Search This Blog

16.3.09

ஆரிய மாயையில் சிக்கிக் கொண்ட மாயாவதி


ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் மாயாவதி

பார்ப்பனர் தயவுக்காக பெரியாரை அப்புறப்படுத்துகிறார்
மீண்டும் மாயாவதிக்குப் பெரியாரைத் தேடும் காலம் வரும்

தமிழர் தலைவர் எச்சரிக்கை



மார்ச் 18 - 2009 "ஜூனியர் விகடன்" வார இருமுறை நாளேட்டில் சரோஜ்கண்பத், ஆர்.பி. ஷஃபி முன்னா என்ற இரு செய்தியாளர்கள் தந்துள்ள ஓர் செய்தி:

"பெரியார் எதிர்ப்பு!"

"அம்பேத்கர், ஜோதிராவ் புலே, தந்தை பெரியார், சத்ரபதி சாகுமகராஜ், கன்ஷிராம் போன் றவர்களின் படங்களை வைத்து அரசியல் நடத்திய பகுஜன் சமாஜ் கட்சி, இப்போது திடுதிப்பென்று பெரியாருக்கு மட்டும் தடா போட்டிருக்கிறது! பெரியார் சிலை திறப்பு, சட்ட மன்றத்தில் அவருடைய படத்திறப்பு என்று தீவிரமாக இருந்த பி.எஸ்.பி. (B.S.P.) திடீரென இப்படி மாறக் காரணம்?

பெரியார் உயர்ஜாதிக் கொடு மைகளை எதிர்த்து அரசியல் நடத்தியவர். இப்போது உ.பி.யில் உயர்ஜாதியினரை அனுசரித்துப் போகும் தேர்தல் தந்திரத்தில் பி.எஸ்.பி. கவனஞ்செலுத்தி வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெரியார் படம் தங்களது ஓட்டு வங்கியை சேதமாக்கிவிடுமோ என்று அஞ்சுகிறார் மாயாவதி. ஆகவே, டெல்லியில் கட்சியின் தலைமையகத்தில் இருந்த பெரியார் படம் உள்பட எங்கெல்லாம் அவர் படங்கள் இருக்கிறதோ... அவையெல்லாம் துரித கதியில் அப்புறப்படுத்தப்படுகிறது! ஒரு வேளை, தேர்தல் முடிந்ததும் மீண்டும் பெரியார் உ.பி.யில் உயிர்த்தெழலாம் போலிருக்கிறது. மாயாவதியின் அரசியல் ஸ்டைலே தனிதான்!!"


செல்வி மாயாவதி அவர்களை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனத் தலைவர் கன்ஷிராம்.

1995 இல் லக்னோவில்
பெரியார் மேளா!


அவர் ஜோதிபாபுலே அவர்களையும், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், சத்ரபதி சாகுமகராஜ், நாராயணகுரு ஆகிய அய்ம்பெரும் தலைவர்கள்தாம் சமூகநீதியின் முன்னோடிகள் என்று அறிவுறுத்தி, பெரியார் மேளாவை வடநாடு குலுங்கும் அளவுக்கு உ.பி. லக் னோவில் கொண்டாடச் செய்து பெரியாருக்கு சிலை வைக்க, நம்மை அழைத்து சிறப்புச் செய்தவர். (1995 செப்டம்பர் - அய்யா பிறந்த நாளை யொட்டி).

அந்த பாரம்பரியத்தில் வந்த மாயாவதி அம்மையார் ஆரிய மாயையில் சிக்கிக் கொண்டு, மிஸ்ராக்களை ஆலோசகர்களாக்கிக் கொண்டு பிரதமர் நாற்காலி கனவு காண்கிறார்!

உ.பி.யில் அடித்த எதிர்பாராத காற்று அப்போதைய ஆட்சிக்கு எதிரான அலை (Anti-Incumbency Wave) காரண மாக அவர் ஏராள வெற்றியைப் பெற்றார். ஆனால், அதற்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட பதவிப் போதை அவரை குடை சாய வைத்து விட்டதன் விளைவுதான் மேலே காணும் செய்திகள்!

பகுஜன் - சர்வஜன் ஆனதே!

பகுஜன் என்ற ஒடுக்கப்பட்ட மக்கள் கட்சியை, முன்னேறிய ஜாதியை அரவணைக்கும் சர்வஜன் கட்சியாக்கிவிட்டதே தடம் புரண்ட நிலையாகும்!

தனக்குள்ள அதிகாரம், செல்வ வாய்ப்புகளால் பல மாநிலங்களில் தடம் பதிக்க முனைந்தாலும், அதில் தோல்வியே அடைந்துள்ளார்!

உ.பி.யில் குறிப்பிட்ட சூழ் நிலையில் வீசிய காற்றும் அலையும்கூட அங்கேயே பலத்த எதிர்ப்பைக் கிளப்பிவிட்டு, உ.பி.யில் இவரது செல்வாக்கே சரிந்து கொண்டுள்ள நிலை ஏற்பட்டு வருகிறது!

தோன்றியது
அதிகார் மஞ்ச்


பழைய கட்சியினரை வெளி யேற்றி, புதிதாக பலரை - பார்ப்பனர், முன்னேறிய ஜாதியினர் பலரை இணைத்ததன் விளைவு- பலத்த எதிர்ப்பு அங்கே வெடித்துக் கிளம்பிவிட்டது! முலாயம்சிங்கின் சமாஜ்வாடி, காங்கிரஸ், பா.ஜ.க. போன்றவை ஒருபுறம் எதிர் அணி என்பதைவிட, இவரது கட்சியைக் கட்டிய மூத்த முன்னோடிகள் சேர்ந்து அதிகார் மஞ்ச் என்ற பெயரில் மாயாவதிக்கு எதி ராக பலமான புதுக்கூட்டணியை உருவாக்கிவிட்டனர் உபி.யில்!

மொத்தம் 80 தொகுதிகளிலும் இக்கூட்டணியின் வேட்பாளர்களை, மாயாவதிக் கட்சியை எதிர்த்து நிறுத்தப் போகிறார்கள்!

மாயாவதிக் கட்சிக்கு வர வேண்டிய சில ஆயிரம் ஓட்டுகளை பல தொகுதிகளிலாவது இந்தக் கூட்டணி பிரிக்க வாய்ப்புள்ளது என் பது இப்போதுள்ள உ.பி. நிலவரம்!

பாரதீய சமாஜ் கட்சி; இதன் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார்; ராஜ்பார் ஜாதியினரிடையே இவ ருக்குச் செல்வாக்கு உண்டு.

பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதிக்கு ஒரு காலத்தில் வலதுகரமாகத் திகழ்ந்தவர்.

புதுக்கூட்டணியில் இவரது கட்சி ராஜ்பார் ஜாதியினர் உள்ள 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது!

உடனிருந்தவர்கள் விலகினர்

மாயாவதி கட்சியின் உள் வட்டத்தில் முக்கிய தலைவராக இருந்த ஆர்.கே. சவுத்திரி, மாயா வதியின் அமைச்சரவையின் சகா வும்கூட. அவரை கருத்து வேறு பாட்டால் மாயாவதி நீக்கினார். உடனே அவர் பகுஜன் சமாஜ் 4 என்ற கட்சியை ஆரம்பித்தார்! புதிய கூட்டணியில் இவரது கட்சி 8 இடங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது!

பெரும்பாலும் தாதாக்களின் அரவணைப்பில் இயங்கி வந்த கட்சி அப்னாதளம். சோனே லால் பட்டேல் - இதன் தலைவர். கடந்த லோக்சபா தேர்தலில் மாயாவதிக் கட்சியுடன் இணைந்து இக்கட்சி போட்டியிட்டது!

இன்னொரு கட்சி உள்ளூர் கட்சி - தேசிய லோக் தந்திரிக் ஹிந்த். இதன் தலைவர் மசூத் என் பவர். இவரும் மாயாவதியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்.

எந்த பிரச்சினையும் இன்றி இந்தக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்தது! மாயாவதியை வீழ்த்துவதுதான் எங்கள் ஒரே குறிக்கோள் என்கிறார் கூட்டணியின் முக்கியப் பொறுப்பாளரான ஓம்பிரகாஷ் ராஜ்பார்!

எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்ற நிலை; இப்பொதுத் தேர்தலில் முதலில் உ.பி.யில் எத்தனை இடங்களைப் பெறுவார்; முன்பு பெற்ற இடங்களிலாவது வருவாரா? என்பது கேள்விக்குறி!

மீண்டும் பெரியார் தேவைப்படுவார்

இதில் பிரதமர் கனவு வேறு! எல்லாம் தெரியும்; புத்தர் கொள்கையை விரட்டிய ஆரியம் மாயாவதியை என்ன பாடுபடுத்தப் போகிறது என்பதை வரலாறு காட்டும். மீண்டும் பெரியார் அவருக்குத் தேவைப்படுவார்! இனி பெரியாரை மறைக்க எந்த சக்தி யாலும் முடியாது! ஏணியை உதைத்தவர்கள் சறுக்கி விழுவது சரித்திரக் கட்டாயம்! பரிதாபத்திற் குரியவர் சகோதரியார் மாயாவதி!

------------------- "விடுதலை" -16.3.2009

0 comments: