Search This Blog

11.9.12

பிள்ளையார் அரசியல்!பார்ப்பன ஆதிபத்தியத்தை நிலைநாட்டும் சூழ்ச்சியே!!

பிள்ளையார் அரசியல்!
உலகத்தில் எத்தனை எத்தனையோ மதங்கள் உண்டு; அவற்றுக்குக் கடவுள்களும் உண்டு. ஆனால் இந்து மதக் கடவுள்கள் போல ஆபாசமான பிறப்பும், கேவலமான நடத்தையும் உடைய கடவுள்களைக் கேள்விப்பட்டு இருக்கவே முடியாது.

அதிலும் குறிப்பாக பிள்ளையார் எனப்படும் கடவுள் சிரிப்பாய் சிரிப்பது போல எந்தக் கடவுளையும் கணக்கிட முடியாது.

பார்வதியின் அழுக்கிலிருந்து ஜனித்தவர் இந்தப் பிள்ளையார் என்ற ஒரு கதை போதாதா? நாகரிகம் உள்ள எந்த ஒரு மனிதனும் இந்த அருவருப்பை எப்படி சீரணித்துக் கொள்வான்?

அதனால்தானோ என்னவோ இந்தப் பிள்ளையாரை பக்தியுள்ள மக்கள்கூட படு கேவலமாக நடத்துகிறார்கள். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற பழமொழியும் நிலைத்து விட்டது.


தென் மாவட்டங்களில் கரிசல்நிலப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்யாவிடில், வெட்ட வெளியில் இருக்கும் விநாயகர் உருவத்தின் மீது மிளகாய் வற்றலை அரைத்துப் பூசி விடுவது வழக்கம். சில இடங்களில் சாணியைக் கொழகொழவென்று கரைத்து சிலையின் மீது ஊற்றிவிடுவர். மிளகாய் வற்றல் பூச்சையோ, சாணிக்கரைசலையோ போக்குவ தற்காகப் பிள்ளையார் மழையை வரவழைப் பார் என்ற நம்பிக்கையில் இத்தகைய செயல்களை கிராம மக்கள் மேற்கொள்கின்றனர்.

மழை பெய்யும் வரை இப்பூச்சுகள் சிலையின்மீது அப்படியே படிந்திருக்கும். மழை வேண்டி கொல்லிமலை ஆதிவாசிகள் குப்பையில் குழி எடுத்து பிள்ளையாரை சாணத்தில் புதைத்து வைப்பார்கள். மழை வந்த பிறகே சாணத்தில் புதைத்து வைத்த பிள்ளையாரை வெளியில் எடுப்பார்கள். சில கிராமங்களில் பிள்ளையார் சிலையை கிணற்றுக்குள் போட்டு விடுவதுண்டு. மழை வந்தவுடன் மீண்டும் அதனை வெளியே எடுத்து உரிய இடத்தில் வைப்பர்.


                  -------------(நூல் : பிள்ளையார் அரசியல் மத அடிப்படை வாதம் பக்கம் 51 - ஆ. சிவசுப்பிரமணியன்)

மழை வேண்டி பொது அறிவு அற்ற மக்கள் மூடநம்பிக்கையின் அடிப்படையில் ஒரு கடவுளை இந்தப் பாடுபடுத்துகிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

ஒரு கற்பனைப் பொம்மையைச் சீரழிப்பதன் மூலம் மழை பெய்யும் என்று நம்புவது கடைந்தெடுத்த முட்டாள்தனமே!

இந்தப் பிள்ளையார் இப்போது அரசியலுக்கும் பயன்படுத்தப்படும் கருவியாக ஆகிவிட்டார். வைணவர்களுக்கு ராமன் என்றால் ஸ்மார்த்தர்களுக்கு விநாயகர் என்று உத்தி பிரித்துவிட்டார்கள்.

                                               
இந்தப் பிள்ளையார் அரசியல் கருவியாகத் திணிக்கப்பட்டது 1893 ஆம் ஆண்டு - மகாராட்டிர மாநிலத்தில் முசுலிம்களுக்கு எதிராக இதனைப் பயன்படுத்தியவர் பாலகங்காதர திலகர் என்ற பார்ப்பனரே!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்று கூறி பிள்ளையார் பொம்மைகளை ஊர்வலத்தில் எடுத்துச் செல்வதும், அதற்காகத் தயாரிக்கப்பட்ட பஜனைப் பாடல்களில் இசுலாமியர்களைச் சீண்டுவதுமான ஒரு வன்முறை ஏற்பாட்டைக் கொண்டு வந்தவர் இந்தத் திலகர்.

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் இது இறக்குமதி செய்யப்பட்டது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் திருவல்லிக்கேணி பகுதிகளில் கலவரத்தை உண்டாக்கும் வேலையில் பலமுறை இந்துத்துவா வெறியர்கள் ஈடுபட்டதுண்டு.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றால், அதனை மக்கள் மத்தியில் சாமர்த்தியமாகப் பரப்பி இந்துத்துவா எனும் பார்ப்பனீயப் பண்பாட்டுப் படையெடுப்பைத் திணிப்பது அயோக்கியத்தனமே!

இந்தக் காரணங்களால்தான் தந்தை பெரியார் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்தை நடத்தினார், இராமன் படத்தையும் எரித்தார் என்ற பின்னணியை பக்தர்களாக இருக்கும் தமிழர்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்து மதக் கடவுள்கள் பூணூல் தரித்து இருப்பதையும் கவனமாகத் தெரிந்து கொண்டால் இங்கு மதம், கடவுள் பக்தி, கோயில் விழா என்பதெல்லாம் பார்ப்பன ஆதிபத்தியத்தை நிலை நாட்டும் சூழ்ச்சியே என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே!

 -----------------------"விடுதலை” தலையங்கம் 11-9-2012

3 comments:

தமிழ் ஓவியா said...

இயக்கத் தோழரின் பாராட்டத்தக்க பணி!

அரக்கோணத்தை மய்யமாகக் கொண்டு; வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள் ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒளிபரப்பாகின்ற உள்ளூர் கேபிள் அலைவரிசையான MPTV (Manpower Media network)-யில், அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர், தோழர் சு. லோகநாதன், தந்தை பெரியார் 134ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகளை 30(Sec) விளம்பரப்பட மாக (பெரியார் வலைக்காட்சியின் உதவியுடன்) தயாரித்து, 07.09.2012 முதல் ஒளிபரப்பி வருகிறார். அது மட்டுமல்லாமல், தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17இல் பெரியார் திரைப் படத்தையும் ஒளிபரப்ப முயற்சி செய்து வருகிறார். காலத்திற்கேற்ற இந்த பிரச்சார உத்தியை மற்ற மாவட்ட இயக்கத் தோழர்களும் பின்பற்றலாமே! 11-9-2012

தமிழ் ஓவியா said...

கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் வன்முறைப் போக்கு! அழைத்துப் பேசி முதலமைச்சர் தீர்வு காண வேண்டும் தமிழர் தலைவரின் அறிக்கை


கூடங்குளம் அணுமின் நிலையம் - அது தொடர்பான வன்முறை - துப்பாக்கிச் சூடு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டம் மக்களின் வெறும் அச்சவுணர்வுக்காகவே என்றால், இதுவரை வல்லுநர்கள், உயர்நீதிமன்றங்கள், ஆட்சியாளர்கள் தந்த அறிவியல் பூர்வ விளக்கங்கள் மூலமே அவை தெளிவாகியிருக்க வேண்டும்.

அணு மின்சாரம் - இன்றியமையாததே!

இன்றைய மின் தட்டுப்பாட்டின் உச்சத்தில், அணுமின் சக்தி என்பது தவிர்க்க இயலாத தேவையாகும். நீர் மின்சாரம், அனல் மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய வெப்ப மின்சாரம் என்பன இப்போதுள்ள சூழ் நிலையில் அவசரத் தேவைக்கேற்பவும் உதவக் கூடிய நிலையில் இல்லை. - எனவே அணுமின் சக்தி இன்றியமையாதது.

இதையொட்டி அணுமின் உற்பத்தி மக்களுக்குப் போதிய பாதுகாப்புடன் இயங்கும் என்ற உறுதியை, ஆட்சியாளர் மட்டுமல்ல; அப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகளும் உறுதியாகத் தெரிவித்த பிறகும், எதிர்ப்புத் தொடர்வது தேவையற்றது!

மீனவ சகோதரர்களின் அச்சத்தைப் போக்க வேண்டாமா?

மீனவ சகோதரர்களின் அச்சத்தை அகற்றி, அவர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என்ற உறுதியை மத்திய, மாநில அரசுகள் மீண்டும் வழங்கி போராட்டங் களை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலமும் முயற்சிக்க வேண்டும். 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பல்லாயிரவர் திரண்டுள்ளனர். காவல்துறை தொலைநோக்கோடு செயல்பட்டு இருக்க வேண்டாமா?

முதல் அமைச்சர் என்ன செய்ய வேண்டும்?

முதல் அமைச்சர் இப்போது விட்ட அறிக்கையை, ஒரு நாள் முன்பாகவோ, அவர்கள் விரும்பியபடி தொலைக் காட்சி மூலமாகவோ, காணொலி மூலமோகூட, விளக்கிக் கூறி அவர்களின் போராட்டத்தைக் கைவிட வழி வகை கண்டிருக்க வேண்டும். முதல் அமைச்சர் உறுதி கொடுக்க வேண்டும் என்று போராட்டக் குழு தலைவர் கூறியுள்ளார். அப்படி இருக்கும் போது இந்த நிலையை முதல் அமைச்சர் பயன்படுத்திக் கொண்டு இருக்க வேண்டாமா? நாட்டு நலன்தான் முக்கியம். இப்பொழுதுகூட அந்த முயற்சியை முதல்வர் தொடரலாமே!

காவல்துறையின் நடவடிக்கை கலைந்து செல்ல அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் (Tactful) மிகவும் மக்களை ஈர்த்து உணர வைக்க இயலாதவர்களாகி, திடீரென்று கண்ணீர்ப் புகை, தடியடி என்பது போன்றவை தேவையற்ற - எதிர் விளைவு களையும் ஏற்படுத்தி விட்டதே! ஓரிடப் போராட்டம் பல விடங்களில் பரவி, ஒரு மீனவச் சகோதரர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகியுள்ளது வேதனைக்குரியது. நமது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். துப்பாக்கிச் சூட்டை சாக்காக வைத்து எரியும் தீயை அணைக்காமல், அதில் நெய்யூற்றி விசிறிவிடும் அரசியல் சித்து விளையாட்டு ஒரு பக்கம்!

கடிதோச்சி மெல்ல எறிய வேண்டிய முறை இல்லா மலும் போய் விட்டது. ஒரு பக்கம் மின்வெட்டு 12 மணி நேரம் என்று மிரட்டிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் இந்த வேதனை நீடிக்கலாமா? சிலரது விளம்பர வெளிச்சம் பிரச்சினைக்குத் தீர்வாகி விடுமா?

வேண்டாம் வன்முறை!

ஜனநாயகத்தில் போராட உரிமை உண்டு. வன் முறைக்கு உரிமம் கொடுத்தால் பிறகு தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற தகாத நிலையே உருவாகும். எல்லா தரப்பு மக்களும் பொது நலனைக் கருதி முடிவுகளை எடுப்பது அவசியம். அமைதி திரும்ப வேண்டும்.


சென்னை
11-9-2012

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

11-9-2012

தமிழ் ஓவியா said...


இதேநாளில் தான் (2001) அமெரிக்காவில் 110 மாடிகளைக் கொண்ட உலக வர்த்தகக் கட்டடம், பென்டகன் (ஆயுதக்கூடம்) உள்ளிட்ட நான்கு இடங்கள் பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு ஆளாகி 10 ஆயிரம் பொதுமக்கள் கண்மூடிக்கண் திறப்பதற்குள் மரணக் குழியில் விழுந்த நாள்!