Search This Blog

10.10.09

பெரியார்- சித்திர புத்திரன் என்ற புனைபெயரில் எழுதிய உரையாடல்


ஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை!


குடியானவன் : என்ன சார், தங்களிடம் தனித்துச் சற்று நேரம் பேச வேண்டும் என்கின்ற எண்ணம். ஏனென்றால், நாம் இருவரும் வெகு நாள் சினேகமல்லவா? ஆதலால் சில விஷயங்களை தெரிவிக்க வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு உண்டு.

ஆபீசர் : ஆ!ஆ! பேஷாப் பேசலாம். இப்பொழுதே வாருங்கள். என்ன விஷேசம்?

குடியானவன் :

விசேஷம் ஒன்றும் இல்லை; கோபித்துக் கொள்ளக் கூடாது. இந்த விஷயத்தில் மனம் பொறுக்கவில்லை. அதனால் தங்களிடம் சொல்லித் தீரவேண்டும் என்கின்ற கவலை கொண்டு விட்டேன்.

ஆபீசர் :

என்ன இவ்வளவு யோசிக்கிறீர்கள். கோபம் என்ன வந்தது; தாராளமாய்ச் சொல்லுங்கள். என்ன விசேஷம்?

குடியானவன் :

கொஞ்சகாலமாகத் தங்களுடைய சம்சாரத்தின் நடத்தை சரியாய் இல்லை. எந்நேரம் பார்த்தாலும் நம்ம வீட்டுத் தையல்காரனிடமே சகவாசம் வைத்துக் கொண்டிருக்கிறதாகத் தெரிகிறது. சில சமயங்களில் அந்தத் தையல்காரன் அந்த அம்மாளை அடிக்கிறதாகவும் தெரிய வருகிறது. இதைப்பற்றி பலவிதமாகவும் ஊரிலும் பேசிக் கொள்கிறார்கள். இதைத் தங்களிடம் தெரிவித்து விட வேண்டும் என்று துணிந்து விட்டேன். மன்னிக்க வேண்டும்.

ஆபீசர் :

இதில் மன்னிக்க வேண்டிய சங்கதி ஒன்றுமில்லையே! தாங்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். ஏனென்றால், அந்த கழுதையை என் சம்சாரம் அல்ல என்று விலக்கிப் பல வருஷமாகி விட்டது. எப்பொழுது ஒரு கான்ஸ்டபிளை இழுத்துக் கொண்டு போய் இரண்டு மாதம் வரையில் காணாமல் இருந்தாளோ அன்று முதலே "இனி அவள் என்னுடைய சம்சாரமல்ல" என்பதாகத் தீர்மானித்து விட்டேனே, இது தங்களுக்குத் தெரியாது?

குடியானவன் :

இந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரிய வருகின்றது. ஆனால் அந்தம்மாள் தங்கள் வீட்டில் தங்களுடன் தானே இருக்கிறார்கள்?

ஆபீசர் :

அதனாலென்ன? முன்பு அவளை அடித்துக் கொண்டு போன கான்ஸ்டேபிள் அவளிடம் இருந்த நகையைப் பிடுங்கி கொண்டு விரட்டி விட்டு விட்டான். அவள் இந்த ஊர்ச்சத்திரத்தில் வந்து திண்டாடுவதாகக் கேள்விப்பட்டேன். நேரில் போய்ப் பார்த்தேன். அவள் அழுதாள். அதற்கு நான் "நீ என்றைக்கு ஊரை விட்டு ஓடினாயோ அன்று முதலே உன்னை என் சம்சாரமல்ல என்று தீர்மானித்து விட்டேன். இனிமேல் எனக்கும், உனக்கும் புருஷன், பெண் ஜாதி என்கிற பாத்தியமும் இல்லை" என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். பிறகு அவள் வருத்தப்பட்டதைப் பார்த்து மறுபடியும் உனக்கு என்னிடம் வரப் பிரியமிருந்தால் உன்னை ஒரு தாசி மாதிரியாகக் கருதி உன்னிடம் நேசம் வைத்துக் கொள்கிறேன். இஷ்டமிருந்தால் என்னோடு வா என்று சொன்னேன். அவளும் வந்தாள். நானும் அவளை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டேன். இப்போது அவளை ஒரு தாசி மாதிரியாகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு தாசி வீட்டுக்கு நான் போவதற்குப் பதிலாக என் வீட்டிற்கு வரவழைத்துக் கொள்கிறேன். அடிக்கடி அவள் போய் விட்டு வருவதற்குப் பதிலாக என் வீட்டிலேயே இருக்கும்படி சொல்லி விட்டேன். குழந்தைகள் விஷயத்திலும் ஓடுவதற்கு முன் பிறந்த குழந்தைகள் என் சொந்தக் குழந்தைகள் மாதிரிதான் வைத்திருக்கிறேன். திரும்பி வந்ததற்குப் பின் பிறந்த குழந்தைகளை தாசிக்குப் பிறந்த குழந்தை மாதிரி தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தவிர, என் குழந்தைகளையும் அவளே பார்த்துக் கொள்ளும்படியாயக் கேட்டுக் கொண்டேன். அவளும் தன் குழந்தைகள் மாதிரியே பார்த்துக் கொள்ளுகிறாள். அந்த விதத்தில் அவள் உத்தமி என்றே சொல்லுவேன்.

குடியானவன் :

அப்படியானால் அடிக்கடி டெய்லர் (தையல்காரன்) வீட்டில் இருக்க காண்கிறேனே அதன் காரணம் என்ன?

ஆபீசர் :

என்னமோ காரணம் இருக்கலாம். அதைப் பற்றி நமக்கு ஏன் கவலை? நாமே அவளை ஒரு தாசிப் போல் நினைத்து, தாசியை வைத்துக் கொண்டிருக்கிறது போலவே கருதிக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க நமக்கு அனாவசியமான கவலை எதற்கு? அவள் எங்கு போனால் நமக்கென்ன? என்று நான் அதில் என் நேரத்தை சிறிதும் வீணாக்குவதேயில்லை. ஆனால் அந்த டெய்லரிடம் அடிப்படுவதாகச் சொல்லுகின்றீர்களே அதைக் கேட்க நமக்குச் சற்று பரிதாபமாகத்தான் இருக்கின்றது. என்ன செய்யலாம்? பாவம் அந்த டெய்லர் ஒரு சமயம் இவளைத் தன் சம்சாரமாக நினைத்துக் கொண்டிருக்கலாம். அவளும் அவனைத் தன் புருஷனாக நினைத்துக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். அப்படியிருந்தால் அடிக்க வேண்டியதும், அடிபட வேண்டியதும் நியாயம் தானே. நானும் அவளை என் சம்சாரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அடித்துக் கொண்டு தான் இருந்தேன். அதற்கு நாம் என்ன செய்யலாம்?

குடியானவன் :

சரி, சார்! இப்போழுது தான் தங்களுடைய கொள்கை (பிரின்சிபில்) எனக்கு விளங்குகிறது. அனாவசியமாய் தங்கள் நேரத்தைக் கெடுத்ததற்காக மன்னிக்க வேண்டும். நான் போய் வருகிறேன்.

ஆபீசர் :

சரி போய் விட்டு வாருங்கள். இதைத் தவிர வேறு விஷயமில்லையே?

குடியானவன் :

இல்லை.


-------29-07-1928 - "குடிஅரசு" இதழில் தந்தை பெரியார் அவர்கள் 'சித்திர புத்திரன்' என்ற புனைபெயரில் எழுதியது.

0 comments: