Search This Blog

16.5.21

 

கடவுள் புரட்டை உணரவேண்டாமா?

மதத்தின் பேரால் (ஏன் கடவுளின் பேரால் என்றும் சொல்லலாம்) உலகில் உள்ள எல்லா மக்களும் எல்லா நாட்டிலும் மதங்களின் அவ்வக்காலங்களின் போது காட்டுமிராண்டிகளாய் மூட நம்பிக்கைக்காரர்களாய் - சிந்தனை அற்ற முட்டாள்களாகவே இருந்திருக்கிறார்கள்.

 

ஆசிரியர்கள், அவர்கள் இனத்தார்களான மேல்நாட்டவரை எடுத்துக் கொண்டாலும் கடவுள் - மதம் விஷயமாக இன்று அவர்களும் நாமும் பங்கு கொள்ளும் எந்தக் கருத்தும் சுமார் 4,000-அல்லது 5,000-ஆண்டுகளுக்கு முன் அவைகளுக்கென்றே சொல்லும்படியான சொற்கள் இருந்ததாகவும் தெரியவில்லை. 4,000-ஆண்டுகளுக்கு முன்னதாக என்று சொல்லும்படியான காலத்தில் ஏற்பட்ட ஆரிய வேதம் என்னும் கற்பனைக் கோர்வைகளிலும் கடவுளைப்பற்றியோ, மதத்தைப் பற்றியோ இன்று குறிப்பிடுவதைப் போன்ற சொற்களைக் காணவும் முடியவில்லை.

 

வேதம் என்பதில் காணப்படும் ஏதாவது "கடவுள் தத்துவம்" கூடவேதத்துக்கு வியாக்கியானம் செய்தவர்களான சங்கரர், இராமானுஜர், மாத்துவர் முதலிய மத குருமார் என்பவர்கள் தனித்தனியாக அவரவர்களுக்கென்று செய்து கொண்ட வியாக்கியானங்கள் கூட கடவுளைப்பற்றி ஒன்றுக்கொன்று பொருந்தாத வகையில் உள்ளன. அந்தக் கருத்து வேற்றுமைகள் தான் இன்று சங்கர, இராமானுஜர், மாத்துவ மதங்களாக உருப்பெற்றிருக்கின்றன. இவர்கள் மூவர் அல்லாத ஒரு பொது மனிதன் வேதத்திற்கு இன்று வியாக்கியானம் செய்வதனால் வேதத்தில் கடவுளைக் காட்டவோ, காணவோ முடியாது.

 

வேதத்தில் பஞ்ச பூதங்களைத்தான் காணலாம். ஆனால், அந்த பூதங்களுக்கு அக்கால காட்டுமிராண்டி மவுடீகத்திற்கேற்ப ஒவ்வொரு எஜமானர்களை ஏற்படுத்தி, பிறகு அவர்களே அவைகளாக ஆக்கப்பட்டு அதனால் அவர்கள் -தேவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்திர தேவன், வாயு தேவன், வருண தேவன், அக்கினி தேவன், பூமி தேவன், என்று இவை முறையே ஆகாயம், வாயு, அப்பு, தேயு, பிருதிவி என்கின்ற வையான பஞ்ச பூதங்களைக் குறிப்பிடுபவையேயாகும். இவைகளைச் சேர்த்து வைக்கும் இயற்கைக்குப் பலவாறு பெயரிட்டுக் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

இவ்வைந்தின் கூட்டினால் ஏற்பட்ட உலகைத்தான் பிரபஞ்சம் என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இன்று மதம், கடவுள் 100-க்கு 97-பேரான 'இந்து' பாமர, பண்டித, பணக்கார மக்களை என்ன செய்திருக்கிறது. எப்படி நடத்துகிறது என்பதைப் பற்றி எவருக்குமே கவலை இல்லை என்பதுடன், மானமும் இல்லாமல் செய்துவிட்டதைச் சிந்திக்க வேண்டாமா?

 

- (01.04.1971- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

0 comments: