Search This Blog

31.1.13

காந்தியார் படுகொலையும் பெரியார் எச்சரிக்கையும்!


காந்தியார் படுகொலை செய்யப்பட்டது குறித்து, தந்தை பெரியார் தம் ஆறாத் துயரத்தை வெளிப் படுத்தினார். இவ்வளவுக்கும் காந்தியாருடன் பல பிரச்சினைகளில் மாறுபட்ட கருத்தினைக் கொண்டவர் தந்தை பெரியார் என்றாலும், அவர் காந்தியார் வன்முறையால் படுகொலை செய்யப் பட்டதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் நாடெங்கும் இரங்கற் கூட்டங்களை (29.2.1948) நடத்தச் சொன்னார்.  அதில் எத்தகைய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் அறிக்கை வாயிலாக வெளியிட்டார்.

திராவிடர் கழகத்தார் சார்பாகக் கூட்டப் பட்டதும் திராவிடர் கழகத்தார் பெரிதும் கூடி உள்ளதுமான இக்கூட்டமானது, உலக மக்களால் போற்றப்பட்ட வரும், இந்திய தேசிய காங்கிரஸ் நடப்புக்கு மூல காரணமாயிருந்து, அதை நடத்தி வந்த முக்கிய தலைவரும், சத்தியம், அன்பு, ஒற்றுமை முதலிய உயர் குணங்களை சதா சர்வ காலம் போதித்து வந்த உத்தமரும் ஆன ஒப்பற்ற பெரியார் காந்தியார் அவர்கள் இயற்கைக்கு மாறான தன்மையில் மரண மடைந்தது குறித்து தனது ஆழ்ந்த துக்கத்தையும், அனுதாபத்தையும் தெரி வித்துக் கொள்கிறது.

இந்த மரணத்துக்குக் காரணமாயிருந்த கொலை பாதகனையும், அவனுக்குப் பின்னால் ஆதரவாகவும், நடத்துபவர்களாகவும் இருந்த ஸ்தாபனங்களையும், மக்களையும் வெறுப்புக் காட்டி கண்டிக்கிறது.

இந்தப் பரிதாபகரமான நிகழ்ச்சியின் விளைவைப் படிப்பினையாகக் கொண்டு இந்நாட்டு மக்கள் யாவரும் ஜாதி, மத, இன வேறுபாடு காரணமாய் வேற்றுமை உணர்ச்சி யில்லாமல் ஒன்றுபட்டு வாழ்வாராக!

அன்பும், அறிவும், சத்தியமும் என்றும், எங்கும் நிகழ்வதாகுக!

இந்தத் தீர்மானத்தை மத்திய நிலையத்துக் கும், காந்தியார் மகன் தோழர் தேவதாஸ் காந்திக்கும், ஜவகர்லால் நேருவுக்கும் அனுப்ப வேண்டியது. செய்தியை எல்லாப் பத்திரிகை களுக்கும் அனுப்பவும். - ஈ.வெ.ராமசாமி 
                                  --------------------------------(விடுதலை 19.2.1948)

மேற்கண்ட தந்தை பெரியார் அவர்களின் அறிக்கையில் உள்ளடக்கமாகக் கொண்ட கருத்துக்கள் கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கதாகும்.

காந்தியாரின் இயற்கைக்கு மாறான மரணம் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டு, இந்த மரணத்துக்குக் காரணமாக  இருந்தவர்களையும், ஸ்தாபனங்களையும் வெறுப்புக் காட்டிக் கண்டிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.

ஜாதி, மத வேறுபாடு காரணமாய் ஏற்படும் உணர்ச்சிகளையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

ஆம், பார்ப்பன மதமான இந்து மதம், அதனைச் சார்ந்த பார்ப்பனர் ஒருவரால் திட்டமிட்டு காந்தியார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த இந்து உணர்வு, பார்ப்பன உணர்வு காந்தியாரின் படுகொலையோடு மரணம் அடைந்து விட்டதா என்றால் அதுதான் இல்லை. இன்றுவரை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

அந்த இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எசும், இந்து முன்னணியும், பஜ்ரங்தள்ளும், விசுவ ஹிந்து பரிஷத்தும் மற்றும் பல்வேறு பெயர்களில் இன்றுவரை நடமாடிக் கொண்டுதானிருக்கின்றன.

நாதுராம் கோட்சேக்களும், இந்த அமைப்பு களைச் சார்ந்தோரும் அதே நஞ்சைக் கக்கிக் கொண்டே இருக்கின்றனர்.

மை நாதுராம் கோட்சே போல்தே எனும் பெயரில் பிரவின் டால்மி என்பவரால் எழுதப்பட்ட நாடகம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்தபோது மும்பை, டில்லி போன்ற நகரங்களில் அரங்கேற்றப்பட்டது.
நான்தான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்! என்பது பொருள். அதில் கோட்சே கடவுளாகவும், காந்தியார் அரக்கனாகவும் சித்திரிக்கப்பட்டு இருந்தார்கள்.
காந்தியார் படுகொலை செய்யப்பட்டு 60 ஆண்டு களுக்குப் பிறகும் இந்துத்துவா வெறியர் களான பார்ப்பனர்களின் மனப்பான்மையில்  மாற்ற மில்லை என்பது அடிக்கோடிட்டுக் கவனிக்கத் தக்கதாகும்.

இத்தகைய அமைப்புகள், ஆட்கள்மீது வெறுப்புக் காட்டிக் கண்டிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் 1948இல் சொன்னதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.
             -----------------------------"விடுதலை” தலையங்கம் 31-1-2013

30.1.13

காந்தியார் படுகொலை நாளில்...

 
மகாத்மா என்று மக்களால் போற்றப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்து வெறியன் நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரால் கொல்லப்பட்ட  நாள் இந்நாள் (1948 ஜனவரி 30).

மதவெறிதான் காந்தியாரின் உயிர் குடிக்கப்  பட்டதற்குக் காரணம் என்பதை நினைவூட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த நாட்டுக்குக் காந்தி நாடு என்றும், காந்தி மதம் என்றும் பெயர் சூட்டவேண்டும் என்றார் தந்தை பெரியார்.

நான் காண விரும்புவது ராமராஜ்யம் என்று சொன்னபோதும், எனக்கு வருணாசிரம தருமத் தில் நம்பிக்கை உண்டு என்று கூறிய போதும் காந்தியாரை சாதாரண ஆத்மா அல்ல; மகாத்மா என்று கூறித் தோளில் தூக்கி வைத்து ஆடிய ஆரியப் பார்ப்பனக் கும்பல், நான் கூறும் ராமன் வேறு, இராமாயண ராமன் வேறு என்று காந்தியார் சொல்ல ஆரம்பித்த போதும், அரசியலில் மதத்தைக் கலக்க அனுமதிக்கக் கூடாது என்று வெளிப் படையாகக் காந்தியார் பேச ஆரம்பித்த பிறகும் - இனி இவரை விட்டு வைத்தால் - இவரது செல்வாக்கால் நமது ஆதிக்கத்திற்கு ஆபத்துதான் என்று உறுதியாக நம்பிய பார்ப்பனக் கூட்டம் காந்தியாரைத் திட்டமிட்டுக் கொலை செய்தது என்பதில் அய்யமில்லை என்று தந்தை பெரியார் அவர்கள் தெளிவாக எடுத்துக் கூறினார்!

நாடு சுதந்திரம் அடைந்த நிலையில், பாகிஸ்தான் பிரிவை மய்யப்படுத்தி மதக்கலவரம் தூண்டப்பட்ட போது இஸ்லாமியர் பக்கம் நின்றார் காந்தியார் என்ற எண்ணமும் இந்தக் கூட்டத்திற்கு உண்டு.

சென்னை மாகாணத்தில் ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது; பார்ப்பனர் அல்லாதாருக்கும் கல்வி உத்தி யோகத்தில் வாய்ப்பு அளித்தார், பார்ப்பனர்கள் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக காந்தி  யாரிடம் கோரிக்கை வைத்தார்கள்.

ஓமந்தூராரோ காந்தியாரைச் சந்தித்துத் தக்க புள்ளி விவரங்கள்மூலம் பார்ப்பனர்கள் ஆதிக் கத்தை நிரூபித்தார், இதனை தொடர்ந்து காந்தி  யாரைச் சந்தித்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களிடம் காந்தியார் சொன்னார்: 

தருமங்கள்மீது நம்பிக்கை வைத்துள்ள நீங்கள் வேதங்களைப் படிக்க வேண்டியதுதானே - நீங்கள் ஏன் டாக்டர் ஆகி பிணத்தை அறுக்கும் தொழிலைச் செய்ய வேண்டும்? என்று கேள்வியைப் பதிலாகச் சொன்னார்.
காந்தியார்மீது பார்ப்பனர்களுக்கு இருந்த வெறுப்பும், எதிர்ப்பும் மேலும் அதிகரித்தது என்றே சொல்லவேண்டும்.

காந்தியாரைக் கொல்லுவதற்கு ஒரு முறையல்ல; இரு முறையல்ல; பத்துக்கும் மேற்பட்ட முயற்சி  களை மேற்கொண்டனர் என்பது பலருக்கும் அதிர்ச்சியான தகவலாக இருக்கலாம்; ஆனாலும், அது உண்மைதான்.
காந்தியார் படுகொலை செய்யப்படுவதற்கு பத்து நாள்களுக்கு முன்புகூட (ஜனவரி 20 அன்று) காந்தியார்மீது வெடிகுண்டு வீசப்பட்டது. மயிரிழையில் காந்தியார் உயிர் தப்பினார்.

கடைசியில் சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டு அந்த அடிப்படையிலேயே நாதுராம் கோட்சே தேர்வு செய்யப்பட்டு ஜனவரி 30 ஆம் தேதி காந்தியாரின் கதையை முடித்தனர்.

பார்ப்பானே அந்தப் படுபாதகத்தைச் செய்து விட்டு காந்தியாரைக் கொன்றது ஒரு முசுலிம் என்று பிரச்சாரம் செய்து இந்து முசுலிம் கலவரத்தைத் தூண்டிவிட திட்டமிட்டனர்.

வானொலியில் உரையாற்றிய தந்தை பெரியார் தான் அந்தச் சதியை முறியடித்தார். காந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல - மராட்டிய பார்ப்பான் என்று கூறி அதே நேரத்தில் அமைதி காக்குமாறு வேண்டுகோளும் விடுத்தார்.

மராட்டிய மாநிலத்தில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர் - அக்கிரகாரம் சூறையாடப்பட்டதுண்டு.

ஆனால், தந்தை பெரியார் அந்த நேரத்தில்கூட மிகுந்த பொறுப்புணர்வுடன் தமிழ்நாட்டை அமைதித் திசைக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

காந்தியாரைப் படுகொலை செய்த அந்தக் கூட்டம் - இந்தியாவை ஆளத் துடித்துக் கொண்டு இருக்கிறது - 2014 இல் நடக்க இருக்கும் மக்க  ளவைத் தேர்தலை இந்தக் கண்ணோட்டத்தில் அணுக வெகுமக்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை வலியுறுத்துகிறோம்.

               --------------------"விடுதலை” தலையங்கம் 30-1-2013

29.1.13

பெரியார் பாடங்கள் நீக்கத்திற்கானகாரணம் என்ன? மூல ஊற்று எது?


பிப்ரவரி 2 ஆர்ப்பாட்டம் - ஏன்?

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்திலிருந்து தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கத் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற தகவல் நிச்சயம் தமிழ் நாட்டு மக்களைச் சூடேற்றும் என்பதில் அய்யமில்லை.

இந்த நிலைக்குக் காரணம் என்ன? மூல ஊற்று எது? என்பது வெளியில் வந்தாக வேண்டும்.

நீராரும் கடலுடுத்த என்ற பாடலை எழுதிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் பெயரால் அமைந்த பல்கலைக் கழகத்தில் இப்படி ஒரு நிலையா என்ற கேள்வி எழுவது இயல்பே!

தமிழைப் பற்றிச் சொல்லும் பொழுதுகூட ஆரியம் போல் உலக வழக்கொழிந்ததல்ல என்று தெளிவாகவே சொல்லியுள்ளார். இப்படி சொல்லுவதற்கு அறிவு மட்டும் போதாது - துணிவும் தேவையாகும்.
அப்படிப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஆரியத்தின் அடி வேர் - ஆணி வேர் வரைத் துப்புரவாகத் தோண்டி, எடுத்துத் தூக்கி எறிந்த பகுத்தறிவுப் பகலவன் பற்றிய பாடம் இடம் பெறக் கூடாது என்று நினைப்பதன் பின்னணியில் ஆரியம் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே எனும் சதுர் வர்ணச் சமூக அமைப்பில் அதன் வேரைக் கெல்லி எறிந்து, உச்சரிக்கும் உதட்டையும், பற்களையும், நாவினையும் பிடுங்கி எறிந்த இந்தத் தேசத்தின் பெருந் தந்தை - தத்துவப் போதகர் - இனம், மொழி, பண்பாடு மீட்பர் சுய சிந்தனையாளர் தந்தை பெரியார் பற்றிய பாடங்கள், தத்துவங்கள் போதிக்கப்படாத பல்கலைக் கழகம் ஒரு கல்வி நிறுவனமாகவே இருக்க முடியாது.

தமிழ் நாட்டுக்குரிய மார்க்சியம் என்று சொன்னாலும் அது தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைப் பகுத்தறிவியல் தானே! மறுக்க முடியுமா?
பிறவிப் பேதத்தை வீழ்த்தும் தத்துவத்தைச் சொன்ன ஒரு தலைவரின் அறிவியல் சிந்தனைகளை மாணவர்கள் மனதில் விதைக்காவிட்டால் களைகளும்,  முட்செடிகளுமாகத் தானே வளருவார்கள்?

ஒருமுறை ஆனந்த விகடன் இதழ் கல்விக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர் என்று எழுதி இருந்ததே - அக்கிரகார இதழுக்கே தெரிந்த உண்மை இன்றைய பல்கலைக் கழகப் பொறுப்பாளர்களுக்குத் தெரியாமல் போன மர்மம் என்ன?

திராவிடர் இயக்கம் என்று எடுத்துக் கொண்டாலும், இந்த மண்ணுக்கு உரியது. கல்வியைக் கடை கோடி மனிதர்க்கும் கொண்டு செல்லக் காரணமாக இருந்தது. சமூக  நீதிக்கான முதல் சட்டத்தை தோற்றுவித்தது திராவிடர் இயக்கம்.

பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களைக் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம் தானே.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து பெண்கள் விடுதலைத் திசையில் புதிய மைல் கல்லைக் கொடுத்தது நீதிக்கட்சி ஆட்சிதானே.

இந்த வரலாறுகளை எல்லாம் நீக்கிவிட்டு மாணவர்களைப் பழைய புராணக் குப்பைத் தொட்டியில் ஊற வைக்கப் போகிறார்களா? விஞ்ஞான மனப்பான்மையை அவர்களுக்கு வளர்க்க வேண்டாமா? அப்படியென்றால் பகுத்தறிவு இயக்கம் நடந்து வந்த பாதைகளை பாடங்களாக வைக்க வேண்டாமா?

தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று அய்.நா. மன்றம் விருது கொடுத்த தலைவரை, தமிழ் நாட்டில் உள்ள ஒரு பல்கலைக் கழகம் புறந்தள்ளப் பார்ப்பது - புத்திசாலித்தனமல்ல - புத்தி பேதலித்த நிலைதான்.

அப்பல்கலைக் கழக செனட் மற்றும்  சிண்டிகேட் உறுப்பினர்கள் உடனடியாக இதில் தலையிட்டு, நீக்கப்பட்ட பாடங்களை மறுபடியும் இடம் பெறச் செய்யும் கடமையைச் செய்து, அவப் பெயரிலிருந்து மீள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பிப்ரவரி  2ஆம் தேதி தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலை நகரங்களில் இதுகுறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை திராவிடர் கழகத் தலைவர் அறிவித்துள்ளார். அந்தப் போராட்டத்துக்கு வேலையில்லாமல் செய்தால் நல்லது; இல்லையெனில் இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படும் வரை போராட்டம் தொடர்வது தவிர்க்கப்படவே முடியாது. எச்சரிக்கை!
                   -------------------------"விடுதலை” தலையங்கம் 29-1-2013

28.1.13

மதுவிலக்கு நாடகம் - பெரியார்



தேசியத்தின் பேரால் ஏதாவது ஒரு நாடகம் நாட்டில் நடந்து கொண்டி ருக்கா விட்டால் மக்கள் காங்கிரசையும், காந்தியையும் அடியோடு மறந்து விடுகின்றார்கள்.

ஆதலால் தேசீய தொழில்காரர்களுக்கு ஏதாவது ஒரு வேலை நடத்திக் கொண்டிருக்கவேண்டிய அவசியமேற்பட்டிருக்கின்றது. அதற்கு ஏற்றாப்போல் காங்கிரஸ் பக்தர்களுக்கும் பொதுஜனங்களின் காணிக்கைப் பணம் தாராளமாய் இருக்கின்றது. அதற்கேற்றாப்போல் வேலையில்லாத் தொந்திரவால் கஷ்டப்படும் வாலிபர்களும் நாட்டில் ஏராளமாய் இருக்கின் றார்கள். ஆகவே இவ்விரண்டும் சேர்ந்தால் பெட்றோல் எண்ணைக்கும், நெருப்புக்கும் உள்ள சம்மந்தம் போல் ஒன்றுக்கொன்று வெகு சுலபமான சம்மந்தம் ஏற்பட்டு விடுகின்றது.

ஆகையால் இவை இரண்டையும் வைத்துக்கொண்டு என்ன வேலை செய்யலாம் என்று பார்த்தால் பொது ஜனங்கள் சீக்கிரம் ஏமாறுவதற்கு அனுகூலமாக கள்ளுக்கடை மறியல்கள் தான் தென்படுகின்றது. ஆகவே இதன் மீது தலைவர்கள் என்பவர்கள் வாலிபர்களை ஏவி விடுவதால் ஏதாவது ஒரு கலகம் ஏற்படுகின்றது. அக்கலகத்தை பிரமாதப்படுத்தி விளம்பரம் செய்வதே பெரிய தேசீயப் பிரசாரமாகக் கருதப்பட்டு விடுகின்றது. இந்த முறையிலேயே மதுவிலக்கு நாடகம் நடைபெறுகின்றது.

விளம்பரக்காரர்களும், ஸ்தல ஸ்தாபனம், சட்டசபை, முதலியவை களில் ஸ்தானம் பெறக் காத்துக்கொண்டிருக்கின்றவர்களும் இந்த நாடகத் திற்கு சில சமயங்களில் பாத்திரங்களாய் இருக்கவேண்டியவர்களாகவும் ஆகிவிடுகின்றார்கள். இதன்பயன்களை நாடகக் கம்பெனி சொந்தக்காரர் களாகிய தலைவர்கள் என்பவர்களே அடைகின்றார்கள்.

உதாரணமாக திருப்பூரில் நடந்த மறியலில் அடித்தவர்களும், அடிப் பட்டவர்களும், அதாவது அடித்ததாகக் கெட்டபேர் வாங்கினவர்களும், அடிபட்டு அவஸ்தைபட்டதாகச் சொல்லப்பட்டவர்களும் ஒரே ஊர்க்காரர், ஒரே கூட்டத்தார்கள், ஒரே ஜாதி சொந்தக்காரர்கள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் இதன் பலன் பெருமை அசோசியேட் பிரஸ், பிரீபிரஸ் சேதிப் பெருமை சமாதானம் செய்துவந்த பெருமை முதலாகிய கௌரவங்க ளெல்லாம் உயர்திரு. சி. ராஜகோபாலச்சாரியார் அவர்களது “பாத சன்னி தானத்திற்கு”ப் போய்ச் சேரவேண்டியதாகி விட்டது.

நம்மவர்கள் மூடத்தனமாக நடந்து, பட்டதுதான் பயன். ஒரு சமயம் யாராவது கொஞ்சம் இவ்வித இயக்கத்தால் பிழைக்க வேண்டியவர்களல்லா தவர்கள் ஒருவர், இருவர் இதில் சேர்ந்து அடிபட்டதாகப் பேர்வாங்கியிருந்தா லும் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் ஏதாவது ஒரு ஸ்தானம் ஒதுக்கி வைக் கப்படுவது மல்லாமல் மற்றபடி இதனால் என்ன பயன் என்பது விளங்க வில்லை.

இந்த மறியலில் சம்மந்தப்பட்ட வாலிபர்களைப் பற்றி நாம் இங்கு பேச வரவில்லை. மற்றபடி பெரியவர்கள், தேசபக்தர்கள், பொதுநல சேவைக் காரர்கள் என்பவர்களை ஒன்று கேட்கின்றோம்.

அதாவது இந்தக் கள்ளுக்கடை மறியல் செய்வது என்பது இதனால் அதாவது இவர்களது மறியலில் கள்ளுக்குடி நின்றுவிடும் என்று கருது கின்றார்களா? அல்லது வெள்ளைக்காரனை இந்த நாட்டைவிட்டு ஓட்டு வதற்கு அல்லது “சுயராஜியம்” பெறுவதற்குப் பயன் படக்கூடியது என்று கருதுகிறார்களா என்று கேட்கின்றோம். கள்ளுக்கடை ஏலத்தில் எடுத் திருப்பது திருப்பூர் பிரபுக்கள். மறியல் செய்வது திருப்பூர் பிரபுக்கள். கள்ளுக்கு மரம் வளர்த்து குத்தகைக்கு விடுவது அக்கம் பக்கத்தில் பிரபுக்கள்: இந்தக் கள்ளைக் குடிப்பது திருப்பூர் தொழிலாளிமக்கள். அரசாங்கத்தில் மாதம் ரூ. 5000 வாங்கிக்கொண்டு கள்ளு நிர்வாகம் பார்ப்பது இந்த மாகாணப் பிரபுக்கள் (ஜனப்பிரதிநிதிகள்). மேலும் ஜனப்பிரதிநிதியாக இந்த வேலைக்குப் போட்டி போடுவதும் இதே ஜில்லா பிரபுக்கள். மற்றும் இந்த இலாகாவில் மாதம் ரூ. 2500 சம்பளம் முதல் ரூ. 12 சம்பளம் வரையில் வாங்கி ஜீவனம் செய்து கொண்டு வேலை பார்க்கும் சுமார் 10000பேர்களும் இந்த மாகாண இந்திய (படித்த) மக்களேயாவார்கள். மற்றும் இந்தக் கள்ளு, சாராய வியாபாரத்தால் தொழிலால் பிழைக்கும் சுமார் 20000 மக்களும் இந்த மாகாண இந்திய மக்கள். இப்படியெல்லாம் இருந்தாலும் இந்தத் தொழிலும் சட்டத்தில் குற்றமானதல்ல. மதத்தில் குற்றமானதல்ல, ‘ஒழுக்கத்திலும்’ குற்றமானதல்ல (அளவுக்கு மீறினால் குற்றம் சொல்லலாம்) இந்த நிலையில் யாரோ இரண்டு பேர் ஏதோ காரணத்திற்காக கள்ளுக்கடைக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டு யாரோ இரண்டொருவனை ‘அப்பா, சாமி கள்ளுக் குடிக்காதே’ ‘காந்தி கட்டளை இட்டு இருக்கிறார்’ ‘ராஜகோபாலாச்சாரி கட்டளையிட்டி ருக்கிறார்’. ‘சத்தியமூர்த்தி கட்டளையிட்டு இருக்கிறார்’ என்று சொல்லி விடுவதாலேயோ அல்லது அந்தக் குடிகாரனிடமோ, கள்ளு வியாபாரக் காரனிடமோ இரண்டு அடி வாங்கிக்கொண்டு அதை ஒன்று பத்து நூறாகப் பெருக்கிப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து விடுவதாலேயோ கள்ளுக் குடி நின்று போகுமோ? என்பதை யோசித்துப் பாருங்கள்.

சத்தியாக்கிரகம், மறியல் என்பவைகள் வீண் சண்டித்தனமே யில்லாமல் அதில் ஏதாவது கடுகளவு நாணையமோ, யோக்கியப் பொறுப்போ, இருக்க முடிகின்றதா? என்றுகேட்கின்றோம். உண்மையாய் யோக்கியமாய் கள்ளை நிறுத்த சத்தியாக்கிரகம் செய்பவர்கள் கள்ளு மந்திரி வீட்டில் கள்ளு இலாகா அதிகாரி வீட்டில் - மரம் கள்ளுக்குவிடும் குடியானவன் வீட்டில் - கள்ளு இறக்கும்போது மரத்தடியிலும் மற்றும் இது முதலாகிய ஆரம்ப நிலையிலிருந்து ஏதாவது ஒன்றில் செய்தால் சிறிது அர்த்தமாவது உண்டு. அவைகளை விட்டு விட்டு எல்லாக் காரியமும் நடந்தும், செலவாகும் பணமெல்லாம் செலவாகி, செய்யவேண்டிய சடங்கெல்லாம் செய்யப்பட்டு கள்ளுக்கடைக்குள் கள்ளு வந்து விற்பனைக்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் போது “காந்திக்கு ஜெ” “கள்ளுக்குடிக்காதே” என்று சொல்லுவதால் எப்படி நிற்கமுடியும் என்பதை அனுபவ ஞானமுள்ள மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

மேலும் இந்துக்களில் இருக்கும் அவ்வளவு விகிதாச்சார குடிகார ரும், கிறிஸ்துவர்களில் இருக்கும் அவ்வளவு விகிதாச்சார குடிகாரரும் போல அவ்வளவு விகிதாச்சார குடிகாரர்கள் மகமதியர்களில் இருக்கின்றார் களா என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஒருக்காலமும் அவ்வளவு குடிகாரர்கள் இல்லை என்றே சொல்லு வோம். இதன் காரணம் என்னவென்றால் அவர்களது மதமானது கள்ளை அவ்வளவு கடினமாக வெறுக்கின்றது. மற்றபடி இந்துக்கள் என்பவர் களிலும் மற்றும் சற்று கல்வி அறிவு மேல்ஜாதிக்காரர்கள் என்கின்ற எண்ணத்துடன் சரீரப்பாடுபடாமல் சோம்பேரியாய் இருக்கும் சைவ வேளாளர் தொண்டை மண்டல வேளாளர் பெருவாரியான வியாபாரிகள் வைசிய செட்டிமார்கள் என்பவர்கள் முதலியவர்களிலும் குடிக்கின்ற மக்கள் விகிதாச்சாரம் மிகவும் சுருக்கமானதேயாகும். அந்த சுருக்கமும் ஏதோ ஒருவித நாகரீகப்பைத்தியக் காரணமாக, செயர்க்கைவாசனை காரணமாக இருப்பதல்லால் மற்றபடி குடிகாரர்கள் என்கின்ற முறையில் ஏற்படுவது கிடையாது. ஆகவே இன்றைய குடிகார மக்களின் குடிக்கு காரணம் என்ன என்பதை அறிவாளிகள் இப் போதாவது யோசித்துப்பார்த்தால் உண்மை உணராமலிருக்க முடியாது.

சாதாரணமாக கள் இலாகா சனப்பிரதிநிதிகள் ஆதிக்கத்திற்கு வரா மலிருந்து சர்க்கார் இடமே இருந்திருந்தால் அது சம்மந்தமாக சட்டம் முதலியவைகள் செய்யவாவது சற்று இடமிருக்கும் இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் ஜனப்பிரதிநிதிகளில் மெஜாரிட்டி யார் யாரோ அவர்களே அந்த இலாகாவை நடத்தும் வேலையை ஒப்புக் கொள்ளும் மந்திரியாகிவிட்டதால் மந்திரிவேலை கிடைக்காதவர்களும் அடுத்த தடவை அதை அடையலாம் என்று காத்திருப்பவர்களும் அதைப் பற்றி ஏதாவது பேசிக்கொண்டும் இவ்வித பிரசாரம் செய்து கொண்டு மிருக்கலாமே யொழிய மற்றபடி இதனால் எல்லாம் கள்ளுக்குடியை ஒழிக்க காரியத்தில் ஒரு துரும்பை அசைத்துவிட முடியுமா? என்று கேட்கின்றோம். வீணாக இது பொதுஜனங்களில் பதவி வேட்டைக் காரருடைய சுயநல வஞ்சகத்தையும் பாமரமக்களின் முட்டாள் தனத்தையும் கைமுதலாக வைத்துக்கொண்டு நடத்தும் போலி நாடகமே யொழிய மற்றபடி கள்ளு மறியலில் சிறிதும் பயனும் நாணயமும், யோகியப் பொறுப்பும், புத்திசாலித் தனமும் இல்லையென்றே சொல்லுவோம்.

அன்றியும் அரசியல் கருத்துக் கொண்ட மறியல்களை நிறுத்தி விட்டு பொருளாதாரத்திற்கும் சன்மார்க்கத்திற்குமான தனிப்பட்ட சீர்திருத்தத் துறையில் மறியல் செய்வதாய் சொல்லி ராஜி பேசிக்கொண்டு ஜெயிலிலி ருந்து வெளியில் வந்த பிறகு மறுபடியும் அரசியல் கருத்தில் செய்யும் மறியலில் எவ்வளவு தூரம் பயனும் நாணயமும் உண்டாகும் என்பதைப் பொது ஜனங்களே யோசித்துப் பார்ப்பதன்மூலம் இந்திய தேசீயத்தின் நாணயத்தையும் தலைவர்களின் நாணயத்தையும் அறிந்துகொள்ளட்டும் என்றே விட்டு விடுகின்றோம்.

            ---------------------தந்தைபெரியார் --” குடி அரசு” - கட்டுரை - 07.06.1931

27.1.13

இன்னுமென்ன சந்தேகம்? பிராமணா! உன் வாக்குப் பலித்தது!!




ஒரு பார்ப்பனன் தன் பெண்ஜாதியின் நடத்தையில் சந்தேகங்கொண்டு அடிக்கடி அந்தம்மாளை விபசாரி, விபசாரி, என்று கூறிக்கொண்டே வந்தான். ஆனால், அந்தம்மாள் தன் புருஷனின் சந்தேகத்திற்கிடமான காரியங்களுக் கெல்லாம் அவ்வப்போது பல சாக்குப் போக்குகள் சொல்லி புருஷனை அடக்கிக் கொண்டே வந்தாள்.

இப்படி இருக்கையில், அந்தப் பார்ப்பான் தன் மனைவி  அந்நிய புருஷனிடம் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக் கையில் ஒரு நாள் கைப்பிடியாய் பிடித்து விட்டான்.  அப்பொழுது அந்த அம்மாள் வேறு எவ்வித சாக்குப் போக்கும், சமா தானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் பிராமணா!, உன் வாக்குப் பலித்துவிட்டது. அதற்கு நான் என்ன செய்யட்டும்? என்று பதில் சொல்லி மறுபடியும் புருஷன் மீதே குற்றத்தைக் சுமத்தினாள்.

அதாவது, புருஷனைப் பார்த்து நீ அடிக்கடி என்னை விபசாரி, என்று உன் வாயால் சொல்லிக் கொண்டே  வந்தால் அல்லவா (பிராமணன் வாக்கு பொய்க்காது அது எப்படியும் பலித்துவிடும் என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கின்றபடி) நீர் பரிசுத்தமான பிராமணரானதால் உமது வாக்குப் பலித்துவிட்டது.

உமது வாக்குப் பலிப்பதற்காகவே இந்தப்படி கடவுள் செயலால் ஏற்பட்டுவிட்டது. அதற்கு நான் என்ன செய்வேன்? நீர் ஏன் என்னை அப்படிச் சொன்னீர்? என்பதாகச் சொன்னாளாம்.! அதேபோல் காங்கிரஸ் காரியக் கமிட்டியும், திரு. காந்தியும் சேர்ந்து 12.07.1931 செய்த பிரஜா உரிமை தீர் மானமானது நாம் காங்கிரசையும், அதன் தலைவர்கள் என்பவர்களையும் பற்றி அவர்கள் எப்படிப்பட்ட அபிப்பிராயக்காரர் கள் என்று குற்றம் சொல்லி வந்தோமா, அதே அபிப்பிராயம் இனி வேறு யாரும், வேறு எவ்வித வியாக்கியானமும், தத்து வார்த்தமும் செய்ய முடியாதபடி நன்றாய் வெளிப்படையாய் அழுத்தந்திருத்தமாய் சொல்லப்பட்டுவிட்டது. அது என்ன வென்றால்,

அரசியல் சட்டத்தில் ஜனங்களுடைய ஜீவாதாரமான உரிமை என்பது  பற்றிய, விதிப் பிரிவுகளில் இந்தியாவில் உள்ள சகல சமுகத்தாருக்கும் அவர்களது கலைகள், சமுக நாகரிகங்கள், பாஷைகள், எழுத்துக்கள், தொழில்கள்,  பழக்க வழக்கங்கள். மதம், மத  தர்மங்கள் ஆகியவை காப்பாற்றப்படும் என்பதாக ஒரு உத்திரவாதம். அதாவது ஜாமீன் கொடுக்கப்படும் என்கின்ற நிபந்தனையும் சேர்க்கப்படும் என்பதாகத் தீர்மானித்திருக்கின்றார்கள்.

மற்றும், ஒவ்வொரு சமுக உரிமைகளைப் பற்றிய சட்டங்களும் காக்கப்படும் என்பதாகவும் ஒவ்வொரு மாகாணங்களிலுள்ள சிறுபான்மை வகுப்புகளின் உரிமைகளின் அரசியல் உரிமை மற்றும் இதர உரிமைகள் ஆகியவை காப்பாற்றப்படும் நிபந்தனையானது அரசாங்கத்தின் ஆதிக்கத்திற்குள் இருக்கும்  என்பதாகவும் தீர்மானித்து இருக்கின்றார்கள். அது அசோசியேட் பிரஸ் சேதியாகும்.

மற்றும், 13ஆம் தேதி வெளியான எல்லாத் தினசரிகளிலும் காணப்படுவது மாகும். அன்றியும், இத்தீர்மானங்களை ஆங்கிலத்தில் உள்ளபடியே மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டுமிருக்கின்றன ஆகவே, வாசகர்களுக்கு இவ்விஷயத்தில் இன்னுமென்ன சந்தேகம் இருக்கக்கூடும்? என்பது நமக்கு விளங்கவில்லை.

கராச்சிக் காங்கிரசில் சமதர்மக் கொள்கை ஏற்பட்டுவிட்டது என்று வாய்த் தப்பட்டை அடித்ததெல்லாம் சுத்த ஹம்பக் என்பதாகவோ, அல்லது அது அதனுடைய உண்மை அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களின் கூற்று  என்பதாகவோ இப்போது யாவருக்கும் நன்றாய் விளங்கியிருக்குமென்றே கருதுகின்றோம்.

ஏனெனில் ஒவ்வொரு வகுப்பாருடைய, அதாவது இந்தியாவில் எத்தனை சமயத்தார், வகுப்பார் உண்டோ அத்தனை வகுப்பாருடைய உரிமைகளையும் பொறுத்த கலை ஆதாரங்கள் அதாவது வேத சாஸ்திர புராணங்கள். அவர்களது பாஷைகள்,  பாஷை எழுத்துக்கள் வகுப்புக் கல்விகள், வகுப்புத் தொழில்கள், அந்தந்த வகுப்பு பழக்க வழக்கத்தில் இருந்துவரும்  நடவடிக்கை கள், ஒவ்வொரு வகுப்பா ருடைய மதங்கள் அதாவது சமயம், உட்சமயம், புறச் சமயம், அந்தந்த மத தர் மங்கள், அதாவது கோவில், கோவில் சொத்து, மடம், மடங்களின் சொத்துக்கள், மததர்மமான மற்ற காரியங் கள் செய்வதற்கு விடப்பட்டி ருக்கும் தர்ம சொத்துக்கள் ஆகியவை எல்லாம் காக்கப்படும் என்பதாக காங்கிரஸ் உறுதிகூறி இருப்பதோடு உத்திரவாதமுமேற்றுக் கொண்டிருக்கின் றது.

ஆகவே, இது சமதர்மக் கொள்கை யாகுமா? அல்லது சுயமரியாதை கொள்கை யாகுமா? அல்லது நவ ஜவான் பாரத சபைக்கொள்கையாகுமா? அல்லது போல்ஸ்விக் கொள்கையாகுமா? என்பதை நம் நாட்டு வாலிபர்களை யோசித்துப் பார்க்கும்படி விரும்புகிறோம். இந்த மாதிரி யான சுயராஜ்ஜியம் ஏற்படுவதற்காக வெள்ளைக்காரன் இருக்கும் அரசியல் அதிகாரத்தைப்  பறித்து இந்த மாதிரி உத்தரவாதம் ஏற்றுக்கொண்ட காங்கிரசுக் காரரிடம் மகாத்மா இடமும் திரு. ஜவஹர் லால் இடமும் ஒப்படைக்கலாமா என்று நிதானமாய் யோசித்துப்பாருங்கள் என்று மறுபடியும் நினைப்பூட்டுகின்றோம்.

மற்றும் பார்ப்பனரல்லாத காங்கிரஸ் பக்தர்களே, இந்த உத்தரவாதமானது காரியக் கமிட்டி  உயர்திருவாளர்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், பண்டித மாளவியா ஆகிய பிராம் மணோத்தமர்களால் கொண்டு வரப்பட்ட ஏகமானதாய் தீர்மானிக்கப்பட்டிருக்கின் றது என்பதாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது என்பதையும் உணருங்கள் என்றே சொல்லுகின்றோம்.

உலகில் வயிறு வளர்ப்பதேதான் பிரதானமான காரியம் என்று கருதி இருப்போமானால், மனித உருவாய் பிறந்ததற்கு வருத்தப்படவேண்டி யது தான் என்பதே எமது அபிப்பிராயம். மற்றபடி சுயமரியாதையே பிரதானமானது என்று கருதுகின்றவர்களுக்குத்தான் மனிதனாய் பிறந்ததைப் பற்றி சில சமயங்களிலாவது மகிழ்ச்சியடைய இட முண்டு என்று சொல்லலாம். நிற்க.

பம்பாய் காரியக் கமிட்டியின் உத்தரவாத தீர்மானத்தைக் கொண்டு காங்கிரசின் உண்மையான தன்மையை ஒரு வரியில்  கூற வேண்டுமானால், காங்கிரஸ் என்பது சுயமரியாதைக் கொள்கைக்கு நேர்மாறான முரண்பட்ட ஸ்தாபனம் என்று சொல்வதை விட வேறு என்ன சொல்லமுடியும்? என்று அறிவும், நாணயமும், மானமும் உள்ள மக்களை யோசித்து பார்க்கும்படி வேண்டு கின்றோம். நிற்க.

காரியக் கமிட்டியின் இந்த உத்தரவாதத் தீர்மானத்தைப் பற்றி தேசிய பத்திரிகை என்று சொல்லிக்கொண்டு இருக்கும் தமிழ்நாடு பத்திரிகை 13ஆம் தேதி  தனது உபதலையங்கத்தில் எழுதி யிருப்பதையும் இந்தச் சமயத்தில் குறிப் பிடுகிறோம். இந்த உப தலையங்கத்தில் ஒவ்வொரு எழுத்தும் வெகு நடுக்கத்துடன்  எழுதப்பட்டிருந்தாலுங்கூட  அதில் உண்மை ஒருவாறு வெளியாகியே விட்டது. அதாவது:-

இந்திய தேசிய காங்கிரசுக்குத் தலைகுனியும்படியான காலம் வந்ததைக் குறித்து நாம் மிகவும் துக்கப்படுகின் றோம். காங்கிரசின் தேசிய லட்சியம் இப்போது பின்னடையவும் நேர்ந்து விட்டது. பிரதி வகுப்பாரின் பாஷை எழுத்து, கல்வி, ஆசார அனுஷ்டானம், மதம், தர்மச் சொத்துக்கள் ஆகிய விஷயங் களுக்குத் தக்க  பாதுகாப்பளிப்பதாக (காங்கிரஸ்) காரியக்கமிட்டி கூறுவதின் கருத்து நமக்கு விளங்கவில்லை.

மற்ற மக்களுடைய பிரஜா உரிமை, சுயமரி யாதை, மனிதத்தன்மை ஆகியவற்றிற்குப் பங்கம் விளைவிக்காத வரையில் பிரதி மனிதனுடைய மதம், ஆச்சாரம், அனுஷ் டானம் பாதுகாக்கப்படும் என்று காரியக் கமிட்டி கூறி இருந்தால் அதன்பொருள் தெளிவாக ஏற்பட்டிருக்கும். இந்தியா வில் சமதர்மத்தை நிலைநிறுத்துவதற்குக் காரியக் கமிட்டியின் முடிவு முட்டுக் கட்டையாக அமையுமென்று அஞ்சுகின் றோம் என்பதாகக் குறிப்பிட்டு இருக் கின்றது.

இவை எப்படி இருந்தபோதிலும் இன்றைய தினம் இந்த நாட்டில் இருந்துவரும் ஜாதி, மத பேதங்களும், ஆச்சார அனுஷ்டானங்களும், மதங்களும், மத தர்மச் சொத்துக்களும் காப்பாற்றுவ தற்காக நமக்கு சுயராஜ்ஜியம் வேண்டும் என்ற கருத்தின் மீது தான் இன்றைய தேசியக் கிளர்ச்சி நம் நாட்டில்  நடை பெற்று வருகின்றது என்று சொன்னவர் களின் வார்த்தைகளில் எந்த எழுத்தாவது தப்பிதமானது என்று இதிலிருந்து யாரா வது சொல்ல முடியுமா? என்று கேட் கின்றோம்.

அன்றியும், காங்கிரஸ் கூட்டத்தில் இத்தனை காலம் பிரஸ்தாபிக்கப்படாத ஒரு புதிய விஷயமும் இந்த  ஜவாப்தாரி தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது, கவனிக்கத்தக்கதாகும்.அதாவது பழக்க வழக்கம், தொழில், மததர்ம சொத்துக்கள் ஆகியவையும் காப்பாற்றப்படும் என்ப தோடு. அதற்கு ஜவாப்தாரிதனமும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதாகும். ஆகவே இனிமேல் இந்தியாவைக் காங்கிரஸ்  பார்ப்பனிய சுயராஜ் ஜியமாக்க செய்ய வேண்டிய வேலை எது பாக்கி? என்பதாக நமக்கு விளங்கவில்லை.

இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால்,  காங்கிரசும், காந்தி கோஷ்டியும்  இப்போது உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சமதர்ம, பொதுவுடைமை உணர்ச்சியை அழிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சேர்ந்துக்கொண்டு  பாமர மக்களுக்குச்  செய்யும் சதியும், துரோகமும் அல்லவா என்று யோசித்துப் பார்க்கும்படி பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.

இந்த உண்மையை உணர்ந்துதானே ருஷ்ய சமதர்மக்காரர்கள், காங்கிரஸ் பொது ஜனங்களுக்குத் துரோகமான தென்றும், காந்தி பொது ஜன துரோகி யென்று தைரியமாய்ப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அன்றியும் மாஸ்கோவில் இருந்து வந்த சேதி ஒன்று தமிழ்நாடுவில் பிரசுரித்திருக்கின்றபடி ருஷியாவில் இந்தியா என்பதாக ஒரு நாடகம் ஆடப்படுவதாகவும்.

அதில் பிரிட்டிஷ் ஆட்சி கொடுங்கோன்மையானதென்றும், காந்தி பொது ஜனங்களைத் தப்பான வழியில் ஏமாற்றி நடத்திக் கொண்டு போகின்றவர் என்றும் கருத்து வைத்து சரித்திரம் எழுதி நாடகம் நடை பெறுகின்றதென்பதாகக் குறிப்பிடப்பட்டி ருக்கின்றது.

இவற்றையெல்லாம் பார்த்த பிறகும், நன்றாய் உணர்ந்த பிறகும் இனியும் சுயமரியாதைக்காரர்கள் காங்கிரசைப் பற்றி சிறிது கூட தாட்சண்யம் பார்க்க வேண்டியதில்லை என்பதாகவும், அது ஒரு பெரிய ஜன சமுகத் துரோக சபையாகவும், தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை ஏமாற்றி கழுத்தறுக்கும் வஞ்சக சபையாகவும் இருக்கின்ற உண்மையை பொது ஜனங் களுக்குப்படும்படி விளக்க வேண்டி யதையே முக்கிய கடமையாகக் கொள்ள  வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இந்தக் கடமைக்கு யாரும் பயப்படுவது சிறிதும் மனிதத் தன்மை யாகாதென்றே தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இதற்காக, நாம் யாரையும் காங்கிரஸ் கூட்டத்தில்  கலகம் செய்யும்படியாகச் சொல்லவில்லை. அது மிகவும்  தப்பான தும், பயங்காளித்தனமானது மான காரிய மாகும். ஆதலால், ஒவ்வொரு இடங்களி லும் இதற்கென்றே தனிக்கூட்டம் கூட்டியே பேச வேண்டுமென்று வலியுறுத்திச் சொல்லுகிறோம். அப்படிப்பட்ட கூட்டத்தில் காங்கிரசுக் காரர்கள் குழப்பம் செய்தால் அதற்காக யாரும் பின்வாங்க வேண்டிய தில்லை  அதன் மூலமாகவே காங்கிரஸ் என்பது காலித்தனமும் உடையது என்பதை ருஜிப்பிக்க ஒரு சந்தர்ப்பம் கூடப் பெறலாம். ஆகையால் அதற்குப் பயப்பட வேண்டியதில்லை.

ஆனால்,  சுயமரியாதைக்காரர்கள் என்ன செய்து விட்டார்கள்? என்று கேட்டால், காங்கிரசின் புரட்டை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்லிவிடும் பதிலே அதற்குப்  போதுமான பதிலாகும்.  ஏனெ னில், சுயமரியாதைக் கொள்கைகளுக்கு நேர்மாறான கொள்கைகளேதான் பெரிதும் காங்கிரசில் இருப்பதை மனதார உணர்ந்தும் சுயமரியாதையும் காங்கிரஸ் கொள்கையும்ஒன்றுதான் என்று சிலர்  விஷமப்பிரசாரம் செய்வதால் அதை ஜனங்கள் அறியும்படி செய்வதன் மூலமே சுயமரியாதை கொள்கைகளை எடுத்துச் சொல்ல வசதி ஏற்படுகின்றது . எனவே, இந்தச் சமயத்தில் அலட்சியமாய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கிறோம்.

         ---------------------------------தந்தை பெரியார்-"குடிஅரசு" - தலையங்கம் -  19.07.1931

26.1.13

பார்ப்பனர்களைத் திட்டித் தீர்க்கிறீர்களே! அவாளால் என்ன தொந்தரவு?

அன்றும் - இன்றும் - என்றும் பார்ப்பனர்கள்

பார்ப்பனர்களைப் பாழும் சொற்களால் திட்டித் தீர்க்கிறீர்களே. அவாளால் என்ன தொந்தரவு? தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று ஒதுங்கித் தானே போகிறார்கள்.
இப்பொழுதெல்லாம் அவர்கள் பரம சாதுவாகி விட்டார்கள்  எல்லாம் கலந்து  போச்சு! முனியாண்டி ஹோட்டலில் சாப்பிடுறா... சகஜமாகப் பழகுறா... இன்னும் அவர்களின் மேல் தூஷணையா என்று வக்காலத்துப் போட்டுப் பேசும் ம.பொ.சி.யின் மிச்ச சொச்ச  வகையறாக்கள் இன்று வரை இருக்கத்தானே செய்கிறார்கள்?

ஒரே ஒரு கேள்வி, தமிழ் _ தமிழர் _ தமிழர் பண்பாடு தளத்திலே அவர்கள் இன்றுவரை தமிழர்களோடு எந்த அளவு ஒன்றி கலந்திருக் கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

இம்மாதம் 13ஆம் தேதி (13.1.2013) தினமலர் ஏட்டில் 3ஆம் பக்கத்தில் வெளிவந்த விளம்பரம் இதோ ஒன்று.

இதற்கு என்ன பொருள் என்று விளக்குவார்களா?
ஆந்திர மாநிலத்தில் -  அய்தரா பாத் அருகில் ஒரு கிராமம் உரு வாக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் இதோ:

21ஆம் நூற்றாண்டு அக்கிர(ம)காரம்!

ஆந்திரப் பிரதேச தலைநகர் அய்தராபாத்துக்குப் பக்கத்தில் அக்கிர(ம)காரம் ஒன்று உருவாகிறது. அய்தராபாத்துக்கு 90 கி.மீ., தூரத்தில் நாக்பூர் சாலையில் 1200 ஏக்கர் பரப்பளவில் பார்ப்பனச் சேரியாம். 1000 பார்ப்பனக் குடும்பங்கள் வீடு கட்டி வசிக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் 1000 சதுர அடி மனையாம். 4 லட்ச ரூபாய் விலையாம்.

அங்கு மனை வாங்க சில பாரதீய ஜனதாக் கட்சிக்காரர்கள்கூட முயன்றனராம். பார்ப்பனர் அல்லாதவர் என்பதால் விற்க முடியாது என்று கூறிவிட்டார்களாம். அவ்வளவு ஜாதி வெறி! டாக்டர் பி. கமலாகரசர்மா என்ப வர் இதன் உரிமையாளராம்; வெளிநாடு வாழ் இந்தியராம்! _ இது செய்தி.
எவ்வளவு பச்சைப் பார்ப்பன ஜாதி வெறி! பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்கள் என்கிறார்களே! உண்மையா?

எந்த ஜாதியினால் படிக்கக் கூடாத, வேலை பார்க்கக் கூடாத ஜாதியாக ஆக்கப்பட்டோமோ, அந்த ஜாதியின் அடிப்படையில் ஒதுக்கீடு தரக்கூடாது என்று கூச்சல் போடும் ஜாதித் திமிர் கொண்டவர்கள் இந்தப் பார்ப்பன ஜாதித் திமிர்  கொண்ட செய்கைக்கு என்ன சமாதானம் கூறுவார்கள்?

பாம்பு சீறிட மறந்தாலும் இந்தப் பண்டாக்கள் தம் பண்பை மறவார் -  என அண்ணா சொன்னது சரிதானே!

அப்பொழுதே விடுதலை (5.1.2008) வெளியிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

மற்றொரு விளம்பரமும் உண்டு தினமணியில் (20.10.1993) வெளிவந்த அந்தச் செய்தி இதோ:

தற்போது பலருக்கும் பலவிதமான வியாதிகளும் திடீர் மரணங்களும், ஜலக் கஷ்டத்தினால் அவதிகளும் இப்படி பல வகையான துன்பங்கள் தனி மனிதனிலிருந்து, குடும்பம், நாடு வரையில் உள்ளவற்றை குறைப்ப தற்காக ஒவ்வொரு பிராமணரும் ஸந்தியாவந்தனம் செய்த பிறகு ஒரு மண்டல காலம் (45 தினங்கள்). ஸஹஸ்ர காயத்ரி ஜபம் (1008 முறை காயத்ரி ஜபம்) தங்கள் குடும்ப ஷேமத்திற்காகவும், நாட்டின் ஷேமத் திற்காகவும் என மனதில் ஸங்கல்பம் செய்து ஜபம் செய்ய வேண்டும். ஜபம் முடிந்தபிறகு 12 முறை சூர்யனுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரிலுள்ள பிராமண ஸமாஜம் இதற்கு முழு முயற்சி எடுத்து இது வரையில் தொடங்காதவர்களை விஜயதசமிக்கு தொடங்கிவிட முயற்சி செய்யவும் என்று ஸ்ரீகாஞ்சி காமகோடி ஸ்வாமிகளின் அபிப்ராயம் என்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மூலமாக அறிவிக்கப்படுகிறது. இப்படி தொடங்கின விபரத்தை கீழ்க்கண்ட விலாசத்திற்கு தெரிவித்தால் ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளிடம் தெரிவித்து விசேஷ பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
பிராமண ஸமாஜம்,
3, கொல்லா சத்திரம் தெரு,
காஞ்சிபுரம், 631 502
                          -------------------------------தினமணி 20.10.1993

நாட்டின் க்ஷேமத்துக்காக பிராமணோத்தமர்கள் மட்டும்தான் ஸந்தியாவந்தனம் செய்ய வேண்டுமா? (இவர்கள் ஸந்தியா வந்தனம் செய்வதால் ஆகப் போவது ஒன்று மில்லை என்பது வேறு  செய்தி!)
லோகக்குரு என்று அவாள் கூறும் சங்கராச்சாரியார் அக்கிரகார சம்பந்தப்பட்டவராக இருக்கிறாரே தவிர, மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி தானே இருக்கிறார்கள் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுப் போதாதா?
ராஜபாளையம் சேதி ஒன்றும் இருக்கிறது. ராஜபாளையம் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள வேத பாட சாலையில் மாணவர்கள் சேர்க்கைக் கான விளம்பரம் இதோ:
இவ்வாண்டு முதல் நமது வேத பாடசாலையில் 15 வயது முதல் 20 வயதிற்குட்பட்ட சமஸ்கிருத நுழைவு/ தமிழக அரசின் 10ஆம் வகுப்பு தேர்வு அதற்குச் சமமான சமஸ்கிருத கல்வியுடன் கூடிய கல்வித் தகுதி யுடன் உபநயனமான மாணவர்கள் மேற்கண்ட அய்ந்தாண்டு கால குரு குல அமைப்பில் அத்வைத வேதாந்த சாஸ்திரம் என்ற புதிய வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். (தினமலர் 19.4.2002 பக்கம் 7).

வேதங்களை சூத்திரர்கள் படிக்கக் கூடாது, படித்தால் நாக்கை அறுக்க வேண்டும், கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறது மனுதர்ம சாஸ்திரம். இப்பொழுது அப்படி யாரும் செய்ய முடியாது என்பதால் மறைமுகமாக பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற தன்மையில் எவ்வளவு சூழ்ச்சியாக செயல்படுகிறார்கள்.

உபநயனமான மாணவர்கள் தான் பங்கு பெற வேண்டுமாம்.
பொருள் புரிகிறதா? உபநயனம் ஆனவர்கள் என்றால் பூணூல் கல் யாணம் நடத்தி வைக்கப்பட்ட பார்ப் பனர்கள் மட்டும்தான் சேர்க்கப்படு வார்கள் என்பதை எப்படியெல்லாம் சுற்றி வளைத்துச் சொல்லுகிறார்கள்.
தினமணி ஏட்டில் (7.2.1983 வெளிவந்த விளம்பரம் இதோ ஒன்று:
கீழ்க்கண்ட விளம்பரம் பார்ப்பனர்கள் யார் - அவர்களுடைய இனவெறி எத்தகையது என்பதற்கு அடையாளமாகும்.

தேவை

கோவையிலுள்ள பிரபல இன்ஜீனியரிங் கம்பெனிக்குக் கீழ்க்கண்ட உத்தியோகங்களுக்கு விண்ணப்பங்கள் படித்த பிராமணர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

1. Accountants: B.Com
பட்டதாரிகள் மூன்று வருட அனுபவம் தேவை.
2. Typists: நன்கு படித்தவர்கள் சுயமாக லெட்டர்கள் தயாரித்து அனுப்பும் திறமை உள்ளவர்கள் குறைந்தது மூன்று வருட அனுபவம் தேவை.
3. Saler Representatives:
வியாபாரத்தில் திறமையும் அனுபவம் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறோம்.
மேற்கண்ட வேலைக்கு சமீபத்தில் ஓய்வு பெற்றவர் களும் விண்ணப்பிக்கலாம். திறமைக்கு ஏற்ற ஊதியம் உண்டு.
ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து அனுப்ப வேண்டும்.
Raj & Co Post Box No 9
Coimbatore - 641 001.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழர்களிடம் வியாபாரம் செய்து வயிற்றை கழுவிக் கொண்டு இருக்கக் கூடிய பார்ப்பனர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்த பார்ப்பனர்களை மட்டும் விளம்பரம் செய்து கூவி அழைப்பதை நம் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?

இவர்களை விட்டுத் தள்ளுங்கள். அவாளின் ஜெகத் குருக்கள் இருக்கிறார்களே _ அவர்கள்தானே ஜப்பானுக்கும், கனடாவுக்கும், எகிப்துக்கும், எத்தியோப்பாவுக்கும், ருசியாவுக்கும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் குரு! (கடலைத் தாண்டிச் செல்வது தோஷம் என்று சொல்லுபவர்கள் எப்படி லோகக் குரு ஆவார்கள் என்று எவரும் கேள்வி எழுப்பிட வேண்டாம்) அவாளை நோக்கிக் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது; காரணம் மகாபெரிய வா(ல்)ள்
மறைந்த காஞ்சி சூப்பர் சீனியர் பெரியவாள் இருக்கிறாரோ, இல்லியோ - அவா(ள்) எப்படிப்பட்டவாள்?

தெய்வத்தின் குரல் என்று அவாளின் பேச்சுகள் எழுத்துக்கள் பல தொகுதிகளாக வெளிவந்தன. (அவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பெரிய வாள்களைத் தோலுரித்துத் தொங்கப் போட்டுள்ளார் - சங்கராச்சாரி _- யார்? என்று நூலாகவும் வெளி வந்துள்ளது)

காஞ்சி மடத்திலே பல டிரஸ்டுகளை உருவாக்கி வைத்துள்ளார்கள்.
றீ ஸஸ்டியப்த பூர்த்தி ட்ரஸ்ட், வேத பாஷ்யங்களைப் படிப்பதற்கு உற்சாக மூட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ட்ரஸ்ட்!

வேத  ரக்ஷண நிதி ட்ரஸ்ட், வேதமாத நிதி  ட்ரஸ்ட் இந்தியா முழுவதும் வேதப் பாடசாலைகளை நடத்து வதற்கு
றீ கன்னிகாதான ட்ரஸ்ட் - _ பிராமணப் பெண்களை உத்தேசித்தே இந்த ட்ரஸ்ட் இப்படி ஜெகத் குரு என்று சொல்லப்படுபவரே பார்ப்பன வெறித்தனத்தில் ஊறிக் கிடக்கிறார் என்றால் மற்ற மற்ற பார்ப்பனர் களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

பார்ப்பனர் அல்லாதார் களிடத்தில் தட்சணை வாங்குவது --_ பயன்பாடோ பார்ப்பனர்களுக்கு என்னே சாமர்த்தியம்!

இப்பொழுது சென்னை யில் அக்கிரகார பகுதிகளில் புதிய தந்திரத்தைக் கையாளுகின்றார்கள். பிராமணர்களுக்கு மட்டும் வீடு வாடகைக்கு ஒதுக்கப்படும் என்ற பச்சையாக விளம்பரம் செய்வது சற்றுக் கடினமானது என்று கருதி “For Vegetarian  Only” என்று வீட்டு வாசலில் விளம்பரம் செய்துவிட்டு, நேரில் வரும்போது பிராமணாளா இல்லையா என்று விவரம் அறிந்து பார்ப்பனர்களாக இருந்தால் மட்டும் வாடகைக்கு விடும் தந்திரத்தை மேற்கொள்கிறார்கள்.

பார்ப்பனர்கள்பற்றி இன்னுமா பேச வேண்டும் என்று வாய் நீளம் காட்டும் பெரிய மனிதர்கள் இவ்வளவு எடுத்துக்காட்டுக்குப் பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?

---------------------------- மின்சாரம் அவர்கள் 26-1-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

25.1.13

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இல்லையா? பெரியார் பதில்

லாகூரில் பெரியாரிடம் சிக்கினார்
லாகூரில் ஒரு ரீடிங் ரூமில் நானும் அண்ணாதுரையும் போன போது ஒரு பிரசங்கம் செய்யச் சொன்னார்கள். நானும் ஒப்புக் கொண்டு பேசினேன். என்ன பேசினேன் என்றால் நாம் அறிவிற்கு மதிப்புக் கொடுக்காததால், சிந்திக்காத தால் இழி மக்களாக ஆகி விட்டோம். இதற்குக் காரணம் நமக்கிருக்கும் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை, புராண நம்பிக்கை இவைகளே ஆகும்.

நம் இழிவு நீங்க வேண்டுமானால் இந்த கடவுள், மதம், சாஸ்திரம், தர்மம், புராணம் இவைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டுமென்று பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் குறுக்கே எழுந்து, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இல்லையா? என்று கேட்டார். உடனே நான் பேப்பர், பேனாவை எடுத்தேன். நீங்கள் கேட்டது ரொம்ப சரி. எனக்கு புரியவில்லை. கடவுள் என்றால் என்ன? அதன் குணம் என்ன? அது எப்படிப்பட்டது என்பதைத் தெளிவாக எழுதிக் கொடுங்கள். அதன்பின் நான் ஒவ்வொன்றாக விளக்கம் கொடுக்கிறேன்.

அதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம் என்றேன். கேள்வி கேட்டவர் எதுவும் செய் யாமல் விழித்துக் கொண்டு நின்றார். தலைவர், அவரைப் பார்த்து நீயாகப் போய்த்தானே மாட்டிக் கொண்டாய், இப்போது அவர் கேட்கிறாரே எழுதிக் கொடு இவர்கள் நமது எதிரிகளின் கையாள்கள்; அதனால் தான் அவர் இப்படி பேசுகிறார் என்று சொன்னார்.

பிறகு தலைவர், அவரை உட்காரச் செய்து அவர் சொன்னார், இப்போது கேள்வி கேட்டதனால் கேட்டவருடைய அறிவை வெளிப்படுத்தி விட்டார் என்று சொல்லி என்னை மேலே பேச அனுமதித் தார். கேள்வி கேட்டவர் ஒரு அய்.சி.எஸ். காரரின் சகோதரர்.
-----------------------------தந்தை பெரியார் உரையிலிருந்து "விடுதலை" 30.5.1967

24.1.13

ஜாதியற்ற சமூகம் படைத்திட ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்படும்!

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு

திராவிடர் கழகம் மேற்கொள்ளவிருக்கும் தொடர் பிரச்சாரப் பயணத் திட்டத்தில் ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை ஜாதி ஒழிப்பு என்பதுதான் அடிப்படைக் கொள்கை. மனித சமூகத்தில் பேதம் இருக்கக்கூடாது; அதுவும் பார்ப்பனீயத்தால் திராவிடர் சமுதாயத்தில் திணிக்கப்பட்ட வருணாசிரம அமைப்பு முறை - ஜாதி அமைப்பு முறை என்பது பிறவியிலேயே பேதத்தைத் திணிக்கக் கூடியதாகும்.

இது மனித சமூகத்தில்  சகித்துக் கொள்ளவே முடியாத புற்றுநோயாகும். எந்த விலை கொடுத் தேனும் ஒழிக்கப்பட வேண்டியதாகும்.

1924 ஆம் ஆண்டில் வைக்கம் வரை சென்று போராடியவர் தந்தை பெரியார். காங்கிரசை விட்டு தந்தை பெரியார் வெளியேறுவதற்குக் காரணமாக இருந்தவைகளுள் ஒன்று சேரன்மாதேவி குருகுல நடப்பாகும்; காங்கிரஸ் நிதியில் நடத்தப்பட்ட அந்தக் குருகுலத்தில் மாணவர்களிடையே பிராமணன் - சூத்திரன் என்று காட்டப்பட்ட பிளவும் ஒன்றாகும்.

தந்தை பெரியார் மேற்கொண்ட கடவுள் எதிர்ப்பு - மத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு, சாஸ்திர எதிர்ப்பு, இதிகாசங்கள் எதிர்ப்பு - புராணங்கள் எரிப்பு - ஏன் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவு எரிப்பு என்று எடுத்துக் கொண்டாலும், இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஜாதி ஒழிப்பாகும்.

இதனைப் புரிந்துகொள்ளாமலோ, புரிந்து கொண்டு வேண்டுமென்றே ஜாதிக்குக் கைலாகு கொடுப்போர் யாராக இருந்தாலும், தந்தை பெரியார் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

அரசியலில் நுழைந்து அதில் தாம் ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொள்ள முடியாதவர்கள் எந்தவித மான தெளிவான கொள்கைக் கோட்பாடு இல்லாத வர்கள், எளிதாகப் பற்றக் கூடிய ஜாதித் தீயை மூட்டி குளிர்காய ஆசைப்படுகிறார்கள்.

ஒரு முக்கால் நூற்றாண்டு காலம் தந்தை பெரியார் அவர்களாலும், அவர்தம் இயக்கத்தாலும் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் மண்ணில் அத்தகைய நச்சு விதைகள் முளைக்க முடியாது - தமிழ்நாடு அதனை உதறித் தள்ளும்.
தமிழ்நாட்டைத் தாண்டி வேறு மாநிலங்களுக்குச் சென்று சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

பிள்ளைகளிடம் ஜாதியைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள் என்று சொல்லும் சிலரின் மனங்கள் சொத்தையாகப் போய்விட்டன.

ஜாதியை ஒழித்தே தமிழின ஒற்றுமையை - ஓரினக் கோட்பாட்டை உருவாக்கியவர் தந்தை பெரியார்; மீண்டும் ஜாதியைச் சொல்லி தமிழன் என்ற இன உணர்வை மழுங்கடிக்க முயலுவதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

இதில் தமிழ்த் தேசியம் பற்றிய பேச்சு வேறு! ஜாதியை வளர்க்க ஆசைப்படுபவர்கள், எப்படி தமிழ்த் தேசிய உணர்வை வளர்க்க முடியும்? இது ஒரு கடைந்தெடுத்த தன் முரண்பாடு அல்லவா!

தலித் மக்கள் அல்லாதவர்கள்தான் தமிழர்கள் என்று சொல்லப் போகிறார்களா? அவர்கள் கூறும் தமிழ்த் தேசியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அடங்க மாட்டார்களா?

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லிப் புறப்பட்டவர்கள் இந்த இடத்தில் தங்களுக்குத் தாங்களே புதைச் சேற்றில் சிக்கிக் கொள்ள வில்லையா?
தமிழ்த்தேசியம் என்றால் ஜாதி ஆதரிப்பு! திராவிடம் என்றால் ஜாதி ஒழிப்பு என்று மிக எளிதாகப் புரியும்படி விளங்கும்படிச் செய்துவிட்ட னரா இல்லையா?

கழகம் மேற்கொள்ளும் தொடர் பிரச்சாரத்தில் இவை எல்லாம் அம்பலப்படுத்தப்படும். திராவிடத்தின் அருமை விளக்கிக் கூறப்படும்!

ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்படும். ஜாதியற்ற சமூகம் படைத்திட திராவிடர் கழகத்தின் இந்தப் பிரச்சாரம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.
               ------------------------"விடுதலை” தலையங்கம் 24-1-2013

23.1.13

திராவிடர் கழகம் நம்பர் 1 எதிரி!

தற்காப்புக்குக் கத்தி வைத்துக்கொள்ள தீர்மானம் போட்ட ஆத்தூருக்கு வாரீர்!
திராவிடர் கழகம் நம்பர் 1 எதிரி!

துவேஷத்தில் ஊறிய மூட்டைப் பூச்சிகள் - எறும்புகள் - நசுக்கவேண்டும் இப்படியெல்லாம் கூடப் பேசி இருப்பார்களா? என்று இன்றைய இளைய தலைமுறையினர் கேட்கக்கூடும்.

ஆம்! பேசி இருக்கிறார் - பேசி இருப்பவரும் சாதாரணமானவர் அல்லர். அன்றைய சென்னை மாநிலத்தின் முதலமைச்சர், உடம்பெல்லாம் மூளை உடையவர் என்று அக்கிரகார உலகத்தால் தூக்கிப் பேசப்படும் ஆச்சாரியார்தான் (ராஜாஜி) இப்படிப் பேசினார். அவர் பேச்சைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

சில காலத்திற்கு முன் எனது முதல் நம்பர் எதிரி கம்யூனிஸ்ட்கள் என்று கூறினேன். இப்போது அதை மாற்றிக் கொள்கிறேன். கம்யூனிஸ்ட்கள் முதல் நம்பர் எதிரியல்ல. திராவிடர் கழகத்தினர் தான் முதல் நம்பர் எதிரி.
இந்நாட்டில் ஜாதிப் பிரச்சினைதான் மிகத் தொல்லை கொடுக்கக் கூடியதாக இருந்து வருகிறது. ஜாதிப் பிரச்சினையை வைத்துக் கொண்டு திராவிடர் கழகம் நாட்டில் துவேஷப் பிரச்சாரத்தைச் செய்து வருகிறது.

ஜாதி வித்தியாசங்கள் இப்போது மறைந்து போய்விட்டன. மறைந்து போன ஒன்றை அதாவது பிரேதத்தை வைத்துக்கொண்டு திராவிடர் கழகம் ஜாதி வித்தியாசமிருந்து வருகிறதாக பிரச்சாரம் செய்து வருகிறது.

திராவிடர் கழகத்தின் இத்தகைய விஷப் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தவேண்டு மென்று உங்களை (காங்கிரஸ் ஊழியர்களை) மண்டியிட்டு, தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

அவர்களது நடவடிக்கைகள்மீது நீங்கள் பார்வையைச் செலுத்துங்கள் என்றால், அவர்களை ஒரு கை பாருங்கள் என்பதாக கிராமாந்தர மக்கள் கருதுவதுபோல் கருதி விடாதீர்கள்.

நீங்கள் பார்த்துக் கொள்ளவேண்டிய தெல்லாம் இவர்களது பிரச்சாரம் அரசியலிலே கலக்காமல் பார்த்துக் கொள்வதுதான்.

இதனால் நீங்கள் ஒற்றுமையாயிருக்க வேண்டியது அவசியமாகும்.
இனி கம்யூனிஸ்ட்களைக் குறித்து நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. கம்யூனிஸ்ட்களைவிட கழகத்தார்தான் அபாயகரமானவர்கள். இவர்கள் பிரச்சாரம்தான் சாதாரண மக்கள் மனதைப் பற்றிக் கொள்கிறது. நம் சிறுவர்கள், சிறுமிகள் மனம் இதில் பெருமளவுக்கு கவ்வியிருக்கிறது.
இப்போது ஆந்திரர்கள் போய்விட்டார்கள். இனி தமிழ்நாட்டில் தங்கள் பிரச்சாரத்திற்கு நல்ல வாய்ப்பிருக்கிறதாக அவர்கள் நினைக்கலாம். இதற்கு இடம் தரலாகாது.

ஒவ்வொரு இலாகாவிலும் எத்தனை பிராமணர்? எத்தனை வடகலை? எத்தனை தென் கலை? ஸ்மார்த்தர்கள் எத்தனை பேர்? என்ற பட்டியலைப் போட்டுக் காட்டலாம். அவர்களின் முக்கிய நோக்கமே, காங்கிரஸ்காரர்களின் மனதைக் கெடுக்கவேண்டுமென்பதுதான்.

இதெல்லாம் பார்க்கும்போதுதான், மந்திரி சபையை விரிவுபடுத்தவேண்டுமென்று கருதுகிறேன்.

சாதாரண நபர் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட உத்யோகத்தைக் கொடுத் தால்கூட, அவர் எந்த வகுப்பு? எந்த ஜாதி? என்பனபோன்ற ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறார்கள். உடனே கிளர்ச்சி செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்.
திராவிடர் கழகப் பத்திரிகைகள் தினம் துவேஷப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இவைகளைத் தண்டிப்ப தென்றால், தினம் தண்டனை கொடுத்து வரலாம். தண்டனை கிடைத்தால் உடனே பெரும் கூச்சல் போட ஆரம் பித்துவிடுவார்கள்.

திராவிடர் கழகத்தினர் இனிமேல் அதிக கோபப்படுவார்கள். அதைச் சமாளிக்க உங்களுக்கு மனோ தைரியம் வேண்டும்.

இனி தமிழ்நாடு சந்தோஷமாக இருக்கவேண்டுமானால், எப்படியாவது திராவிடர் கழகக் கணக்கை கட்டி வைத்துவிட வேண்டும். அவர்களது கணக்குப் புத்தகத்தை மூட்டை கட்டி வைத்துவிட வேண்டும். அவர்கள் செய்கை இனி வரலாற்றில்தான் இடம்பெற வேண்டுமேயல்லாது, நாட்டில் காணுமாறு விடக் கூடாது. இதற்கான நடவடிக்கையை காங்கிரஸ்காரர்களாகிய நீங்கள் எடுக்க வேண்டும்.

                            --------------------(சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் சென்னை மாநில முதலமைச்சர் சி.இராசகோபாலாச்சாரியார் - விடுதலை, 4.10.1953)

மூட்டைப் பூச்சிகள் - எறும்புகள்!

துவேஷத்தில் ஊறிப் போய் வகுப்புத் துவேஷத்தைப் பரப்பும் திராவிடர் கழகம் போன்றவை எறும்புகளுக்கும், மூட்டைப் பூச்சிகளுக்கும் சமம். ஆனால், எறும்புகளும், மூட்டைப் பூச்சிகளும் மறைந்திருந்து நம்மைக் கடிக்காதபடி வெளிப்படையாக வந்து கடிக்கின்றன. கடி பலமாக இருக்கும்போது இவைகளை நசுக்கவேண்டியது இயற்கையே.

வகுப்பு வித்தியாசங்கள்தான் அந்த எறும்பு களுக்கு வெல்லம்போல் இருக்கிறது. அந்த வெல்லத்தை அகற்றி விரட்டினால் எறும்புகள் நம்மை விட்டுச் சென்றுவிடும். இவ்வேலையை காங்கிரஸ் ஊழியர்கள் மேற்கொள்ளவேண் டும். கம்யூனிஸ்ட்களை நாம் அடக்கிவிட்டோம். இந்த எறும்பு, மூட்டைப் பூச்சிகளையும் ஒழித்துக் கட்டவேண்டும்.

            --------------------(திருப்பூர் காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஆச்சாரியார் - விடுதலை, 6.10.1953)

கருஞ்சட்டைகள் பேசினால் துவேஷம் - காழ்ப் புணர்ச்சி. பேசியிருப்பவர் ஆச்சாரியாயிற்றே - அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் ஆயிற்றே - அதுவும் அக்கிரகாரவாசியாராயிற்றே - அக்னியைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிற்றே- அவர்கள் ஆயிரம் பேசலாம் நாம் கேட்டுக் கொண்டுதானிருக்க வேண்டும் - அப்படித் தப்பித் தவறிப் பேசிவிட்டால் நாயக்கர் கட்சிக்காரர்கள் அல்லவா - அப்படித்தான் பேசுவார்கள்;
நாக்கில் நரம்பின்றிப் பேசுவார்கள் என்று அவர்கள் கைகளில் உள்ள பத்திரிகை ஜடாயுதத்தைக் கொண்டு தாக்குவார்கள்.

அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் சேலம் ஆத்தூரில் சுயமரியாதை - திராவிடர் கழக மாநாடு நடத்தப்பட்டது (10, 11.10.1953).

அந்த மாநாட்டின் சிறப்பு என்ன தெரியுமா? அதிக தீர்மானங்கள் கிடையாது. ஒரே ஒரு தீர்மானம் முத்தாய்ப்பான தீர்மானம்.

பார்ப்பனர்கள் திராவிடர் கழகத்தை ஒழிப்பதற்காக திராவிட மக்களுக்குள்ளாகவே கலக மூட்டவும், தூண்டிவிடவும் முயல்வதால், கழகத் தோழர்கள் நிராயுதபாணிகளாக இருக்கிறார்கள் என்று கருதி காலித்தனம் - பலாத்காரம் செய்யத் தூண்டுமாதலால், திராவிடர் கழகத்தினர் சட்டத் துக்குக் கட்டுப்பட்ட அளவுக்கு ஒவ்வொருவரும் ஆணும் - பெண்ணும் ஒரு கத்தியைத் தற்காப்புக்காக அவசியம் எப்போதும் மடியில் வைத்திருக்க வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. 10, 11.10.1953 ஆத்தூர் (சேலம்) சுயமரியாதை - திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

(முதலமைச்சரே திராவிடர் கழகத்தினரை எறும்பு, மூட்டைப் பூச்சி போல் நசுக்கவேண்டும் என்றும், அவர்களின் கணக்கை முடிக்கவேண்டும் என்றும், போலீசார் தலையிடமாட்டார்கள் என்றும் வெளிப்படையாகச் சொன்ன நிலையில்தான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கியமாகும்).

அதே சேலம் ஆத்தூரில்தான் வரும் ஞாயிறன்று (27.1.2013) திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் எழுச்சி மண்டல மாநாடு.

காலம் மாறிவிட்டதே- அன்று ஆச்சாரியார் கக்கிய விஷத்தை இன்றைக்குப் பார்ப்பனர்கள் மறுபதிப்புச் செய்கிறார்களா என்று கேட்கலாம்.
அதிலென்ன சந்தேகம்? முன்பைவிட சாமர்த்தியமாகச் செய்கிறார்கள் - நுட்பமாகச் செய்கிறார்கள் - திட்டமிட்ட வகையில் செய்கிறார்கள்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற சட்டம் ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திலே ஒருமுறையல்ல - இருமுறை நிறைவேற்றப்பட்டும் இருமுறையும் உச்சநீதிமன்றம் சென்று முடக்கியவர்கள் யார்?
பார்ப்பனர்கள்தானே!

கோவிலில் வழிபாட்டு மொழி தமிழில் என்றால், அதனை எதிர்த்தும் நீதிமன்றம் சென்றவர்கள் யார்?

பார்ப்பனர்கள்தானே!

தமிழ் செம்மொழி என்றால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வருமா என்று எழுதும் ஏடு எது?

பார்ப்பன தினமலர்தானே!

தமிழ்நாட்டு வணிக நிறுவனங்களின் பெயர் தமிழில் இருக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்தால், இது ஒரு மொழி நக்சலிசம் என்று எழுதும் சோ  யார்?
பச்சைப் பார்ப்பனர்தானே!

ஜாதித் தீயை விசிறி விடுகிறார் பா.ம.க. நிறுவனர் என்றவுடன், அவருக்கு வக்கீலாக வந்து வாதாடுபவரும் சோ பார்ப்பனர்தானே!

இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்? என்று இன்றைக்கும் புத்தகம் வெளியிடுகிறதே விஜயபாரதம்   கம்பெனி? அவர்கள் யார்?
சாட்சாத் பார்ப்பனர்கள்தானே!

சென்னை அண்ணாநகரில் பச்சையாக பிராமணர் மாநாடு போட்டு, அரிவாளைத் தூக்கிக் காட்டி ஆணவ ஆரியக் கொள்ளிகளாக தங்களை அடையாளப்படுத்த வில்லையா?

எழுத்தாளர் சுஜாதா, இயக்குநர் பாலச்சந்தர் போன்றவர்கள் எல்லாம் அந்த மாநாட்டில் பங்கேற்று, ஆம், நாங்கள் பிராமணர்கள்தான் - பூணூல்காரர்கள் தான்!  என்று அடையாளம் காட்டிக் கொள்ளவில்லையா?

நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதே (1976) நினைவிருக்கிறதா?
சட்டைப் பனியனுக்குள் ஒளித்து வைத்திருந்த பூணூலை அந்தக் காலகட்டத்தில் சட்டைக்கு வெளியே தெரியும்படி காட்டி நம்மைப் பார்த்து பழிப்புக் காட்டினார்களே, மறந்துவிட முடியுமா?

விடுதலையில் தந்தை பெரியார் என்று போடக் கூடாது என்று தணிக்கை செய்தவர்கள் யார்?

சங்கராச்சாரியாரின் சீடர்களான பார்ப்பனர்கள் தானே?

மானமிகு கலைஞர் அவர்களைப் பார்த்து ஜென்மப் பகைவர் என்று சொன்னவர்தானே இன்றைய முதலமைச்சர் -
அவரும் பார்ப்பனத்திதானே!

இன்றுவரை ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புது முறுக்குடன் புதுப்பித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

வடக்கே - வி.பி. சிங், லாலுபிரசாத்
தெற்கே - கலைஞர், வீரமணி

என்றால், இன்றுவரை பார்ப்பன ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள் - எரிச்சலைக் கொட்டிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

காலம் மாறுகிறது - ஆனாலும் பார்ப்பனர்களின் முறைகளில் மாற்றம் இருக்கிறதே தவிர, அடிப்படையில் அணு அளவும் மாற்றமில்லை. பா.ஜ.க. எனும் பசப்பு அரசியல் வேடம்தாங்கி பார்ப்பனீயம் பாசிச வாயை அகலமாகத் திறந்துகொண்டுதானே திரிகிறது!

நம் பணி வேறு எந்தக் காலகட்டத்தைக் காட்டிலும் இப்பொழுது மிக அதிகமாகவே தேவை! தேவை!!

அந்தத் தேவையின் வீச்சை வெளிப்படுத்துவோம் வாருங்கள், சேலம் ஆத்தூருக்கு.

வரும் ஞாயிறன்று எழுச்சிமிகு ஊர்வலம் - ஏற்றமிகு மாநாடு.
தமிழர் தலைவர் கருத்துரை தருகிறார் - 1953-க்குப் பிறகு மீண்டும் ஓர் எழுச்சியைத் தரட்டும் ஆத்தூர்.

மாநாட்டுப் பணிகளைத் தடபுடலாகச் செய்துகொண்டு இருக்கிறது கருஞ்சட்டைச் சேனை!

ஆத்தூரில் சந்திப்போம், அரிமாக்களே!

அவசியம் வாருங்கள் - குடும்ப உறுப்பினர்களோடு வாருங்கள்! வாருங்கள்!!

             -----------------------------"விடுதலை” 23-1-2013  இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

22.1.13

காவி தீவிரவாதம் இதோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பார்க்கலாம்!


காவி தீவிரவாதம் குறித்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியதில் தவறு என்ன?
அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே!
மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை
காவி தீவிரவாதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்துக்கு அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே. அப்படிக் கூறியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பி.ஜே.பி. கூறுவது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அவர்கள் கூறியிருப்பதை எதிர்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும்; இல்லையேல் 24ஆம் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம்; ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் உடனே ஆர்ப்பரித்துள்ளனர்!

அவர் ஏதோ ஆதாரமில்லாமல் பேசியதைப் போல ஊடகங்கள் உயர்ஜாதி, பார்ப்பன, ஹிந்துத்வாவாதிகளின் ஆயுதங்களாக இருப்பதால், இதற்காக ஓங்காரக் கூச்சல் இடுகின்றனர்!

இதோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பார்க்கலாம்!

தங்களை சுத்த சுயம் பிரகாசிகளாகக் காட்டிக் கொள்ளும் இந்த வீராதி வீரர்கள், நமது சில கேள்விகளுக்கு விடை கூறட்டும்!

1. மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் எல்லாம் லேபிளை மாற்றிக் கொண்ட ஹிந்துத்துவா வாதிகள் அல்லாமல் வேறு யார்?

இந்திய இராணுவத்தில் ஊடுருவி, அங்குள்ள RDX என்ற சக்தி வாய்ந்த வெடி மருந்து, பொருள்களைக் கடத்தி, பயிற்சி தந்து பிறகு சிக்கிக் கொண்டு, சிறைவாசம் அனுபவிப்பதோடு, காவி அணிந்த சந்நியாசி வேடம் தரித்து தாங்கள் செய்த வன்முறைகளை - இஸ்லாமியர்கள் மீது பழி போட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு யார்?

2. அண்மையில் வெளியான செய்தியில் இவர்களின் முக்கிய புள்ளியான ஒருவர்தான் (உயர்ஜாதி பார்ப்பனர் அவர்) குஜராத் சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ வைத்து கொளுத்தியது (கோத்ரா ரயில் எரிப்பு) அய்தராபாத் குண்டு வெடிப்பு ஆகிய எல்லாவற்றுக்கும் சூத்திரதாரிகளாக இருந்தனர் என்ற செய்தி சென்ற வாரம் வரவேயில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 13.1.2013).
புலன் விசாரணை செய்த ஆய்வு நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டு ஏடுகளில் வெளி வந்துள்ளதே!

3.பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளின் பட்டியலில் இவர்கள் அமைப்பினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா - இல்லையா?

உ.பி. முதல்வர் கல்யாண்சிங் என்ன கூறினார்?

4. அந்நாள் உ.பி. முதல் அமைச்சர் கல்யாண் சிங் தந்த ஒரு பேட்டியில், இவர்களை நம்பித்தான் நான் உத்தரவாதம் அளித்தேன்; ஆனால் இவர்கள் இடித்து தரைமட்டமாக்கி என்னை குற்றம் புரிந்தவர்கள் பட்டியலில் இடம் பெற வைத்தனர் என்று மனம் நொந்து கூறவில்லையா? அந்த இடிப்பின் எதிர்வினையாகத் தானே நாட்டில் 3000, 4000 பேர்கள் கொல்லப்பட்டதும், ரத்த ஆறு ஓடியதுமான கோரத் தாண்டவம்! இது நடைபெற்றதற்கு மூல காரணம் யார்? தென்காசியில் சொந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - இந்து முன்னணியினர் ஒருவரைக் கொன்று, அதை முஸ்லீம்கள்மேல் பழி போட்டு, மதக் கலவரம் ஏற்பட்டு மோதல்களுக்குப்பிறகு, இவர்களே நடத்திய நாடகம் என்ற உண்மை ஒப்புதல் வாக்குமூலம் வரவில்லையா?

காந்தியாரைக் கொன்றவன் யார்?

5. தேசப்பிதா காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு பயிற்சிக்கூடம் ஆர்.எஸ்.எஸ். என்பதும், அவர் சம்பவத்திற்குமுன் விலகியிருந்தார் என்பது புறத்தோற்றம் அல்லவா! அதனை மறுத்த நிலையில், அவரது தம்பி கோபால் கோட்சே - பூனாவில் தனது அண்ணன் நாதுராம் விநாயக் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தவர் என்பதை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள் என்று பிரண்ட் லைன் ஆங்கில ஏட்டிற்குப் பேட்டி அளித்த போது சொல்லவில்லையா?

6. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா?

7. டெல்லியில் பச்சைத் தமிழர், அ.இ.காங்கிரஸ் தலைவர் காமராஜரை பட்டப் பகலில் அவர் வீட்டிற்குத் தீ வைத்து உயிருடன் கொளுத்த முயன்றவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகளும், நிர்வாண சாமியார்களும், ஆன (பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரில்) இந்துத்துவா தீவிரவாதிகள் அல்லாமல் வேறு யார்?

8. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்து, விவாதித்துக் கொண்டு இருக்கையில் கையை முறுக்கி வன்முறையில், ஈடுபட்டு பிறகு விரட்டப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அல்லவா?

ஆதாரம் இல்லாமலா பேசுகிறார்- உள்துறை அமைச்சர் ஷிண்டே?

உண்மையை ஊடகங்களின் ஓங்காரச் கூச்சல் மூலமாக, மறைத்துவிட முடியாது.

திரு. ஷிண்டே அவர்கள் உள்துறை அமைச்சர்; ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்? நடைபெற்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன? ஹிந்துத்துவா பேசுவோர்தானே! வழக்கு நீதிமன்றத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமாக நடக்கும் நிலையில் இதுபற்றி உள்துறை அமைச்சர் பேசலாமா? என்ற அருள் உபதேசம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.காரரை - உணர்வாளரை ஆசிரியராகக் கொண்டுள்ள தினமணி நாளேடு?

என்னே திடீர் ஞானோதயம்! ஏன் இதே வாதம் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்திலும், டில்லி தனி நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிற நிலையில் இவர்கள் எவ்வளவு எழுதினார்கள் - பேசினார்கள் - விமர்சித்தார்கள்? பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி என்ற அண்ணாவின் ஆரிய மாயை வரிகள்தான் இவர்களைப்பற்றி நம் நினைக்கு வருகிறது.

தாழ்த்தப்பட்டவர் என்பதாலா?

மாண்புமிகு ஷிண்டே அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை அமைச்சராக இருப்பது என்பது பார்ப்பன உயர் ஜாதி வர்க்கத்திற்கு  உறுத்தலாகத் தானே இருக்கும்; அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும்!

ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்!


-------------------------------கி.வீரமணி தலைவர்,  திராவிடர் கழகம் சென்னை"விடுதலை”22.1.201

21.1.13

ஆதிதிராவிட கிருஸ்தவர்கள் மாநாட்டில் பெரியார்

லால்குடி – தாலூகா ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் மகாநாடு
தலைவரவர்களே! தோழர்களே!! இன்று உங்களை இவ்வளவு பெரிய கூட்டமாகக் காண்பது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இங்கு எதற்காக இந்த வெய்யில் காலத்தில் கஷ்டப்பட்டு வந்து சேர்ந்து கூடியிருக்கின்றீர்கள். உங்களுடைய இன்றைய நோக்கமெல்லாம் இந்து மதத்தில் எவ்வளவோ காலமிருந்து கீழான ஜாதியாய் கருதப்பட்டு நீங்கள் அடைந்து வந்த இழிவைப் போக்கிக் கொள்வதற்காக வேறு மதத்தில் வந்துசேர்ந்தும் அங்கும் அந்த இழிவு இருந்து உங்களைப் பழைய கருப்பனாகவே நடத்தி வந்தால் எப்படியாவது அந்த இழிவை போக்கிக் கொள்ள வேண்டுமென்ற உணர்ச்சியின் மீது இந்த மகாநாட்டைக் கூட்டி நீங்கள் எல்லோரும் இங்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். ஆனால் இந்த மகா நாட்டில் பலர் ஆவேசமாய் பேசிவிடுவதினாலும், பலர் அதிதீவிரமான தீர்மானங்கள் செய்து விடுவதினாலும் உங்களுக்கு ஏதாவது ஒரு பெரிய பலன் கிடைத்து விடுமா? என்று பார்த்தால் அது முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் இம்மாதிரி தீர்மானங்களும், இம்மாதிரி ஆவேசப் பேச்சுகளும் வெகுகாலமாக நடந்துகொண்டேதான் வருகிறது. ஆனால் இவையெல்லாம் மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்களால் அலட்சியமாக கருதி அசட்டை செய்யப்பட்டுதான் வருகிறது. உங்களுக்கு மதப்பித்தின் பயனாக சு. ம. உணர்ச்சி இல்லை யென்பதை உங்கள் பாதிரிமார்கள் நன்றாய் உணர்ந்தி ருக்கிறார்கள். கட்டுப்பாட்டை மீறி நீங்கள் ஏதும் செய்யமாட்டீர்களென்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்களும் மதத்திற்காகவும், கடவுளுக் காகவும் எவ்வளவு கஷ்டங்களையும் , இழிவுகளையும் பொறுத்துக்கொண்டு வெறும் வாயினாலே மாத்திரம் எதையாவது பேசிக்கொண்டிருப்பீர்களே யொழிய கட்டுப்பாடுகளை மீறவோ உங்கள் இழிவுக்குக் காரணமானவற்றை உதறித் தள்ளவோ அதை அழிக்க முயற்சிக்கவோ ஒரு நாளும் சம்மதிக்க மாட்டீர்கள்.

உண்மையான விடுதலை உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் இழிவுக்கும், அடிமைத் தன்மைக்கும் அஸ்திவாரமான ஆதாரத்தை அழிக்க நீங்கள் தைரியம் கொள்ள வேண்டும். அந்த தைரியம் எவ்வித கட்டுப்பாடு களையும், நம்பிக்கைகளையும் உடைத்தெரிய தக்கதாகயிருக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் வீணே வாய்ப்பேச்சிலும், காகிதத் தீர்மானத்திலும் சாதித்து விடலாமென்று கருதுவது பைத்தியகாரத்தனமாய் தான் முடியும். நீங்கள் கீழ் ஜாதி என்பதும், தொடக்கூடாதவர்களென்பதும், சமத்துவமளிக் காமல் தனியாய் வைக்கப்பட வேண்டியவர்களென்பதும் ஆகிய காரியங் களுக்குவென்றும் மதமோ, பழக்கவழக்கமோ, சாஸ்திரமோ, கடவுள் செயலோ என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டமேயாகும். உங்களுடைய கீழ் சாதி தன் மைக்கும் மேற்கண்ட காரியங்களுக்கும் யாதொரு சம்பந்தமுமே கிடையாது. உண்மையான காரணத்தைச் சொன்னால் ஒரே நிமிஷத்தில் நீங்கள் அவர்கள் மீது பாய்ந்து சின்னாபின்னமாய்க் கிழித்தெறிந்து விடுவீர்களென்று கருதி ஏதேதோ சாக்கு போக்குகளைச் சொல்லி உங்களை ஏமாற்றுவதற்கு கடவு ளையும், மதத்தையும், பழக்க வழக்கத்தையும் சொல்லி வருகிறார்கள். கடவுள் மதத்தினர் கட்டளை என்றபடி பழக்க வழக்கங்கள் என்ற முறைப்படி யார் நடக்கிறார்கள்? அவர்கள் சொந்த விஷயத்தை பொறுத்த மட்டில் எவ்வித கட்டுப்பாட்டிற்கும் பழக்க வழக்கத்திற்கும் கடவுள் மத கட்டளைக்கும் கீழ்படியாமல் தங்கள் இஷ்டம் போலவே சமயத்திற் கேற்றபடியே நடந்து கொள்கிறார்கள். ஆனால் பிறத்தியானை அடக்கி ஆண்டு அடிமை கொள்வதற்காக மாத்திரம் இந்தப்படி சொல்லி பயன் பெறுகிறார்கள்.

கீழ் ஜாதி என்பதாக ஒரு பிரிவு எதற்காக? யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதின் ரகசியத்தை உணர்ந்தால் பிறகு அதை அழிக்கும் விஷயம் வெகு சுலபமாக விளங்கி விடும்.

கீழ் ஜாதி, மேல் ஜாதி என்று சொல்வதின் தத்துவம் என்பதைப் பாருங்கள். ஒரு பார்ப்பானையும், ஒரு பறையனையும் கூட்டிவந்து நிறுத்தி கீழ் ஜாதி, மேல் ஜாதி என்பது அவர்களிடத்தில் எப்படி விளங்குகிற தென்று பார்த்தால் மேல் ஜாதி என்பவன் பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வாழ்கிறவன் என்பதும், கீழ் ஜாதி என்பவன் பாடுபட்டு உழைத்து உழைப்பின் பயனையெல்லாம் அன்னியருக்கே அழுதுவிட்டு வீடில்லாமல், துணியில்லாமல், கஞ்சியில்லாமல், கல்வியில்லாமல், மிருகத்திலும் கேடாய் வாழ்கிறவன் என்பதும் நன்றாய் விளங்கும். ஆகவே கீழ் ஜாதி தன்மை ஒழிய வேண்டும் என்று கருதுகிற ஒருவன் அன்னியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோமென்கிற எண்ணத்தை விட்டு விட்டு நமது உழைப்பின் பயனை சோம்பேறிகள், பாடுபடாத மக்கள் அனுபவிக்க விடக்கூடாது என்கிற உறுதி கொண்டு, பிறவியில் நமக்கும் மற்றவருக்கும் எவ்வித வித்தியாமுமில்லை என்கின்ற உறுதியோடு சோம்பேறி கூட்டத்தோடு எவன் போர் தொடுக்க முனைந்து நிற்கின்றானோ அவனே இவ்வித இழிவுகளை நீக்கிக்கொள்ள அருகதையுள்ளவனாக ஆகிறான். அதைவிட்டு விட்டு மதக்கட்டளையை மதிப்பவன், பாதிரிகளின் சொல்லுக்கு கீழ்படிந்துதான் ஆக வேண்டும். கடவுள் நம்பிக்கையை கொண்டவன் அவனவன் தற்கால நிலைமைக்குக் காரணம் “கடவுள் சித்தம்” என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். மத கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்ற மடையவோ முடியவே முடியாது. மத கட்டளையும், கடவுள் நம்பிக்கையும், மேல்ஜாதிக்காரனுக்கும், பாதிரிகளுக்கும், முதலாளிகளுக்கும் தான் மேன்மை யையும், அனுகூலத்தையும் அழிக்கக் கூடியதாகும். இந்த நாட்டில் 1000 கணக் கான வருஷங்களாக ஏழை மக்களும் தாழ்ந்த ஜாதிக்காரர்களும் இருந்துதான் வருகிறார்கள். அவர்கள் அன்று முதல் இன்றுவரை மத பக்தியும், கடவுள் பக்தியும் கொண்டு அதற்காக எவ்வளவோ பணத்தையும், நேரத்தையும், செலவு செய்து தங்கள் கஷ்டங்களும், இழிவுகளும் ஒழிய வேண்டுமென்று பிரார்தனை செய்து கொண்டு தான் வந்திருக்கிறார்கள். ஏழைகளின் எண்ணிக்கை குறைந்ததா? கீழ் ஜாதிக்காரர்களின் எண்ணிக்கை குறைந்ததா? அல்லது இவர்களுடைய கஷ்டமாவது ஒழிந்ததா? யோசித்துப் பாருங்கள்.

உலகில் எவ்வளவோ அதிசயங்களும், அற்புதங்களும், முன்னேற்ற மான காரியங்களும் நாளுக்குநாள் விருத்தியடைந்தும் அதற்கு தகுந்த படி தொழில் முறைகளும், யந்திர சௌகரியங்களும், ஒன்றுக்குப் பத்து நூறாய் உயர்ந்தும் இவற்றின் பயனாய் லட்சாதிபதிகள் பத்துலட்சாதிபதியாகவும், பத்து லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்களாகவும்தான், முடிந்ததேயொழிய உங்களு டைய நிலைமை அன்றும் இன்றும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது. நீங்கள் ஒரு உயிருள்ள இயந்திரம் போல் தான் இருக்கிறீர்கள். இயந்திரங் களுக்கு எப்படி எண்ணை ஊற்றினால் எண்ணையிருக்கிற வரையில் ஓடுகிறதோ அதுபோல் உங்களுக்கு ஏதாவது ஆகாரம் கொடுத்தால் அது ஜீரணமாகிறவரையில் வேலை செய்துவிட்டு மடிவது என்கிற முறையில் தானிருக்கிறீர்கள்.

உங்களுக்கு உங்களுடைய பிரதி பிரயோஜன மெல்லாம் உங்களு டைய வயிற்றுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுதான். அதுவும் நீங்கள் சாகாமலிருப்பதற்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தான் என்பதாகப் பதினாயிர வருஷங்களுக்கு முன்பதாகவே நிர்ணயிக்கப் பட்டுவிட்டது. இந்த நிர்ணயத்தை மீறி நீங்கள் அதிகம் கேட்காமல் இருக்க வேண்டுமென் பதற்காகத்தான் உங்களை பறையர், சக்கிலியர் என்று சொல்லி தீண்டாத சாதியார்களென்று ஆக்கியும் உங்கள் அண்ணன்மார்களை யெல்லாம் ‘அடிமை’ ‘பார்ப்பானின் வைப்பாட்டி மகன்’ ‘சூத்திரன்’ என்று சொல்லி தாழ்ந்த ஜாதியும் ஆக்கிவைக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு ஜீவனத்திற்காக என்று கொடுக்கப்படும் கூலிகளும் உங்கள் மீதுள்ள கருணையினால் என்று நினைத்து விடாதீர்கள். இந்த ஆகாரமும் இல்லாமல் மடிந்து போவீர் களேயானல் நாளைக்கு மேல் ஜாதிக்காரர்களுக்கும் முதலாளிமார்களுக்கும் வேலை செய்ய ஆள் இல்லாமல் போகுமே என்கின்ற சுயநல கருணை கொண்டுதான் மாடு வளர்க்கிறவன் தீனி போடாவிட்டால் பால் கறக்காதே. பாடுபடாதே என்று கருதி அதற்கு தீனிபோடுவது போல் உங்களுக்கும் ஜீவனத்திற்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை மாறவேண்டு மென்பதில் தான் உங்களுடைய முக்கிய வேலையாக இருக்க வேண்டுமே யொழிய சும்மா பறையர் பட்டம் போனால் போதும், கிறாதியை எடுத்து விட்டால் போதும், கோயிலுக்குள் நுழைய விட்டால் போதும் என் றெல்லாம் கருதுவதில் பிரயோசனமில்லை. கிறாதி வித்தியாசமில்லாமலும் பறஜாதி பட்டம் இல்லாமலும் கோயிலுக்குள் போய் தொழுகிற உரிமை யுடனும் இருக்கின்ற கோடிக்கணக்கான மக்கள் கஞ்சிக்கு வகையில்லாமல் இருக்க, வீடில்லாமல் ஊர் ஊராய் பிச்சைக்காரர்கள் போல் லம்பாடிகள் போல் திரிவ தையும் மரத்து நிழல்களில் தலைக்கு கல்லையோ, கையை மடக்கியோ வைத்து படுத்துக்கொண்டிருப்பதை இன்றையதினம் எங்கும் பார்க்கலாம். இதற்குக் காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்.

ஆகவே உங்களுடைய கிளர்ச்சியானது பொருளாதாரத் துறையில் நீங்கள் மற்றவர்களால் ஏமாற்றப்படுவதும் வஞ்சிக்கப்படுவதும் ஒழிய வேண்டுமென்பதையே அஸ்திவாரமாகக் கொண்டிருக்கவேண்டும். அதில் தான் உங்கள் விடுதலை இருக்கிறது. எந்தக்கடவுளும், எந்த பாதிரியும் இதற்கு வகை செய்ய முடியாது?

உங்கள் மதங்களை எல்லாம், உங்கள் கடவுள் கட்டளை எல்லாம் “பொறு பொறு” “அவசரப்படாதே” “ஆத்திரப்படாதே” உனது வாழ்வில் உள்ள எல்லா துன்பங்களையும், எல்லா இழிவுகளையும் பொருமையோடு பொறுத்துக் கொண்டிருந்தால் நீ செத்த பிறகு மேல்லோகத்தில் கடவுள் உன்னுடைய பொறுமைக்காக நல்லசன்மானம் கொடுப்பார். அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவி பெறுவாய் பொறுத்தார் பூமியாள்வார் என்று தான் உபதேசிக்கும் இந்த உபதேசத்தை ஆயிரக்கணக்கான வருஷங்களாக கேட்டு கேட்டு அதன்படி பொறுமையாய் இருந்து வந்ததின் பலன் தான் இன்றும் இன்னமும் நீங்கள் பொறுமையாகவே இருந்து இழிவடைந்து கஷ்டப்பட்டு சீக்கிரம் செத்து கடவுளிடம் சன்மானம் பெற வேண்டியவர்களாக இருக் கின்றீர்கள்.

ஆகவே செத்த பிறகு மேல் லோகத்தில் அல்லது அடுத்த ஜன்மத்தில் பயன் பெறலா மென்கின்ற பித்தலாட்ட, சுயநல சூட்சியான உபதேசத்தை அடியோடு மறந்து இந்த ஜன்மத்தில் நீங்கள் சாவதற்கு முன் உங்கள் இழிவுக்கும், கஷ்டத்திற்கும் என்ன பரிகாரம் என்பதைக் கவனித்து அதற்குத் தக்கது செய்ய முன் வாருங்கள். இந்தப்படி நினைத்து தைரியமாய் முன் வந்த மக்கள் தான் இன்று உலகில் ஒருபக்கத்தில் அடிமையாய் கூலியாய் இழி ஜாதியாய் ஏழையாய் இல்லாமல் மனிதனாய் கவலையற்று தேசமே ஒரு குடும்பமாகவும் எல்லோரும் ஒரு தாய் வயிற்று சகோதரர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஆகவே இந்த விஷயங்களை கவனித்து நன்றாய் ஆலோசித்து தங்களுக்கு சரி என்று பட்டதை பின்பற்றுங்கள் என்பதை தெரிவித்துக் கொண்டு இத்துடன் முடித்துக் கொள்ளுகிறேன்.


-------------------------------------- 23.04.1933 இல் களத்தில் வென்றான் பேட்டை கிராமத்தில் நடைபெற்ற இலால்குடி தாலூக்கா ஆதிதிராவிட கிருஸ்தவர்கள் மாநாட்டில் தந்தைபெரியார்  சொற்பொழிவு."குடி அரசு' - சொற்பொழிவு - 07.05.1933

20.1.13

பெரியார் பற்றி தினமலர்

ஈ.வெ.ரா. 25 ஆயிரம் ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு, நீதிமன்றத் திற்குப் போய் இதோ பணம் இருக்கிறது... என்று சொன்ன சம்பவம் ஒன்று நடந்தது. என்.எஸ்.கிருஷ்ணனுக்கு, ஒரு வழக்கில் தண்டனை கொடுத்து விட்டனர் (1945). அன்று தீர்ப்பு சொன்னபோது, நீதிமன்றத்தில் பெரும் கூட்டம்.
ஜாமினில் எடுப்பதானால் பணம் வேண்டி இருக்கும் என்று யாரோ கூறினர். அதைக் கேள்விப்பட்ட ஈ.வெ.ரா.,  25 ஆயிரம் ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு, நீதிமன்றத்திற்கு வந்தார்.

இதோ பணம், 25 ஆயிரம் நான் தருகிறேன். ஜாமினில் எடுங்கள்... என்றார். ஆனால் , ஜாமினில் எடுக்க முடியவில்லை. தவித்துப் போனார், ஈ.வெ.ரா. அண்ணாதுரை முதல்வரான பின், அவருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்கா செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. பெரும் அளவில் பணம் செலவாகும் என்று பேச்சு எழுந்தது.

அதெல்லாம் அரசு செலவுதான். ஆனாலும், ஈ.வெ.ரா. பெருந்தொகையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து, அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் தனித்தனியாக, எவ்வளவு செலவானாலும், நான் தருகிறேன்... என்று மன்றாடியபோது, கலங்காத கண்களும் கலங்கின.


ஒருபுறம் பொதுப்பணத்தில் ஒரு காசுகூட தொடாத சிக்கன சிகாமணி. மறுபுறம், உற்றவருக்கு ஓடிவந்து உதவும் மனிதாபிமானம்.
இவை, ஈ.வெ.ரா., எனும் நாணய த்தின் இரண்டு பக்கங்கள்.

-----------------------------------------"தினமலர்" வார மலர் 20.1.2013 பக்கம் 15