Search This Blog

23.3.11

தெய்வீக சம்மதமான கல்யாணங்கள் இப்படி முடிவடைவானேன்


கல்யாண விடுதலை

ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன் பெண்ஜாதி என்ற வாழ்க்கையானது நமது நாட்டில் உள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாண தத்துவம் எல்லாம் சுருக்கமாகப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்ளுவது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ்வடிமைத்தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலியவைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்திற்கு தெய்வீகக் கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்ற போலிப் பெயரையும் கொடுத்து பெண்களை வஞ்சிக்கின்றோம்.

பொதுவாக கவனித்தால் நமது நாடுமாத்திரமல்லாமல் உலகத்திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்க கொடுமையும், இயற்கைக்கு விரோதமான நிர்ப்பந்தமும் படுத்தப்படுகிறார்கள் என்பதை நடுநிலைமையுள்ள எவரும் மறுக்கமுடியாது. ஆனால் நமது நாடோ இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாட்டையும் விட மிக்க மோசமாகவே இருந்து வருகிறது.

இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலைபெற்று வருமானால் சமீபகாலத்திற்குள்ளாக அதாவது ஒரு அரை நூற்றாண்டுகளுக்குள்ளாக கல்யாணச் சடங்கும், சொந்தமும் உலகத்தில் அநேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாய்ச் சொல்லலாம். இதை அறிந்தே மற்ற நாடுகளில் அறிஞர்கள் பெண்கள் கொடுமையை நாளுக்கு நாள் தளர்த்திக்கொண்டு வருகின்றார்கள். நம் நாடு மாத்திரம் குரங்குப்பிடியாய் பழய கருப்பனாகவே இருந்து வருகின்றது. ஆதலால் தலைகீழ் முறையான பெண்கள் கிளர்ச்சி ஒன்று நமது நாட்டில் தான் அவசரமாய் ஏற்பட வேண்டியிருக்கின்றது.

செங்கல்பட்டில் கூடிய மகாநாட்டில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தங்கள் தங்கள் கல்யாண விடுதலை செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் செய்யப்பட்டவுடனும் சென்னையில் கூடிய பெண்கள் மகாநாட்டில் கல்யாண ரத்துக்கு ஒரு சட்டம் வேண்டும் என்று தீர்மானித்த உடனும் உலகமே முழுகிவிட்டதாக சீர்திருத்த வாதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் உட்பட பலர் கூக்குரலிட்டார்கள். ஆனால் செங்கல்பட்டு தீர்மானத்திற்குப் பிறகு வெளிநாட்டிலும், இந்தியாவிலும் பல விடங்களில் கல்யாண ரத்துச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ருஷ்யாவில் கல்யாணமே தினசரி ஒப்பந்தம்போல் பாவிக்கப்பட்டு வருகிறது. ஜர்மனியில் புருஷனுக்கும், பெண்ஜாதிக்கும் இஷ்டமில்லையானால் உடனே காரணம் சொல்லாமலே கல்யாணத்தை ரத்து செய்துகொள்ளலாம் என்பதாக சட்டம் கொண்டுவரப்பட்டது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். சமீபத்தில் பரோடா அரசாங்கத்தாரும் கல்யாண ரத்துக்குச் சட்ட சபையில் சட்டம் நிறைவேற்றி விட்டார்கள். மற்ற மேல்நாடுகளிலும் இவ்விதச் சட்டங்கள் இருந்து வருகின்றன. நமது நாட்டில் மாத்திரம் இவ்விஷயம் சட்டம் செய்வதில் கவனிக்கப்படாமலிருந்து வருகின்றதானது மிகவும் அறிவீனமான காரியம் என்றே சொல்லவேண்டும். சாதாரணமாக தென்னாட்டில் பத்திரிகைகள் மூலம் அனேக புருஷர்கள் தங்களது பெண்ஜாதிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு கொலைகள் செய்ததாக தினம் தினமும் செய்திகள் வெளியாவதைப் பார்த்து வருகின்றோம்.

சில சமயங்களில் ஒரு பெண்ஜாதியின் நடவடிக்கை சந்தேகத்திற்கு பல கொலைகள் நடந்ததாகவும் பார்க்கின்றோம். தெய்வீக சம்மதமான கல்யாணங்கள் இப்படி முடிவடைவானேன் என்பதைப்பற்றி தெய்வீகத்தில் பிடிவாதமுள்ள எவருக்குமே யோசிக்கப் புத்தியில்லை. பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால், அவர்களுக்கும் மனிதத்தன்மை ஏற்பட வேண்டுமானால் ஆண்களுக்கும் திருப்தியும், இன்பமும், உண்மையான காதலும், ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு இடம் அளிக்கப்பட வேண்டியது முக்கியமான காரியமாகும். அப்படிக்கில்லாதவரை ஆண், பெண் இருவருக்கும் சுதந்திர வாழ்க்கைக்கு இடமே இல்லாமல் போய்விடும்.

நமது "சீர்திருத்தவாதிகள்" பலர், ஒரு மனிதன் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக்கொள்வதைப்பற்றி மாத்திரம் குடி முழுகிப்போய்விட்டதாகக் கூச்சல் போடுகின்றார்கள். இவர்கள் எதை உத்தேசித்து இப்படிச் கூச்சல் போடுகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. மதத்தை உத்தேசித்தா? அல்லது பகுத்தறிவை உத்தேசித்தா? அல்லது பெண்கள் நலத்தை உத்தேசித்தா? அல்லது மனித சுதந்திரத்தை உத்தேசித்தா? என்பது நமக்குச் சிறிதும் விளங்கவில்லை. அல்லது மனித ஒழுக்கத்தை உத்தேசித்து இப்படிப் பேசுகின்றார்களா என்பதும் விளங்கவில்லை.

நிற்க, ஒரு பெண்ஜாதிக்கு மேல் மனிதன் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது என்று சொல்லுபவர்களை நாம் ஒன்று கேட்கின்றோம். அதென்னவெனில், கல்யாணம் என்பது மனிதன் இன்பத்துக்கும், திருப்திக்குமா? அல்லது சடங்குக்காகவா? என்று கேட்பதோடு இஷ்டமில்லாத, ஒற்றுமைக்கு இசையாத, கலவிக்கு உதவாத ஒரு பெண் எந்தக் காரணத்தினாலோ ஒருவனுக்குப் பெண்ஜாதியாக நேர்ந்துவிட்டால் அப்போது புருஷனுடைய கடமை என்ன என்று கேட்கின்றோம். அதுபோலவே ஒரு பெண்ணுக்கும் அப்படிப்பட்ட ஒரு புருஷன் அமைந்துவிட்டால் அப் பெண்ணின் கதி என்ன என்றுதான் கேட்கின்றோம். கல்யாணம் என்பது தெய்வீகமாகவோ, பிரிக்க முடியாததாகவோ உண்மையில் இருக்குமாயின் அதில் இவ்வித குணங்கள் ஏற்பட முடியுமா என்பதை யோசித்தாலே தெய்வீகம் என்பது முழுப் புரட்டு என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் புரியாமல் போகாது. ஆகவே நமது நாட்டிலும் மற்ற நாடுகளில் இருப்பதுபோன்ற கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின் கல்யாண மறுப்புப் பிரசாரமும் கல்யாண ஆன புருஷர்களுக்கும் பெண்களுக்கும் பலதாரப் பிரசாரமும்தான் செய்யவேண்டி வரும். அன்றியும் இது சமயம் ஒன்றுமைக்கும், திருப்திக்கும், இன்பத்திற்கும் உதவாத பெண்களை, உடைய புருஷர்கள் கண்டிப்பாக தைரியமாக முன் வந்து தங்களுக்கு இஷ்டமான பெண்களை திரும்பவும் மணம் செய்துகொள்ளத் துணிய வேண்டும் என்றும் தூண்டுகின்றோம். ஏனெனில் அப்படி ஏற்பட்டால்தான் தெய்வீகம் என்கின்ற பெயரைச் சொல்லிக்கொண்டு புருஷர்களுக்கும், பெண்களுக்கும் சம்மதமும் முன் பின் அறிமுகமும் இல்லாமல் செய்யப்பட்டுவரும் கல்யாணங்களில் மக்கள் அடையும் துன்பம் ஒழிபட முடியும். மனிதன் ஏன் பிறந்தானோ ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம். ஆதலால் அது ஒரு புறமிருந்தாலும் மனிதன் இருக்கும்வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும். இதற்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம்.

அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான இடையூறு இருக்குமானால் அதை முதலில் களைந்தெறிய வேண்டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும். மனித ஜீவகோடிகளின் திருப்திக்கும், இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதையே செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல் "ஏதோ கல்யாணம் என்பதாகச் செய்து கொண்டோமே, செய்தாய் விட்டதே, எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டுதானே இருக்க வேண்டும்" என்று கருதி துன்பத்தையும், அதிருப்தியையும் அனுபவித்துக்கொண்டிருப்பதும், அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்வதும், மனிதத்தன்மையும், சுயமரியாதையும் அற்ற தன்மையுமேயாகும் என்பதே நமதபிப்பிராயமாகும்.

---------------------பெரியார் ஈ.வெ.ரா. - “பகுத்தறிவு” டிசம்பர் 1936

0 comments: