Search This Blog

21.8.08

தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால்.....






(தமிழ்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில் திருச்சி, சேலம் முதலிய பல இடங்களில் பெரியாருக்கு வரவேற்பும், பணமுடிப்பும் அளிக்கப்பட்ட கூட்டங்களில், வரவேற்புகளுக்கும் பணமுடிப்புகளுக்கும் தந்தை பெரியார் அளித்த பதிலின் தொகுப்பு வருமாறு):

தோழர்களே, நான் இந்த ஊர்களுக்குப் பல தடவை வந்திருக்கிறேன், எத்தனையோ தடவை பொதுக்கூட்டங்களில் பேசி இருக்கிறேன். பல தடவை இந்த ஊர்த் தெருக்களில் நடந்திருக்கிறேன். அந்தக் காலத்திலெல்லாம் இல்லாத மாதிரி இப்பொழுது மாத்திரம் எனக்கு ஏன் இவ்வளவு ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் ஆன வரவேற்பு நடக்க வேண்டும்? நான் உங்களுக்குப் புதியவனா? வெளிநாட்டிலிருந்து விளம்பரப்படுத்திக் கொண்டு வரப்பட்டவனா? அல்லது உங்களுக்கு இது செய்கிறேன், அது செய்கிறேன், மழையை வரவழைக்கிறேன், தரித்திரத்தையும், நோயையும் ஓட்டுகிறேன், வெள்ளையனை விரட்டுகிறேன், 8 நாள் 10 நாள்களில் சுயராஜ்யம் கொண்டு வருகிறேன் என்று ஏதாவது உங்களுக்கு ஆசை வார்த்தை கூறி மயக்கினவனா? ஒன்றும் இல்லையே.

உங்களில் பலர் அதிருப்தி அடையும்படியும் அரசியல், சமூக இயல் ஆகியவைகளில் உங்களுடைய பழக்க வழக்க நம்பிக்கைகளுக்கு மாறாகவும் பேசுகிறேன், சுயராஜ்யம் என்பது அர்த்தமற்ற பேச்சு என்கிறேன். இந்தியா என்பது கற்பனை என்றும் சொல்லுகிறேன், காங்கிரஸ் என்பதும், தேசியம் என்பதும் ஆரியர்க்கு அரண் என்றும் சொல்லுகிறேன், இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும் அப்படிச் சொல்லுவது தமிழர்க்கு இழிவு என்றும் கூடச் சொல்லுகிறேன், இன்னமும் பல உங்களுக்குப் புதிதாயிருக்கும்படியாகவும், காதுக்கு இனிப்பைக் கொடுக்கக் கூடியதாக இல்லாததாகவும் பேசுகின்றேன்.

இப்படியெல்லாம் பேசுகிற ஒருவனை, நான் சொல்வதை அப்படியே ஒப்புக் கொள்ளத் தயங்குகிற நீங்கள் இவ்வளவு ஆடம்பரத்துடன், உற்சாகத்துடன் வரவேற்பதை நான் எனக்காக என்று எண்ண முடியுமா? ஒரு நாளும் அப்படி நான் நினைக்கவில்லை. இந்த ஆடம்பர வரவேற்புகளால் நான் பெருமை அடையவில்லை. ஆனால் பின்னை யாருக்கு? எதற்காக? என்பதை நான் சொல்ல வேண்டாமா? அதைச் சொன்னால்தானே என்னை உண்மையை அறிந்தவன் என்று நீங்கள் கருதமுடியும். அதென்னவென்றால் பார்ப்பனர்கள் தேசியத்தின் பேரால், சுயராஜ்யத்தின் பேரால், காங்கிரசின் பேரால் காந்தியைக் காட்டி உங்களிடம் ஓட்டு பெற்று மந்திரிப் பதவி அடைந்த 25 மாதத்தில், அவர்கள் உங்களுக்குச் செய்த கொடுமையையும் அட்டூழியங்களையும் பொறுக்கமாட்டாமல், உங்களுடைய வயிறு எரிந்து, நெஞ்சம் குமுறி, ரத்தம் கொதித்து ஆத்திரமடைந்து ஆடும் வெறியாட்டம் என்றே கருதுகிறேன்.

இந்த வெறியாட்டம் என்னை வைத்து நீங்கள் ஆடுவதற்குக் காரணம், நான் அந்தக் காலத்தில், அதாவது நீங்கள் பார்ப்பனப் புரட்டுக்கு மயங்கி மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுக் கொடுக்கப் போகும் காலத்தில் அவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) உங்கள் ஓட்டுக்களைப் பெற்றால் இப்படியெல்லாம் செய்வார்கள் என்று புட்டுப்புட்டு விளக்கமாக விளங்கிய காலத்தில், நீங்கள் வேசியின் மையலில் மயங்கிய மைனர்களுக்குச் சொல்லும் புத்திமதி அடையும் கதிபோல் அவற்றை அலட்சியப்படுத்திவிட்டு கண்மூடித்தனமாய் நடந்து கொண்டதை தவறு என்று என்னிடம் ஒப்புக்கொள்ளும் பாவனையாய் என்னை முன்னிறுத்தி ஆத்திரம் கொண்டாடுகிறீர்கள் என்றுதான் கருதுகிறேன். இந்த ஆத்திரக் கொண்டாட்டத்தில் மஞ்சள் பெட்டிக்கு மக்களின் தரம் தெரியாமல் ஓட்டளித்த உங்களில் அனேகரை வெட்கப்படச் செய்திருக்கிறது என்பதையும் நான் உணருகிறேன்.

தோழர்களே, உலகத்தில் இவ்வளவு பெரும்பான்மையான மெஜாரிட்டியாரின் ஆதரவுடன் அதிகாரம் பெற்றவர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் பொதுமக்களின் மனக் கொதிப்புக்கு ஆளாகி பொது ஜன ஆதரவிழந்து வீழ்ச்சியடைந்ததாக சரித்திரத்தில் கூட பார்ப்பது அரிதாகும்.

இன்று அவர்களுடைய, காங்கிரஸ்காரர்களுடைய, பார்ப்பனர்களுடைய ஆணவம் எங்கே? அகம்பாவம் எங்கே? சட்டசபைகளில் நம் தலைவர்களை சிறிதுகூட மதிக்காமல் “எங்களை அனுப்பிய பொது ஜனங்களைப் போய்க் கேளுங்கள்'' என்று அவர்கள் கூறிய திமிரான பேச்சு எங்கே? இன்றைய வீழ்ச்சி எங்கே? என்று பாருங்கள்.

என்ன வீழ்ச்சி என்று யாராவது தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா? சொல்லுகிறேன் கேளுங்கள்.
தமிழ்நாட்டுத் தலைவரென்றவரும், காங்கிரஸ் முதன்மந்திரியும், காந்தியாரின் அடுத்த பதவியில் இருப்பவருமான தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் செல்லுமிடங்களிலெல்லாம் பல நூற்றுக்கணக்கான கறுப்புக் கொடியும், போலீசு உதவியில்லாமல் நடக்கமுடியாத நிலையும், காவலோடு காரிலிருந்து இறங்கி காவலோடு காரில் ஏற்றி, முட்டாக்குப் போட்டு காரை ஓட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டு இருப்பதும் காங்கிரசுக்கு எதிரி, தேசத்துக்கு எதிரி, மனித சமூகத்திற்கு எதிரி, காந்தீயத்துக்கு எதிரி என்று தப்பட்டை மூலம் பறை அறிவிக்கப்பட்ட எனக்கு இப்படி 50 ஆயிரம் பேர், லட்சம் பேர் வரை கூடி ஊர்வலம் செல்வதும், வானம் இடிபட வாழ்த்துக் கூறுவதும், நூற்றுக்கணக்கான வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிப்பதும், அய்நூற்றுக்கணக்கான மாலைகள் போடுவதும், ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொடுப்பதுமான இந்தக் காரியங்கள் காங்கிரஸ் வீழ்ச்சிக்கும், பார்ப்பனீய வீழ்ச்சிக்கும் அறிகுறியல்லவா என்று கேட்கின்றேன்.

நீங்கள் வாசித்தளிக்கும் வரவேற்பின் ஒவ்வொரு எழுத்தும், புள்ளியும், கமா குறியும் எதைக் குறிக்கின்றன? “இந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை, காங்கிரசை, காந்திப் புரட்டை உடையுங்கள்; அழியுங்கள்; அழித்துக் கொளுத்திப் புதையுங்கள்'' என்று கட்டளை இடுகிறது போலல்லவா காணப்படுகின்றன? நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும், காசும் என்ன கூறுகின்றன? “அய்யனே, இந்தப் பார்ப்பனீயக் கொடுமையிலிருந்து எங்களை விடுதலை செய்து, மனிதத் தன்மையோடு வாழ்வதற்கு வகை செப்புங்கள்'' என்று கெஞ்சி, அபயம் கொள்ளுவது போலல்லவா வந்து குவிகின்றன? உங்கள் வாழ்த்துப் பேரொலிகள் எதைக் குறிப்பிடுகின்றன? என்னை வாழ்த்துக் கூறுவதன் மூலமே உங்கள் எதிரிகள் ஒழிந்தே போய்விட்டதாகக் கருதி, வெற்றி முழக்கம் செய்வதுபோலவே காணப்படுகின்றன.

இவைகளுக்காக நான் உங்களுக்குச் சொல்லவேண்டிய பதில் என்ன? தோழர்களே, இந்த 15 வருஷ காலமாக நான் கூறிவந்ததை இப்பொழுதாவது நீங்கள் மெய் என்றும், சரி என்றும் கருதுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதே என்கின்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு உங்களுடைய ஆசைக்கும், எதிர்நோக்கிற்கும் ஒரு உண்மையான மெய்யான தொண்டனாக இருந்து, நீங்கள் சிறிதும் மனக்குறை அடையாதவண்ணம் என்னாலான தொண்டைச் செய்கிறேன் என்று வாக்களிப்பதுதான் என்று கருதுகிறேன்.

தோழர்களே, இன்று நாம் அதாவது, இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய நாம், இந்நாட்டை ஆண்டுவந்த அரச பின்வழியாகிய நாம், உலகத்தில் எந்த நாட்டினர்க்கும் பின்வாங்காத வீரம், மானம், அறிவு, ஆற்றல், கலை, நாகரிகம் ஆகியவைகளில் சிறந்த மக்களாகிய நாம், இன்று ஒரு சிறு கூட்டத்தாராகிய, அதுவும் இந்நாட்டுக்கு மலைக் காடுகளில் இருந்து கால்நடைகளுடன் பிழைக்க வந்த கூட்டமாகிய, பாடுபடாத வர்க்கத்தாராகிய ஆரியர்களாலும், பிறராலும், ஆயிரக்கணக்கான வருஷங்களாக அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கி ஒடுக்கி மிருகமாய் நடத்தப்படுகிற காரணம் என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

வெள்ளையர் நம்மை அரசியலில் ஆளுகிறார் என்றால், அதற்காவது ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். அதாவது, இந்தச் சூழ்ச்சியால் நாம் தமிழர்கள் திராவிடர்கள் பல்வேறு சமயமாகவும், பல்வேறு மேல் கீழ் சாதி வகுப்புகளாகவும், பல்வேறு லட்சியமுடையவர்களாகவும் ஆக்கப்பட்டு, கல்வி இல்லாமல், தன் முயற்சி இல்லாமல் நசுக்கப்பட்டு விட்டபடியால், கத்தி, துப்பாக்கி உள்ளவருக்கெல்லாம் பயந்து, அடிமையாகி, ஆரியரால் நம் நாட்டிற்குக் கூட்டி வரப்படுபவருக்கெல்லாம் குடி ஆகி அல்லல்பட்டு வருகிறோம்.

ஆனால், கத்தி இல்லாத, துப்பாக்கி இல்லாத, உடல் வலிமை கூட இல்லாத இந்த ஆரியர்களுக்கு, அரசியல், சமூக இயல், சமய இயல், பொருளாதார இயல், ஞான இயல் முதலாகியவைகளுக்கெல்லாம் நாம் உரிமை இல்லாமல் அடிப்பட்டு உழல்வதற்குக் காரணம் கண்டுபிடிக்க வேண்டாமா என்று உங்களைக் கேட்கிறேன். அல்லது நம் நிலை தமிழ்நாடு தோன்றியதுமுதல், தமிழர் தோன்றியது முதல், இப்படித்தான் இருந்ததா என்று கேட்கிறேன்.

சரித்திரத்தைப் பாருங்கள்; ஆராய்ச்சியாளர் கூறுவதன் உண்மையைப் பாருங்கள். உலகிலேயே முதல் முதல் தோன்றிய நாடு தமிழ்நாடு என்றும், உலகிலேயே மனிதவர்க்கம் தோன்றிய இடம் நம் தென்னாடு என்றும் கூறப்படவில்லையா? இந்த மாதிரிப் பூர்வீகப் பெருமைகளால், பழங்கதைகளால் நமக்கு ஆவது ஒன்றும் இல்லை என்றாலும், இப்படிப்பட்ட தமிழர்கள் ஏன் உலகில் இவ்வளவு கீழான நிலையிலும், இழிவான தன்மையிலும் இருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா என்பதற்காகவே இவற்றைக் கூறினேன்.

தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான். இப்போது தமிழன் தன்னை இந்தியன் என்பதையும், இந்து என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும், கூட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும், ஞானத்துக்கும், வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும், இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான். இந்த உணர்ச்சி ஆரியர்களுக்கு விரோதமாகக் காணப்படுவதில் ஆச்சரியமில்லை. அவர்களது கூலிகளில் பலர் இவ்வுணர்ச்சிகளைப் பரிகசிப்பவர்கள்போல் நடிப்பதில் அதிசயமில்லை. ஆனாலும், அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

நான் கூறி வந்தவைகளும், இப்போது கூறுவனவற்றிற்கும் ஆதாரமாகச் சரித்திரமும், அரிய ஆராய்ச்சி ஞானம் பெற்ற சரித்திர ஆசிரியர்களும் கூறி இருப்பதில் சிலவற்றை மாத்திரம் எடுத்துக்காட்டிவிட்டு, இது பற்றிய என் பேச்சை முடிக்கிறேன்; மற்றவர்களைப் பிறிதொரு சமயம் பார்த்துக் கொள்ளுகிறேன்.

----------- தந்தைபெரியார் - நூல் :"திராவிடர் ஆரியர் உண்மை" பக்கம் 1 - 9

0 comments: