Search This Blog

25.12.09

பெரியாரின் கேள்விக்கென்ன பதில்?

கேள்விக்கென்ன பதில்?

இந்தக் கேள்விகளைப் படித்தவுடன், அதிர்ச்சியும், எரிச்சலும், கோபமும் வரும். தடுமாறும் மன நிலையை சற்று சமாதானம் படுத்திவிட்டு கேள்வி கேட்கப்பட்ட நல்லெண்ணத்தை புரிந்து கொண்டால் கேள்விகளின் நியாயத்தை ஏற்றுக்கொள்ள மனம் வரும். நல்ல பதிலையும் கூறுவீர்கள்.

இந்தக் கேள்விகள் 80 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியாரால், ‘குடிஅரசு’ இதழில் 19.02.1928 இல் எழுதப்பட்ட கட்டுரையில் ஒரு பகுதியாகக் காணப்படும் கேள்விகளாகும்.

அன்று பெரியாரால் கேட்கப்பட்ட கேள்விகள் இன்றும் பசுமை குன்றாமல்தான் உள்ளன, தக்க பதிலை எதிர்பார்த்து.

‘முன்னையை விட பார்ப்பன பிரச்சாரம் பலமாய் நடந்து வருகிறது’, என்பதைக் கூறி முதல் கேள்வியை கேட்கிறார். அடித்த ரப்பர் பந்து துள்ளி எழுவதுபோல், பெரியாரின் தடியால் அடிபட்ட பார்ப்பனப் பாம்பு பொந்தில் பதுங்கிக் கொள்ளாமல், தன் வீரியத்தையும் ‘வீரத்தையும்’, காட்டுவதை விரதமாக்கிக் கொண்டுள்ளதே! ‘தாம்ப்ராஸ்’ அமைப்பை வைத்துக் கொண்டு தண்டோரா போட்டு தண்டலும் பலமாக செய்து வருகின்றதே! நெய்வேலியில் கூட்டமாம். நீதிமன்றத்திலும் முறையீடாம். இட ஒதுக்கீட்டு ஏணியை இழுத்துத் தள்ளவும், அதே வேளையில் தனக்கு இட ஒதுக்கீடு தேவை என கையேந்தவும் பார்ப்பனீயம் தயாராகி விட்டதே! ஊடகங்கள் ‘பொதிகை’ முதற்கொண்டு, துக்ளக், ‘தினமலர்’, தினமணி போன்றவை தூக்கிப் பிடிக்கும் தூண்களாக உள்ளனவே! எங்கே? ‘பிராமணன் தொடர் - 2’ என்று ‘ஜெ’ டி.வி.யில் விரைவில் என்று ‘சோ’ விளம்பரம். ‘வந்தேமாதரம்’ பாடலின் தேசிய புனிதத் தன்மைக்கும். லிபரான் அறிக்கைக்கு எதிராகவும் வாதாட எஸ்.குருமூர்த்திகளும் தயார் நிலையில் உள்ளனரே!

இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிசத் அமைப்புகள், வட இந்தியாவில் தேய் பிறையாகவும், பெரியார் மண்ணில், கலைஞர் நீர்ப் பாசனத்தால் அமாவாசையாகவும் உள்ளனவேயொழிய, கல்லறை நிலைக்கு இன்னும் வரவில்லை, சுயமரியாதையின் சுவையைப் பற்றி பார்ப்பனரல்லாதவர்கள் சிலரும் சிந்திக்க முன் வந்தால், அந்த நிலையும் வந்துவிடும். பெரியாரின் கேள்விக்கும் பதில் கிட்டும்; அடிமைத்தன மோகமும் இடம் தெரியாமல் போகும்.

பார்ப்பன பிரச்சார ஏற்பாட்டில், திராவிட இன மக்களின் கல்வி முன்னேற்றத்தில், பகுத்தறிவு சிந்தனையில் மண்ணைப் போடுவதில் முக்கிய பங்கு இருந்தது. கல்வியாளர்கள், ஆசிரியர்கள், புலவர்கள் போன்றோர்கூட கவலைப்படாத வேளையில், பள்ளி, பல்கலைக் கழகத்தின் படிகளை மிதித்தறியாத பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பட்ட வேதனை:

“பள்ளிக்கூட டெக்ஸ்ட் பாடப்புத்தகங்கள் என்று அநேக பார்ப்பனர்களும், சுயமரியாதையும் அறிவும் இல்லாத சில பார்ப்பனரல்லாதவர்களும், ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம், பெரியபுராணம், அருணாசலப் புராணம், திருவிளையாடல் புராணம், முதலிய குப்பை கூளங்களின் பேரால் சிறு சிறு கதைப் புத்தகமும் எழுதி சிறு குழந்தைகளுக்கு பார்ப்பன விஷத்தை ஊட்டுவது சகிக்கக் கூடியதாயில்லை. இதற்கு வழி என்ன என்று யார் சிந்தித்தார்கள்?

பெரியாரின், ‘யார் சிந்தித்தார்கள்?’ என்ற கேள்வியினால்தான், அவரின் தளபதியான அறிஞர் அண்ணா ‘தீ பரவட்டும்’ விவாதங்களை நடத்தினார். புலவர் குழந்தையின், ‘இராவண காவியம்’ தடையை மீறி வெளிவந்தது.

கல்வி நீரோடையில், பார்ப்பன முதலைகள் சூழ்ந்துள்ளதை பெரியார் சுட்டிக் காட்டினார். விஞ்ஞான அறிவுக்கு முள்வேலி உள்ளதை விளக்கினார்.

இவற்றையெல்லாம் உணர்ந்த மானமிகு சுயமரியாதைக்காரர், தமிழக முதல்வர் கலைஞர், காலத்தின் கட்டாயம் கருதி, காலமும் கனிந்திருப்பதை உணர்ந்து நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த கல்வித் துறை சீர்திருத்தம் என்ற வகையில், பல்வேறு கல்வித்துறை அறிஞர்களின் கருத்தை அறிந்து சமச்சீர் கல்வித் திட்டத்தை நிதானித்து உறுதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆப்பைப் பிடுங்கிய குரங்குபோல் துள்ளிக் குதித்தது அக்கிரகாரம். பத்திரிகைகள் பக்க வாத்தியம் வாசிக்கத் துவங்கின. “பெரியாரே,’’ சமச்சீர் கல்வித் திட்டம் என்பது போல ஒரு பீதியை கிளப்பி இருக்கிறது. இதை தமிழர் தலைவர் 5.12.2009 தேதி அறிக்கையில், இந்து முன்னணி இராம. கோபாலன் குமுறலை எடுத்துக் காட்டியுள்ளார்.

“ஈ.வெ.ரா வின் (பெரியார் என்று கூறினால் ‘‘புத்’’தென்ற நரகத்திற்கு போவோம் என்ற நடுக்கம்) இந்து விரோதக் கொள்கைகளைத் தூக்கி பிடிக்க முதல்வர் முயல்கிறார். நாத்திகத்தை மாணவர்களிடம் திணிக்க சதி நடக்கிறது. இந்து மதத்தைக் கேவலப்படுத்தும் பாடங்கள் இடம் பெற்றுள்ளன.’’ ‘விடுதலை’ இதழில் ஆசிரியர் அய்யா அவர்கள், இந்த அழுகை ஓலத்தை தெளிவான ஒரு சொல்லில், ‘அரைவேக்காட்டுத்தனம்’ என்று கூறிவிட்டார். அத்துடன் தேவைப்படும் எதிர்பார்ப்புகள் பற்றியும் அறிக்கையில் கூறத் தயங்கவில்லை.

கற்க வேண்டியதைக் கற்க வழிவகுக்கும் முறையில், சமன் செய்து சீர் தூக்கும் துலாக்கோல் போல், மனித நேயப் பார்வையில் அமைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த முனையும்போது, மறதி மனித இயல்பு என்ற நினைப்பில் இந்து முன்னணி கூட்டம் அறிவு நாணயமில்லாமல் ஒன்றை மறந்துவிட்டது.

பா.ஜ.க ஆட்சிக்காலத்தில், பார்ப்பனீயத்தையும், மதவெறியையும் இரு கைகளில் ஏந்தி, இந்துத்துவா நஞ்சை பாடத்திட்டத்தில், சொட்டு சொட்டாக இல்லாமல் குடம் குடமாக கொட்டி கலந்தபோது குதூகலித்தனரே. அவர்களின் வகுப்புவாத, அறிவியல் விரோத நாசிச போக்கை வரலாற்று வல்லுநர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததை இராம. கோபாலனின் முகாரிக்கு முடிவுகாணும் வகையில் விளக்குவோம். கண் திறந்து பார்த்து கருத்துத் தெளிவு பெறட்டும்.

“With the NCERT authorities going ahead with the implementation of the agenda drawn up by the Sangh Parivar, the distinction between the academic agenda of a national - level academic organisation and the communal agenda of the sangh Parivar has been obliterated... The ideas ‘manufactured’by the Sangh Parivar ideologues, and rejected by reputed right-wing historians such as R.C. Majumdar, had found their way into the syllabus. No political unit of the Deccan and South, except the Rashtrakutas find a mention in the syllabus of Ancient India for class XI, Even the Satavahanas, Pallavas, Chalukyas and cholas do not find a place... As for varuna system, there was no mention of it before 300 B.C” (‘The Hindu’ 01.02.2002) NCERT Syllabus Saffronised.

தமிழாக்கம்:

“சங்பரிவார் தயாரித்த செயல் குறிப்புத் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் என்.சி.இ.ஆர்.டி அமைப்பு அதிகாரிகள் செயல்வழிமூலம், தேசிய அளவு பாடத்திட்டத்தின் நிறுவனத்திற்கும், சங்பரிவாரின் வகுப்புவாத நோக்குடைய பாடத்திட்ட செயல் குறிப்புக்கும் இடையே எந்தவித இடைவெளியும் இல்லாமல் போய்விட்டது.

சங்பரிவாரால் ‘உற்பத்திசெய்யப்பட்டு’ புகழ் பெற்ற வலதுசாரி வரலாற்று ஆசிரியர் ஆர்.சி. மஜும்தாரால் நிராகரிக்கப்பட்ட சங்பரிவார் தத்துவங்கள் பாடத்திட்டத்தில் நுழைந்துள்ளன.

“ஆம் வகுப்பு பழைமை இந்தியா பாடப் புத்தகத்தில், ராஷ்டிரகூடரை தவிர்த்து, தக்காணம் தென்னிந்தியா பற்றிய ஆட்சி அமைப்புப் பற்றி எந்த குறிப்பும் இடம் பெறவில்லை. சாதவாகனர், பல்லவர், சோழர் பற்றிய குறிப்பு கூட இடம் பெறவில்லை. வருண அமைப்புப் பற்றி, கி.மு.300 க்கு முன் இருந்த நிலைபற்றி எந்தக் குறிப்பும் இல்லை’’

“They (Fanatics) perverted texts from history books to make them conform to their ideas” (Khushwant singh- ‘The End of India’)

தமிழாக்கம்:

‘‘மத தீவிரவாதிகள், தங்கள் கருத்துக்கு ஒத்துப் போகும் வகையில், வரலாற்றுப் புத்தகங்களின் செய்திகளைத் திருத்தியமைத்தனர்’’ (‘இந்தியாவின் முடிவு’ என்ற புத்தகத்தில் குஷ்வந்த்சிங்)

இந்தியாவில், இந்து வகுப்புவாத சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் பிரிவான பி.ஜே.பி ஆட்சியில் இருந்த நிலையில் கல்வித் துறையை காவி மயமாக்கும் கயமைச் செயலை கட்டுப்-பாடற்ற வகையில் செய்தனர். இதையே அமெரிக்காவில் உள்ள பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் மாற்றம் செய்ய முனைந்ததை அமெரிக்க நீதிமன்றம் அணுமதிக்க மறுத்தது, என்றாலும், எந்த அளவுக்கு, வகுப்புவாத அமைப்பும், அரசியல் கட்சியும் மத வெறித்தனமாக ஆட்டம் போட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த செய்தியை, இங்கிலாந்து நாட்டின் முன்னோடி வரலாற்று மாத இதழ் ‘இன்றைய வரலாறு’ (பிவீstஷீக்ஷீஹ் ஜிஷீபீணீஹ் அக்டோபர் 2007) ‘சிந்துவெளி நாகரிகம்’ என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் எழுதி, ‘இந்துத்துவா’ சிறு மதியாளர்களின் செயலை உலகறியச் செய்துள்ளது. அந்தக் கட்டுரையில்:

“With the ascendency of Hind National politics whithin India during the 1990s of the Indus Valley civilisation has been blatantly misused to give a ‘hoary antiquity’ to modern -day Hinduism. Revised History Books were published and thrust upon Indian Schools by the NCERT in 2002 and in 2005, the Hindu education foundation and the Vedic Foundation demanded that the 6th Grade history books on South Asia in California be amended. Although the text books have been withdrawn and the proposed amendments overruled by the courts of the U.S.”

‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார்கள். ஆட்சியில் இருந்த காலத்தில் பா.ஜ.க. ஆரியத்தை உள்வாங்கிய இந்துத்துவாவை, இந்தியாவின் முடியில் வைத்து ராம ராஜ்யம் நடத்த ஆசைப்பட்டது. ஆசை வெட்கமறியாது. முயற்சி, குன்றில் மோதிய குருவியின் கதியாயிற்று. மேலை நாட்டில் வாலை ஆட்டியபோது அமெரிக்க நீதிமன்றம் வாலை நறுக்கியது. பெரியாரின் நாணயத்தை, மனித நேயத்தை, உள்ளத்தால் பொய்யா தொழுகும் உயர் பண்பை, தொண்டறத்தை 95 வயதிலும் அறிவுச் சுடரை தூக்கிப் பிடித்த வாழ்க்கையை எவரேனும் குறை கூற முடிந்ததா? அத்தகைய பெரியாரின் கொள்கையை ‘தூக்கிப் பிடிக்கிறார் முதல்வர்’ என்பதற்குப் பாராட்டை கூறாமல் பதறிப்போவானேன்? பழிச்சொல்லைக் கூறுவானேன்? அல்லவை தேய நல்லவை நாடுவது தானே நாத்திகம்! மறு மலர்ச்சித் தேவையை, மூட நம்பிக்கை ஒழிப்பின் தேவையை வலியுறுத்தாத அறிஞர்கள் உண்டா உலகில்? இதற்கு அறியுமா கற்பூர வாசனை? என்பார்கள். திருவாளர் இராம. கோபாலனுக்கு இந்த வாசனை தெரியாதது அதிசயமில்லை.

தமிழர் தலைவரின் அறிக்கையில், “எந்த ஒரு மாற்றத்தையும், வளர்ச்சியையும் விரும்பாத ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டுதானிருக்கும்.’’ என்று கூற வந்தது, இராம. கோபாலன் கூட்டத்தின் நோஞ்சான் வாதத்தை ஓரம் தள்ள வேண்டியதை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. அறிக்கையின் இறுதிப் பத்தியில் உள்ளவையே, பெரியாரின் கேள்விகளுக்கு அவரின் அடிச்சுவட்டில் நடைபோடும் மாணவரின் பதிலாக அமைந்துள்ளது.


--------------------மு.வி.சோமசுந்தரம் அவர்கள் 19-12-2009 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

1 comments:

Thamizhan said...

இராம கோபாலன்களின் படி,
இந்திரன் செய்த கற்பழிப்புக்கள்,
பிரம்மா சொன்ன பொய்,
நாரதரின் காதலும் அறுபது ஆண் குழந்தைகளும்,
கடவுள்களின் காமக் களியாட்டங்கள்,
அவதாரங்களின் உண்மைக் காரணங்கள்,
வால்மீகி சொல்லும்
ராமன் பிறந்த கதை,
சீதையின் சீற்றம், கற்பு
இவற்றைப் பாடப் புத்தகங்களில்
வைக்கலாம்.
ஒத்துக் கொள்வார்களா?