Search This Blog

16.5.21

 

இன்றைய நம் கடவுள்கள்!

இன்றைய நம் கடவுள்கள் எல்லாம் சுமார் 2000, 3000-வருஷங்களுக்கு மேலான, மக்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்த காலத்தில் கற்பிக்கப்பட்டவைகளாகும். அந்தக்காலத்தில் மக்களுக்கு அறிவுமில்லை, மானமுமில்லை என்று இருந்தாலும், முறையும் இல்லாத காலம் என்றே சொல்லாம்.

 

எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அவற்றின் கற்பனை நாகரிகமான முறையாய்க் கூட ஆக்கப்படவில்லை என்பதோடு, அதனதன் செய்கைகளும், நடப்புகளும் கூட அநாகரிமும், மடமையும் பொருந்தியதாகவே தான் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. "கடவுள் ஒன்றுதான்; அதற்கு உருவமில்லை; அதற்கு ஒன்றுந் தேவையில்லை. அது சர்வ வல்லமை உடையது; கருணையும், அன்பும்" உடையது என்றெல்லாம் சொல்லப்பட்டதேயொழிய "நம் கடவுள்கள்" எல்லோரும் மேற்சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு மாறாகவே தான் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.

 

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களுடைய கற்பனை பல கருத்துக்களையும் ஒன்றுக்கொன்று மாறான கருத்துக்களையும், கொண்டதாக இருந்தாலும் அவற்றிலிருந்து தோன்றியதான கணபதி, கந்தன், ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்கள் மிக மிக ஆபாசமாகவும், அசிங்கமாகவும், ஒழுக்கக் கேடாகவும், அநாகரிகமாகவுமே கற்பிக்கக்கப்பட்டிருக்கின்றன.

 

கணபதி அழுக்கு உருண்டையிலிருந்து தோன்றினான். சிவனும் பார்வதியும் யானை வடிவில் புணரத் தோன்றியவன் கந்தன். சிவனும், பார்வதியும் பதினாயிரக்கணக்கான வருஷங்களாகப் புணர்ந்தும் கருத்தறிக்காமல், சிவன் இந்திரியத்தை பூமியில் விட்டதனாலும், தேவர்களையும், விஷ்ணு பிரம்மாவாதிகளை கையில் வாங்கிக் குடிக்கச் செய்ததினாலும் தோன்றியவன் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது.

 

இராமன் என்ற கடவுள் தசரதன் என்ற ஒரு 60-ஆயிரம் வயதான கிழவனுக்குப் பிறக்கச் செய்ததாகவும் அதற்காக அரசன் பார்ப்பனருக்குப் பணம் (கூலி) கொடுத்தான் என்றும் அப்படிப் பிறந்தவன் தான் இராமன் என்றும் கற்பிக்கப்பட்டிருக்கிறது. இராமனுடைய தகப்பன் தன்னுடன் பிறந்த தங்கையாகிய கோசலையை மணந்து கொண்டவன் என்றும் கோசலத்தில் கோசலராஜன் மகள் என்றும், தசரதன் கோசலதேச அரசன் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

இராமன் இப்படி இருப்பதோடு, இராமன் மனைவி சீதை யாரோ பெற்று காட்டில் போடப்பட்ட பெண் என்றும், மற்றொரு ஆதாரத்தில் சீதை தசரதன் மகள் - ராமனின் தங்கை ஆவாள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும் சீதை இராவணன் என்பவனுடன் சென்று அவனோடு பலநாள் தங்கி வாழ்ந்து அவனுக்குக் கர்ப்பமாகி அதை இராமன் அறிந்து அவளைக் காட்டிற்கு அனுப்பினான் என்றும் கூறப்பட்டிருக்கிறது. கிருஷ்ணன் என்பவன் விஷ்ணுவின் மார்பில் உள்ள மயிர்களில் இரண்டு மயிரைப் பிடுங்கி தேவர்களுக்கு கொடுக்க, அவற்றிலிருந்து உண்டானான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 

இவர்களுடைய நடத்தைகள் மனிதத் தன்மைக்கும், யோக்கியத்திற்கும் மாறாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றும் பிரம்மா தன் மகளையே மனைவியாக்கிக் கொண்டு வாழ்கிறான் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாரியம்மன் என்கிற கிராமக் கடவுள், ஒரு ரிஷியின் மனைவி விபச்சாரம் செய்ததால் கணவனால் தெரிந்து தண்டிக்கப்பட்டு வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு பறத்தெருவில் தஞ்சம் புகுந்து பஞ்சமருக்குக் கடவுளாக ஆக்கப்பட்டவள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

பஞ்சபாண்டவர்கள் - அவர்கள் தாய் பலரிடம் 5, 6-பேர்களிடம் கலவி செய்து பலருக்குப் பிறந்தவர்கள் என்றும் அவர்கள் போகப் பெண்ணாகிய துரோபதை ஒருவனை மணந்து அய்வருக்கு போகப் பெண்ணாக நடந்து வந்தாளென்னும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றும் சிவன் மனைவி, விஷ்ணு மனைவி காமம் மீற யானை, குதிரை ஆகியவற்றைப் புணர்ந்தார்களென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றும் பல ரிஷிகள் மான், குதிரை, பட்சி முதலிய ஜந்துக்களுடன் புணர்ந்து சந்ததி உண்டாக்கிக் கொண்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நமது "கடவுள்கள்" மாத்திரமில்லாமல், நமது மதமென்பது இவை போன்ற அசிங்கமும், ஆபாசமும் கொண்ட விஷயங்களையே தொகுத்துப் புனைந்ததாகவே இருக்கிறது.

 

நமது கடவுள்களால் நாம் காட்டுமிராண்டிகள் என்பது அல்லாமல், நமது மதவாதிகளால் ஈனப்பிறவிகள் - பார்ப்பனரின் தாசி மக்கள் என்பதாக ஆகி அந்தப்படியே இருந்தும் வருகிறோம். நாம் நம் கடவுள்களை வணங்குவதன் முலம் தீண்டப்படாதவர்களாக ஆகி கர்ப்பக் கிரகத்திற்கு வெளியில் நின்று வணங்கி வருகிறோம். இப்படியாக தமிழர்களாகியதிராவிட மக்களாகிய நம் நிலை 2000, 3000-ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு என்ன பதில் - பரிகாரம் சொல்கிறீர்கள்? சிந்தியுங்கள்; மான உணர்ச்சியுடன் சிந்தியுங்கள்.

 

- (02.07.1973- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

0 comments: