதன் மற்ற காரியங்களுக்கு எல்லாம் செலவிடுகின்றான். நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வாழ்வு வாழப் பயன்படுத்துகின்றான். ஆனால், நாம் ஏன் கீழ்ஜாதி? அவன் என்ன மேல் ஜாதி? நாம் ஏன் ஏழை? அவன் ஏன் பணக்காரன்? என்று சிந்தித்துப் பார்க்காதவனாக ஆகிவிட் டான். இந்தத் துறையில் சுத்த முட்டாளாக ஆகிவிட்டான்.

அவன் என்ன பார்ப்பான்? அவன் ரத்தம் என்ன ரத்தம்? நமது ரத்தம் என்ன கீழா? அவன் மட்டும் ஏன் உயர்ந்தவன்? நாம் மட்டும் ஏன் இழிஜாதி? என்று சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. இது போலத்தான் அவன் ஏன் பணக்காரன்? நாம் ஏன் ஏழை? என்று சிந்திப்பதே இல்லை. இவைகளுக்கு எல்லாம் காரணம் நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காததுதான்.

1925-லேயே சமதர்மத்தைப் பற்றி பேசியவன் நான் என்று நண்பர் பழனி அவர்கள் கூறினார்கள். 1925-இல் காங்கிரசை விட்டு விலகிய பிறகு கடவுளை ஒழிக்க வேண்டும். பணக்காரனை ஒழிக்க வேண்டும். சமதர்மம் மலர வேண்டும் என்று பிரச்சாரம் செய்த நான் சமதர்மம் எப்படி ரஷ்யாவில் நடைபெறுகின்றது என்பதை நேரில் போய் பார்த்துவிட்டு வரலாமே என்று அங்கு போய் பார்த்துவிட்டு வந்தேன். சமதர்மம் எப்படி உன்னத நிலையில் அங்கு நடைபெறுகின்றது என்பதை கண்டு வந்த நான் முன்னிலும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டேன்.

சமதர்மம் வெற்றி பெற வேண்டுமானால், மக்கள் மனத்தில் குடிகொண்டு உள்ள கடவுள், மதம், சாஸ்திரம் பற்றிய முட்டாள்தனமான எண்ணங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

             ---------------10.7.1965 அன்று முதுகுளத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - "விடுதலை" 7.8.1965