Search This Blog

20.6.15

பார்ப்பனியம் பாய்வதற்குப் பல வடிவம் எடுப்பதைப் பாரீர்!-பெரியார்

பார்ப்பனியம் பாய்வதற்குப் பல வடிவம் எடுப்பதைப் பாரீர்!

 
பார்ப்பனியத்தின் படுமோசமான போக்கை, அதனால் ஏற்படும் ஆக்கிரமமான அழிவுகளை நாம் அடிக்கடி எடுத்துக் காட்டி அப்பார்ப்பனியப் பிடிப்பிலிருந்து நாம் (திராவிடர்கள்) அகன்றால்தான் நமக்கு வாழ்வுண்டு என்பதையும் சொல்லி வந்திருக்கின்றோம்.

பார்ப்பனியம் இந்த நாட்டில் நுழைந்த காலத்திலிருந்தே அதற்கு எதிர்ப்பு இருந்து வந்திருக்கின்றது. அதற்கு ஏற்பட்டிருக்கும் அளவற்ற எதிர்ப்புக்குப் பிறகும், அது இன்னும் ஆட்சி செய்கிறதென்றால் - ஆட்சியை ஆட்டி வைத்து வருகின்றதென்றால், அதற்குக் காரணம் அந்தப் பார்ப்பனியத்தின் "எட்டினால் குடுமியைப் பிடி, எட்டாது போனால் காலைப்பிடி" என்கிற போக்குத்தான் காரணம் என்றும் விளங்கி வந்திருக்கின்றோம்.

இந்தப் போக்கினாலேயே, அதாவது வளைந்து, தெளிந்து, மறைந்து நடத்தும் நடவடிக்கைகளினாலேயே, அதன் விஷக்கடிக்கு - வெறிப் பற்களுக்கு இரையானவர்களாகவும், இரையாகிக் கொண்டிருப்பவர்களாகவும் திராவிடர்கள் இருந்துவர வேண்டியதாயிருக்கிறது. இருந்தும், இவ்வளவு அழிவிற்குப் பிறகும்கூட திராவிடர் சமுதாயம் தனக்கு ஏற்பட்டு வரும் மீள முடியாத கேட்டையுணரவில்லை என்றால், இவ்வளவு மானமற்ற சமுதாயம் வேறு ஒன்றும் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது என்பதைத் தவிர நம்மால் வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.

ஆகஸ்ட் பதினைந்தை, ஆரியத்தின் - பார்ப்பனியத்தின் சுதந்திரம் என்றும் சுயராஜ்ஜியம் என்றும் நாம் சொல்ல வேண்டியதாக இருப்பதை, முன்பு ஒப்புக்கொள்ளாதவர்களும் கூட ஒப்புக் கொள்ளத்தக்கவிதமாய் ஆட்சி நடைபெற்று இப்பொழுது மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் பார்ப்பனியம் திராவிடர்கள் மீது பாய்வதற்குத் தன் கொம்புகளை நன்றாகக் கூர்மையாக்கிக் கொள்ளுகிறது.

படையெடுத்து வந்த வெளிநாட்டவர்களுக்கெல்லாம் இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்து, தான் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தோடு நடந்து வந்தது பார்ப்பனியம். வெள்ளையராட்சி ஏற்பட்ட பிறகு, அதை நிலைக்க வைத்து விக்டோரியா காலத்தில் ஒப்பந்தம் பேசித் தனது சுக வாழ்வுக்குக் கேடு இல்லாதபடி பார்த்துக் கொண்டு, முன்பு தன்னால் கூறிய மிலேச்சர்களுக்குப் பின்பு பூரண கும்பம் தூக்கிப் பூஜிக்க ஆரம்பித்தது பார்ப்பனீயம். அந்தக் காலத்தில் மற்ற மக்களையெல்லாம் நிரந்தர அடிமையாயிருக்கத் திட்டம் வகுத்துக் கொடுத்தே, தான் மட்டும் கங்காணியாக இருக்க வழி செய்து கொண்டது பார்ப்பனீயம். 

வெள்ளையராட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி பலமான நேரத்தில் அக்கிளர்ச்சி ஸ்தாபனத்தைக் கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களைப் பலி கொடுத்து உறிஞ்சிப் பிழைத்து வந்தது இப்பார்ப்பனியம். இரண்டாவது உலக யுத்தம் தொடங்கிய பிறகு, ஜெர்மானியன் வரலாமென்று கனவு கண்டு, அதற்குத் தக்க விதமாய் ஆயத்தப்படுத்திக் கொள்ள, அதாவது ஆரிய சாம்ராஜ்ய பதியே! வருக! வருக! என்று வரவேற்புக் கொடுப்பதற்காக ஜெர்மன் மொழியைக் கற்க ஆரம்பித்தது பார்ப்பனீயம்.

வெளியுலக நெருக்கடியின் காரணமாகக் கலகக்காரர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னுடைய நன்மைக்குக் கேடில்லாதபடி, இந்த நாட்டை வடநாட்டுப் பாசிஸத் தலைவர்கள் கையில் ஒப்படைத்து விடுகிறேன் என்று வெள்ளைக்காரன் கூறிய பிறகு, இந்த நாட்டுப் பார்ப்பனியத்துக்கு ஒரே கும்மாளமாகக் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. தன்னினத்திற்கு மறைவாகச் சாதங்களைத் தேடிக் கொண்டு வந்த நிலைமை மாறி வெளிப்படையாகவே கொக்கரித்துத் திரியும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு எல்லா வகையான பார்ப்பனர்களும், லோக குரு சங்கராச்சாரியிலிருந்து லோட்டா அலம்பும் கிருஷ்ணமூர்த்தி வரை எக்காளமிட்டுத் திரியும் நிலையை இன்று பார்த்து வருகின்றோம். இந்த முயற்சிக்கு நம்மவர்கள் என்று சொல்லத்தக்க சில திராவிடர்களும், விபீஷணர்களாகி இருக்கும் நிலையை எண்ணும்போது நாம் உண்மையிலேயே வருந்த வேண்டியதாயிருக்கிறது.

"இந்து மதத்திலும் பண்பாட்டிலும் நம் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் சிரத்தையுண்டாகப் புத்தகம் ஒன்று தமிழில் எழுதுவோருக்கு, ரூ.1000-பரிசு. புத்தகம் 12-வயது முதல் 16-வயது வரையுள்ள பையன்களுக்கும், பெண்களுக்கும் படிக்கத்தக்கதாயிருக்க வேண்டும். சர்.எஸ்.வரதாச்சாரி, திவான்பகதூர் கே.சுந்தரம் செட்டி கே.பாலசுப்பிரமணிய அய்யர், சி.கே.சுப்பிர மணிய முதலியார், டாக்டர் வி.ராகவன் ஆகியோர் தீர்ப்புக் கூறுவர். இத்தீர்ப்பு கும்பகோணம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி அங்கீகாரத்துக்குட்பட்டதாகும்" என்று ஒரு செய்தி சுதேச மித்திரனில் வெளியாகி இருக்கிறது.

தம் சிறுவர் சிறுமிகள் யார்? திராவிடர் சிறுவர் சிறுமிகளைத் தானே இங்கே "நம்" என்று உரிமை கொண்டாடப்படுகின்றது. இந்து மதம் என்று ஒரு மதமே இல்லை என்று பலகாலமாக நாம் சொல்லி, உண்மையாய் இல்லாத ஒன்றை நாம் ஒப்புக்கொண்டு வந்ததனாலேயே இந்த இழிவான நிலைமைக்கு நாம் ஆளாகி வந்திருக்கின்றோம். இதனைப் பல ஆராய்ச்சியாளர்களும் சைவ வைணவப் பண்டிதர்களும்கூட ஒப்புக்கொண்டு பேசி எழுதி வந்திருக்கிறார்கள். அப்படியிருக்க இம்மாதிரியான ஒரு முயற்சியை ஒரு மடச்சாமியார் ஏன் தொடங்க வேண்டும்? இதனை மற்றையப் பார்ப்பனர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? அதில் சுதந்திரங்களும், சுப்பிரமணியங்களும் ஏன் அந்த ஜோதியில் கலந்து கொள்ள வேண்டும்?

"பார்ப்பன ராஜ்யம் நடக்கிறது. வெள்ளைக்காரனாட்சியினால் வர்ணாசிரம தருமம் மாறிப்போய்விட்டது. வர்ணாசிரமத்தை நிலைக்க வைக்க நாம் மகாத்மாவை படைத்துக் கொண்டிருக்கின்றோம். வெள்ளைக்காரன் ஆட்சியிலிருந்து பல சூத்திரர்கள் நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் தேவடியாள் மகன்? என்று கேட்க ஆரம்பித்திருக்கின்றார்கள். இவர்களை நாம் எப்படியாவது அடக்கிவிடுவோம். அதாவது அவர்களிலேயே சிலருக்கு உத்தியோகங்களைக் கொடுப்பது, சிலருக்குப் பண ஆசை காட்டி வியாபாரங்களுக்குச் சலுகை காட்டுவது. இவ்வாறு செய்து இவர்களைக் கொண்டே மற்றவர்களை அடக்கிவிடுவோம். எதிர்காலத்திலேயும் இம்மாதிரியான தொந்தரவுகள் இருக்கக் கூடாது. அதற்கு இளமையிலேயே இந்த வருணாசிரம தருமத்தைப் புகுத்திவிடுவோம். இப்போதிருக்கிற கல்வி மந்திரி நம்முடைய அடிமை. அந்த அடிமையைக் கொண்டு திராவிடர் உணர்ச்சி கொண்டு ஒரு சில ஆசிரியர்களையும் ஒழித்துவிட ஏற்பாடு செய்து விட்டோம். திராவிட உணர்ச்சியை ஊட்டி வந்தவர்களை ஒழித்துவிட்டால் மட்டும் போதாது, அதற்கு மாறான நம்முடைய கருத்தை நம்மினத்தின் பெருமையை, திராவிடர்கள் என்றுமே சூத்திரர்களாக இருக்கத்தான் வேண்டுமென்பதை, நிலைநாட்டுவதற்கு இனிப் புராணங்கள் போதாது. ஆதலால் "பழைய கள் புதிய மொந்தை" என்பதுபோல் பழைய சரக்கையே சிரத்தையுண்டாக்கத்தக்க வகையிலே எழுத வேண்டும். அவ்வாறு எழுதியதை ஏ! சூத்திர அவினாசியே! பள்ளிக் கூடங்களிலே நாஸ்திகம் பரவிவிட்டது, அதைப் போக்க வேண்டுமானால் இதை உடனே பாடத்திற்குரியவை, பிள்ளைகளைப் படிக்கச் சொல் என்று சொல்ல வேண்டும். கேட்டுத்தானே ஆக வேண்டும். கேளாது போனால், அதாவது அதைப் பள்ளிக்கூடப் பாடத் திட்டத்திற்குக் கட்டாயமாக வைக்காது போனால், அந்த அவினாசியையே ஒழித்துவிடுவோம் என்பது அவினாசிக்குத் தான் தெரியாதா என்ன? என்கின்ற எண்ணமே தவிர இதற்கு நம்மால் வேறு ஒரு அர்த்தமும் சொல்ல முடியவில்லை. இந்து மதத்திற்குப் புத்துயிர் தரும் இந்த முயற்சியிலே "இந்துலா" விலேயே மூழ்கி அதற்கு அடிமையாகி விட்ட சுந்தரஞ் செட்டியும், சைவமணி சுப்பிரமணிய முதலியாரும் தீர்ப்புக்கூற உடன்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையாயிருந்தால் நாம் அவர்களுக்குச் சொல்லுகிறோம்.

அய்யா, பெரியவர்களே! உங்களுக்கு வயதோ ஆகிவிட்டது. இதுவரைக்கும் நீங்கள் பிறந்த இனத்திற்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறீர்களா? அதுதான் இல்லையென்றால் தீமையாவது செய்யாமலிருந்திருக்கிறீர்களா? உங்களிலே ஒருவர் நீதிபதி, மற்றொருவர் சைவப் பண்டிதர், கடைசிக் காலத்திலேகூட திராவிடர்கள் உங்களை மறக்கக்கூடாது என்பதற்காகவா இந்த வேலை. நீங்கள் அய்வரில் இருவராக இருந்து அளிக்கப் போகின்ற தீர்ப்பு, பிறந்த இனம் உங்களுடைய பிற்காலச் சந்ததி, நான்காவது அய்ந்தாவது ஜாதிதான், அந்தந்தச் ஜாதியர்கள் அவரவர்களுக்குக் குறிப்பிட்ட வேலையைத்தான் செய்ய வேண்டும் என்று கூறப் போகின்ற தீர்ப்புத்தானே. இந்தத் தீர்ப்பைக் கூறி நீங்கள் நீண்ட பழியைத் தேடிக் கொள்ளாதீர்கள் என்பதுதான்.

லோக குருவின் இம்மாதிரியான முயற்சியினால் கொண்டு வரவிருக்கும் நூல் காலப்போக்கில் நமது திராவிடர் இளைஞர்களுக்குப் பாட நூலாக - அதுவும் கட்டாயமாகப் படிக்க வேண்டியதாக இருக்கப் போகின்றது என்பதை நாம் இப்பொழுதே சொல்லுகிறோம். திராவிடர் பெருங்குடி மக்களே! இந்த ஏற்பாட்டை அதாவது என்றைக்கும் நீங்கள் தேவடியாள் பிள்ளையாகவே இருப்பதற்கு ஒப்புக் கொள்ளப் போகிறீர்களா என்பதுதான் நமது கேள்வி? இதுதான் பார்ப்பனியத்தின் ஆசை என்பதை நாம் அதிகப்படுத்திக் கூறுகின்றோம் என்று யாரேனும் நினைத்தாலும் நினைக்கலாம். இதோ கீழே படியுங்கள்:-

"பாரத நாட்டு மக்களாகிய நம்மவர்கள் சென்ற நூற்றாண்டு முதல் நமது கலை, நாகரிகம், தர்மம் இவைகளைக் கற்றறிந்து கொள்ள சந்தர்ப்பமில்லாமல், ஆங்கிலத்தைக் கற்கும் போட்டியிலேயே ஈடுபட்டதனால் நமது தர்மத்தின் ஸ்வரூபம் விளங்காமலும் அதில் ஆர்வம் குறைந்தும் காணப்படுகின்றது. இந்நிலையில் நம் முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக வழிபட்டு நம்முடைய உண்மையான நாகரிகம் நிலை பெற்று நிற்கும்படி, பொது மக்களுக்கு உதவியிருக்கும் அறமுறையை நம் தர்ம நூல்களில் உள்ளவாறு அறிந்து அநுஷ்டிப்பது நம் எல்லோருடைய கடமையுமாகும். இந்நோக்கத்தோடு ஸ்ரீ மடத்தின் ஆதரவுடன் இந்து கலாச்சாரக்கழகத்தாரால் அவ்வப்பொழுது அற (தார்மிக) வெளியீடுகள் பதிப்பித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வெளியீடுகள் கூடிய வகையில் எல்லாப் பொது மக்களையும் எட்டும்படி, பிரசாரம் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபடச் சவுகரியமுள்ளவர்கள் எல்லோரும், இத்தொண்டில் உதவுமாறு இதன் மூலம் கோரப்படுகிறது. இவ்விதம் ஈடுபடச் சவுகரியமுள்ளவர்கள், தங்களுடைய முழுப் பெயர் விலாசங்களை மடத்து மானேஜருக்காவது அல்லது கும்பகோணம் இந்து கலாசார கழகத் தலைவர் ஸ்ரீ ஆர்.கந்தசாமி மூப்பனார் என்ற விலாசத்திற்காவது எழுதி அனுப்ப வேணும். நாங்கள் வசிக்கும் இடத்திற்குச் சமீபமாக எவ்வளவு தூர எல்லைக்குள் பிரசாரம் செய்ய சவுகரியப்படும் என்பதையும் தெரிவிக்க வேணும். தங்களுக்குத் தெரிந்த வரையில் எந்தெந்த ஊர்களில் பஜனை மடங்கள் முதலிய சைவ வைஷ்ணவ ஆஸ்திக ஸ்தாபனங்கள் இருக்கின்றன என்பதையும் கூடிய வரையில் முழு விவரங்கடன் எழுதும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது."

இது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குருவின் மடம் ஏஜென்ட் தெரிவித்த விக்ஞாபனம். (20-11-1947- சுதேச மித்திரனில் உள்ளது அப்படியே இங்கு தரப்பட்டிருக்கிறது.)

இதைத் திராவிடத் தோழர்கள் பலமுறை கருத்தூன்றிப் படிக்க வேண்டுமென்பது நமது ஆசை, வெள்ளைக்காரனாட்சியினால் வருணாச்சிரம தருமம் குலைந்து போய்விட்டது. (உண்மையில் பாதுகாத்தே வந்திருக்கிறது) இப்போது வந்திருக்கிற ராமராஜ்ஜிய ஆட்சியில் இது பழையபடியும் நன்றாக இடம் பெறவேண்டும் என்பது தான் பார்ப்பனியத்தின் முயற்சி என்பதை இந்த விக்ஞாபனத்தின் முதற்பகுதி அறிவிக்கிறதே தவிர வேறென்ன?

இந்தச் செயலுக்கு ஒரு கழகமாம்! அதற்கு மூப்பனார் தலைவராம்! தார்மிக வெளியீடு வழங்க ஏற்பாடாம்! அதைப் பிரசாரம் செய்யச் சவுகரியமுள்ளவர்கள் உதவவேண்டுமாம்! எப்படியிருக்கிறது பார்ப்பனியத்தின் பாய்ச்சல்?

ஏமாந்த நம் சோணகிரிகள் இதற்கும் அகப்படாமல் போகமாட்டார்கள். நாலு சோணகிரிகளை மேய்ப்பதற்கு ஒரு பார்ப்பான் வீதம் பாதுகாவலனுக்குப் போட்டு, இந்தப் பிரசாரம் நம் நாட்டுக் கிராமங்களில் நடப்பதோ, அதற்கு நம்முடைய சோணகிரிகளே பணம் கொடுப்பதோ நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இராமாயணம் பாரதங்களை பழைய சோணகிரிகளான ராஜாக்கள் இருந்த காலத்தில், பிரசாரம் செய்வதற்கு ஊர் ஏற்பாடாகி இருந்ததாம். இது கதையல்ல, கல்வெட்டுச் சொல்கிறது. ஊருக்கு ஒரு பார்ப்பான் அவன் அந்தந்த ஊரிலே இராமாயணம் பாரதங்களை மாற்றி மாற்றிப் பிரசாரம் செய்ய வேண்டும். அந்த ஊரிலே அவனே பொருளைச் சம்பாதித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும். எப்படிப் பொருளைச் சம்பாதிக்கிறது? தெரியுமா? நாட்டு ராஜா பல வரிகள் மூலம் வசூல் செய்வது போல இந்த "ஊர் ராஜா" அரசன் போடாத வரிகளையெல்லாம் போட்டு வசூல் பண்ணிக்கொள்ளுகிறதாம். அதாவது நாட்டு ராஜா மத்திய கவர்ன்மென்ட் என்றால் இந்த ஊர் ராஜா மாகாண கவர்ன்மென்ட் மாதிரி. ஆமா, மாதிரிதான். ஏனென்றால், நம் மாகாண கவர்ன்மென்ட் தன் தேவைக்கெல்லாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இந்த ஊர் ராஜா அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பதில்லை. இந்த மாதிரியான ஓர் ஏற்பாடு இனி நம் நாட்டிலே நடந்தால் கூட நாம் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

நாட்டிலே தமிழுணர்ச்சி பெருகியிருப்பதையறிந்த நயவஞ்சகப் பார்ப்பனியம், இதற்குப் பெயர் கொடுத்திருக்கிறது. கலாச்சாரக் கழகம் என்று, இதற்குத் தலைவர் கந்தசாமி மூப்பனார். திராவிடன் கையைக் கொண்டே திராவிடன் கண்ணைக் குத்த முயலும் பார்ப்பனியத்தின் படுமோசத்தை - ஜால வித்தையை திராவிடர்களே தெரிந்து கொள்ளுங்கள்.

மதுவிலக்கைச் செய்துவிட்டு, மதபோதையை ஊட்டி வருகிறது நமது ராமராஜ்யம். இது ஆச்சாரியாரின் அற்புதமான மூளையிலே உதித்த ஆலோசனை. இந்த ராமராஜ்யத்திலே லோக குருக்கள் கட்டளைக்கிணங்க மூப்பனார்கள் "இந்து பல்லக்கைச்" சுமப்பார்களேயானால் கேட்கவா வேண்டும்? நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிக விரைவிலேயே, பழைய காட்டுமிராண்டித்தனமான ஆட்சியை ஏற்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமோ அவையெல்லாம் செய்யப்படுகின்றது என்றுதான் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.

"இந்த லோககுரு" (எந்த லோகத்திற்கோ) முயற்சி தவிர, பிராமண சேவா சங்க முயற்சிகள் வேறு நடந்த வண்ணமாயிருக்கின்றன. சங்கக் காரியதரிசி, முதல் முதல் தஞ்சை ஜில்லாவில் சுற்றுவதாகத் திட்டம். அங்கங்கே பார்ப்பன மிராசுதார்களைக் கண்டும் நம் "மூப்பனார்களை"க் கண்டும் என்னென்ன முறையில் எப்படி எப்படி திராவிடர்கள் பொருள்களைத் திரட்டலாம்? என்று அக்கிரகாரங்கள் இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று வகுத்திருக்கும் திட்டங்கள் - ஆலோசனைகளைக் கூறலாம். இந்தச் சங்கத்திலே படைவேறு திரட்டி பயிற்சியும் கொடுக்கிறார்களாம். "பார்ப்பாரப் பிள்ளையாவது நண்டு பிடிக்கிறதாவது" என்று நாம் கேலி பேசலாம். இவ்வாறு கேலி பேசுவது, ஒருவேளை திராவிட - ஆரிய இரத்தக்கலப்பு ஏற்படுவதற்கு முன்னாலே பேசினால் ஏதாவது அர்த்தமிருக்கலாம். இப்போது அவ்வாறு கேலி பேசுவது நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல்தான் என்பது நமது எண்ணம்.

இப்போது சமீப காலங்களில் நடந்த செயல்களை நினைப்பூட்டிப் பாருங்கள். கல்லூரிகளிலே பார்ப்பன மாணவர்களுக்கு இடம் போதவில்லை என்பதை அறிந்தவுடனே, எவ்வளவு விரைவாகத் திராவிடர்களுடைய பொருள் பலத்தைத் திரட்டி எத்தனை லட்சங்களைக் கொண்டு விவேகானந்தா கல்லூரியைக் கட்டி முடித்து "பார்ப்பனர்களுக்கு மட்டும்" என்று போர்டு போடாமலே பார்ப்பன மாணவர்களையே சேர்த்துக் கொண்டு பார்ப்பனியம் எப்படி ஒரு கல்லூரியை நடத்தி வருகின்றது? கோவிலுக்குள்ளே செருப்புக் காலோடு நடந்து கருப்புச் சட்டைக்காரர்கள் ஆபாசமாகப் பேசினார்கள் என்ற கட்டுக்கதையைப் பரப்பிக் காலிகளைக் கொண்டு மதுரையிலே பார்ப்பனியம் எப்படி தன் வெறிச் செயலை நடத்திக் காட்ட முடிந்தது? தன் பொருளைச் செலவு செய்யாமலே, தான் போர்க் களத்தில் இறங்காமலே பார்ப்பனியம் எவ்வாறு தன் காரியங்களிலே வெற்றி பெற்று வந்திருக்கிறது?

எதிரியை - எதிரியின் பலத்தைக் கேவலமாகக் கருதுவது ஒருவருக்கு ஒரு நாட்டாருக்கு அழிவையே தரும் என்பது அறிஞர்கள் முடிவு. முதலாவது உலக மகா யுத்தத்திலே ஜெர்மனி தோற்றதற்குக் காரணம், ஜெர்மன் படை வீரர்களுக்கு அய்ரோப்பியர்களின் கோழைத்தனத்தைப் பற்றியும் வஞ்சக தந்திரச் செயல்களைப் பற்றியும் ஏராளமான கதைகளைச் சொல்லி அய்ரோப்பியர்களைக் கேலியாகக் கருதும்படி ஜெர்மானிய வீரர்களுக்கு, ஜெர்மானியத் தலைவர்கள் ஊட்டி வந்த உணர்ச்சியே காரணமாகும் என்று அந்நாட்டுத் தலைவர்கள் கூறுகின்றனர். இந்தப் படிப்பினையை நாம் திராவிடர்களுக்கு இந்த நேரத்தில் நினைப்பூட்டுகின்றோம்.

இவையல்லாமல் சமஸ்கிருத சாகித்ய பரிஷத் என்ற பெயராலே செத்த மொழியைச் சிங்காரிக்கும் சாஸ்திரிகள் வேறு சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு அங்கங்கே கூடித் திட்டமிட்டு வருகின்றனர்.

இவைகளையெல்லாம் திராவிடத் தோழர்கள், அவர்கள் எக்கட்சியினராயிருந்தாலும் எண்ணிப் பார்த்து ஒரு முடிவிற்கு வரவேண்டாமா? நாம் திராவிடர் என்கின்ற உணர்ச்சியைக் கொள்ள வேண்டாமா? திராவிடத் தோழர்களே! தயவு செய்து எண்ணிப் பாருங்கள், என்று மிகப் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.



-------------------------- 'ஈட்டி' என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. ”குடிஅரசு”, 06.12.1947

19 comments:

தமிழ் ஓவியா said...

அய்யா சொன்னதை அப்பழுக்கற்ற முறையில் அப்படியே நடத்திக் காட்டிய கொள்கைத் திருமணம்

சனி, 20 ஜூன் 2015


- கவிஞர் கலி. பூங்குன்றன்




இவர் குடும்பத்தில் மூத்த மகன் மத ஒழிப்புத் திருமணத்தைச் செய்து கொண்டார். இன்னொரு மகன் மாநில எல்லையைத் தாண்டி திருமணம் செய்து கொண்டார். மகளோ மலேசிய மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இன்னொரு மகளோ சிங்கப்பூர் மண்ணில் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் மகனை வாழ்க்கைத் தோழனாக வரித்துக் கொண்டார்.

பேத்தி செய்ததோ இவற்றையெல்லாம்விட அதிரடி! மாமனார் பஞ்சாப்காரர், மாமியாரோ ஆந்திராக்காரர் - அந்தக் காலத்திலேயே காதலித்துக் கடிமணம் செய்து கொண்டோருக்குப் பிறந்த பொறியாளரை தமது வாழ்க்கை இணையராகத் தேர்வு செய்து கொண்டார்.

இதைப் போல பிள்ளைகள் இருந்தால் பெற்றோர் களுக்கு எவ்வளவு சுமை மிச்சம்.
அடடா, பெண்ணுக்கு மாப்பிள்ளையையும், மாப்பிள்ளைக்குப் பெண்ணையும் தேடி அலைந்து அலைந்து களைத்துப் போன எத்தனை எத்தனை பெற்றோர்களை நாளும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்!

நண்பர்களைச் சந்தித்து விட்டால் தங்கள் சோகக் கதைகளை ஒரு வழியில் கொட்டி முடித்து, கொஞ்சம் ஆசுவாசம் அடைவதைப் பார்க்கிறோம்.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழி உண்டு. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழிகூட உண்டு.

இந்தப் பிள்ளைகளின் பாட்டனார் பாட்டிகள் என்ன சாதாரணமானவர்களா? 1934ஆம் ஆண்டிலேயே புரட்சி செய்தவர்கள். மணமகனோ மனைவியை இழந்தவர்; மணமகளோ துணைவரை இழந்தவர்; வெவ்வேறு ஜாதிகளையும் சேர்ந்தவர்கள். இந்த இருவரின் புரட்சித் திருமணம் உண்மையான புரட்சித் தலைவரான தந்தை பெரியார் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றது.

அந்த வாழ்க்கை ஒப்பந்தம் நடந்து 18 ஆண்டு களுக்குப் பின் (1953) முதல் தாரத்தின் மகனின் மனைவி (அதாவது மருமகள்) சொத்துத் தொடர்பாக வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தார்.

அதனை இரு நீதிபதிகள் ஜஸ்டிஸ் ராஜகோபாலன் அய்.சி.எஸ். ஜஸ்டிஸ் எஸ். சத்தியநாராயணராவ் என்ற இரு பார்ப்பனர்கள் விசாரித்தார்கள்.

அந்தத் தீர்ப்பில் என்ன கூறப்பட்டது தெரியுமா?

சுயமரியாதை முறையில்  திருமணம் செய்து கொண்ட வர்கள் இவர்கள். சாஸ்திரங்களின்படி நடைபெறவில்லை. சப்தபதி என்ற ஏழு அடி எடுத்து வைக்கவில்லை. ஓமம் வளர்க்கப்படவில்லை. எந்தச் சடங்கும் நடத்தப்படவில்லை. இப்படி நடப்பது வழமையான (Customary Marriage)  திருமணமா என்றால் அதுவும் இல்லை. யாரோ சிலர் கூடி விருப்பத்துக்கு ஏற்ப, நாங்கள் திருமணம் நடத்துகிறோம் என்று கூறி அவர்கள் விருப்பத்துக்கேற்ப ஒரு தற்காலிக ஏற்பாடாக (In Some AD hoc form) செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் அனை வரும் சட்டப்படியான பிள்ளைகளாகவே கருத முடியாது; இந்து மதத்தில் வைப்பாட்டிகளாக இருப்பதற்கும், அவர் களுக்குப் பிள்ளைகள் பிறப்பதற்கும், அப்பிள்ளை களுக்குத் தகப்பன் சொத்தில் பங்கு பெற உரிமை உண்டு என்பதால் இவர்களது பிள்ளைகளுக்குச் சொத்தில் பங்கு உண்டு; ஆனால் இவர்கள் சட்ட விரோத வைப்பாட்டியின் பிள்ளைகளாகவே கருதப்படுவார்கள் என்று தீர்ப்புக் கூறினார்கள் இரு பார்ப்பன நீதிபதிகள். என்னே கொடுமை!

தமிழர்கள் மத்தியில் தமிழர் தலைவர்களைக் கொண்டு தாய் மொழியில் நடத்தப்பட்ட திருமணத்திற்கு பார்ப்பன தர்பாரில் எவ்வளவு கேவலமான அவமானங்களை தமி ழர்கள் சுமக்க நேர்ந்திருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

இவ்வளவு அவமானங்களையும் சுமந்து கொண்டு, சட்டமும், சாஸ்திரமும் என்ன சொல்லுகிறது என்பது முக்கியமல்ல.

எங்கள் தலைவர் தந்தை பெரியார் என்ன சொல்லுகிறார்? எங்கள் தன்மானம் என்ன சொல்லுகிறது? என்பதுதான் முக்கியம் என்று லட்சோப லட்சம் திருமணங்களை சுயமரியாதை முறையில் செய்தார்களே அவர்களின் கொள்கை உணர்வுக்குக் கோடி கோடி வணக்கங்களைச் சொல்ல வேண்டாமா? இப்படியொரு புரட்சியை உண்டு பண்ணிய பகலவன் பெரியாருக்கு வாழ்நாளையே தமிழர்கள் தத்தம் செய்ய வேண்டாமா ? பிரச்சினைக்கு வருவோம். 1934இல் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற அந்த சுயமரி யாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது அந்தத் திருமணத் துக்குச் சொந்தக்காரர்கள் யார் தெரியுமா?

நமது தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் என்று மதிப்போடு உலகத்தால் அறியப்பட்ட நமது மானமிகு கி. வீரமணி அவர்களின் மாமனார் மாமியார் தான் அவர்கள்! கோட்டையூர்  சிதம்பரம், அவர் துணைவியார் ரெங்கம்மாள் ஆகியோர் ஆவர்.

1934இல் நடந்த திருமணம் செல்லுபடியாகாது என்ற தீர்ப்பு 1953இல். 1968இல் இதற்கு முன்பும் - பின்பும் நடைபெற்ற - நடைபெறும் சுயமரியாதைத் திரும ணங்கள் அனைத்தும் செல்லும் என்ற ஒரு சட்டத்தை உருவாக்கி முதல் அமைச்சர் அண்ணா, அமைச்ச ரவையே தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக் கையாக்கினார்களே! அதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்வோம். நடைபெறும் ஒவ்வொரு சுயமரியாதைத் திருமணத்தின்போதும் அறிஞர் அண்ணாவுக்கு வணக்கம் கூறி ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னார் தந்தை பெரியார்.

ஒவ்வொரு திருமண நிகழ்ச்சியில் பேசும் போதெல் லாம் இது இந்த வருட மாடல் திருமணம்; மாறிக் கொண்டே இருக்கும் என்று சொன்னதோடல்லாமல்,  திருமண விஷயம் என்பது  ஓர் ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்ட இருவருக்கும் உரியது; மூன்றாவது மனிதனுக்கு அங்கு என்ன வேலை என்ற வினாவை எழுப்பியதோடு மற்றொன்றையும் குறிப்பிட்டார்கள்.

வீட்டில் உள்ளவர்களை மட்டும் வைத்துக் கொண்டு திருமணம் நடத்தும் பழக்கம் விரைவில் வரும். முன்கூட்டி அழைப்பு இருக்காது; பின்னால் அறிவிப்பு மட்டுமே இருக்கும் (விடுதலை 21.10.1970)

என்றாரே தந்தை பெரியார்! அதன்படி நூற்றுக்கு நூறு துல்லியமாக, கொள்கை மணமாக அமெரிக்காவில் நடைபெற்று இருக்கிறது கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி  - மோகனா இணையரின் பேத்தி திருமணத்திற்கு பெற்றோரும் செல்லவில்லை; பாட் டனார் பாட்டியும் செல்லவில்லை. ஆனால், இரு தரப்பு பெற்றோரின் முழு இசைவும் கிடைத்தது! அன்று பெரியார் சொன்னார்; செய்து காட்டினார் இன்று நமது கழகத் தலைவர்! கொள்கைக் குடும்பத் தலைவர் சொல்லுவதும் செய்வதும் - வெல்லுவதும் ஒன்றே! கழகக் கோட்பாடு - தந்தை பெரியார் வகுத்துக் கொடுத்த சுயமரியாதைத் திருத்தப்பாடு!

உலகம் ஒரு குடும்பம் என்ற உன்னத மனித மேம்பாடு இங்கே புன்னகைக்கவில்லையா?

நம் இயக்கத்திற்கும், கொள்கைக்கும் ஈடு இணை ஏது இவ்வையகத்தில்?

தலைவர் வழி தொண்டர்களும் துல்லியமாக நடப்போம்!

உலகம் முழுவதும் உள்ள கோடானு கோடி பெரியார் கொள்கைக் குடும்பங்களின் சார்பில் கவின் அன்புராஜ் - ரோகித் தரேஜா இணையரை வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!!

தமிழ் ஓவியா said...

ஏதிலிகள் நாள்!

இன்று உலக ஏதிலிகள் (அகதிகள்) நாள்.

ஏதிலிகளாக (அகதி) ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் காரணிகளுள் மதம் முக்கியமானது. தந்தை பெரியார் கூறினார், மதங்கள் நம்புகின்ற கடவுளை மற மனிதனை நினை என்று. பெரியார் ஒரு தொலைநோக்காளர் இதற்கு யுனஸ்கோ கொடுத்த விருதின் முதல் வரியே சான்று; அந்த விருதின் முதல் வரி இப்படி தொடங்குகிறது பெரியார் புத்துலக தொலைநோக்காளர்! உண்மைதான்; இன்று மதவாதம் மனித இனத்தை கூறு போட்டு வருகிறது, சென்ற நூற்றாண்டின் பிற்பகுதி துவங்கி இன்றுவரை அகதிகள் உருவாக மூலமாகவும் முக்கிய காரணியாகவும் இருப்பது மதமே! என்று அய்க்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் சாம் குடேசா தனது பதவியேற்பின் போது கூறினார். (16.9.2014).

அவர் கூறிய அந்தக் கால கட்டத்தில் வட இந்தியா முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல் களை சங்கப்பரிவார அமைப்புகள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவோடு நடத்திக்கொண்டு வந்தன. நான் ஒரு இந்துத் தேசியவாதி என்று வெளிப்படையாக சொன்னவர்தான் இன்றைய பிரதமர் மோடி என்பதை நினைவு கூர்ந்தால் இந்தக் கொடுமைக்கான காரணங்கள் எளிதில் புரியும்.

தமிழ் ஓவியா said...

கடந்த ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்ந்துவந்த லட்சத்து 60-ஆயிரம் இந்துக்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்கியுள்ளது. ராஜஸ்தான் அரசோ, பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்களுக்காக விளைநிலம், கால்நடை மற்றும் வசிப்பிடம் கொடுத்து வருகிறது, கேட்டால் இது பாஜகவின் தேர்தல் அறிக் கையில் கூறப்பட்டுள்ளது என்று கதைக்கிறார்கள். உலகில் இந்துக்கள் எங்கிருந்தாலும் அவர்கள் இந்தியாவில் குடியேற வேண்டுமென்றால் அவர் களுக்கு நாங்கள் உதவுவோம் என்று கூறியிருந்தார் களாம், கடந்த 30 ஆண்டுகளாக தனது குழந்தைகளைக் கூட நல்ல மேற்கல்விக்கு இடம் கிடைக்காமல் ரத்தக் கண்ணீர் வடிக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள் இந்துக்கள் இல்லையா?

வெளிநாடுகளிலிருந்து வெளியேறி வரும் இந்தியர்களை வரவேற்போம் என்று சொல்லி இருந்தால் மதச் சார்பற்ற அரசு இந்தியா என்பதற்கு அர்த்தம் இருக்கும். ஆனால் இந்துக்களைத் தான் உச்சி மோந்து வரவேற்பார்களாம்.

இந்த அரசின் மதவாதப் பார்வை சிங்களப் பேரினவாதத்தை நகலெடுத்தது போன்றதாகும், கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் மாத்திரம் காவி அமைப்புகளின் மிரட்டலுக்கு அஞ்சி தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்த வீடுகளை விற்றுவிட்டு, இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 3000-த்தைத் தாண்டுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட ஒரு அதிர்ச்சிகரமான செய்தி - அகமதாபாத் நகரில் உள்ள பல இஸ்லாமியத் தொழிலதிபர்கள் தங்களது வசிப்பிடங்களை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களின் மிரட்டலின் காரணமாக சொற்ப விலைக்கு விற்றுவிட்டு வெளியேறிய அவலமும் நடந்ததே!

உ.பி. முசாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் இன்றும்கூட தங்கள் இருப்பிடங்களில் இருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகாம்களில் தான் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களின் விளைநிலம், வீடுகள் அனைத்தும் காவிகளால் ஆக்ரமிக்கப்பட்டுவிட்டன. இந்தியாவிலேயே சிறுபான்மையின மக்கள் குறைவாக வாழும் மாநிலம் அரியானா, அதிலும் டில்லிக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே வசிக்கின்றனர். ஆனால் புதிதாக ஆட்சியமைத்த பாஜக அரசு அரியானா மாநிலத்தை இந்து மாநிலமாக அறிவிக்க முழுமுயற்சி எடுத்துவருவது போல் தோன்றுகிறது. விளைவு ஆதர்ஸ் கிராமம் (ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த கிராமம்) என்று மத்திய அரசால் விருதுவழங்கப்பட்ட அடாலி கிராமத்தில் உள்ள 3000 சிறுபான்மையினர் விரட்டப்பட்டனர். தற்போதும் அவர்கள் உபி, டில்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அயல்நாடுகளில் இருந்து லட்சத்திற்கும் மேற் பட்டோர் இந்து என்றபெயரில் இந்தியாவில் குடியேறு கிறார்கள். அதே நேரத்தில் சிறுபான்மையினத்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இங்குள்ளவர்கள் தங்களது சொந்த மண்ணிலேயே விரட்டப்படுகின்றனர். பேரினவாதம் என்பது மிகவும் பயங்கரமான ஒன்று என சிங்கள பேரினவாத கொடுங்கோல் அரசு, உலகிற்கு தன்னுடைய இரத்தக்கறை படிந்த கரத்தைக் காண்பித்த பிறகும் உலகம் கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவு - இன்று இந்தியா, மியான்மா போன்ற நாடுகளில் உள்ள மதவாத சக்திகள் தங்கள் அராஜகப் போக்கைக் காட்டிவருகின்றன. பெருவாரி யான புலம்பெயர்வு நிலை என்பது மதவாதப் பேரின வாதத்தை மய்யமாக வைத்துதான் நடைபெறுகிறது.

மதத்தின் மீதும், கடவுளின்மீதும் மத நூல்கள்மீதும், சாஸ்திர சம்பிரதாயங்கள் மீதும் தந்தை பெரியார் தாக்குதல் தொடுத்ததன் அருமையை காலம் தாழ்ந்தாவது உணர வேண்டிய கால கட்டம் இது. மதம் யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து - மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்தோ ஆபத்து.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளின் அடிநாதம் மக்கள் மத்தியில் வேரூன்றுமேயானால் ஏதிலிகள் தோன்ற இடம் ஏது? தந்தை பெரியார் கூறும் மனிதநேயம் தழைக்குமானால் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு ஏன் விரட்டப்படுகின்றனர்? உலக ஏதிலிகள் நாளில் நாம் அனைவரும் உரக்கச் சிந்திப்போம்.



Read more: http://www.viduthalai.in/page-2/103594.html#ixzz3dbZqqEZ8

தமிழ் ஓவியா said...

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்பு

சனி, 20 ஜூன் 2015
எங்கெங்கு காணினும் பெரியார் கொள்கை மயம்!

அம்பேத்கர் - பெரியார் அமைப்பை சென்னை அய்.அய்.டி. தடை செய்ததன் எதிரொலி:

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்பு

தந்தை பெரியாரின் ராமாயண பாத்திரங்கள் ஆய்வு ஹிந்தி நூலை பிரச்சாரம் செய்கிறது!



புதுடில்லி, ஜூன் 20- அம் பேத்கர் - பெரியார் அமைப்பை சென்னை அய்.அய்.டி. தடை செய்ததன் எதிரொலியாக டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாண வர் அமைப்பு தந்தை பெரி யாரின் ராமாயண பாத்திரங்கள் ஹிந்தி நூலை பிரச்சாரம் செய்கிறது. புதுடில்லி ஜவகர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சமீபத்தில் மலர்ந்தது. இந்த வாசகர் வட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக தந்தை பெரியார் தமிழில் எழுதிய ராமாயணபாத்திரங்கள் என்ற நூல் இந்தியில் சச்சி ராமாயணா என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது இந்த நூலை மக்களிடையே கொண்டு செல்லும் பரப்புரையை மேற்கொண்டனர்.   தங்களது வாசகர் வட்ட மையத்தில் இணைந்துள்ள வர்களுக்கு தங்களது நண்பர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மென்புத்தகம் (PDF) அனுப்பி அனைவரையும் படித்து தெளிவு பெறுமாறு கேட்டுக் கொண்டனர்.

இராமாயணப் பாத்திரங்கள் - வால்மீகி இராமாயணத் தில் உள்ளபடி உண்மை இராமாயணம்? ‘Ramayana - True  Reading’  என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நூல். பல்லாயிரக்கணக்கில் பிரதிகள் விற்கப்பட்டன. தமிழில் பல லட்சக்கணக்கான பிரதிகள் மக்களால் வாங்கப் பெற்றது. பவ்லா ரிச்சமென் (Paula Richman) என்ற அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியரான அம்மையார் (இவரை சென்ற ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இதுபற்றி உரையாடி மகிழ்ந்து நன்றி சொன்னார்).

1958இல் தந்தை பெரியார் அவர்களை உத்தர பிரதேசத்தில் ஒடுக்கப்பட்டோர் மாநாட்டினைத் திறந்து வைக்க அழைத்திருந்தபோது அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார், ஆசிரியர் கி. வீரமணி, புலவர் கோ. இமய வரம்பன், ஆனைமலை நரசிம்மன், இராம கிருஷ்ணம்மாள் ஆகியோருடன் கான்பூர், லக்னோ, டில்லி போன்ற ஊர்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தபோது லாலைசிங் யாதவ் (Lalai Singh Yadav)  என்ற நண்பர் -ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தந்தை பெரியாரின் உண்மை இராமா யணம் (True Reading) புத்தகத்தை ஹிந்தியில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதி கேட்டார்.

தந்தை பெரியார் அவர்கள் மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார்.

அது சச்சி இராமாயணா என்ற பெயரில் ஹிந்தியில் வெளி வந்து பல பதிப்புகள் விற்பனையானது.

இதனை எதிர்த்து உத்தரப்பிரதேச அரசு - பார்ப்பனர் எழுப்பிய எதிர்ப்புக் கூச்சல் கண்டு அந்நூலைத் தடை செய்தது. அதன்மீது உயர்நீதிமன்றத்தில் நூல் வெளியீட் டாளர் லலித்சிங்யாதவ்  வழக்கு போட்டு,  வென்றார். அதன் மீது உ.பி. அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தடையை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு வாதாடியது.

நெருக்கடி காலம் அமுலில் இருந்தபோது, 1976 வாக்கில் இந்த மேல் முறையீடு வழக்கு சுப்ரீம்கோர்ட்டில், நீதிபதிகள் ஜஸ்டீஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் அமைந்த அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பு எழுதிய வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள்,

ஆயிரம் பூக்கள் மலருவது ஒரு பூந்தோட்டத்திற்கு அழகு; அதுபோல இராமாயணத்தைப் பற்றி பல்வேறு கோணங்களில் கருத்துரைகள், நூல்கள் வெளிவருவது வரவேற்கத்தக்கது.

உத்தரப்பிரதேச அரசு தடை போட்டது செல்லாது என்று திட்டவட்டமாக கூறியது. அதுவும் நெருக்கடி காலம் அமுலில் இருந்தபோது வந்த வரலாற்று முக்கியத்தீர்ப்பு இது!

1976 முதல் இன்று வரை 39 ஆண்டுகளாக இந்நூல் வடநாட்டில் அமோக விற்பனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

மனிதன்

மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...

எதுவும் அளவுக்கு மிஞ்சிட வேண்டாம்!
veramani

வாழ்க்கையில் நம்மில் பலருக்குத் துன்பம் ஏற்படுவதற்கு நாம் கையாளும் நடைமுறை பழக்க வழக்கங்கள் பெரிதும் காரணமாகும்.

எளிய பழமொழிகள் பல அனுபவத் தின் அடிப்படையிலேயே முகிழ்த் தவை. அவற்றிற்கு நாம் அதிக முக்கி யத்துவம் தராமல் அலட்சியப்படுத் துவதே துன்ப, துயரங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற மூதுரையின் முக்கியத் துவத்தை அலட்சியப்படுத்தியோ, வாழ்வில் கடைப்பிடித்தொழுகு வதையோ நாம் செய்வதில்லை. (அமிழ்து என்பது இனிய சுவை தரும் பண்டம்)

எதையும் அளவுவோடு விரும்புதல் ஆசை என்பதாகும்.

அளவின்றி மோக முள் அதன்மீது குத்திக் குத்தி, இரத்தம் சிந்தினாலும் கூட அந்த ஆசைக்கு எல்லைக்கோடு - வரையறை செய்யாது, அலையோ அலை என்று அலைந்து பணம், சொத்து, புகழ் சேர்க்க வேண்டும் என்று நடப்பது பேராசை என்பதாகும்.

மீதூண் விரும்பேல் என்பது எவ்வளவு பெரிய அறிவுரை!

நன்கு சுவைத்து உண்ணும் அளவுக்கு உணவு வகைகள் மிகுந்த சுவைமிக்க தாயினும்,  அளவு - வரம்பு கடந்தால் செரிமானக் கோளாறுதானே!

பிறகு அதற்குரிய மருத்துவம், மருந்து, அவதி - இவையெல்லாம் தவிர்க்க இய லாத அவசியமற்ற விளைவுகள் தானே!

நம்மில் எத்தனை பேர் இதனைக் கடைப்பிடித்து ஒழுகுபவர்களாக உள் ளோம்?

வயிற்றில் ஒரு பகுதி எப்போதும் காலியாக வைத்துக் கொண்டே (முக்கால் + கால்)  எந்த விருந்தாயினும் உடனே எழுந்து கை கழுவி விட்டீர்களானால், அது கையை மட்டும் கழுவியதாகாது,  அஜீரணக் கோளாறு என்ற நோயை யும்கூட கை கழுவியதாகவே ஆகும்!

வயிறுமுட்டச் சாப்பிடுவது என்பதும் அதனைக் குறைத்துச் சாப்பிடுவது என்பதும் எல்லாம் நம் கையில் - நம் முடிவில் தான்!  இருக்கிறது!

உண்ணும்போது சபல அலைகள் நம்மை, தம்பக்கம் சாய்த்து விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு பிறருக்கா? நமக்கா? உபசரிக்கிறவர்கள் விளைவை அனுப விப்பவர்கள் அல்லவே?

அப்படி மறுக்கும்போது கனிவுடன் அதனை மறுப்பதே நல்லது. விருந்தளிப் போரைச் சங்கடப்படுத்தி எரிச்சல் ஊட்டி ஏண்டா இந்த மனுஷனை வீட்டிற்கு அழைத்து விருந்து போட்டோம்! என்று தன்னைத்தானே நொந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தலாமா?

அதில் சற்று நயத்தக்க  நாகரிகம் ததும்ப வேண்டாமா?

உணவு - பரிமாறல் - விருந்து பற்றி பரவலான ஒரு உண்மை, பலராலும் சொல்லப்படும் கருத்து, சாப்பாடு ஒன்று தான் போதும் என்று சொல்லும் அளவுக்கு நிறுத்தச் சொல்வது; மற்றவை களுக்கு இது மாதிரி உச்சவரம்பு கட்டுவதே இல்லையே!

அண்மைக்கால அன்றாடச் செய்திகள் பணத்தாசை, திடீர் பணக்காரராக பிறரை வஞ்சித்து, களவாடி, பறித்து, கொள்ளை யடித்து, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து - அதன் விளைவாக தீராத சங்கடங்களையும், ஆறாத அவலத்தை யும் அனுபவித்தாலும், போதையை விரும்பி மது குடிப்பவன் - வேட்டி அவிழ்ந்து வீதியில் கிடந்து அவதியுற் றாலும் மறுநாளும் நேற்று குடித்த அளவுக்குமேல் குடித்துக் கும்மாளம் போட்டு, அதே இடத்தில் மீண்டும் முழு நிர்வாண கோலத்தில் மூச்சுப் பேச்சின்றி விழுந்து கிடப்பதில் ஒரு சுயஇன்பம் காணுவது போன்ற பரிதாபம் அல்லவா?

பணம் - காசு - செல்வம் தேவை மூச்சு விடுதலுக்குத் தேவையான பிராண வாயு போல - மறுக்கவில்லை நாம்!

அதையே மூச்சு முட்டித் திணறும் அளவுக்கு ஒரு வழிப்பாதையாக்கி, மறுவழி செலவோ, நன்கொடையோ, பொதுத் தொண்டோ, செய்யாமல் பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்து அனுபவிக்கக்கூட முடியாதபடி ஊர் சிரிக்க, உலகம் கெக்கெலி கொட்ட, சட்டம் தண்டிக்க, உச்சியிலிருந்து அதல பாதாள பள்ளத்தில் வீழ்ந்து எழ முடியாமல் நாதியற்று பிறர் நெருங்க அஞ்சிடும் நிலைக்குத் தள்ளப்பட்ட வர்களாவது எதனால்?

அளவுக்கு மிஞ்சி பொருள் சேர்த்த குற்றம் புரிந்ததினால்தானே!

புகழேகூட  போதையில் பெரும் போதையாகும். அதையேகூட ஒரு கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் அது நம் உயிர்க்கு இறுதியாகி விடும்.

புகழுக்காக வேட்டையாடுதல், செலவழித்தல் அறவிலை வணிகர் ஆவது விரும்பத்தக்கதா? ஆராய்ந்து பார்க்க!

(எஞ்சியது  நாளை)

தமிழ் ஓவியா said...

விடுதலையின் பணி

விடுதலை 15.6.2015 நாளிதழில் மயிலாடன் அவர்களின் ஒற்றைப் பத்தியில் குரங்குக்கு நோட்டீஸ் என்ற செய்தி கட்டுரையில் மிகவும் நகைச்சுவையாகவும், இந்து மத கேலிக்கூத்துகளும் எப்படி இருக்கின்றன என்பதை மயிலாடன் அவர்கள் அருமையாக எழுதியுள்ளார். முழுவதுமாக படித்துப்பார்த்தால் இந்துமதக் கோயில்களில் எவ்வளவு கேலிக்கூத்துகளும், மூடத்தனத்தின் உச்சாணி நிகழ்வும் எப்படி நிகழ்கின்றன என்பதை ஆதார பூர்வமாக அருமையாக விளக்கியுள்ளார். மயிலாடன் அவர்களின் ஒற்றைப்பத்தி புதிய புதிய செய்திகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் தினந்தோறும் அருவியாக தந்து கொண்டிருக்கிறது.

அந்த நாள் விடுதலையில் மஞ்சை வசந்தன் அவர்களின் இருட்டுக் கால திருட்டு செய்ய எத்தனிக்கும் எத்தர்கள் என்று கட்டுரை பிஜேபி, இந்துத்துவா கூட்டாளிகள் முகத்திரையை கிழிப்பதாக இருந்தது.

ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்து விட்டநிலையில் வளர்ச்சியெங்கே என்றால் வாய்ச்சவடால் அடிக்கிறார். மோடி என்ன மோடி மஸ்தானா? வளர்ச்சி மந்திரம் மூலம் வருமா என்ன? மோடி வந்தால் ஆறுமாதத்தில் வளர்ச்சிவரும் என்றனர். இன்றைக்கு மோடி என்ன மந்திரமாக வைத்திருக்கிறார் என்று அயோக்கியத்தனமாக மாற்றிப் பேசு கிறார்கள். ஆக இந்த மதவாதக் கும்பல் ஒரு மோசடிக் கும்பல், அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பே இருக்காது. இவ் வாறு கட்டுரை முழுவதும் எரியீட்டியாக எழுச்சி நடையில் வீசுகிறார் மஞ்சை வசந்தன்.

அதே நாள் விடுதலையில் தஞ்சைத் தீர்மானம் என்ற தலையங்கத்தில் அண்ணா பெயரில் கட்சி வைத்து அண்ணாவின் கொள்கைக்கு புறம்பாக நடைபோடும் கட்சிக்கு சரியான சவுக்கடி, எச்சரிக்கை மணி.

பால்காவடி எடுப்பதுதான் பகுத் தறிவா? தேர் இழுப்பதுபற்றி எல்லாம் அண்ணா எழுதவில்லையா? பேச வில்லையா?

அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லிக்கொண்டே அண்ணாமலையார் கோவிலில் விழுந்து புரளுவதுதான் அண்ணா திமுகவா? அண்ணா ஆட்சியா?

இவ்வளவு ஆணித்தரமாக கொள்கை ரீதியாக நமது இயக்கத்தைவிட வேறு யார் சொல்லிட இயலும், சொல்லிட தைரியம் வரும், விடுதலையைத் தவிர வேறு யாருக்கு இந்த வீரம் வரும், வாழ்க பெரியார்!

- தி.க.பாலு

(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல் - 3.)

தமிழ் ஓவியா said...

மக்கள்மீது யோகா பெயரில் இந்து மதத்தைத் திணிப்பதா?

மோடிமீது பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு



பாட்னா ஜூன் 21 யோகாக்கலையை பரப்பு பவர்கள் குறிப்பிட்ட மதத்தை மட்டுமே வலி யுறுத்துகிறார்கள், நாடெங்கும் உள்ள யோகா குருவென்பவர்கள் மதம் சார்ந்தவர்கள். இதை நன்கு அறிந்து கொண்டே மோடி நாட்டு மக்கள் மீது யோகா என்ற பெயரில் இந்து மதத்தை திணிக்கிறார் என்று தேவேந்திரகுமார் சிங் என்பவர் பாட்னா நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பன்னாட்டு யோகா நாளாக இன்று (21.6.2015) நாடு முழுவதும் கொண் டாடப்பட்டு வருகிறது, ஆரம்பம் முதலே மோடி தலைமையினாலான பா.ஜ.க. அரசு நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தும் அதை மக்களி டம் மறைக்கும் வகையில் யோகா நாளை பெரும் பொருட்செலவில் கொண் டாடி வருகிறது.

முக்கிய மாக யோகா தினத்தில் இந்துமத ஸ்லோகம் சொல்லவும் சூரியநமஸ் காரம் செய்வது குறித்த அரசின் சுற்றறிக்கைக்கு, பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும், சூரிய நமஸ்காரம் மற்றும் இந்துமத சுலோகம் தேவையில்லை என்று பின் வாங்கியது. பன்னாட்டு யோகா நாளுக்கு கொடுத்த விளம் பரம் மற்றும் யோகா செய்யப் பயன்படும் பல்வேறு பொருட்களில் மதத்தைக் குறிப்பிடும்படி யான நிறமும் படங்களும் அமைந்திருந்தன. இதனால் யோகா என்பது மதம் சார்ந்த ஒன்று எனவே இதைச் செய்பவர்கள் அனைவரும் அந்த மதத்தவர் என்ற ஒரு நிலையை மறைமுக மாக உருவாக்கும் நோக் கத்திலேயே மோடி தலை மையினாலான அரசு செயல்பட்டுவருகிறது என்று கூறி பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேவேந்திரக் குமார் சிங் குற்ற வழக்கு ஒன்றைத் மோடி மீது தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்து மதக் கொள்கைகளை மறைமுகமாக மக்களிடம் திணிப்பதற்கு மோடி மற்றும் அவருக்கு உடந் தையாக இருக்கும் பாஜக தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இவர்கள் மீதும் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

இதுகுறித்து பாட் னாவில் தேவேந்திர குமார் சிங் கூறியதாவது : ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா நாள் கொண் டாடப்படுகிறது, இதில் முழுக்க முழுக்க மக்கள் பணம் விரயம் செய்யப் படுகிறது. மத்திய அமைச் சர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெயரில் அரசுப் பணத்தில் நூல் ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில் இஸ் லாமியர்களின் வழிபாட்டு முறை, கிறிஸ்தவர்களின் வழிபாட்டு முறை எல் லாம் யோகாவில் இருந்து உருவானது தான் என்று கூறப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அந்த நூலில் யோகா இந்து மதத்தின் வழிபாட்டு தெய்வம் தான்(சிவன்) தலைமை யோகா குருவென் றும் அந்த தெய்வம் தான் யோகக்கலையை கற்றுக் கொடுத்தது என்றும் எழுதப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வாழும் சிறுபான்மை யினத்தவரின் மதவழி பாட்டை இந்து மதவழி பாடு போன்று காட்டுவது போல் உள்ளது, சிறு பான்மை மதத்தவரின் வழிபாட்டை கிண்டல் செய்வது போலவும் உள்ளது. மேலும் கடந்த ஒரு மாதமாக அரசு அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் நாளேடுகளில் விளம்பரம் கொடுத்துவரு கிறது, இதற்கு கோடிக் கணக்கான ரூபாய் செல விடப்படுகிறது, நாட்டில் பல்வேறு நலத் திட்டப் பணிகளுக்கு பணம் இல்லை என்று நிதிநிலை அறிக்கையில் கூறிக் கொண்டு யோகா போன்ற அத்தியாவசிய மற்ற செயல்களுக்கு பணத்தை விரயம் செய்வது மக்கள் விரோதச் செயலாகும். இது குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன் என்று கூறினார்.

வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த இந்த மனு குற்றவியல் தலைமை நீதிபதி பரத்பால்சிங் திங் களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வார் என்று தெரிகிறது.



Read more: http://www.viduthalai.in/e-paper/103651.html#ixzz3dhMS1x5d

தமிழ் ஓவியா said...

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அலட்சியம் செய்து யோகா நிகழ்ச்சி நடத்திய அமித்ஷா

பாட்னா. ஜூன் 21 உலக யோக நாளை ஒட்டி நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய் யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது. இந்த உத்தரவை மதிக்காமல் பிகார் தலை நகர் பாட்னாவில் பி.ஜே.பி. கட்சித் தலைவர் அமித்ஷா யோகா நாள் நிகழ்ச் சியைக் கொண்டாடினார்.
பிகார் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வருவ தால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமு லில் உள்ளது. இந்த நிலை யில் தேர்தல் ஆணையர் பிகார் அரசியல் கட்சி களுக்கான சில விதி முறைகளை வகுத்துள்ளார்.

இது குறித்து தேர்தல் ஆணையர் அஜய் வி நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ள தாவது: அரசியல் கட்சிகள் யோகா நாளை தங்களது அரசியல் கட்சியின் லாபத் திற்காக பயன்படுத்துவது போல் தெரிகிறது. இது குறித்து தேர்தல் ஆணை யம் ஏற்கெனவே விதி முறைகளை வகுத்துள் ளது. மருத்துவ சேவை, பேரிடர் காலத்தில் மீட் புப்பணி, கலவரம் மற்றும் பள்ளி கல்லூரி விழாக்கள் போன்றவற்றில் அரசியல் கட்சிகள் தங்களின் கட்சிப் பெயரையோ, சின்னங்களையோ பயன் படுத்தக் கூடாது. அதே நேரத்தில் மறைமுகமாக வும் கட்சிபிரச்சாரப் பணிகளை இங்கு மேற் கொள்ளக்கூடாது. இது குறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளுக் கும் துணை தேர்தல் ஆணையர்களுக்கு கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளோம். மேலும் அரசியல் கட்சி கள் நடத்தும் யோகா நாள் நிகழ்வை காணொ லிகள் மூலம் கண்கானிக் கவும் உத்தர விட்டுள்ளோம்.

பாட்னாவில் உள்ள தொண்டு அமைப்பு ஒன்று டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணை யர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள் ளது. அதில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு யோகா நாளை தங்களது தேர்தல் விளம் பரத்திற்காக பயன்படுத் தும் வாய்ப்பு உள்ளது. ஆகவே பிகார் மாநிலம் முழுவதும் மத்தியஅரசு அலுவலகம் மற்றும் பொது இடங்களில் யோகா செய்வதை தடை செய்யவேண்டும் என்றும் யோகா நாளின் போது அரசியல் கட்சித் தலை வர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் அந்தப் புகார் மனுவில் குறிப் பிட்டிருந்தனர். ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிமுறை களை மீறி அமித்ஷா பாட்னாவில் உள்ள மைனல் திடலில் நூற்றுக் கணக்கான பா.ஜ.க. தொண் டர்களை அழைத்துக் கொண்டு யோகா நாள் கொண்டாடினார். இதில் பிகாரைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்பிக்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பிகாரில் உள்ள அனைத்து தொலை காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. இதற்காக பிகார் பாஜக கோடிக்கணக்கான ரூபாய் களை செலவழித்துள்ளது.



Read more: http://www.viduthalai.in/e-paper/103654.html#ixzz3dhMhrBRM

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் கண்ட கனவான பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்



கவிஞர் கனிமொழி பேச்சு
திருவண்ணாமலை, ஜூன் 21_ பெண்களுக்கு சொத்தில் சம உரிமையைத் தந்து, அதை சட்டமாக இயற்றியவர் திமுக தலைவர் கலைஞர் என்று திமுக மகளிரணி செய லாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனி மொழி கூறினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மாவட்ட மகளிர் தொண்டரணி சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா, பாட்டு பட்டிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை, திருக்கோயிலூர் சாலை, சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவ லகத்தில் நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு, முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலா ளருமான எ.வ.வேலு தலைமை வகித்தார்.
மாவட்ட மகளிர் தொண் டரணி அமைப்பாளர் உ.நித்யா முன்னிலை வகித் தார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயலட்சுமி வரவேற்றார்.

பாட்டு பட்டிமன்றத்தைத் தொடக்கி வைத்து கனி மொழி பேசியதாவது:
சமுதாயத்தில் உழைக்கும் பெண்களுக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை.
குடும்பத் தலைவியாக இருந்தாலும் கூட, அவர் குடும்பத்துக்காக உழைக்கும் உழைப்புக்கு பொருளாதார ரீதியாக கணக்கிட்டால்

உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில்லை. படித்தப் பெண்கள் போராட வேண் டும். எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.
அப்படி கேட்கும்போது தான் இந்த சமுதாயம் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கும். 1929-இல் செங்கல்பட்டில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற திராவிட இயக்க மாநாட்டில் பெண் களுக்கு சொத்தில் சம உரிமை வேண்டும் என்றத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

இந்த தீர்மானத்தை தனது 65-ஆவது வயதில் சட்டப்பேரவையில் நிறைவேற்றி, பெரியார் கண்ட கனவை நிறைவேற் றியவர் கலைஞர். திருக் குறள், தொல்காப்பியம், சங்கத் தமிழ் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக் கியங்களையும் மக்களிடம் கொண்டு சென்றவர் கலைஞர் என்றார்.

திமுக தலைவர் கலைஞர் பிறந்த நாளை யொட்டி, திருவண்ணா மலை ஜீவா வேலு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 1,092 மரக்கன்றுகள் நடும் விழா, கீழ்கச்சிராப்பட்டு ஊராட் சியில் கம்பன் மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாக்களில் கனிமொழி கலந்து கொண் டார். பின்னர், திருவண் ணாமலையை அடுத்த மெய்யூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு 1,092 மரக்கன்றுகளை நட்டார்.

குடும்பத்துக்கு ஒரு தென்னங்கன்று வீதம் வழங்கி அந்தக் கிராமத்தை கனிமொழி தத்தெடுத்துக் கொண்டார்



Read more: http://www.viduthalai.in/page-7/103680.html#ixzz3dhNtn1fW

தமிழ் ஓவியா said...

முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?

கோயம்புத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்ட்மீது சுமார் 30 மெம்பர்கள் சேர்ந்து நிர்வாக ஊழல்களைப் பற்றியும், போர்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்றியும் ஒரு பிராது தயாரித்து கையொப்பமிட்டு சர்க்காருக்கு அனுப்பிய விஷயமும், மற்றும் பிரசிடெண்ட் கனம் வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதுக்கு காரண கனவான்கள் முதலியவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்த விஷயமும் நேயர்கள் அறிந்ததாகும்.

பிறகு உடனே கனம் பட்டக்காரர்களுக்கும், சில மெம்பர்களுக்கும், கனம் கவுண்டர் அவர்களுக்கும் ஒரு வித சமாதானம் ஏற்பட்டு விட்டதாகவும், அதன் பயனாய் அப்பி ராதில் கையெழுத்து செய்திருந்த கனவான்களில் ஒரு சிலர் தங்கள் கையெழுத்துக்களை வித்ட்றா செய்து கொண்ட தாகவும் தெரியவருகிறதோடு சமாதானத்தில் ஒரு நிபந்தனை, கனம் கவுண்டர் அவர்கள் பிரசிடெண்டுதானத்தை ராஜினாமா செய்து விடுவதாகப் பெரிய இடத்தில் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது.

இதன் உண்மை எப்படி இருந்தாலும் அதைப்பற்றி பொது ஜனங்களுக்கு அக்கறை இருக்காது. தலதாபன நிர்வாகங் களில் காண்ட்ராக்ட்டு வேலைகளும், சிப்பந்திகள் நியமிக்கும் வேலைகளும் பிரசிடெண்டுகளுக்கும் சேர்மென்களுக்கும் இருப்ப தினாலேயே போர்டுகளிலும், கவுன்சில்களிலும் தகராறுகள் ஏற்படுவதற்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் வருவதற்கும் பெரிதும் அவசியம் ஏற்பட்டு விடுகின்றன.

இதைப் பற்றி நாம் பல தடவைகளில் எழுதி வந்த பிரகாரம் போர்டுகளின் தலைவர்களிடமிருந்து அந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டால் பிறகு சேர்மென்களும், பிரசிடெண்டுகளும்,  கவுன்சிலர்களுக்கும், மெம்பர் களுக்கும், யோக்கியர்களாகவும், சினேகிதர்களாகவும் ஆகிவிடுவார்கள். தகராறுக்கும் சிறிதும் இடம் இருக்காது.

ஒரு சமயம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருவதாய் இருந்தாலும் கமிஷனர்கள் மீதுதான் வரக்கூடுமே ஒழிய வேறில்லை. அதனால் கமிஷனர்களுக்கும் நஷ்டம் இருக்காது. அவர்கள் வேறு ஊருக்கு மாற்றப்பட்டு விடலாம். மெம்பர்களுக்கும் அவசியமான காரியங்கள் கவனிக்க சவுகரியமேற்படும். ஆகவே, முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?

- பகுத்தறிவு - கட்டுரை - 28.10.1934

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும்



சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலமுதல் கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுயமரியாதை இயக்கத் திலுள்ள எவரும் அறியாததல்ல. ஜஸ்டிஸ் கட்சியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.

செங்கல்பட்டில் கூடின முதல் சுயமரியாதை மாகாண கான்பரன் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள் பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள முதியோர், இளைஞர் ஆகியவர்கள் பெரிதும் இன்னும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாததல்ல.

மற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமூகம் சமுகத் துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக்கொண்டும் அதை அமலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள், இன்னும் வருகிறார்கள் என்பது சிறிது கூட புதியது என்றோ,

ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. எனவே பார்ப்பனரல்லாதார் சமூக முன்னேற்றம் என்பதைக் கருதி ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற்பட்டால் அதை செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப்படவோ, வருத்தப்படவோ அவசியமில்லை என்பதைச் சுயமரியாதை இயக்க இளைஞர்களுக்கும், வாலிபர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 04.11.1934

தமிழ் ஓவியா said...

அடைய முடியும்

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...

எதிலும் அளவறிந்து வாழ்வோம் (2)


எதுவும் அளவுடன் இருப்பதே எல்லா வகையிலும் வாழ்க்கையின் சிறப்புக்கு வரப்பு கட்டியதாகும். என்பதை சனிக்கிழமையன்று (20.5.2015) வெளிவந்த வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை கூறியது.

மேற்கொண்டும் சிந்திப்போமா? அளவுடன் இருப்பதுடன் அதே நேரத்தில் குறையாமலும் பார்த்துக் கொள்வது அச்சிறப்பிற்கு மேலும் சீர் சேர்க்கக் கூடியதாகும்.

இதற்கு ஆங்கிலத்தில் ‘Optimum’  என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றனர்  ‘Optimum Level’  என்றெல்லாம் கூடக் கூறுவர்.

எது இரண்டு நிலைகளுக்கும் நடுவில், பொருத்த மாகவும் மிகாமலும், குறையாமலும் அமைந்து நல்ல பயனையும் விளைவையும் தருமோ அதுவே அந்த போதிய அளவுத் திறன் (Optimum) ஆகும்!

உடலில் உள்ள ஒவ்வொரு சத்தும்கூட இப்படி மிகவும் - அதிகமாகவும் கூடாது; அதே நேரத்தில் சீரான - போதிய தேவை அளவைவிட - குறைந்து விடவும் கூடாது!
எடுத்துக்காட்டாக நம் உடலில் இருக்கும் சத்துக் களின் அளவையேகூட  காட்டலாம்!

உப்பு (Sodium)ச் சத்து நமக்கு அதிகமாகக் கூடாது; அதே நேரத்தில் மிகவும், குறையவும்  கூடாது. அதிகமானால் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பர் மருத்துவர்கள்.

குறைந்து போனால் அது பல நேரங்களில் மூளையின் இரத்த ஓட்டத்தைக்கூட பாதித்து, பேசுவது, செயல்படுவது போன்றவற்றினைக்கூட தடுத்து விடும் என்பதையும் புரிந்து கொண்டால் உப்புக்குப் பெறாத விஷயம் என்ற சொற்றொ டரைக்கூடத் தயங்கித்தான் இனி நாம் பயன் படுத்துவோம் - இல்லையா?

இரத்தத்தில் சர்க்கரை அளவும்கூட இது போலத்தான்!

சர்க்கரை நோயாளிகள் - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சூலின் ஊசி போடுவதோ (Type I) அல்லது மருந்து எடுத்துக் கொள்ளும்போதோ (Type II)கூட சர்க்கரை அளவினை திடீரெனச் சரிந்து விட்டால் அது பற்பல நேரங்களில் மாரடைப்பில் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடும்.

‘Hyper’  என்றால் அதிகம் - மிகை
‘Hypo’ என்றால் அளவு குறைதல் என்பதாகும்.

நம் உடலேகூட நமது வாழ்க்கைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்  நல்லாசான்; நம்மில் பலரும் கூர்ந்து கவனஞ் செலுத்தி மனதைப் பக்குவப்படுத்த அதனையே படித்துக் கொண்டு வாழலாமே!

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்        (குறள் - 479)

பொருள்: தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கையானது, முதலில் வசதி உள்ளது போலத் தோற்றமளித்துப் பின்னர் அந்தத் தோற்றமும் இல்லாமல், கெட்டுப் போய் விடும்.
உடம்பிலிருந்து எல்லாவற்றிலுமே அளவறிந்து- அளவு குன்றாமலும், மிகாமலும் வாழ்ந்தால் பின்னால் வலியோ, வம்போ ஏற்படவே ஏற்படாது.

இதே அதிகாரத்தில் வள்ளுவர் கூறிய மற்ற இரண்டு குறள்களும்கூட நம் அனைவருக்குமே வாழ்நாள் வாழ்க்கைப் பாடங்கள் ஆகும்!
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்   (குறள் - 475)

பொருள்: மிக மெல்லியதான மயில் இறகுகள் ஏற்றப்பட்ட வண்டியேயானாலும்கூட, அந்த இறகு களை அளவுக்கு மீறிய வகையில் மிகுதியாக வண்டி யில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு, ஒரு கட்டத் தில் பளு தாங்க முடியாமல் முறிந்து போய் விடும்.

எளிய உவமை! அரிய உண்மைப் போதனை!!

அடுத்த மற்றொரு குறள்; அதே அதிகாரத்தில்,
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதியாகி விடும்         (குறள் - 476)

பொருள்: ஒரு மரக்கிளையின் நுனி வரை சென்றவர் அதற்கு அப்பாலும் ஏற முயலுவாரே யானால்; அம்முயற்சி, அவரது உயிருக்கு அழிவைத் தந்து விடும்.

குறைந்த உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடிகூட சற்றுக் குறைவாக இருக்கும்; ஆளைக் காப்பாற்றி விடலாம்; ஆனால் மிக உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடியும் பலமாக, உயிர்  பிழைக்கும் வாய்ப்பும் அரிதாகி விடக் கூடுமே! இல்லையா?

அதிகாரத்திற்கு வந்து தலைகால் புரியாமல்  ஆடும் நுனிக்கொம்பர்களுக்கு பிரான்சிஸ் பேகன் என்ற ஆங்கில எழுத்தாளர் ஓர் அரிய உண்மையை நினைவூட்டினார்!

கீழே விழுகின்றவரை அந்த நுனிக்கொம்பர் களுக்கு இது விளங்காது, விளங்கவே விளங்காது; விழுந்து உயிருக்குப் போராடிடும் நிலைமைக்குப் பின்னரே அது விளங்கும்.

அப்போது விளங்கி யாருக்குப் பயன்?

“Power Corrupts;
Absolute Power;
Corrupts Absolutely”

ஆட்சி - அதிகாரம் - கெடுக்கும்; அதிகமான செல்வாக்குப் படைத்த ஆட்சி - அதிகாரமோ - முழுமையாக - தேற முடி யாத அளவு அவர்களைக் கெடுக்கும் என்றார்!

எனவே, அளவுடன் தூக்கம், அளவுடன் செலவு, அளவுடன் மகிழ்ச்சி, புகழ் எல்லாம் கொண்டு மகிழ்ச்சி ஊற்று வற்றாத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ளுவோம்!

 

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

ஓரணியாய் திரள்வோம் - சமூகநீதி காப்போம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில், புதுமைப்பித்தன் அவர்களின் பகுத்தறிவு சிந்தனை முத்துக்கள், காண்டேகரின் கருத்துமழை ஆகிய இலக்கியச் சுவை பகுதிகளை, அவரும் சுவைத்து நம்முடன் பகிர்ந்தளித்த மாண்பை மிகவும் ரசித்துப்படித்து உணர்கிறேன். இனமானப் பேராசிரியரைப் பார்க்கச் சென்றபோது பெற்ற இதயம் காக்க, நூலைப்படித்து எமக்குத்தந்த குறிப்புகள் மிகச்சிறப்பாக பயன் தருகிறது. புத்தகத்தை வாங்கிப்படிக்க ஆர்வம்.

புதுமைப்பித்தன் சிந்தனைச் சுவைகளைத் தொடுத்து பெரியார் புத்தக நிலையம் வெளியிடலாமே. இதயம் காக்க நூலையும் வாங்கி விற்பனை செய்யலாமே.

தாலி அகற்றும் நிகழ்ச்சியன்று நடந்த மதவாதிகளின் தாக்குதலை சந்திக்க உருவாக்கப்பட்ட வழக்கு நிதிக்கு, தந்தை பெரியாரின் உழைப்பால் சகிப்புத் தன்மை நிறைந்த தியாகத்தால் பெற்ற இடஒதுக்கீடு காரணமாக அரசுப் பணியில் உள்ள பார்ப்பனரல்லாத பணியாளர்கள், வழக்கு நிதியை வழங்கிட முன்வர வேண்டும்.

மய்ய, மாநில அரசுகளின் முன்னணித் துறைகளில் மறுக்கப்படுகின்ற சமூக நீதியை ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலமாக மட்டுமல்ல நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கேட்கவும், கழக வழக்குரைஞர்கள் சட்டத்தின் சரத்துகளை வைத்து வாதாடி வென்றிடவும் வழக்குநிதி நிறைய தேவைப்படுவதாக உணர்கிறோம். தங்களால் இயன்ற நிதியை தாமதிக்காமல் வழங்கிட வேண்டுகிறோம்.

உயர்நீதிமன்றம், அய்.அய்.டி. நியமனம், அஞ்சலகங்கள், விமான நிலையங்கள், வானிலை ஆய்வு நிறுவனங்கள், ரயில்வே துறை போன்றவற்றில் மறுக்கப்படுகிற சமூகநீதியை எதிர்ப்போம். ஆசிரியரின் தன்னலமற்ற பொதுப்பணியில் நம்மை இணைத்துக் கொள்வோம். வேண்டு கோளையும், திட்டங்களையும் செயல் படுத்துவதில் முனைப்பு எடுப்போம்.

ஆர்.எஸ்.எஸ். மதவாதி மோகன் பகவத்துக்கும், ராம்தேவ் உணவகத்துக்கும், மத்திய அரசின் பாதுகாப்பா? கங்கையை சுத்தம் செய்ய ஒதுக்கிய நிதி, தமிழக அரசின் திட்ட நிதிகளைப்போல எங் கேயோ ஒதுக்கி எப்போதோ பட்டுவாடா செய்யவா? பகுத்தறிவுச் சிந்தனையாளர் களும், சமூகநீதி சிந்தனையாளர்களும் ஓரணியில் திரண்டு மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டிய நேரம், மிக அவசரமாக நெருங்கி வருகிறது. இணைந்து பணியாற்ற பெரியார் திடல் வருக. மதவாத சதியாளர்களை துரத்திட கரம் கோர்த்து வருக. இணையதளங் களிலும் பரப்புரை புள்ளி விவரங்களை பதிவேற்றுவோம்.

- ஆ.வேல்சாமி
பகுத்தறிவாளர் கழகம், அறந்தாங்கி மாவட்டம்

தமிழ் ஓவியா said...

நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்



நமது உடலில் உள்ள முக்கியமான பாகங்களில் நுரையீரலும் ஒன்று. இதில் உள்ள மூச்சுப்பைகளே சுவாசத்தில் பங்கு  வகிக்கின்றன. நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் உயிருக்கு உலைவைக்கும் அளவுக்கு ஆபத்தானவை. குறிப்பாக புகைபிடிக்கும்  பழக்கமும், சுற்றுச்சூழல் மாசுகளும் நுரையீரலை அதிகமாக பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஏற்கனவே அத்தகைய பாதிப்பு  இருப்பவர்களுக்கும் வியாதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டு நல்ல நிவாரணம் கிடைப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ட்டின் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனைகளில் இதற்கான  ஆய்வுகளை நடத்தி இதை கண்டுபிடித்து உள்ளனர்.

தினமும் குறைந்த பட்சம் 50 கிராம் அளவுக்கு குறையாமல் பீன்ஸ்  உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்

பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத்திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத்திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும் போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக் கொண்டு வெளியாவ தில்லை.

எலும்புகள் எலும்பரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால் கூட அல்லது வேகமாக நடந்து செல்லும் போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதயநோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளை விட எலும்பரிப்பு நோய் தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.

இரண்டில் ஒரு பெண்தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களை விட பெண்கள் இந்த நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத்தசைகள் ஆண் களை விடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம். 35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச் சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச்சத்து சமநிலை அடைகிறது.

அதுதான் எலும்பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்கு பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண்களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும் பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகுசுலபமாக ஏற்படுகிறது.

பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுகுறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகிவிடு கி றது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜன் அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம். சுண்ணாம்புச்சத்து சமநிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப்பருவம் வரையிலும். மேலும் ஒரு பெண்கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங் கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந் துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்ட சத்து, நீர்ச்சத்து, கொழுப்புசத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது.

இந்தக் கீ ரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லிய மாக தெரிய உதவும். பொன்னாங்கண்ணியின் பயன்கள் சில..
1. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

3. உடலை, தோலைப்பளபள என்று மாற்றுவதில் பெரும் பங்கு பொன்னாங்கண்ணிக்கு உண்டு

தமிழ் ஓவியா said...

மருத்துவக் குறிப்புகள்


* தாகம், ஜூரம், கீல்வாதம், ஜலதோஷம், ஈரல் கோளாறு ஆகியவற்றை எலுமிச்சம்பழரசம் போக்கிவிடும். சாதாரணப் பல்வலிக்கு ஒரு துண்டுச் சுக்கை வாயில் ஒதுக்கிக் கொண்டால் பல்வலி குணமாகி விடும். கடுகை அரைத்து வலியுள்ள இடத்தில் வெளிப்பக்கம் பற்றுப் போட்டால் கூடப் போதும் பல் வலி குணமாகிவிடும். ர் உடம்பெல்லாம் வலிக்கிறதா? அப்படியானால் உங்கள் வயிறும் இரத்தமும் சுத்தமாக இல்லை. உடனே மலத்தையும் இரத்தத்தையும் எடுத்துச் சோதியுங்கள். தினமும் கொஞ்சம் வேப்பம் கொழுந்து சாப்பிட்டு வந்தால், சரியாகிவிடும்.

* சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நடுவே தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு இளஞ்சூடான தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படிச் செய்தால், சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிவிடும். சாப்பிடும் போது இடை இடையே தண்ணீர் குடிப்பது ஜீரணத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். ர் பெண்களே, உங்களுக்குத் தாய்ப்பால் சுரக்க வில்லையா? எள் உருண்டை நிறையச் சாப்பிடுங்கள். எள், நிறைய பால் சுரக்கும்படி செய்கிறது.

* உடம்பு எப்போதும் சூடாக இருக்கிறதா? கொஞ்சம் வெந்தயத்தைத் தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். காலையில் எழுந்ததும் இந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு வாயில் வெந்தயத்தைப் போட்டு மென்று சாப்பிட்டால், உடல் சூடு தணிந்துவிடும். வெயில் காலத்தில் பலருக்கு நீர்க்கடுப்பு வரும். நீர்க்கடுப்பு வந்தால் ஒரு கிளாஸ் மோரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாப்பிடலாம். மோரில் இளநீர் கலந்து சாப்பிடுங்கள். நீர்க்கடுப்பு குணமாகிவிடும்.

* குழந்தைகள் குடல் வளர்ச்சி பெறச் சிறந்த டானிக் எது தெரியுமா? தேன். உங்கள் குழந்தைகளுக்குத் தினசரி கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் தேன் கொடுத்து வாருங்கள். குழந்தைகளின் தசைகளும் உடலும் வலிமை பெறும் பெண்கள் அடிக்கடி தலைவலி மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. தலைவலி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்குக் குழந்தைகள் பிறப்பதில்லை.

* தினசரி ஏதாவது ஒரு காய்கறி சூப் சாப்பிடுங்கள். காய்கறி சூப்பைச் சாப்பிடுவதால் உடலுக்குப் பலம் கிடைக்கிறது. சுறுசுறுப்பு ஏற்படுகிறது. வேப்பம் விதையில் உள்ள பருப்பையும் வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகிறது. தோலில் ஏற்படும் நோய்களும் கூட இதனால் குணமாகின்றன. சாப்பிட்டவுடன் வாந்திவரும் போல் இருந்தால் இலவங்கம், அல்லது ஏலக்காயை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். குமட்டல் நிற்கும். வாந்தி வராது.