Search This Blog

7.3.11

மகரஜோதி மோசடி-பீம்சிங், இது என்ன குழப்பம்?


சபரிமலையில் தோன்றுவதாகக் கூறப்படும் மகரஜோதி என்பது இயற்கையானதல்ல - அய்யப்பக் கடவுளின் சக்திக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. கேரள மின்வாரியத்தைச் சேர்ந்தவர்கள் சட்டியில் சூடத்தைக் கொளுத்திக் காட்டுகிறார்கள். அதனை மகர ஜோதி என்று நம்பிப் பக்தர்கள் சேவிக்கிறார்கள் என்ற உண்மை அம்பலமாகி விட்டது.

கேரள மாநிலம் பகுத்தறிவாளர்கள் மகரஜோதி காட்டப்படும் அந்தப் பொன்னம்பல மேட்டுக்கே சென்று உண்மையைக் கண்டுபிடித்து மக்களுக்குத் தெரிவித்து விட்டார்கள். அவர்கள் கண்டுபிடித்த அந்தத் தகவல்கள் பிளிட்ஸ் (16-1-1982) ஏட்டில் வெளி வந்தது. இல்லஸ்ரேட்டட் வீக்லி ஏடும்(1988) அம்பலப்படுத்திவிட்டது.

கேரளமாநில முதலமைச்சர் ஈ.கே.நாயனாரும் ஒப்புக் கொண்டார். ஆனாலும் அதில் தலையிடமாட்டோம் என்று கூறிவிட்டார்.

இப்பொழுதுள்ள முதல் அமைச்சர் அச்சுதானந்தனும், உண்மை எப்படி இருந் தாலும் இதில் அரசு தலையிடாது; மக்களின் மத நம்பிக்கையில் குறுக்கிடப் போவதில்லை என்று ஒரு மார்க்ஸிஸ்டு முதல் அமைச்சரே கூறி விட்டார்.

இதற்கிடையே இந்தப் பிரச்சினையைத் திசை திருப்பினார்கள்.

மகர விளக்கு என்று கூறப்படுவது பொய்தான்; மனிதர்கள் செய்யும் ஏற்பாடுதான்; ஆனால் மகரஜோதி என்பது வேறு - அன்றைய தினம் வானில் தோன்றக் கூடியது என்று சபரிமலைக் கோயில் மூத்த தந்திரி கண்டரரு மகேஸ்வரரு கூறினார். சரி, அதாவது உண்மையா? மனிதர்கள் ஏற்றும் மகர விளக்கு அல்லாமல் அன்றைய தினம் அவர் கூறும் மகர ஜோதி தனியாக வானத்தில் தோன்றுகிறதா? இந்தக் கேள்விக்கு இது வரை பதில் கிடையாது. இது பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் (கொலைக் குற்றத்தில் பிணையில் நடமாடிக் கொண்டு இருப்பவர்) ஜெயேந்திர சரஸ்வதியிடம் காமகோடி என்னும் ஆன்மிக மாத (மார்ச் 2011) இதழ் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. கேள்வி: ஸ்ரீ சபரிமலையில் தோன்றும் மகர ஜோதி என்பது அன்றைய தினம் வானில் தோன்றக் கூடிய பிரகாசமான நட்சத்திரம் ஆகும். ஆனால் மகரவிளக்கு என்பது பொன்னம்பல மேட்டில் காலம் காலமாக ஏற்றப்படும் தீபம் ஆகும். ஆகவே பக்தர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் விதத்தில் யாரும் செயல்படக்கூடாது என்று ஸ்ரீ சபரிமலை கோயில் மூத்த தந்திரி கண்டரரு மகேஸ்வரரு குறிப்பிட்டுள்ளது பற்றி? ஜெயேந்திரர் பதில்: மகரஜோதி - மகர விளக்கு இரண்டும் ஒன்றுதான். (காமகோடி, மார்ச் 2011 பக்கம் 4) இவர் கூற்றுப்படி மகர விளக்கும், மகர ஜோதி யும் ஒன்றுதான் என்றால் இரண்டும் மோசடி சமாச்சாரங்கள்தானே!

பீம்சிங், இது என்ன குழப்பம்?

--------------------- மயிலாடன் அவர்கள் 7-3-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: