Search This Blog

15.12.09

ஜாதிச் சான்றிதழ்

ஜாதிச் சான்றிதழ்

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அடிப்படையான ஆவணம் ஜாதிச் சான்றிதழாகும்.

முன்பெல்லாம் இதனைப் பெறுவது மிகவும் கடுமையானதாக இருந்தது. கிராமக் கணக்கர் முதலில் கையொப்பமிடவேண்டும். பெரும்பாலும் இந்த இடத்தில், தமிழ்நாட்டில் இருந்தவர்கள் (கர்ணம் என்று பெயர்) எல்லாம் இட ஒதுக்கீடுக்கு எதிரானவர்களே;

தாழ் ஜாதிக்காரர்கள் உயர்ஜாதிக்காரர்களான அந்த கணக்கப் பிள்ளைகளின் (கர்ணம்களை) வீட்டுக்குச் சென்று நேரில் சந்திப்பதே என்பதுகூட எளிதான காரியமல்ல; கர்ணம் கையொப்பம் போட்டவுடன் பட்டாமணியர் மேல் கையொப்பம் போடவேண்டும் இவர்களோ மிட்டாமிராசுதார்களாக இருப்பார்கள்.

இவற்றையெல்லாம் கடந்துதான் வட்டாட்சியரிடம் கையொப்பம் வாங்கவேண்டும். இந்தச் சங்கடங்கள் எல்லாம் அகற்றப்பட்டு, நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான் என்றாலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்னும் சிக்கல்கள் இருந்து கொண்டுதானிருக்கின்றன. ஊர்விட்டு ஊர் வந்து குடியேறியவர்களும் இந்தச் சூழலில் சிக்கித் தவிக்கின்றனர்.

முன்பைவிட படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இப்பொழுது கிளர்ந்து எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்த அடிப்படை ஜாதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருக்கக் கூடாது என்பது தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அக்கறையாக உள்ளார்.

முக்குலத்தோர்க்கு ஜாதிச் சான்றிதழ் கிடைப்பதில் உள்ள இடர்ப்பாட்டை அந்தச் சங்கத்தின் நிருவாகிகள் சுட்டிக்காட்டியபோது, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அந்தந்த பகுதியிலேயே ஜாதிச் சான்றிதழ் வழங்கிட ஆவன செய்துள்ளார். அதற்கு நன்றி காட்டும் வகையில் கடந்த ஞாயிறன்று மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.

‘இது ஜாதிச் சான்றிதழ் அல்ல உங்களுக்கு இது உரிமைச் சீட்டு - உரிமைக் கேடயம்’ என்று முதலமைச்சர் கூறியது மிகச் சரியான உண்மையாகும்.

எந்த ஜாதி கல்வி கற்க உரிமையை மறுத்ததோ, அந்த நஞ்சை மருந்தாக மாற்றிக் கொடுப்பதுதான் இட ஒதுக்கீடு என்னும் சமூகநீதி.

திராவிட இயக்கம் என்பது சமூகநீதியின் தாய் வீடு அதன் மரபில் வந்த தி.மு.க. ஆட்சியில் இந்தப் பிரச்சினையில் அக்கறை செலுத்துவது என்பது இயல்பானதே!

தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் சமூகநீதிக்காகப் பாடுபட்ட வரலாற்றையும் மறக்காமல் அவ்விழாவில் முதலமைச்சர் அவர்கள் வரலாற்று ரீதியாக எடுத்துரைத்திருப்பது அவருக்கே உரித்தான இலாவகமும், தனித்தன்மையும் ஆகும்.

ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் இன்னும் சில இடங்களில் சில சிக்கல்கள் உள்ளன. பிற்படுத்தப்பட்டவரா, தாழ்த்தப்பட்டவரா என்பதை நிருணயிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் அது.

குறிப்பாக கிருட்டினகிரி மாவட்டத்தில் பன்னியாண்டி மக்கள் பரம்பரை பரம்பரையாகப் பன்றிகளை வளர்த்து, மேய்த்துவரும் மக்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கான ஜாதிச் சான்றிதழ் வழங்குவது மறுக்கப்பட்டு வருகிறது. இடைக்காலத்தில் யாராலோ ஏற்பட்ட தவறுக்கு இந்த மக்கள் பலியாகக் கூடாது என்பதே நமது வற்புறுத்தல் ஆகும்.

மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று களப் பணி செய்து உண்மை நிலையை அறிய முயற்சிப்பது நல்லது. முதல் தலைமுறையாகப் படிக்க ஆசைப்படும் அம்மக்களின் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடக் கூடாது.

இன்னும் ஒரு முக்கிய குறிப்பு: ஜாதிச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க இடைத்தரகர்கள் இருப்பதாகவும், தவறான வகையில் உண்மைக்கு மாறாக ஜாதிச் சான்றிதழ்களை அவர்கள் பெற்றுத் தருவதாகவும் சில புகார்கள் ஏடுகளில் வெளிவந்துள்ளன.

அத்தகையவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி இடைத்தரகர்கள், அவர்களைப் பயன்படுத்துவோருக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

---------------------நன்றி: -''விடுதலை” தலையங்கம் 15-12-2009

0 comments: