Search This Blog

16.5.21

 

கடவுள் என்பது...?

கடவுள் என்பது முதலில் யாரால், எப்போது சொல்லப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை.

 

திராவிடர்கள் (தமிழர்கள்) ஆகிய நமக்கு ஆரியனால் (கடவுள்) புகுத்தப்பட்டது என்பது தான் தெரிய வருகிறது.

 

நமக்கு (தமிழர்ளுக்கு) ஆரியனுக்கு முன் கடவுள் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், கடவுள் என்பதற்கு தமிழில் ஒரு சொல்லே இல்லை.

 

கந்தழி என்னும் ஒரு சொல் இருப்பதாகத் தமிழ்ப் புலவர்கள் கூறுகிறார்கள் என்றாலும் "அது பொருளற்ற சொல்" எனத் தகுந்தபடி தான் அதற்கும் பொருள் கூறப்பட்டிருக்கிறது.

 

அதாவது "ஒரு பற்றும் அற்று உருவம் அற்றதாய் - அருவாய் தானே நிற்கும் தத்துவம் கடந்த பரம்பொருள்" என்ற பொருளைக் கொண்ட சொல்லாகும். தத்துவம் என்ற சொல்லுக்கு உண்மை, சுபாவம், பலம், புத்தி முதலிய பல பொருள்கள் கூறப்பட்டிருக்கின்றன. "இவை கடந்த" என்றால் "இல்லாதது, பொய்யானது" என்று தான் பொருள் மிஞ்சும், நிலைக்கும்.

 

ஆகவே, தமிழன் கந்தழி என்ற சொல்லைச் சொன்ன காலத்திலேயே அதற்குக் கடவுள் இல்லை என்ற பொருளைப் புகுத்தித்தான் உண்டாக்கியிருக்கிறான். தத்துவம் கடந்த என்பதில் தத்துவம் என்பது தமிழ்ச்சொல் அல்ல என்பது என் கருத்து.

 

ஆகவே, கந்தழி என்ற சொல்லுக்கு தமிழில் ஒரு பொருளும் கூறவில்லை. வடமொழியிலும் உண்மை அல்லாதது என்ற பொருளைக் கூறிவிட்டு மற்றும் பஞ்ச பூதம் என்றும் தமிழல்லாத சொற்களே அகராதியில் அடுக்கப்பட்டிருக்கிறது.

 

மற்றும் தெய்வம், பகவான், ஈஸ்வரன், பராபரன் என்ற சொற்கள் தமிழ் அல்ல என்பது என் கருத்து. ஆகவே, கடவுள் என்பதற்கு தமிழில் சொல் இல்லை என்பது உறுதி. கடவுள் என்ற சொல்லுக்கும் அகராதியில் குரு, அய்யர், வானவர், புததேள் என்பவைதான் காணப்படுகின்றன.

 

புத்தேழ் என்பதைக் தமிழாகக் கொண்டால், புததேழ் என்பதற்கும், தெய்வம், புதுமை, புதியவர், புத்தான் எனப் பொருள் காணப்படுகின்றன.

 

ஆகவே கடவுளுக்கு எப்படிப்பட்ட பொருள் காண்பதானாலும் வடமொழிப் பொருள்களேயல்லாமல், அதுவும் வானவர், தேவர்கள் போன்ற பொருள்களே அல்லாமல் இன்று மக்கள் கொண்டிருக்கும் கருத்துக்கு ஒரு சொல் தமிழிலோ வடமொழியிலோ இல்லை என்பது உறுதி.

 

கடவுள் என்பது தமிழனுக்கு மாத்திரம் இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. ஆரியனுக்கும் கடவுள் இல்லை.

 

ஆரியனுக்கு மூல ஆதாரம் வேதம். அந்த வேத காலத்திற்குக் காலம் இருந்தாலும் சமீப காலத்தில் உண்டாக்கப்பட்ட வேதத்தில்கூட (ஆரியனுக்கு) கடவுள் தத்துவப்படி கடவுள் காணப்படவில்லை. அதில் காணப்படுவதெல்லாம் தேவர்கள்தான். அந்த தேவர்கள் அனைவரும் இந்திரனுக்குக் கீழ்ப்பட்ட தேவர்கள் தான். எனவே தமிழனுக்கோ திராவிடனுக்கோ ஆரியனுக்கோ கடவுள் என்பது இல்லவே இல்லை.

 

இருக்கும் கடவுள்கள் எல்லாம் தேவர்களில் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள் தான். அவர்களும் மிகமிகக் கீழ்த்தரமான தன்மையுடையவர்களே. அதாவது மனிதத் தன்மையிலும் கீழ்த்தரமான தன்மையுடைவர்களே ஆவார்கள்.

 

அவர்களில் இன்று தமிழன் கொண்டாடும், வணங்கும் கடவுள் என்பவைகளில் எல்லாம் மூலாதாரமாகச் சொல்லப்படும் கடவுள்கள் பிர்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று பெயர் கொண்டவைகளேயாகும். அவைகள் தனித் தனியானவர்கள் என்பதாகக் கருதியே அவரவர் பெயரால் மதமும், உயர்வு - தாழ்வு சக்திகள் படைத்த சமயநூல் புராணங்களும் ஏற்பாடு செய்து பாவிக்கப்பட்டு வரப்படுகின்றன.

 

இந்த நிலை கடவுள் நம்பிக்கைக்காரர்களின் கடைநிலை என்று சொல்லப்படுவதாகும்.

 

ஏனென்றால் இம்மூன்று சமயத்தாரும், மூன்று கடவுள்களுக்கும் உருவம், ஆண் - பெண் தன்மை, இவைகளுக்கு மனிதத்தன்மை, மனித குணம் அதுவும் மனிதனின் கீழ்த்தரமான குணங்கள் கற்பிக்கப்பட்டு அதன்படி நடந்து வருகிறவர்களாதலால் இம்மூன்று சமய மக்களும் உலகினரால் காட்டுமிராண்டி மக்கள் என்று சொல்லத்தக்கவர்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள்.

 

அது மாத்திரமல்லாமல், கடவுள் நம்பிக்கை உள்ள உலகில் உள்ள மக்கள் யாவருமே மனித குணம் கற்பிக்கப்பட்ட கடவுளைத்தான் வணங்கி வருகிறார்களே தவிர, "கடவுள் குணம்" என்பதானவற்றைக் கற்பித்த கடவுளை வணங்காதவர்களாகத்தான் இருந்து வருகிறார்கள்.

 

மற்றும் கடவுளை நம்புகிற, வணங்குகிற மக்களில், ஒன்று போன்ற கருத்துடையவர்களும் யாரும் இல்லை.

 

கடவுள் சொன்னதாக, கடவுளுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும், கற்பிக்கப்படும் ஆதாரங்கள் எவையும் ஒன்று போல் இல்லை.

 

கடவுள் தன்மைகளும் அதுபோலவே தான், அவரவர் இஷ்டப்படி கற்பித்துக் கொள்ளப்படுகின்றன. கடவுள் என்பதாக ஒன்றோ பலவோ இல்லையென்பதற்கு இந்த விஷயங்களே போதுமான ஆதாரங்களாகும்.

 

உலகில் இப்போது நம்பிக்கைக்காரர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றார்கள். இதற்குக் காரணம், மக்களுக்கு அறிவுத்தன்மை, ஆராய்ச்சித் தன்மை, சிந்திக்கும் துணிவு ஏற்படுவதும், வளர்ந்து வருவதுமேயாகும். அதாவது இப்போது கடவுள் நம்பிக்கையின் அவசியம் சுயநலக்காரனுக்கும் அயோக்கியனுக்கும்தான் அவசியமாகிவிட்டது; வணங்கும் தன்மை அறிவற்ற மூடனிடம்தான் அதிகம் காணப்படுகிறது.

 

இன்று உலகம் பெரும்பாலோருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. ரஷ்யா, சீனா, ஜப்பான், சயாம், பர்மா, சிலோன் முதலிய பல பெரும் ஜனத்தொகை கொண்ட நாடுகள் 100-க்கு 100-ம், 90-ம், 100-க்கு 75- வீதமும் கடவுள் நம்பிக்கை இல்லாத மக்களைக் கொண்ட நாடுகளாக ஆகிவிட்டன.

 

மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி முதலிய மேல்நாடுகளில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சங்கம் ஏராளமாக ஏற்பட்டு அவற்றிற்குக் கோடிக்கணக்கான மக்கள் அங்கத்தினர்களாக இருப்பதோடு, இலட்சம், பத்து லட்சக்கணக்கில் நூல்கள் பிரசுரித்து உலகம் முழுவதும் பரப்பப்பட்டு வருகின்றன.

 

இதற்குக் காரணம் என்னவென்றால், பொதுவாகவே அறிஞர்களால் மனித சமூதாய வளர்ச்சிக்கு, விஞ்ஞான வளர்ச்சிக்கு, விஞ்ஞான வளர்ச்சிக்கு, சிந்தனை வளர்ச்சிக்கு, கடவுள் என்று கருத்து பெரும் தடையாக, கேடாக இருக்கிறது என்ற கருத்து நாளுக்கு நாள் வளர்ந்து வருவதுதான்.

 

"ஞானிக்கு கடவுள் இல்லை" என்பது 2000-ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஆத்திகப் பரப்பு நூல்களிலேயே காணப்படும் சொல்லாகும்.

 

ஞானி என்ற தன்மைக்கும், கடவுள் தன்மை கற்பிக்கப்பட்டு விட்டபடியால், ஞானம், ஞானி என்பது பற்றி கடவுள் நம்பிக்கைக்காரர்கள், மூடநம்பிக்கைகாரர்கள் சிந்திக்காமலேயே போய்விட்டார்கள்.

 

எண்ணெய் இருந்தால்தான் விளக்கு எரியும் என்பது போல, சிந்தனை இருந்தால் தான் உண்மை விளங்க முடியும்.

 

"கடவுள் சிந்தனைக்கு உரியதல்ல." ஏனென்றால் "கடவுள் சிந்தனைக்கும், மனதுக்கும் எட்டாதவர்", "மனம், வாக்கு, காயத்திற்கும் எட்டாதவர்" என்ற நிபந்தனையில் மனிதனுக்குள் கடவுளைப் புகுத்திவிட்டால் மனிதன் எப்படி அறிவு படைத்த ஜீவனாக இருக்க முடியும்? இப்போது உலகம் அறிவுத்துறையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

 

சாதாரணமாக நமது நாட்டில் இன்று ஆட்சி செய்கிற அரசு கடவுள் இல்லை என்ற கொள்கையுடைய பகுத்தறிவு ஆட்சியென்றால் அந்தத் தன்மையில் இந்த ஆட்சி ரஷ்யாவுக்கு அடுத்தபடியான ஆட்சியல்லவா?

 

மற்றும் நம் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபன ரூபமாய், இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் இயங்கி வருகிறதென்றால், கடவுள் இல்லை என்ற தன்மையில், அறிவு வளர்ச்சி, சிந்தனா சக்தி என்ற தன்மையில் முன்னேற்றமடைந்து வருகிறது என்பது கல்லுப்போல் துலங்கவில்லையா?

 

மற்றும் முதலாளித்தன்மை கொண்ட அய்ரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களில் முக்கிய நகரங்களில் கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட கடவுளை மறுக்கும் சங்கங்கள் ஏராளமாக இருந்து வருகின்றன; மேலும் ஏற்பட்டு வருகின்றன என்றால் இதன் பொருள் என்ன?

 

ஒரு கைப்பிடிக்குள் அடங்கும் பாதிரிகளும் மூல்லாக்களும், 'டூய்' என்றால் சாக்கடைக்குள் புகுந்து ஒளியும் பார்ப்பனர்களும், அழியப்போகும், அழிந்து கொண்டு வரும் கடவுளை, அதுவும் இல்லாத கடவுளை "நிறுத்தி வைத்து ஆணி அடிக்கிறோம்" என்றால் இதில் எப்படி அறிவுடமை இருக்க முடியும்?

 

மேல்நாட்டு ஆட்சியாளர்கள் முயற்சியின் கணக்குப்படி இன்று 300-கோடி உலக மக்களுக்குள் 150-கோடிக்கும் குறைந்த மக்கள் தான் "கடவுள் நம்பிக்கைக்காரர்கள் என்றும், மீதி கோடி மக்களிலும் முக்கால்வாசிப் பேர் பச்சை நாத்திகர் என்றும், மீதிப் பேர்கள் குழப்பவாதிகள் என்றும் மேல்நாட்டு ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கூறி இதை முடிக்கிறேன்.

 

- (05.08.1972- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

0 comments: