Search This Blog

17.9.12

தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானனே ஒழிய பகுத்தறிவுவாதியாகவில்லை!

தமிழ்ப் படித்து பகுத்தறிவாளரானவர் யார்? - தந்தை பெரியார்



முதலாவது நான் பகுத்தறிவுவவாதி. எந்த விஷயத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவன் நான். பஞ்சேந்திரியங்களுக்கும் தெரியப்படும் விஷயங்களை நம்புவேனே தவிர, பஞ்சேந்திரியங்கட்கு புலப்படாத எதையும் நம்புவதில்லை. மற்றும் தமிழர்களுக்காக,நம் மக்களுக்காக தொண்டாற்றி வருகிறேன். தொண்டாற்றுவதில் கடவுள் பற்று, மதப் பற்று இன்றி தொண்டாற்றி வருகிறேன். அதனால்தான், உண்மையாகத் தொண்டாற்ற முடிகிறது என்று கொள்கைகளில் கருத்து வேற்றுமை உள்ளவர்கள் அநேகர் இருப்பார்கள் என்றாலும், என்னைப் பொறுத்தவரை எனது தொண்டு வீண்போக வில்லை என்று கருதித்தான் தொண்டாற்றி வருகிறேன்.

ஒரு சந்தர்ப்பத்தில் சேலம் கல்லூரியில் அப்போது இருந்த கல்லூரி முதல்வர் எனக்கு நண்பர். அவர் வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தமிழ்ப் பற்று என்கிற காரணத்தால் என் மீது மிகவும் அன்பு கொண்டவர். அவர் பேசும்போது, அய்யா அவர்கள் நாஸ்திகர் என்றாலும், மக்களுக்காகத் தொண்டாற்றுபவர் எனக் குறிப்பிட்டார். எனக்காகப் பேசியதாக இன்னொருவர் நான் நாஸ்திகன் அல்ல என்று வாதாடினார். அன்றும் இப்படித்தான் பேசுவதற்கு எனக்கு தலைப்புக் கொடுக்கவில்லை. என்ன பேசுவது என்று தெரியாமலிருந்தபோது இந்த நாஸ்திகம் என்பதையே வைத்துப் பேசினேன்.

அதுபோல, இங்கு தலைவரவர்கள்  தனது வரவேற்புரையில், தமிழைப் பற்றி குறிப்பிட்டர். இப்போது இது பரபரப்பாக இருக்கிறது.  பலர் என்னைக் கண்டித்து கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். சிலர், நீ தமிழனா? என்று கூடக் கேட்டு எழுதி இருக்கிறார்கள். சிலர் எனது கொள்கையை ஆதரித்தும் கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். நாம் எல்லோரும் தமிழ்நாட்டில் இருக்கிறோம், நாமெல்லாம் தமிழர்கள்தான்; நான் மொழிப்படி தமிழனல்ல; கன்னடியன். எனக்கு தமிழ் தெரிந்த அளவுக்கு கன்னடம் தெரியாது. அதற்காக நான் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை.

 தமிழன் சிறப்பைச் சொல்லும்போது, அது கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ் என்கிறான். தமிழ் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வழங்கி வருகிறது என்றாலும், இன்றும் அதனைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து அதன் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

நான் அயல்நாடுகளையெல்லாம் சுற்றியிருக்கிறேன். அங்கெல்லாம் இங்கிலீஷைப் பாதுகாக்க வேண்டுமென்று இயக்கமோ, அதற்காக ஒரு போராட்டமோ கிடையாது. ஆனால், அந்த மொழி யாருடைய  பாதுகாப்பும் இன்றி வளர்ந்து கொண்டும், பரவிக் கொண்டும்தான் வருகின்றது.
மொழியின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்து மக்களிடையே எவரும் பிரச்சாரம் செய்வது கிடையாது. மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவர் உணரப் பயன்படுத்தும் ஒரு சாதனமே தவிர, மற்றபடி அதற்கென்று தனிச் சிறப்புக் கிடையாது! தமிழிலிருந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு இவைகள் தோன்றின என்று சொல்லுவார்கள். ஆனால், மலையாளியோ, தெலுங்கனோ, கன்னடியனோ, துளுவனோ எவனும் இதனை ஒத்துக் கொள்வதில்லை. அந்தந்த எல்லைக்குத் தக்கபடி மாற்றமடைந்துள்ளது.
வடமொழியின் கலப்பு அதிகமாகி தமிழுக்கும், அதற்கும் சம்பந்தமில்லாமல் போய்விட்டது. வடமொழி கலப்பது ஒரு காலத்தில் நாகரிகமாகக் கருதப்பட்ட காரணத்தால் வடமொழிக் கலப்பு அதிகமாகி விட்டது. இப்படி நாகரிகம் - சந்தர்ப்பம் நடப்பு வழக்கம், காலம் இவைகளைப் பொறுத்து மொழி மாறுபட்டிருக்கிறது.

நம் நாட்டிலேகூட நாகர்கோயில்காரன் தமிழ் பேசுவதற்கும், திருநெல்வேலிக்காரன் பேசுவதற்கும் மாறுபாடு உண்டு. அது போலவே, மதுரைக்காரன் பேசுவதற்கும், திருச்சிக்காரன் பேசுவதற்கும், தஞ்சாவூர்க் காரன் பேசுவதற்கும், சேலம்காரன் பேசுவதற்கும், கோயமுத்தூர்காரன் பேசுவதற்கும், சென்னையிலுள்ள தமிழன் பேசுவதற்கும் நிறைய மாறுபாடுகள், வித்தியாசங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் விட நம்மோடு பல காலமாகப் பழகி நம்மோடு இருக்கும் பார்ப்பனர் பேசுவது தனி அலாதியாகத்தான் இருக்கிறது. தமிழ் படித்த புலவர்களே மேடையில் பேசுவது போல வீட்டில் பேசுவது கிடையாது. இப்படி இடத்திற்குத் தக்க மாதிரி, சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி பேசுகிறார்கள்.

தமிழ் பேசுவதிலேயே இலக்கணப்படி பேசுவதற்கும் சாதாரணமாகப் பேசுவதற்கும் நிறைய மாறுபாடு இருக்கலாம் என்றாலும் நான் மொழியைப் பற்றி சொல்லுவதெல்லாம் மொழியினாலே நமக்கேற்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட நன்மையென்ன? அதனால் நம் மக்கள் எந்த அளவிற்கு முன்னுக்கு வந்தார்கள்? என்பதற்குத்தான். இதைக் கேட்டால் தமிழன்பர்கள் என்ன சொல்வார்கள்? எனக்கு கடிதம் எழுதிய ஒருவர் தமிழில் பெரிய புராணம், சிலப்பதிகாரம், குறள், கம்பராமாயணம் இவைகள் எல்லாம் இருப்பது உனக்குத் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார். இதிலிருந்து அவர் வேறு ஒன்றுமில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார். இன்னொரு நண்பர் தொல்காப்பியம் என்ற நூல் இருப்பது தெரியுமா? என்று எழுதியிருக்கிறார். கம்பராமாயணம், சிலப் பதிகாரம் இதைச் சொன்னதிலிருந்தே தமிழின் தன்மையை நாம் உணர்ந்து கொள்ளலாமே!

தொல்காப்பியத்திலே தான் என்ன இருக்கிறது? அதிலும் நாலு ஜாதி; அந்த நான்கு ஜாதியில் நம்மைத் தான் கீழ் ஜாதியாகக் குறிப்பிட்டிருக்கிறது. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்கு................
என்ற பாடலைப் பார்த்தாலே போதுமே. தமிழ் ஏதோ புலவன் பிழைப்புக்குப் பயன்படுகிறதே தவிர, அதனால் நம் மக்களுக்குப் பயன் இல்லை. அதன்படி நாம் கீழ்மக்கள்தானே.

குறளை ஒரு அளவுக்கு நாம் ஏற்றுக் கொள்ளலாம். அதை பரப்பியதில் எனக்கு பெருமை பங்கு உண்டு.

குறளைப் பற்றி அவ்வளவாக மக்களுக்குத் தெரியாது இருந்தபோது குறள் மாநாடு கூட்டி, தமிழ்ப் புலவர்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி குறளைப் பற்றி மக்களுக்கு விளக்கம் செய்து குறளைப் பரப்பினேன். இந்த மாநாட்டிற்கு மறைமலை அடிகளைத் தவிர மற்ற தமிழ்ப் புலவர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.

நான் பேசும்போது, குறள் குற்றமற்ற நூல் என்று சொல்ல முடியாது என்றாலும், மற்ற நூல்களில் இருப்பதைவிட இதில் குறைகள் குறைவு என்று சொல்லலாம். அந்த அளவுக்குத்தான் குறளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசினேன்.

அந்த மாநாட்டிற்கு திரு.வி.க. தலைமை வகித்தார். நான் இப்படிப் பேசியதை சிலர் போய் மறைமலை அடிகளிடம் சொல்லி இருக்கிறார்கள். என்னவென்றால், அவன் குறளைத் தான் பாக்கி வைத்திருக்கிறான் என்று நினைத்தேன். அதிலேயும் கை வைக்க ஆரம்பித்து விட்டானே. இதற்கு இவர் (திரு.வி.க.) போய் தலைமை வகிக்கிறாரே என்று வேதனையோடு சொன்னார்கள்.

திரு.வி.க. அவர்களை சந்திக்க நேர்ந்தபோது, மறைமலை அடிகள், நீ என்ன குறள் மாநாட்டிற்கு தலைமை வகித்தாயாமே, அதில் பேசியதையெல்லாம் எப்படிக் கேட்டுக் கொண்டிருந்தாய்? என்று கேட்டார்.

அதற்கு திரு.வி.க., அவர் பேசியதில் தவறு ஒன்றும் இல்லை. இத்தோடு விட்டதற்கு நாம் சந்தோஷப்பட வேண்டும். அவரில்லாவிட்டால் குறள் இந்த அளவிற்கு வந்திருக்காது என்று ஏதோ சமாதானம் சொல்லி இருக்கிறார்.
பிறகு ஒரு சமயம் மறைமலை அடிகள் தனது லைப்ரரியை விற்க வேண்டுமென்று கருதி என்னை அழைத்து தனது லைப்ரரியைக் காட்டினார். குறைந்தது 20 - 30 பெரிய பெரிய கண்ணாடி பீரோக்கள் நிறைய புத்தகங்கள் இருந்தன. பீரோவின் இரு பக்கமும் கண்ணாடி கதவுகள் போட்டு புத்கங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நான் எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக் கொண்டு வந்து கடைசியில் அடிகளாரைப் பார்த்து, என்ன சாமி எல்லா புத்தகங்களும் இங்கிலீஷ் புத்தகங்களாகவே இருக்கின்றனவே. தமிழ்ப் புத்தகங்கள் ஒன்றுகூட காணவில்லையே என்று கேட்டேன். அதற்கு அவர்,
தமிழிலே அலமாரியிலே வைத்து பாதுகாக்கும்படியாக மக்களுக்குப் பயன்படும் படியாக என்ன இருக்கிறது? என்று சொன்னார். அதற்கு நான் சொன்னேன், சாமி எழுதிய புத்தகங்கள் இருக்குமே என்று சொன்னேன்.  அது நிறைய இருக்கிறது. இன்னும் அச்சுப் போட வேண்டியவைகளும் இருக்கின்றன என்றாலும், இதோடு அவைகள் வைக்கக் கூடியவை அல்ல என்றார். அவர்  அந்த அளவுக்கு ஒத்துக் கொண்டது எனக்கும் மகிழ்ச்சியளித்தது.

தமிழ் என்று சமயத்திலே போய் புகுந்ததோ, சமயக்காரன் எப்போது தமிழ் கதவைத் திறந்து இறந்தவனை எழுப்பியது என்று சமயத்தில் கொண்டு போய் புகுத்தினானோ, அன்றே தமிழும் முன்னேற முடியால் கெட்டுப் போய் விட்டது.

பட்டினத்தார் - தாயுமானவர் - இராமலிங்க அடிகள் எல்லாம் தமிழ் படித்து சாமியானவர்கள் தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானனே ஒழிய, எவனும் பகுத்தறிவு வாதியாகவில்லை. நமக்குத் தெரிந்து மறைமலை அடிகள் தமிழ்ப் படித்து சாமி ஆனவர்தானே. இப்போது நடந்தது சாமிசங்கரதாஸ் நூற்றாண்டு விழா. இந்த சங்கரதாஸ் என் வீட்டில் வந்து நாடகத்துக்கு பாட்டு எழுதிக் கொண்டிருந்தவர். சங்கரம் பிள்ளை என்று பெயர். பிறகு சங்கரம் பிள்ளை சங்கரதாஸ் ஆகி இன்று சாமி ஆகிவிட்டார். அதற்கு முன் தமிழ்ப் படித்தவர்கள் எல்லாம் கவியாகப் படித்தவர்கள். இப்போது போல் வசனமாகப் படித்தவர்கள் அல்ல. ஆதலால் அவர்களுக்கு கவி எழுத வந்தது. எல்லாம் குப்பை கூளங்கள்தான். கா. சுப்பிரமணிய பிள்ளை காலையில் எழுந்ததும் பட்டைப் பட்டையாக சாம்பலை அடித்துக் கொண்டு அரைமணி நேரம் தேவாரம், திருவாசகத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பார். இந்த திரு.வி.க.வும் அப்படி இருந்தவர்தான். என்னோடு பலமுறை வாதிட்டு கொஞ்ச நாள் கோபமாகக் கூட இருந்து பிறகு பழக ஆரம்பித்தார். அதன்பின்தான் அவர் சாம்பல் அடிப்பதையும், தேவாரம் ஓதுவதையும் நிறுத்தினார். பிறகுதான் அவர் உண்மையாகத் தொண்டாற்ற முடிந்தது.

--------------------------29.9.1967 அன்று சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய விளக்கவுரை - "விடுதலை" 3.10.1967


36 comments:

தமிழ் ஓவியா said...

இசைப்பாடல் - யார்...யார்....பெரியார்



இலண்டன் வாழ் ஈழத்தமிழர் சுஜித் ஜி எழுதி, ராப் இசை வடிவத்தில் தானே பாடியுள்ள இப்பாடல், இன்றைய இளைய தலைமுறை பெரியாரை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. பெரியார் களம் சார்பில் ஒலிக்குறுந்தகடாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

இணையத்தில் ஒலி வலம் வரும் இப்பாடலை நீங்களும் தரவிறக்கம் செய்து கேட்கலாம். உங்களது செல்பேசியில் சேமித்து அழைப்பு மணியோசையாகவும் வைத்துக் கொள்ளலாம்.

தரவிறக்க: https://files.me.com/sme2010/eu8x7w.mp3

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்

உனக்காய் நீ வாழ, உனையே நீயாள, தனையே தந்தார் அய்யா
நரைத்து நின்றாலும் இளைத்து நின்றாலும் களத்தில் நின்றார் அய்யா
தோளோடு தோளாக நின்றார் அய்யா - சுய
மரியாதை கொண்டாளச் செய்தார் அய்யா
நீ சுட்டெறிக்கும் சூரியனாய் புத்துயிர்க்க வேணும்
உனைக் கட்ட எண்ணும் சக்திகட்கு சவுக்கெடுக்க வேணும்
நீ பெரியாரின் பிள்ளை, என்றும் உடைஞ்சுபோவதில்லை
சாதகத்துத் தொல்லை அது பகுத்தறிவுக் கில்லை
சாதிமத பேதங்களை அறிவுகொண்டு வெட்டு - ஒரு
மனிதனாக வாழ்வதுதான் நன்று முரசு கொட்டு

யார் யார் பெரியார் ... ரா ரா ஈ.வே.ரா

பொம்பிளைக்கு மரியாதை நீ கொடுக்க மறவாத
பிள்ளை பெறும் யந்திரமா பொம்பிளயப் பாக்காத
தெம்பு பலம் பெண்ணை வெல்வேன் எண்ணுவதே பெரு மடமை
வலிமை என்று பார்க்க போனா எருமைக்கும் நீ அடிமை
ஆண்மை வெறி அடக்கும் வெறி அத்தனையும் விட்டு எறி
உன்னையறி பெண்ணையறி இதையும் நீ பகுத்து அறி

சாதகத்தை நம்பி மாழும் மடமை வேண்டாம் அம்மா
இங்கு சாதியிலே இழிகுலமாம் எழுதிவைச்சான் சும்மா
கற்புநெறி, சமயலறி பித்தலாட்டம் அம்மா - என்றும்
ஆணும் பெண்ணும் நிகரே என்றுன் மனம் உணரணுமம்மா
சாதியத்தை சாதகத்தை அழித்தொழிக்கவேணும் - உன்
பிள்ளைக்கு நீ பகுத்தறிவுப் பால் கொடுக்கவேணும்

யார் யார் பெரியார் ... ரா ரா ஈவே.ரா

நரைத்து இளைத்து நின்றாலும் களத்தில் நின்றவர் பெரியார்
உனை அடக்க முடக்க நினைத்தவரை எதிர்த்து நின்றது வேறுயாரு
உனக்குள் இருக்கும் பெரியாரை உசுப்பிநீ விட வேணும் - எமை
வலுவாய் அரிக்கும் மூடப்பழக்கத்தை உடைந்தெறிந்திட வேணும்
எதிர்த்தெழுந்திடவேணும் நீ அறுத்தெறிந்திட வேணும் - எமை
மழுக்க நினைக்கும் அனைத்தினையும்நீ தகர்த்தெறிந்திடவேணும்

தமிழ் ஓவியா said...

பொளந்து கட்டுறார்

"காமராஜரோட தாயார் சிவகாமி அம்மாவ பாக்க பல தலைவர்கள் அடிக்கடி வருவாங்க, சிவகாமி அம்மா எங்க மாமியாரை விட (காமராஜரின் தங்கை நாகம்மாள்) என்னிடம் அன்பாக நடந்து கொள்வாங்க,

ஒரு தடவை தாடி வச்ச சாந்தமான பெரியவர் ஒருவர் சிவகாமி அம்மாவ பாக்க வந்தாரு, அப்புறம் தான் தெரியும் அவர் தான் தந்தை பெரியாருன்னு, அவரு ரொம்ப சாந்தமா இருந்தாரு , அம்மா கூட அன்பா பேசிகிட்டு இருந்தாரு, போகும் போது அவரு "அம்மா நான் உங்களுக்கு ஒன்னும் வாங்காம வந்துட்டேன், கொஞ்சம் இருங்க வந்துடுறேன்"னு சொல்லிட்டு கார்ல இருந்து ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மாதிரி ஒன்னு கொண்டு வந்து கொடுத்தாரு. "இத சாப்பிடுங்க உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லிட்டு போனார்.

அன்னைக்கு சாயந்திரம் விருதுநகர் பொட்டல்ல அவரு மீட்டிங் பேசுனாரு, நானும் கேக்க போனேன், காலைல அவளோ சாந்தமா இருந்த பெரியாரா இப்படி ஆவேசமா பொளந்து கட்டுறார்" னு எனக்கு தோனிச்சு

மத்தவங்க பேசுறத விட வித்யாசமா இருந்தது அவரு பேச்சு, அதனால நெறைய பேரு கேட்டு கிட்டு இருந்தாங்க.

பெரியாரு எவளோ பெரிய ஆளுன்னு அப்போ தான் எனக்கு புரிஞ்சது, அவரமாதிரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசுற வங்கள எல்லாம் இந்த காலத்துல பாக்க முடியாது.

- காமராஜரின் தங்கை நாகம்மாளின் மருமகள் தங்கம்மா காமராஜர் குடும்பத்தின் வலைப்பூ kamarajar.blogspot.in--லிருந்து

தமிழ் ஓவியா said...

இது உரிமை. பிச்சை அல்ல!


இந்தியாவின் ஜாதிமுறை - வருணாசிரம தர்ம முறைதான் மிகப் பெரும்பாலான மக்களை கல்வி வாய்ப்புகளைப் பெற இயலாதவர்களாக - பெறக் கூடாதவர்களாக - ஆக்கியதற்கு அடிப்படைக் காரணம்.



சூத்திரர்கள் - 4 ஆம் பிரிவினர் - 5 ஆம் பிரிவின ரான பஞ்சமர்கள் ஆறாம் (கீழ்) பிரிவினரான எல்லா வர்ணப் பெண்கள் ஆகியவர்களுக்குக் கல்வி உரிமை அடியோடு மறுக்கப்பட்ட மனுதர்ம சமுதாய அமைப்பின் விளைவே இது!

இதனை மாற்றிடவே, திராவிடர் இயக்கம் சமூகநீதிக் கிளர்ச்சியை செய்து, ஓரளவு வெற்றி பெற்று, இன்று ஒடுக்கப்பட்டோர்களாகிய மேற்கூறிய பிரிவினர் கல்வி வாய்ப்புக்களை குறிப்பிட்ட அளவில் பெறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வியறிவு இல்லாததால், அவர்கள் இதுநாள் வரை, வெறும் உடலுழைப்புப் பணியாளர்களாய் இருந்துவர வேண்டியதாயிற்று.

இப்போது அது மாறி வருகின்றது. இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளினால் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களும் இப்போது கல்வி கற்க வாய்ப்பு ஏற்பட்டது.

இதற்குமுன் கல்வியை ஏகபோகமாக்கிய பார்ப்பனர்கள், அவர்தம் சுற்றுக்கோள்களான சில முன்னேறிய ஜாதியினரும் இதற்காக கூச்சல் போட்டு, பொய் அழுகை, போலிக் கூப்பாடு, - தகுதி போச்சு, திறமை அழிந்தது என்று முதலைக் கண்ணீர் வடித்து, இன்னமும் தம் வசம் உள்ள ஊடகங்கள், அதிகாரவர்க்கத்தினர் மூலம் (நீதித்துறையும் அடக்கம்) தடுத்து இந்த மக்கள் - பசியேப்பக்காரர்கள் பந்தியில் உட்கார வைப்பதை காண சகிக்காமல் - புளியேப்பக்காரர்கள் பேனாமூலம் - பிரச்சாரம் மூலம் காகிதப் போராட்டம் நடத்துகின்றனர்!

மலைவாழ் மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பதவிகளில் இட ஒதுக்கீடு செய்வதைத் தடுக்க முடியவில்லை; அப்படி இருந்தும் அவர்களுக்குரிய விகிதாசாரங்களில் - பிரதிநிதித்துவம் இன்னமும் சுதந்திரம் வந்து 65 ஆண்டுகள் ஆகியும் கிடைக்கவில்லையே!

பதவி உயர்வில் (புரோமோஷன்) அவர்களுக்கு முன்னுரிமை தருவதால் என்ன குடிமூழ்கிப் போய்விடும்?

இந்திய அரசியல் சட்டத்தில் 16(4) பிரிவு Adequately என்ற சொல்லுக்கு - மற்றவர்களோடு சமமாக வருகின்ற அளவில் போதிய பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளதே - அதனைச் சரியாக செயல்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கடமை அல்லவா?

உச்சநீதிமன்றத்தின் உயர்ஜாதி ஆதிக்கம் அதனைத் தடுத்தது. (ஏற்கெனவே அரசியல் சட்டத் திருத்தம் 77 ஆவது 2001 இல் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டிருந்தும்) - உ.பி. சட்டத்தை தாழ்த்தப்பட்டவர்களுக்கு (மட்டும்) பதவி உயர்வு தரும் சட்டத்தை செல்லாது எனக் கூறியது, அரசியல் சட்ட விரோத தீர்ப்பாகும்!

இதற்காக மீண்டும் இப்போது ஒரு திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு நிறைவேற்றவிருப்பதை நாம் வரவேற்கிறோம் - ஆனால், அதே நேரத்தில் ஏற்கெனவே சீதாராம் கேசரி அவர்கள் சமூக நலத்துறை அமைச்சராக இருந்து (நரசிம்மராவ் பிரதமர் அப்போது) நாடாளுமன்றத்தின் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சேர்த்து அதைக் கொணரவில்லையே என்றபோது அடுத்துச் செய்வோம் என்றனர்! செய்யவில்லையே 11 ஆண்டுகள் ஓடிவிட்டனவே.

தமிழ் ஓவியா said...

இப்போதும் மத்திய அரசு - அதுபற்றி கவலைப் படாமல், பிற்படுத்தப்பட்ட மக்களை அதில் சேர்க்காமல் ஏன் பிரித்துப் பார்க்கவேண்டும்?

நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் தி.முக.வின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் மானமிகு டி.ஆர். பாலு இதனை வற்புறுத்தியுள்ளார்!

சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் இதனை எதிர்த்ததற்குக் காரணம், பிற்படுத்தப்பட்டவருக்கு மற்றொரு அளவுகோல் ஏன்? அவர்களுக்கும் பதவி உயர்வு தரவேண்டிய வகையில் சட்டத் திருத்தம் அமைவதில் என்ன சிக்கல், என்ன தயக்கம்? என்றுதான் கேட்டுள்ளார்!

இவ்வளவு காலம் சென்ற நிலையில், இப்போதுதான் நாடாளுமன்ற எம்.பி.,க்களை கொண்ட தனியே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனி பார்லிமெண்ட்ரி கமிட்டியே அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் 60 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் அவர்களது நலன் பாதுகாக்கப்பட வேண்டாமா? இது உரிமை - பிச்சை அல்ல!

உடனே பார்ப்பன ஊடகங்கள் ஒப்பாரி வைக்கக் கிளம்பிவிட்டன! ஆகா, தகுதி என்னாவது, திறமை போய்விடுமே என்கின்றனர்?

60 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு இருந்ததே என்று மாய்மாலக் கூச்சல் போடுகின்றன!

6000 ஆண்டு அநீதிக்கு முன்னால் 60 ஆண்டு சமூகநீதிச் சட்டங்கள் எம்மாத்திரம்?

அதுவும் இந்தியா முழுவதும் இல்லையே! மேற்கு வங்கத்தில் என்ன நிலை? குஜராத்தில் என்ன நிலை?

போதிய அளவு வாய்ப்பு இல்லாததினால் தானே இந்தக் கோரிக்கை; அவர்களுக்குரிய விகிதாச்சாரம் தரப்பட்டிருந்தால், இந்தக் கோரிக்கைக்கு அவசியமே வந்திராதே! Adequately என்ற சொல்லுக்கு Till it is equalised - மற்றவர்களோடு சமமாக வரும்வரை என்று தானே பொருள்.

அரசியல் சட்டம் 16(4) பிரிவு -- -- Backward Class of Citizens என்ற சொற்றொடர் பொதுவில் (S.C., S.T., OBC, MBC எல்லோரையும் இணைத்தே) நுழைக்கப்பட்டது என்பதை மறந்து ஏன் குறுக்கவேண்டும்?

பிற்படுத்தப்பட்டோருக்கும் தேவையே!

எனவே, மத்திய அரசு தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குத் தருவதுபோலவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பதவி உயர்விலும் வாய்ப்புத் தரவேண்டும்.

Appointment என்ற சொல்பற்றி சென்னை உயர் நீதிமன்றம், ரங்காச்சாரி வழக்கில் தீர்ப்புச் சொன்னபோது, ‘‘Appointment includes Promotion also’’ என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதே - பின் ஏன் இந்த பாரபட்சம்?

அனைத்துக் கட்சி ஒடுக்கப்பட்ட எம்.பி.,க்களும் ஒட்டுமொத்த குரல் கொடுக்க முன்வரவேண்டும்!

S.C., S.T., OBC எல்லாம் இணைந்து அனைவருக்கும் அனைத்தும் என்று போராடவேண்டும்.

பார்ப்பனரின் பிரித்தாளும் தந்திரத்திற்கு எஸ்.சி., எஸ்.டி., மக்கள் பலியாகிவிடாமல், நாம் அனைவரும் கைகோர்த்து உரிமைக்குரல் எழுப்ப முன்வரவேண்டும்!

கி.வீரமணி
- ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உம் வித்துக்கள் நாங்கள்



ஆன்றோனே...
சான்றோனே...
அசுரர்குல தலைவனே....
திராவிட இன வேங்கையே...

ஆரியப் பேயை
விரட்டியடித்து
சாதிப் பிணி
தீர்த்தவனே....

தென்னகத் தந்தையே
நாளொன்று போதாது அய்யா
உந்தன் புகழ் சொல்ல...

பார்ப்பன நரிகளின்
வாலை ஒட்ட நறுக்கிட்டாய்...
திராவிட இனம் வளர
நீயே வித்திட்டாய்...
பெண் விடுதலைக்கு
அடித்தளமிட்டாய்...

பிள்ளையாரைப் போட்டு
உடைத்திட்டாய்...
மூட நம்பிக்கையினை முற்றிலுமாய் ஒழித்திட்டாய்...

நீதிக்கட்சி வளர்த்திட்டாய்
இந்தி திணிப்பை அழித்திட்டாய்...

தள்ளாத வயதிலும்
தலை நிமிர்த்திட்டாய்...
வளரும் சமுதாயத்தின்
தலைசிறந்த எடுத்துக்காட்டாய்...

சிக்கனமே உருவாய் வாழ்ந்து சிறந்த புகழ் அடைந்திட்டாய்....

விமர்சனங்களை வரவேற்ற
வீர வேங்கையே...
சளைக்காது பாடுபட்டாய்
உம் 95 வயதிலும்....

உம்முடைய 134 ஆம் ஆண்டு
பிறந்தநாள் விழாவில்
நீர் எங்களோடு இல்லாவிடினும்
உம்மைப் படித்த நாள்முதற்கொண்டு
எங்களோடே இருப்பது
போன்றதோர் உணர்வு ... இருந்தாலும் சின்ன
மனவருத்தம்தான்...
உம் காலகட்டத்தில்
இல்லாமல் போய்விட்டோமே என்று...

குளமாகிவிட்ட கண்களின்
கண்ணீர்த்துளிகளும்
கண்ணீர்வடிக்கும்
நீர்பட்ட நோயின் வேதனையை தாங்கமாட்டாமல்...

இரும்பு இதயமே....
நீதி அரசனே...
உம் வித்துக்கள் நாங்கள்...
அயராது உழைத்திடுவோம்

எத்தனை தூண்கள்
எதிர்த்த போதிலும்
கோபுரமாய் உயர்ந்து
நின்றவர் நீரே....

வாழ்ந்து கொண்டிருக்கிறீர் அய்யா
எங்களின் இதய சிம்மாசனத்தில்
முடிசூடா மன்னனாக...
வணங்கி மகிழ்கிறோம்..
வீர வணக்கம்...

- தீபா வெண்ணிலா-

தமிழ் ஓவியா said...



காலத்திசை காட்டும் பெருங்கிழவன்

அவன் யாரென இவர்கள் துழாவிக் கொண்டிருந்தார்கள்.
நாம் யாரெனக் கண்டறிந்து தந்தான் அவன்.

அவன் மொழி எதுவென
இவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.
நம் மொழியை புதைசேற்றிலிருந்து
மீட்டுத் தந்தான் அவன்.

அவன் இனம் பற்றி
இவர்கள் ஆய்வு செய்கையில்
நம் இனத்தை
அடையாளம் காட்டியவன் அவன்.

ஆத்திரச் செருப்பெடுத்து
அவன் மீது வீசிவிட்டு
வீழ்த்திவிட்டதாய் சுய மோகம் கொள்கின்றனர் குருட்டு மூடர்கள்.

கோபப்படமாட்டான்
கொள்கையாய் வாழும் பெருங்கிழவன்.

இன்னும் தன் பணி
இங்கே நிறைவடையவில்லை என்றே
பகுத்தறிவு விளக்கைக் கையிலேந்தி
காலத்திசை காட்டிடுவான்.
மூத்திர சட்டி சுமந்தபோதும்
நம் சூத்திரப் பட்டம் ஒழித்தவன் அவன்.

கல்லடியையும் சொல்லடியையும்
காலிக் கூட்டத்தின்
கலவரச் சேட்டைகளையும்
வாழும் காலத்திலேயே நேர்கொண்டு நின்றவன்

நெருப்பாறுகள் கடந்து
எதிர்ப்புகளை வென்றவன்.

வசவாளர்களை மீறி
வரலாறாய் நிற்பான்
இலட்சிய நிமிர்வுடன்
இன்னும் பல நூற்றாண்டுகள்... ...

- கோவி.லெனின்

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் தத்துவ நயங்கள்


தந்தை பெரியார் பல நேரங்களில் உவமைகூறி தத்துவங்களை விளக்கும்போது, அதில் மிளிரும் நயம் பண்டிதர்களுக்கே வியப்பளிக்கக் கூடியவையாகும்.



1. 1925ல் சுயராஜ்ய கட்சியை பெரியார் கடுமையாக எதிர்த்தார். சுயராஜ்யவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களைக் கண்டித்து அவர்களின் யோக்கியதை என்ன என்பதை தத்துவ நடையில் எழுதினார்.

இவர்களை சுயராஜ்யவாதிகள் என்று கூப்பிடுவதே விபச்சாரிகளை தேவதாசிகள் என்று கூப்பிடுவது போலும், கொடுமைக்காரரை பிராமணர் என்று சொல்வது போலும், தற்கால கோர்ட்டுகளையும், வக்கீல்களையும் நியாயஸ்தல மென்றும், நியாயவாதியென்றும் சொல்லுவதுபோலும், சர்க்கார் உத்தியோகஸ்தரை பொதுநல ஊழியர்கள் என்று சொல்வதுபோலும், தேசத்தின் பொருளைக் கொள்ளையடித்துக் கொண்டுபோக வந்திருக்கும் ஒரு வியாபாரக் கூட்டத்தை அரசாங்கத்தார் என்று சொல்வது போலும், அந்நிய ராஜ்யம் நிலை பெறுவதற்கு பாடுபடப் பிறந்திருக்கும் ஒரு கூட்டத்தாரை சுயராஜ்ய கட்சியினர் என்று குறிப்பிடுவது ஆகும். (குடியரசு 20.09.1925)

2. மதச்சார்பின்மை என்பதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை விளக்க அவர்தந்த தத்துவார்த்த உவமை உச்சநிலை நயமுடையதாகும்.
மதச்சார்பின்மை என்றால் எல்லா மதத்தையும் சமமாகக் கருதுவது; எந்தவொரு மதத்திற்கும் சார்பாக நடவாதது என்றே பலரும் எண்ணுகின்றனர். நமது அரசும் அப்படித்தான் நினைத்துக் கொண்டு செயல்படுகிறது.

தமிழ் ஓவியா said...

எல்லா மதப் பண்டிகைகளுக்கும் விடுமுறை விடுவது, நிதி உதவுவது, எல்லா மத விழாக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது, வானொலியிலும், தொலைக் காட்சியிலும் எல்லா மதச் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் ஒலிபரப்புவது, ஒளிபரப்புவது.

ஆனால், இது மதச்சார்பின்மையா என்றால் இல்லை. மதம் சாரா அரசு என்றால் மதத் தொடர்பான எந்த செயலையும் செய்யக்கூடாது. அது தனிப்பட்டோர் செயல்பாடு என்று கருதவேண்டும். சுருங்கச் சொன்னால் மதத் தொடர்பு இல்லாதிருத்தலே மதச்சார்பின்மை. மாறாக எல்லா மதத்தையும் சமமாகக் கருதுவது அல்ல.

இதை விளக்க தந்தை பெரியார் அற்புதமான ஓர் உவமையை தத்துவமாகக் கூறினார்கள்.

கன்னிப்பெண் என்றால், ஆண் தொடர்பு (உறவு) இல்லாதவள் என்பதுதான் பொருள். மாறாக எல்லா ஆண்களையும் சமமாகக் கருதுபவள் அல்ல என்றார் நயம்மிளிற.

3. 1927ல் காந்தியாரை பெரியார் சந்தித்து மதம் சார்ந்து விவாதித்தார். அப்போது காந்தியார், உலகில் ஒரு நேர்மையான பிராமணனை தேடிக்கண்டுபிடிப்பது மிகுந்த சிரமமானது என்பதுதான் உங்கள் கருத்தா? என்று பெரியாரிடம் கேட்க, நான் யாரையும் பாக்கவில்லை என்று பெரியார் பதில் அளிக்கிறார். அதற்குக் காந்தியார், அவ்வாறு சொல்லாதீர்கள். நான் ஒரு பிராமணனை பார்த்தேன். அவர் ஒரு சிறந்த பிராமணர். அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே என்றார். இதைக்கேட்ட பெரியார், ஓ! உங்களைப் போன்ற மகாத்மாவிற்கு இந்த உலகில் ஒரே ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது சாத்தியமாய் இருக்கலாம். ஆனால் என்னைப்போன்ற சாதாரண பாவிகளுக்கு ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது எவ்வாறு சாத்தியம்? என்றார்.

பெரியாரின் நயமான, இந்த பதிலைக் கேட்ட காந்தியார், அதிலுள்ள சொல்லாற்றலை, நயத்தை, நகைச்சுவையை எண்ணி வாய்விட்டுச் சிரித்தார்.

4. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களிடம், விடுதலை ஆசிரியர் பொறுப்பை அய்யா வழங்கியபோது, அய்யா இவ்வளவு பெரிய பொறுப்பை என்னால்... என்று இவர் தயங்கியபோது அய்யா சொன்ன அறிவுரை இருக்கிறதே அது நுட்பமும், சுருக்கமும் நயமும் உடையது.

நீங்கள் எம்.ஏ.,பி.எல்., படித்தவர்கள். ஆங்கிலம் நன்றாகத் தெரியும். பிவீஸீபீ பேப்பர் என்ன எழுதுகிறானோ அதற்குப் எதிர்ப்பாய் எழுதுங்கள் அதுதான் விடுதலை என்றாராம் பெரியார். ஆசிரியர் _அய்யாவின் நுட்பத்தையும், தெளிவையும், நறுக்குத் தைத்தாற்போன்ற நயத்தையும் கண்டு நெகிழ்ந்து மகிழ்ந்தார்கள். இதுபோன்ற பதில்கள் அய்யாவுக்கன்றி எவர்க்கும் வந்ததில்லை. ஆம். அடுத்த நயத்தைப் பாருங்கள் புரியும்.

ஆரியப் பார்ப்பனர்கள் பரம்பரையாய் படித்தவர்கள். நம் மக்களோ படிப்பறிவு இல்லாதவர்கள். இதைப் பயன்படுத்தியே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஏய்த்துவந்தனர்.

இந்நிலையில் ஆங்கில ஆட்சி முடிவுற்றது. இந்தியாவில் குடியாட்சி ஏற்பட்டு தேர்தல் வந்தது. மக்கள் வாக்களித்து ஆட்சி அமைக்க வேண்டும். வாக்களிக்க வேண்டுமானால் விழிப்பு வேண்டும். இன்றைக்கு நமது மக்கள் ஏமாந்து, பார்ப்பன சூழ்ச்சியில் மயங்கி வாக்களிக்கிறார்கள் என்னும்போது அன்றைய நிலையைச் சொல்லவும் வேண்டுமா? பார்ப்பனர்கள் நம் மக்களை எளிதில் ஏமாற்றிவிடுவார்கள் என்பதால், நம் மக்கள் விழிப்போடு இருக்க ஒரு அறிவுரையை தத்துவ நயத்தோடு தந்தார்.

பார்ப்பான் விஷயம் தெரிந்தவன். தனக்கு எது நல்லது; யார் வந்தால் நல்லது என்று சிந்தித்து ஓட்டு போடுவான். நம் மக்களுக்கு அந்த விழிப்பு இன்னும் வரவில்லை. அதனால், ஒரு எளிய வழி சொல்கிறேன். பார்ப்பானுக்கு நல்லது என்றால் அது நமக்குக் கேடு. அவன் யாரை ஆதரித்து ஓட்டுப்போடுகிறானோ, பார்ப்பன ஏடுகள் யாரை ஆதரித்து எழுதுகின்றனவோ அவர்களை எதிர்த்து நீங்கள் ஓட்டுப்போடுங்கள். அதுதான் நமக்கு நன்மை தரும் என்றார். இதில் உள்ள நயமும், நுட்பமும் எத்தகையது பாருங்கள்.

இந்த அளவுகோலைத் தமிழர்கள் இன்று பின்பற்றியிருந்தால் இன்றைக்கு தமிழகத்திற்கு இந்த அவலம் வந்திருக்குமா? பார்ப்பனர் எண்ணம் ஈடேறியிருக்குமா?

- மஞ்சை வசந்தன்

தமிழ் ஓவியா said...

புரட்டுக்கு மறுப்பு



கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு

- கி.தளபதிராஜ்

அண்மையில் சிம்ம வாகனி என்பவர் தனது முகநூலில் ஒரு மகமதிய சாமியாரை பெரியாரோடு தொடர்பு படுத்தி "பெரியாரே ஏற்றுக் கொண்ட ஆண்டவர்தான் சாலை ஆண்டவர் போல.. அல்லது திருப்பி அடிக்காதவர்களை தாக்குவது தான் பெரியாரின் வீரம் போல.".என்று குறிப்பிட்டு வழக்கம் போல பெரியாரை கொச்சைப்படுத்த முனைந்திருந்தார். 1930 ல் இராமநாதபுரத்திற்கடுத்த திருப்பாலைக்குடியில் பிரபலமாகியிருந்த இந்த சாமியாரை பற்றி பெரியாரின் குடியரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரையை படியுங்கள்!

"அதிசயச்சாமியாரும் நம் பாமரமக்களும்"

இராமநாதபுரத்திற்கடுத்த திருப்பாலைக்குடி என்னும் ஊரில் ஓர் சாமியார் இருக்கிறார்.அவர் மகமது சாமியாராம். அவர் வெளிவந்து நான்கு மாதம் ஆகிற்றாம். மூன்று மாதங்களுக்கு முன் அவர் பூமிக்குள் உயிருடன் புதைக்கப்பட்டாராம்!. மூன்று மாதகாலமாய் உள்ளேயே இருந்து பின் வெளிவந்து அந்த திருப்பாலைக்குடிக்குச் சென்று அங்குள்ள ஒரு வறண்ட குளத்திலே போய் அவர் கை வைத்த மாத்திரத்தில் தண்ணீர் பெருகிவிட்டதாம்!.

அவரிடம் வரம் கேட்க போகின்றவர்களுக்கு அந்த குளத்து தண்ணீரை எடுத்துவரச்சொல்லி கொடுக்கின்றாராம். அதைச்சாப்பிட்ட மாத்திரத்தில் சகல நோய்களும் நிவர்த்தியாகின்றதாம். ஆகா! என்ன ஆச்சரியம்? இவ்விருபதாம் நூற்றாண்டிலும் கடவுள் என்ற ஒன்று அரூபி என்று சொல்லுவதற்கும் ஆதாரமில்லாமல் தத்தளிக்கும் பொழுது, ஒரு மனிதன் கடவுளும் செய்யொனாத காரியங்கள் செய்வதென்றால் பகுத்தறிவுள்ள எவரும் நம்ப ஏதும் உண்டா?

நிற்க. இன்னுமோர் அதிசயமாம். குழந்தையில்லாதவர்களுக்கு அந்தக் குளத்துத் தண்ணீரைச் சாப்பிட்ட மாத்திரத்தில் கர்ப்பம் உற்பத்தியாகின்றதாம்!.

முன் தேவர்களுடைய கலிதமான இந்திரியத்தைச் சாப்பிட்ட பின் குழந்தைகளோ மிருகங்களோ உற்பத்தியானதாகப் புராணங்கள் புளுகின. இப்பொழுதோ குளத்து தண்ணீரை குடித்த மாத்திரத்தில் குழந்தை உற்பத்தியாகின்றதென்றால் ஆண் பிள்ளைகளுக்கு இனி அது சம்மந்தப்பட்ட வேலை இல்லை என்றே நினைக்கிறேன்.

இந்த சாமியாரிடம் வரம் கேட்க நூறு மைல் சுற்றுப்புறமிருந்து நம் சகோதர சகோதரிகள் வந்து குவிந்து ஒரு செம்பு தண்ணீர் கொண்டு போகிறார்கள். எவ்வளவு பணம் விரயமாகிறது. கூடிய சீக்கிரம் அவ்வூரில் ஜனநெருக்கடி மிகுதியால் காலரா போன்ற வியாதிகள் நிச்சயமாக வரும் போலிருக்கின்றபடியால் சுகாதார உத்தியோகஸ்தர்கள் அதை உடனே நிறுத்தி நிவர்த்தி செய்ய வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

- குடிஅரசு கட்டுரை (12.7.1931)

தமிழ் ஓவியா said...

பெரியாரின் தேவை - இன்று : ஜாதி ஒழிப்பில்


ஒருபோதும் அஞ்சாதவர்

"இந்த நாட்டில் உண்மையிலேயே ஒரு மனிதன் பொதுத் தொண்டாற்ற வேண்டும் என்று கருதுவானேயானால் அவன் முதலாவதாக செய்ய வேண்டிய முக்கியத் தொண்டு ஷாதியை ஒழிக்கப் பாடுபடுவதும் மக்களின் இழி நிலையையும் மடமையையும் ஒழிக்கப் பாடுபடுவதும் ஆகும். (25.-03.-1961- அன்று கோவையில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு) இச்சமுதாயம் மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக பொதுவாழ்க்கைக்கு வந்த பெரியார், தனது முதல் பணியாகக் கொண்டது, உலகில் வேறேங்கிலும் இல்லாத இந்த ஜாதி இழிவை ஒழிப்பதைத்தான். ஜாதி ஒழிப்பில் பெரியாரின் இலக்கும் மிகத் தெளிவானது.

ஜாதி அடுக்கின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் பார்ப்பனர்களைத் தாங்குபவர்களாகவும், தங்களுக்குக் கீழ் அடுக்கில் இருக்கும் தலித் மக்களை ஒடுக்குபவர்களாகவும் இருந்த இடைநிலை ஜாதியினரை நோக்கியே பேசினார். இந்து மதத்தில் பறையர், பள்ளர்களை விட மோசமாக 'தாசி மக்கள்' என்று சூத்திரர்கள் அழைக்கப்படுவதை முகத்தில் அறைந்ததுபோல் பிற்படுத்தப்பட்டோரிடம் கூறினார். இடைநிலை ஜாதிச் சங்க மாநாடுகளில் கலந்துகொண்டு, அவர்களிடம் இருக்கும் சுயஜாதிப் பற்றை சாடினார். வன்னியகுல சத்திரியர்கள், ஆரியகுல வைசியர்கள் என்று போலிப் பட்டங்களை வைத்துக்கொள்வதைக் கடுமையாகக் கண்டித்த பெரியார், ஜாதி வேறுபாடுகள் நீங்க வேண்டுமானால் இந்து மதத்திலிருந்து வெளியேறுங்கள் என்று அறைகூவல் விடுத்தார்.

ஆதிதிராவிடர்களின் நலனுக்காக தனிக் கிணறு, தனிப் பள்ளி தொடங்குவதற்கு காங்கிரஸ் செயல்திட்டம் வகுத்தபோது, 'இது ஜாதி வேறுபாடுகளை நிரந்தரப்படுத்தி விடும். பொதுக்கிணற்றில் ஆதிதிராவிடர்களை தண்ணீர் எடுக்கச் செய்வதே சரியான வழிமுறையாகும்' என்று காந்திக்குக் கடிதம் எழுதினார்.

தனிக் கிணறு ஒன்றை திறந்து வைக்க பெரியாரை ஆதிதிராவிடர்கள் அழைத்தபோது, அக்கூட்டத்திலேயே அதற்கு எதிராகப் பேசினார். ஆதிதிராவிடர்கள் குளிக்கத் தண்ணீரற்று அசுத்தமாக இருப்பதற்கும், மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும், இழிவாக நடத்தப்படுவதற்கும் இந்துமதத்தின் ஜாதி வேறுபாடுகள்தான் காரணமே அன்றி, அவர்கள் தினமும் குளித்து சுத்தமாக இருப்பதாலேயோ, மாட்டுக்கறி சாப்பிடுவதைக் கைவிடுவதாலேயோ உயர்வை அடைய முடியாது என்று எடுத்துக் கூறினார். இழிவு நீங்க இந்து மதத்திலிருந்து வெளியேறி, இஸ்லாத்தைத் தழுவச் சொன்னார். இராஜாஜி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டுவந்தபோது, தமிழகம் முழுவதையும் திரட்டிப் போராடினார்.

இராஜாஜியை பதவியை விட்டே துரத்தினார். ஜாதியைக் காப்பாற்றும் இந்திய அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தினார். முதுகுளத்தூர் கலவரத்தின்போது, அனைத்து அரசியல் கட்சிகளும் பசும்பொன் முத்துராமலிங்கத் (தேவர்)க்கு ஆதரவாக நின்றபோது, தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக பெரியார் நின்றார். முத்துராமலிங்கத் (தேவரைக்) கைது செய்ய காமராஜரை வலியுறுத்தினார்.

ஜாதி ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய பெரியார், ஒருநாளும் தன்னை ஆதிதிராவிடர்களின் தலைவராக அறிவித்துக் கொண்டதில்லை. அவர்களுக்கான தலைவராக அம்பேத்கரை அடையாளப்படுத்தியதோடு, தனது தலைவரும் அவரே என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

ஜாதி ஒழிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்த பெரியார், தனிநாடு கோரியது அதற்காகவே. இந்தியாவோடு இருக்கும் வரை ஜாதியை ஒழிக்க விடமாட்டார்கள்; தனிநாடு அமைந்தால் நமது இழிவை உடனடியாக போக்கிக் கொள்ளலாம் என்பதில் பெரியார் கடைசிவரை உறுதியாக இருந்தார்.

"எங்கள் நாடு எங்களுக்கு வந்துவிடுமேயானால் கட்டாயம் இன்றைய தினம் நாங்கள் சொல்லுகின்ற இந்த உத்தரவைப் போடுவோம். இந்த நாட்டிலே எவனாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் இருந்தால் ஒருவருடம் ஜெயில் என்று சட்டம் செய்வோம்" (செங்கற்பட்டில் 5.11.1950ல் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு)

பெரியார் யாருக்கும், எந்த அடக்குமுறை சட்டத்துக்கும் ஒருபோதும் அஞ்சியதில்லை. பதவி சுகத்துக்காக தனது கொள்கைகளை ஒருநாளும் கைவிட்டதில்லை. மான, அவமானத்துக்குப் பயந்து தான் சொல்ல வந்ததை மறைத்தவரில்லை. இந்த தமிழ்ச் சமுதாயம் உலகின் மற்ற சமுதாயத்தவர்களுக்கு இணையாக வளர்ச்சி பெற வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த நோக்கமும் அவரிடம் இல்லை. அதனால்தான் பதவி, சுயநலன் சார்ந்த அரசியல் மேலோங்கியிருக்கும் இச்சூழலில் பெரியார் முன்னிலும் அதிகமாகத் தேவைப்படுகிறார்.

- கீற்று நந்தன் ஊடகவியலாளர்

தமிழ் ஓவியா said...

பெரியாரின் தேவை - இன்று : மனிதநேயத்தில்


நம் இயக்கம் உலக இயக்கம்

ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலி இருந்தாலும் அவன், எனக்கு வலிக்கிறது என்று சொல்வது போல, உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும் குறைபடுகளையும்

ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்டதுபோல நினைக்கும்படியும் அனுபவிப்பதுபோல் துடிக்கும்படியும், அவ்வளவு கூட்டுவாழ்க்கையும் ஒற்றுமை உணர்ச்சியும் (உள்ள சமுதாயம்) ஏற்படும்.



-இதைச் சொன்னவர் பெரியார். ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன் 1943ஆம் ஆண்டிலேயே, இனி வரும் உலகம் என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலில், எதிர்கால சமுதாயம் குறித்து இப்படிக் கூறுகிறார். பிறருடைய துன்பத்தைத் தன் துன்பம் போலக் கருதும் மனதுடைய மனித சமுதாயம் ஒன்று தோன்றவேண்டும்- தோன்றும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் பெரியார் வெளியிட்ட கருத்து இது. உலகில் எந்த மூலையில் யாருக்குத் துன்பம் ஏற்பட்டாலும், யாருடைய விடுதலை பறிக்கப்பட்டாலும், யார் அடிமையாக நடத்தப்பட்டாலும் அவர்களின் துயர் துடைக்கும் வகையில் உரிமைக்குரல் எழுப்பவேண்டிய அவசியத்தை இதன் மூலமாக உணர்த்தியிருக்கும் பெரியாரின் தேவை, நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் இன்னல்படுகின்ற இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது.

ஈழத்தந்தை என்றழைக்கப்படும் தந்தை செல்வா அவர்கள் ஒரு முறை பெரியாரை சந்தித்து, தங்கள் உரிமைப் பிரச்சினைகள் குறித்து விவரித்துபோது, நாங்களே இந்த நாட்டில் (இந்தியாவில்) அடிமைகளாக இருக்கிறோம். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவ முடியும்? என்று உண்மை நிலவரத்தைச் சொன்னார் பெரியார். இன்றும் நாம் இந்திய அரசிடம் நமது மாநில சுயாட்சி உரிமைகளைக் கோரியபடியே இருக்கிறோம். எனினும், ஈழத்தமிழர்களுக்காக இன்றுள்ள சூழலில் உலக அரங்கில் பல நாடுகளிலும், சர்வதேச அமைப்புகளிலும் வலுவானக் குரலை ஒலிக்கச் செய்ய முடியும். பெரியார் இன்றிருந்தால் அந்தப் பணியைத்தான் முன்னெடுத்துச் செல்வார். ஏனென்றால், உலகத்தின் போக்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அன்றே விளக்கியவர் அவர்.

தோழர்களே.. நாம் உலகம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்கிறோம். நம் இயக்கம் உலக இயக்கம். உலக இயக்கம் என்றதும் மனிதன் மலைப்பான். இவர்கள் இங்கிருந்துகொண்டுதானே பேசுகிறார்கள் என்று! முற்காலத்தில் மனிதனுக்கு 25 மைலுக்கு அப்பால் உள்ளதே மலைப்பாக இருக்கும். அன்றைக்கு உலகத்தினை உணர அவனுக்குச் சாதனங்கள் இல்லை. அது மட்டுமல்ல, தமது நாட்டைப்பற்றிக்கூட உணர வசதியில்லை. இன்று அப்படியல்லவே! அமெரிக்காவானது 10ஆயிரம் மைல்கள் என்றாலும் ஒன்றரை நாளில் அங்கு போய்விடலாமே! நமக்கு ரஷ்யாவுக்கும் 8மணி நேரப்பயணம்தானே! அங்கு போக 8மணி, காரியம் பார்க்க 8 மணி, திரும்பி வர 8 மணி என்று வைத்துக்கொண்டால் 24 மணி நேரத்தில் ரஷ்யாவுக்குப் போய் வந்துவிடலாமே! இப்படியாக உலகம் விஞ்ஞான வளர்ச்சி காரணமாகப் பக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது (-விடுதலை 14.11.1972)

மாற்றங்களை எதிர்பார்த்து ஏற்றுக்கொண்டு செயலாற்றியவர் பெரியார். அவருடைய ஒரே நோக்கம், மனிதர்களிடையே பேதங்கள் கூடாது என்பதுதான். அவன் எந்த நாட்டுக்காரனாகவும் எந்த இனத்தைச் சேர்ந்தவனாகவும், எந்த மொழியைப் பேசக்கூடியவனாக இருந்தாலும் மனிதர்களுக்குரிய உரிமைகளை பிறப்பினாலோ மதத்தினாலோ சாதியினாலோ வேறு எந்தக் காரணத்தினாலோ மறுக்கக்கூடாது என்று தன் இறுதி மூச்சு வரை பெரியார் போராடினார். இன்று உலகெங்கும் மனித உரிமைகள் குறித்துப் பேசப்படுகிறது. ஐ.நா அவையில் மனித உரிமைக்கென தனி அமைப்பு உள்ளது. சர்வதேச அளவில் தொடங்கி உள்ளூர்கள் வரை பல மனித உரிமை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 1996-2001ல் தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது முதல்வர் கலைஞரிடம் செய்தியாளர்கள், மனித உரிமைகள் பற்றிய உங்கள் பார்வை என்ன என்று கேட்டார்கள். அதற்கு கலைஞர் சொன்ன பதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் இன்றைக்கு எதனை மனித உரிமை என்று சொல்கிறீர்களோ அதைத்தான் அன்றே பெரியாரும் திராவிட இயக்கத்தினரும் சுயமரியாதை என்று சொன்னார்கள் என்பதுதான் தலைவர் கலைஞரின் பதில்.

தமிழ் ஓவியா said...

தனக்கான மதிப்பும் மரியாதையும் எவர் ஒருவராலும் பறிக்கப்படக்கூடாது, இழிவுக்குட்படுத்தப்படக்கூடாது என்பதுதான் சுயமரியாதை. இதன் விரிவாக்கமே, இன்று நாம் பேசுகின்ற மனித உரிமை. சக மனிதனை மதித்து நடக்கவும், அவனுக்குரிய உரிமைகளை அளிக்கவும் சமுதாயம் தயங்கக்கூடாது என்பதுதான் மனித உரிமையின் அடிப்படை. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையே இதுதான். அதனால்தான் சக மனிதர்களான- நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைகள் மீட்கப்பட, உலகளாவிய கவனத்தை ஈர்க்கவும், சர்வதேச அமைப்புகளின் வாயிலாகத் தீர்வு காணவும் டெசோ இயக்கத்தை மீண்டும் தொடங்கி, அதன் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் தலைவர் கலைஞர். பன்னாட்டுப் பிரதிநிதிகள்- சர்வதேச மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்கள் பங்கேற்று அரிய கருத்துகளை வழங்கிய இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, ஐ.நா.மன்றத்திடம் அளிப்பதற்காகத் தளபதி அவர்கள் அங்கு நேரில் செல்லவிருக்கிறார். இந்த மாநாட்டிற்கு முன்பாகவே, அமெரிக்காவில் ஐ.நா. நிர்வாகிகளை நேரில் சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்சினை குறித்தும் டெசோவின் நோக்கம் குறித்தும் விளக்கி உலக அரங்கின் பார்வையை ஈர்த்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இத்தகையச் சூழலில்தான் தந்தை பெரியாரின் தேவையை உணரவேண்டியிருக்கிறது. யார் பழித்தாலும்-இகழ்ந்தாலும்-தூற்றினாலும் தன்மானத்தைவிட சமுதாயத்தின் மானமும் முன்னேற்றமுமே உயர்வானது என்ற இலட்சியத்துடன் போராட்ட வாழ்வை மேற்கொண்டவர் பெரியார். அவர் வெறும் மனிதரல்ல. அவர் ஒரு கொள்கை. ஒரு தத்துவம். வாழ்க்கை நெறி. அதனால் கொள்கை வடிவில் அவருடைய செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆசிரியர் வீரமணி அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவதுபோல, பெரியார் இன்று உலகமயமாகியிருக்கிறார். அதனால், அவருடைய கொள்கை வழியில் செயல்படும் கலைஞர் அவர்கள் உலகத்தின் பார்வையை ஈழப்பிரச்சினை நோக்கி ஈர்க்கும் வகையில் எவருடைய விமர்சனம் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றி வருகிறார்.

பெரியார் வழியில் மேற்கொள்ளப்படும் பயணம் தனது இலக்கை நிச்சயம் அடையும். ஈழத்தமிழர்களின் வாழ்வு மலரும். மனிதநேயத்திற்கானப் புதிய விடியல் புலரும்.

- அசன் முகமது ஜின்னா, வழக்குரைஞர்

தமிழ் ஓவியா said...


பெரியார் எப்படிப்பட்டவர்? - அறிஞர் அண்ணா



கல்லூரி காணாத கிழவர்!

காளைப்பருவம் முதல் கட்டுக்கடங்காத முரடர்!

அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்க வேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர்!



பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாக பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்!



யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்!

கவர்னரைக் காண வேண்டுமே, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அல்லவர்!

தமிழ், ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர்!

ஆரிய மதம், கடவுள் எனும் மூடுமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடுவரும் என்று எச்சரிக்கும் போக்கினரின் இச்சைக்குக் கட்டுப்பட மறுப்பவர்!

ஆம்! இராமசாமியின் கட்சியிலே தோட்டக் கச்சேரி கிடையாது!

முனிசிபல் வரவேற்புகளும், முடுக்கான விளம்பரங்களும் கிடையாது!

இலண்டன் கிளை கிடையாது; இலட்சாதிபதிகளின் பிச்சை கிடையாது.

சாமான்ய மக்களின் - இது அரசியல், இது மதம் என்று பகுத்துப் பார்க்கவும் முடியாத மிகமிகச் சாதாரண மக்களின் கூட்டுறவை மட்டுமே பெற்றவர்!

தேர்தலா . . . ? வேண்டாம்! பதவியா? கூடாது! துரைமார் தயவா? அது இனிப்புப் பூச்சுள்ள எட்டி! என்றெல்லாம் கூறுபவர்!

சிறைச்சாலை என்ற பேச்சுக் கேட்டால் முகம் மலர்கிறது!

கிளர்ச்சி என்ற கருத்து இனிக்கிறது, இந்தக் கிழவருக்கு!

இவ்வளவு வயதாயிற்று - இவ்வளவு ஆண்டுகளாகப் பொதுவேலை செய்தார் - ஒரு சர் பட்டம் பெற்றாரா?

ஜெனீவா போனாரா அரசு செலவில்?

அமெரிக்கா போனாரா அரசாங்கத்தின் செலவில்?

எதைக் கண்டார்?

எட்டுமுறை சிறைக்கோட்டம் போய்வந்தார்!

இவர்தானய்யா இராமசாமி நாயக்கர்!

பெரியார் ஒரு மாயாவி

தாசரான தமிழர்!

கிழவரான கிளர்ச்சிக்சாரர்!

சரி!

இப்படிப்பட்ட இராமசாமி, இப்படிப்பட்ட தமிழரைக் கொண்டு, எப்படிப்பட்ட காரியம் செய்ய முடியும் என்ற தைரியம் கொண்டிருக்கிறார்?

தமிழர்கள் மட்டுமே தேசத்தை ஆளலாம் என்ற தைரியத்தைக் கொண்டிருந்தார்!

எப்படி?

எப்படி எனில், அவர் ஒரு மாயாவி!

ஜால வேடிக்கைக்காரர்!

வேடிக்கை பேசாதே என்று கூறுவீர்!

வேடிக்கையல்ல நாம் கூறுவது!

தாசரான தமிழரைக்கொண்டு, வெறும் கிளர்ச்சிக்காரக் கிழவரொருவர் தேசத்தை ஆளலாம் என்று தைரியம் கொண்டுள்ளார் என்றால், மாயவித்தை தெரிந்தவராக இருந்தாலன்றி வேறு எப்படி முடியும்?
அவர் மட்டுமா, அன்பர்களே!

சிற்பி, ஓவியக்காரன், தொழிலாளி, இசைவாணன் இவர்களெல்லாம் மாயாவிகளே!
அந்த மாயாவி இனம்தான் பெரியார்!

பெரியாரின் பெரும்பணி

நாலைந்து சிறு வட்டில்கள், அவற்றிலே வண்ணக் குழம்புகள், கையிலே ஓடு, சிறு பூச்சிடும் கோல், எதிரே ஒரு திரை, இவ்வளவுதான்! இவற்றைக் கொண்டு கடலை, கன்னியரை, கனி குலுங்கு சோலையை, காவலர் அஞ்சும் களத்தை, புன்னகையை, மெல்லிடையை, கண்ணீரை, விண்ணழகை, கதிரோனை, மாலை மதியை, இன்னொரன்ன பிறவற்றைப் படைக்க முடியுமா? அதோ ஓவியக்காரனாகிய மாயாவியைப் பாருங்கள்!

இப்படி அப்படி தீட்டுகிறான்; ஏற இறங்கக் கவனிக்கிறான். இரவும் பகலும், களமும் வளமும், கனியும் பணியும், அவன் இடும் ஏவலுக்காகக் காத்துக் கிடக்கின்றன. ஓவியக்காரன் ஒரு மாயாவி! மண்ணிலே பொன் காண்பீரோ? மாயாவியான தொழிலாளி காண்கிறான்!

உப்பு நீரிலிருந்து முத்து எடுக்கிறான்!

காட்டிலிருந்து வாசனை எடுக்கிறான்!

விஷத்தைப் போக்கி விளையாட்டுக் கருவியாக்குகிறான்.

எதைத் செய்யாமல் இருக்கிறான் அம் மாயாவி?

தமிழ் ஓவியா said...

தோலைத் தட்டுகிறான்; நாம் கனிக்கிறோம்!

நரம்புகளைத் தடவுகிறான்; நாம் நாத வெள்ளத்தைப் பருகுகிறோம்!

என்னவோ கூறுகிறான் - அது நம்மை ஏதேதோ உணர்ச்சிகளில் கொண்டுபோய் ஆழ்த்துகிறது.

இவை இசைவாணனாம் மாயாவியின் செயல்!

இதனால் அது ஆகுமோ என்ற கேள்விக்கு இடமுண்டோ இங்கு?

மண்ணிலே தங்கம் ஏது? கடலிலே முத்து ஏது?

தட்டுத் தடவலிலே இன்பம் ஏது?

எண்ணத்திலே படைப்பு ஏது?

எப்படி முடியும் என்று தொழிலாளி, இசைவாணன், ஓவியக்காரன் ஆகியோரைக் கேட்டால், அவர்கள் நகைப்பார்கள். என்னே இவன் குறை மதி என்று எள்ளி நகையாடுவர்.

மண்ணுக்குள்ளே நெடுந்தூரத்திலே புதைபட்டுக் கிடக்கும் பொன் இருக்குமிடமும், எடுக்கும் விதமும் பாட்டாளி அறிவான். தெரியாதான், இதிலே இதுவா, எப்படி? என்று கேட்பான்.
பெரியார் இராமசாமியின் பெரும்பணி இதுபோன்றதே!

பெரியார் அறிவார்

அவர் அறிவார், தாசராக உள்ள தமிழர் தரணி ஆண்டவர் என்பதும், தரணி ஆண்ட காலத்திலே தன்மானத்தை ஓம்பினர் என்பதும் மானத்தையும் உரிமையையும் பெரிதெனக் கொண்ட தமிழரிடை சாதிப்பித்தும், வைதீக வெறி, அடக்கியாளும் ஆணவம், சுரண்டிப் பிழைக்கும் சூது ஆகியவை கிடையா என்பதும், களத்திலே கடும் போரிடும் வீரர்கள் கவடரின் பொறியிலே வீழ்ந்தனர் என்பதும், மீண்டும் தம்மை உணரும் தன்மை பெற்றுவிட்டால், தமிழ் இனம் தாசரானதற்குள்ள காரணத்தைக் கண்டறிந்துவிட்டால், அவர்கள் கொலைவாளினை எடடா, மிகு கொடியோர் செயல் அறவே என்று முழக்கமிட்டுக் கிளம்புவர் என்பதும், தமிழரின் இன்றைய நிலை தாழ்வுடையது, இடர் மிகுந்தது என்ற போதிலும் தங்கள் இனத்தைக் கெடுக்கும் கொள்கைகளை அவர்கள் நீக்கிவிட்டால், களை எடுத்த வயலாவர் - விழித்தெழுந்த வேங்கையாவர் என்பதும் பெரியார் அறிவார்.

மணி மேலே மாசு! மடு மேலே பாசி! வயலிடையே களை!

தமிழர் - அவர்களுக்குள் இந்நாள் நிலவும் தகாதாரின் கூட்டுறவு!

மாசு துடைத்திடுக - பாசி போக்கிடுக - களை நீக்குக - கவடரின் பிடியைப் போக்குக என்று கனிவுடன் கூறுகிறார் கடமை வழி நிற்கும் கிழவனார்!

தைரியம் தந்த தளரா உழைப்பு

அது மட்டுமல்ல, எங்ஙனம் - பிறர் முடியுமா என்று கேட்கும் போதும், உண்மையாகவே செய்ய முடியாதிருக்கும் போதும், ஓவியக்காரனும் இசைவாணனும் தங்கள் திறமையினால் இன்பத்தை அளிக்கின்றனரோ, அதுபோல, இவ்வளவு தாழ்நிலை அடைந்துள்ள தமிழரைக் கொண்டு காலவேகம், கருத்து வேகம், பொதுவாகவே மக்களிடையே உள்ள விழிப்பு ஆகியவற்றையும் அறிந்திருக்கும் - இரசனைக்காகவோ சொற் பெருக்காற்றவோ மட்டும் பயன்படும் அறிவாக அதனைக் கொள்ளாமல், மக்கள் விடுதலைக்கு, மறுமலர்ச்சிக்கு, இன எழுச்சிக்கு அந்த அறிவைத் துணைகொள்ளும் திறனும் அவரிடம் இருப்பதால், அந்தத் திறமை, இன்பதுன்பம் எனும் சாணையிலே தீட்டப்பட்டுக் கூராக்கப்பட்டிருப்பதால், அந்த இராமசாமியால் தமிழர்களும் ஆள முடியும் என்று தைரியமாகக் கூற முடிகிறது.

அந்த இராமசாமியும் ஏடு தாக்கியதாக இருந்திருப்பின், நாடு ஆள்வது என்பதற்காகக் கூடுவிட்டுக் கூடு பாய்வது அரசியல் யூகம் என்று கொண்டிருப்பார்; கனமாகி இருப்பார்; ஆனால் இனம் மெலிந்து போயிருப்பார்.

துரைமாரின் தயவைத் தேடுபவராக இருந்தால், ஒரு சர் ஆகியிருப்பார். ஆனால், இனவிடுதலைக்கான எழுச்சி ஏற்பட்டிராது.

அவர் கிளர்ச்சிக்காரர், சிந்தனைச் சிற்பியாக இருப்பதாலேதான் அரசியல் என்றால், பஞ்சாயத்து போர்டிலிருந்து தொடங்கிப் பாராளும் உறுப்பினராவது என்ற ஏணி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என்னும் இடர் மிகுந்த காரியத்தில் இறங்கினார்.

அவருக்கு நிச்சயமாகத் தைரியம் இருக்கிறது. வீறுகொண்ட தமிழன் வைதீகத்தைக் கூறு கூறாக்குவான் என்று!

அவர் ஒரு கற்பனை உலகைக் காட்டத் தேவையுமில்லை; தமிழர் ஆள ஒரு வெளிநாட்டைப் பிடிக்கத் தேவையுமில்லை!

தமிழன் ஒரு நாட்டுச் சொந்தக்காரன்!

தமிழன் ஆண்டு பழக்கப்பட்டவன்!

இன்று ஆண்டவனுக்கு அன்பு செலுத்துவதாகக் கருதிக்கொண்டு மாற்றாரின் அடிமையாக உழல்கிறான்!

ஆட்சிக்கேற்ற அருங்குணமும், நாட்டைப் பாதுகாக்கும் நல்வீரமும் தமிழனுக்கு உண்டு.

இகம், பரம் என்ற மாய மொழி கேட்டு ஏமாந்ததால், இகத்தை இவன் இகழ்ந்து வாதைப்படுகிறான்.

எனவே, பெரியார் தமிழா! நீ தனி இனம்! தமிழா! நீ தரணி ஆண்டவன்! தமிழா! உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய்! பகுத்தறிவுப் படை தொடு! விடுபடு! என்று கூறினார், தமிழரின் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால், கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம் என்று கவிபாடும் காட்சியாகும் அது!

எனவேதான், பெரியார் தைரியம் பெற்றிருந்தார்!

அந்தத் தைரியத்துக்குப் பக்கபலமாக இருப்பது, தளரா உழைப்பு!

அந்தத் தைரியம் பெரியாருக்கு இருக்கிறது!

(அந்த தைரியம் எனும் தலைப்பில் எழுதியது _ திராவிடநாடு - 03.06.1945)

தமிழ் ஓவியா said...

செப்டம்பர் 17

இந்நாள் உலக மானுட வரலாற்றில் ஒப்பற்ற திருநாள். மதமற்ற ஒப்புரவு உலகிற்கான ஒளி கிடைத்த நாள்.

தமிழ் மாநிலத்தைப் பொறுத்தவரை ஜாதிச் சழக்குகளில் பிணைத்துக் கொண்டு தாம் ஓரினம் என்ற உணர்வைப் பறி கொடுத்த திராவிட மக்களை மீட்டுத் தந்த ஒரு மாபெரும் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த வரலாற்றில் குறிப்பு நாள்!

வரலாற்றை ஒழுங்காக எழுத விரும்புவோர் தமிழ்நாடு - பெரியாருக்கு முன் பெரியாருக்குப் பின் எழுதப்பட வேண்டும் என்பது வரலாற்று அறிஞர்களின் கணிப்பாகும்.

அறிஞர் அண்ணா மொழியில் சொல்ல வேண்டுமென்றால் பெரியார் ஒரு சகாப்தம் - ஒரு கால கட்டம் - ஒரு திருப்பமாகும்.

தந்தை பெரியார் அழகாக - சரியாகச் சொன்னதுபோல இதுவரை பிறக்காத கடவுள்களுக்குத் தான் விழா எடுத்துள்ளார்கள்.

பிறப்பு - இறப்பு அற்றவன் கடவுள் என்று சொல்லிக் கொண்டு கடவுள்களுக்குப் பிறந்த நாள் என்று சொல்லி கோயில் திருவிழாக்களையும், பண்டிகைகளையும் கொண்டாடிக் கொண்டிருப்பது முரண்பாடானது என்றாலும், மக்களை பக்தி பிடியிலிருந்து விலகிச் செல்லாமல் கட்டிப் போடுவதற்கும், அவர்களின் பொருளைச் சுரண்டுவதற்கும் அவை தேவைப்படு கின்றன.

இந்த மோசடியை அம்பலப்படுத்தவந்த அறிவுலக ஆசான்தான் தந்தை பெரியார்.

உலகில் யாரையும் மன்னிக்கலாம்; ஆனால் அறிவை நாசப்படுத்துபவர்களை மன்னிக்கவே கூடாது - முடியாது என்று பெரியார் சொன்னதில் மிகப் பெரிய உண்மையும், வாழ்வியல் தத்துவமும் நிமிர்ந்து நிற்கின்றன.

மதவாதிகள், பழைமைவாதிகள், ஆதிக்கவாதிகள் இன்று வரை தந்தை பெரியார் அவர்களையும் அவர் வழி செயல்படும் தலைவர்களையும், பெரியார் வகுத்துத் தந்த கொள்கைக் கோட்பாடுகளையும் இன்றுவரை கடித்துக் குதறுவதற்குக் காரணமே தங்களின் சூழ்ச்சி அஸ்திவாரம் நொறுக்கப்படுகின்றதே என்கின்ற ஆத்திரம்தான்!

தந்தை பெரியார் அவர்களின் கொள்கை, அவர் பட்டபாடு இயக்கச் செயல்பாடுகளின் அருமை எப்பொழுது புரியும் என்றால், தமிழ்நாட்டைக் கடந்து பிற பகுதிகளில் நிலவும் சமூகச் சுரண்டலைப் பழுதறத் தெரிந்து கொள்ளும்போதுதான்.

நேற்றோ, அதற்கு முன்போ பெரியார் தேவைப்பட்டு இருக்கலாம்; இன்று தேவையா என்றுகேள்வி எழுப்பும் - அப்பாவி அறிவாளிகள் சமூகத்தின் வேர் போன்ற பிரச்சினைகள் பற்றி நுனிப்புல் மேய்ந்து திரிவது பரிதாபம்தான்.

ஜாதியை எடுத்துக் கொள்ளலாம். இதனை வெளிப்படையாக ஆதரிக்கும், பிரச்சாரம் செய்யும் துணிவு - இந்நாட்டில் சங்கராச்சாரியார்களுக்குக்கூட கிடையாது.

அதே நேரத்தில் ஜாதியை கட்டிக் காக்கும் அம்சத்தில் அவர்கள் மிகவும் விழிப்புடன் தான் இருக்கிறார்கள்.

ஜாதி - தீண்டாமை என்பதெல்லாம் இன்று வரையிலும்கூட சட்டப்படி சாஸ்திரப்படி பாதுகாப்பாக இருக்கும் இடம் கோயில் கர்ப்பக் கிரகம்தான். அதற்கு வெடி வைத்தவர் வெண்தாடி வேந்தர் பெரியார்.

ஜாதி ஒழிப்பு வீரர்கள்(?) இதற்குப் பச்சைக் கொடி காட்டியிருக்க வேண்டாமா? மூதறிஞர் என்று பார்ப்பன வட்டாரம் போற்றும் ராஜாஜியே இதனை எதிர்த்து வாதாட பரிந்துரை கடிதம் கொடுத்து, பிரபல வழக்குரைஞர் பல்கி வாலாவை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தாரா இல்லையா?

இன்றைக்கு ஆவணி அவிட்டத்தை - பூணூலைப் புதுப்பிக்கும் நிகழ்ச்சியை - மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாக நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள்!

இன்றைக்கும் மாம்பலம், மயிலாப்பூர் பகுதிகளில் பார்ப்பனர் பகுதிகளில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு வாடகை கொடுத்துக் குடியிருக்க அனுமதி அளிக்கப்படுவதில்லையே!

சமூக நீதி என்றால் எதிர்ப்பது ஏன்? தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்றால் ஏற்றுக் கொள்ளாதது ஏன்? தமிழ் செம்மொழி என்றால் ஆத்திரப்படுவது ஏன்? - கிண்டல் செய்வது ஏன்?

தமிழ்ப் பண்பாட்டுத் தளத்திலும் எந்த ஒரு கூறாவது பார்ப்பனர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா?

தீண்டாமை ஒழிப்பு என்பது வெறும் வெற்று முழக்கம்தான். உண்மையில் தீண்டாமை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்கு மூலமான ஜாதியை ஒழிக்க வேண்டாமா? அந்த ஜாதியை இந்திய அரசமைப்புச் சட்டம் அடைகாத்துக் கொண்டுதானே இருக்கிறது.

இது மாற்றப்பட வேண்டாமா? அதற்குத் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளும் அவர் வழி பயணங்களும் தொடரப்பட வேண்டாமா?

அரசு மக்கள் அரசாக இல்லாமல் தனியார் வயப்படும் முதலாளித்துவத்தை முதுகில் சுமந்து செல்கிறதே - இதனை முறியடிக்கவும் - இந்த நாட்டுக்கான பொருளியல் கண்ணோட்டத்தில் பெரியாரியல் தானே தேவைப்படும்.

எல்லா வகையான முற்போக்குப் பயணத்திற்கும் சாதனைகளுக்கும் தந்தை பெரியார் தேவைப்படுகிறார். தேவைப்படுகிறார் என்பதை மறக்க வேண்டாம்! வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!17-9-2012

தமிழ் ஓவியா said...

பேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி .

இறுதி மூச்சு உள்ள வரை உண்மையாக தமிழ்
இனத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் !

ஒளிவு மறைவு என்பது இன்றி என்றும்
மனதில் பட்டதைப் பேசிய நல்லவர் !

வெட்டு ஒன்று ! துண்டு இரண்டு ! என்று
விவேகமாக என்றும் பேசிய வல்லவர் !

ஆறறிவு மனிதனுக்கு அறியும் வண்ணம்
ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர் !

தள்ளாத வயதிலும் கொண்ட கொள்கையில்
தளராமல் நின்று வென்ற கொள்கை மறவர் !

பட்டி தொட்டி எங்கும் சளைக்காமல் பயணித்து
பகுத்தறிவை ஊட்டி வளர்த்திட்ட அன்னை அவர் !

மறுக்கப்பட்ட கல்வியை கேள்வி கேட்டு
மறுத்தவர்களிடமிருந்து பறித்துத் தந்தவர் !

உயர் பதவிகளில் ஒப்பற்ற தமிழர்கள்
உடன் அமருவதற்கு வழி வகுத்தவர் !

பெண்ணடிமை விலங்கை அடித்து உடைத்து
பெண்ணுரிமைக்கு உரக்கக் குரல் கொடுத்தவர் !

இல்லாத கடவுளை இருக்கு ! என்றவர்களிடம்
எங்கே காட்டு கடவுளை ! என்று கேட்டவர் !

அறியாமை இருளை அகற்றி விட்டு
அறிவுச்சுடர் ஏற்றிய பகுத்தறிவுப் பகலவர் !

பெரியாரால் வாழ்க்கைப் பெற்றவர்கள் விமர்சிக்கிறார்கள்
பெரியாரின் வெற்றியே ! இந்த விமர்சனமும் !


சிந்தனை விதைத்து மனிதனாக மாற்றியவர்
சிந்திக்கச் சொல்லிக் கொடுத்தவர் பெரியார் !

பேச்சுரிமையை பெற்றுத் தந்தவர் பெரியார் !
பேசாத புழுவைப் பேசவைத்த மருத்துவர் பெரியார் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பார்வையில் திருக்குறள்!



- துரை. சந்திரசேகரன்

உலகப் பொதுமறை என்று போற்றப் படும் திருக்குறள் மக்கள் மயமாக, மக்கள் படிக்க, நினைக்க, சிந்திக்க பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். திருக்குறள் நிலைபெற குறள் மாநாடு நடத்தியவரும் அய்யாவே ஆவார்.

தீக்குறளை சென்றோதோம் என்ற பார்ப்பனர்களின் கருத்தை முறியடித்து தமிழர் நெறிநூலான திருக்குறளை தந்தை பெரியார் தூக்கிப் பிடித்தார். திருக்குறளை வைத்து பிழைப்பு நடத்தும் பலரும், அதனை பரப்பிட தந்தை பெரியார் போல் பாடுபட்டவர்கள் இல்லை. திருவள்ளுவர் படத்தை பல ஊர்களிலே திறந்து வைத்தும், குறளின் சிறப்பை, சீர்திருத்தத்தை எடுத்துச் சொல்லியும் திருக்குறள் பால் தமிழர்களை ஈர்த்தவர் தந்தை பெரியாரே.

ராமாயணம், பாரதம், கீதை இன் னோரன்ன ஆரிய நூல்கள் யாவும் திரா விடப் பண்புகளை மறுக்க இயற்றப்பட்ட நூல்கள் தான் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள். இவ்வாரிய நூல்களில் வலியுறுத்தப்பட் டுள்ள ஆரியப் பண்புகளுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில் திரா விடர்களை அதனின்று விடுவிக்கத் திராவிடப் பெரியார் ஒருவரால் தோற்று விக்கப்பட்ட நூல்தான் திருக்குறள் ஆகும் என்று பறைசாற்றியவரும் தந்தை பெரியாரே என்றால் மிகை இல்லை.

குடிசெய்வார்க்கு இல்லை பருவம், மடிசெய்து

மானம் கருதக் கெடும் என்னும் குறளை தமது காலம் நேரம், கஷ்ட, நஷ்டம் கருதாத பொதுத் தொண்டுக்கு இலக் கணமாக - வரையறையாகச் சொல்லு வார் பெரியார். மான - அவமானம் பார்த்தால் தொண்டு செய்ய முடியாது என்று கருதியவர் பெரியார். அதனால் தான் அய்யாவால் இமயமலை வெயிலில் காய்கிறது என்பதற்காக குடைபிடிப்பது போன்ற, சறுக்குமரத்தில் ஏறுவதற்கு ஒப்பான தொண்டினை தொடர முடிந்தது.

திருக்குறளின் மாண்புபற்றி தந்தை பெரியார், அறிவினால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும், இயற்கை யோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந் திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக் களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள் என்றும்,

திருக்குறளில் காணப்படும் நீதிகள், அறிவுரைகள் யாவும் நடந்தால் உற்ற பலன்தரக் கூடியதும், ஏற்கக் கூடிய தாகவும், இன்றும் நம்மால் நடத்திக் காட்டக் கூடியவையாகவும் இருக் கின்றன என்றும் குறிப்பிடுகிறார். காரணம் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட நூல்களில் காணப்படும் கருத்துக்கள், நிகழ்வுகள் நம்ப முடியாததாகவும், நடந் திருக்க முடியாததாயும், சாத்தியமற்றன வாகவும் இருக்கக் காண்கிறோம். பழைமை, மூடத்தனம், அறியாமை கருத்துக்களே ஆரிய நூல்களில் ஆதிக்கம் செய்கின்றன.

ஆபாசம், ஒழுக்கக் கேடு நிறைந் துள்ளனவாக ஆரிய நூல்கள் இருப்ப தோடு மட்டுமின்றி திராவிடர்களை, தமிழர்களை கேவலமாக, இழிந்தவர் களாக காட்டக் கூடியதாகவும் எழுதப் பட்டுள்ளன. திருக்குறளோ திராவிடர் தம் பெருமையை பறைசாற்றுவதாக, ஒழுக்க முடைய சமுதாயத்தை உருவாக்கக் கூடியதாக திருவள்ளுவரால் ஆக்கப்பட் டுள்ளதை அழகாக அய்யா பெரியார் படம் பிடித்துக் காட்டுவதைப் பாருங்கள்: திருவள்ளுவர் குறளோ ஆரியத்தை, ஆரிய தர்மத்தை அப்படியே மறுக்க எழுதப்பட்ட நூலாக காணப்படுகிறது...

திருவள்ளுவர் கூறிய கருத்துக்களுள் ஒன்றே னும் ஒழுக்கக் குறைபாடு உள்ளதாகக் காணப் படாது. அறிவுள்ளவர் யாரும் மறுக்க முடியாத, வெறுக்க முடியாத கருத் துக்களை அமைத்துத் தான் அவர் குறளை இயற்றியுள்ளார். குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது (13.11.1948, குடிஅரசு).



தமிழ் ஓவியா said...

திருக்குறளில் மக்கள் மேம்பாட்டுக்குத் தேவை யான அனைத்தும் உள் ளன என்பதை மதுரைத் தமிழ் நாகனார்,

எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன் பால்
இல்லாத எப்பொரு ளும் இல்லையால் - சொல்லால்
பரந்த பாவால்என் பயன்வள்ளுவனார்
சுரந்தபா வையத் துணை என்கிறார்.

மனோன்மணியம் சுந்தரனார் ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுநீதியை திருக்குறளின் சிறப்பை உணர்ந்தவர்கள் ஏற்பரோ என்கிறார்.

வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குனர்ந்தோர்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி என
குறளின் பெருமையை பறை சாற்றுகிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் வள்ளுவர் வாய்மொழி உலக மக்களை ஒருங்கிணைக்கும், சமத்துவப் பாதையில் நடை பயிலச் செய்யும் கருத்தல்லவா?

மனுதர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்று திடமாகவே சொல்ல லாம். மனுதர்ம சூத்திரங்களுக்கு நேர் மாறான கருத்துக்களைக் கொண்ட குறள் அடிகளை ஏராளமாக திருக்குறளில் இருந்து எடுத்துக்காட்டலாம்.

மனித சமுதாயத்துக்கே நல்வழிகாட்டி, நன்னெறியூட்டி, நற்பண்புகளையும், ஒழுக் கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள் (24.10.1948இல் ஈரோடு 19ஆவது மாகாண மாநாட்டில் பெரியார் பேச்சு) என்று அறிவுலக ஆசான் குறளை உயர்த்திப் பிடித்ததுடன் மானுட ஒழுக்கத்துக்கான, வளர்ச்சிக்கான நூலும் அதுவே என சுட்டிக் காட்டுகிறார்.

நாட்டில் மதவெறி அகல வேண்டும், மனிதநேயம் தழைத்திட வேண்டும், மனித சமத்துவம் மலர்ந்திட வேண்டும் என்று பாடுபடும் திராவிடர் கழகம் அவற்றிற்குத் தடையாக உள்ள கடவுள், மதம், புராண, இதிகாச கருத்துக்களை எதிர்த்து பரப்புரை செய்துவருகிற இயக்கமாக ஒளிர்ந்து வருகிறது. ஜாதி, வேதமதப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி வருகிறது. அந்தவகையில் திராவிடர் கழகத்தின் கருத்துக்கு ஆதரவாக, மக்களிடையே ஒழுக்கத்தை வலியுறுத்தும் நூலாக திருக்குறள் மட்டுமே திகழ்கிறது என் பதை தந்தை பெரியார் பறைசாற்றினார். குறளின் கருத்தைப் பரப்புவது ஏன் என்பதுபற்றி இதோ பெரி யாரின் கருத்து:

திராவிடர்களுக்கு நீதி நூல் ஒன்றே ஒன்றுதான் உண்டு, அது திருக்குறளைத் தவிர வேறில்லை என்பதாக உறுதி கொண்டு, ஆரிய மத, புராண, இதிகாச நூல்களாகிய ராமாயணம், கீதை- பாரதம் - புராணம் ஆகிய வைணவ, சைவ மதநூல்கள் ஆகியவைகளை அறவே ஒழித்துவிட வேண்டும்; அவற்றை நாம் மதித்தல் கூடாது என்கிற உறுதிப்பாடு நாட்டு மக்களுக்கு உண்டாக வேண் டும்.

நம் நாட்டில் மதவெறிய கன்று, சாத்திரக் குப்பைகளைத் தீக்கிரையாக்கி, கடவுள் பேரால் மக்களை மடமைக்கு இழுத்துச் செல்லும் கயவர்களின் ஆதிக்க மும், ஏழை - பணக்காரத் தன்மை, மேல் ஜாதி - கீழ் ஜாதி, வர்ணாசிரம - வைதீகப் பித்த லாட்டங்கள் ஆகிய அனைத்தும் அறவே ஒழிந்து; நம் நாட்டை அன்பும், அறிவும், ஆண்மையும் தன்மானமும் கொண்டதாக ஆக்கி, மக்கள் அனைவரும் இன்ப வாழ்வு வாழ அடி கோலுவதற்கு, பொதுப் பணியாற்ற முற்பட்டுள்ள யாராயிருந்தாலும் கட்சி, ஜாதி, மத பேதங்களை மறந்து, வள்ளுவர் வகுத்த வழி நின்று தொண்டாற்ற வேண்டு மென்பதே திராவிட மக்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.

திராவிடர் கழகத்தினராகிய நாங்கள் அவ்வுயரிய கருத்துக் கொண்டே குறளை நாட்டில் பரப்ப முற்பட்டுள்ளோமேயன்றி வேறில்லை

(குடிஅரசு 7.5.1949)

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் 134ஆம் ஆண்டு பிறந்த நாள் தந்தை பெரியாரோடு பழகிய நிகழ்வுகளை நினைவு கூர்கிறார் கலைஞர்




சென்னை, செப். 7- தந்தை பெரியார் அவர்களின் 134 ஆம் பிறந்தநாளையொட்டி அவரோடு பழகிய நிகழ்வுகளைக் குறிப்பிட்டு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதிய கடிதம் வருமாறு:

தந்தை பெரியார் அவர்களின் 134ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி, அவரோடு பழகிய நிகழ்வுகள் எல்லாம் என் நினைவுகளில் அலை அலையாக எழுந்தது. நேற்று விழுப்புரம் முப்பெரும் விழாவில் சாந்தா அல்லது பழனியப்பன் என்ற நாடகத்தை நாகை திராவிட நடிகர் கழகத்தின் சார்பில் நடித்தது பற்றி யெல்லாம் சொன்னேன் அல்லவா; அதை முடித்து விட்டு புதுச்சேரிக்குத் தான் புறப்பட்டோம்.

இந்த நாடகத்தில் நான் தாங்கிய பாத்திரத்திற்குப் பெயர் சிவகுரு. புதுவை பொது மக்கள் என்னை சிவகுரு என்றே அழைக்கத் தொடங்கினர். புதுவையில் பெரியார், அறிஞர் அண்ணா, தளபதி அழகிரிசாமி போன்ற தலைவர்களையெல்லாம் அழைத்து மாநாடு ஒன்றினை நடத்தினோம். ஆனால் எங்களுக்கு எதிர்ப்பாளர்கள் திராவிடத் தலைவர்களே, திரும்பிப் போங்கள் என்று கூச்சலிட்டனர். வா என்றழைப்பது தான் தமிழர் பண்பு, போ என்று கூற காரணம் யாதோ என்று தன் பேச்சைத் தொடங்கி அண்ணா அவர்கள் அரியதோர் உரையாற்றினார்கள். அந்த உரையினைத் தொடர்ந்து கழகக் கொடியை ஏற்றி வைத்தார்கள்.

கொடி ஏற்றப்பட்ட அடுத்த வினாடியே கொடி மரத்தை வீழ்த்தி விட்டார்கள் எதிரிகள்! அவ்வளவு தான், அமளி தொடங்கி விட்டது. பெரியாரையும், அண்ணாவையும் பத்திரமாக ஒரு வண்டியில் ஏற்றி அனுப்பி விட்டு, நானும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும், காஞ்சி கல்யாண சுந்தரமும் நடந்து வந்து கொண்டிருந் தோம். ஒரு பெருங்கூட்டம் எங்களை சூழ்ந்து கொண்டது. அந்தக் குழப்பத்தில் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து விட்டோம்.

அடி, அடி, அடி என்று அடித்தார்கள். என் மீது விழுந்த அடிகள் சிலவற்றை திருவாரூர் அண்ணன் ராசகோபால் வாங்கிக் கொண்டார். என் சட்டையில் மாட்டப் பட்டிருந்த பெரியார் பேட்ஜை பறிப்பதற்காக ஒருவன் என் சட்டையைக் கிழித்தான். நான் அந்த பேட்ஜை விடாமல் என் கையால் பற்றிய வாறு ஓட முயற்சித்தேன். அன்றைக்கு என் சட்டை யோடு சேர்த்து பெரியாரின் பேட்ஜை பிடித்திருந்த நான் இன்று வரை அந்த நினைவுகளையும் விடாமல் பிடித் துக் கொண்டுதான் உள்ளேன். அந்தப் பெரியாருக்குத் தான் இன்று பிறந்த நாள் விழா.

அடித்தவர்கள் களைத்துப் போய், நானும் செத் திருப்பேன் என்று எண்ணிக் கொண்டு சாக்கடை யோரத்தில் என்னைத் தூக்கி வீசி விட்டு போய் விட்டார்கள். ஐயோ, யார் பெற்ற பிள்ளையோ? இப்படிச் சாகக் கிடக்கிறதே? என்று சொல்லிக் கொண்டே ஒரு மூதாட்டி தன் வீட்டிற்குள் என்னைக் கொண்டு போய் காப்பாற்றினார்கள். என் நிலைமை என்னவாயிற்று என்று தெரியாமல் பெரியாரும் அண்ணாவும் ஊர் முழுவதும் தேடச் சொல்லி பிறகு விடியற்காலை 4 மணியளவில் என்னைக் கண்டு பிடித்து, மீண்டும் கலகக்காரர்கள் தாக்குவார்களோ என்றஞ்சி, கைலி, நீண்ட ஜிப்பா, தலையில் குல்லாய் அணிவித்து பெரியாரிடம் அழைத்துச் சென்றார்கள். குடிஅரசு அலுவலகத்தில்... என்னைக் கண்டதும், அதுவரை கண்ணுறங்காமல் காத்திருந்த தந்தை பெரியார், என்னைத் தழுவிக் கொண்டு சுகமாக இருக்கிறாயா? என்று தழுதழுத்தக் குரலில் கேட்டார். அவரே என் காயங்களுக்கெல்லாம் மருந்திட்டார். என்னுடன் ஈரோட்டுக்கு வா, போக லாம் என்று ஆணையிட்டார். நானும் அவருடன் புறப்படத் தயாரானேன்.

தமிழ் ஓவியா said...

பெரியாரின் ஈரோட்டுக் குடியரசு அலுவல கத்தில் துணை ஆசிரியனாகப் பொறுப்பேற்றேன். என் இனிய நண்பர் கருணானந்தம், ஏ.பி. ஜனார்த்தனம், தவமணி ராஜன் ஆகியோர் குடியரசு அலுவலகத்தில் பணியாற்றி வந்த காலம் அது. காலை எட்டு மணிக்கெல்லாம் பெரியார் வீட்டில் அவர் முன் னால் அமர்ந்து - அன்று வருகிற தபால் களை அவர் பார்த்து அது பற்றிய விளக்கங்களை அறிவித்து - அதனைச் செயல்படுத்துகிற வழி வகைகளை நாங்கள் தொடங்கிடுவோம். குடியரசு இதழில் நான் எழுதிய அண்ணாமலைக்கு அரோகரா என்ற கட்டுரையைப் பெரியார் பெரிதும் பாராட்டினார்.

திருவண்ணா மலை தீபத்தைப் பற்றிய கட்டுரை அது. அதற்குப் பிறகு பெரியாரைக் கவர்ந்த மற்றொரு கட்டுரை தீட்டா யிடுத்து! என்ற துணைத் தலையங்கம். ஒவ்வொரு நாளும் இரவு, பெரியார் வீட்டில் உணவு முடிந்ததும், பெரியார் தன் வீட்டு மாடியில் காற்றோட்டமான பகுதியில் எங்களை உட்கார வைத்துக் கொண்டு, சமுதாயச் சீர்திருத்தங்கள், அரசியல் மாற்றங்கள் இவைகளைப் பற்றியெல்லாம் நீண்ட நேரம் விளக் கங்கள் அளிப்பார். நாங்கள் குடியரசு இதழில் சிறப்பாக எழுதி விட்டால், படி ஏற முடியாத நிலையிலும் மிகுந்த சிரமத்தோடு மாடிக்கு ஏறி வந்து தட்டிக் கொடுத்துப் பாராட்டுவார்.

எவ்வளவு மகிழ்ச்சி அப்போது ஏற்படும் தெரியுமா? சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, திருச்சி ரயிலடியில் பெரியாரும், நானும் இந்தி எழுத்துக்களை அழித்தோம். ரயிலடிக்களம் முடிந்து நானும், ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களும் கொடி ஏந்தியவாறு திருச்சி நகர வீதிகள் அனைத் திலும் நடந்து சென்றே ஊர்வலம் நடத்தினோம். தெப்பக்குளம் வழியாக ஊர்வலம் வந்த போது, காரில் சென்று கொண்டிருந்த பெரியார் அவர்கள் இறங்கி, எங்களை வாழ்த்தி வழி அனுப்பினார். இரு வேறுபட்ட கட்சிகளாகப் பிரிந்த பிறகு ஏற்பட்ட இந்தத் திடீர்ச் சந்திப்பில் பாசமும் கொள்கைப் பற்றும் பட்டுப் போகவில்லை என்ற உண்மை ஒளி விடலாயிற்று. இதைத் தான் நீரடித்து நீர் விலகாது என்பார்களோ?

பெரியாரின் வாழ்த்துக்களைப் பெற...

அதன் பிறகு தந்தையைச் சந்திக்க 2-3-1967இல் திருச்சிக்குச் சென்றோம். ஆம், கழகம் தேர்தலில் வென்று தமிழகத்தில் ஆளும் பொறுப் புக்கு வருவதற்கு முன்பு தந்தை பெரியாரின் வாழ்த்துக்களை நேரில் பெற விரும்பி, அண்ணா அவர்களோடு திருச்சி சென்ற போது, அதாவது 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அய்யாவின் பக்கத்தில் போய் அமர்ந்த போது பாச வெள்ளம் அங்கே கண்ணீராகி விழிகளுக்குத் திரை யிட்டது. குரல் தழுதழுத்தது. நாவும் எழ மறுத்தது. என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை. எங்கள் நிலைதான் தந்தைக்கும். என்னைக் கூச்சப்பட வைத்து விட்டீர்கள் என்று பெரியார் குமுறினார்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றித்தான் விழுப்புரம் முப்பெரும் விழாவில் நமது பேராசிரியர் பேசும்போது உணர்ச்சி ததும்ப எடுத்துக் கூறினார்.

பெரியாருக்கு அரசு மரியாதையுடன்...

24-12-1973 அன்றுதான் தந்தை பெரியார் அவர்கள், தமிழகத்தையும், நம்மையும் தவிக்க விட்டு விட்டு மறைந்தார். செய்தி அறிந்ததும் சில நிமிடங்கள் எனக்கு என்ன செய்வதென்றே புரியாத நிலை.

இன்றைக்கு வருவதைப் போல அன் றைக்கும் அலைஅலையாக பெரியாரோடு பழகிய நினைவுகள் எல்லாம் என் மனதிலே எழுந்தன. என் கடமை, தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை யுடன் இறுதிப் பயணம் செய்திட விரும்பி தலைமைச் செயலாளரை அழைத்து, அதற் கான ஏற்பாடுகளை செய்யும்படி கூறினேன். அதி காரிகள்; பெரியார் அவர்கள் அரசு பொறுப்பில் எதிலும் இல்லாத காரணத்தால் அரசு மரியாதை செய்வதற்கு விதிமுறைகள்படி வழியில்லை என்று கூறினர். காந்தியடிகள் எந்த அரசுப் பொறுப்பில் இருந்தார்?

எனவே நாம் விரும்பியபடி தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட்டே ஆக வேண்டும், அதனால் கழக அரசு கலைக்கப்படக் கூடிய நிலை தோன்றுமே யானால், அதை விட பெரிய பேறு எனக்கு இருக்க முடி யாது, வேண்டியதைக் கவனியுங்கள் என்று கூறினேன். எனவே காந்தியடிகளுக்கு எவ்வாறு அரசு மரியாதை அளிக்கப்பட்டதோ, அதைப் போலவே தந்தை பெரியாரும் ஒப்பற்ற சமுதாயப் புரட்சியாளர், சீர் திருத்த சிந்தனையாளர் என்பதால் அரசு மரியாதை யோடு அடக்கம் செய்யலாம் என்று கூறினேன். அவ்வாறே ஏற்பாடுகள் நடைபெற்றன.

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை திருமணச் சட்டம்

தந்தை பெரியார் அவர்கள் மறைந்தாலும், அவர் நமக்கு அளித்த போதனைகள் மறையவே இல்லை. அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே, தந்தை பெரியாருக்கு அளிக்கும் முதல் காணிக்கையாக சுயமரியாதை திருமணச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதைப் பற்றி பேரவையில் கே. வினாயகம் அவர்கள் அந்தச் சட்டம் தி.மு. கழக அரசு தந்தை பெரியாருக்குச் செலுத்தும் காணிக்கையா என்று கேட்டபோது, அண்ணா அவர்கள் எழுந்து, இந்தச் சட்டம் மாத்திரமல்ல, இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்கு காணிக்கைதான் என்று இடி முழக்க மென எழுந்த கையொலிக்கிடையே அறிவித்தார்.

அர்ச்சகர் சட்டம்

அண்ணா அவர்கள் மறைந்த பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற நான் தந்தை பெரியார் அவர்களின் மனதில் முள்ளாக உறுத்திக் கொண்டிருந்த மற்றொரு கொள்கையான அர்ச்சகர் சட்டத்தைக் கொண்டு வந்து 2-12-1970 அன்று நிறைவேற் றினோம். ஆலயங்களில் நியமிக்கப்படும் அறங் காவலர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்பதை மரபாக மட்டுமே கொண்டிருந்த நிலையை மாற்றி, எந்த ஒரு ஆலயத்து அறங் காவலர் குழுவிலும் நிச்சயம் தாழ்த் தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இடம் பெற் றாக வேண்டுமெனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வராமல் உச்ச நீதிமன்றம் வரை சென்று விட்டது. அடுத்து தந்தை பெரியார் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான கொள்கை, பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என்பதாகும். 1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடை பெற்ற சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர் சொத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கும் தனி சட்டத் தினை முன்னோடி மாநிலமாக 1989ஆம் ஆண்டில் மே திங்கள் 6ஆம் நாள் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினேன்.

பெரியார் நினைவு சமத்துவபுரம்

அதைப் போலவே சாதி சமய பிணக்குகளை அகற்றி அனைத்து சமுதாய மக்களும் நல்லி ணக்கமாக ஒன்று கூடி சமத்துவ உணர்வுடன் வாழ்கின்ற சூழ் நிலையை உருவாக்கும் வகையில் இந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி 1997ஆம் ஆண்டில் தி.மு. கழகம் உருவாக்கிய புதுமையான, புரட்சிகரமான திட்டம்தான் பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சமத்துவபுரக் குடியிருப்பிலும், 100 வீடுகள் கட்டப்பட்டு, அவற்றில் 40 வீடுகள் ஆதி திராவிடர்களுக்கும், 25 வீடுகள் மிகப் பிற்படுத் தப்பட்டவர்களுக்கும், 25 வீடுகள் பிற்படுத் தப்பட்டவர்களுக்கும், 10 வீடுகள் இதர பிரிவின ருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்துச் சமுதாயத்தினரும் ஒரே இடத்தில் இணக்கமாக வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.

தந்தை பெரியார் அவர்களோடு பழகி, அவரின் கொள்கைகளையெல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வந்த காரணத்தால்தான், தந்தை பெரியார் அவர்கள் பொது மக்களுக்காக பொதுத் தொண்டு செய்தவர்கள் என்பது மாத்திரமல்லா மல், பாராட்டுதலுக்குரிய எந்தக் காரியத்தை யார் செய்தாலும் அவர்களைப் பாராட்ட, பெருமைப் படுத்த பொதுமக்கள் முயற் சிப்பது இயற்கையே ஆகும். கலைஞர் கருணாநிதி விஷயத்தில் பாராட்டத் தகுந்த பல தன்மைகள் இருக் கின்றன.

கலைஞர் அவர்கள் தனது பள்ளி மாணவப் பருவத்தில் இருந்து பொதுத் தொண்டு செய்து வரு கிறார். தியாகிகள் அடையாளமாகிய சிறை செல்லும் தன்மையில் பலமுறை சிறை சென்றிருக்கிறார். இவ் வளவு மாத்திரமல்லாமல் ஒரு கட்சியை ஆரம்பித்து, ஆரம்பித்த முக்கியஸ் தர்களில் ஒருவராய் இருந்து, அந்தக் கட்சிக்கு உண்டான எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து அந்தக் கட்சியை நல்ல வண்ணம் உரு வாக்கி அந்தக் கட்சியை நாடாளும் ஸ்தாபனம் ஆக்கிய முக்கியஸ்தர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

கலைஞர் அறிவில் சிறந்தவர், நிர்வாகத்தில் சிறந்தவர், பொதுத் தொண்டுக்காக தியாகம் செய்ததில் சிறந்தவர் என் றெல்லாம் என்னைப் பாராட்டிய சொற்கள் கல் மேல் எழுதப்பட்ட மணிமொழிகளாக என் மனதிலே தோன்றும்போது சில அனாம தேயங்கள் என்னைப் பற்றியும், என் தன்மானத்தைப் பற்றியும் அநாகரிகமாக அலறுவது எப்படி எனக்குப் பெரிதாக தோன்றும். என் அருமை உடன்பிறப்புக்களே,

`அதை நினை யுங்கள் - இதை மறந்துவிடுங்கள்.

- இவ்வாறு கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.17-9-2012

தமிழ் ஓவியா said...

யாருக்குத் தன்மானமில்லை? நான் மானமிகு சுயமரியாதைக்காரன்! விழுப்புரத்தில் கலைஞர் இடித்துரை


விழுப்புரம், செப்.16-தந்தை பெரியார் வழிவந்த எனக்கு யாரும் தன்மானத்தைப் பற்றி செல்லிக் கொடுக்க வேண்டாம்; நான் மானமிகு சுய மரியாதைக்காரன் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

விழுப்புரத்தில் நேற்று (15.9.2012) நடை பெற்றமுப்பெரும்விழாவில் கலைஞர் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தன்மானம் என்றால் என்ன?
பெங்களூருவிலே இருந்து வருமா?

கருணாநிதிக்குத் தன்மானம்இல்லை என்று தன்மானம் உள்ள ஒரு அம்மையார் பேசியதாக பத்திரிகைகளிலே பார்த்தேன். தன்மானம் என்றால் என்ன, அதை அளந்து கொடுப்பார்களா? நிறுத்துக் கொடுப்பார்களா? அது கடையில் கிடைக்குமா? அதை தெருவிலே விற்பார்களா? பெங்களூருவிலே இருந்து வருமா? என்றெல்லாம் விவரம் தெரியாமல் தன்மானத்தைப் பற்றிப் பேசக்கூடாது.

தன்மானம் சாதாரண விஷயமல்ல. என்னுடைய இயக்க உணர்வு, பெரியாரிடத்திலே பற்று, அண்ணாவிடத்திலே அன்பு இவைகளெல்லாம் எனக்கு ஏற்பட்டதற்குக் காரணமே, எனக்கு ஏற்பட்ட உணர்வுகள் என்னைப் போன்ற அந்தக் காலத்திலே இளைஞர்களிடத்திலே பரப்பி, வளர்த் ததற்குக் காரணமே தன்மானம்தான் (பலத்தகை தட்டல்). எனக்குத் தெரியும், நான்இசை மரபிலே உள்ள குடும்பத்திலே பிறந்தவன்.

இசை மரபிலே பிறந்தவன் - பிற பெரிய ஜாதிக்காரர்களுக்கு, சொல்லப்போனால் நம்முடைய பேராசிரியர் முதலியார் என்றால், அந்த முதலியாரில் அவர் பெரியவர் என்றால் நான் போட்டு இருக்கின்ற துண்டை எடுத்து இடுப்பிலே கட்டிக்கொள்ள வேண்டும். அதெல்லாம் பேராசிரியருடைய தாத்தா விற்கு தாத்தாவுடைய காலம். இந்தக் காலத்தில் பேராசிரியர் அப்படிப்பட்டவர். அல்ல. சுய மரியாதைச்சுடராக, சமத்துவக் குன்றாக விளங்கக் கூடியவர்.

ஆனால் அந்தக் காலத்திலே மேல்ஜாதி, பெரிய ஜாதி, பணக்கார ஜாதி என்று இருந்த சில சமுதாய ஊழல்கள், நான் பிறந்த சமுதாயத்திலே எவ்வளவோ இடர்ப்பாடுகள் உள்ளாகியிருக்கிறது. நான் இன்றைக்கு சொற்பொழிவாளராக உங்கள் முன்னால் உட்கார்ந்து இருக்கிறேன். தலைவராக உங்களால் மதிக்கப்படுகிறேன். தொண்டனாக உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறேன். இயக்கத்திற்காக தியாகம் செய்தவனாக, தியாகியாக உங்களால் போற்றப்படுகிறேன்.

ஆனால் நான் பிறந்த சமுதாயத்திலே எவ்வளவுதான் இசையை கற்றவர்களாக இருந்தாலும், சங்கீத வல்லுநர்களாக இருந்தாலும் அவர்கள் எப்படி மதிக்கப்பட்டார் கள்? எப்படி இழித்துரைக்கப்பட்டார்கள் என்றால், உங்களுக்குத் தெரியும் ராஜரத்தினம் பிள்ளை, குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை என்று இந்த மகாவித்வான் களை எல்லாம் நீங்கள் அறிவீர்கள். இன்றளவும் உங்கள் தாத்தா, பட்டனார், அப்பா, அம்மா இவர்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்க ளெல்லாம் எவ்வளவு பெரிய வித்வான்களாக இருந்தாலும், மேல் ஜாதிக்காரர்களைக் கண்டால், சாமீ! கும்பிடுகிறேன் என்று சொல்வது மாத்திர மல்ல, தான் விலை கொடுத்து வாங்கி தோளிலே போட்டிருக்கின்ற துண்டை எடுத்து இடுப்பிலே கட்டிக்கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையிலே நான், திருவாரூர் பள்ளியிலே படித்து என்னுடைய கிராமத்திற்கு வரும்போதெல்லாம் என்னுடைய சட்டைக்கு மேலே ஒரு துண்டு இருக்கும். ஊர்ப் பெரியவர்கள் என்னப்பா, அக்ரகாரத்திலே ராமகிருஷ்ணன் அய்யர் வருகிறார், நீ துண்டை தோளில் போட்டுக்கொண்டு இருக்கிறாய்? என்று சொல்லி, அந்தத் துண்டைப் பிடுங்கி இடுப்பிலே கட்டிக்கொள் என்பார்கள். இதை ஒரு நாள் பார்த்தேன். இசைப் பயிற்சிக்கு முழுக்குப் போட்டேன். வீட்டிலே கேட்டார்கள்.



தமிழ் ஓவியா said...

ஏனப்பா இசைப் பயிற்சியை விட்டு விட்டாய் என்று. இசைப் பயிற்சிக்குப் போனால் என்னுடைய தன்மானம் போகிறது, சுயமரியாதை போகிறது, மனிதனுக்கு மனிதன் நான் வாங்கிய துண்டை, நான் விலை கொடுத்து வாங்கிய துண்டை போட்டுக் கொள்ளக்கூடாதா எனக்கு இந்த ஊரிலே உரிமை இல்லை என்றால், எதற்காக இந்த இசைப் பயிற்சி என்று சொல்லி, அன்றைக்கு இசைக் கருவிகளை தூக்கி எறிந்தவன்தான். அன்றைக்கு திருக்குவளை யிலிருந்து திருவாரூர் பள்ளிக்கூடத்திற்குச் சென்றவன்தான், அதற்குப் பிறகு நான் எந்த வித்வானையும் பார்த்து பரிச்சயம் செய்து கொள்ள வில்லை.

அதற்குப் பிறகு நான் பார்த்த வித்வான்க ளெல்லாம் பேராசிரியர், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற இந்த வித்வான்கள்தான் எனக்குத் தெரியுமே தவிர, இவர்களையெல்லாம் விட மகா வித்வான் அறிஞர் அண்ணா அவர்களைத் தெரியுமே தவிர, நான் இடுப்பிலே கட்டிக்கொள்ள வேண்டியவன் என்ற சுயமரியாதை அற்ற தன்மைக்கு, அந்த இளம் வயதிலேயே என்னுடைய தலைவணங்க மறுத்த காரணத்தால்தான் இன்றளவும் தன்மான இயக்கத் தொண்டனாக நான் இருக்கின்றேன்.

மிசா சிறையிலே மானத்தோடு விளையாடியவன் என் மகன் ஸ்டாலின்

என்னை நிருபர்கள் கேட்டார்கள், உங்களு டைய உரிமைப் பற்றி, உங்களுடைய தன்மைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? ஒரே வரியில் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். நான் சொன்னேன், ஒரே வரியிலே கேட்கிறீர்களா? நான் மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்று குறிப் பிட்டேன் (பலத்த கைதட்டல்). அந்த மானத்திற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தேன் என்றால், மானம் என் மகன் கேட்ட தாலாட்டு, மரணம் அவன் ஆடிய விளையாட்டு. உண்மை தானே! என் மகன் ஸ்டாலின், மானம் என்ற தாலாட்டைக் கேட்டவன் அல்லவா (கைதட்டல்).

மிசா சிறையிலே மானத்தோடு விளையாடியவன் அல்லவா? தம்பி சீத்தாபதிக்குத் தெரியுமே! சிட்டிபாபு புத்தகமாகவே எழுதியிருக்கிறாரே! துரைமுருகனைப் போன்றவர்கள், ரகுமான்கானைப் போன்றவர்கள் இன்றைய தினம் கழகத்தினுடைய காவலர்களாக, பேச்சாளர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களெல்லாம் அடிபடாதவர்களா? சிறைச் சாலைக்கு உள்ளாகாதவர்களா? கல் வீச்சுக்களை சந்திக்காதவர்களா? அவர்களுடைய வீடு புகுந்து போலீசார் அடிக்கிறார்கள் என்ற நிலையெல்லாம் ஏற்பட்டது இல்லையா? என்னை அடித்து இழுத்துக் கொண்டு சிறைச்சாலைக்குப் போனார்களே, நான் தன்மானத்தைப் பற்றி கவலைப்படாமல், அய்யா என்னை விட்டுவிடுங்கள், இனிமேல் நான் எதுவும்செய்ய மாட்டேன்.

இனி நான் அ.தி.மு.கவுக்கு விரோதமாகப் பேசமாட்டேன் என்று சொன்னால், எனக்கு அன்றைக்கு அந்த அடியும் கிடையாது, உதையும்கிடையாது. இன்ன மும் என்னுடைய கையை தூக்க முடியாமல் இருக்கின்ற அந்த வலியும்கிடையாது. முதுகில் அறுவை சிகிச்சை நடைபெற்ற இடத்தில் வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் மூன்று சக்கர வண்டியில் வந்து கொண்டிருக்கின்றேனே, இந்த நிலையும் கிடையாது.

தமிழ் ஓவியா said...

நான் அன்றைக்கே இவற்றையெல்லாம்விட்டு விடுகிறேன் என்று சொல்லியிருந்தால், அதற்கு என்ன பொருள்? சுருக்கமாகச் சொன்னால், என்னுடைய தன்மானத்தை விட்டு விடுகிறேன் என்று அர்த்தம்.

தன்மானத்தை நான் விலை கூற மாட்டேன். விலை கூறுகின்ற வழி யில் நான் நடக்கவும் மாட்டேன் என்று உறுதியாக இருந்த காரணத்தால்தான் இன்றைக்கு அம்மையார் ஜெயலலிதா, கருணா நிதிக்கு தன்மானம் இல்லை என்று சொல்கிற அளவுக்கு நான் வரவில்லை. அவர்களும் வரவில்லை. தமிழ்நாடு வந்துவிட்டது.

இராவணன் பரம்பரை!

ஒரு மனிதனைப் பார்த்து தன்மானம் இல்லாத வன் என்று சொன்னால், அதை பொறுத்துக் கொண்டு போவதற்கு என்ன காரணம்? இங்கே என்னுடைய மகன் இந்த கட்சியினுடைய இளைஞர் அணியின் செயலாளர், ஆகா, இப்படி தந்தையைப் பார்த்து தன்மானம் இல்லாதவர் என்று சொல்லி விட்டார்களே என்று ஆத்திரப்பட்டடால், அது இன்னும் கொஞ்சம்மென்மையாக பேராசிரியர் அவர்களால் இங்கே சுட்டிக்காட்டப்பட்டது, பேசிய அத்தனை பேரும் அந்த சொல், தன்மானம் இல்லாதவர் கருணாநிதி என்று ஆட்சியில் இருப்ப வர்கள் சொன்ன அந்த சொல், எத்தனை பேரைக் குத்திக் குடைந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் நாம் பொறு மையாக இருக்க வேண்டும். இருந்தாலும் பதி லுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை.

தன் மானத்தைப்பற்றிப் பேசுகின்றவர்கள், தங்களுடைய உருவத்தைக் கண்ணாடியிலே பார்த்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி கிடைக்காவிட்டால், ஒரு குளத்தில் தண் ணீர் நிழலிலே முகத்தைப் பார்த்துக் கொள்ளட்டும். குளத்திற்கும் சென்று பார்க்க முடியாவிட்டால், வீட்டிலே ஒரு நீர் தொட்டியை கட்டியாவது அங்கே தலைகுனிந்து பார்த்துக் கொள்ளட்டும்.

யார் தன்மானம் உள்ளவர்? யார் தன்மானம் இல்லாதவர்கள் என்பதை பார்த்துக் கொள்ளட்டும். அவர்களே பார்த்துக் கொண்டால் தான், நாம் கருணநிதியைப் பற்றி சொன்னது தவறு. நம்முடைய முகத்தைப் பார்க்காமல், அவருடைய முகத்தைப் பார்த்துச் சொன்னது தப்பு என்று அப்போதாவது அவர்களுக்குப் புரியும்.

இராவணன் பரம்பரையிலே வந்த தமிழர்களே நான் உங்களைக் கேட்கிறேன், சேரன் செங்குட்டுவன் சந்ததியிலே வந்த தமிழர்களே நான் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன். தந்தை பெரியாரால் உணர்ச்சியூட்டப்பட்ட தமிழர்களே நான் உங் களைப் பார்த்துக் கேட்கிறேன்.

அண்ணன் தளபதி அழகிரிசாமியால் உணர்ச்சியூட்டப்பட்ட நண்பர் களே உங்களைப் பார்த்துக்கேட்கிறேன், தந்தை பெரியாரால் அவர்களுடைய தளபதிகளால் எழுச்சி யூட்டப்பட்ட சுயமரியாதை இயக்கத் தமிழர்களே உங்களைப் பார்த்துக்கேட்கிறேன். நான் தன்மானம் இல்லாதவனாம். இருக்கலாம். தன்மானம் இல்லாத காரணத்தால்தான் இதுவரையிலே தாங்கிக்கொண் டிருக்கிறேன். எனக்காக அல்ல. இந்த நாடு அமளிக் காடாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக பலத்த கைதட்டல், உணர்ச்சிமிகு ஆரவாரம்.)

-இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

அந்த இளைஞர் யார் தெரியுமா?



அவர்தான் புகழ்பெற்ற தொழில்நுட்ப மேதை ஜி.டி.நாயுடு. தான் மட்டுமல்ல, தன்னுடைய இரண்டு மகள்களின் திருமணங்களையும் புரோகிதர்கள் இல்லாமலேயே நடத்தினார். அர்த்தமற்ற மதச் சடங்குகளைத் தவிர்த்து, துளியும் ஆடம்பரமில்லாமல், சிறிய தேநீர் விருந்துடன் சிக்கனமாகத் திருமணத்தை நடத்தினார். பகட்டான மேளதாளங்கள், பட்டாடைகள் கிடையாது. மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

நன்றி: மெர்வின் எழுதிய உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு

தமிழ் ஓவியா said...



அண்ணாவின் ஆதங்கம்

கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்துவிட்டுக் காலண்டரைப் பார்த்துச் சம்பளம் வாங்கும் படித்தவர்களுக்குக் கூட, இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. மிகக் கஷ்டப்பட்டு நாலு நாள் லீவு பெற்றாலும், குழந்தைக்கு மொட்டை அடிக்கத் திருப்பதிக்கோ, அம்மா சிரார்த்தத்துக்கு காவிரிக்கோ போய் வருவார்களேயொழிய, களிப்புக்காக, இயற்கை தீட்டிக் காட்டும் இனிய ஓவியங்களை காணச்செல்பவர் இரார்.

அண்ணாவின் நகைச்சுவை

இருவருக்கும் சந்தேகம்

சார்! ஒரு சந்தேகம்.
என்னடா?
சரஸ்வதி எங்கே இருக்கிறாள்?
வெண்டாமரையில்.
அவள் இருக்கும் அப்பூ எங்கே இருக்கிறது சார்?
பிரம்மாவின் நாவில்.
பிரம்மா எங்கே இருக்கிறார் சார்?
மஹாவிஷ்ணுவின் உந்தியில் (அதாவது தொப்புளில்).
மஹாவிஷ்ணு எங்கே இருக்கிறார்?
ஆதிசேஷன் என்ற பாம்பின்மேல்.
அப்பாம்பு எங்கே இருக்கிறது சார்?
அதுவா திருப்பாற்கடலில்.
திருப்பாற் கடல் எங்கே இருக்கிறது சார்?

(உபாத்தியார் பெரிய சந்தேகத்துடன்) உனது பூகோளப் படத்தை எடு. அதில் இருக்கிறதா என்று பார்ப்போம்.

தமிழ் ஓவியா said...



அதோ அதோ ஆசானின் சுயமரியாதை உலகு




எமது விழிகளைத் திறந்தவர் என்று உலகின் பல பகுதிகளில் உள்ள மனிதர்கள் நன்றி உணர்வோடு இன்றும் பாராட்டிப் பெருமைப்படுத்தும் பெம்மான் எங்கள் தந்தைக்கு இன்று (17.9.2012) 134-ஆவது ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

ஈரோட்டில் பிறந்தாலும் உலக மக்களின் பேரேட்டில் பெரு வரவாய்ப் பூத்திட்ட புரட்சிமலர்! எதிர்ப்பது இமயமே என்றாலும் எதிர்த்து நிற்க என்னால் முடியும் என்று நின்று, வென்று காட்டிய எங்கள் வெண்தாடி வேந்தருக்கு இன்று பிறந்த நாள் பெருவிழா; திராவிடர் இனத்தின் திருவிழா - தன்மானத்திற்கு எடுக்கப்படும் ஒரு விழா!

தனக்கென வாழாது, மக்களுக்காக, மனித குலமான மீட்புக்காக, உரிமைக் காப்புக்காக தனது தன்னலமற்ற வாழ்வைத் தரணிக்கே தந்த எமது குளிர்தரு - கொண்ட கொள்கைக்காக எதையும் இழக்கத் தயாராகி, எப்போதும் எவருடனும் சமரசம் செய்து கொள்ளாது, சமர்க்களத்தில் நின்று வென்ற அந்தச் சண்டமாருதத்திற்கு இன்று 134ஆவது ஆண்டு பிறந்த நாள் பெருவிழா.

உலகத்தின் பலப் பல நாடுகளிலும்...

உலகத்தின் பற்பல நாடுகளிலும் உள்ள மானுடம் அவரது தொண்டறத்தைப் போற்றி நினைவு கூரும் நாள் இன்று!

காசு காசுகளாய் மக்களிடம் வாங்கி லட்சம் லட்சமாய் அதை அந்த மக்கள் நலனுக்கு, நல்வாழ் வுக்கு, அறிவு விடுதலைக்குத் திருப்பி தந்து விட்ட ஒப்பாரில்லாத உயர் தனி மாமனிதர் நம் அய்யா!

அவர் கால்கள் படாத, சுவடுகள் பதிக்காத தரை ஏதும் தமிழ் மண்ணில் உண்டா?

அறிவின் ஒளி வீச்சுப்பாயாத துறை உண்டோ!

அவர்தம் குரலொலி கேட்டு குதூகலிக்காத குக்கிராம மக்கள் உண்டா?

அவரது அறிவின் ஒளிவீச்சு பரவிப் பாயாத துறை உண்டா?

அவர்தம் தொலைநோக்கு, துளைக்காத இனி வரும் உலகத்தின் புதுமைகள் உண்டா?

இன்றைய அறிவின் அற்புதங்கள், தந்தையின் அன்றைய சிந்தனை பெற்றெடுத்த சீர்மிகு குழந் தைகள் அல்லவா?

யுனெஸ்கோ விருது!

இதை முழுதாய் அறிந்தல்லவோ. உலக மாமன்றமாம் யுனெஸ்கோ தந்தையை புதுயுகப் பார்வை கொண்ட தொலை நோக்கர் என்று நம் தொண்டு செய்து பழுத்த பழத்தை விருது அளித்து பெருமை பெற்றது!

தமிழ் மண்ணில் மட்டுமா விழா அவருக்கு? இந்தியத் துணைக் கண்டம் முழுவ திலும் உள்ள அறிஞர்களால் கொண்டாடப்படு கிறார்!

ஆப்பிரிக்கக் கண்டத்திலும்...

அமெரிக்கா வாஷிங்டன் தலைநகரில் (அவருக்கு) விழா!

ஆப்பிரிக்கக் கண்டத்து கானா நாட்டில் அவர் பெயரில் தொண்டு அமைப்பு உருவாக்கத்துடன் கொண்டாட்ட விழாக் கோலம்!!

இப்படி அய்யாவின் மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது!

அவர்தம் உண்மைத் தொண்டர்களாகிய எமக்கு அந்த மகிழ்ச்சியைவிட வேறு என்ன தேவை?

அதோ அதோ சுயமரியாதை உலகு!

பெரியார் என்பது உலக மனிதநேயத்தின் உன்னத மூச்சுக்காற்று - சமத்துவ நிலத்தில் சதிராடும் ஆடிக்காற்று!

ஆடி வந்ததால் ஆடிப் போனவர்கள் மத்தியில் இந்த ஆடிப் பட்டத்தில் நாம் தேடி விதைப்போம்!

பிறகு கொள்கை வெற்றியை நாடி, அறுவடை செய்வோம்!

சுயமரியாதை உலகு அதோ! அதோ!! வாரீர்! வாரீர்!!

ஈரோடு
17.9.2012

கி.வீரமணி

தலைவர்
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

பெரியார் !!

20ஆம் நூற்றாண்டின் அறிவுச்சுரங்கம். இது தந்தை பெரியார் அவர்களின் 134 -ஆம் ஆண்டு பிறந்த நாள். தந்தை மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் தந்தையின் கோட்பாடுகள் காலத்தை வென்று அவரைக் கண்டிராத தலைமுறையினர் நெஞ்சிலும் ஆழப்பதிந்து புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருகின்றன எனில் அது மிகையாகாது. 6000 ஆண்டுகள் புழுவாய்; புல்லினமாய் புல்லர்களால் வஞ்சிக்கப்பட்ட திராவிட சமூகத்தின் விடிவெள்ளியாய்;

20 ஆம் நுற்றாண்டின் அறிவுச்சுரங்கமாய் ;

தன்னிகரில்லாத தலைவராய்;

பழைமைதனை புரட்டிப்போட்ட புரட்சியாளராய்; ஈரோட்டுத் தந்தை தமிழர்களின் தந்தையாய் மிளிர்ந்தார்.

தள்ளாத வயதிலும் கையில் மூத்திரச் சட்டியுடன் தளர்ந்து போன தமிழ்ச் சமூகத்தின் மீட்சிக்காய் குரல் கொடுத்திட்ட தலைவரை உலக வரலாற்றிலே காண முடியுமா? ஆதிக்க சக்திகளை ஆத்திரங்கொண்டு அடக்கிட்ட தந்தையின் பிறந்த நாள் ஒவ்வொரு தமிழனுக்கும்; அவரால் பயன் அடைந்திட்ட ஒவ்வொரு திராவிடச்சமூகத்தின் விழுதுக்கும் மறக்கொணா நன்றிக்குரிய நாள் அல்லவா?" எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்கிறது உலகப்பொதுமறை திருக்குறள் தந்தையின் உழைப்பிற்கும், தியாகத்திற்கும் தினம் தினம் நன்றி அய்யா!! நன்றி அய்யா!!

என எண்ணிக்கொண்டே இருப்பது நம் கடமை அல்லவா?

தாங்கள் இல்லையேல் எங்களுக்கு படிப்பேது?

பட்டம் ஏது?

சமுதாய ஏற்றம் ஏது?

பொருளாதார வளர்ச்சி ஏது?

விழிப்புணர்வு ஏது?

பகுத்தறிவு ஏது?

இன்றும் ஏதுமறியா மடையர்களாய் அல்லவா இருந்திருப்போம் ?

இன்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் எந்த ஒரு தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் இல்லாத கால கட்டத்தில் ஊர் ஊராய் பட்டி தொட்டியெல்லாம் மூலை முடுக்குகளில் எல்லாம் சுற்றிச் சுற்றி சூறாவளி யாய் மக்களுக்கு பகுத்தறிவு ஊட்டிய எம் தந்தை பெரியார் உலக தத்துவ ஞானிகளில் ஒப்பில்லாதவர்!!

இன்று தகவல் தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கின்றது . தமிழர் தலைவர் அவர்களின் வழிக்காட்டுதலில் அய்யா தந்தை பெரியார் கணினியில்,சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றார்!!

இதில் எத்தனை பார்ப்பனர்களுக்கும்,பார்ப்பன அடிவருடிகளுக்கும் வயிற்றெரிச்சல்?

அத்தணை தடைகளையும் , தந்தை பெரியாரை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்து சொறிந்து கொள்ளும் சொறிப் பார்ப்பனர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் இன்றைய இளைய தலைமுறை தக்க பதிலடி கொடுத்து வருகின்றது!!

அய்யாவை காணொளிகளில் மட்டுமே கண்டிட்ட தலைமுறைக்கு எப்படி அவரின் கருத்துக்கள் மனதில் ஆழப்பதிந்தன?

அவர் தாம் பெரியார் !!

காலங்களை கடந்தும் அய்யாவின் கருத்துகள் நிலைபெறும்!!

ஏனெனில் அவர் உதிர்த்தவை வெறும் சொற்கள் அல்ல சொரனையற்ற சமூகத்தின் முகவரி அவரின் பேச்சும் எழுத்தும்!!

அவர் ஆற்றியது வெறும் உரையல்ல உறைக்காது உறங்கிக்கிடந்த சமூகத்தின் ஊக்க மருந்து அவை!!

அய்யாவே உங்களின் ஒவ்வொரு கருத்தும், நம் இன எதிரிகளுக்கு இன்றும் சாட்டையடி!!

உம்மை மனதில் பதித்தே ஒவ்வொரு நாளும் நடை போடுவோம் நீங்கள் தந்திட்ட எழுச்சி வீழ்ச்சி அடையாது என்றுமே எங்கள் குருதியில் ஓடிக்கொண்டிருக்கும் சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டு அடி

என்ற எங்கள் இன இடி முழக்கமே!!

உம்மை நாங்கள் வாசிக்க மட்டும் இல்லை சுவாசிக்கின்றோம்!!

நீங்கள் தந்திட்ட உயிர் சுவாசம் தான் மானமுள்ள மக்களாய் எங்களை இன்று தலை நிமிரச் செய்திருக்கின்றது!!

இன்று திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று நம் இனக் கயவர்கள் பார்ப்பனர்களின் எண்ணத்தினை பரப்புரை செய்கின்றார்களே அந்த விபீடணக் கூட்டத்தாரின் குரல்வளையை நெரிக்கும் உம் கறுப்புப் படை!!

திராவிடம் தான் தமிழனை தலை நிமிரச் செய்த ஊட்டம் என்பதினை உலகிற்கு உரக்க உறைக்க உரைப்போம் தந்தையே!!

இதுவே நின் பிறந்த நாளில் நாங்கள் எடுத்திடும் சூளுரை!!

வாழ்க நின் புகழ் தந்தையே!!

- வழக்குரைஞர் ம.வீ. கனிமொழி

தமிழ் ஓவியா said...

சாமிகளின் பிறப்பும் இறப்பும்

- ச.தமிழ்ச்செல்வன்

பிஞ்சுகளே...

இந்தப் புதிய தொடரை எழுதியிருப்பவர் ச.தமிழ்ச் செல்வன். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர். அறிவுசார்ந்த இலக்கியங்களைப் படைத்துவருபவர். சாமிகளின் இறப்பும் பிறப்பும் என்ற பாரதி புத்தகாலய வெளியீட்டிலிருந்து இந்தக் கட்டுரைத் தொடர் இந்த இதழிலிருந்து இடம்பெறுகிறது. கடவுள்களின் பெயரால் மனிதர்களைப் பிரிக்கும் மடமை மிகுந்துவருவதைக் காண்கிறோம். ஆனால், இந்தக் கடவுள்களின் கதைதான் என்ன? இன்றைய காலக்கட்டத்தில் கடவுள்களின் நிலைதான் என்ன ?தன் வாழ்வின் வழியில் மனிதன் கடவுளை எப்படிப் பார்க்கிறான்? என்பவை குறித்து சுவைபட எளியநடையில் உரையாடும் இத்தொடர் உங்களுக்காக...
கொசுக்கள் பிறக்கின்றன, இறக்கின்றன,

ஈக்கள் பிறக்கின்றன, இறக்கின்றன,

பறவைகள் பிறக்கின்றன, இறக்கின்றன.

மனிதர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள்.

அதே போல... சாமிகளும் கடவுள்களும் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள்

தப்பு, தப்பு, இப்படியெல்லாம் பேசக்கூடாது. வாயிலே போட்டுக்கோ, சாமி பிறக்கிறதாவது இறக்கிறதாவது என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கோபப்படுவார்கள்

ஆனால் யாரும் கோபப்படுவார்கள் என்பதற்காக அறிவியலும் வரலாறும் வாயை மூடிக்கொண்டு இருந்திருந்தால் ஒரு வளர்ச்சியும் உலகில் வந்திருக்காது.

இந்த உலகம் உருண்டை என்று முதன் முதலாகச் சொன்னவரை அன்று அந்த ஊர்ப் பெரியவர்கள்போட்டுத் தள்ளினார்கள்.

ஆனால் உலகம் உருண்டைதான் என்று இன்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நமக்குத் தெரியும்.

பூமிதான் நடுவில் இருக்கிறது. சூரியன், சந்திரன், புதன், வியாழன் போன்ற கிரகங்கள் எல்லாம் பூமியைச் சுற்றி வருகின்றன என்று முற்காலத்தில் பெரியவர்கள் நம்பினார்கள். ஆனால் அப்படி இல்லை. சூரியன் தான் நடுவில் இருக்கிறது. சூரியன் ஒரு கிரகமல்ல. அது ஒரு நட்சத்திரம். பூமியும் மற்ற கிரகங்களும் தான் சூரியனைச் சுற்றுகின்றன என்று முதன் முதலாகச் சொன்ன மனிதரை அன்றைய பெரியவர்கள் வாழவிடவில்லை.

ஆகவே பெரியவர்கள் வருத்தப்படுவார்கள், கோபப்படுவார்கள் என்று நாம் கவலைப்பட வேண்டாம். அறிவியல் என்ன சொல்கிறது என்பது தான் நமக்கு முக்கியம்.

சரி, இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
மரங்கள் சாமி கும்பிடுவதில்லை.
பறவைகள் சாமி கும்பிடுவதிலலை.
மிருகங்கள் (டைனோசர்கூட) சாமி கும்பிடுவதில்லை.
பூச்சிகள் (கொசுக்கள் கூட) சாமி கும்பிடுவதில்லை.
நம்ம வீட்டு நாய்க்குட்டி சாமி கும்பிடுவதில்லை.
உலகத்தில் சாமி கும்பிடுகிற ஒரே உயிரினம் மனிதன்தான். இது ஏன்?
இன்னொன்று என்னவெனில்,



நாம் பூமியில் இருக்கிறோம். பூமி சூரியக் குடும்பத்தில் இருக்கிறது. சூரியக்குடும்பம் பால்வீதி என்கிற நம் கேலக்ஸியில் இருக்கிறது. பலகோடி கேலக்ஸிகள் இப்பிரபஞ்சத்தில் இருக்கின்றன. பூமி தவிர வேறு எந்த கிரகத்திலாவது - புதன், வெள்ளி, வியாழன், செவ்வாய், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட செட்னா உள்ளிட்ட எந்தக் கிரகத்திலாவது _ சூரியன் உள்ளிட்ட எந்த நட்சத்திரத்திலாவது _ எந்த கேலக்ஸியிலாவது _ இந்தப் பிரபஞ்சத்தின் எந்த இடத்திலாவது எந்த மூலையிலாவது கோவில், குளம், மசூதி, சர்ச், சாமி, கடவுள் ஏதாச்சும் இருக்கிறதா? இல்லவே இல்லை. இந்த சமாச்சாரம் எல்லாம் பூமியில் மட்டும்தான் இருக்கின்றன. ஆகவே ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகிவிட்டது. சாமி என்பது பூமியில் மட்டும் உள்ள ஒன்று. பூமியிலும் கூட எல்லா உயிர்களுக்கும் தேவையற்ற ஒன்று.

மனிதனோடு மட்டுமே தொடர்புடையது சாமி. மனிதனுக்கு மட்டுமே தேவைப்படுகின்ற ஒன்று. மனிதன் மட்டுமே கும்பிடுகிற ஒன்று. மனிதன் மட்டுமே தொழுகின்ற ஒன்று. மனிதன் மட்டுமே தோப்புக்கரணம் போடுகிற ஒன்று. மனிதன் மட்டுமே முழந்தாள் போட்டு வணங்குகின்ற ஒன்று. குட்டிக்கரணம் போடும் குரங்குகள் கூட சாமி முன்னால் தோப்புக்கரணம் போடுவதில்லை. ஆகவே கடவுளை நாம் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக்கக் கூடாது. சும்மா சாமி, கடவுள் என்று சொல்லக்கூடாது. மனிதனின் கடவுள், மனிதனின் சாமி என்றுதான் அழைக்க வேண்டும். சரிதானே?

சரி.. அடுத்த கேள்விக்குப் போகலாம்.

தமிழ் ஓவியா said...

பூமியில் சாமி எப்போதும் இருந்து கொண்டிருக்கிறதா?

பூமி பிறந்து 450 கோடி வருடங்கள் ஆகின்றன. அப்போதிலிருந்து சாமி இல்லை. மனிதன் பிறந்து சில லட்சம் வருடங்களே ஆகின்றன. அதிலும் இப்போதுள்ள நட்டமாக கை வீசி நடக்கும் மனிதன் தோன்றி ஒன்றரை லட்சம் வருடங்கள் தான் ஆகின்றன. புதைபொருள் ஆராய்ச்சிகள் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மூலம் அறிவியலாளர் கண்டது என்ன? சாமிகள், கோவில், குளங்கள் எல்லாம் இப்பூமிக்கு வந்து சில ஆயிரம் ஆண்டுகளே ஆகின்றன என்பதுதான். கிறிஸ்து பிறந்தே 2012 வருடங்கள்தான் ஆகின்றன. ஆகவே பூமியில் சாமியை விட சீனியர் மனிதன் தானே? அது ஒருபக்கம் இருக்கட்டும்.

பிரபஞ்சத்தில் யாருக்குமே தேவைப்படாத சாமி, மனிதனுக்கு மட்டும் ஏன் தேவைப்பட்டது? எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக ஒரே சாமி இல்லையே ஏன்? நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் இத்தனை சாமிகள் ஏன் வந்தன? எப்படி வந்தன?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண வேண்டும். சில சாமிகளின் தோற்றம், வளர்ச்சி உள்ளிட்ட வரலாற்றைத் தெரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்கு விடை தெரியும்.

அப்புறம் சாமியின் மரணம் என்று எதைக் குறிப்பிடுகிறோம்? மக்கள் விடாமல் கும்பிடும் வரைதான் அந்தச் சாமிக்கு வாழ்க்கை இருப்பதாகக் கூற முடியும். மக்கள்கண்டுக்காம விட்டுவிட்டால் அந்த சாமியின் கதை அதோடு முடிந்துவிடும்.

தமிழ்நாட்டில் முன்னர் கொற்றவை என்றொரு பெண் தெய்வம் இருந்தது. ஊரெல்லாம் அதற்காகக் கோவில்கள் இருந்தன. காமக் கோட்டங்கள் எனப்பட்ட பெண் தெய்வக் கோவில்கள் இருந்தன. இப்போது கொற்றவையை யாரும் கும்பிடுவதில்லை. உங்களில் யாருக்கும் அப்படி ஒரு சாமி இருந்தது என்றே தெரியாதல்லவா? பூமியிலும் கொற்றவை கோவில்கள் காணாமல் போய்விட்டன. தமிழ்நாட்டு மக்களின் மனங்களிலும் கொற்றவை இப்போது வாழவில்லை. சாமிகள் இருக்கும் இடம் ரெண்டுதானே. ஒன்று கோவில், இன்னொன்று மனித மனம். இந்த இரண்டு இடங்களிலும் இல்லாமல் போன சாமிகளைத்தான் நாம் செத்துப்போன சாமிகள் என்று சொல்கிறோம். இப்படிச் செத்துப் போன கடவுள்களும் சாமிகளும் நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் நிறைய உண்டு. சாமிகள் வரும், போகும் மனிதன் தான் இருந்துகொண்டே இருக்கிறான்.

சில சாமிகள் இப்படி சுத்தமாக செத்துப் போகும். இன்னும் சில சாமிகள் அரை உயிராக இழுத்துக் கொண்டு கிடக்கும். சில சாமிகள் மனித மனதில் மட்டும் இருக்கும். சில கோவிலில் மட்டும் இருக்கும். சில சாமிகள் சில ஊர்களில் மட்டும் இருக்கும். சில தெய்வங்கள் ஒரு மாவட்டத்தில் மட்டும் இருக்கும். சரஸ்வதி என்றொரு சாமியை இந்துக்குடும்பங்களில் கும்பிடுவார்கள். சரஸ்வதி பூஜை என்று ஒருநாள் வரும். அன்று மட்டும் எல்லோரும் புத்தகங்களை அடுக்கி வைத்து சரஸ்வதி போட்டோவை மேலே வைத்துக் கும்பிடுவார்கள். இது ஒருநாள் வாழும் சாமி. சரஸ்வதி கோயில் என்று எங்காவது பார்த்திருக்கிறீர்களா? கோயில்களில் சரஸ்வதி இல்லை. சிவகாசியில் அச்சாகி வரும் படங்களிலும் போட்டோக்களிலும் மட்டுமே சரஸ்வதி வாழ்கிறாள். மூதேவி என்று ஒரு பெண்சாமி உண்டு.திருப்பரங்குன்றத்திலும் நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் என்கிற ஊரிலும் அந்த சாமிக்கு கோவில் உண்டு. வண்ணார் சமூகம் தவிர வேறுயாரும் அதை வணங்குவது இல்லை.

இப்படி வாழ்ந்தும் வாழாமலும் இருந்தும் இல்லாமலும் செத்தும் சாகாமலும் பல சாமிகள் இருக்கின்றன. ஆனால் சாமிதான் நம்மைக் காப்பாத்தும். சாமி கண்ணைக் கெடுத்திடும் என்று மனிதர்கள் நம்புகிறார்கள்.

கொசுக்களைப் போல ஈக்களைப் போல விலங்குகள் போல பறவைகள் போலவே பிறந்து குறிப்பிட்ட காலம்வரை வாழ்ந்து பின்னர் மடிந்தும் போகிற சாமிகள் மனித மனங்களை இந்த ஆட்டு ஆட்டுவது எப்படி? ஏற்கனவே உள்ள சாமிகள் போக புதுசாக இப்போதும் சாமிகள் பிறக்கின்றனவா? சாமிகளுக்கு அப்பா அம்மா யார்?...

அடுத்த இதழில்...
எத்தனை எத்தனை சாமியடா ?- --------------பெரியர் பிஞ்சு

தமிழ் ஓவியா said...

வாழை இலையும் முள்ளும்



என் அருமைப் பார்ப்பனத் தோழர்களே! நீங்கள் வாழை இலையைப்போல் மென்மையானவர்கள். நாங்கள், நாங்கள் என்றால் திராவிட இனத்தவர்கள் முள்ளுச்செடி போல வன்மையும், கூர்மையும் வாய்ந்தவர்கள். முள் வாழையிலை மீது உராய்ந்தாலும் வாழையிலைதான் கிழியும்; வாழையிலையே வந்து முள்ளுடன் மோதினாலும் வாழையிலைதான் கிழியும். அதுபோல நீங்களாக வந்து எங்கள் இனத்துடன் மல்லுக்கு நின்றாலும் உங்களுக்குத்தான் நஷ்டம். அல்லது, நாங்களாக வந்து உங்களிடம் போரிடத்தக்க நிலை நேரிட்டாலும் உங்களுக்குத்தான் நஷ்டம். ஆகையால்தான் கூறுகிறேன் நம் இருவருக்குள்ளும் போரோ, பிணக்கோ, பூசலோ, பகையோ நேரும் விதத்தில் நடந்து கொள்ளாதீர்கள். அப்படி நடந்து கொண்டால், கஷ்டம் உங்களுக்குத்தான்; எங்களுக்கல்ல. வாழையிலையும் முட்செடியும் மோதிக் கொள்ளும் நிலை நேரிட்டால் காயம் இலைக்குத்தான், முட்செடிக்கல்ல!

- தந்தை பெரியார் - 24.11.1957

தமிழ் ஓவியா said...

நாமம் போட்டுவிட்டுப் போன இராமானுஜர்!




1958_ஆம் ஆண்டு இது நிகழ்ந்தது. நான் எழுதிய பூவுலக சொர்க்கம் என்னும் நாடகத்திற்குத் தலைமை தாங்கி சிறப்பிக்கும்படி சில நண்பர்களுடன் சென்று பெரியாரிடம் கேட்டேன். தனி நாடு கோரிக்கையை அந்த நாடகத்தின் பாத்திரங் களின் வாயிலாக நான் எள்ளி நகையாடி இருப்பதை பெரியாரி டம் மறைக்காமல் சொன்னதால், முதலில் பார்க்கலாம் என்று தலை அசைத்தவர், இறுதியில் தலைமை தாங்க மறுத்துவிட் டார். முதலில் பார்க்க லாம் என்று அவர் தலை அசைத்ததற்குக் காரணம் உண்டு. அந் நாடகத்திற்கு முதல மைச்சர் காமராசரும், பழம்பெரும் தேசபக்தர் மதுரை சிதம்பர பாரதியும் வருவதற்கு இசைந்திருக்கிறார்கள் என்பதனால் தான். முதலில் கலந்துகொள்ளலாம் என்று அவருக்குத் தோன்றியது. பெரியார் இறுதியில் வர மறுத்து விட்டதால், காமராசர் தலைமை தாங்கி, சிதம்பர பாரதி நாடகத்தைப் பாராட்டிப் பேசினார்.
அந்த நாடகத்தில் ஒரு கட்டத்தில் வைஷ்ணவ மதத் தலைவரான இராமானுஜரைப் பாராட்டிப் பேசுகிற கட்டம் ஒன்று உண்டு. அதாவது, இராமானுஜர் ஜாதி ஒழிப்பில் தீவிரமாக இருந்தவர் என்று பெரியாரிடம் நான் பேசுகிறபோது குறிப்பிட்டேன்.

அதைக் கேட்டதும் பெரியாருக்கு சிரிப்பு வந்தது. நான் இராமானுஜர் ஒரு பார்ப்பனர் என்பதற்காகத்தான் அவரைப் பாராட்டுவது இல்லை என்று ஒருவர் தம்மிடம் குறைபட்டுக் கொண்டதாக பெரியார் தமது பேச்சைத் துவக்கினார். எனது கருத்தும் அதுவாகத்தான் இருக்கும் என்பதால்தான், அந்தத் திசையில் பேச்சைத் துவக்கினார். இராமானுஜரின் நல்ல எண் ணத்தை நான் குறை சொல்லவில்லை. அவருடைய போதனைகளை அவரது நடைமுறைகளே கொன்றுவிட்டன என்று கூறி முதலிலேயே ஒரு அணுகுண்டை வீசினார்.

அவர் போதனைகளும், நடை முறைகளும் அறிவுபூர்வமாக இருந்து இருக்குமானால், அவரை புகழ்ந்து துதி பாடி வருகிற கூட்டத்தின் ஒரு சிறு அளவுக்காவது ஜாதி ஒழிப்பு உணர்வு அல்லது ஜாதி பேதமற்ற உணர்வு வளர்ந்து இருக்கவேண்டும். அப்படிப்பட்ட உணர்வு அய்யங்கார் களிடம் இருக்கிறதா? என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

இராமானுஜர் இன்னொரு கேட்டையும் செய்தார். வைஷ்ணவ மதாச்சாரியார் என்று பெரிதும் மதிக்கப்படுகிற இராமானுஜர் 11ஆவது நூற்றாண்டில் வாழ்ந்தவர். அந்த மதத்திற்கு அதற்கு முன்பு நெற்றியில் குறியிடும் வழக்கமில்லை. அவர்தான் முதன்முதலில் தனது மதத்தைச் சார்ந்தவர்கள் நெற்றியில் நாமம் போட்டுக் கொள்ளவேண்டும் என்கிற விதியை ஏற்படுத் தினார் என்று பெரியார் கூறியவுடன் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அப்படியா, அய்யா என்று நாங்கள் ஆச்சரியத் துடன் வினவினோம்.

ஆமாம், நான் என்ன கற்பனை செய்து பேசுகிற வனா? அதுதான் வரலாறு. என் குடும்பம் வைஷ்ணவ குடும்பம். எங்களுக்குப் பல விஷயங்கள் தெரியும். வைஷ்ணவ பரிபாஷையில் சொல்லவேண்டுமானால், திருமண் என்று அதனைக் குறிப்பிடுவது வழக்கம்.

அதுவும் ஒருவகை மண் தான். அது மைக்கா இனத்தைச் சேர்ந்த மண். அந்த மண்ணை மைசூர் மாநிலத்தில் (இப்போது கர்நாடக மாநிலம்) உள்ள மேல் கோட்டைப் பகுதியில் தான் பூமியிலிருந்து பரள் பரளாக வெட்டி எடுக் கிறார்கள்.

அந்த மண்ணை எடுத்து தண்ணீர் நிறைந்த தொட்டிகளில் சில நாள்கள் வரை ஊற வைக்கிறார் கள். அது ஊறிப் பதமான பிறகு அதைக் கரைத்து, அதிலுள்ள கல் மண் வண்டல் ஆகியவற்றை வடிகட்டி அகற்றுகிறார்கள்.

நீர் வற்றிய பிறகு எஞ்சியுள்ள தூய மண்ணைப் பிசைந்து தேவை யான அளவுகளில் கையினாலோ அச்சினாலோ உருவாக்கி உலர்த்தி நாமக்கட்டிகளாக விற்பனை செய்கிறார்கள். இப்போது கேட்டுப் பாருங்கள். பகவானே, தனது நெற் றியில் ஆதி காலத்தில் அணிந்திருந் தான் என்று சிலர் உளறுவார்கள். ஜாதி ஒழிக்க புறப்பட்டவர் நமக்கு கடைசியில் நாமம் போட்டுவிட்டுப் போனார் என்று கூறிச் சிரித்தார்.

இராமானுஜரால் ஜாதி ஒழிய வில்லை. அதற்கு மாறாக அவர்களுக்குள்ளாகவே இரண்டு ஜாதிகள் தோன்றி, சீ நாமம், ஹி நாமம் என்ற ஊர் ஊருக்குக் கட்சி கட்டிக் கொண்டு கோர்ட்டுகளில் அலைந்து திரிந்தார்கள். வெள்ளைக் கார நீதிபதிகள் இவர்களைக் கண்டு சிரித்தார்கள் என்று கூறி பெரியார் மீண்டும் சிரித்தார்.

- மயிலைநாதன்
பெரியார் ஒரு நடைச்சித்திரம் (1984)

தமிழ் ஓவியா said...

சென்னை மண்டலப் பகுதிகளில் கழகம் சிறப்பாக செயல்படுவது குறித்து தனது மகிழ்ச்சி யையும் பாராட்டுதல்களையும் கழகத் தலைவர் தெரிவித்தார். முதல் மண்டலக் கூட்டமே இந்த அளவிற்குச் சிறப்பாக நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

1.ஆண்டுக்கு இருமுறை சுயமரியாதைக் குடும் பங்களில் விருந்து நடைபெற வேண்டும். நம் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள், குழந்தைகள் ஓரிடத்தில் கூடி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் இடம் பெறச் செய்து பகுத்தறிவுச் சிந்தனைகளை இளம்வயதில் தூவ வேண்டும்.

2. பெரியார் பிஞ்சுகள், பெண்கள் வழியாகப் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பினால், உறுதியாக அதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

3. இசை மற்றும் கலைகள் மூலம் கருத்துகளைப் பரப்ப வேண்டும். கடந்த பொங்கலின் போது பெரியார் திடலில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

4. ஒற்றுமை, கட்டுப்பாடு, பொறாமையற்ற தன்மை, ஜெயிலுக்குப் போகத் துணிவு - இவை எந்தக் கட்சியில் (இயக்கத்தில்) இருந்தாலும், அந்தக் கட்சி வெற்றி பெறும் - என்றார் நமது அறிவு ஆசான் தந்தை பெரியார். (சேலம் 14 ஆவது சுயமரியாதை மாநாட்டில் 17.1.1943)

5. நமது கழக நிகழ்ச்சிகளை நடத்தும்போது கடைக்குக் கடை சென்று, வீட்டுக்கு வீடு சென்று நன்கொடை வசூல் செய்து அதன் மூலம் நிகழ்ச்சி களை நடத்தினால்தான் அது பொதுமக்களைச் சம்பந்தப்படுத்து ம்பொது நிகழ்ச்சியாக அமையும்.

6. பயிற்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

7. நமது இயக்கம்தான் புத்தரின் இயக்கமாகும். அந்தப் புத்தம் என்ற நெறி மதமாக்கப்பட்ட பின் வெறியாக மூடச்சடங்குகளின் தொகுப்பாக மாறிவிட்டது.

மியான்மர், தாய்லாந்து, சீன நாடுகளுக்கு நான் சென்றிருந்தபோது பல புத்தக் கோயில்களுக்குச் சென்று பார்த்தேன். புத்தரின் பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமான நடவடிக்கைளைக் காண முடிந்தது.

தாய்லாந்தில் புத்தர் சிலைக்குப் பக்கத்தில் “BE WARE OF DOGS” என்று எழுதப்பட்டு இருந்தது.

ஆனால் நாம் நம்முடைய கொள்கைகளில் ஊடுருவலுக்கோ, திரிபுவாதத்துக்கோ இடம் கொடுக்க அனுமதிக்க மாட்டோம். நாம் கொஞ்சம் அசந்தால் பெரியார் சிலையையே கோயிலாகக் கூட மாற்றிவிடுவார்கள். அதனால் தான் பெரியார் சிலையின் பீடங்களில் மறக்காமல், கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்ற வாசகங்களைக் கல்வெட்டாகப் பொறித்துள்ளோம்.

8.புத்தகம் வழி பிரச்சாரம் என்பது மிகவும் முக்கியமானது. தந்தை பெரியார் அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் நமது இயக்க ஏடுகள் விற்பனை செய்யப்படுவதை வைத்து அந்தக் கூட்டத்தை எடை போடுவார். கூட்டம் முடிந்து வேனில் ஏறியவுடன் முதலில் தந்தை பெரியார் கேட்கும் கேள்வி எவ்வளவுக்குப் புத்தகம் விற்றது என்பதுதான்.

அந்த வகையில் நமது இயக்கம் நூல்கள் விற்பனையை ஓர் இயக்கமாக நடத்தி வருகிறோம்.

(1) பகுத்தறிவுக் கரும்பலகைத் திட்டம்

(2) கிளைக் கழகம்தோறும் சுற்றுப்பயணத் திட்டம்

(3) கல்லூரி, விடுதிகளில் மாணவர் அமைப்பைத் தொடங்குவது

(4) மாதம் ஒருமுறை மண்டலப் பொறுப் பாளர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் (பகுத்தறிவாளர் கழகம் உட்பட)கூடும்போது, அந்தந்த மாதங்களுக்கான திட்டங்களை வகுப்பது உள்ளிட்ட பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. 17-9-2012

தமிழ் ஓவியா said...

உலகமயமாகிறார் பெரியார்!



கானா (ஆப்பிரிக்கா) தலைநகரம் ஆக்காராவில் தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம் தொடக்க விழா (16.9.2012)

ஆப்பிரிக்காவில் ஒரு தொண்டு நிறுவனம்

பெரியார் தம் தொண்டறப் பணிகள், சுயமரியாதை லட்சியங்கள் - நாடு, மத, இன, மொழி எல்லைகளைக் கடந்த மனிதநேயம் என்பதைப் பறைசாற்றும் வகையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் கானா நாட்டில் (அக்காரா அதன் தலைநகரம்) அங்கு தொழில் நிமித்தமாக சென்று தங்கியுள்ள தோழர் திருப்பத்தூர் கே.சி.எழிலரசன், திருமதி சாலை மாணிக்கம் ஆகியோர் தம் அரிய விளக்கங்களால் ஈர்க்கப்பட்ட அந்நாட்டுப் பிரமுகர்களின் அரிய ஒத்துழைப்போடு, ‘Periyar African Foundation’ என்று ஒரு தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டு, அந்நாட்டில் - (கானாவில்) செப். 17 ஆம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்குகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. பெரியாரின் லட்சியப் பயணத்தில் இது ஒப்பற்ற மைல்கல் எனலாம்! அவர்களின் அரிய முயற்சிகள் வெற்றி பெற நம் இதயபூர்வமான வாழ்த்துக்கள்!
அன்றே சொன்னார் புரட்சிக்கவிஞர்

புரட்சிக்கவிஞர் அவர்கள் கூறியபடி,

தொண்டு செய்து பழுத்த பழம்; தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகுதொழும்; மனக்குகையில் சிறுத்தை எழும்

அவர்தாம் பெரியார் பார்! - என்ற வைர வரிகளில் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்பது (தொழும் என்றால் பின்பற்றும் என்ற பொருளில்) எவ்வளவு தொலைநோக்கு கொண்ட எண்ணி எண்ணி வியப்படைய வேண்டிய செய்தி!

ஆப்பிரிக்க நாடான கானா தலைநகர் அக்காராவில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவும் பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம் (PAF) துவக்க விழா லாபாம்-பூகும் மண்டபத்தில் 16.9.2012 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின் செயலாளர் சாலை.மாணிக்கம் வரவேற்புரை ஆற்றினார்.

நிறுவனத்தின் தலைவர் கே.சி.எழிலரசன் படவிளக்கத் துடன் நிறுவனத்தின் குறிக்கோள் விளக்க சின்னத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். கானா இந்திய சிறப்பு தூதர் பெரியார் உரு வப்படத்தை திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின் புரவலர். எஸ்.எஸ்.பாட்டால் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பெண்டும் வில்லியம்ஸ், கிளாவண்டா பிரைட் பார்க்கர், நரேஷ் கோகல்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக ரெபேக்கா சைட்டி நன்றியுரையாற்றினார். இரவு விருந்து வழங்கப்பட்டது.17-9-2012

வாலிபள் said...

ஆமா, இவ்வளவு பகுத்தறிவு பேசும் நீங்கள், அணு உலையை ஏன் ஆதரிக்கிறீர்கள்?

வாலிபள் said...

ஆமா, இவ்வளவு பகுத்தறிவு பேசும் நீங்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் அணு உலையை ஏன் ஆதரிக்கிறீர்கள்? வைகோ போன்ற சிலரைத் தவிர எல்லா அரசியல் கட்சியினரும் ரஷ்யாவிடம் கைநீட்டி பணம் வாங்கி விட்டீர்களா?