Search This Blog

2.2.23

ஆத்மா பற்றி பெரியார்

ஆத்மா பற்றி பெரியார்


 


சமீபத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வக்கீல் உயர்திரு. மைலாப்பூர் எஸ்.ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர் களுடன் காங்கிரஸ் பிரசாரமாக ஆங்காங்கு சென்ற காலையில், ஒரு நாள் மதுரையில் இரவு 10 மணிக்கு மேல் படுத்துக்கொண்டு வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருக்கையில், ஆத்மாவைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் இதே அபிப்பிராயம் சொன்னபொழுது, உடனே அவருக்குக் கோபம் வந்து, உம்மிடம் சாவகாசம் வைத்ததே தப்பு என்றும், நீர் இவ்வளவு கீழான மனிதனென்று எனக்கு இதுவரையிலும் தெரியா தென்றும் சொல்லிப் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டார்.

ஆனால், அப்படிப் பேசுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தில் அவருடைய தலைமையின்கீழ் ஒத்துழையாமை சம்பந்தமான பிரசங்கம் செய்த பிறகு, தலைவர் முடிவுரையாக என்னைப் பற்றி அவர் பேசும்போது, ஸ்ரீமான் ஈ.வெ.-இராமசாமி நாயக்கர் ஒரு பெரிய ராஜரிஷி யென்றும், இவர் நமக்குத் தலைவராகக் கிடைத்தது நமது பாக்கியம் என்றும், மற்றும் பல விதமாகப் புகழ்ந்து பேசினார். மறுநாள் காலையில் அவருடைய கோபம் தணிந்த பிறகு, தானாகவே என்னுடன் பேசவந்த பொழுது, நாயக்கர்வாள்! கோபஞ்செய்து கொள்ளாதீர்கள். இராத்திரி தாங்கள் அம்மாதிரி பேசியதற்குக் காரணம் இன்னதென்று தெரிந்து கொண்டேன்.

அதாவது, சீமைக்குச் சென்று, கல்வி கற்றுவந்த உங்களுடைய குழந்தைகள் திடீரென்று இறந்து போன வெறுப்பினால் தாங்கள் இவ்வித எண்ணங்கொண்டு விட்டதாக உணர்ந்தேன். ஆதலால் கோபித்துக் கொள்ளாதீர் களென்று சமாதானம் சொன்னார். நான் அதற்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்றும், அக்குழந்தைகள் என் தமையனார் குழந்தைகள் என்றுமே அவருக்கு மீண்டும் உரைத்து, எனதபிப்பிராயத்தையே பலமாக மறுபடியும் வற்புறுத்தினேன். ஆகவே, நான் இந்த விஷயங்களெல்லாம் வெகு நாளாகவே கொண்டுள்ள அபிப்பிராயங்களானாலும், அவற்றின் சம்பந்தமான சகல தொல்லைகளையும் மேற்போட்டுக் கொண்டு, பிரசாரம் செய்கிறதென்கிற வேலையாக இப்பொழுதுதான் திரிகிறேன். இதற்கு முன் நான் எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், சிநேகமாக ஏற்பட்டவர்களிடமெல்லாம் இதைப்பற்றியே பேசியும் இருக்கிறேன்.

ஆத்மா என்னும் விஷயத்தில் சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமானால், அது ஒருவித உணர்ச்சியே ஒழிய ஒரு தனிப்பட்ட வஸ்துவல்ல. அவ்வுணர்ச்சியானது சரீரத்தின் அசைவு நின்றவுடன் ஒழிந்துபோகும் என்பதேயாகும். இதைப்பற்றி இரண்டு விசயங்கள் குடிஅரசுவில் முன்னாலேயே எழுதப்பட்டிருக்கிறது. மூன்றாவது விஷயமும் சமீபத்தில் வரும் ஆத்மா என்பதைப் பற்றிய பேச்சே பேசாமலிருந்தால் நல்லதென்றும், இதனால் பல ஜனங்களுடைய அதிருப்தி ஏற்பட்டு, நமக்கு வெளி உதவிகள் குறைந்து போகுமெனவும் சிலர் கூறுகின்றார்கள். அதை ஒத்துக் கொள்ள என்னால் முடியவில்லை. எனது அபிப்பிராயங்களைச் சொல்லுவதை நமது கடமையாக வைத்துக் கொள்ளுவோம். மற்றவர்களுக்குத் துன்பமில்லாத முறையில் அதைப் பிரசாரம் செய்வோமென்பதைத் தவிர, வேறு விஷயங்களை எதிர்பார்த்துக் கொண்டு, அபிப்பிராயங்களை மூடி வைத்துக் கொண்டிருப்பது நியாயமாகாது. நமது ஆயுள் காலத்திற்கு எவ்வித அளவும், உறுதியும் பந்தோபஸ்-துமில்லையாதலால், கூடுமானவரை சவுகரியமிருக்கும்பொழுது நமது அபிப்பிராயங்களை எல்லாம் சொல்லி விடுவதுதான் சரியென்று நினைக்கின்றேன்.

                             -----------------------------தந்தைபெரியார் -”குடிஅரசு” 31,5.1931

0 comments: