Search This Blog

1.6.15

பெரியாரைப் பற்றி பேரறிஞர்கள்! -- 2

தந்தை பெரியாரைப் பற்றி பேரறிஞர்கள்!


எதிர்ப்பைக் கண்டு மகிழ்பவர்!


சிங்கப்பூர்,
பாரிஸ்டர். கே.பி.கேசவமேனன் அவர்கள் 
(1939)

நானும், தோழர் நாயக்கரும் ஒரே அரசியல் கட்சியில் சேர்ந்து, ஒரே
மாதிரி கொள்கைகளைப் பின்பற்றி, ஒரே மாதிரி போராட்டங்களில்
ஈடுபட்டு, ஒரே துறையில் பங்கெடுத்துக் கொண்டு, ஒரே விதமான கஷ்டங்களை அனுபவித்து வந்த காலமும் ஒன்றிருந்தது. அதாவது,
இந்திய சரித்திரத்திலேயே முன்பு எப்போதும் இருந்திராத அத்துணை பலத்துடனும், வேகத்துடனும் தேசீயமென்னும் பேரலையானது, இந்தியாவெங்கணும் திரண்டு எழுந்த காலம் 15– ஆண்டுகளுக்கு முன்பாகும். இந்திய அரசியல் நிலைமையைச் சிக்கற்படுத்திப் பல காரியங்கள் அதிலிருந்து நடந்து வந்திருக்கின்றன.


காங்கிரசுடன் முற்றிலுமே நேச பாவத்துடனில்லாத ஒரு பிரச்சாரத்தை நடத்திவரும் இக்கட்சிகளில் ஒன்றின் ஸ்தாபகரும், தலைவருமாய் இருந்து, தோழர் நாயக்கர் சென்ற 20– வருஷ காலமாகத் தமது பொது வாழ்விற்குச் சிறப்பளித்த அதே வேகத்துடனும், உற்சாகத்துடனும், சக்தியுடனும் இன்றும் வேலை செய்து வருகிறார்.


தோழர் நாயக்கர் பெயருடன் தொடர்பு கொண்டுள்ள கட்சியின் கொள்கைகளையும், வேலைத் திட்டங்களையும் பற்றி ஆதரித்தோ
அல்லது குறைவுபடுத்தியோ கூறுவதற்காக நான் இங்கு வரவில்லை. அவருடைய அபிப்பிராயங்களுடன் நான் பூரண உடன்பாடு கொள்ளுவதென்பது அசாத்தியமாயிருக்கலாம். நாங்கள் துரதிர்ஷ்டவசமாக, தற்சமயம் வேறுபாடான – எதிரியாயுங்கூட உள்ள அரசியல் கோஷ்டியைச் சேர்ந்தவர்களாய் இருந்து வருகிறோம். ஆனால், நான் தற்சமயம் ஏற்றிருக்கும் (பெரியாரின் 61– வது ஆண்டு விழாக் கூட்டத்திற்குத் தலைமை) ஸ்தானத்தை ஏற்காதபடி அது என்னைத் தடை செய்யவில்லை. பின்வாங்காத வீரத்தையும், கொள்கைகளில் வழுவாத நம்பிக்கையையும், ஸ்தாபன சம்பந்தமாக ஓர் அபூர்வ நிபுணத்துவத்தையும், ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நன்மையில் ஓயாதொழியாது நாட்டத்தையும் கொண்டுள்ள ஒருவருக்கும், அவரது குணத்திற்கும் நான் எனது தாழ்மையான பாராட்டுதலைச் செலுத்துகிறேன். இத்தகைய குணாகுணங்களே தென்னிந்தியாவில் அவரது பொதுவாழ்விற்கு ஒரு பெரிய செல்வாக்கான ஸ்தாபத்தை அளித்துள்ளது.



20– வருஷ காலத்திற்கதிகமாக எனக்குத் தோழர் இராமசாமி நாயக்கரைத் தெரியும். அரசியல் தோழர் என்று மாத்திரமல்ல, ஓர் அந்தரங்க நண்பர்
என்ற முறையிலும் நான் அவரை அறிவேன். இத்தகைய நீண்ட காலத்திலும்
20–வருஷத்திற்கதிகமானதொரு காலத்திற்கு முன், அவரை நான் ஈரோடு இரயில்வே ஸ்டேஷனில் முதன்முதலாகச் சந்தித்ததையும் நான் நினைவிற்குக் கொண்டுவரக்கூடும். அடர்ந்து சுரண்டு அடங்காது நிற்கும் அவரது கூந்தலும், தடித்துப் பருத்த மீசையும், தன்னம்பிக்கை நிரம்பித் ததும்பும் ஒரு வதனமுங் கொண்ட தோழர் நாயக்கர் என்னை வரவேற்க வந்தார். இன்று அவர் பொதுவாழ்வில் விளங்குவதுபோல் அன்று அத்துணை பிரதான புருடராய் இல்லை. அன்று நாங்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் கொண்ட பரிச்சயமானது, இன்று பழுத்துக் கனிந்து நேசமாகிவிட்டது. அந்நேசமானது அரசியலில் எங்களுக்குள்ள வேற்றுமைகளையும் பொருட்படுத்தாது, இன்றுங்கூட உறுதியுடன் இருந்து வருகிறது.



நான் இந்தியாவில் இருந்தபோது, நானும் அவரும் ஈடுபட்டிருந்த சில பொதுநல அலுவல்களை முன்னிட்டு அவருடன் நெருங்கிய நேசத்துடன் தொடர்பு கொள்ளும் ஒரு சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. நான் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு இந்நாட்டிற்கு வந்த பிறகு, அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சண்டமாருதங்களையும், பெருஞ்சுல்களையும் வெகு ஊக்கத்துடன் கவனித்து வருகிறேன். வெகு ஆச்சரியத்துடனுங்கூட கவனித்து வருகிறேன். உணர்ச்சி ததும்ப ஒரு வேகத்தையூட்டும் மாபெருந்தலைவராக இன்று அவர் விளங்குகிறார்.
ஆயிரக்கணக்கானோர், அவரையும் அவரது கட்சியையும் கடுமையாக எதிர்த்து வந்தனர். ஆனால், இப்போது ஒருவரும் அவரை நிராகரித்துவிட முடியாது. தென்னிந்தியாவின் அரசியல் அரங்கத்தில் பிரதான நடிகர்களில் ஒருவராய், அவரது பொதுவாழ்வானது தெளிவும், அங்கீகாமும் பெற்ற ஒரு ஸ்தானத்தை இன்று பெற்று விளங்குகிறது.



இத்தகைய அவரது அரும்பெரும் சிறப்பின் ரகசியம் என்ன? இத்தகைய விடாப்பிடியான ஒரு சக்தி பொருந்திய தன்மையை அவர் எப்படி அடைய முடிந்தது? அவர் ஓர் இணையற்ற தலைவராய் எப்படி அடைய முடிந்தது? அவர் ஓர் இணையற்ற தலைவராய் எப்படித் தம்மைத்தாமே செய்து கொண்டார்? இன்று அரசியலில் குறிப்பிட்டுக் கூறத்தக்க ஒரு சக்தியுள்ள தோழர் நாயக்கராக அவரைச் செய்த அபூர்வ குணங்களின் சேர்க்கையைப் பற்றி எனக்கு ஏற்பட்ட இக்குறுகிய கால அளவிற்குள் நான் எடுத்துக் கூறுவது அசாத்தியமாகும். ஆனால், ஒரு பொதுஜன சேவையாளர் என்ற முறையில், தோழர் இராமசாமி நாயக்கரின் சிறப்பு வாய்ந்த அருங்குணங்கள் என எனக்குத் தோன்றுவனவற்றை நான் உங்களுக்கு ஒரு நிமிஷத்தில் எடுத்துக் கூறிவிட முடியும். தமது கொள்கையில் அசைக்கமுடியாத ஒரு நம்பிக்கையில்லாமல் ஒருவரும் ஒரு கட்சியை நடத்திச் செல்ல முடியாது. மனித சமாஜத்தைச் சீர்திருத்தப் பிரயத்தனப்படுவோர்கள், தாங்கள் தேடுவது தங்களது நாட்டார்களின் நன்மைக்கும், இன்பத்திற்கும், அவசியமும், துணைபுரியக்கூடியவையுமாகும் என்பதை உணரவேண்டும்.


தோழர் நாயக்கருக்கு இந்த உணர்ச்சி ஏராளம் உண்டு. நீங்கள் அவர் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளலாம்; அல்லது ஏற்றுக் கொள்ளாமலிருக்கலாம். ஆனால், முன்னிலையில் நீங்கள் இருக்கும் போது, தமது கொள்கையின் நேர்மையில் நம்பிக்கையுள்ள ஒரு மனிதர் இருக்கிறார் என்பதை மாத்திரம் உங்களால் மறுக்க முடியாது. அவரது சேவைகள் அனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாய் விளங்கும் அவரது திருத்தூதின் பரிசுத்தத் தன்மையில் உள்ள அளவு கடந்த நம்பிக்கையும் இதுதான். அவரது சொந்த வீரத்தின் துணை ஆதரவில்லாமலிருந்தால், இதுமாத்திரம் அவரை வெகுதூரம் எடுத்துச் சென்றிருக்க முடியாது. தாம் சிரமும், விரும்பத்தக்கதுமெனக் கருதிய கொள்கைகளுக்காக ஒருமுறைக்கதிகமாகவே சிறைக்கோட்டம் நண்ணும்படி அவரைச் செய்ததும் அந்த வீரந்தான். தமது பொதுமக்களின் இரட்சண்யத்திற்காக வேறுபாடான மற்றொரு வழியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என அவர் கண்டபொழுது பழைய தொடர்புகளையெல்லாம் உதறித்தள்ளி, ஒரு புதுக்கட்சியைச் சிருஷ்டிக்கச் செய்ததும் அந்த வீரந்தான்.



ஒரு கோழை மனிதன், ஒரு பொழுதும் தலைவனாக விளங்க முடியாது. தனது ராணுவத்தை வெற்றிகரமாய் நடத்திச் செல்வோன் பயமற்ற ஒரு தளகர்த்தன்தான். அகத்தின் அழகு முகத்தில் தெரியுமானால், தோழர் நாயக்கர் சண்டையைக் கண்டு பயப்படுபவரல்ல என்பதை, ஒருவர் அவருடைய முகத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.



அவரது வெற்றிக்கு மிகுதியும் துணைபுரிந்த மற்றொரு குணாகுணங்களும் அவரிடம் உண்டு. அதாவது, அடக்கி ஒடுக்க முடியாதபடி அவருக்கு வாய்த்துள்ள சர்வானுகூல மனோபாவந்தான். இது ஒரு தலைவருக்குள்ள மகாபிரதானமான குணமாகும். தோழர் நாயக்கர், மனச்சோர்வோ அல்லது அதைரியமோ அடைந்திருப்பதை நீங்கள் பார்ப்பது வெகு அருமை. அவர் இன்பம் ததும்ப விளங்குபவர். உற்சாகத்துடன் விளங்குபவர். நம்பிக்கை ஜோதியுடன் விளங்குபவர்.


தமது சிஷ்யர்களிடையில் உற்சாகத்தை எழுப்பிவிடக்கூடியவர். அதிக எதிர்ப்பு இருப்பினும், அவர்கள் செயல்களில் இறங்கும்படித் தூண்டக்கூடியவர். இதற்குத் துணைபுரிவது, தமிழ்மொழி மீது அவர் செலுத்தும் ஆச்சரியகரமான ஆக்கினையாகும். தமது நாவன்மையினால் அம்பொழி மீது அவர் ஆக்கினை செலுத்துவதைப் போன்றே, தமது பேனாவினாலும், அதன் மீது தமது அதிகாரத்தைச் செலுத்தி வருகிறார். தமக்கு எதிர்ப்பேற்பட்டால், அவர் மகிழ்வுறுகிறார். தமக்கு எதிரிகளுக்கு ஆத்திரமூளும்படிச் செய்ய, அவருக்கு விபரீதமான சக்தியொன்றுண்டு. ஒரு பூணர குணம் வாய்ந்த பிரசாகருக்குரிய ஒவ்வொரு சாத்தியமான ஆயதத்தையும் அவர் உயோகிப்பார். வேடிக்கை, வினோதம், ஏளனம், வாக்குச் சாதுர்யம் அனைத்தும் அவருடைய பேச்சில் நிரம்பியுள்ளன. விஷயத்திற்குத் தகுந்த சொந்தமான கற்பனை அலங்காரங்களால், அவரது விரோதியை முறியடித்து விரட்டிவிடும் சக்தியும் அவரிடமுண்டு. சண்டையில் தோற்றுவிட்டாலுங்கூட உடனே எழுந்து வெற்றியினது பக்கமே இருப்பதாக வெற்றிக்குறிதோன்றும் முகத்துடன் தோழர் நாயக்கர் தமது எதிரியை எதிர்ப்பார்.


அவரது குணங்களிலெல்லாம் மகா பெரியதும், கண்ணியம் வாய்ந்ததும்
என நான் கருதும் ஒன்றை, உங்களுக்குக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அதாவது, அவரது அந்தரங்க சுத்தியும், தன்னல மறுப்புமாகும். மற்றத்தேசத்தில் மற்றத்தேசங்களில் இருப்பதைப்போல் நாமும் நமது தேசத்தில் பற்பல நோக்கங்களுடன் பொதுவாழ்வில் ஈடுபடுகிறவர்களைப் பெற்றிருக்கிறோம். தங்களது சுய விளம்பரத்தில் அளவு கடந்த மோகமுள்ளதால், சிலர் பொது வாழ்வில் இறங்குகின்றனர் அல்லது அதிகாரத்திலுள்ள கண்ணியமற்ற ஆர்வத்தாலும் சிலர் ஈடுபடுகின்றனர். சிலர் பொதுவாழ்வில் ஈடுபட்டிருத்தலின்றித் தனித்திருக்க முடியாததால், அதில் ஈடுபடுகின்றனர். அவர்களது உணர்ச்சியானது அவர்களை அப்படிச் சேரும்படிச் செய்கிறது. அவர்களது மனோ வேகமானது. அதில் இழுக்கிறது.


மனித சமூகத்தின் ஒவ்வொரு தவறும், நீதியும் அவர்களை நேரிலேயே தூண்டி செய்கையில் ஈடுபடும்படிச் செய்கிறது. எங்குப் பார்த்தாலும் கஷ்டங்களையும், ஆக்கிரமிப்புகளையும் காணும் அவர்களால் செயலற்றுக்கிடக்கவா, சோம்பித்திரியவோ அசாத்தியமாகிவிடுகிறது. உலகமே தனது விடுதலைக்காகவும், அபிவிருத்திக்காகவும் இத்தகைய மனிதர்களிடம் கடன்பட்டிருக்கிறது. தன்னலமற்ற பணியாளர்களாகிய இக்கண்ணியமான கூட்டத்தையே தோழர் நாயக்கரும் சேர்ந்தவராவார். அதிகாரஞ் செலுத்த அவரிடம் ஒன்றுமில்லை. ஆனால், பணி செய்து கிடக்கவே அவர் விரும்பியுள்ளார்.


தோழர் இராமசாமி நாயக்கரின் அருங்குணங்களைப்பற்றிய பூரணமானதொரு ஜாபிதாவை, உங்களுக்குக் கொடுத்துவிட்டதாக நான் பாவனை காட்டவில்லை.
**************************************************************************************


தீமைக்குத் தலை குனியாதவர்!


பினாங்கு 'தேசநேசன்' ஆசிரியர்,
அ.ந.பு.ஹமீதுக் களஞ்சியம் அவர்கள்,
(1939)


தமிழர்களிலே, நம் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைத் தெரியாதார் இல்லை என்றே கூறிவிடலாம். தியாகத்தின் அருட்கனியாய், உழைப்புக்கு ஓர் உதாரணமாய், மக்கட்குச்சுயநலமோ, ஆடம்பரமோ அற்ற பணிபுரிதலையே தம் வாழ்க்கையின் லட்சியமாய்க் கொண்டு உழைத்துவரும் ஈரோடு இராமசாமிப் பெரியார் அவர்களின் பிறந்த தினத்தை, எவ்வித வித்தியாசமுமின்றிக் கொண்டாடி மகிழ்வது மிகவும் பொருத்தமானது – அத்யாவசியமானதுகூட என்பதே எனது அபிப்பிராயம்.


பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், இம்மலேயாவுக்கு விஜயம் செய்திருக்கிறராரென்பதை உங்களில் அநேகர் மறந்திருக்கமாட்டீர்கள். சமத்துவ சமூதாய வாழ்வு, உலகில் பரிணமித்துப் பெருகி வளர வேண்டும் என்ற நோக்கத்தைச் சமாதானத்திலிறுத்தி உழைத்து வரும் அன்பர்களுக்கு, அப்பெரியார் இந்நாட்டுக்கு விஜயம் செய்த அந்நன்னாள் ஒரு சுபதினமாக என்றும் ஞாபகத்திலிருந்து வரும். பெரியாரின் இந்நாட்டு விஜயம் இங்குள்ள தமிழர்களிடையே ஒரு புதிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும், சொல்ல முடியாத அளவு விழிப்பையும் ஏற்படுத்திற்று. இங்குள்ள தமிழர்கள் தங்களது சக்தியை உணர்ந்தனர்; கடமையை அறிந்தனர். தங்கள் சமூக வாழ்வில் அட்டை போல் கவ்விப் பிடித்துக் கொண்டு, தங்களை முன்னேறவிடாது தடுத்துக் கொண்டிருக்கும் கோரமான குறைகள் இன்னதென்பதை யுணர்ந்து, அவைகளைக் களைந்தெறிய வீறுகொண்டு உழைக்க முன்வந்தனர். இங்குப் பெரியார் செய்த வீர கர்ஜனைப் பிரசங்கங்கள், மின்சாரம் போல், உயர்ந்தோர் முதல், சமூகத்தில் தாழ்ந்தோர் எனக் கருதப்பட்டவர்கள் வரையில் அனைவரது உள்ளத்திலும் தாக்கி அவர்களைத் தன் நிலையுணரச் செய்து சமூதாய முன்னேற்றத்திற்குரிய சரியான பாதையில் செல்லுமாறு அவர்களை ஊக்கியது என்பதை யாராவது மறுக்க முடியுமா?



1928-1929 ஆம் ஆண்டில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் இந்நாட்டிற்கு வந்தார். பேரா மாகாணத்திற் சிறந்த நகரான ஈப்போவில் அவ்வமயம் நடந்த அகில மலேயா தமிழர் மாநாட்டைத் திறந்து வைத்ததோடு, பின்னர் இந்நாட்டின் பல இடங்களுக்குச் சென்று ஆங்காங்கு அரும்பெரும் சொற்பொழிவுகளை நிகழ்த்தித் திரும்பிச் சென்றார். இவர் தமிழ்நாட்டையே தமது உடலாகவும், தமிழர் பணியையே தம் சுவாசமாகவும் கொண்டு, தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தமிழகத்துக்கும், தமிழ்மொழிக்கும் அர்ப்பணம் செய்துள்ளார். உடல் தளர்ந்து, நரை மிகுந்து, கம்பளிப் போர்த்து கைத்தடி தாங்கிய இன்றைய நிலையிலும் அளப்பருந் தொண்டுகள் செய்த கர்ம வீரராய் விளங்கிவரும் இவரைக் கண்டு உலகமே பிரம்மிப்பதில் வியப்பில்லை.



பெரியாரின் வாழ்க்கை நெடுகப் பெரும் போராட்டங்களுக்கே நிலைக்களனாக உள்ளதாகும். எவ்வகையில் போராட்டம்? தீமையிலிருந்து நன்மையைக் காப்பாற்றலும், பொய்மையிலிருந்து உண்மையைப் பாதுகாத்தலும், கொடிய பழக்கங்களையொழித்து நல்வழக்கங்களை ஏற்படுத்தலும், சுயநலக் கும்பல்களின் திருவிளையாடல்களிலிருந்து – அவற்றிற்கிலக்கான மக்களைத் தற்காத்தலும், சமூதாயத்தின் காலில் அகப்பட்டு நசிந்து போய்க் கிடக்கும் ஜனங்களைக் கைதூக்கிவிடலுமாகிய மகா பயங்கரமான போராட்டங்களே, நம் பெரியாரின் வாழ்நாட்களை அலங்கரித்து வந்திருக்கிறது.



அறியாமையாலும், கொடிய வழக்கங்களாலும் பலவித இன்னல்களுக்காளாகி, இந்த இன்னல்களுக்கெல்லாம் தங்கள் 'விதி' தான் காரணம் என, அந்த விதி என்ற ஒன்றைச் சிருஷ்டித்து அதன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு – தன் நிலையுணராது காலத்தைக் கடத்தி வந்த நம் இந்திய நாட்டின் ஒரு பெரும் பிரிவு மக்களை அதீதமான விழிப்படையச் செய்தது யார்? பெரியார் ஈ.வெ.ரா. அவர்களல்லவா? இது என்ன சாமான்யமான காரியமா? என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பெரியாரவர்களின் தொண்டின் திறன் இன்னதென்பது விளங்கும்.


இன்று தமிழ்நாட்டில் சுதந்திரம், சமத்துவம், தாழ்த்தப்பட்டோருக்கு ஆலயப்பிரவேசம் என்றெல்லாம் முழங்கப்படுகிறதே, அவைகள் இன்றைய தினம் அசையாத உரம் பெற்று மிளிர அக்காலத்தில் பேரூழைப்புக் கொண்ட மூலபுருடர் யார் என்பது பற்றிச் சரித்திரக்காரர்கள் எழுதுகையில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களையே திட்டவட்டமாகக் குறிப்பிடுவார்கள்.



அரசியல் வாழ்விலே வெளி வேஷங்கள் போட்டுப் படாடோபமாய் வாய்ப்பந்தல்கள் இட்டு நடிப்பதற்கும், பெரியார் ஈ.வெ.ரா.வுக்கும் வெகுதூரம். தன்னடக்கமும், வைரம் பாய்ந்த நெஞ்சும், கலக்கமற்ற உள்ளமுங் கொண்ட பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், மேற்கண்ட விதம் நடக்கும் நடக்கும் மக்கள் உண்மை நிலையுணராது செய்யப்பட்டு விடுவதைக் கண்டு மனம் புழுங்குகிறார். ஈ.வெ.ரா. அவர்களின் கொள்கை, போக்கு ஆகியவைகளைப்பற்றி, அவரது எதிரிகளால் பலவாறு கூறப்படுகிறது. அவைகறையெல்லாம் இங்கு விவரித்துக் கொண்டிருப்பது உசித்தமல்ல. ஆனால், ஒன்றை மட்டும் நான் இங்குக் கூறுவது என் சம்பந்தப்பட்டவரையில் என் கடமையென நான் உணர்கிறேன். நோய்க்குத் தகுந்த மருந்து கொடுத்தால் தான், நோய் சொஸ்தமாகுமென்பதை நீங்கள் அறிவீர்கள்.



பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், பொது வாழ்வு என்னுந்துறையில் பழுத்த அனுபவமிக்க வைத்தியர். எனவே எந்தெந்த விஷயத்துக்கு எவ்வளவு கடுமையான முறையில் "ஒளடத"ப் பிரயோகம் செய்ய வேண்டுமென்பது அவருக்கு நன்கு தெரியும். நீண்ட நாட்கொடிய நோயை நீக்குவதற்கு, கடுமையான "ஒளடத"ப் பிரயோகம் செய்தால் தானே குணமேற்படும்? இந்த நிலையில் அவர் தம் காரியங்களை அயராது செய்து கொண்டு போவதால் தான் அவரை நன்கு உணர்ந்து கொள்ளத் திறமையற்ற அவரது எதிரிகள் பலவாறு கூற முற்படுகின்றனர் என எண்ணுகின்றேன். நல்லது எங்கு உண்டோ, அதைப் போற்றும் அருங்குணம் அவர்பால் அமைந்து கிடக்கிறது. சத்தியமார்க்கமாம் இஸ்லாத்தைப் பற்றி அவர் போற்றுவதற்குக் காரணம், அதன் உயர்ந்த தத்துவங்களும், நற்போக்கும் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களை வசீகரித்திருப்பதால்தான்.




தீமைக்குத் தலைகுனியும் பலஹீன குணம், பெரியார் ஈ.வெ.ரா.அவர்களிடம் சிறிதளவும் காணமுடியாது. இப்பெரும் போக்கு, அவரது இளமை முதலே அவரது உதிரத்தில் கலந்து போய் நிற்கிறதென்பதை, அவரது வாழ்க்கைச் சரிதையிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.



தோழர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், 1879-ஆம் வருடம் செப்டம்பர் மாதம்
17-ந் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவர் 6- வயதில் திண்ணைப் பள்ளிக்கூடம் சேர்ந்து, 10-வயதில் வெளிப்பட்டுவிட்டார். தம் தந்தையின் மளிகைக் கடையில் சேர்ந்துழைத்தார். இதில் வளர்ந்தவர் பொதுத் தொண்டில் ஈடுபட முற்பட்டுக் காங்கிரசில் சேர்ந்தார். சிறு வயதிலேயே சமூகக் கட்டுப்பாடுகளை மூடவழக்கங்களென வெறுத்து வந்ததனால் இவருக்குத் திருமணம் செய்துவிட்டனர். இவர் இதிலும் படியாதவராகிக் காங்கிரஸ் தொண்டில் முற்பட்டுப் பெரும் பணிகள் ஆற்ற முற்பட்டதனால், இன்று சென்னை மாகாணக் காங்கிரஸ்வாதிகளில் மிகப் பழைய காங்கிரசினர் எனக்கருதப்படவும் இடமேற்பட்டுள்ளது.



முதல் முதலாக, இவர் மதுவிலக்குப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. முதல் முதலாக இவர் மதுவிலக்குப் பிரசாரத்தில் ஈடுபட்டுழைக்க முற்பட்டதில், சிறைவாசத்திற்குள்ளானார். வெளிவந்ததும் தீண்டாமை ஒழிப்பிற்காக வைக்கம், சுசீந்திரம் என்னும் மலையாள வைதீக நகரங்களிற் சென்று, தீண்டாதாருக்கு அங்குத் தெருப்பிரவேச உரிமை பெறச் சத்தியாக்கிரகம் செய்ய முற்படவே, திருவாங்கூர் சமஸ்தானம் சிறைவாசம் அளித்தது. அதை அனுபவித்து, சென்னைக்கு வந்து கதர்ப்பிரச்சாரத்திலீடுபட்டு ஆற்றிய சொற்பொழிவுகளில் இராஜத்து வேஷம் இருந்ததெனக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறைவாசம் செய்யச் சென்றார். அதிலிருந்து வெளிவந்ததும் நாகை தென் இந்திய இருப்புப் பாதைத் தொழிலாளர் ஊதியக்குறைவிற்கென வேலை நிறுத்தம் செய்ய முற்பட்ட சமயம் அரசாங்க உத்தரவை மீறியதற்காகச் சிறைக்கோட்டம் சென்றார். வெளிவந்ததும், சமூக சீர்திருத்தத்தையும் நாட்டு உரிமையையும், காங்கிரசின் வாயிலாக அடையலாமென்ற நம்பிக்கையில் உழைத்தார். இதில் மன விகற்பங்களும், வேறுபாடுகளும் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தன; முடிவாகக் காங்கிரசை விட்டு விலக நேர்ந்தது.


காங்கிரசிலிருந்து விலகியதும் 1925–ஆம் ஆண்டில் 'குடிஅரசு' வாரப்பத்திரிக்கையைத் துவக்கிச் சுயமரியாதை இயக்கத்தையும் தோற்றுவித்தார். 1929- பிப்ரவரி 18–ல் செங்கற்பட்டில், முதலாவது சுயமரியாதை மாநாட்டை நிறுவினார். இவ்வியக்கத்தை எதிர்க்கச் சென்னை ஆஸ்திக சங்கம் என்று ஒன்று ஏற்பட்டது. இது சிறிதுகாலம் எதிர்த்து நின்று மறைந்தது.



இவர் 1931- டிசம்பரில் மேல்நாடுகளுக்கேகி, ருஷ்யா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து 1932–ல் இந்தியா திரும்பி, 1933–ல் தம் மனைவியாரை இழந்து 1936–ல் தம் அன்னையையும் இழந்து, தமிழ்நாட்டில் உழைப்பிற்கஞ்சாதுழைத்து, வருங்காலத்தில் கட்டாய இந்திக் கல்வியைக் காங்கிரஸ் கவர்ன்மெண்ட்டார் ஏற்படுத்த, அதைத் தமிழகப் பெருமக்களுடன் சேர்ந்து எதிர்த்துப் போராடி தமிழ் மக்களில் ஓர் மாபெரும் எழுச்சியை உண்டாக்கி, அடக்குமுறை ஆட்சிக்குட்பட்டு, நோய்வாய்ப்பட்டுப் பல பரிதாப நிலைகளுக்குள்ளாகி விடுதலையடைந்து, மறுபடியும் இன்று அஞ்சாதுழைத்து வருகிறார்.


இத்தகைய இணையற்ற தொண்டுகளில் ஈடுபட்டுள்ள தமிழ்க்கிழவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதில், தமிழர்களாகிய நாம் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
*******************************************************************************************

இருபதாம் நூற்றாண்டின் வில்லியம் மாரிஸ்!


ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தினர்,
திரு. பெசில் மாத்யூஸ் அவர்கள்.



அந்த ஈரோட்டுத் தாழ்வாரத்தில், தோழர் ஈ.வெ.ராமசாமியைக் கண்டு என் வணக்கத்தைத் தெரிவித்தேன். நரைத்த தலையும், அழகிய தாடியும், அழுத்தமான மூக்கும், மொத்தமான உதடுகளும், ஒளிவீசும் கண்களும், படைத்த அந்தப் புரட்சிக்காரரைக் கண்டதும், என் தந்தையார் நான் பள்ளி மாணவனாயிருந்த போது வில்லியம் மாரிசின் பொதுவுடைமைச் சொற்பொழிவைக் கேட்பதற்காக என்னை அழைத்துச் சென்ற அந்தக்காட்சி நினைவிற்கு வந்தது. புறத்தோற்றத்தில் மட்டுமல்ல. உள்ளுணர்ச்சியிலும் தோழர் ஈ.வெ.ரா. வில்லியம் மாரிஸ் போன்றவரே என்பதை அவருடன் நான் பேசிக்கொண்டிருந்த இரண்டு, மூன்று மணிநேரத்திற்குள் கண்டுகொண்டேன். அர்த்தமற்ற எந்தப் பழைய சமூதாயக் கட்டுப்பாட்டுகளையும், அடியோடு தகர்த்தெறிய வேண்டும் என்னும் அந்தத் துடிதுடிப்பு காலத்திற்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களையும், பழமைப் பாசிபடர்ந்துவிட்ட கருத்துக்களையும் துடைத்தெறிய வேண்டும் என்னும் அந்த நெஞ்சழுத்தம், "புதியதோர் உலகு செய்வோம்" என்னும் அந்த உறுதிப்பாடு - இவை அத்தனையிலும் தோழர் ஈ.வெ.ரா. வில்லியம் மாரிஸே தான். ஆம்! அவர் இருபதாம் நூற்றாண்டின் வில்லியம் மாரிஸ்! மாரிசைப் போலவே, ஈ.வெ.ரா.வும் எளிய வாழ்க்கையே வாழ்கின்றார். புள்ளியிட்ட ஒரு நீலச்சட்டை, சாதாரணமான ஒரு கால்சட்டை. அழுத்தத்திருத்தமான ஒரு கடிகாரச் சங்கிலி என்ற இவ்வளவில் வில்லியம் மாரிஸின் ஆடை அணிகலன்கள் அடக்கிவிடுகின்றன. அதுபோலத் தான் இந்த இந்திய நாட்டுச் சிந்தனைச் சிற்பியும், பருத்தி நூலால் செய்யப்பட்ட சர்வசாதாரணமான வேட்டியும், சட்டையுமே அணிந்து கொண்டிருக்கிறார்.



தோழர் ஈ.வெ.ரா. நடத்துகின்ற ஆங்கில வார இதழ் இருக்கிறதே – அதன் பெயராகிய (Revolt) "புரட்சி" என்பதை அவருடைய வாழ்க்கை வரலாற்றிற்கே பெயராய்ச் சூட்டிவிடலாம். அது மிகப் பொருத்தமாகவும் இருக்கும்.



செல்வாக்குள்ள ஒரு குடும்பத்திலே பிறந்த கட்டுக்கடங்காத இளங்காளை அவர்! பல புரட்சி வீரர்களைச் சாதுக்களாக மாற்றி அமைத்த தோழர் காந்தி இருக்கிறாரே, அவரிடமிருந்து தான் பொது வாழ்க்கைப் பைத்தியம் இவருக்கு முதலில் தொத்திக் கொண்டது. ஈரோடு நகரசபைத் தலைவரானார். காங்கிரசில் சேர்ந்தார். காந்தியின் சீடரானார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். 1921-இல் சட்டமறுப்பு இயக்கத்தில் பெரும்பங்கு கொண்டு சிறை புகுந்தார். காங்கிரஸ் இயக்கத்தில் உள்ளீடாய்ப் பரவிவிட்ட பார்ப்பன ஆட்சியை எதிர்த்து காங்கிரசை விட்டு செளியேறினார். ஜஸ்டிஸ் கட்சியில் ஓர் இடதுசாரித் தலைவரானார். ஆனால், அந்தக் காலத்தில், ஜஸ்டிஸ் கட்சி "மிகமிக மெதுவாய்"ப் போய்க்கொண்டிருந்த கட்சி. ஆகவே துடிதுடிக்கும் வாலிபர்களையும், அதிதீவிரக் கொள்கைகளையும் கொண்ட சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். பிராமண ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதில் அவருக்கு ஏற்பட்ட ஊக்கம் பிறகு கிறித்தவ, இஸ்லாம் மதங்களையும், அதற்குப் பிறகு எல்லா மதங்களையுமே எதிர்க்கும் உணர்ச்சியை அவருக்குத் தந்துவிட்டது. அய்ரோப்பாவில் அவர் சுற்றுப்பயணம் செய்த போது, மாஸ்கோவில் அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரஷ்யப் பொதுவுடமைத் திட்டத்தில் மகிழ்ச்சி நிறைந்த நம்பிக்கை கொண்டவராகவும், மத எதிர்ப்புத் தத்துவத்தில் மேலும் பலமடங்கு ஈடுபாடு கொண்டவராகவுமே அவர் இரஷ்யாவினின்றும் திரும்பி வந்தார். மதங்களை அழிப்பதில் அவர் காட்டிய வீரர் வேஷமும், அவருடைய பொதுவுடைமைப் பிரச்சாரத்தின் வேகமும், பலமும் அவரை மீண்டும் சிறைக்கோட்டம் புகச்செய்தன.



அடுத்த நாள் அவரை அவருடைய அலுவலகத்தில் கண்டேன். அங்கே அவருடைய படம் ஒன்றுமாட்டப்பட்டிருக்கக் கண்டேன். அதன் ஒரு பக்கத்தில் படமும், மறுபக்கத்தில் பெர்னாட்ஷாவின் படமும் இருக்கக் கண்டேன். சொந்த அச்சகத்தின் வாயிலாகவே சொந்தக் கருத்துக்களைப் பொது மக்களுக்கு உணர்த்துவது வில்லியம் மாரிசுக்கும், தோழர் இராமசாமி நாயக்கருக்கும் உள்ள வியக்கத்தக்க இன்னொரு ஒற்றுமை என்பதையும் கண்டேன்.
***************************************************************************************


கன்பூசியசுக்கு ஒப்பானவர்!


சீனப் பேராசிரியர், சி.எஸ்.ஸீ. அவர்கள்
(1939)



இன்று தமிழகத்தில், சமூதாயத்துறையில் சிறந்த பணியாற்றிவரும் ஒருவர் உண்டானால், அவர் பெரியார் இராமசாமிதான் என்பதை நீங்கள் ஓப்புக்கொள்வீர்கள். அவரால் தமிழ்நாடு அடைந்துவரும் முன்னேற்றம் பெரிது; மிகப்பெரிது!


சீனதேசத்துச் சன்-யாட்-சென் என்பவரைப்பற்றி நீங்கள் கேட்டிருக்கலாம். அவருடைய குருவான கன்பூசியஸ் என்னும் பேரறிஞருடன் பெரியார் இராமசாமி அவர்களை ஒப்பிடலாம்.


மூடப் பழக்கவழக்கங்கள் மலிந்துகிடந்த சீனத்தை, மறுமலர்ச்சி பெறச் செய்த டாக்டர் சன்-யாட்-சென்னுக்கு வழிகாட்டிய பெம்மான் கன்பூசியஸ் அவர்களைப் போல, உங்கள் தலைவர் பெரியாரும், தமிழ்நாட்டிலிருந்து சாதி வேறுபாட்டை அடியோடு தொலைக்க மிகவும் பாடுபட்டு வருகிறார்.


கடந்த பத்து ஆண்டுகளாக மலாய் நாட்டில் வாழும் தமிழர்கள், அதிதீவிர முன்னேற்றம் அடைந்திருப்பதைக் கண்டு முதலில் வியப்படைந்தேன். பிறகு அதற்குக் காரணம் பெரியார் தான் என்று அறிந்தேன்; மகிழ்ந்தேன்.


1929-ல் பெரியார் மலாய் நாட்டில் சுற்றுப்பயணஞ்செய்து, மலாய்த் தமிழர்களைத் தட்டி எழுப்பினார் என்பதையும், அவர் அப்போது ஆற்றிய சீர்திருத்த உரைகளால், மலாய்த் தமிழர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டனர் என்பதையும், அவருடைய அரிய தொண்டின் விளைவாக மலாய்த் தமிழர்கள் கீழ்நாட்டின் சிறப்பை நிலைநாட்ட முன்வந்திருக்கிறார்கள் என்பதையும் நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


*************************************************************************************************


மனிதன் மனிதனாக வாழச் சீர்திருத்துபவர்!


புரொஃபசர், ரங்கா அவர்கள்.



"இந்தியாவில் மும்மணிகளாய் மூவர் திகழ்கின்றனர். தேசீயக்கிளர்ச்சி உண்டு பண்ணி மக்களிடையே சுதந்திர உணர்ச்சியை ஊட்டினவர் காந்தியடிகள். பொதுவுடைமைத் தத்துவத்தைத் தீர ஆராய்ந்து, அதன் உண்மையினை உணர்ந்து, அதன் நன்மையினை மக்கள் அடைய வேண்டுமென்று கூறினவர் ஜவகர். மதத்தினை ஆராய்ந்து மூடக்கட்டுப்பாடுகளை அறுத்து மனிதன் மனிதனாக உரிமையுடன் வாழச் சீர்திருத்த முயல்பவர், ஈரோட்டு வள்ளல் ஈ.வெ.இராமசாமிப் பெரியார் ஆவார்."


*******************************************************************************************


புரட்சிவாடை வீசச்செய்பவர்!


டெல்லி, இந்தியத் தொழிலாளர் மன்றப் பொதுச் செயலாளர்,
வி.பி.கார்னிக் அவர்கள்.
(1944)


பெரியாரிடத்தில் எனக்குப் பெருமதிப்புண்டு. தென்னிந்தியாவில் உள்ள பாட்டாளி மக்களைப் பிணைத்திருக்கும் அடிமைத்தனங்களை உடைத்தெரிவதற்காக அவர் ஆற்றியுள்ள தொண்டின் திறத்தை நான் நன்கு அறிவேன். தென்னாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பார்ப்பனரல்லாத மக்களின் சமூக, பொருளாதார விடுதலைக்குத் தக்க பலம் பொருந்திய சிறந்த ஆயுதம் திராவிடர் கழகம் என்னும் பேரியக்கம். பெரியார் இராமசாமி தான் அந்த இயக்கத்தின் மாபெருந் தலைவர்.



என்னுடைய ஆசையெல்லாம், அந்தப் பலம் பொருந்திய இயக்கம் மேலும் மேலும் வலுப்பெற்றுக் கூடிய விரைவில் தன்னுடைய முழுச் சக்திகளையும் திரட்டி, உழைப்பாளி மக்களுக்கு உடனடியாக விடுதலை கிடைக்குமாறு செய்துவிட வேணடுமென்பது தான். பெரியாரின் தலைமையில் பாடுபட்டு வரும் திராவிடர் கழகமானது, உள்ளபடியே தென்னிந்திய அரசியல் வானில் புரட்சிவாடை வீசச் செய்து விட்டது. நான் கலந்து உழைத்து வரும் தீவிர ஜனநாயகக் கட்சியும், அதன் தலைவர்களும் பெரியார் இராமசாமியைப் பற்றியும், அவரது இயக்கத்தைப் பற்றியும் மிக உயர்ந்த மதிப்புக் கொண்டிருக்கின்றனர்.


**************************************************************************************************


அஞ்சா நெஞ்சன்!


திரு. நீல்கன் பெருமாள் அவர்கள்
(1939)


ஈரோடு இராமசாமி நாயக்கர் அவர்கள் மிக முக்கியமான ஒருதலைவராவார். தமிழர் உள்ளத்தில் ஒரு சிறந்த தியாகியாக
அவர் குடிபுகுந்திருக்கிறார். ஒத்துழையாமைக் காலத்தில் காந்தியாரின் படம்
பல வீடுகளிலும் தொங்கவிடப்பட்டிருந்தது போலவே, இன்றைய தினம் ஈ.வெ.ரா. அவர்களின் படங்கள் மிக மதிப்போடு தொங்கவிடப்பட்டிருக்கின்றன. பார்ப்பனர்கள், காங்கிரஸ் பார்ப்பனரல்லாதாரை அடக்கி ஒடுக்கி அடிமை வாழ்வு வாழச் செய்கின்றனர்
என்பதைத் தெளிவாக உணர்ந்த ஒரே காரணத்தாலேயே அவர் காங்கிரசைவிட்டு வெளியேறினார். அதுமுதற்கொண்டு எல்லா வகுப்புக்களுக்கும் ஒத்த உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக,
அவர் பெரும்போர் விளைத்திருக்கின்றார். தம் வாழ்க்கையில் சுயநல உணர்ச்சியென்பதே சிறிதும் கலவாத ஓர் அஞ்சா நெஞ்சன் என்பதே, அவரைப் பற்றிய என்னுடைய கருத்தாகும்.


தம்முடைய மாகாணத்து முதல் அமைச்சாராக வரவேண்டும் என்பது போன்ற ஆசைகள் அவருக்குச் சிறிதும் கிடையாது. அப்படிப்பட்ட பதவிப் போட்டிகளுக்கும் அவருக்கும் வெகுதூரம்.


ஓர் அரசியல்வாதி என்கின்ற முறையில், தென்னாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் வகுப்புக்களுக்கும், பிரிவினருக்கும் ஒத்த உரிமைகளும்,
ஒத்த நீதியும் அளிக்கப்பட வேண்டுமென்பதே அவருடைய கொள்கை. இத்தகைய கண்ணியமான நோக்கங்களோடு, அவர் தம்முடைய சமூதாயம் - தமிழர் சமூதாயம் - முன்னேற மிகவும் பாடுபட்டு வருகிறார். இப்போது மக்களெல்லாம் அந்த ஈரோட்டுப் போர்வீரரை மேலும் மேலும் பாராட்ட முன்வந்து விட்டார்கள். தங்களைக் காப்பாற்ற வந்த ஒரு புண்ணிய புருஷராகவே, அவர்கள் அவரை எண்ணி வணங்குகிறார்கள்.
'பெரியார்' என்றே, அவரை அன்போடு அழைக்கிறார்கள்.


*************************************************************************************************


ஏழை மக்களுக்குத் தொண்டு செய்பவர்!

M.R. ஜெயக்கர் அவர்கள்
(1930)


சுயமரியாதை இயக்கம் ஏழைகள், கஷ்டப்படுகிறவர்கள், அநீதிக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்கள், சமத்துசத்தை அடையாதவர்கள் ஆகியோர்களை முன்னேற்றுவதற்காகவே ஏற்பட்டது. நமக்கு எதிரிகள் சர்க்காராயினுஞ்சரி, மேல் ஜாதியாரெனப்படுவோராயினுஞ் சரி,
அவர்கள் எதிர்ப்பை நாம் சிறிதும் பொருட்படுத்தக்கூடாது.


திரு.ஈ.வெ.இராமசாமியார் சட்டசபைகளைப் பற்றியோ, அரசாங்கத்தைப்பற்றியோ கவலை கொள்ளாதவர். அவர் ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே தமது பிறவியின் பயன் என்று கருதியிருப்பவர்.
இவர் உங்கள் இயக்கத்திலிருக்கிறார்!


உங்களுடைய இயக்கத்தில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும்,
மகமதியர்களும் சேர்ந்திருப்பது விசேஷமாகும். மதத் தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும், செய்யமுடியாத காரியத்தை, நீங்கள் செய்து முடித்திருக்கிறீர்கள்.


************************************************************************************************


சுயநலக் கூட்டத்தை எதிர்க்க அவதரித்தவர்!


முதுபெரும் புலவர்,
அ.வரதநஞ்சையபிள்ளை அவர்கள்.
(1944)


நான் சைவ சித்தாந்தக் கூட்டங்களிலும் கலந்து கொள்கிறேன். சுயமரியாதைக் கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். இதனால் என்னைச் சிலர் கொள்கையற்றவன், பச்சோந்தி என்று கூடச் சொல்வார்கள். அது தவறு. எனக்கும், பெரியாருக்கும் கொள்கையில் சில வேறுபாடுகளுண்டுதான். எனினும், பொதுமக்களுக்கு அவர் செய்த தொண்டு மிகப் பெரியது. அதனை நான் மதிக்கிறேன்; போற்றுகிறேன். யாகத்தின் பெயரால் பசுக்கொலை முதலிய கேடுகளை எதிர்க்கப் புத்தப் பெருமான் தோன்றினார்.... தமிழழையும், தமிழரையும் அடிமைப்படுத்தி வரும் சுயநலக் கூட்டத்தை எதிர்க்கப் பெரியார் அவதரித்துள்ளார். பெரியார் தோன்றியிராவிடில், நாம் மிகக் கீழான நிலையில் வெட்கமில்லாமல் "சூத்திரன்" என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் பேதமையில் இருந்திருப்போம்.



தமிழனின் தன்மானக் குரல், புத்துணர்ச்சி, உள்ளக் கொதிப்பு, முன்னேற்றம் எல்லாற்றிற்கும் பெரியார் தான் காரணம். பெரியாருக்கு வயது 66. எனக்கு 67. இந்த முறையில், அவர் எனக்கு இளைய சகோதரர் தாம். எனினும், அவர் ஆற்றிவரும் அறிவுத் தொண்டினைப் பார்க்கும் பொழுது அவரை எனக்கும் பெரியாரென்றே நான் மதிக்கின்றேன்.


கடவுளை மறுப்பது என் கொள்கையல்ல. கடவுளின் பெயரால் அக்கிரமங்கள் நடப்பது கண்டுதான், கடவுளை மறுக்கிறார்கள். பாமர மக்கள் விழிப்புற வேண்டும். நான் சுயமரியாதைக்காரன். எனக்குச் சுயமரியாதை வேண்டாமா? ஓவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை வேண்டும்!


***********************************************************************************************

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்!



நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், M.A., B.L.,
(1942)


"பெரியார் இராமசாமி அவர்கள், திராவிடருக்குப் பொதுவாயும், தமிழருக்குச் சிறப்பாயும், உரிமையும் பெருமையும் உண்டுபண்ண உழைக்கும் பெருந்தலைவர்; உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசும் போலிப் பெரியார் வரிசையில் சேராதவர். எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணிய முயற்சியுடையார். கிளைபகை கருதாமல், பொதுநலமொன்றையே பேணித் தம் உள்ளத்தாற் பொய்யாதொழுகும் நேர்மையாளர். புகழும், பழியுமிகந்து, அச்சமறியா உரனுடைய உள்ளத்தராய், என்றும் ஒன்று போல் நின்று உற்றாரிடத்துக் குறைகாணில் மறையாதுரைத்து, வலியார் மெலியாரை நலியாது எதிர்த்து, எளியவர் தோழராய்ப் போராடும் வீரர். தனக்கென வாழாப் பிறருக்குரியாளருள் தலையணி நிலையுடைத்தக்கார். அவரோடு கருத்து வேறுபாடையாரும், அவர் நேர்மையும், பகையற்ற உளப்பாங்கும், அஞ்சாமையும் பாராட்டும் தகவுடையார். வேடத்தால், விரகால் கடவுட் பெயரால் மக்களை மருட்டி வாழ்பவர் விரைந்து மறைய மெய்யுரைத்துத், தம் குற்றம் காண்கிற்கும் ஆள்வினையுடையார்."



"தற்காலத் தமிழகத்தில் தலைநின்று, ஒல்லும் வகை ஓயாது உழைத்து, தமிழர் வாழ்வு வுயர்வளம் சிறக்க உரிமைப் போர்த்தலையணியில் பொருதுவரும் ஒப்புயர்வற்ற தலைவர், இராமசாமிப் பெரியார். காந்தியடிகளாலும் பாராட்டப்பெற்றுப் பொதுநலம் பேணும் அறம் திறம்பா அருண் மறவரிவர். கலாநிலையக் கல்விப் பட்டங்கள் பெறாமலும், மானமிழந்து பிறர் பின் நின்று பதவி முதலிய வீண் பெருமைதேட விரும்பாமலும், ஊக்கமும், வாய்மையும், ஆக்கமனைத்தும் தரும் என்பதை நாள்தோறும் தாம் வாழ்ந்துகாட்டும் சால்புடையார். கல்வி வளம் செல்வம் போல் மிகுந்து மலிந்த ஆங்கில நாட்டில், கல்லூரிப் பயிற்சி
மிக இல்லாமல், தன்னலமறந்து, பிறர் உரிமை பேண முயன்று, பெருமையும் புகழும் பெற்றுயர்ந்த 'பிராட்லா'வைப் போலவே, நமது பெரியாரும், தம் வாழ்வனைத்தும் தமிழர் உரிமை பேணும் அறப்போருக்குதவி, நல்லோர் மதிப்பும் அல்லோர் அழுக்காறும் நாளும் பெருக்குமியல்புடையார்.


*****************************************************


"என்றும் எதிரிகளாலும் மதிக்கப்படும் இயற் பெருமை வாய்ந்தவர். அதற்குக் காந்தியடிகளின் சூழ்ச்சித் துணைவரும், கூர்ந்த மதியும், கொண்டதை முடிக்கும் திறமும் மிகுந்த தமிழ்நாட்டுக்குக் காந்தி எனப் புகழ்பெற்ற வருமான சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி அவர்கள் வலிய வீட்டுக்கு வந்து நட்புறவை நாடிப் பாராட்டப் பெற்றார் பெரியார் என்பதே போதிய சான்றாகும். கட்டாய இந்தித் திமிரை மட்டம் தட்டிய தமிழர் படைத் தலைவராய்ப் பொருது, வென்றி விளைத்தவர் தீண்டாத தீமையை அறவே ஒழித்து ஆலயங்களை அனைவருக்கும் திறக்கப் பண்ண அரும்பாடுபட்டவர். வைக்கம் சத்தியாகிரகப் போரில் தனிப்பெரும் வீரராய், நாடு கடத்தவும், சிறை புகுத்தவும், தளராத தறுகண்மையோடு அறப்போர் புரிந்த மறவர். இவரோடு சில பல துறைகளில் கருத்து வேறுபாடு உடையவரும், இவர் தம் பல சிறந்த பண்புகளையும், பொதுநல ஆர்வத்தையும், சமூக சேவையையும் பாராட்ட விரும்புமாறு அரும்பல செயலாற்றிய புகழ்க்குரியார்."


********************************************************************************************************


தமிழ் மக்களைத் தட்டியெழுப்பியவர்!

செட்டிநாட்டுக் குமாரராஜா,
திரு.ஏ.முத்தையச் செட்டியார் அவர்கள்
(1938)


இருபது ஆண்டுகளுக்கு முன் நமது மாபெருந் தலைவர்களான தியாகராயர், பனகல் அரசர் ஆகியோர், நம் தமிழ் மக்களின் நன்மைக்காக, நமது நீதி இயக்கத்தை ஆரம்பித்தனர். நமது கட்சியின் உழைப்பால் தாழ்த்தப்பட்டோரும், சிறுபான்மையினரும், மற்ற மக்களுடன் சம நிலையுடன் வாழ வசதியேற்பட்டது. அவர்கள் உழைப்பால் பார்ப்பனரல்லாதார்கள் அளவிறந்த நன்மைகள் பெற்றனர். இடையில் நமது தலைவர்களின் மனவேறுபாட்டால், சென்ற தேர்தலில் தோல்வி பெற்றோம். ஆனால், நமது பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், எந்தத் தலைவர்களின் தூண்டுதலுமில்லாது தாமே தனியாகத் தம்முடைய தோழர்களுடன், சென்ற ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழ்நாடு முழுமையும் சுற்றுப் பிராயணஞ் செய்து, சொற்பொழிவாற்றி தமிழ் மக்களைத் தட்டியெழுப்பினார்.


************************************************************************************************

நாட்டுப் பிரிவினைக்கு வித்திட்டவர்!


"லிபரேட்டர்" ஆசிரியர்,
டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி, எம்.ஏ.,பி.எச்.,டி.,
பார் - அட் - லா.



திரு.ஈ.வெ.ரா. இராமசாமி, அச்சம் என்பதையே அறியாத சமூதாய சீர்திருத்தவாதி. வர்க்கத்திற்கோர் வட்டாரம் என்ற முறையில் இனவாரியாக நாட்டைப் பிரிக்கும் கொள்கை கேலிக்கிடமானதாகக் கருதப்பட்ட அந்தக்
காலத்திலேயே "திராவிடநாடு திராவிடருக்கே" என்று அவர் முழங்கி வந்தார். எல்லோரும் அந்தத்தத்துவத்தைக் குறைகூறிய காலத்தில்,
அவர் மட்டும் அழுத்தந்திருத்தமாய் அதை ஆதரித்துப் பேசினார்.
அவர் தம் இடைவிடாத பிரச்சாரத்தினால், தென் இந்தியா தனிநாடாகப்
பிரிய வேண்டியது தான் என்பதைப் பாமர மக்களெல்லாங்கூட உணர்ந்து
ஒப்புக்கொள்ளும்படிச் செய்து விட்டார். அவருடைய தொண்டின் பயனாகத்
திராவிட நாட்டிற்கு விடுதலை தேவை என்பதை, இன்று பொது மக்கள்
தெளிவாக அறிந்து கொண்டனர்.

இப்பொழுது நான் கூறியதெல்லாம் சில குறிப்புகள் தாம். விவரமானவையல்ல. தோழர் நாயக்கருடைய வாழ்க்கையில் வீரம், சுயேச்சை, தன்னலமற்ற வேலை ஆகியவற்றின் எடுத்துக்காட்டுகள் நிறைந்திருக்கின்றன.
நீடுழி வாழ்க!
***************************************************************************************************************


காஞ்சி, பரவஸ்து இராஜகோபாலாச்சாரியார். B.A.,
(1939)

தமக்கென வாழாது பிறர்க்கே வாழ வேண்டுமென்பது, பண்டைத் தமிழரின் உயரிய கருத்தாகும். இச்சீரிய கருத்தைத் தம் வாழ்நாட்களில் கொண்டு, அதன்படி எல்லியும், காலையும் தூய தொண்டாற்றி, மக்கள் அனைவரும் மாய வலையில் சிக்காவண்ணம் அறிவு கொளுத்தி, "பிறப்பொக்கும்" என்னும் தூய மொழியை இம்மாநிலத்தில் நிலைநாட்டிய பேரறிஞருள், நம் ஈ.வெ.ராமசாமி அவர்கள் முதல்வர் என்றால், வேறு கூறவேண்டுமா?


இத்தகையார் வாழ்க்கையில், குறளில் கூறிய இயல்புகள் எல்லாம் தாமாகவே அமைதல் இயற்கையேயாகும். பெரியார் வாழ்க்கையும், தன்னலம் கருதாது பிறர்க்கே உழைத்து ஏழையானதும், தாய், தந்தை, தாரம், தமர் அனைத்தும் நோயெனக் கருதி, அவர்கள் பிரிந்த காலத்தும், இன்ப துன்பமில்லாமல் மனஅமைதியோடு "கருமே கண்ணாயினர்" என்பதற்கோர் இலக்கியமாகவும் விளங்கினார்கள். சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றி, அறிவு கேடர்க்குத் தம் சான்றாண்மையால் பகுத்தறிவூட்டி, ஏனைய தமிழர் வாழ்வுகண்ட தெள்ளியராவார். அரசியல் போரிலே மூண்டு முன்னிலையில் நின்று நாடு விடுதலைபெறச் சீரிய தவமியற்றும் சிங்கம் ஈ.வெ.ரா. அவர்கள் நீடுழி வாழ்க! என்று போற்றுவதல்லாமல் வேறு கூறுதல் மிகையெனக் கருதுவேன்.

******************************************************************************************************************

உண்மையிலேயே பெரியார்!

டி.கே.சிதம்பரநாத முதலியார் B.A., B.L.,
(1929)


இராமசாமிப் பெரியார் உண்மையிலேயே ஒரு பெரியார் என்பதற்கும், ஒரு பெரிய சக்தி வாய்ந்தவர் என்பதற்கும் வேண்டிய ஆதாரங்கள் இருக்கின்றன. அதாவது ஓர் உண்மையான பெரியாருக்குவேண்டிய குணங்கள் மூன்று. அவையாவன:-

1- அவரைப் பற்றி உலகத்தார் - "தப்பபிப்பிராயம்" கொள்ள வேண்டும்.


2- அவரது கொள்கைகள் எங்கும் - கண்டிக்கப்பட வேண்டும்.


3- அவர் கடுமையாக வையவும், சபிக்கவும்பட வேண்டும்.



எனவே, இத்தகைய மூன்று தன்மைகளையும் பெற்றவர், நமது பெரியாராவார்.
தேசீய இயக்கத்தில் பெரிதும் ஈடுபட்டு மனப்பூர்வமாக உழைத்தவர். பல கஷ்டம் என்பதையும், அதற்காக நஷ்டங்கள் அடைந்தவர்கள் என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. சமூதாயத் துறையில் இறங்கி, வைக்கம் முதலிய இடங்களில் தாழ்ந்த மக்களுக்காகச் சத்தியாக்கிரகம் முதலியவை செய்து, அதற்காகச் சிறையும் சென்று தெருவில் நடக்கும் உரிமை முதலியவைகளை நிலை நாட்டியவர் நமது பெரியாரேயாகும்.


*************************************************


சுயமரியாதை உணர்ச்சியைத் தமிழ்நாட்டில் துவக்கிவிட்டவர் நாயக்கர் ஆவர். பார்பபனரல்லாத இயக்கத்திற்குப் புத்துயிர் அளித்த பெருமையும், அவருக்கே உரித்தானது. இன்று இம்மாகாணம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நமது இயக்கம் கொண்டாடப்படுகிறது. அம்மகத்தான பெருமைக்கு அருகர் நாயக்கரே! இதைப்பற்றி மேலும் கூறுவது மிகையே!


முதன் முறையில் அவர் பிரசங்கத்தைக் கேட்ட போது நான் பிரமித்துப் போனேன். அவருடைய பேச்சில் ஆற்றல் தொக்கி நிற்கிறது.



'குடி அரசி'ன் பெருமை மிக ஆகும். ஆடாததையெல்லாம் ஆட்டி வைத்த பெருமை 'குடிஅரசு'க்கே உரித்தானதாகும். இதற்குக் காரணம் பெரியாரின் சொல்லும் எழுத்தும் வன்மை கொண்டதாக இருந்ததே.

அவருடைய 'குடிஅரசு' பத்திரிக்கையில், மக்கள் மனதைக் கவரத்தக்க அளவு கடந்த சக்தி இருப்பதற்குக் காரணம் அழகான ஆராய்ச்சியா? தமிழா? இல்லை. தன் உள்ளக் கிடக்கையில் உள்ளதை அப்படியே எடுத்துச் சொல்வதுதான் உண்மையிலேயே, எத்தகைய கல்வியாளரும், கோடிக்கணக்கான ஜன சமூகமும் திகைக்கத்தக்க பத்திரிக்கையை, இவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்.


******************************************************************************************************

பேசியவாறே செய்து காட்டுபவர்!


முன்னால் அமைச்சர்,
திவான் பகதூர். எஸ்.குமாரசாமி ரெட்டியார்.
(1928)


எத்தகைய சமூக ஊழியம் நாயக்கர் அவர்கள் செய்திருக்கிறார் எனப் பேச
முயல்வது பைத்தியக்காரத்தனமாகும். தோழர் இராமசாமி நாயக்கர் அவர்கள், கபடமற்றவர். மனதில் நினைப்பதைப் பேசியும், பேசியவாறே செய்தும் காட்டுபவர். இத்தகைய பெருந்தலைவரைப் பாராட்டுகிறேன்.

*******************************************************************************************

உயரிய உதவி செய்து வருபவர்!


கொச்சி, "யுக்திவாதி" ஆசிரியர்,
எம்.சி.ஜோசஃப் அவர்கள்
(1933)


"உங்கள் இயக்கத்தின் முக்கிய வெற்றிகளைப்பற்றிய எதிரொலி மேல்காத் மலைத் தொடரைத் தாண்டிவந்து எங்களுக்கு வியப்பையும், சந்தோஷத்தையும் அளித்ததுண்டு. உங்களுடைய மாபெருந்தலைவான தோழர் ஈ.வெ.இராமசாமியின் சேவைகளுக்காக, நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். வேளாவேளைகளில் அவர் எங்கள்
நாட்டுக்கு வந்து பல கூட்டங்களில் பேசி, எங்களுக்கு உரிய உதவி
செய்து வருகிறார்."


*****************************************************************************************************

இயற்கையின் புதல்வர்!


வ.ரா.அவர்கள்



"தேர் இல்லை, திருவிழா இல்லை, தெய்வம் இல்லை என்றார் நாயக்கர்; சுவாமியைக் குப்புறப்போட்டு வேட்டி துவைக்கலாம் என்கிறார். இவரைப் காட்டிலும் பழுத்த நாஸ்திகன் வேறு எவருமே இருக்க முடியாது. 'பாதகன்' என்று சிலர் உறுமுகிறார்கள். வீட்டைக் கட்டி வைக்கோலைத் திணிப்பகைக் காட்டிலும், வீடு கட்டாமலே வைக்கோலைப் போராய்ப் போடலாம் என்ற சிக்கன யோசனை சொல்வது தவறா? அழுகி அழுகிப் போய் புழு நெளியும் உடலுடன் இருப்பதைக் காட்டிலும், உயிர் விடுவது உத்தமம் என்று அபிப்பிராயம் கொடுத்தால் "சாகச் சொல்கிறான் பாவி" என்று திட்டுவதா?



கண்டவர்க்கெல்லாம் குனிந்து சலாம் செய்து மண்ணோடு மண்ணாய்
ஒட்டிக் கொண்டு மார்பால் ஊர்ந்து செல்ல வேண்டாம் என்று சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டினால், "பாபி, நமஸ்காரத்தைக் கண்டிக்கிறான்" என்று அபத்தம் பேசுவதா? மனசாட்சிக்கும், தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை, நாஸ்திகன் என்று அழைக்கும் அன்பர்கள், நாஸ்திகம் யாது என்றே தெரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லுவேன்…


அநீதியை எதிர்க்கத் திறமையும், தைரியமும் அற்ற ஏழைகளாய்ச் சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை, அடி தெரியும்படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம், நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும். அப்பா! நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணிஅணியாய் அலங்காரஞ் செய்யும் உவமானங்களை, அவரது கொச்சை வார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணனையை ,உடல் துடிதுடிப்பைப் பார்க்கவும், கேட்கவும், வெகு தூரத்திலிருந்து ஜனங்கள் வண்டுகள் மொய்ப்பது போல் வந்து மொய்ப்பார்கள். அவர் இயற்கையின் புதல்வர்! மண்ணை மணந்த மணாளர்! மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம் என்பதில் சந்தேகமில்லை….


தயங்காமல் செய்ய வேண்டும் என்று தோன்றியதைத் தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவதைப் போல, தமிழ்நாட்டில் எவரிடமும் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டின் வருங்காலப் பெருமைக்கு, நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை; தூதுவன். வருங்கால வாழ்வின் அமைப்பு அவர் கண்ணில் அரைகுறையாகப் பட்டிருக்கலாம். (எவர் கண்ணிலேனும் அது முழுமையாகப் பட்டிருக்கிறதாக யார் உறுதியாகச் சொல்ல முடியும்?) ஆனால், மலைகளையும், மரங்களையும், வேரோடு பிடுங்கி யுத்தம் செய்த மாருதியைப் போல, அவர் தமிழ்நாட்டின் தேக்கமுற்ற வாழ்வோடு போர் புரியும் வகையைக் கண்டு, நாம் வியப்படையாமல் இருக்க முடியாது.


***********************************************************************************************************

முற்றுமுணர்ந்த பேராசிரியர்!


"கல்கி"


சாதாரணமாக இராமசாமியாருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு ராமசாமியார் வடநாட்டுப் பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால், இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை, அரை மணி நேரத்துக்கு மேல் என்னால் உட்கார்ந்து கேட்க முடியாது. 'பஞ்சாப் படுகொலையைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேசவேண்டுமென்றால், பண்டிதர், சுராஜ்உத்டௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885-ஆம் வருஷத்தில் காங்கிரஸ் மகாசபை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருமுன், பொழுது விடிந்துவிடும். ஆனால், இராமசாமியார் இவ்வாறு பழங்கதை தொடங்குவதில்லை. எவ்வளவு தான் நீட்டினாலும் அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவதே கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில், இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன். அதிக நீளம் என்னும் ஒருகுறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கக்குத் தமிழ்நாட்டுப் பிரசங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் தயங்காமல் அளித்து விடுவேன். அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நானறியேன்!



நாம் உபயோகிக்கும் சொற்கள் எல்லாம் செந்தமிழ்ப் பதங்கள்தாமாவென்று, நாயக்கர் சிந்திப்பதில்லை. எழுவாய், பயனிலைகள், ஒருமை - பண்மைகள், வேற்றுமையுருபுகள் முதலியவைகளைப் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை. ஆனால், தாம் சொல்ல விரும்பும்
விஷயங்களை மக்களின் மனத்தைக் கவரும் முறையில் சொல்லும் வித்தையை அவர் நன்கறிவார். அவர் கூறும் உதாரணங்களின் சிறப்பையோ சொல்ல வேண்டுவதில்லை.



இராமசாமியாரின் பிரசங்கம் பாமர ஜனங்களுக்கே உரியது என்று ஒரு சிலர் கூறக்கேட்டிருக்கிறேன். பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல், தமிழ்நாட்டில் வேறெவரையும்விட அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதிலிருந்து அவருடைய பிரசங்கம் படித்தவர்களுக்கு ரசிக்காது என்று முடிவு செய்தல் பெருந்தவறாகும். என்னைப் போன்ற அரைகுறைப் படிப்புக்காரர்களேயன்றி, முழுதும் படித்துத் தேர்ந்த பி.ஏ., எம்.ஏ., பட்டதாரிகளுங்கூட அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அவருடைய விவாதத்திறமை அபாரமானது. "இவர் மட்டும் வக்கீலாகி வந்திருந்தால், நாமெல்லாம் ஓடு எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்" என்று ஒரு பிரபல வக்கீல், மற்றொரு வக்கீல் நண்பரிடம் கூறியதை நான் ஒரு சமயம் கேட்டேன்.


உபயோகமற்ற வாதங்களும், அவர் வாயில் உயிர் பெற்று விளங்கும். ஓர் உதாரணம் கூறி முடிக்கிறேன். அந்தக் காலத்தில் ஸ்ரீமான் நாயக்கர் மாறுதல் வேண்டாதவராக விளங்கியபோது சட்டசபைப் பிரவேசத்துக்கு விரோதமாகப் பல பிரசங்கங்கள் புரிந்தார். அப்போது அவர் கூறிய வாதங்களில் ஒன்று சட்டசபைப் பிரவேசத்தினால் வீண்பணச் செலவு நேரும் என்பது.



"ஒரு ஜில்லாவில் சுமார் 30,000- வாக்காளர்கள் இருப்பார்கள். அபேட்சகராக நிற்பவர், இந்த 30,000- 'கார்டாவது' போடவேண்டும். சர்க்கார் தபால் இலகாவுக்கு லாபம் இத்துடன் போகாது. இந்த அபேட்சகர் செத்துப் போய் விட்டதாக, எதிரி அபேட்சகர் ஒரு வதந்தியைக் கிளப்பிவிடுவார். நான் செத்துப்போகவில்லை. உயிருடன் தான் இருக்கிறேன் என்று மறுபடியும் 30,000- கார்டு போடவேண்டும்."

நாயக்கரின் இந்த வாதத்தில் அர்த்தமேயில்லை என்று சொல்ல வேண்டுவதில்லை. அதுவும், எழுத்தில் பார்க்கும்போது வெறும் குதர்க்கமாகவே காணப்படுகிறது. ஆனால், அப்போது - ஸ்ரீமான் நாயக்கர் கூறிவந்தபோது, நானும் இன்னும் 4,000- ஜனங்களும் ஒவ்வொரு வாக்கியத்துக்கு ஒருமுறை 'கொல்' என்று சிரித்து மகிழ்ந்தோம்.


(1931-ல் 'ஆனந்தவிகடன்' இதழில் எழுதப்பட்டது)

*************************************************************************************************************



புதிய சகாப்தத்திற்கு முதன்மையானவர்!

நாரண - துரைக்கண்ணன் அவர்கள்.
(1939)


சோம்பேறித் திண்ணை வேதாந்தமும், வாய் வேதாந்தமும் பேசி, வீண் பொழுதாக்கி, அர்த்தமற்ற சாதி, சமயப் பேதங்களாகிய சகதியில் அழுந்தி, ஊக்கமும், முயற்சியும், தன்மதிப்பும், இன்றி, உறங்கிக் கிடந்த தமிழர்களைத் தட்டியெழுப்பிய தமிழ்நாட்டுத் தலைவர்களுள் ஈரோடு பெரியார் ஈ.வெ.ரா.இராமசாமி தலைச்சிறந்தவராவார் எனில் மிகையாகாது.



தமிழ்நாட்டில் முதன் முதலாக வந்தேமாதரக் கிளர்ச்சியை நடத்தித் தேசபக்தியுண்டாகச் செய்த தமிழ்மகனார் வ.உ.சிதம்பரம்பிள்ளை, அவர்களுக்குப் பின்னர் தமிழ்நாடெங்கணும் காங்கிரஸ் செய்தியைப்
பரப்பி, மக்களிடையே சுதந்திர தாகமுண்டாகச் செய்தவர்களில் திரு.வி.கலியாணசுந்தர முதலியார், டாக்டர். வரதராஜீலு நாயுடு, ஈ.வெ.ராமசாமிப் பெரியார் ஆகிய மூவரை முதலில் குறிப்பிட வேண்டும்.
இரவு - பகலெனப் பாராது, வெய்யில் - மழையெனக் கருதாது இடைவிடாமல் சுற்றுப்பிராயணஞ் செய்து அம் மூம்மூர்த்திகள் செய்த வீரவுணர்ச்சி மிக்க பிரசகங்கள் தாம், பின்னர் நடந்த தேசீயப் போராட்டங்களில் எல்லாம் தமிழ் மக்களைப் பங்கெடுத்துக் கொள்ளும்படி தயார் செய்தன என்பதையும், இன்று காங்கிரஸ்காரர்கள் அரசாங்கப் பொறுப்பேற்று ஆட்சி செலுத்துவதற்கு மக்களின் பேராதரவை வாங்கித் தந்தன என்பதையும் யாரும் மறுக்க முடியாது.



குறிப்பாக, இராமசாமிப் பெரியார், காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமைப் போராட்டக் காலத்தில் செய்த தேச சேவையை யாரும் மறந்து விட முடியாது. நன்றியுள்ளம் படைத்த தமிழ்மகன், அவருடைய சேவையை என்றும் மறக்கமாட்டான். அதன் பின்னரும் பெரியார் தமிழ்நாட்டு மக்களுக்குப் புரிந்து வரும் தொண்டு அளவிடற்கரியது. அவர் காங்கிரசிலிருந்து கருத்து வேற்றுமை காரணமாக விலகிய பின், பொதுஜனசேவை செய்யும் விஷயத்தில் கொண்டுள்ள கொள்கைகள், கையாண்டு வரும் வேலை முறைகள், பேசும் பிரசங்கங்கள் சிலருக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால், அவருடைய இலட்சியத்தைக் கவனிக்க வேண்டும். அவருடைய குறிக்கோள், மிகச் சிறந்தது; உயர்ந்தது. இலட்சியம் ஒன்றாயிருந்தால், அதை நிறைவேற்றி வைப்பதற்குரிய வேலைத்திட்டங்கள் பலவாயிருப்பதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இலட்சியம் உயர்ந்ததாயிருப்பின், வேலைமுறை எவ்விதமாயினும் இருக்கலாம்.


சிலர் சொல்லுகிறார்கள், "அவர் இலட்சியம் எப்படியாயினும் இருக்கட்டும், அவருடைய பேச்சும், செயலும், ஆக்க வேலையைச் செய்வதாயில்லையே! அழிவு வேலையன்றோ செய்து வருகின்றன! இந்நிலையில் அவருடைய இலட்சியத்தை எப்படிப் பாராட்ட முடியும்?" என்று! அவர்களுக்கு நான் ஒன்று கூறுவேன்; அழிவு வேலைதான் ஆக்கத்தை உண்டு பண்ணும். சும்மாரத்திலிருந்துதான் சிருஷ்டி வேலை ஆரம்பமாகிறதென்ற தத்தவத்தை உணரவேண்டும். பெரியார் அழிவு வேலையை மேற்கொண்டிருக்கிறார் என்பது உண்மை. அதை எதற்காகக் கொண்டிருக்கிறார்? நம் சமூக, சமயங்களிலுள்ள ஊழல்களையும், சீர்கேடுகளையும் போக்கி, ஒரு நல்ல நிலையை ஏற்படுத்திப் புதிய சகாப்தத்தை உண்டு பண்ணவேயாகும். அவருடைய குறிக்கோளின்படி, நம் நாட்டில் நவயுகம் ஏற்படப்போவது நிச்சயம். நாம் மாறுதல்
அடைந்துவரும் ஒரு சகாப்தத்தில் வாழ்ந்து வருகிறோம். இன்றுள்ள நிலைமை கூடிய சீக்கிரம் நாட்டில் சமூதாயப்புரட்சி ஏற்படக்கூடும் என்று உணர்த்தக் கூடியதாயிருக்கிறது. சமூதாயப் புரட்சிக்குப் பின், தமிழ் மக்கள் வாழ்வில் புதிய சகாப்தம் உண்டாகப்போகிறது. அப்புதிய சகாப்தத்தை ஏற்படுத்தப் போகிறவர்களில் இராமசாமிப் பெரியார் முதன்மையானவராய் இருப்பார் என்பது என் நம்பிக்கை.

*******************************************************************************************


அவர் தொண்டின் பயன்!

மலையாளம் தோழர்,
கே.அய்யப்பன் அவர்கள்.
(1933)


தோழர் இராமசாமி அவர்கள் அடிக்கடி எங்கள் பிரதேசத்திற்கு வந்து, சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிப் பிரசாரம் செய்திருக்கிறார். அதன் பயனாக அங்குள்ள புரோகிதர்களுக்கும், அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கும், மதப் பற்றுடையவர்களுக்குந்தான் காரமாகப் பட்டிருக்கிறது என்று கூறலாம். சுயமரியாதை இயக்கமானது, உயர்ந்த கருத்துக்களைக் கொண்டது... லெனின் செய்துவந்த வேலைகளை அடிப்படையாகக் கொண்டு, நமது நாட்டில் காரியங்களைச் செய்வதற்குச் சுயமரியாதை இயக்கமே சிறந்ததாகும்.

*******************************************************************************************


தமிழ்நாட்டுத் தலைமைக்குத் தகுதியுடையவர்!


நாகர்கோயில்,
P.சிதம்பரம் பிள்ளை, B.A., B.L., M.L.A.,
(1937)


சுயமரியாதை இயக்கம் ஒரு தனித்தமிழ் இயக்கம். நான் ஆதி முதற்கொண்டே இந்த இயக்கத்தில் கலந்திருப்பவன். மலையாளத்திலுள்ள ஒரு தமிழன் நான். என் அனுபவத்தையொட்டிக் கூறுவது என்னவென்றால், தமிழ்மொழிக்காக இந்த இயக்கத் தலைவர் தோழர் ஈ.வெ.ரா. அவர்களைப் போலப் பாடுபட்டவர்கள் வேறு ஒருவரும் இல்லை என்பது ஒன்று. இதைத் தமிழ்நாட்டுப் பண்டிதர்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். தோழர் ஈ.வெ.ரா. அவர்களைப் போன்று தமிழ்நாடு முழுவதிலும் செல்வாக்குப் பெற்றிருப்பவர்கள் வேறு ஒருவருமில்லையென்பது மற்றொன்று. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழ் ஜில்லாக்களில் அவர்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருப்பதில்லை. ஆகையினால், தமிழ்நாடு முழுவதிலும் தலைமை வகிக்க உரியவர் தோழர் ஈ.வெ.ரா. அவர்களே.



மேலும், வைக்கம் சத்தியாக்கிகத்தை வெற்றி பெற நடத்தியதைக் கண்டிருப்பவர்கள், இந்த நெருக்கடியான காலத்தில் தமிழ்ப்பற்றுடையவர்கள் தமிழ்நாட்டுத் தலைவராகத் தோழர் ஈ.வெ.ரா. அவர்களைத் தவிர வேறு ஒருவரையும் நினைக்க முடியாது. இப்போது ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியையும் பிரச்சனைகளையும் சரிவர நடத்த வேண்டுமானால், அதில் அனுபவமும், அறிவும் பெற்றிருக்கும் தோழர் ஈ.வெ.ரா. அவர்களைத் தவிர வேறு ஒருவரையும் காணோம். அன்றியும் இப்பொழுது இவ்வளவு சங்கடத்தில் தமிழர்களைக் கொண்டு வந்தவிட்ட தமிழ்ப்பற்றுடைய பார்பனர் தோழர் இராஜகோபாலாச்சாரியாரின் சூழ்ச்சி மனப்பான்மை குறிக்கோள் இவற்றை அறியவும் முறியடிக்கவும் வல்லமையுடையவர் தோழர் ஈ.வெ.ரா. அவர்களேயாகும்.



பார்ப்பனரல்லாதார் இயக்கம் இன்று எஞ்சி நிற்பது தமிழ்நாட்டில் மட்டிலுந்தான். அதுவும் சுயமரியாதை இயக்கத்தில் தான் அதுவும் மிகச் சிறப்பாகத் தோழர் ஈ.வெ.ரா. கையில் தான் அடங்கியிருக்கிறது.



சுயமரியாதை இயக்கமானது, "தன் அனுபவத்தினாலும், பகுத்தறிவினாலும், தமிழ் மக்களை ஒன்று சேர்க்க வேண்டும்; தமிழ் மொழியை வளர்க்க வேண்டும், தமிழ் மக்கள் சுயமரியாதையுடைய வீரர்களாக ஆக வேண்டும்" என்ற ஒரே எண்ணத்துடன் தாமாகவே தனித்து இவ்வியக்கத்தை ஸ்தாபித்த பெருமை தோழர் ஈ.வெ.ரா. அவர்களுக்கு மாத்திரம் உரியது.



ஆகையால், தமிழ் மக்கள் அனைவரும் அற்ப சொற்ப அபிப்பிராய வித்தியாசங்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, ஒன்று சேர்ந்து, தோழர் ஈ.வெ.ரா. அவர்களோடு ஒத்துழைப்பார்களேயானால், மேற்கண்ட லட்சியங்களில் வெற்றியடைவார்கள் என்பதற்கு யாதொரு தடையுமில்லை.


***************************************************************************************************



பின் சரித்திரங்களில் எழுதப்படும் தீரப்புருஷன்!


கைவல்ய சுவாமியார்.


"மதத்தாலும், மதகுருக்களின் போதனைக்குட்பட்ட கருணையற்ற ராஜாக்களின் கொடுமையாலும், முன்தோன்றின சீர்திருத்தக்காரர்கள் அழிந்தாலும், அவர்கள் சொன்னவை அழியவில்லை! அவற்றைச் சிறிது காலத்திற்கு முன்னிருந்த அறிவாளிகளும் சொன்னார்கள்; இப்பொழுதிருக்கும் அறிவாளிகளும் ஒத்துக் கொள்கிறார்கள். அவற்றையே இராமசாமிப் பெரியாரும் பிரசாரம் செய்கிறார்.
இவ்விருபதாம் நூற்றாண்டில் தென்தேசத்தில் உண்டான அறிவின் பயழனயெல்லாம் அனுபவிக்கச் செய்த தீரப்புருஷன் இராமசாமிப் பெரியாரே! என்பது, பின் சரித்திரங்களில் எழுதப்படும்!"


*************************************************************************************************************


பெரியார் எனது தலைவர்!


W.P.A. சௌந்தரப்பாண்டியன் அவர்கள்
(1929)


சமதர்மக் கடனாற்ற ஆரம்பிக்கப்பட்ட பார்ப்பனரல்லாதார் இயக்கம் மெதுவாக முன்னேற்றமடைந்து வருங்கால், அவ்வியக்கத்திற்குத் திடீரென ஒரு நற்காலம் கிட்டியது. மக்களிடைச் செல்வாக்குப் பெற ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அச்சந்தர்ப்பம் எது? அதுதான் தமிழ்நாட்டின் வீர கர்ஜனை புரிந்துவரும் சுயமரியாதை இயக்க ஆரம்பமாகும். மக்களுக்கு நலன் பல விளைத்து வருபவரான நமது மாபெருந் தலைவர் உயர்திரு ஈ.வெ.இராமசாமி நாயக்கர் அவர்களால் சுயமரியாதை இயக்கம் மக்களிடைப் பரவ ஆரம்பித்த புண்ணிய தினத்தையே, யான் இங்குக் குறிக்கிறேன்.



எனது தலைவர் திரு. நாயக்கர் அவர்கள் அனுபவசாலி; ஆராய்ச்சியாளர். அவர் நாடெங்கும் சுற்றி மக்களின் குணங்கள் யாவற்றையும் தீர உணர்ந்துள்ளார். இவ்விதப் பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட நமது இயக்கத்தின் சிறப்பை அதிகம் விவரித்துத் தற்பெருமை கொள்ள நான் விரும்பவில்லை.


*****************************************************************************************************



அஞ்சாமையை திறமையுடன் ஆள்பவர்!

நகைச்சுவை அரசர்
N.S. கிருஷ்ணன் அவர்கள்
(1947)


பகுத்தறிவுக்குக் கொஞ்சமும் பொருந்தாத பல கண்மூடி வழக்கங்கள், எப்படியோ நம் சமூகத்தில் வந்து புகுந்து, பல அக்கிரமங்களையும் புரிந்து, நாட்டையும், நாட்டு மக்களையும் பாழ்படுத்தின; பாழ்படுத்தி வருகின்றன. விதவா மணம் கூடாதாம்; சாஸ்திரத்தில் இதற்கு இடமில்லையாம்! ஆண்களுக்கொரு நீதி; பெண்களுக்கொரு நீதி. இன்னும் இம்மாதிரி எத்தனையோ மூடப்பழக்க வழக்கங்கள் தொட்ட இடத்திலெல்லாம் ஒரு தீய வழக்கம் வந்து குந்திக்கொண்டு, சமூக முன்னேற்றத்தைப் பார்த்துக் கேலிச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்கிறது. சில வேளை இந்த பழமைப் பாம்பு படுத்துறங்குகிறது; பல வேளை படமெடுத்தாடுகிறது. விஷத்தைக் கக்குகிறது; பேதாபேதம் கற்பிக்கிறது; கூடி வாழும் மனித வர்க்கத்தைப் பிரித்து வைத்து, கொலைகளுக்கு ஏதுவாக நின்று அது கண்டு மகிழ்கிறது. மதத்தின் பேரால் படுகொலைகள்! இந்த நாகப் பாம்பைத் தலையிலடித்துக் கொல்ல வேண்டும்.
சீர்திருத்த வீரர்கள் வீறுகொண்டெழுந்து இந்நற்றொண்டைச் செய்து வருகிறார்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு இது முதல் தொண்டு;
முக்கியமானத் தொண்டுங்கூட. இதற்கு விதை போட்டு வீறுகொண்டுழைத்தவர் நமது பெரியார் ஈ.வெ.ரா. இராமசாமி அவர்களென்பதை மறுக்கவோ – மறைக்கவோ எவராலும் இயலாது. இதற்காகப் பெரியார் அடைந்த இன்னல்கள் இகழ்ச்சிகள்….அப்பப்பா, செப்புந்தரமன்று!



பகுத்தறிவு தந்தையின் நாவன்மையும், எழுத்து வன்மையும் அபாரம். அதுமட்டுமா? அஞ்சாமையை வெகு திறமையுடன் ஆளும் திறமை பெற்றவர்!
பெரியார், எவ்வளவோ மகத்தான காரியங்களைச் சாதித்திருக்கிறார்.
உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன். தீண்டாமைக்கு – ஏன் - கண்ணாலும் பாராமைக்குப் பேர்பெற்ற 'தர்ம ராஜ்யம்' மலையாளம். மக்களில் ஒரு வகுப்பாரைப் பார்த்தாலே தீட்டாம். திட்டிவிடம் போலும். மலையாளத்தில் தீண்டாமையை முதன் முதலில் நீக்குவதற்கு உழைத்தவர் பெரியார் தான். வைக்கம் சத்தியாகிரகத்தைத் திறம்பட நடத்தி வெற்றி கண்ட வீரர்! பின்னர் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இதுதான் விதை.



பெரியாரின் பகுத்தறிவுத் தீ, நாடெங்கும் பரவியது. இன்று இளைஞர்கள் உள்ளத்தில் அது வேரூன்றி விருட்சகமாக வளர்ந்து விட்டது. வாழ்க பெரியார்!
உலகப் பெரியார்!
***************************************************************************************************

தமிழ்ப்பண்டிதர்,
சாமி சிதம்பரனார் அவர்கள்
(1939)


பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பற்றி அறியாதவர்கள் ஒருவரும் இலர். ஒவ்வொரு துறையிலும் அவர் மிக முற்போக்கான கருத்துடையவர்….



மதம், சமூகம், அரசியல் ஆகிய மூன்றிலும் பெரியார் ஒரு புரட்சிக்காரராக விளங்குகிறார். பெரியார் ஒரு மிதவாதியாக இருந்து பின்னர் மதப் புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு சமூகவாதியாக இருந்து பின்னர் சமூகப் புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு முதலாளித்துவவாதியாக இருந்து, பின்னர்
சமதர்மவாதியாக மாறவில்லை. பிறப்பிலேயே மதப் புரட்சிக்காரராகப் பிறந்தார்! சமூகப் புரட்சிக்காரராகப் பிறந்தார்! சமதர்மவாதியாகப் பிறந்தார்.



தம் கொள்கையை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, இவரிடம் எப்பொழுதும் இருந்ததில்லை. தம் கொள்கைக்குப் பிறர் இணங்கி வர வேண்டும். பிறர் கொள்கைக்கு இவர் இணங்கவேமாட்டார். ஒரு சீர்திருத்தவாதிக்கு இருக்க வேண்டிய குணம் இதுவே. புத்தர், சாக்ரடீஸ், கன்பூஷியஸ், ஏசு கிறிஸ்து, முகம்மது நபி, போன்ற பெரியார்கள் தங்கள் கொள்கைகளில் வெற்றி பெற்றதற்குக் காரணம் இதுவே. அவர்கள் பகைவர்களால் பல துன்பங்களுக்கு ஆளாகியும் தங்கள் கொள்கைகளில் எள்ளளவும் விட்டுக் கொடுக்காத உறுதியுடையவர்களாயிருந்தனர். இன்றைய சீர்திருத்தவாதிகளில் இத்தகைய உறுதியுடையவர் பெரியார் ஒருவரே. ஆதலால், இவர் உலகப் பெரியாராவார்!



தோழர் ஈ.வெ.ரா. இன்று தமிழ்நாட்டில் இணையற்ற தலைவராக விளங்குகிறார்.வழிகாட்டியாகப் போற்றப்படுகிறார்; தளராத உழைப்புடைய தொண்டராகக் காணப்படுகிறார். இவருடைய பழம் பகைவர்களுங்கூட இவருக்குப் பொது மக்களிடம் இருக்கும் செல்வாக்கை மறுப்பதில்லை. பொதுமக்களைத் தன் சார்பாக்கும் வல்லமை படைத்தவர் என்பதைத் தடுத்துச் சொல்வதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் தூற்றியவர்களும் இன்று போற்றுகிறார்கள். தமிழ் மக்கள், இவர் சொற்கள் ஒவ்வொன்றையும் தங்கள் வாழ்க்கையை உயர்த்தும் செல்வங்கள் என்று கருதுகின்றார்கள்.



விவாதத்தில் இவரை யாரும் வெல்ல முடியாது. அடுக்கடுக்காகக் கேள்விகளைப் போடுவார். சொற்களின் பொருள்களை விளக்க
வேண்டுவார். எதிரிகள் கேள்விகள் கேட்டால், அவர்கள் சொற்களைக் கொண்டே மடக்கி விடுவார். எத்தகையவரும் இவரிடம் அகப்பட்டுக்
கொண்டு திக்குமுக்காடுவார்கள். இவ்வாறு வாதமிடும் தன்மை கிரீஸ் தேசத்து தத்துவ ஞானி சாக்ரடீசுக்கே இயற்கையில் அமைந்திருந்தது. நமது பெரியாருக்கும் இத்தன்மை இயற்கையில் அமைந்திருக்கிறது. ஆதலால், இந்தத் துறையில் இவரைத் "தமிழ்நாட்டுச் சாக்ரடீஸ்" என்று கூறலாம்.



நம்நாட்டு பழம் பெரும் வள்ளல் புத்தர், எந்தெந்தக் காரியங்களைச் செய்தாரோ, அவைகளையே பெரியாரும் செய்து வருகிறார். புத்தர் வேதங்களைக் கண்டித்தார்; பெரியாரும் வேதங்களைக் கண்டிக்கிறார்.
புத்தர் சாதி பேதங்களைக் கண்டித்தார்; இவரும் அப்படியே. புத்தர் புரோகிதத்தையும், யாகம் போன்ற சடங்குகளையும் ஒழிக்க முயன்றார்; இவரும் அப்படியே. புத்தரும் பார்ப்பனீயத்தை ஒழிக்கவே முயன்றார்;
இவரும் பார்ப்பனீயத்தை ஒழிப்பதிலேயே கருத்தைச் செலுத்தி வருகிறார். ஆதலால், இவரை "தமிழ்நாட்டுப் புத்தர்" என்றே கூறிவிடலாம்.



"பர்னாட்ஷா" தம் மனதிற்பட்ட எதையும் பயப்படாமல் சொல்வார்.
அறிவுக்குச் சரியென்று தோன்றியதை வெளிப்படையாகக் கூறுவார். எவருடைய போற்றுதலையும், தூற்றுதலையும், பொருட்படுத்தாமல்
பேசிவிடுவார். இப்படித்தான் பெரியாரும். தமக்குச் சரியென்றுத் தோன்றும் எவ்விதப் புதுக் கருத்தாயிருந்தாலும் பிறருக்கு எப்படியிருக்குமென்பதைச் சிறிதும் சிந்திக்காமல் மிகத் துணிவோடு கூறிவிடுவார். இவ்வகையில் இவரைத் தமிழ்நாட்டுப் பர்னாட்ஷா என்று கூறலாம்.


*************************************************


சாதாரணமாகப் பொது வாழ்வில் இருப்பவர்கட்கு, அடிக்கடி வெறுப்புத் தோன்றுவதுண்டு. மிகப் பெரிய பணக்காரர்களுக்குத் தோன்றும். உடனே தங்கள் தொழிலைக் கவனிக்கச் சென்று விடுவார்கள். பொது வாழ்விலேயே தலையிடுவதில்லை என்று சத்தியஞ் செய்து விடுவார்கள். பெரிய படிப்பாளிகள், பட்டதாரிகள் கூட இப்படித்தான்; திடீரென்று ஒருவிதமான "விரக்தி" ஏற்பட்டுவிடும்; பொது வாழ்வையே தலை முழுகிவிட்டதாக உறுதி செய்து கொள்ளுவார்கள்.



ஆனால், பெரியாரோ இதில் - இவர் இந்தியாவிலேயே பெரியார் தான். மனித இயற்கைக்கு மாறுபட்டவர். தோல்வி என்பது அவருடைய வீரத்தையும், அறிவையும் போட்டுக் காய்ச்சும் நெருப்பு. இத்தீயில் வைத்துக் காய்ச்சக் காய்ச்ச, அவருடைய இவ்விரண்டு பண்புகளும் உருசியில் அதிகப்பட்டுக் கொண்டே இருக்கும். இதைப் போலவே வெற்றி கிடைத்தாலும், அதற்கு மேல் செய்ய வேண்டியதைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட அதிகப் பொறுப்பைப் பற்றியும் தான் கவலைப்படுவார். சில இழி மக்களைப் போல் -
வெற்றி மயக்கத்தால் கூத்தாடுஞ் சிறுமைக் குணம் அவரிடமில்லை. சுருங்கக் கூறினால், பெரியார் ஒரு பிறவிப் போர்வீரர். (A Bon Soldier)


உலகத்திலேயே ஒரே ஒரு சாக்ரடீஸ்; ஒரே ஒரு புத்தர்; ஒரே ஒரு மார்ட்டின் லூதர்; ஒரே ஒரு அமானுல்லா; ஒரே ஒரு கெமால் பாட்சா; ஒரே ஒரு பர்னார்ட்ஷா, ஒரே ஒரு இராமசாமிப் பெரியார் தான் தோன்றுவார்கள்; தோன்ற முடியும்.


*****************************************************************************************************

பிறப்புரிமை உணர்த்தியவர்!


திருமதி. இந்திராணி பாலசுப்ரமணியம் அவர்கள்.



ஒரு காலத்தில் உன்னதமாய் வாழ்ந்து வந்த திராவிடர்கள் - தென்னாட்டிலுமல்லாமல், வடநாட்டிலும் சென்று பல அரசர்களைவென்று நாடாண்ட திராவிடர்கள், கிரேக்க, ரோம், ஈஜிப்ட், அபிசீனியா நாகரிகத்தை விட, மேலான நாகரிகம் படைத்த திராவிடர்கள் - "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று வாழ்ந்து வந்த திராவிடர்கள், இன்று சீர்குலைந்து, கட்டுடைந்து, தம் நாட்டிலேயே, தாசர்களாய், அடிமைகளாய் அரசியலிலும்,
பொருளாதாரத்திலும், சமூகத்திலும் இருப்பதென்றால், இதை விட மானக்கேடான வாழ்க்கை வேறென்ன வேண்டியிருக்கிறது?



"அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி, அரும் பசி எவர்க்கும் ஆற்றி மனத்துள்ளே பேதாபேத"மின்றி வாழ்ந்து வந்த திராவிடரிடையே ஆரியம் புகுந்தபின், இந்துமதம் என்னும் நஞ்சால் மேல் பிறப்பு, கீழ்ப்பிறப்பு என்னும் பல்வேறு சாதிகளும், சமயங்களும் உண்டாக்கி நாடும், நாட்டிலுள்ள மக்களும், அவ்வாரியத்திற்கடிமையாக்கப்பட்டனர். இதைக் கேட்க – காண – மனந் துணியாத திராவிடரும் உண்டா?


மறப்பாலும், பிறப்பாலும், மதிப்பிழந்த திராவிடருக்குப் பிறப்புரிமை "திராவிடஸ்தான்" என்றுணர்த்திய நமது முடிசூடா மன்னராகிய பெரியார் இராமசாமியவர்கட்கு, நாம் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

******************************************************************************************************


தமிழ்நாட்டுச் சாக்ரடீஸ்!


கே.வி.அழகிரிசாமி அவர்கள்


'மேனாட்டில் அன்று பிறந்து வளர்ந்த சாக்ரடீஸ் என்ற ஓர் அறிஞரைப்பற்றிக் கேட்டோம்.' ஆனால், கண்டோமில்லை. இவ்விந்தியாவிலேயே அங்ஙனம் கண்டதாகக் கூறுவாருமில்லை.


எனினும், இத்தமிழ்நாட்டில் இன்று அரும்பெரும் செயலாற்றும் ஒரு சாக்ரடீசைக் கண்டோம். அவர்தான், நம் ஈ.வெ. இராமசாமிப் பெரியார்.


அவரால் காணப்பட்ட நம் இயக்கமும், அவ்வியக்கத்தின் அழுத்தமான கொள்கைகளுந்தான் நான் மாற்றமடையாததற்கும், தன் மதிப்போடு விளங்குவதற்கும் முதற்காரணம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

***************************************************************************************************


அரிய பெரிய தொண்டு புரிந்தனர்!


வழக்கறிஞர், தி.பொ.வேதாச்சலம் அவர்கள்.



உலகத்திலேயே பலப்பல காலங்களில், பெரியார்கள் சிலர் தோன்றிப்
பல கருத்துக்களைச் சொன்னார்கள். அக்கருத்துக்கள் வளர்ந்து நாளடைவில் பெரிய மாறுதலை உண்டாக்கின. ஃபிரெஞ்சு நாட்டில் ரூசோ, "பிறந்தபோது மனிதன் சுதந்திரனாய் இருந்தவன், எங்கும் - பின் விலங்குடன் காணப்படுகிறான்" என்றார். இந்த வாக்குப் பெரிய எண்ணங்களை எழுப்பி, அந்நாட்டு நிலையை முற்றிலும் மாற்றியது. அமெரிக்க நாட்டுத் தலைவரான லிங்கன் "மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு நடத்தும் அரசாங்கம்" என்று சொன்னார். ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவமாக உலகமெங்கும் விளங்குவது அதுதான். 18-ஆம் நூற்றாண்டில் பென்தாம் (Bentham) என்ற ஆங்கிலேயர், "பெரும்பாலான மகிழ்ச்சியே வேண்டற்பால" தெனச் சொன்னார்.
அந்த வாசகங்கள் மக்கட்குப் பல நன்மைகளைத் தந்தன. இந்த வாசகங்கள் சில; உண்டு பண்ணும் பலன்கள் மிகப் பல. அவை அதிகம் சொல்லாவிட்டாலும், எவ்வழி வாழ்க்கை நடக்க வேண்டுமெனக் கைகாட்டி போல் நிற்கின்றன.



சுமார் 20-ஆண்டுகளுக்கு முன், நம் அருமைத் தலைவரான பெரியார் "சுயமரியாதையே சுகவாழ்வு" என்று கூறினார். மனிதனை மனிதன்
தொடக் கூடாதென்றும், தெருக்களிலும், குளங்களிலும், கோவில்களிலும், மடங்களிலும், வீடுகளிலும், மக்களைத் தொடக்கூடாதென்ற நிபந்தனைகளும் பல மக்கள் சாதியின் காரணத்தால் படிப்பின்றிக் கடின வேலை செய்து கூலி பெறுவதும், சில உயர்சாதி மக்கள் பட்டாடைகளும் தங்க – வைர நகைகளும் அணிந்து உல்லாச வாழ்க்கை நடத்துவதும், பெருங்கூட்டமான மக்கள் நாயினும் கஷ்டப்பட்டு நடத்தப்படுவதும் கோவில், கடவுள், மடம் இவைகள் பேரால் பெரும் செல்வங்கள் வீணாக மக்களுக்குப் பயன்படாத வகையில் செலவழிக்கப்படுவதும் இவ்வாறான பல்வேறு நியாயமற்ற செய்கைகளைக் கண்டு மனங் கொதித்து மக்களை நல்வழியில் திருப்ப எண்ணி நம் பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார்.



சுமார் 20-ஆண்டுகள் பத்திரிக்கை நடத்தியும், புத்தகங்கள் வெளியிட்டும், கிளர்ச்சிகள் பல செய்தும், பல சமயங்களில் சிறை சென்றும், தினந்தோறும் விடாமல் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும், திருமணங்கள் பல நடத்தியும், இயக்கத்தை வளர்த்துத் தமிழ் மக்களிடையே பகுத்தறிவு புகட்டி இளைஞர்கள் உள்ளத்தைச் செப்பனிட்டு மூடவழக்கங்களை ஒழித்து சாதிக் கொடுமைகளைப் பல வகையிலும் குறைத்து சுயமரியாதைச் சுடரொளி நன்றாகத் தீப்பிடித்து எரியும் வண்ணம் செய்துள்ளார்...... தமிழ் மக்கட்குக் குறிப்பாக அரிய தொண்டு புரிந்திருப்பவர், நம் அருமைத் தலைவர் பெரியாரேயாவர்!

*****************************************************************************************************

கல்கத்தாவிற்குக் கிடைத்த பேறு!


கல்கத்தா, பிரபல ஆங்கில இதழ், "Vanguard" (1944) எழுதியது.



இந்த மாநாட்டுக்கு வந்து, இதைச் சிறப்பிக்கப் போகும் மிக முக்கியமான பிரபலஸ்தர்களில் ஒருவர் தென்னாட்டுப் பழம்பெரும் கிழவனார் (The Grand Old Man Of the South) பெரியார் ஈ.வெ.ரா. இராமசாமி அவர்கள் ஆவார்கள். கீழ்சாதி மக்கள் தங்களை அடக்கி அழுத்தி வரும் பார்ப்பனீய ஆட்சியை ஒழித்துக் கட்டுவதற்காகச் செய்யும் முயற்சியும், பார்ப்பனரல்லாத சமூதாயம், புரோகிதக் கொடுமையை வேரோடு களைந்தெறிவதற்காக நிகழ்த்திவரும் புரட்சியுமே சுயமரியாதை இயக்கமாக உருக்கொண்டிருக்கிறது. இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் "சிருஷ்டிகர்த்தா"வும், அதன் தலைவரும் பெரியார் இராமசாமி தான். அவர் அதிதீவிரமான புரோகித ஒழிப்புக் கொள்கைகளையும், மத மறுப்புத் திட்டங்களையும், தென்னாட்டில் பிரசாரஞ் செய்து வருகிறார். தீப்பொறி பறக்கப் போசும் ஒரு வெண்தாடி வேந்தரைக் காணும் பேறு, கல்கத்தாவிற்குக் கிடைக்கிறது."


****************************************************************************************************

தனிப்பெரும் தர்க்கவாதி!


"சிங்கப்பூர், 'தமிழ்முரசு'
(30-09-1940-ல் தீட்டிய தலையங்கக் குறிப்புகள்.)

"பன்னிரண்டு வயது பாலகன், கடைத்தெரு இராமநாத அய்யருடன் புரிந்த விதண்டாவாதங்கள் எல்லாம் திரண்டு, இன்று ஓர் பிரமாண்டமான இயக்கமாகி விட்டது! இந்திய சமூகங்களெல்லாம் மிரளும்படியாக அவ்வியக்கம், சமூகத்தையே தலைகீழாகப் புரட்டி வருகிறது."


அன்று பேசிப்பேசி 'வம்பன்' என்ற பட்டத்தைத் தேடிக் கொடுத்த அந்த நாவே, இன்று ஈடும், எடுப்புமில்லாப் பேச்சாளர் என்றும், தர்க்கத்தில் தலை சாய்க்காத ஒரு தனிப்பெருந் தர்க்கவாதியென்றும் புகழைத் தேடிக் கொடுத்துவிட்டது.


இந்தியத் தலைவர்கள் எவருங் காணா வெற்றியைக் கண்ட வீரன்,
அந்த ஈ.வெ.ரா.வே எனில் மிகையாகாது. இந்திய நாட்டில் சத்தியாக்கிரகத்தை நடத்திய எத்தலைவரும் காணா வெற்றியை வைக்கத்திலும், இந்தி எதிர்ப்பிலுங் கண்ட வீரனே- ஈ.வெ.ரா. என்ற உத்தமன்.


செல்வம் முதலிய மாயைகளை மறந்து, வறியோர் போல் எளிய உடை தரித்து, எளிய உணவு உண்டு, இரவு - பகல் ஓயாது தேசத் தொண்டிற்கே தமது வாழ்க்கையை அர்ப்பணஞ் செய்த பெரியாரின் பிறந்த நாள் மலாய் நாடெங்கணும் கொண்டாடப்படுகிறது. "பெரியார் வாரம்" நாடெங்கும் கொண்டாடப்பட்டிருக்கும் சிறப்பைக் கவனித்தால் பெரியாரின் கொள்கைகள் இந்நாட்டுத் தமிழ் மக்களிடையே எவ்வளவு ஆழம் வேரூன்றிவிட்டதென்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.


தன் மதிப்பியக்க ஆரம்பத்தில் அவரை நிந்தித்த வாய்களெல்லாம், இன்று புகழ் மாலைகள் சூட்டுகின்றன. பெரியாரை அடிக்க நினைத்து ஓங்கிய கரங்களெல்லாம், இன்று கைக் கூப்பி நிற்கின்றன.


தன் மதிப்பியக்கத் தந்தை இன்று தமிழரியக்கத் தளபதியாய் நிற்பதைக் கண்டு, இந்நாட்டுத் தமிழகத் தோன்றல்கள் பெருமை பூண்டு உளம் பூரிக்கிறார்கள்."


******************************************************************************************************

இந்தியை எதிர்ப்பவர் யார்?


வங்காளத்திலிருந்து வெளிவரும்
"மாடர்ன் ரெவ்யூ"



"..... தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு இயக்கமொன்று நடைப்பெற்று வருகிறது. அதன் தலைவர் தோழர் இராமசாமி ஆவார். இவர் தற்போதைய இந்திய கவர்னர் ஜெனரலின் ஒத்துழையாமை இயக்கக் காலத்திய தோழரும், சகாவும் ஆவார்.


மேற்படி இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு ஆரியத்தை எதிர்த்து நிற்கும் திராவிடஸ்தான் இயக்கத்தின் முழு ஆதரவும் இருந்து வருகிறது."

*****************************************************************************************************

------------------------------------நூல்:- சாமி சிதம்பரனார் எழுதிய “தமிழர் தலைவர்” நூலிலிருந்து 9 ஆம் பதிப்பு  பக்கம் 218-252

26 comments:

தமிழ் ஓவியா said...

ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி தளங்களில் அயராது பாடுபடும்



விடுதலையை வாங்கிப் படியுங்கள் - தாங்கிப் பிடியுங்கள்

81ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் விடுதலை நாளேட்டை - தமிழர்களே, வாங்கிப் படியுங்கள் - தாங்கிப் பிடியுங்கள் என்று 53 ஆண்டுகள் விடுதலையின் ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களது அருட்கொடையால் மலர்ந்த உலகின் ஒரே முழு பகுத்தறிவு நாளேடு விடுதலை நாளேடு!
இந்நாளேட்டின் 81ஆம்ஆண்டு துவக்க நாள் இன்று.
ஒரு கொள்கை நாளேடு, தொடர்ந்து எதிர் நீச்சலில் களைப்போ, சோர்வோ சிறிதும் இன்றி, நீந்தி நீந்தி வெற்றிக் கரைகளைத் தொடும் போராயுதம் என்பதே இதன் தனித் தன்மை; தனி வரலாறு!
இன்னார் இனியர் என்று பாராது, துலாக்கோல் சரியான நிலையில் நின்று எடை காட்டுவதுபோல், நம் மக்களுக்கு விரோதமான அவமரியாதைகளை அழித்து, சுயமரியாதையை நாளும் போதிக்கும் சுவைமிக்க பாட புத்தகம்!

வருவாய் விடுதலையின் குறிக்கோள் அல்ல!

வருவாய் இதன் குறிக்கோள் அல்ல; லட்சங்கள் இதன் இலக்கு அல்ல. இலட்சியங்களே மாறாத இதன் இலக்கு! இலக்கை நோக்கி நாணேற்றிக் குறி பார்ப்பதில் வேறு எத்திசையிலும் இது தன் பார்வையைச் சிதற விடுவதில்லை. 101 காலணா நன்கொடைகள் மக்களும், தொண்டர்களும், தோழர்களும் தந்தாலும் அதனைப் பத்திரப்படுத்தி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற அறக்கட்டளையை பெரியார் தம் திரண்ட செல்வத்தையும் இதில் இணைத்து உருவாக்கியதால், ஆண்டுதோறும் ஏற்படும் பல லட்ச ரூபாய் நட்டம் என்ற தாங்கொணாச் சுமையையும் தாங்கி, இழப்பிலேகூட கொள்கை இன்பம் எங்களுக்கு உண்டு என்பதாலோ, தூக்கிச் சுமப்பதில் சுகம் காணும் சுயமரியாதை வீரர்களாக நாம் அனைவரும் உள்ளோம்!



தமிழ் ஓவியா said...

விளக்கம் கேட்கப்படவில்லை மாணவர் அமைப்பு தகவல்

சென்னை, ஜூன் 1- சென்னை அய்அய்டி நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு எந்தவித அறிவிப்பு எங்களுக்கு இதுவரை அனுப்பப்பட வில்லை என அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் தெரிவித்தனர். அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பின் அங்கீகாரத்தை சென்னை அய்அய்டி நிர்வாகம் கடந்த மே 15-ஆம் தேதி ரத்து செய்தது. இந்த நிலையில், மாணவர் அமைப்பு மீதான நடவடிக்கைக்கு விளக்கம் அளித்த சென்னை அய்அய்டி நிர்வாகம், விதிகளை மீறி, அய்அய்டி-யின் பெயரைப் பயன்படுத்தி, தங்களது சொந்த கருத்துகளை வெளியிட்டதாலேயே அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இது தாற்காலிகமானதுதான்.

விதிகளை மீறியதற்கு விளக்கம் கேட்டு அந்த அமைப்பினருக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், இறுதி நடவடிக்கை எடுக்கப்படும் என அய்அய்டி நிர்வாகம் தெரிவித்தது. இதை மறுத்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள், அய்அய்டி நிர்வாகத்திடம் இருந்து விளக்கம் கேட்டு எந்தவித அறிவிக்கை இதுவரை எங்களுக்கு வரவில்லை. தடை நீக்கப்படும் வரை தொடர்ந்து போராடுவோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திங்கள்கிழமை (ஜூன் 1) அறிவிப்பை வெளியிடுவோம் என்றனர்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102500.html#ixzz3bpZi4lBD

தமிழ் ஓவியா said...

மாணவர் அமைப்புக்குத் தடை விவகாரம்: சென்னை அய்.அய்.டி.க்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அறிவிக்கை

புதுடில்லி, ஜூன் 1_ "அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டம்' அமைப் புக்கு தடை விதிக்கப்பட் டுள்ள விவகாரத்தில், சென்னை அய்.அய்.டி. யிடம் விளக்கம் கேட்டு தாழ்த்தப்பட்டோர் களுக்கான தேசிய ஆணை யம் (என்.சி.எஸ்.சி.) அறி விக்கை அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தில்லியில் அந்த ஆணை யத்தின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. யுமான பி.எல். புனியா செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கல்லூரி வளாகங் களில் மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் தேவை. அதற்கு தடை விதிப்பது, அவர்களின் குரல் வளையை நசுக் குவது போன்றதாகும்.

இது தவறான நடவடிக்கை ஆகும். இந்த விவகா ரத்தை நானே கவனத்தில் எடுத்துக் கொண்டு, இதுகுறித்து விளக்கம் கேட்டு சென்னை அய். அய்.டி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அந்த விளக்கத்தின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப் படும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை. மத்தியில் பிரதமர் நரேந் திர மோடி தலைமையி லான அரசு அமைந்த பிறகு, தாழ்த்தப்பட்டவர் களுக்கு எதிரான சம்ப வங்கள் அதிகரித்து விட் டன. ராஜஸ்தான் மாநி லம், நாகோர் மாவட் டத்தில் 4 தாழ்த்தப் பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதுதொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. சம்பவ இடத்துக்கு 3 நாள்களுக்குப் பிறகு நான் சென்றபோதுதான், மாவட்ட துணை ஆட்சியர் உடன் வந்தார். இதிலிருந்து, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான சம்பவங்களுக்கு அரசு நிர்வாகத்தில் இருப் போர் முக்கியம் கொடுக்க வில்லை என்பது தெரிய வருகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் புனியா. பிரதமர் மோடியையும், மத்திய அரசின் கொள்கைகளை யும் விமர்சித்ததாக, சென்னை அய்.அய்.டி.யைச் சேர்ந்த அம்பேத்கர் - பெரியார் மாணவர் வட்டம் அமைப்பின் அங்கீகாரத்தை சென்னை அய்.அய்.டி. ரத்து செய்தது.



Read more: http://www.viduthalai.in/e-paper/102499.html#ixzz3bpa6zPKk

தமிழ் ஓவியா said...

பேசும் பேச்சு - எப்படி? - யோசிப்போமா



வாழ்வில் நாம் அனைவரும் கற்றுத் தெளிந்து, கடைப்பிடிக்க வேண்டிய செய்திகளும், நடைமுறைகளும் ஏராளம்! ஏராளம்!!
வாசிப்பது
படிப்பது,
கற்பது
அறிவது
இவை எல்லாம் ஒன்றல்ல. வெவ்வேறான பல்வேறு படிநிலைகள் என்பதை நாம் அசை போட்டுச் சிந்தித்தால் மட்டுமே உணர முடியும்.

அறிதல் வேறு, புரிதல் வேறு, தெளிதல் வேறு - இல்லையா?
நாம் அறிந்ததையெல்லாம் புரிந்து கொண்டோமா?
புரிந்து கொண்டதையெல்லாம் பற்றி தெளிவடைந்துள்ளோமா?
தெளிவடைந்த பிறகும்கூட அவற்றை வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகத் துணிதல் நம்மில்

ஏன் பலருக்கு வருவதில்லை?
வாழ்க்கைக்குக் கேளிக்கை அவசியம்தான் ஆனால் கேளிக்கையே வாழ்க்கை ஆகலாமா?
உணவுக்கு உப்பு தேவைதான், ஆனால் உப்பே உணவாக முடியுமா?
பேசுவது என்பது விரும்பத்தக்க தேவைகளில் ஒன்றுதான் ஆனால் வெறும் பேச்சு மட்டுமே

பயன் தந்துவிட முடியுமா?
பேசுவதுகூட உரையாடலின் முக்கிய கூறுதான்; அப்பேச்சு பொருள் பொதிந்த தாகவும், செயலுக்கான முன்னோடி யாகவும், அமைந்தால்தான் பேச்சுக்குப் பயன்; பேசியவருக்குப் பெருமை!

திருவள்ளுவர்தம் திருக்குறளில் பயன் இல சொல்லாமை என்று ஒரு அதிகாரத்தினையே பத்து குறள்களில் எழுதியுள்ளார்களே! அறத்துப்பாலில் 20ஆம் அதிகாரமாக இது இடம் பெற்றுள்ளது!

சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலாச் சொல் (குறள் 200)

பொருள்: சொற்கள் பலவற்றுள்ளும் பயன் அளிக்கக் கூடிய சொற்களை மட்டுமே தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும்; சொற்களில் பலன் ஏதும் அளிக்காத சொற்களை ஒரு போதும் சொல்லவே கூடாது.

அதற்கு முந்தைய குறளில் வள்ளுவர் - குற்றமற்ற அறிவினை ஒருவர் உடையவரா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டுமானால், அவரது பேச்சை வைத்து எடை போட்டு

ஆய்ந்து அறியுங்கள் என்று நமக்கு அறிவு றுத்துகிறார்!
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர் (குறள் 199)
இதன்

பொருள்: மயக்கத்திற்கு இடமில்லாத குற்றமற்ற அறிவினை உடையவர்கள், மறந்தும் பொருளில்லாத பயனற்ற சொற்களை ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.
அது மட்டுமா?
நாம் பேசும்போது - கேட்பவர்கள் விரும்பிக் கேட்குமாறு அப்பேச்சு அமைதல் வேண்டும். என்ன இவரிடம் வந்து மாட்டிக் கொண்டோமே எப்போது இவரிடமிருந்து விடுதலை பெறுவோம் என்று சலிப்பும், சங்கடமும் கொள்ளுமாறு செய்யலாமா?
இதை விட நமக்குத் தெரியாது, நாம் உருவாக்கிய அவமானம் வேறு உண்டா?
சள சள வென்றோ, தொண தொண வென்றோ பேசுவதுடன் நான், நான் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறுவது நம்மை நாமே மற்றவர் முன் மதிப்பிழக்கத் தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும்! - மறவாதீர்!

அது மட்டுமா?
நாம் பேசும் பேச்சு கருத்தாழம் மிகுந்ததாக குறிப்பாக உரையாடலில் அமைதல் மட்டும் முக்கியம் அல்ல.
எக்காரணத்தைக் கொண்டும் நம் குரலை பிறர் முன் உயர்த்திப் பேசாமல் மென்மையாகக் கூறப் பழகிக் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது!
(எனக்கே இந்த குறைபாடு பற்பல நேரங்களில் உண்டு; காரணம் ஆணவம் அல்ல. நாம் கூறும் கருத்து 100-க்கு 100 ஆதாரபூர்வமானது என்ற உறுதியால் தான். என்றாலும் விரும்பத்தக்கது அல்ல. நாம் இப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும் என்று பல நேரங்களில் உணர்ந்தது உண்டு. பெரும்பாலும் இதனைக் கடைப் பிடிக்க நான் இடைவிடாத முயற் சியை இன்னமும் செய்து கொண்டு தான் வருகிறேன்).

Asserting என்று உறுதிபட அழுத்திச் சொல்லுதலைக்கூட மென் குரலில் கூறலாமே!
ஜப்பானியர்களிடம் நாம் மரியா தையை எவ்வளவு கற்றுக் கொள்ள வேண்டுமோ, அதே அளவுக்கு அவர்கள் எவரும் உரக்கக் கூடப் பேச மாட்டார்கள். மென்மையாகத் தான் மெல்லிய குரலில் பேசுவர். அங்கு மட்டுமல்ல மேலை நாட்டவர் பலரும் இப்படித்தான்.
ஓங்கிய குரலில் பதில் அளிக்கக் கூட மாட்டார்கள். தாய்லாந்து மக்கள் கூட மென் குரலில்தான் பேசுவர்.

ஆனால், நாம் தான் பட்டாசுப் பேச்சு வெடித்து ஊர் அறிய, உலகறிய முழங்கிடும் பேச்சுப் பண் பாடு என்ற பொருள் குற்றவாளிகள் ஆவோம்!
எப்போது மாறுகிறோமோ, அப் போது தான் மனிதம் வளரும், உயரும்!
சிந்திப்போமா?



Read more: http://www.viduthalai.in/page-2/%20102506.html#ixzz3bpalBzNp

தமிழ் ஓவியா said...

புலி வாலை மிதிக்கலாமா?

சென்னை அய்.அய்.டி.யில் கடந்த ஆண்டு (2014) பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளன்று அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் ஒன்று தொடங்கப்பட்டது.

அய்.அய்.டி. என்றாலே மக்களுக்கோ, மக்கள் பிரச்சினைக்கோ சம்பந்தம் இல்லாதது - அது ஒரு தனி உலகம் என்று கருதப்படும் நிலைதான் இருந்து வந்தது.

எங்களுக்கும் சமூக அக்கறை உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டு சமூகம் மகிழ்ச்சி அடைய வேண்டும். அதற்கு மாறாக, அம்பேத்கர் - பெரியார் பெயரைக் கேட்டாலே நுரையீரல் வெந்து போய் விடும் என்று கருதுகிறவர்களின் கைப்பாவை யாகத்தான் அய்.அய்.டி. இருந்து வந்திருக்கிறது.

அய்.அய்.டி. என்றாலே அய்யர் - அய்யங்கார் டெக்னாலஜி என்ற நிலைதான்; அது ஒரு பெரிய அக்ர காரமாகவே இருந்து வந்திருக்கிறது; தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பெயரளவிற்கு இட ஒதுக்கீடு உண்டு என்றாலும் அவர்களுக்குரிய சதவீதப்படி (தாழ்த்தப் பட்டோர் 15 சதவீதம், பழங்குடியினர் ஏழரை சதவீதம்) இடங்கள் நிரப்பப்படுவதில்லை. பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் ஆரிய ஆக்டோபஸ் ஆதிக்கம் தான்.

சென்னை அய்.அய்.டி.யையே எடுத்துக் கொள்ளலாம் மொத்தம் 212 பேராசிரியர்கள் என்றால் அவர்களில் உயர் ஜாதியினர் 209. (98.59 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம்; தாழ்த்தப்பட்டோர் 3 (1-41 சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம்.

இணை பேராசிரியர்கள் (Associate Professors) 91 பேர் என்றால் அதில் உயர் ஜாதியினர் 88 (96.70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம் தாழ்த்தப் பட்டோர் 3 (3.3. சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம், உதவிப் பேராசிரியர் 177 என்றால் அதில் உயர் ஜாதியினர் 165 (93.22 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் 7 (3.95 சதவீதம்) தாழ்த்தப்பட்டோர் 4 (2.25 சதவீதம்) பழங்குடியினர் - 1.

ஆகக் கூடுதல் உயர் ஜாதியினர் (பெரும்பாலும் பார்ப்பனர்களே!) 462, பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் 7, தாழ்த்தப்பட்டோர் 10, பழங்குடியினர் ஒன்றே ஒன்று -இதுதான் சென்னை அய்.அய்.டி.யின் நிலை.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு - மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்டதால்தான் முதன் முதலாக உதவிப் பேராசிரியர்களில் மட்டும் 7 இடங்கள் கிடைத்துள்ளன. பேராசிரியராகவோ, இணைப் பேராசிரியராகவோ ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை; பழங்குடியினரிடமிருந்து ஒரே ஒருவர் மட்டும் - அதுவும் உதவிப் பேராசிரியர் பணியில்.

தமிழ் ஓவியா said...

இத்தகு பெரும் அக்கிரகாரக் காலனியாக இருக்கக் கூடிய அய்.அய்.டி. வளாகத்தில் சமூக நீதிப் போராளிகளான பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார் பெயரால் ஓர் அமைப்பு இயங்குகிறது என்றால் அவர்களால் சீரணித்துக் கொள்ள முடியுமா?
அதனுடைய விளைவுதான் அம்பேத்கர் - பெரியார் பெயரால் அமைந்த வாசகர் வட்டத்திற்கான தடையாகும்.

கேட்டால் பிரதமரை விமர்சித்து விட்டார்களாம். ஏன் பிரதமர் என்பவர் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவரா? இந்தியா ஜனநாயக நாடல்லவா!
இன்றைக்குப் பிரதமரை விமர்சிப்பதா என்று விண்ணுக்கும் பூமிக்கும் வானரமாகத் தாவுகிறார்களே - இதே அய்.அய்.டி. வளாகத்திற்குள் மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் இதரப் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக, அன்றைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் அவர்களின் கொடும்பாவியைப் அய்.அய்.டி. பார்ப்பன மாணவர்கள் அய்.அய்.டி. வளாகத்திலேயே கொளுத்தவில்லையா? அப்பொழுது சம்பந்தப்பட்ட மாணவர்கள்மீதோ, அமைப்பின்மீதோ அய்.அய்.டி. நிறுவனத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டால் நிருவாகமே மாணவர்களைத் தட்டிக் கொடுக்கும்; சட்டப்படியாக உள்ள இடஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசினால் அந்த அமைப்பினை சட்ட விரோதமாகத் தடை செய்யும் - இதுதான் மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி என்பது.

விவேகானந்தர் பெயரால் வாசகர் வட்டம் அங்கு செயல்படுகிறது; அவர்களுக்கு அறை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது - இணைய தள வசதிகளுடன் அவர்கள் எதைப் பரப்புகிறார்கள்? வேதம், இதிகாசம், உபநிடதம் பற்றி எல்லாம் பேசுகிறார்களே - அந்த வேதங்கள், கீதை என்ன சொல்லுகின்றன?

சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று கூறும் கீதையைப் பிரச்சாரம் செய்ய எப்படி அனுமதிக்கிறது அய்.அய்.டி. நிருவாகம்?
அண்ணல் அம்பேத்கர் - தந்தை பெரியார் ஆகியோரின் பெயரால் அமைந்த அமைப்பினைத் தடை செய்தது மூலம் புலிவாலை மிதித்து விட்டனர் - குளவிக் கூட்டில் கை வைத்து விட்டன பார்ப்பன சக்திகள். அதன் விளைவு என்ன என்பதை நாடே பார்த்துக் கொண்டு இருக்கிறது.

தொலைக்காட்சி விவாதங்களில் மாணவ - மாணவிகள் டாண் டாண் என்று ஈரோட்டுச் சிங்கக் குரலில் கர்ச்சிக்கிறார்களே! பார்ப்பனப் பண்ணையம் கேட்பாரில்லையா? என்று முழங்குகிறார்களே! பூரிப்பாக இருக்கிறது.

தந்தை பெரியார் மறைந்து விட்டார் , அம்பேத்கர் காலமாகி விட்டார் என்று கனவு காண வேண்டாம்; அவர்கள் விதைத்துச் சென்ற கனல் கனன்று கொண்டுதானிருக்கிறது. தேவைப்படும்பொழுது எரிமலையாக, பூகம்பமாக வெடித்துக் கிளம்பும் என்பதை நேரில் பார்த்த பிறகாவது பார்ப்பனர்கள் புத்திக் கொள்முதல் பெறட்டும்!
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க அண்ணல் அம்பேத்கர்!!



Read more: http://www.viduthalai.in/page-2/102505.html#ixzz3bpavwVqX

தமிழ் ஓவியா said...

மனிதன்

பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)



Read more: http://www.viduthalai.in/page-2/102504.html#ixzz3bpbBJDBu

தமிழ் ஓவியா said...

புதினாக் கீரையின் மருத்துவ குணங்கள்

புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும்.மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றனர். இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் இதை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வீர்கள்.



வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும். உடல் தொப்பை, பருமன் குறைகிறது. அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். காலரா அண்டாது. சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறு கின்றனர். தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறும். மலக்கட்டு விலகி ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மருந்துச்சாறு.

மருத்துவக் குணங்கள்: கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றும்கூட இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவைகளை உணரமுடியாத நாக்கு, பித்தம், ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும். வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போது பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும். வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறுள்ளவர்கள் புதினாத் துவையல், புதினா சட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.



Read more: http://www.viduthalai.in/page-7/102523.html#ixzz3bpbpYRvI

தமிழ் ஓவியா said...

கை, கால் குடைச்சல்!

கை, கால் குடைச்சல் என்றாலே வயதானவர்களின் உபாதை என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு பல மணிநேரம் வேலை செய்பவர் களுக்கும் இப்பிரச்சினை வரும் என்கிறார் மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர் கண்ணன். கை, கால் குடைச் சலுக்கான காரணம், அறிகுறிகள், குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் குறித்து கூறுகிறார் அவர்.



ஒருவருக்கு கை, கால்களில் குடைச்சல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் நழுவி நரம்பு மேலே அழுத்துவதால், கை, கால் குடைச்சல் வரலாம். ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, கை, கால் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாதல், வைட்டமின் பி12, கால்சியம் சத்து குறைபாடு, தைராய்டு ஹார்மோன் குறைவாக இருத்தல் போன்றவையும் காரணமாகலாம்.
இந்த உபாதை 30 வயதுக்கு உட்பட்டவருக்கு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. அதே வேளையில், சுமை தூக்கும் தொழிலாளிகள், தொடர்ச்சியாக நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு தொடர்ந்து 10 மணிநேரம் அல்லது அதற்குமேல் வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கும் வரலாம். பெண்களில் 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவருக்கு கை, கால் குடைச்சல் அதிகமாக வருகிறது. இதற்கு மாதவிலக்கு, தாய்மை அடைதல், அதிக வேலைச்சுமை, ரத்தசோகை, தைராய்டு ஹார்மோன் குறைபாடு போன்றவை காரணங்கள்.

இது பரம்பரையாகத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு. கை, கால்களில் ஒருவருக்கு குடைச்சல் உள்ளது என்பதை உடலில் தோன்றும் அறிகுறிகளை வைத்தே தெரிந்துகொள்ள முடியும். காலின் அடிப்பாகத்தில் எரிச்சல் தோன்றும்... படிப்படியாக முழங்கால் வரை அதிகமாகும். இரவு நேரங்களில் தூங்கும் போது, கெண்டைக் காலில் இழுத்துப் பிடிக்கிற மாதிரி இருக்கும். குடைச்சல் ஏற்படுவதற்கு முன்னர் கை, கால்கள் மரத்துப் போகும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதங்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு இருக்கும். இந்த அறிகுறி உள்ள பெண்களுக்கு இடுப்பு வலிமற்றும் தலைவலி இருக்கும். சிலருக்கு தூக்கமின்மை வரலாம். அன்றாட வேலைகளைச் சரியாக செய்ய முடியாது. சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சினை ஆகியவற்றால் ஏற்படுகிற கண் நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, முடி உதிர்தல் போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.

வலி நிவாரணி மருந்துகள், வைட்டமின் மாத்திரைகளை நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடுவதாலும், மருந்துகள் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாலும் கை, கால் குடைச்சலைக் குணப்படுத்தலாம். வாரத்தில் 5 நாட்கள் நடைப்பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சிகளை குறைந்தது 30 நிமிடங்கள் செய்வதும் அவசியம். எளிதில் செரிக்கும் புழுங்கலரிசி உணவு, கஞ்சி, எண்ணெய் இல்லாத கோதுமை ரொட்டி, உளுந்து, வெந்தயம் சேர்ந்த உணவு வகைகள், ரசம் போன்றவற்றை கை, கால் குடைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவது நன்மை தரும். கிழங்கு வகைகள், காரம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக உப்பு கூடாது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல், தாங்களாகவே மாத்திரைகள் சாப்பிடக் கூடாது. மருந்து கலந்த எண்ணெய், ஆயின்மென்ட், ஸ்பிரே ஆகியவற்றை மருத்துவர் வழிகாட்டுதலுடன் பயன்படுத்தலாம். இதனால் தற்காலிக நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தண்டுவட பாதிப்பினால் ஏற்படும் கை, கால் குடைச்சலுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே எடுத்து பார்ப்பது அவசியம். பிரச்னைக்கான தக்க காரணத்தை ஆராய்ந்து அறிந்து நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி உரிய சிகிச்சையை மேற்கொண்டால் இந்த குறைபாட்டை சரி செய்யலாம்.





Read more: http://www.viduthalai.in/page-7/102525.html#ixzz3bpc0Pk33

தமிழ் ஓவியா said...

வாத பித்த நோய்களை குணப்படுத்தும் தூதுவளை

தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.



தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியை யும் அதிகரிக்கும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவை பலப்படுத்தும். தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.

காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும். மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து. தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும். தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளை பழத்தை வெயிலில் காய வைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல் ஆகியவை நீங்கும். பாம்பின் விஷத்தை முறிக்கும். நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும். தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும். தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.



Read more: http://www.viduthalai.in/page-7/102527.html#ixzz3bpcArCCi

தமிழ் ஓவியா said...

புலியை இடறியதன் விளைவு: மும்பை அய்.அய்..டி.யில் அம்பேத்கர் - பெரியார் - புலே வாசகர் வட்டம் தோற்றம்

மும்பை, ஜுன்1_ சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததன் விளைவு _- எதிரொலியாக மும்பை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் புதிய அமைப்பு உருவாகியுள்ளது.

சென்னை அய்.அய்.டி மாணவர்களின் அமைப் பாகிய அம்பேத்கர் பெரியார் வாசகர் வட் டத்துக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடையைக் கண் டித்து ஜனநாயக உரிமை கோருபவர்களும், கருத்து ரிமை கோருபவர்களும் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டம் நடத்துபவர்கள்மீது தாக்குதலா?

தேசிய அளவில் அந் தத் தடையை கண்டித்து மாணவர் அமைப்புகள் கிளர்ந்து எழுந்து போராட் டத்தில் குதித்துள்ளனர். புதுடில்லியில் இந்திய தேசிய மாணவர் ஒன்றியம் சார்பில் புதுடில்லியில் போராட்டத்தை நடத்தி னார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாண வியர்மீது காவல்துறை யினர் கடுமையாக நடந்து கொண்டு தாக்கி உள்ள னர். அத்தாக்குதல்களைக் கண்டித்து சென்னை அய்.அய்.டி மாணவர்கள், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பு மாணவர்கள் கடும் கண் டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை அய்.அய்.டி. மாணவர்கள்

தேசிய அளவில் விவா தமாக உருவாகி இருப்பது என்னவென்றால், சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தின் தலைவராக இருப்பவரிடம் எந்த விதத்திலும் நீதி, நேர்மை ஏதும் கிடையாது. நிர்வாக ரீதியாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட் டத்துக்கு தடைவிதிப்பதற் கான உரிமை அல்லது தனிப்பட்ட மாணவரின் சுதந்திரத்தில் தலையிடும் உரிமை என்று எதுவுமே அவருக்கு கிடையாது.

அவருடைய தனிப் பட்ட வலதுசாரி சிந் தனைகளுடன், தன்னு டைய அதிகாரத்தை தவ றாகப் பயன்படுத்துவதா கவே அவருடைய செயல் இருக்கிறது. மாணவர்கள் தங்களின் கருத்துகளை நிகழ்ச்சிகளின் வாயி லாகவோ, துண்டறிக்கை களை வழங்குவதன் வாயி லாகவோ இன்னும் பிற வகையிலோ கருத்து தெரி விப்பதைக் கண்காணிப்ப தற்கோ, கட்டுப்படுத்துவ தற்கோ நிர்வாகத்துக்கு எவ் வித அதிகாரமும் இல்லை.

அய்.அய்.டி நிறுவப் பட்ட காலத்திலிருந்து சர்வாதிகார முறையில் இது போன்ற கருத்துகளுக்கான சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதேநேரத்தில் வலது சாரிக் குழுக்களாக உள்ள பார்ப்பனீய கொள்கை களைப் பரப்புவதற்கு மட்டும் அனுமதிக்கும் நிலை இருந்துவருகிறது.

விவேகானந்தா வாசகர் வட்டம் Vivekananda study circle (VSC) வந்தே மாத ரம் உள்ளிட்டவை மற்றும் அலுவலக ரீதியில் இல் லாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா ஆகிய வற்றைச் செய்து வருகின் றது. விவேகானந்தா வாசகர் வட்ட அமைப்பு செயல்படுவதற்காக தனியே பிரம்புத்திரா விடுதியில் இணைந்துள்ள நூலகத்துடன் கூடிய ஓர் அறையும், அய்.அய்.டி. இணைய தளத்தின்மூலம் இணைந்திருக்கும் வசதி யும், அதன் தொடர்புடைய மின்னஞ்சல் வசதியும் அளிக்கப்பட்டுள்ளதுடன், நிதிவசதியும், அய்.அய்.டி அரங்குகளையும் பயன் படுத்திக்கொள்ளவும் உள் ளட்ட பல்வேறு வகை யிலும் விவேகானந்தா வாசகர் வட்டம் அமைப்பு செயல்படுவதற்கான அனைத்துவகையிலான வாய்ப்புகளும் சென்னை அய்.அய்.டியில் வழங்கப் பட்டுள்ளன.

ஆகவே, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட் டத்தின் சார்பில் கீழ்க் காணும் வசதிகளை அளிக் குமாறு கேட்டுக்கொள் கிறோம். சென்னை அய். அய்.டி. வளாகத்துக்குள் எந்த ஒரு மாணவர் அமைப்பாக இருப்பினும் எவ்வித கேள்விகளும், இடையூறுமின்றி, சுதந் திரமாக இயங்க வேண்டும்.

விவாதங்கள் நிகழ்ச் சிகளை நடத்திட அய். அய்.டியின் எந்த விடுதி யிலாவது நிரந்தரமான அறை ஒதுக்கப்பட வேண்டும். நூலகத்துக்கு போதிய இடத்தை அளிக்க வேண்டும். மாணவர்களின் தகவல்களை அளிப்பதற்கு அய்.அய்.டியின் இணைய தளத்தில் இடம் ஒதுக்க வேண்டும். மாணவர்கள் தொடர்பு கொள்ள மாண வர்மின்னஞ்சல் (SMail) கணக்குகள் தொடங்குவ தற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். மாண வர் அமைப்புகளுக்கு என ஒதுக்கப்படும் நிதியை சம அளவில் அனைத்து மாண வர் அமைப்புகளுக்கும் வழங்கிட வேண்டும்

இந்த கோரிக்கைகளை சென்னை அய்.அய்.டி மாணவர் அமைப்பாகிய அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சார்பில் மாணவர்கள் கோரி உள்னர்.

மும்பை அய்.அய்.டி.யில் புதிய அமைப்பு

சென்னை அய்.அய்.டி. யின் தடையை எதிர்த்து மும்பையில் மும்பை அய். அய்.டி மாணவர்கள் சார்பில் கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் மனிதச் சங்கிலிப் போராட் டத்தை நடத்தி உள்ளனர்.
சென்னை அய்.அய்.டி யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத் தடையின் எதிரொலியாக சமுதாயத் தில் அரும்பெரும் பணி களை ஆற்றியுள்ள தலை வர்களின் பெயரில் மும்பை அய்.அய்.டி. மாணவர்களின் சார்பில் அம்பேத்கர் பெரி யார் புலே வாசகர் வட்டம் என்ற புதிய அமைப்பு உருவாகி உள்ளது.



Read more: http://www.viduthalai.in/e-paper/102547.html#ixzz3bungdqxe

தமிழ் ஓவியா said...

பஞ்சாயத்து என்ற பெயரால் நடைபெறும் ஜாதிக் கொடுமைகள், பெண்ணடிமைத்தனங்களை ஒழிக்க தனிச்சட்டம் கோரி ஆர்ப்பாட்டம்



திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறையினர் திரண்டனர்
சென்னை, ஜுன்2_ சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (1.6.2015) மாலை 4.00 மணியளவில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி தலைமையில் இந்தியா முழுவதிலும் பஞ்சாயத்து என்ற பெயரில் நடை பெறும் ஜாதிக்கொடுமைகள், பெண்ணடிமைத்தனங் களை ஒழிக்க தனிச்சட்டம் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், மகளிரணி கு.தங்கமணி, சுமதி கணேசன், த.மரகதமணி, தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் வழக்குரை ஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி தொடக்க உரை ஆற்றினார். சென்னை மண்டல மாணவரணி செய லாளர் பா.மணியம்மை, பெரியார் களம் இறைவி ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்.

விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.வீரபத்திரன், கே.இராசேந்திரன், பேராசிரியர் ராமு, பெருமாள், விஜயலட்சுமிதாஸ், திண்டிவனம் மாவட்டச் செயலாளர் நவா.ஏழுமலை, மாவட்ட மகளிரணி விஜயலட்சுமி, மாவட்ட பாசறை சரோஜா, சாந்தி பரந்தாமன், வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு.திருவள்ளுவன், மாவட்டச் செயலாளர் வெ.மு.மோகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மயிலை சேதுராமன், தொழிலாளரணி பாலு, சி.செங் குட்டுவன், ஆவடி மாவட்டச் செயலாளர் பா.தென்னரசு, கலைமணி, தென் சென்னை இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன், செயலாளர் சண்முகப்பிரியன், ஈழமுகிலன், பெருமாள், வடசென்னை இளைஞரணி தளபதி பாண்டியன், திருவொற்றியூர் கணேசன், ஒளிவண்ணன், திண்டிவனம் சிந்தனைசிற்பி, முத்தழகன், புழல் நகரத்தலைவர் ஏழுமலை, ஜனாதிபதி, சுவர் எழுத்து இரணியன், நா.பார்த்திபன், ஓவியர் பாசுகர், பொன்னேரி பாலு, தரமணி மஞ்சுநாதன், இராசேந்திரன், பட்டாளம் பன்னீர், தாம்பரம் பாசு.ஓவியச் செல்வன், கோ.சுரேஷ், ரேவந்த், சிவக்குமார், திலீபன், இரா.சத்தீஷ், வ.மணி கண்டன், சண்முகம், இராமதுரை, யுவராஜ், மகேசுவரன், முத்துராஜ், ஆனந்த், இசையின்பன், ஆவடி தமிழ்மணி, எழில், தொழிலாளரணி துணை செயலாளர் செல்வராசு, மதிவாணன், மகளிரணி உமா, சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, செ.பூங்குழலி, மீனாட்சி, திலகவதி சென்னியப்பன், மோ.மீனாகுமாரி, பாக்யா கலைமணி, ஆவடி பாசறை செயலாளர் பெரியார் செல்வி, மு.சந்திரா, அறிவுச்சுடர், ஈசுவரி, சீனியம்மாள், பகுத்தறிவு, அஜந்தா, வி.யாழ்ஒளி, வி.வளர்மதி, வி.தங்கமணி, கோ.குமாரி, கீர்த்தி, பூவை செல்வி, பொன்மணி, தென்னரசி, விஜயா, திலகவதி, பசும்பொன், குடியாத்தம் ஓவியா, நிலா, பெரியார் பிஞ்சுகள் கவியமுதன், செம்மொழி, பகுத்தறிவு உள்பட சென்னை மண்டலத்தைச் சேர்ந்த தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, ஆவடி கழக மாவட்டங்களின் சார்பில் கழகத் தோழர்கள், தோழியர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் மு.பவானி நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்ட விளக்க உரை

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறையின் சார்பாக திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறை நுதல்செல்வி தலைமை ஏற்று இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஆர்ப்பாட்டமானது, கடந்த ஒரு மாதமாக இந்தியாமுழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. இதைக் கவனித்த தமிழர் தலைவர் அவர்கள் ஓர் அறிக்கையின் வாயிலாக இந்தப் போராட்டத்தை அறிவித்தார்கள்.

குறிப்பாக மகாராட்டிர மாநிலத்திலே ஒரு தாழ்த்தப்பட்ட தோழர் வைத்திருந்த கைப்பேசியில் அம்பேத்கர் பாடல் இடம் பெற்றிருந்தது என்று இருந்த காரணத்தால் அங்கே இருந்த உயர்ஜாதியினர், அவரை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் மீரட் பகுதியிலே பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்கிற கட்டுப்பாட்டை மீறி ஆறு பெண்கள் குடும்ப வறுமையைப் போக்குவதற்காக வேலைக்கு சென்றார்கள். உடனே, ஊர்ப்பஞ்சாயத்து என்று கூடி, அந்த பெண்களை அடித்து உதைத்தது மட்டுமல்லாமல், கிராமமே அவர்களைப் புறக்கணித்தது.

அந்த புறக்கணிப்பிலிருந்து அவர்கள் மீள வேண்டுமென்றால், ஓர் இலட்சரூபாய் பணம் கட்ட வேண்டும். அந்த ஒரு லட்சரூபாய் பணத்தை கிராமத்தில் உள்ளவர்களிடம் கடனாக வாங்கி, அதற்கு வட்டி சதவிகிதம் 120 சதவிகிதம் கொடுத்து, அந்தக் கடன் அடைத்து, அந்தத் தண்டனையிலிருந்து விடுபட வேண்டும் என்று செய்தி வருகிறது.

மூன்றாவதாக பாட்னாவிலிருந்து ஒரு செய்தி வருகிறது. ஒரு யாதவ இளைஞன் மாற்று ஜாதி பெண்ணைத் திரு மணம் செய்து கொண்டான் என்பதற்காக ஊர்ப்பஞ்சாயத் தைக் கூட்டி 50ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக் கிறார்கள்.
அதைவிடக் கொடுமை பஞ்சாபிலே பேருந்திலே சென்று கொண்டிருந்த ஒரு தாயையும், மகளையும் அங்கே இருந்த இரண்டு காலிகள் பாலியல் தொந்தரவு செய்த நேரத்தில் அதிலிருந்து மீள முடியாத சூழ்நிலையில் அந்தப் பெண் பேருந்திலிருந்து குதித்துவிட்டார். குதித்தவர் அங்கே மரணம் அடைந்தார்.

இது பெரிய பிரச்சினையான நேரத்திலே பஞ்சாப் மாநில கல்வி அமைச்சராக இருப்பவர் சொல்கிறார், இது சாதாரண விபத்து, இது கடவுள் செயல். இதையெல்லாம் பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று சொன்னார். இப்படித் தொடர்ந்து பல்வேறு செய்திகள் பெண்களின்மீது ஒடுக்குமுறை என்பது தலைவிரித்தாடக்கூடிய கேவலம் நடந்துகொண்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டிலும் பல்வேறு செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக குடியாத்தத்திலே 5 வயது சிறுமி ஒரு கோயில் குருக்களால் பாலியல் வன்முறை செய்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். குருக்களுக்கு 10 ஆண்டுகள் தண்டனை என்றுகூட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல கிருஷ்ணகிரியிலே பெங்களூருவில் வேலை பார்த்த ஒரு தோழர் நவீனமான கைபேசி வைத்திருந்தார் என்பதற்காக உயர்ந்த ஜாதிக்காரர்கள் அடித்து உதைத்திருக்கிறார்கள்.

இப்படித் தொடர்ந்து ஜாதியும், தீண்டாமையும் தொடர்ந்து தலைவிரித்தாடுகின்ற காரணத்தாலே, ஊர்ப் பஞ்சாயத்து என்ற பெயரிலே சாட்டை அடி கொடுப்பது, அபராதம் போடுவது என்று கொடுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிற காரணத்தாலே, இவற்றை எல்லாம் கண்டித்து மக்கள் மத்தியிலே விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக மத்தியிலே பிஜேபியின் மதவாத ஆட்சி வந்ததற்குப்பின்னாலே இந்துத்துவ உணர்வு தலைதூக்கு கின்ற ஒரு

சூழ்நிலையிலே இத்தகைய ஒடுக்குமுறைகள் நாட்டில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
அவற்றைக் கண்டிக்கின்ற வகையில்தான் மக்கள் மத்தியிலே அதைப்பற்றிய விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டும். இந்தக் கொடுமையிலிருந்து விடுபடுவதற்காக மத்திய அரசு ஒரு தனிச்சட்டத்தையே கொண்டுவர வேண்டும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்கள். அதை வலியுறுத் தித்தான் இந்த ஆர்ப்பாட்டம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் - இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசுகையில் குறிப்பிட்டார்.

பொருளாளர் தலைமையுரை

தமிழ் ஓவியா said...

ஆர்ப்பாட்டத் தலைமையேற்று திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி பேசுகையில் குறிப்பிட்டதாவது: பஞ்சாயத்து என்ற பெயரில் நடைபெறும் ஜாதிக்கொடுமைகள், பெண்ணடிமைத்தனங்களை ஒழிக்க தனிச்சட்டம் கோரி ஆர்ப்பாட்டம் என்ற திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணையின்படி, இங்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறு கின்றது. இந்த நாடு சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகின்றது.

ஆனாலும்கூட இன்னும் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. பஞ்சாயத்து என்ற பெயரால் கட்டப்பஞ்சாயத்து, ஜமீன்தார் பஞ்சாயத்து, நில உரிமைதாரர்களின் பஞ்சாயத்து, ஜாதிப்பஞ்சாயத்து என்று பஞ்சாயத்துகள் நடந்துகொண்டி ருக்கின்றன. இவைகளெல்லாம் கட்டப் பஞ்சாயத்து களாகவே நடந்துகொண்டிருக்கின்றன. நீதித்துறை அல்லது சட்டத்துறையாக இருந்தாலும் அல்லது காவல்துறையாக இருந்தாலும் எந்த துறைகளுமே இதில் செயல்படும் பொழுது இதில் கண்துடைப்பு நாடகமாகத்தான் அதில் நடந்துகொண்டிருக்கின்றன. சமூகநலத்துறையும், சமூகப் பாதுகாப்புத்துறையும், மனித உரிமை ஆணையமும் இருந்தும், பெண்ணடிமைத் தனங்கள் ஒழிய வேண்டும் என்று கூறும் எத்தனையோ பெண்ணுரிமை அமைப்புகள் இருந்தும்கூட அவை செயல்பட முடியாத நிலையில்தான் இருக்கின்றன.

இப்படிப் பட்ட ஒரு சூழலில் கட்டப்பஞ்சாயத்து என்ற பெயரால், ஜாதிப்பஞ்சாயத்து என்ற பெயரால், நாட்டாண்மை பஞ்சாயத்து என்ற பெயரால் சவுக்கடியைக் கொடுப்பதும், சாணிப்பால் கரைத்து ஊற்றுவதும், மலத்தை வாயில் திணிப்பதும், சிறுநீரை வாயில் ஊற்றுவதுமாகிய பல கொடுமைகள், சாட்டை அடிகள், அபராதங்கள் இவை நடந்துகொண்டிருக்கின்றன.
பெண்ணடிமைத்தனம் தலைதூக்கி நிற்கும் நிலையில், பெண்களை ஒரு பாவைகளாக, அனுபவிக்கத்தக்க பாவைகளாக மட்டுமே நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இருக்கும்போது, பெண்களை ஓர் அலங்காரப் பதுமைகளாக நினைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கும்போது, இவையெல்லாம் மாற வேண்டும் என்று அதற்காக சிறப்பான சட்டங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இன்றும் நம்முடைய சட்டத்திலே 18 இடங்களிலே ஜாதி இருக்கிறது. தந்தைபெரியார் அவர்கள் சொன்னதைப்போல, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்வதைப்போல, ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக சட்டம் வரவேண்டும், தீண்டாமை ஒழிக்கப்படுவதற்கான சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். பெண்ணடிமைத் தனம் ஒழிக்கப்படுவதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஜனநாயகத்தின் 4 தூண்களாக இருக்கக்கூடிய நீதித்துறையாக இருந்தாலும், நிர்வாகத் துறையாக இருந்தாலும், சட்டமன்றம், நாடாளுமன்றமாக இருந்தாலும், ஊடகத்துறையாக இருந்தாலும் அதில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும், பெண்களுக்கும் அவரவர்களுக்குரிய விழுக்காட்டளவில் பங்களிப்பு அளிக்கப்பட்டால்தான், பெண்களுக்கு குறைந்த பட்சம் 33 விழுக்காடு பங்களிப்பு அளிக்கப்பட்டால்தான் இந்தக் கொடுமைகள் அகற்றப்படும்.

ஏனென்றால், புகாரை வாங்குமிடத்திலும், புகார்மீதான சட்டத்தை செயல்படுத்தும் நேரத்திலும், அதை ஊடகங் களில் சொல்லக்கூடிய நிலையாக இருந்தாலும், சட்டமன்றத் திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கேள்விகளை எழுப்புகின்ற நிலையாக இருந்தாலும், அதில் அவரவர் களுக்குரிய விழுக்காட்டளவிலான மக்கள் இருந்தால்மட் டும்தான் அதை செயல்படுத்த வேண்டும், செயல்படுத்த முடியும் என்ற காரணத்தால்தான் அதை விளக்கித்தான் பொதுமக்களுக்காக இந்த ஆர்ப்பாட்டத்தை இங்கே நடத்திக்கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் இதைப்புரிந்துகொண்டு இதற்கான தங்களின் ஆதரவை கொடுக்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் வேண்டுகோளாகக் கூறி அனைவரும் ஆதரவை அளித்திட முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி தலை மையுரையில் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் கருங்கடலாக கழக கொடிகளுடன் தோழர்கள் தோழியர்கள் பெரியார் பிஞ்சுகள் குவிந்தனர்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102557.html#ixzz3buntb6vK

தமிழ் ஓவியா said...

சென்னை அய்.அய்.டி.க்கு தேசிய ஆதிதிராவிட நல ஆணையம் மீண்டும் கடிதம் : விளக்கம் அளிக்காவிட்டால் அழைப்பாணை அனுப்ப நேரிடும்

புதுடில்லி, ஜூன்.2- அம்பேத்கர்- _ பெரியார் வாசகர் வட்டத்திற்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு ஏற்கெனவே அனுப்பிய கடிதத்திற்கு உடனடியாக பதிலளிக்காவிட்டால் அழைப்பாணை அனுப்ப நேரிடும் என்றும் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் சென்னை அய்.அய்.டி.யின் இயக்கு நருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை அய்.அய்.டி.யில் உள்ள அம்பேத்கர்-_ பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை விமர் சனம் செய்ததாக நிகழ்வு கூறி அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இந்நிகழ்வு தேசிய அளவில் பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் ஏற் படுத்தியுள்ளது. இந்தியாவின் பல் வேறு இடங்களில் மாணவர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத் தின் இந்த உத்தரவை எதிர்த்து ஆர்ப் பாட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தேசிய ஆதிதிராவி டர் நல ஆணையத்தின் சார்பில் அதன் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான பி.எல்.புனியா தன்னிச் சையாக விளக்கம் கேட்டு சென்னை அய்.அய்.டி. இயக்குனர் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார். அதில் ஜூன் ஒன்றாம் தேதிக்குள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம் அனுப்ப வேண்டும் என்றும் குறிப் பிட்டு இருந்தார்.

இந்த கடிதத்திற்கு எந்த விளக்க மும் அளிக்கப்படாத நிலையில் நேற்று மீண்டும் சென்னை அய்.அய்.டிக்கு ஒரு கடிதத்தை தேசிய ஆதிதிராவிட நல ஆணையம் அனுப்பியுள்ளது.

அதில், ஏற்கெனவே அனுப்பப் பட்ட கடிதத்திற்கு இதுவரை எந்த விதமான விளக்கமும் அளிக்கப்பட வில்லை. தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் கோரியுள்ள விளக்கத்தை உடனடியாக அனுப்பாவிட்டால் சென்னை அய்.அய்.டி.யின் இயக்குநர் ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அழைப்பாணை அனுப்ப நேரிடும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறைக்கும் இதே போன்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



Read more: http://www.viduthalai.in/page-2/102568.html#ixzz3bup0PS1K

தமிழ் ஓவியா said...

மூன்றாம் முறையாக அவசர சட்டமா?

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மூன்றாம் முறையாக மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்டிஏ) அவசரச் சட்டமாக செயல்படுத்த துடிக்கிறது.

இதற்குமுன் இரண்டு முறை மாநிலங்களவையில் அதற்கு ஆதரவு கிடைக்காத நிலையில் மூன்றாம் முறையாகக் கொண்டு வர முனையும் இந்த அவசர சட்டத்துக்குக் குடியரசு தலைவர் எப்படி கையொப்ப மிடுகிறார் என்பது நியாயமான வினாவாகும். அதிகாரமற்ற பதவி என்று இந்தியக் குடியரசு தலைவர் விமர்சிக்கப்பட்டாலும், இதுபோன்ற சந்தர்ப்பத் திலாவது மோடி அரசைப் பார்த்து சன்னமான ஒரே ஒரு கேள்வியைக்கூட எழுப்பக் கூடாதா? ஒரு ஜனநாயக அமைப்பில் நாடாளுமன்றத்தை இப்படி சிறுமைப்படுத்துவது நல்லதல்ல என்று செல்ல மாகவாவது பிரதமர் மோடி தலையில் ஒரு குட்டு வைக்கக் கூடாதா?
1894ஆம் ஆண்டில் வெள்ளையர் அரசாங்கம் பின்பற்றிய அதே பாணியை சுதந்திர நாடாகக் கூறப்படும் ஒரு நாடு கண் மூடிப் பின்பற்றலாமா?
முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (ஹிறிகி) 2013ஆம் ஆண்டில் நிலம் கையகப்படுத்துதல் மறு வாழ்வு மற்றும் மீள் குடியேற்றச் சட்டத்திற்கு பிஜேபி உள்ளிட்ட பல கட்சிகளும் கைதூக்கின என்பது உண்மையே!

ஆனால், அறிவு நாணயத்தோடு இப்பொழுது பிஜேபி ஆட்சி நடந்து கொள்ளவில்லை என்பதுதான் குற்றச்சாற்று. அந்த ஆட்சியில் இந்தச் சட்டத்தில் விவசாயிகளுக்கு, நில உரிமையாளர்களுக்கு வழங்கப் பட்டு இருந்த உரிமைகளும், சலுகைகளும் இந்த மோடி அரசில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன என்பதுதான் கொடுமை!
ஆளும் கட்சியை எதிர்க்கக் கிடைத்த அரசியல் ஆயுதமாக எதிர்க்கட்சிகள் இதனை மாற்றி விட்டன என்று பொத்தாம் பொதுவாகவும் குற்றப் பத்திரிகை படிக்கவும் முடியாது - கூடாது; பிஜேபி தலைமையி லான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இதனை எதிர்க்கின்றன.

ஏற்கெனவே ரியல் எஸ்டேட் என்ற பெயரில் வயிற் றுக்குச் சோறு போடும் விளை நிலங்களில் எல்லாம் கான்கிரீட் வீடுகள் கண் சிமிட்டி நிற்கின்றன. இப்பொ ழுது வெளிநாட்டுப் பெரு முதலாளிகளின் தொழிற் சாலைகளுக்காகப் பாரம்பரிய விவசாயிகளின் நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டு வரப்படுவதுதான் நாடு தழுவிய கடும் எதிர்ப்புக்களுக்குக் காரணமாகும்.

பி.ஜே.பி. அரசின் இந்தப் புதிய சட்டப்படி பாதிக்கப் பட்டவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது.
80 சதவீத நில உரிமையாளர்களில் ஒப்புதல் தேவை, நகர்ப்புற நில உரிமையாளர்களுக்கு சந்தை விலையை விட இரு மடங்கும், கிராமப்புறங்களில் சந்தை விலையைவிட நான்கு மடங்கும் இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பது மன்மோகன் அரசின் சட்டம். மோடி அரசோ அதனைத் தூக்கித் தூர எறிந்து விட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் காலால் ஆட்டும் ஆணையை பிஜேபி அரசு தலையாட்டி செய்கிறது.

தமிழ் ஓவியா said...

நில உரிமையாளர்களுக்கான மீள் குடியேற்றம், மறுவாழ்வு பற்றி மன்மோகன் அரசின் சட்டம் பேசியது. உத்தரவாதமும் தந்தது. மோடி அரசோ அதனை முகர்ந்துகூடப் பார்க்கத் தயாராகவில்லை.
அரசு நிலம் கையகப்படுத்தும் முறையில் ஏற்கெ னவே நாட்டு மக்களுக்குக் கடும் கசப்பான அனுப வங்கள் உண்டு.
எடுத்துக்காட்டாக சிறீபெரும்புதூரில் நோக்கியா நிறுவனத்துக்கு 1000 ஏக்கருக்கு மேல் நிலம் தாரை வார்க்கப்பட்டது. அந்த நிறுவனத்தைக் காதும் காதும் வைத்தாற்போல ஊற்றி மூடி விட்டனர். திண்டுக்கல்லில் சிப்காட்டுக்காக 500 ஏக்கர் நிலத்தை எடுத்தார்களே - அங்கு எந்தத் தொழிற்சாலை எழுந்து நிற்கிறது?

பாரம்பரியம் பாரம்பரியமாக ஒரு குழி நிலம் இருந் தாலும் அதுதான் மிகப் பெரிய பெருமை, அந்தஸ்து என்று கருதிய மக்களிடத்திலிருந்து சட்டத்தைக் காட்டிப் பறித்து வருகிறார்களே அவர்கள் வீட்டுப் பிள்ளை களுக்கு எந்த அளவுக்கு வேலை வாய்ப்பை தந்தனர்? அதிகமாகப் போனால் வாட்சுமேன் வேலை அவ்வளவு தானே! நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திற்காக நிலங்களை வழங்கியவர்கள் இந்த உரிமைக்காக இன்றுவரை கைப் பிசைந்து நிற்கிறார்களே!
இந்த நிலக் கையகப்படுத்தும் சட்டத்தால் பெரும் பாலும் பாதிக்கப்படும் மக்கள் யார் தெரியுமா? 80 சதவீத மக்கள் பழங்குடி மக்கள், 10 சதவீத மக்கள் தாழ்த்தப் பட்டவர்கள், 10 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்; ஆக இதிலும்கூட சமூக நீதி பலிகடா ஆக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

இந்தப் பிரச்சினையைத்தான் சென்னை அய்.டி.அய். மாணவர்கள், சமூகப் பொறுப்போடு விவா தித்து இருக்கிறார்கள். கருத்துக்களை வெளியிட்டுள் ளார்கள். நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த வகையில் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்குத் துணை போகிறது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதைத் தான் பிரதமர் மோடியின் மீதான விமர்சனம் என்று கூறி, சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தில் செயல்பட்டு வந்த அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை முடக்கியுள்ளனர்.

மூன்றாம் முறையாக அவசர சட்டம் மூலம் இதனைச் செயல்படுத்தத் துடிக்கும் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங் களின் அரசு என்று சென்னை அய்.அய்.டி. மாண வர்கள் கருத்துச் சொன்னதுதான் அவர்களின் அஸ்தி வாரத்தில் கை வைத்திருக்கிறது. அதனால்தான் அவசர அவசரமாக மொட்டைக் கடுதாசியை ஆதாரமாகக் கொண்டு அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் பெயரில் அமைந்துள்ள சமூக விழிப்புணர்வு அமைப் பினைத் தடை செய்துள்ளனர்.

பொதுவாக இந்துத்துவா கோட்பாடு விவசாயத்துக்கு எதிரானது. அதன் பார்வையில் விவசாயம் பாவத் தொழிலாகும் என்பதையும் அறிந்தால், இந்துத்துவா கட்சியான பிஜேபி அரசில் நிலக் கையகப்படுத்தும் சட்டத்திற்கான தாத்பரியம் புலப்படும் - எச்சரிக்கை!



Read more: http://www.viduthalai.in/page-2/102562.html#ixzz3bupC9fc7

தமிழ் ஓவியா said...

பரிதாபமே!

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)



Read more: http://www.viduthalai.in/page-2/102561.html#ixzz3bupUpewS

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவாளர் கடமை


நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி என்ற எந்தப் பற்றுமின்றி மானிடப் பற்றுடன், அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.
_ (உண்மை, 15.9.1976)



Read more: http://www.viduthalai.in/page-2/102627.html#ixzz3c0hqOdxV

தமிழ் ஓவியா said...

ஆப்பதனை அசைத்துவிட்ட இந்துத்துவாவாதிகளுக்கு அர்ப்பணம்
அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்
மும்பை, ஜாதவ்பூர், டில்லியிலும் துவங்கியது




டில்லி, ஜூன் 3_ சென்னை அய்.அய்.டி.யிலும் அம் பேத்கர், பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததன் எதிரொலியாக மும்பை, டெல்லி, ஜாதவ் பூரிலும் இந்த அமைப்பத் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை அய்.அய்.டி நிர்வாகம் மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் சர்வாதிகார ஆணைக்கு அடிபணிந்து, ஹிட்லரின் நடவடிக்கை யைப் போல் அம்பேத்கர் _ பெரியார்- வாசகர் வட் டத்தை தடை செய்தது. இந்தத் தடையை எதிர்த்து தமிழகத்தில் துவங்கிய போராட்டம் டில்லியிலும் எதிரொலித்தது.

திங்கள் அன்று மும்பை _ பவாயில் உள்ள அய். அய்.டி தலைமையத்தில் முற்போக்கு சிந்தனை யுள்ள மாணவர்கள் ஒன்று கூடி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து அம்பேத் கர் _ பெரியார்- _ புலே பெயரில் வாசகர் வட்டம் ஒன்று துவங்கப்பட்டது.

துவங்கிய உடனே அதன் முதல் கூட்டத்தில் இந்த மூன்று தலைவர்களின் கருத்துகளை மக்களி டையே பரப்பும் கொள் கைதான் இந்த வாசகர் வட் டம் துவங்கப்பட்டதன் நோக்கம் என்று அறிவிக் கப்பட்டது. இந்நிலையில் மும்பையைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து அய்.அய்.டி-யிலும் பெரி யார் _ அம்பேத்கர் வாசகர் வட்டம் துவங்கப்பட்டுள் ளது.

டில்லி, கான்பூர் அய்.அய்.டியில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட் டம் பல்வேறு குழுக்க ளைச் சேர்ந்த மாணவர் கள் ஒன்றிணை மீது ஆரம் பித்தனர்.

இதேபோல் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திலும் அம்பேத்கர் _ பெரியார்- மாணவர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் துவக்கம்

இந்தியாவின் மிக முக் கியமான உயர்கல்வியக மான டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செவ்வாய் அன்று அம் பேத்கர் _ -பெரியார் மாண வர் வாசகர் வட்டம் துவங் கப்பட்டது. மதவாத மாணவர் அமைப்பான எபிவிபி தலைமையகத் தின் எதிரிலேயே இந்த வாசகர் வட்டம் துவக்கப் பட்டது.

துவக்க விழாவில் கலந்து கொண்ட மாண வர் அமைப்பினர் செய்தி யாளர்களிடம் பேசும் போது அம்பேத்கர் _ பெரி யார் -வாசகர் வட்டமா னது உடனடியாக அனைத்து சமூகவலைதளங்களிலும் தங்களது அமைப்பிற்கென புதிய பக்கங்களைத் துவங் கியுள்ளது. மேலும் விரை வில் இதற்கென ஒரு இணையதளமும், கொள் கைகளை விளக்கும் இதழ் களையும் தொடர்ந்து வெளியிட முடிவுசெய்துள் ளதாக தெரிவித்தனர்.

டில்லி அய்.அய்.டி. மாணவர்கள் கருத்து

டில்லி அய்.அய்.டி அம்பேத்கர் _ பெரியார்-வாசகர் வட்ட மாணவர் கள் கூறியதாவது, இந்தியா வில் மொத்தம் 16 அய். அய்.டிக்கள் உள்ளன. தற்போது அய்ந்து அய். அய்.டிக்களில் பெரியார் _ அம்பேத்கர் வாசகர் வட் டம் துவங்கியிருக்கிறோம். இன்னும் சில நாட்களில் இந்தியா முழுவதிலும் உள்ள 16 அய்.அய்.டிக் களிலும் வாசகர் வட்டம் துவங்க தீர்மானித்து இருக் கிறோம்.

கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் உயர் கல்வி நிறுவனம் இந்துத் துவ சிந்தனைகொண்ட வர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனமாகும், அங்கே உள்ள மாணவர் களால் அம்பேத்கர் பெரியார்- _ வாசகர் வட்டம் துவங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

ஆகையால் மற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அய்.அய்.டிகளில் துவங்குவது மிகவும் எளிதான செயலாகும். விரைவில் அனைத்து அய்.அய்.டி மாணவர் வாசகர்வட்டத்தையும் ஒன்றிணைக்க இருக்கி றோம் என்று கூறினர்.

பிரதமர் மோடி மற்றும் இந்துத்துவா கொள் கைகளை விமர்சிக்கிறது எனக் கூறி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச் சகத்துக்கு ஒரு அனாம தேய கடிதம் வந்தது என்று கூறி ஸ்மிருதி இரா னியின் தலையீட்டால் தடைசெய்யப்பட்ட சென்னை அய்.அய்.டி பெரியார்- _ அம்பேத்கர் வாசகர் வட்டம் தற்போது பெரிய அளவில் இந்தியா முழுவதும் பரவி நிற்கிறது.

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று பெண்ணடிமைச் சின்ன மான தாலி அகற்றுதல் குறித்த நிகழ்ச்சியை சென்னை பெரியார் திட லில் திராவிடர் கழகம், தமிழர் தலைவர் தலை மையில் நடத்தியது.

இதற்கு தடை மற்றும் இந்துத்துவ அமைப்பின் போராட்டத் தின் காரணமாக பெண் ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றும் நிகழ்வு உலகம் முழுவதிலுமுள்ள முற்போக்குவாதிகளிடம் போய்ச் சேர்ந்தது. அதே போல் அம்பேத்கர் பெரி யார்- _ வாசகர் வட்டத் தின் தடையும் இன்று இந் தியா முழுவதிலுமுள்ள மாணவர்களை சென்ற டைந்துள்ளது.



Read more: http://www.viduthalai.in/page-8/102622.html#ixzz3c0izsbo6

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர்களுக்கு அருந்ததி ராய் ஆதரவு

சென்னை, ஜுன் 3_ மாணவர் அமைப்பால் என்ன நேர்ந்துவிட்டது? ஏன் கல்விநிறுவனத்தின் தலைவர் அவர்களைக்கண்டு அச்சப் பட வேண்டும்? ஏன் அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும்?

அதற்கான காரணங்க ளாக அவர்கள் கூறுவது வழ மையான முட்டாள்தனமான காரணத்தையேதான் குறிப் பிட்டுள்ளார்கள். வெறுப்பு களை வகுப்புகளுக்கிடையே பரப்புகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அடுத்த காரணமாக அமைப் பின் பெயரில் அரசியல் இருப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், இதேபோன்று செயல்பட்டுவரும் அமைப் பாக விவேகானந்தா வாசகர் வட்டம் இருப்பதற்கு இவை யெல்லாம் பொருந்தவில் லையாம்.

இந்துத்துவத்தின் தேசிய அளவிலான நிகழ்ச்சியாக கர்வாப்சியை (ஏற்கெனவே ஆர்ய சமாஜம் சார்பில் சுத்தி நிகழ்ச்சியைப்போன்று) நடத்திவந்தபோது தாழ்த்தப் பட்டவர்களை இந்துக்கள் என்கிற வளையத்துக்குள் கொண்டுவருவதற்காக இந்துமதத்தை வெளிப் படையாகக் கண்டித்தவ ராகிய அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளை , அவர் ஓர் இந்து என்று கூறிக்கொண்ட இந்துத்துவா அமைப்புகள் கொண்டாடி யதாக ஊடகங்களில் தக வல்கள் வெளிவந்தன.

அப் படி இருக்கும் போது, அம் பேத்கரைப் பின்பற்றுபவர் களாக இருப்பவர்கள் அவர் பெயரைப் பயன்படுத்தும் போது, ஹைர்லாஞ்சியில் உள்ள சுரோகா பாட்மாங்கே குடும்பத்தினர் கொல்லப் பட்டது ஏன்? செல்பேசியில் ஒலிக்கும்போது அம்பேத்கர் புகழ் பாடல் ரிங் டோன் ஒலித்ததால் தாழ்த்தப்பட்ட இளைஞரை அடித்தே கொன்றது ஏன்?

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்புக்குத் தடை போடுவதும் ஏன்? ஏனென்றால், எந்த நோக் கத்தாலோ, ஆட்டம் போடு வதன்மூலமாக ஆபத்தான இடத்தில் கைவைத்து விட்டார்கள். பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களிலும் ஜாதி யத்தை ஊடுருவச் செய்து விட்டார்கள். இந்த ஆட்சி யில் பல முனைகளிலும் அச்சுறுத்தல்களின் மூலமாக செய்துவரும் கேடுகளைவிட,

பகத்சிங் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரின் பெயரில் விழாக்களைக் கொண்டாடு வதன் மூலமாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்ன கேட்டினை செய்து விட்டது? இதுதான் அவர்களைக் கொந்தளிப்புக்கு உள்ளாக் கிள்ளது. ஆகவே, இதுதான் அவர்களைத் தடையை நீக்க வலியுறுத்திள்ளது.

இடதுசாரிகள் மற்றும் முற்போக்கான முசுலீம் அமைப்புகளுடன் கைகோர்ப் பதாக விடுதலை சிறுத்தை கள் கட்சியின் அறிவிப்பு அதற்கேற்பவே ஆட்சியா ளர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கு விதிக் கப்பட்டுள்ள தடையின் மூலமாக ஒருமித்த கருத்துள் ளவர்களை ஒன்றிணைப்ப தன் தொடக்கமாக அமைந் துள்ளது.

_இவ்வாறு அருந்ததிராய் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



Read more: http://www.viduthalai.in/page-8/102622.html#ixzz3c0jBmWOr

தமிழ் ஓவியா said...

அய்அய்டி இயக்குநருக்கு தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் அழைப்பாணை

புதுடில்லி, ஜூன் 3_ சென்னை அய்அய்டியில் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-, பெரியார் வாசகர் வட்டத்தின் அங் கீகாரம் ரத்து செய்யப் பட்ட விவகாரத்தில், மத் திய மனித வளத் துறைச் செயலர், சென்னை அய் அய்டி இயக்குநர் ஆகி யோருக்கு தாழ்த்தப்பட் டோர்களுக்கான தேசிய ஆணையம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

இருவரும் ஜூன் 8ஆம் தேதி ஆணையம் முன் ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த விவகா ரத்தில், சென்னை அய்அய் டியிடம் விளக்கம் கேட்டு ஆணையம் ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தது. "விதிகளை மீறி செயல் பட்டதால், அந்த மாண வர் அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட்டது' என்று அந்த கடிதத்திற்கு அய்.அய்.டி. நிர்வாகம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்த விசா ரணைக்காக ஆஜராகும் படி மத்திய மனித வளத் துறை செயலருக்கும், சென்னை அய்அய்டி இயக் குநருக்கும் செவ்வாய்க் கிழமை அழைப்பாணை கள் அனுப்பப்பட்டதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.



Read more: http://www.viduthalai.in/page-8/102622.html#ixzz3c0jIoVEr

தமிழ் ஓவியா said...

ஆனந்தவிகடன் (10.6.2015) தரும் தகவல்



1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை அய்.அய்.டி.யில் ஏராளமான மாணவர் அமைப்புகள் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

1. விவேகானந்தர் வாசிப்பு வட்டம்
2. வசிஷ்டர் வாசிப்பு வட்டம்
3. வியாஸர் வாசிப்பு வட்டம்
4. துர்வாசர் வாசிப்பு வட்டம்
5. இராமாயண வாசிப்பு வட்டம்
6. ஹரே இராமா, ஹரே கிருஷ்ணா வாசிப்பு வட்டம்
7. வந்தே மாதரம் இயக்கம்
8. ஜிந்தாபாத் (அரசியல் அமைப்பு)
9. க்வெஸ்ட் (அரசியல் அமைப்பு)
10. அய்.அய்.டி. ஃபார் சொசைட்டி
போன்றவை உள்ளன.
11. வர்ணம் (மாற்றுத் திறனாளிகள்)
12. அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் - இதற்கு மட்டும் தடையாம்!

அம்பேத்கரும், பெரியாரும் சமூக விரோதிகளா? தேச விரோதிகளா?

பார்ப்பனீய ஹிந்துத்துவ விரோதிகள் என்பதால் தான் கசக்கிறதோ?

மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது இது தானோ!

பெரியார் - அம்பேத்கர் என்ற இரு பெயர்களும் பஞ்சமர் சூத்திரர் எனும் வெகு மக்களின் எழுச் சித் தீ பிழம்பு - ஆதிக்க சக்திகளின் ஆணி வேரை அசைக்கும் என்ற அச்சம் தானே இதன் பின்னணியில் உள்ளது! வசிஷ்டர், வியாசர்கள் உலவும் இடத்திலே பெரியாரும், அம்பேத்கரும் நுழைந்தால்.. அதன் விளைவை அவர்கள் அறி வார்கள் அல்லவா! அதற்குத்தானே இந்தத் தடை!

இன்றைய சமூகப் போராட்டத்தின் அடிநாதமே இதுதான் - ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேர்வீர்!



Read more: http://www.viduthalai.in/e-paper/102669.html#ixzz3c65qe28K

தமிழ் ஓவியா said...

கல்வியாளர்கள் சந்தர்ப்பவாதம் பேசலாமா?

அய்.அய்.டி. மாணவர்கள் விவகாரம் என்ற தலைப்பில் இவ்வார துக்ளக் இதழில் (10.6.2015 பக்.6) கல்வியாளர் கருத்து ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னைஅண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திரு விஸ்வநாதன் துக்ளக் நிருபரிடம் தெரிவித்த கருத்து என்று அதில் கூறப் பட்டுள்ளது.

அவர் என்ன சொல்லுகிறார்? மாணவர்கள் கல்வி தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடலாம். கல்வி மற்றும் பாடத் திட்டத்தையொட்டிய கூட்டங் களை வேண்டுமானால் நடத்தி, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை அறியலாம். அரசியல் விவாதம் கல்வி நிலையத்திற்குள் வேண்டாத ஒன்று. இது மாணவர்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து, கல்வியைப் பாழடித்து விடும். கொள்கை சார்ந்த ஒரு அமைப்பு அனுமதிக்கப்பட்டால் மேலும் பல கருத்துகள் சார்ந்த அமைப்புகளும், கல்லூரிக்குள் உருவாகும். அரசியல் தேவை என்று கருதினால் அப்போது சர்ச்சைகளை நடத்தலாம். ஆனால் கல்விக்கூடம் அதற்கான இடம் அல்ல!! என்று திரு. விஸ்வநாதன் கூறி இருப்பதாக துக்ளக் கூறுகிறது.

மாணவர்கள் கல்வி தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடலாம் - அரசியல் பேசக் கூடாது - கல்விக்குப் பிறகு அதை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லுவதே பகுத்தறிவுக்கும் விரோதமானது; நாட்டில் எது நடந்தாலும் அதைப்பற்றிக் கவலை கிடையாது என்று மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டுமா?

மதுப் போதை, மருந்துப் போதை, சினிமா போதை, கிரிக்கெட் போதை என்ற வலைகளுக்குள் சிக்கி இருப்பதைப்பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை; ஆனால் மாணவர்கள் அரசியல் பேசுவது வேண்டாத வேலை என்று சொல்லுவது திரு. விஸ்வநாதன் அவர்களுக்கு வேண்டாத வேலை என்று சொல்லத் தோன்றுகிறது.

இதில் இன்னொன்றை மறைத்துப் பேசுகிறார்கள். அய்.அய்.டி. வளாகத்துக்குள் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்துத்துவா பேசும் ஏ.பி.வி.பி.யும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிர் வினையாக இன்னொரு அமைப்பு வருவது தவிர்க்கப்பட முடியாதது தானே?

விவேகானந்தர் பெயரில் இயங்கும் ஓர் அமைப்பு கீதைகளைப் பிரச்சாரம் செய்கிறது. கீதை வருணா சிரமத்தை வலியுறுத்தக் கூடிய இந்து மத நூல்; வைசியர்களும், சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்றும் கூறுகிறது. அந்த நூலைப் பிரச்சாரம் செய்தால், அதற்கு எதிர்ப்பான குரல் கிளம்புவது இயல்புதானே!

இதில் என்ன கொடுமை என்றால், மற்ற மற்ற அமைப்புகள் எல்லாம் அரசியல் செய்தபோது, அரசியல்வாதிகள் அழைக்கப்பட்டு அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசை விமர்சித்தபோது, மத்திய அரசுக்குரிய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வர அன்றைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் உருவத்தை அதே அய்.அய்.டி. வளாகத்தில் இந்துத்துவவாதிகள், ஏபிவிபி அமைப்பு முன்னின்று எரித்தபோது திரு. விஸ்வநாதன் போன்றவர்கள், இப்பொழுது சொல்லும் அறிவுரையைச் சொல்ல ஏன் முன் வரவில்லை? இதே துக்ளக் இதழும் ஏன் அக்கறை காட்டவில்லை? இப்பொழுது அதற்கு எதிர்ப்பான குரல் கொடுக்கும் அமைப்பு முன்வரும் பொழுது, அதுவும் சமூக நீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் பாபா சாகேப் அம்பேத்கர் பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கும் பொழுது இதோபதேசம் செய்ய முன்வருகிறார்கள் என்றால், இதற்குள் புதைந்திருக்கும் உணர்வு என்ன?

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சமூக நீதி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. சட்டத்திற்கு விரோதமாக சமூக நீதிக்கு எதிரான அமைப்புகள் செயல்பட அனுமதிக்க லாம்; இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமூக நீதிக்கான சரத்தை வலியுறுத்தும் சட்டப்படியான செயல்பாட்டை அனுமதிக்கக் கூடாதா?

சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் அய்.அய்.டி. நிறுவனத்தின் வளாகத்துக்குள் தந்தை பெரியார் - பாபா சாகேப் அம்பேத்கர் சிந்தனைகள் முன் எடுக்கப்பட்டால் ஆதிக்கத்தின் அஸ்திவாரத்தையே நொறுக்கி விடும் என்ற அச்சத்தால் தான் இந்த அமைப்பைத் தடை செய்ய முன் வந்துள்ளனர் - என்பதுதானே உண்மை.

துக்ளக் ஒன்றில் ஈடுபடுகிறது என்றால் அதில் வருணாசிரம அரசியல் இருக்கும் என்பதை திரு. விஸ்வநாதன் போன்றவர்கள் புரிந்து கொள்ளாதது பரிதாபமே!



Read more: http://www.viduthalai.in/page-2/102650.html#ixzz3c66jUSlK

தமிழ் ஓவியா said...

பொதுவுடைமை- பொதுவுரிமை

பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

- (குடிஅரசு, 25.3.1944)



Read more: http://www.viduthalai.in/page-2/102649.html#ixzz3c66tTpJW